Quote:
திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 7.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் `நாதஸ்வரம்' தொடர் இப்போது ஒரு மாபெரும் திருப்பத்தை நோக்கி நகர்கிறது.
"மலர், கோபி, மகா என்று முதலில் இருந்த முக்கோணக் காதல் கதை, மலருக்கு நடந்த திருமணத்தை ஒட்டி முடிவுக்கு வந்தது. இதனால் கோபிக்கும், மகாவுக்குமான திருமணம் உறுதியானது.
ஆனால், மகாவை ஒருதலையாய்க் காதலித்த கோபியின் தம்பி பாண்டி, கோபியைக் கொன்றாவது மகாவை அடைவது என்னும் முயற்சியில் இறங்க, அதனால் மகாவின் தலையில் அடிபட்டு அவள் தன் நினைவுகளை இழக்கும் நிலை ஏற்பட்டது.
ஆனால், அந்த நிலையிலும் கூட மகாவின் கழுத்தில் கோபி தாலி கட்டுவதில் உறுதியாக இருக்க, அவர்களின் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக மொத்த குடும்பமும் ராமேஸ்வரம் சென்றது. ராமேஸ்வரத்தில் கோபி, மகா திருமணம் நடப்பதற்கு முன்பாக மகா காணாமல் போக, பின் நடந்த விசாரணையில், `மகா காணாமல் போகவில்லை. பாண்டியால் கடத்தப்பட்டிருக்கிறாள்' என்பது தெரியவந்தது.
இந்நிலையில் திடீர்த் திருப்பமாக மலரின் கணவன் கோகுல், மலரிடம் விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதை அடுத்து, மீண்டும் மலருக்கும், கோபிக்குமான காதல் துளிர்த்து, இருவரும் இணைவதற்கான சாத்தியம் ஏற்பட்டிருக்கிறது.
இதே தருணத்தில் மற்றொரு முக்கிய நிகழ்வாக கோபியின் தங்கை காமுவுக்கும், கறார் பேர்வழியான நெல்லியாண்டவரின் மகன் மூர்த்திக்குமான திருமணம் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. நெல்லியாண்டவருக்குக் காதல் என்றாலே பிடிக்காது. இதனால் மூர்த்திக்கும், காமுவுக்கும் இருந்த காதலை மறைத்து, அவர்
களின் திருமணத்தை நடத்தி வைக்கும் முயற்சியில் கோபி இருக்கிறான். கோபியின் தந்தை சொக்கலிங்கம், கோபியின் சித்தப்பா மயில் வாகனம் ஆகியோருக்கும் இது தெரியும்.
இந்நிலையில் காணாமல் போன மகாவைக் கண்டுபிடிப்பதை விட்டு, இப்படி காமுவின் திருமண வேலைகளில் கோபியும், கோபியின் குடும்பமும் ஈடுபட்டிருப்பதாக மகாவின் பெற்றோர்களான பிறைசூடனும், புஷ்பாவும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். எந்த நேரமும் புலம்பலும், அழுகையுமாய் இருக்கும் புஷ்பாவால் கல்யாண வீடு களையிழந்து கிடக்கிறது பிறைசூடனோ, மகா காணாமல் போனதற்குக் காரணம் பாண்டி மட்டுமல்ல, கோபியும் தான் என்று தவறாக நினைத்துக்கொண்டு கோபியைக் கைது செய்து சிறையிலடைக்கும் முயற்சியில் இருக்கிறார்.
அப்படி கோபி கைதானால் காமுவின் திருமணம் நிச்சயமாக நின்றுபோகும். இது தவிர, காமுவின் கல்யாணத்துக்காக வைத்திருந்த ஒரு லட்சரூபாய் பணத்தையும் பாண்டி திருடிக்கொண்டு போயிருக்கிறான். இதனால் இப்போது கடும் பண நெருக்கடிவேறு.
மலரின் தங்கை ரோஹிணியை ஏமாற்றி கற்பை சூறையாடி சிறைசென்ற சங்கரை, மலரின் கணவன் கோகுல் ஒரு பெரும் சதித்திட்டத்தோடு ஜாமீனில் வெளிக்கொண்டுவருகிறான். சங்கரையும், சங்கரும் ரோஹிணியும் சங்கமித்த வீடியோ க்ளிப்பையும் பயன்படுத்தி மலரை மீண்டும் அடைவதற்கான முயற்சியில் இறங்குகிறான்.
டைவர்ஸ் மூலம் கோகுலிடமிருந்து விடுதலையாகப் போகிறோம் என்னும் நிம்மதியில் இருக்கும் மலருக்கு இது ஒரு பேரிடியாகிறது. இந்நிலையில் கோபியும் தனக்கு இருக்கும் ஏராளமான பிரச்சினைகளால் மலருக்கு உதவி செய்ய முடியாத நிலையில் இருக்க, மலர், கோகுலின் சதித்திட்டத்திலிருந்து தப்பித்தாளா? தன் தங்கை ரோஹிணியைக் காப்பாற்றினாளா?
`மகாவும், பாண்டியும் மறைந்து இருக்கும் இடம் பற்றி தகவல் கோபிக்குக் கிடைக்கிறது. காமுவின் கல்யாணம் தலைமேல் இருக்க, மகாவைத் தேடிக் கிளம்புகிறான் கோபி. மகாவையும், பாண்டியையும் அவன் கண்டுபிடித்தானா, அப்போது மகா என்ன நிலையில் இருக்கிறாள், மகாவுக்கும் கோபிக்கும் மீண்டும் திருமணம் நடக்குமா? அல்லது கோகுலிடமிருந்து மீண்டும் தப்பி மலர் கோபியின் கரங்களைப் பிடிப்பாளா?
அதிரடிக்கேள்விகளுக்கான பதில்களோடு வரும் கோடைகாலம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் அனலைக் கிளப்பவிருக்கிறது நாதஸ்வரம்!'' என்கிறார், இயக்குநர் திருமுருகன்.