-
Sivaji Ganesan - Definition of Style - 3
கடலில் படகு அல்லது கப்பல் கவிழ்ந்து அதிலிருந்து உயிர் பிழைத்து தனியே கரையில் அலைகளால் ஒதுக்கித் தள்ளப்படும் மனிதன் Castaway எனப்படுவான் என அகராதி சொல்கிறது. அவ்வாறு வாழ்க்கை அலைகளால் ஒதுக்கித்தள்ளப்படும் மனிதனின் மனநிலையில் ஒரு Castaway யாக உணர்கிறான். குறிப்பாக இலக்கின்றி சுற்றித் திரிந்தவன் வாழ்க்கையில் திடீரென தென்றலாய் மலர்ந்த ஒரு காதல் உணர்வு அவனுள் ஒரு வாழ்க்கையில் ஒரு பிடிப்பை ஏற்படுத்த அதைப் பற்றிக் கொண்டு கரையேற முயலும் போது அந்தக் காதல் எனும் படகு கவிழ்ந்து அவனை மூழ்கடித்து கரையில் தனியே தள்ளி விடுவதாக உணரும் போது அதைப் பாடல் மூலம் வெளிப்படுத்துகிறான். ஆனால் அந்தப் படகு கவிழவில்லை, அவன் காதலும் தோல்வியடையவில்லை, ஆனால் அவன் ஒதுக்கித் தள்ளப்படுவதற்கு அவனையும் அறியாமல் அவனே காரணமாயிருக்கிறான் என்பதாக அவன் காதலி உணர்ந்து அவனை சற்றே ஒதுக்கி வைக்கிறாள்.
இந்த மாதிரியான சூழலில் வரும் இப்பாடலில் புதுமையான காட்சியமைப்பில் நடிகர் திலகம் மிகவும் அனாயாசமாக நடித்திருப்பது அவருடைய ஆளுமையைக் காட்டுகிறது. பாடலின் துவக்கத்தில் அவர் கைககளைக் கட்டும் போதே அந்தப் பாத்திரத்தின் மனோநிலையை பிரதிபலிக்கும் ஸ்டைல் துவங்குகிறது. தன்மேல் தவறில்லை என ஆணித்தரமாக நம்பும் அந்தக் கதாபாத்திரம் இதனை உறுதிப்படுத்தும் விதமாகத் தன் கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த வரிகளில் கவியரசரின் புலமையும் பாடகர் திலகத்தின் குரல் வளமையும் இளையராஜாவின் படைப்பில் மிளிர்கின்றன. இவர்கள் கூட்டணியில் மேலும் பல பாடல்கள் வந்திருக்கக் கூடாதா என்கிற ஏக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
இவர்கள் அனைவரது கூட்டணியில் உருவான அந்த அற்புதமான படைப்பைத் தூக்கி நிறுத்துவது நடிகர் திலகத்தின் ஸ்டைல், வழக்கம் போல.
இரண்டு கைகளையும் பாக்கெட்டில் வைத்து நடப்பதை முன்பொரு பாட்டில் பார்த்தோம். அதே ஸ்டைல் இப்பாடலில் வேறு விதமாக வெளிப்படுவதைப் பாருங்கள். கைகள் முழுதும் பாக்கெட்டில் நுழையாமல் விளிம்பைப் பிடித்துக் கொண்டு மிக இயல்பாக தன் மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக நிற்பதைப் பாருங்கள்.
நிற்பதில் கூட ஆயிரம் அர்த்தங்களைத் தரும் உலகப் பெரும் நடிகர், நடிகர் திலகம் மட்டுமே என்பதை நிரூபிக்கும் தோற்றம்
பாடல் முழுதும் நின்று கொண்டே அந்தப் பாத்திரத்தின் உணர்வுகளைப் பிரதிபலித்திருக்கும் விதம் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் இவரை மிஞ்ச யாராலும் முடியாது என்பதற்கு அத்தாட்சி.
இப்பாத்திரத்தின் உடல் மொழியில் குறிப்பிடத்தக்க விஷயம் தோள்களைச் சிலுப்பும் முறையை நடிகர் திலகம் பிரயோகிக்கவில்லை என்பதே. பாத்திரத்தின் தன்மையறியாமல் பணக்காரன் ஏழை என யாராக இருந்தாலும் தோளை சிலுப்பிக் கொள்ளும் நடிகர்கள் இதைப் பார்க்க வேண்டும். இப்பாடலில் பல இடங்களில் இந்த உடல் மொழிக்கு வாய்ப்புள்ளது. வேறு யாராவது நடித்திருந்தால் பாடலில் பல முறை இரு தோள்களையும் சிலுப்பியிருப்பார்கள். ஆனால் ஒரு கடற்கரையோர கிராமத்து இளைஞனின் illiterate தன்மையைக் கருத்தில் கொண்டு இப்பாடலில் நடிகர் திலகம் மிகவும் எச்சரிக்கையாக அவ்வுணர்வைத் தவிர்த்திருப்பார்.
இவையெல்லாம் அவர் ஒருவர் மட்டுமே கொண்டுவரக் கூடிய ஸ்டைல்..
ஸ்டைல் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் நடிகர் திலகம்..
https://www.youtube.com/watch?v=3euUGyKp7_4
-
சிவாஜி பாட்டு-1
------------------
ஒரு கச்சேரி நிகழவிருக்கிற
சபை.
பருத்த உடலும் தடிமனான
கண்ணாடியுமாய்
பார்வையாளர்
வரிசையில் ஒரு பாகவதர்.
பக்கத்தில் வந்தமரும்
போலீஸ்காரருக்கு
வணக்கம் சொல்கிறார் பவ்யமாய்.
குயில் கூவலாய் ஒரு பெண்
பாட கச்சேரி துவங்குகிறது.
அழகாய்ப் பயணப்படும் அந்தப்
பாடலின் வழியில் ஒரு வேகத்
தடை.
அந்தப் பெண் திக்குகிறாள். திணறுகிறாள்.
பாட்டறிந்த பாகவதர்
மேடையேறுகிறார்.
பாடுகிறார்.
இனிக்கப் பாடுகிறார்.
இதயங்கள் நெகிழப் பாடுகிறார்.
அப்பப்பா...!
அந்தப் பாடலென்ன?
பாவனைகளென்ன?
அசைவுகளென்ன?
அபிநயங்களென்ன?
அணிந்திருக்கும்
மூக்குக்கண்ணாடிக்குள்
அழகாய் மிளிரும்
கண்களிலே,
அனைத்தும் உணர்ந்ததன்
விளக்கமென்ன..?
பாடும் உதடுகள் மீதினிலே
புன்னகை அமர்த்தும்
பழக்கமென்ன?
தன் திறம் காட்டுதல் மட்டும்
இல்லாமல், உடன் கலை செய்வோரையும்
உயர்த்தும் தன்மை என்ன?
ஓங்கி உயர்த்தி
குரல் தருதல்,
உடல் நிமிர்த்தியும்,
தளர்த்தியும்
அசைவுறுதல்,
தூய இசையோடு ஒன்றி
விடல்,
தொடையில் அழகாய்த்
தாளமிடல்..
அனைத்திலும் தெரியும்
உண்மையென்ன..?
பாடல் தொடர்கிறது.
தொடர்ந்து நகர்கிறது.
நகர்ந்து முடிகிற நேரத்...
..முதுகில் பிடுங்கிய
மூட்டைப் பூச்சி
நினைவூட்டியது..
அமர்ந்திருப்பது
திரையரங்கமென்றும், அந்தக்
கச்சேரி 'குங்குமம்' படக்
காட்சியென்றும்,
அந்தப் பாகவதர் நம் நடிகர்
திலகமென்றும்!
https://youtu.be/mS_DsFaQl28
-
சிவாஜி பாட்டு-2
-----------------
"ஏங்க.. மதியச் சாப்பாட்டுக்கு
சாம்பார் வைக்கட்டுமா.. ரசம்
வைக்கட்டுமா?" என்று
கேட்டாள்..சரிவர சமைக்கத்
தெரியாத மனைவி.
கணவன்,அமைதியாகச்
சொன்னான்.. "முதல்ல
ஏதாவது வை.சாப்பிட்டுப்
பாத்து பேரு வச்சுக்கலாம்"
என்று.
*****
சமைக்கத் தெரியாத
பெண்களைக் கிண்டலடிக்கிற
விதமாய் அமைந்த அந்த
நகைச்சுவைத் துணுக்கு,
சிரிக்க வைத்தாலும், பசித்தும்
நல்ல உணவை உண்ண முடியாத அந்தக் கணவனுக்காகக்
கவலைப்படவும் வைக்கிறது.
*****
பசி பொல்லாதது.
மனிதனின் வாழ்வில் எண்ணற்ற உணர்வுகள்,கடமைகள்,செயல்கள் உண்டு.
அவை அத்தனையையும்
மறக்கடிக்கச் செய்து,மனிதன்
தன்னை மட்டுமே நினைக்குமாறு செய்ய
வல்லது இந்தப் பசி.
*****
"பாபு" என்கிற திரைப்படம்.
"வரதப்பா..வரதப்பா"என்று
அதில் ஒரு பாடல்.
உழைத்துப் பசித்தவர்களின்
உணவு நேர சந்தோஷத்தை
இந்தப் பாடல் போல் எந்தப்
பாடலும் காட்டியதில்லை.
கலைப்பசியில் சுருண்டு
கிடக்கும் நமக்கு இப்படி நடிகர்
திலகம் போல் வேறு யாரும்
நடிப்புச் சோறு ஊட்டியதில்லை.
*****
பசியாறியவர்களின் வயிறு
குளிர்வது போல,
பார்ப்பவர்களின் நெஞ்சு
குளிர்கிறது.
பளிங்கு போன்ற முகம்.படிய
வாரிய தலைமுடி பாதி வரை
மறைத்திருக்கும் நெற்றி.அதன்
கீழ் உருண்டோடும் அந்த
இரண்டே கண்களுக்குள்
இன்னும் நூறு தலைமுறைகள்
தாண்டி வருபவனையும் தன்
வசம் வசம் ஈர்க்கும் சக்தி
இருக்கிறது.
பிள்ளையார் அமர்ந்த மரத்தடி,
மாடில்லாத மாட்டு வண்டி
என்றிருந்த ஒரு இடம்,சாப்பாடு
கொணரும் அழகான
பெண்ணொருத்தியால் களை
கட்டி விடுகிறது.
"சமையல் எல்லாம் கலக்குது.
அது,சமத்துவத்தை
வளர்க்குது.. சாதி சமய
பேதமெல்லாம்
சோத்தைக் கண்டா பறக்குது."
-மை ஊற்றினால் எழுதும்
பேனாவினால், உண்மையை
ஊற்றி எழுதியிருக்கிறார் அமர
கவி.அய்யா.வாலி.
'வீரலட்சுமி,விஜயலட்சுமி' என
வரிசைப்படுத்திப் பாடி
விட்டு,
"எத்தனை லட்சுமி பாருங்கடா"
என்று நீளமாய்ப் பாடும்
போது,பெண்கள் கூட்டமொன்று வந்து முறைக்க,"உங்களை இல்லம்மா"என்று சைகையால்
சொல்லிக் கொண்டே,
பாடலுக்கு வாயசைப்பதையும்
அழகுறத் தொடரும் அய்யா
நடிகர் திலகத்தின்
நடிப்பழகிற்காகவே,இந்தப்
பாடலைப் பார்க்கலாம்..
பத்தாயிரம் தடவை.
https://youtu.be/H8VkUxkMu8c
-
சிவாஜி பாட்டு- 3
------------------
05.09.2015.
இன்று-
கண்ணன் எனும் இதயத்
திருடனின் பிறந்த நாள்.
கவலை மறந்த உள்ளங்கள்
கண்ணனை மறந்து விட
முடியாது.
கிறுக்கனின் மேல்சட்டையாய்
கிழிந்து போயிருந்த மனித
நேயத்தை கிருஷ்ணனின்
கீதைதானே ஒட்டுப் போட்டது?
அவன் உலகத்தையே வாய்க்குள் காட்டிய பிறகுதானே நாம் உல்லாசப்
பயணங்களை ஒத்திப் போட்டது?
-------
நம் இதய சிம்மாசனத்தில்
வீற்றிருந்து நம்மை ஆளும்
நடிக மாமன்னன்,
கண்ணனுக்குக் கோயிலெழுப்ப
திருடப் போகும் மன்னனாக
வந்த "திருமால் பெருமை"
பாடலிது.
மூன்றே நிமிஷத்துக்குள்
முடிந்து போகிற பாட்டுக்குள்
மிகச் சில முறைகளே நடிகர்
திலகம் காட்டப்படுகிறார்.
அதற்குள்தான் எத்தனை
முகபாவங்கள்..?
எத்தனை அர்த்தமுள்ள அங்க
அசைவுகள்..?
நடிப்பில் எப்படியொரு
உயிர்ப்பு..?
-------
மனசு கவர்கிற மாயமெல்லாம்
அந்த சின்னக் கடவுளுக்குத்தான்
தெரியுமா..?
இந்த சினிமாக் கடவுளுக்குத்
தெரியாதா..?
https://youtu.be/qeOPR2QNVF8
-
சிவாஜி பாட்டு-4
-----------------
மனசு மறக்காத பாட்டு.
எண்பதுகளில் வீசிய
காற்றுக்கு இனிமை சேர்த்த
பாட்டு.
அமரர் மலேசியா வாசுதேவன்
அவர்களின் இனிய இசைக்குரல், நம் நடிகர் திலகத்தின் சிம்மக்
குரலோடு கச்சிதமாய்ப்
பொருந்தி வியப்பூட்டிய
பாட்டு.
தன்னுடன் பிறவாதவளை
தங்கையாக ஏற்றுக் கொண்டு,
அவளது பிள்ளைக்கு மாமனாக
தன்னை வரித்துக் கொண்டு,
அந்தக் குழந்தையின்
நல்வாழ்வைக் கனவு காணுகிற
ஒரு மாமனிதனின் பெருமை
பேசும் பாட்டு.
கருகருவென அடர்ந்து செரிந்த
இரு புருவங்களுக்கும் ஒரு
மெல்லிய இணைப்புக்
கொடுத்து ஒப்பனை செய்தால்
பளீரென்று ஒரு இஸ்லாமியர்
வந்து நிற்கிற அதிசயம்..
நடிகர் திலகத்தால் மட்டுமே
நிகழ்கிறது.
துவங்கிய பாடல் முடியும்
வரைக்கும் நடிகர் திலகத்தின்
முகத்தில் நீடித்துத் தொடரும்
கனிவு..
அழகோ அழகு.
"கருணை பொங்கி வரும் எனது
காவல் தெய்வம்"-என்று
தங்கைக்காரி பாடும் போது
புன்னகை முகம் காட்டும்
பெருமிதம்..
அதை விட அழகு.
"தீபம்" எனும் சிறு
வார்த்தையை சங்கதிகளோடு
பாடும் போது, நடிக
மாமேதை தோள் குலுங்கச்
செய்கிற
வாயசைப்பு..
அழகுக்கெல்லாம் அழகு.
ரவிவர்மன்தான் வரவேண்டும்..
அந்த அழகுகளையும் வரைய.
https://youtu.be/xgmURKkz_zE
-
சிவாஜி பாட்டு- 5
-------------------
( 08.09.2015 அன்று எழுதியது. )
வார்த்தைகளில் இருக்கிற
தெளிவை ஒரு வாத்தியத்தில்
கொண்டு வந்த இசை வித்தகர்,
வயலின் மேதை
அமரர்.குன்னக்குடி
வைத்தியநாதன்
அவர்களின் நினைவு நாள்
இன்று என அறிந்த நிமிஷத்தில்
பளீரென்று நினைவுக்கு
வந்தது
இந்தப் பாட்டு.
கம்பீரம்,கம்பீரம் என்கிறோமே..
அதன் பொருளை இந்தப்
பாடலில் அறியலாம்.
அதிரும் அந்தக் குரலில் கம்பீரம்.
தெளிவான பாடலின்
தெளிவான இசையில் கம்பீரம்.
நல்ல தமிழ் வரிகளில் கம்பீரம்.
நடந்தாலும்,
படி இறங்கினாலும்,
படி ஏறினாலும்,
கொஞ்சமும் சாதாரண
மனிதனின் தளர்வுத் தோற்றம்
காட்டாத அய்யா நடிகர்
திலகத்தின் அசைவுகளில் ராஜ
கம்பீரம்.
"நாட்டையும் தமிழையும்
வாழ வைத்தான்" என்று
அருகில் நிற்கிற தமக்கை பாட, உணர்ச்சிவசப்பட்டு,உதடுகள் சுழித்து,விழிகள் மலர்த்தி நம் நடிகர் திலகம் காட்டும் பாவங்களுக்கு புல்லரிக்காத உடம்புகளை..
கண்ணம்மாப் பேட்டைகளும்
மதிக்காது.
-------
நடிகர் திலகமெனும் மாபெரும்
கலைஞன், நாட்டையும்,தமிழ
ையும் வாழ வைத்து,
நமக்கென உள்ளதை வழங்கி
விட்டு,தலை நிமிர்ந்து
நிற்கிறான்..
தஞ்சை பெரிய கோயில் போல.
அவனுக்கென உள்ள
மரியாதையையும்,
கௌரவத்தையும்..
எப்போது,எப்படி
தரப்போகிறோம்..நாம்..?
https://youtu.be/0kFijxungwE
-
சிவாஜி பாட்டு-6
------------------
தாளமும்,வேகமுமாய்
மனுஷனை அசத்திய பாடலிது.
"லட்சுமி வந்தாச்சு"படம் எங்கள்
ஊரில் வந்த போது,
இதன் இயக்குநரான
அமரர்.ராஜசேகர் இயக்கிய
"மாவீரன்",இன்னொரு திரையரங்கில் ஓடிற்று.
ஒரே ஒரு தெரு தாண்டி
கொஞ்ச தூரம் நடந்தால் வந்து
விடுகிற திரையரங்கில் ஓடிய
மாவீரனுக்குப் போகாமல்
இரண்டரை கி.மீ.தாண்டி நான்
போய் லட்சுமி வந்தாச்சு
பார்த்ததற்கு..படம் பரிசாயிற்று.
இந்தப் பாட்டு- கூடுதல்
சந்தோஷம் தந்த பரிசாயிற்று.
--------
மிகச் சிரமப்படுத்தும் நீளமான
ராகப் பாதையில் கவனமாய்ப்
பயணிக்கும் அமரர்.மலேஷியா
வாசுதேவன் அவர்களின்
கம்பீரக் குரல்..
மழைக்குப் பிறகான
மண்வாசனை தரும் இதத்தை
மனதுக்குத் தந்த ரவீந்திரன்
அவர்களின் இனிய இசை..
ஜெயசித்ராவும்,ரேவதியும்
பச்சை பரப்பிய புல்வெளியில்
சுழன்றாடும் நாட்டியம்..
நாயகராய் நம் நடிகர் திலகம்..
வெற்றிக் கூட்டணியில்
ஜெயிக்கிறது பாட்டு.
-------
குதிக்கும் உடம்பும்,கொத்து
முடி சதிராட்டமும், தாளம்
போகிற போக்கிற்குத் தானாய்
மாறும் முகபாவமுமாய்..
பின்னுகிறார் நம்மாள்.
"நீ ஒரு"-வலது கையால்
அழகான அபிநயம்.
"பிருந்தாவனம்"- இரண்டு
கைகளாலும் ஒரு
புல்லாங்குழலைக்
கற்பித்து,கிருஷ்ணன் போல்
வாசித்து, முகத்தில் ஒரு நடன அசைவு.
ஒரே ஒரு வார்த்தை.
ஒரு நூறு விளக்கம்.
அய்யன் தரும் ஆச்சரியங்கள்
எங்களுக்குப் பழக்கம்.
https://youtu.be/9f2zX0QWtAA
-
சிவாஜி பாட்டு- 7
-------------------
அந்த
எட்டையபுரத்தான் போல்
முறுக்கி விட்ட
மீசையில்லை.
அந்தப்
பாட்டுக் கோயிலின் மேல்
வெண் கோபுரமாய் எழுந்த
முண்டாசில்லை.
அவனைப் போல்
எப்போதும்
கண்களில் கோபமில்லை.
கனல் பறக்க
அவன் எழுதிய காலத்தில்
இவரில்லை.
அவனைப் போல
கவியெழுதும் தொழில்
இவருக்கில்லை.
"சிந்து நதியின் மிசை"
பாடுவதாய்
சினிமாத் திரை காட்டிய
அந்த ஒரு பாடலன்றி,
வேறெந்தப் படத்திலும்
இவரை,
அவனாகப் பார்த்ததில்லை.
ஆனாலும்...
தேனிலுஞ் சிறந்த
தமிழை வளர்த்ததிலும்,
தேசத்தின் செழுமை காண
நெஞ்சு துடித்ததிலும்,
பசியை, வறுமையை
கலை கொண்டு
ஜெயித்ததிலும்..
மாசற்ற திறமைகளால்
மக்கள் மனம்
நிறைத்ததிலும்..
அந்த
மகாகவி போலத்தானே
எங்கள்
மதிப்புக்குரிய
அய்யாவும்..!?
https://youtu.be/AKLzxSGhVyw
-
சிவாஜி பாட்டு-8
-----------------
"ஆ..ஆஆ"...
சுசீலாம்மாவின் தேன் குரல்
செய்யும் ராக ஆலாபனையோடு துவங்கும்
இந்தப் பாடல்...
என் சிறு வயது ஆச்சரியம்.
பாட்டு,இசை, வரிகளின் அர்த்தம் என்று எதுவும் தெரியாது போனாலும், இனிமையால் மட்டுமே
இதயம் குடியேறிய ஆச்சரியப்
பாட்டு.
விபரமறிந்த வயசில் கேட்ட
போது, இன்னும் வியப்பு
கூடிற்று.
அருமையான இந்தக் காதற்
பாடலின் வரிகளில் சூசகமாய்
நுழைந்திருக்கிற காமம்,
காட்சிப்படுத்தலில் காணாமலே
போயிருப்பது வியப்பு.
"மாப்பிள்ளை,பெண்ணுக்கு"
என கண் சுழற்றி,கலைச்செல்வி
பாடிக் காட்ட அப்படியே ,அசத்தலான அதே பெண் பாவத்தில் நடிகர்
திலகம் செய்து காட்டுவது
வியப்பு.
காலங்களைக் கடந்து இன்று
வீசுகிற புதிய காற்றிலும்
இந்தப் பாடல் இனித்தொலிப்பது
வியப்பு.
ஆடிப் பாடித்தான் ஒரு
பாடலை வெற்றியடையச் செய்ய வேண்டுமென்பதில்லை.
கதாநாயகியுடன் செய்யும்
குறும்புகளைக் கூட ஒரு
பாடலின் வெற்றிக்குக்
காரணியாக்கலாம் என்று நம்
நடிகர் திலகம் நிரூபித்திருப்பது
வியப்பு.
ஒரு குழந்தையின் ஈரமான
முத்தம் போல காலகாலமாய்
இந்தப் பாடல் நினைவில்
நிற்பது வியப்பு.
https://youtu.be/PgBAx_bl1YE
-
சிவாஜி பாட்டு-9
-----------------
"ரசத்தில் உப்பில்லை..
கணவன் அடித்தான்.
மனைவி அழுதாள்.
அவள் கண்ணீரில் இருந்தது..
ரசத்தில் இல்லாதது".
-புரிதலற்ற கணவனிடம்
சிக்கிச் சீரழியும் ஒரு அப்பாவி
மனைவியின் கண்ணீர் குறித்த
எனது பழைய கவிதை,அது.
---------
இதோ..
நான் பகிர்ந்துள்ள
இந்தப் பாடலிலும்
ஒரு கணவன் உண்டு.
மனைவி சிந்தும்
கண்ணீர் உண்டு.
அந்தக் கவிதை காட்டிய
பெண்ணின் கண்ணீருக்குப் பின்
ஒரு புரியாத்தனமிருக்கிறது.
இந்தப் பாடலின் நாயகி சிந்தும்
கண்ணீரில் புரிதலின் உச்சமாய்
ஒரு தெளிவிருக்கிறது.
-----------
நம்பிய உறவுகளால்
வஞ்சிக்கப்பட்டு,
வாழ்க்கை தந்த வெறுமைத்
தனிமையில் கலங்கி நிற்கும்
அகவை முதிர்ந்த
கணவனும்,மனைவியும்
தோன்றுமிந்தப் பாடல்..
ஒரு நல்ல தம்பதி
இப்படித்தானிருக்க வேண்டும்
என்று போதிக்கிறது.
----------
"பேருக்குப் பிள்ளை உண்டு.
பேசும் பேச்சுக்கு
சொந்தம் உண்டு.
என் தேவையை யாரறிவார்?"
-தள்ளாடி,தளர்ந்து நடந்து
வந்து,தனக்கென விரிந்த
மனைவியின் மடி கிடந்து,
அந்தக் கிழவர் விரக்தி வினா
எழுப்ப,
அதிர்ந்து போகும்அந்தக்
கிழவியின் முகத்தில்
தோன்றும் சோகக் குறிகள்
துடைத்து..
"உன்னைப் போல்
தெய்வமொன்றே அறியும்"
-என்று அவரே பாடி
முடிக்கையில், ஒரு நிம்மதிப்
பெருமூச்சுடன் அந்தக் கிழவி
சிந்தும் கண்ணீரை,
நம் இதயப் பாத்திரங்கள் இன்னும் சேமித்துக் கொண்டே தான் இருக்கின்றன.
https://www.youtube.com/watch?v=NC3Q...e_gdata_player