சிரிப்பு பாதி அழுகை பாதி…
*
அத்தியாயம் மூன்று
*
..”இவர் நாவல் ஒண்ணைத் தான் ஏற்கெனவே பண்ணிட்டோமே..இதையும் பண்ணலாங்கிறீரா” கேட்டது ந.தி. கேட்கப்பட்டவர் ஏ.பி.என்..
*
“அண்ணா..இதைப் படிச்சுப்பாரும் நல்ல ரொமான்ஸ் ஸ்டோரி..சுருக்கம் கொடுத்தேனே..”
*
“படிச்சேன்.. நல்லாத் தான் இருக்கு..ஆனா அப்படியே தலைப்பை வச்சா.மக்கள் சோகம்னு ஒதுக்கிடுவாங்கய்யா.”
*
”இல்லை தலைப்பை மாத்திவேணும்னா விட்டுடலாம்…ஒரு காதலன் ஒரு காதலி.. எப்படி..”
*
“ஓய் இதெல்லாம் வரணும்னா இன்னும் பலவருஷம் போகணும்யா..நாம இருக்கறது அறுபதுகள்ள..குடும்பத்தோட தியேட்டருக்கு பசங்க பெண்ணைக் கூட்டி வரதுக்கு அப்பாம்மா பயப்படுவாங்க..”
*
.”இது ஓகேயா ராதா சந்திரன் அல்லது சந்திரன்ராதா – ஹீரோ ஹீரோயினோட பேர்..என்னங்கறீங்க..”
*
“எம்.ஆர்.ராதாமாதிரி இருக்குங்காணும்..” ந.தி சிரிக்க தயாரிப்பாளர் உட்பட மற்றவர்களும் சிரிக்க “சரி.. ஹீரோயின் பெயர் மட்டும் வெச்சுடலாம்..ராதை..ம்ம் ரெண்டெழுத்து.. முன்னால இப்படிச் சேர்த்துக்கலாம்..குலமகள் ராதை..சரியா இருக்கா..காதலனை நினைத்தே உருகுகின்ற பெண், காதலன் தன்னைத் தவறாக நினைத்துவிட்டானே என மருகுகின்ற பெண்..அவளைச் சுற்றி நடக்கும் கதை..” ஏ.பி.என் சொன்னார்..
*
“குட்..ராதை ஹீரோயின் பெயரா..அவ கோச்சுக்கறப்ப பாட்டுன்னு போட்டிருக்கீரே..என்ன பாட்டு..”
*
“பாட்டுல்லாம் நம்ம கவிஞர் தான்.. ஆனா இந்தப் பாட்டு சிந்தாமணில எம்.கேடி பாடினாரே அதை நம்ம டி.எம்.எஸ் பாடவெச்சு கொஞ்சூண்டு கவிஞரை மாற்றம் சொல்லச் செய்யலாம்னு நினைக்கேன்..”
*
“பேஷா செய்யுமேன்.. ம்ம் அந்தப் பாட்டு…ராதே உனக்குக் கோபம் ஆகாதடி..சரியா” என ந.தி பாட சுற்றிலும் உள்ளவர்கள் வியந்தார்கள்..
*
(மேற்கண்ட உரையாடல் என் கற்பனையூரில் நடந்தது..!)
*
வாழ்வு எங்கே என்ற அகிலனின் கதை குலமகள் ராதை என்ற அழகான படமாக மலர்ந்தது..
*
ஏற்ற ந் தந்தவள் நீயே – எனை
..இறக்கி விட்டதும் ஏனோ
தூற்ற ஊரெல்லாம் கூட்டி – எனைத்
..துயரிலே தள்ள லாமோ
காற்றில் அலையும் தாளாய் – நான்
கலங்கியே நிற்கி றேனே
சூறா வளியென வந்தாய் – இன்று
..துயின்றே இருப்பதும் ஏனோ
ம்ம் மேற்கண்ட வரிகள் காதலனுடையவை..ஆசையுடன் காதலியை அழைத்துச் சென்றுகடிமணம் புரியலாம் என நினைத்தால் அவளோ.. அசைவின்றி உறங்குகிறாள்.. படத்தில் அவன் பாடுகின்ற பாடல் ..உன்னைச் சொல்லிக் குற்றமில்ல.. ந.தியின் உணர்ச்சிமிகைப் பாடல்..வெகு அழகாக இருக்கும்..ஆனால் சொல்லவந்தது இதையல்ல..
*
அதில் இருந்த இன்னொரு பாட்டு ராதே உனக்குக் கோபம் ஆகாதடி.. காதலியின் ஊடலைக் கண்டு அவளைக் குளிர்விக்க க் காதலன் பாடுவது..இப்போது பார்த்தாலும் அந்த சிரிப்பு முகம் கடைசிவரை வைத்திருப்பார் சிவாஜி..கூடுதலாகக் கண்களும் சிரிக்கும்..
*
கன்னட தேசத்துப் பைங்கிளி என அழைக்கப் பட்ட அழகி சரோஜாதேவியும் பொங்குகின்ற இளமையில் மெல்லிய சீலையில் கொஞ்சமான மேக்கப்பில் வெகு அழகாக இருப்பார்..அனாவசியமாகவெல்லாம் பக் பக் என்றுசிரிக்காமல் அடக்கி நடித்திருப்பார்..
*
கதையோட்டத்தில் சரோஜாதேவியைச் சந்தேகித்து சென்னை பயணிக்கும் ந.தி காரில் தேவிகாவிடம் பேசிக்கொள்ளும் காட்சிகள் வெகு அழகு..
*
கொழுக் மொழுக்கென்ற உடலில் உடை மாற்றும் போது தேவிகா வந்து விட கொஞ்சம் சட்டை போட்டப்டியோ என்னவோ..குறும்பாய் அவரிடம் பேசும்போது உடல் மொழி மிகப் பிரமாதமாக இருக்கும்..
*
மெல்ல மெல்ல அவர் தன்னைக் காதலிப்பதை உணர்ந்தாலும் சர்ரோவின் மேல் கொண்ட காதலால் கொஞ்சமாய் விலகி நடித்திருப்பது நன்றாக இருக்கும்..
*
தே…வி…கா..ம்ம்
*
அங்கும் இங்கும் அலை போலே நடமாடிடும் மானிடர் வாழ்விலே
எங்கே நடக்கும் எது நடக்கும் அது எங்கே முடியும் யாரறிவார்..”
*
எனக்கு உயிரான வரிகள் இவை..இதை பேஸ்பண்ணி ஒரு ரொமாண்டிக் பேய்(?) க் கதை முன்பு எழுதியிருக்கிறேன்
*
இரவுக்கு ஆயிரம் கண்கள் பாட்டில் வலையில் தேவிகாவும் ஏறிக் குதிக்க பார்ப்பவர்/பார்த்தவர் மனமும்குதித்திருக்கும்..
*
படம் முழுக்க முழுக்க – சீரியஸ்கட்டங்களை விட்டு- குறும்புக் காரனாக இளமை கொப்பளிக்க சிவாஜி நடித்திருப்பார்..என்னைக் கவர்ந்த படங்களில் இதுவும் ஒன்று..
*
சரி..அடுத்த அத்தியாய அழுகைக்கு.. என்ன படமாம்..
*
இந்தப் படத்தில் அழுகை இருக்கவும் இருக்கிறது இல்லையென்றும் சொல்லலாம்.. ந.திக்கு ஜோடியில்லை.வயதான ரோல்.. ஹீரோயின் என்றுபார்த்தால் எவருமே இல்லை..இருந்தாலும் ஒரு நடிகை போட்டி போட்டு நடித்திருப்பார்.. படத்தில் இளமைப் பஞ்சம் என்றும் சொல்லலாம்…சில காட்சிகளே வரும் ஒரு இளமை நடிகை ரொம்ப ஷார்ட்..அவரைப் பார்க்க வேண்டுமென்றால் தரையைப் பார்க்க வேண்டும்!
*
அந்தப் படம் என்னவென்றால்….
அடுத்த போஸ்டில் சொல்கிறேனே :)
(தொடரும்)