Originally Posted by Murali Srinivas
ஆவேசத்தின் முனையில் இருந்த ரசிகர்களை அவ்வப்போது அமைதிப்படுத்தும் பொறுப்பை யாரும் சொல்லாமலே தங்கவேலு எடுத்துக்கொண்டார். இந்த நேரத்திலும் ரசிகர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த அவர், எம்.சரோஜா மற்றும் M.R .சந்தானம் சம்மந்தப்பட்ட காட்சிகள் வந்தன. பிறகு நடிகர் திலகம் ஒரு தொழிலதிபர் ஆகி ஆங்கிலம் உட்பட பல்வேறு கலைகளையும் கற்று பியானோ வாசிக்கும் கைகளை காட்டியவுடன் இங்கே மீண்டும் பொங்கிய உணர்ச்சி அலைகள், அவர் கோட் சூட் அணிந்து படியில் டக் டக் என்று இறங்க ஓசை கூடி, சாவித்திரி கையில் வைத்திருக்கும் சூடத்தை அபப்டியே ஸ்டைலாக கண்ணில் ஒத்திக்கொண்டு, மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்துடுங்க என்று சொன்னவுடன் அப்படியே அந்த இடது கையை ஒரு நீட்டு நீட்டி சற்றே மணிக்கட்டை மடித்து வாட்சில் மணி பார்க்கும் போது அணை உடைந்து பாய்ந்தது. அப்படியே ஆபிஸ் சென்று காந்திஜியின் படத்திற்கு ரோஜா மலரை வைத்துவிட்டு சீட்டில் உட்காருவது வரை அது அடங்கவேயில்லை.
பிறகு ஜெமினி ஊருக்கு திரும்பி வருவது தங்கவேலுவிடம் விவரங்களை தெரிந்துக் கொள்வது என்ற காட்சி முடிந்தவுடன் மீண்டும் அலுவலக அறை. கே.டி.சந்தானத்துடன் பேசிக் கொண்டிருக்கும் ராஜசேகர். ஆனந்தன் என்ற பெயர் கேட்டவுடன் அந்த முகத்தில் வரும் துடிப்பு, வரச் சொல் என்று சொல்லி விட்டு கேடிஎஸ் இருப்பதனால் மனம் விட்டு பேச தயங்க அவர் சென்றவுடன் ஆனந்தா என்று கட்டி பிடித்தவுடன் மீண்டும் ஆரவாரம். கோட் பூட் போட்ருக்கேன்னு பாக்கிறியா அதெல்லாம் ஊருக்கு நம்ம இது போடலைனா கஞ்சன்னு சொல்லுவாங்க, இந்த வசனத்திற்கு பயங்கரமான கைதட்டல்கள் முழக்கங்கள் ஒலித்தன. ஜெமினி வேலை கேட்க அதை தவிர்க்க நினைக்கும் நடிகர் திலகத்தின் தர்மசங்கடமான பல்வேறு முகபாவங்கள் இவற்றையெல்லாம் கூட்டம் ஆர்ப்பரித்து பார்த்தது. அடுத்து வந்தது சாவித்திரியின் பிறந்த நாள் காட்சி.
ராதா உன் தோழிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் உள்ளே போ என்ற வசனத்தில் ஆரம்பித்து ஜெமினியை அடித்துவிட்டு கதவை திறக்க கேடிஎஸ் தடுக்க தடுக்க மீண்டும் அடிக்க முயற்சிக்கும் வண்ணமாக இடது தோளை சரித்து முட்டியை மடக்கி மோதிரத்தை வாயோடு சேர்த்து வைத்து கண்ணில் வெறியை காட்டும் அந்த போஸிற்கு காது செவிடாகும் கைதட்டல்.
அந்த உணர்வை அதிகப்படுத்துவது போல உடனே தொழிற்சாலை காட்சி. கத்தியை எடுத்து பென்சிலை சீவும் போது தொடங்கியது. எலிப்பொறியில் உணவை வைப்பது எலியின் பசியை போக்கவா, புற்றுக்கு வெளியே நாதம் இசைப்பது நாகத்தின் காதுகளை குளிர வைக்கவா எனும்போதெல்லாம் சிம்மகுரலோனின் ஒலியையும் விஞ்சும் வண்ணம் இங்கே ஆரவாரம். நாற்காலியிலிருந்து சட்டென்று எழுந்து, Mr.Anandhan, I am the sole proprietor என்று அடுத்த வசனத்தை எல்லாம் யாரும் கேட்டிருக்கவே முடியாது. அது போல் I say no - விற்கும் விசில் பறந்தது. முரசு கொட்டு முழக்கமிடு- வில் ஆரம்பித்து now get out வரை யாரும் அடங்கவேயில்லை.
நடிகர் திலகம் ஒரு கதாபாத்திரத்தை உள்வாங்கி நடிப்பார் என்பதற்கு அடுத்த காட்சி ஒரு அற்புதமான உதாரணம். ஸ்ட்ரைக் செய்யும் ஜெமினியை கைது செய்ய போலீசிற்கு போன் செய்வார். இன்ஸ்பெக்டர் நான்தான் ராஜசேகர் பேசறேன் yes ராஜசேகர் என்று சொல்லிவிட்டு குட் மார்னிங் குட் மார்னிங் என்பார். ஒரு பெரும் தொழிலதிபர், ஊர் பெரிய மனிதர் பேசும்போது அரசாங்க அதிகாரிகள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பதை மனதில் இருத்தி அதை திரையில் வெளிப்படுத்தும் பாங்கு -அற்புதம்.
அடுத்து வரிசையாக அலப்பறை காட்சிகள். நம்பியார் வீட்டு விருந்துக்கு செல்லும் நடிகர் திலகம். எம்.என்.ராஜத்தை கண்டவுடன் சிகரெட்டை கிழே போட்டுவிட்டு வணங்கும் பணிவு, பியானோவில் விரல்கள் விளையாட பாட்டொன்று கேட்டேன் பாடல். இந்த அளவிற்கு விசிலும் கைதட்டலும் இனி கேட்க முடியுமா என்கிற அளவிற்கு ஆட்டம் என்றால் அப்படி ஒரு ஆட்டம்.
அடுத்த காட்சியில் காமிரா மேலிருந்து பார்க்க வீட்டுக்குள்ளே ராஜ நடை நடந்து வருவார். தங்கச்சி தோட்டத்தில் ஆனந்தனோடு என்று கேட்கும்போதே சங்கரனின் கழுத்தை நெரிக்கும் நடிகர் திலகம். பிஸ்டலை கையில் எடுத்து தோட்டத்திற்கு போக யாருக்கும் எந்த வசனமும் கேட்கவில்லை. உன் அண்ணன் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற போது ஜெமினிக்கு விழுந்த லட்சார்ச்சனை இருக்கிறதே! பாவம். அந்த பிஸ்டலால் கண்ணீரை துடைக்கும் போதெல்லாம் தியேட்டருக்கே வெறி பிடித்தாற் போன்று இருந்தது. அடுத்த காட்சி தங்கை விரும்பியவனையே மனம் முடிக்கும் காட்சி. தன் அண்ணனுக்காக தன் வாழ்வின் ஆதாரமான காதலையே ஒரு தங்கை தியாகம் செய்யறானா அந்த தங்கைக்காக அந்த அண்ணன் என்ன வேணா செய்யலாம்மா என்ன வேணா செய்யலாம் என்னும் போது நிறையப் பேர் உணர்ச்சிவசப்பட்டனர்.
வாராய் என் தோழி பாடல் அடுத்து. இறுதி சரணம் மலராத பெண்மை மலரும் - இதில் ஆரம்பித்து இரண்டோடு மூன்று வளராதோ எனும் போது தலை குனிந்தவாறே சின்ன புன்னைகையுடன் நடிகர் திலகம் அந்த இடத்திலிருந்து நடந்து செல்ல இங்கே பிரித்து எடுத்து விட்டார்கள்.
அன்புடன்
(தொடரும்)