ரவி அவர்களே வருக வருக..
மதுர கானங்கள் மயக்கும் கானங்களாக தங்களை இழுத்து இங்கே கொண்டு வந்து விட்டன. தங்களுடைய அருமையான மொழி நடையை இவ்வளவு நாட்கள் காணவில்லையே... அருமை... தொடருங்கள்..
Printable View
ரவி அவர்களே வருக வருக..
மதுர கானங்கள் மயக்கும் கானங்களாக தங்களை இழுத்து இங்கே கொண்டு வந்து விட்டன. தங்களுடைய அருமையான மொழி நடையை இவ்வளவு நாட்கள் காணவில்லையே... அருமை... தொடருங்கள்..
இன்றைய இளையராஜா தொடருக்கு போவதற்கு முன்னால் ரமணி மித்ரன் அவர்கள் 'தடம் மாறிய தமிழ்ப் படங்கள்' என்ற தலைப்பில் 'அவள் அப்படித்தான்' படத்தின் கதையைப் பற்றி எழுதியுள்ளதைப் படியுங்கள். இதைப் படித்துவிட்டு இன்றைய ராஜா தொடரை வாசித்தால் இன்றைய தொடரில் அலசியிருக்கும் பாடலின் தாக்கம், வீச்சு ஆகியவற்றை முழுவதும் உணர முடியும்.
நன்றி ரமணி மித்திரன்.
தடம் மாறிய தமிழ்ப்படங்கள்
அவள் அப்படித்தான்.
(சற்றே சரி செய்து சுவை கெடாமல்)
கணவனுக்குத்தெரியாது தாய் இன்னொருவனுடன் கூடிக் குலாவுவதைப் பார்க்கும் சிறுமி அது பற்றி தகப்பனிடம் சொல்லத்தெரியாது தவிக்கிறாள். தாயின் கள்ளக்காதலனின் பார்வை தன் மீது விழுவதை வெளியே சொல்ல முடியாது தவிக்கிறாள்.வளர்ந்தபின் ஒருவனைக் காதலிக்கிறாள். சகோதரிக்காக அவளைக் கை விடுகிறான் அவன். தன்னை நேசித்த ஒருவனிடம் தன்னை இழக்கிறாள். அவனோ சகோதரி என்கிறான். ஆண்களின் வக்கிரபுத்தியால் விரக்தி அடைந்த அவளை ஒருவன் காதலிக்கிறான். இந்தச்சிக்கலான கதையுடன் 1978 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டைப்பெற்ற படம்தான் "அவள் அப்படித்தான்."
பெண்களைப்பற்றி ஆவணப்படம் தயாரிக்கும் கமலுக்கு உதவியாக தனது அலுவலகத்தில் வேலைசெய்யும் ஸ்ரீப்ரியாவை அனுப்புகிறார் ரஜினிகாந்த். சிறு வயதுமுதலே ஆண்களால் வஞ்சிக்கப்பட்ட ஸ்ரீப்ரியாவுக்கு ஆண்களைக்கண்டாலே வெறுப்பு.பெண்களைப்பற்றி ஆவணப்படம் தயாரிக்கும் கமலையும் எள்ளி நகையாடுகிறார். ஸ்ரீப்ரியாவின் அலட்சியப்போக்கை அமைதியாக ரசித்தபடி தனது கடமையை முன்னெடுக்கிறார் கமல். சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட, ஆண்களால்ஏமாற்றப்பட்ட பெண்களைப் பராமரிக்கும் இல்லத்தை நடத்தும் பெண்மணியை கமல் பேட்டி கண்ட பாணி ஸ்ரீப்ரியாவை வெகுவாகக் கவர்ந்தது. 'ஆண்களால் ஏமாற்றப்பட்டு உங்கள் உங்கள் இல்லத்தில் தங்கி இருக்கும் இளம் பெண் ஒருவருக்கு உங்கள் மகனைத்திருமனம் செய்து வைப்பீர்களா?' என்று கமல் கேட்டதால் அதிர்ச்சியடைந்த சமூகசேவகி எரிச்சலடைந்து வெளியேறுகிறார். அந்த ஒரே ஒரு கேள்வியின் மூலம் கமலை மதிக்கத்தொடங்குகிறார் ஸ்ரீப்ரியா. நெஞ்சில் ஈரம் இருக்கும் ஆண்களும் உலகிலிருப்பதை முதன் முதலாகக் காண்கிறார் ஸ்ரீப்ரியா. நெற்றியில் விபூதி, கையில் மதுக்கிண்ணம் ஆகியவற்றுடன் பெண்களுக்கு வலை வீசும் ரஜினியையும், பெண்களூக்கு மதிப்புக்கொடுத்து அவர்களை உயர வைக்க விரும்பும் கமலையும் கண்டு வியப்படைகிறார் ஸ்ரீப்ரியா. எல்லோருடனும் 'வெடுக்'கென எடுத்தெறிந்து பேசும் ஸ்ரீப்ரியாவுக்கு கமல் புரியாத புதிராக இருந்தார். ஸ்ரீப்ரியாவைப்பற்றி ரஜினியுடன் கமல் உரையாடியபோது 'ஸ்ரீப்ரியாவுக்குத் தேவை ஒரு ஆம்பளை' என்கிறார் ரஜினி. அதை ஏற்க மறுக்கிறார் கமல். ஸ்ரீப்ரியாவின் வாழ்க்கையில் ஏதோ ஒரு பாதிப்பு இருக்கிறது. அதனால் தான் இப்படி இருக்கிறார் என கமல் கூறுகிறார். கமலைப்பற்றி ஓரளவுக்குத் தெரிந்த பின்னர் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்களைக்கூறுகிறார் ஸ்ரீப்ரியா.சிறுவயதில் வீட்டிலேதகப்பனில்லாத போது இன்னொரு ஆணுடன் தாய் படுக்கையில் இருப்பதைப்பார்க்கிறார். இந்த விசயம் மெல்ல மெல்ல கசிந்து அயலவர்களுக்கும் தெரிய வருகிறது. ஸ்ரீப்ரியாவுடன் படிப்பவர்கள் கேலி செய்கிறார்கள். தாயுடன் திருட்டுத்தனமாக உறவு கொள்பவனின் பார்வை ஸ்ரீப்ரியாவின் மீது விழுகிறது. இதைப்பற்றி தகப்பனிடன் சொல்ல முடியாது தவிக்கிறார் ஸ்ரீப்ரியா. தகப்பனுக்குத் தெரிந்த போதும் அவரால் எதுவும் செய்யமுடியாத நிலை ஏற்படுகிறது. வாழ்ககையில் வெறுப்படைந்த ஸ்ரீப்ரியாவை ஒருவன் காதலிக்கிறான்.தன் வாழ்க்கையில் புதியதொரு ஒளி வந்ததென நினைத்து அவன் மீது உயிரை வைக்கிறார் ஸ்ரீப்ரியா. சகோதரிகளின் எதிர்காலத்துக்காக பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து ஸ்ரீப்ரியாவை கைவிடுகிறார் காதலன்.
மனமுடைந்த ஸ்ரீப்ரியா சர்ச்சுக்குச் செல்கிறார். பாதிரியார் ஸ்ரீப்ரியாவை கண்டு நலம் விசாரிக்கிறார். அப்போது பாதிரியாரின் மகன் சிவச்சந்திரன் அங்கே வருகிறார். மூவரும் பாதிரியாரின் வீட்டுக்குச்செல்கின்றனர். சிவச்சந்திரனின் பியானோ இசை ஸ்ரீப்ரியாவுக்கு புதிய தெம்பைக்கொடுக்கிறது. அன்பு நெருக்கமாகி சிவச்சந்திரனிடம் தன்னை இழக்கிறார் ஸ்ரீப்ரியா. நடந்த சம்பவத்துக்கு வருத்தப்பட்டு மன்னிப்புக் கேட்கிறார் சிவச்சந்திரன்.'உன்னைத்தானே திருமணம் செய்யப்போகிறேன்... ஏன் வருத்தப்படுகிறாய்? என்கிறார் ஸ்ரீப்ரியா. ஒருநாள் இரவு வீட்டிலே நடைபெற்ற கலவரத்தினால் வீட்டைவிட்டு வெளியேறிய ஸ்ரீப்ரியா சிவச்சந்திரனைத் தேடிச் செல்கிறார்.வீட்டிலே நடைபெற்ற சம்பவத்தைக் கூறி தான் இனிமேல் வீட்டுக்குப் போகப் போவதில்லை எனவும் சிவச்சந்திரனின் வீட்டில் தங்கப்போவதாகவும் கூறுகிறார் ஸ்ரீப்ரியா. இரவு சாப்பாடு எடுத்துக்கொண்டு நண்பனைப் பார்த்துவருவதாகக் கூறிச் சென்ற சிவச்சந்திரன், ஸ்ரீப்ரியாவின் தகப்பனை அழைத்து வருகிறார். வீட்டைவிட்டு வெளியேறிய தன் மகளை பாதுகாப்பாக ஒப்படைத்ததற்கு நன்றி கூறுகிறார் ஸ்ரீப்ரியாவின் தகப்பன். அப்போது ஸ்ரீப்ரியாவைச் சகோதரி என்கிறார் சிவச்சந்திரன். தன்னை சகோதரி என சிவச்சந்திரன் அழைத்ததால் அதிர்ச்சியடைகிறார் ஸ்ரீப்ரியா.
இரண்டு ஆண்கள் தன்னை ஏமாற்றியதால் ஆண்கள் மீது ஸ்ரீப்ரியாவுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. அலுவலகத்தில்வேலைசெய்பவர்கள் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசியதால் அவர்களுடன் பிரச்சினைப் படுகிறார் ஸ்ரீப்ரியா. பிரச்சினைகளுக்கு 'நீதான் காரணம்' என ரஜினி கூறியதால் ஆத்திரமடைந்த ஸ்ரீப்ரியா வேலையை இராஜினாமா செய்கிறார். ஸ்ரீப்ரியா இராஜினாமாச செய்ததைஅறிந்த கமல் அவரின் வீட்டுக்குச் சென்று மீண்டும் வேலையில் சேரும்படியும் ரஜினியுடன் தான் கதைப்பதாகவும் கூறுகிறார். ரஜினியைச் சந்தித்த கமல்,ஸ்ரீப்ரியாவை மீண்டும் வேலையில் சேர்க்கும்படி கேட்கிறார். ஸ்ரீப்ரியா வேலையில் சேர்ந்து எட்டு மணி நேரமாச்சு என ரஜினி கூரியதும் அதிர்ச்சியடைகிறார் கமல். ஸ்ரீப்ரியாவிடம் இது பற்றி கமல் கேட்டபோது 'போகணும்னு தோணிச்சு போனேன்.வரணும்னு தோணிச்சு வந்தேன்' என அலட்சியமாகக் கூறினார்.
ஸ்ரீப்ரியாவை திருமணம் செய்ய கமல் விரும்புகிறார். இதே வேளை கமலுக்குத் திருமண ஏற்பாடு நடைபெறுகிறது. திருமணத்துக்காக ஊருக்கு வரும்படி கமலுக்கு கடிதம் வருகிறது. ஸ்ரீப்ரியாவை மணம் முடிக்கும் தனதுவிருப்பத்தை ஸ்ரீப்ரியாவின் தோழியிடம் கூறிய கமல் ஸ்ரீப்ரியாவுக்காகக் காத்திருப்பதாகவும். ஸ்ரீப்ரியா வரவில்லை என்றால்ஊருக்குப் போகப் போவதாகவும் கூறுகிறார். கமலை வெறுப்பேற்றுவதற்காக ரஜினியுடன் விருந்துக்குப் போகிறார் ஸ்ரீப்ரியா.விருந்திலே தனிமையில் இருக்கும் ஸ்ரீப்ரியாவை நெருங்குகிறார் ரஜினி. முதலாளி என்று பார்க்காது கன்னத்தில் அடிக்கிறார் ஸ்ரீப்ரியா. கமலின் உண்மையான அன்பை காலதாமதமாக உணர்கிறார் ஸ்ரீப்ரியா. திருமணம் முடித்து மனைவி சரிதாவுடன் சென்னைக்குச் செல்கிறார் கமல். புதுமணப்பெண் சரிதாவிடம் 'பெண்கள் சுதந்திரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எனக்கேட்கிறார் ஸ்ரீப்ரியா. பெண்களிடம் கமல் கேட்கும் அக்கேள்விக்கு 'எனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது' என அப்பாவியாகப் பதிலளிக்கிறார் சரிதா.
கமல்,ரஜினி, ஸ்ரீப்ரியா ஆகியமூவரும் போட்டி போட்டு நடித்தனர். ஸ்ரீப்ரியாவின் நடிப்பு பெண் ரசிகைகளைக் கவர்ந்தது. 'மாப்ளே' என்று கமலை அடிக்கடி கலாய்த்து தன் முத்திரையைப் பதித்தார் ரஜினி.
கமல், ரஜினி, ஸ்ரீப்ரியா, சிவச்சந்திரன், இந்திர, பேபி சித்ரா, குட்டி பத்மினி, சரிதா ஆகியோர் நடித்தனர். கண்ணதாசன் எழுதிய 'வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை' எனும் பாடலை எஸ்.ஜானகி பாடினார்.கங்கை அமரன் எழுதிய 'உறவுகள் தொடர் கதை... உணர்வுகள் சிறுகதை' எனும் பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடினார். கங்கை அமரனின் 'பன்னீர் புஸ்பங்களே' எனும் பாடலை கமல் பாடினார். இலையராஜாவின் இசை படத்துக்கு மெருகூட்டியது. கதை,திரைக்கதை உரையாடல் வண்ண நிலவன், சோமசுந்தரேஸ்வரர், ருத்ரய்யா. இயக்கம், தயாரிப்பு ருத்ரய்யா.
'இளையராஜா என்றும் இனிய ராஜா' (தொடர் 19)
http://www.upperstall.com/files/imag...a-stills-1.jpg
கிருஷ்ணா சார் மிக விரும்பிக் கேட்டதால் இன்றைய 'அவள் அப்படித்தான்' தொடரில் 'வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை' பாடல் அலசல்.
https://encrypted-tbn0.gstatic.com/i...I-eE9m7xK0wPfl
வாழ்க்கை ஓடம் செல்ல
ஆற்றில் நீரோட்டம் இல்லை
யாரும் தேரில் செல்ல
ஊரில் தேரும் இல்லை
எங்கோ.. ஏதோ.. யாரோ
http://2.bp.blogspot.com/-w5Fa5Onbtv....jpg+large.jpg
பாலச்சந்தரின் 'அவள் ஒரு தொடர்கதை' கவிதா போல ('கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்') வெறுமை கொண்ட மனதுடன் தோல்வியே வாழ்க்கையாய் அமைந்த நாயகியின் உள்ளுணர்வு இது. ஒரு பெண்ணுக்கு நேரும் துன்பங்களை இதைவிட வேறு வார்த்தைகளால் பாடலில் எவரும் வடித்து விட முடியுமா? அல்லது அந்தப் பாடல் வரிகளுக்கு சோக இசை மீட்டி இந்தப் பாடலை நம் வாழ்நாள் முழுதும் நம்முடன் மன சஞ்சலங்களுடன் இப்படி பயணிக்க வைக்கத்தான் வைத்துவிட முடியுமா?
'எதிலேயும் பெண்மை சுகம் காணவில்லை
எரியாத தீபங்கள் பெண்ணா?'
உண்மையான வரிகள். போகப் பொருளாகவே பார்க்கப்பட்டு வந்த பெண்கள். ஆனால் இன்றுதான் சமூகம் எவ்வளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது. சுயமாக தைரியமாக பெண்கள் தங்களைக் காத்துக் கொள்ளத் துவங்கியிருப்பது வரவேற்கத் தக்கதல்லவா? இந்தப் பாடலின் வரிகள் பொய்யாகிப் போனால்தான் பெண்மை உண்மையான முன்னேற்றம் கண்டிருக்கிறது என்று கொள்ளலாமா?
கண்ணதாசனின் வரிகளைக் கவனியுங்கள்.
'உதவாத புஷ்பங்கள் பெண்கள்'
'புஷ்பங்கள்' என்று வெறுமனே எழுதவில்லை அவர். 'உதவாத புஷ்பங்கள் பெண்கள்' என்று பெண்ணினம் படும் கேவலத்தினை 'உதவாத' என்ற சாதாரண ஒரு வார்த்தையைச் சேர்த்து உணர்த்தியிருப்பார்.
இந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதம் பாடலின் தரத்தை மேலும் பல மடங்கு உயர்த்தி விடுகிறது. பாடல் வரிகள் இதயத்தை கனமாக்கி, இசை அதை இன்னும் நெஞ்சில் ஆழமாகப் புதைக்கும் வண்ணம் ரணமாக்கி, காட்சியமைப்புகள் இன்னும் ஆழமாய் நம் மனத்தைக் குத்திக் கிழிக்கின்றன வன்முறைக் காட்சிகள் இல்லாமல் வெறுமைக் காட்சிகளைக் கொண்டு மட்டுமே. இத்தனைக்கும் சாதாரண பெண்ணின் வரம்புக்குட்படாத, இலக்கணங்களை உடைத்தெறிந்த, துணிச்சல் இருந்தும் கோழையாகி நிற்கும் வெறுமையான கதாநாயகியை மட்டுமே காட்டி. பெண்ணிய சமூக அவலங்கள் இந்தக் கதையின் நாயகி மூலம் இப்பாடலில் மிகச் சிறப்பான ஒளிப்பதிவில் நமக்கு அற்புதமாக உணர்த்தப்படுகின்றன.
அவள் மனதைப் போலவே அவள் தன்னந்தனிமையில் உள் மனதில் போராடும் உணர்ச்சிகளோடு, உணர்ச்சிகளற்ற சலனம் தோய்ந்த முகத்துடன் நிற்கும் இடங்களும் இருட்டுதான். ஒரு பாதி இருட்டும், ஒரு பாதி வெளிச்சமுமான காட்சிகள். (கடலலை தவழ்ந்து வரும் போது அதற்கு மட்டும் ராஜா தரும் அந்த புல்லாங்குழல் இசை அப்படியே கதை பேசுகிறது) நிழல் உருவங்களாய்த் தெரியும் பட்ட மரங்களோடு பட்ட மரமாக ஸ்ரீபிரியா நிற்பதும்,(இப்போது அருமையான காட்சி பின்னணிக்கு ஏற்ப வயலின் இசை) எதுவுமே இல்லாத வீட்டு சுவரின் மூலையோடு மூலையாக ஸ்ரீபிரியா சாய்ந்தபடி முடங்கிக் கிடப்பதும் அந்தப் பெண்ணின் மனநிலைக்கு நம்மை அப்படியே தள்ளிவிடுவது நிஜம்தானே.
எஸ்.ஜானகி அவர்களின் மிகச் சிறந்த சோலோ பாடல் இது. அவருடைய மிகச் சிறந்த பாடல் வரிசையில் வரும் பாடலும் கூட.
என்னவோ இந்தப் பாடலைக் கேட்டால் தொண்டைக் குழிக்குள் தண்ணீர் கூட இறங்க மறுப்பது போன்ற உணர்வு உண்டாவதை எப்போதும் தடுக்க முடியவில்லை. அது ராஜா, ருத்ரய்யா, ஸ்ரீபிரியா, கண்ணதாசன், ஒளிப்பதிவாளர் நல்லுசாமி, ஞானசேகரன் எல்லோரும் போட்டி போட்டு நமக்குக் கொடுத்த விஷாமிர்தம்.
தாரை தப்பட்டைகளின் ராஜா என்று வர்ணிக்கப்பட்டவர் ஆர்ட் பிலிம்களிலும் தன்னுடைய அற்புத ஆளுமையைத் தொடங்கி அந்தப் பெயரைத் தவிடு பொடியாக்க ஆரம்பித்து வைத்த காவியம். காவியம் மட்டுமல்ல. கலையும் இசையும் சேர்ந்த ஓவியமும் கூட.
http://1.bp.blogspot.com/-hAAd8msu3F...ththanback.jpg
வாழ்க்கை ஓடம் செல்ல
ஆற்றில் நீரோட்டம் இல்லை
வாழ்க்கை ஓடம் செல்ல
ஆற்றில் நீரோட்டம் இல்லை
யாரும் தேரில் செல்ல
ஊரில் தேரும் இல்லை
எங்கோ.. ஏதோ.. யாரோ
வாழ்க்கை ஓடம் செல்ல
ஆற்றில் நீரோட்டம் இல்லை
அழகான மேடை சுகமான ராகம்
இடையினில் வேலிகள் உண்டு
ஆறாத புண்ணும் நூறான முள்ளும்
ஆடிடும் கால்களில் உண்டு
எதிலேயும் பெண்மை சுகம் காணவில்லை
எதிலேயும் பெண்மை சுகம் காணவில்லை
எரியாத தீபங்கள் பெண்ணா
வாழ்க்கை ஓடம் செல்ல
ஆற்றில் நீரோட்டம் இல்லை
ஊரெங்கும் மேடை ராஜாக்கள் வேஷம்
உண்மையில் ராஜாக்கள் இல்லை
ஊரெங்கும் சோலை ரோஜாக்கள் வாசம்
உண்மையில் ரோஜாக்கள் இல்லை
உலகத்தில் பெண்மை உயர்வாகவில்லை
உதவாத புஷ்பங்கள் பெண்கள்
வாழ்க்கை ஓடம் செல்ல
ஆற்றில் நீரோட்டம் இல்லை
வாழ்க்கை ஓடம் செல்ல
ஆற்றில் நீரோட்டம் இல்லை
யாரும் தேரில் செல்ல
ஊரில் தேரும் இல்லை
எங்கோ.. ஏதோ.. யாரோ
வாழ்க்கை ஓடம் செல்ல
ஆற்றில் நீரோட்டம் இல்லை
http://www.youtube.com/watch?feature...&v=JbeVLQdQmx8
வாசு ஜி, அவள் அப்படித்தான் பாட்லகளை எல்லாவற்றையும் அழகாக அலசிவிட்டீர்.
அருமை அருமை...
தொடருங்கள் வாழ்த்துக்கள்
Thanks
|கீதப்ப்ரியன்|Geethappriyan|
இயக்குனர் ருத்ரைய்யாவின் 'அவள் அப்படித்தான்' படம் வெளியாகி 35 வருடம் ஆகிறது , இன்று பார்க்கையிலும் அப்படி ஒரு புதுமையான படைப்பாக மிளிர்கிறது இதன் கதை, திரைக்கதை வசனத்தை புதுமையாக வண்ண நிலவன், சோமசுந்தரேஸ்வரர், ருத்ரய்யா ஆகிய மூவர் எழுத இயக்கம், தயாரிப்பு ருத்ரய்யா செய்திருந்தார். ஒளிப்பதிவு திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு முடித்து வெளிவந்த நல்லுசாமி மற்றும் ஞான ராஜசேகரன். இவர்கள் யாரிடமும் பணி புரியாமல்,நேரடியாக களமிறங்கிய படைப்பு என்பது கூடுதல் சிறப்பு. கருப்பு வெள்ளையில் ஒரு ப்ரில்லியண்டான ஆக்கம் இது. கூடுமான வரை நிழல்களின் அழகை,இயற்கை ஒளி அமைப்பை, நிறைய ஜம்ப் கட்களை ,க்ளோஸ் அப் ஷாட்களை உபயோகித்து எடுக்கப்பட்ட தமிழின் முதல் படம்,இந்த யுத்திகள் சத்யஜித் ரேவினால் 1970 களிலேயே 'சீமாபத்தா' என்னும் படத்தில் கையாளப்பட்டிருந்தாலும், தமிழில் இதை பரிட்சிக்க யாரும் துணியாத சூழல் நிலவியது. அதைதகர்த்தவர் ஆறுமுகம் என்கிற ருத்ரையா. இவர் 1980ஆம் ஆண்டு 'கிராமத்து அத்தியாயம்' என்னும் படமும் இயக்கியுள்ளார்.
கண்ட கருமத்தையும் ரீமேக் செய்கிறார்கள். இந்தப் படத்தை மூல ஆக்கம் சிதையாமல் ரீமேக் செய்யலாம். அது கதையே இல்லாமல் படம் எடுக்கும் இன்றைய சூழலுக்கு நல்ல மாற்றாக அமையும். அல்லது இதை ரீ மாஸ்டர் செய்து செப்பனிட்டு வெள்ளித்திரையில் வெளியிடலாம். மிக அற்புதமான படம். இதன் அருமையை உலக சினிமா ரசிகர்கள் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். சில படங்களை அனுபவிக்க வேண்டும்....ஆராய்ந்து கொண்டிருக்கக் கூடாது. இது அது போன்ற ஒரு படம். படம் கொண்டிருக்கும் நறுக்கு தெரித்தாற்போன்ற வசனங்கள். அதில் சரி பாதி நுனிநாக்கு ஆங்கில அதுவும் பச்சையான வசனங்கள். கொஞ்சமும் பாக்ஸ் ஆஃபீஸ் சமரசங்கள் இல்லாத தமிழின் முதல் சர்ரியாலிஸ்டிக் படம்.
ஆனால் ரீமேக் என்று வருகையில் ஒரு ஆபத்து உண்டு. 'தில்லு முல்லுவை' கொத்து போட்டது போல அசிங்கம் செய்து விடுவார்கள். இயக்குனர் ருத்ரையாவைப் போல இங்கே கொம்பன் யாருமில்லை, ரீமேக் செய்தால் ஒரிஜினாலிட்டி போய் பல் இளித்துவிடும். க்ரைடீரியான் நிறுவனத்தார் போல யாராவது இதை ரீமாஸ்டர் செய்து மறுவெளியீடும் செய்ய வேண்டும். அதுவே நல்ல கைங்கர்யம் ஆகும். இதில் எனக்கு ஒரு சந்தேகம் உண்டு படம் பற்றி நன்கு தெரிந்தவர்கள் எனக்குச் சொல்லவும்,
பெண்களின் சுதந்திரம் என்று இயக்குனர் அருண் [கமல்] ஆவணப்படம் எடுக்க, பாடகி எஸ்.ஜானகியை சந்திக்க போவதாக சொல்லிவிட்டு, நடிகை குட்டி பத்மினியை போய் மஞ்சுவுடன் சந்திக்கின்றனர், அது என்ன முரணான காட்சி? காட்சியை கட் செய்து விட்டார்களா?!!! படத்தில் கடைசி வரை ஜானகியின் பேட்டி வரவேயில்லை, ஆனால் அந்த காரில் பேட்டி எடுக்க பயணிக்கையில், ஜானகியம்மா பாடும் “வாழ்க்கை ஓடம் செல்ல” என்னும் அருமையான பாடல் பேக்ட்ராப்பில் ஒலிக்கிறது,பாடல் முடிகையில் கமலும் மஞ்சுவும் உடையும் மாற்றியிருப்பார்கள், இதைப் பற்றி எதாவது மேல் விபரம் தெரியுமா?!!! மஞ்சுவாக ஸ்ரீப்ரியா தோன்றி அந்த கதாபாத்திரத்துக்கே நீதி செய்திருந்தார் என்றால் மிகையில்லை.அத்தனை தினவு, அத்தனை திமிர், யாரிடமும் இயக்குனர் வாங்கியிருக்க முடியாது, இளம் வயது மஞ்சுவாக தோன்றியது நல்லெண்ணெய் சித்ரா. என்னால் முதலில் கிரகிக்க முடியவில்லை. யூட்யூபில் முழுப்படமும் கிடைக்கிறது. இது பத்தோடு பதினொன்று வகைப் படம் அல்ல. ஆகவே படத்தை அவசியம் நேரம் ஒதுக்கி அனுபவித்துப் பாருங்கள்,
இதில் ரஜினி ஆர்ட் டைரக்டர். நெற்றி நிறைய வீபுதியும்,கழுத்தில் ருத்திராட்சமும், கண்களில் காமாந்தக வக்கிரப் பார்வையுமான கதாபாத்திரம். ஸ்ரீப்ரியா அவர் விளம்பர நிறுவனத்தின் டிசைனர், படத்தில் ஒரிஜினாலிட்டி அப்படி காப்பாற்றப்பட்டுள்ளது, அதில் சம்பிரதாயமாக தொழில் முறை சார்ந்த காட்சிகளை படம் பிடிக்காமல் சத்யஜித் ரேவைப் போன்றே துறை சார்ந்த தீஸிஸ் செய்து ஸ்ரீப்ரியா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன என்பேன். அத்தனை நேர்த்தி. அதில் ஆபீஸ் அசிஸ்டண்ட் ஒருவன் ஸ்ரீப்ரியாவிடம் 'உங்கள் டிசைனுக்கான ஐடியாக்கள் எங்கே கிடைக்கின்றன?'!!! என வியந்து கேட்க, 'இரண்டு ஃபாரின் டிசைன் மேகசினை புரட்டினால் ஐடியாக்கள் கிடைக்கிறது' இது என்ன பிரமாதம்? என டிசைனிங் செய்து கொண்டே சொல்வார். ,அது எத்தகைய யதார்த்தமான ஒன்று என பார்வையாளருக்கு புரியும், சர்காசிசம் ததும்பும் இயல்பான காட்சியது.
படத்தின் இன்னொரு முக்கியமான காட்சி எனக்கு மிகவும் பிடித்தமானது, ஆவணப்பட இயக்குனர் கமலின் உண்மையான அன்பை காலதாமதமாகவே உணர்கிறார் ஸ்ரீப்ரியா. வேளை கிடைக்கும் போதெல்லாம் தன் காதல் தோல்விகளை,தன்னை தண்டித்தவர்களுக்கு தரும் தண்டனையை கடும் வார்த்தைகளால் தேளின் கொடுக்கு போல கொட்டி கமலை காயப்படுத்தியே வந்திருக்கிறார் மஞ்சு. அதையும் மீறி கமல் ஒரு பொது உடைமைவாதி , பெண்ணடிமைத் தளையை வெறுப்பவர் போன்ற சிறப்புகள் அவரின் பால் மையல் கொள்ள வைக்கிறது, ஆனால் எல்லாமே ஒருநாள் கைமீறிப் போய்விடுகிறது,
மஞ்சுவை புரிந்து கொள்ள முயன்று தோற்றதால்,தன் தந்தை இவரிடம் கேட்ட முதலும் கடைசியுமான விருப்பத்தை நிறைவேற்ற தந்தை பார்த்த அடக்கம் ஒடுக்கமான பெண்ணையே திருமணம் முடித்து கூட்டி வருகிறார். [நடிகை சரிதா கௌரவ தோற்றத்தில் கமலுக்கு மனைவியாக வருகிறார்].அன்று கமலை நான் பார்த்தே ஆக வேண்டும் என ரஜினியிடம் அலுவலகத்தில் சென்று கேட்கும் ஸ்ரீ ப்ரியாவை, குசும்பாக, 'இதோ கூட்டிப் போகிறேன்' என எழும்பூர் ரயிலடிக்கு அழைத்துப் போகிறார் ரஜினி,
அங்கே போர்டிக்கோவில் கமல் மனைவியின் கையைப் பற்றியபடி வெளியே வருகிறார். படத்தில் அவர் காம்ரேட் ஆனதால் எளிமையாக லுங்கியையே அணிந்து வருகிறார், ஆனால் மனைவி பூவும் ஜார்ஜெட் புடவையும், கழுத்து நிறைய நகைகளுமாக காட்சியளிப்பார். மஞ்சு கமலிடம் அடைந்த ஏமாற்றத்தை வெளிக் காட்டிக்கொள்ளவில்லை. அருணும் மஞ்சு பக்கம் தலையை திருப்பவேயில்லை. மனதுள் போராட்டம்.காருக்குள் அமைதி குடிகொண்டிருக்க, அருணை நோக்கி 'பெண்களிடம் நீங்கள் கேட்கும் வழக்கமான கேள்வியை உங்கள் மனைவியிடம் கேட்ட்டாயிற்றா?' என்றவர், பதிலுக்கு காத்திராமல், 'நானே கேட்கிறேன்...What do you think about Women's Liberation?!!!
சரிதா விழிக்க 'பெண்கள் சுதந்திரம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?' என தமிழில் கேட்க, அவர் விழிக்க, கமல் விளக்க, அவர் 'எனக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாதே' என்கிறார். மஞ்சு 'ரொம்ப சேஃப் ஆன்ஸர்' என்று நிறுத்துவார். எத்தனை அற்புதமான இடம் அது ,அந்த காட்சியை இங்கே பாருங்கள்.
What do you think about Women's Liberation?!!! முக்கியமான காட்சி
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=6Y8iGMiYjzE
படத்தின் டைட்டில் துவங்கி முடிவு வரை புதுமை தான். டைட்டில் கமலின் குரலில் கதை விவாதத்தின் வாயஸ் ஓவர் பின்னணியில் துவங்குகிறது. படத்தின் முடிவும் மெரினாவில் ஐஸ் ஹவுஸின் எதிரே காரை நிறுத்தி மஞ்சு இறங்கிக் கொண்டதும் கார் வேகமெடுக்க, மஞ்சு புள்ளியாய் தேய, கமலின் வாய்ஸ் ஓவரில் மஞ்சுவைப் பற்றிய அழகிய ஹைக்கூ கவிதையுடன் முடிகிறது. அந்த கவிதையை நான் இங்கே தருகிறேன்.
எரிந்து போன வீடு,
முறிந்து போன உறவுகள்,
கலைந்து போன கனவுகள்,
சுமக்க முடியாத சோகங்கள்,
மீண்டும் ஒரு முறை மஞ்சு இறந்து போனாள்,
இந்தச்சாவை சகித்துக்கொள்ள மஞ்சுவால் தான் முடியவில்லை,
ஹ்ம்,,,
அவள் பிறப்பாள்,
இறப்பாள்,
இறப்பாள்,
பிறப்பாள்,!!!
” அவள் அப்படித்தான்”
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ரவி சார்
வாருங்கள் வாருங்கள் என்று உங்களை அன்புடன் வரவேற்கிறேன்
இந்த திரியின் மாண்பையும்,வாசு அவர்களின் பண்பையும் மற்ற அனைத்து சகோதரர்களும் ஒருவருக்கொருவர் அணைத்து செல்லும் பாங்கையும் மிக அழகாக விளக்கி உள்ளீர்கள்.
என்றும் நட்புடன்
கிருஷ்ணா
வாசு
'உறவுகள் தொடர்கதை', 'பன்னீர் புஷ்பங்களே' மற்றும் 'வாழ்க்கை ஓடம் செல்ல '
மூன்று பாடல்களுமே அவள் அப்படித்தான் திரைபடத்தின் தங்கம்,முத்து பவழம்,வைடூரியம்,மாணிக்கம் என்று சொன்னால் மிகை ஆகாது .
'பன்னீர் புஷ்பங்களே' பாடல் உற்று கேட்டால் கமல் குரலில் சற்று மலையாள ஸ்லாங் இருக்கும் . இதற்கு திரு இளையராஜா அவர்கள் ஒரு பேட்டியில் கூறியது நினைவிற்கு வருகிறது. 'அன்று காலை மலையாள பாடல் ஒன்றை பாடி விட்டு மதியம் 'பன்னீர் புஷ்பங்களே' பாடலை ரெகார்டிங் செய்தோம் . அதனால் கமல் அதே பாணியில் பாடிய பாடல் என்று கூறியுள்ளார் .
நான் படித்த ஒரு சிறு குறிப்பு பகிர்ந்து கொள்கிறேன்
கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் முன்னணி நடிகர்களாக நிலைபெறத் துவங்கியிருந்தபோது, வண்ணப்படங்கள் மிகுந்த அளவில் தயாரிக்கப்பட்டு வருகையில், கருப்பு வெள்ளைப் படமாக இது 1978ஆம் வருடம் தீபாவளி அன்று வெளியானது. இதன் நெகிழ்வற்ற திரைக்கதை அமைப்பினாலும், உத்திகளும், குறியீடுகளும் நிறைந்த இயக்க முறைமையினாலும் வர்த்தக ரீதியாக (நடித்திருந்த மூவருமே முன்னணி நட்சத்திரங்களாக இருந்தபோதிலும்) தோல்வியுற்றது. மேலும், அச்சமயம் வெளிவந்த கமலஹாசனின் சிகப்பு ரோஜாக்கள் மற்றும் ரஜினிகாந்தின் தப்புத் தாளங்கள் ஆகிய பெரும் படங்களுடன் போட்டியிட முடியாமையும் ஒரு காரணமானது.
வெகுஜன ரசிகர்கள் முதல் பார்வையில் நிராகரித்து விட்டபோதிலும், திரையுலகைச் சேர்ந்த பலரும் இதனை வெகுவாகப் பாராட்டினார். சிகப்பு ரோஜாக்களின் இயக்குனரான பாரதிராஜா, வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருப்பதனாலேயே இது போன்ற படத்தைத் தம்மால் இயக்க இயலவில்லை என மனம் திறந்து குமுதம் பத்திரிகையில் பாரட்டியிருந்தார்.
ஆயினும், இதற்கென ஒரு ரசிகர் குழாம் உருவாகியது. அடுத்த சில ஆண்டுகளில் பெரு நகரங்களில் பல திரையரங்குகளில் இது மீண்டும் மீண்டும் காலைக் காட்சிகளாக வெளியானது.
இளையராஜாவின் இசையில் கமல் பாடிய முதல் பாடல் பன்னீர் புஷ்பங்களே… என்ற பாடல்.
ரெக்கார்டிங் சமயத்தில் ஸ்டுடியோவிற்கு வந்த கமலிடம் இந்த பாடலைப் பாடிக்காட்டி கமலைப் பாடச்சொல்லியிருக்கிறார் இளையராஜா. பாடல் நன்றாக வர அப்படியே பாடவைத்து ரெக்கார்டு செய்தார் இளையராஜா. ஆனால் படம் வெளியான பிறகுதான் தான் ஒரு விஷயத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டேனே என்று கமலிடம் சொல்லியிருக்கிறார் இளையராஜா. பன்னீர் புஷ்பங்களே என்ற வரியை கமல் பன்னீர் புஷ்பங்ஙளே என்று பாடியிருப்பார்.
இந்தப்பாடல் உதயமானது ஏதோ ஒரு ஹோட்டலிலோ அல்லது ரெக்கார்டிங் ஸ்டுடியோவிலோ அல்ல. கோவையில் ஒரு இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தபோது உதயமான பாடல் இது. விழா மேடையில் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது பஞ்சு சாரும், எஸ்.பி.முத்துராமன் அவர்களும் மேடைக்கு வந்து ஒரு பாடலுக்கான சிச்சுவேஷன் சொல்ல மேடையிலேயோ கம்போஸ் செய்து ஆர்க்கெஸ்ட்ராவோடு பாடினார் இளையராஜா. அந்த பாடலுக்கு வேறு வார்த்தைகளைப் போட்டு கங்கை அமரன் எழுதிய பாடல்தான் இந்த பன்னீர் புஷ்பங்(ங)ளே பாடல்.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் நல்லுசாமி கூறுகிறார்…
கமல்தான் இளையராஜாவை இப்படத்துக்கு புக் செய்தார். இது மட்டுமல்ல படத்துக்காக பல விஷயங்களை கமல்தான் செய்தார்.
இப்படத்துக்கு கமலுடன் ரஜினியையும் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று அனந்து சொன்னார். அனந்து, கமல் ரஜினியுடன் நினைத்தாலே இனிக்கும் படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் சென்றார். அங்கேயே பேசி ரஜினியும் சம்மதித்தார். யாருக்கும் நாங்கள் அட்வான்ஸ் கொடுக்கவில்லை. பூஜை போட்டோம். அப்போதெல்லாம் இசையமைப்பாளர்கள் பட ஆபீசுக்கே வருவார்கள். ஆழ்வார்ப் பேட்டையில் அலுவலகம் போட்டிருந்தோம். எங்கள் அலுவலகத்தில் பேன் கிடையாது. மறுநாள் இளையராஜா வரப்போகிறார் என்பதால் முதல் நாள் மாலையே பேன் வாங்கி மாட்டினோம். ஆனால் இளையராஜா வந்தபோது மின்சாரம் இல்லாமல் போய்விட்டது.
மூன்று பாடல்கள் கம்போசிங். கண்ணதாசனை வைத்து பாடல்கள் எழுதலாம் என்று தீர்மானித்தோம். எங்கள் அலுவலகத்துக்குப் பக்கமே கண்ணதாசன் நடத்திய கவிதா ஹோட்டல். அங்குதான் கவிஞர் இருப்பார். இசையமைப்பாளர்கள் அங்கே செல்வார்கள். அங்கே இளையராஜா வேறு ஒரு பாடல் கம்போசிங்கிற்காக வருகிறேன். அங்கேயே வந்து விடுங்கள் என்றார். நடந்தே சென்றோம்.
பிரம்பு நாற்காலியில் பனியன் போட்டுக் கொண்டு கவிஞர் அமர்ந்திருந்தார். அவரிடம் வசந்தகாலக் கோலங்கள்.. வானில் விழுந்த கோடுகள் பாட்டு போல எங்களுக்கு வேண்டும் என்றோம். அவர் ஒரு 20 பல்லவிகளை எங்களுக்குச் சொன்னார். எதுவுமே பிடிக்கவில்லை. எங்களுக்கு முழு திருப்தி இல்லையென்றாலும் ‘வாழ்க்கை ஓடம் செல்ல’ பல்லவியைத் தேர்ந்தெடுத்தோம். பாட்டெழுதிக் கொடுத்தார். படம் வெளியாகி ஃப்ளாப் ஆனதும் இப்படி ஒரு அபசகுனமான பாட்டை முதலில் எழுதினால் இப்படித் தான் ஆகும் என்று கூடச் சொன்னார்கள்.
–அந்திமழை
http://img198.imageshack.us/img198/9...ththanback.jpg
hi good morning all
ஹாய் வாசு சார்..க்ருஷ்ணா ஜி..இப்ப என்ன அவள் அப்படித்தான் பார்க்கணும்கறீங்களா..
கடைசிப் பாட்டுக் கேட்டதில்லை..கேட்டுப்பார்க்கிறேன்..