-
28th November 2016, 10:19 AM
#1
Junior Member
Senior Hubber
சிவாஜி பாட்டு- 31
------------------------------
ஆணுக்கு பெண் மீதான மோகமும், பெண்ணுக்கு ஆண் மீதான அளவு கடந்த காதலும்..
கிட்டத்தட்ட விஷம் போலத்தான்.
அப்படியே உறைந்து போக வைக்கிற விஷம்.
தன்னைத் தவிர அத்தனையும் மறக்கடிக்கிற விஷம்.
ஆபத்து, அபாயங்களை எல்லாம் அலட்சியம் செய்யும் இரண்டு அன்புள்ளங்களுக்குள் ஒரு பாம்புக் கொத்தலுக்குப் பிறகானது போல் "சுர்" என்று ஏறுகிற விஷம்.
கொல்லாமல் கொல்லுகிற விஷம்.
அதனால்தானோ என்னவோ விஷத்தோடு தொடர்புடைய பாம்போடு தொடர்புடைய ஒரு
இசையின் சாயலோடு இந்தக் காதல் பாடல் துவங்குகிறது.
*******
"இதை ஆனந்தன் கடைல குடுத்துடு. இந்தா.. இதை ஜாஹிர் உசேன் கடைல குடுத்துடு. பாக்கியில்லே.. முழுசாக் குடுத்தாச்சுன்னு அப்பா சொல்லச் சொன்னாருன்னு சொல்லிக் குடுத்துடு."- என்னுடைய சின்ன வயசில் வந்த சில முதல் தேதிகளில் பணத்தைக் கட்டுக் கட்டாய்ப் பிரித்து, ரப்பர் பேன்ட் போட்டு அப்பா என்னிடம் கொடுத்து விட்டதுண்டு.
சின்னதான சட்டை பணக்கற்றைகளால் நிரம்பி வழிய, கடைகளை நோக்கி தார்ச்சாலையில் நடந்து போக.. அத்தனை பெருமை..அந்த வயசில்.
பிறகு, வருஷங்கள் உருண்டோடி, நானும் வேலைக்குப் போய், முதல் சம்பளம் வாங்கின சாயங்காலம் வீடு திரும்பும் போது மனசில் வந்த கர்வமிகு சந்தோஷம்,சின்ன வயசுச் சந்தோஷத்தை சின்னதாக்கி விட்டது.
ஏதோ ஒரு ஈர்ப்பினால் ஒரு ஆண், அழகான பெண்ணொருத்தியுடன் அறிமுகமான கையோடு அன்பு கொண்டு காதலாவது... அப்பன் காசோடு ஆனந்தமாய் நடப்பதைப் போல.
ஆசையாய் நேசித்தவள் தனக்கே தனக்கென்று வந்து விட்ட பொழுதில், மகிழ்வான மகிழ்வாய் காதலாகிக் கசிந்துருகும் சந்தோஷம்... சுயமாய் உழைத்துச் சம்பாதித்த காசோடு கர்வமாய் நடப்பதைப் போல.
இந்தப் பாடலில், சுய சம்பாத்தியத்தோடு நடந்து
போகிற சந்தோஷத்தைப் பார்க்கலாம்... நடிகர் திலகத்தின் முகத்தில்.
******
பிரமிப்பாகத்தான் இருக்கிறது...
சோகப் பாடல்களென்றால், இரும்பாய்,பாறையாய் இறுகிப் போகிற அதே முகத்தில், இந்த மாதிரி காதல் பாடல்களுக்கு நந்தவனத்தையே உருவாக்குகிற நடிகர் திலகத்தை.. நினைக்க, நினைக்க.
அய்யா நடிகர் திலகத்தின் புன்னகை ஒரு புது மொழி.
மரபுக் கவிதை போல் இலக்கணமாகவும், புதுக்கவிதையாய் கட்டுடைத்த வடிவமாகவும் அந்த மொழி நம்மை இனிதே சேர்கிறது.
"பெண்ணே... நீ தலை முதல் கால் வரை பரவ விட்ட அழகை, நான் உதட்டின் மேலேயே உட்கார வைத்து விட்டேன்..பார்த்தாயா?" - என்று அந்தப் புன்னகை மொழி, நாட்டியப் பேரொளியிடம் கேலி பேசுகிறது.
அந்த மொழி மௌனப்படும் வேளையிலும் ஆயிரம் அற்புதங்களைப் பேசுகிறது.
******
நடிகர் திலகத்திற்காகப் பாடப்பட்ட பாடல்களில் பெரும்பாலானவற்றை தெய்வீகப் பாடகர் அமரர் அய்யா டி .எம் .எஸ். அவர்களே பாடி விட்டதால், வேறு குரலை அய்யனுக்குப் பொருத்திப் பார்க்க மறுப்போர் உண்டு.
அது,நியாயம்.
வேறு எந்தப் பாடகர் நடிகர் திலகத்துக்குப் பாடினாலும், அநியாயத்துக்கு மறுப்போர்
கூட்டமும் உண்டு.
அப்படிப்பட்டோரின் வாயடைத்த அற்புதப் பாடல்களின் பட்டியலில் ஆரம்பத்திலேயே வருகிற பாடலிது.
பாடல் வரிகளுக்கு மிகச் சரியான உதட்டசைவு மட்டுமே நடிப்புப் புலமையாகாது என்பதை நடிகர் திலகம் கற்றுக்கொடுக்கிறார்..இந்தப் பாடலில்.
"பொன்னே சொல்..ஏன் த்யானம்?" என்று பாடினால் வாயசைப்பில் ஒரு கேள்வி வந்து நிற்கிறதே... அது புலமை.
நிலவடிக்கும் மொட்டை மாடியில் தன்னை விட்டு நழுவி ஓடும் மனைவியிடம், "வெட்கம் ஏனோ.. வா என் பக்கம்."-எனப் பாடுகையில் ஒரு ஏக்கம் த்வனிக்கிறதே... அது புலமை.
தென்னங்கீற்றுகளை வகுந்து கொண்டு, அந்த மொட்டை மாடியின் இன்னொரு நிலவு போல புன்னகை முகம் நீட்டி, "போனால் வராது... இது போலே காலமினி" என்று பாட..
'உண்மைதான். உங்கள் காலம் இனி வேறு யாராலும் வராது' என்று எங்களை அந்த "தெய்வப் பிறவி" எதிர்ப் பாட்டு பாட வைத்தாரே... அது புலமை.
Sent from my P01Y using Tapatalk
-
28th November 2016 10:19 AM
# ADS
Circuit advertisement
Bookmarks