Results 1 to 10 of 160

Thread: M.K. Thyagaraja Bagavadhar

Threaded View

  1. #31
    Senior Member Veteran Hubber
    Join Date
    Sep 2009
    Location
    Chennai
    Posts
    1,950
    Post Thanks / Like
    நடிகர் திலகமும் பாகவதரும்

    தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராகத் திகழும் திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களின் நூற்றாண்டு, சமீபத்தில் 1.3.2010 அன்று நிறைவடைந்துள்ளது. தமது ஈடு, இணையற்ற கந்தர்வக் குரலாலும், வசீகரிக்கும் தோற்றப் பொலிவாலும், மக்கள் மனங்களில் நிரந்தர இடம் பிடித்தவர் பாகவதர் என்றால் அது மிகையன்று. எத்தனையோ பாகவதர்கள், "பாகவதர்" என்ற அடைமொழியுடன் இருந்தாலும், பாகவதர் என்று சொன்னால் அது திருவாளர் மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதரையே குறிக்கும். பாகவதர் 14 படங்களே நடித்தார். ஆனால், 100 படங்களில் நடித்த புகழைப் பெற்றார். வெள்ளித்திரையில் அவரது முதல் இன்னிங்ஸ்(1934-1944) சாதனைகளின் சிகரம். இரண்டாவது இன்னிங்ஸ்(1948-1959) சோதனைகளின் உச்சம். திரையிசையில் அமரத்துவ படைப்புகளை அளித்த பாகவதர் 1.11.1959 அன்று அமரத்துவம் அடைந்தார்.

    இனி தலைப்பிற்கேற்ற தகவல்களைக் காண்போம்.

    பாகவதரின் இரண்டாவது திரைப்படமான நவீன சாரங்கதரா(1936)வும், நடிகர் திலகத்தின் 50வது திரைப்படமான சாரங்கதரா(1958) திரைப்படமும் ஒரே கதைக்களங்களைக் கொண்டவை. சிந்தாமணி(1937) திரைப்படத்தில், பாபநாசம் சிவன் இயற்றி, அவரே செஞ்சுருட்டி ராகத்தில் இசையமைத்து உருவாக்கிய 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்கின்ற பாடல் பாகவதரின் பிரசித்தி பெற்ற பாடல்களில் ஒன்று. இதையே நடிகர் திலகத்தின் குலமகள் ராதை(1963) திரைப்படத்தில், திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் அவர்கள் மிக அழகாக, மிகுந்த நேர்த்தியோடு, ஒரிஜினலையே மிஞ்சும் வண்ணம் ரீ-மிக்ஸ் செய்திருப்பார். கதைக்கும், காலத்துக்கும் ஏற்றாற் போல, கவிஞர் அ. மருதகாசி அவர்கள் பாடல் வரிகளை பாங்குற மாற்றியமைத்திருப்பார். பாகவதரின் பிம்பமான பாடகர் திலகம் டி.எம்.எஸ். பாட, நடிகர் திலகம் தமது நடையழகாலும், ரொமான்ஸாலும் பாடலை எங்கோ கொண்டு சென்று விடுவார். சரோஜாதேவியின் ரியாக்ஷ்ன்களும் இப்பாடலில் நன்றாகவே இருக்கும். பாடல் முடிந்ததும் சரோஜாதேவி நடிகர் திலகத்திடம், "முடிஞ்சுதா?" என்பார். "பெரிய பாகவதரோட பாட்ட இத்தன நேரமா மூச்ச புடிச்சுகிட்டு பாடிருக்கேன். இப்படிக் கேக்குறையே?" என்பார் நடிகர் திலகம். ரசிக்கத்தக்க அம்சங்கள். பாகவதருக்கு வான்புகழை அளித்த ஹரிதாஸ்(1944) திரைப்படத்தில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் பாடல், 'மன்மத லீலையை வென்றார் உண்டோ'. பாபநாசம் சிவனின் வைர வரிகளுக்கு, சாருகேசியை பழச்சாறாக பிழிந்து கொடுத்திருப்பார் திரை இசை மாமேதை ஜி.ராமநாதன். பாகவதர் குரலில் இப்பாடல், தமிழ்த் திரைப்பாட்டின் உச்சம். இதே 'மன்மத லீலையை' வார்த்தெடுத்தது போல், இதே சாருகேசி ராகத்தில், ஜி. ராமநாதன் அவர்கள் இசைமணம் பரப்பிய பாடல் தான், 'வசந்த முல்லை போலே வந்து'. சாரங்கதரா(1958)வில் இடம்பெற்ற இப்பாடலை இயற்றியவர் கவிஞர் அ.மருதகாசி. பாடலைப் பாடிய டி.எம்.எஸ்சை சௌந்தரராஜ பாகவதர் என்றே சொல்ல வேணடும். அந்த அளவுக்கு பாகவதரின் குரலை குளோனிங் எடுத்திருப்பார். தமது சிருங்கார காதல் நடிப்பால், இவையனைத்தையும் வென்று, முதலாவதாக நிற்பார் ஒருவர். அவர் தான் நடிகர் திலகம்.

    1954-ல் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் சீரும், சிறப்புமாக நடைபெற்ற நடிகர் திலகத்தின் ஒரே தங்கை பத்மாவதி அவர்களின் திருமண (பத்மாவதி-வேணுகோபால் திருமணம் தான்) வைபவத்திற்கு வந்தவர்களை வரவேற்று உபசரித்தவர் எம்.கே.டி.பாகவதர்.

    1954-ல் வெளிவந்த மனோகரா திரைப்படத்தைக் திரையரங்கில் கண்டு களித்த பாகவதர், நடிகர் திலகத்தின் நடிப்பை இப்படிப் புகழ்ந்தார். "அம்மா என்ற ஒரு வார்த்தையை உணர்ச்சிப்பிழம்பாகச் சொல்லி கைத்தட்டல் பெற்ற ஒரே நடிகர் சிவாஜி தான்." நடிகர் திலகத்தின் நடிப்பில் மயங்கிய பாகவதருக்கு, நடிகர் திலகத்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பும் வந்தது. 1937-ல் சேலம் சங்கர் பிலிம்ஸ் தயாரிப்பில், அமெரிக்கர் எல்லிஸ்.ஆர்.டங்கன் அவர்களின் டைரக்ஷ்னில் வெளிவந்த அம்பிகாபதி திரைப்படத்தில் கதாநாயகன் அம்பிகாபதியாக பாடி நடித்தார் பாகவதர். படம் பொன்விழாக் கண்டது. 1957-ல் இதே அம்பிகாபதிக் கதையை ஏ.எல்.எஸ் புரொடக்ஷ்ன்ஸ் தயாரிக்க, ப.நீலகண்டன் இயக்கினார். கதாநாயகன் அம்பிகாபதியாக நடிகர் திலகம் நடித்தார். அம்பிகாபதியின் தந்தை கவிச்சக்கரவர்த்தி கம்பராக யாரை நடிக்க வைக்கலாம் என படக்குழுவினர் யோசித்த பொழுது, பாகவதரே பளிச்சிட்டார். அவரை படக்குழுவினர் அணுகிய போது 'கம்பராக நான் நடித்தால் சரி வராது' எனக் கூறி விட்டார். பின்னர் கம்பர் கதாபாத்திரத்தில் எம்.கே.ராதா நடித்தார். சிவாஜியுடன் நடிக்க பாகவதர் மறுத்து விட்டார் என சினிமாவுலகில் சிற்சில சர்ச்சைகள் கிளம்பின. அவைகளை பாகவதர், தமது சொல்லாலும், செயலாலும் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார். "சிவாஜியுடன் நடிக்க எல்லோரையும் போல் எனக்கும் விருப்பமே. ஆனால் அம்பிகாபதியின் தந்தை கம்பராக நடிக்க நான் விரும்பவில்லை. ஏனென்றால், ஏற்கனவே நான் அம்பிகாபதியாகவே நடித்திருக்கிறேன். அதனால் கம்பராக நடிக்க மனமில்லை." என அறிவித்தார். இதோடு நில்லாமல், தனது சொந்தத் தயாரிப்பில், நடிகர் திலகத்தைக் கதாநாயகனாகக் கொண்டு, தானும் நடிகர் திலகத்துக்கு தந்தையாக நடிக்க முடிவு செய்து ஒரு படத்தைத் துவக்கினார் பாகவதர். அந்தப் படத்தின் பெயர் "பாக்கிய சக்கரம்". இது நிகழ்ந்த ஆண்டு 1958. இந்த சமயத்தில், பாகவதரின் உடல்நிலை மோசமடைய, பாக்கிய சக்கரத்தின் படப்பிடிப்பு நடத்த முடியாமலே நின்று போனது. பின்னர் 1959-ல் பாகவதர் இயற்கை எய்தினார். "திரை, இசை உலகின் இமயம் வீழ்ந்தது" என நடிகர் திலகம் இரங்கல் விடுத்தார்.

    சமீபத்தில், சிவாஜி-பிரபு அறக்கட்டளையின் பெருமுயற்சியில், திரையுலக முன்னோடிகளை கௌரவிக்கும் விதமாக, நடிகர் திலகத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தன்று(21.7.2003), சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், தபால் துறை, பாகவதருக்கு சிறப்பு தபால் உறை வெளியிட்டு கௌரவித்தது. (இதே நிகழ்ச்சியில், நடிகர் பி.யூ.சின்னப்பா அவர்களுக்கும், கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களுக்கும் சிறப்பு தபால் உறை, அவர்களை கௌரவிக்கும் விதமாக வெளியிடப்பட்டதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.)

    அன்புடன்,
    பம்மலார்.
    pammalar

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Similar Threads

  1. Thyagaraja songs
    By garladinne_ravi in forum Indian Classical Music
    Replies: 0
    Last Post: 12th July 2005, 06:37 AM
  2. Glorious THYAGARAJA- KEERTHANAS !!!
    By Sudhaama in forum Indian Classical Music
    Replies: 40
    Last Post: 27th June 2005, 08:01 PM
  3. Michigan Thyagaraja Aradhana
    By viggop in forum Indian Classical Music
    Replies: 1
    Last Post: 18th April 2005, 09:34 PM
  4. Cleveland Thyagaraja Aradhana
    By viggop in forum Indian Classical Music
    Replies: 4
    Last Post: 1st April 2005, 09:49 PM
  5. MS rendering Thyagaraja Krithis
    By Oldposts in forum Indian Classical Music
    Replies: 24
    Last Post: 23rd January 2005, 03:29 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •