நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடம்: டாக்டர்கள் தீவிர சிகிச்சை
சென்னை, ஜூலை.24: மி்கவும் கவலைக்கிடமாக உள்ள நடிகர் ரவிச்சந்திரனின் உடலுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
காதலிக்க நேரமில்லை படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் ரவிச்சந்திரன். ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நடிகர் ரவிச்சந்திரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கல்லீரல், நுரையீரல் செயல்பாடும் பாதிக்கப்பட்டது. இதனால் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது.
இதையடுத்து அவர் தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் கோமா நிலையில் உள்ளார். 5 நாட்கள் ஆகியும் அவருக்கு உணர்வு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு செயற்கை சுவாச கருவி மூலம் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவிலேயே உள்ளார்.
இன்று அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததாகவும், அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
விதி தன் வேலையைக் காட்டி விட்டது. தமிழ்த்திரை உலகில் பாகவதர்-சின்னப்பா, எம்.ஜி.ஆர்.-சிவாஜி இவர்களுக்குப் பிறகு புதிய தலைமுறை கதாநாயகர்களாக வலம் வந்த ஜெய்சங்கர்-ரவிச்சந்திரன் சகாப்தம் முடிந்து விட்டது. இன்று இரவு கலை நிலவு என அன்போடு அழைக்கப்பட்ட ரவிச்சந்திரன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி, எங்களைப் போன்ற பழைய தலைமுறை ரசிகர்கள் உள்ளத்தில் மாறாத வடுவை ஏற்படுத்தி விட்டது. திரு ரவிச்சந்திரன் அவர்களின் பங்களிப்பு தமிழ்த்திரையுலகில் தனித்துவம் வாய்ந்தது. அவருடைய பாணி தனித்துவம் பெற்றது. பல ரசிகர்களை ஈர்த்தவர் ரவிச்சந்திரன். அவரைப் பற்றிப் பல விஷயங்களை சொல்ல எண்ணினாலும் இந்த சூழ்நிலையில் வார்த்தை வரவில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதலாம்.
அவர் நினைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜஸ்டிஸ் விஸ்வநாதன் திரைப் படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் உள்ளம் உருக்கும் பாடல்
Last edited by RAGHAVENDRA; 25th July 2011 at 09:48 PM.
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
'கலை நிலவு', 'ஸ்மார்ட் ஹீரோ' என்கின்ற அடைமொழிகளுடன் திரையுலகில் 1960களிலும், 1970களிலும் மிகப் பெரிய வலம் வந்த நடிகர் ரவிச்சந்திரன் அவர்களின் மறைவு கலையுலகுக்கு ஒரு பேரிழப்பு. நமது நடிகர் திலகத்துடன் மோட்டார் சுந்தரம் பிள்ளை, கவரிமான் ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ள ரவிச்சந்திரன் ஒரு திரையுலக சாதனையாளர். அவரது மறைவுக்கு நமது அஞ்சலி.
அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர், நண்பர்களுக்கும், கலையுலகைச் சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும், சகோதரி சாரதா முதற்கொண்ட ரசிகைகளுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
திரு. ரவிச்சந்திரன் அவர்களின் மறைவுச்செய்தி மனதை துக்கத்தில் ஆழ்த்தியது. அறுபதுகளிலும் எழுபதுகளின் துவக்கத்திலும் கதாநாயகனாக வலம் வந்த ரவிச்சந்திரன் நடித்த காதலிக்க நேரமில்லை, நான், குமரிப்பெண், மூன்றெழுத்து, அதே கண்கள், உத்தரவின்றி உள்ளே வா போன்ற பல படங்கள் இன்றைக்கும் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படும் படங்களாக இருக்கின்றன. அவர் நடித்த அத்திரைக் காவியங்களே அவரது நினைவைப்போற்றும் நினவுச்சின்னங்களாக விளங்கும்.
அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.
தமிழ்த்திரையுலகில் ஒரு காலத்தில் ஆணழகன் என்றும், கலர்க்கதாநாயகன் என்றும், வெள்ளிவிழா நாயகன் என்றும் ரசிகர்களால் அன்போடு ரசித்துப்போற்றப்பட்ட திரு ரவிச்சந்திரன் அவர்கள் நேற்று மாலை காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியைத் தந்தது.
என்னுடைய கல்லூரிப்பருவத்தில் அவருடன் சந்தித்துப்பேசிய பசுமையான நினைவுகள் நினைவுக்கு வந்து நெஞ்சை அழுத்துகின்றன. அதுவரை துடிப்பான கதாநாயகன் என்று மட்டுமே அறிந்திருந்த எனக்கு, அவர் ஒரு பண்பான மனிதரும் கூட என்பதை உணர்த்திய சந்திப்பு அது. (இத்திரியின் முதல் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது).
அவரது மனைவி திருமதி விமலா ரவிச்சந்திரன் ஒரு பொறுமைக்கடல் என்று சொல்லலாம். ரவியைவிட எட்டு வயது இளையவர். கதாநாயகன் வாய்ப்புக்குறைந்து, ரவி வில்லன் வேடத்துக்கு மாறுவதற்கு இடைப்பட்ட காலத்தில் பணக்கஷ்ட்டத்தில் தவித்தபோது (பனக்கஷ்ட்டத்துக்குக் காரணம் ரவி இரண்டு சொந்தப்படங்கள் எடுத்தது) குடும்பத்தைக்கரை சேர்க்க விமலாதான் திருச்சியில் தையற்கலைஞராக வேலை செய்து பிள்ளைகளைப்படிக்க வைத்தார்.
சில ஆண்டுகளுக்கு முன் ஜெயா டிவியின் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியின்போது ரவி, தன் குடும்பத்தினரை அறிமுகப்படுத்தினார். மகன்கள், மகள்கள் யாவரும் திருமணம் ஆகி நல்ல நிலைமையில் உள்ளனர். மகன் நடிகர் அம்சவிருத்தன் மட்டும் திரையுலகில் போதிய வாய்ப்பின்றி வேறு தொழிலில் இறங்கி விட்டார்.
ரவிச்சந்திரன் தமிழக அரசு வழங்கும் 'கலைமாமணி' விருதும், தமிழக அரசு வழங்கும் 'நடிகர்திலகம் சிவாஜி விருதும்' பெற்றுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிறுநீரகம் செயலிழந்ததால் மாற்று சிறுநீரகம் பொருத்தும் நிலையையும் கடந்து விட்டதால், சுய நினைவின்றி இருந்தவர் நேற்று மாலை காலமானார்.
எஞ்சியிருந்த பழைய கலைஞர்களில் ஒருவர் மறைந்துவிட்டார். முன்பு வில்லன் நடிகர் திரு ஆர்.எஸ்.மனோகர் மறைந்தபோது இறுதி அஞ்சலி செலுத்த வந்த ரவிச்சந்திரன், 'என் நண்பர்கள் ஒவ்வொருத்தராக போய்க்கிட்டிருக்காங்க. நான் இன்னும் எவ்வளவு நாள் இருக்கப்போகிறேன்?' என்று கண் கலங்கினார். இப்போது அவரும் தன் நண்பர்களைத்தேடி இறுதிப்பயணம் மேற்கொண்டு விட்டார்.
அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைக் காணிக்கையாக்குகிறோம்.
நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமான ரவிச்சந்திரனின் உடல் நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சென்னை பெஸன்ட் நகர் மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. ஊர்வலத்தில் சில திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் கலந்துகொண்டனர். அவர் உடல், வீட்டிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டபோது அவரது மனைவியும், உறவினர்களும் கதறி அழுதது நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது.
அவரது மகன் நடிகர் அம்சவிருத்தன் தொலைக்காட்சியில் பேசும்போது, "அப்பா இறந்து விட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. அவர் இப்போதும் எங்களுடன்தான் இருக்கிறார். எப்போதும் இருப்பார். எங்கள் இதயங்களிலும் ரசிகர்களின் இதயங்களிலும் அவர் என்றும் நிலைத்திருப்பார்" என்று கூறினார்.
முன்னதாக நடிகர்கள் சிவகுமார், விஜயகுமார், சந்திரசேகர், (சங்கர்) கணேஷ் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் ரவிச்சந்திரன் வீட்டுக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். ரவிச்சந்திரனின் முதல் திரைப்பட ஜோடியான திருமதி ராஜஸ்ரீ, ரவிச்சந்திரனின் உடலைப்பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்.
ரவியுடன் பல வெற்றிப்படங்களில் நடித்தவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்தார். தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி சார்பில் முன்னாள் துணை முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் நேரில் வந்து ரவிச்சந்திரன் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கலை நிலவின் மறைவு நிச்சயமாக திரை உலகிற்கு ஒரு மாபெரும் பேரிழப்பு தான் சாரதா மேடம் கூறிய பிறகு தான் தெரிந்தது அவருடைய மனவி திருச்சியில் தையல் கலைஞர் ஆக இருந்தார் என்பது எனக்கு கிடைத்த தவறான தகவல் அவர் சீதாலக்ஷ்மி கல்லூரியில் விரிவுரையாளர் ஆக இருந்தார் என்று . எதனால் அவர் நடிகை ஷீலாவை இரண்டவது திருமணம் செய்தார் என்று தெரியவில்லை பிறகு ஏன் அவரை விட்டு பிரிந்தார் என்றும் தெரியவில்லை
பழைய நடிகர்களில் திரு ஸ்ரீகாந்த் மற்றும் சிவகுமார் போன்றவர்கள் தான் இருக்கிறார்கள் என்று நினேகிறேன் நம் மனம் கவர்ந்த சில நடிகர்கள் ஹனுமார் போல் சிரஞ்சீவி ஆக இருக்கமட்டர்களா என்று ஆசை ஆக உள்ளது
Bookmarks