-
6th December 2009, 02:06 PM
#41
Senior Member
Veteran Hubber
தாய்க்குலத்தின் அமோக ஆதரவு பெற்ற குடும்பச்சித்திரம்
'புகுந்த வீடு'
ஒரு ஏழைப்பாடகன் பாடுவதற்கான வாய்ப்புக்களைத்தேடி அலைகிறான். குடும்பத்திலோ வறுமை விரட்டுகிறது. காப்பாற்றப்பட வேண்டிய அம்மா மற்றும் தங்கை. இந்நிலையில் ஒரு பணக்காரப் பெண் இவன் பாடலில் மயங்கி இவன் மேல் மையல் கொள்ள, காதல் அரும்புகிறது. ஆனால் அவன் தன் கடமையை மறக்கவில்லை. பணக்காரப்பெண்ணின் அண்ணனுக்கும் பாடகனின் தங்கை மீது ஈர்ப்பு. பெண்கொடுத்துப் பெண் எடுக்கப்படுகிறது. பிரச்சினை முளைக்கிறது. பாடகனின் மேல் அவளுக்கிருந்த மையல் குறைகிறது. வாழ்க்கைக்கு வெறும் மனமயக்கம் மட்டும் போதாது, வாழ்க்கை என்பது அதற்கு மேலே என்று உணர்கிறாள். இரண்டு குடும்பமும் பிரிகிறது. பிறந்த வீட்டில் குழந்தைபெற்ற தன் தங்கையையும் அவள் குழந்தையையும் கூட கணவன் வந்து பார்க்க பாட்டுக்காரன் தடை போடுகிறான். பல்வேறு போராட்டங்களுக்குப்பிறகு குடும்பங்கள் ஒன்று சேர முடிவு சுபம்.
இப்படத்தில் பாடகனாக ரவிச்சந்திரன், தங்கையாக சந்திரகலா, பணக்காரப்பெண்ணாக லட்சுமி, அவளது அண்ணனாக (சந்திரகலா ஜோடியாக) ஏ.வி.எம்.ராஜன், ரவிச்சந்திரனின் அம்மாவாக நடிகையர்திலகம் சாவித்திரி நடித்திருந்தனர். ஏழையாக இருந்தாலும் முறைப்பான பாடகனாக ரவிச்சந்திரன் நடித்திருந்தார் என்றால் அதற்கு நேர்மாறாக பணக்காரனாக இருந்தாலும் பண்பு குறையாத அமைதியான இளைஞனாக ஏ.வி.எம்.ராஜன் நடிப்பில் அசத்தினார். லட்சுமிக்கு வழக்கம்போல வெடுக்கென்ற துடிப்பான நடிப்பு, சந்திரகலா குடும்பத்துக்கேற்ற குத்துவிளக்கு. சாவித்திரியின் அமைதியான, அப்பாவித்தனமான நடிப்பு நம் நெஞ்சை நெகிழ வைக்கும்.
"அம்மா, அன்னைக்கு நான் ரேடியோவில் பாடினேனே, அதற்கு...." மகன் முடிக்கும் முன்பே சாவித்திரி "என்னப்பா, பணம் வந்திருக்கா?" என்று ஆர்வத்துடன் கேட்க, "இல்லேம்மா, நிறைய பாராட்டுக்கடிதங்கள் வந்திருக்கு" என்று மகன் சொன்னதும் சோர்ந்து போய் "அப்போ பணம் எதுவும் வராதாப்பா?" என்று அப்பாவியாய் கேட்குமிடம் மனதைத்தொடுவதோடு, குடும்ப சூழ்நிலையையும் படம்பிடித்துக் காட்டும். அதுபோல் உறங்கிக்கொண்டிருக்கும் அம்மாவின் காலில் தலைவைத்து ரவிச்சந்திரன் தூங்கும் இடமும், "சாவு என்ற நிரந்தர தூக்கத்துக்கு ஒத்திகைதானேப்பா இந்த தூக்கம் எல்லாம்" என்று சாவித்திரி சொல்லும் இடமும் நம் மனதை சற்று இடம்பெயரச்செய்யும் காட்சிகள்.
படத்தை 'பட்டு' என்கிற ஆர்.பட்டாபிராமன் இயக்கியிருந்தார். படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் படத்தில் வரும் எல்லோரும் நல்லவர்கள். ஆனால் இடையிடையே ஏற்படும் மனப்போராட்டங்களே பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதை அழுத்தமாகச்சொல்லியிருந்தார். படத்தின் இன்னொரு பிளஸ் பாயிண்ட் 'இன்னிசை இரட்டையர்கள்' சங்கர் கணேஷ். பாடல்கள் அத்தனையும் மணி மணியாக அமைந்தன.
ரவிச்சந்திரன் ரேடியோவில் பாடிய பாடலை, தன் தோழிகளோடு சேர்ந்து லட்சுமி பாடும்...
'நான் உன்னைத்தேடுகிறேன்.. நாள்தோறும் பாடுகிறேன்
நீ போகும் பாதையெல்லாம்.. நிழலாக ஓடுகிறேன்'
என்ன ஒரு மெலோடி...!. இப்போதெல்லாம் இப்பாடல்கள் காணக்கிடைக்கவில்லையே.
குழந்தை பெற்ற தன்னைப்பார்க்க வந்த கணவனை, பார்க்கவிடாமல் தடுத்து நிற்கும் அண்ணனை குறித்து சந்திரகலா பாடும்...
'கண்ணன் பிறந்த வேளையிலே
அந்த தேவகி இருந்தாள் காவலிலே' பாடல் பெண்களைக்கவர்ந்தது என்றால்...
மேடைப்பாடகனாக உயர்ந்ததும், சங்கர் கணேஷை அறிமுகப்படுத்தி ரவி பாடும்
"மாடி வீட்டுப்பொண்ணு மீனா" பாடல் கல்லூரி மாணவர்கள் மத்தியில் எடுபட்டது.
ஐம்பதுகளிலும், அறுபதுகளின் துவக்கத்திலும் திரையிசையில் கொடிகட்டிப்பறந்த ஏ.எம்.ராஜா - ஜிக்கி ஜோடி, இந்த ஆண்டின் SUPER HIT பாடல்களில் ஒன்றை இப்படத்துக்காகப் பாடியிருந்தனர். நீண்ட இடைவெளிக்குப்பின் இதற்கு முந்தைய ஆண்டில் வெளியான ரங்கராட்டினம் படத்தில் 'முத்தாரமே.. உன் மோகம் என்னவோ' பாடலைப்பாடி மறு என்ட்ரி கொடுத்த ராஜா, புகுந்த வீடு படத்தில் ராஜன் - சந்திரகலா முதலிரவுப்பாடலான..
'செந்தாமரையே செந்தேனிதழே
பொன்னோவியமே, கண்ணே வருக'
பாடலை ஜிக்கியுடன் சேர்ந்து கலக்கலாகப்பாடி அசத்தியிருந்தார்.
(தொடர்ந்து தாய்க்கொரு பிள்ளை படத்தில் 'சின்னக்கண்ணனே' பாடலையும், வீட்டு மாப்பிள்ளை படத்தில் 'ராசி.. நல்ல ராசி' பாடலையும் பாடிய ஏ.எம்.ராஜா, இன்னொரு வெற்றி வலம் வருவார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் மீண்டும் மறைந்து போனார்).
1972-ம் ஆண்டின் அருமையான குடும்பச்சித்திரமாக அமைந்த 'புகுந்த வீடு' திரைப்படம், தாய்க்குலத்தின் அமோக ஆதரவோடு, 100 நாட்களைக்கடந்து ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.
-
6th December 2009 02:06 PM
# ADS
Circuit advertisement
-
10th December 2009, 01:28 PM
#42
Senior Member
Veteran Hubber
பழிவாங்கும் பாம்பு... பயந்தோடும் நண்பர்கள்...
"நீயா..?"
கொஞ்சம் விட்டலாச்சார்யா பாணிக்கதைதான். இந்தியில் 'நாகின்' என்ற பெயரில் வந்த படம் தமிழில் நடிகை ஷ்ரீபிரியா தயாரிப்பில் 'நீயா'வாக உருவெடுத்தது. நீண்டநாள் வாழும் பாம்புகள் சில இச்சாதாரி பாம்புகளாக மாறிவிடுமாம். அப்படீன்னா?. நினைத்த நேரத்தில், நினைத்த வடிவில் உருமாற்றிக்கொள்ளுமாம். சரி..., இதையே புராணப்படம் என்றால், பகுத்தறிவைக்கழற்றி வைத்துவிட்டுப் பார்க்க மாட்டோமா. அப்படிப்பார்க்க வேண்டியதுதான் என்று முடிவெடுத்து மக்கள் பார்த்தனர்.
காடு ஒன்றில் இரவு நேரத்தில் இரண்டுபாம்புகள் மனித உருக்கொண்டு ஆடிப்பாடுவதைக்கண்ட இளைஞனொருவன்(கமல்), ஊரில் இருக்கும் தன் நண்பர்கள் ஐவருக்கும் தெரிவிக்க, அவ்ர்கள் ஐவரும் காட்டில் ஆஜார். முதலில் அவர்கள் நம்ப மறுக்க, நேரடியாக அழைத்துச்சென்று காண்பித்தபோது அவர்களும் நம்புவதுடன் ஆச்சரியம் அடைகின்றனர். அதில் ஒருவன் துப்பாக்கியால் ஆண் பாம்பை சுட்டுக்கொன்றுவிட, வந்தது வினை. ஆண் பாம்பின் கண்களில் பதிந்திருக்கும் எதிரிகள் முகத்தை அடையாளம் கண்டு பெண்பாம்பு ஒவ்வொருவராக பழிவாங்குவதுதான் கதை. எப்படி ஒவ்வொருவராகப்பழி வாங்குகிறது என்பதுதான் படம் முழுக்க விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அம்புலிமாமா கதை போல இல்லை...?.
ஆறு நண்பர்களாக கமல்ஹாசன், விஜயகுமார், ஜெய்கணேஷ், ரவிச்சந்திரன், ஸ்ரீகாந்த, இன்னொருவர் (?). (அந்த இன்னொருவர் யாரென்று இங்கு யாராவது நிச்சயம் சொல்வார்கள்). இச்சாதாரி பாம்புகளாக ஸ்ரீபிரியாவும், சந்திரமோகனும் நடித்திருக்க, நண்பர்களை பாம்பின் பிடியிலிருந்து தப்பிக்க வைக்கும் மந்திரவாதியாக நம்பியார் நடித்திருந்தார். தவிர முத்துராமன், கவிதா, லதா, மஞ்சுளா, தீபா என்று ஏகப்பட்ட பேர் நடித்த, 'மல்ட்டி ஸ்டார்' படம் நீயா.
ரவிச்சந்திரனின் ஜோடியாக தீபா நடித்திருந்தார். இவர்களுக்கு
'ஒரு கோடி இன்பங்கள் உருவாகும் அங்கங்கள்
அசைந்தாடும் அழகுக்கோலங்கள் - ஓகோ
அழைத்தாலே தோன்றும் சொர்க்கங்கள்'
என்ற அருமையான டூயட் பாடல் உண்டு. நைட் எஃபெக்ட் சிச்சுவேஷனில் வி.ஜி.பி.தங்கக் கடற்கரையில் படமாக்கப் பட்டிருந்தது.
கமல் - லதா ஜோடிக்கு
"நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனைக்கட்டிக்கொண்டே பேசும் பெண் நிலா" என்ற பாப்புலர் டூயட் பாடலும், விஜயகுமார் - மஞ்சுளா ஜோடிக்கு
"உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை" என்ற டூயட் பாடலும் இடம்பெற்றிருந்தன. இவ்விரண்டு பாடல்களையும் எஸ்.பி.பி., பி.சுசீலா இணை பாடியிருந்தது. (மற்ற மூன்று நாயகர்களுக்கும் ஜோடியிருந்ததாக நினைவில்லை. ஸ்ரீகாந்துக்கு ஒரு குழந்தை இருந்ததாக ஞாபகம். அந்த 'இன்னொருவர்' திருமணமான முதலிரவிலேயே பாம்பினால் பழிவாங்கப்பட்டு அவுட். ஜெய்கணேஷுக்கு ஜோடி இருந்தாரா, இருந்திருந்தால் அவர் யார் என்ற நினைவில்லை)
எல்லா பாடல்களுமே அருமையாக அமைந்திருந்த போதிலும், ரொம்ப பாப்புலரான பாடல், இச்சாதாரி பாம்புகளான சந்திரமோகன் - ஸ்ரீபிரியா பாடும்
"ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா" பாடல்தான். மெட்டு அப்படியே இந்திப்படத்திலிருந்து இறக்குமதி. எஸ்.பி.பி., மற்றும் வாணிஜெயராம் பாடியிருந்தனர். அந்த உடல்வாகை வைத்துக்கொண்டு ஸ்ரீபிரியா பாம்பு நடனம் ஆட முயன்றிருந்தார். காண்டாக்ட் லென்ஸ் போட்டுக்கொண்டு குளோஸப்பில் அவர் பார்க்கும் அந்த குத்துப்பார்வை, நம் முதுகுத்தண்டை சிலிர்க்க வைக்கும்.
சங்கர் கணேஷ் இசையமைத்திருந்த இப்படத்தை துரை இயக்கியிருந்தார். 'நீயா..?' 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்படம்.
(சில வருடம் கழித்து, இதன் இரண்டாம் பாகமாக, 'நானே வருவேன்' என்ற படத்தை ஸ்ரீபிரியாவே இயக்கினார். ஆனால் வெற்றியடையவில்லை).
-
10th December 2009, 06:02 PM
#43
Senior Member
Veteran Hubber
I heard something from some persons
Most silver jublie movies by Ravichandran (and Mohan) than any other actors. How far is true?
-
14th December 2009, 07:58 PM
#44
Senior Member
Veteran Hubber
பாலன் பிக்சர்ஸ்
'பணக்காரப் பிள்ளை'
வழக்கமாக மக்கள கலைஞர் ஜெய்சங்கரை ஆஸ்தான நாயகனாக வைத்து படங்களைத்தயாரிக்கும் பாலன் பிக்சர்ஸ் நிறுவனம், ஒரு மாறுதலாக ரவிச்சந்திரனைக் கதாநாயகனாகக் கொண்டு இப்படத்தை தயாரித்தது. அதுவும் ரவிச்சந்திரனுக்கு இரட்டை வேடங்கள். (பாலன் நிறுவனம் இதற்கு முன் தயாரித்த 'நாம் மூவர்' படத்தில் இருவருமே நடித்துள்ளனர்).
ஒரேமாதிரி இருவர் என்ற கதை வந்தாலே ஆள்மாறாட்டம் முக்கிய இடம்பிடிக்கும். இதிலும் அப்படியே. ஒருவர் பணக்காரர், வெளிநாட்டுப்போக்குவரவு உள்ளாவர். இன்னொருவரோ துறைமுகக் கூலி. இவ்விருவரையும் மையமாக வைத்து, வ்ழக்கம்போல மசாலா தடவி தயாரிக்கப்பட்ட படம் இது. பணக்காரருக்கு ஜோடியாக 'கலைச்செல்வி' ஜெயலலிதாவும், ஏழைத்தொழிலாளியின் ஜோடியாக (அன்றைய) 'கவர்ச்சிப் புயல்' ஜோதிலட்சுமியும் நடித்திருந்தனர்.
பாலன் படமாச்சே. எஸ்.எம்.சுப்பையா நாயுடுதான் இசை. வாலியின் பாடல்கள்...
பணக்கார ரவி கப்பலில் அமர்ந்திருக்க, தொழிலாளி ரவி, கூலித் தொழிலாளர்களுடன் பாடும் "நமது அரசு நமது நாடு" என்ற பாடலில், அன்றைக்கு புதிதாக அமைந்திருந்த அண்ணாதுரை தலைமையிலான தி.மு.க அரசைப் புகழ்ந்து வரிகள் அமைந்திருந்தன.
ரவிச்சந்திரன் - ஜோதிலட்சுமி ஜோடிக்கு
"பட்டம் விட்டது போலே பறக்குதம்மா உன் மேலாடை
குடை ராட்டினம் போலே சுற்றுதம்மா உன் பாவாடை"
என்ற மசாலா பாடல் என்றால்....
ரவிச்சந்திரன் - ஜெயலலிதா ஜோடிக்கு அழகிய மெலோடியான...
"மாணிக்க மகுடம் சூட்டிக்கொண்டாள் - மகாராணி"
என்ற மனதைக்கவரும் பாடல்.
ஜம்பு இயக்கியிருந்த 'பணக்காரப்பிள்ளை' படம், குறைந்த கட்டணத்தில் படம் பார்க்கும் ரசிகர்களை திருப்தி செய்தது.
-
16th December 2009, 11:34 AM
#45
Senior Member
Veteran Hubber
ரவிச்சந்திரன் சந்தித்த ரயில் விபத்து
1967-ம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் 'எதிரிகள் ஜாக்கிரதை' படத்தில் நடிக்க ரயில் மூலம் சேலம் செல்லும் வழியில் ரவிச்சந்திரன் சென்ற ரயில் பெரிய விபத்துக்குள்ளானது. மிகவும் ஆச்சரியமான வகையில் தான் உயிர் பிழைத்தது பற்றி ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சொல்லியிருந்தார். பார்க்காதவர்களுக்காக மீண்டும். அவருடைய வாயிலாகவே...... (Over to Ravichandran)
"மாடர்ன் தியேட்டர்ஸ் 'எதிரிகள் ஜாக்கிரதை படத்தில் நடிப்பதற்காக சென்னையில் இருந்து ரயில் மூலம் சேலம் புறப்பட்டேன். சென்னையைத்தாண்டி சிறிது தூரம் சென்றதும் ஷர்ட், பேண்ட் இவைகளை மாற்றி டி.ஷர்ட்டும் லுங்கியும் அணிந்து கொண்டு தூங்கலாம் என்று ரிலாக்ஸ்டாக இருந்தபோது, அரக்கோணம் நெருங்கியது. ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தபோது நான் இருந்த ரயில் வேகம் குறைவது போலத் தோன்றியது. அதே சமயம் எதிரில் ஒரு ரயில் வருவது போலத் தெரிய 'என்ன இது ஒரே ட்ராக்கில் வருவது போலத்தெரியுதே, ஒருவேளை மோதிக்கொள்ளுமோ' என்று நான் நினைத்து முடிக்கவில்லை. இரண்டு ரயில்களும் பயங்கர சத்தத்துடன் மோதிக்கொண்டன. நான் இருந்த பெட்டி, இன்னொரு பெட்டியுடன் மோதி நசுங்கிக் கிடந்தது. மோதிய கண்மே விளக்குகள் அணைந்துவிட்டதால் எங்கும் கும்மிருட்டு. பெட்டிக்குள் தட்டுத்தடுமாறி வாசல் வரை நகர்ந்து போய் வாசலைத்திறக்க முயன்றால், கதவு நசுங்கி ஜாம் ஆகி இம்மியும் நகரவில்லை. மீண்டும் ஜன்னல் வழியே யாராவது தென்படுகிறார்களா என்று அலைமோதினேன். தலையில் அடிபட்டதால் ரத்தம் வழிந்துகொண்டு இருந்தது. எங்கும் ஒரே கூக்குரல்கள். உள்ளே இருப்பவர்கள் யாரையும் வெளியில் இருந்து பார்க்க முடியாது அந்த அளவுக்கு இருட்டு, அப்போது ஒருவர் ஜன்னல் அருகே வருவது போல் தெரிய உடனே அவரை அழைத்து "யப்பா, நான்தான் நடிகர் ரவிச்சந்திரன். உள்ளே மாட்டிக்கிருக்கேன். கொஞ்சம் வெளியில் வர ஏதாவது பண்ணுங்கப்பா" என்று கேட்க, அவர் நம்பாமல் கையில் இருந்த லைட்டரால் என் முகத்தருகே அடித்துப்பார்த்துவிட்டு, "சார் நீங்களா?. இதோ வர்ரேன் சார்" என்று போனவர் இரு இரும்புக்கம்பியை கொண்டுவந்து ரயில் ஜன்னல் கம்பிகளை உடைத்து என்னை வெளியில் கொண்டு வந்தார். கையில் இருந்த துண்டைக்கொடுத்து கட்டிக் கொள்ளச்சொன்னார். அப்போதுதான் பார்த்தேன். நான் கட்டியிருந்த லுங்கியும் காணாமல் போய், வெறும் அண்டர்வேரோடு இருந்தேன். அவர் கொடுத்த துண்டைக்கட்டிக்கொண்டு அந்த நண்பரின் உதவியோடு ஒரு ஆட்டோவைப்பிடித்து அரக்கோணம் ஆஸ்பத்திரி போய் நானே என்னை அட்மிட் பண்ணிக் கொண்டேன். அன்று நான் பிழைத்த்து மறு பிழைப்பு என்று சொல்லலாம்".
-
17th December 2009, 11:05 AM
#46
Senior Member
Veteran Hubber
'மஞ்சள் குங்குமம்'
ரவிச்சந்திரன் - ஷீலா தம்பதியரின் சொந்தப்படமாக வந்தது மஞ்சள் குங்குமம்.
பெரிய தொழிலதிபர் தர்மலிங்கத்தின் மகன் ராஜா, (அப்போதெல்லாம் தமிழில் பத்து படங்கள் வந்தால் அதில் எட்டு படங்களில் கதாநாயகன் பெயர் ராஜாவாகத்தான் இருக்கும்). தான் சந்தித்த ஒரு ஏழை நர்ஸ் ராதாவைக் காதலிக்கத் துவங்குகிறான். அவனுடைய தந்தை அந்தக்காதலை எதிர்க்கிறார். (ஆதரித்தால்தான் அதிசயம்). தான் விரும்பியபடி தன் மகன் ஒரு பெரிய அட்வகேட்டாக வந்தால்தான் தன் வீட்டில் சேர்த்துக்கொள்வேன் என்று வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். வெளியேறிய ராஜாவும் நர்ஸ் ராதாவைத் திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்துகிறான். நர்ஸுக்கோ மனதில் உறுத்துகிறது. நன்றாகப்படித்து பெரிய வக்கீலாக வரவேண்டியவர், தந்தையின் ஏராளமான சொத்துக்களை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டியவர், தன்னால் வீட்டைவிட்டு வெளியேறி கஷ்ட்டப்படுகிறாரே என்ற குற்ற உணர்வு அவளைத்தாக்குகிறது.
ஒரு முடிவெடுக்கிறாள். எப்படியும் அவனை படிக்க வைத்து வக்கீலாக ஆக்கி, அவன் தந்தை தர்மலிங்கத்தின் முன் கொண்டுபோய் நிறுத்தி ஏற்றுக்கொள்ளச்செய்ய வேண்டும். அதற்காக கணவனை எந்த வேலைக்கும் செல்ல விடாமல், தான் மட்டும் வேலைக்குப்போய் சம்பாதித்து அவன் கவனம் முழுவதையும் படிப்பிலேயே நிலைக்கச் செய்து சாதித்துக்காட்ட வேண்டும் என்று முடிவெடுத்து கணவனிடம் கூற முதலில் மறுக்கும் அவன், அவளது வற்புறுத்தலுக்காகச் சம்மதிக்கிறான். தான் படித்து வக்கீலாகும் வரை அவளை தன் மனைவி என்ற நோக்கத்தோடு நெருங்க மாட்டேன் என்று அவனும் சபதம் செய்து படிக்கிறான். ஆனால் தான் படித்த நர்ஸ் பயிற்சிக்கான வேலை கிடைக்காமல் கட்டிடம் கட்டுமிடத்தில் சித்தாள் வேலைக்குப்போகிறாள் ராதா, (கணவனிடம் நர்ஸ் வேலை பார்ப்பதாக பொய் சொல்லிக்கொண்டு).
ராஜாவும் கவனத்தை அங்கே இங்கே சிதறவிடாமல் சமர்த்தாகப்படிக்கிறான். இதனிடையே தன் மனைவி சித்தாள் வேலை செய்வதாக யாரோ சொன்னதைக்கேட்டு கட்டிட வேலை நடக்குமிடத்துக்கு ஓடிப்போய்ப்பார்க்க, அதே நேரம் கட்டிட தொழிலாளி ஒருவன் கீழே விழுந்து அடிபட, அவனுக்கு ராதா தன்னுடைய நர்ஸ் அனுபவத்தை வைத்து சிகிச்சை செய்துகொண்டிருக்க, அதைப்பார்க்கும் ராஜாவுக்கு, தான் கேள்விப்பட்டது பொய், தன் மனைவி நர்ஸ் வேலை செய்வதாகச் சொன்னதுதான் நிஜம் என்று மனம் சமாதானம் அடைந்து திரும்புகிறான்.
இதனிடையே தான் அதற்கு முன் செய்தறியாத சித்தாள் வேலையைத்தொடர்ந்து செய்து வந்ததில் அவள் உடல் நலிவுற்று காச நோய் தாக்குகிறது. கணவனுக்குத்தெரியாமல் சமாளிக்கிறாள். அவனுக்கு இறுதியாண்டு பரீட்சை நெருங்க நெருங்க அவளுக்கும் நோய் தீவிரமடைகிறது. ரத்தவாந்தி எடுக்கத்துவங்குகிறாள். ஆனால் தேர்வுக்காக தன்னை எரித்துக்கொண்டு படிப்பிலேயே கவனமாக இருக்கும் கணவனுக்கு இவை எதுவுமே தெரியவில்லை. (தெரியாவண்னம் மறைத்து விடுகிறாள்). இருவருக்கும் தனித்தனிப் படுக்கையென்பதால், அவளது நோயின் தாக்கம் அவனுக்குத் தெரியவில்லை. அவனுடைய ஒரே எண்ணம், படித்து முடித்ததும் தான் வேலைக்குப்போய், இதுவரை தன்னைத்தாங்கிய மனைவியை ராணி போல வைத்துத் தாங்க வேண்டுமென்பதுதான்.
இறுதிநாள் தேர்வு எழுதிமுடித்த கையோடு, தன் மனைவியை அழைத்துக்கொண்டு கடற்கரைக்குச்சென்று சந்தோஷமாக ஆடிப்பாடுகிறான். அவளோ தன் வேதனைகளை மறைத்துக்கொண்டு, முடிந்தவரை அவனுக்கு ஈடுகொடுத்து தானும் சந்தோஷமாக இருப்பது போல் நடிக்கிறாள். தேர்வு முடிவு வருகிறது. ராஜா முதல் வகுப்பில் பாஸாகியிருக்கிறான். ராஜாவின் அப்பாவிடம் அவனை அழைத்துப்போகும் அவள் 'D.ராஜா B.A.B.L., அட்வகேட்' என்று எழுதப்பட்ட பெயர்ப்பலகையைத் தட்டில் வைத்து, அவனையும் ஒப்படைத்து, "மாமா, உங்க ஆசைப்படி அவரை வக்கீலாக உருவாக்கி உங்க கிட்டே ஒப்படைச்சிட்டேன்" என்றதும் தர்மலிங்கம் மனம் நெகிழ்ந்துபோகிறார். அவளைத்தன் மருமகளாக ஏற்றுக்கொள்வதாகச் சொல்ல ராஜாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆனால் என்ன பயன்?. பேசிக்கொண்டிருக்கும்போதே மயங்கி விழும் ராதா, டாக்டர் வருவதற்குள் உயிரை விடுகிறாள். எனென்னவோ கனவுகளோடு வாழ்ந்த அவனுக்கு நிமிட நேரத்தில் வாழ்க்கையே சூன்மாகிறது என்ற சோகத்தோடு படம் முடிகிறது.
ரவிச்சந்திரனுக்கு வழக்கமான நடிப்பு என்றாலும், ஆரம்பத்தில் விளையாட்டுப்பிள்ளையாக பொறுப்பில்லாமல் திரியும் இவர் திருமணத்துக்குப்பின் நல்ல பொறுப்பான கண்வனாக மாறுவதும், தன் படிப்புக்காக உழைக்கும் மனைவியின் கஷ்ட்டங்களை மதித்து, அதற்காக தன் திருமண வாழ்க்கையைத் தள்ளி வைப்பதும் அவர் ஏற்ற பாத்திரத்தின் தன்மையை உயர்த்துகின்றன.
இது ரவிச்சந்திரனின் படம் என்பதைவிட ஷீலாவின் படம் என்பதுதான் பொறுத்தமாக இருக்கும். அந்த அளவுக்கு நர்ஸ் ராதா பாத்திரத்தில் ஒன்றிப்போய்விடுவார். ராஜாவின் தந்தை தர்மலிங்கமாக டி.கே.பகவதி நடித்திருந்தார். இம்மூவரைத்தவிர மற்ற நட்சத்திரங்கள் என் நினைவுக்கு வரவில்லை.
பாதிப்படத்திலிருந்தே சோகம் ததும்பத் துவங்கியதால், படம் குடும்பப்பெண்களுக்கு மட்டுமே பிடித்திருந்தது. அதனால் சுமாரான ஒரு ரிஸல்ட்டையே பெற்றது.
'பட்டு' என்கிற ஆர்.பட்டாபிராமன் (புகுந்த வீடு படத்தை இயக்கியவர்தான்) 'மஞ்சள் குங்குமம்' படத்தை இயக்கியிருந்தார். சங்கர் - கணேஷ் இசையமைத்திருந்தனர். 'கோமாளி கட்டி வச்ச கோட்டையிது புரிஞ்சுக்கோ' என்ற டப்பாங்குத்துப்பாடல் ஒன்று இடம் பெற்றிருந்ததாக ஞாபகம் இருந்தபோதிலும், மனதில் நிலைத்திருப்பது ஒரே பாடல்தான். கடைசி நாள் தேர்வு முடித்து, கடற்கரையில் மனைவி ராதாவையும் அழைத்துக்கொண்டு அவளைப்புகழ்ந்து ராஜா பாடும் ஸோலோ பாடல், அன்றைய எஸ்.பி.பி.யின் இளைய குரலில்.....
'என் காதல் கண்மணி....
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ.....
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா... ராதா.... ராதா.......'
-
17th December 2009, 04:22 PM
#47
Senior Member
Seasoned Hubber
சகோதரி சாரதா அவர்களுக்கு,
தங்களுடைய பதிவுகள் அனைத்துமே அந்தக் கால நினைவுகளை நெஞ்சில் நிறுத்துகின்றன. புகுந்த வீடு அமோக வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், அப்படத்தின் நூறாவது நாள் விழாவில் நடிகர் திலகம் பங்கு பெற்று அனைவருக்கும் ஷீல்டுகளை வழங்கினார். இப்படத்தைத் தொடர்ந்து மேலும் சில படங்களில் ஏ.எம். ராஜா பாடினார். எனக்கொரு மகன் பிறப்பான் படத்திற்கும் இசையமைத்தார். பத்து மாத பந்தத்திலும் ஒரு பாடல் பாடியதாக நினைவு.
அதே போல் பணக்காரப் பிள்ளை படமும் அந்த ஒரு பாடல் மாணிக்க மகுடம் சூட்டிக் கொண்டாள் என்று துவங்கும் பல்லவி - டி.எம்.எஸ். சுசீலாவின் இனிய குரலில் என்றும் பசுமையானது.
இன்று காலை 9.00 மணி ஜெயா டி.வி.யில் என் காதல் கண்மணி பாடலைப் பார்த்து விட்டு மதியம் நம் ஹப்பில் பார்த்தால் நீங்கள் அப்படத்தைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். இதைத் தான் கோயின்சிடென்ஸ் என்பரோ.
பாராட்டுக்கள்.
ராகவேந்திரன்
விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட இறைவன் நடிகர் திலகம்.. கடலின் ஆழத்தை அளந்து விடலாம். நடிகர் திலகத்தின் செல்வாக்கை அளக்க முடியாது... அது பயனளிக்கும் போது தான் அதன் ஆழம் புரியும்....
-
18th December 2009, 06:36 PM
#48
Senior Member
Veteran Hubber
டியர் ராகவேந்தர் சார்,
அன்றைய நிகழ்வுகளை படிக்கும்போது / எழுதும்போது மனம் தானாக அன்றைய சூழலுக்குச் செல்வது என்பது ஒரு பரவசமான அனுபவம். அவை மீண்டும் வராது என்பது பெரிய சோகம். 'புகுந்த வீடு' 100வது நாள் விழா பற்றிய செய்தி (நடிகர்திலகத்தின் பங்கேற்பு) மகிழ்ச்சியைத்தந்தது.
1972 - நடிகர்திலகத்தின் சாதனை ஆண்டு என்பது நமகெல்லாம் தெரிந்ததுதான். 9 படங்களில் 8 படங்கள் 100 நாட்களைக்கடக்க, அவற்றில் இரண்டு வெள்ளிவிழாக்காண வைத்த குதூகல ஆண்டு. அதே ஆண்டில் 'சாமான்யர்களின்' பல படங்களும் வெற்றிக்கொடி நாட்டின என்பது மேலும் மகிழ்ச்சியூட்டும் செய்தியாகும்.
1972-ல் 100 நாட்களைக்கடந்த சாமான்யர்களின் படங்கள்:
புகுந்த வீடு
காசேதான் கடவுளடா
குறத்தி மகன்
தேவரின் தெய்வம் (மல்ட்டி ஸ்டார்)
அன்னை வேளாங்கண்ணி (மல்ட்டி ஸ்டார்)
10 வாரங்களைக்கடந்த சாமான்யர்களின் படங்கள்:
அகத்தியர்
அவள்
பிள்ளையோ பிள்ளை
50 நாட்கள்:
கண்ணா நலமா
பதிலுக்கு பதில்
வாழையடி வாழை
கனிமுத்துப்பாப்பா
கண்ணம்மா
-
21st December 2009, 05:36 PM
#49
Senior Member
Veteran Hubber
Originally Posted by
saradhaa_sn
'எங்க பாப்பா'
.........படத்தில் இரண்டுமுறை பாடப்படும்
'ஒருமரத்தில் குடியிருக்கும் பறவை இரண்டு'
இன்னொரு பாடல், எல்.ஆர்.ஈஸ்வரியின் கொஞ்சும் குரலில் (கூடவே டி.எம்.எஸ்) 'சொந்த மாமனுக்கும் ஒரு பெண்ணிருந்தால்'
ரவிச்சந்திரன் சண்டையிட்டுக்கொண்டே பாடுவதாக வாலி அமைத்திருந்த 'நான் போட்டால் தெரியும் போடு'
There is one more song in 'enga pApA' by TMS & Suseela
'புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்'
for Ravichandran & Bharathi.
-
23rd December 2009, 02:33 AM
#50
Senior Member
Veteran Hubber
சிங்காரச் சென்னையில் காதலிக்க நேரமில்லை :
'ஸ்மார்ட் ஹீரோ', 'கலை நிலவு' ரவிச்சந்திரன் அவர்களின் முதல் திரைப்படமான காதலிக்க நேரமில்லை 27.2.1964 அன்று வெளியானது. சென்னையில் காஸினோ, கிருஷ்ணா, உமா ஆகிய 3 தியேட்டர்களிலும் மற்றும் தென்னகமெங்கும் வெளியானது.
காஸினோவில் மொத்தம் 30 வாரங்கள் (210 நாட்கள்) ஓடி இமாலய வெற்றி பெற்றது. 27.2.1964 அன்று வெளியாகி 24.9.1964 வரை 211 நாட்கள் ஓடியது. எனினும், 210 நாட்கள் என்றே கணக்கிட வேண்டும். 27.5.1964, பிரதமர் நேரு அவர்களின் மறைவையடுத்து, சினிமாக் காட்சிகள் ஒரு நாள் ரத்து செய்யப்பட்டது. எனவே, அந்த ஒரு தினத்தை விடுத்து, 210 நாட்கள் என்று கணக்கிடுவதே சரி. காஸினோவில் 25.9.1964 அன்று கலைக்கோயில் வெளியானது. (காஸினோ 911 இருக்கைகள்)
கிருஷ்ணாவில், காதலிக்க நேரமில்லை, 105 நாட்கள் ஓடி அபார வெற்றி கண்டது. அதாவது, 27.2.1964 முதல் 11.6.1964 வரை ஓடியது. (மேற்கூறிய காரணப்படி இங்கேயும் ஒரு நாளை கழிக்க வேண்டும்). 12.6.1964 அன்று கிருஷ்ணாவில் நடிப்பு(பை) ஆண்டவரின் ஆண்டவன் கட்டளை திரைப்படம் வெளியானது. (கிருஷ்ணா 1198 இருக்கைகள்)
உமாவிலும் காதலிக்க நேரமில்லை, 105 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது. அதாவது, 27.2.1964 லிருந்து 11.6.1964 வரை ஓடியது. (மேற்கூறிய காரணப்படி இங்கேயும் ஒரு நாளை கழிக்க வேண்டும்). (உமா 762 இருக்கைகள்)
மேலும், காதலிக்க நேரமில்லை, ஈஸ்ட்மென் கலரில் வெளிவந்த முதல் சமூகத் தமிழ்த் திரைப்படம். வண்ணத்தில் வெளியான, தமிழ் சினிமாவின் முதல் முழு நீள காமெடிக் காவியம்.
ஆக மொத்தம், ரவியின் முதல் திரைப்படமான காதலிக்க நேரமில்லை, சென்னை மாநகரில்,
காஸினோவில் 210 நாட்களும்,
கிருஷ்ணாவில் 105 நாட்களும்,
உமாவில் 105 நாட்களும் ஒடோ ஓடென்று ஓடியது.
சிங்காரச் சென்னையில் காதலிக்க நேரமில்லை ஒரு ஹிமாலயன் ஹிட் !!!
அன்புடன்,
பம்மலார்.
Bookmarks