Results 11 to 19 of 19

Thread: இரட்டை விசேஷம் ! !

Threaded View

  1. #1
    Senior Member Diamond Hubber madhu's Avatar
    Join Date
    Dec 2004
    Location
    engaluru
    Posts
    6,141
    Post Thanks / Like

    இரட்டை விசேஷம் ! !

    இது ஒரு அடல்ட்ஸ் ஒன்லி கதை
    **************************

    சந்தன வாசமும், மல்லிகை மணமும் ஒன்றாகி இணைந்து மெதுவாக மூக்கின் ஓரத்தில் வந்து மோதியபோது கல்யாண வீட்டிற்கு என்று இருக்கும் சில தனியான வாசனைகள் எங்கெங்கும் பரவிக் கிடப்பது புரிந்தது. ஆனால் காலின் கீழே நெருடும் அட்சதை அரிசியின் உறுத்தலை விட என் மனதின் உறுத்தல் அதிகமாக இருந்தது. மேஜையின் மீது இருந்த அட்டைப் பெட்டியில் இளஞ்சிவப்பு நிறத்தில் மெரூனும், கரும்பச்சையுமாக கொடிகள் இணைந்த பார்டருடன் இருந்த பட்டுப் புடவை என்னைப் பார்த்து "எப்போது என்னை எடுத்துக் கட்டிக் கொள்ளப் போகிறாய்?" என்று கேட்பது போல இருந்தது.

    நான் கண்களைத் திருப்பிக் கொண்டேன். அறைக்கு வெளியே யாரோ வரும் காலடிச் சத்தம். கண்களின் ஓரத்தில் மின்னிக் கொண்டிருந்த ஒரு சிறு துளியை மெதுவாக துடைக்கையில் அறைக்கு வெளியே அம்மாவின் குரல் கேட்டது.

    "என்னடி பொண்ணுங்களா ? இன்னுமா யாரும் டிரஸ் செஞ்சுகிட்டு ரெடியாகலே ? மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கூட ரெடியாகி வந்திடுவாங்க போலிருக்கு. பொண்ணு வீட்டுல சோம்பேறிங்கன்னு சொல்லிடப் போறங்க"

    "சித்தி.. இங்கே ஒரே ஒரு பாத்ரூமிலேதான் தண்ணி வருது. முகம் மட்டும் கழுவிக்கிறவங்களுக்கு போதும். ஆனா குளிக்கணுமின்னு நினைக்கிறவங்க எல்லாரும் வேற இடம் தேடிகிட்டு போயிருக்காங்க" மீனா பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

    "என்ன சொல்றே ? யாரையாச்சும் கூப்பிட்டு உடனே சரி செய்ய சொல்லு."

    அம்மாவின் குரல் இப்போது என் பின்னால் கேட்டது.

    "ஹேமா ? என்ன மசமசன்னு நின்னுகிட்டு இருக்கே ? நாளைக்கு பொழுது விடிஞ்சா கல்யாணம். இன்னைக்கு சாயங்காலமே கூட்டம் அதிகமா இருக்கும் போலத் தெரியுது. நான் எதை செய்வேன்னு தெரியல. கல்யாணத்துல எல்லாரும் பளிச்சுனு இருக்கணுமின்னுதானே தனியா ஏ.சி. ரூமெல்லாம் போட்டு வச்சிருக்கு. அங்கே போனா வாசவி உன்னைக் காணவே இல்லைனு சொல்றா.. அட.. என்னடி இது ? நீ இன்னும் குளிக்கலையா ? குளிச்சிட்டு பட்டுப் புடவையைக் கட்டிகிட்டு சீக்கிரம் ரெடியாகு"

    நான் தலையை ஆட்டியதைக் கண்டு அம்மா என் முன்னால் வந்தாள்.

    "என்னடி இது ? நல்ல நாளும் அதுவுமா ஏன் இப்படி இருக்கே ? கண்ணத் தொடச்சுக்க. யாராச்சும் பாக்கப் போறாங்க"

    அம்மா பரபரப்புடன் நாலுபுறமும் பார்க்க நான் கண்ணைத் துடைத்துக் கொண்டு "சரிம்மா.. நான் குளிச்சு ரெடியாறேன். நீ போய் வேலையப் பாரு" என்றேன். அம்மா சுற்றுமுற்றும் பார்த்தபடியே "இங்கே ஒரு பாத்ரூம்ல தண்ணி சரியா வரல. கூட்டம் இருக்கும். அதனால நீ மாடிக்கு போய் சீர் பாத்திரம் எல்லாம் வச்சிருக்கற ரூம்ல ஒரு பாத்ரூம் இருக்கு பாரு. அதுல குளிச்சுட்டு அங்கியே டிரஸ் செஞ்சுகிட்டு வந்துடு"

    அம்மா அடுத்த வார்த்தை பேச ஆரம்பிக்குமுன் நான் சட்டென்று அவள் நீட்டிய சாவியை வாங்கிக் கொண்டு ஒரு பையில் ஒரு நைட்டியையும் என் டிரஸ்ஸையும், சில மேக்கப் சாமான்களையும் எடுத்துக் கொண்டு வெளியேறினேன். கல்யாணம் வெகு விமரிசையாக இருக்க வேண்டும் என்பதற்காக எல்லா ஏற்பாடுகளும் செய்தாலும் இந்த குழாய் பிரச்சினை போல சில சமயங்களில் ஏதாவது வந்து விடுவதை தவிர்க்க முடிவதில்லை. மாடியில் கடைசி அறையில் சீர் வகையறாக்கள் எல்லாம் அடுக்கி வைத்திருந்தார்கள். அதில் ஒரு குளியலறையும் இருந்தது. எதற்கு ஒரு ஏ.சி.ரூமை இப்படி பொருட்களை அடைத்து வைக்க உபயோகிக்க வேண்டும் என்று நான் கேட்டபோது அதிலேயே ஒரு படுக்கை இருப்பதால் காவலுக்கு ஒருவர் தங்கிக் கொள்ளலாம் என்று அப்பா சொன்னார்.

    மாடியில் வரிசையாக இருந்த அறைகளைக் கடந்து நடந்தபோது அம்மா சொன்னது போல அப்படி ஒன்று கூட்டம் நிரம்பி வழியவில்லை என்று தோன்றியது. சொந்தக்காரர்கள் சிலபேர் மட்டும்தான் எதிர்பட்டார்கள். கடைசிக்கு முந்தைய அறை மாப்பிள்ளைக்கு என்று ஒதுக்கப்பட்டது என்று தெரிந்தது. நான் அதைத் தாண்டும்போது உள்ளேயிருந்து பாஸ்கர் வெளிப்பட்டான். நாளை மணமேடையில் அமரப்போகும் மகிழ்ச்சி உள்ளுக்குள் பொஙகி வழிவதை முகத்தின் புன்னகை காட்டியது.

    என்னைப் பார்த்ததும் "ஹாய் ஹேமா ? என்ன இன்னும் ரெடியாகலையா ? என் வருங்கால மாமியார். அதான் உன் அம்மா அப்போதிலிருந்து இறக்கை கட்டாம பறந்துகிட்டு இருக்காங்களே" என்றான்.

    "அங்கே ரூமிலே குழாயிலே தண்ணி சரியா வரல. அதான் இங்கே ரிஃப்ரெஷ் செஞ்சிக்க வந்தேன்"

    "ஓ... எங்க ரூமில வருதே.. இதை வேணுமானா யூஸ் செஞ்சிக்க. நாங்க கொஞ்ச நேரம் கழிச்சி வரோம் .." என்றவனிடம் "இல்லே.. இதோ அடுத்த ரூம் சாவி இருக்கு." என்றேன்.

    அவன் கல்லூரி நண்பர்கள் இருவர் வெளியே வர அவன் என்னைப் பார்த்து சிரித்தபடி "ம்ம்.. சீக்கிரம் ரெடியாகு.. ஈவினிங் ஃபங்ஷன்ல உனக்கு ஒரு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் இருக்கு" என்றான்.

    பாஸ்கரின் கண்கள் என் பின்னாலேயே வருவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அவனும் நானும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். என் வீட்டுக்கு அடிக்கடி வந்து போனதால் என் குடும்பத்தாரிடம் ஏற்பட்ட பழக்கமும் அவன் மீது அவர்களுக்கு உண்டான அபிமானமுமே இன்று அவன் மாப்பிள்ளை கோலத்தில் இருக்க காரணம். நான் திரும்பிப் பார்க்காமலேயே அறைக்குள் புகுந்து கொண்டேன்.

    அந்த அறைக்குள் சென்று குளிக்கத் தயாரானபடியே அங்கிருந்த கண்ணாடியில் என்னைப் பார்த்துக் கொண்டபோது கூட எனக்குள் பாஸ்கர் சொன்னஅந்த சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் என்று ஒரு கேள்வி எழுந்தபடி இருந்தது. பிரித்து விட்ட கூந்தல் அலை அலையாக பரவி இருக்க மாசு மருவில்லாத சருமம். மாநிறம்தான் என்றாலும் களையான முகம். கோவில் சிலை போல இருப்பதாக பார்த்தவர்கள் சொன்னதை பலமுறை கேட்டிருக்கிறேன். மூன்று கோடுகள் விழுந்த கழுத்தை சங்கு போலவே இருக்கிறது என்று சொன்னவர்கள் உண்டு. இரண்டு மாதமாக அம்மாவின் கைப்பக்குவத்தில் வித விதமாக சாப்பிடுவதாலோ என்னவோ இடுப்பு இப்போது கொஞ்சம் பருத்து இருக்கிறது.

    என் மனதுக்குள் ஒரு இனம் புரியாத வேதனை. இதோ குளித்து முடித்து கீழே இறங்கியதுமே என் மனதில் உள்ளதை என் வீட்டாரிடம் சொல்லி நான் எடுத்திருக்கும் முடிவையும் சொல்லி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். திடீரென்று சொல்வது எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும் நிச்சயம் சரியான முடிவு என்றுதான் சொல்லுவார்கள். மகேஷ்.... மகேஷ்... !!

    என்னைக் கண்ணாடியில் பார்த்தபோது ஏனோ மனதுக்குள் ஒரு வலி இருந்தது. குளித்ததும் டிரஸ் செய்யும் முன் அணிந்து கொள்ள ஒரு நைட்டியை எடுத்து வைத்துக் கொண்டு பின் பெரிய தேங்காய்ப்பூ டவலை உடலில் சுற்றிக் கொண்டு பழைய உடைகளை மடித்து எடுத்து வைத்து விட்டு நான் குளியல் அறைப் பக்கம் திரும்பியபோது அறைக் கதவை யாரோ தட்டுவது கேட்டது.

    "யாரு ?"

    பதில் சரியாக கேட்கவில்லை. ஏதோ நினைவில் டவலைக் கட்டியிருப்பதையும் மறந்து நான் அப்படியே போய் சட்டென்று கதவைத் திறந்தேன். பளீரென்று ஒரு மின்னல் தாக்கியது போல இருந்தது.

    வாசலில் நின்ற மகேஷ் அவன் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை மறைக்காமல் " ம்ம்.. நீ... இது பாஸ்கர் ரூம்.... ம்." என்று பாதியில் நிறுத்த நான் பதில் சொல்லாமல் அந்த முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தேன்.

    மகேஷின் உதடுகளில் ஒரு துடிப்பு தெரிந்தது.

    "ஹேமா.. நீ.. நீ.. எப்படி இருக்கே?"

    அதுவரை அடைபட்டுக் கிடந்த வெள்ளம் உடைய என் கண்களில் இருந்து நீர் வ்ழிய ஆரம்பித்தது.

    "ஹேமா.. ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர்செல்ஃப்"

    யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றுமுற்றும் கவனித்து விட்டு அறைக்குள் வந்து. கதவை சாத்தியபின் "ப்ளீஸ் அழாதே ஹேமா" என்றதும் நான் கட்டுப்படுத்த முடியாதவளாக சரிய ஓடிவந்து என்னைத் தாங்கிக் கொண்ட மகேஷின். அந்த வலுவான பிடிப்பு எனக்கு ஏதோ ஒரு பாதுகாப்பு உணர்வைத் தர நான் சட்டென்று மார்பில் சாய்ந்து விட்டேன். ஒரு கையால் என் தலையை கோதியபடி மெதுவாக் என்னை அழைத்துச் சென்று நாற்காலியில் அமரவைத்தபோது மெல்ல என்னை சுதாரித்துக் கொண்டேன்...

    "ஹேமா.. காம் டவுன்..ப்ளீஸ்"

    எனக்கு பேச்சு வரவில்லை. பிடித்துக் கொண்டிருந்த கைகளை எடுக்கவுமில்லை. மகேஷின் கை ஸ்பரிசம் பட்டு எத்தனை நாட்களாயிற்று ? கடைசியாக இருவரும் பிக்னிக் போயிருந்தபோது ஏற்பட்ட பிரச்சினைதானே இன்று என் சோகத்துக்ல்கு காரணம் ? கண்களைத் திறந்து மகேஷைப் பார்த்தேன். அந்தக் கண்கள் கனிவுடன் என்னையே பார்த்துக் கொண்டு இருந்ததைக் கண்டபோது சந்தோஷமும் துக்கமும் ஒன்றாக கலந்து வந்தது. எப்படிப்பட்ட முட்டாள் நான் ? கையில் கிடைத்த புதையலின் மதிப்பு தெரியாமல் எப்படி இவனைப் பிரிந்தேன் ?

    "என்ன கண்ணம்மா ? அப்படி பாக்குற ?"

    "ம்ம்.. மகேஷ்... மகேஷ்"

    "சொல்லும்மா"

    "வெறுமே சாரி அப்படின்னு சொல்லி என் தப்பை சரி செய்ய முடியாது. அதனா...."

    நீண்டு வந்த கைகளின் விரல்கள் சட்டென்று என் வாயைப் பொத்தின..

    "சினிமா டயலாக் எல்லாம் வேணாம். இது உண்மையான லைஃப். அதனாலே ப்ராக்டிகலா இருப்போம். இதெல்லாம் வந்துட்டு போவதுதான் யதார்த்தம். பிரிஞ்சி போறது எல்லாமே எங்கேயாச்சும் ஒண்ணா சேரும். அந்த நம்பிக்கையிலேதான் எல்லாருமே வாழ்ந்துகிட்டு இருக்கோம். ம்ம்.. நாம இவ்வளவு சீக்கிரமா ஒண்ணு சேர்ந்ததை நெனச்சா எனக்கு சந்தோஷமா இருக்கு"

    "ம்ம் .. எனக்கும்தான். அப்புறம்.. இன்னொரு விஷயம்"

    "என்னம்மா ?"

    "எந்த காரணத்துக்காக நான் உங்களிடம் இருந்து பிரிந்து வந்தேனோ.. எது இப்போதைக்கு கூடாது என்று நினைத்தேனோ.. அது.. அது..இப்போ கன்ஃபர்ம் ஆயிடிச்சு"

    மகேஷிவன் முகத்தில் திகைப்பு.

    "என்ன சொல்றே ஹேமா ? எனக்கு ஏன் தெரியப்படுத்தல ? இது உங்க அம்மா, அப்பாவுக்கெல்லாம் தெரியுமா ? அவங்க எப்படி சும்மா இருக்காங்க ? "

    நான் இல்லை என்பது போல தலையை இரண்டு பக்கமும் ஆட்டினேன்.

    "யாருக்கும் தெரியாது. ஆனால் இதை இனிமேலும் மறைக்கிறது கஷ்டம் என்று தெரியும். பாஸ்கரும் அவசரப்பட்டதாலே அப்பா அவசரமா கல்யாணத் தேதியையும் ஃபிக்ஸ் செஞ்சிட்டார். கல்யாண வேலையிலே எல்லாரும் மும்முரமா இருந்தாங்க. அதனாலே என்னை சரியா கவனிக்கல. நானும் குழப்பத்திலேயே இருந்ததால் எதுவும் பேசலை. இப்போ எழுபது நாள் ஆயிருச்சு." நான் முகத்தை பொத்திக் கொள்ள மகேஷ் ஒவ்வொரு விரலாக இழுத்துப் பிரித்தபோது நான் இன்னும் சிவந்தேன்.

    "இப்போ நானும் சினிமா ஹீரோ போல அடி கள்ளி அப்படின்னு சொல்லட்டுமா? அப்படின்னா பிக்னிக் அன்னைக்குத்தானா.. " என்றதும் நான்.மகேஷையே பார்க்க அப்படியே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி எத்தனை நேரம் இருந்திருப்போமோ ?

    கதவு தடதடவென்று தட்டப்படும் சத்தம் கேட்க இருவரும் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தோம். மகேஷ் சட்டென்று குளியலறைக்குள் போய் கதவை மூடிக்கொள்ள நான் "யாரது?" என்று அறைக் கதவருகில் சென்று கேட்டேன்.

    "அக்கா.. அக்கா " என்று சொல்லி வாசவி அழைப்பது கேட்டது. "ஹேமா .. ஹேமா.. உள்ளே இன்னும் என்ன பண்ணிகிட்டு இருக்கே ? கதவைத் திற" என்று அம்மாவின் குரல் கேட்டது.

    "அத்தே.. இப்போ ஹேமா தனியா இல்லையே... இன்னும் கொஞ்சம் நேரம் அவங்கள தொந்தரவு செய்யாம இருங்களேன்" என்று பாஸ்கர் சொல்வது கேட்டதும். என் உச்சந்தலையில் ரத்தம் பாய்ந்தது.

    நடுங்கும் விரல்களால் தாழ்ப்பாளைத் திறந்தேன். அப்பா, அம்மா, வாசவி, பாஸ்கர் இன்னும் மகேஷின் அம்மா, அப்பாவும் கூட இருந்தனர்.

    "என்ன ஹேமா ? நீ மட்டும் நிக்கிறே ? அவன் எங்கே மறைஞ்சு கிட்டு இருக்கான் ?" என்றபடி பாஸ்கர் அறைக்குள் நுழைந்தான். பாத்ரூம் கதவு சாத்தியிருப்பதைக் கண்டு அதில் ஓங்கி ஒரு தட்டு தட்டி "டேய்.. செய்யுறதை எல்லாம் செஞ்சிட்டு உள்ளே பதுங்கினா விட்டுடுவோமா ? வாடா வெளியே ?" என்றான்.

    கதவு திறந்து மகேஷ் மெதுவாக வெளியே வர பாஸ்கர் பாய்ந்து சென்று அவனைக் இறுக்கமாக கட்டிப் பிடித்துக் கொண்டான்.

    "டேய்.. ராஸ்கல்.. எனனடா வெட்கம் ? இப்போ எல்லாம் சரியாயிடுச்சா ? பாஸ்... இன்னைக்கு நீ உங்க அப்பா அம்மா எல்லாரும் மண்டபத்துக்கு வந்திருந்தபோதும் ஹேமா உங்களை எல்லாம் தவிர்த்து விட்டு ஒளிஞ்சு கிட்டே இருந்ததா வாசவி சொன்னா. அவளுக்குள்ளே ஒரு பெரிய போராட்டம் நடந்துகிட்டு இருந்தது எனக்குப் புரிஞ்சது. அவ இங்கே தனியா குளிக்க வந்ததைப் பார்த்தபோதுதான் . ஒரு வேளை நீங்க ரெண்டு பேரும் தனியா சந்திச்சு பேசினா எல்லாமே சரியாயிடும் என்று என் மனசுல ஒரு ஐடியா தோணிச்சு. இப்படி எல்லாம் நடக்கணும்... ஊஹூம்.. நடக்கும்னு நெனச்சுதான் உன்னை என் ரூமுக்கு வரச் சொல்லி சேதி அனுப்பினேன். ஆனா கடைசி ரூமுன்னு உன் கிட்டே சொல்லச் சொன்னேன். எப்படியோ எல்லாம் நல்லபடியா நடந்திடுச்சு. ஆனா நீதான் ரூமுக்கு உள்ளே வந்து ரொம்ப நேரம் ஆக்கி எங்களை காபரா படுத்திட்டே"

    நான் பாஸ்கரை நன்றியுடன் பார்த்தபடி மகேஷின் அம்மாவின் காலில் விழுவதற்காக குனிய அவர் என்னை அப்படியே பிடித்துக் கொண்டு தோளில் கையை வைத்தபடி பார்த்தார்.

    "என்னம்மா ? குளிச்சு எவ்வளவு நாள் ஆச்சு?"

    பெண்களின் கண்களில் எக்ஸ்ரே உண்டா என்ன ?

    "அவ இன்னும் குளிக்கப் போகவே இல்லை" என்று மகேஷ் சொல்ல பாஸ்கர் அவன் முதுகில் ஓங்கி அடித்தான். "அட லூசுப் பயலே.. அவங்க அதைக் கேட்கல"

    என் அம்மாவும் வாசவியும் என்னருகே ஓடி வந்தனர்.

    "என்னடி இது ? எனக்கு எப்படி தெரியாம போச்சு ? என் கிட்டே ஏண்டி சொல்லலை ? "அம்மாவின் முகத்தில் பரபரப்பு.

    "எழுபது நாளாச்சு அத்தை"

    அம்மா வாயெல்லாம் பல்லாக பூரிக்க வாசவி என்னைக் கட்டிக் கொண்டாள். பாஸ்கர் மகேஷைக் கட்டிக் கொண்டு "டேய்.. இன்னைக்கு நம்ம வீட்டுல டபுள் விசேஷம்" என்றான்.

    பின்னே இருக்காதா ! உடனே குழந்தை வேண்டும் என்ற என் கணவர் மகேஷுக்கும் இப்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன் என்ற எனக்கும் உண்டான மனஸ்தாபத்தின் காரணமாக இரண்டு மாதங்களாக பிறந்த வீட்டிலேயே இருக்கும் நான் கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாற என் வயிற்றில் வளர்ந்து கொண்டு இருக்கும் எங்கள் வாரிசும் ஒரு காரணம் ஆச்சே !.

    என் கணவர் மகேஷின் நெருங்கிய நண்பனான பாஸ்கருக்கும் என் தங்கை வாசவிக்கும் நாளை நடக்கப் போகும் திருமண விசேஷத்துடன் சேர்த்தால் இது இரட்டை விசேஷம்தானே !

    ( முற்றியது )

    பின் குறிப்பு :

    என்னத்துக்கு அடல்ட்ஸ் ஒன்லின்னு போட்டிருக்குனு கேட்கறீங்களா ? அப்போதானே சந்தேகத்தோட கடைசி வரி வரைக்கும் படிச்சுட்டு கேள்வி கேப்பாங்க.. ஹி ஹி

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Location
    Advertising world
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •