-
25th September 2016, 05:36 PM
#11
Junior Member
Devoted Hubber
செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 145 – சுதாங்கன்.
சந்தேகத்தைப் போக்க என்ன செய்தார் ஏவி.எம். செட்டியார்?
`உயர்ந்த மனிதன்’ படத்திற்கு சிவாஜியின் சம்பளமாக அவருடைய தம்பி சண்முகம் அட்வான்ஸ் வாங்கவில்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இப்போது செட்டியார், தன் மகன் சரவணன் மூலமாக ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை சிவாஜி பிலிம்ஸூக்கு அனுப்பி வைத்தார்.
இதை சண்முகம் எதிர்பார்க்கவில்லை!
` ஏன் வாங்கினாய் என்று அண்ணன் என்னை கோபித்துக்கொள்வார்’ என்று கூறி அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டார்.
கொடுக்காமல் வந்தால் `அப்பச்சி’ கோபித்துக்கொள்வார் என்று கூறி கட்டாயப்படுத்தி சரவணன், சண்முகத்திடம் பணத்தை கொடுத்துவிட்டு வந்துவிட்டார்.
செட்டியார் திட்டப்படி ` குழந்தையும் தெய்வமும்’ இந்தியில் முன்னதாக ரிலீஸாகி பெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு `உயர்ந்த மனிதன்’ படப்பிடிப்பு ஆரம்பமாகி முடிந்து வெளிவந்து வெற்றி பெற்றது.
இந்த தகவல்களையெல்லாம் தன் புத்தகத்தில் பதிவு செய்திருக்கும் ஆரூர்தாஸுக்கு அடுத்து ஒரு சோதனை வந்தது.
அது என்ன?
அப்போது ஏவி.எம்.மின் `காக்கும் கரங்கள்,’ பிரசாத் புரொடக்*ஷன்ஸ் `இதய கமலம்,’ வாகிணி ஸ்டூடியோவின் `ஜகதலப்பிரதாபன்,’ எம்.ஜி.ஆர். நடித்த ` தாலி பாக்கியம்,’ `தாழம்பூ,’ ` ஆசைமுகம்’ ஆகிய படங்கள் ஆரூர்தாஸின் கைவசம் இருந்தன.
தேவர் மிக வேகமாகத் தயாரித்துக் கொண்டிருந்த ` வேட்டைக்காரன்’ படத்துக்கும் இரவு பகலாக எழுதி கொண்டிருந்தார்.
அப்போதுதான் சிவாஜி பிலிம்ஸின் ` புதிய பறவை’ பறந்து வந்து அவர் தலையில் அமர்ந்து கொத்தியது.
`புதிய பறவை’க்கு எழுத முடியாது என்று ஆரூர்தாஸ் சொன்ன தகவல் சிவாஜியின் காதுகளுக்கு எட்டியது.
உடனே சிவாஜி, படத்தயாரிப்பு நிர்வாகி துரையிடம், ‘ஆரூர்தாஸ் சாரை நான் உடனே பாக்கணும். சார் என்கிட்ட வர்றாரா அல்லது நான் சார் கிட்ட வரட்டுமா? இப்ப நான் சொன்ன இதே வார்த்தையை அப்படியே ஆரூரான் கிட்ட போய் சொல்லு’ என்றார்.
துரை அதை அப்படியே போய் ஆரூர்தாஸிடம் சொன்னார்.
உடனே அவர் வந்த காரிலேயே ஏறி அவரை சந்திக்க சிவாஜி வீட்டுக்கே சென்றார்.
மாடிக்கூடத்தில் சிவாஜி, கமலா அம்மாள் இருவரும் இருந்தனர். ஆரூர்தாஸை பார்த்ததும் சிவாஜி ஒரு ஆசிரியரைக் கண்ட பள்ளி மாணவர் போல எழுந்து நின்று கைகுவித்து வணங்கியவாறு ( இதெல்லாம் பழைய நாடக நடிகர்களுக்கே உரித்தான குசும்பு) `வாங்க சார்! வணக்கம், ஒக்காருங்க… கமலா! சாருக்கு வணக்கம் சொல்லிக்க.’
சிவாஜி : ` புதிய பறவை’ க்கு எழுத முடியாதுன்னு சொல்லிட்டீங்களாமே?
ஆரூர்தாஸ்: முடியாதுன்னு சொல்லலே. நேரமில்லேன்னுதான் சொன்னேன்.’
சிவாஜி: மத்த படங்களுக்கு எப்படி எழுதுறீங்க?’
ஆரூர்தாஸ்: கஷ்டமாகத்தான் இருக்கு.
சிவாஜி: அந்த கஷ்டத்தோடு இதையும் சேத்துக்க வேண்டியதுதானே?’
ஆரூர்தாஸ்: ( மவுனம்)
இப்போது சிவாஜியின் பேச்சின் தொனி மாறியது.
சிவாஜி : ஏண்டா? ஒனக்கு என்ன தைரியம் இருந்தா என் படத்துக்கு எழுதமாட்டேன்னு சொல்லுவே? டேய், இது சிவாஜி பிலிம்ஸோட `பிரஸ்டீஜ்’ படம்பா. FIRST COLOUR FILM. நீ ரொம்ப பிஸியா இருக்கேன்னு உன்னை இத்தனை நாளா விட்டுவெச்சான் சண்முகம். இல்லேன்னா முதல்லயே உனக்கு அட்வான்ஸ் கொடுத்து கமிட் பண்ணியிருப்பான்.
ஏவி.எம்.முக்கு எழுத நேரம் இருக்கு. தேவருக்கு எழுத நேரம் இருக்கு. எம்.ஜி.ஆருக்கு எழுத நேரம் இருக்கு. எனக்கு எழுத மட்டும் உனக்கு நேரம் இல்லையா? முடியாதுன்னு சொன்னியாமே?’
ஆரூர்தாஸ்: மன்னிக்கணும், வார்த்தை மாறுது. முடியாதுன்னு நான் சொல்லலே. முடியலேன்னுதான் சொன்னேன். முடியாதுன்னு சொல்றதுக்கும் முடியலேன்னு சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கு.
சிவாஜி: (சற்று கோபத்துடன்) என்கிட்டயே டயலாக் பேசி காட்டுறியா நீ?’
ஆரூர்தாஸ்: (நிதானமாக) `நான் டயலாக் பேசிக் காட்டுறதுக்கு ஒங்களை விட்டா எனக்கு வேறு யார் இருக்காங்க?’
இப்படி ஆரூர்தாஸ் சொன்னதும் ஒரு சிறு ஊமைப்புன்னகை சிவாஜியின் உதடுகளின் நடுவில் நெளிந்து ஒளிந்தது. ஒப்பனை இட்டுக் கொண்டு படப்பிடிப்புத்தளத்தில் நடிக்கும் போதும் நடிக்காத மற்ற நேரங்களிலும் அவருடைய முகபாவங்கள் அனைத்தும் ஆரூர்தாஸிற்கு அத்துப்படி.
அடித்த வேகத்தில் உயரே எழும்பிய அந்தப் பந்து, சற்றைக்கெல்லாம் கீழே விழுந்து அடங்கிவிட்டதை ஆரூர்தாஸ் புரிந்து கொண்டார்.
அவருக்கு சிரிப்பு வந்தது – சிரித்தார்.
சிவாஜி: என்ன சிரிக்கிறே?’
ஆரூர்தாஸ்: ஒண்ணும் இல்லே. இதே சிவாஜி அண்ணனை அஞ்சாறு வருஷங்களுக்கு முந்தி நண்பர் ஜெமினி கணேசன் முதன் முதல்ல எனக்கு அறிமுகப்படுத்தி ` பாசமலர்’ படத்துக்கு என்னை வசனம் எழுத வச்சு, அந்த பழைய காட்சி ஞாபகத்துக்கு வந்தது. அதோடு சேர்ந்து சிரிப்பும் வந்தது.
சிவாஜி : என்ன கிண்டல் பண்றியா? நீ ரொம்ப `பிஸி’யா இருக்கேன்னு எனக்குத் தெரியும். அதுக்குத் தகுந்தபடி காசை வாங்கிக்கிட்டுப்போ. நீ ஒண்ணும் சலுகை காட்ட வேண்டாம்.
இதோ பார். இந்தப் படத்தை பொறுத்தவரையில் சிவாஜி பிலிம்ஸூக்கும் உனக்கும் சம்பந்தம் இல்லே. எனக்கும் உனக்கும்தான் பேச்சு (பக்கத்தில் இருந்த கமலாம்மாளிடம்) கமலா ! ஐயாயிரம் ரூபா பணம் கொண்டா ( அவர் உள்ளே போனார்).’
ஆரூர்தாஸ்: அண்ணே ! காசை எதிர்பார்த்து நான் இங்கே வரலே !
சிவாஜி : என் படத்துக்கு எழுத மறுப்பேன்னு நானும் எதிர்பார்க்கலே !
(இதற்குள் கமலாம்மாள் கையில் கரன்ஸி நோட்டுகளுடன் வந்தார்)
சிவாஜி : இத ஒங்கையால அதை அவன்கிட்ட கொடு.’
கமலா அம்மாள் என்ற `பாக்கியலட்சுமி’ யின் கரத்திலிருந்து பணம் என்கிற ` தனலட்சுமி’ தானாக வந்தாள். தட்டாமல் வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டார் ஆரூர்தாஸ்.
அந்த நாட்களில் முன்னணிக் கதை– வசனகர்த்தாக்களுக்கு முன் பணமாக ஆயிரத்து ஒன்றுதான் கொடுப்பார்கள். இயக்குநர்களுக்குத்தான் ஐந்தாயிரம் தருவார்கள். ஆரூர்தாஸுக்கு சிவாஜி கொடுத்த அந்த ஐந்தாயிரம் மிகவும் அதிகம். அது கணக்குப் பிரகாரம் கொடுத்தது அல்ல. ஆரூர்தாஸின் எழுத்துக்கள் மீது சிவாஜி கொண்டிருந்த காதலுக்காகக் கொடுத்தது என்பதை அறிவேன்.
சிவாஜி “இதோ பார். இது அட்வான்ஸூதான். ஒனக்கு எவ்வளவு பணம் வேணுமோ வாங்கிக்க. என்கிட்டே கேக்க வேண்டாம். ஒனக்கு எப்போ எவ்வளவு தேவைப்படுதோ அம்மாகிட்ட கேளு.
பிறகு............
(தொடரும்)
-
25th September 2016 05:36 PM
# ADS
Circuit advertisement
Bookmarks