கடற்கரையில் உருவான காவியம்
பாசமலருக்கு வசனம் எழுதும் என் பணி ஆரம்பமாகியது.
‘எங்கே வைத்து எழுதுகிறீர்கள்?, எந்த ஓட்டலில் ரூம் போடவேண்டும்’ என்று
என்னை ‘ராஜாமணி பிக்சர்ஸ்’ தயாரிப்பாளர்களான அண்ணன்
எம்.ஆர்.சந்தானமும், ‘மோகன் ஆர்ட்ஸ்’ மோகனும் கேட்டார்கள்.
சற்று நேரம் யோசித்தேன்.
அந்த நாட்களில் 1960–ல் இன்றைய அடையாறு ‘பெசன்ட்நகர்’ ‘அஷ்டலட்சுமி
ஆலயம்’, ‘புனித ஆரோக்கிய மாதா ஆலயம்’ அமைந்துள்ள அந்தப் பகுதி
முழுவதுமே கண்களுக்கு எட்டிய தூரம் வரை வெறும் கடற்கரை மணலாகவே
இருந்தது. அடையாறில் வசிப்பவர்கள் கோடை காலத்தில் காற்று
வாங்குவதற்கு அங்கு வருவதுண்டு. அது தவிர ஆங்காங்கே மீனவர்களின்
குடிசைகள் இருந்தன.
அக்காலத்தில் அந்த இடத்திற்கு ‘எலியட்ஸ் பீச்’ என்று பெயர். அங்கு கடலில்
குளிக்க வந்து நீந்தி, அலைகளால் உள்ளே இழுத்துச் செல்லப்பட்டு உயிர்
துறந்த ஒரு ஆங்கிலேய அதிகாரியின் நினைவாக, வளைவு ஒன்று
கட்டப்பட்டிருந்தது.
அத்துடன் கூட, அன்றைய சென்னை வாழ் பிரமுகர்களும்,
பெருந்தனக்காரர்களும், தொழிலதிபர்களும் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை
நாட்களில் அங்கு வந்து தங்கி, கடற்காற்று வாங்கி உல்லாசமாகப் பொழுது
போக்கும் பொருட்டு, கரையோரமாக வரிசையாகச் சிறுசிறு கட்டிடங்களையும்
ஓலைக் குடிசைகளையும் கட்டி, அவற்றைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை
மீனவர்களிடம் ஒப்படைத்திருந்தனர்.
அந்தப் பகுதியில் அவ்வப்போது சினிமா படப்பிடிப்பு நடை பெறுவதும் உண்டு.
கடற்கரைக் காதல் காட்சிகள், ஹீரோ – ஹீரோயின் டூயட் பாடல் காட்சிகள்
போன்றவற்றை பல டைரக்டர்கள் அங்கு படமாக்குவார்கள்.
ஒரு நாள் புகழ் பெற்ற அடையாறு ஆலமரத்தைப் பார்க்கச்சென்ற நான்
அதைப்பார்த்துவிட்டு அப்படியே எலியட்ஸ் பீச்சுக்கும் சென்றேன். அழகும்
அமைதியுமான அந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த சிறு சிறு குடில்களும்
அவற்றின் எதிரே அலைவீசிக் கொண்டிருந்த வங்கக் கடலும் என் கண்களைக்
கவர்ந்தன!
என் இளமைக் காலத்தில் கிராமியச் சூழ்நிலையில் நான் வளர்ந்து
வாழ்ந்தவனாதலால், இயற்கையை நேசிப்பதிலும், அதன் எழிலை ரசிப்பதிலும்
அதிக ஆர்வம் கொண்டிருந்தேன்.
ஆகவே, அந்தக் கடற்கரைக் குடிசையொன்றில் அமர்ந்து ஒரு படத்திற்குக் கதை
வசனம் எழுதவேண்டும் என்று ஆசைப்பட்டேன். நீண்ட நாளைய அந்த ஆசை
நிறைவேறும் தருணம் இப்போது வந்தது.
அந்தக் குடிசைகளைக் குறிப்பிட்டு அதில் ஒன்றில் உட்கார்ந்து எழுத ஏற்பாடு
செய்ய முடியுமா? என்று கேட்டேன்.
தயாரிப்பாளர்கள் சிரித்தார்கள்.
‘‘ஏன் சிரிக்கிறீங்க?’’
‘‘இல்லே. ஒவ்வொருத்தர் ஊட்டி, கொடைக்கானலுக்குப் போயி எழுதிக்கிட்டு
வரலாம். இல்லேன்னா கன்னிமாரா ஓட்டல்லே ஏ.சி. ரூம் போடுங்கன்னு
கேப்பாங்க. நீங்க என்னடான்னா கடற்கரைக் குடிசை கேக்குறீங்களே?
ஆச்சரியமா இருக்கு. சரி. ஒங்க விருப்பப்படியே ஏற்பாடு பண்றோம்’’ என்றவர்,
‘முகிலன்’ என்று பெயர் கொண்ட ஓர் இளம் தயாரிப்பு நிர்வாகியிடம் இது பற்றி
கூற, அவர் உடனே அங்கு சென்று ஒரு மீனவரிடம் பேசி முடித்து, அவருடைய
கண்காணிப்பில் இருந்த ஒரு ஓலைக் குடிசையை ஏற்பாடு செய்துவிட்டு
என்னை கம்பெனி காரில் அழைத்துக் கொண்டு போய் ‘‘இந்தக் குடிசை தான்’’
என்று காட்டினார்.
அதன் உள்ளே நுழைந்தேன். நான்கைந்து பேர் உட்காரக் கூடிய அளவிற்கு இடம்
இருந்தது. கீழே, தரையில் கடற்கரை மணற்குவியல்! அதைத் தவிர மேஜை
நாற்காலிகள் எதுவும் இல்லை.
‘‘இங்கே ஒங்களுக்கு வேற என்ன வசதிங்க வேணும்?’’ என்று முகிலன்
கேட்டார். அவர் திருவாரூரை அடுத்த மாயவரத்தைச் (இன்றைய
மயிலாடுதுறை) சேர்ந்தவர். ஆகவே அந்த மண் பாசம் என் மீது அவருக்கு
இருந்தது.
நான் கேட்டேன்:–
‘‘முகிலன்! கீழே தரையிலே ஒக்காந்து எழுதுறதுக்கு வசதியா, நம்ம ஊர்ல
கணக்கப்பிள்ளைங்க வச்சிருப்பாங்களே, அந்த மாதிரி ஒரு சின்ன மேஜை! ஒரு
கோரைப்பாய், ரெண்டு தலையணைங்க வேணும்.
‘‘அவ்வளவுதானா? வேற ஒண்ணும் வேண்டாமா?’’
‘‘வேற ஒண்ணுமில்லை – ‘ஒண்ணுமே வேண்டாம்.’ இந்த ‘ஒண்ணுமே’ என்ற
வார்த்தையைச் சற்று அழுத்தமாக உச்சரித்தேன்.
அவர் சிரித்தார். சினிமா கம்பெனியில் இருப்பவர் அல்லவா? உடனே அந்த
வார்த்தையின் பொருளைப் புரிந்து கொண்டார். (அதாவது ‘‘ஒண்ணுமே
வேண்டாம்’’ என்று நான் சொன்னதன் பொருள் ‘சிகரெட், சீசாக்கள்’ முதலியன).
தயாரிப்பு நிர்வாகி முகிலன் அடையாறில் எங்கெங்கேயோ அலைந்து திரிந்து
நான் கேட்ட கணக்குப் பிள்ளை மேஜை, பாய் தலையணைகள் மற்றும்
நொறுக்குத் தீனி தின்பண்டங்கள் வாங்கி வந்து கொடுத்தார். அத்துடன்
மத்தியானத்திற்கு மட்டன் கறிக்குழம்பு, வறுவலுடன் சாப்பாட்டிற்கு ஏற்பாடு
பண்ணியிருப்பதாகவும் தெரிவித்தார்.
மணல் தரையில் பாயை விரித்தேன். அதன் மீது அந்தக் குட்டி மேஜையை
வைத்தேன். பின்னால் சாய்ந்து கொள்வதற்கு ஒரு தலையணை! பக்கத்தில்
ஆதரவாக ஒரு தலையணை! வரும் பொழுதே வாங்கிக்கொண்டு வந்த ‘புல்
ஸ்கேப்’ வெள்ளை பேப்பரை இரண்டு இரண்டாகக் கிழித்து ரைட்டிங் பேடின்
கிளிப்பில் பொருத்திக்கொண்டேன்.
மேஜைக்கு அடியில் இரண்டு கால்களையும் வாட்டமாக நீட்டிக்கொண்டு, கிழக்கு
முகமாக அமர்ந்தேன். ஏறிட்டுப் பார்த்தேன். எதிரே நீலக்கடல்! அதன் மீது
கவிந்திருந்த நீல
வானம்! அலுப்பில்லாமல் அடிக்கடி எழுந்து எழுந்து புரண்டுப் புரண்டு
நுரையுடன் வந்து கரையை முத்தமிட்டு முத்தமிட்டுப் பின்வாங்கிச் செல்லும்
பேரலைகள்! அவற்றின் தாளகதியும் சுதியும் கூடிய இரைச்சல் ஒலி! கடற்
குருவிகளின் காதுக்கினிய இசை! ஈரமணல் படிந்த கரையோரம் ஆங்காங்கே
சிறு சிறு குழிக்குள் இருந்து வெளிவரும் நண்டுகளின் நர்த்தனம்! விழிகளுக்கு
ரம்மியமோ ரம்மியம்!
ஐந்து நட்சத்திர ஓட்டல் அறையில், இந்த அற்புத இயற்கை எழிற்காட்சிகளைக்
காண இயலுமா? – ஆயிரம் ஆயிரமாகப் பணம் கொடுத்தாலும்!
வழக்கம்போல காகிதத்தின் உச்சியில் சிலுவையை வரைந்து, அதன் கீழே
‘மாதா துணை’ என்று எழுதினேன்.
ஒருகணம் கண்களை மூடி அவற்றின் உட்திரையில் தோன்றிய என் அன்னை –
ஆண்டவரின் திருஉருவங்களைக் கண்டு கரங்கூப்பியபடி எனக்கு நானே
கூறிக்கேட்டுக் கொண்டேன்:–
‘‘எனக்கு முன்னிருந்து வழிகாட்டிய அன்னையே! பின்னிருந்து ஒளிகாட்டி
என்னை அழைத்து வந்த ஆண்டவரே! நீங்கள் எனக்கு வழங்கிய இந்த அரிய
பெரிய வாய்ப்பினை நான் நன்கு பயன்படுத்திக் கொண்டு, என் கடமையைச்
சரியாகச் செய்து, அதனால் பெயரும், புகழும் பெற்று மகிழ எனக்கு
உறுதுணையாக இருந்து உதவி புரியுமாறு உளமார உங்களை வேண்டிக்
கொள்கிறேன்.’’
அவ்வளவுதான்!
‘பாசமலர்’ படத்திற்கான வசனங்கள் எழுத்து வடிவங்கொள்ளத்
தொடங்கிவிட்டன!
காட்சி–1:– வெளிப்புறச்சாலை.
நேரம்: பகல்.
சுமார் பத்து வயதுடைய ஒரு சிறுவன் தன் கையில் மருந்து சீசாவுடன்
வேகமாக ஓடி வருகிறான்.
காட்சி 1–ஏ:– ஒரு குடிசையின் உட்பகுதி.
உள்ளே வந்த அந்தச் சிறுவன் தன் நோயாளித் தாய் இறந்து கிடப்பதைப்
பார்த்து அதிர்ச்சி அடைகிறான். அவன் கையிலிருந்த மருந்து சீசா நழுவிக் கீழே
விழுந்து உடைகிறது. தாயின் அருகில் தன் இரண்டு வயதுத் தங்கை அழுது
கொண்டிருக்கிறது. அவன் அந்தக் குழந்தையைத் தூக்கி அன்புடன் அணைத்துக்
கொள்கிறான். படத்திற்கான பெயர் வரிசை (டைட்டில்) ஆரம்பமாகிறது.
‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் அளிக்கும் ‘ராஜாமணி பிக்சர்ஸ்’ ‘‘பாசமலர்.’’
டைட்டில் முடிகிறது. ‘டயம் லேப்ஸ்.’
காட்சி–2:– ராஜு வீடு (உள்ளே – பகல்)
தங்கை ராதா (சாவித்திரி அறிமுகம்)
டிபன் பாக்சில் இட்லி வைத்துக்கொண்டிருக்கிறாள். ஆலையின் சங்கு ஒலிக்கும்
ஓசையைக் கேட்டபடி அண்ணன் ராஜு (சிவாஜி கணேசன்) அறிமுகமாகி
தங்கையிடம் வந்து ‘‘அம்மாடி! சங்கு ஊதிட்டான். சீக்கிரம் சீக்கிரம்.’’
ராதா:– ‘‘அண்ணே! இன்னிக்கு ஒங்களுக்குப் பிரியமான தக்காளி குருமா
வச்சிருக்கேன்.’’
ராஜு:– ‘‘இப்படி வாய்க்கு ருசியா கொடுத்தின்னா அப்புறம் டிபன் மட்டுமில்லே,
பாக்சும் திரும்பி வராது.’’ (என்று வாங்கிக்கொண்டு ஓடுகிறான்)
இதில் தொடங்கி இரண்டு வாரங்கள் தொடர்ந்து 249 காட்சிகளுக்கான
வசனங்களையும், அவை சம்பந்தப்பட்ட மற்ற விவரங் களையும் எழுதி
முடித்தேன்.
இறுதியாக அண்ணனும், தங்கையும் சேர்ந்தாற்போல் இறந்து போகும் அந்த
உச்சகட்டக் காட்சிக்கு வந்தேன். எழுதத் தொடங்குவதற்கு முன்பு சிறிது நேரம்
சிந்தித்தேன்.
இத்துடன் பாசமலர் படம் முடிகிறது. இந்த இறுதிக்காட்சியைக் கண்டு அழாத
கண்களும் அழவேண்டும். ஒரு துக்க வீட்டிற்குச் சென்று திரும்புவதைப்
போன்ற கனமான சோக உணர்வுடன் மக்கள் தியேட்டரை விட்டு வெளியே
வரவேண்டும். அவரவர் தங்கள் வீட்டில் நடந்ததுபோல எண்ணி அந்தக்
காட்சியோடு – சினிமாப்படம் என்பதையும் மறந்து ஐக்கியமாகி தங்களையும்
மீறி அந்தச் சோகத்தை சுமந்து செல்ல வேண்டும். அப்பொழுதுதான் இந்தப்படம்
மகத்தான வெற்றி பெற்று எக்காலத்திலும் மறக்க இயலாத ஒரு
‘சிரஞ்சீவித்துவம்’ கொண்ட சிறந்த படமாக அமையும்’ என்று முடிவு செய்து
கொண்டேன்.
இதுவரையில் நான் வசனம் எழுதிக்கொண்டு வந்த எந்த ஒரு காட்சியைப்
பற்றியும் இவ்வளவு நேரம் சிந்தித்ததில்லை. எல்லோரையும் அழவைக்க
வேண்டும். எப்படி? சிந்தித்தேன் – சிந்தித்தேன். அப்படிச் சிந்தித்தேன்.
‘வசனம் எழுதிக்கொண்டு வரும்பொழுதே முதலில் என் கண்கள் கலங்கி
அவற்றில் நீர் நிரம்ப வேண்டும். அப்போதுதான் படம் பார்க்கும் மக்களையும்
கண்ணீர்விட வைக்க முடியும்.
இந்தப் படத்திற்கு நான் எழுதியிருக்கும் மொத்த வசனங் களுக்கும் இந்த சோக
ரசக் காட்சிக்கான வசனம் ஒரு சிகரமாக அமையவேண்டும்.’
‘‘உங்க திறமை பூராவையும் இந்த ஒரே படத்தில் காட்டி சிவாஜியைப்
பிடிச்சிடணும்’’ என்று நான் அட்வான்ஸ் பணம் வாங்கிய அன்றைக்கு அண்ணி
சாவித்திரி சொன்னாரே – அது இப்பொழுது என் நினைவிற்கு வந்தது.
நான் சிவாஜியைப் பிடிப்பது பிறகு இருக்கட்டும். முதலில் ரசிகப்பெருமக்களைப்
பிடிக்க வேண்டும்!
எண்ண மேகங்கள் சூழ்ந்திருந்த மனதில், என் இளமைக்கால நிகழ்ச்சியொன்று
மின்னலாகத் தோன்றி மறைந்தது.
என் தாயார் நான்கு ஆண் குழந்தைகள், மூன்று பெண் குழந்தைகளை
ஈன்றெடுத்தவர்! நான் தலைப்பிள்ளை. பழைய கதைகள், தாலாட்டுப்
பாடல்களை என் தாயார் நன்கு அறிந்தவர். அதைக்கூறி, பாடி குழந்தைகளைத்
தூங்க வைப்பார். நான் மூத்த பிள்ளையாதலால் அவர் பாடும் தாலாட்டுப்
பாடல்களைக் கேட்டு அவற்றை மனப்பாடம் செய்து வைத்திருந்தேன்.
‘‘சாஞ்சாடும்மா, சாஞ்சாடு
அன்னக்கிளியே சாஞ்சாடு
அழகு மயிலே சாஞ்சாடு.’’
‘‘கைவீசம்மா கை வீசு
கடைக்குப் போகலாம் கைவீசு.
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய் திங்கலாம் கைவீசு!’’
இவை போன்ற இன்னும் பல பாடல்களை அம்மா பாடுவார். அதைக்கேட்டு என்
தம்பிகள், தங்கைகள் உறங்கி விடுவார்கள்.
நாங்கள் ஏழு பேர்களில் என் கடைக்குட்டித் தங்கையின் பெயர் வாசமேரி!. அது
ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபொழுது எப்பொழுதும் அழுதுகொண்டே
இருக்கும். அதனால் அதைத் தூக்கிக்கொண்டு போய் பாட்டுப்பாடி அழுகையை
நிறுத்தும்படி அம்மா என்னிடம் சொல்வார். அதன்படி நான் அம்மாவின்
பாட்டைப்பாடி என் தங்கையின் அழுகையை நிறுத்துவேன்.
இந்த ‘‘கைவீசம்மா கைவீசு’’ பாட்டு இப்பொழுது என் நினைவுக்கு வந்தது.
இதைக் கடைசியாக வைத்துக்கொண்டு, இதற்கு இணைப்பாக முன்னாலிருந்து
வசனங்களை எழுதிக்கொண்டு வந்தேன்.
கண் பார்வை இழந்த அண்ணன் சிவாஜி, தன் அருகிலிருக்கும் அருமைத்தங்கை
சாவித்திரியிடம் சொல்வார்:–
‘‘அம்மா! ஒன்னைவிட்டு இந்த உலகத்துல நான் எங்கே போனாலும்,
என்னைச்சுத்தி நீ போட்டிருக்குற அந்த அன்பு வட்டத்துக்குள்ளேதாம்மா
சுத்திக்கிட்டிருக்கேன். அதை விட்டு என்னால வெளியே வரமுடியலேம்மா.
அம்மா! நாம எப்பவுமே சின்னக் குழந்தைகளாகவே இருந்திருக்கக்கூடாதா?
அப்போவெல்லாம் நீ அழுதுக்கிட்டிருப்பே. ஒன்னை என் கையிலே தூக்கி
வச்சிக்கிட்டு, நான் பாடுவேன்:–
கைவீசம்மா கைவீசு, கடைக்குப் போகலாம் கைவீசு, மிட்டாய் வாங்கலாம்
கைவீசு’’
இதற்கு மேல் பாட முடியாமல் அந்த அன்பு அண்ணன் அழுது குமுறுகிறான்.
இதைக்கேட்டுத் தாங்க முடியாத தங்கை துக்கம் பீறிட்டு தன் அருமை
அண்ணனுடன் சேர்ந்து கதறி அழுது கண்ணீர் வடிக்கிறாள்.
இந்த வசனத்தையும், அதன் விவரத்தையும் நான் எழுதிய அந்த ஆண்டு 1960.
இன்றைக்கு 53 ஆண்டுகளுக்குப் பிறகுங்கூட இதை அப்படியே நினைவு
வைத்திருந்து இப்பொழுது நான் எழுதும் போதுகூட, என் இரு விழிகளையும்
நீர்த்திரை மறைத்து மேற்கொண்டு எழுத முடியாமல் நிறுத்திவிட்டு எழுந்து
சென்று என் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வந்தமர்ந்து சில நிமிட நேரம்
அமைதியாக இருந்து அதன் பிறகு மீண்டும் தொடர்கிறேன்.
இந்த உச்சக்கட்டக் காட்சிக்கான வசனங்களை அன்றைக்கு எழுதியபோது கூட,
எனக்கு இந்த மனோ நிலை ஏற்பட்டது.
படைப்பாளியான எனக்கே இந்த நிலை என்றால், படத்தைப் பார்ப்பவர்கள்
உள்ளம் உருகி அழமாட்டார்களா என்ன?
எழுதியபோதே, இந்த உச்சக்கட்டக் காட்சியில் அமைந்த உணர்ச்சி மிக்க
வசனங்களை வைத்து இதன் வெற்றியை நான் உறுதிப்படுத்திக் கொண்டேன்.
‘பாசமலர்’ படத்திற்கான மொத்த வசனங்களையும் ஒரே மூச்சில் எழுதி
நிறைவு செய்து கொண்டு, என் இதயங்கவர்ந்த ‘எலியட்ஸ்’ கடற்கரையின்
எளிய குடிசையிலிருந்து பிரிய விருப்பம் இல்லாமல் பிரிந்து விடைபெற்றேன்.
முழுவதும் எழுதி முடித்துவிட்டேன். அதுவும் இரண்டே இரண்டு
வாரங்களுக்குள் என்று தெரிந்தும் சிவாஜியோ அல்லது இயக்குனர் பீம்சிங்கோ
அதைப் படித்துக்காட்டும்படி என்னிடம் கேட்கவே இல்லை.
‘விரலால் தட்டிப்பார்க்கவோ, காதருகில் வைத்து உள்ளே நீர் இருந்து
ஆடுகிறதா என்று அசைத்துப் பார்க்கவோ அவசியம் இல்லாத நன்கு முற்றிய
நெற்றுத்தேங்காய் நான்’ என்று அவர்கள் இருவருமே முடிவு செய்துவிட்டார்கள்
போலும்!
நம்பிக்கை பிறந்து விட்டால், சோதித்துப் பார்க்கவேண்டிய அவசியம் வராது
அல்லவா!
சீசாக்கள்... சிங்காரிகள்...
எனது அருமையான அறுவடைக் காலத்தில், ஜெமினி ஸ்டூடியோ படங்களைத்
தவிர, மற்றபடி அனேகமாக அதிக கம்பெனிகளின் படங்களுக்கு வசனங்கள்
எழுதியிருக்கிறேன். எந்த ஒரு கம்பெனியிலும், எந்தச் சந்தர்ப்பச்
சூழ்நிலையிலும் – பணந்தான் வாங்கியிருக்கிறேனே தவிர, ‘பாட்டில்கள்’
கேட்டதே கிடையாது. இது சத்தியம்! இந்த எனது சத்தியத்திற்கு இன்றைய
நேர்முகச் சாட்சிகள் ஏவி.எம்.சரவணன், ஏ.சி.திருலோகசந்தர் ஆகிய இருவரும்!
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப்பற்றி அங்குலம் அங்குலமாக
அறிந்தவர்கள் இவர்கள்! என்னைச் சரியாக எடைபோட்டு வைத்திருப்பவர்கள்!
‘‘நோ விஸ்கி, நோ விமன், நோ சிகார், ஹி ஈஸ் ஆரூர்தாஸ்’’ என்று
ஆங்கிலத்தில் கூறி திருலோகசந்தர் என்னை விமர்சிப்பார். இந்த ஆங்கிலச்
சொற்றொடரை அவர் இயக்கிய ‘‘நீ இன்றி நான் இல்லை’’ என்ற படத்தில் ஒரு
காட்சியில் நான் வசனமாக எழுதியிருக்கிறேன்.
இதை தமிழில் நான் மொழிபெயர்த்துச் சொல்வேன்:–
‘‘சீசாக்கள் இல்லை, சிங்காரிகள் இல்லை, சிகரெட் இல்லை – அவர்தான்
ஆரூர்தாஸ்.’’
இதைக்கேட்டு அவர் சிரிப்பார்.
என் மீது உள்ள பிரியத்தில் நான் எது கேட்டாலும் வாங்கிக் கொடுக்கத்
தயாரிப்பாளர்கள் தயாராய் இருந்தார்கள். ஆனால் நான்தான் தயாராக இல்லை.
‘ஓசி’யில் கிடைக்கிறது என்பதற்காக வாங்கி ஊற்றிக்கொண்டு உடலையும்,
குடலையும் பாழாக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை!
ஆசைப்பட்ட ஆகார வகைகளை வாங்கி வரச்சொல்லி உண்பேனே தவிர,
ஆகாததைக் கேட்கமாட்டேன். அதனால்தான் எல்லா தயாரிப்பாளர்கள் –
இயக்குனர் களாலும் நான் விரும்பப்பட்டு ஏராளமான படங்களுக்கு எழுதக்கூடிய
வாய்ப்பு பெற்றேன்.
இது எனக்கு எப்படி சாத்தியம் ஆனது? சினிமாவில் எனது ஆரம்ப நுழைவே
‘தேவர் பிலிம்ஸ்’ என்ற ராணுவ முகாம்! அதில் தேவரண்ணன் ஓர் உயர்
அதிகாரியாக இருந்து முழுக்க முழுக்க ஒழுக்கத்தைக் கண்டிப்புடன்
கடைப்பிடித்தார்!
தாம்பூலம் தரித்துக் கொள்வதைத்தவிர, வேறு தகாத விஷயங்கள் எதையுமே
அறியாத அண்ணன், தன்னைப்போலவே தன் நிறுவனம் சார்ந்த எல்லோருமே
இருக்கவேண்டும் என்று எண்ணினார்.
தேவர் பிலிம்ஸ் அலுவலகத்தை அவர் சினிமா கம்பெனியாக அல்ல. செந்தூர்
முருகன் ஆலயம் போல வைத்திருந்தார்!
அன்றாடம் கட்டிக் கற்பூரம் ஏற்றிக்காட்டி, கந்தனை வழிபட்டு கடமையிலும்,
கண்டிப்பிலும் கவனம் செலுத்தினார்.
அலுவலகத்தின் உள்ளே யாராவது சிகரெட் பிடித்தாலோ, சீசாக்கள்
திறந்தாலோ, சீட்டு ஆடினாலோ அடித்தே கொன்று விடுவார் என்ற அச்சம்
அனை
வருக்குமே இருந்தது. அதனால்தான் அன்றைக்கு அந்த நிறுவனம் ஒழுக்கத்
தின் உறைவிடமாக
விளங்கியது!
இன்றைக்கும் – இந்த எனது எண்பத்து இரண்டு வயதிலும் நான் கடைப்பிடித்து
வரும் ஒழுக்கம், ஒழுங்கு, அனுபவ அறிவு, ஆற்றல் இந்த நான்கையும் –
அன்றைக்கு நான்கு சினிமா மேதைகளிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன்.
அந்த நால்வர்:–
1. தேவரண்ணன்!
2. ஏவி.எம்.செட்டியார்!
3. எல்.வி.பிரசாத்!
4. வாகினி நாகிரெட்டியார்!
தேவரண்ணனிடமிருந்து ஒழுக்கத்தையும், ஏவி.எம். செட்டியாரிடமிருந்து
ஒழுங்கையும், எல்.வி.பிரசாத்திடமிருந்து அனுபவ அறிவையும்,
நாகிரெட்டியாரிடமிருந்து செயலாற்றலையும் கற்றுக் கொண்டு, என்னால்
இயன்ற அளவுக்கு அவற்றை அனுசரித்து வருகிறேன்.
அவையே இன்றைக்கு எனக்கு பலத்தையும், நலத்தையும், வளத்தையும்,
நல்வாழ்வையும் கொடுத்திருக்கிறது என்று நான் கூறினால் அது மிகை அல்ல.
ஆன்றோரும், சான்றோரும் ஆண்டவனின் பிரதிநிதிகள் ஆவர்! அவர் களைப்
பின்பற்றி நடந்தால் பிறவிப்பெரும் பயன் அடையலாம். இது என் அனுபவம்!
சிற்றினம் சேர்ந்தால் வாழ்வு சிதையும்.
Bookmarks