வீரபாண்டிய கட்டபொம்மன் ட்ரைலர் வெளியீட்டு விழா
அழகான காலைப் பொழுது! அருமையாக நடந்த விழா! அற்புதமாக பேசிய சிறப்பு விருந்தினர்கள்! அரங்கம் வழிய வழிய திரண்ட ரசிகர்கள், போது மக்கள்! இவற்றுக்கு நடுவில் அரங்கம் அதிர அதிர பாஞ்சாலங்குறிச்சி சிங்கம் நடிப்புச் சக்ரவர்த்தியின் உருவில் டிஜிட்டல் வ்டிவில் வெள்ளையருக்கு எதிராக வீர முழக்கமிட்டப் போது பார்வையாளன் அடைந்த பரவசம் பற்றி சொல்லவும் வேண்டுமோ!
பெரிய திரையில் ட்ரைலர் ஓட ஆரம்பிக்க அத்துடன் விழா தொடங்கியது. 3 நிமிட முன்னோட்டம் அத்துடன் மனம் கனிந்தருள் வேல் முருகா, இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே, கறந்த பாலும் [கட்டபொம்மன் தன் பரிவாரங்களுடன் ராமநாதபுரம் செல்லும்போது வரும் பாடல்] ஆகியவை முழுமையாக திரையிடப்பட்டன. கறந்த பாலும் பாடல் பார்க்கும்போதுதான் எவ்வளவு பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் இது என்பது மனதில் உறைக்கிறது.
தொகுத்து வழங்கிய திருமதி மதுவந்தி அருண் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரையும் மேடைக்கு அழைத்தார். ராஜ் டிவி உரிமையாளர்களான நான்கு சகோதரர்களும் முதலில் மேடைக்கு வந்தார்கள். அதன் பிறகு தளபதி ராம்குமார் மேடையேறினார். அடுத்து இளையதிலகம் பிரபு [என் favourite என்ற மதுவந்தியின் கமன்ட்] விக்ரம் பிரபு ஆகியோர் வந்தனர். கலைப்புலி தாணு, விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, சித்ரா லட்சுமணன், Dr. கமலா செல்வராஜ் ஆகியோர் அடுத்து வந்தனர். பிறகு அழைக்கப்பட்டவர் கலையுலக மார்கேண்டேயர் சிவகுமார். மேடைக்கு அழைக்கப்படும்போதே சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் படத்தை வெளியிடும் சாய் கணேஷ் பிலிம்ஸ் உரிமையாளர்கள் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
வரவேற்புரையாற்ற வந்தார் ராம்குமார். நடிகர் திலகத்தை நினைவுப்படுத்தும் குரலில் அவர் அனைவருக்கு காலை வணக்கம் கூறி வந்தவர்களை வரவேற்றார். இந்தப் படத்தை பாதுகாத்து வைத்திருந்து இப்போது வெளியிட அனைத்து உதவிகளையும் செய்த ராஜ் டிவி சகோதரர்களுக்கு நன்றி சொன்ன அவர் அதற்கு பெரும் உதவியாக இருந்த சித்ரா லட்சுமணன் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். படத்தை வெளியிடும் சாய் கணேஷ் பிலிம்ஸ் பங்குதாரர்கள் ஸ்ரீனிவாசலு மற்றும் முரளி ஆகியோருக்கு வாழ்த்து சொல்லி இந்தப் படத்தை பொறுத்தவரை அன்றும் இன்றும் என்றும் வசூல் சக்கரவர்த்தி நடிகர் திலகம் இந்தப் படத்தையும் வாழ வைப்பார் என்று பலத்த கைத்தட்டலுக்கு இடையே கூறி முடித்தார்.
அடுத்து கலைப்புலி தாணு. தன்னை சிவாஜி பக்தன் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் தான் சினிமாத்துறைக்கு வந்ததற்கே காரணம் கட்டபொம்மன் என்றார். பள்ளி நாடகத்தில் கட்டபொம்மன் வசனத்தை பேசி நடித்த தனக்கு பரிசு கிடைத்ததையும் பரிசு வழங்கிய வார்ட் கவுன்சிலர் நீ சினிமாவிற்கு போனால் பிரகாசிப்பாய் என்று சொன்னதை வைத்து சினிமா ஆசையை வளர்த்துக் கொண்டதை சொன்னார். கட்டபொம்மன் வசனம் இப்போதும் ஞாபகம் இருக்கிறது என்று சொன்ன அவர் ஜாக்சன் துறையுடன் பேசும் வசனத்தின் சில அவ்ரிகளை பேசிக் காண்பித்தார்.
அடுத்துப் பேசிய விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதியும் ராஜ் டிவி இயக்குனர்களில் மூத்தவருமான ராஜேந்திரனும் சுருக்கமாக பேசி தங்கள் உரையை முடித்துக் கொண்டார்கள். ராஜேந்திரன் சிறு வயதில் ஸ்கூல் கட் அடித்துவிட்டு சித்ரா தியேட்டரில் படம் பார்த்ததை நினைவு கூர்ந்தார். அவர் தந்தையார் அதை கண்டுபிடித்ததையும் சொன்னார். அவர் பேசி முடித்தவுடன் மதுவந்தியின் கமன்ட். அய்யா நீங்க உங்க அப்பாவுக்கு தெரியாமல் ஸ்கூல் கட் அடிச்சு படம் பார்த்திருக்கீங்க. ஆனா எங்க அப்பாவோ என்னை ஸ்கூல் கட் அடிக்க வைச்சு VHS காசட்டில் படம் பார்க்க வைத்தார் என்றார். தொடர்ந்து இப்பொது நான் நடத்தும் காலிபர் ஸ்கூல் பள்ளி மாணவர்களை நானே இந்தப் படத்திற்கு அழைத்து வருவேன் என்று சொல்ல கைதட்டல்கள்.
விக்ரம் பிரபு வந்தார். இத்துணை பெரியவர்கள் இருக்கும் இடத்தில பேச நேரும் தருணத்தில் ஒரு இளைஞன் எப்படி இருப்பானோ அப்படி இருந்தார். ஆனால் பேச்சில் சமாளித்து விட்டார். உங்களைப் போலவே ஒரு ரசிகனாக என் தாத்தாவை பார்க்க ஆவலாக இருக்கிறேன். இதுவரை பெரிய திரையில் நான் இந்தப் படத்தை பார்த்ததில்லை. ஆகவே படம் பார்க்க வேண்டும் கை தட்ட வேண்டும் விசிலடிக்க வேண்டும், முடிந்தால் திரையை நோக்கி காசு எறிய வேண்டும். ஆகவே ரிலீசின்போது சந்திப்போம் என்று முடித்தார். உடனே மதுவந்தி விக்ரம் நீங்க காசு எறிஞ்சா நான் சூடம் கொளுத்துவேன் என்று கமண்ட் அடிக்க அரங்கமே அமர்களமானது.
அடுத்து பேசிய Dr. கமலா செல்வராஜ் சிவாஜி குடும்பத்தில் நானும் ஒருத்தி, அவரின் பெண்ணைப் போன்றவர் என்று சொல்லி எனது அப்பாவும் இதில் நடித்திருப்பதால் எனக்கு இரட்டிப்பு சந்தோஷம் என்றார். சின்ன வயதில் பெரிய திரையில் பார்த்தது. இப்போது மீண்டும் பார்க்க ஆவலாக இருப்பதாக சொன்ன அவர் தன்னை அழைத்ததற்கு நன்றி சொல்லி இந்தப் படமும் கர்ணன் போல் வெற்றி பெற வாழ்த்தி விடை பெற்றார். . .
அடுத்து வந்தார் சித்ரா லட்சுமணன்
(தொடரும்)
அன்புடன்
Bookmarks