Results 1 to 10 of 3995

Thread: Nadigar Thilagam Sivaji Ganesan Part-18

Threaded View

  1. #11
    Junior Member Newbie Hubber
    Join Date
    Mar 2021
    Posts
    0
    Post Thanks / Like
    Completion of 53 Years tomorrow. Kulamamal Radhai Write up by Murali.



    குலமகள் ராதை

    தயாரிப்பு: ஸ்பைடர் பிலிம்ஸ்

    திரைக்கதை இயக்கம் : A.P. நாகராஜன்

    வெளியான நாள் : 07.06.1963

    திருச்சி. அங்கே வள்ளுவன் அச்சகம் வைத்து நடத்திக் கொண்டிருக்கும் சந்திரன். கலப்பு திருமணம் செய்து கொண்ட பெற்றோருக்கு பிறந்தவன். இன்று அவர்கள் இல்லை. அத்தை மட்டுமே. வேலையாட்கள் இருவர், வீட்டுக்காரர்கள் போலவே வாழ்கிறார்கள். சந்திரன் காதலிக்கும் பெண் ராதா. தாய் மற்றும் தனயன் அரவணைப்பில் வாழ்கிறாள். அண்ணி சுடு சொல்காரி. அந்த குடும்பத்தின் நெருங்கிய உறவினர் சாம்பமூர்த்தி. அவருக்கு ராதா சந்திரனை காதலிப்பது பிடிக்கவில்லை, போததற்கு ஒரு சமயம் அவரை சந்திரன் அவமானப்படுத்தி விட அவர்கள் காதல் நிறைவேறக் கூடாது என்று நினைக்கிறார். அவருக்கு ஒரு மகள் பத்மினி. தந்தையின் பணத்தாசை காரணமாக அவள் ஒரு காச நோய்க்காரனுக்கு வாழ்க்கைப்பட்டு அவனை இழந்து இன்று தந்தை வீட்டிலேயே வாழ்கிறாள் பத்மினி. அவள் நிலையை பார்த்தும் அவர் தந்தை மனம் மாறவில்லை.

    ராதாவின் தாய் மட்டும் கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்கிறாள். சந்திரன் உள்ளூரில் கல்யாணம் நடந்தால் எதிர்ப்பு வரும் என்று நினைத்து அத்தையையும் வேலைக்காரப் பெண்ணையும் பழனிக்கு அனுப்பி அங்கே கல்யாண ஏற்பாடுகள் செய்ய சொல்கிறான். கல்யாணத்திற்கு பிறகு சென்னைக்கு போய் வேலை தேடி கொள்ளலாம் என்று திட்டமிட்டு நண்பர்கள் உதவியுடன் சென்னையில் ஒரு வீடு வாடகைக்கும் எடுத்து வைக்க ஏற்பாடுகள் செய்கிறான். முதல் நாள் இரவு வீட்டிலிருந்து ராதா வந்து சேர வேண்டும், பிறகு டாக்சியில் பழனி சென்று கல்யாணம் செய்து கொள்வது என்பது பிளான்.

    ராதா வீட்டை விட்டு கிளம்பும்போது எதிர்பாராது அண்ணி வந்து விட, திட்டமெல்லாம் தவிடு பொடியாகி விடுகிறது. சாம்பமூர்த்தி வேறு வந்து விடுகிறார். ராதாவை காணாமல் அவளை தேடி அவள் வீட்டிற்கு வருகிறான் சந்திரன். அவனிடம் இந்த கல்யாணம் நடக்காது.இங்கிருந்து போய் விடுங்கள் என்று ராதாவே சொல்ல வேண்டும், இல்லாவிட்டால் தன்னிடம் இருக்கும் துப்பாக்கியால் சந்திரனை சுட்டு விடுவேன் என்று சாம்பமூர்த்தி மிரட்ட, வேறு வழியில்லாமல் அதேபடி செய்கிறாள் ராதா. மனம் உடைந்து வரும் சந்திரனை மீண்டும் சென்று பார்க்க சொல்கிறான் வேலைக்காரன். விருப்பத்திற்கு மாறாக நடந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு
    ஆளான ராதாவிற்கு டாக்டர் தூக்க மருந்து இன்ஜக்சன் கொடுக்க அவள் ஆழ்ந்த மயக்கத்தில் இருக்கிறாள். இது தெரியாமல் ஜன்னல் வழியாக அவளை எழுப்ப முயற்சிக்கும் சந்திரன் அவள் தூக்கத்தை கண்டு கோபம் கொள்கிறான். தன்னை ஏமாற்றி விட்டாள் என்ற நினைப்பில் வீட்டையே காலி செய்து கொண்டு சென்னை புறப்பட்டு விடுகிறான். அத்தையையும் சென்னைக்கு வரவழைக்கிறான். மறு நாள் காலை அவனை தேடி வரும் ராதா அவன் ஊரை விட்டு போன சேதி கேட்டு உடைந்து போகிறாள். வீட்டை விட்டு வெளியேறும் அவளையும் அவள் தாயையும் சாம்பமூர்த்தியின் மகள் தனி வீட்டில் குடி வைக்கிறாள்.


    இதனிடையே சந்திரன் சென்னை செல்லும் வழியில் ஒரு பெண் லிப்ட் கேட்கிறாள். அவள் ஒரு சர்க்கஸ் கம்பெனி முதலாளியின் மகள் லீலா. திண்டிவனத்திற்கு ஒரு கல்யாணத்திற்கு வந்த அந்த பெண் கார் வழியில் ரிப்பேர் ஆனதால் மாலை காட்சிக்கு முன்பாக சென்னை சென்று சேர்வதற்காக லிப்ட் கேட்கிறாள். அவளை ஏற்றி கொண்டு அவள் இடத்திற்கு சென்று இறக்கி விட்டு அந்த சர்க்கஸ் காட்சியையும் பார்த்து விட்டு செல்கிறான். இப்போது வீட்டில் அத்தை, வேலையாட்கள் இருக்கிறார்கள். சென்னையில் வீடு வாடகைக்கு எடுத்த விவரம், அதன் அட்ரஸ் எல்லாம் ராதாவிற்கு தெரியுமாதலால் அந்த முகவரிக்கு, நடந்த முழு விவரங்களையும் ஒரு லெட்டரில் எழுதி ரிஜிஸ்டர் போஸ்ட் அனுப்புகிறாள். அனுப்பியவர் பெயர் பார்த்து விட்டு சந்திரன் அதை வாங்காமல் திருப்பி அனுப்பி விடுகிறான். லெட்டர் திரும்பி வந்தவுடன் ராதா தளர்ந்து விடுகிறாள்.


    இதனிடையே வேலைக்கு முயற்சி செய்யும் சந்திரனுக்கு தன் சர்க்கஸ் கம்பெனியிலே வேலை வாங்கி தருகிறாள் லீலா. பார் விளையாட்டை விரைவில் கற்றுக் கொண்டு சந்திரன் அந்த குழுவில் ஒரு முக்கியமான நபராகிறான். லீலா மனது சந்திரனை நாடுகிறது. ஆனால் சந்திரன் பிடி கொடுக்காமல் இருக்கிறான். அவன் அத்தை அதை பற்றி பேச்செடுக்கும் போது கூட அடக்கி விடுகிறான். லீலாவின் தந்தை இது போன்ற ஒரே தொழில் செய்பவர்கள் கல்யாணம் செய்து கொள்வதால் ஏற்பட கூடும் சிக்கல்களை விளக்குகிறார். ஆனாலும் அவள் மனம் மாறவில்லை.

    சென்னை ப்ரோக்ராம் முடிந்து கம்பெனி திருச்சி கிளம்புகிறது. அதை தவிர்க்க நினைக்கும் சந்திரனை கட்டாயப்படுத்தி கூட்டி செல்கிறாள் லீலா. அவள் தன் மன விருப்பத்தை சந்திரனிடம் தெரிவிக்க அவன் மறுத்து விடுகிறான். இந்நிலையில் திருச்சி வருகிறது சர்க்கஸ் கம்பெனி.


    ராதாவின் தாய் மாமன் மலேசியாவிலிருந்து திருச்சி வருகிறான். அவனை மணந்து கொள்ள சொல்லும் தாயின் வார்த்தையை ராதா மறுக்கிறாள். மாமன் அவளின் கதையை கேட்டு அவளுக்கு உதவி செய்வதாக உறுதியளிக்கிறான். சென்னை சென்று சந்திரனை சந்தித்து எல்லா உண்மைகளையும் சொல்லி அவர்கள் இருவருக்கும் கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்கிறான். ஆனால் அவன் சென்னை செல்லும் போது சந்திரன் திருச்சி வந்து விட அவனது அத்தையை சந்தித்து நடந்த உண்மைகளை கூறி அவர்களை திருச்சிக்கு கூட்டி வருகிறான்.


    சர்க்கஸ் கம்பெனி போஸ்டரில் சந்திரனை பார்த்து விட்டு, அவனை காண சர்க்கஸ் கூடாரம் செல்லும் ராதா அங்கே லீலாவை சந்திக்கிறாள். அவள் சந்திரன் இல்லை என்று சொல்லி அனுப்பி விடுகிறாள். லீலா மனதில் ஒரு சந்தேகம். அதை சந்திரனிடம் கேட்க இருவருக்கும் சண்டை வருகிறது. காட்சி நடக்கும் போது ராதாவை பார்த்து விடும் சந்திரன் பாரிலிருந்து நிலை தடுமாறி வலையையும் தாண்டி கீழே விழ தலையில் அடிப்பட்டு விடுகிறது. மருத்துவமனைக்கு பார்க்க செல்லும் ராதாவை அனுமதிக்க லீலா மறுக்க, அவள் லீலாவிற்கு தெரியாமல் உள்ளே வர, கட்டிலில் கிடக்கும் சந்திரன் ராதாவை பார்த்து கோபப்பட்டு கத்த, கிளைமாக்ஸ் அரேங்கேறுகிறது.

    அகிலன் எழுதிய வாழ்வு எங்கே நாவலே குலமகள் ராதை திரைப்படமானது.

    இந்த படத்தை ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது பார்த்த போது பளிச்சென்று தெரிந்த இரண்டு விஷயங்கள். லாஜிக் மற்றும் இயல்பு தன்மை.

    பொதுவாக படங்களில், தமிழ் படங்களில் லாஜிக் எதிர்பார்ப்பது பெரிய ஏமாற்றத்தைக் கொடுக்கும். ஆனால் ஆச்சரியமாக இந்த படத்தில் அது இருக்கிறது. காதலித்து ஊரை விட்டு ஓடி போய் கல்யாணம் செய்து கொள்ள திட்டமிடும் போது செய்யும் ஏற்பாடுகளில் லாஜிக் இருக்கிறது. திட்டப்படி காதலி வரவில்லை என்றால் காதலன் தேடி போக மாட்டானா என்ற கேள்விக்கு லாஜிக்கான பதில் இருக்கிறது. திடீரென்று காதலி மறுத்து பேசினால் காதலன் சந்தேகப்பட மாட்டானா என்ற கேள்விக்கு பதில் இருக்கிறது. சென்னையில் காதலனின் அட்ரஸ் எப்படி தெரியும்? பதில் இருக்கிறது. இரண்டாவது நாயகி நாயகனை சந்திப்பதில் லாஜிக். சென்னையில் வேலை, வருமானம் இல்லாமல் ஒருவன் வாழ முடியுமா என்ற கேள்வி வரும் அதற்கும் பதில் இருக்கிறது. அதன் பின் நிகழும் சம்பவக் கோர்வைகளில் எல்லாம் லாஜிக் இருக்கிறது. ஒரு வேலை அகிலன் கதையிலே இப்படி தான் எழுதியிருந்தாரோ தெரியவில்லை (படித்ததில்லை). எப்படியிருப்பினும் ஏ.பி.என் அதை அழகாக செய்திருக்கிறார்.

    இரண்டாவது விஷயம் வசனம். ரொம்ப ரொம்ப இயல்பான வசனம். கூடுதலோ குறைவாகவோ இல்லாமல் எந்த இடத்திற்கு எது தேவையோ அதை மட்டுமே எழுதியிருக்கிறது ஏ.பி.என்னின் பேனா. ஒரு பெண் தான் காதலிக்கும் ஆணைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லும் போது அந்த வீட்டில் உள்ள பெரியவர்கள் எப்படி பேசுவார்கள் என்பதை இதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அது போல் ஒவ்வொரு பாத்திரமும் தன் நிலையை விளக்கும் போது கொஞ்சம் கூட செயற்கை தன்மை இல்லாமல் இருப்பது சிறப்பு.

    நடிகர் திலகத்தை பொருத்த வரை அவர் ஹேர் ஸ்டைல்(சொந்த முடி) தொட்டு ஒவ்வொரு விஷயமும் இயல்போ இயல்பு. இந்த மாதிரி படங்களை பார்க்கும் போது அவரைப்பற்றி அவர் படங்களை பற்றி எந்தளவுக்கு தவறாகவே மதிப்பிடப்பட்டிருக்கின்றன என்பது புரிந்து கொள்ள முடிகிறது. எந்த ஒரு காட்சியிலும் இயல்பான நடிப்பை தாண்டி அவர் எதுவும் செய்யவில்லை. இந்த காலக்கட்டதில் இப்படி ஒரு நடிப்பு வந்திருந்தால், அந்த நடிகர் இயல்பாகவே வாழ்ந்திருக்கிறார் என்று உயர்வு நவிற்சி செய்திருப்பார்கள்.

    முதல் காட்சியில் கொஞ்சி பேசும் கன்னடத்து பைங்கிளியை மிமிக்ரி செய்வதில் ஆரம்பித்து கிளைமாக்ஸ் வரை ஒரே லெவல் மெயின்டெயின் செய்திருக்கிறார். உணர்ச்சி வசப்படும் வாய்ப்பு வரும் போது கூட(காதலி வரமாட்டேன் என்று சொல்லும் போது) என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்திருக்கிறார். அது போல் ஊருக்கு திரும்பி போகலாம் என்று சொல்லும் அத்தையிடம் பேசும் இடமும் அப்படியே. காதலி மேல் கோபமாக இருக்கும் அவர் ராதா கல்யாணம் என்ற போஸ்டரை கிழித்து விட, அவரை ஒருவன் துரத்த, திருடன் என்று நினைத்து ஒரு கும்பல் துரத்த, சர்க்கஸ் கம்பெனி கூடாரத்தில் நுழையும் அவரை கூர்கா பிடிக்க அங்கு வரும் தேவிகா கூர்காவை போக சொல்லிவிட்டு எதாவது தேவை என்றால் என்னிடம் கேட்டிருக்கலாமே என்று சொல்ல, இந்த மாதிரி காட்சியில் நாயகன் ரோஷம் பூண்டு பேசுவதைத்தான் கேட்டிருக்கிறோம். ஆனால் இவர் அந்த இடத்தில் "அடங்கொப்புரானே! திருடன்னே முடிவு கட்டியாச்சா? விவரம் தெரியாமே ஒருத்தன் துரத்த, விஷயம் தெரியாமே ஒரு கூட்டம் துரத்த, பாஷை தெரியாமே உங்க கூர்காகிட்டே நான் மாட்டிக்கிட, உங்க பங்குக்கு நீங்களும் அட்வைஸ் பண்ணுறீங்களா?".

    காரில் லிப்ட் கேட்டு ஏறிக்கொள்ளும் தேவிகா இவர் படித்துக்கொண்டிருக்கும் பாரதி கவிதைகளை வாங்கி தீர்த்தக்கரையினிலே -- என்று படிக்க ஆரம்பித்து, வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா என்று படிக்க, இவர் பிடுங்கி வைக்க, ட்ரான்சிஸ்டர் எடுத்து பாடல் வைக்க, அது காதல் பாட்டு பாட அதையும் பிடுங்கி வைத்து விட்டு " சும்மா உட்கார்ந்து வர மாட்டீங்களா?" என்று அவர் சொல்லும் அழகு பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று. அவரது அத்தை இவரிடம் லீலாவே தன் ஆசையை உன்னிடம் வெளிப்படுத்தினால் என்று கேட்க எதோ பதில் சொல்வது போல் எழுந்து "போ தூங்கு! அப்புறம் பேசிக்கலாம்" என்று பதில் சொல்வது கிளாஸ். அது போல இமேஜ் பற்றி துளி கூட அலட்டி கொள்ளாதவர் இவர் என்பதற்கு இன்னொரு உதாரணம், தேவிகா நடிகர் திலகத்திடம் தன் ஆசையை வெளிப்படுத்தும் சீன். "நாம் இருவரும் சேர்ந்து சர்க்கஸ் அரங்கில் நிற்பதை பார்க்கும் மக்கள் என்ன நினைப்பாங்கா" என்று தேவிகா கேட்க, அதற்கு நடிகர் திலகம் சொல்லும் பதில் " இவ்வளவு எக்ஸ்ஸர்சைஸ் பண்ணியும் இவ்வளவு குண்டா இருக்காங்களேன்னு நினைப்பாங்க". எந்த நாயகன் சொல்லுவான்? இப்படி நடிகர் திலகத்தின் நடிப்பை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

    சரோஜாதேவி முற்பகுதியில் அழகு + குறும்பு. அச்சகத்திற்கு வரும் அவரை சிவாஜி ஏன் வந்தாய் என்று கேட்க அவர் வரக்கூடாதா என்று திருப்பி கேட்க இது நம்ம லொக்கேஷன் இல்லை என்று சொல்லுவார். சரோஜாதேவி கிளம்பும் போது நடிகர் திலகம் பக்கத்தில் வர இது நம்ம லொக்கேஷன் இல்லை என்று சொல்லிவிட்டு போவது அவருக்கே உரித்தான குறும்பு. கதையின் போக்கிலே அவரது அந்த குறும்பு தொலைந்து போனாலும் கூட சோகத்தை அடக்கியே வாசிக்கிறார்.

    தேவிகா எப்போதும் போல குறை வைக்காத நடிப்பு. அழகாக இருப்பதிலும் சரி, பாத்திரத்தை உணர்ந்து நடிப்பதிலும் சரி தான் ஒரு நல்ல நடிகை என்பதை நமக்கு உணர்த்துகிறார்.

    சிறிது நேரமே வந்தாலும் சந்தியா அண்ணி கதாபாத்திரத்தில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். சரோஜா தேவியின் தாயாக கண்ணாம்பா, நடிகர் திலகத்தின் படத்தில் கடைசியாக இடம் பெற்றது இந்தப் படத்தில்தான். வேலைக்காரி முனியம்மாவாக வரும் மனோரமா தில்லானா டயலாக் ஸ்டைலை இந்த படத்திலேயே பயன்படுத்தியிருக்கிறார். வில்லன் மனோகர் நல்லவனாக வர, சாரங்கபாணி வில்லனாக வருகிறார். சரோஜாதேவியின் அண்ணனாக பகவதி ஜஸ்ட் like that வருகிறார். அது போல சர்க்கஸ் முதலாளியாக வி.கே.ஆர். பத்மினியாக வந்து சரோஜா தேவிக்கு உதவி செய்யும் ரோலில் டி.வி.குமுதினி.

    முதலில் சொன்னது போல ஏ.பி.என். வசனங்கள் வெகு இயல்பு. போனஸ் மற்றும் சம்பள உயர்வு கேட்கும் சர்க்கஸ் கோமாளிகள் கூட்டத்தில் தன் வேலையாளும் இருப்பதை பார்த்து விட்டு "உன்னை மாதிரி விஷயம் தெரியாமலே கூட்டம் கூடறவன் நாட்டிலே அதிகமாகிட்டான்" என்று நடிகர் திலகம் சொல்லும் வசனம் அன்றைய சூழலுக்கு எழுதப்பட்டது போலும்.

    இசை மாமா மஹாதேவன். எட்டு பாடல்கள் முற்பகுதி முழுக்க டி.எம்.எஸ். பிற்பகுதி முழுக்க சுசீலா. அனைத்துமே நல்ல பாடல்கள்.

    உலகம் இதிலே அடங்குது - பத்திரிக்கை செய்திகளை பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் கண்ணதாசன் கலந்து எழுதிய பாடல்.

    சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா- ஒரே டூயட். கண்ணதாசனின் வார்த்தை விளையாட்டு.

    ராதே உனக்கு கோபம் ஆகாதடி- தன் ரோல் மாடல் பாகவதரின் பாடலை டி.எம்.எஸ். பாட கிடைத்த சந்தர்ப்பம்.

    உன்னை சொல்லி குற்றமில்லை- படத்தின் மிக பெரிய ஹிட் பாடல்.

    இரவுக்கு ஆயிரம் கண்கள்- மற்றுமொரு ஹிட் பாடல்.தேவிகா பாடுவது.

    ஆருயிரே மன்னவரே- சரோஜாதேவி, லெட்டர் திரும்பி வந்தவுடன் பாடுவது.

    கள்ள மலர் சிரிப்பிலே- தேவிகா தனி பாடல்

    பகலிலே சந்திரனை பார்க்க போனேன்- மீண்டும் கண்ணதாசனின் வார்த்தை ஜாலம்.

    ஆற்றொழுக்கு போன்ற கதை, தெளிந்த நீரோடை போன்ற பாத்திரங்கள் அதேற்கேற்ற நடிகர்கள், நடிகர் திலகத்தின் வெகு இயல்பான நடிப்பு, இவை அனைத்தும் இருந்தும் இந்த படம் பெரிய வெற்றியைப் பெறாமல் ஒரு average வெற்றியை மட்டுமே பெற்றது. ஒரு வேளை சினிமாடிக் திருப்பங்கள் எதுவும் இல்லாத கதை என்பதே கூட ஒரு மைனஸ் பாய்ன்டாக இருந்திருக்கலாமோ? இல்லை இந்த கதைக்கு இவ்வளவு பெரிய நடிகர் திலகம் தேவையில்லை என்று நினைத்திருப்பார்களோ? இல்லை வழக்கம் போல் இதற்கு எழுபது நாட்களுக்கு முன்பு வந்த இருவர் உள்ளம், இந்த படம் வெளியாகி 35 நாட்களில் ரீலீஸான பார் மகளே பார் என்று இரண்டு பவர்புல் படங்களுக்கு நடுவே மாட்டிக்கொண்டது தான் காரணமோ?

    எப்படியிருப்பினும் பெற வேண்டிய வெற்றியை பெறாமல் போன படங்களில் குலமகள் ராதைக்கும் இடம் உண்டு.
    நெஞ்சமெல்லாம் நிறைந்த நடிகர்களின் நடிகன்.
    http://www.mayyam.com/talk/showthrea...hool-of-Acting

  2. # ADS
    Circuit advertisement
    Join Date
    Always
    Posts
    Many
     

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •