-
23rd November 2009, 01:58 PM
#11
Senior Member
Veteran Hubber
"மூன்றெழுத்து" (பாகம் 2)
இரண்டாவது ஆளான ஓ.ஏ.கே.தேவரோ, தன்னிடம் இருக்கும் குறிப்புக்களைத்தராமல் அடம் பிடிப்பார். அங்கே தேவரின் மைத்துனரும் தெருக்கூத்தாடியுமான நாகேஷும் இவர்களுடன் சேர்ந்துகொள்வார். ஏகப்பட்ட மின்சார வேலிகளுக்கு மத்தியில் அதைப்பதுக்கி வைத்திருப்பார். அவரை ஏமாற்றி அதை எடுக்கும் நேரம் ஆனந்தனும் அவரது ஆட்களும் வர, கடுமையாக சண்டையிட்டு, வில்லன் கோஷ்டியை மின்சார வேலிகளுக்குள் மாட்டிவிட்டு, இவர்கள் தப்பிப்பார்கள். அப்பாடா ஒரு குறிப்பு கிடைத்தது. அசோகனிடம் இருப்பதைக்கைப்பற்ற வேண்டுமே. அதைத்தேடி, அவரைப்பிடித்து வைத்திருக்கும் வில்லன் கூட்டம் தங்கியிருக்கும் இடத்துக்கு இரவில் போய்த்தேட, அவர் தன் குடுமிக்குள் மறைத்து வைத்திருப்பார். விளைவு?. அசோகனின் குடுமி கட். குறிப்பு ரவியின் குரூப் கையில்.
இதனிடையே, முதலாளியின் குடும்பம் வறுமையில் வாடுகிறது. முதலாளியின் மூத்த மகள் ஷீலா, ஓட்டலில் நடனமாடி சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறார். அதைப் பார்த்து தவறாகப் புரிந்துகொண்டு ரவி ஷீலாவைக்கண்டிக்க, அந்த வேலையையும் விட்டுவிடுகிறார். அடுத்த முறை அவர்களை ரவி சந்திக்கும்போது, அம்மாவைத்தவிர மொத்தக்குடும்பமும் பாட்டுப்பாடி பிச்சையெடுத்துக்கொண்டிருக்கிறது. அதிர்ந்து போன ரவி அவர்களை அழைத்துக்கொண்டு வீட்டுக்குப்போனால், அங்கே ஷீலாவின் அம்மா தற்கொலைக்கு முயற்சிப்பதைப்பார்த்து அவரைக் காப்பாற்றி, குடும்ப மொத்தத்தையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு, பிளானின் மூன்றாவது பகுதியைப்பெற ஐதராபாத் போகிறார்.
மூன்றாவதாக ஐதரபாத்திலிருக்கும் சுருளியிடம் போனாலோ, அவர் ரவி தன் மகளான ஷ்ரீவித்யாவை ரவி ஊட்டி ஏரியில் காப்பாற்றியதிலிருந்து அவரையே நினைத்து உருகுவதாகவும், வித்யாவை திருமணம் செய்ய ரவி சம்மதித்தால் மட்டுமே குறிப்பைத்தர முடியும் என்றும் கறார் செய்ய, ரவிக்கு (ஷண்முகி கமல் பாணியில்) 'போங்கடா' என்றாகிறது. ஆனாலும், ரவி தன் முயற்சியில் வெற்றிபெற்று, அந்தப்பணப்பெட்டியை கண்டெடுத்து, வறுமையில் வாடும் முதலாளியின் குடும்பத்தைக்காப்பாற்ற வேண்டுமென்பதற்காக ஜெயலலிதா, ரவியுடனான தன் காதலை விட்டுத்தர சம்மதிக்கிறார். (இந்த இடத்தில் ஒவ்வொருவரும் பேசுவதாக டி.என்.பாலு 'மூன்றெழுத்து வசனம்' எழுதியிருப்பார் பாருங்க... வாவ்....). இறுதியில் மனம் நெகிழ்ந்துபோன சுருளி, தன் குறிப்பைத்தர சம்மதிக்கிறார்.
மூன்று குறிப்பும் கையில் ரெடி. ஒன்றாக சேர்த்துப்பார்த்தால் 'தி.மு.க.' என்று வருகிறது. (நாகேஷ்: “ஏண்டாப்பா, உங்க அப்பா பெரிய அரசியல்வாதியாக இருப்பாரோ?”). அப்புறம் மாற்றி மாற்றி வைத்துப்பார்த்தால் வருவது 'கமுதி ‘. ஓ... அந்த ஊரில்தான் புதைக்கப்பட்டிருக்கிறதா?. அதே வரிசையில் வைத்து பிளானைத்திருப்பினால், பணப்பெட்டி எங்கே புதைக்கப்பட்டுள்ளது என்பதை பிளான் தெளிவாகக் காட்டுகிறது. என்ன பயன்?. திடீர் பவர் கட். மீண்டும் கரண்ட் வந்தபோது மொத்த பிளானும் மாயம். சரி, இடம்தான் தெரிந்துவிட்டதே என்று அங்கு போனால், கையில் பிளானுடன் பணப்பெட்டியை தோண்டியெடுத்துக்கொண்டிருக்கும் ஸ்பெஷல் வில்லன் மனோகர் (கிளைமாக்ஸில் மட்டும் வருவார்). வழக்கம்போல கிளைமாக்ஸ் சண்டை.
அங்கு கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருப்பதால், அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் நவீன எந்திரங்கள் உதவியுடன் சண்டை போடுகின்றனர். ஓடிக்கொண்டிருக்கும் புல்டோஸரின் பிளேடுக்கு முன்னால், டூப் போடாமல் ரவி, வில்லன் ஆட்களுடன் புரண்டு புரண்டு சண்டை போடுவது நம் உடலை சிலிர்க்க வைக்கும். ஒருவழியாக வில்லன் கோஷ்டியுடன் சண்டையிட்டு பணப்பெட்டியைக் கைப்பற்றியாகிவிட்டது. ஆனால் அதற்குள் மெயின் வில்லன் 'என்னத்தே' கன்னையா தன் ஆட்களுடன் சுருளியின் வீட்டுக்கு வந்து அங்கிருக்கும் சுருளி, அவர் மகள் வித்யா, ஜெயலலிதா மற்றும் முதலாளியின் மொத்தக்குடும்பத்தையும் துப்பாக்கி முனையில் பணயக் கைதிகளாக வைத்து, சோபாவின் பின்னால் துப்பாக்கியுடன் ஒளிந்துகொண்டு பணப்பெட்டியுடன் ரவியின் வரவை எதிர்பார்த்திருக்க, வெற்றிகரமாக பெட்டியுடன் ரவி, தேங்காய், நாகேஷ் கோஷ்டி வர..... யாரும் எதுவும் பேசவில்லை, எல்லோரும் பிரமைபிடித்தவர்கள் போல சோபாக்களில் உட்கார்ந்திருக்க, சுற்றும் முற்றும் பார்க்கும் ரவிக்கு, சற்று தொலைவில் கிடக்கும் கன்னையாவின் அந்த ஃபேமஸான தொப்பி கண்ணில் படுகிறது....... புரிஞ்சு போச்சு. எதிர்பாராமல் மின்னல்வேகத்தில் வில்லன் கூட்டத்தின்மேல் தாக்குதல் நடத்த, கிளைமாக்ஸ் சண்டையாச்சே. சொல்லணுமா?. பயங்கரமாக சண்டையிட்டு எல்லோருடைய கையும் ஓயும்நேரம் அசோகன் போலீஸுடன் நுழைய... அப்புறம் என்ன முதலாளி மனைவியிடம் பணப்பெட்டியை ஒப்படைப்பதும், ரவியும் ஜெயலலிதாவும் ஒன்று சேர்வதும், எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடுவதும்.... கொடுத்த காசுக்கு மேலேயே படம் திருப்தியளித்த சந்தோஷத்துடன் ரசிகர்கள் அரங்கை விட்டு வெளியேறுவதுமாக.........
(கதைச்சுருக்கமே அனுமார் வால் போல நீண்டுவிட்டதால், பல சுவாரஸ்யமான சீன்களை விட்டுவிட்டேன். உண்மையில் 'இஞ்ச்-பை-இஞ்ச்' அனுபவித்துப்பார்க்க வேண்டிய அற்புதப்படைப்பு மூன்றெழுத்து)
-
23rd November 2009 01:58 PM
# ADS
Circuit advertisement
Bookmarks