PDA

View Full Version : அந்த நாள் ஞாபகம்...



RAGHAVENDRA
24th March 2014, 12:54 AM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/ANGfw_zpsc296d8cc.jpg

"ஆயிரம் தான் சொல்லுங்க.. தலைவர் படத்தை முதல் நாள் முதல் ஷோவில் பார்த்த அனுபவத்திற்கு ஈடாக எதுவுமே கிடையாது. அந்த காலத்திலே தியேட்டரில் நாங்க பண்ணிய அளப்பரை இருக்கே... பூக்கூடை கொண்டு வந்து வாரி இறைப்போம்... ஆடியென்ஸுக்கு சாக்லேட் குடுப்போம்.."

இப்படியெல்லாம் நீங்க செஞ்சிருப்பீங்க.. இல்லை பாத்திருப்பீங்க.. ரசிச்சிருப்பீங்க... இதையெல்லாம் மத்தவங்களோட ஷேர் பண்ணிக்கிட்டா தானே மனசு ஜாலியா ரெக்கை கட்டி பறக்கும்... இதையெல்லாம் நண்பர்கள் கிட்டே சாயங்காலம் சொல்லியிருப்பீங்க.. ராத்திரி தூக்கம் வராம இதையே நெனச்சு சந்தோஷப் பட்டுக்கிட்டே மனசு அசை போட்டுக்கிட்டு தூக்கம் வந்தது தெரியாமல் தூங்கியிருப்பீங்க..

இதையெல்லாம் மத்தவங்களும் அனுபவிக்க வேண்டாமா...

வாங்க... நடிகர் திலகத்தின் படத்தை ரசிகர்களோட தியேட்டரில் ஜாலியா படம் பார்த்தது அந்தக் காலத்தில் சுவையான அனுபவம் என்றால் அதை மற்றவர்களோட பகிரந்து கொள்ளும் போது அது இன்னும் சூப்பராச்சே...

அதையெல்லாம் இங்கே எழுதுவோம்..

அது மட்டுமா... அவரோட அரசியல்லேயும் உங்களில் சிலர் பங்கெடுத்திருக்கலாம்.. அது பழைய காங்கிரஸாயிருந்தாலும் சரி, இந்திரா காங்கிரஸாயிருந்தாலும் சரி, த.மு.மு. வா இருந்தாலும் சரி.. எப்படியெல்லாம் அவருக்காக உழைச்சிருக்கீங்க... எப்படியெல்லாம் அவர் நினைப்பு உங்களை ஆட்டிப் படைக்குது...

இதையெல்லாம் இங்கே ஷேர் பண்ணிக்குவோமே..

மெயின் திரியில் படங்களோட அனாலிஸிஸ்... ம்ம்.. அது பாட்டுக்கு போயிட்டே இருக்கும்.. தனிக்காட்டு ராஜா.. அதை யாரும் அசைக்கமுடியாது... என்னைக்குமே அது முதலிடம் தானே...

இங்கே நாம நம்ம அனுபவங்களையும் நினைவுகளையும் அசை போடுவோமே...

என்ன ... நான் சொல்றது...

RAGHAVENDRA
24th March 2014, 01:12 AM
உங்களை சொல்லிட்டு நான் சும்மாயிருக்க முடியுமா...

ஆரம்பிச்சுடுவோமே..

http://img688.imageshack.us/img688/9646/bharathavilas.jpg

திரைப்படப் பாடலும் தேசிய கீதமாகலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழும் பாடல் இந்திய நாடு என் வீடு. இந்த திரைத் தேசிய கீதம் இடம் பெற்ற பாரத விலாஸ், கப்பலோட்டிய தமிழன், ஒரு வீர பாண்டிய கட்டபொம்மன் போன்ற திரைக்காவியங்களுக்கு சற்றும் குறையாத புனிதத் தன்மை வாயந்ததாகும். சொல்லப் போனால் முந்தையவை விடுதலை வேள்வியின் பிரதிபிம்பங்கள் என்றால் பின்னது அவற்றின் காவல் தேவதை எனலாம். பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காக்கவும் நடிகர் திலகத்தின் படங்கள் பாடம் சொல்கின்றன. அவற்றில் நாம் பிறந்த மண், பாரத விலாஸ், புண்ணிய பூமி போன்றவை குறிப்பிடத் தக்கவை.

அப்படிப் பட்ட பாரத விலாஸ் வெளியாகி 41 ஆண்டுகள் நிறைவுற்று 42வது ஆண்டில் நுழையும் நாள் மார்ச் 24, 2014. இன்றைக்கு சரியாக 41 ஆண்டுகளுக்கு முன்னர் மார்ச் 24, 1973 அன்று வெளியான போது நாடு இருந்த நிலைமைக்கும் இப்படம் பொருந்தியது. மக்களிடம் பெரும் வரவேற்புப் பெற்றது. தாய்மார்களின் அளப்பரிய ஆதரவோடு வெற்றி நடைபோட்டது. இன்றைக்கும் இப்படம் இன்றைய சமுதாயத்திற்கு பொருந்தி வருவதைப் பார்க்கும் போது இந்த படைப்பாளிகளின் தீர்க்கதரிசனம் புலனாகிறது.

மலேசியா வாசுதேவன் மெல்லிசை மன்னரின் இசையில் முதலில் பாடிய பாடல் இந்திய நாடு என் வீடு.

முன்னணி நட்சத்திரங்கள், கேரளத்தின் மது, களி தெலுங்கின் அக்கினேனி நாகேஸ்வரராவ், வட இந்தியாவின் சஞ்ஜீவ் குமார் என தேசிய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தும் வண்ணம் இவர்களெல்லாம் பங்கேற்ற சிறந்த தேச பக்திச் சித்திரம் பாரத விலாஸ்.

நூறு நாட்களுக்கு மேல் வெற்றி நடை போட்டு வசூலிலும் வாரிக்குவித்த உன்னதத் திரைக்காவியம் பாரத விலாஸ்.

http://youtu.be/kG2Get7rZuU

வழக்கம் போல ரசிகர்களின் கோபத்தை சம்பாதித்து வெளியான படம் பாரத விலாஸ். அடுத்த வாரம் ராஜ ராஜ சோழன் ரிலீஸுக்கு மும்முரமாக எல்லோரும் ஆவலோடு காத்திருக்க ஒரு வாரம் முன்னாலேயே வெளியாகிறது என்கிற அறிவிப்பு கடுப்பேற்றியது. அவ்வளவு பெரிய படத்திற்கு வரவேற்பு தரத் தயாராகும் போது இதனுடைய வெளியீடு நம்மில் சிலருக்கு [பலருக்கு ?] கோபம் வந்தது உண்மை. அந்த கோபத்தோடு படம் பார்க்கப் போனோம். இதற்குள் அரசல் புரசலாக ராஜ ராஜ சோழனைப் பற்றிய விமர்சனங்களும் நம் நண்பர்கள் சிலர் மூலமாக தெரிய வந்து விட்டது. நம்முடைய வீக்னெஸ் எல்லாம் தலைவருக்கு நல்லா தெரியுமே.. இந்த பிள்ளைங்கெல்லாம் வெளியே எவ்வளவு கோபமாயிருந்தாலும் உள்ளே நம்மளைப் பார்த்தா அவ்வளவு தான் னு நல்லா தெரிஞ்சில்லே வெச்சிருக்கார்... சக்கை போடு பாட்டு வந்த வுடனே அத்தனை பேரும் FLAT... அதுவும் வந்தே மாதரம் என்று சொல்லிக் கொண்டே நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு துடிப்பார் பாருங்கள்.. அவ்வளவு தான்... தலைவா.... என்று ஏகோபித்த குரல் எல்லா திசையிலும்... [ நாங்கள்லாம் அப்பவே அப்படி] பாட்டு முடியும் முன் வரை சஞ்சீவ் குமார், மது, நாகேஸ்வர ராவைப் பற்றி விவாதித்த அத்தனை உதடுகளும் கப் சிப்... அதுவும் பசங்கள்லாம் வளர்ந்த நிலையில் ஒருத்தர் வந்தார் பாருங்க... தியேட்டரே ரெண்டாயிடுச்சி... வேறெ யாரு.. வயசான ரோல்லே தலைவரு தான்..

ஆரம்பத்திலேருந்தே கோபாலுக்கு ஒரு தனி வரவேற்பு தான்.. அது இன்னைக்கு வரைக்கும் குறைய மாட்டேங்குது.. பேசாம நம்ம பேரை கோபால்னு வீட்லே வெச்சிருந்திருக்கலாமோ..

எனிவே... படம் முடிஞ்சி வெளியே வரும் போது பசங்க முகத்தைப் பாக்கணுமே... சேப்பாக் ஸ்டேடியத்திலே டே நைட் மேட்சிலே வீசும் ஒளியை விட பிரகாசம்னா பாருங்களேன்.

மறக்க முடியுமா...

நீங்களும் தான் எழுதுங்களேன்...

Murali Srinivas
26th March 2014, 01:31 AM
ராகவேந்தர் சார் அவர்கள் நமது நடிகர் திலகம் பற்றிய Forum -ல் ஓபனிங் ஷோ அனுபவங்களைப் பற்றிய வர்ணனை முதல் நாள் படம் பார்த்த அனுபவங்கள் ஆகியவற்றை ஒரு தனி திரியாக தொடங்கியிருப்பது நன்று. ரசிகர்கள் குறிப்பாக பழைய ரசிகர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். மார்ச் 24-ந் தேதி (1973) பாரத விலாஸ் படத்திலிருந்து ஆரம்பித்திருப்பது சிறப்பு பாரத விலாஸ் படத்திற்கு வருவதற்கு முன் வேறு ஒரு விஷயம் குறிப்பிட விரும்புகிறேன். சில வருடங்களுக்கு முன் அந்த நாள் ஞாபகம் என்ற தலைப்பில் என் ஓபனிங் ஷோ அனுபவங்களைப் பற்றி எழுதினேன். அதை மீள் பதிவாக மீண்டும் பதிவிட எண்ணம் அந்த மீள் பதிவு தொடர் முடிந்தவுடன் அடுத்த படத்திற்கு வருகிறேன். இதனிடையில் மற்றவர்களும் தங்கள் அனுபவங்களை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

2009-ல் எழுதியது.

அந்த நாள் ஞாபகம்

இன்றைக்கு சரியாக 37 வருடங்களுக்கு முன் [1972] இதே நாளில் ராஜா திரைப்படம் வெளியானது. இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அந்த நாளில் ஜனவரி 26 அன்று [26.01.1972] நான் இந்த படம் மதுரை சென்ட்ரலில் ஓபனிங் ஷோ பார்த்துக் கொண்டிருந்தேன். இதை பற்றி சிந்திக்கும் போது நண்பர் tacinema அவர்கள் நினைவு வந்தது

நண்பர் tacinema என்னிடம் பல முறை அந்த நாட்களில் நான் பார்த்த நடிகர் திலகத்தின் படங்களின் ஓபனிங் ஷோ பற்றிய செய்திகளை எழுதுங்கள் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். நானும் இதோ இதோ என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். இப்போது எழுதலாம் என்று ஒரு எண்ணம். எந்தளவுக்கு நினைவுக்கு கொண்டு வர முடியும் என்று தெரியவில்லை. அந்த ஞாபக நதிக் கரையோரமாக நடந்து பார்க்கும் ஒரு சிறு முயற்சியே இது.

அதற்கு முன்பு, இதன் முன்னோட்டமாக ஒரு சில விஷயங்கள். என்னிடம் அநேகம் பேர் (குறிப்பாக நமது ஹப்பர்கள்) கேட்ட கேள்வி "நீங்கள் ஆரம்பத்திலிருந்தே சிவாஜி ரசிகரா? இல்லை கன்வர்ட்டா". நான் சொல்லும் பதில் " நான் மதம் மாறியவன் இல்லை". அவர்கள் கேட்ட கேள்வியின் பின்னணியை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது. அதாவது சிறு வயதில் அனேகமாக எல்லா பாய்ஸும் சண்டை, காமெடி என்ற விஷயங்களில் தான் அதிகமாக ஈர்க்கப்படுவார்கள். அப்படியிருக்க நீங்கள் எப்படி மாறுபட்டு போனீர்கள் என்ற அர்த்தத்தில் கேட்டார்கள். இதைப் பற்றி யோசித்த போது இரண்டு காரணங்கள் புலப்பட்டன. External and Internal influences. அக மற்றும் புற காரணங்கள் என்று சொல்லலாம். புற காரணம், சிறு வயதில் நான் பார்த்த அல்லது நான் பார்க்க அழைத்து செல்லப்பட்ட படங்கள் பெரும்பான்மையானவை நடிகர் திலகத்தின் படங்களே. வாழ்க்கையில் முதலில் பார்த்த படம் தெய்வப்பிறவி (அம்மா சொல்லி தெரிந்துக்கொண்டது). பின்னர் நினைவு இடுக்குகளின் சேகரத்தில் முதலில் ஞாபகம் இருப்பது அன்னை இல்லம் பார்த்தது. [நடையா இது நடையா பாடல் ஞாபகம் இருக்கிறது], பிறகு மதுரை தங்கத்தில் மக்கள் வெள்ளத்தில் அம்மா கையை பிடித்துக்கொண்டு கர்ணன் பார்க்க போனது, முரடன் முத்து பார்த்தது [சிவாஜி கோபித்து கொள்ளும் ஒரு காட்சி மட்டும் நினைவில் நிற்கிறது], அடுத்தது எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த மாஜிஸ்ட்ரேட் செல்வாக்கால் ஸ்ரீதேவி தியேட்டரில் மணிக்கணக்காய் வரிசையில் நின்றிருந்த மக்கள் வெள்ளம் எங்களை பொறாமையுடன் முறைக்க போலீஸ் எஸ்கார்ட் சகிதம் நாங்கள் திருவிளையாடல் பார்க்க போனது, கல்பனா திரையரங்கில் மோட்டார் சுந்தரம் பிள்ளை பார்த்தது, பிறகு சரஸ்வதி சபதம், செல்வம், கந்தன் கருணை, நெஞ்சிருக்கும் வரை, திருவருட்செல்வர் என்று பார்த்ததில் பெரும்பான்மையானவை நடிகர் திலகத்தின் படங்களே. இந்த காலக்கட்டத்தில் நான் பார்த்த ஒரே எம்.ஜி.ஆர் படம் எங்க வீட்டு பிள்ளை. அக காரணம் என்று நான் குறிப்பிட்டது என்னை சுற்றி இருந்த சுற்றத்தார். அது தந்தை வழியாக இருந்தாலும் சரி, தாய்வழி சுற்றமானாலும் சரி, பெரும்பான்மையோர் நடிகர் திலகத்தின் ரசிகர்களாகவே இருந்தார்கள். அவர்கள் நடிகர் திலகத்தின் பழைய படங்களை பற்றி, அதில் நடிகர் திலகத்தின் நடிப்பைப்பற்றி, அவரின் ஸ்டைல் பற்றி நிறைய சொல்லுவார்கள். அதை கேட்டு கேட்டு மனதில் அவரின் ஆளுமை பதிந்து போனது. ஆக, இது போன்ற அகம் மற்றும் புற காரணங்களால் நடிகர் திலகம் ரசிகனாகி விட்டேன். இந்த விஷயங்களுக்கும் ஓபனிங் ஷோ பற்றிய செய்திகளுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழலாம். அதற்கு வருகிறேன்.

இந்த காலக்கட்டத்திலேதான் ஓரளவிற்கு விவரம் புரிய ஆரம்பித்த நேரம் என்று சொல்ல வேண்டும். அந்த வருடம் தீபாவளி திருநாள் வருகிறது. வீட்டிலிருந்து மாலை காட்சிக்கு அனைவரும் சென்ட்ரல் சினிமாவிற்கு ஊட்டி வரை உறவு பார்க்க போகிறோம். அதற்கு முன் கூட்டம் பார்த்திருந்தாலும் கூட அது போல ஒரு கூட்டத்தை அன்று தான் பார்த்தேன். எவ்வளவு முயற்சி செய்தும் டிக்கெட் கிடைக்கவில்லை. பக்கத்தில் நியூ சினிமாவில் இரு மலர்கள் அங்கே போகலாம் என்று ஒருவர் சொல்ல அங்கே செல்கிறோம். அங்கே ஏற்கனவே ஹவுஸ் புல். கடைசியில் கல்பனா தியேட்டருக்கு போய் "நான்" திரைப்படம் பார்த்தோம். ஊட்டி வரை உறவு மற்றும் இரு மலர்கள் படத்திற்கு வந்த கூட்டம் என் மனதில் முதல் நாள் முதல் ஷோ ஆசையை விதைத்து விட்டது. ஆனால் அதை அப்போது நான் உணரவில்லை.

(தொடரும்)

அன்புடன்

gkrishna
26th March 2014, 03:02 PM
அன்புள்ள ராகவேந்தர் மற்றும் முரளி சார்
முதல் நாள் நம்மவர் பட அனுபவம் பல நினைவலைகளை தோற்றுவித்தது. நமது பாரதவிலாச் படம் நெல்லையில் சென்ட்ரல் திரை அரங்கில் பார்த்த நினவு கண் முன் காட்சி அளிகிறது மார்ச் 24 சென்ட்ரல் திரை அரங்கில் பாரத விலாஸ்
மார்ச் 31 நெல்லை பூர்ணகல திரை அரங்கில் ராஜா ராஜா சோழன் சினிமாஸ் ஸ்கோப் இரண்டும் முதல் நாள் இரண்டாவது காட்சியில் பார்த்தது அப்போது எல்லாம் தினசரி 3 காட்சிகள் சனி மற்றும் சண்டே நாட்களில் தான் காலை காட்சி.
அன்று காலை காட்சி பார்த்த அனைவரும் தலைவரின் "சக்கை போடு" பாடலை பற்றி மற்றும் "இந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு எல்லா ஊரும் என் ஊரு எல்லா மக்களும் என் மக்கள்" பாடலைபற்றி பேசி கொண்டே வெளி வந்தனர் அதில் ஒரு ரசிகர் அந்த பாடலில் பெருந்தலைவர் படத்தை காண்பித்தால் நன்றாக இருந்து இருக்கும் என்று கூறியது இன்னும் பசுமையாக நினிவுக்கு உள்ளது . மேலும இந்த ் படம ் நன்றாக உள்ளது இந்த படத்தின் வெற்றியினால் சோழன் பாதிகப்பட கூடாது என்றும் பேசி கொண்டே சென்றனர் மார்ச் 25 சண்டே ஒரு நெருங்கிய உறவினர் திருமணத்திற்கு சேலம் செல்ல வேண்டி இருந்தது.
மார்ச் 24 நெல்லையில் சென்ட்ரல் திரை அரங்கில் பார்த்து விட்டு இரவு பஸ் பிடித்து சேலம் சென்று மறு நாள் இரவு காட்சி பாரத விலாஸ் திரை படத்தை சேலம் ஜெயாவில் பார்த்தேன். திருமணத்திற்கு முன் தினம் இரவு தாம்பூல கவர் போதுவது என்ப்து முன்னாட்களில் வழக்கம் இப்போது எல்லாம் கோன்றக்ட்தான் அந்த வேலையை முடித்துவிட்டு கல்யாண மண்டபத்தில் இருந்து பஸ் பிடித்து சேலம் ஜெயா திரை அரங்கு சென்று பாரத விலாஸ் படம் பார்த்தது எல்லோரும் நடிகர் திலகத்தின் நடிப்பை பாராட்டியது மறக்க முடியாத அனுபவம்

RAGHAVENDRA
27th March 2014, 11:42 PM
http://i0.wp.com/kollytalk.com/posters/wp-content/uploads/2013/11/Thanga-Surangam-Releasing-Soon.jpg?resize=390%2C354

ஹா...ஹா...ஹா... நான் ஜேம்ஸ்பாண்டாம்... இந்த மாபெரும் வெற்றிப் படத்தைப் பற்றிய நடிகர் திலகத்தின் விமர்சனம் இது. தலைவா... ஜேம்ஸ் பாண்ட் மட்டுமல்ல உலகத்தின் எந்த கமர்ஷியல் ஃபிக்ஷன் ஹீரோவானாலும் சரி, க்ளாஸிகல் ஃபிக்ஷன் ஹீரோவானாலும் சரி, எந்த எபிக் ஹீரோவானாலும் சரி, எந்த ஹிஸ்டாரிகல் ஹீரோவானாலும் சரி, எந்த ஹல்லூசினேடிவ் ஹீரோவானாலும் சரி... எந்த பாத்திரமானாலும் அதற்கு ஜீவன் தர உங்களைத் தவிர வேறு யார் உளர்.
மிஸ்டர் எக்ஸுடன் கை குலுக்கும் காட்சியில் தாங்கள் காட்டும் ஸ்டைல் தமிழ் சினிமாவில் அதுவரையில் யாரும் பார்த்திராதது, அதற்குப் பிறகு யாரும் செய்ய முடியாதது.
திரையரங்குகளில் கடைசிக் காட்சி வரை அரங்கு நிறைந்து ஓடி தங்களுடைய அடுத்த படத்திற்காக வழிவிட்டு ஒதுங்கி நின்று எங்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்ட மாபெரும் வெற்றிக் காவியமான தங்க சுரங்கம் திரைப்படத்தை மறக்க முடியுமா..
பள்ளியில் முழுத் தேர்வு நடைபெற்ற நிலையிலும் பரீட்சையைப் பற்றிய கவலை கொள்ளாமல், சாந்தியில் டிக்கெட் கிடைக்குமா என்ற கவலையே அதிகம் கொண்டு, அரங்கில் குளிரக் குளிர குளிர் சாதனத்தையும் மீறு தங்கள் பெயரைப் பார்த்த வுடன் குதித்த குதியில் உடம்பெல்லாம் வியர்த்ததை மறக்க முடியுமா.
1969 மார்ச் 28 .... தங்க சுரங்கம் வெளியாகி இன்று 2014 மார்ச் 28ம் நாளுடன் 45 ஆண்டுகள் முடிகின்றன.
அது சரி முதல் நாள் முதல் காட்சியில் அதிகம் கைதட்டல் வாங்கிய பாடல் எது எனத் தெரிய வேண்டுமா ...
இதோ பாடலையே பாருங்களேன் ...

http://youtu.be/TojrKH2x7lo

RAGHAVENDRA
27th March 2014, 11:49 PM
முரளி சார்
முதல் நாள் முதல் காட்சி அனுபவத்தை மிகச் சிறப்பாக எழுதி அசத்தி விட்டீர்கள்.. எழுத்தாற்றல் தங்களுக்கு ஏராளம்.. நினைவாற்றலோ தாராளம்...
தங்களுடைய ரசிகர் பட்டாளத்தின் எல்லைக் கோட்டை நாங்களெல்லாம் அழித்து விட்டோம்... அதற்கு பௌண்டரி கிடையாது. அந்தக் காலத்தில் 70களில் சென்னை மெரினா கிரௌண்டில் லீக் மேட்ச் நடக்கும். ஐஓபி ரமேஷ் என ஒரு கிரிக்கெட்டர் ஆடுவார். காடா என செல்லமாக அழைக்கப் படும் அதிரடி ஆட்டக்காரர். மெரினா கிரௌண்டில் அவர் ஆடுகிறார் என்றால் மைதான நிர்வாகி குறைந்த பட்சம் ஒரு டஜன் பந்துகளாவது ஸ்டாக் வைத்திருப்பார். காரணம் ரமேஷின் சிக்ஸர்கள் கேலரியைத் தாண்டி பின்னால் இருக்கும் கால்வாயில் போய் விழும். அது போல் தங்களுடைய ரசிகர் பட்டாளத்திற்கு கோடு போட்டால் அதைத் தாண்டி பல தூரம் விரிவாக்கும் திறன் தங்களுடைய எழுத்துக்கு உள்ளது.

தொடருங்கள்.

RAGHAVENDRA
27th March 2014, 11:50 PM
டியர் கிருஷ்ணா ஜி
முதல் நாள் முதல் காட்சி தங்களைக் கவர்ந்திழுத்துள்ளது மிகவும் மன மகிழ்ச்சியைத் தருகிறது. இதைப் போல் தாங்களும் நம் மற்ற நண்பர்களும் பல படங்களுக்கு சுவையான அனுபவங்களை சந்தித்திருப்பீர்கள். அவற்றையெல்லாம் தொடர்ந்து எழுதுங்கள். பாராட்டுக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்

RAGHAVENDRA
31st March 2014, 08:49 AM
நமது மய்யத்தில் சமீபத்தில் இணைந்த மதுரை சந்திரசேகர் அவர்களின் பேட்டி தலைவன் சிவாஜி இணைய தளத்தின் சிவாஜி குரல் இணைய இதழில் வெளிவந்துள்ளது. அதன் நிழற்படம் நம் பார்வைக்கு

https://docs.google.com/viewer?url=http%3A%2F%2Fwww.thalaivansivaji.com%2F wp-content%2Fuploads%2F2014%2F03%2Fmarch-30.pdf&docid=09b4e4baa22ef1bb02adf603e29f0413&a=bi&pagenumber=2&w=844

நமது நண்பர் சந்திரசேகர் அவர்கள் இது பற்றி இன்னும் விரிவாக தன் நினைவகளை இங்கே பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

Murali Srinivas
31st March 2014, 07:56 PM
மீள் பதிவு தொடர்

அந்த நாள் ஞாபகம்

அதற்கு பிறகு வரிசையாக நடிகர் திலகம் படங்களை பார்க்க ஆரம்பித்தேன். திருமால் பெருமை, கலாட்டா கல்யாணம் போன்றவைக்கு பிறகு பார்த்த என் தம்பி அந்த அடி மனதில் இருந்த ஆசையை வெளிக்கொண்டு வந்தது. காரணம் அதில் இடம் பெற்ற தெருக்கூத்து பாடல். அதில் நடித்து கொண்டிருக்கும் நடிகர் திலகம் பாடுவதாக அமையும்

தெற்கத்தி கள்ளனடா

தென் மதுரை பாண்டியனடா

தென்னாட்டு சிங்கம்டா

சிவாஜி கணேசனடா !

நான் பார்த்தது மூன்றாவது நாள். அப்போதே தியேட்டரில் எழுந்த ஆரவாரம் அளவிட முடியாதது. அப்படியென்றால் ஓபனிங் ஷோ எப்படியிருந்திருக்கும்? என்ற எண்ணம் தோன்றியவுடன், அப்படிப்பட்ட ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும் என்று மனது ஆசைப்பட ஆரம்பித்தது. அடுத்தது தில்லானா முதல் நாள் கூட்டம் அந்த ஆசையை அதிகரித்தது. அடுத்து வந்த எங்க ஊர் ராஜா, லட்சுமி கல்யாணம் மற்றும் உயர்ந்த மனிதன் இவை எல்லாமே முதல் வாரத்தில் பார்த்தேன் என்றாலும் ஓபனிங் ஷோ ஆசை நடக்கவில்லை. இவ்வளவு ஏன் ஓபனிங் டே கூட பார்க்க முடியவில்லை. காரணம் சிறு வயது + கூட்டம் அதிகமாக இருக்கும்.அதனால் வேண்டாம் என்ற வீட்டார் முடிவு.

அடுத்த காலண்டர் வருடம் [1969] ஆரம்பம். ஜனவரி 1 அன்றே அன்பளிப்பு ரிலீஸ். ஆனால் வழக்கம் போல் மூன்றாவது நாள் தான் பார்த்தேன். அடுத்தது தங்க சுரங்கம் மார்ச் மாதம். Annual எக்ஸாம் டைம். எனவே பார்க்க முடியவில்லை. தொடர்ந்து காவல் தெய்வம், குருதட்சணை, அஞ்சல் பெட்டி 520, நிறை குடம் எல்லாம் முதல் வாரம் ஆனால் முதல் நாள் கிடையாது. அடுத்து தெய்வ மகன் ரிலீஸ் செப் 5 அன்று. வழக்கம் போல் மூன்றாவது நாள் ஞாயிற்றுக்கிழமை. [இந்த மூன்றாம் நாளின் காரணம் என்னவென்றால், நாங்கள் ஆரப்பாளையத்தில் குடியிருந்தோம். சனிக்கிழமை மதியம் [ஹாப் டே ஸ்கூல்] டவுனில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு போவேன். ஞாயிறு மாலை வரை அங்கே வாசம். பிறகு திரும்பி ஆரப்பாளையம். எனவே படங்கள் சனிக்கிழமை மாலை,இரவு அல்லது ஞாயிறு காலை, மதியம் இதில் ஏதாவது ஒரு காட்சி என்னை என் கஸின் கூட்டிக்கொண்டு போவான்]. அடுத்த ஒரு மாதத்தில் திருடன் ரிலீஸ். அதுவும் அப்படியே.

இந்த நிலையில் தீபாவளி வருகிறது. எல்லோரும் வெகு ஆவலாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் சிவந்த மண் வெளியாகப் போகிறது. படத்தை பற்றி ஏராளமான செய்திகள்.

எக்கச்சக்க எதிர்பார்ப்புகள். பாடல்கள் ரெகார்ட் வெளி வந்துவிட்டது. அது வரை எந்த தமிழ் படத்தின் பாடலுக்கும் செய்யாத வகையில் பட்டத்து ராணி பாடலுக்குத்தான் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டது என்ற உற்சாக செய்தி உலவிக்கொண்டிருக்கும் போது மற்றொரு செய்தி வருகிறது. தீபாவளிக்கு வெளியாகும் நம் நாடு படத்தில் இடம் பெறும் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் பாடலுக்கு அதிகமான இசைக்கருவிகள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன என்ற செய்தி. வழக்கம் போல் இரு தரப்பு ரசிகர்களும் வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட, எங்கே திரும்பினாலும் ஒரு பக்கம், ஒரு ராஜா ராணியிடம் மற்றும் பட்டத்து ராணி பாடல்கள் ஒலிப்பெருக்கியில் முழங்க, மற்றொரு பக்கம் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நானும், வாங்கய்யா வாத்தியாரய்யாவும் அலற, மதுரையே குலுங்குகிறது.

நவம்பர் 7 வெள்ளி, நம் நாடு ரிலீஸ். மறுநாள் 8ந் தேதி தீபாவளி. 9ந் தேதி ஞாயிறன்று சிவந்த மண் ரிலீஸ். தீபாவளியன்று மாலை தாத்தா வீட்டிற்கு வந்தாகி விட்டது. அன்று மாலையே படம் ரிலீஸ் ஆகும் சென்ட்ரல் தியேட்டர் முன்னாள் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள். படத்தை பற்றிய பல்வேறு செய்திகளை பேசிக்கொண்டு நிற்கிறார்கள். மறு நாள் காலை விடிகிறது. எப்படியிருந்தாலும் படம் பார்க்க முடியாது. ஆனால் தியேட்டர் எப்படியிருக்கிறது என்று பார்க்க காலை 7.45 மணிக்கே நானும் என் கஸினும் போகிறோம். மேல மாசி வீதியில் இருந்த வீட்டிலிருந்து தட்டாரச் சந்து வழியாக கோபால கொத்தன் தெருவில் வலது பக்கம் திரும்பி சென்றால் சென்ட்ரல் சினிமாவை அடையலாம். தியேட்டருக்கு எதிரே ரத்தினசாமி லாட்டரி கடை அருகே நிற்கிறோம். 10.30 மணிக்கு ஆரம்பமாக போகும் காட்சிக்கு அந்த நேரத்திலேயே கட்டுங்கடங்காத மக்கள் வெள்ளம். படத்தின் பானர் தியேட்டர் வாசலில் வைக்கப்பட்டு விட்டது. பட்டத்து ராணி பாடலில் வரும் அரபி ஷேக் வேடத்தில் சாட்டையுடன் நிற்கும் நடிகர் திலகத்தின் கட் அவுட் மிகப்பெரிய மாலையை தாங்கி நிற்கிறது. அந்த நேரத்திலேயே கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் லாட்டி வீசுகிறது. அந்த இடத்தை விட்டு விலக மனமில்லாமல் விலகி வருகிறோம். மாலை வீட்டுக்கு திரும்பி போக வேண்டும். மாலை 5 மணி அளவில் என்னை சைக்கிளில் வைத்து கஸின் தியேட்டர் வழியாக கூட்டி போகிறான். காலையில் பார்த்ததை விட அதிகமான மக்கள் வெள்ளம். தியேட்டர் வாசலில் ஆரம்பித்து டெல்லி வாலா ஸ்வீட் ஸ்டால் வரை ஒரு வரிசை. மற்றொன்று அதே போல் கவுண்டரில் ஆரம்பித்து டவுன் ஹால் ரோடு திரும்பி மீண்டும் மேல அனுமந்தராயன் கோயில் தெருவில் திரும்பி பின்னால் திண்டுக்கல் ரோடு வரை நிற்கிறது. மற்றொரு வரிசை தியேட்டர் வாசலில் ஆரம்பித்து, டவுன் ஹால் ரோடு ஸ்போர்ட்ஸ் சாதனங்கள் விற்கும் பாப்லி பிரதர்ஸ் கடை தாண்டி, பாட்டா வையும் கடந்து, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கடையையும் தாண்டி, மேல மாசி வீதி திரும்பி அதே சென்ட்ரல் சினிமாவின் பின்புற கேட் இருக்கும் சந்து வரை நீண்டு நின்றது.[மதுரை தெரிந்தவர்களுக்கு நான் சொல்வதன் மூலம் எந்தளவிற்கு கூட்டம் இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடியும்].இன்றும் மனக்கண் முன்னே அந்த காட்சி அப்படியே நிற்கிறது. படமே ஞாயிறன்றுதான் ரிலீஸ் என்பதால் அடுத்த வாரம் ஞாயிறுதான் பார்க்க முடிந்தது.

(தொடரும்)

அன்புடன்

gkrishna
2nd April 2014, 11:11 AM
முரளி சார்
நம்நாடு மற்றும் சிவந்தமன்
நினவு அலைகள் சூப்பர்
நெல்லை பார்வதியில் நம்நாடு 7த ரிலீஸ்
நெல்லை சென்ட்ரலில் சிவந்தமன் ரிலீஸ்
சிவந்த மண் முதல் ஷோ முடிந்த உடன் அப்போது மாற்று
முகாம் நண்பர்கள் வந்து வாயில் blade வைத்து ஊதி நம் ரசிகர்கள் இருவர் முகத்தில் பாய்ந்து ரதகளறி ஆனது இன்னும் நினைவில் உள்ளது அப்போது நெல்லை மாவட்ட ரசிகர் மன்ற தலைவர் ஆக இருந்த போஸ் என்பவர் பெயரே சிவந்த மண் போஸ் என்று தான் பெயர் அப்போது கல்லூரி படித்த ு
கொண்டு இருந்தார்
அவரை போலீஸ் பிடித்து கொண்டு சென்று விட்டது பாலம் போலீஸ் ஸ்டேஷன் என்று இப்போது பெயர் அப்போது நெல்லையில் ஈரடுக்கு மேம்பாலம் கிடையாது அதனால் அதன் பெயர் ஜங்ஷன் போலீஸ் ஸ்டேஷன் ஸ்தாபன காங்கிரஸ் தலிவர் ஒருவர் கூட வரவில்லை ஜாமீன் எடுக்க. அப்போது என் வயது 9 முடிந்து 10 ஆரம்பம் சிறுவர்கள நாங்கள் (10 முதல் 16 வரை உள்ளவர்கள்) எல்லாம் போலீஸ் ஸ்டேஷன் சென்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தது எல்லாம் நினிவில் உள்ளது அந்த ப்ளடி பார்ட்டி இருவரும் பின்னாளில் அ தி முக அரம்பிந்தவுடன் தி மு கவில் இருந்து பிரியாமல் தி மு க வில் தங்கி விட்டனர்

Gopal.s
3rd April 2014, 11:28 AM
முரளி,

அருமை.தொடருங்கள். உங்களுடன் மதுரையில் சிறு வயதை கழித்த உணர்வை தரும் இதம்.(உங்களோடு தற்போது நட்பாக இருப்பது இதமா என்பது வேறு விஷயம்)

Murali Srinivas
5th April 2014, 01:16 AM
கிருஷ்ணாஜி,

உங்கள் அனுபவங்களை எளிமையாக ஆனால் அதே நேரத்தில் சுவையாக எழுதுகிறீர்கள். தொடருங்கள்.

கோபால் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி!

அந்த நாள் ஞாபகம்

இப்படியாக 1969 முடிந்து 1970 ஆரம்பித்தது. நாட்கள் செல்ல செல்ல இந்த ஆசையும் அதிகரித்தது. பொங்கலன்று (ஜனவரி 14 ) எங்க மாமா ரிலீஸ். இந்த படத்தையாவது முதல் நாள் பார்க்க வேண்டும் என்று நானும் என் கஸினும் முடிவு செய்தோம். எங்களுக்கு வசதியாக எங்க மாமா தங்கம் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. ஆசியாவின் மிகப பெரிய அரங்கமானதால் டிக்கெட் கிடைப்பதில் பிரச்சனை இல்லை. வீட்டில் ஒரு வாரத்திற்கு முன்பே சொல்லி, சொல்லி ஒரு சின்ன வாக்குறுதி வாங்கினோம். முதல் நாள் இரவு மறுபடியும் தடை. "பொங்கலன்னிக்கு சினிமா தியேட்டருக்கு போய் உட்காருவாங்களா? வேண்டாம்". மறுபடியும் பேசி, பேசி ஒரு வழியாக நைட் ஷோ போகலாம் என்று முடிவானது. பொங்கலை விட டைம் எப்போது நைட் ஆகும் என்பதிலேயே இருந்தது. ஒரு வழியாக போய் டிக்கெட் வாங்கி உள்ளே நுழையும் வரை நம்பிக்கை இல்லை.

தியேட்டருக்குள் நுழைந்து காலை உள்ளே வைத்தால் ஏதோ குவியலுக்குள் கால் வைப்பது போல தோன்றியது. குனிந்து பார்த்தால் காகித குவியல். ஒரு வழியாக உள்ளே போய் உட்கார்ந்தோம். படம் ஆரம்பித்த போது பயங்கர த்ரில் மனதில். பொதுவாக முதலில் படத்தில் டைட்டில் வரும். பிறகு நடிகர் திலகத்தை காட்டுவார்கள். ஆனால் எங்க மாமா படத்தில் முதலில் நடிகர் திலகம் வருவார். அதன் பிறகே டைட்டில் ஓட ஆரம்பிக்கும் அவர் முகத்தை திரையில் காண்பித்தவுடன் திரையே தெரியாத அளவுக்கு பேப்பர்மாரி பொழிந்தது. கைதட்டல் காதை கிழித்தது. ஒரு விதமான பிரமிப்புடன் இதை பார்த்துக் கொண்டிருந்தோம். நான் தன்னந்தனி காட்டு ராஜா. சொர்க்கம் பக்கத்தில் பாடல்களில் வரும் ஸ்டைல்களுக்கு ஆரவாரம் என்றால், செல்லக்கிளிகளாம் பள்ளியிலே பாடலில் அந்த இந்த இளமையான க்ளோஸ் அப் காட்சிக்கு செம அப்ளாஸ்.

என்னங்க சொல்லுங்க பாட்டுக்கு மறுபடியும் அலப்பறை. ஆனால் மொத்த தியேட்டரும் ஆர்ப்பரித்தது எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் பாடலில் நடிகர் திலகம் கண்களில் கண்ணீரை அடக்கி கொண்டு பாடும் அந்த நடிப்புக்கே. இது தவிர அன்றைய சூழலை ஒட்டி எழுதப்பட்ட சில வசனங்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. சண்டைக் காட்சிகளுக்கும் அது போல ஆரவாரம். மொத்தத்தில் படம் முடிந்து வரும் போது எதோ பெரிதாக சாதித்து விட்டது போல ஒரு பீலிங்.

அடுத்து விளையாட்டு பிள்ளை பிப் 6 வெள்ளிக்கிழமை ரிலீஸ். எனவே மறு நாள் நைட் ஷோ தான் பார்க்க முடிந்தது. வியட்நாம் வீடு ஏப்ரல் 11 அன்று ரிலீஸ். எக்ஸாம் நேரம். முதல் வாரம் தான் பார்த்தேன். அடுத்த படம் எதிரொலி ஜூன் 27 சனிக்கிழமை ரிலீஸ், அதே தங்கத்தில். அதற்கு நைசாக பேசி பெர்மிஷன் வாங்கி முதல் நாள் ஈவினிங் ஷோ பார்த்தோம். ஆனால் படமே சீரியஸ் கதை என்பதால் பெரிய அளவில் ரசிகர்கள் கொண்டாட முடியவில்லை. உங்க நல்ல மனதுக்கு ஒரு குறையுமில்லே பாடலுக்கு மட்டுமே ஆரவாரமான கைதட்டல்.

அடுத்த படம் ராமன் எத்தனை ராமனடி ஆகஸ்ட் 15 நியூசினிமாவில் வெளியானது. ஆனால் முதல் நாள் பார்க்க முடியவில்லை. மூன்றாவது நாள் திங்களன்று [என் நினைவு சரியாக இருக்குமானால் அன்று கோகுலாஷ்டமி அதனால் ஸ்கூல் லீவ்] பார்த்தேன். மூன்றாவது நாள் பார்க்கும் போதே முதல் நாள் போல தியேட்டர் சூழ்நிலை நிலவியது. சாப்பாட்டு ராமன் விஜயகுமாராக மாறும் சீன் தொட்டு அரங்கமே அதிர ஆரம்பித்தது. சத்ரபதி சிவாஜியாக நடிகர் திலகம் வசனம் பேசும் போது உச்சக்கட்ட அலப்பறை. அதிலும் "நான் அரசியல் தெரியாதவனா? அரசு வித்தைகள் புரியாதவனா?" என்ற வரிகளை பேசும் போது தியேட்டரில் எழுந்த உணர்ச்சிமயமான வாழ்க கோஷங்களும் (வேறு சில கோஷங்களும் எழுந்தன) இன்றும் நினைவில் நிற்கிறது.

இந்த நேரத்தில் முதன் முறையாக அந்த வருடம் அக்டோபர் 1 நடிகர் திலகத்தின் 42-வது பிறந்த நாளை மிக பெரிய அளவில் கொண்டாடுவது என்று அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றம் முடிவு செய்து, இரண்டு நாள் மாநாடாக அக்டோபர் 1 மற்றும் 2 தேதிகளில் சென்னையில் நடை பெற்றது. லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்ட அந்த மாநாட்டு செய்திகள் எல்லா ரசிகர்களுக்கும் மிக பெரிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. இதன் பின்னால் தீபாவளி திருநாள் அக்டோபர் 29 அன்று. ரசிகர்களுக்கு மேலும் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்க இரண்டு படங்கள் எங்கிருந்தோ வந்தாள் மற்றும் சொர்க்கம் ரிலீஸ்.

இந்த சமயத்தில் முதன் முறையாக மதுரையில் மன்றம் மூலமாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் டிக்கெட்கள் முதல் நாள் அனைத்து காட்சிகளுக்கும் வழங்கப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ரிசர்வேஷன் போன்ற வசதிகள் இல்லாமல் இருந்த அன்றைய காலக்கட்டத்தில் டிக்கெட் விலையை விட ஒரு ரூபாய் மட்டுமே அதிகமாக கொடுக்க வேண்டும் என்பதால் ரசிகர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாய் அமைந்தது. மன்றத்தில் உறுப்பினராக இல்லாதவர்களுக்கும் இந்த டிக்கெட் வழங்கப்படும் என்ற செய்தி எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. காரணம் நாங்கள் மன்ற உறுப்பினர்கள் இல்லை. இப்படி டிக்கெட் கிடைக்கும் என்பதால் ஓபனிங் ஷோ பார்க்கும் வாய்ப்பும் ஆசையும் அதிகரித்தது. ஆனால் தீபாவளியன்று காலையில் சினிமா போக அனுமதி கிடைக்காது. மாலைக் காட்சி மட்டுமே சாத்தியம். வெளியாகும் இரண்டு படங்களில் எதை பார்ப்பது என்ற Dilemna. கடைசியில் சொர்க்கம் போவது என்று முடிவானது. சென்ட்ரல் சினிமாவில் மாலை காட்சி டிக்கெட்டும் வாங்கியாகி விட்டது. என் கஸின் ஸ்ரீதேவியில் எங்கிருந்தோ வந்தாள் ஓபனிங் ஷோவிற்கும் டிக்கெட் வாங்கி விட்டான். காலையில் ஆரப்பாளையத்தில் எங்கள் வீட்டில் தீபாவளி கொண்டாடும் போதும் மனதில் எங்கிருந்தோ வந்தாள் ஓபனிங் ஷோ பற்றிய நினைவே. மாலை தாத்தா வீடு வந்து அவனை பார்த்து படம் எப்படியிருக்கிறது என்று தான் முதலில் கேட்டேன். இரண்டு படமும் டாப் [அந்த காலக்கட்டத்தில் சூப்பர் என்ற தூய தமிழ் வார்த்தை அகராதியில் இடம் பெற்றிருக்கவில்லை] என்ற மகிழ்ச்சியான செய்தியை அவன் எனக்கு சொன்னான்

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
9th April 2014, 12:01 AM
அந்த நாள் ஞாபகம் iv

மாலை தியேட்டருக்கு போகிறோம். சென்ட்ரல் சினிமா வாசலில் திருவிழா கூட்டம். மன்ற டோக்கன் வைத்திருப்பவர்கள் பின் பக்க வாசல் வழியாக வர வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அங்கே சென்றால் அதை விட கூட்டம். பெண்கள் செல்லும் வழி வேறு. அந்த சின்ன சந்தில் குவிந்த ரசிகர்களை உள்ளே அனுமதிக்க ஒரு சரியான ஏற்பாடு செய்யப்படாததால், ஒரு குழப்பமான சூழ்நிலை. நேரம் ஆக ஆக கூட்டம் பொறுமையை இழக்க, போலீஸ் ரசிகர்களை கட்டுப்படுத்த லாட்டி வீச, ரசிகர்கள் மிகுந்த கோபம் அடைந்தார்கள். அதற்கு காரணம் இருந்தது. சேலம் மாநாடு வெற்றிகரமாய் நடந்து முடிந்த பிறகு, சென்னையில் சாந்தி தியேட்டரின் மீது தாக்குதல் நடந்தது. அந்த நேரத்தில் போலீஸ் அதை கண்டும் காணாமல் நடந்து கொண்டது.[இதை பற்றி ஏற்கனவே நடிகர் திலகத்தின் அரசியல் பயணத்தில் எழுதியிருக்கிறேன்]. கொந்தளித்த ரசிகர்களை நடிகர் திலகம் அமைதிப்படுத்தியிருந்தார். எனவே போலீஸ் லாட்டி வீச ஆரம்பித்தவுடன் ரசிகர்கள் ஒன்று திரண்டு போலீசை சுற்றி வளைத்து "உங்களுக்கு கணேசன் ரசிகர்கள்னா இளிச்சவாயங்களா தெரியுதா?" என்று தகராறு செய்ய ஆரம்பிக்க நிலைமை ரசாபாசம் ஆவதற்குள் உள்ளே அனுமதித்து விட்டார்கள்.

படம் ஆரம்பிக்கும் முன் எங்கிருந்தோ வந்தாள் படத்தை பற்றிய செய்திகளை [அங்கே வந்திருந்த பெரும்பாலோர் பார்த்து விட்டவர்கள். காரணம் ஷோக்கள் நடந்த விதம் அப்படி. சொர்க்கம் 4 காட்சிகள். எங்கிருந்தோ வந்தாள் 5 காட்சிகள்.காலை 9 மணி அல்லது பகல் 12 மணி காட்சி ev பார்த்து விட்டு மாலை இங்கே வந்து விட்டார்கள்] அவர்கள் சொல்ல சொல்ல எதிர்பார்ப்பு எகிறியது. இங்கே படம் ஆரம்பிக்க டைட்டிலுக்கு முன்பே முதல் காட்சி. அதில் நடிகர் திலகம் தோன்ற தியேட்டரில் ரணகளம். பொன்மகள் வந்தாள் பாட்டு ஸினெல்லாம் பார்க்கவே முடியவில்லை. சீட் மேல் ஏறிக்கொண்டு டான்ஸ். ஒவ்வொரு ஸ்டைலுக்கும் அலப்பறை. ஒரு முத்தாரத்தில் பாடலில் வரும் நடைக்கும், "நீலவானம் மெல்ல மெல்ல சிவந்து போனதேன்" வரிகளில் கண்கள் சிவந்த நடிகர் திலகத்தின் க்ளோஸ் அப் ஷாட்க்கும் செம கிளாப்ஸ். நடிகர் திலகத்தின் திரைப்படங்களில் இடம் பெற்ற மிக சிறந்த சண்டை காட்சிகளில் ஒன்று சொர்க்கம் படத்தில் வந்த ஓடும் ரயிலில் நடக்கும் சண்டை. அந்த நேரத்தில் தியேட்டரே இரண்டு பட்டது. [சில பல உணர்ச்சிவசமான முழக்கங்கள்]. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். படம் முடிந்தது. ரொம்ப சந்தோஷமாக வெளியே வந்தோம்.

அடுத்த மூன்று நாட்களில் ஞாயிறன்று மாட்னி எங்கிருந்தோ வந்தாள் பார்த்தேன். இந்த படங்கள் வெளிவந்து ஒரு மாதத்திற்குள்ளாக நவம்பர் 27 வெள்ளி அன்று பாதுகாப்பு தங்கம் தியேட்டரில் வெளியானது. அதை வழக்கம் போல் மூன்றாவது நாள் பார்த்தேன்.

1970-ல் முதல் நாள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து. ஆகவே அடுத்த வருஷம் ஓபனிங் ஷோ பார்த்து விடலாம் என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் விதி சதி செய்தது.1971 -ல் முதல் படம் இரு துருவம். பொங்கலன்று நியூசினிமாவில் வெளியானது. பொங்கல் என்பதால் போக முடியவில்லை. மூன்றாவது நாள் தியேட்டர் விஜயம். அடுத்த படம் தங்கைக்காக. பிப் 6 அன்று ஸ்ரீதேவியில் ரிலீஸ். உடல் நிலை சரியில்லாததால் போக முடியவில்லை. மூன்று வாரங்களுக்கு பிறகே பார்க்க முடிந்தது. அந்த வருடத்தின் மூன்றாவது படம் அருணோதயம். மார்ச் 5 வெள்ளியன்று நியூசினிமாவில் வெளியானது. அன்று தமிழக சட்டசபைக்கும் இந்திய நாடாளுமன்றத்திற்கும் பொதுத் தேர்தல். எனவே போகவில்லை. ஞாயிறன்று சென்றேன். அந்த மாதத்திலே 26ந் தேதி ஸ்ரீதேவியில் குலமா குணமா ரிலீஸ். ஆனால் பரீட்சை. பதினைந்து நாட்களுக்கு பிறகே பார்க்க முடிந்தது. லீவ் விட்டவுடன் ஒரே நாளில் அதாவது ஏப்ரல் 14 அன்று இரண்டு படங்கள் வெளியாகியும் எதுவுமே பார்க்க முடியவில்லை. சுமதி என் சுந்தரி அலங்கார் தியேட்டரிலும், பிராப்தம் (சென்ட்ரல் சினிமா) இரண்டு படங்களையும் முதல் வாரத்தில் பார்த்தேன்.

இப்படியிருக்க நடிகர் திலகத்தின் 150-வது படம் சவாலே சமாளி ஸ்ரீதேவியில் ஜூலை 3 சனிக்கிழமை வெளியாகிறது. ஓபனிங் ஷோ பார்க்கவேண்டும் என்று மிகுந்த முயற்சி எடுத்தும் ஸ்கூல் இருந்ததால் போக முடியவில்லை. முதல் வாரம் பார்த்தேன். அடுத்த படம் தேனும் பாலும் அதே மாதம் (ஜூலை) 22 அன்று சிந்தாமணியில் வெளியானது. இந்த படம் வெகு நாட்களாக தயாரிப்பில் இருந்ததால் பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லை. நான் ரிலீஸ் தியேட்டரில் படம் பார்க்கவில்லை. ஷிப்டிங் தியேட்டரில் தான் பார்த்தேன். அடுத்த மாதம் ஆகஸ்ட் 14 சனியன்று மூன்று தெய்வங்கள் ஸ்ரீமீனாட்சியில் ரிலீஸ். இரண்டாவது நாள் பார்த்தோம். அந்த வருடத்தின் கடைசி படம் பாபு அக்டோபர் 18 தீபாவளியன்று ஸ்ரீதேவியில் வெளியானது. இந்த முயற்சியும் தோல்வி அடைய சில நாட்கள் சென்ற பிறகே பாபு பார்க்க முடிந்தது. மொத்தத்தில் 1971-ல் ஓபனிங் டே அன்று கூட பார்க்க முடியவில்லை என்கிறபோது ஓபனிங் ஷோ எங்கே பார்ப்பது.

(தொடரும்)

அன்புடன்

chinnakkannan
9th April 2014, 06:45 PM
முரளி சார் நீங்கள் சொன்ன ஒவ்வொரு தியேட்டரிலும் (ஸ்ரீதேவி வீட்டுக்குப் பக்கம் உள்ள தியேட்டர்- கொல்லைப் புற வாசலிலிருந்து எட்டிப் பார்த்தால் தியேட்டர் தெரியும்.. ) நீங்கள் சொன்ன வருடங்களிலேயே அந்தந்த தியேட்டருக்கு வீட்டில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்..ரொம்ப குட்டிப் பையனாய் இருந்தேன் அப்போது!! நியூசினிமா ராமன் எத்தனை ராமனடி.. நினைவிருக்கிறது..எ.வ.. கூட்ட நெரிசலில் வீட்டில் கூட்டிச் சென்றார்கள் - தீபாவளிக்கு மறு நாள் என நினைவு..சவாலே சமாளியும் ஸ்ரீதேவி தான்!!(ஏழு வயதுப்பையன் துறு துறுவென ஒல்லிஒல்லியாய் நீங்கள் பார்த்திருப்பீர்களேயானால் அது நான் தான் :))

Murali Srinivas
10th April 2014, 09:47 PM
சின்ன கண்ணன், நன்றி பல. <Dig> நீங்கள் இருந்தது கிருஷ்ணராயர் தெப்பக்குள தெருவா? இல்லை இரட்டை தெருவா? சேதுபதி ஹை ஸ்கூல்? 71-ல் ஏழு வயதா? ஓகே. உங்களைப் பார்த்திருக்கலாம். 70-களின் இறுதியிலும் அதே ஏரியாவில்தான் இருந்தீர்களா? <end Dig>

அன்புடன்

Murali Srinivas
12th April 2014, 12:15 AM
அந்த நாள் ஞாபகம் - V

மருத்துவர்கள் (Physiatrist), obsessive compulsive disorder என்று ஒரு நிலைமையை குறிப்பிடுவார்கள் அதாவது ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப செய்து கொண்டிருப்பதை இப்படி குறிப்பிடுவார்கள். எனக்கு அதற்கு நேர்மாறான நிலை. ஒன்றை செய்ய வேண்டும் என்று பல முறை முயற்சித்தும் முடியாத நிலைமை. கிட்டத்தட்ட ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும் என்று ஒரு obsession மனதுக்குள் உருக் கொண்டு விட்டது. 1972 பிறக்கிறது. பாலாஜி நடிகர் திலகத்தை வைத்து ராஜா படம் தயாரித்துக் கொண்டிருக்கிறார். அது ஜானி மேரா நாம் என்ற இந்தி படத்தின் ரீமேக். அந்த படம் மதுரையில் வெளியானது. தேவ் ஆனந்த், ஹேமமாலினி நடித்த அந்த படத்தை பார்த்தேன். ரசிக்கும்படியாக இருந்தது. ராஜா 1971 வருடம் அக்டோபர் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. முதல் காட்சி நடிகர் திலகம் டென்னிஸ் ராக்கெட்டை எடுத்துக் கொண்டு ஹோட்டல் ரூமுக்கு வந்து ஜெஜெ-வை சந்திக்கும் காட்சி படமாக்கப்பட்டது. நடிகர் திலகம் டென்னிஸ் ராக்கெட்டுடன் ஸ்டைலாக நிற்கும் போஸ் பத்திரிகைகளில் வெளியானது. தொடர்ந்து படப்பிடிப்பு பற்றி பல செய்திகள். இது எல்லாம் படத்தை பற்றிய எதிர்பார்புகளை தூண்டி விட்டு கொண்டிருந்தன. படம் வெளியாவதற்கு பத்து நாட்கள் முன் படத்தின் பாடல்கள் அடங்கிய இசைத்தட்டு வெளியானது.

அந்த நேரத்தில் மதுரையில் டவுன் ஹால் ரோட்டில் உள்ள தாஜ் ஹோட்டலில் ஜுக் பாக்ஸ் வைக்கப்பட்டது. இது பற்றி அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதில் சேகரித்து வைத்திருக்க கூடிய பாடல்களில் நமக்கு தேவையான பாடலை பணம் கொடுத்து கேட்கலாம். அன்றைய காலத்தில் இருபத்தஞ்சு காசுகள் கொடுத்தால் போதும். அதை சாதாரணமாக ஹோட்டலுக்கு சாப்பிட வருபவர்கள் பயன் படுத்துவார்கள்.

ஆனால் ராஜா பட பாடல்கள் அதில் இருக்கிறது என்று தெரிந்தவுடன் ரசிகர் கூட்டம் படையெடுக்க ஆரம்பித்து விட்டது. ஆனால் இவர்கள் சாப்பிட செல்லாமல் பாட்டை மட்டும் கேட்க செல்ல ஆரம்பித்தனர். முதலில் வருமானம் என்று நினைத்து அனுமதித்த ஹோட்டல் நிர்வாகம், குவிய ஆரம்பித்த கூட்டத்தையும் பார்த்து விட்டு, அவர்கள் திரும்ப திரும்ப இந்த ஒரு பட பாடல்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்ததால் ஜுக் பாக்ஸ் ரிப்பேர் என்று போர்டு எழுதி மாட்டி விட்டார்கள்.

சென்ட்ரல் சினிமாவில் ராஜா வெளியாவதாக இருந்தது. அப்போது ஓடிக் கொண்டிருந்த படத்தின் இடைவேளையில் ராஜா படத்தின் பாடல்களும் சில வசனங்களும் ஒலிப்பரப்பட, அதை கேட்பதற்காக சென்ட்ரல் சினிமா அருகில் இருக்கும் சின்ன சந்தில் இடைவேளை நேரத்தில் ஏகப்பட்ட கூட்டம். என் கஸினின் நண்பன் வீடு தியேட்டர் அருகில் இருந்தது. நாங்கள் அங்கே சென்று கேட்டோம். ஆனால் தெளிவாக காதில் விழவில்லை. ஆனால் அதுவே மேலும் ஆவலை கிளப்பி விட்டது. படம் எப்படியும் ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தோம். வீட்டில் ஒரு வழியாக அனுமதி வாங்கினோம். நாள் நெருங்க நெருங்க டென்ஷன். இந்த நேரத்தில் மதுரை ஸ்ரீதேவியில் 89 நாட்கள் ஓடிய பாபு பொங்கலன்று வெளியான அகத்தியருக்காக மாற்றப்பட்டபோது ரசிகர்கள் மிகுந்த கோபமும் வருத்தமும் அடைந்தார்கள். சென்னையில் ஜனவரி 25 அன்று பாபு 100 நாட்களை கடக்கிறது. ரசிகர்கள் அதை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள்.

ராஜா போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விட்டன. ஒரே கலரில் பாண்ட் ஷர்ட் அணிந்து கழுத்தில் ஸ்கார்ப் கட்டிய நடிகர் திலகம். வாவ்! ஜனவரி 26 புதன்கிழமை. ஸ்கூலில் நெருங்கிய நண்பர்களிடம் ஓபனிங் ஷோ போவது பற்றி பெருமையுடன் சொல்லியாகி விட்டது.[எங்க மாமா ஓபனிங் டே பார்த்ததையே ஒரு இமாலய சாதனையாக சொல்லியாகி விட்டது. முதல் நாள் சிவாஜி, எம்.ஜி.ஆர் படம் பார்ப்பது என்பது ஒரு பெரிய விஷயமாக இருந்த அந்த காலக்கட்டத்தில், நான் ஒரு ஹீரோ போல் பார்க்கப்பட்டேன்].

முதல் நாள் இரவெல்லாம் சரியாக தூங்கவில்லை. காலையில் வெகு சீக்கிரமாகவே எழுந்து விட்டேன். குளித்து ரெடியாகி கிளம்பி விட்டோம். காலை 8 மணிக்கெல்லாம் தியேட்டர் பக்கம் போயாகி விட்டது. கஸினின் Friend வீட்டுக்கு போய் விட்டோம். காலை 9 மணிக்கு தியேட்டருக்கு கிளம்பி விட்டோம். மெயின் கேட்டில் பயங்கர கூட்டம் என்பதால் பின் பக்க கேட் வழியாக போகலாம் என்று அங்கே போய் விட்டோம். சொர்க்கம் போல் அவ்வளவு பிரச்சனைகள் இல்லை. உள்ளே சென்று டிக்கெட்டை வாங்கி கொண்டு அரங்கத்தில் நுழைந்த போது அடைந்த மகிழ்ச்சி இருக்கிறதே, விவரிக்க முடியாத சிறு வயது சந்தோஷங்களில் ஒன்று.

10.30 மணிக்கு பெல் அடிக்கிறது. விளம்பரங்களோ, இந்தியன் நியூஸ் ரிவியு குறிப்பாக தமிழக அரசின் செய்தி துறை செய்திகள் எதுவும் இல்லாமல் எடுத்தவுடன் படம். சுஜாதா சினி ஆர்ட்ஸ் எம்ப்ளம் அப்படியே முன்பக்கமாக திரும்ப பின்னணியில் பல்வேறு கலர்கள் பளிச்சிட[ஏற்கனவே எங்கிருந்தோ வந்தாளிலேயே இது வந்திருந்தாலும்] அதகளம் ஆரம்பமானது. இது ஒரு மூவி மேக்கர்ஸ் கவுன்சில் சித்திரம் என்ற கார்ட் முதலில் வந்தது.[இந்த அமைப்பு பாலாஜி, ஸ்ரீதர், திருலோக்சந்தர், மாதவன், முக்தா ஸ்ரீநிவாசன் போன்றவர் சேர்ந்து உருவாக்கியது].

அது வரை தமிழ் படங்களில் பார்க்காத டைட்டில். எழுத்துகளின் பின்னணியில் வித விதமான டிசைன்கள், கலர்கள். [அது நாள் வரை டைட்டில்களை சாதாரணமாக பார்த்த ரசிகர் கூட்டம் இந்த படத்தின் டைட்டில்களுக்காகவே மீண்டும் மீண்டும் பார்த்தனர்]. நடிகர் திலகத்தின் பெயர் காண்பித்த போது திரையே தெரியாத அளவிற்கு பேப்பர்மாரி. என் தலையில் ஒரு கூடை பேப்பர். சில டிசைன்கள் மிக பெரிய ஆரவாரத்தை ஏற்படுத்தியது. மெல்லிசை மன்னரின் பெயர் வரும் போது ஒரு வளையம் மற்றொரு வளையத்திலிருந்து வெளியேறுவது போல அமைக்கப்பட்டிருந்தது அதில் ஒன்று. டைட்டில் முடிய படம் ஆரம்பிக்கிறது

முதலில் சிறுவர்களாக இருக்கும் சகோதரர்கள் போட்டியில் பங்கு பெறுவது இடம் பெறும் அதைப் பற்றி விலாவாரியாக எழுத தேவையில்லை. காரணம் அனைவருக்கும் கதை தெரியும் மேலும் இந்த படத்தை பற்றி மிக விளக்கமாக சாரதா இந்த திரியிலே எழுதியிருக்கிறார். நான் சொல்ல வந்தது என்னவென்றல் இந்தி படம் பார்த்த எங்களை போன்றவர்களுக்கு நடிகர் திலகம் திரையில் தோன்றுவதற்கு சிறிது நேரம் ஆகும் என்று தெரியும். ஆனால் அது தெரியாத ரசிகர்கள் எப்படி ரீயாக்ட் பண்ணுவார்கள் என்று ஒரு சந்தேகம் இருந்தது. ஆனால் இயக்குனர் சி.வி.ஆர் அந்த எண்ணமே தோன்ற விடாமல் விறுவிறுப்பாக கொண்டு செல்வார். மூத்த மகன் பெரியவனாகி பாலாஜியாவது, விஸ்வம் சிங்கப்பூரிலிருந்து வைரங்களோடு கிளம்பியிருப்பான் என்று சொல்வது, மனோகர் வருவது, காரில் ஏறப்போகும் அவரிடம் சிவப்பு விக் அணிந்த கையாள் உதடே அசையாமல் போலீஸ் அந்த காரிலே உன்னை பாலோ பண்ணுது என்று சொல்லிவிட்டு போவது, மனோகர் டென்னிஸ் ராக்கெட்டை கிளப்-ல் மாற்றுவது, மது விலக்கு சட்டதின் கீழ் அவர் கைது செய்யப்பட்டு மேஜர் அவரை மடக்குவது என்று படு சுவராஸ்யமாக படம் போக, செல்லில் அடைக்கப்படும் மனோகர் சிகரெட்டை பற்ற வைக்க லைட்டரை தேட, கோட் அணிந்த ஒரு கை லைட்டரோடு நீள, தியேட்டரில் இடி மின்னல் பிரளயம். சேரில் உட்கார்ந்திருந்த மொத்த மக்களும் இப்போது அதன் மேல் ஏறி நிற்க, அடுத்த சில நிமிடங்களுக்கு யாருமே படத்தில் என்ன நடந்தது என்று பார்க்க முடியவில்லை என்பது தான் உண்மை. நடிகர் திலகத்தின் அறிமுக காட்சி அதற்கு முன்பு அவ்வளவு அமர்க்களமாக அமைந்ததில்லை. அந்த காட்சியின் தொடர்ச்சியாக இரண்டு மூன்று ஜெயில் காட்சிகள் வரும். அடுத்து சின்ன சண்டை காட்சி. மறுபடியும் இங்கே அதகளம்.

(தொடரும்)

அன்புடன்

chinnakkannan
13th April 2014, 10:21 AM
இரண்டு நாட்கள் ஏனெனத் தெரியவில்லை..இந்தப் பக்கமும், ப்ரைவேட் மெஸேஜூம் ஓபனே ஆகவில்லை..எனில் இன்று திறக்கமுடிந்ததும் எழுதுகிறேன்..தாமதமான பதிலுக்கு மன்னிக்க முரளி சார்..

கி.தெ..மேலத் தெரு.. ஒரு வேதபாடசாலை இருந்தது..அதற்கு எதிர் வீடு..வே.பா மறைந்து அங்கு ஒரு டாக்டர்வீடும்,ப்ரஸ்ஸீம் தோன்றிப் பலகாலம் ஆகிவிட்டன(82)..படித்தது மங்கையர்க்கரசி, செய்ண்ட்மேரிஸ்..மதுரையை முழுமையாக விட்டது 87ன் இறுதியில்..


சின்ன கண்ணன், நன்றி பல. <Dig> நீங்கள் இருந்தது கிருஷ்ணராயர் தெப்பக்குள தெருவா? இல்லை இரட்டை தெருவா? சேதுபதி ஹை ஸ்கூல்? 71-ல் ஏழு வயதா? ஓகே. உங்களைப் பார்த்திருக்கலாம். 70-களின் இறுதியிலும் அதே ஏரியாவில்தான் இருந்தீர்களா? <end Dig>

அன்புடன்

chinnakkannan
15th April 2014, 02:07 PM
எந்தப் படமுமே ஓப்பனிங்க் ஷோ எனப் போனதுகிடையாது..வீட்டில் அட்லீஸ்ட் ஒரு வாரமாவது எடுக்கும்..அம்மா அக்காக்கள் சூழத்தான் செல்வது வழக்கம்..வெகு சின்னவயது ராஜா வந்த சமயத்தில்.. ரிக்*ஷாவோ குதிரை வண்டியோ கட்டிக் கொண்டு போய் ஒரு வார நாளில் (சனி ஞாயிறென்றால் கூட்டம் அம்முமே) பார்த்தோம் என நினைக்கிறேன்..இருந்தாலும் என் நல்ல மனசுக்கு உதாரணமாக அந்த வயதிலேயே- படத்தில் பத்மா கன்னா இறந்து போவது வேதனையாக இருந்தது..! :)

பின் பாடல்கள்.. நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன் என்று வீட்டுக்கு வந்தவுடன் பாடியது - பாரேன் இந்தக் கற்பூர புத்தியெல்லாம் பாடத்துல காட்டு என அக்காவோ அம்மாவோ சொன்னது நினைவில்..:) ம்ம் அடுத்த இஷ்யூ எப்போ எழுதுவீங்க முரளிசார்?

Murali Srinivas
15th April 2014, 10:41 PM
சின்ன கண்ணன்,

தகவல்களுக்கு நன்றி. 70-களின் இறுதியில் நீங்கள் அதே தெருவில்தான் இருந்தீர்கள் என சொல்லும் போது நீங்கள் என்னையும் நான் உங்களையும் பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது, யாரென்று தெரியாமலே. காரணம் அந்த ஒர்க் ஷாப் ரோட்டில் எனக்கு நிறைய நண்பர்கள். தினந்தோறும் அங்கே வருவேன்.

இதோ நீங்கள் கேட்ட அடுத்த பகுதி.

அன்புடன்

Murali Srinivas
15th April 2014, 10:51 PM
அந்த நாள் ஞாபகம்

அதன் பிறகு ஒவ்வொரு காட்சிக்கும் விசில் பறக்கிறது. ஒவ்வொரு ஸ்டைல் போஸிற்கும் ஆரவாரம். ஹோட்டல் ரூமில் டென்னிஸ் ராக்கெட்-ஐ கொடுக்க செல்லும் போது வரும் கிண்டல், நீ வர வேண்டும் பாடலில் வரும் விளையாட்டுகள், ஏர்போர்ட்-ல் போலீஸ் அழைத்து செல்ல அங்கே வைத்து தான் சிவாஜி ஒரு ரகசிய போலீஸ் அதிகாரி என்பது தெரிய வரும் அழகான ட்விஸ்ட் இவை எல்லாமே ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. மேஜர் கொடுக்கும் சிகரெட் லைட்டர் கேமரா, மைக்ரோபோன் போன்றவை அன்று ஒரு புதுமையாக இருந்தது.

விமானத்தில் கொச்சி செல்லும் போது வருவார் இரண்டாவது சந்திரபாபு. அவர் பேசும் ஒரு வசனத்திற்கு மட்டும் பலத்த எதிர்ப்பு கூக்குரல்கள் எழுந்தன [நீரும் நெருப்பும்]. கொச்சி ஏர்போர்டில் போலீஸ், டைரியை சோதனையிட அதில் இருக்கும் நீளமான சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டே நடிகர் திலகம் போலீசிற்கு ஆஃபர் செய்யும் இடம் செம கிளாப்ஸ்.

நான் முன்பே சொன்னது போல படம் விறு விறு. ஆகவே சிவாஜியை கட்டி வைத்து பாலாஜி கேள்வி கேட்கும் இடம், மயிலாப்பூரில் சென்று செக் பண்ணுவது என்று படம் படு ஸ்பீட். இந்த நேரத்தில் பின்னணி இசை பற்றி குறிப்பிட வேண்டும். அதுவரை தமிழ் சினிமாவில் வராத முறையில் கார்கள் செல்லும் போது இசை+ பின்னணி குரல் ஒலித்த விதம் ரசிகர்ளை வெகுவாகவே கவர்ந்தது. மெல்லிசை மன்னர் பிரமாதப்படுத்தியிருந்தார்

ஆனால் தியேட்டரே எழுந்து ஆடியது ரந்தாவா சண்டைக்காட்சியின் போதுதான். அதிலும் நடிகர் திலகம் கதவில் சாய்ந்து நின்று கொண்டு சிகரெட்டை கடைசி பப் எடுத்துவிட்டு கீழே போட்டு நசுக்கி விட்டு "நான் எப்பவும் கடன் வச்சுகிறதிலே" என்று ஆரம்பிக்கும் போது சேரில் எழுந்து நிற்க ஆரம்பித்த மக்கள் சண்டை முடிந்து தான் கீழே இறங்கினார்கள்.

அதன் பிறகு சிவாஜி ரங்கராவ் சந்திப்பு பிறகு பத்மா கண்ணாவின் கண்களை கொண்டு வா டான்ஸ் எல்லாம் கொஞ்சம் அமைதி. மறுபடியும் கவர்ச்சி வில்லன் கண்ணனோடு சண்டை காட்சி வர சூடு பிடித்தது. அதிலும் கண்ணன் மாற்று முகாமை சேர்ந்தவர் என்பதால் சூடு + கோஷங்கள் அதிகமாகவே ஒலித்தது. அது முடிந்து கல்யாண பொண்ணு பாடல். மறுபடியும் ஸ்டாண்ட் அப் ஆன் த பெஞ்ச். பெரியவர்களுக்கே மறைக்கும். எனக்கு சுத்தம். நான் என் கஸினிடம் "என்ன இது ஆ ஊ -ன்னா சேர் மேல ஏறிறாங்க" என்று கேட்க அவன் ரொம்ப சிம்பிளா "ஓபனிங் ஷோ-ன்னா அப்படிதான் இருக்கும்" என்றான். பாட்டோடு இன்டெர்வல். வெளியில் வருகிறோம். அடுத்த ஷோவிற்கு அப்போதே வரிசை நிற்கிறது. படம் ஓஹோ என்று இங்கிருந்து சொல்ல வெளியே சர வெடிகள் தெருவையே ஒரு வழி ஆக்கியது.

இடைவேளை முடிந்து மீண்டும் படம் ஆரம்பித்தது. நடிகர் திலகத்தை சோதனை செய்து பார்க்க வேண்டும் என்று ஜெஜெ சொல்வதற்கு ஏற்ப பாலாஜி செயல்படுவார். பிறகு அந்த கோவில் நகைகளை கொள்ளை அடிக்கும் திட்டத்தை பாலாஜி போடுவார். சிறிது நேரத்திற்கு சிவாஜி இல்லாமலே காட்சிகள் ஓடும். கங்கையிலே ஒடமில்லையோ பாடல் காட்சியில் எல்லாம் தியேட்டர் அமைதியாகவே இருந்தது. அந்த காட்சியின் முடிவில் போலீஸ் யூனிபார்ம் அணிந்து நடிகர் திலகம் தோன்றிய போது மறுபடியும் தியேட்டரில் பயங்கர ஆரவாரம்.

இதன் பிறகு தான் கதையின் முக்கிய திருப்பமாக மனோகர் வந்து பாலாஜியை சந்திக்கும் காட்சி. உண்மைகளை ஒவ்வொன்றாக மனோகர் உடைத்து கடைசியாக "பாபு, இந்திய மாப்-லே தெற்கு கூர்மையா இருக்கு. தெற்கே இருக்கும் போலிஸாருக்கும் அறிவு கூர்மை" என்று சொல்லும் காட்சியில் பலத்த கைதட்டல். சிவாஜி - பாலாஜி சண்டை, பிறகு பாலாஜியை மேஜரிடம் கூட்டிக் கொண்டு போய் நம்ம சந்தர் என்று அறிமுகப்படுத்துவது, ரங்கராவ் போட்டோவை பார்த்து விட்டு ராஜா இவன்கிட்டே தீர்க்க வேண்டிய பழைய கணக்கு ஒண்ணு இருக்கு" என்று மேஜர் சொன்னவுடன் நடிகர் திலகம் போட்டோவை குத்தும் காட்சிக்கும் ஒரே அப்ளாஸ்.

இதற்கு பிறகு படம் பயங்கர ஸ்பீட். இரண்டில் ஒன்று பாட்டில் ஒவ்வொரு கதவு, ஒவ்வொரு ஜன்னல் வழியாகவும் நடிகர் திலகம் உள்ளே நுழைய பார்க்க அது ஆரவாரமாக வரவேற்கப்பட்டது. அடுத்து கிளைமாக்ஸ். தமிழ் பட வரலாற்றிலே ராஜாவில் வந்தது போல அவ்வளவு நீண்ட கிளைமாக்ஸ் (கிட்டத்தட்ட 20- 25 நிமிடங்கள்) இடம் பெற்ற படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் கொஞ்சம் கூட தொய்வு இல்லாமல் (இன்று பார்த்தால் கூட) இருக்கும். பணடரிபாயை மனோகர் சாட்டையால் அடிக்க நடிகர் திலகம் கர்சிஃபை பல்லில் கடித்தபடி தொடர்ந்து சிரிப்பார். கண்களில் கண்ணீர் கட்டி நிற்கும். அதை அடக்கி கொண்டு அவர் சிரிக்க சிரிக்க இங்கே தியேட்டரில் ரசிகர்களின் உணர்ச்சி அணை உடைத்து பாய்ந்தது.

படம் முடிய ரசிகர்களுக்கு பயங்கர சந்தோஷம். ஒரே சுரத்தில் அனைவரும் படம் பிடித்திருப்பதாக சொல்ல, வெளியே வருகிறோம். பின் பக்க கேட் வழியாக வர வேண்டும். அந்த இடத்தில் சர வெடிகளை தொடர்ந்து கொளுத்த, நடிகர் திலகத்தை வாழ்த்தி கோஷங்கள், கைதட்டல், டான்ஸ், ஆரவாரம் என்று கூட்டம் மேலமாசி வீதி முழுக்க ஆடிப்பாடிக்கொண்டே போனது. ஒரு பகுதியினர் முன்பக்க கேட் பக்கம் வந்து அதே போல கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அந்த மூன்று மணி நேர நினைவுகளை அசை போட்டுக்கொண்டே நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.

என்னைப் பொருத்த வரை நான் முதலில் சொன்னது போல என்றென்றும் மனதில் சேகரித்து வைத்திருக்கும் சில சிறு வயது சந்தோஷங்களில் ஒன்று இந்த அனுபவம். நண்பர் tacinema மூலமாக அதை மீண்டும் இங்கே நினைவு கூற ஒரு வாய்ப்பு கிடைத்தது. இது போல மனதில் உள்ள வேறு சில அனுபவங்களை சந்தர்ப்பம் வரும் போது பகிர்ந்து கொள்கிறேன்.

அன்புடன்

Russellmai
18th April 2014, 10:42 PM
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பகுதியாக இருந்த துறையூரில் வசித்து வந்த நேரம்.திருச்சி நகரைச் சுற்றிக் காண்பிக்க என்னை என் அப்பா 1965இல் அழைத்துச்
சென்றிருந்தார்.துறையூரில் அந்நாட்களில் முதல் வெளியீட்டில் படங்கள்
வெளியாவதில்லை.திருச்சிக்கு நான் முதல் முதலாகச் சென்றிருந்த அந்த
நேரத்தில் திருச்சி ஜூபிடர் திரையரங்கில் ஆண்டவன் கட்டளையும்,ராஜா
திரையரங்கில் பச்சை விளக்கும் ஓடிக் கொண்டிருந்தன.அப்பொழுதுதான்
முதன்முறையாக ஆண்டவன் கட்டளைப் படத்தினை முதல் வெளியீட்டில்
கண்டேன்.அந்த பசுமையான நினைவினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில்
மகிழ்ச்சி.இதுவும் அந்த ஆண்டவன் கட்டளையோ என்னவோ.

Murali Srinivas
19th April 2014, 12:03 AM
அந்த நாள் ஞாபகம் - தொடர்ச்சி.

நடிகர் திலகம் படங்களின் ஓபனிங் ஷோ அனுபவங்களை எழுதுங்கள் என்று சொன்னபோது, அதை பற்றி மட்டும் எழுதாமல் தொடர்ச்சியாக வெளிவந்த நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றியும் அந்த படங்கள் வெளியான காலக் கட்டத்தில் நடைபெற்ற சில நிகழ்வுகளையும் எழுதியிருந்தேன். அது ராஜா வரை வந்து நின்றது. அதன் பின் வெளியான படங்களை பற்றியும் தொடர்ச்சியாக எழுதுங்கள் என்று நமது நண்பர்கள் சொன்னார்கள். அதை ஒரு சில பாகங்களாக (அதாவது நேரம் கிடைக்கும் போது) எழுதலாம் என்று நினைக்கிறேன்.

இந்த நேரத்தில் ஒரு சின்ன குறிப்பு. அந்த காலக் கட்டத்தைப் பற்றி எழுதும் போது ஒரு சில நிகழ்வுகளை குறிப்பிட வேண்டிய சூழல் வரும். அது நடந்த சம்பவங்களின் தொகுப்பாக இருக்குமே தவிர, உயர்த்துதல், தாழ்த்துதல் என்ற அளவிற்கு போகாது. இனி விட்ட இடத்திற்கு, அதாவது 1972 -ம் ஆண்டுக்கு செல்வோம்.

ராஜா ஒரு மிகப் பெரிய வெற்றியை நோக்கி நடை போட்டுக் கொண்டிருந்தது. அது வரை பாலாஜி எடுத்த படங்களிலே மிக பெரிய வெற்றி. தனிப்பட்ட முறையில் முதல் தடவையாக படம் வெளியான ஐந்து வாரங்களில் நான் ஐந்து முறை பார்த்த படம். சிவாஜி ரசிகர்கள் சந்தோஷமாக இருந்த நேரம். காரணம் போட்டியில் தொடர்ந்து இரண்டு படங்கள் ஜெயித்த சந்தோஷம். 1971-ம் வருட தீபாவளியன்று பாபுவும், நீரும் நெருப்பும் வெளியானது. அதில் பாபு வெற்றி. 1972 -ல் ஜனவரி 26 அன்று ராஜா ரிலீஸ். ஒரு வாரம் கழித்து பிப் 4 அன்று சங்கே முழங்கு வெளியானது. ராஜா மிகப் பெரிய வெற்றி. அந்த நேரத்தில் அடுத்த படமும் போட்டியில் தான் வெளியாகப் போகிறது என்றவுடன் த்ரில் + எதிர்பார்ப்பு. ஆம், ஞான ஒளியும் நல்ல நேரமும் போட்டி போடப் போகின்றன என்ற சேதி வருகிறது.

இந்த நேரத்தில் ஒன்றை சொல்ல வேண்டும். 1971 அக்டோபர் 18 தீபாவளியன்று ரிலீஸான பாபுவும், நீரும் நெருப்பும் தான் சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களில் கடைசியாக ஒரே நாளில் வெளியான படங்கள். அதற்கு பிறகு இருவரின் படமும் ஒரே நாளில் வெளியாகவில்லை. மிக கிட்டத்தில் வெளியானது என்று சொன்னால் அது ஞான ஒளி மற்றும் நல்ல நேரம் படங்கள் தான்.

1972 -ம் வருடம் மார்ச் 10ந் தேதி வெள்ளிக்கிழமை நல்ல நேரம் ரிலீஸ். மறு நாள் 11ந் தேதி சனிக்கிழமை ஞான ஒளி ரிலீஸ். இதற்கு பிறகு நெருங்கிய இடைவெளி என்றால் 1975 -ம் வருடம் அக்டோபர் 31 வெள்ளியன்று பல்லாண்டு வாழ்க வந்தது, இரண்டு தினங்கள் கழித்து நவம்பர் 2 தீபாவளியன்று Dr.சிவா மற்றும் வைர நெஞ்சம் வெளியானது. அது போல் 1974 -ம் வருடம் நவம்பர் மாதம் 7ந் தேதி உரிமை குரல் வெளியானது. 6 நாட்களுக்கு பிறகு 13ந் தேதி தீபாவளியன்று அன்பை தேடி ரிலீஸ் ஆனது. மற்ற நேரங்களில் இருவர் படங்களுக்கும் இடைவெளி இருந்தது.

மீண்டும் 1972-க்கு வருவோம். சிவாஜி ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருந்ததை குறிப்பிட்டேன். மதுரை சிவாஜி ரசிகர்களின் சந்தோஷத்தை அதிகப்படுத்துவது போல சில நிகழ்வுகள் நடந்தன. சங்கே முழங்கு பிப் 4 அன்று மதுரை சிந்தாமணியில் வெளியானது. அந்த நேரத்திலே நல்ல நேரம் விளம்பரம் வருகிறது. மார்ச் 10 முதல் என்று. அதுவும் மதுரை சிந்தாமணியில் என்று. எங்களுக்கு சந்தோஷம் அதிகமானது. அந்த நேரத்தில் ராமன் தேடிய சீதை ஏப்ரல் 14 முதல் ரிலீஸ் என்று விளம்பரம். அதுவும் மதுரை சிந்தாமணி. இது அனைத்தும் அறிவித்தபடி ரிலீசானால் சங்கே முழங்கு 35 நாட்களில் மாற்றப்படும், நல்ல நேரம் அதே 35 நாட்களில் தூக்கப்படும்.

இதைப் பார்த்த எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அப்செட் ஆகி இதை மாற்ற முயற்சி எடுத்தார்கள். ஆனால் சூழ்நிலை அவர்களுக்கு உதவவில்லை. சங்கே முழங்கு வெகு நாட்களாக தயாரிப்பில் இருந்த படம். ஆகவே ரிலீஸ் மாற்ற முடியாது. நல்ல நேரம் தேவர் படம். அவரிடம் சென்று தேதியை மாற்றுவது என்பது impossible. ராமன் தேடிய சீதையோ 1970 -ம் வருடம் மாட்டுக்கார வேலன் வெளி வந்த உடனே அதே தயாரிப்பாளரான ஜெயந்தி பிலிம்ஸ் ஆரம்பித்த படம். 1971 பொங்கலன்று வெளி வருவதாக விளம்பரம் செய்ப்பட்ட படம். ஆனால் டிலே ஆகி கடைசியாக 1972 -ம் வருடம் ஏப்ரல் 14 அன்று ரிலீஸ் முடிவு செய்யப்பட்டது. தவிரவும் மாட்டுக்கார வேலன் சிந்தாமணியில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற காரணத்தால் சென்டிமென்டாக அவர்கள் சிந்தாமணியில் தான் திரையிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். ஆகவே அவர்களும் மாற்ற தயாரில்லை. தவிரவும் இந்த பிரச்சனை மதுரையில் மட்டுமே இருந்தது. ஒரு ஊரில் ஏற்படும் சிக்கலுக்காக மொத்த ரிலீசையும் தள்ளி போட முடியாது என்று சொல்லி விட்டார்கள்.

பிறகு நல்ல நேரத்தின் மதுரை விநியோகஸ்தரான சேது பிலிம்ஸ் அந்த படத்தை சிந்தாமணியில் இருந்து மாற்றி வேறு தியேட்டர் தேட ஆரம்பித்தார்கள். மெயின் தியேட்டர்கள் எல்லாம் ஏற்கனவே புக்ட் [booked]. சென்ட்ரலில் ராஜா ஓடிக் கொண்டிருக்கிறது. தேவியில் அகத்தியர் ஓடிக் கொண்டிருக்கிறது. நியூசினிமாவில் ஞான ஒளி வெளியாக போகிறது. சிந்தாமணிதான் பிரச்சனை. கடைசியில் அலங்கார் தியேட்டர் புக் செய்யப்பட்டது. ரசிகர்கள் அவ்வளவாக திருப்தி படவில்லை என்பதால் மூவிலாண்ட் [பின்னாளில் ஜெயராஜ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது] அரங்கமும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

(தொடரும்)

அன்புடன்

Russellmai
19th April 2014, 07:55 PM
தற்பொழுது சன்லைப் தொலைகாட்சியில் நடிகர் திலகம் நடித்த
வாணி ராணி திரைப்படம் ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கிறது.

JamesFague
19th April 2014, 09:11 PM
Mr Murali Sir,

No words to explain your memory. Fantastic narration.

Regards

Gopal.s
21st April 2014, 07:17 AM
முரளி,
சான்ஸே இல்லை. ஒரு சுவையான period கதை படிக்கும் இன்பம்.உங்களுடன் நான் ரசிப்பது ஆற்றோட்டமான நடையில் நீங்கள் வைக்கும் சுற்று பின்னல்கள்.அரசியல்,கலை,சதி,காலகட்டம் சார்ந்த தகவல்கள் எல்லாம் கலந்தது. இப்படி ஒரு சுவாரஸ்யமான எழுத்தை படித்து நாளாயிற்று.(ஏனோ கார்த்திக் சார்,வாசு தலை காட்டுவதே இல்லை)நீங்கள் எழுதுவது 100% உண்மை என்பதால் ,தொகுத்து சரித்திரமாக்கியே விடலாம்.
இப்படிக்கு,
உங்கள் பரம ரசிகன்.
பின்னே இல்லையா?எனக்கெதிராக நீங்கள் பண்ணிய ஆங்கில நாட்டாமையையே ரசித்தவன் இல்லையா?

Murali Srinivas
22nd April 2014, 11:45 PM
அந்த நாள் ஞாபகம்- தொடர்ச்சி

அடுத்த கட்டமாக இரண்டு படங்களின் சாதக பாதகங்களை பற்றிய விவாதம் ஆரம்பித்தது. தேவர் சில வருடங்களுக்கு முன் தமிழில் தயாரித்த {வெற்றிப் பெறாத) தெய்வச் செயல் படத்தை ஒரு சில மாற்றங்களோடு இந்தியில் ஹாத்தி மேரா சாத்தி என்ற பெயரில் ராஜேஷ் கன்னாவை வைத்து எடுக்க, அது ஒரு பிரமாண்ட வெற்றி பெற்றது. அதையே தமிழில் எம்.ஜி.ஆரை வைத்து நல்ல நேரம் என்று எடுத்தார்

ஏற்கனவே வேற்று மொழியில் வெற்றி பெற்ற படம். அதுவும் தவிர எம்.ஜி.ஆரை வைத்து 16 படங்கள் தயாரித்த தேவர் முதன் முறையாக கலர் படம் எடுக்கிறார். [ஆனால் அவர் எம்.ஜி.ஆரை வைத்து எடுத்த கடைசி கலர் படமும் இதுதான். இதற்கு பிறகு தேவர் எம்.ஜி.ஆரை வைத்து படம் தயாரிக்கவில்லை].

இந்த பக்கத்தில் ஞான ஒளி மேஜர் நாடக குழுவால் நாடகமாக நடத்தப்பட்டு பிரபலமானது. நாடகத்தை பார்த்தவர்கள் கதை அம்சத்தை வெகுவாக பாராட்டினார்கள். மேலும் வியட்நாம் வீடு படத்திற்கு பிறகு நடிகர் திலகத்திற்காக சுந்தரம் கதை வசனம் எழுதிய படம். பி.மாதவன் இயக்கம். ஆனால் கருப்பு வெள்ளை படம். மதுரையில் நியூசினிமாவில் ரிலீஸ். ராஜாவிற்கும் இந்த படத்திற்கும் 45 நாட்கள் தான் இடைவெளி.

நான் தெய்வ செயல், ஹாத்தி மேரா சாத்தி இரண்டுமே பார்த்தேன். ஆனால் ஞான ஒளி நாடகம் பார்க்கவில்லை.

இப்போது என்னுடைய பிரச்சனைக்கு வருகிறேன். படம் வெளியானது மார்ச் 11 சனிக்கிழமை. மார்ச் 13 திங்கள்கிழமை முதல், ஆண்டு தேர்வுகள் [annual exams]ஆரம்பம். அதற்கு முன்னோடியாக சனிக்கிழமை அன்று டிராயிங் [drawing] தேர்வு. ஆக ஓபனிங் ஷோ மட்டுமல்ல, படமே எக்ஸாம்ஸ் முடியும் வரை பார்க்க முடியாது. என் கசினுக்கு பிரச்சனையில்லை. அவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்ததால் எளிதாக செல்ல முடியும். அந்த காலக் கட்டங்களில் எப்போதுமே ஒரு படம் வெளியாகும் நேரம் நெருங்க நெருங்க படத்தை பற்றி வெளி வரக் கூடிய செய்திகள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்புடனும் ஆர்வத்துடனும் பேசப்படும். இது போன்ற செய்திகளை என் கஸின் எனக்கு சொல்லுவான். அப்படிப்பட்டச் செய்திகளில் ஒன்று தான் சென்னையில் ஞான ஒளி ஐந்து அரங்குகளில் திரையிடப்படும் செய்தி. நாங்கள் முதன் முறையாக இப்படிப்பட்ட சாதனை நிகழ்கிறது என்று நினைத்துக் கொண்டிருந்தோம். பிறகு தான் தெரிந்தது இந்த சாதனையை நடிகர் திலகமே 1954-ம் ஆண்டில் எதிர்பாராதது படம் மூலமாக செய்திருக்கிறார் என்று.

நல்ல நேரம் வெளியானது. படத்திற்கு Divided Opinion. அதாவது யானைகள் வரும் காட்சிகள், அவை செய்யும் சில சாகசங்கள் என்று அமைக்கப்பட்டிருந்த சில காட்சிகள் நாயகனின் முக்கியத்துவத்தை குறைத்து விட்டன என்று தீவிர ரசிகர்கள் குறைப்பட்டார்கள். பொதுவாக பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பிடிக்கும் என்று கருத்து வந்தது.

மறு நாள் ஞான ஒளி வெளியானது. நான் தேர்வு எழுதி விட்டு மதியம் வீட்டிற்கு வந்து விட்டேன். எங்கள் வீடு சென்ட்ரல் மற்றும் நியூ சினிமா இடையில் அமைந்திருக்கும். திடீரென்று சரவெடி பட்டாசு சத்தம். ஓடி சென்று பார்த்தால் ஓபனிங் ஷோ காலைக் காட்சி முடிந்து மக்கள் வெளியே வருகிறார்கள். ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். அணை உடைந்து பாயும் மகிழ்ச்சி ரசிகர்கள் மத்தியில். விசில், வாழ்க கோஷம் முதலியன உச்ச ஸ்தாயில் ஒலிக்கிறது. படம் பார்த்து விட்டு வந்த என் கஸின் சொன்னது நடிப்பு + ஸ்டைல் - பிச்சு ஒதறிட்டார். அவன் முக்கியமாக சொன்ன மற்றொரு விஷயம் வசனம். அதாவது ஆண்டனி மற்றும் லாரன்ஸ் இடையே நடக்கும் One upmanship போட்டியில் பேசப்படும் வசனங்கள். ஏற்கனவே பார்க்க முடியவில்லையே என்று இருந்த என்னை மேலும் ஏங்க வைத்தன அவனது வார்த்தைகள்.

மாலையில் சுமார் 5 மணி அளவில் வேறொரு வேலையாக டவுன் ஹால் ரோடு சென்ற நாங்கள் இருவரும் அவனது நண்பர் ஒருவரை (சொல்லாமலே தெரிந்திருக்கும் சந்தித்தவர் சிவாஜி ரசிகரென்று) பார்த்தோம். அவரும் படத்தை பற்றி கேள்விப்பட்டிருக்கிறார். என் கசினிடம் படத்தைப் பற்றி கேட்டார். நைட் ஷோ போகப் போவதாகவும் மாலை சுமார் 7 மணிக்கு போய் வரிசையில் நின்றால் டிக்கெட் கிடைக்காது? என்று அவர் கேட்க, ட்ரை பண்ணுங்க என்றான் என் கஸின். இந்த நிகழ்வெல்லாம் என் ஏக்கத்தை அதிகரித்தது.

நான் எக்ஸாம்ஸ் எல்லாம் முடிந்து பதினாறாம் நாள் மார்ச் 26 அன்று ஞாயிற்றுக்கிழமை படம் பார்த்தேன். அப்போதும் படத்திற்கு பெரிய ஆரவாரம். குறிப்பாக பிரசவத்தின் போது மனைவி இறந்து போன செய்தி வரும்போது எந்த வசனமும் இல்லாமல் அந்த முகத்தின் தசைகள் மட்டுமே துடிக்கும் காட்சி, யாருக்கோ செய்த சவப்பெட்டி தன் மனைவிக்கே பயன்படப் போவதை எண்ணி குமுறும் சீன், அதன் பிறகு தேவனே என்னை பாருங்கள் பாடல் காட்சி. குறிப்பாக நான் அழுவதா சிரிப்பதா கர்த்தரே என்ற வரிக்கு முன்னால் வரும் நடைக்கும் அந்த போஸிற்க்கும் தியேட்டர் அலறியது. அந்தோனி, அருணாக மாறிய பின் வரும் ஒவ்வொரு ஸ்டைல்- கும் பெரிய ஆரவாரம். படத்தில் ஒரு சில அரசியல் பொடிகள் வரும். இறந்து போன பாதிரியார் சிலையை வைக்க வேண்டும் என்று சொல்லும் போது அருணாக வரும் நடிகர் திலகம் சொல்லுவார். "மறைந்து போன தலைவர்கள் சொன்ன நல்ல கொள்கைகளை கடைப்பிடிப்பது தான் நாம் அவர்களுக்கு செலுத்தும் மரியாதை. சிலை வைப்பது அல்ல". இது அன்று தமிழகத்தில் நிலவிய சிலை வைக்கும் obsession-ஐ குறித்ததால் தியேட்டரில் பயங்கர அப்ளாஸ்.

இப்படியாக படம் பார்த்தேன். படம் ஓடி முடிப்பதற்குள் மொத்தம் மூன்று முறை பார்த்தேன்.

அன்புடன்

JamesFague
23rd April 2014, 10:19 PM
Mr Murali Sir,

Pls do write each and every movie with your style.





Watched the movie during my childhood days with mother at Chennai Plaza
Theatre. Not only this each and every NT movie were seen with my mother
at Shanthi,Pilot,Chitra,Wellington and othern theatres near Mount Road.

Murali Srinivas
25th April 2014, 11:33 PM
அந்த நாள் ஞாபகம்

ஞான ஒளி படம் தமிழகம் எங்கும் மிகப் பெரிய வெற்றி. சென்னையில் ஐந்து அரங்குகளில் திரையிடப்பட்டும் மக்கள் வெள்ளம் அலை மோதுவதாக வந்த செய்தி மேலும் ரசிகர்களை மகிழ்ச்சிகுள்ளாக்கியது. நாடகமாக நடத்தப்பட்டு படமானதால் அதை பார்ப்பதற்கு சபாக்கள் சார்பில் சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. சென்னையில் மட்டும் 55 சிறப்பு காட்சிகள் நடைபெற்றது. அது மட்டுமல்ல அவை அனைத்தும் ஹவுஸ் புல் ஆனது மற்றொரு சாதனையாகும்.

நல்ல நேரம் திரைப்படமும் நன்றாகவே ஓடியது.

அடுத்த படம் பட்டிக்காடா பட்டணமா. இயக்குனர் பி.மாதவனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான அருண் பிரசாத் மூவிஸ், எங்க ஊர் ராஜா, ராமன் எத்தனை ராமனடி படங்களுக்கு பிறகு தயாரித்த படம். கிராமத்து பின்னணியில் அமைந்த கதை என்பது தெரியும். ஆனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இல்லை. நடிகர் திலகத்தின் இரண்டு வித கெட் அப்கள் [குடுமி வைத்த கெட் அப் மற்றும் ஹிப்பி ஸ்டைல் தலை முடி வைத்த கெட் அப்] ஆவலை தூண்டியிருந்தாலும் ஆவேசம் இல்லை. அதற்கு ஒரு காரணம் அப்போது படப்பிடிப்பில் இருந்த நடிகர் திலகத்தின் படங்கள் தான்.

ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஆவலை தூண்டியிருந்த படங்கள் தர்மம் எங்கே, வசந்த மாளிகை, என்னைப் போல் ஒருவன், ராஜ ராஜ சோழன், பாலாஜியின் புதிய படம் [நீதி என்று பெயர் வைக்கப்படவில்லை], என்.வி.ராமசாமி தயாரிக்கும் படம் [ரோஜாவின் ராஜா] என்பவை. மேற் சொன்னவை எல்லாமே கலர் படங்கள் என்பது கூட பட்டிக்காடா பட்டணமா என்ற கருப்பு வெள்ளை படத்திற்கு எதிர்பார்ப்பை குறைப்பதற்கு ஒரு காரணமானது.

இதற்கிடையே ராஜா, ஞான ஒளி விடுத்த சவாலையும் சமாளித்து மதுரை சென்ட்ரல் திரையரங்கில் நூறு நாட்களை கடந்தது. ஞான ஒளி 50 நாட்களை கடந்தது. பட்டிக்காடா பட்டணமாவின் மதுரை விநியோகஸ்தரான பாரத் மூவிஸ் கார்பரஷேன், சென்ட்ரலில் படத்தை ஒப்பந்தம் செய்து விட்டு மூன்று வார டெர்ம்ஸ் போட்டுக் கொண்டார்கள். இது என்னவென்றால் அன்றைய சூழலில் நிலவி வந்த பங்கு விகிதாசார முறை. அதாவது முதல் மூன்று வாரங்களுக்கு விநியோகஸ்தருக்கு வசூலின் பங்கில் அதிகம் வழங்க வேண்டும். அதற்கு பிறகு வசூலாவதில் சரி பாதியாக பகிர்ந்து கொள்வது என்று அமையும். பெரிய எதிர்பார்ப்பு இல்லையென்பதால் மூன்று வாரம் மட்டுமே போடப்பட்டது.

1972 -ம் வருடம் மே 6 அன்று ரிலீஸ் என்று விளம்பரம் வந்தது. இதை எப்படியும் ஓபனிங் ஷோ பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

(தொடரும்)

அன்புடன்

அன்றைய நாட்களின் நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான போது நடந்த நிகழ்வுகளின் தொகுப்பாக வெளிவரும் இந்த அந்த நாள் ஞாபகம் தொடர் பதிவிற்கு பாராட்டு தெரிவித்த வாசு மற்றும் கோபால் ஆகியோருக்கு நன்றி!

HARISH2619
26th April 2014, 01:16 PM
திரு முரளி சார்,
நீங்கள் எழுதும் தொடர்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தமான அந்த நாள் ஞாபகம் தொடரை படிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.மிகவும் ரசித்து படித்து அனுபவித்துகொண்டிருக்கிறேன் .நன்றி பல கோடி .

Murali Srinivas
1st May 2014, 01:03 AM
அந்த நாள் ஞாபகம்

சம்மர் லீவ் என்பதால் படம் பார்க்க போவது பெரிய விஷயமில்லை. போகலாம் என்று முடிவு எடுத்தவுடன் டிக்கெட் வாங்க முயற்சி எடுத்தோம்.மன்ற டிக்கெட்கள் கிடைக்கவில்லை. படத்திற்கு எதிர்பார்ப்பு இல்லையென்றாலும் கூட அவரின் மாபெரும் ரசிகர் கூட்டம் படத்தை வரவேற்க தயாராகி விட்டது என்பது புரிந்தது. சரி எப்படியும் வாங்கி விடலாம் என்று ஒரு நம்பிக்கை. முதல் நாள் இரவு வரை முயற்சி எடுத்தோம். ஆனால் பலன் இல்லை. சரி எப்படியும் மறு நாள் காலை தியேட்டர் பக்கம் போய் ட்ரை பண்ணலாம் என்று முடிவானது.

6ந் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கே சென்ட்ரல் சினிமா வாசலில் ஆஜர். ஆனால் அங்கேயும் ஏமாற்றம். படம் பார்க்க வந்திருந்த எங்களுக்கு தெரிந்தவர்கள் அனைவரிடமும் கேட்டுப் பார்த்து விட்டோம். பலன் பூஜ்யம். டைம் போய்க் கொண்டிருக்கிறது. Q -வில் நின்று டிக்கெட் வாங்குவதெல்லாம் நடக்காத விஷயம். காரணம் சரியான கூட்டம். ஹவுஸ் புல் போர்டு மாட்டி விட்டார்கள். தியேட்டரின் பின் பக்க வாசல் பக்கம் போய் பார்க்கலாம் என்று அங்கே போனோம். அப்போதுதான் மன்ற டிக்கெட்கள் வைத்திருந்தவர்களை உள்ளே விட்டுக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு நம்பிக்கையில் நாங்களும் உள்ளே நுழைந்து விட்டோம். உள்ளே போனாலும் டிக்கெட் இல்லை. ஆபிஸ் ரூம், கவுன்ட்டர் என்று எங்கே கேட்டாலும் டிக்கெட் இல்லை என்ற ஒரே பதில். மட்டுமல்ல, டிக்கெட் இல்லாதவங்களை எல்லாம் வெளியே அனுப்புங்க என்ற சத்தமும் கேட்கிறது. நாங்கள் அப்படி இப்படி என்று சுத்திக் கொண்டிருக்கிறோம். சனிக்கிழமை என்பதால் ராகு கால நேரம் முடிந்தவுடன் [9 -10.30 ] படம் ஆரம்பிக்கப் போகிறார்கள். கடைசியாக உள்ளே இருக்கும் கூல் ட்ரிங்க்ஸ் ஸ்டால் அருகில் போனோம். அங்கே என் கசினுக்கு தெரிந்த ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரிடமும் விஷயத்தை சொல்லி புலம்ப, எத்தனை டிக்கெட் வேணும் என்று அவர் கேட்டாரே பார்க்கலாம். எங்களுக்கு நம்பவே முடியவில்லை. இரண்டு என்று சொன்னவுடன் உடனே இரண்டு டிக்கெட் எடுத்துக் கொடுத்தார். எங்களுக்கு புதையல் கிடைத்த சந்தோஷம். [குறிப்பிட வேண்டிய விஷயம் அவர் எம்.ஜி.ஆர். ரசிகர்].

அவரிடம் பணத்தை கொடுத்து விட்டு balance கூட வாங்கவில்லை. ஆனால் counterfoil கிழிக்கப்பட்டிருந்தது. சந்தேகம் வந்து விட்டது. உடனே என் கஸின் முதலில் என்னை மட்டும் ஒரு டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே போக சொன்னான். சிக்கல் எதுவும் இல்லாமல் நான் உள்ளே செல்வதை பார்த்து விட்டு அவனும் உள்ளே வர, இடம் பிடித்து போய் உட்கார்ந்தோம். ஒரு பெரிய சாதனையை செய்தது போல பெருமிதம். ஆனால் இன்று வரை டிக்கெட் கிடைக்காமல் அதிலும் ஓபனிங் ஷோ டிக்கெட் கிடைக்காமல் இவ்வளவு கஷ்டம் வேறு எந்த படத்திற்கும் பட்டதில்லை.

(தொடரும்)

நன்றி செந்தில்!

mr_karthik
1st May 2014, 06:56 PM
Re-Submission of post written in October 18, 2011

1971 அக்டோபர் 18 - 'பாபு' நினைவலைகள்.....

தீபாவளியன்று நடிகர்திலகத்தின் 'பாபு' படம் ரிலீஸாகிறதென்ற பெருமிதம் தீபாவளியை பன்மடங்கு உற்சாகமாக்கியது. கள்ளமறியா, கவலையில்லா பள்ளிப்பருவம். ரிலீஸுக்கு ஒருவாரம் முன்பு ரிசர்வேஷன் ஆரம்பிக்கும்போதே, அதற்காகவே சேர்த்து வைத்திருந்த பணத்தில் வடசென்னை 'கிரௌன்' திரையரங்கில் டிக்கட் ரிசர்வ் செய்து விட்டேன். (முதல் வகுப்பு டிக்கட் 2ரூ 90பை. அதற்கே அந்தப்பாடு).

தீபாவளிக்கு முதல் நாள் கிரௌனில் சவாலே சமாளி 107 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்ய, மறுநாள் 'பாபு' ரிலீஸ். அதே தீபாவளிக்கு கிரௌன் தியேட்டரை அடுத்த ஸ்ரீ கிருஷ்ணா அரங்கில் ரிக்ஷாக்காரன் 140 நாட்களில் மாற்றப்பட்டு அங்கே 'நீரும் நெருப்பும்' ரிலீஸ் ஆகிறது. மே 29-ல் ரிக்ஷாக்காரனுக்குப்பிறகு அடுத்தபடம் அக்.18-ல்தான் வெளியாகிறது. ஆனால் இங்கே ஜூலை 3-ல் சவாலே சமாளி வெளியான பின் அக் 18-க்கு முன் இரண்டு படங்கள் (தேனும் பாலும், மூன்று தெய்வங்கள்) வந்து விட்டன. மூன்றாவதாக அக்.18-ல் பாபு)

தீபாவளிக்கு முன் டீக்கடை, பேப்பர் கடை எங்கு பார்த்தாலும் 'நீரும் நெருப்பும்' பற்றித்தான் பேச்சு. பாபு படத்தை ரசிகர்களைத்தவிர யாரும் கண்டுகொள்ளவில்லை. (இவ்விரு படங்களோடு மக்கள் கலைஞர் ஜெய்சங்கரின் வண்ணப்படம் 'வீட்டுக்கு ஒரு பிள்ளை'யும், கே.எஸ்.ஜி.யின் பிரம்மாண்ட வண்ணப்படம் 'ஆதிபராசக்தி'யும் ரிலீஸ்). ஆக தீபாவளி ரேஸில் மூன்று வண்ணப்படங்களுக்கு மத்தியில் ஒரே கருப்பு வெள்ளைப்படமாக 'பாபு' மட்டுமே வந்தது. ரசிகர்களுக்கெல்லாம் ஒரே சோர்வு. நடிகர்திலகம் வேறு ஏதாவது பிரம்மாண்ட வண்ணப்படத்தை இந்த தீபாவளிக்கு வெளியிட்டிருக்கலாமே என்று ரசிகர்களுக்குள் பேச்சு. (அப்போது இரு பிரம்மாண்ட வண்ணப்படங்களாக ராஜாவும், தர்மம் எங்கேயும் தயாரிப்பில் இருந்தன).

எதிர் அணி படத்தைப்பற்றி என்னென்னவோ பேச்சுக்கள், எதிர்பார்ப்புக்கள், இன்னொரு வெள்ளி விழாப்படம் என்ற ஆரூடங்கள், இதற்கு முந்தைய சைக்கிள் ரிக்ஷாவையே ஓட்டத்திலும் வசூலிலும் முந்தும் என்ற கணிப்புக்கள், இரட்டை வேடமாம், ஈஸ்ட்மென் கலரில் உருவாகியிருக்கிறதாம், பிரம்மாண்ட செட்டுக்களாம், ஏகப்பட்ட நடிகர்களாம், ரொம்ப நாளைக்கப்புறம் கத்திச்சண்டக்காட்சிகள் இடம் பெற்றுள்ளதாம், நிச்சயம் பயங்கர வெற்றிதான்.... பாவம் கணேசனின் பாபு படம் இப்போட்டியில் சிக்கி நசுங்கப்போகிறது, அதுல அந்த ஆளுக்கு சரியான ஜோடிகூட இல்லையாம், மலைநாட்டு மங்கையில் நடித்த விஜயஸ்ரீதான் ஜோடியாம் என்றெல்லாம் ஏகடியங்கள், கிண்டல்கள், கேலிப்பேச்சுக்கள். நடிகர்திலகத்தின் ரசிகர்கள் தரப்பில் வழக்கம்போல பொறுமை காக்கப்பட்டது.

ஆனால் எல்லா ஆர்ப்பாட்டமும் தீபாவளிக்கு படங்கள் ரிலீஸாகும் வரைதான். வெளியானதோ இல்லையோ நிலைமை தலைகீழாக மாறியது. சென்னையில் மட்டுமல்ல தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் 'பாபு' வசூலில் முந்தியது. எந்தப்படம் பெரும் போட்டியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டதோ அது பின் தங்கியது. நாட்கள் ஆக ஆக, 'பாபு'வுக்கும் ஆதிபராசக்திக்கும்தான் எல்லா ஊர்களிலும் போட்டியாக இருந்தது. மூன்றாவது இடத்தை ஜெய்சங்கரின் வீட்டுக்கு ஒரு பிள்ளை பிடிக்க, ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட 'பிரம்மாண்டம்' பின் தங்கி நாலாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

ஓலைக்குடிசை, கைரிக்ஷா, கருப்புவெள்ளை, வெறும் நான்கே முக்கிய கதாபாத்திரங்கள், கிழிந்த உடைகள், தாடி மீசை இவற்றோடு நடிகர்திலகத்தின் 'பாபு' போட்ட போடில் வண்ணங்கள் வெளுத்துப்போயின, பிரம்மாண்டங்கள் சரிந்தன. பாபுவுடன் போட்டியிட வந்த படம் பிரீஸ்டீஜுக்காக 50 நாட்கள் ஓடுவதே இழுபறியாகிப்போனது. பாபுவோ சர்வ சாதாரணமாக வசூலை வாரிக்குவித்தது.

இதில் எதிர் அணிக்கு இன்னொரு சோகம் என்னவென்றால், வழக்கமாக 'அவரது' படங்களைப்பொறுத்தவரை, ஓட்டத்தில் சுமாரான படங்களில் கூட பாடல்கள் பாப்புலராகி விடும். ஆனால் இப்போது அதுவும் பொய்த்துப்போனது. அப்படத்தின் பாடல்கள் எங்கும் பாப்புலராகவேயில்லை (இன்றுவரை). ஆனால் பாபுவின் 'வரதப்பா வரதப்பா', 'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே' பாடல்கள் அட்டகாசமாகப் பாப்புலராயின. வானொலிகளில் தினமும் ஒலித்தன. கேலியும் கிண்டலும் பேசிய வாய்கள் அடைத்துப்போயின. ரிலீஸுக்கு முன் சோர்வாகக்காணப்பட்ட நடிகர்திலகத்தின் ரசிகர்கள் தெம்பாக வலம் வந்தனர். 1972-ம் ஆண்டின் அட்டகாச பவனியை 1971 இறுதியில் 'பாபு' துவக்கி வைத்தது.

அக்டோபர் 18 மாலைக்காட்சிக்கு டிக்கட் வாங்கியிருந்தேன். (தீபாவளியன்றைக்கு மாலைக்காட்சிக்கு டிக்கட் கிடைத்தால் அது எவரெஸ்ட்டில் ஏறியது போல). டிக்கட் ரிசர்வ் செய்திருந்தாலும் கரெக்டாக காட்சி நேரத்துக்குப் போவது எனக்குப்பிடிக்காது. கியூவில் நின்று டிக்கட் வாங்குபவர்களைவிட முன்னதாகவே போய் விடுவேன். அன்று மாலை மூணரைக்கெல்லாம் கிரௌன் தியேட்டர் வாசலில் ஆஜர். வழக்கம்போல ரசிகர்க மன்றங்களால் பந்தல்கள், ஏகப்பட்ட தோரணங்கள், கொடிகள், நட்சத்திரங்கள், கட்-அவுட்களுக்கு மாலைகள் என ஏக அமர்க்களங்கள் (கிரௌன், ஸ்ரீகிருஷ்ணா இரண்டு தியேட்டர்களிலும்). அதுபோல இரண்டு தியேட்டர் முன்பும் தெருவையே அடைத்து ரசிகர் கூட்டங்கள். அவ்வப்போது பட்டாசு வெடிக்கும் சத்தம் அந்த இடத்தையே இரண்டு பண்ணியது.

ஒரு வழியாக மேட்னி ஷோ முடிந்து கூட்டம் வெளியே வந்தது. வெளியில் நின்ற ரசிகர்கள் அவர்களை மொய்த்து ரிசல்ட் கேட்கத்துவங்கினோம். தாய்மார்கள் பெரும்பாலோர் கண்களைத் துடைத்துக்கொண்டு வெளியில் வந்தனர், ரசிகர்களும்தான். எங்களுக்குப்புரியத் தொடங்கியது. கிளைமாக்ஸ் கண்டிப்பாக சோகம் போலும். ஒரு ரசிகர் சொன்னார் 'பாசமலர், வியட்நாம் வீடு படங்களுக்குப்பிறகு இந்தப்படத்துலதான்யா நான் அழுதேன்' என்று.

மாலைக்காட்சிக்கு கரண்ட் டிக்கட் விற்பனை துவங்கியது. அவ்வளவுதான் அதுவரை போலீஸார் கட்டுப்படுத்தி வைத்திருந்த கூட்டம் அனைத்தும் உடைபட்ட வெள்ளமென கவுண்ட்டரை நோக்கி முன்னேறியது. முன்பதிவு செய்திருந்த டிக்கட்டைக்காட்டி உள்ளே சென்றோம். விளம்பரப்படங்கள் ஓடிக்கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் அரங்கு நிறைந்து விட்டது. ரசிகர்களின் பொறுமையை மேலும் சோதிக்காமல் உடனே நியூஸ் ரீல் போட்டு, அது முடிந்ததும் படத்தைத் துவக்கினார்கள். படம் துவங்கியது முதல் ரசிகர்களின் அலப்பறையும், விசிலும் கைதட்டலும் படத்தை களைகட்ட வைத்தன. இடைவேளை வரை படம் படு உற்சாகமாகப்போனது. அவர் ஸ்டைலாக முகத்தில் புன்சிரிப்புடன் ரிக்ஷா இழுத்துக்கொண்டு ஓடுவது, பாலாஜியின் அன்பில் நெகிழ்வது, இலையில் இருந்த கத்தரிக்காயை ஸ்ரீ தேவி எடுத்துச்சாப்பிட்டதும் பதறுவது, அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் பாலாஜியின் பெருந்தன்மையில் கண் கலங்குவது, அந்த சம்பவத்தை ரயில்வே ட்ராக்கில் உட்கார்ந்துகொண்டு காதலி விஜயஸ்ரீயிடம் குதூகலமாகச்சொல்வது, வரதப்பா வரதப்பா பாடலின்போது ரிக்ஷாக்காரனுக்கே உரிய ஸ்டைலுடன் ஆடுவது, கீசக வதம் நாடகம், விஜயஸ்ரீயின் பரிதாப மரணம், அதைத்தொடர்ந்து நம்பிராஜனுடன் சண்டை என்று படம் படு அட்டகாசம்.

இடைவேளைக்குப்பின்னர் நம்மை அப்படியே கதையில் ஒன்றவைத்து சோகத்தின் உச்சிக்குக் கொண்டு சென்றுவிடுவார். சௌகாரின் பாந்தமான நடிப்பு பெரும் துணையாக இருக்கும். பாபுவை உதாசீனமாகப்பேசும் தன் மகள் நிர்மலாவை கண்மண் தெரியாமல் அடிப்பதும், பின்னர் தான் பிச்சையெடுத்த ப்ளாஷ் பேக்கை நினைத்துப்பார்க்கும் நிர்மலா, மாமா என்று பாபுவைக் கட்டி அணைத்துக்கொண்டதும் தள்ளி நின்று பாசத்தில் கண் கலங்குவத்மாக சௌகாரும் தன் பங்கை சிறப்பாக நிறைவேற்றியிருப்பார். கடைசியில் நிர்மலாவின் திருமணத்தின்போது அவரை தனியே சந்தித்து நாய் பொம்மையை நடிகர்திலகம் நிர்மலாவுக்குப் பரிசாகக்கொடுக்கும்போது தியேட்டரே கதறி அழுதது. தன்னைச்சுற்றி அத்தனை பேரும் தன்மீது அவ்வளவு அன்பு செலுத்துவது கண்டு அவர் நெகிழ்ச்சியோடு உயிரிழப்பதோடு படம் நிறைவடைய கலங்காத கண்களும் இருக்க முடியுமா?.

எங்கள் 'பாபு'வுக்கு இன்று 40 ஆண்டுகள் நிறைந்தன. இன்னும் பலநூறு ஆண்டுகள் ரசிகர்கள் இதயங்களில் சிரஞ்சீவியாக வாழ்வார்.

Murali Srinivas
1st May 2014, 11:42 PM
கோடை வெயில் கொளுத்தும் போது குளிர் மழை பெய்யாதா என்று ஏங்குவோம். அப்படி குளிர் மழையாய் மீண்டும் மீள் பதிவோடு அதுவும் எங்கள் பாபுவோடு மீண்டும் வந்த எங்கள் அருமை நண்பர் கார்த்திக் அவர்களே! வருக! வருக! உங்கள் எழுத்துக்களை அள்ளி தருக!

அன்புடன்

mr_karthik
2nd May 2014, 04:33 PM
வாஞ்சையுடன் வரவேற்ற அன்பு சகோதரர் முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு,

அடுத்த மீள்பதிவு.....

ஆண்டவன் கட்டளை

முதல் வெளியீட்டின்போது (1964) பார்க்கவில்லை. அப்போது சின்னஞ்சிறுவன். பின் எப்போது முதலில் பார்த்தேன்?. 1971-ல் ஊரிலிருந்து வந்திருந்த உறவினர் சிலரை வழியனுப்ப எக்மோர் ரயில் நிலையம் சென்றபோது (போகும்போது டாக்சி, வரும்போது இரண்டே பேர் என்பதால் புறநகர் ரயில்) புறநகர் ரயிலுக்கு டிக்கட் எடுக்குமிடதுக்கு வெளியில் பளிச்சென்ற போஸ்ட்டர் 'இப்பொழுது நடைபெறுகிறது சன் தியேட்டரில்' என்ற வாசகத்துடன் அட்டகாசமான 'ஆண்டவன் கட்டளை' போஸ்ட்டர். அதைப்பார்த்ததும் முடிவு செய்து விட்டேன். நாளை போய்விட வேண்டுமென்று. காரணம் மறுநாள் வியாழக்கிழமை.கடைசி நாளாக இருக்கலாம் என்பதால் அவசரப்பட்டேன்.

மறுநாள் நண்பர்களிடம் சொன்னபோது அதில் ஒருவன் சொன்னான்.. 'டேய் அவசரக்காரா, இதுக்காக மன்னடியிலிருந்து தேனாம்பேட்டை போறேங்கிறியே. இதைப் பார்த்தியா' என்று கையிலிருந்த தினத்தந்தி பேப்பரை விரித்துக் கட்டினான். அதில் 'நாளை முதல் பிரபாத்தில் தினசரி 3 காட்சிகள் ஆண்டவன் கட்டளை' என்ற விளம்பரம் வெளியாகியிருந்தது. அவ்வளவுதான் மனம் குதியாட்டம் போட்டது. பின்னே விட்டுக்குப் பின்புறம் உள்ள தியேட்டரிலேயே வருகிறதென்றால் வேறென்ன வேண்டும்?. 'அப்படின்னா நாளைக்கே போயிடுவோம்' என்று நான் சொன்னதும் 'இப்பவும் அவசரப்படுறான் பாரு. நாம எல்லோரும் இந்தப்படத்தை முதல் முறையாக பார்க்கபோறோம். அதை ஹவுஸ்புல் காட்சியில் பார்த்தால்தான் நல்லாயிருக்கும். சண்டே ஈவ்னிங் ஷோ போவோம்' என்றான் இன்னொருத்தன். சரியென்று பட்டதால் அதுவே முடிவாயிற்று. இருந்தாலும் வெள்ளி சனியில் தியேட்டர் விசிட் தவறவில்லை எனக்கு.

முதல் நாளில் இருந்தே நல்ல கூட்டம். கடைசி இரண்டு கிளாஸ் புல்லானது மற்ற கிளாஸ்களிலும் கௌரவமான கூட்டம். அப்படீன்னா ஞாயிறு நிச்சயம் ஹவுஸ்புல் என்று முடிவு செய்து கொண்டேன். ஞாயிறு அன்று மாலை நாலரைக்கெல்லாம் சென்றுவிட்டோம், எப்படியும் சுவர் தடுப்புக்குள் போய் நின்றுவிட வேண்டும் என்பதற்காக. அப்போதே நாலைந்து பேர் உள்ளே நின்றனர். நேரம் ஆக ஆக கூட்டம் சேரத்தொடங்கியது. மனம் சந்தோஷத்தில் துள்ளியது.

கியூவில் நிற்கும்போதே ஒரு பெரியவர், 'நான் இந்தப்படத்தை பத்து தடவைக்கு மேல் பார்த்திருக்கிறேன்' என்று ஆரம்பித்து படத்தின் சிறப்புக்களை அள்ளிக்கடாசினார். அப்போது இன்னொருவர் 'பெரியவரே கதையைச் சொல்லிடாதீங்க' என்று உஷார்படுத்தினார் (அவரும் முதல் தடவை பார்க்கிறார் போலும்). அவ்வப்போது வெளியில் எட்டி எட்டி பார்த்துக்கொண்டோம் நல்ல கூட்டம். மேட்னி ஷோ முடிந்ததும் டிக்கட் விநியோகம் துவங்கியது. இடையில் நுழைந்தவர்கள் எல்லாம் வாங்கியது போக, கிட்டத்தட்ட 25 வது டிக்கட் கிடைத்தது. பால்கனிக்கு அடுத்த கிளாஸ். உள்ளே போய் இடம் போட்டு, அங்கிருந்தவரை பர்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, வெளியில் வந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தோம். எதிர்பார்த்தது போலவே ஹவுஸ்புல் போர்டு போட்டதும் மன்றத்தினர் பட்டாசு வெடித்தனர். உள்ளே ஓடினோம். விளம்பரம் ஓடிக்கொண்டிருந்தது.

'இந்தியன் நியுஸ் ரிவியூ' ஓடி முடிந்ததும் படம் தொடங்கியது. (தொலைக்காட்சிகளில் செய்திகள் துவங்கப்பட்டபின் தியேட்டர்களில் நியூஸ் ரீல் காட்டும் வழக்கம் நிறுத்தப்பட்டது). சென்சார் சர்டிபிக்கேட்டை அடுத்து பி.எஸ்.வி. பிக்சர்ஸ் எம்ப்ளம் பார்த்ததுமே கைதட்டல். ப்ரொபசர் கிருஷ்ணன் தரிசனத்தின்போது உச்சகட்ட கைதட்டல். இம்மாதிரி ஆரவாரத்தோடு பார்ப்பதை மிஸ்பண்ண இருந்தோமே என்று ஒருகணம் நினைத்தேன். ப்ரொபசர் கிளாஸில் பாடம் நடத்தும் போது அவரது ஒவ்வொரு அசைவும் ரசிக்கப்பட்டது. அப்போது கேமரா திரும்பி மாணவர்களைக் காட்டும்போது, முதல் வரிசையில் அமர்ந்திருந்த இரட்டை ஜடைபோட்ட தேவதையைக் கண்டதும் கைதட்டல். பக்கத்திலிருந்தவன் என் விலாவில் இடித்து 'டேய் உங்காளுடா' என்றான். எனக்கு அதெல்லாம் கவனமில்லை. பத்து ஈக்கள் உள்ளே போனால் கூட தெரியாதவண்ணம் வாய் பிளந்திருக்க, 'இப்படி ஒரு அழகா, இதற்கு முன் எத்தனையோ படத்தில் பார்த்திருக்கிறோமே. இவ்வளவு கியூட் தெரியலையே' என்ற யோசனையுடன் இமை மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். (இத்தனைக்கும் இதற்கு முன் எங்கிருந்தோ வந்தாளில் தலைவருக்கு அண்ணியாக, யாருக்கோ ஜோடியாகவெல்லாம் பார்த்தாகி விட்டது). ப்ரொபசர் கிருஷ்ணனைக் கவர்வதற்காக அவர் அடிக்கடி தனது இரட்டை ஜடையை முன்னால் இழுத்துவிட்டுக் கொண்டு காந்தப்பார்வை பார்க்கும்போது தியேட்டரில் உற்சாகமான கலகலப்பு. ப்ரொபசர் தடுமாறுகிறாரோ இல்லையோ நாம் கிளீன் போல்ட்.

நடிகர்திலகம் தன தாயாருடன் பேசும் காட்சி படத்தின் ஜீவனான காட்சிகளில் ஒன்று. அதில் ஒவ்வொரு வசனத்துக்கும் கைதட்டல் கிடைத்தது. ஹாஸ்டல் விசிட் சென்ற இடத்தில் மாணவிகள் விளைக்கை அணைக்க, சக மாணவி என்று நினைத்து ப்ரோபசரைக் கட்டிப்பிடிக்க, அந்த ஸ்பரிசத்தை எண்ணியபடியே தடுமாறும் இடத்தில் தலைவரின் பெர்பாமன்ஸுக்கு ரசிகர்களிடையே நல்ல ரெஸ்பான்ஸ். அதன்பிறகு தலைவரின் மனசாட்சி உலுக்கி எடுக்கும் இடம்தான் ராகவேந்தர் சார் வர்ணித்த இடம். அந்தக்காட்சி முழுக்க அடங்காத கைதட்டல். ஒரு பழைய படத்துக்கு புதுப்படம் போல வரவேற்பு கிடைத்ததைப்பார்க்க உற்சாகம் தாளவில்லை.

'அலையே வா' பாடலைப்பற்றி எழுதி உணர்த்த முடியாது. பார்த்து உணர வேண்டும். உணர்ந்தோம். இப்போது தொலைக்காட்சி வசதியிருப்பதால் அடிக்கடி பார்ப்பதால் அதன் அருமை பலருக்குத் தெரியவில்லை. தியேட்டரை விட்டால் வேறு கதியில்லை என்ற அந்த காலகட்டத்தில் நின்று உணர்ந்து பார்த்தால் அதன் அருமை தெரியும்.

ஆவலுடன் காத்திருந்த அடுத்த பாடல்..

விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையுடன் புதருக்குள் இருந்து ரயில் தோன்றி பாலத்தில் பயனிக்கத்தொடங்கியபோதே கைதட்டல் எழுந்தது. அப்படியே கேமரா திரும்பி படகில் இருக்கும் லட்சிய ஜோடியை காட்டும்வரை கைதட்டல் ஓயவில்லை. கருப்பு வெள்ளையிலேயே இவ்வளவு அற்புத ஒளிபபதிவா என அசர வைத்தது. என்ன ஒரு நேர்த்தி.

ஒரு தத்துவப்பாடலையே டூயட் பாடலாக்கிய கவியரசர் கண்ணதாசனின் திறமை. அதற்கு ஏற்ற இசையை வழங்கி உச்சத்துக்கு கொண்டு சென்ற மெல்லிசை மன்னர்களின் சாதனை. அதனை கணீரென்று பாடி கலக்கிய சௌந்தர்ராஜன் சுசீலாவின் அற்புதம். நடித்தவர்களைப் பற்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை ஐயாமார்களே... இயக்குனர் சங்கர் ஆயிரம் டூயட்டுகளைப் படமாக்கி இருக்கலாம். ஆனால் அவரது சிறந்த பத்துகளில் இதுவும் ஒன்று என்றால் அது மிகையில்லை. பாடல் முழுக்க கைதட்டலும் விசிலும் கேட்டுக் கொண்டேயிருந்தன. நானோ வேறொரு உலகத்தில், ஏனென்றால் இதில் பங்கேற்ற அனைவரும் எனக்கு வேண்டப்பட்டவர்கள். அழகான பாடலின் முடிவில் தாங்கவொண்ணா துயரம்.

அடுத்த பாடல்.... தன்னுயிர் தந்து மன்னன் உயிர்காத்த அந்த வாயில்லா ஜீவனின் உடலை அடக்கம் செய்துவிட்டு மன்னர்களின் இசைக்கேற்ப தளர்நடை நடக்கும் மன்னனைக் கண்டு கூட்டம் ஆர்ப்பரித்தது. "ஆறு மனமே ஆறு" என்று தொடங்கியதும் ஆறு தெருக்களுக்கு கேட்கும் வண்ணம் கைதட்டல். ஒவ்வொரு படைவீட்டுக்கும் செல்லும்போது விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் என கெட்-அப் மாறும்போதும் கைதட்டல் அடங்கவில்லை. கடைசியில் கடலை தின்னும் காட்சியில் எப்படியிருந்திருக்கும் என்று சொல்லணுமா. முன்சீட்டிலிருந்து ஒருவர் எழுந்து இரண்டு கைகளையும் உயர்த்தியவாறு கத்தினார் "பாவி, இதுக்கெல்லாம் நீதான்யா, நீ மட்டும்தான்யா".

என்ன அற்புத உணர்வைத்தந்த காவியம் "ஆண்டவன் கட்டளை"..

mr_karthik
2nd May 2014, 04:47 PM
முதல் வெளியீட்டில் பார்த்த அனுபவம் (3)

நடிகர்திலகத்தின் கிருஸ்துமஸ் பரிசு 'ரோஜாவின் ராஜா'

1976-ம் ஆண்டு நடிகர்திலகத்துக்கு அவ்வளவு வெற்றிகரமான ஆண்டு அல்ல. அந்த ஆண்டில் வெளிவந்த சில படங்கள் 100 நாட்களைக்கடந்ததுடன், ஒரு படம் இலங்கையில் வெள்ளிவிழாப்படமாகவும் அமைந்தது. இருப்பினும் அவருக்கு இதற்கு முந்தைய ஆன்டுகளைப்போல பரபரப்பான ஆண்டு அல்ல. அதற்குக்காரணம், இந்த ஆண்டின் துவக்கத்தில் தமிழக அரசியலில் குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட சில மாற்றங்கள் என்பதை ஏற்கெனவே இங்கே பலமுறை விரிவாக அலசியிருக்கிறார்கள். குறிப்பாக நமது வரலாற்று விற்பன்னர் முரளி சார் தெளிவாக பல பதிவுகளில் சொல்லியிருக்கிறார்.

1976-ம் ஆண்டு வெளிவந்த படங்கள் சென்னையில் ரிலீஸான அரங்குகள்

உனக்காக நான் - தேவி பாரடைஸ், அகஸ்தியா புவனேஸ்வரி
கிரகப்பிரவேசம் - பைலட், அகஸ்தியா, முரளிகிருஷ்ணா, கமலா
சத்யம் - வெலிங்டன், கிரௌன், ராக்ஸி, நூர்ஜகான்
உத்தமன் - சாந்தி கிரௌன், புவனேஸ்வரி
சித்ரா பௌர்ணமி - பிளாசா, ஸ்ரீபத்மனாபா, உமா
ரோஜாவின் ராஜா - பிளாஸா, பிராட்வே, ராக்ஸி, கமலா

ரசிகர்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது வருடத்துவக்கத்தில் வெளியான 'உனக்காக நான்'. பாட்டும் பரதமும் போலவே இதுவும் அரசியல் சூழலில் சிக்குண்டதால் எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை. நடிகர்திலகம் - பாலாஜி அணியின் முதல் சரிவு. (இருந்தாலும் சரியாக ஒரே ஆண்டில், பழைய காம்பினேஷன்களை மாற்றி 'தீபம்' படத்தின் மூலம் வெற்றியைக்கண்டனர். நடிகர்திலகத்தின் தேக்க நிலையும் சீரானது).

அடுத்து வந்த கிரகப்பிரவேசம், சத்யம் படங்களை ரசிகர்கள் அதிகம் எதிபார்க்கவில்லை. காரணம் அவை பரபரப்பில்லாத குடும்ப்பபடங்கள் என்பது முன்பே தெரிந்து போயிற்று. கிரகப்பிரவேசம் படத்தை டி.யோகானந்த் இயக்கியிருந்தார். யோகானந்த் படம் எப்படியிருக்கும், முக்தா படம் எப்படியிருக்கும், சி.வி.ஆர்.படம் எப்படியிருக்கும் என்பதெல்லாம் ரசிகர்களுக்கு அத்துப்படி. ஆகவே எதிர்பார்ப்புக்களை மூட்டைகட்டினர். இருந்தாலும் தாய்க்குலத்தின் ஆதரவைக்கொண்டும் அருமையான தியேட்டர்கள் அமைந்ததாலும் படம் ஓரளவு நன்றாகவே ஓடி சுமார் வெற்றியை பெற்றது.

1962-ல் சிறுவனாக நடித்த பார்த்தால் பசிதீரும் படத்துக்குப்பின்னர் நடிகர்திலகத்துடன் 'வாலிபன் கமல்' இணைந்து நடித்த முதல் படம் சத்யம். பாலச்சந்தரின் அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள் உள்பட பல்வேறு படங்கள் மூலம் கமல் நன்றாக பாப்புலராகிவிட்ட நேரம். அதனால் நடிகர்திலகத்துடன் இணைகிறார் என்றதும் எதிர்பார்ப்பு தலைதூக்கியது. சிவாஜிநாடகமன்ற இயக்குனர் எஸ்.ஏ.கண்ணன் இயக்கிய முதல் படம். என் நினைவு சரியாக இருக்குமானால் சாந்தி படத்துக்குப்பின்னர் தேவிகா மீண்டும் நடிகர்திலகத்தின் ஜோடியாக நடித்த படம். இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தும் கதை பழைய ஜமீன்தார் காலத்து கதைபோல ஆனதால் எதிர்பார்த்த பெரிய வெற்றியைப்பெறவில்லை எனினும் பரவலாக நன்றாக ஓடியது. இலங்கையில் கிரகப்பிரவேசம், சத்யம் இரண்டுமே நல்ல வெற்றியைப்பெற்றன.

ரசிகர்களின் அடுத்த பெரிய எதிர்பார்ப்பு 'உத்தமன்' படம். எங்கள் தங்க ராஜா என்ற மாபெரும் வெற்றிப்படத்தைத்தந்த வி.பி.ராஜேந்திர பிரசாத்தின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வந்த படம். மஞ்சுளா ஜோடி. சாந்தி, கிரௌன் புவனேஸ்வரி காம்பினேஷனில் இந்த ஆண்டில் வெளியான ஒரே படம். படம் நன்றாகவே இருந்தது. கே.வி.எம். இசையில் பாடல்கள் அனைத்தும், அவற்றைப்படமாக்கிய விதமும் நன்றாகவே இருந்தன. ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் அமைந்திருந்தது. காஷ்மீர் காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தன. தமிழகத்தில் பெரிய வெற்றியைப்பெறும் என்று எல்லோருக்கும் நம்பிக்கையிருந்தது. என்ன காரணமோ மதுரையில் மட்டும் 100 நாட்களைத்தாண்டி ஓடியது. சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் 10 வாரங்களைக் கடந்தது. (இலங்கையில் இது பெரிய வெற்றி பெற்று வெள்ளிவிழா கொண்டாடியது).

தீபாவளிக்கு 'இளைய தலைமுறை', 'சித்ரா பௌர்ணமி' என இரண்டு படங்கள் வெளியாவதாக அறிவிப்புக்கள் வந்தன. இரண்டுமே சற்று நீண்டகால தயாரிப்பு. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இளைய தலைமுறை கடைசி நேரத்தில் தயாரிப்பாளருக்கும் வங்கிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் தள்ளிப்போனது. இப்படம் பின்னர் அடுத்த ஆண்டு மே மாதம்தான் வெளியானது. சென்னை சென்ட்ரல் அருகில் வால்டாக்ஸ் ரோட்டிலுள்ள, புதிய படங்களே வெளியாகாத ஸ்ரீபத்மநாபா தியேட்டரில் 'சித்ராபௌர்ணமி' வெளியானது. அதுவே ரசிகர்களுக்கு முதல் கோணலாகப் பிடிக்காமல் போனது. இருந்தாலும் போய்ப்பார்த்தோம். ரசிகர்கள், பொதுமக்கள், தாய்மார்கள் என்று எத்தரப்பினரையும் திருப்திப்படுத்தாத படமாகப்போய், அந்த ஆண்டில் வெளிவந்த நடிகர்திலகத்தின் படங்களில் மிக மோசமான ரிசல்ட்டை சந்தித்தது.

இப்படி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்த 1976-ம் ஆண்டின் இறுதிப்படமாக 'ரோஜாவின் ராஜா' வெளியாவதாக அறிவிப்பு வந்தது. அதுவும் சற்று நீண்டகாலத் தயாரிப்புதான். இப்படத்தின் தயாரிப்பாளர் என்.வி.ஆர். பிக்சர்ஸ் என்.வி.ராமசாமி, ரோஜாவின் ராஜாவைத்துவக்கியபின், அதற்காக விநியோகஸ்தர்களிடம் பெற்ற தொகையைக்கொண்டு வேறு நடிகர்களை வைத்து புதுவெள்ளம் போன்ற படங்களை எடுத்ததால், இப்படம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஒருவழியாக படம் முடிவடைந்து டிசம்பர் 25 அன்று வெளியாவதாக விளம்பரம் வந்தது. வழக்கமாக காலை தினத்தந்தியில்தான் ரிசர்வேஷன் விளம்பரம் வெளியாவது வழக்கம். இப்படத்துக்கு முதல்நாள் மாலைமுரசிலேயே 'நாளைமுதல்' ரிசர்வேஷன் விளம்பரம் வந்தது.

வீட்டுக்கு மிக அருகிலேயே இருக்கும் பிராட்வே தியேட்டரில் எப்போதும்போல ரிசர்வேஷன் செய்யச்சென்றோம். என்னதான் சோர்வு இருந்தாலும் ரசிகளின் கூட்டத்துக்குக் குறைவில்லை. கேட் திறக்கும்வரை கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். ஒருதட்டியில் படத்தின் பெரிய போஸ்ட்டர் ஒட்டப்பட்டு வெளியில் வைக்கப்பட்டிருந்தது. நடிகர்திலகம் ஜிப்கோட், கூலிங் கிளாஸ் அணிந்து வாணிஸ்ரீயின் கைகளைக்கோர்த்தவாறு சற்று தலையைத்தூக்கி சிரித்துக்கொண்டிருக்கும் போஸ்ட்டர். அங்கிருந்த மூத்த ரசிகர்கள், அது 'அலங்காரம் கலையாத சிலையொன்று' பாடல் காட்சியென்று சொன்னார்கள். (படம் பார்த்தபோது அவர்கள் சொன்னது சரிதான் என்று தெரிந்தது).

பிராட்வே தியேட்டர் முன் கூட்டம் கூடியிருந்தபோதிலும், ரசிகர்கள் உற்சாகம் சற்று குறைந்து காணப்பட்டனர். அதற்குக்காரணம் 'மன்னவன் வந்தானடி' படத்துக்குப்பின் சென்னையில் அண்ணனின் 100-வதுநாள் போஸ்ட்டரைப் பார்க்க முடியவில்லை என்பதோடு, பிராட்வேயில் படம் வெளியாகிறதே என்ற வருத்தமும் கூட என்பது அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்தது. 'ஏன்யா இந்த தியேட்டர்ல ரிலீஸ் பண்றாங்க?. இவங்களுக்கு நம்ம படம்னாலே பிடிக்காதே. மானேஜரிலிருந்து முறுக்கு விற்கிறவன் வரையில் 'அவரோட ஆளுங்க'. நம்ம படம்னாலே கூட்டத்தோடு ஓடிக்கொண்டிருக்கும்போதே கழற்றி விட்டுடுவாங்க' என்று ஒருவர் சொல்ல இன்னொருவர் 'ஆமாமா, ஊட்டிவரைஉறவையும், ஞான ஒளியையும் நல்ல கூட்டம் இருக்கும்போதே எடுத்துட்டாங்க' என்று சொன்னார். கேட்டுக்கொண்டு நின்ற எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது. (பிற்காலத்தில் கல்தூண் படத்துக்கும் அப்படியே செய்தார்கள்).

கேட் திறந்தபின்னும் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ரசிகர்கள் வரிசையில் போய் நின்றனர். அங்கும் கூட, அதற்குமுன் வந்த படங்களின் ஓட்டம் பற்றிய விமர்சனங்கள். ஏற்கெனவே வானொலி மூலம் 'அலங்காரம் கலையாத', 'ஜனகன் மகளை', 'ஓட்றா... ஓட்றா...' ஆகிய பாடல்கள் மக்கள் மத்தியில் பிரசித்தமாகியிருந்தன. (பிற்காலத்தில் 'ஓட்றா' பாடலை கேட்டால் எனக்கு அண்ணன் ஒரு கோயிலில் ஐ.எஸ்.ஆர். ஈகா தியேட்டர் லவுன்ச்சில் தர்ம அடி வாங்கும் காட்சிதான் நினைவுக்கு வரும்). நான் சுமார் ஐம்பதாவது ஆளாக நின்றிருந்திருப்பேன். எனக்குப்பின்னால் கூட்டம் நீண்டிருந்தது. முதல்நாள் மேட்னிக்காட்சிக்கே டிக்கட் கிடைக்க வாய்ப்பிருந்தது. இருந்தாலும் வழக்கம்போல மாலைக்காட்சிக்கே எங்கள் அணி டிக்கட் வாங்கிக்கொண்டோம். ரிசர்வேஷன் எந்தபரபரப்புமின்றி அமைதியாக நடந்துகொண்டிருந்தது. டிக்கட் வாங்கியதோடு வேலை முடிந்தது என்று போகாமல் எல்லோரும் வாசலிலும், ஸ்டில் போர்டு வைக்கப்பட்டிருக்கும் வழியிலும் கொத்து கொத்தாக நின்று படம் எப்படிப்போகும் என்று பேசிக்கொண்டிருந்தனர்.

'படம் ஏற்கெனவே லேட் படம். கொஞ்சமாவது கேப் கொடுத்தால்தான் ஓரளவுக்காவது ஓடும்' என்று ஒருவர் சொல்ல, இன்னொரு ரசிகர் 'எங்கே கேப் கொடுத்தாங்க?. மதிஒளி 15-ம்தேதி இஷ்யூ பார்த்தியா இல்லையா?. இன்னும் 19 நாளில் பொங்கலுக்கு 'அவன் ஒரு சரித்திரம்' வருது. அடுத்த 12 நாள்ள பாலாஜியோட 'தீபம்' ரிலீஸாகுது. இப்படி விட்டாங்கன்னா எப்படிப்பா?' என்று சொன்னார். தியேட்டர் மேனேஜரும் எல்லோரோடும் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போதே படத்தை மட்டம் தட்டிப்பேச ஆரம்பித்தார். அவர் பங்குக்கு 'திருவொற்றியூர் ஓடியன் மணியிலேயும் இந்தப்படம் (ரோஜாவின் ராஜா) ரிலீஸாகுதாமே. அப்போ தேறுவது கஷ்ட்டம்தான்' என்று சொல்ல, சிலர் ரகசியமாக, 'இப்பவே ஆரம்பிச்சுட்டாருய்யா' என்று சலிப்படைந்தனர்.

அப்போது பஸ்ஸில் வந்திறங்கிய ஒருவர் 'பிளாசாவிலே நல்லா ஜரூராக புக்கிங் நடதுப்பா, இங்கே ஏன் டல்லக்கிறது?' என்று வினவினார். பிராட்வேயில் அமைதியா புக்கிங் நடந்தாலும் அப்போதே ஒன்பது காட்சிகள் அரங்கு நிறைந்தன. ரிசர்வேஷன் தொடர்ந்துகொண்டிருக்க நாங்கள் வீடு திரும்பினோம்.

டிசம்பர் 25 அன்று கிருஸ்துமஸ் தினம். எங்கள் குடும்ப நண்பர் ‘டெய்ஸி மேடம்’ வீட்டிலிருந்து மதிய விருந்துக்கு அழைத்திருந்தார்கள். போய் சாப்பிட்டு விட்டு வந்து, நான்கு மணிக்கு மேல் நண்பர்களை ஒவ்வொருவராக இணைத்துக்கொண்டு பிராட்வே போய்ச்சேர்ந்தோம். வழக்கம்போல வடசென்னை மன்றங்கள் தியேட்டரை அலங்கரித்திருந்தனர். விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பிராட்வேயில் ஒரு அசௌகரியம் என்னவென்றால், கேட் திறக்கும் வரை சாலையில்தான் நிற்க வேண்டும். அதிகம் வாகனப்போக்குவரத்து உள்ள சாலையாதலால் ஒரே தூசியும் தும்பையுமாக இருக்கும். இப்போதும் அப்படித்தான் இருக்கிறது.

மேட்னி முடிந்து வெளியில் வந்த கூட்டம், 'படம் நல்லாயிருக்கு' என்று சொல்லிக்கொண்டு போனார்கள். மனதுக்கு திருப்தியாக இருந்தது. கரண்ட் டிக்கட் விற்பனைக்கு கூட்டம் முண்டியத்தது. தாய்மார்கள் கூட்டம் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருந்தது. சற்று நேரத்தில் அரங்கு நிறைய, கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கூட்டம் டிக்கட் கிடைக்காமல் திரும்பியது மனதுக்கு சந்தோஷமளித்தது. இந்த மகிழ்ச்சியோடு உள்ளே சென்று அமர்ந்தோம். நடிகர்திலகம் படம் முழுக்க நீல்நிற கூலிங் கிளாஸ் அணிந்து நடித்திருந்தது மனதுக்கு இதமாக இருந்தது. கல்லூரி விழாவில் 'சாம்ராட் அசோகன்' நாடகத்தை எதிர்பார்த்து காத்திருக்க, வாணிஸ்ரீ (கண்ணகி), சுருளிராஜன் (கட்டபொம்மன்) இவர்களின் இவர்களின் நாடகத்தைத்தொடர்ந்து உடனே அசோகன் நாடகத்தைத் துவக்காமல், இடையில் தேவையில்லாமல் ஒரு பாடலைப் போட்டு சொதப்பியிருந்தார்கள். சாம்ராட் அசோகன் நாடகத்துக்கு எதிர்பார்த்ததைப்போலவே ஆடியன்ஸ் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. செட்டில் எடுக்கப்பட்ட 'ரோஜாவின் ராஜா' பாடலுக்கும் (ஓ.. தலைவர் என்ன அழகு), மைசூர் அரண்மனை முன் எடுக்கப்பட்டிருந்த 'அலங்காரம் கலையாத' பாடலுக்கும் கூட நல்ல வரவேற்பு. பெரும்பாலான காட்சிகள் பரபரப்பில்லாமலேயே போனது. 'ஓடிக்கொண்டேயிருப்பேன்' பாடலும் நன்கு ரசிக்கப்பட்டது. மற்ற இடங்களின் ரெஸ்பான்ஸ் அவ்வளவு நினைவில்லை.

படம் முடிந்து வெளியே வந்தபோது, எல்லோரும் படம் நன்றாயிருப்பதாகவே பேசிக்கொண்டு போயினர். மேலும் இரண்டுமுறை பார்த்தபின், 'அவன் ஒரு சரித்திரத்துக்கு' தயாரானோம்.

RAGHAVENDRA
2nd May 2014, 08:44 PM
கார்த்திக்,
தங்கள் பதிவு மனதிற்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. பார்த்த ஞாபகம் இல்லையோ என்பது தலைவர் நமக்கெல்லாம் அளித்த மிகப் பெரிய Tagline ஆகவே நான் நினைக்கிறேன். அந்த நாள் ஞாபகம் என்பதற்கும் பார்த்த ஞாபகம் என்பதற்கும் இடையே இருக்கும் வேற்றுமையை இத்திரி மிகச் சிறப்பாக காட்டுகிறது என்பதற்கு முரளி சாருடைய பதிவுகளும் தங்களுடைய பதிவுகளும் சான்றாகும். அந்த நாள் ஞாபகம் என கூறும் போது ஒரு மனிதனின் வயது முதிர்ச்சியை எடுத்துரைப்பாதக ஒலிக்கிறது. ஆனால் பார்த்த ஞாபகம் என்பது வயதையோ காலத்தையோ பருவத்தையோ தொடாமல் நினைவுகளை மட்டும் பின்னோக்கி அழைத்துச் செல்கிறது.

தங்களிருவருக்கும் நினைவிருக்கும் அளவிற்கு திரையரங்க நிகழ்வுகள் எனக்கு இல்லை என நான் உணர்கிறேன். ஆனால் தங்கள் எழுத்துக்களுக்கு உள்ள வலிமையினால் அங்கே நாங்களும் இருப்பது போல உணர்கிறோம்.

இன்னும் தொடர்ந்து தங்களுடைய பதிவுகளைப் படிக்க ஆவலாயிருக்கிறேன்.

chinnakkannan
2nd May 2014, 08:56 PM
கார்த்திக் சார்.. வாங்க வாங்க ... சிக்கலாரே சுகமா இருக்கீயளா..என்ன ரொம்ப நாளா காங்கலை..நம்ம ஊர்ப் பக்கமும் வரலாமில்லை.. பரவால்லை.. நீங்க எந்த ஊர்ல எழுதினாலும் பார்க்க வருவோம்ல..அடிக்கடி வாங்க..வந்து தாங்க..உங்கள் உணர்வுகளை..

mr_karthik
3rd May 2014, 11:31 AM
அன்புள்ள ராகவேந்தர் சார் மற்றும் சின்னக்கண்ணன் சார்,

தங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி. ராகவேந்தர் சார் அவர்களின் விளக்கம் மிகவும் ஏற்புடையது.

சின்னக்கண்ணன் சார், சென்ற ஆண்டு நவம்பருக்குப்பின் (சரியாக சொன்னால் ஐட்டம் விஜயஸ்ரீயின் பதிவுக்குப்பின்) இப்போதுதான் திரியில் நுழைந்திருப்பதால், அதன்பின் வந்த பதிவுகள் அனைத்தையும் படித்து வருகிறேன். முடித்ததும் மெயின் திரியில் நிச்சயம் பதிவிடுவேன். சில முக்கிய தலைப்புகளுக்கு தனித்திரி துவங்கியதை நானும் வரவேற்கிறேன். (கோபால் சார் மன்னிக்க).

இனி முதல் வெளியீட்டில் பார்த்த அனுபவம் (4)

'நீதி' நினைவுகள்

ரீமேக் மன்னரான பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட படம் நீதி. இந்தியில் ராஜேஷ் கன்னா - மும்தாஜ் ஜோடி நடிப்பில் வெளியான 'துஷ்மன்' படத்தின் தமிழ்த்தயாரிப்பு.

1972 டிசம்பர் 7 அன்று சென்னை தேவி பாரடைஸ், பிரபாத், சரவணா திரையரங்குகளில் வெளியான நீதி, மக்களின் எகோபித்த ஆதரவுடன் தேவி பாரடைஸில் 99 நாட்களும், பிரபாத்தில் 70 நாட்களும், சரவணாவில் 77 நாட்களும் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரிக்குவித்தது. சென்னையில் 'எலைட் மூவீஸார்'தான் படத்தின் விநியோகஸ்தர்கள். (இவர்கள் ஏற்கெனவே எங்கிருந்தோ வந்தாள் படத்தையும், இவர்களின் சகோதரி நிறுவனமான (சிஸ்டர் கன்ஸர்ன்) கிரஸெண்ட் மூவீஸார் 'ராஜா' படத்தையும் சென்னையில் விநியோகித்தனர். மூன்றும் பெரும் வெற்றி கண்டது).

இப்படம் வெளியானபோதும் சென்னையில் முதன்முறையாக (நிலக்கரி தட்டுப்பாட்டால்) மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட்டு, திரையரங்குகளில் காட்சியின் எண்ணிக்கையைக்குறைக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியது. அதன்படி, படம் வெளியாவதற்கு முன் தினசரி இரண்டு காட்சிகள் மட்டுமே ஓட்டப்படும் என்று சொல்லப்பட்டு இரவுக்காட்சிகளுக்கு டிக்கட் ரிசர்வ் செய்யப்படவில்லை. ஆனால் 'நீதி' படம் வெளியாவதற்கு முன்தினம், மூன்று திரையரங்குகளிலும் ஒரு காட்சி டீஸல் ஜெனரேட்டர் மூலம் ஓட்ட ஏற்பாடு செய்யப்பட்டதால் (தேவி காம்ப்ளக்ஸில் ஏற்கெனவே ஜெனெரேட்டர் வசதியோடனேயே கட்டப்பட்ட வளாகம் அது) மூன்று தியேட்டர்களிலும் தினசரி மூன்று காட்சிகளாகவே படம் ரிலீஸானது. நாளடைவில் மின்வெட்டு சீரானதால் தடையின்றி மின்சாரத்தின் மூலமாகவே தினசரி மூன்று காட்சிகள் திரையிடப்பட்டன.

வடசென்னை பிராட்வே சாலையிலிருந்த பிரபாத் தியேட்டரில், இப்படத்துக்கு முன்பும் இப்படத்துக்குப்பின்பும் அப்படியொரு ஓப்பனிங் ஷோ கூட்டம் பார்த்ததில்லையென்று அங்கிருந்தோர் சொன்னார்கள். இன்னும் சில முதியவர்கள், ஜெமினியின் சந்திரலேகா வெளியானபோது பார்த்த கூட்டத்துக்குப்பிறகு நீதி படத்துக்குத்தான் ஓப்பனிங் கூட்டம் நெருக்கியடித்ததாகச் சொன்னார்கள். அப்போது கிரௌனில் வசந்த மாளிகை பட்டையைக் கிளப்பிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த நேரம்.

நீதி படத்துக்கு வந்து டிக்கட் கிடைக்காதோர், பக்கத்தில் பிராட்வே தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த ஏ.வி.எம்.ராஜனின் 'பிரார்த்தனை' படத்துக்குப்போனதால், நீதி புண்ணியத்தில் பிரார்த்தனைக்கு சிறிது கூட்டம் சேர்ந்தது. (நீதி வெளியாகி ஒரு மாதம் கழித்து 'பிரார்த்தனை' வெளியானது).

கர்ணன், கைகொடுத்த தெய்வம் படங்களுக்குப்பின், நீதி பிரபாத்தில் 100 நாட்களைப் பூர்த்தி செய்யும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தபோது, நல்ல கூட்டம் இருக்கையிலேயே பிரபாத்தில் 70 நாட்களிலும், சரவணாவில் 77 நாட்களிலும் தூக்கப்பட்டது.

பாலாஜியின் தயாரிப்புக்களில், மிகக்குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு நல்ல லாபத்தைச் சம்பாதித்துக்கொடுத்த படம் நீதி.

முதல்நாள் மாலைக்காட்சி பிரபாத்தில் பார்த்தேன். ஆரம்பம் முதலே அலப்பறைக்குக் குறைவேயில்லை. ராஜா படத்தில் எப்படி, எங்கே எங்கே என்று ஏங்க வைத்து தரிசனம் கொடுத்தாரோ அதற்கு நேர்மாறாக முதல் காட்சியிலேயே, லாரி ஓட்டிக்கொண்டு வரும் போது படத்தின் டைட்டில்கள் ஓடும். அப்போது ஜெயலலிதாவுக்கும் சௌகாருக்கும் யார் பெயரை முதலில் போடுவது என்பதில் லடாய் ஏற்பட்டதால், நட்சத்திரங்களின் பெயர் போடாமல் டெக்னீஷியன்களின் பெயர்கள் மட்டுமே காண்பிக்கப்படும். ரசிகர்கள் அதை எங்கே பார்த்தார்கள், அவர் லாரி ஓட்டும்போது ஸ்டைலாக தலைமுடியைக்கோருவதையும், பாட்டிலைக் கவிழ்ப்பதையும், மீசையை முறுக்குவதையும் கைதட்டி ரசித்தனர். (அந்தந்தக் காட்சிகளில் படம் சில விநாடிகள் ஸ்டில்லாக நிறுத்தப்பட்டு டைட்டில் ஓடும்).

அப்புறம் சகுந்தலா வீட்டில் கே.கண்ணனோடு ஒரு மினி சண்டை, அதைத்தொடர்ந்து சகுந்தலாவுடன் 'மாப்பிள்ளைய பாத்துக்கடி மைனாக்குட்டி' பாடலில் அவர் காட்டும் அட்டகாசமான ஸ்டைல் மூவ்முண்ட்டுகளுக்கு அலப்பறை காதைத்துளைத்தன. அதுபோல கோர்ட்டில் வாதாடும்போதும் கைதட்டல் பற்ந்தன. பின்னர் சௌகார் வீட்டில் கொண்டு வந்து விடப்பட்டதும் சிறிது நேரம் தியேட்டர் சைலண்ட்டாக இருக்கும். பின்னர் 'நாளை முதல் குடிக்க மாட்டேன்' பாடலில் ஆரம்பித்து கடைசிவரை ஒரே அட்டகாசம்தான். அதிலும் கிளைமாக்ஸில் லாரியை ஸ்டார்ட் செய்து, குடோன் கதவில் மோதி தகர்த்து தொடர்ந்து மனோகருடன் சண்டைக்காட்சியில் தியேட்டரே அதகளம் ஆனது.

காட்சி முடிந்து வெளியே வந்தபோது, அதற்குள் மேட்னி பார்த்தவர்கள் படத்தைப் பற்றிச் சொல்லியிருந்ததால், இரவுக்காட்சிக்கு அந்த காம்பவுண்டே கூட்ட நெரிசலில் திணறியது.

படம் வெளியானது 1972 ஆச்சே.

mr_karthik
3rd May 2014, 11:44 AM
முதல் வெளியீட்டில் பார்த்த அனுபவம் (5)

'ராஜபார்ட் ரங்கதுரை'

நாடகக்கலைஞனாக நடிகர்திலகம் வாழ்ந்து காட்டிய ராஜபார்ட் ரங்கதுரையின் 39-வது உதய தின இனிய நினைவலைகள் (22.12.1973 - 22.12.2011)

தயாரிப்பில் இருக்கும்போதே பலவேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்ட படங்களில் இதுவும் ஒன்று என்றால் மிகையில்லை. ஆனால், எதிர்பார்க்க வைத்து ஏமாற்றாமல், எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்து, ரசிகர்களையும் பொதுமக்களையும் உற்சாகத்தில் ஆழ்த்திய திரைக்காவியம்.

1971 இறுதியில் துவங்கிய நடிகர்திலகத்தின் வெற்றிநடை 72-ஐக்கடந்து 73-லும் தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில் வெளியாகி இதுவும் வெற்றிக்கனியை ஈட்டியது. (தொடர் வெற்றிப்பட்டியலை ஏற்கெனவே முரளி சார் அவர்கள் முந்தைய பக்கத்தில் அட்டகாசமாக தொகுத்தளித்துள்ளார்). இப்படம் வெளியானபோது தீபாவளி வெளியீடான கௌரவம் தமிழகமெங்கும் வெற்றிகரமாக 58 நாட்களைக் கடந்துகொண்டிருந்தது. மனிதரில் மாணிக்கம் 15 நாட்களைக்கடந்து ஓடிக்கொண்டிருந்தது. (ராயப்பேட்டை பைலட் தியேட்டரில் மட்டும், வெளியிடும்போதே 15 நாட்களுக்கு மட்டும் என்ற அறிவிப்புடன் தினசரி 4 காட்சிகளாக ஓடி, இப்படத்துக்காக பக்கத்தில் மயிலை கபாலி தியேட்டருக்கு மனிதரில் மாணிக்கம் மாற்றப்பட்டது).

ராஜபார்ட் ரங்கதுரை படம் வெளிவரும் முன்பே, இது காங்கிரஸ் இயக்கத்தினரை உற்சாகப்படுத்த எடுக்கப்பட்ட படம் என்று மதிஒளி, திரைவானம் போன்ற பத்திரிகைகள் சரமாரியாக செய்திகளையும் படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்தன. அப்போது சிவாஜி ரசிகன் என்றும் பெருந்தலைவரின் தொண்டன் என்றும் பிரித்துப்பார்க்க முடியாதபடி எல்லோரும் இரண்டுமாக திகழ்ந்த காலகட்டம். போதாக்குறைக்கு ஆகஸ்ட் 15 அன்று நடந்த சுதந்திர தின விழாவில், பெருந்தலைவரும் நடிகர்திலகமும் மேடையில் இருக்கும்போதே, மன்றத்தலைவர் சின்ன அண்ணாமலை, அப்போது தயாரிப்பிலிருந்த ராஜபார்ட் ரங்கதுரை படத்தைப்பற்றி வெகு சிறப்பாகப்பேசி, ‘இது காங்கிரஸ்காரர்களின் லட்சியப்படம்’ என்று கூறி விட்டார்.

அப்போது சிவாஜி மன்றமும் ஸ்தாபன காங்கிரஸும் தமிழகத்தில் பெரும் சக்தியாக விளங்கியதால் இப்படம் பெருந்தலைவரின் பாராட்டைப்பெற்றால் நன்றாக இருக்குமே என்று கருதிய தயாரிப்பாளர் குகநாதன், பெருந்தலைவருக்கும் காங்கிரஸ் இயக்க முன்னோடிகளுக்கும் ஒரு பிரத்தியேக காட்சி ஏற்பாடு செய்திருந்தார். (அந்த பிரத்தியேக காட்சியைப்பற்றியும் அதில் நடந்தவற்றைப் பற்றியும் ஏற்கெனவே முன்னர் சாரதா மிக விரிவாக எழுதியிருந்தார், அதை நாமெல்லோரும் படித்திருக்கிறோம். ஆகவே அதை மீண்டும் விளக்கத்தேவையில்லை).

ராஜபார்ட் ரங்கதுரை சென்னையில் பைலட், ஸ்ரீகிருஷ்ணா, ராக்ஸி, முரளிகிருஷ்ணா, கிருஷ்ணவேணி ஆகிய ஐந்து திரையரங்குகளில் வெளியானது. அத்தனையிலும் தினசரி மூன்று காட்சிகள்தான். வடசென்னை மண்ணடிவாசியான நான் (வழக்கம்போல) மிண்ட் ஏரியா ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில்தான் (வழக்கம்போல) முதல்நாள் மாலைக்காட்சிக்கு ரிசர்வ் செய்திருந்தேன். முதல்நாள் மாலைக்காட்சி டிக்கட் கிடைப்பது சாதாரணம் அல்ல, ரிசர்வேஷன் துவங்கும் அன்று காலை ஏழுமணிக்கெல்லாம் போய், 'கேட்'டைப்பிடித்துக்கொண்டு நிற்க வேண்டும். கேட் திறந்ததும் ஓடிப்போய் கியூவில் நின்றுகொண்டு, இன்னும் போலீஸ் வரவில்லையே என்று தவமிருக்க வேண்டும். போலீஸ் வந்துவிட்டால் நமக்குத்தெம்பு. அப்பாடா, இனி நம் இடம் பறிபோகாது என்று. அப்போது பள்ளி மாணவப்பருவமாதலால் இதெல்லாம் பெரிய கஷ்ட்டமாகத் தெரியவில்லை. இன்றைய இளம்பருவத்தினர் இந்த சாகசங்களையெல்லாம் ரொம்பவே மிஸ் பண்ணி விட்டார்கள்.

மதியசாப்பாட்டுக்குப்பின், பவளக்காரத்தெரு நண்பன் வீட்டு வாசலில் எல்லோரும் கூடி, அங்கிருந்து புறப்பட்டோம். நடைதான். பேசிக்கொண்டே கிருஷ்ணா தியேட்டர் போய்ச்சேர்ந்தபோது மணி நான்கை நெருங்கியிருந்தது. போகும் வழியில் கிரௌனில் கௌரவம் எப்படீன்னு எட்டிப்பார்த்தோம். சனிக்கிழமையாதலால் மேட்னி ஃபுல். (ராஜபார்ட்டுக்கு மேட்னி டிக்கட் கிடைக்காதவர்களும் இங்கு வந்திருக்கக்கூடும்).

ஸ்ரீகிருஷ்ணாவை நெருங்கும்போதே சாலையில் பெரும் கூட்டம் தெரிந்தது. தியேட்டர் முழுக்க காங்கிரஸ் கொடிகள், காங்கிரஸ் பேனர்கள். நடிகர்திலகத்தின் கட்-அவுட் கையிலும் நிஜமான கொடி பறந்துகொண்டிருந்தது. ஏதோ காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்துவிட்டது போன்ற தோற்றம் தந்தது. பேனர் முழுக்க நடிகர்திலகத்துக்கு பிரம்மாண்டமான மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. வடசென்னை மன்றங்கள் அலங்காரங்களில் அசத்தியிருந்தனர். அந்தக்கண்கொள்ளாக் காட்சிகள் இன்றைக்கும் மனதில் நிறைந்திருக்கிறது. ஏற்கென்வே மெயின்கேட் திறந்து விடப்பட்டு, கவுண்ட்டர் கேட்களும் போலீஸ் பந்தோபஸ்துடன் திறந்து விடப்பட்டு, கூட்டம் நிரம்பி வழிந்தது. கரண்ட் டிக்கட் கவுண்ட்டரில் நின்றவர்கள் கண்களில் 'டிக்கட் கிடைக்குமோ கிடைக்காதோ' என்ற பதைபதைப்பு தெரிந்தது.

போலீஸ் மட்டுமல்லாது மன்றத்தினரும் வெள்ளை சீருடையில் காங்கிரஸ் பேட்ஜும், மன்ற பேட்ஜும் அணிந்து கூட்ட்த்தினரை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். சீனியர் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருக்க, நாங்கள் அவர்கள் மத்தியில் நின்று, செய்திகளை கிரகித்துக்கொண்டிருந்தோம். காம்பவுண்டுக்குள் நிற்க இடமில்லாமல் நிறையப்பேர் 'கேட்'டுக்கு வெளியிலும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களில் பலர் ரிசர்வ் பண்ணியவர்களோ, அல்லது தற்போது கியூவில் நின்று டிக்கட் வாங்க வந்தவர்களோ அல்ல. (ஏனென்றால் இப்போது கவுண்ட்டரில் நிற்பவர்களுக்கே பாதிப்பேர்க்கு டிக்கட் கிடைப்பது கஷ்ட்டம். இருந்தும் நம்பிக்கையோடு நிற்கின்றனர்). மற்றவர்கள் அலப்பறையைக்காண வந்தவர்கள்.

ஐந்தேமுக்காலுக்கு அனைத்து வாசல்களும் அகலத்திறந்து வைக்கப்பட, மேட்னி முடிந்து ஜனத்திரள் வெளியே வந்தது. அனைவர் முகத்திலும் மகிழ்ச்சிப்பரவசம். 'படம் அட்டகாசம்பா', 'அண்ணன் பின்னியெடுத்துட்டார்', 'போய்ப்பாருங்க, பர்ஸ்ட் கிளாஸா இருக்கு' என்று ஒவ்வொருவரின் கமெண்ட்டும் நம்பிக்கையைத் தோற்றுவித்தது. ஒரு நாற்பதுபேர் அடங்கிய சிறு கூட்டம் 'அண்ணன் சிவாஜி வாழ்க' என்று கோஷமிட்டவாறு தியேட்டரிலிருந்து சாலைக்குச்சென்றனர். எங்களுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. அப்போது பாடம் பார்த்த ஒருவர், 'படம் ஆரம்பிச்சதும் ஏமாந்துறாதீங்க, நாங்கதான் ஏமாந்துட்டோம்' என்றதும் வெளியே நின்றவர் 'என்னய்யா சொல்றீங்க?' என்று கேட்க, 'ஆமாங்க படம் துவக்கத்தில் ப்ளாக் அண்ட் ஒயிட்ல கொஞ்ச நேரம் ஓடும். ஏமாந்துடாதீங்க. டைட்டில்லேருந்துதான் கலர் ஆரம்பிக்கும்' என்று சொல்லி மாலைக்காட்சி பார்க்க நின்றவர்களை உஷார் படுத்தினார்.

அப்போது பட்டுப்புடவையும் காங்கிரஸ் பேட்ஜும் அணிந்த சுமார் பத்துப்பணிரெண்டு கல்லூரி மாணவிகள் பரபரப்பாக வந்து தியேட்டர் உள்ளே சென்றனர். யார் அவர்கள், ஏன் உள்ளே போனார்கள் என்பது பின்னர்தான் தெரிந்தது. கரண்ட் டிக்கட் விற்பனை துவங்கியதும் ஒவ்வொரு நுழைவாயிலிலும் ஒரு பெண் நின்று கொண்டு தட்டில் இனிப்பு வைத்துக்கொண்டு உள்ளே சென்றவர்களுக்கு வழங்கிக்கொண்டிருந்தனர். தியேட்டர் சிப்பந்தி டிக்கட் கிழிக்க, மாணவி அவருக்கு எதிரில் நின்று படம் பார்க்க வந்தவர்களை இன்முகத்தோடு 'வாங்க' என்றழைத்து இனிப்பு வழங்கிய காட்சி அருமையாக இருந்தது. அருகிலிருந்த ஒருவர், 'எல்லாம் நம்ம மன்ற ஏற்பாடு' என்றார்.

பார்த்து அதிசயித்துக்கொண்டே நாங்கள் ரிசர்வ் செய்திருந்த முதல் வகுப்பு பாலகனிக்குச்செல்ல, அங்கு இரண்டு பெண்கள் நின்று வரவேற்று இனிப்பு வழங்கினர். தியேட்டர் உள்ளே ஒரே ஆரவார இரைச்சல். அரங்கு நிறைந்ததும் படம் துவங்கியது. ஒருவர் உஷார் படுத்தியது போல படம் முதலில் கருப்பு வெள்ளையில் துவங்கி, ரயில் பாடல் முழுக்க அப்படியே ஓடியது. டைட்டில் துவங்கியதும் கலருக்கு மாறியது. டி.எம்.எஸ்ஸின் ஆலாபனையிலேயே டைட்டில் முடிந்து 'இயக்கம் பி.மாதவன்' என்ற எழுத்து மறைந்ததும் “மேயாத மான்” என்று தலையைத்திருப்பினார் பாருங்க. அவ்வளவுதான் தியேட்டரே அதகளமாகிவிட்டது. கைதட்டல்கள் என்ன, விசில்கள் என்ன, ஆரவாங்கள் என்ன, தியேட்டர் முழுக்க காகிதங்கள் பறந்தன. அப்போ பிடிச்ச 'டெம்போ'தான். படம் முடிகிற வரைக்கும் நிற்கவில்லையே. அதுவும் ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில் இத்தகைய ஆரவாரம் ஏற்பட்டது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

'மதன மாளிகையில்' பாடல் துவங்கியதும் இன்னொரு அதிசயம். மன்றத்தினர் ஆங்காங்கே நின்றுகொண்டு மல்லிகை வாடையை பம்ப் மூலம் ஸ்ப்ரே பண்ணிக்கொண்டிருந்தனர். தியேட்டர் முழுக்க மல்லிகை வாடை கமகமத்தது. சூழ்நிலையே மனதை மயக்குவது போல இருந்தது.

படம் வருவதற்கு முன்பே 'அம்மம்மா தம்பியென்று' பாடல் பாப்புலராயிருந்தாலும் இவ்வளவு உணர்ச்சி மயமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. டேபிள் டென்னிஸ் பேட்டில் தாளம்போடத்துவங்கியதிலிருந்து பாடலின் ஒவ்வொரு வரிக்கும் கைதட்டல் பறந்தது. பாடல் முடிந்து பையைக்கையில் எடுத்துக்கொண்டு, துண்டால் வாயைப்பொத்தியவாறு செல்லும்போது, அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் வெடிக்க கைதட்டலால் கூரை தகர்ந்தது.

அதுபோல 'மதன மாளிகை'யும், 'இன்குலாப் ஜிந்தாபாத்' பாடலும் ரசிகர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. 'இன்குலாப்' பாடலின் ஒவ்வொரு வரியும் ரசிகர்களையும் பெருந்தலைவரின் தொண்டர்களையும் உணர்ச்சி வசப்படுத்த, அந்தப்பாடலிலும் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை கைதட்டல். ஏனென்றால் அந்தப்பாடல் அப்போதுதான் எல்லோரும் முதன்முதலில் கேட்டனர். படம் பார்க்கும் முன் ‘இன்குலாப்’ பாடலைப்பற்றி எதுவுமே ரசிகர்களுக்குத் தெரியாது. (படம் வந்த பின்னும், வானொலியில் ஒளிபரப்ப தடைசெய்யப்பட்டிருந்தது ஏன் என்பது தெரியவில்லை. இப்போது தொலைக்காட்சிகளில் சர்வ சாதாரணமாக ஒளிபரப்பப் படுகிறது)

பாடல் காட்சிகளில் மட்டுமல்லாது வசனக்காட்சிகளிலும் ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ்கள், கைதட்டல்கள். நடிகர்திலகத்தின் மற்றைய படங்கள் போலல்லாது இதில் பொடிவைத்த வசனங்கள் அதிகம். அவை ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்குக்கொண்டு சென்றன.

குறிப்பாக சொன்னால், ராமதாஸிடம் "இது பனங்காட்டு நரி, உன் சலசலப்புக்கு அஞ்சுமா?"

கொடிகாத்த குமரன் நாடகத்தில் போலீஸாரிடம், "கூடிய சீக்கிரமே கோட்டையிலே எங்கள் மூவண்ணக்கொடி பட்டொளி வீசிப்பறக்கத்தான் போகிறது. அப்போது இதே கைகள் எங்களுக்கும் வெண்சாமரம் வீசத்தான் போகின்றன".

ஆர்மோனியத்தை அடகு வாங்க மறுக்கும் அடகுக்காரர் சொல்லும் வசனம் "உன்னை கோடி ரூபாய்க்கு மதிக்கிறேன்யா, எதுக்கு? உன்கிட்ட இருக்கிற நடிப்புக்கு"

இப்படி படம் நெடுக நிறைய இடங்கள். பாடல்களில் கண்ணதாசனும், வசனங்களில் பாலமுருகனும் ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட தீனி போட்டனர். ரசிகர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றனர். இப்படியொரு படத்தை எடுத்ததற்கு குகநாதன் காலம் முழுக்க பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

படம் முடிந்து வெளியே வரும்போது மனதுக்கு நிறைவாக இருந்தது. 'அண்ணனுக்கு இந்தப்படமும் வெற்றிதான்' என்று ரசிகர்கள் மகிழ்ச்சிக் கூச்சலிட்டுச்சென்றனர். மறுபுறம் காங்கிரஸ் இயக்கப்பெரியவர்கள் 'அவர் இறந்து போற மாதிரி முடிச்சது சரிதான். இல்லேன்னா தியாகத்தை எப்படிக் காட்ட முடியும்' என்று சர்டிபிகேட் வழங்கிப்பேசியவாறு சென்றனர்.

இதே மகிழ்ச்சியுடன் வீட்டில் போய்ப்படுத்தேன். வெகுநேரம் வரை தூக்கம் வரவில்லை. எப்படி வரும்..?.

JamesFague
3rd May 2014, 09:29 PM
Mr Sindhanur Karthik,

Warm welcome after a long gap and your memories of watching NT's movies taking us to
those wonderful days. Pls do contribute regularly.

Regards

mr_karthik
5th May 2014, 12:50 PM
முதல் வெளியீட்டில் பார்த்த அனுபவம் (6)

'ஜஸ்டிஸ் கோபிநாத்'

1978-ம் ஆண்டில் வெளிவந்த நடிகர்திலகத்தின் எட்டு படங்களில் (தமிழ் 7, மலையாளம் 1) சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி என்ற லக்கி காம்பினேஷனில் வெளிவந்தது 'தியாகம்' ஒரு படம் மட்டுமே. ஜெனரல் சக்ரவர்த்தி சாந்தி, மகாராணி, அபிராமியிலும், தச்சோளி அம்பு சாந்தியில் மட்டும் ரிலீஸ் ஆயின. மற்ற படங்கள் மற்ற தியேட்டர்களில் வெளியிடப்பட்டன. பட்டியல் போட்டால் தெளிவாகும். (1977 தீபாவளியன்று வெளியான 'அண்ணன் ஒரு கோயில்' மார்ச் 3 அன்று சாந்தி, கிரௌன், புவனேஸ்வரியில் 114 நாட்களைக்கடந்த நிலையில், அதே அரங்குகளில் 'தியாகம்' திரையிடப்பட்டது).

அந்தமான் காதலி - லியோ/மிட்லண்ட், மகாராணி, ராக்ஸி
தியாகம் - சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி
என்னைப்போல் ஒருவன் - தேவிபாரடைஸ், அகஸ்தியா, முரளிகிருஷ்ணா
புண்ணிய பூமி - சித்ரா, பிராட்வே, உமா
ஜெனரல் சக்ரவர்த்தி - சாந்தி, மகாராணி, அபிராமி
தச்சோளி அம்பு (மலையாளம்) - சாந்தி
பைலட் பிரேம்நாத் - அலங்கார், மகாராணி, ஈகா
ஜஸ்டிஸ் கோபிநாத் - பாரகன், ஸ்ரீகிருஷ்ணா, பால அபிராமி, லிபர்ட்டி

இவற்றில் அந்தமான் காதலி, தியாகம், ஜெனரல் சக்ரவர்த்தி, பைலட் பிரேம்நாத் ஆகிய நான்கும் 100 நாட்களைக்கடந்து ஓடின. என்னைப்போல் ஒருவன் 10 வாரங்களும், மற்றவை 50 நாட்களும் ஓடின. தியாகம் சாந்தியிலும், புவனேஸ்வரியிலும் 104 நாட்களில் மாற்றப்பட, கிரௌனில் தொடர்ந்து ஓடியதும், அங்கே வெள்ளி விழாவைக்கடக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மேற்கொண்டு ஒரு வாரம் ஓடிய நிலையில் 111 நாட்களில் வேறு படம் வெளியிடப்பட்டு, ரசிகர்களை ஏமாற்றினர்.

ஆனால், மதுரை சிந்தாமணியில் தியாகம் 25 வாரங்களுக்கு மேல் ஓடி, வெள்ளிவிழாப்படமாக அமைந்து ரசிகர்கள் வயிற்றில் பால் வார்த்தது. (முரளி சாருக்கும் மதுரை ரசிகர்களுக்கும் நன்றி). ஜஸ்டிஸுக்கு வருவோம்...

அக்டோபர் 26 அன்று வெளியான பைலட் பிரேம்நாத் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நிலையில், டிசம்பர் 16 அன்று 'ஜஸ்டிஸ் கோபிநாத்' வெளியாவதாக அறிவிப்பு வந்தது. ரிசர்வேஷன் துவங்கும் அன்று காலை பேப்பரைப் பார்க்கும் வரை பாரகன் தவிர மற்ற தியேட்டர்கள் முடிவாகாமலே இருந்தது. காலை தினத்தந்தியைப் பார்த்ததும்தான் சென்னையில் நான்கு தியேட்டர்களில் வெளியாவதாக விளம்பரம் இடப்பட்டிருந்தது. அதில் ஒரு ஆச்சரியம், கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் அருகிலிருந்த 'லிபர்ட்டி' தியேட்டரும் இடம் பெற்றிருந்ததுதான்.

ஆச்சரியத்துக்குக் காரணம் இருந்தது. லிபர்ட்டி தியேட்டரில் ஆரம்ப காலத்தில் புதுப்படங்கள் வெளியாகியிருக்கும் போலும். ஆனால் பல ஆண்டுகளாக புதுப்படங்கள் எதுவும் திரையிடப்படாமல், பழைய படங்களே திரையிடப்பட்டு வந்தன. அந்த தியேட்டரில் ஜஸ்டிஸ் கோபிநாத் ரிலீஸாகிறதென்பது ரசிகர்களுக்கு அதிசயமாக இருந்தது. (இதற்கு ஒன்றரை ஆண்டுகள் கழித்து அதில் 'ஒருதலை ராகம்' திரையிடப்பட்டு 100 நாட்கள் ஓடி, லிபர்ட்டி மீண்டும் நட்சத்திர அந்தஸ்தைப்பெற்ற விஷயமும் பின்னர் நடந்தது).

1971-க்கு முன்னர் நடிகர்திலகத்தின் எங்க ஊர் ராஜா, எங்க மாமா, குலமா குணமா போன்ற படங்கள் லிபர்ட்டியில் ரிலீஸாகின. ஆனால் அதன்பின்னர் நான்காவது ஏரியா தியேட்டர் என்றால் கிருஷ்ணவேணி, ராம், கமலா, நூர்ஜகான் என்றுதான் படங்கள் வெளியாயின.

ஜஸ்டிஸுக்குப்பின்னர், நடிகர்திலகத்தின் கவரிமான், நான் வாழ வைப்பேன் படங்களும் லிபர்ட்டியில் ரிலீஸானது

பேப்பர் பார்த்ததும் மண்ணடியிலிருந்த மளிகைக்கடையிலிருந்து தி.நகர் நண்பர் வீரராகவனுக்கு போன் செய்து விவரம் சொல்ல (அப்போது லோக்கல் கால் 15 பைசா) அவனும் விளம்பரத்தைப் பார்த்ததாகவும், முதல்நாள் முதல் காட்சியே பார்ப்பதற்கு லிபர்ட்டிதான் சரியான தியேட்டர், மற்றவைகளில் முதல்நாள் டிக்கட் கிடைக்காது என்று சொல்லி, என்னை கோடம்பாக்கம் வரச்சொல்ல, பீச் ஸ்டேஷனிலிருந்து புறநகர் ரயிலில் கோடம்பாக்கம் விரைந்தேன். சைக்கிளில் வந்த வீரராகவன் ஸ்டேஷனில் காத்திருக்க, இருவரும் லிபர்ட்டிக்கு விரைந்தோம். அப்போதுதான் ருசிகர சம்பவம் நடந்தது.

அந்த நேரத்திலும் (காலை 8 மணிக்கு) தியேட்டர் கேட் முன்னால் சுமாராக கூட்டம் கூடியிருந்தது. கேட்டைப்பிடித்துக்கொண்டு நிற்கும் கூட்டத்தைப்பார்த்த தியேட்டர் சிப்பந்திகள் இருவருக்கு ஆச்சரியம். "எதுக்குய்யா எல்லாரும் வந்திருக்கீங்க?" என்று கேட்க, பலர் கோரஸாக "புதுப்படத்துக்கு டிக்கட் ரிசர்வ் பண்ண வந்திருக்கோம்" என்று சொன்னதும்...
"என்னது? புதுப்படமா? இங்கே புதுப்படமெல்லாம் போடறதில்லைங்க. நீங்க தியேட்டர் தப்பா வந்துட்டீங்க. போங்க... போங்க" என்று விரட்டினர். "இல்லேப்பா, பேப்பர்ல பார்த்துட்டுதாம்பா வந்திருக்கோம்" என்று (சொல்லாதே யாரும் கேட்டால் இடையில் வரும் வசனம் போல) சொல்லியும் அவர்கள் நம்பவில்லை. அடுத்து அவர்கள் சொன்னதுதான் இன்னும் வேடிக்கை "அப்படியா? அப்போ பேப்பர்காரங்க தப்பா போட்டிருப்பாங்க" என்று சொன்னார்களே தவிர கேட்டைத் திறக்கவில்லை.

"இது ஏதுடா வம்பா போச்சு, பேசாம வேறு தியேட்டருக்குப்போயிடலாம் போலிருக்கே. போயும் போயும் இந்த தியேட்டரை புக் பண்ணியிருக்காங்க" என்று ரசிகர்கள் முனகியபடி நிற்க (இத்தனைக்கும் நடிகர்திலகமும், ரஜினிகாந்தும் இணைந்து நடிக்கும் முதல்படம்), அப்போதுதான் தியேட்டர் மேனேஜர் பைக்கில் வந்தார். அவருக்கு மட்டும் சிறிதாக கேட்டை திறந்து விட்ட சிப்பந்தி, "சார், நம்ம தியேட்டர்ல புதுப்படம் ரிலீஸாகப்போறதாக எல்லோரும் தப்பாக வந்து நிற்கிறாங்க" என்று சொல்ல,

"இல்லேப்பா ஜஸ்டிஸ் கோபிநாத் படம் நம்ம தியேட்டர்லதான் ரிலீஸாகுது. நேத்துராத்திரிதான் நம்ம தியேட்டர் கன்பர்ம் ஆச்சு. அதுனாலதான் இன்னும் போஸ்ட்டர்கள் வரலை. நீ மெயின் கேட்டையும் கவுண்ட்டர் கேட்டையும் திறந்து எல்லாரையும் உள்ள விடு" என்று சொல்லிவிட்டு உள்ளே போக, எல்லோரும் சரியான நகைச்சுவை கிடைத்து போல 'ஓ'வென்று கூச்சலிட்டு சிரித்தனர். தியேட்டர் சிப்பந்திகள் முகத்தில் அசடு வழிந்தது. அவ்வளவு சீக்கிரம் போயும் முதல்நாள் மாலைக்காட்சிக்குத்தான் டிக்கட் கிடைத்தது. மற்ற நண்பர்களுக்கும் சேர்த்து ஆறு டிக்கட்டுகள் வாங்கிக்கொண்டோம். இந்த சம்பவத்தை இன்றைக்கு நினைத்தாலும் சிரிப்பு வரும்.

என்ன காரணமோ தெரியவில்லை. அந்த ஒருமுறை மாலைக்காட்சி பார்த்தபின் ஜஸ்டிஸ் கோபிநாத் படத்தை இன்றுவரை மறுமுறை பார்க்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும்போதே சிலமுறைகள் பார்க்க முயன்றும், வேறு சில தடங்கல்கள் வந்து இடையூறு செய்து பார்க்கமுடியாமல் போனது. வீடியோ கேஸட்டிலும் பார்க்கும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. அதனால் படத்தின் கதை சரியாக நினைவில்லை. ஆனால் படம் நன்றாகவே இருந்தது.

நடிகர்திலகத்தின் ஜோடியாக கே.ஆர்.விஜயாவும், ரஜினிகாந்த்தின் ஜோடியாக சுமித்ராவும் நடித்திருந்தனர். சி.ஐ.டி.சகுந்தலா ஏதோ கிராமத்துப்பெண் ரோலில் ஜாக்கெட் போடாமல் நடித்திருந்தார். Heron ராமசாமிதான் பிரதான வில்லன். "நானா சொன்னேன் தீர்ப்பு" பாடல் T.M.S. இன் கணீர்க் குரலில் அட்டகாசமாகவே இருந்தது. இந்தப் பாடல் காட்சியில் நடிகர் திலகத்தின் சிகரெட் ஸ்டைல் செம கலக்கல். வயதான ரோலில் வரும் போது நடிகர் திலகத்தின் அந்த குறுந்தாடி அவருக்கு கன கச்சிதம். அந்த குறுந்தாடி அவர் மேல் ஒரு கம்பீரமான மரியாதையை ஏற்படுத்தும்.

படத்தில் நடிகர்திலகம் மற்றும் ரஜினியை விட தேங்காய் சீனிவாசனுக்கு அதிக சீன்களில் வரும் வாய்ப்பு. அவருக்கு ஒரு பாட்டு கூட இருந்தது. தேங்காய் ஸ்ரீனிவாசன், அவர் ஜோடியாக வரும் அபர்ணா காட்சிகளில் கொஞ்சம் கத்தரி வைத்து கதையிலும், காட்சி அமைப்புகளிலும் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் படம் நல்ல வெற்றி கண்டிருக்கும். ரஜினிக்கும் சுமித்ராவுக்குமான ஒரு டூயட் பாட்டு "நமது காதல் என்றும் என்றும் மாறாதது" வாகினி ஸ்டுடியோ புல்வெளியில் எடுக்கப்பட்டிருந்தது. சுமித்ரா ரோஸ்கலர் பெல்பாட்டமெல்லாம் போட்டுக்கொண்டு வந்து ஒரு வழி பண்ணுவார். அந்தப்பாடலை மட்டும் சில மாதங்களுக்கு முன் பார்த்திருந்ததால் நினைவிருக்கிறது.

இப்போது மீண்டும் 'ஜஸ்டிஸ் கோபிநாத்' முழுப்படத்தையும் பார்க்க ஆவலாக இருக்கிறது.

Gopal.s
6th May 2014, 08:55 AM
எங்களுக்கு பார்த்த ஞாபகம் அற்று போகும் அளவு திரியில் அவ்வப்போது அந்தர்த்யானம் ஆகி விடும் மாயாவியே? மாய்ந்து மாய்ந்து நாங்கள் எவ்வளவு எழுதினாலும்,நீ வரும் போது ,திரிக்கு வரும் உற்சாகம்,களை தனிதான்.எனக்கே மனசு துள்ளி,உடனே முரளி சாருக்கு நாலு missed call போட்டு,என்ன ஏது என்று பதற வைத்தேன்.

எங்களை விட்டு எங்கும் ஓடாதே. எங்களுடன் இரு. நாங்கள் கண்ணால் காண முடியாத திரியின் மாய கடவுளாய்.

mr_karthik
6th May 2014, 01:33 PM
முதல் வெளியீட்டில் பார்த்த அனுபவம் (7)

“கவரிமான்” (06.04.1979) .

நடிகர்திலகத்துக்கு முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரம். அதுவரை தன்னை வைத்து தயாரித்த தயாரிப்பாளர்கள், இயக்குனர்களை விட்டு, அப்போது கொடிநாட்டத்துவங்கியிருந்த புதிய தலைமுறையினருடன் நடிகர்திலகம் இணைந்த முதல் படம். இசைஞானி இளையராஜாவுடன் மூன்றாவது படம். எஸ்.பி.முத்துராமன் இயக்கம், பஞ்சுவின் கதை வசனம், பாபுவின் ஒளிப்பதிவு என முற்றிலும் புதிய கூட்டணி அமைந்த படம். ஆச்சாரமாகவும் கௌரவமாகவும் வாழும் ஒரு மேல்தட்டு வர்க்க குடும்பத்தில் நாகரிக மோகம் கொண்ட ஒரு மனைவியால் / மகளால் ஏற்படும் சீரழிவை மிக அற்புதமாக சொன்ன படம்.

1979 ஏப்ரல் துவக்கம், ஜனவரியில் வெளியாகியிருந்த திரிசூலம் தமிழகமெங்கும் அரங்கு நிறைந்து ஓடிக்கொண்டிருந்த மகத்தான காலகட்டத்தில், திரிசூலம் அனைத்து அரங்குகளிலும் 71-வது நாளாக வெற்றி நடை... இல்லையில்லை.. வெற்றி ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தபோது ஏப்ரல் 6 அன்று வெளியானது கவரிமான் என்ற அற்புத திரைக்காவியம்.

சென்னையில் மிட்லண்ட், பிராட்வே, உமா, லிபர்ட்டி திரையரங்குகளில் வெளியானது. ஏப்ரல் 6 காலை சாந்தியில் அகில இந்திய சிவாஜி மன்றத்துக்காக சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. அதற்காக இரண்டு நாட்கள் முன்பாகவே எங்கள் மன்ற தலைவர் பார்த்தசாரதி மூலம் டிக்கட்டுகளை வாங்கி விட்டோம். அதற்கு முதல் நாளிரவு 12 மணி வரை மிட்லண்ட் தியேட்டரில் அலங்காரங்கள் நடப்பதைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தோம. எங்கள் மன்றத்தின் சார்பில் வழக்கம்போல தலைவரின் கட் அவுட்டுக்கு ராட்சத காகித மாலை ஏற்பாடு செய்திருந்தோம். வடசென்னை மிண்ட் (Seven Wells) ஏரியாவில் காகித மாலைகள் செய்யும் ஒரு குழுவினரிடம் ஆர்டர் கொடுத்திருந்ததை இரவு 9 மணிக்கு நானும் எங்கள் மன்ற நண்பர்கள் கோவை சேது, மந்தவெளி ஸ்ரீதர் முவரும் ஆட்டோவில் சென்று வாங்கி வந்ததும் மற்ற நண்பர்கள் மேலே ஏறி அதனைபபொருத்தும் வேலையில் ஈடுபட்டனர். மற்ற மன்றங்களின் அலங்காரங்களும் விமரிசையாக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தன. தியேட்டர் ஊழியர்களும் ஒத்துழைத்தனர்.

மறுநாள் காலை 8 மணிக்கே சிறப்புக்காட்சிக்காக சாந்தியில் கூடி விட்டோம். அங்கங்கே சிறுசிறு வட்டங்களாக ரசிகர்கள் கூடி நின்று தமிழகமெங்கும் திரிசூலத்தின் அபார ஓட்டம் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டும், வெளியூர்களில் இருந்து ரசிகர்கள் எழுதிய கடிதங்கள், அனுப்பிய செய்தித்தாள்கள் ஆகியவற்றை ரசிகர்கள் மத்தியில் பரவ விட்டுக்கொண்டு இருந்தனர். சென்னை மாரீஸ் ஹோட்டலில் பணி செய்த நண்பர் சந்திரசேகர், திருச்சி தினத்தந்தி பதிப்புகளை வரவழைத்து அங்கு சுழற்சி முறையில் வலம் வரச் செய்து கொண்டிருந்தார். திருச்சி, தஞ்சை, கரூர், கும்பகோணம், மாயவரம், பகுதிகளில் திரிசூலம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தசெய்தி மனதுக்கு உற்சாகமாக இருந்தது.

சாந்தியில் ஒன்பது மணிக்கு ஸ்பெஷல் ஷோ துவங்கியது. ஆரம்பமே மிக வித்தியாசமான படமாக இருந்தது. யேசுதாஸின் கர்னாடக பாடலுக்கு நடிகர்திலகத்தின் வாயசைப்பு மிகப் பிரமாதமாக இருந்தது. பாத்திரங்களின் அறிமுகம் சற்று குழப்பமாக இருந்தபோதிலும் அந்த டைனிங் டேபிள் காட்சி சந்தேகங்களை நிவர்த்தி செய்தது. பூப்போலே பாடலுக்கு தலைவர் ஸ்டைலுக்கு நல்ல கைதட்டல் கிடைத்தது. ரசிகர்மன்ற ஷோவாச்சே. அதனால் காட்சிக்கு காட்சி கைதட்டல். பூப்போலே பாடலுக்கு பிரமீளாவுக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணை டூப் போட்டு எடுத்ததால் சற்று உறுத்தியது. (நடிகர்திலகத்தின் படத்துக்கு கால்ஷீட் தர முடியாத அளவுக்கு பிரமீளா பிஸியா என்ன)

ரவிச்சந்திரன் வரும் காட்சிகள் சைலன்ட்டாக ஓடின. ரசிகர்கள் ரொம்பப்பேர் அந்த ரோலில் ரவிச்சந்திரனை விரும்பவில்லை. டெல்லி போன தலைவர் பயணம் ரத்தாகி வீட்டுக்கு வர, பஸ்ஸர் ஒலிக்கும் காட்சியிலேயே கைதட்டல் துவங்கி விட்டது. வேலைக்காரியின் சமாளிப்பை ஏற்று வேறு பக்கம் செல்ல இருந்தவர், மாடியில் தன அறையில் சிரிப்பு சத்தம் கேட்டு நின்ற இடத்திலிருந்தே தலையைத் திருப்பிப் பார்க்கும் இடத்தில் மீண்டும் பலத்த கைதட்டல். அப்போது ஆரம்பித்த ஆரவாரம், அவர் தன மனைவியை அந்நியனுடன் காணும் கோலம் கண்டு துடித்து, செய்வதறியாது தவித்து இறுதியில் பாட்டிலால் மனைவியின் தலையில் அடிக்கும் வரை ஆரவாரம் அடங்கவில்லை. படத்தின் ஹைலைட்டே அந்த இடம்தானே.
(ஒரே நேரத்தில் பல்வேறு உணர்ச்சிகளைக் கொட்டி நடித்த இக்காட்சி பற்றி இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் தன ஒவ்வொரு பேட்டியிலும் சொல்லி வியப்படைவார்)

படம்பார்த்த அந்த தருணத்தில் ரசிகர்கள் அனைவரும் படம் நன்றாயிருப்பதாகவே சொன்னார்கள். ரசிகர் மன்ற சிறப்புக் காட்சி அல்லாது அன்றைய மாலைக் காட்சிக்கும் மிட்லண்ட் அரங்கில் ரிசர்வ் பண்ணியிருந்தோம். வழக்கம்போல நான்கு மணிக்கே தியேட்டரில் கூடி விட்டோம். எங்களுக்கு முன்பே அங்கே பெருங்கூட்டம் ரோட்டை அடைத்து நின்றிருந்தது. ஐந்து மணி சுமாருக்கு இயக்குனர் எஸ்.பி.முததுராமன், ஒளிப்பதிவாளர் பாபு ஆகியோர் வந்து, படம் துவங்கும்வரை தியேட்டர் வாசலில் நின்று ரசிகர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர். நடிகர்திலகத்துடன் பணியாற்றிய பெருமை அவர்கள் பேச்சில் எதிரொலித்தது. தான் ஒளிப்பதிவு இயக்குனர் ஆனபின்னர் நடிகர்திலகத்துடன் முதல் படம் இது எனக்குறிப்பிட்ட பாபு, தில்லானா மோகனாம்பாளில் கே.எஸ்.பிரசாத்தின் உதவியாளராக நடிகர்திலகத்துடன் பணிபுரிந்ததை நினைவு கூர்ந்தார். தன்னுடைய பிஸ்கட் கலர் ‘பியட்’ காரைத் தானே ஓட்டிவந்த விஜயகுமார், பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு வந்து இயக்குனரோடும் ரசிகர்களோடும் பேசிக்கொண்டு நின்றார்.

தியேட்டர் வாயிலில் ரோட்டை அடைத்து மக்கள் கூட்டம் நின்றதால் சற்றுதள்ளி சத்யமூர்த்தி பவன் அருகே அம்பாஸிடர் காரைவிட்டு இறங்கி, அங்கிருந்து நடந்து வந்த பிரமீளா எல்லோருக்கும் கும்பிடு போட்டவண்ணம் வந்தார். கிளிப்பச்சை நிறப்பட்டுப்புடவை அணிந்து அழகாக இருந்தார். கூட்டம் நெருக்கித்தள்ள, நமது ரசிகர்கள் அவரைச்சூழ்ந்து பாதுகாப்பாக அழைத்து வந்தனர். இயக்குனருடன் இரண்டொரு வார்த்தைகள் பேசிய அவர், கூட்டத்திலிருந்து தப்பிக்க அருகிலிருந்த டிக்கட் கவுண்ட்டர் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டார். (தியேட்டர் உள்ளே மேட்னி ஷோ இன்னும் முடியவில்லை என்பதால் உள்ளே போக முடியவில்லை). சற்று நேரத்தில் (மாஸ்ட்டர்) சேகரும் வந்தார். ரோஸ்கலர் புல்ஷர்ட்டும் கருப்பு பேண்ட்டும் அணிந்து மோட்டார் பைக்கில் வந்து இறங்கியவரை ரசிகர்கள் சூழ்ந்து, அவரது சிறப்பான நடிப்புக்கு பாராட்டு தெரிவித்தனர். (படத்தில் ஸ்ரீதேவியின் ஜோடி, மற்றும் இரண்டாவது வில்லன்). முதல் எபிசோட்டில் மனைவியே ஒரு அயோக்கியனுடன் சேர்ந்து கணவனுக்கு துரோகம் செய்யும் சூழல் என்பதால் அதில் மனைவி கொல்லப்படுகிறாள். அயோக்கியன் தப்பிவிடுகிறான். ஆனால் இரண்டாவதில் மகளின் சம்மதமின்றி கற்பழிக்க முயற்சிக்கும் சூழலில் அயோக்கிய காதலன் கொல்லப்படுகிறான். சேகருக்கு இது வித்தியாசமான ரோல். நன்றாக செய்திருந்தார். அவரும் தான் சிறுவனாக இருந்தபோது நடிகர்திலகத்தின் பல படங்களில் நடித்திருப்பதை நினைவு கூர்ந்தார். நடிகர்திலகத்தைக் குறிப்பிடும்போதெல்லாம் 'சிவாஜி அங்கிள்', சிவாஜி அங்கிள்' என்று குறிப்பிட்டார். (பாவம், மிகச்சிறிய வயதில் விபத்தில் பலியாகிவிட்டார்).

மேட்னி ஷோ முடிந்து கூட்டம் வெளியே வந்து, ஏற்கெனவே திரண்டிருந்த கூட்டத்துடன் சேர, குறுகலான ஜெனரல் பேட்டர்ஸ் ரோடு டிராபிக் ஜாம் ஆனது. மாலைக்காட்சியின்போது காலையில் ரசித்ததை விட ரசிகர்களும் பொதுமக்களும் நன்றாக ரசித்தனர். அதிலும் "பூப்போலே உன் புன்னகையில்" பாடல் இரண்டாம் முறையாக ஹோட்டலில் பாடும்போது நடிகர்திலகத்தின் ஸ்டைலை ரசிகர்கள் ஆரவாரமாக கைதட்டி ரசித்தனர். படத்தை உருவாக்கியவர்களின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது, ஆனால் நாட்கள் நகர நகர புன்னகை நீடிக்கவில்லை.

சமீபத்தில் கூட தொலைகாட்சியில் ‘கவரிமான்’ பார்த்தபோது, முற்றிலும் வித்தியாசமான இப்படம் ஏன் சரியாகபோகவில்லை என்பது புரியாத புதிராகவே இருந்தது..

uvausan
6th May 2014, 05:54 PM
திரு கார்த்திக் - உங்கள் இந்த அருமையான பதிவுகளை பார்த்து மிகுந்த நாட்கள் ஆகி விட்டன - மீண்டும் நீங்கள் திரும்பி வந்தது சந்தோஷமாக உள்ளது - உங்கள் திறமை , எழுத்தின் வளமை , ஞாபக சக்தி , பதிவுகளை கொண்டு போகும் விதம் இவைகளில் மனதை பறி கொடுத்தவர்களில் நானும் ஒருவன் - விரைவில் main திரியிலும் வருவீர்கள் என நம்புகிறேன்

mr_karthik
7th May 2014, 06:40 PM
"ஆயிரம் தான் சொல்லுங்க.. தலைவர் படத்தை முதல் நாள் முதல் ஷோவில் பார்த்த அனுபவத்திற்கு ஈடாக எதுவுமே கிடையாது. அந்த காலத்திலே தியேட்டரில் நாங்க பண்ணிய அளப்பரை இருக்கே...

நடிகர்திலகம் - ஸ்ரீதர் இணைந்து படைத்த கடைசிக் காவியம்...

'மோகனப்புன்னகை' (14.01.1981)

இயக்குனர் ஸ்ரீதருடன் நீண்டகாலமாக ஸ்டில் போட்டோகிராபராகப் பணியாற்றிய 'ஸ்டில் சாரதி' தனது ‘சாரதி மோஷன் பிக்சர்ஸ்’ சார்பில் தயாரித்த படம் 'மோகனப்புன்னகை'. அவருக்கு ஆசை நடிகர்திலகத்தை வைத்து படம்பண்ண வேண்டுமென்று. அதே சமயம் தனக்கு நெடுங்காலமாக வாழ்வளித்த ஸ்ரீதர் கையால் இயக்கப்பட வேண்டும் என்பதும் அவரது எண்ணம். ஆகவே வைரநெஞ்சத்துக்குப்பிறகு நடிகர்திலகத்தை விட்டு திசைமாறிப்போயிருந்த ஸ்ரீதரையும் நடிகர்திலகத்தையும் இப்படத்தில் மீண்டும் ஒன்று சேர்த்தார். இடைப்பட்ட காலத்தில் ஸ்ரீதர் மாற்றுமுகாமில் இரண்டு படங்களையும், அதன்பின் கமல் ரஜினியை வைத்து இளமை ஊஞ்சலாடுகிறது படத்தையும், பின்னர் அழகே உன்னை ஆராதிக்கிறேன் போன்ற படங்களையும் இயக்கியிருந்தார். பெருந்தன்மையோடு எதையும் எடுத்துக்கொள்ளும் நடிகர்திலகமும் மீண்டும் ஸ்ரீதருடன் இணைந்து பணியாற்ற சம்மதித்தார். மோகனப்புன்னகை உருவானது.

நடிகர்திலகத்தின் படங்களிலேயே முதன்முறையாக பாவை விளக்கில் நான்கு கதாநாயகிகள். அதனை அடுத்து இப்படத்திலும் நான்கு அந்த நால்வர், வைரநெஞ்சத்தில் ஏற்கெனவே நடிகர்திலகத்துடன் இணைந்திருந்த பத்மப்ரியா, பிற்காலத்தில் கவர்ச்சி ஆட்டத்தில் கலக்கிய அனுராதா, மலையாளப்படங்களில் கொடிகட்டிப்பறந்த ஜெயபாரதி, மற்றும் இலங்கை நடிகை கீதா ஆகியோர். நெடுநாட்களுக்குப்பின் ஸ்ரீதரின் இயக்கம், மெல்லிசை மன்னரின் இசை, பி.என்.சுந்தரத்தின் ஒளிப்பதிவு எல்லாம் சேர்ந்து ரசிகர்களை அதிகம் எதிர்பார்க்க வைத்து விட்டது. மெல்லிசை மன்னரும், சுந்தரமும் ஏமாற்றவில்லை. கதைதான் சற்று பலவீனமாக அமைந்துவிட்டது.

சாந்தியில் விஸ்வரூபம் ஓடிக்கொண்டிருந்தபோது இப்படம் ‘சித்ரா’வில் வெளியானது. ஆகவே சாந்தியில் தினமும் மாலை நாங்கள் கூடிப்பேசிக் கொண்டிருந்தபோது, ஏற்கெனவே அப்படத்தின் சில காட்சிகளைப் பார்த்திருந்த நண்பர் சிவா படத்தை ஏகமாக புகழ்ந்து தள்ளினார். சித்ராவில் முதல்காட்சி பார்த்து விடலாம் என்று எண்ணியிருந்தபோது, ‘Oasis Entertainers’ என்ற அமைப்பினர் படம் ரிலீஸ் அன்று காலை மோகனப்புன்னகை சிறப்புக்காட்சியாக, பைலட் தியேட்டரில் ஒருகாட்சி மட்டும் திரையிட இருக்கிறார்கள் என்ற செய்தி வர, 'அட சித்ராவில் பார்ப்பதைவிட பைலட்டில் பார்க்கலாமே' என்ற ஆர்வம் எல்லோருக்கும் உண்டானது. அதற்கேற்றாற்போல மறுநாள் அந்த Oasis Entertainers அமைப்பினரே நேரடியாக வந்து சாந்தி வளாகத்தில் நின்ற ரசிகர்களிடம் டிக்கட் விற்கத்தொடங்கினர் (ஸ்பெஷல் காட்சியாதலால் கூடுதல் விலை). எல்லோருக்கும் முதல்நாள் பைல்ட்டில் பார்க்க இருக்கிறோம் என்ற சந்தோஷம். (ஏனோ சிவாஜி மன்றத்தில் இப்படத்தின் ஸ்பெஷல் காட்சி போடவில்லை).

ரிலீஸுக்கு முதல்நாள் இரவு 12 மணிவரை சித்ரா தியேட்டரில் அலங்காரம் நடந்துகொண்டிருப்பதைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தோம். சேப்பாக்கம் மன்றத்தினர் பந்தல் அமைத்திருந்தனர். எங்கள் மன்றத்தின் சார்பில் நடிகர்திலகத்தின் கட்-அவுட்டுக்கு ராட்சத மாலை போட்டிருந்தோம். மற்ற மன்றத்தினர் தங்கள் மன்றங்களின் பேனர்கள் மற்றும் கொடிகளால் அலங்கரித்திருந்தனர். ‘சைதை சிவந்த மண் சிவாஜி’ மன்றத்தினர் வழக்கம்போல ராட்சத பேனர் அமைத்திருந்தனர். சித்ரா தியேட்டரின் கண்ணாடிப்பெட்டியினுள் நமது ராகவேந்தர் சார் அழகுற அமைத்திருந்த வண்ண மயமான பதாகை அலங்கரித்திருந்தது.(அதைப்பார்வையிட்டுக் கொண்டிருந்தபோதுதான் 'அமரகாவியம்' படத்துக்கு தாஜ்மகால் வடிவில் ஒரு சிறப்பு பதாகை உருவாக்க இருப்பதாகச்சொன்னார்).

ரிலீஸன்று காலை 8 மணிக்கெல்லாம் பைலட் தியேட்டர் முன் கூடி விட்டோம். அப்போது அங்கே திரையிடப்பட்டிருந்த வேறு படத்தின் பானர்கள் கட்டப்பட்டிருந்தன. படம் ரிலீஸாகும் தியேட்டர் ஒன்று, நாங்கள் பார்க்க வந்திருக்கும் தியேட்டர் ஒன்று. அந்த வழியே பஸ்ஸில் போனவர்களெல்லாம், அங்கே திரையிடப்பட்டிருந்த படத்துக்குத்தான் இவ்வளவு கூட்டமும் என்று எட்டிப்பார்த்துக்கொண்டு போயினர். 8.40 அளவில் எல்லோரையும் உள்ளே அனுமதித்து, சரியாக 9 மணிக்கு படத்தைத் துவக்கினார்கள். படம் துவக்கத்திலிருந்தே நன்றாகவே இருந்தது.

நடிகர்திலகத்துக்கு நான்கு ஜோடிகள் இருந்தபோதிலும் அதில் மூன்று ஜோடி ஒருதலைக்காதல். இலங்கை நடிகை கீதாவுக்கும் அவருக்கும் மட்டும்தான் ஒரிஜினல் காதல். ஏற்கெனவே பத்மப்ரியாவுக்கு அவர் மேல் ஒருதலைக்காதல். அது நிறைவேறாமல் நடிகர்திலகம் - கீதா காதல் மணமேடை வரை வந்ததில் அவருக்கு வருத்தம். ஆனால் மணமேடையில் கீதா கொல்லப்பட, அந்த ஒரிஜினல் காதல் முறிந்து போகிறது. நாளடைவில் தன் அலுவலகத்திலேயே பணிபுரியும் ஜெயபாரதியுடன் நடிகர்திலகத்துக்கு காதல் ஏற்பட, அதையறியாத ஜெயபாரதி, நடிகர்திலகம் தன் காதலைச் சொல்ல வரும் நேரம் பார்த்து, தான் மணமுடிக்கப்போகும் நபரை அவருக்கே அறிமுகப்படுத்த அந்தக்காதலும் அவுட். இதனிடையே தான் வளர்த்து வந்த அனுராதாவும் தன்மீது காதல் கொள்வது கண்டு, அதிர்ச்சியடையும் நடிகர்திலகம், அதை முறிக்க அவரே அனுவுக்கு முன்னின்று வேறு ஒருவருடன் மணமுடிக்க, புதிய கணவனுடன் கப்பலில் பயணிக்கும் அனுராதா நடிகர்திலகத்தை மறக்க முடியாமல் கப்பலில் இருந்து குதித்து உயிரை விட, கடற்கரையில் சோகமே உருவாக அமர்ந்திருக்கும் நடிகதிலகத்தின் காலடியிலேயே அனுராதாவின் பிணம் ஒதுங்க, அதைத்தூக்கியவாறு அவர் கடலுக்குள் செல்வதோடு படம் முடிகிறது.

கொஞ்சம் சிக்கல் நிறைந்த கதைதான். இடையில் கொஞ்சம் சொதப்பியும் இருந்தார்கள். காதலி கீதா இறந்த சோகத்தில் முதலில் மதுப்பித்தராகவும், பின்னர் பெண்பித்தராகவும் மாறுவதாகக் காட்டியிருந்தது ரசிகர்களுக்கும், தாய்மார்களுக்கும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. கீதா இறந்த பின் ஜெயபாரதியுடனான அவரது காதல் நிறைவேறுவதாக முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் அப்போதே பேசிக்கொண்டார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக படம் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. படம் நெடுகிலும் ரசிகர்கள் ஆரவாரமாக கைதட்டி ரசித்தார்கள். நாகேஷின் காமெடியும் நன்றாகவே அமைந்து ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. வம்பு பேச ஆளில்லாமல் கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்துப்பேசிக்கொள்ளும் இடம் வெகு ஜோர்.

குறிப்பாக பாடல் காட்சிகள் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. படத்தின் முதல் பாடலாக, கீதா அருவியில் குளிக்கும் காட்சியுடன் படமாக்கப்பட்ட 'தென்னிலங்கை மங்கை' பாடலும், கீதாவும் நடிகர்திலகமும் இணைந்து பாடும் டூயட் 'தலைவி.. தலைவி... என்னை நீராட்டும் ஆனந்த அருவி' பாடலும் கொண்டாட்டமாக ரசிக்கப்பட்டது என்றால், ஜெயபாரதி தன் வருங்காலக்கணவனை அறிமுகப்படுத்தியதும், அவரை வாழ்த்தி நடிகர்திலகம் பாடும் 'கல்யாணமாம் கச்சேரியாம்' பாடல் ரசிகர்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. கண்களில் சோகத்தைத்தேக்கி வைத்துக்கொண்டே சிரித்துக்கொண்டு பாடும் காடசிகளில் ரசிகர்களின் கைதட்டல் அரங்கத்தை அள்ளியது. அனுராதாவிடம் பாடும் பாடல் 'குடிக்க விடு... என்னைத் துடிக்க விடு' என்ற பாடலும் ரசிகர்களால் ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்டது. வெளிச்சத்துக்கு வராமல் போன நடிகர்திலகத்தின் பல தத்துவப்ப்பாடல்களில் இதுவும் ஒன்று.

பைலட் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, படம் நன்றாக இருக்கிறது நிச்சயம் வெற்றிபெறும் என்று எல்லோரும் பேசிக்கொண்டு சென்றனர். அன்று மாலைக்காட்சியின்போது ரெஸ்பான்ஸ் தெரிந்துகொள்வதற்காக சித்ராவுக்குப்போனோம். உள்ளே போய் படம் பார்க்கவில்லை. முதல்நாளாகையால் கடும் கூட்டம். மேட்னி பார்த்துவிட்டு வெளியே வந்த பொதுமக்கள், படம் நன்றாயிருப்பதாகச்சொல்லவே படம் வெற்றியென்று அப்போதே முடிவு செய்தோம். ஐந்தாம் நாள் இரண்டாம் முறையாக, 'சித்ரா'வில் மாலைக்காட்சி பார்த்தோம். அப்போதும் எல்லோரும் நன்றாகவே ரசித்தனர், கைதட்டினர், பாராட்டினர். குறிப்பாக 'கல்யாணமாம்' பாடலுக்கும், 'குடிக்க விடு' பாடலுக்கும் நல்ல வரவேற்பு.

இவ்வளவு ஆரவாரமாக வரவேற்கப்பட்ட 'மோகனப்புன்னகை' ஏன் பெரியதொரு வெற்றியைப் பெறவில்லையென்பது இன்றுவரை புரியாத காரணமாகவே இருக்கிறது.

Russellcaj
8th May 2014, 07:59 PM
Nice Experiences.

Please Continue your Memories for More Films.

Murali Srinivas
9th May 2014, 10:59 PM
நண்பர் கார்த்திக் வெகு நாட்களுக்கு பிறகு ஒரு ரவுண்டு வந்ததால் அவரின் சுவையான எழுத்துக்களை மீண்டும் படிக்கவும் மற்றவர்களும் இடையூறு இல்லாமல் அதை தொடர்ந்து வாசிக்கவும் சற்று இடைவெளி விட்டிருந்தேன். இப்போது மீண்டும் விட்ட இடத்திலிருந்து

விட்ட இடம் 1972-ம் ஆண்டு மே மாதம் 6-ந் தேதி மதுரை சென்ட்ரல் திரையரங்கம். பட்டிக்காடா பட்டணமா ஓபனிங் ஷோ. அதை பற்றிய சென்ற பதிவின் இறுதி பாரா.

அவரிடம் பணத்தை கொடுத்து விட்டு balance கூட வாங்கவில்லை. ஆனால் counterfoil கிழிக்கப்பட்டிருந்தது. சந்தேகம் வந்து விட்டது. உடனே என் கஸின் முதலில் என்னை மட்டும் ஒரு டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே போக சொன்னான். சிக்கல் எதுவும் இல்லாமல் நான் உள்ளே செல்வதை பார்த்து விட்டு அவனும் உள்ளே வர, இடம் பிடித்து போய் உட்கார்ந்தோம். ஒரு பெரிய சாதனையை செய்தது போல பெருமிதம். ஆனால் இன்று வரை டிக்கெட் கிடைக்காமல் அதிலும் ஓபனிங் ஷோ டிக்கெட் கிடைக்காமல் இவ்வளவு கஷ்டம் வேறு எந்த படத்திற்கும் பட்டதில்லை.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

படம் ஆரம்பித்தது. முதலில் மதுரையை காண்பித்தவுடனே தியேட்டர் களை கட்டி விட்டது. மதுரை விமான நிலையத்தில் முதல் காட்சி. அப்போது வி.கே.ஆர் ஒரு வசனம் சொல்லுவார். மதுரையை சுத்தின கழுதை கூட மதுரையை விட்டு போகாது. ஆரவாரம் அதிகமானது. அடுத்த காட்சி. படம் சட்டென்று நெகடிவ்-ல் மாறியது. தீசட்டி ஏந்திய ஒரு கை மட்டும் திரையில் தெரிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளிக்கும் என்ற வார்த்தைகள் மின்ன, காதடைக்கும் கைதட்டல் ஒலி, பேப்பர் மாரி பொழிய ஆட்டம் தொடங்கியது. முதலில் ஒரு கை பிறகு கால், சைடு போஸ் என்று கொஞ்ச கொஞ்சமாக காட்டிக் கொண்டே வந்து இறுதியில் டைரகஷன் பி.மாதவன் என்று போடும்போது நடிகர் திலகத்தின் முகம் தெரிய அரங்கத்தில் மீண்டும் ஒரு அணைக் கடந்த ஆரவாரம்.

உடனே அம்பிகையே ஈஸ்வரியே பாடல் ஆரம்பிக்க தியேட்டர் இரண்டுப்பட்டது.

இரண்டாவது சரணம் வந்தது

ஏழைகளை ஏச்சதில்லை முத்துமாரி; நாங்க

ஏமாத்தி பொழச்சதில்லை முத்துமாரி

வாழ விட்டு வாழுகிறோம் முத்துமாரி; இனி

வருங்காலம் எங்களுக்கே முத்துமாரி

1971 தேர்தலில் ஏமாந்த/ஏமாற்றப்பட்ட மக்கள் உண்மை நிலையை புரிந்துக் கொண்டு பெருந்தலைவரின் காங்கிரஸ் இயக்கத்திற்கு பெருவாரியாக ஆதரவாக மாறிக் கொண்டிருந்த அன்றைய சூழலில் இந்த வரிகளை கேட்டவுடன் ஒட்டு மொத்த ரசிகர்களும் ஆரவாரம் செய்தனர் அது அப்படியென்றால் அடுத்து வந்த மூன்றாவது சரணம்

சிவகாமி உமையவளே முத்துமாரி; உன்

செல்வனுக்கும் காலமுண்டு முத்துமாரி

மகராஜன் வாழ்கவென்று வாழ்த்து கூறி;இந்த

மக்களெல்லாம் போற்ற வேணும் கோட்டை ஏறி,

ரசிகர்களை அளப்பரையின் உச்சத்திற்கே அழைத்து சென்று விட்டது. அடுத்த சில நிமிடங்கள் வரை பெருந்தலைவரையும் நடிகர் திலகத்தையும் வாழ்த்தி கோஷங்கள் தியேட்டரில் எதிரொலித்துக் கொண்டேயிருந்தன.

பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் வந்த ரசிகர்களுக்கு இந்த பாடலும், வரிகளும் பயங்கர சந்தோஷத்தை கொடுக்கவே ரசிகர்கள் படத்தில் ஐக்கியமானார்கள். படத்தின் திரைக்கதையமைப்பு படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றது. அடுத்து சோழவந்தான் வீதியில் நடக்கும் சண்டை. அந்த சண்டை தொடங்குவதற்கு முன்னால் நடிகர் திலகம் ஒரு வசனம் பேசுவார். "ஏண்டா! தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்! கத்தி எடுத்தவன் எல்லாம் வீரனா?" தியேட்டரில் அதிகபட்ச அலப்பறை இந்த வசனத்திற்கு தான். அடுத்து கல்யாணம். முதலிரவு காட்சி. அதில் கேட்டுக்கோடி உருமி மேளம் பாடல். அந்த வரிகள், அந்த ட்யுன், மெதுவாக வரும் பீட்ஸ் சட்டென்று டப்பாங்குத்துக்கு மாறுவது, கேட்க வேண்டுமா? ரசிகர்களின் உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த பாடல் காட்சியை அடுத்த தடவை பார்க்கும் போது தான் சரியாக பார்க்க முடிந்தது. இது முடிந்து சிறிது நேரத்தில் அதையும் தூக்கி சாப்பிடும் விதமாக என்னடி ராக்கம்மா பாடல். திகட்ட திகட்ட சந்தோஷம் என்பார்களே அதை அங்கே சிவாஜி ரசிகர்கள் நேரிடையாக அனுபவித்தார்கள். தன்னை மறந்த நிலை என்பார்களே அந்த ரேஞ்சுக்கு போய் விட்டார்கள். இதற்கு நடுவில் அத்தை சுகுமாரிக்கும் நடிகர் திலகத்திற்கும் நடுவில் வரும் சின்ன சண்டைகள், அந்த பதிலுக்கு பதில் வசனங்கள் வேறு ரசிகர்களை குஷிப்படுத்தியது. இடைவேளை. வெளியே வரும் ரசிகன் துள்ளிக் குதிக்கிறான். இது எதிர்பாராமல் கிடைத்த ஜாக்பாட். அதே சமயம் செகண்ட் ஹாப் இதே போல் சுவாரஸ்யமாக இருக்க வேண்டுமே என்ற சின்ன பயமும் இருந்தது.

அன்புடன்

Murali Srinivas
14th May 2014, 11:19 PM
அந்த நாள் ஞாபகம்

இடைவேளைக்கு பிறகு படம் ஆரம்பித்தது. தன்னை விட்டு பிரிந்து சென்ற மனைவியை நினைத்து வருந்தும் மூக்கையாவிடம் அப்பாத்தா எஸ்.என்.லட்சுமி சொல்லும் " ஆடிக் கறக்கிற மாட்டை ஆடி கறக்கணும்! பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்கணும்!" என்ற வசனத்துடன் படம் பட்டிக்காட்டிலிருந்து பட்டணத்திற்கு மாறும். தோழிகளுடன் ஹோட்டலில் அமர்ந்திருக்கும் கல்பனாவிடம் ஹிப்பி ஸ்டைல் தலை முடியுடன் முகேஷ் என்ற பெயரில் நடிகர் திலகம் அறிமுகமாக, அடுத்த ஆட்டம் தியேட்டரில் ஆரம்பமானது. நல்வாழ்த்து நான் சொல்லுவேன் பாடல் உடனே. இடைவேளைக்கு முன் கிராமத்து குத்து என்றால் இப்போது வெஸ்டர்ன் பீட்ஸ். எதுவாக இருந்தால் என்ன, நம்ம ரசிகர்கள் சளைத்தவர்களா என்ன? அதற்கும் தியேட்டரை உண்டு இல்லை என்று பண்ணி விட்டார்கள்.

அடுத்து நடிகர் திலகம் ஜெஜெ-வை சீண்டும் காட்சிகள். அந்த கிண்டல் வசனங்கள், கர்ப்பமாக இருக்கிறார் என்று சொன்னவுடன் சொல்லும் கேலி பேச்சுகள் இதற்கெல்லாம் செம ரெஸ்பான்ஸ். ஆளை விட்டு கடத்தி கொண்டு போய் நடிகர் திலகத்தை சென்னையை சுற்றி காண்பிப்பார்கள். ஊருக்கு வெளியே போன பிறகு அவர் அவர்களை புரட்டி அடிப்பார். "சாந்தி தியேட்டரை எனக்கே காட்றியா?" டயலாகிற்கு தியேட்டர் குலுங்கியது.

ஆனால் அவர் மீண்டும் சோழவந்தான் வந்தவுடன் அது வரை இல்லாத சீரியஸ் நடிப்பு வெளிப்பட, நடிப்பை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு சந்தோஷம். பஞ்சாயத்து கூட்டத்திற்கு போய் விட்டு வந்த நடிகர் திலகம் எஸ்.என்.லட்சுமியிடம் பேசும் காட்சி

"பஞ்சாயத்துல எனக்கு கிடச்ச வரவேற்பை நீ பார்த்திருக்கணும்.அப்படியே பூரிச்சு போயிருப்பே.

அப்படியா? நான் வராமே போயிட்டனே

நான் வந்திருக்கனே உயிரோடு

நாக்கு மேல பல்லைப் போட்டு உன்னை எவன்யா பேசினான்?"

மற்றும் நடிகர் திலகம் சொல்லும் "கை கழுவிட்டேன்" போன்ற வசனங்களுக்கு பெரிய வரவேற்பு [கதை வசனம்: பாலமுருகன்]. என்னடி ராக்கமாவின் pathos version -கும் நல்ல வரவேற்பு இருந்தது. அந்த கிராமத்து வீட்டின் மாடிப்படியில் அமர்ந்தவாறே அவருக்கே உரித்தான கன்னத்தில் வழியாமல் கண்களில் நீர் கரை கட்டி நிற்க

எல்லோர்க்கும் ஊர்கோலம் இரண்டு தரம்! அதில் ஒரு கட்டம் முடிந்ததடி!

தாயாருக்கும் பின்னாலே சம்சாரம் அது தடம் கொஞ்சம் புரண்டதடி

என்ற வரிகளின் போதெல்லாம் செம அப்ளாஸ்.கிளைமாக்ஸ் முடிவு இப்படித்தான் இருக்கும் என்று யூகிக்க முடிந்தாலும் அந்த சஸ்பென்சை அழகாக கையாண்டிருந்தார் இயக்குனர் மாதவன்.

படம் முடிந்தது. ஹாலை விட்டு வெளியே வந்தவுடன் தியேட்டர் காம்பவுண்ட்குள்ளேயே ஒரு வெங்காய வெடி சத்தம் காதை அடைத்தது.

தொடர்ந்து படபடவென்று தௌசன் வாலா சர வெடி வெடிக்க, ராஜா திரைப்படத்திற்கு நடந்தது போல ரசிகர்கள் கூட்டம் மேல மாசி வீதியில் ஊர்வலம் வந்து தியேட்டர் வாசலில் குழுமி ஒரு ஆட்டம் போட்டு விட்டு போனார்கள். தொடர்ந்து நான்காவது படம் வெற்றி. 1972 -ம் வருடத்தை பொறுத்த வரை ஹாட்ரிக் வெற்றி.

ஆனால் ஓபனிங் ஷோ பார்த்து விட்டு வரும் போது என்னால் அந்த படத்தின் வெற்றியின் வீச்சை அளவிடமுடியவில்லை என்பதை இங்கே ஒத்துக் கொள்ள வேண்டும். நிச்சயமாக நூறு நாட்கள் ஓடும் என்று நினைத்தேன். ஆனால் அதையும் தாண்டி வெள்ளி விழ கொண்டாடி தமிழ் சினிமாவின் மொத்த கருப்பு வெள்ளை படங்களிலேயே அதிகமான வசூலை பெற்று சாதனை புரியும் என்று எதிர்பார்க்கவில்லை. எங்கள் மதுரையில் அன்று வரை மிகப் பெரிய வெற்றிப்படங்கள் வெள்ளி விழா கொண்டாடி (175 நாட்களில்) பெற்ற வசூலையெல்லாம் வெறும் நூறு நாட்களில் முறியடித்தது பட்டிக்காடா பட்டணமா.

(தொடரும்)

அன்புடன்

mr_karthik
17th May 2014, 03:29 PM
முதல் வெளியீட்டில் பார்த்த அனுபவம் (9)

"உத்தமன்"

இப்போதுதான் படம் வெளியாகி பத்தாண்டுகள் ஆனதுபோல் இருக்கிறது. அதற்குள் 38 ஆண்டுகள் முடிந்து விட்டனவா?. நினைத்துப்பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. நடிகர்திலகம் மெலிந்திருந்த காலங்களில் வந்த படம். எப்போதும் இப்படியேதான் இருக்கப்போகிறார் என்றெண்ணிய காலத்தில் அதன் அருமை அவ்வளவாகப் போற்றப்படவில்லை. ஆனால் அவர் மீண்டும் உருவம் மாறத்துவங்கியபின் அவையனைத்தும் பொக்கிஷங்களாகி விட்டன. அதில் ஒன்றுதான் உத்தமன்.

1976 பொதுவாக தமிழ்ப்பட உலகுக்கும், குறிப்பாக நடிகர்திலகத்துக்கும் சற்று தேக்கமான காலகட்டம் என்பதில் சந்தேகமில்லை. அப்போது வெளியான படங்களின் வெற்றிகளைப் பார்த்தாலே தெரியும். அன்பே ஆருயிரே வில் துவங்கிய மந்த நிலை, படங்கள் சரியில்லாத காரணத்தாலும், பெருந்தலைவர் மறைவுக்குப்பின் ஏற்பட அரசியல் சூழல்களாலும் தொடர்ந்தது. 'பாட்டும் பரதமும்' போன்ற நல்ல படங்களும் இதில் பாதிக்கப்பட்டன.

அந்த ஆண்டில் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி என்ற லக்கி காம்பினேஷனில் வந்த ஒரே படம் என்றபோதிலும், உண்மையில் லக்கி காம்பினேஷனா என்பது பின்னர் ஐயப்பாடானது. இதற்கு மாறாக மிட்லண்ட், மகராணி, ராக்ஸி என்ற காம்பினேஷனில் வந்திருந்தால் சென்னையிலும் மதுரையைப்போல 100 நாட்களைக் கடந்திருக்க வாய்ப்பு அமைந்திருக்கும். ஆனால் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரியில் பத்தாவது வாரத்தில் படம் எடுக்கப்பட்டபோது நல்ல கூட்டத்துடன் ஓடிக்கொண்டிருந்தது உண்மை என்பதை மறுக்க முடியாது. எது எப்படியோ சென்னையில் அந்த ஆண்டில் 100 நாள் படமே இல்லாமல் போனது.

உத்தமன் படம் வெளியாவதற்கு முன் பாடல்கள் வெளிவந்து டீக்கடைகளில் சக்கைபோடு போட்டன. இப்போது போல இசை வெளியீட்டு விழா என்ற பெயரில் திரையுலகையே அழைத்து விழா நடத்தும் கூத்து எல்லாம் அப்போது ஏது?. முதலில் டீக்கடைகளில் பாடலைக் கேட்டு பின்னர் ஹோட்டல் ஜுக் - பாக்ஸ்களில் என்ன படம் என்று தெரிந்து கொள்ள வேண்டியதுதான். உத்தமன் பாடல்கள் முதலில் கேட்டபோது சுமாராக இருந்தவை, பின்னர் திரும்பத்திரும்பக் கேட்டதும் மனதுக்குப் பிடிக்க ஆரம்பித்தன. 'படகு படகு' பாடலும் 'தேவன் வந்தாண்டி' பாடலும் மனத்தைக் கிறங்கடித்தன. இயக்கம் ராஜேந்திர பிரசாத் என்பதால் பிக்சரைசேஷன் நிச்சயம் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்தோம்.

வீட்டுக்கு எதிரிலிருந்த டீக்கடையில் உத்தமன், ஊருக்கு உழைப்பவன், மன்மத லீலை, கிரஹப்பிரவேசம் படங்களின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தன. பின்னர் ஏரியா பெரியவர்களால் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டு தெரு அமைதியானது. இருந்தாலும் உத்தமன் பாடல்களைக்கேட்டு பழகி விட்டதால் காதுகள் அனிச்சைசெயலாக 'ஜுக் - பாக்ஸ்' ஹோட்டல்களை நாடின. அப்போது ஆடியோ கேசட்டுகள் புழக்கதில் வந்துவிட்ட போதிலும், பாடல்களை கேசட்களில் பதிவு செய்துதர கடைக்காரர்கள் மறுத்து விடுவார்கள். இசைத்தட்டு விற்பனை குறைந்து விடும் என்ற காரணம். ஒவ்வொரு கிராமபோன் ரிக்கார்ட் கடையிலும் எச்.எம்.வி. நிறுவனத்தினரின் “Please do not ask us to tape, it is illegal” என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும்.

நண்பன் ஒருவன் வீட்டில் ஆடியோ கேசட் பிளேயர் இருந்ததால், காசினோ திரையரங்கின் பின்புறமுள்ள ரிட்சி தெருவிலிருந்த ஒரு ரிக்கார்ட் விற்பனையாளரை நச்சரித்து 'உத்தமன்' பாடல்களை மட்டும் ஒரு கேசட்டில் பதிவிட்டு, திரும்பத்திரும்பக் கேட்டு வந்ததில் படம் வரும் முன்பே பாடல்கள் மனப்பாடமாகி இருந்தன. இதனிடையே சினிமா பத்திரிகைகளான பேசும்படம், பிலிமாலயா, பொம்மை, மதிஒளி, திரைவானம் ஆகியவற்றில் உத்தமன் பற்றிய செய்திகளும் வண்ணப்படங்களும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டே இருந்தன. நடிகர்திலகம் அருமையான ஹேர்ஸ்டைலுடன், அற்புதமான காஸ்ட்யூம்களில், மஞ்சுளாவுடன் செம கியூட்டாக இருந்தார். இதற்கு முந்தைய கிரஹப்ரவேசம், சத்யம் படங்கள் கொஞ்சம் டல்லாக அமைந்து தாய்க்குலத்துக்கு ஏற்றவையாக அமைந்திருந்தனவே தவிர ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடவில்லை.

ஆவலுடன் எதிர்பார்த்திருந்த படம் வெளியாகும் அறிவிப்பும், ரிசர்வேஷன் விளம்பரமும் வந்தது. (அப்போதெல்லாம் நடிகர்திலகத்தின் படங்கள் சனிக்கிழமைகளில் ரிலீஸ் ஆகும். அதற்கேற்றாற்போல ஞாயிற்றுக்கிழமை ரிசர்வேஷன் துவங்கும்). அப்புறம் என்ன? கிரௌன் தியேட்டருக்கு மொத்த நண்பர்கள் கூட்டமும் படையெடுத்தோம். ஏற்கெனவே பலமுறை இங்கே பேசியதுபோல அந்த ஆண்டு கொஞ்சம் சுமார் ஆண்டு என்பதால் ரிசர்வேஷனுக்கும் கூட்டம் அவ்வளவு இருக்காது என்று எண்ணி அசால்ட்டாக போனோம். ஆனால் நிலைமை வேறாக இருந்தது.

எவ்வளவு ரசிகர்கள் இப்படி ஒரு படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கிடந்துள்ளனர் என்பது கூட்டத்தைப் பார்த்ததும் தெரிந்தது. வழக்கமாக ரிசர்வேஷன் என்றால் ஏழு ஏழரைக்குள் போய்விடும் எங்களுக்கு அன்று அசால்ட்டாக சற்று தாமதமாக போனது எவ்வளவு பெரிய தப்பு என்பதை எங்களுக்கு முன் சென்றிருந்த ரசிகர்கள் உணர வைத்தனர். நாங்கள் போவதற்கு முன்பே ரிசர்வேஷன் துவங்கிவிட்டது என்பது மட்டுமல்ல. கியூவில் நின்ற சிறிது நேரத்தில் முதல்நாள் மூன்று காட்சிகளும் புல்லாகிவிட்டன. முதல்நாளே படம் பார்க்கப்போகிறோம் என்ற கனவு 'பணால்' ஆனது. கியூ நகர அடுத்த நாள் மேட்னியும் 'புல்'. அவ்வளவுதான் எங்களுக்கு பதைபதைப்பு அதிகமானது. 'உன்னாலதாண்டா லேட்' என்று ஒருவருக்கொருவர் பழிபோட ஆரம்பித்தோம். கவுண்டரை நெருங்கி விட்டோம். எங்கள் கண்கள் ரிசர்வேஷன் சார்ட்டிலேயே இருந்தது. இரண்டாவதுநாள் மாலைக் காட்சியாவது கிடைக்கணுமே என்ற படபடப்பு. (இரவுக்காட்சி பார்க்க வீட்டில் அனுமதி கிடையாது).

சொன்னால் நம்ப மாட்டீர்கள். (எங்களாலேயே நம்ப முடியவில்லையே, அப்புறம் எப்படி உங்களை நம்பச்சொல்ல?) எங்கள் நண்பர் குழுவின் கடைசி ஆள் டிக்கட் வாங்கியதும் இரண்டாவதுநாள் ஈவினிங் ஷோ புல். எங்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும். முதல்நாள் பார்க்கமுடியாமல் போனதற்கு ஆறுதல் பரிசு என எண்ணியவாறு வீடு திரும்பினோம். அடுத்த ஐந்துநாட்களும் நண்பர்களுக்குள் உத்தமன் பற்றியேதான் பேச்சு. பள்ளிப்படிப்பை முடித்து அந்த ஆண்டுதான் ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் சேர்ந்த முதல் மாதம் உத்தமன் ரிலீஸ். தினமும் பஸ்ஸில் சாந்தி வழியாகத்தான் கல்லூரிக்கு போவோம் வருவோம். ஆனால் ஏனோ சாந்தியில் பார்க்கலாமே என்று எங்களுக்குத் தோன்றவில்லை. ('அண்ணன் ஒரு கோயிலில்' இருந்துதான் சாந்தி சங்கமம்).

முதல் நாள் மேட்னிஷோ விடும் முன்பே கிரௌன் தியேட்டருக்குப் போய்விட்டோம். முதல்நாள் படம் பார்க்காவிட்டால் என்ன ‘ரிலீஸ் மேளா’வை மிஸ் பண்ணலாமா?. நண்பன் ஒருவனுக்குத் தேவையில்லாத நப்பாசை. கரண்ட் புக்கிங் டிக்கட் கிடைத்தால் முதல்நாளே பார்த்துவிடலாமே என்று நான்கு மணிக்கே போய்விட்டான். நாங்கள் போய் அவன் நின்ற இடத்தைப்பார்த்து எங்களுக்கு சிரிப்பு வந்தது. ஒரு ஷோவுக்கு டிக்கட் வாங்க நான்கு ஷோவுக்கான கூட்டம் நின்றுகொண்டிருந்தது. அவனும் நம்பிக்கையுடன் நின்றுகொண்டிருந்தான் பாவம். கவுண்டர் மூடியதும் எங்களுடன் ஐக்கியமானான். 'மன்னவன் வந்தானடி' படத்துக்குப்பின் கிரௌன் தியேட்டர் களைகட்டியது உத்தமனுக்குத்தான். அரசியலில் அப்படி இப்படி மதில்மேல் பூனைகளாக இருந்த ரசிகர்களும், நடிகர்திலகத்தின் முடிவை ஏற்று, இந்திராவின் தலைமையின் கீழ் ஒன்று கூடி வந்துவிட்டனர். மேட்னிஷோ முடிந்து வெளியே வந்த ரசிகர்கள், வெளியே நின்றிருந்த ரசிகர்களுடன் ஒன்று கலந்து படத்தைப் பற்றிய அபிப்பிராயங்களை பகிர்ந்துகொள்ளத் துவங்கினர். எல்லோருடைய ஒட்டுமொத்த முடிவு, ரொம்ப நாளைக்குப்பிறகு ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரியான படம் என்பதுதான். இரவு எட்டுமணிவரை அங்கேயே நின்று பேசிக்கொண்டிருந்து விட்டு திரும்பினோம்.

ஏற்கெனெவே பார்த்த ரசிகர்களின் வர்ணனைகள் கண்களில் பட்டாம்பூச்சிகளைப் பறக்கவிட, ஆவலுடன் அடுத்தநாள் மாலைக்காட்சிக்குச் சென்றோம். முதல்நாளுக்கு சற்றும் குறையாத கூட்டம். எங்களுக்கோ சந்தோஷம் தலைக்கேறி ஆடியது. மாலைநேரம் கிரௌன் தியேட்டர் ஓரம் நல்ல நிழலாக இருக்கும். கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தபோது ரசிகர்கள் அனைவருக்கும் உற்சாகம் கரை புரண்டது. சாந்தி மற்றும் புவனேஸ்வரியிலும் மிக நல்ல ரெஸ்பான்ஸ் என்று சொன்னார்கள். வெளியூர் ரிப்போர்ட்கள் இன்னும் கிடைக்கவில்லை, ஆனாலும் படத்தின் கெப்பாஸிட்டியை வைத்துப் பார்க்கும்போது ரிசல்ட் இன்னொரு ‘அவன்தான் மனிதனாக’ அமையும் என்றார்கள். ஆஹா, அந்தப்பொற்காலம் திரும்புமா என்று மனம் ஏங்கியது. (அப்போதெல்லாம் வெளியூர் ரிசல்ட்கள் கடிதம் மூலம்தான் வர வேண்டும். இப்போது போல செல்போனை அழுத்தி "ஹலோ மச்சி, மதுரைல எப்படி போகுது?" என்ற வசதியெல்லாம் அப்போது ஏது?) . இதன்பிறகு 'அவன் ஒரு சரித்திரத்துக்குத்தான்' (பக்கத்து ஸ்ரீ கிருஷ்ணா) தியேட்டரில் இப்படி ஒரு எழுச்சியைக் காண முடிந்தது. அது உத்தமனை விட அதிகம்

மாலைக்காட்சிக்கு தியேட்டருக்குள் சென்று அமர்ந்தோம். முதல் ஒருவாரம் அது ரசிகர்களுக்குத்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அதனால் அன்றைக்கும் ஆரவாரம் அமர்க்களப்பட்டது. படம் துவங்கியது முதலே அட்டகாசமும் துவங்கி தொடர்ந்தது. தலைவரின் ஹேர்ஸ்டைல், உடைகள் மேக்கப் அனைத்தும் செம தூக்கல். அதுவே உற்சாகத்தை அதிகப்படுத்தியது. சரிதான், தலைவர் மீண்டும் பார்முக்கு திரும்பிவிட்டார் என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம். பாடல் காட்சிகளனைத்தும் அட்டகாசமாக இருந்தன. 'மஞ்சுக்குட்டியும்' சரியாக ஈடுகொடுத்திருந்தார். 'படகு படகு ஆசை படகு' பாடல் காட்சியில் இடையே வரும் லைலா - மஜ்னு மற்றும் சலீம் - அனார்கலி இடைச்செருகல்களுக்கு நல்ல கைதட்டல்....

நிலவு முகத்திலே முக்காடு மூடும் மேகத்தை விலக்கடி லைலா
உன் அழகுக்கு சலாமு லைலா

வரிகளின்போதும்....

அனார் என்றால் மாதுளம், ஆசை கொண்ட மாதுளம்
சலீம் என்ற மன்னவன் சலாம் உரைத்தான் உன்னிடம்....ம்.....ம்....ம்.
உண்மைக் காதல் காதல் காதல் - இன்பக்
காதல் போயின் சாதல்

என்ற வரிகளின்போதும், மாமாவின் தபேலா லயத்துக்கேற்ப ரசிகர்கள் கைதட்டியதுடன், பல ரசிகர்கள் எழுந்து ஆடத்துவங்கி விட்டனர். ஏகப்பட்ட ஆரவாரம். (அதானே, வடசென்னை ரசிகர்களா கொக்கா?).

(படகு படகு பாடலில் பின்னணியில் ஸ்கேட்டிங் செய்பவர் நம்ம பிரபு என்பது சமீப காலம்வரை எனக்குத் தெரியாது. தெரிந்தபின் இப்போதெல்லாம் அப்பாடலில் அவரை உற்று உற்றுப் பார்க்கிறேன். சூப்பராக ஸ்கேட்டிங் பண்ணுகிறார்).

அதுபோல 'தேவன் வந்தாண்டி' பாடல் காட்சியும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. தலைவரை அழகழகு உடைகளில் காண்பிப்பதில்தான் இந்த தெலுங்கு தயாரிப்பாளர் / இயக்குனருக்கு எவ்வளவு ஒரு ஆர்வம். அதுமட்டுமல்ல, நடிகர்திலகத்தை நடக்க வைத்தே டூயட் பாடல்களை எடுக்கும் தமிழ் இயக்குனர்களுக்கு மத்தியில் தலைவரை ஓட வைத்து டூயட் எடுப்பவரும் இவர்தான். அருமையான காஷ்மீர் பின்னணி லொக்கேஷனில் கருப்பு நெக்-ஸ்வெட்டர், சிவப்பு கோட் அணிந்து தலைவர் வரும் காட்சி கண்ணிலேயே தங்கிவிட்டது. முரளிசார் குறிப்பிட்ட (சுசீலாவின்) 'இமயமலைச் சாரலுக்கு நன்றி சொல்லடி' என்ற குழைவு ஐயோ ஐயோ என்ன அருமை. அதுபோல 'நாளை நாளை என்றிருந்தேன்' பாடலிலும் தலைவரை நன்றாக ஓடவிட்டு பெண்ட் எடுத்திருப்பார் ராஜேந்திர பிரசாத். (ஏற்கெனவே 'கல்யாண ஆசைவந்த' மற்றும் 'இரவுக்கும் பகலுக்கும்' பாடல்களிலும் ஓட்டத்தைப் பார்த்தோமே).

ஆரவாரமும் அட்டகாசமுமாக படத்தைப்பார்த்து விட்டு வெளியே வந்தபோது மனம் நிறைந்திருந்தது. தலைவர் ட்ராக்குக்கு வந்துவிட்டார். இனி அதகளம்தான் என்று பூரிப்படைந்தோம். இதன் பின்னர் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலைக்காட்சி 'உத்தமன்' பார்ப்பது என வழக்கம் வைத்து ஏழுமுறை கிரௌன் தியேட்டரிலேயே பார்த்தேன். முந்தைய ஆறு படங்களின் ரிசல்ட்டைப்பார்த்து, 'கணேசன் இத்துடன் ஒழிந்தான்' என்று எக்காளமிட்டோருக்கு சாவுமணி அடிக்க வந்த படம் "உத்தமன்". (மதுரை ரசிகர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நன்றி. இலங்கை ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி).

Murali Srinivas
23rd May 2014, 01:51 PM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது தொடர் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இதுவரை பதிவு செய்தது நான் சில ஆண்டுகளுக்கு முன் இங்கே எழுதியதின் மீள் பதிவுகள். இப்போது முதல் எழுதப் போவது இதுவரை எழுதாத புதிய பதிவுகள். ஆனால் ஒரு எச்சரிக்கை. நடுநடுவே நாம் அலசப் போகும் காலகட்டத்திற்கேற்ப மீள் பதிவுகள் வரலாம். கடந்த பதிவின் இறுதி பகுதி. 1972 -மே 6 பட்டிக்காடா பட்டணமாவின் ஓபனிங் ஷோ முடிந்த பிறகு தோன்றிய எண்ணங்கள்.

ஆனால் ஓபனிங் ஷோ பார்த்து விட்டு வரும் போது என்னால் அந்த படத்தின் வெற்றியின் வீச்சை அளவிடமுடியவில்லை என்பதை இங்கே ஒத்துக் கொள்ள வேண்டும். நிச்சயமாக நூறு நாட்கள் ஓடும் என்று நினைத்தேன். ஆனால் அதையும் தாண்டி வெள்ளி விழா கொண்டாடி தமிழ் சினிமாவின் மொத்த கருப்பு வெள்ளை படங்களிலேயே அதிகமான வசூலை பெற்று சாதனை புரியும் என்று எதிர்பார்க்கவில்லை. எங்கள் மதுரையில் அன்று வரை மிகப் பெரிய வெற்றிப்படங்கள் வெள்ளி விழா கொண்டாடி (175 நாட்களில்) பெற்ற வசூலையெல்லாம் வெறும் நூறு நாட்களில் முறியடித்தது பட்டிக்காடா பட்டணமா.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

பட்டிக்காடா பட்டணமாவின் வெற்றி வீச்சை முதல் நாள் அளவிட முடியவில்லை என்று சொன்னேன். உண்மைதான். ஆனால் படம் பெரிய லெவலுக்கு போகப் போகிறது என்பது முதல் பத்து நாட்களிலேயே தெரிய ஆரம்பித்து விட்டது. ஒரு படம் நன்றாக போகிறது என்றால் காட்சி தொடங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு Q இருக்கும். காட்சி நேரத்திற்கு சற்று முன்போ அல்லது அந்த நேரத்திலோ Full ஆகும். ஆனால் ஒவ்வொரு காட்சிக்கும் அது மதியமோ மாலையோ இல்லை இரவுக் காட்சியோ படம் தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்பே ஹவுஸ் புல் போர்டு விழுகிறது, ஒவ்வொரு ஷோவிற்கும் heavy returns என்றல் படம் பிரமாதமாக போகிறது என்று அர்த்தம். அதுதான் சென்ட்ரலில் நடந்துக் கொண்டிருந்தது. சர்வ சாதாரணமாக 15 நாட்களில் நடைபெற்ற 50 காட்சிகளும் Full.

இதே நேரத்தில் நியூசினிமாவில் ஞான ஒளி 10 வாரங்களை கடந்து 71 நாட்களை நிறைவு செய்கிறது. மே 5 அன்று 101 நாட்களை சென்ட்ரலில் நிறைவு செய்து பட்டிக்காடா பட்டணமாவிற்காக மாறிக் கொடுத்த ராஜா ஷிப்டிங்கிலும் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தது. நடிகர் திலகத்தின் பழைய படங்களும் பல்வேறு அரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருந்த நேரம். அந்த நேரத்தில்தான் கணேஷா திரையரங்கில் பாவ மன்னிப்பு படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது.

எத்தனையோ படங்கள் வரலாம், எத்தனையோ பேர் நடிக்கலாம். ஆனால் காலத்தை வென்ற இதிகாச காவியங்கள் என்று ஒரு சிலவற்றைத்தான் வரலாறு குறித்து வைக்கும். அப்படிப்பட்ட இதிகாச காவியம் என்று வரலாறு கூறும் கர்ணன் அந்த காலகட்டத்தில்தான் மதுரை தினமணி திரையரங்கில் மீண்டும் திரையிடப்பட்டது. அந்தப் படத்தின் மதுரை ராமநாதபுரம் விநியோக உரிமையை அந்நேரம் வாங்கியிருந்தவர் ஒரு சின்ன விநியோகஸ்தர். மதுரை டவுன் ஹால் ரோட்டில் தானப்ப முதலி தெரு வந்து சேரும் இடத்தை ஒட்டி அமைந்திருந்த டெல்லி வாலா ஸ்வீட்ஸ் கடைக்கு சற்றே diagonal -ஆக எதிர்புறத்தில் ஒரு சின்ன சந்து இருக்கும். அந்த சந்தின் dead end என்று சொல்லக்கூடிய இடத்தில்தான் அந்த விநியோகஸ்தர் அலுவலகம் அமைந்திருந்தது. படத்தை வெளியிட்ட அவரும் [அவர் பெயர் அவர் கம்பெனி பெயர் இப்போது நினைவில் இல்லை) தினமணி திரையரங்க உரிமையாளரும் மலைத்து போகும் வண்ணம் கர்ணன் சக்கை போடு போட்டது. நான்கு வாரங்கள் ஓடி ஒரு புதிய சரித்திரம் படைத்தது. அங்கிருந்து ஆரம்பித்து MR ஏரியா முழுக்க சாதனை படைத்தது. வாங்கின விலையை விட பல மடங்கு லாபம் அந்த விநியோகஸ்தருக்கு. அப்போது மட்டுமா 1978-ல் நவம்பர் மாதம் மீனாட்சியில் திரையிட்ட போதும் தொடர்ந்து 50 காட்சிகள் Full ஆகி அங்கிருந்து ஒரு பெர்ய ரவுண்டு வந்தது. அப்போது வெளியிட்டவர் வேறொருவர் .இது போல் எத்தனையோ முறை கர்ணன் சாதனை புரிந்திருக்கிறது. யார் வெளியிட்டாலும் வெற்றி பெறும் காவியம் கர்ணன். அந்த பெருமையெல்லாம் நடிகர் திலகத்தையே சாரும்.

இப்படி புதிய பழைய படங்களின் ஓட்டம் கொடுத்த சந்தோஷம் ஒரு பக்கம் என்றால் நான் முன்பே குறிப்பட்டது போல் தயாரிப்பில் இருந்த படங்கள் மற்றொரு பக்கம் பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. அடுத்து வெளிவரப் போகும் தர்மம் எங்கே, 1972 ஜனவரியில் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கிய வசந்த மாளிகை, பிப்ரவரி 2-ல் துவங்கிய ராஜ ராஜ சோழன், ரோஜாவின் ராஜா, என்னைப் போல் ஒருவன், ஹீரோ 72, ராஜாவின் 100-வது நாளன்று விளம்பரம் வந்த பாலாஜியின் அடுத்த படமான நீதி, மன்னவன் வந்தானடி, கெளரவம், ராஜபார்ட் ரங்கதுரை, சித்ரா பௌர்ணமி போன்ற படங்களின் அணிவகுப்பு நடிகர் திலகத்தின் ரசிகர்ளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. இதை தவிர சினி பாரத்தின் பாரத விலாஸ் [அப்போது பெயரிடப்படவில்லை என நினைக்கிறேன்], முக்தாவின் தவப்புதல்வன், கோமதி சங்கர் பிலிம்ஸின் பொன்னுஞ்சல் மற்றும் தாய் ஆகியவையும் படப்பிடிப்பில் இருந்தன. கருப்பு வெள்ளை என்பதால் சற்று எதிர்பார்ப்பு குறைவு என்ற போதிலும் தவப்புதல்வனின் ஸ்டில்கள் ஆர்வத்தை மூட்டியிருந்தன. அதிலும் நடிகர் திலகம் ஜிப்பா அணிந்து மிக அழகாய் தோன்றிய ஸ்டில்ஸ், தான்சேன் மேக்கப் மற்றும் கையில் மைக்கை வைத்து நிற்கும் ஸ்டில் பெரிதும் ரசிக்கப்பட்டது. பொன்னுஞ்சல் படத்திற்கு ஆகாயப் பந்தலிலே பெரிய attraction-ஆக இருந்தது. சுருக்கமாக் சொன்னால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விருந்தோ விருந்து என்று சொல்ல வேண்டும்.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
29th May 2014, 12:39 AM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது தொடர் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு. கடந்த பதிவின் இறுதி பகுதி.நடிகர் திலகத்தின் தயாரிப்பில் இருந்த படங்களைப் பற்றிய நினைவலைகள்.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

மீண்டும் பட்டிக்காடா பட்டணமாவிற்கு வருவோம். மூன்றாவது வாரம் நான்காவது வாரம் grip சற்றும் குறையவில்லை. பொதுவாக சினிமா விநியோக துறையில் சில குறிப்பிட்ட வார்த்தைகள் அதிகமாக புழங்கும். அவறில் ஒன்று opposition, இது என்னவென்றால், ஒரு படத்தின் ஓட்டத்திற்கு போட்டியாக இருக்கக் கூடும் என விநியோகஸ்தர்கள் கருதும் வேறு படங்களை opposition என்று கூறுவார்கள். ஆனால் இதில் இன்னார் படத்திற்கு இன்னார் படம் மட்டுமே opposition என்று எடுத்துக் கொள்ள முடியாது. எந்த படங்கள் வேண்டுமானாலும் opposition ஆக வர முடியும்."நம்ம படம் போடும்போது இந்தப் படம் [படத்தின் பெயரை சொல்லி] opposition-னா விழுந்துருச்சு. அதிலே நம்ம படம் கொஞ்சம் அடி வாங்கிருச்சு" போன்ற சால்ஜாப்புகளையும், அடுத்தவர் படத்தை பற்றி குறிப்பிட்டும் போது "opposition-யே இல்லை. அதனாலே நல்லாப் போயிருக்கு" போன்ற வயித்தெரிச்சல் வசனங்களையும் ரெகுலராக கேட்கலாம். பட்டிக்காடா பட்டணமாவைப் பொறுத்தவரை அந்த opposition கூட எடுபடவில்லை. ஓரளவிற்கு அப்போது நன்றாக ஓடிக் கொண்டிருந்த படம் என்று சொன்னால் KSG-யின் குறத்தி மகன் படத்தை சொல்ல வேண்டும். ஜெமினியும் கே ஆர் விஜயாவும் இணைந்து நடித்திருந்த இந்தப் படம் B அண்ட் C ரசிகர்களை திருப்திப்படுத்தி ஓடிக் கொண்டிருந்தது. மதுரையில் கல்பனா திரையரங்கில் இந்தப் படம் வெளியாகியிருந்தது. மற்றபடி நோ opposition என்றே சொல்ல வேண்டும். ஜூன் 1 அன்று பள்ளிக்கூடங்கள் திறந்து விட்டன. பொதுவாக அந்த நேரம் படங்களுக்கு ஒரு drop இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் அதையும் மீறி பட்டிக்காடா பட்டணமா தன வெற்றியோட்டதை தொடர்ந்தது. ஜூன் 4 ஞாயிறன்று இரவுக் காட்சி வரை நடைபெற்ற 100 காட்சிகளும் ஹவுஸ் புஃல். அடுத்த நாள் திங்கள் முதல் drop ஆகும் என்று சிலர் ஆருடம் சொல்லிக் கொண்டிருக்க அதுவும் பொய்த்து போய் திங்கள் செவ்வாய் எல்லாம் புஃல். [House Full]

இதற்கு நடுவில் நியூசினிமாவில் ஞான ஒளி 13-வது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. அப்போது disturbing news ஒன்று வருகிறது. படத்தை 100 நாட்கள் ஓட விடாமல் எடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற செய்திதான் அது. கேஆர்விஜயாவின் பினாமி தயாரிப்புகளில் ஒன்றான அவரும் முத்துராமனும் இணைந்து நடித்த கண்ணம்மா என்ற திரைப்படம் [மாதவன் இயக்கம்?] ஜூன் 23 வெளியாவதாக இருந்தது தெரியும். அது மதுரையில் நியூசினிமாவில் chart செய்யபட்டிருந்ததும் தெரியும். அப்படி ரிலீஸ் ஆகும் பட்சத்தில் ஞான ஒளி 104 நாட்களை நிறைவு செய்திருக்கும் என்பதனால் முதலில் யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஜூன் 9 அன்றே ஞான ஒளி படத்தை மாற்றும் முயற்சி நடக்கிறது என்று தெரிந்தவுடன் ரசிகர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர். விநியோகஸ்தர் அலுவலகத்திற்கும் திரையரங்க அலுவலகத்திற்கும் ரசிகர்கள் சென்றனர். அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன் வியட்நாம் வீடு படத்திற்கு இதே போன்ற நிலைமை ஏற்பட்டதை அனைவரும் நினைவு கூர்ந்தனர். மீண்டும் அப்படி நடந்து விடக் கூடாது என முயற்சித்தார்கள். இத்தனைக்கும் படத்திற்கு overall hold over குறையவில்லை. அப்படியிருந்தும் திரையரங்க உரிமையாளர்கள் இப்படி ஒரு முடிவை எடுத்தனர். விநியோகஸ்தரால் அவர்களை எதிர்க்க முடியவில்லை. ஜூன் 8 அன்று 90 நாட்களை நிறைவு செய்த ஞான ஒளி ஜூன் 9 அன்று மாற்றப்பட்டு தெலுங்கு டப்பிங் படமான ரிவால்வர் ரீட்டா வெளியானது. ரசிகர்களுக்கெல்லாம் பெருங்கோபம் மற்றும் வருத்தம். வியட்நாம் வீடு, பாபு, ஞான ஒளி என தொடர்ந்து மூன்று படங்கள் மதுரையில் 100 நாட்கள் ஓடியிருக்க வேண்டிய படங்கள் 90 நாட்களில் எடுக்கப்பட்டது இன்று வரை மனதில் மாறாத வடுவாக இருந்துக் கொண்டேயிருக்கிறது. இதற்க்கெல்லாம் ஆறுதலாக பட்டிக்காடா பட்டணமா அந்த ஜூன் 9 அன்று 35 நாட்களை நிறைவு செய்து அன்று வரை நடைபெற்ற 115 காட்சிகளும் ஹவுஸ் புஃல் ஆனது. 115 CHF [Continuous House Full shows]. அதே நாளன்று நான் ஏன் பிறந்தேன் மதுரை தங்கத்தில் வெளியாகிறது. அடுத்த நாள் ஜூன் 10 அன்று பட்டிக்காடா பட்டணமாவிற்கு ஒரு acid test காத்துக் கொண்டிருந்தது. அது என்ன acid test?

(தொடரும்)

அன்புடன்

rsubras
29th May 2014, 04:22 AM
முதல் வெளியீட்டில் பார்த்த அனுபவம் (7)

“கவரிமான்” (06.04.1979) .



there are so many good aspects in this movie in the 2nd half in particular which i wanted to read in your post but missing :).........especially in the climax, when Sivaji arrives late at the scene to watch his daughter murdered her lover......... appo avarin muga baavam, and complimenting his acting was the innocent looking sridevi............so..so..touched by this scene many moments.............at first when he quietly starts........ with a helpless tone in his voice... "appave sonnane" and then changes tact to handle the situation, to snatch the bottle from his daughter and ask her to blame this murder on him "appa...no..no...nee enai appa nu othukka maatiye...intha aalu nu sollu" the feelings change here....and when Sridevi breaks down into "appa" the ice breaks.........thiagu...overwhelmed by the emotions (and so is me... :)) caught brilliantly by the facial expressions......then he hugs his daughter and finally when Sivaji says ............ 'maanathukku oru bangam vantha onnu uyirai vidanum illai uyirai edukkanum".......and the change in reaction from Sridevi..rendu perum kannulaye pesikarathu............... actually sollite pogalam.... i cant stop raving about this scene..........


சமீபத்தில் கூட தொலைகாட்சியில் ‘கவரிமான்’ பார்த்தபோது, முற்றிலும் வித்தியாசமான இப்படம் ஏன் சரியாகபோகவில்லை என்பது புரியாத புதிராகவே இருந்தது..

I think it is the needless additions here and there, vijayakumar character, his love, hero ravichandran in that kind of a role, Sivaji yoda wife antha maathiri character ah irukarathu, these are some unpleasant things in that film..........and one weakness i saw was..Sivaji's father role......... it was such a powerful role with a strong character but i thought a weaker person donned that role.....would have liked to see Major play Sivaji's father or some one like V.S.Raghavan........... i had the luxury of skipping scenes and go to the highlights of the movie and so i enjoyed the film very much....60s la iruntha screenplay talent late 70s la kurainjirukalam........ is my view....... Compared with this movie or annan oru koyil, I can watch Gnana oli or Babu (even in Babu nagesh comedy track was avoidable) in its entirety without getting bored

mr_karthik
29th May 2014, 06:06 PM
there are so many good aspects in this movie in the 2nd half in particular which i wanted to read in your post but missing :).

Missing...??. Yes should be missing.

Because, what I wrote is not the movie analysis, but only the happenings and fans enjoyment on the release day of the movie in theatres. So, one cant expect every nuances of the movie of such posts. It is just description of incidents happened in theatre on opening show. Thats all.

mr_karthik
30th May 2014, 04:40 PM
முதல் வெளியீட்டில் பார்த்த அனுபவம் (10)

'அவன் ஒரு சரித்திரம்' (14.01.1977)

1976 டிசம்பர் இறுதியில் ரோஜாவின் ராஜா வெளிவருவதற்கு முன்பாகவே, 1977 பொங்கல் வெளியீடாக 'அவன் ஒரு சரித்திரம்' வரப்போகிறது என்ற விவரம் மதிஒளி, திரைவானம், பொம்மை, பேசும்படம் போன்ற இதழ்கள் மூலமாக அனைவரிடத்திலும் சென்று சேர்ந்து விட்ட விவரத்தை முன்பே சொல்லியிருந்தேன். அதற்கேற்றாற்போல அந்த இதழ்களும் அவன் ஒரு சரித்திரம் பற்றிய செய்திகளையும் பல்வேறு ஸ்டில்களையும் வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்தன. படத்தின் பெயரும் ஒரு அழகான பெயராக அமைந்ததில் ரசிகர்களுக்கு திருப்தி. பட வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தபோது, ‘பொங்கல் வெளியீடு பைலட், ஸ்ரீகிருஷ்ணா, அபிராமி, நூர்ஜகான் தியேட்டர்களில் அவன் ஒரு சரித்திரம்’ என்ற விளம்பரம் தினத்தந்தியில் வெளியானது. ரசிகர்களுக்கு ம்கா உற்சாகம். உற்சாகத்துக்குக் காரணம் அப்போதுதான் புதிதாக திறக்கப்பட்டிருந்த புரசைவாக்கம் 'அபிராமி a/c' தியேட்டரில் படம் வெளியாகிறது என்ற அறிவிப்புத்தான். ரிசர்வேஷன் ஆரம்பிக்கட்டும், அபிராமியில் புக் பண்ணி பார்த்துவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்திருந்தோம்.

அபிராமி என்றால் இப்போதிருக்கும் அபிராமி மெகாமால் எல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அன்னை அபிராமி, சக்தி அபிராமி தியேட்டர்கள் கூட அப்போது கட்டப்படவில்லை. அந்த வளாகத்தில் இருந்தது அபிராமி என்ற பெரிய தியேட்டரும், பால அபிராமி என்ற மினி தியேட்டரும்தான். அதுவரையில் அபிராமியில் படம் பார்த்ததில்லை. பார்த்தவர்களெல்லாம் தியேட்டரைப்பற்றி ஆகா, ஓகோவென்று புகழ்ந்ததால், சரி முதன்முதலாக அண்ணனின் புதுப்படத்தை அங்கே பார்ப்போம். ஒற்றைக்கு இரட்டை சந்தோஷமாக இருக்கட்டுமென்று, ரிசர்வேஷனுக்காகக் காத்திருந்தால்......

ரிசர்வேஷன் அன்று தினத்தந்தியில் வந்த விளம்பரத்தில் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. அபிராமி என்ற பெயர் அகற்றப்பட்டு அசோக் தியேட்டர் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. எல்லோருக்கும் ஷாக். 'நேரு ஸ்டேடியத்துக்கு எதிரில் இருக்கும் அசோக் தியேட்ட்ரா?. அது பராசக்தி வெளியான பழைய தியேட்டர் அல்லவா?. அதில் சமீப காலமாக புதிய தமிழ்ப்படங்கள் எதுவும் வெளியாவதில்லையே. பக்கத்திலுள்ள சௌகார்பேட்டையிலிருக்கும் மார்வாரிகளுக்காகவும், பெரியமேடு பகுதியிலிருக்கும் உருது பேசும் இஸ்லாமியர்களுக்காகவும் அங்கு வாரம் ஒரு இந்திப்படம்தானே போடுகிறார்கள்?. அந்த தியேட்டரை ஏன் புக் பண்ணியிருக்கிறார்கள்?. ஏற்கெனவே அந்த ஏரியாவில் ராக்ஸியில் ரோஜாவின் ராஜா ஓடிக்கொண்டிருக்கிறது. புவனேஸ்வரியில் குடியரசு தினத்தன்று தீபம் வெளியாகவிருக்கிறது. அட்லீஸ்ட் மேகலா அல்லது உமாவில் வெளியிட்டிருக்கலாமே. என்னய்யா இப்படி கவுத்துட்டாங்க?' என்று எல்லோரும் உற்சாகம் குன்றிப்போனார்கள்.

சரி, அபிராமி கனவுதான் போச்சு, பைலட் தியேட்டரிலாவது புக் பண்ணுவோம் என்று ஓரிருவர் யோசனை சொன்னதை மற்றவர்கள் மறுத்தனர். 'விடுங்கப்பா, நம்ம ஏரியா ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில் படம் ரிலீஸாகுது அப்புறம் என்ன கிருஷ்ணாவிலேயே புக் பண்ணுவோம்' என்று முடிவுசெய்து கிளம்பினோம். ஸ்ரீகிருஷ்ணா தியேட்டருக்குப்போனால் எங்களுக்கு முன்பே அங்கே பெருங்கூட்டம் கூடி நின்றது. பிராட்வே போல டல்லடிக்கவில்லை. ரசிகர்கள் உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் கூடி நின்றனர். அங்கேயும் ரசிகர்களிடையே அபிராமி தியேட்டர் மாற்றப்பட்ட பிரச்சினையே ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் போன சில நிமிடங்களிலேயே கேட் திறக்கப்பட்டு வரிசையாக உள்ளே அனுப்பப்பட்டனர். ஏற்கெனவே போலீஸ் வந்துவிட்டிருந்தது. வரிசையில் நின்று திரும்பிப்பார்த்தால் எங்களுக்குப்பின்னால் கியூ வளைந்து நெளிந்து அனுமார் வால் போல நீண்டிருந்தது. எங்களுக்கு உற்சாகமாக இருந்தது.

கியூவில் நிற்கும்போதே படத்தைப்பற்றி ரசிகர்கள் மத்தியில் பேச்சு நடந்துகொண்டிருந்தது. 'அண்ணனுக்கு இதில் க்லெக்டர் ரோல். நல்லா பண்ணியிருக்காராம். ஸ்டில்ஸெல்லாம் பார்க்கும்போது ரொம்ப கலக்கலாகவே இருக்கிறது' என்று ரசிகர்களுக்குள் கருத்துப்பறிமாற்றங்கள். இதற்கு முன் மற்றவர்கள் பேசுவதைக்கேட்டு ரசித்துக்கொண்டிருந்த நாங்கள், இப்படம் வந்த காலகட்டத்தில் நாங்களே படங்களைப்பற்றிக் கருத்துக்களைப் பறிமாறிக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்துவிட்டோம்.

ஸ்ரீகிருஷ்ணாவில் எப்போதுமே ரிசர்வேஷனுக்கு, சாதாரணமாக காட்சி நேரத்தில் குறைந்த கட்டணத்துக்கு டிக்கட் கொடுக்கும் கவுண்ட்டரையே பயன்படுத்துவார்கள். அங்குதான் நீண்ட கியூ நிற்க இடமிருக்கும் என்பதால். அன்றைக்கும் அப்படியே. காலை ஒன்பது மணிக்கு புக்கிங் துவங்கியது. பிளாக் டிக்கட்டை கட்டுப்படுத்துவதற்காக, ரிசர்வேஷன் செய்யும்போது ஒரு ஆளுக்கு ஐந்து டிக்கட்டுக்கு மேல் கொடுக்க மாட்டார்கள். அதனால் நாங்கள் எல்லோருமே கியூவில் நின்றோம். வரிசை மளமளவென்று முன்னேறியது. எங்களுக்கு பயம். முதல்நாள் டிக்கட் கிடைக்காதோ என்று. கவுண்ட்டர் பக்கத்திலேயே ரிசர்வேஷன் சார்ட் வைத்து, காட்சி நிறைய நிறைய ‘full' என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வந்தார்கள். நாங்கள் கவுண்ட்டரை நெருங்கும்போது மேட்னி full என்று ஒட்டினார்கள். எங்களுக்கு அச்சம் எழுந்தது. நல்லவேளை நாங்கள் வாங்கும்போது மாலைக்காட்சிக்கு டிக்கட் நிறையும் தறுவாயில் இருந்தது. நாங்கள் வாங்கியபின் அடுத்த ஆள் வாங்கியிருப்பார். மாலைக்காட்சியும் full என்று ஒட்டினார்கள். எங்களுக்கோ பிடிபடாத சந்தோஷம். எதையோ சாதித்துவிட்டது போலிருந்தது.

டிக்கட்தான் வாங்கிவிட்டோமே என்று வீட்டுக்குப்போய்விட்டால் எப்படி?. கவுண்ட்டர் அருகில் நிறக் விடாமல் போலீஸ் விரட்டியதால் டிக்கட் வாங்கிய ஏராளமான ரசிகர்கள் சற்று தூரத்தில் நின்று, மீண்டும் படத்தைப்பற்றி அதுவரை வந்திருக்கும் செய்திகளை அசைபோட்டுக் கொண்டிருந்தோம். இருந்தாலும் எங்கள் கண் முழுக்க 'சார்ட்'டில்தான் இருந்தது. வரிசை நகர நகர 'full' ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டே வந்தனர். நாங்கள் புறப்படும் முன்னரே ஸ்ரீகிருஷ்ணாவில் பதினான்கு காட்சிகள் நிறைந்தன. திருப்தியாக வீடு வந்தோம்.

அப்போது ஒன்டே கிரிக்கெட் தோன்றாத காலம். கிரிக்கெட் என்றால் அது டெஸ்ட் மேட்ச்தான். இந்தியாவில் வழக்கமாக டிசம்பரில் துவங்கி கல்கத்தா, டில்லி, நாக்பூர் என்று சுற்றியபின் சரியாக பொங்கல் விடுமுறைக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போடுவார்கள். பொங்கலுக்கு தமிழ்நாட்டில் நான்கு நாட்கள் விடுமுறையென்பதால் வருடாவருடம் இந்த ஏற்பாடு. அப்போது சென்னையில் கருப்புவெள்ளை டிவி இருந்தபோதிலும், மைதானத்தில் வசூல் குறைந்துவிடும் என்பதற்காக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அனுமதிக்க மாட்டார்கள். ரேடியோ கமெண்ட்ரி மட்டுமே. நாங்களும் வருடாவருடம் ஐந்துநாட்கள் பகல் முழுவதும் சேப்பாக்கம் மைதானமே கதியென்று இருப்போம். அதுவும் எப்படி?. என்னமோ நாங்களே பிளேயர்கள் போல ஒய்ட் அண்ட் ஒய்ட்டில் போய் அமர்ந்துகொண்டு, காதில் சின்ன பிலிப்ஸ் ட்ரான்ஸிஸ்டரில் கமெண்ட்ரி கேட்டுக்கொண்டே நேரில் கிரிக்கெட்டைப் பார்ப்பதில் ஒரு அலாதி திருப்தி. (அந்த சந்தோஷங்கள் இப்போது டிவி முன் அமர்ந்து, மிகத்தெளிவாக, குளோஸப் காட்சிகளாக, ஆயிரத்தெட்டு ரீப்ளேக்களுடன் பார்க்கும்போது கிடைக்கவில்லை). அந்த வருடம் பொங்கலுக்கு, அண்ணனின் 'அவன் ஒரு சரித்திரம்' படத்துக்காக கிரிக்கெட்டை தியாகம் செய்தோம். காவஸ்கரும், கபில்தேவும், யஷ்பால் சர்மாவும், ஷிவ்லால் யாதவும், சந்தீப் பட்டீலும் இரண்டாம் பட்சமாகிப்போனார்கள். (இவர்களின் ரசிகர்கள் மன்னிக்க).

mr_karthik
30th May 2014, 04:44 PM
பொங்கல் தினமும் வந்தது. மூன்று நாட்கள் கல்லூரி விடுமுறை. (இப்போ காலேஜ் ஸ்டூடண்ட் ஆயிட்டோமாக்கும்). பொங்கல் கொண்டாட்டம் அதுபாட்டுக்கு ஆட்டோமாட்டிக்காக நடந்துகொண்டிருந்தது. எங்களுக்கோ, 'ராஜா' படத்தில் கேரள ஆற்றுப்பாலத்தின் அருகில் உட்கார்ந்து நடிகர்திலகம் ஜெயலலிதாவிடம் சொல்வது போல, 'எப்படா மாலைவரும், மாலைவரும்'னு காத்துக்கிட்டிருந்தோம். மதிய உணவு முடிந்ததும் இருப்புக்கொள்ளவில்லை. மூணு மணிக்கெல்லாம் கிளம்பி விட்டோம். பொங்கல் தினமல்லவா?. பிராட்வேயில் 'ரோஜாவின் ராஜா' FULL. பக்கத்தில் பிரபாத்திலும் ஏதோ ஒரு படம் FULL. ஸ்ரீகிருஷ்ணாவை அடைந்தபோது மணி மூணரை இருக்கும். வெளியில் மேட்னி ‘HOUSE FULL’ போர்டு பளிச்சென்று தொங்கியது. (இடைவேளைவரை போர்டு தொங்கும். பின்னர் எடுத்து விடுவார்கள்). மெயின்கேட்டுக்கு வெளியே அந்த நேரத்திலும் அடுத்த காட்சிக்காக திரளான கூட்டம். எங்களுக்கு ஏதோ 76-இன் தேக்க நிலை மாறி, மீண்டும் 72, 73 திரும்பிவிட்டது போலிருந்தது. நல்ல அறிகுறியாகத்தெரிந்தது. மனம் சந்தோஷத்தில் துள்ளியது. அங்கு நின்ற ரசிகர்கள் மத்தியிலும் அதுவே பேச்சாக இருந்தது.

தியேட்டர் அலங்காரங்களைப் பார்த்தோம். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள், ராஜபார்ட் ரங்கதுரைக்கு செய்யப்பட்டிருந்தது போல அதே காங்கிரஸ் கொடிகள், பேனர்கள். கட் அவுட்களுக்கு மூவண்ண நிறத்தில் மாலைகள் என கோலாகலமாக இருந்தது. ஆனால் 73 டிசம்பருக்கும் 77 ஜனவரிக்கும் அரசியலில் பெரிய மாற்றம். அப்போது (73ல்) பெருந்தலைவர் உயிருடன் இருந்தார். ஸ்தாபன காங்கிரஸ்தான் தமிழ்நாட்டின் ஒரே காங்கிரஸ் என்ற துடிப்போடு செயல்பட்டு வந்தது. 1975 அக்டோபரில் தலைவர் மறைந்ததும், நிலைமை மாறிப்போனது. ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாகப்பிரிந்து, ஒரு அணி மகாதேவன்பிள்ளை தலைமையில் நடிகர்திலகம், மூப்பனார், மற்றும் சிவாஜி மன்றத்தினர் அனைவரும் இ.காங்கிரஸில் இணைந்தோம். இன்னொரு பிரிவினர் பா.ராமச்சந்திரன், குமரி அனந்தன் ஆகியோர் தலைமையில், அப்போது உதயமாகியிருந்த ஜனதா கட்சியில் இணைந்தனர். தமிழகத்தில் தி.மு.க.ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத்தலைவர் ஆட்சி ஓராண்டுக்கு மேல் நடைபெற்று வந்தது. நாடெங்கும் இந்திராவின் 'இருபது அம்சத்திட்டம்' பற்றிய பிரச்சாரம் வலுப்பெற்று வந்தது. நாடெங்கும் அமல்படுத்தப்பட்டிருந்த எமர்ஜென்ஸி, வடநாட்டில் எதிர்ப்பையும், தென்னாட்டில் வரவேற்பையும் பெற்றிருந்தது. இத்தகைய சூழ்நிலையில்தான் 'அவன் ஒரு சரித்திரம்' வெளியானது.

வடசென்னை ரசிகர்கள் புதிய உற்சாகத்துடன் ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரை அலங்கரித்திருந்தனர். ரசிகர்மன்றங்களின் பெரிய பெரிய பேனர்களும் சிறப்புத்தட்டிகளும், நாலாபுறமும் நடிகர்திலகத்தின் பல்வேறு வண்ணப்படங்கள் ஒட்டப்பட்ட ராட்சத ஸ்டார்களுமாக தியேட்டரே களைகட்டியிருந்தது. மிண்ட் பகுதியைச்சேர்ந்த 'கர்ணன் கணேசன் கலைமன்றத்தினர்' மூன்று அடுக்கு பந்தல் அமைத்திருக்க, ராயபுரம் 'மாடிப்பூங்கா' ரசிகர்மன்றத்தினர் நடிகர்திலகத்தின் சாதனைகளை விளக்கி, பல பக்கங்கள் அடங்கிய சிறப்புமலர் வெளியிட்டிருந்தனர் (விலை 1 ரூபாய்). இவைபோக வண்ணாரப்பேட்டை, மண்ணடி பகுதி ரசிகர்மன்றத்தினரும் தனித்தனி நோட்டீஸ்கள் அச்சடித்து விநியோகித்தனர்.

வழக்கமாக கிரௌனில்தான் இப்படிப்பட்ட கொண்டாட்டங்கள் அதிகமாக நடப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஸ்ரீகிருஷ்ணாவில் நடந்தது ஆச்சரியமாக இருந்தது. அதற்கு மூத்த ரசிகர் ஒருவர் சொன்ன காரணம், 'ஒருகாலத்துல பாவமன்னிப்பு, பாலும் பழமும், ஆலயமணி, புதிய பறவைன்னு கிருஷ்ணா நம்ம கோட்டையாகத்தான் இருந்தது. இடையில் நாம கிரௌன் பக்கம் போனதால் 'அவங்க' பிடிச்சிக்கிட்டாங்க. இப்போ மீண்டும் நாம பிடிக்கணும்னுதான் இந்த ஏற்பாடுகள்'’ அப்படீன்னார். யோசித்ததில் அவர் சொன்னதும் சரியாகத்தான் பட்டது. (இடைப்பட்ட காலத்தில் One in Thousand, Resided Temple, Slavery Girl, Our Country, Rickshawala என்று ‘அவர்’தான் பிடித்து வைத்திருந்தார்).

நீண்ட இடைவெளிக்குப்பின் காஞ்சனா நடித்திருக்கிறார், அத்துடன் மஞ்சுளா எட்டாவது படமாக ஜோடியாக நடித்திருக்கிறார் (இடையில் ஒன்பதாவது படமாக சத்யம் படத்தில் ஜோடியில்லாமலும் நடித்தார்). இரண்டு கதாநாயகிகள் என்பதால் யார் ஜோடி, அல்லது இருவருமே ஜோடியா என்பது போன்ற கேள்விகள் அங்கே உலா வந்தன. படம் வருவதற்கு முன்பே நான்கு பாடல்கள் வெளியாகி பிரபலமாகியிருந்தன. அவற்றில் 'வணக்கம் பலமுறை சொன்னேன்' பாடல் பயங்கர HIT . அடுத்து 'என் மனது ஒன்றுதான் உன்மீது ஞாபகம்' மற்றும் 'மாலையிட்டான் ஒரு மன்னன்' பாடல்களும் பிரபலமடைந்திருந்தன. 'நாளை என்ன நாளை.. இன்றுகூட நமதுதான்' பாடல் அங்கு நின்ற ரசிகர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டது.

'அது என்னப்பா, அந்தப்பாடலை இப்படி துவக்கியிருக்கார்?' என்று ஒருவர் கேட்க அதற்கு இன்னொருவர், 'தெரியலையா, அவருக்காக வாலி 'நாளை நமதே' அப்படீன்னு பாட்டு எழுதியிருக்காரே அதுக்குப் போட்டியா இவருக்காக கண்ணதாசன் 'நாளை என்ன நாளை... இன்றுகூட நமதுதான்' அப்படீன்னு எழுதியிருக்கார்'னு சொன்னதும் ரசிகர்கள் கைதட்டினார்கள். அந்தப்பாடல் காட்சி படத்தில் எப்படியிருக்குமென்று பார்க்க எல்லோருக்கும் ஆவலாக இருந்தது.

ஏற்கெனவே இடைவேளை முடிந்து, படம் துவங்கியபின் மெயின் கேட் திறந்துவிடப்பட்டு, காம்பவுண்டுக்குள்தான் இவ்வளவு பேச்சுக்களும் நடந்து வந்தன. கரண்ட் புக்கிங் கவுண்ட்டர்களுக்கு மக்கள் அனுமதிக்கப்பட்டு போலீஸ் உதவியுடன் வரிசை நீண்டிருந்தது. ரொம்ப நாளைக்குப்பிறகு கட்டுக்கடங்காத கூட்டத்தைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாக இருந்தது

mr_karthik
30th May 2014, 04:56 PM
மேட்னிஷோ முடிந்து மக்கள் வெளியே வரத்துவங்கினர். அவர்கள் வெளியே செல்ல வழிவிட்டு கூட்டம் ஒதுங்கிக்கொண்டதுடன், வந்தவர்களிடம் அபிப்பிராயம் கேட்டனர். பொதுமக்கள் அனைவருமே 'படம் நல்லாயிருக்கு' என்று சொல்லியவண்ணம் வெளியே செல்ல, படம் பார்த்த ரசிகர்கள் ஏற்கெனவே நின்றவர்களோடு கலந்து நின்று படம் பற்றி விலாவரியாகச் சொன்னார்கள். ஒருவர் 'மஞ்சுளாதான் ஜோடி, காஞ்சனா ஜோடியில்லை' என்றார். இன்னொருவர், 'என்மனது ஒன்றுதான் பாட்டு இல்லேப்பா. அதுக்கு பதிலா அம்மானை என்ற பாட்டை சேர்த்திருக்காங்க. அதுவும் நல்லாத்தான் இருக்கு' என்றார். இன்னும் சிலர், 'பெருந்தலைவருக்கு மாலை போட்டுவிட்டு தலைவர் ஊர்வலம் போற பாட்டு சூப்பர்பா' என்றார். தியேட்டருக்குள் பதினைந்து நிமிடங்களில் பாப்கார்ன் குப்பைகள் வாரப்பட்டு, மாலைக்காட்சிக்காக மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இம்முறை காங்கிரஸ் மகளிர் அணியினர் வாசலில் நின்று அனைவருக்கும் லட்டு வழங்கினார்கள்.

உள்ளே சென்று அமர்ந்தோம். படம் துவங்கும்வரை ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக, ஆர்வத்துடன் சற்று சத்தமாக உரையாடிக்கொண்டிருந்ததால் எங்கும் ஆரவாரமாக இருந்தது. நான் முதலில் குறிப்பிட்டது போல, 1977-ம் ஆண்டு 72-ஐத் திரும்பக்கொண்டுவந்துவிட்டது போலத்தோன்றியது. படம் துவங்கியதும் ஆரவாரம் அதிகரித்தது. ஒரு முடிவோடு வந்திருந்த ரசிகர்கள் அனைவரும் காட்சிக்கு காட்சி கைதட்டி மகிழ்ந்தனர். 'அம்மானை... அழகுமிகும் கண்மானை' பாடலை மிக அட்டகாசமாகத் துவக்கியிருந்தார் மெல்லிசை மன்னர். இதற்குமுன் வெளியில் கேட்டிராத பாட்டு. கட்டம்போட்ட சஃபாரி சூட்டில் நடிகர்திலகமும், சிக்கென பாவாடை தாவணியில் மஞ்சுளாவும் தோன்ற அழகாக வெளிப்புறப்படப்பிடிப்பாக படமாக்கியிருந்தார் கே.எஸ்.பிரகாஷ்ராவ். வான்புகழ்கொண்ட 'வசந்த மாளிகை'யை இயக்கியவராயிற்றே. டி.எம்.சௌந்தர்ராஜனின் கம்பீரக்குரலும், வாணிஜெயராமின் கனிவுக்குரலும் பாடலை எங்கோ உயரத்துக்கு இட்டுச்சென்றன.

டி.கே.பகவதி, மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.வரலட்சுமி, வி.கே.ராமசாமி, எம்.பானுமதி ஆகியோர் மிக நிறைவாக நடித்திருந்தனர். ஸ்ரீகாந்தின் நடிப்பு படு அட்டகாசமாக அமைந்திருந்தது. தம்பியாக இருந்துகொண்டே வில்லனாகச்செயல்படும் காட்சிகளில் அருமையாகச் செய்திருந்தார். டென்னிஸ்கோர்ட்டில் உட்காரவைத்து நடிகர்திலகம் ஸ்ரீகாந்துக்கு அட்வைஸ் செய்யும் இடம், படத்தின் ஜீவக்காட்சிகளில் ஒன்று.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 'வணக்கம் பலமுறை சொன்னேன்' பாடல், கானக்குயில் சுசீலாவின் ஆலாபனையுடன் துவங்க, மாடிப்படியின் மேல்பகுதியில் சிவந்தமண் நாயகியைப்பார்த்ததும் ரசிகர்களின் கைதட்டல் அதிர வைத்தது. இப்பாடலில் நடிகர்திலகத்துக்கு அருமையான கருப்பு ஃபுல்சூட் உடையுடன் Hair Style -ம் அருமையாக இருக்கும். ஒரு கலெக்டருக்குரிய கண்ணியத்தோற்றம் அளித்தார். சற்றும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் பார்டருடன் கூடிய வெள்ளைப்புடவையணிந்த நடனமாதர்கள் பாடலில் பங்கேற்க ரசிகர்கள் உற்சாக வெள்ளம் கரை கடந்தது. நடிகர்திலகம் 'வண்ணத்திலகங்கள் ஒளிவீசும் முகங்கள்' என்ற சரணத்தைப்பாடியவாறு, காங்கிரஸ் புடவையணிந்த அந்த நடனமாதர்களின் முன்னால் ஸ்டைலாக நடந்துவரும்போது, ரசிகர்கள் ஆரவாரத்தில் தியேட்டரே ஒருவழியானது. நாங்கள் உணர்ச்சிவெள்ளத்தில் திக்குமுக்காடிப்போனோம். பின் வரிசையில் இருந்த நடுத்தர வயதைக் கடந்த ரசிகர் ஒருவர், 'சிவாஜி படத்துல இந்தமாதிரி ஆரவாரத்தைப்பார்த்து ரொம்ப நாளாச்சுப்பா' என்று சொல்லிக்கொண்டிருந்தார். உண்மைதான்.

அங்கங்கே நிறைய பொடியும், நெடியும் கலந்து எழுதப்பட்ட ஆரூர்தாஸின் வசனங்கள் ரசிகர்களாலும் மக்களாலும் புரிந்துகொள்ளப்பட்டு ரசிக்கப்பட்டன. கலெக்டர் பதவியை உதறித்தள்ளிவிட்டு பொதுவாழ்வில் இறங்கும் நடிகர்திலகம், பூங்காவிலிருக்கும் பெருந்தலைவர் சிலைக்கு மாலையணிவித்து ஊர்வலத்தைத் துவங்குவதாக அமைந்த பாடல் துவங்கியது......

வெள்ளை குர்தா, ஜிப்பா அணிந்து அதன்மேல் கட்டம் போட்ட கதர் ஷெர்வாணியும் அதன்மீது பேட்ஜும் அணிந்தவாறு பெருந்தலைவர் கர்மவீரர் சிலைமுன் இருக்கும் படிக்கட்டில் பெரிய மாலையுடன் ஏறும் நடிகர்திலகம்,
'நாளை என்ன நாளை... இன்றுகூட நமதுதான்
வேளை நல்ல வேளை.. விழுந்தவர்க்கு வாழ்வை
வழங்கவாரும் தோழரே'
என்ற முழங்கியவாறு சிலைக்கு மாலை அணிவிக்கும்போது கைதட்டல், விசில், காகித வீச்சு என கிருஷ்ணா தியேட்டரே ஆடிப்போனது. அதிலிருந்து பாடல் முடியும்வரை வரிக்கு வரி கைதட்டல்கள்தான். குறிப்பாக, 'ஞானத்தோடு வாழுவோம்.. நிதானத்தோடு வாழுவோம் மாபெரும்தலைவர் சொன்ன மானத்தோடு வாழுவோம்' என்ற வரிகளின்போது கூடுதல் ஆரவாரம். ஊர்வலத்தின் முன்வரிசையில் மஞ்சுளா, காஞ்சனா இருவரும் நடந்துவரும் காட்சியும் ரசிக்கப்பட்டது. படம் நிறைவுறும் தறுவாயில் நடிகர்திலகம் உரையாற்றும்போது, பாரதப்பெருந்தலைவி அன்னை இந்திரா அவர்களின் இருபது அம்சத்திட்டத்தை குறிப்பிட்டுப்பேசியபோதும், பெருந்தலைவரைப் புகழ்ந்து பேசியபோதும் கைதட்டல் விண்ணைப்பிளந்தது.

படம் முடிந்து வெளியே வரும்போது ரசிகர்கள் மத்தியில் ஒரே ஆரவாரம், 'அண்ணன் சிவாஜி வாழ்க', 'அன்னை இந்திரா வாழ்க' என்ற் கோஷங்கள் அவ்வழியே சாலையில் செல்வோரின் கவனத்தைத்திருப்பின. இன்னும் சில ரசிகர்கள் 'திரும்பியது எங்கள் பொற்காலம்' என்று கோஷமிட்டனர். அடுத்த காட்சிக்கு வரிசையில் நின்ற ரசிகர்களைப்பார்த்து, கட்டைவிரலை உயர்த்தி 'படம் சூப்பர்' என்று உற்சாகமளித்தனர். ஒரு பெரியவர் சொன்னது போல கிருஷ்ணாவைப்பிடித்து விட்டதாகவே தோன்றியது. அதுவரை பிடித்து வைத்திருந்தவர் மகாராணி பக்கம் ஒதுங்கினார். 'அவன் ஒரு சரித்திரம்' சென்னையிலேயே அதிகபட்சமாக ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில்தான் அதிக நாட்கள் ஓடியது.

நினைக்க நினைக்க திகட்டாத எண்ண அலைகள்..... வண்ண நினைவுகள்......

JamesFague
30th May 2014, 05:18 PM
Nice writeup on AOS. I have seen the movie in Noorjehan, Saidapet.
Those golden days will never come.

RAGHAVENDRA
30th May 2014, 05:26 PM
டியர் கார்த்திக்,
இன்றைய இளைஞர்களுக்கு நம்முடைய அனுபவங்கள் வியப்பையும் பொறாமையையும் ஒரு சேர அளிக்கும் என்பதில் ஐயமில்லை. திரையரங்குகள் விழாக் கோலம் பூண்டதெல்லாம் அதுவும் உணர்ச்சிபூர்வமாக கொண்டாடியதெல்லாம் அவர்களுக்கு நிச்சயம் வித்தியாசமாக இருக்கும். அந்த நாட்களுக்கே நம்மையெல்லாம் அழைத்துச் சென்று விடும் வலிமை தங்களுடைய எழுத்துக்களுக்கு உண்டு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள்.

தாங்கள் கூறிய அபிராமி திரையரங்கிற்கு பதிலாக அஷோக் திரையரங்கின் பெயர் இடம் பெற்ற விளம்பரத்தின் நிழற்படம் இதோ நம் பார்வைக்கு

ரிசர்வேஷன் விளம்பரம்

http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/Old%20Ads/AOSreserveAd01fw-1.jpg

Gopal.s
31st May 2014, 05:43 AM
Murali Srinivas


நடிகர் திலகத்தைப் பற்றி அவரது படங்களைப் பற்றிய துணுக்கு செய்திகளை பகிர்ந்து கொள்ளலாம் என ராகவேந்தர் சார் சொல்லியிருப்பதற்கு ஏற்ப என் நினைவிற்கு வந்த இந்த செய்தியை இங்கே பதிகிறேன். அதிலும் ராகவேந்தர் சார் அவருக்கு மிகவும் பிடித்த படம் என்று சொன்ன படத்தைப் பற்றிய பகிர்வு.

ஆம்! சிவகாமியின் செல்வன்! நம் அனைவருக்கும் பிடித்த படம்! இதே நாளில் [ஜனவரி 26] இன்றைக்கு 39 வருடங்களுக்கு முன் வெளியாகி நம்மை கொள்ளை கொண்ட படம் பற்றிய ஒரு துணுக்கு.

50-களில், 60-களில் 70-களில் முற்பகுதியில் பிறந்தவர்களுக்கு நான் சொல்லும் விஷயம் பரிச்சயமாகி இருக்கும். அன்றைய கால கட்டங்களில் ஒரு திரைப்படம் வெளியான பிறகு வாரா வாரம் புதிய போஸ்டர்கள் ஒட்டப்படும்! 2-வது வாரம், 3-வது வாரம் என ஆரம்பித்து 7 வாரம் வரை போகும். 8-வது வாரத்திற்கு பதிலாக 50-வது நாள் போஸ்டர் வரும். மீண்டும் 9,10 வாரத்தின் போஸ்டர். பிறகு 75-வது நாள் (சில நேரங்களில் இது 11-வது வார போஸ்டராகவும் வரும்]. அதன் பிறகு 12,13,14 என தொடர்ந்து 100-வது நாள் போஸ்டர் சுவர்களில் இடம் பிடிக்கும்.

இதை ரசிகர்கள் அனைவரும் வெகு ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். ஒவ்வொரு வாரமும் எந்த டிசைனில் போஸ்டர் அடிக்கப்பட்டிருக்கிறது? என்ன கலர் என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருக்கும்! இந்த வார போஸ்டர் பார்த்தாயா என்று ரசிகர்கள் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொள்வதையும் பார்க்க முடியும். போஸ்டர்கள் தங்கள் எண்ணப்படி அமையாமல் சொதப்பும் போது அதைப் பற்றிய சூடான விமர்சனங்களும் ரசிகர்களால் முன் வைக்கப்படும்!

சிவகாமியின் செல்வன் வெளியான அந்த 1974 ஜனவரி கால கட்டத்திலும் இதுதான் வழக்கம்! படம் வெளியாகி நல்ல wom (word of mouth) பரவி படம் வெற்றிகரமாக அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. சாதாரணமாக இரண்டாவது வார துவக்க நாளன்று 2-வது வாரம் போஸ்டர் ஓட்டப்படவிடும். ஆனால் பிப்ரவரி 2-ந் தேதி சனிக்கிழமையன்று போஸ்டர்கள் ஒட்டப்படவில்லை. மறுநாள் ஞாயிறு அன்றும் ஒட்டப்படவில்லை. ரசிகர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.போஸ்டர் வந்து சேரவில்லையா இல்லை வேறு ஏதாவது விஷயமா என்று குழம்பினர். காரணம் அன்றைய காலங்களில் தினத்தந்தி விளம்பரம் போஸ்டர் விளம்பரம் இவை இரண்டு மட்டுமே ஒரு படத்தின் publicity -யாக விளங்கிய காலம். அனைவரும் தந்தி படிப்பார்கள் என்று சொல்ல முடியாது. எனவே ஒரு படத்தின் விளம்பரத்திற்கு போஸ்டர்கள் கண்ணில் பட்டுக்கொண்டிருக்க வேண்டும். அது இல்லை என்று சொல்லும்போது படத்தின் long run-ஐ அது பாதிக்குமோ என்ற அச்சம் எழுந்தது. மதுரையைப் பொறுத்தவரை படத்தின் தயாரிப்பாளரான ஜெயந்தி பிலிம்ஸ்தான் மதுரை மாவட்ட விநியோகஸ்தரும் கூட. அன்றைய நாளில் அவர்களின் அலுவலகம் திண்டுக்கல் ரோட்டில் மாடர்ன் ரெஸ்டாரண்ட் என்ற புகழ் பெற்ற ஹோட்டலின் நேர் எதிரே உள்ள கட்டிடத்தில் இயங்கி வந்தது. ரசிகர்கள் அந்த அலுவலகத்திற்கு நேரே சென்று விட்டனர். ஆனால் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்கே யாரும் இல்லை. மறுநாளும் திங்களன்றும் போஸ்டர் இல்லை என்றவுடன் இது ஒரு பெரிய விஷயமாக சர்ச்சை செய்யப்பட ஆரம்பித்து விட்டது. அன்று படம் திரையிடப்பட ஸ்ரீதேவி தியேட்டருக்கும் ஜெயந்தி பிலிம்ஸ் அலுவலகத்திற்கும் ரசிகர்கள் கூட்டமாக சென்று விட்டனர். போஸ்டர்கள் அப்போதுதான் வந்ததாகவும் இரவு ஒட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மறுநாள் செவ்வாய் அன்று சுவர்களை அலங்கரித்த சுவரொட்டிகளைப் பார்த்தவர்களுக்கு surprise அல்லது shock என்று சொல்லலாம். காரணம் நார்மலாக காணப்படும் 2-வது வார போஸ்டருக்கு பதிலாக வெற்றிகரமான 11-வது நாள் போஸ்டர் அங்கே காணப்பட்டதுதான். இந்த புதுமை அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.அடுத்த 10 நாட்கள் கழித்து 22-வது நாள் போஸ்டர் ஒட்டப்பட்டது. சரி அடுத்து 33-வது நாள் வரப் போகிறது என்று நினைத்திருக்கும் போது 35-வது நாள் போஸ்டர் வந்தது. அதன் பிறகு நேராக 51-வது நாள் போஸ்டர்தான் வந்தது. அந்த 51-வது தின ஞாயிறன்று [மார்ச் 17] அன்று தினத்தந்தியில் முழு பக்க விளம்பரமும் வந்தது.

அதுவரை நடைமுறையில் இருந்த வழக்கத்தை மாற்றி புதிய முறையில் போஸ்டர் அடிக்கப்பட்ட முதல் படம் சிவகாமியின் செல்வன் என்று சொல்லலாம். நான் முதலில் சொன்னது போல் இதை பலர் வரவேற்றாலும் ரசிகர்களில் ஒரு சாரார் இதை ஏற்றுக் கொள்ளவில்லை.வழமையான முறையில் விளம்பரம் செய்திருந்தால் படம் நிச்சயமாக 100 நாட்களை தொட்டிருக்கும் என்பது அவர்களின் ஆதங்கமாக இருந்தது.

இப்படிப்பட்ட போஸ்டர் விளம்பரமே வழக்கொழிந்து போன இன்றைய காலக்கட்டத்தில் வாழும் இளைய தலைமுறையினருக்கு இது சுவாரஸ்யமாக இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அன்றைய ரசிகர்களுக்கு அதுவும் இந்த ரிலீஸ் நாளில் இது ஒரு நினைவூட்டலாக அமையும் என நம்புகிறேன்!

அன்புடன்

eehaiupehazij
10th June 2014, 10:17 AM
Excellent postings by experienced writers! The nostalgia of NT movies are analysed in every detail making me feel that the scenes unfold right in front of my eyes! Hats off Murali Sir and Karthik sir.

Murali Srinivas
21st June 2014, 10:20 PM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

கடந்த பதிவின் இறுதி பகுதி.

பட்டிக்காடா பட்டணமா அந்த ஜூன் 9 அன்று 35 நாட்களை நிறைவு செய்து அன்று வரை நடைபெற்ற 115 காட்சிகளும் ஹவுஸ் புஃல் ஆனது. 115 CHF [Continous House Full shows]. அதே நாளன்று நான் ஏன் பிறந்தேன் மதுரை தங்கத்தில் வெளியாகிறது. அடுத்த நாள் ஜூன் 10 அன்று பட்டிக்காடா பட்டணமாவிற்கு ஒரு acid test காத்துக் கொண்டிருந்தது. அது என்ன acid test?

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

அந்த நேரத்தில் வெற்றிகரமாக குறத்தி மகன் படம் ஓடிக் கொண்டிருந்ததை குறிப்பிட்டேன். மற்றொரு படம் அதே காலகட்டத்தில் அதே போல் வெற்றிகரமாக ஓடியது என்று சொன்னால் அது காசேதான் கடவுளடா ஆகும். அதே நேரத்தில் வெளியான நவநீத ரெட்டியாரின் புகுந்த வீடு சென்னையில் நன்றாக போனாலும் மதுரையில் பெரிய வெற்றி என்று சொல்ல முடியாது. வெகு நாட்களுக்கு பின் ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும் மீண்டும் பின்னணி பாடிய செந்தாமரையே செந்தேனிலவே என்ற பாடல் இந்த படத்தில் இடம் பெற்று பிரபலமானது. ஸ்ரீதேவியில் காசேதான் கடவுளடா வெளியானது. புகுந்த வீடு மீனாட்சியிலும் வந்தது. மே மாதம் இறுதியில் என்று நினைவு மீனாட்சியில் புகுந்த வீடு படம் மாற்றப்பட்டு எஸ்.பி. முத்துராமனின் முதல் படமான கனிமுத்துப் பாப்பா வெளியானது. ஹிந்தியில் சூப்பர் ஹிட் படமான Andaaz படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் இது. ஷர்மீலீ இந்திப் படத்தின் மிக பிரபலமான Khilte Hain Gul Yahan பாடல் ராதையின் நெஞ்சமே என்று மாற, Andaaz படத்தின் Zindhaki Ek Safar காலங்களே காலங்களே என்று எஸ்பிபி குரலில் ஒலிக்க, Hai na bolo bolo அதே மெட்டில் மாமா சொல்லு சொல்லு என்றாக, இப்படி பல்வேறு கலவைகளின் சங்கமமாக வெளிவந்த கனிமுத்துப் பாப்பா வெற்றி பெற முடியாமல் போனது.

ஜூன் 9 அன்று நான் ஏன் பிறந்தேன் வெளியானது. இது கேஆர்விஜயாவின் சொந்தப் படம். Jeene Ki Raah என்ற இந்திப் படத்தின் தழுவல். என்ன காரணத்தினாலோ இது ரீமேக் படம் என்பதை வெளியில் சொல்லாமல் மறைத்தார்கள். விஜயாவைப் பொறுத்தவரை வேலாயுதன் அவர்களை மணந்த பின் நடிப்பதை நிறுத்தியிருந்த அவர் மீண்டும் மறு பிரவேசம் செய்த பிறகு நடிகர் திலகத்துடன் இணைந்து நடித்த முதல் படம் 1969 அக்டோபரில் வெளியான பாலாஜியின் திருடன். அதற்கு முன் அவர் நடிகர் திலகத்தின் படத்தில் பணியாற்றியது 1968 பிப்ரவரியில் வெளியான திருமால் பெருமை படத்தில்தான். தங்கை, என் தம்பி, திருடன் என்று வரிசையாக பாலாஜியின் படங்களுக்கு பைனான்சியராக இருந்த வேலாயுதன் திருடன் திரைப்படத்தில் கேஆர் விஜயாவிற்கு தனியாக டைட்டில் கார்டு போடவில்லை என்பதற்காக கோபித்துக் கொண்டு பாலாஜியின் படங்களுக்கு பைனான்ஸ் செய்வதை நிறுத்தி விட்டார். பாலாஜி பிறகு சேது பிலிம்ஸ் மற்றும் கீழக்கரை யாசின் என்று போய் விட விஜயாவின் திரைப்பட career-ஐ steady செய்யும் பொறுப்பை வேலாயுதனே ஏற்றுக் கொண்டு பல பெயர்களில் தயாரிப்பு நிறுவனங்களை நடத்திக் கொண்டு வந்தார்.

1969 அக்டோபரில் வந்த திருடன் படத்திற்கு பின் பாலாஜியின் தயாரிப்பில் 1983-ம் ஆண்டு ஜனவரியில் வெளி வந்த நீதிபதி படத்தில்தான் மீண்டும் விஜயா இடம் பெற்றார். பாலாஜியின் தயாரிப்பில் நடிக்க 14 வருடங்கள் இடைவெளி விட்ட போதும் இருவரும் வேறு படங்களில் சேர்ந்து நடித்தார்கள். இன்னும் சொல்லப் போனால் 1975-ம் ஆண்டு மார்ச்சில் வெளி வந்த தயாரிப்பாளர் கேஆர்ஜியின் ஆயிரத்தில் ஒருத்தி திரைப்படத்தில் இருவரும் ஜோடியாகவே நடித்தார்கள்.

1970-ம் ஆண்டு நடிகர் திலகத்துடன் எதிரொலி, ராமன் எத்தனை ராமனடி, சொர்க்கம் என மூன்று படங்களில் ஜோடி சேர்ந்த விஜயா அதன் பின் 1971-ம் ஆண்டில் நடிகர் திலகத்தின் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. 1970 அக்டோபரில் சொர்கத்திற்கு பிறகு 1972-ல் ஆகஸ்டில் வெளியான தவப்புதல்வன் படத்தில்தான் சிவாஜியுடன் மீண்டும் ஜோடி சேர்ந்தார். அந்த 1970-ன் இறுதியில்தான் Jeene Ki Raah என்ற இந்திப்படத்தின் தமிழ் உரிமையை வேலாயுதன் வாங்கினார்.

1967 தீபாவளிக்கு வந்த விவசாயி படத்திற்கு பிறகு விஜயா எம்ஜிஆருடனும் இணைந்து நடிக்கவில்லை. இந்த நிலையில்தான் 1971 ஜனவரியில் காமாட்சி ஏஜன்சீஸ் என்ற நிறுவனம் எம்ஜிஆரை வைத்து படம் தயாரிக்கப் போவதாக செய்தி வருகிறது. அந்த 1971 ஜனவரியிலேயே வேலாயுதன் அவர்களின் அலுவலகத்தில் வைத்தே பூஜை போடப்பட்டது. எம்ஜிஆர் படத்திற்கு முதன் முதலாக சங்கர் கணேஷ் இரட்டையர்கள் இசையமைப்பாளர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.ஆனால் அதன் பிறகு குறுக்கிட்ட 1971 பாராளுமன்ற சட்ட மன்ற பொது தேர்தல்களினால் இந்தப் படம் தயாரிப்பில் நீண்டு போனது. பெயரிடப்படாமல் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் படத்திற்கு பிறகு அப்போது ஆனந்த விகடனில் தொடராக வந்துக் கொண்டிருந்த எம்ஜிஆரின் சுய சரிதை தொடரான நான் ஏன் பிறந்தேன் என்ற தலைப்பே சூட்டப்பட்டது.

நமது தொடரில் இதனையும் சொல்வதற்கு காரணம் நான் இந்த தொடரின் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தது போல பட்டிக்காடா பட்டணமாவிற்கு opposition படம் அதுவும் strong opposition என்ற முறையில் இந்தப் படம் எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் எங்கள் மதுரையில் தங்கத்தில் வெளியானது நான் ஏன் பிறந்தேன். பட்டிக்காடா பட்டணமா ஓடிக் கொண்டிருந்த சென்ட்ரல் சினிமாவிலிருந்து a stone's throw away என்பது போன்ற தூரத்தில்தான் தங்கம் அமைந்திருந்தது இந்த opposition பேச்சிற்கு வலு கூட்டியது.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
27th June 2014, 12:38 AM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

அந்த நாள் ஞாபகம்

நண்பர் ஆதிராமிற்கு வேண்டி சஸ்பென்ஸை முதலிலேயே சொல்லி விடுகிறேன். acid test என்பது தொடர் ஹவுஸ்புல் காட்சிகளில் பட்டிக்காடா பட்டணமா ஒரு புதிய சாதனை படைக்குமா என்பதே ஆகும். இந்த தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் என்ற concept உருவெடுத்ததே 60-களின் இறுதிப் பகுதியில்தான். குறிப்பாக தில்லானா வெளிவந்த சமயம் நண்பர்கள் அனைவருக்கும் நினைவிருக்கும் என நினைக்கிறேன் காரணம் நமது திரியில் கூட அந்த விளம்பரம் பதிவு செய்யப்பட்டிருந்தது. 1968 ஜூலையில் வெளியான தில்லானா சாந்தியில் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றி நடை போட்டபோது தொடர்ந்து 100 கொட்டகை நிறைந்த காட்சிகள் என்ற விளம்பரம் பத்திரிக்கையில் வெளிவந்தது. இதுதான் தொடர் ஹவுஸ் புல் காட்சிகள என்ற கான்செப்ட் பிரபலமாவதற்கு வழி வகுத்தது. அதுவும் ஒரு சின்ன விஷயத்தில் கூட போட்டி என்று இரு தரப்பு ரசிகர்களும் செயல்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம் என்பதால் இந்த விஷயம் பெரிதாக எடுத்துக் கொள்ளப்பட்டது. சென்னை மட்டுமல்ல தமிழகத்தின் பெரிய நகரங்களில் எல்லாம் இந்த ஜுரம் பரவியது. எங்கள் மதுரையில் கேட்கவே வேண்டாம்.

சென்னை மாநகரில் 70-களில்தான் காலைக்காட்சி என்ற item சேர்க்கப்பட்டது. அதுவரை வாரத்தின் 7 நாட்களிலும் தினசரி 3 காட்சிகள்தான். ஆனால் தமிழகத்தின் மற்ற நகரங்களில் வழக்கம் என்னவென்றால் தினசரி 3, சனி ஞாயிறு 4 காட்சிகள். ஆக ஒரு வாரத்திற்கு மொத்தம் 23 காட்சிகள். மதுரையில் இது பல வருடங்களாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. இன்றைய நாட்கள் போல் அல்லாமல் terms முறையில் படம் ரிலீஸ் செய்யப்பட்டதால் ஒவ்வொரு காட்சிக்கும் hold over என்ற முறையிலே படத்தின் ஓட்டம் தீர்மானிக்கப்பட்டது. விளக்கமாக சொல்வதென்றால் சனிக்கிழமை காலைக் காட்சி திரையிடப்படும்போது அந்த காட்சிக்கு குறைந்தபட்சம் ஒரு தொகை வசூலாக வேண்டும். இந்த குறைந்தபட்ச தொகையைதான் hold over (இதை விநியோகஸ்தர்கள் பேச்சு தமிழில் holder என்று குறிப்பிடுவார்கள்) என்று சொல்லுவார்கள். அந்த தொகை வரவில்லையென்றால் அடுத்த வாரம் சனிக்கிழமை காலைக்காட்சி ஓடாது. விளம்பரத்திலேயே தினசரி 3, ஞாயிறு 4 காட்சிகள் என்று வந்து விடும். இது போன்றே ஞாயிறு காலைக்காட்சி, சாதாரண தினங்களில் பகல் காட்சிக்கு என்று தனி தனி hold over உண்டு.

இதை இத்தனை விளக்கமாக சொல்வதற்கு காரணம் அன்றைய நாட்களில் நடிகர் திலகத்தின் படங்கள் சனிக்கிழமை வெளியாகும். ஒரு வாரம் 23 காட்சிகள். நான்கு வாரத்தில் 92 காட்சிகள். 5வது வாரம் சனி மற்றும் ஞாயிறு அன்று நடைபெறும் 8 காட்சிகளும் புல் ஆகிவிட்டால் 30-வது நாள் ஞாயிறு இரவு காட்சியுடன் 100 காட்சிகள் அரங்கு நிறைந்து விடும். இதே வெள்ளிக்கிழமை வெளியான படம் என்றால் நான்கு வாரத்தில் 92 காட்சிகள். 29-வது நாள் வெள்ளி அன்று 3 சேர்த்தால் 95, சனிக்கிழமை 4 சேர்த்து 99, பிறகு ஞாயிறு காலைக்காட்சிதான் 100 ஆகும். இதில் உள்ள நடைமுறை சிக்கல் என்னவென்று பார்ப்போம்.

இன்றைய நாட்கள் போல் அன்றைக்கு 5 days week கிடையாது. சனிக்கிழமை பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்தும் வேலை செய்யும். எனவே ஒரு படத்திற்கு ஒரு வாரத்தில் ஹவுஸ் புல் ஆவதற்கு மிகவும் கடினமான காட்சி என்றால் அது சனிக்கிழமை காலைக்காட்சிதான். அதற்கு அடுத்தது ஞாயிறு காலைக்காட்சி. புதிய படங்கள் வெளியாகும்போது குறிப்பாக சிவாஜி எம்ஜிஆர் படங்கள் வெளியாகும்போது முதல் இரண்டு மூன்று வாரத்திற்கு இந்த சனிக்கிழமை காலைக்காட்சிக்கு அந்தளவிற்கு பிரச்சனை இருக்காது. அதன் பிறகு படத்தின் ரிப்போர்ட் அனுசரித்து இந்த காட்சிக்கு கூட்டம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும். எனவே தொடர் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிகொண்டிருக்கும் படங்களுக்கு இந்த காட்சிகள் ஒரு ஸ்பீட் பிரேக்கர் போல அமையும்.

(தொடரும்)

அன்புடன்

HARISH2619
27th June 2014, 01:15 PM
ஆஹா ஆஹா அருமை முரளி சார் அருமை நீண்ட நாட்கள் காக்க வைக்காதீர்கள் அவ்வப்போது நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொடருங்கள் என கேட்டுகொள்கிறேன்

mr_karthik
28th June 2014, 02:48 PM
அந்த நாள் ஞாபகம்

சவாலே சமாளி வெளியானபோது அன்று நடந்தவை அனைத்தும் பசுமையாக நினைவில் இருக்கின்றன.

ஜனவரியில் 'கோட்டம்' வெளியான பின்னர் பொதுத்தேர்தலுக்குப்பின் மே 29 அன்றுதான் சைக்கிள் ரிக்ஷா ஓடத்துவங்கியது. இந்தப்பக்கம் புற்றீசல்கள் போல நான்கு மாதத்தில் ஆறுபடங்கள் வெளியாகி, நடிகர்திலகத்தின் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தன. திரும்பதிரும்ப பார்ப்பதென்றாலும் எந்தப்படத்தைப் பார்ப்பதென்பதில் திணறல். அதில் சுமதி என் சுந்தரி பெயரைத்தட்டிக்கொண்டு போனது. குடும்பக்கதையை விரும்பியவர்களுக்கு கே.எஸ்.ஜி.யின் படம் புகலிடமானது. ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட சாவித்திரியின் இயக்கத்தில் வந்த படம் பின் தங்கியது. 50 நாட்கள் கடந்த நிலையில் பிராப்தம் மாற்றப்பட்டு மிட்லண்டில் 'அவளுக்கென்று ஓர் மனம்' வெளியானது.

இந்நிலையில்தான் 150 வது படமாக ஜூலை 3 அன்று 'சவாலே சமாளி' வெளியானது. அண்ணாசாலையில் சைக்கிள் ரிக்ஷா ஓடிய 'தேவி சொர்க்க'த்துக்குப்பக்கத்திலேயே சாந்தியில் ரிலீஸானது. இருபக்கமும் ரசிகர்கள் கூட்டம் எதிரும் புதிருமாக, முறைப்புடன் இருந்தனர். தேர்தலின்போது கேலிபேசிய தறுக்கர்களின் கொட்டத்தை அண்ணனின் 150வது படம் போக்க வேண்டுமென்பதில் நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு தணியாத தாகம்.

சவாலே சமாளி பட வெளியீட்டையொட்டி 'மதி ஒளி' பத்திரிக்கை சிறப்பு மலர் வெளியிட்டது. முன்பக்க அட்டையில் நடிகர்திலகம் தீப்பந்தத்தை கையில் ஏந்தி நிற்பது போன்ற தோற்றமும் (கிளைமாக்ஸ் காட்சியில் விஜயகுமாரியிடமிருந்து பறித்த தீப்பந்தம்) மறுபக்க அட்டையில் மல்லியம் ராஜகோபாலின் அடுத்த படமான 'கிழக்கும் மேற்கும்' படத்தின் இரட்டைவேட தோற்றமும் இடம்பெற்றிருந்தன. (அப்படம் தயாரிக்கப்படவில்லை).

இந்நிலையில் இன்னொரு வேடிக்கை, அந்தப்பக்கம் தலைவருக்கும் தலைவிக்கும் கொஞ்சம் லடாய். 'கோட்டம்' வரையில் தான் தொடர்ந்து ஜோடியாக நடித்திருக்க, இப்போது தலைவர் ரிக்ஷா ஓட்ட புதிதாக 'மஞ்சள்' நாயகியைப் போட்டதோடு, அப்படம் ஓட்டத்திலும் வெற்றிமுகமாக இருக்கவே, தான் நாயகியாக நடித்திருக்கும் நடிகர்திலகத்தின் 150வது படம் மாபெரும் வெற்றியடைந்து தலைவரின் முகத்தில் கரி பூச வேண்டும் என்பதும் தலைவியின் ஆசையாக இருந்ததுதான்.

அண்ணாசாலையில் மட்டுமல்ல பதட்டம். வடசென்னை தங்கசாலைப்பகுதியிலும் ஸ்ரீகிருஷ்ணாவில் ரிக்ஷா ஓட, அருகாமை தியேட்டரான கிரௌனில் சவாலே சமாளி ரிலீஸ். (புரசைவாக்கத்தில் மட்டும் சரவணாவுக்கும் புவனேஸ்வரிக்கும் சற்று தொலைவு). வடசென்னை ஏழுகிணறு பகுதி 'கர்ணன் கணேசன் கலை மன்ற'த்தினர்தான் கிரௌனில் வெளியாகும் நடிகர்திலகத்தின் படங்களுக்கு, தியேட்டர் அலங்காரம் மற்றும் மலர் வெளியீடு ஆகியவற்றை பிரதானமாக நின்று செய்வார்கள்.

இந்த நேரத்தில்தான் ஒரு பிரச்சினை தோன்றியது. அப்போது எதிர் அணியினரின் பிரதான பத்திரிகையாக இருந்த 'திரை உலகம்' பத்திரிகையின் முதல் பக்கத்தில் தலைப்புச்செய்தியாக, (திருச்சி மாநாட்டை கிண்டல் செய்து) "சவாலே சமாளி படத்துக்கு சென்னையில் சமாதி, திருச்சியில் கருமாதி" என்று செய்தி வெளியிட்டு மிகவும் கேவலமாக எழுதியிருந்தனர். இதைப்பார்த்து கொதித்தெழுந்த வடசென்னை தங்கசாலைப்பகுதி ரசிகர்கள், குறிப்பாக 'கர்ணன் கணேசன் கலை மன்றத்தினர் எதிர் அணியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட, அது வன்முறையாக மாறி பெரிய கலவரமாக வெடித்தது. இருபக்கங்களிலிருந்தும் சோடா பாட்டில்கள் பறந்தன அப்பகுதி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. தங்கசாலை (மிண்ட்) பேருந்து நிலையம் வெறிச்சோடிப்போக காவல் துறையினர் வந்து இரு தரப்பிலும் சிலரைக் கைது செய்து அழைத்துச்சென்றனர். இப்போது அரசியலில் கீரியும் பாம்புமாக இருக்கும் இரு அணியினரும் அப்போது (பெருந்தலைவர் சொன்னது போல) ஒரே குட்டையில் ஊறிக்கொண்டிருந்த நேரம். நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கெதிராக காவல்துறை நடவடிக்கைகள் எப்படி இருந்திருக்கும் என்பதைச்சொல்லத் தேவையில்லை.

mr_karthik
28th June 2014, 02:56 PM
அந்த நாள் ஞாபகம்

'இதயம் பேசுகிறது' பத்திரிகை எரிப்புப் போராட்டம்

அப்போதைய பத்திரிகைகளில் பெரும்பாலானவை நடிகர்திலகத்தின் எதிர்ப்புப் பத்திரிகையாகவே விளங்கின. குமுதம், இதயம் பேசுகிறது, தினத்தந்தி, மாலைமுரசு, ராணி, பிலிமாலயா போன்ற பல பத்திரிகைகள் அவரைக் குறைசொல்லியே செய்திகளை வெளியிட்டு வந்தன. விகடன், கல்கி, பொம்மை, பேசும் படம், தினகரன் போன்றவை மட்டுமே நடுநிலையோடு எழுதி வந்தன. அதிலும் இதயம் பத்திரிகை மிகவும் மோசம்.

1978 இறுதியில், பைலட் பிரேம்நாத் வெளியாகி ஓடிக்கொண்டிருந்தபோது 'இதயம்' பத்திரிகையில், "இனியும் சிவாஜி நடிக்கத்தான் வேண்டுமா?" என்ற தலைப்பில் மிகவும் மோசமாக அவரை விமர்சித்து கட்டுரை எழுதியதோடு, நடிகர்திலகத்தின் முகத்தை கோரமாக ஒரு கேலிச்சித்திரம் ஒன்றையும் அக்கட்டுரையின் மத்தியில் பிரசுரித்திருந்தது. இதைப்பார்த்து வெகுண்டெழுந்த கல்லூரி மாணவர்களாகிய நாங்களும், சாந்தி வளாக சிவாஜி ரசிகர்களும் சுமார் 150 பேர் கூடி, சென்னை அண்ணாசாலை பல்லவன் போக்குவரத்து அலுவலகத்தின் எதிரே, பெருந்தலைவர் காமராஜர் சிலையருகே, இதயம் பேசுகிறது வார இதழ் பிரதிகளை குவித்துப்போட்டு தீ வைத்துக் கொளுத்தினோம். அதோடு மணியனின் கொடும்பாவி எனப்படும் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. உடனே போலீஸார் வந்து தடியடி நடத்தி எங்களை விரட்டியடித்தனர்.

உண்ணாவிரதம்.....

பின்னர், 1981-ல் அமரகாவியம் படம் வெளியாக பத்து நாட்களுக்கு முன்னர், அப்போது தமிழக அமைச்சராக இருந்த கா.காளிமுத்து, பிரதமர் இந்திராகாந்தியை "வில்லி" என்று விமர்சித்திருந்ததை எதிர்த்து, சாந்தி வளாக ரசிகர்களும், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை ரசிகர்களும் காமராஜர் சிலையருகே உண்ணாவிரதம் இருக்க அனுமதிகேட்டோம். போலீஸ் அனுமதி மறுத்தது. இருப்பினும் போலீஸ் தடையை மீறி மறுநாள் காலை எட்டு மணிக்கு உண்ணாவிரதத்தை தொடங்கினோம். சிறிது நேரத்தில் போலீஸ் எங்களைக் கைது செய்து வேனில் ஏற்றி எழும்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலக காம்பண்டுக்குள் வெட்டவெளியில் சுடுமணலில் உட்காரவைத்து, போலீஸார் காவலுக்கு நின்றனர்.

ரசிகர்கள் கைதான விஷயம் நடிகர்திலகத்துக்கு எட்டியதும், அவரும், அகில இந்திய ரசிகர்மன்ற தலைவர் தளபது சண்முகம், செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ராஜசேகரன் ஆகியோரும் கமிஷனர் அலுவலகத்துக்கு விரைந்து வந்தனர். வரும் முன்பே குளிர்பானத்துக்கு ஆர்டர் கொடுத்து விட்டு வந்தனர்.. நடிகர்திலகம் வந்ததும் ரசிகர்கள் கைது செய்யப்பட்டு மண்ணில் உட்கார வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கினார். அவர் எங்களைப்பார்த்து “இந்த மாதிரி விஷயங்களை மேல்மட்டத்தில் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். போலீஸ் அனுமதி மறுத்திருக்கும்போது உண்ணாவிரதம் இருந்திருக்கக் கூடாது. எனக்காகவும் காங்கிரஸுக்காகவும் நீங்கள் இவ்வளவு அன்பு வைத்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று சொல்லி உணர்ச்சி வசப்பட்டார். சிறிது நேரத்தில் குளிர்பானம் வந்துவிட நடிகர்திலகம் தன் கையாலேயே எங்கள் ஒவ்வொருவருக்கும் குளிர்பானம் வழங்கி உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

பின்னர் நடிகர்திலகம் உள்ளே சென்று கமிஷனரிடம் பேசி, சில தஸ்தாவேஜுகளில் நடிகர்திலகம் கையெழுத்திட்ட்பின், பிற்பகலில் நாங்கள் விடுவிக்கப்பட்டோம்.

Gopal.s
28th June 2014, 03:20 PM
கார்த்திக் சார்,

நாம் சந்தித்து உள்ளோம். 3 ஆம் வருட பீ.டெக் படித்து கொண்டிருந்த போது அந்த எரிப்பு போராட்டத்தில் நானும் இருந்தேன்.

மணியனிடம் விடுதலை பெற்ற விகடன் நடுநிலை. குமுதம் எப்போதுமே நடிகர்திலகம் பக்கமே. தின தந்தி நடுநிலை. மற்ற பத்திரிகைகள் பற்றி நீங்கள் சொன்னது சரி.

இதயம் படு மோசம். இறுதி காலங்களில் மணியன் வருந்தினார்.

eehaiupehazij
28th June 2014, 08:14 PM
I think Kumudam magazine was always pro-Sivaji. In one issue they published ' there is only a Nadigar Thilagam but no such thing as a Nadigaiyar thilagam'. In one of the recent issues too, there was a reference that 'Sivaji oru Suyambu.Yaaraiyum pin patri avar nadiththathillai'

JamesFague
28th June 2014, 08:22 PM
Mr Sindhanur Karthik Sir,

Do come to our main thread and post about our acting god.

Solpa dhayai madi sir neevu baralendra namakku bejar agudhu.

Regards

Murali Srinivas
1st July 2014, 01:04 AM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

கடந்த பதிவின் இறுதி பகுதி.

இன்றைய நாட்கள் போல் அன்றைக்கு 5 days week கிடையாது. சனிக்கிழமை பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்தும் வேலை செய்யும். எனவே ஒரு படத்திற்கு ஒரு வாரத்தில் ஹவுஸ் புல் ஆவதற்கு மிகவும் கடினமான காட்சி என்றால் அது சனிக்கிழமை காலைக்காட்சிதான். அதற்கு அடுத்தது ஞாயிறு காலைக்காட்சி. புதிய படங்கள் வெளியாகும்போது குறிப்பாக சிவாஜி எம்ஜிஆர் படங்கள் வெளியாகும்போது முதல் இரண்டு மூன்று வாரத்திற்கு இந்த சனிக்கிழமை காலைக்காட்சிக்கு அந்தளவிற்கு பிரச்சனை இருக்காது. அதன் பிறகு படத்தின் ரிப்போர்ட் அனுசரித்து இந்த காட்சிக்கு கூட்டம் கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும். எனவே தொடர் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிகொண்டிருக்கும் படங்களுக்கு இந்த காட்சிகள் ஒரு ஸ்பீட் பிரேக்கர் போல அமையும்.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

பட்டிக்காடா பட்டணமாவின் acid test-ற்கு போவதற்கு முன் மதுரையில் 1969 முதல் இருவர் படங்களும் தொடர் ஹவுஸ் புல் காட்சிகள் என்ற விஷயத்தில் எப்படி perform செய்தன என்பதை ஒரு சின்ன பிளாஷ்பாக் ஆக பார்த்துவிடலாம்.

1969-ல் மே மாதம் 1-ந் தேதி வெளியான அடிமை பெண் மதுரை சிந்தாமணியில் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது. சிவாஜி ரசிகர்களைப் பொறுத்தவரை அந்த குழுவில் இருக்கக்கூடிய சில முதிர்ந்த ரசிகர்கள் 1961-லேயே இதே சிந்தாமணியில் தொடர்ந்து 115 காட்சிகள் அரங்கு நிறைந்த சாதனை பாச மலர் திரைப்படத்தால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்ற தகவலை சொன்னார்கள். ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் 1969-ல் நடந்தது பத்திரிக்கையில் விளம்பரங்கள் வாயிலாக ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் 1961-ல் அவ்வாறு செய்யப்படவில்லை என்பதேயாகும்.

அதே 1969 நவம்பரில் தீபாவளிக்கு மதுரை சென்ட்ரலில் வெளியான சிவந்த மண் தொடர்ந்து 101 காட்சிகள் அரங்கு நிறைந்து புதிய சாதனை படைத்தது. ஒன்றை ஒன்றை ஒன்று மிஞ்சும் போட்டியை அரங்கேற்றிடதானே இரு தரப்பும் விரும்பும்? சிவந்த மண் சாதனையை முறியடிக்க 1970 பொங்கலுக்கு மதுரை சிந்தாமணியில் வெளிவந்த மாட்டுக்கார வேலன் படத்தை நம்பினர் எம்ஜிஆர் ரசிகர்கள். அந்த படத்திற்கு வணிக ரீதியாக நல்ல response இருந்தும் 75 காட்சிகள் மட்டுமே தொடர் அரங்கு நிறைந்தது. சிந்தாமணி அரங்கம் அமைந்திருக்கும் கீழ வெளி வீதியில் அரங்கத்திற்கு மிக அருகிலே அமைந்திருக்கும் பிரபலமான அசைவ உணவகம் அம்சவல்லி பவன். அதன் உரிமையாளர் அன்றைய நாட்களில் திமுக ஆதரவாளர் மற்றும் எம்ஜிஆர் ரசிகர். சிந்தாமணியில் வெளியாகும் எம்ஜிஆர் படங்களை பெரிய அளவில் சப்போர்ட் செய்வது அவர் வழக்கம். அவர் போன்றோர் முயற்சித்தும் கூட மாட்டுக்கார வேலன் 75 காட்சிகள் மட்டுமே தொடர்ந்து அரங்கு நிறைந்தது.

1970 ஏப்ரல் 11-ந் தேதி சனிக்கிழமை மதுரை ஸ்ரீதேவியில் வெளியான நடிகர் திலகத்தின் வியட்நாம் வீடு மிகப் பெரிய வெற்றி பெற்று முதல் 32 நாட்களில் அதாவது ஏப்ரல் 11 முதல் மே 12 செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்ற 106 காட்சிகளும் அரங்கு நிறைந்தது. 106 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் [106 Continuous House Full Shows] என்ற சாதனையை புரிந்தது. பாச மலர் இந்த சாதனையை புரிந்தபோது ஆவணப்படுத்த தவறி விட்டதால் இம்முறை எச்சரிக்கையாக இருந்து இதை ஆவணப்படுத்தினார்கள். ஒரு கருப்பு வெள்ளை படம் செய்த சாதனை மாற்று முகாம் தரப்பை மேலும் உஷ்ணப்படுதியது.

அதே 1970 மே மாதம் 21-ந் தேதி வியாழக்கிழமை மதுரை சென்ட்ரலில் என் அண்ணன் ரிலீஸ் ஆனது. மாட்டுக்கார வேலனை compare செய்தால் என் அண்ணன் படத்தின் ரிப்போர்ட் அந்தளவிற்கு இல்லை. இருப்பினும் மாற்று முகாம் ரசிகர்கள் விடவில்லை. எப்படியும் 100 தொடர் ஹவுஸ் புல் காட்சிகளை காட்டிட வேண்டுமென்று முயற்சி செய்தார்கள். ஆனால் என் அண்ணனும் மாட்டுக்கார வேலன் போல் 75 காட்சிகளோடு ஹவுஸ் புல் விட்டுப் போனது. அதன் பிறகு அதே 1970-ம் வருடத்தில் எம்ஜிஆருக்கு மேலும் 3 படங்கள் வெளியாகின. என் அண்ணனுக்கு பின் ஜூலையில் வெளியான தலைவன் படமும் சரி ஆகஸ்ட் 28 வெளியான தேடி வந்த மாப்பிளை படமும் ரிப்போர்ட் பெரிதாக இல்லாததாலும் இரண்டுமே தங்கம் தியேட்டரில் திரையிடப்பட்டதாலும் தொடர் ஹவுஸ் புல் வாய்ப்பே இல்லாமல் போனது. அதன் பிறகு 1970 அக்டோபர் 9-ந் தேதி சிந்தாமணியில் எங்கள் தங்கம் வெளியானது. ஆனால் அதுவும் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளில் வெற்றி பெற முடியவில்லை. ஆக மொத்தம் மதுரை மாநகரில் 1970-ம் ஆண்டில் தொடர்ந்து 100 அரங்கு நிறைந்த காட்சிகள் என்ற இலக்கை எந்த எம்ஜிஆர் படமும் எட்டவில்லை.

நடிகர் திலகத்தின் படங்களைப் பொறுத்தவரை வியட்நாம் வீடு 106 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்த பின் அடுத்து வெளியானது எதிரொலி. அது 1970 ஜூன் 27 சனிக்கிழமை அன்று தங்கத்தில் வெளியானது. அதன் பிறகு 1970 ஆகஸ்ட் 15 சனிக்கிழமை நியூசினிமாவில் ராமன் எத்தனை ராமனடி ரிலீஸ். நல்ல ரிப்போர்ட் பிளஸ் நல்ல பப்ளிக் audience, ஆயினும் மூன்றாவது வாரம் ஹவுஸ் புல் விட்டுப் போனது. தீபாவளிக்கு ஒரே நாளில் இரண்டு படங்கள். சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள். இரண்டு படங்களின் வெற்றி பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் தொடர் ஹவுஸ் புல் காட்சிகள் ஒரு படத்திற்கு மூன்றாம் வாரத்தின் தொடக்கத்திலும் மற்றொரு படம் 3 வது வாரம் நடுவிலும் வைத்து விட்டுப் போனது. போதாக்குறைக்கு நான்கே வார இடைவெளியில் பாதுகாப்பு ரிலீஸ். அதுவும் தங்கத்தில். 1969-ஐ தொடர்ந்து 1970-லும் நடிகர் திலகத்தின் படங்கள் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளை கண்டது.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
4th July 2014, 12:50 AM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

கடந்த பதிவின் இறுதி பகுதி.

1969-ஐ தொடர்ந்து 1970-லும் நடிகர் திலகத்தின் படங்கள் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளை கண்டது.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

1971-ல் எம்ஜிஆரின் முதல் படம் ஜனவரி 26 சிந்தாமணியில் வெளியான குமரிகோட்டம். இதுவும் அந்த இலக்கை எட்டவில்லை. இங்கே இரு துருவம் படம் ஜனவரி 14 அன்று நியூ சினிமாவில் வெளியானது. படத்தின் ரிப்போர்ட் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் தொடர் ஹவுஸ் புல் பற்றி யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை. பிப்ரவரி 6 அன்று தங்கைக்காக ஸ்ரீதேவியில் ரிலீஸ். பெண்கள் ஆதரவு இந்தப் படத்திற்கு பிரமாதமாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் இந்திய பாராளுமன்றத்திற்கும் தமிழக சட்டசபைக்கும் முன்கூட்டியே பொது தேர்தல் அறிவிக்கப்பட்டு விட, நமது ரசிக மன்ற கண்மணிகள் பெருந்தலைவரும் மூதறிஞர் அவர்களும் உருவாக்கிய கூட்டணிக்காக உழைக்க களம் புகுந்து விட்டனர். அதனால் தங்கைக்காக படமும் சரி மிக சரியாக தேர்தல் நாளான 1971 மார்ச் 5 அன்று நியூ சினிமாவில் வெளியான அருணோதயம் படமும் சரி [இந்த முக்தாவை என்ன சொல்லி திட்டுவது?] படத்தின் தரத்திற்கேற்ப வெற்றியை பெற முடியாமல் போனது. அருணோதயம் வெளியாகி 3 வாரத்தில் மார்ச் 26 அன்று குலமா குணமா ஸ்ரீதேவியில் ரிலீஸ். இந்த பக்கம் அருணோதயம் ஓடிகொண்டிருக்கிறது. அந்த பக்கம் 18 நாட்களில் ஏப்ரல் 14 அன்று சுமதி என் சுந்தரி அலங்காரிலும், பிராப்தம் சென்ட்ரலிலும் வெளியாகி விட்டது. 90 நாள் இடைவெளியில் 6 படங்கள் வெளியானால் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளுக்கு ஏது வாய்ப்பு?

1971 மே 29 சனிக்கிழமை மதுரை நியூசினிமாவில் ரிக்ஷாகாரன் வெளியானது. வணிக ரீதியில் வெற்றி பெற்ற இந்த படம் 100 தொடர் ஹவுஸ்புல் காட்சிகளை கண்டது. ஐந்து வாரத்தில் 115 காட்சிகளும் அரங்கு நிறைந்த இந்த படம் 36வது நாள் சனிக்கிழமை காலைக்காட்சியில் ஹவுஸ்புல் விட்டுப் போனது.

இப்போது ball was in our court. அதற்கு நமக்கு வந்து அமைந்தது சவாலே சமாளி. ஜூலை 3 அன்று ஸ்ரீதேவியில் வெளியாகி மிக பிரமாதமான ரிப்போர்ட். படம் சர்வ சாதாரணமாக ஹவுஸ் புல் ஆகிக் கொண்டிருந்தது. எந்தளவிற்கு என்றால் படம் வெளியான 8வது மற்றும் 9வது நாளில் அதாவது ஜூலை 10,11 தேதிகளில் திருச்சி மாநகரில் நடிகர் திலகத்தின் 150-வது படவிழா நடைபெற்றது. பெரும்பாலான ரசிகர்கள் மாநாட்டிற்கு போய் விட்ட அந்த சூழலிலும் அந்த இரண்டு நாட்களிலும் சரி அதன் பிறகு 20-வது நாளன்று வெளியான, அதாவது ஜூலை 22-ந் தேதி சிந்தாமணி டாக்கீஸில் நடிகர் திலகத்தின் அடுத்த படமான தேனும் பாலும் வெளியான் போதும் just like that என்று சொல்வார்களே அது போல் அரங்கு நிறைந்தது. அதற்கு இரண்டு நாள் கழித்து வந்த 4-வது சனிக்கிழமை காலைக்காட்சியும் புல். ஞாயிறு திங்கள் எல்லா காட்சிகளும் ஹவுஸ் புல். 24 நாட்களில் நடைபெற்ற் 80 காட்சிகளும் ஹவுஸ் புல்.

சாதாரணமாக படம் ஓடும் தியேட்டர் முன்பு ரசிகர்கள் கூட்டம் ஒன்று நிற்கும். சவாலே சமாளி போன வேகத்தை பார்த்து விட்டு சர்வ சாதாரணமாக இது இலக்கை அடைந்து விடும் என்று நினைத்தோ என்னமோ ரசிகர் கூட்டம் குறைந்தது. 25-வது நாள் செவ்வாய்க்கிழமை பகல் காட்சி மடமடவென்று அனைத்து வகுப்பு டிக்கெட்களும் விற்று தீர்ந்து கொண்டிருந்தது. கீழே பெண்கள் 40 பைசா, பெண்கள் மற்றும் ஆண்கள் 70 பைசா, ஆண்கள் 80 பைசா, பால்கனியில் 1.15, 1.70 என்று அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட, 2.50 டிக்கெட் மட்டும் கடைசி நிமிடத்தில் 4 டிக்கெட்கள் நின்று போயின. யாருமே எதிர்பார்க்காத வகையில் 80 காட்சிகளோடு தொடர் ஹவுஸ் புல் விட்டுப் போனது.

இந்த எதிர்பாராத நிகழ்வினாலும் அப்போது ஓடிக் கொண்டிருந்த தேனும் பாலும் படமும் சரி ஆகஸ்ட் 14 அன்று ஸ்ரீமீனாட்சியில் வெளியான மூன்று தெய்வங்கள் படமும் சரி இந்த கான்செப்டில் வரவில்லை. படத்தின் ரிப்போர்ட் சுமார் என்பதாலும் சவாலே சமாளி இருக்கிறது என்ற காரணத்தினாலும் தேனும் பாலும் கண்டுகொள்ளப்படவில்லை என்றால் மூன்று தெய்வங்கள் படம் பற்றி அது வெளிவருவதற்கு முன் பரவியிருந்த தவறான கருத்து [சிவாஜி கௌரவ தோற்றமாம்] படத்தின் முதல் வாரத்தில் சற்று பாதிப்பை ஏற்படுத்தினாலும் அதை சமாளித்து படம் முன்னேறியபோதுதான் ஆகஸ்ட் 31 வந்தது.

மதுவிலக்கைப் பொறுத்தவரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ரோல் மாடல் மாநிலமாக தமிழகத்தை விளங்க வைத்த அன்றைய காங்கிரஸ் அரசாங்கமும் மூன்று தலைமுறை மனிதர்களை குடி என்றால் என்னவென்றே தெரியாமல் வைத்திருந்து ஆட்சி புரிந்த பெருந்தலைவரும் மூதறிஞரும் பெரியவர் பக்தவத்சலமும் கட்டிக் காத்த மதுவிலக்கு கொள்கை திராவிட தலைவர்களால் காற்றிலே பறக்க விடபப்ட்டு தமிழகமெங்கும் மதுக் கடைகள் திறக்கப்பட்ட நாள் 1971 ஆகஸ்ட் 31. தமிழக மக்களை நிரந்தரமாக "குடிமகன்களாக" ஆக்கிய அவலம் அன்றுதான் ஆரம்பித்தது. கொட்டும் மழையில் கோபாலபுரத்திற்கு ஓடோடி சென்று மதுவிலக்கை ரத்து செய்யாதீர்கள் என்று மன்றாடிய மூதறிஞரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. "என் எதிரி கூட குடிக்க கூடாது என்று நினைக்கிறவன் நான்" என்று சினிமாவில் வசனம் பேசியவர்கள், சினிமாவில் மட்டும் வசனம் பேசி விட்டு நிஜ வாழ்க்கையில் அதிகாரம் கையில் வந்த போது 7 வருடங்களாக [1974 செப்டம்பர் 1 முதல் 1981 ஜூன் 30 வரை] மூடிக் கிடந்த மது கடைகளை எல்லாம் திறந்து விட்ட காட்சியையும் தமிழகம் வேதனையோடு வேடிக்கை பார்த்தது. ஆயிற்று, 1981 ஜூலை 1-ந் தேதி அன்று திறக்கப்பட்ட கடைகள் இந்த 2014 ஜூலை 1-ந் தேதியுடன் 33 வருடங்களை கடந்து, இன்னும் செயல்பட்டுகொண்டுதான் இருக்கின்றன. சமூக அக்கறை உள்ள எவரும் நாளைய சமுதாயத்தை நம்பிக்கையோடு எதிர் நோக்கும் எவரும் இன்றைய இளைஞர் நிலை கண்டு வேதனையும் வருத்தத்தையும் அடைவதுதான் மிச்சம். தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடவில்லை. மதுபானம்தான் ஆறாக ஓடுகிறது.

மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் முன்னிரவு மற்றும் பின்னிரவு நேரங்களில் பெண்கள் வெளியே வர அச்சப்படும் சூழல் உருவானது. பெண்கள் திரையரங்கிற்கு இரவு காட்சிகளுக்கு வராத சூழல் ஏற்பட்டது. இது தொடர் ஹவுஸ் புல் நிகழ்வையும் படங்களின் ஓட்டத்தையும் பாதித்தது. மூன்று தெய்வங்கள் படமும் இந்த அசாதாரண சூழலால் பாதிக்கப்பட்டது.

தீபாவளிக்கு பாபு ஸ்ரீதேவியிலும், நீரும் நெருப்பும் சென்ட்ரலிலும் ரிலீஸ். நீரும் நெருப்பும் ரிப்போர்ட் சுமார். ஆகவே அந்த படம் தொடர் ஹவுஸ் புல் காட்சிகளுக்கு முயற்சிக்கப்படவில்லை. மேலும் ரிக்ஷாகாரன் படம் 100 தொடர் ஹவுஸ் புல் காட்சிகள் என்ற இலக்கை எட்டி விட்டதாலும் இந்த படம் கண்டு கொள்ளாமல் விடப்பட்டது. பாபு படத்தை பொறுத்தவரை நல்ல ரிப்போர்ட். படம் நன்றாகவே போனது. ஆனாலும் தொடர் ஹவுஸ் புல் என்ற இலக்கை அடைய முடியவில்லை. எனக்கு அன்றும் இன்றும் தோன்றுகின்ற காரணம் என்னவென்றால் இது போன்ற உணர்ச்சிப்பூர்வமான படங்களுக்கு repeat audience சற்று குறைவாக் இருக்கும். தொடர் ஹவுஸ் புல் காட்சிகளுக்கு repeat audience factor-ம் தேவை.

1971 டிசம்பரில் ஒரு தாய் மக்கள் நியூசினிமாவில் வெளியானது. 1966 முதல் தயாரிப்பில் இருந்த படம் என்பதனாலும் படத்தைப் பற்றிய அபிப்பிராயம் சரியான முறையில் அமையாததாலும் படம் முதல் வார சனிக்கிழமை காலைக்காட்சியே அரங்கு நிறையாமல் போனது. இப்படி 1971 முடிவிற்கு வரும்போது அதற்கு முந்தைய வருடமான 1970 இறுதியில் தொடர் ஹவுஸ் புல் காட்சிகளைப் பொறுத்தவரை நாம் சந்தோஷமாக இருந்தோம். அவர்களுக்கு அந்த மகிழ்ச்சி இல்லை. 1971 இறுதியில் நிலைமை அப்படியே மாறியது. 1971-ல் ஹாட்ரிக் அடித்திருக்கலாமே, விட்டு விட்டோமே என்ற வருத்தம் இருந்தாலும் 1972- ஐ ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம்.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
18th July 2014, 04:07 PM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

கடந்த பதிவின் இறுதி பகுதி.

இப்படி 1971 முடிவிற்கு வரும்போது அதற்கு முந்தைய வருடமான 1970 இறுதியில் தொடர் ஹவுஸ் புல் காட்சிகளைப் பொறுத்தவரை நாம் சந்தோஷமாக இருந்தோம். அவர்களுக்கு அந்த மகிழ்ச்சி இல்லை. 1971 இறுதியில் நிலைமை அப்படியே மாறியது. 1971-ல் ஹாட்ரிக் அடித்திருக்கலாமே, விட்டு விட்டோமே என்ற வருத்தம் இருந்தாலும் 1972- ஐ ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம்.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

1972 பிறந்தது. முதல் படமாக ஸ்டைல் சக்கரவர்த்தி ராஜா ஜனவரி 26 அன்று திரையரங்குகளுக்கு விஜயம் செய்தார். மதுரையில் சென்ட்ரலில் வெளியான படத்தின் ஓபனிங் ஷோ பற்றி ஏற்கனவே எழுதி விட்டேன். இனி இந்த முதல் படமே 100 காட்சிகள் தொடர் ஹவுஸ் புல் என்ற வெற்றி இலக்கை அடைய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஜனவரி 26 புதன்கிழமை. அன்று 4 காட்சிகள். படத்தின் excellent ரிப்போர்ட் பார்த்ததும் வேலை நாட்களாக இருந்தும் 27 மற்றும் 28 வியாழன், வெள்ளி தினங்களிலும் காலைக் காட்சி சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்டது. இதற்கு பிறகு வந்த சனி ஞாயிறு இரண்டையும் சேர்த்தால் ஆக முதல் 5 நாட்களில் நடைபெற்ற 20 காட்சிகளும் புல். ப்ளாக் டிக்கெட் heavy rate-ல் போனது. முதல் 15 நாட்களில் நடைபெற்ற 52 காட்சிகளும் புல். அதே வேகத்தில் முதல் 23 நாட்களில் நடைபெற்ற 78 காட்சிகளும் அரங்கு நிறைந்தது. 25-வது நாள் சனிக்கிழமை காலைக் காட்சிதான் சற்று கவலை தரக் கூடியதாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க 24-வது நாள் வெள்ளியன்று மதியக் காட்சியில் சவாலே சமாளி படத்திற்கு ஏற்பட்டது போல் ஒரு ஷாக் ஏற்பட்டது. ஸ்ரீதேவியில் நடந்தது போலவே எண்ணிகையில் வெகு குறைவான டிக்கெட்டுகள் மட்டும் மீதம் இருக்க தொடர் ஹவுஸ் புல் விட்டுப் போனது. இது ரசிகர்களை மிகவும் கோபத்துகுள்ளாகியது. மன்ற நிர்வாகிகள் அல்லது ரசிகர்கள் அரங்கின் வெளியே இருந்திருந்தால் இந்த நிலைமையை தவிர்த்திருக்கலாம் என ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர்.

அந்த பக்கம் பிப்ரவரி 4 அன்று சிந்தாமணியில் சங்கே முழங்கு ரிலீஸ். 1972-ல் வெளியான எம்ஜிஆரின் முதல் மூன்று படங்களும் சிந்தாமணியில் வெளியாக இருந்த விஷயத்தை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.கடைசி நேரத்தில் நல்ல நேரம் படம் விநியோகஸ்தர் சேது பிலிம்ஸால் அரங்கு மாற்றப்பட்டதையும் குறித்திருக்கிறேன். இந்த சூழலில் வெளியான சங்கே முழங்கு ரசிகர்களிடம் போதுமான வரவேற்பை பெறவில்லை. படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்ததும் இதற்கு ஒரு காரணம். சொல்லப் போனால் 72-ல் வெளியான படத்தில் 1968-ல் நடைபெற்ற தென்காசி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் கதிரவன் வெற்றி பெற்ற செய்தியை தாங்கிய முரசொலி நாளிதழை எம்ஜிஆர் படித்துக் கொண்டிருப்பது போல் காட்சி வரும். இந்த படம் தொடர் ஹவுஸ் புல் ஆகவில்லை.

மார்ச் 10 அன்று நல்ல நேரம் மார்ச் 11 அன்று ஞான ஒளி ரிலீஸ். இரண்டு படங்களின் ரிப்போர்ட் பற்றி ஏற்கனவே பேசினோம். தொடர் ஹவுஸ் புல் காட்சிகளை பொறுத்தவரை ஞான ஒளி மற்றொரு பாபு என்றே சொல்லலாம். அதாவது உணர்வுபூர்வமான roller coaster ride. இதற்கு repeat ஆடியன்ஸ் factor ஒரு முக்கியமான காரணி. அதையும் தாண்டிய ஒரு ரெஸ்பான்ஸ் படத்திற்கு கிடைத்து தொடர் ஹவுஸ் புல் ஆகிக் கொண்டிருக்கும் போது இரண்டாம் வாரம் என நினைக்கிறேன். வியாழன் அல்லது வெள்ளி ஏதோ ஒரு விசேஷ நாள் வரவே அதற்காக அன்றைய தினம் சிறப்புக் காட்சியாக காலைக் காட்சி போடப்பட்டது. அது தொடர் ஹவுஸ் புல் காட்சிகளுக்கு வினையாக வந்தது. நல்ல நேரம் படத்தைப் பொறுத்தவரை அலங்கார் மற்றும் மூவிலாண்ட் திரையரங்குகளில் வெளியாகி இரண்டிலும் சேர்த்து 100 காட்சிகள் ஹவுஸ் புல் ஆனது என்று ஞாபகம்.

இத்தகைய பின்புலத்தில்தான் பட்டிக்காட பட்டணமா வெளியானது. தொடர்ந்து 115 காட்சிகள் அரங்கு நிறைந்து ஓடிக் கொண்டிருக்கிறது. நீண்ட பிளாஷ் பாஃக்கை முடித்து மீண்டும் 1972 ஜூன் 10-ந் தேதிக்கு வருவோம்.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
22nd July 2014, 11:59 PM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

கடந்த பதிவின் இறுதி பகுதி.

இத்தகைய பின்புலத்தில்தான் பட்டிக்காடா பட்டணமா வெளியானது. தொடர்ந்து 115 காட்சிகள் அரங்கு நிறைந்து ஓடிக் கொண்டிருக்கிறது. நீண்ட பிளாஷ் பாஃக்கை முடித்து மீண்டும் 1972 ஜூன் 10-ந் தேதிக்கு வருவோம்

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

அதற்கு முதல் நாள் வெளியான நான் ஏன் பிறந்தேன் படத்திற்கு divided ரிப்போர்ட். ஆனால் நிறைய ரசிகர்களுக்கு ஏமாற்றம் என்று செய்தி வந்தது. அதற்கு ஒரு முக்கிய காரணம், படத்தின் முதல் காட்சி ஓடிக் கொண்டிருக்கும் ட்ரெயின் அதன் மேல் போடப்படும் டைட்டில்ஸ். அடுத்த காட்சி ரயிலில் இருந்து இறங்கும் எம்ஜிஆர் பாடும் நான் ஏன் பிறந்தேன் என்ற பாடல். அது முடிந்து வீட்டிற்கு வந்து வாசல் கேட் திறக்கும் எம்ஜிஆரைப் பார்த்து அப்பா என்று ஓடி வந்து நிற்கும் பையன். இது ரசிகர்களை upset செய்தது. இதற்கு முன்பும் எம்ஜிஆர் குழந்தைக்கு தந்தையாக நடித்திருக்கிறார். ஆனால் அவற்றில் (வேட்டைக்காரன், பணம் படைத்தவன், நல்ல நேரம் போன்ற சில) இடைவேளைக்கு பிறகோ அல்லது கடைசி ஒரு மணி நேரமோ என்ற வகையில்தான் இருந்ததே தவிர படம் ஆரம்பம் முதலே ஒரு பையனுக்கு தந்தையாக நடித்தது எனக்கு தெரிந்த வரை இது ஒன்றுதான். சண்டைக் காட்சிகள் எல்லாம் இருந்த போதும் படம் குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கலைப் பற்றி பேசியதால் படம் ரசிகர்களின் விருப்ப படமாக வரவில்லை. இந்த ரிப்போர்ட் முதல் நாள் மாலையே எங்களுக்கு வந்து விட்டது.

மறுநாள் ஜூன் 10 சனிக்கிழமை காலை. எனக்கு ஒரு சிறப்பு வகுப்பு இருந்தது. அதற்காக காலையில் திண்டுக்கல் ரோடு வழியாக சென்று கொண்டிருக்கும் போது (என் கஸினும் என்னுடன் வந்துக் கொண்டிருந்தான்) வழியில் வைத்து மதுரை மாநகர் எம்ஜிஆர் மற்ற பொறுப்பாளர் C.தங்கம் அவர்களை பார்த்தோம். அவர் எங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர். இவரைப் பற்றி சொல்ல வேண்டும். ஆனால் அதற்கு மீண்டும் ஒரு பிளாஷ் பாஃக் போக வேண்டும் என்பதால் அதை பின்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். எம்ஜிஆர் ரசிகர் என்றால் சிவாஜி ரசிகர்களை எதிரிகளாகவும் ஜென்ம விரோதிகளாகவும் பார்க்க வேண்டும் என்று சொல்லி தரும் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த நட்புணர்வுடன் பழக கூடியவர். நாங்கள் வயதில் சிறியவர்களாக இருந்த போதும் மரியாதை கொடுத்து பழகுவார்.

dig

<இன்றைய காலத்தில் எம்ஜிஆர் விசுவாசிகளுக்கு ஆளும் கட்சியில் மதிப்பில்லை, பதவியில்லை என்று நண்பர் வினோத் போன்றவர்கள் அடிக்கடி குறைப்பட்டுக் கொள்வார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்திலேயே அவருக்கு விசுவாசமாக இருந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள், sideline செய்யப்பட்டார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை. அதற்கு ஒரு உதாரணம் C.தங்கம். ஆனானப்பட்ட KAK, SDS போன்றவர்களே எம்ஜிஆரால் ஒதுக்கப்பட்டனர் எனும்போது இந்த தங்கம் எல்லாம் எம்மாத்திரம்?>

end dig

தங்கம் அவர்களிடம் படத்தைப் பற்றி விசாரித்தோம். அவர் எப்போதும் diplomatic-ஆக பதில் சொல்லுவார். நன்றாக இருக்கிறது என்றார். ரசிகர்களின் மனக்குறையைப் பற்றி கேட்டதற்கு அப்படி ஒரு கருத்து இருப்பது உண்மைதான். ஆனாலும் ஓகே என்றார். அவரிடமிருந்து விடை பெற்று நான் பயிற்சி வகுப்புக்கு போய் விட என் கசின் அவன் வேலையை பார்க்க போய் விட்டான். வகுப்பு பத்து மணிக்கு முடிந்ததும் மீண்டும் திண்டுக்கல் ரோடு வழியாக வராமல் மேல மாசி வீதி சென்று டவுன் ஹால் ரோடு உள்ளே நுழைந்து சென்ட்ரல் தியேட்டர் வாசலை அடைந்தேன். மணி 10.30யை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

அங்கே காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. சரியான கூட்டம். நான் செல்லும் போதே 45 p, 75 p, 85 p, Re 1.20 p வரை அனைத்தும் புல். வாசலுக்கு போய் சேர்ந்தவுடன் Re 1.80 p இடம் இல்லை என்ற போர்டு மாட்டப்படுகிறது. அதன் பின் ஒரு ஐந்து நிமிடந்தான். Rs 2.70 p இன்னும் எத்தனை டிக்கெட் பாக்கி இருக்கிறது என்று ரசிகர்கள் பேசிக் கொண்டிருந்தனர் வெளியே கூடி நின்ற ரசிகர்களிடமிருந்து சட்டென்று ஒரு பெருத்த ஆரவாரம் மற்றும் கைதட்டல்கள் காதை அடைக்க ஹவுஸ் புல் இடம் இல்லை என்ற போர்டு தியேட்டர் கேட்டில் மாட்டப்பட அந்த கணத்தில் அங்கே ஒரு புதிய சாதனை சரித்திரம் எழுதப்பட்டது. தொடர்ந்து 116-வது காட்சி அரங்கு நிறைந்து முந்தைய ரிகார்ட் முறியடிக்கப்பட்டது. 1000 வாலா 5000 வாலா சரங்கள் சரமாரியாக வெடித்துச் சிதற தியேட்டர் வாசலில் இருந்த விளக்கு கம்பத்தில் கட்டப்பட்டிருந்த தட்டியில் தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் எத்தனை என்பதை தெரிவிக்கும் வண்ணம் ஒட்டபட்டிருந்த பேப்பர் ஷீட்டில் 116 என்ற எண்கள் பதிக்கப்பட்டன.

அன்று நடைபெற்ற அனைத்து காட்சிகளும் அரங்கு நிறைந்தது. மறு நாளும் அதற்கு அடுத்த நாளும் அரங்கு நிறைந்து தொடர் ஹவுஸ் புல் காட்சிகள் 125-ஐ கடந்தன. ஜூன் 13 செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்ற 129 காட்சிகளும் புல் ஆனது. 40-வது நாள் மாட்னி காட்சியில் தொடர் ஹவுஸ் புல் விட்டுப் போனது.

மதுரை மாநகரின் 83 வருட திரைப்பட வரலாற்றில் தான் நடித்த கருப்பு வெள்ளை படங்கள், ஒன்றல்ல இரண்டல்ல மூன்று கருப்பு வெள்ளைப் படங்கள் தொடர்ந்து 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைவது என்ற சாதனையை செய்துக் காட்டிய ஒரே நாயக நடிகன் நமது நடிகர் திலகம் மட்டுமே.

சாதனை என்றால் எந்தக் காலத்திலும் நிலைத்து நிற்பதுதான் சாதனை. மதுரை மாநகரை பொறுத்தவரை அன்றும் இன்றும் என்றும் யாராலும் முறியடிக்க முடியாத ஒரு டஜன் சாதனைகளுக்கு சொந்தக்காரர் நடிகர் திலகம். அவற்றைப் பற்றி ஏற்கனவே இந்த திரியில் பேசியிருக்கிறோம். அவற்றுள் ஒன்றுதான் இந்த கருப்பு வெள்ளைப் படங்களின் தொடர் ஹவுஸ் புல் சாதனைகள்.

பட்டிக்காடா பட்டணமா இப்படி வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருக்க அடுத்து வரப் போகும் படங்களின் ரிலீஸ் தேதி பற்றிய சர்ச்சைகளும் ஆரம்பித்தன.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
25th July 2014, 12:39 AM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

கடந்த பதிவின் இறுதி பகுதி.

பட்டிக்காடா பட்டணமா இப்படி வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருக்க அடுத்து வரப் போகும் படங்களின் ரிலீஸ் தேதி பற்றிய சர்ச்சைகளும் ஆரம்பித்தன.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

பட்டிக்காடா பட்டணமா வெளி வருவதற்கு முன்பு அடுத்து வெளிவரப் போகும் நடிகர் திலகத்தின் படங்கள் பின் வரும் தேதிகளில் ரிலீஸ் செய்யும் வண்ணம் chart செய்யப்பட்டிருந்தது. தர்மம் எங்கே அடுத்த ரிலீஸ் ஆக அறிவிக்கப்பட்டு ஜூலை 1-ந் தேதி வெளிவரும் என தகவல். அதற்கு அடுத்தது தவப்புதல்வன். இதற்கு இரண்டு தேதிகள் சொல்லப்பட்டிருந்தன. ஒன்று ஆகஸ்ட் 26 அல்லது செப்டம்பர் 9 என்று. வசந்த மாளிகை தீபாவளி நவம்பர் 4-ந் தேதி என்று முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் பட்டிக்காடா பட்டணமாவின் இமாலய வெற்றி மேற்சொன்ன ரிலீஸ் தேதிகளை எல்லாம் புரட்டிப் போட்டது. சென்னையைப் பொறுத்தவரை முதலில் சாந்தியில்தான் தர்மம் எங்கே வெளியாவதாக இருந்தது. ஆனால் பட்டிக்காடா பட்டணமாவின் வெற்றியைப் பார்த்தவுடன் அதை சாந்தியிலிருந்து மாற்றுவது இயலாத காரியம் என்று தெரிந்தவுடன் வேறு தியேட்டர் தேடும் முயற்சிகள் துவங்கின. மவுண்ட் ரோடு நேரடி தியேட்டர்கள் எல்லாம் book ஆகி இருக்க மவுண்ட் ரோடின் அருகில் GP ரோட்டில் அமைந்திருக்க கூடிய ஓடியன் தேர்வு செய்யப்பட்டது. இதன் காரணமாகவும் பட்டிக்காடா பட்டணமாவிற்கு சற்று கூடுதல் இடைவெளி கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினாலும் 56 நாட்கள் இடைவெளி 70 நாட்களாக மாற்றப்பட்டு தர்மம் எங்கே ஜூலை 15-ந் தேதி ரிலீஸ் என்று முடிவு செய்யப்பட்டது. மதுரை ஸ்ரீதேவியில் படம் ரிலீஸ். தவப்புதல்வன் செப் 9 என்றும் மாளிகை தீபாவளி என்றும் முடிவு செய்யப்பட்டு பாலாஜியின் நீதி 1973 ஜனவரி 26 என்று தீர்மானிக்கப்பட்டது.

ஜூன் 18 அன்று ஞான ஒளி 100 நாட்களை நிறைவு செய்து சென்னையில் தொடர்ந்து ஹாட்ரிக் 100 நாள் படங்களை கொடுத்த பெருமை மீண்டும் நடிகர் திலகத்திற்கு கிடைத்தது. கிட்டத்தட்ட 6,7 தியேட்டர்களில் 100 நாட்களை கடந்திருக்க வேண்டிய ஞான ஒளி பற்பல சூழ்ச்சி சூழல் காரணமாக நூலிழையில் 5,6 தியேட்டர்களை தவற விட்டது. பிளாசாவில் 100 நாட்களை கடந்தது.

இந்த நேரத்தில் தமிழக அரசியல் வானிலும் போராட்டங்களும் மாற்றத்திற்கான அறிகுறிகளும் தோன்ற ஆரம்பித்தன.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
28th August 2014, 11:57 PM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

கடந்த பதிவின் இறுதி பகுதி.

இந்த நேரத்தில் தமிழக அரசியல் வானிலும் போராட்டங்களும் மாற்றத்திற்கான அறிகுறிகளும் தோன்ற ஆரம்பித்தன.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

தவிர்க்க முடியாத பல வேலைகளினால் இந்த தொடர் நினைவலைகளை பதிவு செய்யும் பணியில் சிறிது தொய்வு. வாசகர்கள் மன்னிக்கவும். சீரிய இடைவெளியில் இதை தொடர முயற்சிக்கிறேன்.

தமிழகத்திலே ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் 60-களின் இறுதியில் விவசாய போராட்டங்கள் ஆரம்பித்தன. குறிப்பாக குறைந்த அளவு நிலமும் பம்ப் செட்டும் வைத்திருந்த விவசாயிகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் இந்த போராட்டங்கள் துவங்கின. நாம் இப்போது கடந்து வந்துக் கொண்டிருக்கும் 1972-ல் அந்த போராட்டங்கள் குறிப்பாக கோவை மாவட்டத்தில் தீவிரமடைய துவங்கியது. நாராயணசுவாமி நாயுடு போன்று பிற்காலத்தில் விவசாய சங்க தலைவராக பிரபலமானவர்கள் அந்த 1972 போராட்டதின்போதுதான் தங்களை முன்னணி போராட்ட வீரனாக முன் நிறுத்திக் கொண்டனர். அன்று விவசாயிகள் தலைவராக இருந்தவர் சிவசாமி. ஜூன் முதல் வாரத்தில் (7-ந் தேதி என்று நினைவு) கோவை மாநகரில் மிகப் பெரிய காளை வண்டி போராட்டம் நடத்தினார்கள். முதல் நாளே பல சுற்றுவட்டார ஊர்களிலிருந்து வண்டிகளை கொண்டு வந்து இரவோடு இரவாக நகருக்குள்ளே நுழைந்து நகரையே ஆக்கிரமிப்பு செய்த விட்டனர். எந்த அளவிற்கு என்றால் மாவட்ட ஆட்சி தலைவரின் வாகனம் கூட அவரது அலுவலகத்திற்கு செல்ல முடியவில்லை. அவர் காரிலிருந்து இறங்கி நடந்தே அலுவலகம் சென்று அன்றைய முதல்வரோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அன்று அங்கே நிலவிய சூழலை பற்றி தகவல் தெரிவித்தார். பேச்சு வார்த்தை நடந்தும் முடிவு எட்டபப்டவில்லை. நாட்கள் செல்ல செல்ல போராட்டம் கடுமையாக பெருமாநல்லூர் என்ற ஊரில் காவல் துறை துப்பாக்கி சூடு நடத்த மூன்று பேர் உயிரிழந்தனர். இது தமிழகமெங்கும் கொந்தளிப்பான சூழலை உருவாக்கியது.

அதே நேரத்தில் அன்றைய ஆளும் கட்சியில் ஒரு பனிப் போர் ரூபம் கொண்டு பெரிதாவது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தது. அன்றைய முதல்வர் மு.க.வின் மூத்த மகன் மு.க.முத்துவை நாயகனாக்கி இரட்டை வேடங்கள கொடுத்து அஞ்சுகம் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பிள்ளையோ பிள்ளை என்ற படம் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் தயாராகி வெளியிடுவதற்கு ரெடியானது. 1971 அக்டோபரில் எம்ஜிஆர் கிளாப் அடித்து துவக்கி வைத்த படம் 1972 ஜூன் மாதம் 23 அன்று வெளியானது. படம் வெளியாவதற்கு முதல் நாள் தேவி பாரடைஸ் அரங்கில் பிரிமியர் ஷோ நடைபெற்றது. அந்த காட்சிக்கு வாலி அவர்களை உடன் அழைத்துக் கொண்டு வந்த எம்ஜிஆருக்கு காரை விட்டு கிழே இறங்கியதும் முதலில் கண்ணில் தென்பட்டது "அனைத்துலக மு.க.முத்து ரசிகர் மன்றம் உங்களை அன்புடன் வரவேற்கிறது" என்ற பானர்தான். அதை பார்த்துவிட்டு உள்ளே போனவர் மு.க.முத்துவை வாழ்த்திவிட்டு [என்னை எங்க வீட்டு பிள்ளை என்று தமிழக தாய்மார்கள் கூறுவார்கள். முத்து நம்ம வீட்டு பிள்ளை என்று பெயர் பெற வேண்டும்] படம் முடிந்து வீட்டிற்கு செல்லும்போது கூடவே வந்த வாலியிடம் தன் கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். மூன்று தமிழும் மு.க.முத்துவிடம்தான் தோன்றியதா என்று கோவத்தோடு கேட்ட எம்ஜிஆரை சமாதானப்படுத்த சிரமப்பட்டு போனதை வாலி ஆவர்கள் தன் சுய சரிதையான நானும் இந்த நூற்றாண்டும் தொடரில் பதிவு செய்திருக்கிறார்.

விவசாயிகள் போராட்டம் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அடுத்த கட்டதிற்கு நகர ஆரம்பித்தபோது அதற்கு ஆதரவாக பெருந்தலைவர் களமிறங்கினார். கட்டணம் குறைக்கப்பட வேண்டும், துப்பாக்கி சூட்டிற்கு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் உயிரிழந்த விவசாயிகள் குடும்பங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது ஸ்தாபன காங்கிரஸ். [1972 ஜூலை 5-ந் தேதி வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாக நினைவு]

இதன் நடுவில் ஜூலை 15 அன்று வெளியிடுவதற்காக தர்மம் எங்கே தயாராகிக் கொண்டிருந்தது. சொன்னது போல் ஞான ஒளி 100 நாட்களை நிறைவு செய்தது. பட்டிக்காடா பட்டணமா வெளியான அனைத்து ஊர்களிலும் 50-வது நாளை கடந்து ஓடிக் கொண்டிருந்தது. அரசியல் ஒரு பக்கம் சூடு என்றால் தொடர் வெற்றிகளும் வெளியாக போகும் படங்களின் எதிர்பார்ப்பும் மற்றொரு பக்கம் சூட்டை கிளப்பிக் கொண்டிருந்தது.

(தொடரும்)

அன்புடன்

mr_karthik
31st August 2014, 02:27 PM
டியர் முரளி சார்,

ஒவ்வொரு அத்தியாயத்தையும் சுறுசுறுப்பான தொடர் நாவலுக்குரிய சஸ்பென்ஸுடன் நிறுத்துகிறீர்கள். வார இதழ்களிலாவது 'சரி, அடுத்தவாரம் சஸ்பென்ஸ் அவிழ்ந்துவிடும்' என்று எதிர்பார்க்கலாம். ஆனால் தங்களின் அடுத்த பதிவு எப்போது வருமோ என்பதேகூட ஒரு சஸ்பென்ஸ்தான்.

நமக்குப்பிடித்த தர்மம் எங்கே படம் வரும்போதுதானா தமிழ்நாட்டில் இவ்வளவு போராட்டங்களும், அரசியல் மாற்றங்களும் நடக்க வேண்டும்?. முதல்நாள் ரிசர்வேஷன் கிடைக்காமல் ஆனால் எப்படியும் முதல்நாள் பார்த்தே தீரவேண்டும் என்ற ஆர்வத்தில் என் வாழ்நாளிலேயே முதல்முறையாக மகாராணி தியேட்டரில் பிளாக்கில் டிக்கட் வாங்கி பார்த்த படம் தர்மம் எங்கே. என்னைப்பொருத்தவரை பிளாக்கில் டிக்கட் வாங்கினாலும் இன்றுவரை அதற்கு தகுதியான படம்தான் 'தர்மம் எங்கே'. புரட்சி வீரன் வரிசையில் சண்டைக்காட்சிகளைப் பொருத்தவரை சிவந்த மண்ணைவிட சிறப்பான படம். சிறையில் அந்த மாமிசமலை முரடன்களோடு போடும் அந்த சண்டைக்கே கொடுத்த காசு செரித்தது. (அவ்விரண்டு படங்களைப்பற்றிய ஒப்பீட்டு பதிவு ஒன்றை இட வேண்டும் என்ற நீண்ட நாள் ஆவல் பெண்டிங்காக இருக்கிறது).

அடுத்த அத்தியாயத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்....

Murali Srinivas
1st September 2014, 11:39 PM
டியர் முரளி சார்,

ஒவ்வொரு அத்தியாயத்தையும் சுறுசுறுப்பான தொடர் நாவலுக்குரிய சஸ்பென்ஸுடன் நிறுத்துகிறீர்கள். வார இதழ்களிலாவது 'சரி, அடுத்தவாரம் சஸ்பென்ஸ் அவிழ்ந்துவிடும்' என்று எதிர்பார்க்கலாம். ஆனால் தங்களின் அடுத்த பதிவு எப்போது வருமோ என்பதேகூட ஒரு சஸ்பென்ஸ்தான்.

நமக்குப்பிடித்த தர்மம் எங்கே படம் வரும்போதுதானா தமிழ்நாட்டில் இவ்வளவு போராட்டங்களும், அரசியல் மாற்றங்களும் நடக்க வேண்டும்?. முதல்நாள் ரிசர்வேஷன் கிடைக்காமல் ஆனால் எப்படியும் முதல்நாள் பார்த்தே தீரவேண்டும் என்ற ஆர்வத்தில் என் வாழ்நாளிலேயே முதல்முறையாக மகாராணி தியேட்டரில் பிளாக்கில் டிக்கட் வாங்கி பார்த்த படம் தர்மம் எங்கே. என்னைப்பொருத்தவரை பிளாக்கில் டிக்கட் வாங்கினாலும் இன்றுவரை அதற்கு தகுதியான படம்தான் 'தர்மம் எங்கே'. புரட்சி வீரன் வரிசையில் சண்டைக்காட்சிகளைப் பொருத்தவரை சிவந்த மண்ணைவிட சிறப்பான படம். சிறையில் அந்த மாமிசமலை முரடன்களோடு போடும் அந்த சண்டைக்கே கொடுத்த காசு செரித்தது. (அவ்விரண்டு படங்களைப்பற்றிய ஒப்பீட்டு பதிவு ஒன்றை இட வேண்டும் என்ற நீண்ட நாள் ஆவல் பெண்டிங்காக இருக்கிறது).

அடுத்த அத்தியாயத்தை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்....

கார்த்திக் சார்,

உங்கள் ஆதங்கம் புரிகிறது. சஸ்பென்ஸ் வைக்க வேண்டும் என்றோ அல்லது எப்போது அடுத்த பகுதி வரும் என்று எதிர்பார்க்க வைப்பதற்கோ நான் அப்படி நிறுத்துவதில்லை. முதலில் ஓபனிங் ஷோ அல்லது ஓபனிங் டே போன படங்களைப் பற்றி மட்டுமே எழுத ஆரம்பித்த நான் பின் அன்றைய காலகட்டத்தில் வெளியான அனைத்து நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றியும் எழுதலாமே என்ற எண்ணம் தோன்றியதும் அதையொட்டி அன்றைய தமிழகத்தில் நடந்த நிகழ்வுகளைப் பற்றியும் பகிர்ந்து கொள்ளலாமே என்ற அடிப்படையிலும் இதை விவரித்து எழுத ஆரம்பித்தேன்.

ஏதேனும் டைரியைப் பார்த்தோ அல்லது அன்றைய நாளிதழ்களின் நகல்களைப் பார்த்து எழுதுவதாக இருந்தால் பிரச்சனையில்லை. அப்படி எதுவும் என் கைவசம் இல்லை. ஆகையால் என் ஞாபகத்தில் இருக்கும் நினைவுகளின் அடிப்படையில் எழுத வேண்டும் என்கின்றபோது நமது பதிவில் தவறுகள் ஏதும் நிகழ்ந்து விடக் கூடாதே என்று பலமுறை யோசித்து எழுத வேண்டியிருப்பதால் இடைவெளி விழுந்து விடுகிறது. அதை தவிர்க்க முயற்சி செய்கிறேன்.

உங்கள் தர்மம் எங்கே பதிவை படிக்க ஆவலுடன் காத்திருக்கும்

அன்புடன்

Murali Srinivas
1st September 2014, 11:48 PM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

கடந்த பதிவின் இறுதி பகுதி.

அரசியல் ஒரு பக்கம் சூடு என்றால் தொடர் வெற்றிகளும் வெளியாக போகும் படங்களின் எதிர்பார்ப்பும் மற்றொரு பக்கம் சூட்டை கிளப்பிக் கொண்டிருந்தது.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

தர்மம் எங்கே திரைப்படம் பெரிய அளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். தெய்வமகன் வெளியாகி மூன்று வருட இடைவெளிக்கு பின் சாந்தி பிலிம்ஸ் தயாரித்த படம். அதே நாயகி அதே வில்லன் அதே இயக்குனர் என்ற combination. அதையெல்லாம் விட ஒரு period பிலிம் என்பது ஒரு எதிர்பார்ப்பை தூண்டியிருந்தது. படத்திற்கு வந்த விளம்பரங்கள்.பத்திரிக்கைகளில் வெளியான ஸ்டில்ஸ் அதிலும் மதி ஒளி தர்மம் எங்கே சிறப்பு மலராக வெளியிட்ட இதழில் அச்சாகியிருந்த சில புகைப்படங்கள் ரசிகர்களின் ஆவலை தூண்டியிருந்தன.

எல்லா இடங்களிலும் இதை பற்றிய பேச்சு. அந்த கல்வியாண்டில் ஸ்கூல் மாறி விட்ட பழைய ஸ்கூல் நண்பன் ஒருவனை சந்தித்தேன். அவன் வீட்டிற்கு சென்றால் அங்கே அவனது அண்ணன் தர்மம் எங்கே பற்றி எதிர்பார்ப்போடு பேசுகிறான். நாங்கள் மட்டுமல்ல பலரும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது.

கடந்த பதிவில் நான் குறிப்பிட்ட ஒரு நாள் வேலை நிறுத்தத்தை முறியடிக்க அரசாங்கம் முழு முனைப்புடன் வேலை செய்தது. அன்றைய தினம் திண்டுக்கல் ரோடு, மேலமாசி வீதி போன்ற இடங்களில் பூட்டிக் கிடந்த கடைகளை திறக்க சொல்லி ஆளும் கட்சியினர் கடை உரிமையாளர்களை மிரட்டியதை நானே நேரில் பார்த்தேன். போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினால் குண்டுகள் பாயாமல் பூமாரியா பெய்யும் போன்ற சில கமன்ட்கள் ஆளும் கட்சியின் முச்சிய தரப்பினரிடமிருந்து வந்தது. ஆனால் ஒரு விஷயம் உறுதியாக தெரிய ஆரம்பித்தது. அதுதான் பொது மக்கள் ஆளும் கட்சியின் மேல் கோவம் கொள்ள ஆரம்பித்து விட்டான்ர் என்ற உண்மை.

அறிவித்தபடியே தர்மம் எங்கே ஜூலை 15-ந் தேதி சனிக்கிழமை அன்று வெளியானது. மதுரையில் ஸ்ரீதேவியில் படம் ரிலீஸ். ரிலீசிற்கு முதல் நாளே தேவியில் கூட்டம் கூட ஆரம்பித்து விட்டது. படத்தைப் பற்றிய செய்திகளும் தமிழகமெங்கும் நடிகர் திலகத்தின் படங்கள் வீறு நடை போட்டு புதிய சாதனைகள் படைப்பதையும் அங்கே விவாதிக்கபட்டுக் கொண்டிருந்தன.

ரிலீசன்று முழு பக்க விளம்பரம். காலையில் பார்த்தவுடன் படம் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகமானது. ஆனால் ஸ்கூல் இருந்த காரணத்தினால் போக முடியவில்லை. வழக்கம் போல் என் கசின் அவன் ஓபனிங் ஷோ பார்பதற்கு ஏற்பாடு செய்து விட்டான். என்னை மாலைக்காட்சிக்கு கூட்டிப் போவதாக சொல்லியிருந்தான். அப்போது நான் படித்திருந்த ஸ்கூல் சனிக்கிழமைகளிலும் புல் ஸ்கூல். ஸ்கூல் விட்டு வந்தவுடன் போய் விடலாம். மாலை 6.30 மணிக்குதானே ஷோ என்று நினைத்துக் கொண்டே ஸ்கூல் போனேன். அங்கே போனாலும் மனதில் படம் பற்றிய நினைவுகளே சுற்றி சுற்றி வந்தன. மாலை வேக வேகமாக வீட்டிற்கு வருகிறேன். என் கஸினை காணோம். வீட்டில் கேட்டால் வெளியில் போயிருக்கிறான் என்று சொன்னார்கள். காத்திருந்து காத்திருந்து பார்த்தேன். அவன் வரவில்லை. அதுவரை படத்தைப் பற்றிய ரிப்போர்ட்-ம் கேட்க முடியவில்லை. இரவு 9.30 மணிக்கு வந்தான். படம் எப்படி இருக்கு? ரிப்போர்ட் எப்படி? ஓபனிங் ஷோ போனியா? ஈவ்னிங் ஷோ போகலாம்னு சொல்லிட்டு நீ பாட்டுக்கு போயிட்டியே? என்று கேள்விகளால் அவனை அரித்து எடுத்து விட்டேன்! படம் நல்லா இருக்கு. மத்ததை அப்புறம் சொல்லுறேன் என்றான். தாத்தா வீட்டில் இருந்தார் ஆகவே நிறைய பேச முடியாது.

மறுநாள் காலை 8 மணிக்கு நாங்கள் இரண்டு பேரும் கடைக்கு போவதற்காக வெளியே செல்கிறோம். முதலில் நகை கடை பஜார் என்றழைக்கப்படும் தெற்காவணி மூல வீதி சென்றோம். தெரு முழுக்க நகைக் கடைகள் நிறைந்து இருக்கும். அன்றைய நாளில் ஞாயிறன்று நகைக் கடைகள் கிடையாது. ஆகவே அங்கே ஞாயிறு வாசக சாலை செயலபடும். இது சிவாஜி ரசிகர்களால் நடத்தப்படுவது. அங்கே சந்தித்த சில ரசிகர்கள் படத்தைப் பற்றியும் முதல் நாள் ஓபனிங் ஷோவில் நடந்த அலப்பரை பற்றியும் பேசினார்கள். அங்கிருந்து மேலமாசி வீதி வாசக சாலைக்கு செல்கிறோம். அங்கேயும் அதே நிலை. இறுதியாக டவுன்ஹால் ரோடு தானப்ப முதலி தெரு சந்திப்பில் இயங்கி வந்த லால் பகதூர் சாஸ்திரி மன்றம் [உட்கிளை சிவாஜி மன்றம்] சென்றோம். அங்கே சென்றபோதுதான் படத்திற்கு முதல் நாள் வந்த கூட்டம் பற்றி தெரிந்தது. அது மட்டுமல்ல அன்று காலையில் தேவி டாக்கீஸ் சென்றிருந்த ரசிகர் அங்கே வந்து கூட்டம் அதிகமாக இருப்பதால் இன்று 5 காட்சிகள் போட்டு விட்டார்கள். காலையில் 9.15 மணிக்கு ஷோ ஆரம்பித்து விட்டது என்றார். இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு மந்திரித்து விட்டது போல் ஆகி விட்டது. எப்படியும் அன்று படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட ஆரம்பித்தது. இதற்கு நடுவில் கசின் ஓபனிங் ஷோ தவிர முதல் நாள் மாலைக் காட்சியும் பார்த்த விஷயம் வெளியில் வந்து விட்டது. எனக்கு சமாதானம் சொல்லும் விதமாக மாலை 5.30 மணிக்கே படம் போடப் போகிறார்கள் என்பதனால் நான் கிளம்பி விட்டேன் என்றான்.

வீட்டிற்கு போனவுடன் மாலைக் காட்சி போவதற்கு அடி போட ஆரம்பித்து விட்டேன். ஆனால் அனுமதி எளிதில் கிடைக்கவில்லை. இதற்கு நடுவில் படத்திற்கு பயங்கர கூட்டம் என்றும் போலீஸார் அடித்து விரட்டுகிறார்கள் என்ற செய்தியையும் எனது இளைய மாமன் என் தாயாரிடம் சொல்லி விட எனக்கு முட்டுக்கட்டை பலமானது. எந்த பிரச்சனையுமில்லை. எந்த வித சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல் சென்று வருகிறோம். வேண்டுமென்றால் மாமா எங்களுக்கு துணையாக வரட்டும் என்று கேட்டு அந்த நிபந்தனையின் பேரில் அனுமதி கிடைத்தது. நாங்கள் மாலை 5 மணிக்கே கிளம்ப இப்பவே எதற்கு என்று மாமா கேட்க இப்போது சென்றால்தான் டிக்கெட் கிடைக்கும் என்று நாங்கள் சொல்ல அப்படியானால் நீங்க இரண்டு பேரும் முன்னாடி போங்க. நான் அங்கே வந்துர்றேன் என்றார். நாங்கள் ஓட்டமும் நடையுமாய் தேவி டாக்கீஸ் சென்றோம். தானப்ப முதலி தெரு வழியாக வடக்கு மாசி வீதி கடந்து கிருஷ்ணாராயர் தெப்பக்குள தெரு தாண்டி B 4 போலீஸ் ஸ்டேஷன் பக்கத்து தெருவில் நுழைந்தபோதுதான் புரிந்தது கூட்டம் பற்றி பல ரசிகர்களும் சொன்னது எந்தளவிற்கு சரி என்று!

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
28th September 2014, 12:42 AM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

கடந்த பதிவின் இறுதி பகுதி.

தர்மம் எங்கே படத்திற்கு ஜூலை 16-ந் தேதி மாலைக் காட்சி போவதற்கு நாங்கள் ஓட்டமும் நடையுமாய் தேவி டாக்கீஸ் சென்றோம். தானப்ப முதலி தெரு வழியாக வடக்கு மாசி வீதி கடந்து கிருஷ்ணாராயர் தெப்பக்குள தெரு தாண்டி B 4 போலீஸ் ஸ்டேஷன் பக்கத்து தெருவில் நுழைந்தபோதுதான் புரிந்தது கூட்டம் பற்றி பல ரசிகர்களும் சொன்னது எந்தளவிற்கு சரி என்று!

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

நான் என் சிறு வயது முதல் பல நடிகர் திலகத்தின் படங்களுக்கு பெரிய அளவில் மக்கள் கூட்டத்தைப் பார்த்திருக்கின்றேன். பிரம்மாண்ட கூட்டத்தையும் பார்த்திருக்கிறேன். முதல் நாள் அல்லாமல் படம் வெளியான சில நாட்களுக்குள் பெரிய கூட்டம் என்று சொன்னால் அது தங்கத்தில் கர்ணன் படத்திற்கும் ஸ்ரீதேவியில் திருவிளையாடல் படத்திற்கும் பார்த்த கூட்டத்தை குறிப்பிட வேண்டும். அவை இரண்டுமே மிக சிறிய வயதில் பார்த்தது என்பதனால் நாங்கள் சென்றது எத்தனையாவது நாள் என்பது எனக்கு தெரியவில்லை.

ஆனால் ஓரளவிற்கு விவரம் தெரிய ஆரம்பித்தவுடன் முதல் நாள் கூட்டம் பார்த்தது என்றால் அது முதன் முதலில் 1967 நவம்பர் 1 தீபாவளி அன்று சென்ட்ரலில் ஊட்டி வரை உறவு படத்திற்கு பார்த்த கூட்டம்தான். இப்போதும் நினைவிருக்கிறது. யாரோ உறவினர்கள் அந்த தீபாவளிக்கு வந்திருந்ததால் ஒரு சினிமாவிற்கு போவோம் என்ற முறையில் வீட்டிலிருந்து சென்ற படம் என்பது நினைவில் இருக்கிறது.[ஏன் என்றால் அதற்கு முன்போ அல்லது பின்போ முதல் நாள் படம் பார்க்க வீட்டில் பெற்றோருடன் போனதேயில்லை. பின்னாட்களில் கசினுடன் சேர்ந்து முதல் நாள் போனதுண்டு]. தாயாருடன் சென்றதால் [தந்தை மற்றும் ஆன் உறவினர்கள் வெளியில் நிற்க] சென்ட்ரல் உள்ளே போக முடிந்தது. ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. அப்போது பார்த்த கூட்டம் சரியான கூட்டம்.

அதன் பிறகு மதுரையில் பெரிய அளவில் வந்த முதல் நாள் கூட்டங்கள் என்று சொன்னால் தில்லானா, எங்க மாமா, சொர்க்கம், ராஜா, வசந்த மாளிகை, ராஜ ராஜ சோழன், எங்கள் தங்க ராஜா, கெளரவம், சிவகாமியின் செல்வன், தங்கபதக்கம், அவன்தான் மனிதன், அண்ணன் ஒரு கோவில் திரிசூலம் இவற்றையெல்லாம் குறிப்பிடலாம். ஆனால் எனக்கு தெரிந்தவரை அல்லது நான் பார்த்தவரை பிரம்மாணடமான பயங்கரமான கூட்டம் என்று சொன்னால் நான் இரண்டு படங்களைத்தான் குறிப்பிடுவேன். ஒன்று சிவந்த மண் மற்றொன்று தர்மம் எங்கே! மற்ற படங்களுக்கு வந்தது பெரிய கூட்டம். ஆனால் சிவந்த மண் மற்றும் தர்மம் எங்கே படத்திற்கு வந்ததோ பிரம்மாண்டத்தையும் தாண்டியது.

மதுரையில் ஸ்ரீதேவி திரையரங்கம் அமைந்திருந்த [ஆம், இப்போது அந்த அரங்கம் இல்லை. apartment ஆக மாறி விட்டது] தெருவிற்கு ஒர்க் ஷாப் ரோடு என்று பெயர். ஸ்ரீதேவி திரையரங்கம் அன்றைய நாட்களில் மதுரையில் ஏனைய அரங்குகளை விட [தங்கம் திரையரங்கை தவிர்த்து விட்டுப் பார்த்தால்] பெரிய வளாகத்தை கொண்டது. தெருவில் ஆரம்பித்தால் உள்ளே அரங்கம் அமைந்திருக்கும் இடம் வரை நல்ல விசாலமான ஏரியா. சைக்கிள் மற்றும் கார் பார்க்கிங் வரை செய்யலாம். இரு பக்கமும் நீளமான கம்பிகளுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் ticket counter வரிசை. உள்ளே பெண்களுக்கு என்று தனி counter என பலவேறு வசதிகள். நான் முன்னர் குறிப்பிட்டது போல் அவையெல்லாம் இடிக்கப்பட்டு குடியிருப்பு வளாகமாக மாறி விட்ட போதிலும் அந்த திரையரங்கை காண வேண்டுமென்றால் இயக்குனர் பார்த்திபன் இயக்கி வெளிவந்த ஹவுஸ் புல் [House Full] படத்தில் காணலாம். அந்த படம் முழுக்க ஸ்ரீதேவி திரையரங்கிலேதான் படமாக்கப்பட்டது.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
30th September 2014, 01:04 AM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

கடந்த பதிவின் இறுதி பகுதி.

நான் முன்னர் குறிப்பிட்டது போல் அவையெல்லாம் இடிக்கப்பட்டு ஸ்ரீதேவி திரையரங்கம் குடியிருப்பு வளாகமாக மாறி விட்ட போதிலும் அந்த திரையரங்கை காண வேண்டுமென்றால் இயக்குனர் பார்த்திபன் இயக்கி வெளிவந்த ஹவுஸ் புல் [House Full] படத்தில் காணலாம். அந்த படம் முழுக்க ஸ்ரீதேவி திரையரங்கிலேதான் படமாக்கப்பட்டது.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

தியேட்டரை ஒட்டி ஞாயிற்றுக்கிழமை சந்தை நடைபெறும் திலகர் திடல் அமைந்திருக்கும். தியேட்டரின் ஒரு புறத்தில் விபி சதுக்கம் என்ற இடமும் மற்றொரு பக்கம் ராஜா மில் பாலமும் அமைந்திருக்கும். நாங்கள் அன்று தர்மம் எங்கே படத்திற்கு செல்லும்போது கூட்டத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் தியேட்டருக்கு எதிரே அமைந்திருந்த தெருவில் பாதி தூரம் வரை மக்கள். ஒர்க் ஷாப் ரோட்டில் இந்த பக்கம் விபி சதுக்கம் வரை மக்கள் கூட்டம். அந்த பக்கம் அதே அளவிற்கு கூட்டம். அவ்வளவு பெரிய அரங்க வளாகமோ எள் போட்டால் எள் விழாது என்பது போல் பிதுங்கி வழிகிறது. எப்படியாவது டிக்கெட் வாங்கி விட மாட்டோமா என்று இரண்டு முறை உள்ளே போய் விட்டு வெளியே வருவதற்குள் உன் பாடு என் பாடு ஆகி விட்டது.

உள்ளே வரிசையில் நிற்கும் கூட்டம் நடுநடுவே ஆட்கள் உட்புக முயற்சிக்க அதன் காரணமாக வரிசை சிதற ஏற்கனவே பெருங்கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த காவல் துறையினர் லத்தியை சுழற்ற கூட்டம் சிதறி மக்கள் மெயின் ரோட்டிற்கு ஓடி வர அங்கே போக்குவரத்து ஸ்தம்பிக்க ஒரு கட்டத்தில் போலீசார் அந்த ரோட்டில் போக்குவரத்தை நிறுத்தி விட்டு மாற்று வழியில் திருப்பி விட்டனர். அதன் பிறகும் கூட்டத்தின் ஆவேசம் குறையாமல் வளாகத்துக்குள் செல்ல முயற்சிக்க மீண்டும் அங்கே தடியடி. டிக்கெட் ஏற்பாடு செய்வதாக உள்ளே சென்றிருந்த நண்பரை காணவில்லையே என்று நாங்கள் மீண்டும் உள்ளே செல்ல முயற்சிக்க அப்போது வரிசையில் நின்றிருந்த ஒரு சில ஆட்களின் நிலையை கண்டதும் மயக்கமே வந்து விட்டது. கால் முட்டியிலிருந்து ரத்தம் வழிந்தோட ஒருவர் நிற்க, லத்தி வீசியபோது கீழே விழுந்து கைகளில் காயத்தோடு இருவர் நிற்க எல்லாவற்றிருக்கும் மேலாக தலையிலிருந்து ரத்தம் வழிய அப்படியும் வரிசையை விட்டு விலகாமல் படம் பார்த்தே தீருவேன் என்று கூட வந்தவர்களுடன் வாதம் செய்துக் கொண்டிருந்த நபர். இது தவிர சட்டை கிழிந்தவர்கள், வேட்டி கிழிந்தவர்கள், சிதறி ஓடும்போது விட்டுப் போன செருப்புகள் ஆங்காங்கே கிடக்க இவை அனைத்தையும் தாண்டி படம் பார்க்க நின்ற அந்த மக்கள் வெள்ளத்தை இன்று வரை மறக்க முடியவில்லை. அதாவது நடிகர் திலகத்திற்காக எதையும் செய்ய தயாராக இருந்த கூட்டம் அது. அப்படிபட்ட ஒரு loyal crowd நடிகர் திலகத்திற்கு மதுரையில் இருந்தது. கால ஓட்டத்தின் சுழற்சியில் சிக்கினாலும் கூட இப்போதும் அந்த loyal crowd மதுரையில் நடிகர் திலகத்திற்கு இருக்கிறது என்பதுதான் நிஜம். இதற்கிடையில் எங்களுக்கு பின்னர் தியேட்டருக்கு வந்த என் மாமன் அந்த கூட்டத்தில் எங்களை தேடி கண்டுபிடிக்க முடியாமல் திரும்பி சென்றதை இரவு வீட்டிற்கு செல்லும்போது தெரிந்துக் கொண்டோம்.

அரங்க வளாகத்திற்கு வெளியே ஒரு பெருங்கூட்டம் நின்று அந்த வருடத்தில் வெளிவந்த படங்களின் சாதனைகள் பற்றியும் வெளிவரப் போகும் படங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்க என் கசின் எக்ஸ்ட்ரா டிக்கெட் வைத்திருந்த அறிமுகமான ஒரு ரசிகரிடம் கேட்க அவர் உடனே நீதான் ஏற்கனவே இரண்டு தடவை பார்த்து விட்டாயே உனக்கு எதற்கு? வேண்டுமென்றால் இந்த பையனுக்கு [என்னை சுட்டிக் காட்டி] தருகிறேன் என்று சொல்ல அவன் சின்ன பையன் அவனை தனியாக அனுப்ப முடியாது என்று என் கஸின் சொல்ல சரி இருக்கும் இந்த இரண்டு டிக்கெட்டுகளை வைத்துக் கொண்டு உள்ளே போய் விடுவோம். அங்கே எப்படியாவது தேற்றி விடுவோம் என சொல்லி கையில் வைத்திருக்கும் டிக்கெட்டுகள் மன்ற டோக்கன் என்பதால் அதற்குண்டான வரிசைக்கு போனால் அங்கேயும் கூட்டம் மென்னியை நெரிக்கிறது. நான் முன்னரே குறிப்பிட்டது போல் ஒரு நேரத்தில் ஒரு ஆள் மட்டுமே நகர்ந்து செல்ல முடியும் என்பது போன்ற அமைப்பு கொண்ட வரிசை. அந்த வரிசையில் ஒருவர் பின் ஒருவராக நிற்கும் போது கூட்டம் அப்படியே நெருக்க முதன் முறையாக நான் பயந்தேன். அதுவரை கூட்டத்தில் போகும்போது ஏற்படாத பயம் அப்போது ஏற்பட்டது. அந்த மூர்க்கத்தனமான நெருக்கலில் மூச்சு திணற நமக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயம் வந்தது. வேண்டாம் வெளியே போய் விடலாம் என்று பார்த்தால் நடுவில் மாட்டிக் கொண்டிருக்கிறோம், வரிசையை விட்டு வெளியே போக முடியாது எனபது புரிந்தது. நான் சிறுவன் என்பதால் எனக்கு முன்னும் பின்னும் உள்ளவர்கள் என்னை விட உயரம் என்பதால் ஏற்படும் இந்த சிக்கலை போக்க இரண்டு பக்கமும் இருந்த கம்பிகளின் மேல் கால் வைத்து மேலேறி கவுன்ட்டர் வரை அப்படியே முன்னேறினோம். கவுன்ட்டரில் இரண்டு டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்து மீண்டும் டிக்கெட் வேட்டையை தொடர்ந்தோம். பெண்கள் டிக்கெட், தியேட்டர் நிர்வாக அலுவலகம் ஒன்றையும் விடவில்லை. ஆனால் பலன் பூஜ்யம்.

இதற்கிடையில் படம் தொடங்குவதற்கான அறிகுறிகள் தென்பட அனைவரும் உள்ளே நுழையும் முயற்சியில் ஈடுபட்டனர். அன்று ஐந்து காட்சிகள் நடைபெற்றதாலும் மாலை மணி 6.30 மணிக்கு மேல் ஆகிவிட்டதாலும் நியூஸ் ரீல் மற்றும் விளம்பரங்கள் ஏதுமின்றி படம் நேரடியாக துவங்கும் என்று தியேட்டர் ஆட்கள் சொல்லிக் கொண்டிருக்க அது ஒரு பக்கம் ஆவலும் மறுபக்கம் டிக்கெட் கிடைக்கவில்லையே என்ற பதட்டமும் ஒரே நேரத்தில் ஏற்பட, இவ்வளவு முயற்சி எடுத்து இத்தனை தூரம் வந்து விட்டு டிக்கெட் கிடைக்காமல் போவதா என்ற ஏமாற்றம் மனதை பிசைய இருவரும் அலைகிறோம். எக்ஸ்ட்ரா டிக்கெட் கொடுத்த நண்பர் உள்ளே சீட் கிடைக்காது. ஆகவே நான் உள்ளே செல்கிறேன் என போய்விட அரங்கத்தினுள்ளேயிருந்து பயங்கர கைதட்டல் சத்தம் காதைப் பிளக்கிறது. படம் சென்சார் சான்றிதழ் காண்பிக்கிறார்கள். கிட்டத்தட்ட அழுகையே வந்து விட்டது. ஆபிஸ் ரூம் பக்கத்தில்தான் குளிர்பான தின்பண்ட கடை. அங்கே உள்ளே உட்கார்ந்திருந்த ஒருவர் எங்களைப் பார்த்துவிட்டு [வெகு நேரமாக எங்களை கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார்] டிக்கெட் வேண்டுமா என்று கேட்க அப்படியே நாங்கள் மலைத்துப் போக [சென்ட்ரல் சினிமாவில் பட்டிக்காடா பட்டணமாவிற்கு நடந்தது போல] தெரிந்த ஒருவர் டிக்கெட் வேண்டும் என்று சொல்லியிருந்தார். அவருக்காக எடுத்து வைத்தது. அவர் இந்த கூட்டத்தில் சிக்கி கொண்டார் போல, நீங்கள் வேண்டுமானால் வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்ல தெய்வமே என்று அவரை வணங்காத குறையாக அந்த டிக்கெட்டை வாங்கிக் கொண்டு டிக்கெட் எடுத்து உள்ளே நுழையும் இடத்தில டிக்கெட் கிழிக்கும் தியேட்டர் ஊழியர், ஒரு constable மற்றும் இரண்டு நபர்கள் நின்று எங்களையும் மற்றும் எங்கள் முன் உள்ளே செல்ல முயன்றவர்களையும் தடுக்கிறார்கள். காரணம் என்னவென்றால் படம் பார்க்க வந்த அந்த இரண்டு நபர்களில் ஒருவரின் கை கடிகாரம் தொலைந்து போய் விட்டதாம். ஆகவே ஒவ்வொருவரையும் சோதனை செய்தே உள்ளே அனுப்பிக் கொண்டிருக்க எங்களுக்கோ தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும் படம் ஓடிக் கொண்டிருக்கிறதே என்ற கவலை. ஒரு வழியாக சோதனை முடிந்து டிக்கெட் கிழிக்கப்பட்டு உள்ளே நுழைந்தால் காது செவிடாகும் வண்ணம் ஒரு வெங்காய வெடி வெடிக்க அந்த சத்தத்திற்கு இணையான கைதட்டலகளுடன் ஸ்க்ரீனில் நடிகர் திலகம் முதுகில் கூடையை மாட்டிக் கொண்டு அறிமுகமாகும் காட்சி.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
24th October 2014, 12:10 AM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

கடந்த பதிவின் இறுதி பகுதி

டிக்கெட் கிழிக்கப்பட்டு உள்ளே நுழைந்தால் காது செவிடாகும் வண்ணம் ஒரு வெங்காய வெடி வெடிக்க அந்த சத்தத்திற்கு இணையான கைதட்டலகளுடன் ஸ்க்ரீனில் நடிகர் திலகம் முதுகில் கூடையை மாட்டிக் கொண்டு அறிமுகமாகும் காட்சி.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

அரங்கத்தினுள்ளே நுழைந்து இடம் தேடினால் ஒரு காலி சேர் கூட கண்ணுக்கு தெரியவில்லை. பாடல் வேறு ஆரம்பித்து விட்டது. காதைப் பிளக்கும் அலப்பரை சத்தம். அந்த 90 பைசா வகுப்பின் முதல் வரிசையில் ஒரு காலி நாற்காலி தெரிய உடனே என்னை அங்கே உட்கார வைத்துவிட்டு என் கசின் பின்வரிசைக்கு போய் விட்டான். சிறிது நேரத்தில் உள்ளே வந்த மற்றொரு நபர் தம்பி கொஞ்சம் இடம் கொடுப்பா என்று சொல்லி நான் அமர்ந்திருந்த நாற்காலியில் அவரும் வந்து அமர்ந்து விட்டார்[ஆஹா இதற்கு என் கசினையே உட்கார சொல்லியிருக்கலாமே என்று தோன்றியது].

முதல் பாடலே நடிகர் திலகத்தின் ஸ்டைல் மற்றும் பாடல் வரிகளின் அர்த்தம், முத்துராமன் குமாரி பத்மினியின் காதல் காட்சி, ராஜபிரதிநிதியின் ஆட்கள் ஊருக்குள் கொள்ளையடிக்க வருதல் என்று பல சம்பவ கோர்வைகளின் சங்கமமாக அமைந்திருந்ததால் [முதல் காட்சியிலே கதை ஆரம்பித்து விடும்] இங்கே அலப்பரை அதிகமானது. அதிலும் கண்ணதாசனின் வரிகள்

மனிதனின் வாழ்க்கையில் நாணயம் இருந்தால் மனிதருள் மாணிக்கம் என்போம்

தன்னிகரிலா தலைவன் பிறப்பான் ஆயிரத்தில் ஒரு நாளே

என்ற வரிகளின் போது பெருந்தலைவரை வாழ்த்தி கோஷம் கிளம்பியது.

திறமை உள்ளவன் எங்கிருந்தாலும் தேசம் அவனிடம் ஓடும் என்ற வரியின்போதோ

அடுத்த வரிகளை கேட்கவே முடியாமல் அப்படி ஒரு சத்தம். அந்த சத்தம் சற்றே அடங்கவும்

தோட்டம் என்பது எனக்கே சொந்தம் என்பது சுயநலக் கூட்டம் என்ற வரி திரையில் ஒலிக்கவும் மீண்டும் பயங்கர கைத்தட்டல், கோஷம்.

அடுத்த சரணத்தில்

ஒருவன் புகழை ஒருவன் மறைத்து உயரும் வரலாறு இல்லை

என்ற வரிகளுக்கெல்லாம் தியேட்டர் உள்ளே எழுந்த கோஷம், கேட்ட கைதட்டல், ரசிகர்கள் எழுந்து ஆடியதை எல்லாம் எழுத வேறு புதிய வார்த்தைகள்தான் உருவாக்க வேண்டும்.

அதுவும் அந்த இறுதி சரணத்தை முடித்து பல்லவியைப் பாடிக் கொண்டே நடிகர் திலகம் நடந்து வரும் அந்த ஸ்டைல் [ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும்] என்னை சுற்றி இருந்தவர்கள் யாரும் சீட்டில் .உட்காரவேயில்லை.

குமாரி பத்மினியிடம் தவறாக நடக்க முயற்சிக்கும் தளபதியை முத்துராமன் கொல்வது, ஊர் மத்தியில் ஆட்களை கூட்டி வைத்து ராமதாஸ் கேள்வி கேட்கும்போது முத்துராமன் சட்டையில் படிந்திருக்கும் ரத்தக்கறையை மறைக்க சொல்லி நடிகர் திலகம் சுட்டிக் காட்டி விட்டுப் போவது, ராஜ பிரதிநிதியை சந்திக்கப் போய்விட்டு அங்கே ராமதாசை குற்றவாளி என்று சொல்லிவிட்டு திரும்ப உன் பெயர் என்ன என்று கேட்கும் நம்பியாரிடம் அப்படியே பக்கவாட்டில் திரும்பி சேகர் ராஜசேகர் என நடிகர் திலகம் சொல்லும்போதெல்லாம் ஒரே இடியோசைதான்.

அதன் பிறகு மீண்டும் நடிகர் திலகம் நம்பியார் சந்திக்கும் காட்சி. உங்கள் ஆட்கள் நாடு மக்கள் சுதந்திரம் தியாகம் என்று பேசுவார்கள். ஆனால் நாங்களோ சூழ்ச்சி வலை விரித்து நாட்டை வசப்படுத்தி விடுவோம் என்று நம்பியார் சொல்ல அதற்கு மக்கள் முன்பு போல் இல்லை. உங்களை இனம் கண்டுகொண்டு விட்டார்கள். உங்கள் ஆட்சி முடிவக்கு வரத்தான் போகிறது என்று நடிகர் திலகம் பதில் சொல்லும்போது அன்றைய நாளின் அரசியல் சூழலுக்கு ஏற்ப எழுதப்பட்ட வசனங்களுக்கு அமோக வரவேற்பு.

அடுத்து சிறைச்சாலை சண்டைக்கு தியேட்டர் அலறியது என்றால் அங்கேயிருந்து தப்பித்து நாடோடி கும்பலால் காப்பாற்றப்பட்டு கெட்டப் மாறி வரும்போது மீண்டும் அலப்பரை. தாயை பார்க்க வந்துவிட்டு தாய் இறந்துவிட வாய் விட்டு அழக் கூட முடியாமல் விம்முவார். அதகளமானது அரங்கம். அதே காட்சியில் தாய் இறப்பதற்கு முன் தாயை விட்டு விலகி நடக்க முயற்சிப்பார். அப்போது அவரின் தாய் சேகர் என்று ஈனக்குரலில் அழைக்க முகம் திரும்பாமல் காலை வளைத்து அவர் முதுகு காட்டி நிற்கும் போஸிற்கு பயங்கர அலம்பல். இதையெல்லாம் அன்று பார்த்தபோது [எங்கே பார்க்க விட்டார்கள்?] அவ்வளவு உன்னிப்பாக கவனிக்க முடியவில்லை. மீண்டும் படம் பார்த்தபோதுதான் எந்தெந்த காட்சிக்கு ஏன் அப்படி ஒரு அலப்பரை நடந்தது என புரிந்தது.

அடுத்து நாற்சந்தியில் வைத்து முத்துராமனியும் குமாரி பத்மினியையும் தூக்கிலிட முயற்சிக்கும்போது அந்த இடத்திற்கு வெள்ளை குதிரையில் சிவப்பு நிற உடையணிந்து வரும் நடிகர் திலகதைப் பார்த்ததும் ஆரம்பித்த கைதட்டல் அவர் மக்களிடையே பேசும் வசனங்களுக்குயெல்லாம் [குறிப்பாக இரண்டு முறை அவர் வெவ்வேறு modulation-ல் சொல்லும் இதே போல் இதே போல் என்ற வார்த்தை எல்லாம் பெரிதாக வரவேற்கப்பட்டன]. உடன் வந்த தர்மம் எங்கே பாடல் காட்சி, அதன் பிறகு ஆற்றின் கரையில் நடக்கும் சண்டைக் காட்சி. அதில் இரண்டு கைகளிலும் கத்தி பிடித்து சற்றே உயரமான மணல் திட்டிலிருந்து நடிகர் திலகம் குதிக்கும் காட்சியெல்லாம் ஆஹா ஓஹோ!

பிடித்து செல்லப்பட்ட ஊர் மக்களை விடுவிக்க ஒற்றை கண் தெருப் பாடகனாக வந்து பாடும் வீரமெனும் பாவைதனை கட்டிக் கொள்ளுங்கள் பாடலுக்கும் சரி பாடல் முடிவில் கிடாரின் பின்புறத்தில் துப்பாக்கியை மறைத்து வைத்து சுடும் ஸ்டைல் அதன் பிறகு அதே காட்சியில் பிச்சுவா கத்தி வீசும் வேகம், கை அசைவு. தொடர்ச்சியாக வரும் காட்சிகளை பார்க்க பார்க்க நிற்காமல் வரும் அலைகளைப் போல் கைதட்டல்கள் கோஷங்கள் எதிரொலித்துக் கொண்டேயிருந்தன.

மீண்டும் ஒரு முறை ஊர் மக்கள் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டு கோட்டைக்குள் கம்பங்களோடு சேர்த்து கட்டப்பட்டு உயிரோடு எரித்து கொல்லும்படி நம்பியார் உத்தரவிட கோட்டையை கைப்பற்றும் முயற்சியில் 5 பேர் போக வேண்டும் என முடிவு செய்வது அதற்கு சிவப்பு வண்ண அட்டையை வைத்திருப்பவர்கள்தான் போக வேண்டும் என்பது, செங்குத்தான மலையின் மீது கயிறை கட்டி ஏறுவது, மேலே ஏறி செல்லும் ஒவ்வொருவரும் சிப்பாயிடம் மாட்டிக் கொள்வது, தந்திரமாக அவனை வீழ்த்தி விட்டு மாளிகைக்குள் புகுந்து பின், நடிகர் திலகம் நம்பியார் போல் உடையணிந்து [பையில் அதற்கான ஆயத்த உடைகளை கொண்டு வந்திருப்பார்] சிப்பாய்களை கட்டளையிடுவது இப்படி படம் விறுவிறுப்பின் உச்சிக்கே போக அப்போது நம்பியார் அங்கே வந்து விடுவார்.

இருவரும் மெய்க்காப்பாளனிடம் தான்தான் உண்மையான ராஜ பிரதிநிதி என்று கூற அந்த கைகலப்பில் நடிகர் திலகம் வேடம் கலைந்து விட ராஜ பிரதிநிதியின் உடைகளை முற்றிலுமாக களைந்து விட்டு white and white-ல் நடிகர் திலகம் நின்று அங்கே சுவரில் மாட்டியிருக்கும் நீண்ட உடை வாளை எடுத்து நீட்டி காலை வளைத்து நின்று ஒரு போஸ் கொடுப்பார். அப்போது ஆரம்பித்தது இடியோசை. கத்தி சண்டையின் போது ஒரு கையை இடுப்பில் வைத்து காலால் வேகமான ஸ்டெப்ஸ் போட்டு வலது கையால் கத்தியை சுழற்றி சண்டை போடும்போதெல்லாம் வானம் இடிப்பட்டது பூமி பொடிப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு நிலை அது.

சண்டையில் தோற்று நம்பியார் ஆற்றில் குதித்து போய்விட கொடுங்கோல் ஆட்சி ஒழிந்து மக்கள் நடிகர் திலகத்தை தோளில் ஏற்றி அரியணையேற்றும் காட்சியோடு இடைவேளை. ஒரு சில இந்தியா பாகிஸ்தான் போட்டிகளின்போது the atmosphere was electric என்று எழுதுவார்கள். அதாவது அந்த இடத்தில வீசும் காற்றை தொட்டால் ஷாக் அடிக்கும் என்ற அர்த்தத்தில். அன்றைய தினம் மதுரை ஸ்ரீதேவி தியேட்டரில் அத்தகைய சுற்றுசூழல்தான் நிலவியது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

(தொடரும்)

அன்புடன்

RAGHAVENDRA
26th October 2014, 08:04 AM
முரளி சார்
தர்மம் எங்கே படத்தில் திரையரங்கு ஆரவாரம் அனைவருக்கும் அந்நாட்களில் பார்த்த ஞாபகத்தை வரவழைக்கும் வலிமை தங்கள் எழுத்துக்களுக்கு உள்ளது. மேலும் மேலும் தங்களிடமிருந்து எதிர்பார்க்க வைக்கும் ஆவலைத் தங்கள் எழுத்து தூண்டுகிறது.
காத்திருக்கிறோம் இன்னும் படிக்க..

RAGHAVENDRA
26th October 2014, 08:05 AM
நடிகர் திலகத்தின் திரைப்படங்களை திரையரங்குகளில் பார்த்த நினைவுகளைத் தட்டி எழுப்பும் இத்திரிக்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு பங்களிப்பாளருக்கும் உளமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும்.

RAGHAVENDRA
26th October 2014, 01:40 PM
Thanga Surangam banner placed at the Gemini corner. Due to Traffic jam that was caused by the onlookers, the banner was shifted to Shanti Theatre.

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpa1/t31.0-8/s720x720/10560523_811710562212951_2617347927690794034_o.jpg

Newspaper cutting courtesy my 40 years Shanti Theatre friend Mr. Anand

JamesFague
2nd November 2014, 02:15 PM
Courtesy: Mr Karthik old post

'ரமலான் ஈத்' பண்டிகையையொட்டி தாங்கள் பதித்திருந்த பதிவுகள் அனைத்தும் அருமையோ அருமை. குறிப்பாக 'பாவமன்னிப்பு' விளம்பரங்கள் இரண்டும் அட்டகாசம். (துவக்கி விட்டீர்கள், தொடர்ந்து அப்படத்தின் 50-வது நாள், 100-வது நாள், வெள்ளிவிழா விளம்பரங்கள் வரை, தங்களிடம் இருக்கும் பட்சத்தில், பதிவிட்டு அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்).

'கப்பலோட்டிய த்மிழன்' மறு வெளியீட்டு விளம்பரங்களும் அசத்தல் ஆவணங்கள். அப்படத்துக்கு 1976-ல் எமர்ஜென்ஸி காலத்தின்போதுதான் வரிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், அப்படத்தை முழு கட்டணத்திலேயே அரங்கு நிறைந்த காட்சியாக கண்டுகளித்த அனுபவம் எனக்கு.

1961 தீபாவளியன்று வெளியான இக்காவியம், அதன்பின்னர் என் நினைவுக்கெட்டிய காலம் வரை மறு வெளியீட்டுக்கு வராத நேரம். அந்த ஆண்டு வெளிவந்த மூன்று 'பா' வரிசைப் படங்களும் அடிக்கடி தியேட்டர்களில் திரையிடப்பட்டுக்கொண்டிருந்த போதிலும், ஏனோ கப்பலோட்டிய தமிழன் வரவில்லை. முதல் வெளியீட்டில் கிடைத்த ரிசல்ட்டைப்பார்த்து விநியோகஸ்தர்கள் பயந்தார்களோ என்னவோ தெரியவில்லை. அதன் காரணமாகவே இப்படத்தின் மீது அதிக ஆவலும் எதிர்பார்ப்பும் எகிறிப்போயிருந்தது.

இந்நிலையில் எனது பள்ளிமாணவப் பருவத்தின்போது 1972-ஜூன் மாதம் திடீரென்று தினத்தந்தியின் கடைசிப்பக்கத்தில் 'வெள்ளிக்கிழமை முதல் சித்ராவில்' என்று தலைப்பிட்டு கப்பலோட்டிய தமிழன் படத்தின் கால்பக்க விளம்பரம் வந்திருப்பதைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் விழிகள் அகன்றன. எவ்வளவு நாள் காத்துக்கிடந்த வாய்ப்பு என்று மனம் குதூகலித்தது. விளம்பரத்தில், கட்டம் போட்ட கைதி உடை மற்றும் தொப்பியுடன் நடிகர்திலகம் கீழே கிடக்க, ஒரு பெரிய பூட்ஸ் அணிந்த கால் (கால் மட்டும்தான்) அவரை மிதிக்க உயர்ந்திருப்பது போல விளம்பரமிட்டிருந்ததைப் பார்த்து மனம் எகிறியது. நண்பர்கள் கூடிப்பேசினோம். எப்படியும் முதல்நாளே பார்த்துவிட வேண்டுமென்று மனம் துடித்தது. ஆனால் கையில் காசு இல்லை. அதனால் வெள்ளிக்கிழமை போக முடியவில்லை. நண்பர்கள் சிலர் 'எப்படியும் சுற்றியடித்து நம்ம ஏரியா (வடசென்னை) தியேட்டருக்கு வரும் அப்போது பார்த்துக்கொள்ளலாம்' என்றனர். ஆனால் எனக்கு பொறுமையில்லை. இங்கே வரும் என்பது என்ன நிச்சயம்?. ஒருவேளை வராமல் போய்விட்டால்?. வந்த வாய்ப்பை விட்டுவிட முடியுமா?. (அப்போதெல்லாம் படம்பார்க்க தியேட்டரை விட்டால் வேறு வழி கிடையாது).

சனிக்கிழமை காலை தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அப்பாவிடம் போய் விளம்பரத்தைக்காட்டி, படம் பார்க்க பணம் கேட்டேன். (ஒரு மகன் தந்தையிடம் தைரியமாக சினிமாவுக்கு பணம் கேட்கும் அளவுக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே வந்த தரமான படங்களில் ஒன்றல்லவா இக்காவியம்). படத்தின் விளம்பரத்தைப்பார்த்ததும் அவரும் மறுபேச்சுப் பேசாமல் மூன்று ரூபாயை எடுத்துத்தந்தார். (அப்போது முதல் வகுப்பு டிக்கட் 2.60 ). மீண்டும் விளம்பரத்தைப்பார்த்து எந்த தியேட்டர் என்று உறுதி செய்து கொண்ட அவர், 'இந்தப்படத்துக்குத்தானே போறே?. போய்ட்டு வந்ததும் என்கிட்டே டிக்கட்டைக்காட்டணும்' என்று கண்டிஷன் போட்டார். (பைத்தியக்கார அப்பா, அவரே போகச்சொன்னாலும் இந்தப்படத்தை விட்டு வேறு படத்துக்குப்போக மாட்டேன் என்பது அவருக்குத்தெரியவில்லை).

பிராட்வே பஸ் ஸ்டாப்பில் ஏறி மவுண்ட்ரோடு தபால் நிலையத்தில் இறங்கினால் 25 பைசா டிக்கட். அதுவே பாரீஸ் வரை நட்ந்துபோய் அங்கு ஏறி, Hindu பத்திரிகை அலுவலகம் முன்பு இறங்கினால் டிக்கட் 15 பைசா. சிறிது தூரம் நடந்தாலும் பரவாயில்லையென நாங்கள் இரண்டாவதையே தேர்ந்தெடுத்தோம். மாலைக்காட்சிக்கு நேரமாகிவிட்டதால், ஓட்டமும் நடையுமாக ஓடிச்சென்றால், சித்ரா தியேட்டரின் வாசல்கேட்டில் மாட்டியிருந்த ‘Housefull’ போர்டு எங்களை வரவேற்றது. எங்களுக்கு, குறிப்பாக எனக்கு மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. நான் டிக்கட் வாங்கியபின் இந்த போர்டை மாட்டியிருந்தால் என்னைவிட சந்தோஷப்படுபவர் யாரும் இல்லை.

வந்ததற்கு எந்தப்படத்தையாவது பார்த்துவிடவேண்டும் என்று வந்திருந்த நண்பர்கள் உடனடி முடிவெடுத்து, 'சென்னை கங்கை'யின் மறு கரையிலிருந்த கெயிட்டி தியேட்டருக்கு ('குறத்தி மகன்' என்று நினைக்கிறேன்) பார்க்கப்போய்விட்டனர். ஆனால் கப்பலோட்டிய தமிழனைத்தான் பார்க்கவேண்டும் என்று வந்திருந்த நான் மட்டும், கேட்டுக்கு வெளியே கொஞ்சம் நேரம் நின்று, காம்பவுண்டுக்கு மேலே இருந்த தட்டிகளில் ஒட்டப்பட்டிருந்த இரண்டு பிரம்மாண்ட போஸ்ட்டர்களையே சிறிது நேரம் ஏக்கத்துடன் பார்த்துகொண்டிருந்து விட்டு மீண்டும் 15 பைசா டிக்கட்டில் வீடு திரும்பினேன்.

பெரிய வால்வு ரேடியோவில் ஏதோ நிகழ்ச்சி கேட்டுக்கொண்டிருந்த அப்பா சற்று ஆச்சரியமாக தலையைத்தூக்கி, 'ஏண்டா, போகலையா?' என்று கேட்டார். 'போனேன்பா, நாங்க போகமுன்னாடியே ஃபுல் ஆயிடுச்சு' என்றதும், 'சரி அப்போ நாளைக்குப்போ' என்றவர் சட்டென்று 'வேணாம், நாளைக்கு இன்னும் கூட்டமாயிருக்கும். திங்களன்னைக்கு ஸ்கூல் விட்டு வந்ததும் போ' என்றார். பணத்தை திருப்பி வாங்கிக்குவாரோ என்று பயந்த எனக்கு குதூகலமாயிருந்தது. எனக்கென்னவோ, தன் மகன் எப்படியாவது இந்தப்படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்று அவரும் ஆர்வமாக இருந்தது போலத்தோன்றியது.

திங்கள் மாலை பள்ளிவிட்டு வந்ததும் தாமதிக்காமல் நான் மட்டும் தனியாக பஸ்ஸில் போனேன். பின்னே, நண்பர்கள்தான் இருந்த காசுக்கு 'குறத்திமகன்' பார்த்துவிட்டனரே. பாலத்தைக்க்டக்கும்போதே தென்பட்ட கூட்டம் மீண்டும் பயத்தைக்கிளப்பியது. இருந்தாலும் கிட்டே போய்ப் பார்த்தபோது சற்று தைரியம் வந்தது. சற்று முன்னமேயே சென்றுவிட்டதால் 2 ரூபாய் டிக்கட்டே கிடைக்கும்போல இருந்தது. சித்ரா தியேட்டரில் 2 ரூபாய் டிக்கட் எத்தனை என்று போர்டில் பார்த்து, அதில் பாதியை பெண்களுக்கு கழித்துவிட்டு, கியூவில் நின்றவர்களை தோராயமாக எண்ணிப் பார்த்ததில், டிக்கட் கிடைக்க வாய்ப்பிருப்பதாகத் தோன்றியது. கவுண்ட்டர் திறந்ததும், வழக்கம்போல பிஸ்த்தாக்கள் ஒரு பத்துபேர் வரிசையில் நடுவில் நுழைந்தனர். அச்சத்துடன் நெருங்கிப்போக, டிக்கட் கிடைத்து விட்டது. மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே உள்ளே போகாமல், எனக்குப்பின் இன்னும் எத்தனை பேருக்கு டிக்கட் கிடைக்கிறதென்று பார்த்துக்கொண்டிருக்க, ஐந்தாறு பேர் வாங்கியதும் கவுண்ட்டர் அடைக்கப்பட்டது. நல்லவேளை 'வஸ்தாதுகள்' இன்னும் ஒரு ஐந்து பேர் நுழைந்திருந்தால் என் கதி அவ்வளவுதான். உள்ளே போய் சீட்டில் கர்சீப் போட்டுவிட்டு, வெளியே வந்து முதல் வகுப்பு பக்கம் போனால், அதுவும் ஃபுல். கடைசி கிளாஸ் டிக்கட் முடிந்ததும் திங்களன்றும் ‘Housefull’ போர்டு போட்டார்கள். சந்தோஷத்துக்குக் கேட்கணுமா?. நிறையப்பேர் இந்தப்படத்தை எதிர்பார்த்திருப்பார்கள் போலும்.

படம் துவங்கியதும் ரொம்ப உணர்ச்சி மயமாகப்போனது. ஆரம்பத்தில் கைதட்டியதுதான். அதன்பிறகு கைதட்டலுக்கெல்லாம் வேலையில்லாமல் அனைவரும் படத்தோடு ஒன்றிப்போனார்கள். ஆனால் கலெக்டர் வின்ச் துரை (எஸ்.வி.ரங்காராவ்) யிடம் நடிகர்திலகம் பேசும்போது, வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரைக்குறிப்பிட, வின்ச்துரை அதிர்ச்சியுடன் சிதம்பரனாரைப் பார்க்கும்போது அங்கே வ.உ.சி. முகம் மறைந்து கட்டபொம்மன் தெரியுமிடத்தில் கைதட்டலால் தியேட்டரே அதிர்ந்தது.

ஆனால் ஜெமினிகணேஷ் ஏற்றிருந்த மாடசாமி ரோலுக்கு தேவையில்லாமல் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அதிக சீன்களும், ஒன்றுக்கு இரண்டாக டூயட் கொடுத்ததும் அந்த வயதில்கூட எனக்குப்பிடிக்கவில்லை. படத்துக்கு ஸ்பீட் பிரேக்கர்கள் போலத்தோன்றியது.

ஒரு விஷயம் சொன்னால் உங்களில் பெரும்பாலோருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். படத்தின் சென்ஸார் சர்டிபிகேட் காண்பிக்கப்பட்டபோது, Kappalottiya Thamizhan (Part Colour) என்று சர்ட்டிபிகேட்டில் இடம்பெற்றிருந்தது. அதைப்பார்த்து விட்டு, படம் துவங்கியதும் அதை மறந்து போனேன். ஆனால் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, சிதம்பரனார் சுதேசி கப்பல் கம்பெனிக்காக கப்பலை வாங்கிக்கொண்டு தூத்துக்குடி துறைமுகத்துக்கு வரும் அந்த வரலாற்று நிகழ்வில், கரையிலிருக்கும் திரண்ட கூட்டத்தோடு, பாரதியும், சுப்பிரமணிய சிவாவும் பாட, வ.உ.சி. கப்பலில் கையசைத்துக்கொண்டே வரும் "வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம்" என்ற பாடல் மட்டும் கேவா கலரில் எடுக்கப்பட்டிருந்தது, ஆச்சரியமாக இருந்தது.

அதன்பிறகு இதுவரை கப்பலோட்டிய தமிழன் படத்தை குறைந்தது 25 முறையாவது பார்த்திருப்பேன். ஆனால் அந்தப்பாடலை கலரில் பார்த்தது அந்த ஒருமுறை மட்டுமே. அதன்பிறகு பார்த்ததபோது படம் முழுக்க கருப்புவெள்ளையில்தான். 1972-ல் முதன்முறையாக நான் பார்த்தபோது திரையிடப்பட்ட அந்த பிரிண்ட், அநேகமாக 1961-ல் படம் ரிலீஸானபோது உருவாக்கப்பட்ட பிரிண்ட்டாக இருக்கலாம். அதன்பிறகு எடுக்கப்பட்ட பாஸிட்டிவ்கள் அனைத்தும் கருப்புவெள்ளையில்தான் எடுக்கப்பட்டது.

வ.உ.சி. சிறைக்குச்செல்லும்போதே கண்களில் நீர்கட்டத்துவங்கி விட்டது. சிறையில் வழங்கப்படும் உணவின் வாடை தாங்காமல், அப்படியே வைத்து விட்டு, ஓட்டைவிழுந்த தகரக்குவளையிலிருந்து தண்ணீர் குடிக்க எடுக்கும்போது, தண்ணீர் முழுவதும் ஓடி, குவளை காலியாக இருக்கும் காட்சியில் கண்ணீர் வடியத்துவங்கியது. செக்கடியில் அவர் கழுத்தில் மாடுகளின் கழுத்தில் பிணைக்கும் சங்கிலியை மாட்டி, சிறைக்காவலன் அவரை அடித்து செக்கிழுக்கச்செய்ய, இவரும் கால்கள் தரையில் இழுபட செக்கிழுக்கும் காட்சியில் கேவிக்கேவி அழத்தொடங்கிவிட்டேன். என் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அந்தக்கண்ணீர் வ.உ.சி.யின் தியாகத்துக்கா, நடிகர்திலகத்தின் அர்ப்பணிப்புக்கா, பாரதத்தாயின் அடிமைத்தனத்தை நினைத்தா என்பது தெரியவில்லை. தியேட்டர் முழுவதும் கேவல்கள், விசும்பல்கள்.

(அன்றைய இளம்பிராயத்தில்தான் அப்படியென்றில்லை. இன்றைக்கும் கப்பலோட்டிய தமிழனைப் பார்க்கும்போதெல்லாம், நினைக்கும்போதெல்லாம், ஏன் இப்போது பதிவிட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் அதே நிலைதான்).

படம் முடிந்து பஸ்ஸில்போகும்போதும் கண்ணீர்தான். இரவு சாப்பிடாமலேயே படுத்து விட்டேன். எவ்வளவு நேரம் அழுதேன் என்று தெரியாது. காலையில் கண்விழித்தபோது கண்கள் இரண்டும் சிவந்திருந்தன.

JamesFague
2nd November 2014, 03:04 PM
Thanks to Mr Neyveli Vasudevan

அண்ணன் ஒரு கோயிலை தரிசித்த அனுபவம்.

நேற்று 'சிவந்த மண்' நினைவலைகள் என்றால் இன்று நம் அண்ணன் நம்மிடையே ஒரு கோயிலாய் வலம் வந்த நினைவலைகள் நெஞ்சில் நிழலாட ஆரம்பித்து விட்டது. ஆம்... இன்று 'அண்ணன் ஒரு கோயில்' வெளியான நாளல்லவா! 77-ல் வெளியான அவன் ஒரு சரித்திரம், தீபம், இளைய தலைமுறை, நாம் பிறந்த மண் காவியங்களுக்கு அடுத்து 10-11-1977-ல் தித்திக்கும் தீபாவளித் திரை விருந்தாக 'அண்ணன் ஒரு கோயில்' ரிலீஸ். முந்தைய படங்களான இளைய தலைமுறை, நாம் பிறந்த மண் ஆகியவை சுமாராகப் போன நிலையில் சற்று சோர்வடைந்திருந்த நம் ரசிகர்களுக்கு தடபுடலாய் தலைவாழை தீபாவளி விருந்தளித்து அனைவையும் திக்குமுக்காடச் செய்தார் அண்ணன் (ஒரு கோயிலாய்). அண்ணனுக்கு சொந்தப்படம் வேறு. 74-ல் வெளிவந்த தங்கப்பதக்கத்திற்குப் பிறகு 77-ல் கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்குப் பிறகு சிவாஜி புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த வெற்றிக் காவியம். மிகுந்த எதிர்பார்ப்பு இந்தக் காவியத்திற்கு. கோபால் சார் சொன்னது போல் தீபாவளி நமக்கு ராசியாயிற்றே. அதுவும் நம் சொந்த பேனர் வேறு. அமைதியாய் ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிவந்து அசுரத்தனமான வசூல் சாதனை புரிந்தது 'அண்ணன் ஒரு கோயில்'.

கடலூரில் நியூசினிமா திரையரங்கில் ரிலீஸ். நாம் பிறந்த மண்ணும் அதே தியேட்டரில்தான் ரிலீஸ். ஆனால் மூன்று வாரங்களே தாக்குப் பிடித்தது. அதற்கு முந்தைய படமான 'இளையதலைமுறை' கடலூர் துறைமுகம் கமர் டாக்கீஸில் ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்கள் ஓடி பின் நியூசினிமா திரையரங்கில் ஷிப்ட் செய்யப்பட்டது. எனவே மூன்று படங்களுமே தொடர்ந்து நியூசினிமாவில் ரிலீஸ். அதுமட்டுமல்ல. இளையதலைமுறைக்கு முந்தைய படமான தீபமும் இங்குதான் வெளியாகி வெற்றி சுடர் விட்டு பிரகாசித்தது. எனவே நியூசினிமா எங்களுக்கு கோயில் ஆனது. அங்கேயே 'அண்ணன் ஒரு கோயில்' வெளியானதில் எங்களுக்கு மகிழ்ச்சி. நியூசினிமா கடலூர் அண்ணா மேம்பாலத்திற்கு அதாவது பழைய கடிலம் ஆற்றுப் பாலத்தின் கீழ் அமைந்துள்ள தியேட்டர். வழக்கம் போல ஒன்பதாம் தேதியே தியேட்டர் திருவிழாக் கோலம் காண ஆரம்பித்து விட்டது. கொடிகளும் தோரணங்களுமாய் தியேட்டர் முழுக்க ஒரே அலங்கார மயம். அண்ணன் அழகான கண்ணாடி அணிந்து ஒயிட் கோட் சூட்டில் அற்புதமாய் (சுமித்ரா பாடும் "அண்ணன் ஒரு கோயிலென்றால்" பாடலில் அணிந்து வருவாரே... அந்த டிரஸ்.) நிற்கும் கண்கொள்ளா கட்- அவுட். அண்ணனின் முழு உடலையும் கவர் பண்ணும் அலங்கரிக்கப்பட்ட மிகப் பெரிய மாலை. ஜிகினாத் தாள்கள் மின்னும் அண்ணன் படங்கள் ஒட்டிய அழகழகான கண்ணைப் பறிக்கும் ஸ்டார்கள். தியேட்டரின் வாயிலே தெரியாத அளவிற்கு கீழே தூவப்பட்ட தென்னங் குருத்துகள். பழைய கடிலம் பாலம் இருமருங்கிலும் நடப்பட்ட ஆளுயர பச்சைத் தென்னங் கீற்றுகள். தியேட்டரினுள்ளே வைப்பதற்கு ரசிகர் குழாம் செய்து வைத்துள்ள வாழ்த்து மடல்கள் (கண்ணாடி பிரேம் போட்டு அலங்கரிக்கப்பட்ட தலைவர் ஸ்டில்களுடன் கூடிய படங்கள்) என்று அதம் பறந்து கொண்டிருக்கிறது. இரவு ஒருமணி தாண்டியும் அலங்காரங்கள் செய்வது நிற்கவே இல்லை. படம் எப்படி இருக்குமோ.என்று ஒவ்வொருவரும் ஆவல் மேலிடப் பேசிக்கொண்டிருக்கிறோம். படப்பெட்டி இரவே வந்து விட்டதாக வேறு தியேட்டர் சிப்பந்திகள் கூறி விட்டார்கள். அலங்காரங்கள் முடிந்து தியேட்டரை விட்டு போகவே மனமில்லை. ஆனால் மழைக் காலமானதால் மேகமூட்டமாக இருந்தது. மழை வந்து எல்லாவற்றையும் கெடுத்து விடப் போகிறது என்று வேண்டாத தெய்வமில்லை. அலங்காரங்கள் அனைத்தும் ஒரு நொடியில் பாழ்பட்டுப் போகுமே என்று அனைவர் முகங்களிலும் கவலை ரேகை. நல்லவேளையாக வேண்டியது வீண் போகவில்லை. சிறு தூறல்களுடன் வந்த மழை நின்று விட்டது. பெருமூச்சு விட்டுக் கொண்டு அவரவர் வீடுகளுக்குப் பிரிய மனமில்லாமல் பிரிந்தோம். சில தீவிரவாதிகள் வீட்டுக்கே போகவில்லை. செகண்ட் ஷோ முடிந்ததும் சைக்கிள் ஸ்டான்டிலேயே பழைய போஸ்ட்டர்களைத் தரையில் விரித்து அலங்காரங்கள் செய்த அசதியில் படுத்து குறட்டை விட ஆரம்பித்து விட்டனர்.

வீட்டை அடையும்போது சரியாக அதிகாலை இரண்டரை மணி. தூக்கம் வருமா... கண்களிலும், மனம் முழுவதிலும் அண்ணனே நிரம்பி வழிகிறார். சிறிது நேர தூக்கத்திலும் கோவில் கோவிலாக கனவு வருகிறது. அம்மாவிடம் சொல்லி ஐந்து மணிக்கெல்லாம் எழுப்பச் சொல்லிப் படுத்தேன். நான்கு மணிக்கு நான் அம்மாவை எழுப்பிவிட்டேன். "ஏண்டா.. தூங்கினா என்ன" என்று அம்மா செல்லக்கடி கடித்தார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியும் இது திருந்தாத கேஸ் என்று. விறுவிறுவென சாஸ்திரத்திற்கு தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டு அது சரியாக தலையில் ஊறக் கூட இல்லை... சுட்டும் சுடாததுமான வெந்நீரில்(!) திருக்கழு(கு)க்குன்றம் கழுகு போல கழுகுக் குளியல் குளித்துவிட்டு, அம்மா போட்டுத் தந்த காபியை (சு)வைத்து விட்டு, ஆறுமணிக்கெல்லாம் கிளம்பி விட்டேன். "ஏண்டா! தீபாவளி அதுவுமா சாப்பிட்டுட்டு போகக் கூடாதா," என்று அம்மா கோபித்துக் கொண்டார்கள். இது இந்த தீபாவளிக்கு மட்டுமில்லை. தலைவர் பட தீபாவளி ரிலீஸ்களின் அத்தனை தீபாவளிக்கும் இதே கூத்துதான். "சாமியாவது கும்பிட்டு விட்டுப் போ"..என்று அவசர அவசரமாக வடை சுட்டு, தீபாவளி பலகாரங்களை இலையில் வைத்து, எனக்காகவே ஒரு அவசர படையலை முன்னாடியே அம்மா போட்டு விடுவார்கள். ஏதோ பேருக்கு சாமி கும்பிட்டு விட்டு சைக்கிளில் ஒரே ஓட்டம். இது என் கதை மட்டுமல்ல. அனைத்து ரசிகர்களுக்கும் இதே கதைதான்.ஆறரை மணிக்கெல்லாம் தியேட்டரில் அனைவரும் ஆஜர். புதுத் துணியெல்லாம் கிடையாது. யார் அதையெல்லாம் பார்த்தார்கள்?... பின் முந்தைய இரவு செய்த அலங்காரங்களையெல்லாம் ஒரு தடவை கரெக்ட் செய்து பின் தலைவரைப் பற்றிய பேச்சும், படத்தின் வெற்றியைப் பற்றிய பேச்சும்தான். தீபாவளி அன்று ஐந்து காட்சிகள். முதல் காட்சி ரசிகர் ஷோ காலை ஒன்பது மணிக்கு. ரசிகர் ஷோ டிக்கெட்டுகள் அப்படியே இருமடங்கு விலை. தலைவர் படம் அச்சடித்த அட்டை ஒன்று கொடுப்பார்கள். ஒவ்வொரு கிளாஸுக்கும் தகுந்தவாறு அட்டையின் நிறம் மாறும். கவுண்ட்டரில் டிக்கெட் கிடையாது. ஒரு வாரம் முன்னமேயே டிக்கெட் காலி. நேரமாக ஆக கூட்டம் திருவிழா போல கூட ஆரம்பித்து விட்டது.

எங்கு நோக்கினும் ரசிகர்கள் தலைகள்தான். பட்டாசுகள் வெடிக்கத் துவங்கியாகி விட்டது. சும்மா ஆட்டம் பாம்களாக வெடித்துத் தள்ளுகிறது. அனைவரும் காதுகளைப் பொத்திய வண்ணமே இருக்கிறார்கள். புஸ்வானம் மத்தாப்புகளாய் சிதறுகிறது. சரவெடிகள் சரமாரியாய் கொளுத்தப்படுகின்றன. எங்கும் தலைவரை வாழ்த்தும் 'வாழ்க' கோஷம் தான்.ஆயிரம்வாலாக்களும், ஐயாயிரம் வாலாக்களும் தியேட்டர் வாசலைக் குப்பையாக்குகின்றன.

அரங்கினுள் நுழைய மணி அடித்தாயிற்று. அனைவரும் 'நான் முந்தி... நீ முந்தி'... என்று கேட்டில் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் கிழிப்பவரிடம் அட்டையைக் கொடுத்துவிட்டு ஒரே ஓட்டம். செகண்ட் கிளாஸ் சீட்களின் வரிசையான மூன்று ரோக்களை வெளியிலிருந்து வரும் நண்பர்களுக்காக கயிறு கட்டி மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்தாகி விட்டது...(அராத்தல் குரூப் என்று எங்கள் குரூப்புக்கு பெயர்) அனைத்து ரசிகர்களும் பலூன்களை பறக்க விட்டுக் கொண்டே உள்ளே நுழைகின்றனர். கிடுகிடுவென தியேட்டர் ரசிகர்கள் தலைகளால் நிரம்பி வழிகிறது. திரையருகே சில வானரங்கள் பட்டாசுகளை சரம் சரமாய் கொளுத்திப் போட தியேட்டர் சிப்பந்திகள் கடுப்பாகி ஓடோடி வந்து பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என தடுக்கின்றனர். தியேட்டர் முன் மேடை முழுவதும் மெழுகுவர்த்திகள் கொளுத்தி வைக்க ஆரம்பித்து விட்டார்கள். படம் துவங்க பெல் அடித்து விளக்குகள் அணைக்கப்பட்டு முதல் 'நல்வருகை' ஸ்லைடில் என்.எஸ். கிருஷ்ணன் முகமலர்ந்து சிரித்து அனைவரையும் வரவேற்கிறார். பின் தியேட்டரின் 'புகை பிடிக்காதீர்கள்'...'முன் சீட்டின் மீது காலை வைக்காதீர்கள்'... 'தினசரி நான்கு காட்சிகள்'... 'தீபாவளியை முன்னிட்டு ஒருவாரத்திற்கு ஐந்து காட்சிகள்'... என்று சம்பிரதாய ஸ்லைடுகள் போட்டு முடித்த பின்னர் நம் ரசிகர்களின் "இப்படத்தைக் காண வந்த ரசிகர்களுக்கு நன்றி" என்று பல்வேறு ஸ்டைலான போஸ்களில் அண்ணன் நிற்கும் ஸ்லைடுகள் போடப்பட்டவுடன் சும்மா விசில் சப்தம் காது சவ்வுகளைப் பதம் பார்த்து விட்டது. சரியாக முப்பத்தைந்து நன்றி ஸ்லைடுகள். ஸ்லைடுகள் முடிந்ததும் உடனே படத்தைப் போட்டு விட்டார்கள். 'அண்ணன் ஒரு கோயில்' சென்சார் சர்டிபிகேட் போட்டவுடன் சும்மா அதம் பறக்கிறது. பின் 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளிக்கும்' என்று போட்டதுதான் தாமதம்....ரசிகர்கள் இருக்கைகளை விட்டு எழுந்து ஒரே குதிதான். அண்ணன் ஒரு கோயில் என்று நெகடிவில் சிகப்பும் பச்சையுமாய் கோவில் கோபுரம் ஒன்று சுற்றுகையில் தேங்காய்கள் உடைபட்டு நொறுங்கும் சப்தம் முதல் வகுப்பு வரை கேட்கிறது. டைட்டில் வேறு அற்புதமாய் இருந்தது. எல்லோர் முகத்திலும் சந்தோஷத்தின் உச்சம். ('டைட்டில் பார்க்க வேண்டிய ஒன்று' என்று 'ராணி' வார இதழ் கூட விமர்சனத்தில் சிலாகித்து பாராட்டி எழுதியது.) டைட்டிலிலேயே தெரிந்து விட்டது படம் பிய்த்து உதறப் போகிறது என்று. டைட்டில் முடிந்தவுடன் எம்.எஸ்.வி.யின் அற்புதமான ரீ-ரிகார்டிங்கில் காட்டுப்பகுதியில் போலீஸ் வேட்டை நாய்கள் "லொள்..லொள்".. என்று குரைத்து காவலர்களுடன் துரத்த, லாங்க்ஷாட்டில் ஒரு உருவம் பரபரவென ஓடிவர, அனைவரும் இருக்கையை விட்டு தன்னையறியாமல் எழுந்து விட, தொப்பி அணிந்து, கண்ணாடிசகிதம் நம் அண்ணன் முழங்கால் வரையிலான வயலட் கலர் ஓவர்கோட்டுடன் ஓட்ட ஓட்டமாக, வேர்க்க விறுவிறுக்க, திரும்பி திரும்பிப் பார்த்தபடியே கோரைப் புற்களை கைகளால் விலக்கி விலக்கி ஓடி வர... விறு விறுவென அப்படியே நம்மைப் ப(தொ)ற்றிக்கொள்ளும் சீன் முதல் காட்சியிலேயே களைகட்டி விடும். சஸ்பென்ஸ். திரில் என்றால் அப்படி ஒரு திரில். ஒரு த்ரில்லர் மூவிக்குண்டான அத்தனை விஷேச அம்சங்களோடு விறுவிறுப்பு என்றால் முதல் பதின்மூன்று நிமிடங்களுக்கு அப்படி ஒரு விறுவிறுப்பு. படம் பிரமாதப்படுத்தப் போகிறது என நிச்சயமாகி விட்டது. பின் நடந்ததையெல்லாம் சொல்ல திரியின் சில பக்கங்கள் போதாது. தலைவர் ஏன் போலீசிடம் இருந்து ஓடிவருகிறார்?... அடுத்து என்ன? என்று ஆவல் மேலிட ஒரே பரபரப்பாகவே எல்லோரும் காணப்பட்டார்கள். பேய்ப்பட பாடல் போல 'குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட" பாடல் வேறு ஆவலை அதிகப்படுத்துகிறது... நிச்சயமாகவே ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. பின் தலைவர் சுஜாதாவிடம் சொல்லும் தலைவர் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகள்... தலைவர், சுமித்ராவின் அண்ணன் தங்கை பாசப் பிணைப்பு காட்சிகள்...அருமையான "அண்ணன் ஒரு கோவிலென்றால்", "மல்லிகை முல்லை"பாடல் காட்சிகளில் ரம்மியமாக அருமையான காஸ்ட்யூம்களில் அண்ணன் வந்து அசத்துவதையும், மீண்டும் ஒரு பாசமலரைக் கண்டு கொண்டிருக்கிறோம் என்ற ஆனந்தமும், பூரிப்பும் ஒன்று சேர, அனைவரையும் பாசமெனும் அன்பு நூலால் கட்டி போட்டுவிட்டார்கள் நடிகர் திலகமும், சுமித்ராவும். உயிரான தங்கையை வில்லன் மோகன்பாபு கெடுக்க முயலும்போது பதைபதைத்து படுவேகமாக காரில் வந்து மோகன்பாபுவை அண்ணன் சின்னாபின்னப் படுத்தும் போது தியேட்டர் குலுங்கியது. பின் சஸ்பென்சை மறைத்து மோகன்பாபு சுடப்பட்டு சாயும் போதும், அண்ணனையே தங்கை தன் நிலை மறந்து யாரன்று கேட்க அதைக் கேட்டு அதிர்ந்து அண்ணனின் தலை பல கூறுகளாகப் பிளப்பது போன்ற காட்சிகளிலும் அப்படி ஒரு நிசப்தம். பின் தங்கையை பிரிந்து வாடி சுஜாதாவிடம் கதறும் போதும், ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் தங்கையைப் பார்த்து ஜெய்கணேஷிடம் அண்ணன் புலம்பும் அந்தக் குறிப்பிட்ட காட்சியில் தியேட்டரில் பூகம்பம் வெடித்தது என்றுதான் சொல்ல வேண்டும்... அப்பப்பா.. என்ன ஒரு ஆரவாரம்!... அந்த ஆரவாரத்தையே தூக்கிச் சாப்பிடும் கடவுளின் நடிப்பு...துடிப்பு...தங்கையின் குணநலன்களை விவரித்து, விவரித்து சிரித்து அழுதபடியே என்ன ஒரு புலம்பல்! ("அப்பப்பப்பா... ஒரு இடத்துல படுத்துக் கெடக்கறவளாஅவ! என்ன ஆட்டம்... என்ன ஓட்டம்... என்ன பாட்டு.... என்ன சிரிப்பு ...என்ன")... என்று வியந்தபடியே அண்ணாந்து அழுகையில் அரங்கு குலுங்கியதே....



அந்தக் காட்சியை ஒன்ஸ்மோர் கேட்டு ஓங்காரக் கூச்சலிட்டனர் ரசிகர்கள். இடைவேளையின் போது எல்லோர் முகத்திலும் வெற்றிப் பெருமிதம்...படம் டாப் என்று எல்லோரும் ஒருமித்த கருத்தையே கூறினர். படம் முழுவதும் நடிகர் திலகத்தின் நடிப்பு பட்டை கிளப்பியது. ரசிகர்கள் தம் பங்கிற்கு செய்த ஆரவாரம் சொல்லி மாளாது. தேங்காய் மனோரமா நகைச்சுவைக் காட்சிகளும் நன்கு ரசிக்க வைத்தன. அதைவிட காட்டில் போலீஸ் வேட்டையின் போது பெரிய மரக்கட்டைகளுக்கு மத்தியில் தலைவரும்,சுஜாதாவும் புரியும் சரச சல்லாப பின்னணிப் பாடலான "நாலு பக்கம் வேடருண்டு"...பாடலின் போது எத்தனை கோபால்கள் எம்பிக் குதித்தனர்! சீரியஸான காட்சிகளுக்கு நடுவே எல்லோரையும் நிமிர வைத்து வசியம் செய்த பாடல். (சற்று ஓவராக இருந்தால் கூட) இப்படியாக படம் முழுதும் ஒரே அட்டகாச அலப்பரைகள் தான். படமும் படு டாப். சஸ்பென்ஸ், திரில், பாசம், காதல், தியாகம் என்று எல்லாக் கலவைகளையும் மிக அளவாக அழகாகக் கலந்து, எல்லாவற்றுக்கும் மேல் வித்தியாசமான நடிகர் திலகத்தை நம்மிடையே உலாவ விட்டு படத்தை அட்டகாசமாய் இயக்கியிருந்த இயக்குனர் விஜயனுக்கு ஜெயமான ஜெயம். இறுதியில் படம் சுபமாய் முடிய அனைவர் முகத்திலும் மகிழ்ச்சித் தாண்டவம். அனைவரும் "அண்ணன் வாழ்க" என்ற விண்ணை முட்டும் கோஷத்துடன், பெருமிதத்துடன், முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு பிரகாசத்துடன் வெளியே வந்தோம்.

வெளியே வந்து பார்த்தால் ஐயோ! கூட்டமா அது... புற்றீசல் போல அவ்வளவு கூட்டம்... நீண்ட வரிசையில் கியூ... பழைய ஆற்றுப்பாலத்தில் தியேட்டரிலிருந்து கியூவளைந்து வளைந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை கியூ நிற்கிறது. போலீஸ் வேன் வந்து கூட்டத்தை லத்தியால் பிளக்கிறது. கட்டுக்கடங்காத கூட்டம். மழை வேறு வந்து விட்டது... கூட்டம்...ம்ஹூம்... நகரவே இல்லை... அடுத்த ஷோ ஆரம்பித்தாகி விட்டது.... டிக்கெட் கிடைக்காதவர்கள் அப்படியே கியூவில் மனம் தளராமல் மறுபடி அடுத்த ஷோவிற்காக நிற்க ஆரம்பித்தார்கள். நாங்கள் வீட்டிற்கு போகவே இல்லை... அங்கேயே பொறை ரொட்டியை வாங்கிக் கடித்துக் கொண்டு கிடைத்த டீயைக் குடித்துக் கொண்டு (தீபாவளி அதுவும் அருமையான வகைவகையான பலகாரங்களும், அருமையான மட்டன் குழம்பும், சுழியான் உருண்டைகளும், இட்லி, தோசைகளும் வீட்டில் காத்துக் கிடக்க இங்கே நெய் வருக்கியும் டீயும்...தேவையா!) டிக்கெட் கிடைக்குமா என்று அலைஅலையாய் தவிக்கும் மக்கள் வெள்ளம்... படம் அட்டகாசமாய் வெற்றிபெற்றுவிட்டது என்ற சந்தோஷத்தில் தலைகால் எங்களுக்கு புரியவில்லை. பின் அடுத்த ஷோவிற்கு டிக்கெட் எடுக்க ஏற்பாடு செய்து விட்டு மூன்றாவது காட்சியையும் பார்த்து ரசித்தோம். பின் தினமும் தியேட்டரில்தான் குடித்தனமே. நாங்கள் நினைத்தது போலவே அருமையாக ஓடி வெற்றிவாகை சூடியதோடு மட்டுமல்லாமல் நடிகர் திலகத்தின் மீள் தொடர்வெற்றிகளுக்கு அடிகோலிய பெருமையையும் சேர்த்துப் பெற்றது 'அண்ணன் ஒரு கோயில்'.

JamesFague
21st November 2014, 10:55 AM
Thanks to Mr Karthik


'ராஜபார்ட் ரங்கதுரை'

நாடகக்கலைஞனாக நடிகர்திலகம் வாழ்ந்து காட்டிய ராஜபார்ட் ரங்கதுரையின் 39-வது உதய தின இனிய நினைவலைகள் (22.12.1973 - 22.12.2011)

தயாரிப்பில் இருக்கும்போதே பலவேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கி விட்ட படங்களில் இதுவும் ஒன்று என்றால் மிகையில்லை. ஆனால், எதிர்பார்க்க வைத்து ஏமாற்றாமல், எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்து, ரசிகர்களையும் பொதுமக்களையும் உற்சாகத்தில் ஆழ்த்திய திரைக்காவியம்.

1971 இறுதியில் துவங்கிய நடிகர்திலகத்தின் வெற்றிநடை 72-ஐக்கடந்து 73-லும் தொய்வின்றி தொடர்ந்து கொண்டிருந்த நேரத்தில் வெளியாகி இதுவும் வெற்றிக்கனியை ஈட்டியது. (தொடர் வெற்றிப்பட்டியலை ஏற்கெனவே முரளி சார் அவர்கள் முந்தைய பக்கத்தில் அட்டகாசமாக தொகுத்தளித்துள்ளார்). இப்படம் வெளியானபோது தீபாவளி வெளியீடான கௌரவம் தமிழகமெங்கும் வெற்றிகரமாக 58 நாட்களைக் கடந்துகொண்டிருந்தது. மனிதரில் மாணிக்கம் 15 நாட்களைக்கடந்து ஓடிக்கொண்டிருந்தது. (ராயப்பேட்டை பைலட் தியேட்டரில் மட்டும், வெளியிடும்போதே 15 நாட்களுக்கு மட்டும் என்ற அறிவிப்புடன் தினசரி 4 காட்சிகளாக ஓடி, இப்படத்துக்காக பக்கத்தில் மயிலை கபாலி தியேட்டருக்கு மனிதரில் மாணிக்கம் மாற்றப்பட்டது).

ராஜபார்ட் ரங்கதுரை படம் வெளிவரும் முன்பே, இது காங்கிரஸ் இயக்கத்தினரை உற்சாகப்படுத்த எடுக்கப்பட்ட படம் என்று மதிஒளி, திரைவானம் போன்ற பத்திரிகைகள் சரமாரியாக செய்திகளையும் படங்களையும் வெளியிட்டு ரசிகர்களின் பல்ஸை எகிற வைத்தன. அப்போது சிவாஜி ரசிகன் என்றும் பெருந்தலைவரின் தொண்டன் என்றும் பிரித்துப்பார்க்க முடியாதபடி எல்லோரும் இரண்டுமாக திகழ்ந்த காலகட்டம். போதாக்குறைக்கு ஆகஸ்ட் 15 அன்று நடந்த சுதந்திர தின விழாவில், பெருந்தலைவரும் நடிகர்திலகமும் மேடையில் இருக்கும்போதே, மன்றத்தலைவர் சின்ன அண்ணாமலை, அப்போது தயாரிப்பிலிருந்த ராஜபார்ட் ரங்கதுரை படத்தைப்பற்றி வெகு சிறப்பாகப்பேசி, ‘இது காங்கிரஸ்காரர்களின் லட்சியப்படம்’ என்று கூறி விட்டார்.

அப்போது சிவாஜி மன்றமும் ஸ்தாபன காங்கிரஸும் தமிழகத்தில் பெரும் சக்தியாக விளங்கியதால் இப்படம் பெருந்தலைவரின் பாராட்டைப்பெற்றால் நன்றாக இருக்குமே என்று கருதிய தயாரிப்பாளர் குகநாதன், பெருந்தலைவருக்கும் காங்கிரஸ் இயக்க முன்னோடிகளுக்கும் ஒரு பிரத்தியேக காட்சி ஏற்பாடு செய்திருந்தார். (அந்த பிரத்தியேக காட்சியைப்பற்றியும் அதில் நடந்தவற்றைப் பற்றியும் ஏற்கெனவே முன்னர் சாரதா மிக விரிவாக எழுதியிருந்தார், அதை நாமெல்லோரும் படித்திருக்கிறோம். ஆகவே அதை மீண்டும் விளக்கத்தேவையில்லை).

ராஜபார்ட் ரங்கதுரை சென்னையில் பைலட், ஸ்ரீகிருஷ்ணா, ராக்ஸி, முரளிகிருஷ்ணா, கிருஷ்ணவேணி ஆகிய ஐந்து திரையரங்குகளில் வெளியானது. அத்தனையிலும் தினசரி மூன்று காட்சிகள்தான். வடசென்னை மண்ணடிவாசியான நான் (வழக்கம்போல) மிண்ட் ஏரியா ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில்தான் (வழக்கம்போல) முதல்நாள் மாலைக்காட்சிக்கு ரிசர்வ் செய்திருந்தேன். முதல்நாள் மாலைக்காட்சி டிக்கட் கிடைப்பது சாதாரணம் அல்ல, ரிசர்வேஷன் துவங்கும் அன்று காலை ஏழுமணிக்கெல்லாம் போய், 'கேட்'டைப்பிடித்துக்கொண்டு நிற்க வேண்டும். கேட் திறந்ததும் ஓடிப்போய் கியூவில் நின்றுகொண்டு, இன்னும் போலீஸ் வரவில்லையே என்று தவமிருக்க வேண்டும். போலீஸ் வந்துவிட்டால் நமக்குத்தெம்பு. அப்பாடா, இனி நம் இடம் பறிபோகாது என்று. அப்போது பள்ளி மாணவப்பருவமாதலால் இதெல்லாம் பெரிய கஷ்ட்டமாகத் தெரியவில்லை. இன்றைய இளம்பருவத்தினர் இந்த சாகசங்களையெல்லாம் ரொம்பவே மிஸ் பண்ணி விட்டார்கள்.

மதியசாப்பாட்டுக்குப்பின், பவளக்காரத்தெரு நண்பன் வீட்டு வாசலில் எல்லோரும் கூடி, அங்கிருந்து புறப்பட்டோம். நடைதான். பேசிக்கொண்டே கிருஷ்ணா தியேட்டர் போய்ச்சேர்ந்தபோது மணி நான்கை நெருங்கியிருந்தது. போகும் வழியில் கிரௌனில் கௌரவம் எப்படீன்னு எட்டிப்பார்த்தோம். சனிக்கிழமையாதலால் மேட்னி ஃபுல். (ராஜபார்ட்டுக்கு மேட்னி டிக்கட் கிடைக்காதவர்களும் இங்கு வந்திருக்கக்கூடும்).

ஸ்ரீகிருஷ்ணாவை நெருங்கும்போதே சாலையில் பெரும் கூட்டம் தெரிந்தது. தியேட்டர் முழுக்க காங்கிரஸ் கொடிகள், காங்கிரஸ் பேனர்கள். நடிகர்திலகத்தின் கட்-அவுட் கையிலும் நிஜமான கொடி பறந்துகொண்டிருந்தது. ஏதோ காங்கிரஸ் அலுவலகத்துக்கு வந்துவிட்டது போன்ற தோற்றம் தந்தது. பேனர் முழுக்க நடிகர்திலகத்துக்கு பிரம்மாண்டமான மாலைகள் அணிவிக்கப்பட்டிருந்தன. வடசென்னை மன்றங்கள் அலங்காரங்களில் அசத்தியிருந்தனர். அந்தக்கண்கொள்ளாக் காட்சிகள் இன்றைக்கும் மனதில் நிறைந்திருக்கிறது. ஏற்கென்வே மெயின்கேட் திறந்து விடப்பட்டு, கவுண்ட்டர் கேட்களும் போலீஸ் பந்தோபஸ்துடன் திறந்து விடப்பட்டு, கூட்டம் நிரம்பி வழிந்தது. கரண்ட் டிக்கட் கவுண்ட்டரில் நின்றவர்கள் கண்களில் 'டிக்கட் கிடைக்குமோ கிடைக்காதோ' என்ற பதைபதைப்பு தெரிந்தது.

போலீஸ் மட்டுமல்லாது மன்றத்தினரும் வெள்ளை சீருடையில் காங்கிரஸ் பேட்ஜும், மன்ற பேட்ஜும் அணிந்து கூட்ட்த்தினரை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர். சீனியர் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருக்க, நாங்கள் அவர்கள் மத்தியில் நின்று, செய்திகளை கிரகித்துக்கொண்டிருந்தோம். காம்பவுண்டுக்குள் நிற்க இடமில்லாமல் நிறையப்பேர் 'கேட்'டுக்கு வெளியிலும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களில் பலர் ரிசர்வ் பண்ணியவர்களோ, அல்லது தற்போது கியூவில் நின்று டிக்கட் வாங்க வந்தவர்களோ அல்ல. (ஏனென்றால் இப்போது கவுண்ட்டரில் நிற்பவர்களுக்கே பாதிப்பேர்க்கு டிக்கட் கிடைப்பது கஷ்ட்டம். இருந்தும் நம்பிக்கையோடு நிற்கின்றனர்). மற்றவர்கள் அலப்பறையைக்காண வந்தவர்கள்.

ஐந்தேமுக்காலுக்கு அனைத்து வாசல்களும் அகலத்திறந்து வைக்கப்பட, மேட்னி முடிந்து ஜனத்திரள் வெளியே வந்தது. அனைவர் முகத்திலும் மகிழ்ச்சிப்பரவசம். 'படம் அட்டகாசம்பா', 'அண்ணன் பின்னியெடுத்துட்டார்', 'போய்ப்பாருங்க, பர்ஸ்ட் கிளாஸா இருக்கு' என்று ஒவ்வொருவரின் கமெண்ட்டும் நம்பிக்கையைத் தோற்றுவித்தது. ஒரு நாற்பதுபேர் அடங்கிய சிறு கூட்டம் 'அண்ணன் சிவாஜி வாழ்க' என்று கோஷமிட்டவாறு தியேட்டரிலிருந்து சாலைக்குச்சென்றனர். எங்களுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. அப்போது பாடம் பார்த்த ஒருவர், 'படம் ஆரம்பிச்சதும் ஏமாந்துறாதீங்க, நாங்கதான் ஏமாந்துட்டோம்' என்றதும் வெளியே நின்றவர் 'என்னய்யா சொல்றீங்க?' என்று கேட்க, 'ஆமாங்க படம் துவக்கத்தில் ப்ளாக் அண்ட் ஒயிட்ல கொஞ்ச நேரம் ஓடும். ஏமாந்துடாதீங்க. டைட்டில்லேருந்துதான் கலர் ஆரம்பிக்கும்' என்று சொல்லி மாலைக்காட்சி பார்க்க நின்றவர்களை உஷார் படுத்தினார்.

அப்போது பட்டுப்புடவையும் காங்கிரஸ் பேட்ஜும் அணிந்த சுமார் பத்துப்பணிரெண்டு கல்லூரி மாணவிகள் பரபரப்பாக வந்து தியேட்டர் உள்ளே சென்றனர். யார் அவர்கள், ஏன் உள்ளே போனார்கள் என்பது பின்னர்தான் தெரிந்தது. கரண்ட் டிக்கட் விற்பனை துவங்கியதும் ஒவ்வொரு நுழைவாயிலிலும் ஒரு பெண் நின்று கொண்டு தட்டில் இனிப்பு வைத்துக்கொண்டு உள்ளே சென்றவர்களுக்கு வழங்கிக்கொண்டிருந்தனர். தியேட்டர் சிப்பந்தி டிக்கட் கிழிக்க, மாணவி அவருக்கு எதிரில் நின்று படம் பார்க்க வந்தவர்களை இன்முகத்தோடு 'வாங்க' என்றழைத்து இனிப்பு வழங்கிய காட்சி அருமையாக இருந்தது. அருகிலிருந்த ஒருவர், 'எல்லாம் நம்ம மன்ற ஏற்பாடு' என்றார்.

பார்த்து அதிசயித்துக்கொண்டே நாங்கள் ரிசர்வ் செய்திருந்த முதல் வகுப்பு பாலகனிக்குச்செல்ல, அங்கு இரண்டு பெண்கள் நின்று வரவேற்று இனிப்பு வழங்கினர். தியேட்டர் உள்ளே ஒரே ஆரவார இரைச்சல். அரங்கு நிறைந்ததும் படம் துவங்கியது. ஒருவர் உஷார் படுத்தியது போல படம் முதலில் கருப்பு வெள்ளையில் துவங்கி, ரயில் பாடல் முழுக்க அப்படியே ஓடியது. டைட்டில் துவங்கியதும் கலருக்கு மாறியது. டி.எம்.எஸ்ஸின் ஆலாபனையிலேயே டைட்டில் முடிந்து 'இயக்கம் பி.மாதவன்' என்ற எழுத்து மறைந்ததும் “மேயாத மான்” என்று தலையைத்திருப்பினார் பாருங்க. அவ்வளவுதான் தியேட்டரே அதகளமாகிவிட்டது. கைதட்டல்கள் என்ன, விசில்கள் என்ன, ஆரவாங்கள் என்ன, தியேட்டர் முழுக்க காகிதங்கள் பறந்தன. அப்போ பிடிச்ச 'டெம்போ'தான். படம் முடிகிற வரைக்கும் நிற்கவில்லையே. அதுவும் ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில் இத்தகைய ஆரவாரம் ஏற்பட்டது மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

'மதன மாளிகையில்' பாடல் துவங்கியதும் இன்னொரு அதிசயம். மன்றத்தினர் ஆங்காங்கே நின்றுகொண்டு மல்லிகை வாடையை பம்ப் மூலம் ஸ்ப்ரே பண்ணிக்கொண்டிருந்தனர். தியேட்டர் முழுக்க மல்லிகை வாடை கமகமத்தது. சூழ்நிலையே மனதை மயக்குவது போல இருந்தது.

படம் வருவதற்கு முன்பே 'அம்மம்மா தம்பியென்று' பாடல் பாப்புலராயிருந்தாலும் இவ்வளவு உணர்ச்சி மயமாக இருக்கும் என்று நினைக்கவில்லை. டேபிள் டென்னிஸ் பேட்டில் தாளம்போடத்துவங்கியதிலிருந்து பாடலின் ஒவ்வொரு வரிக்கும் கைதட்டல் பறந்தது. பாடல் முடிந்து பையைக்கையில் எடுத்துக்கொண்டு, துண்டால் வாயைப்பொத்தியவாறு செல்லும்போது, அதுவரை அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள் வெடிக்க கைதட்டலால் கூரை தகர்ந்தது.

அதுபோல 'மதன மாளிகை'யும், 'இன்குலாப் ஜிந்தாபாத்' பாடலும் ரசிகர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. 'இன்குலாப்' பாடலின் ஒவ்வொரு வரியும் ரசிகர்களையும் பெருந்தலைவரின் தொண்டர்களையும் உணர்ச்சி வசப்படுத்த, அந்தப்பாடலிலும் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை கைதட்டல். ஏனென்றால் அந்தப்பாடல் அப்போதுதான் எல்லோரும் முதன்முதலில் கேட்டனர். படம் பார்க்கும் முன் ‘இன்குலாப்’ பாடலைப்பற்றி எதுவுமே ரசிகர்களுக்குத் தெரியாது. (படம் வந்த பின்னும், வானொலியில் ஒளிபரப்ப தடைசெய்யப்பட்டிருந்தது ஏன் என்பது தெரியவில்லை. இப்போது தொலைக்காட்சிகளில் சர்வ சாதாரணமாக ஒளிபரப்பப் படுகிறது)

படம் முடிந்து வெளியே வரும்போது மனதுக்கு நிறைவாக இருந்தது. 'அண்ணனுக்கு இந்தப்படமும் வெற்றிதான்' என்று ரசிகர்கள் மகிழ்ச்சிக் கூச்சலிட்டுச்சென்றனர். மறுபுறம் காங்கிரஸ் இயக்கப்பெரியவர்கள் 'அவர் இறந்து போற மாதிரி முடிச்சது சரிதான். இல்லேன்னா தியாகத்தை எப்படிக் காட்ட முடியும்' என்று சர்டிபிகேட் வழங்கிப்பேசியவாறு சென்றனர்.

இதே மகிழ்ச்சியுடன் வீட்டில் போய்ப்படுத்தேன். வெகுநேரம் வரை தூக்கம் வரவில்லை. எப்படி வரும்..?.

JamesFague
21st November 2014, 10:58 AM
Thanks to Mr Karthik

நடிகர்திலகத்தின் கிருஸ்துமஸ் பரிசு 'ரோஜாவின் ராஜா'
36-வது உதய தினம் (25.12.1976 - 25.12.2011)

1976-ம் ஆண்டு நடிகர்திலகத்துக்கு அவ்வளவு வெற்றிகரமான ஆண்டு அல்ல. அந்த ஆண்டில் வெளிவந்த சில படங்கள் 100 நாட்களைக்கடந்ததுடன், ஒரு படம் இலங்கையில் வெள்ளிவிழாப்படமாகவும் அமைந்தது. இருப்பினும் அவருக்கு இதற்கு முந்தைய ஆன்டுகளைப்போல பரபரப்பான ஆண்டு அல்ல. அதற்குக்காரணம், இந்த ஆண்டின் துவக்கத்தில் தமிழக அரசியலில் குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட சில மாற்றங்கள் என்பதை ஏற்கெனவே இங்கே பலமுறை விரிவாக அலசியிருக்கிறார்கள். குறிப்பாக நமது வரலாற்று விற்பன்னர் முரளி சார் தெளிவாக பல பதிவுகளில் சொல்லியிருக்கிறார்.

1976-ம் ஆண்டு வெளிவந்த படங்கள் சென்னையில் ரிலீஸான அரங்குகள்

உனக்காக நான் - தேவி பாரடைஸ், அகஸ்தியா புவனேஸ்வரி
கிரகப்பிரவேசம் - பைலட், அகஸ்தியா, முரளிகிருஷ்ணா, கமலா
சத்யம் - வெலிங்டன், கிரௌன், ராக்ஸி, நூர்ஜகான்
உத்தமன் - சாந்தி கிரௌன், புவனேஸ்வரி
சித்ரா பௌர்ணமி - பிளாசா, ஸ்ரீபத்மனாபா, உமா
ரோஜாவின் ராஜா - பிளாஸா, பிராட்வே, ராக்ஸி, கமலா

ரசிகர்களால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது வருடத்துவக்கத்தில் வெளியான 'உனக்காக நான்'. பாட்டும் பரதமும் போலவே இதுவும் அரசியல் சூழலில் சிக்குண்டதால் எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை. நடிகர்திலகம் - பாலாஜி அணியின் முதல் சரிவு. (இருந்தாலும் சரியாக ஒரே ஆண்டில், பழைய காம்பினேஷன்களை மாற்றி 'தீபம்' படத்தின் மூலம் வெற்றியைக்கண்டனர். நடிகர்திலகத்தின் தேக்க நிலையும் சீரானது).

அடுத்து வந்த கிரகப்பிரவேசம், சத்யம் படங்களை ரசிகர்கள் அதிகம் எதிபார்க்கவில்லை. காரணம் அவை பரபரப்பில்லாத குடும்ப்பபடங்கள் என்பது முன்பே தெரிந்து போயிற்று. கிரகப்பிரவேசம் படத்தை டி.யோகானந்த் இயக்கியிருந்தார். யோகானந்த் படம் எப்படியிருக்கும், முக்தா படம் எப்படியிருக்கும், சி.வி.ஆர்.படம் எப்படியிருக்கும் என்பதெல்லாம் ரசிகர்களுக்கு அத்துப்படி. ஆகவே எதிர்பார்ப்புக்களை மூட்டைகட்டினர். இருந்தாலும் தாய்க்குலத்தின் ஆதரவைக்கொண்டும் அருமையான தியேட்டர்கள் அமைந்ததாலும் படம் ஓரளவு நன்றாகவே ஓடி சுமார் வெற்றியை பெற்றது.

1962-ல் சிறுவனாக நடித்த பார்த்தால் பசிதீரும் படத்துக்குப்பின்னர் நடிகர்திலகத்துடன் 'வாலிபன் கமல்' இணைந்து நடித்த முதல் படம் சத்யம். பாலச்சந்தரின் அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள் உள்பட பல்வேறு படங்கள் மூலம் கமல் நன்றாக பாப்புலராகிவிட்ட நேரம். அதனால் நடிகர்திலகத்துடன் இணைகிறார் என்றதும் எதிர்பார்ப்பு தலைதூக்கியது. சிவாஜிநாடகமன்ற இயக்குனர் எஸ்.ஏ.கண்ணன் இயக்கிய முதல் படம். என் நினைவு சரியாக இருக்குமானால் சாந்தி படத்துக்குப்பின்னர் தேவிகா மீண்டும் நடிகர்திலகத்தின் ஜோடியாக நடித்த படம். இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தும் கதை பழைய ஜமீன்தார் காலத்து கதைபோல ஆனதால் எதிர்பார்த்த பெரிய வெற்றியைப்பெறவில்லை எனினும் பரவலாக நன்றாக ஓடியது. இலங்கையில் கிரகப்பிரவேசம், சத்யம் இரண்டுமே நல்ல வெற்றியைப்பெற்றன.

ரசிகர்களின் அடுத்த பெரிய எதிர்பார்ப்பு 'உத்தமன்' படம். எங்கள் தங்க ராஜா என்ற மாபெரும் வெற்றிப்படத்தைத்தந்த வி.பி.ராஜேந்திர பிரசாத்தின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வந்த படம். மஞ்சுளா ஜோடி. சாந்தி, கிரௌன் புவனேஸ்வரி காம்பினேஷனில் இந்த ஆண்டில் வெளியான ஒரே படம். படம் நன்றாகவே இருந்தது. கே.வி.எம். இசையில் பாடல்கள் அனைத்தும், அவற்றைப்படமாக்கிய விதமும் நன்றாகவே இருந்தன. ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் அமைந்திருந்தது. காஷ்மீர் காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தன. தமிழகத்தில் பெரிய வெற்றியைப்பெறும் என்று எல்லோருக்கும் நம்பிக்கையிருந்தது. என்ன காரணமோ மதுரையில் மட்டும் 100 நாட்களைத்தாண்டி ஓடியது. சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் 10 வாரங்களைக் கடந்தது. (இலங்கையில் இது பெரிய வெற்றி பெற்று வெள்ளிவிழா கொண்டாடியது).

தீபாவளிக்கு 'இளைய தலைமுறை', 'சித்ரா பௌர்ணமி' என இரண்டு படங்கள் வெளியாவதாக அறிவிப்புக்கள் வந்தன. இரண்டுமே சற்று நீண்டகால தயாரிப்பு. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இளைய தலைமுறை கடைசி நேரத்தில் தயாரிப்பாளருக்கும் வங்கிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையால் தள்ளிப்போனது. இப்படம் பின்னர் அடுத்த ஆண்டு மே மாதம்தான் வெளியானது. சென்னை சென்ட்ரல் அருகில் வால்டாக்ஸ் ரோட்டிலுள்ள, புதிய படங்களே வெளியாகாத ஸ்ரீபத்மநாபா தியேட்டரில் 'சித்ராபௌர்ணமி' வெளியானது. அதுவே ரசிகர்களுக்கு முதல் கோணலாகப் பிடிக்காமல் போனது. இருந்தாலும் போய்ப்பார்த்தோம். ரசிகர்கள், பொதுமக்கள், தாய்மார்கள் என்று எத்தரப்பினரையும் திருப்திப்படுத்தாத படமாகப்போய், அந்த ஆண்டில் வெளிவந்த நடிகர்திலகத்தின் படங்களில் மிக மோசமான ரிசல்ட்டை சந்தித்தது.

இப்படி ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்த 1976-ம் ஆண்டின் இறுதிப்படமாக 'ரோஜாவின் ராஜா' வெளியாவதாக அறிவிப்பு வந்தது. அதுவும் சற்று நீண்டகாலத் தயாரிப்புதான். இப்படத்தின் தயாரிப்பாளர் என்.வி.ஆர். பிக்சர்ஸ் என்.வி.ராமசாமி, ரோஜாவின் ராஜாவைத்துவக்கியபின், அதற்காக விநியோகஸ்தர்களிடம் பெற்ற தொகையைக்கொண்டு வேறு நடிகர்களை வைத்து புதுவெள்ளம் போன்ற படங்களை எடுத்ததால், இப்படம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஒருவழியாக படம் முடிவடைந்து டிசம்பர் 25 அன்று வெளியாவதாக விளம்பரம் வந்தது. வழக்கமாக காலை தினத்தந்தியில்தான் ரிசர்வேஷன் விளம்பரம் வெளியாவது வழக்கம். இப்படத்துக்கு முதல்நாள் மாலைமுரசிலேயே 'நாளைமுதல்' ரிசர்வேஷன் விளம்பரம் வந்தது.

வீட்டுக்கு மிக அருகிலேயே இருக்கும் பிராட்வே தியேட்டரில் எப்போதும்போல ரிசர்வேஷன் செய்யச்சென்றோம். என்னதான் சோர்வு இருந்தாலும் ரசிகளின் கூட்டத்துக்குக் குறைவில்லை. கேட் திறக்கும்வரை கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்தனர். ஒருதட்டியில் படத்தின் பெரிய போஸ்ட்டர் ஒட்டப்பட்டு வெளியில் வைக்கப்பட்டிருந்தது. நடிகர்திலகம் ஜிப்கோட், கூலிங் கிளாஸ் அணிந்து வாணிஸ்ரீயின் கைகளைக்கோர்த்தவாறு சற்று தலையைத்தூக்கி சிரித்துக்கொண்டிருக்கும் போஸ்ட்டர். அங்கிருந்த மூத்த ரசிகர்கள், அது 'அலங்காரம் கலையாத சிலையொன்று' பாடல் காட்சியென்று சொன்னார்கள். (படம் பார்த்தபோது அவர்கள் சொன்னது சரிதான் என்று தெரிந்தது).

பிராட்வே தியேட்டர் முன் கூட்டம் கூடியிருந்தபோதிலும், ரசிகர்கள் உற்சாகம் சற்று குறைந்து காணப்பட்டனர். அதற்குக்காரணம் 'மன்னவன் வந்தானடி' படத்துக்குப்பின் சென்னையில் அண்ணனின் 100-வதுநாள் போஸ்ட்டரைப் பார்க்க முடியவில்லை என்பதோடு, பிராட்வேயில் படம் வெளியாகிறதே என்ற வருத்தமும் கூட என்பது அவர்கள் பேச்சிலிருந்து தெரிந்தது. 'ஏன்யா இந்த தியேட்டர்ல ரிலீஸ் பண்றாங்க?. இவங்களுக்கு நம்ம படம்னாலே பிடிக்காதே. மானேஜரிலிருந்து முறுக்கு விற்கிறவன் வரையில் 'அவரோட ஆளுங்க'. நம்ம படம்னாலே கூட்டத்தோடு ஓடிக்கொண்டிருக்கும்போதே கழற்றி விட்டுடுவாங்க' என்று ஒருவர் சொல்ல இன்னொருவர் 'ஆமாமா, ஊட்டிவரைஉறவையும், ஞான ஒளியையும் நல்ல கூட்டம் இருக்கும்போதே எடுத்துட்டாங்க' என்று சொன்னார். கேட்டுக்கொண்டு நின்ற எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது. (பிற்காலத்தில் கல்தூண் படத்துக்கும் அப்படியே செய்தார்கள்).

கேட் திறந்தபின்னும் எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ரசிகர்கள் வரிசையில் போய் நின்றனர். அங்கும் கூட, அதற்குமுன் வந்த படங்களின் ஓட்டம் பற்றிய விமர்சனங்கள். ஏற்கெனவே வானொலி மூலம் 'அலங்காரம் கலையாத', 'ஜனகன் மகளை', 'ஓட்றா... ஓட்றா...' ஆகிய பாடல்கள் மக்கள் மத்தியில் பிரசித்தமாகியிருந்தன. (பிற்காலத்தில் 'ஓட்றா' பாடலை கேட்டால் எனக்கு அண்ணன் ஒரு கோயிலில் ஐ.எஸ்.ஆர். ஈகா தியேட்டர் லவுன்ச்சில் தர்ம அடி வாங்கும் காட்சிதான் நினைவுக்கு வரும்). நான் சுமார் ஐம்பதாவது ஆளாக நின்றிருந்திருப்பேன். எனக்குப்பின்னால் கூட்டம் நீண்டிருந்தது. முதல்நாள் மேட்னிக்காட்சிக்கே டிக்கட் கிடைக்க வாய்ப்பிருந்தது. இருந்தாலும் வழக்கம்போல மாலைக்காட்சிக்கே எங்கள் அணி டிக்கட் வாங்கிக்கொண்டோம். ரிசர்வேஷன் எந்தபரபரப்புமின்றி அமைதியாக நடந்துகொண்டிருந்தது. டிக்கட் வாங்கியதோடு வேலை முடிந்தது என்று போகாமல் எல்லோரும் வாசலிலும், ஸ்டில் போர்டு வைக்கப்பட்டிருக்கும் வழியிலும் கொத்து கொத்தாக நின்று படம் எப்படிப்போகும் என்று பேசிக்கொண்டிருந்தனர்.

'படம் ஏற்கெனவே லேட் படம். கொஞ்சமாவது கேப் கொடுத்தால்தான் ஓரளவுக்காவது ஓடும்' என்று ஒருவர் சொல்ல, இன்னொரு ரசிகர் 'எங்கே கேப் கொடுத்தாங்க?. மதிஒளி 15-ம்தேதி இஷ்யூ பார்த்தியா இல்லையா?. இன்னும் 19 நாளில் பொங்கலுக்கு 'அவன் ஒரு சரித்திரம்' வருது. அடுத்த 12 நாள்ள பாலாஜியோட 'தீபம்' ரிலீஸாகுது. இப்படி விட்டாங்கன்னா எப்படிப்பா?' என்று சொன்னார். தியேட்டர் மேனேஜரும் எல்லோரோடும் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போதே படத்தை மட்டம் தட்டிப்பேச ஆரம்பித்தார். அவர் பங்குக்கு 'திருவொற்றியூர் ஓடியன் மணியிலேயும் இந்தப்படம் (ரோஜாவின் ராஜா) ரிலீஸாகுதாமே. அப்போ தேறுவது கஷ்ட்டம்தான்' என்று சொல்ல, சிலர் ரகசியமாக, 'இப்பவே ஆரம்பிச்சுட்டாருய்யா' என்று சலிப்படைந்தனர்.

அப்போது பஸ்ஸில் வந்திறங்கிய ஒருவர் 'பிளாசாவிலே நல்லா ஜரூராக புக்கிங் நடதுப்பா, இங்கே ஏன் டல்லக்கிறது?' என்று வினவினார். பிராட்வேயில் அமைதியா புக்கிங் நடந்தாலும் அப்போதே ஒன்பது காட்சிகள் அரங்கு நிறைந்தன. ரிசர்வேஷன் தொடர்ந்துகொண்டிருக்க நாங்கள் வீடு திரும்பினோம்.

டிசம்பர் 25 அன்று கிருஸ்துமஸ் தினம். எங்கள் குடும்ப நண்பர் ‘டெய்ஸி மேடம்’ வீட்டிலிருந்து மதிய விருந்துக்கு அழைத்திருந்தார்கள். போய் சாப்பிட்டு விட்டு வந்து, நான்கு மணிக்கு மேல் நண்பர்களை ஒவ்வொருவராக இணைத்துக்கொண்டு பிராட்வே போய்ச்சேர்ந்தோம். வழக்கம்போல வடசென்னை மன்றங்கள் தியேட்டரை அலங்கரித்திருந்தனர். விடுமுறை நாள் என்பதால் கூட்டம் அதிகமாகவே இருந்தது. பிராட்வேயில் ஒரு அசௌகரியம் என்னவென்றால், கேட் திறக்கும் வரை சாலையில்தான் நிற்க வேண்டும். அதிகம் வாகனப்போக்குவரத்து உள்ள சாலையாதலால் ஒரே தூசியும் தும்பையுமாக இருக்கும். இப்போதும் அப்படித்தான் இருக்கிறது.

மேட்னி முடிந்து வெளியில் வந்த கூட்டம், 'படம் நல்லாயிருக்கு' என்று சொல்லிக்கொண்டு போனார்கள். மனதுக்கு திருப்தியாக இருந்தது. கரண்ட் டிக்கட் விற்பனைக்கு கூட்டம் முண்டியத்தது. தாய்மார்கள் கூட்டம் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருந்தது. சற்று நேரத்தில் அரங்கு நிறைய, கிட்டத்தட்ட இரண்டு மடங்கு கூட்டம் டிக்கட் கிடைக்காமல் திரும்பியது மனதுக்கு சந்தோஷமளித்தது. இந்த மகிழ்ச்சியோடு உள்ளே சென்று அமர்ந்தோம். நடிகர்திலகம் படம் முழுக்க நீல்நிற கூலிங் கிளாஸ் அணிந்து நடித்திருந்தது மனதுக்கு இதமாக இருந்தது. கல்லூரி விழாவில் 'சாம்ராட் அசோகன்' நாடகத்தை எதிர்பார்த்து காத்திருக்க, வாணிஸ்ரீ (கண்ணகி), சுருளிராஜன் (கட்டபொம்மன்) இவர்களின் இவர்களின் நாடகத்தைத்தொடர்ந்து உடனே அசோகன் நாடகத்தைத் துவக்காமல், இடையில் தேவையில்லாமல் ஒரு பாடலைப் போட்டு சொதப்பியிருந்தார்கள். சாம்ராட் அசோகன் நாடகத்துக்கு எதிர்பார்த்ததைப்போலவே ஆடியன்ஸ் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. செட்டில் எடுக்கப்பட்ட 'ரோஜாவின் ராஜா' பாடலுக்கும் (ஓ.. தலைவர் என்ன அழகு), மைசூர் அரண்மனை முன் எடுக்கப்பட்டிருந்த 'அலங்காரம் கலையாத' பாடலுக்கும் கூட நல்ல வரவேற்பு. பெரும்பாலான காட்சிகள் பரபரப்பில்லாமலேயே போனது. 'ஓடிக்கொண்டேயிருப்பேன்' பாடலும் நன்கு ரசிக்கப்பட்டது. மற்ற இடங்களின் ரெஸ்பான்ஸ் அவ்வளவு நினைவில்லை.

படம் முடிந்து வெளியே வந்தபோது, எல்லோரும் படம் நன்றாயிருப்பதாகவே பேசிக்கொண்டு போயினர். மேலும் இரண்டுமுறை பார்த்தபின், 'அவன் ஒரு சரித்திரத்துக்கு' தயாரானோம்.

JamesFague
21st November 2014, 11:05 AM
Thanks to Mr Karthik

'அவன் ஒரு சரித்திரம்' - இனிய நினைவுகள்
36-வது ஆண்டு உதயம் (14.01.1977 - 14.01.2012)

1976 டிசம்பர் இறுதியில் ரோஜாவின் ராஜா வெளிவருவதற்கு முன்பாகவே, 1977 பொங்கல் வெளியீடாக 'அவன் ஒரு சரித்திரம்' வரப்போகிறது என்ற விவரம் மதிஒளி, திரைவானம், பொம்மை, பேசும்படம் போன்ற இதழ்கள் மூலமாக அனைவரிடத்திலும் சென்று சேர்ந்து விட்ட விவரத்தை முன்பே சொல்லியிருந்தேன். அதற்கேற்றாற்போல அந்த இதழ்களும் அவன் ஒரு சரித்திரம் பற்றிய செய்திகளையும் பல்வேறு ஸ்டில்களையும் வெளியிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்தன. படத்தின் பெயரும் ஒரு அழகான பெயராக அமைந்ததில் ரசிகர்களுக்கு திருப்தி. பட வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தபோது, ‘பொங்கல் வெளியீடு பைலட், ஸ்ரீகிருஷ்ணா, அபிராமி,நூர்ஜகான் தியேட்டர்களில் அவன் ஒரு சரித்திரம்’ என்ற விளம்பரம் தினத்தந்தியில் வெளியானது. ரசிகர்களுக்கு ம்கா உற்சாகம். உற்சாகத்துக்குக் காரணம் அப்போதுதான் புதிதாக திறக்கப்பட்டிருந்த புரசைவாக்கம் 'அபிராமி a/c' தியேட்டரில் படம் வெளியாகிறது என்ற அறிவிப்புத்தான். ரிசர்வேஷன் ஆரம்பிக்கட்டும், அபிராமியில் புக் பண்ணி பார்த்துவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்திருந்தோம்.

அபிராமி என்றால் இப்போதிருக்கும் அபிராமி மெகாமால் எல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அன்னை அபிராமி, சக்தி அபிராமி தியேட்டர்கள் கூட அப்போது கட்டப்படவில்லை. அந்த வளாகத்தில் இருந்தது அபிராமி என்ற பெரிய தியேட்டரும், பால அபிராமி என்ற மினி தியேட்டரும்தான். அதுவரையில் அபிராமியில் படம் பார்த்ததில்லை. பார்த்தவர்களெல்லாம் தியேட்டரைப்பற்றி ஆகா, ஓகோவென்று புகழ்ந்ததால், சரி முதன்முதலாக அண்ணனின் புதுப்படத்தை அங்கே பார்ப்போம். ஒற்றைக்கு இரட்டை சந்தோஷமாக இருக்கட்டுமென்று, ரிசர்வேஷனுக்காகக் காத்திருந்தால்......

ரிசர்வேஷன் அன்று தினத்தந்தியில் வந்த விளம்பரத்தில் பெரிய ஏமாற்றம் ஏற்பட்டது. அபிராமி என்ற பெயர் அகற்றப்பட்டு அசோக் தியேட்டர் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. எல்லோருக்கும் ஷாக். 'நேரு ஸ்டேடியத்துக்கு எதிரில் இருக்கும் அசோக் தியேட்ட்ரா?. அது பராசக்தி வெளியான பழைய தியேட்டர் அல்லவா?. அதில் சமீப காலமாக புதிய தமிழ்ப்படங்கள் எதுவும் வெளியாவதில்லையே. பக்கத்திலுள்ள சௌகார்பேட்டையிலிருக்கும் மார்வாரிகளுக்காகவும், பெரியமேடு பகுதியிலிருக்கும் உருது பேசும் இஸ்லாமியர்களுக்காகவும் அங்கு வாரம் ஒரு இந்திப்படம்தானே போடுகிறார்கள்?. அந்த தியேட்டரை ஏன் புக் பண்ணியிருக்கிறார்கள்?. ஏற்கெனவே அந்த ஏரியாவில் ராக்ஸியில் ரோஜாவின் ராஜா ஓடிக்கொண்டிருக்கிறது. புவனேஸ்வரியில் குடியரசு தினத்தன்று தீபம் வெளியாகவிருக்கிறது. அட்லீஸ்ட் மேகலா அல்லது உமாவில் வெளியிட்டிருக்கலாமே. என்னய்யா இப்படி கவுத்துட்டாங்க?' என்று எல்லோரும் உற்சாகம் குன்றிப்போனார்கள்.

சரி, அபிராமி கனவுதான் போச்சு, பைலட் தியேட்டரிலாவது புக் பண்ணுவோம் என்று ஓரிருவர் யோசனை சொன்னதை மற்றவர்கள் மறுத்தனர். 'விடுங்கப்பா, நம்ம ஏரியா ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில் படம் ரிலீஸாகுது அப்புறம் என்ன கிருஷ்ணாவிலேயே புக் பண்ணுவோம்' என்று முடிவுசெய்து கிளம்பினோம். ஸ்ரீகிருஷ்ணா தியேட்டருக்குப்போனால் எங்களுக்கு முன்பே அங்கே பெருங்கூட்டம் கூடி நின்றது. பிராட்வே போல டல்லடிக்கவில்லை. ரசிகர்கள் உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் கூடி நின்றனர். அங்கேயும் ரசிகர்களிடையே அபிராமி தியேட்டர் மாற்றப்பட்ட பிரச்சினையே ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் போன சில நிமிடங்களிலேயே கேட் திறக்கப்பட்டு வரிசையாக உள்ளே அனுப்பப்பட்டனர். ஏற்கெனவே போலீஸ் வந்துவிட்டிருந்தது. வரிசையில் நின்று திரும்பிப்பார்த்தால் எங்களுக்குப்பின்னால் கியூ வளைந்து நெளிந்து அனுமார் வால் போல நீண்டிருந்தது. எங்களுக்கு உற்சாகமாக இருந்தது.

கியூவில் நிற்கும்போதே படத்தைப்பற்றி ரசிகர்கள் மத்தியில் பேச்சு நடந்துகொண்டிருந்தது. 'அண்ணனுக்கு இதில் க்லெக்டர் ரோல். நல்லா பண்ணியிருக்காராம். ஸ்டில்ஸெல்லாம் பார்க்கும்போது ரொம்ப கலக்கலாகவே இருக்கிறது' என்று ரசிகர்களுக்குள் கருத்துப்பறிமாற்றங்கள். இதற்கு முன் மற்றவர்கள் பேசுவதைக்கேட்டு ரசித்துக்கொண்டிருந்த நாங்கள், இப்படம் வந்த காலகட்டத்தில் நாங்களே படங்களைப்பற்றிக் கருத்துக்களைப் பறிமாறிக்கொள்ளும் அளவுக்கு வளர்ந்துவிட்டோம்.

ஸ்ரீகிருஷ்ணாவில் எப்போதுமே ரிசர்வேஷனுக்கு, சாதாரணமாக காட்சி நேரத்தில் குறைந்த கட்டணத்துக்கு டிக்கட் கொடுக்கும் கவுண்ட்டரையே பயன்படுத்துவார்கள். அங்குதான் நீண்ட கியூ நிற்க இடமிருக்கும் என்பதால். அன்றைக்கும் அப்படியே. காலை ஒன்பது மணிக்கு புக்கிங் துவங்கியது. பிளாக் டிக்கட்டை கட்டுப்படுத்துவதற்காக, ரிசர்வேஷன் செய்யும்போது ஒரு ஆளுக்கு ஐந்து டிக்கட்டுக்கு மேல் கொடுக்க மாட்டார்கள். அதனால் நாங்கள் எல்லோருமே கியூவில் நின்றோம். வரிசை மளமளவென்று முன்னேறியது. எங்களுக்கு பயம். முதல்நாள் டிக்கட் கிடைக்காதோ என்று. கவுண்ட்டர் பக்கத்திலேயே ரிசர்வேஷன் சார்ட் வைத்து, காட்சி நிறைய நிறைய ‘full' என்று ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வந்தார்கள். நாங்கள் கவுண்ட்டரை நெருங்கும்போது மேட்னி full என்று ஒட்டினார்கள். எங்களுக்கு அச்சம் எழுந்தது. நல்லவேளை நாங்கள் வாங்கும்போது மாலைக்காட்சிக்கு டிக்கட் நிறையும் தறுவாயில் இருந்தது. நாங்கள் வாங்கியபின் அடுத்த ஆள் வாங்கியிருப்பார். மாலைக்காட்சியும் full என்று ஒட்டினார்கள். எங்களுக்கோ பிடிபடாத சந்தோஷம். எதையோ சாதித்துவிட்டது போலிருந்தது.

டிக்கட்தான் வாங்கிவிட்டோமே என்று வீட்டுக்குப்போய்விட்டால் எப்படி?. கவுண்ட்டர் அருகில் நிறக் விடாமல் போலீஸ் விரட்டியதால் டிக்கட் வாங்கிய ஏராளமான ரசிகர்கள் சற்று தூரத்தில் நின்று, மீண்டும் படத்தைப்பற்றி அதுவரை வந்திருக்கும் செய்திகளை அசைபோட்டுக் கொண்டிருந்தோம். இருந்தாலும் எங்கள் கண் முழுக்க 'சார்ட்'டில்தான் இருந்தது. வரிசை நகர நகர 'full' ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டே வந்தனர். நாங்கள் புறப்படும் முன்னரே ஸ்ரீகிருஷ்ணாவில் பதினான்கு காட்சிகள் நிறைந்தன. திருப்தியாக வீடு வந்தோம்.

அப்போது ஒன்டே கிரிக்கெட் தோன்றாத காலம். கிரிக்கெட் என்றால் அது டெஸ்ட் மேட்ச்தான். இந்தியாவில் வழக்கமாக டிசம்பரில் துவங்கி கல்கத்தா, டில்லி, நாக்பூர் என்று சுற்றியபின் சரியாக பொங்கல் விடுமுறைக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போடுவார்கள். பொங்கலுக்கு தமிழ்நாட்டில் நான்கு நாட்கள் விடுமுறையென்பதால் வருடாவருடம் இந்த ஏற்பாடு. அப்போது சென்னையில் கருப்புவெள்ளை டிவி இருந்தபோதிலும், மைதானத்தில் வசூல் குறைந்துவிடும் என்பதற்காக தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அனுமதிக்க மாட்டார்கள். ரேடியோ கமெண்ட்ரி மட்டுமே. நாங்களும் வருடாவருடம் ஐந்துநாட்கள் பகல் முழுவதும் சேப்பாக்கம் மைதானமே கதியென்று இருப்போம். அதுவும் எப்படி?. என்னமோ நாங்களே பிளேயர்கள் போல ஒய்ட் அண்ட் ஒய்ட்டில் போய் அமர்ந்துகொண்டு, காதில் சின்ன பிலிப்ஸ் ட்ரான்ஸிஸ்டரில் கமெண்ட்ரி கேட்டுக்கொண்டே நேரில் கிரிக்கெட்டைப் பார்ப்பதில் ஒரு அலாதி திருப்தி. (அந்த சந்தோஷங்கள் இப்போது டிவி முன் அமர்ந்து, மிகத்தெளிவாக, குளோஸப் காட்சிகளாக, ஆயிரத்தெட்டு ரீப்ளேக்களுடன் பார்க்கும்போது கிடைக்கவில்லை). அந்த வருடம் பொங்கலுக்கு, அண்ணனின் 'அவன் ஒரு சரித்திரம்' படத்துக்காக கிரிக்கெட்டை தியாகம் செய்தோம். காவஸ்கரும், கபில்தேவும், யஷ்பால் சர்மாவும், ஷிவ்லால் யாதவும், சந்தீப் பட்டீலும் இரண்டாம் பட்சமாகிப்போனார்கள். (இவர்களின் ரசிகர்கள் மன்னிக்க).

JamesFague
21st November 2014, 11:06 AM
பொங்கல் தினமும் வந்தது. மூன்று நாட்கள் கல்லூரி விடுமுறை. (இப்போ காலேஜ் ஸ்டூடண்ட் ஆயிட்டோமாக்கும்). பொங்கல் கொண்டாட்டம் அதுபாட்டுக்கு ஆட்டோமாட்டிக்காக நடந்துகொண்டிருந்தது. எங்களுக்கோ, 'ராஜா' படத்தில் கேரள ஆற்றுப்பாலத்தின் அருகில் உட்கார்ந்து நடிகர்திலகம் ஜெயலலிதாவிடம் சொல்வது போல, 'எப்படா மாலைவரும், மாலைவரும்'னு காத்துக்கிட்டிருந்தோம். மதிய உணவு முடிந்ததும் இருப்புக்கொள்ளவில்லை. மூணு மணிக்கெல்லாம் கிளம்பி விட்டோம். பொங்கல் தினமல்லவா?. பிராட்வேயில் 'ரோஜாவின் ராஜா' FULL. பக்கத்தில் பிரபாத்திலும் ஏதோ ஒரு படம் FULL. ஸ்ரீகிருஷ்ணாவை அடைந்தபோது மணி மூணரை இருக்கும். வெளியில் மேட்னி ‘HOUSE FULL’ போர்டு பளிச்சென்று தொங்கியது. (இடைவேளைவரை போர்டு தொங்கும். பின்னர் எடுத்து விடுவார்கள்). மெயின்கேட்டுக்கு வெளியே அந்த நேரத்திலும் அடுத்த காட்சிக்காக திரளான கூட்டம். எங்களுக்கு ஏதோ 76-இன் தேக்க நிலை மாறி, மீண்டும் 72, 73 திரும்பிவிட்டது போலிருந்தது. நல்ல அறிகுறியாகத்தெரிந்தது. மனம் சந்தோஷத்தில் துள்ளியது. அங்கு நின்ற ரசிகர்கள் மத்தியிலும் அதுவே பேச்சாக இருந்தது.

தியேட்டர் அலங்காரங்களைப் பார்த்தோம். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள், ராஜபார்ட் ரங்கதுரைக்கு செய்யப்பட்டிருந்தது போல அதே காங்கிரஸ் கொடிகள், பேனர்கள். கட் அவுட்களுக்கு மூவண்ண நிறத்தில் மாலைகள் என கோலாகலமாக இருந்தது. ஆனால் 73 டிசம்பருக்கும் 77 ஜனவரிக்கும் அரசியலில் பெரிய மாற்றம். அப்போது (73ல்) பெருந்தலைவர் உயிருடன் இருந்தார். ஸ்தாபன காங்கிரஸ்தான் தமிழ்நாட்டின் ஒரே காங்கிரஸ் என்ற துடிப்போடு செயல்பட்டு வந்தது. 1975 அக்டோபரில் தலைவர் மறைந்ததும், நிலைமை மாறிப்போனது. ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாகப்பிரிந்து, ஒரு அணி மகாதேவன்பிள்ளை தலைமையில் நடிகர்திலகம், மூப்பனார், மற்றும் சிவாஜி மன்றத்தினர் அனைவரும் இ.காங்கிரஸில் இணைந்தோம். இன்னொரு பிரிவினர் பா.ராமச்சந்திரன், குமரி அனந்தன் ஆகியோர் தலைமையில், அப்போது உதயமாகியிருந்த ஜனதா கட்சியில் இணைந்தனர். தமிழகத்தில் தி.மு.க.ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசுத்தலைவர் ஆட்சி ஓராண்டுக்கு மேல் நடைபெற்று வந்தது. நாடெங்கும் இந்திராவின் 'இருபது அம்சத்திட்டம்' பற்றிய பிரச்சாரம் வலுப்பெற்று வந்தது. நாடெங்கும் அமல்படுத்தப்பட்டிருந்த எமர்ஜென்ஸி, வடநாட்டில் எதிர்ப்பையும், தென்னாட்டில் வரவேற்பையும் பெற்றிருந்தது. இத்தகைய சூழ்நிலையில்தான் 'அவன் ஒரு சரித்திரம்' வெளியானது.

வடசென்னை ரசிகர்கள் புதிய உற்சாகத்துடன் ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரை அலங்கரித்திருந்தனர். ரசிகர்மன்றங்களின் பெரிய பெரிய பேனர்களும் சிறப்புத்தட்டிகளும், நாலாபுறமும் நடிகர்திலகத்தின் பல்வேறு வண்ணப்படங்கள் ஒட்டப்பட்ட ராட்சத ஸ்டார்களுமாக தியேட்டரே களைகட்டியிருந்தது. மிண்ட் பகுதியைச்சேர்ந்த 'கர்ணன் கணேசன் கலைமன்றத்தினர்' மூன்று அடுக்கு பந்தல் அமைத்திருக்க, ராயபுரம் 'மாடிப்பூங்கா' ரசிகர்மன்றத்தினர் நடிகர்திலகத்தின் சாதனைகளை விளக்கி, பல பக்கங்கள் அடங்கிய சிறப்புமலர் வெளியிட்டிருந்தனர் (விலை 1 ரூபாய்). இவைபோக வண்ணாரப்பேட்டை, மண்ணடி பகுதி ரசிகர்மன்றத்தினரும் தனித்தனி நோட்டீஸ்கள் அச்சடித்து விநியோகித்தனர்.

வழக்கமாக கிரௌனில்தான் இப்படிப்பட்ட கொண்டாட்டங்கள் அதிகமாக நடப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் ஸ்ரீகிருஷ்ணாவில் நடந்தது ஆச்சரியமாக இருந்தது. அதற்கு மூத்த ரசிகர் ஒருவர் சொன்ன காரணம், 'ஒருகாலத்துல பாவமன்னிப்பு, பாலும் பழமும், ஆலயமணி, புதிய பறவைன்னு கிருஷ்ணா நம்ம கோட்டையாகத்தான் இருந்தது. இடையில் நாம கிரௌன் பக்கம் போனதால் 'அவங்க' பிடிச்சிக்கிட்டாங்க. இப்போ மீண்டும் நாம பிடிக்கணும்னுதான் இந்த ஏற்பாடுகள்'’ அப்படீன்னார். யோசித்ததில் அவர் சொன்னதும் சரியாகத்தான் பட்டது. (இடைப்பட்ட காலத்தில் One in Thousand, Resided Temple, Slavery Girl, Our Country, Rickshawala என்று ‘அவர்’தான் பிடித்து வைத்திருந்தார்).

நீண்ட இடைவெளிக்குப்பின் காஞ்சனா நடித்திருக்கிறார், அத்துடன் மஞ்சுளா எட்டாவது படமாக ஜோடியாக நடித்திருக்கிறார் (இடையில் ஒன்பதாவது படமாக சத்யம் படத்தில் ஜோடியில்லாமலும் நடித்தார்). இரண்டு கதாநாயகிகள் என்பதால் யார் ஜோடி, அல்லது இருவருமே ஜோடியா என்பது போன்ற கேள்விகள் அங்கே உலா வந்தன. படம் வருவதற்கு முன்பே நான்கு பாடல்கள் வெளியாகி பிரபலமாகியிருந்தன. அவற்றில் 'வணக்கம் பலமுறை சொன்னேன்' பாடல் பயங்கர HIT . அடுத்து 'என் மனது ஒன்றுதான் உன்மீது ஞாபகம்' மற்றும் 'மாலையிட்டான் ஒரு மன்னன்' பாடல்களும் பிரபலமடைந்திருந்தன. 'நாளை என்ன நாளை.. இன்றுகூட நமதுதான்' பாடல் அங்கு நின்ற ரசிகர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டது.

'அது என்னப்பா, அந்தப்பாடலை இப்படி துவக்கியிருக்கார்?' என்று ஒருவர் கேட்க அதற்கு இன்னொருவர், 'தெரியலையா, அவருக்காக வாலி 'நாளை நமதே' அப்படீன்னு பாட்டு எழுதியிருக்காரே அதுக்குப் போட்டியா இவருக்காக கண்ணதாசன் 'நாளை என்ன நாளை... இன்றுகூட நமதுதான்' அப்படீன்னு எழுதியிருக்கார்'னு சொன்னதும் ரசிகர்கள் கைதட்டினார்கள். அந்தப்பாடல் காட்சி படத்தில் எப்படியிருக்குமென்று பார்க்க எல்லோருக்கும் ஆவலாக இருந்தது.

ஏற்கெனவே இடைவேளை முடிந்து, படம் துவங்கியபின் மெயின் கேட் திறந்துவிடப்பட்டு, காம்பவுண்டுக்குள்தான் இவ்வளவு பேச்சுக்களும் நடந்து வந்தன. கரண்ட் புக்கிங் கவுண்ட்டர்களுக்கு மக்கள் அனுமதிக்கப்பட்டு போலீஸ் உதவியுடன் வரிசை நீண்டிருந்தது. ரொம்ப நாளைக்குப்பிறகு கட்டுக்கடங்காத கூட்டத்தைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

மேட்னிஷோ முடிந்து மக்கள் வெளியே வரத்துவங்கினர். அவர்கள் வெளியே செல்ல வழிவிட்டு கூட்டம் ஒதுங்கிக்கொண்டதுடன், வந்தவர்களிடம் அபிப்பிராயம் கேட்டனர். பொதுமக்கள் அனைவருமே 'படம் நல்லாயிருக்கு' என்று சொல்லியவண்ணம் வெளியே செல்ல, படம் பார்த்த ரசிகர்கள் ஏற்கெனவே நின்றவர்களோடு கலந்து நின்று படம் பற்றி விலாவரியாகச் சொன்னார்கள். ஒருவர் 'மஞ்சுளாதான் ஜோடி, காஞ்சனா ஜோடியில்லை' என்றார். இன்னொருவர், 'என்மனது ஒன்றுதான் பாட்டு இல்லேப்பா. அதுக்கு பதிலா அம்மானை என்ற பாட்டை சேர்த்திருக்காங்க. அதுவும் நல்லாத்தான் இருக்கு' என்றார். இன்னும் சிலர், 'பெருந்தலைவருக்கு மாலை போட்டுவிட்டு தலைவர் ஊர்வலம் போற பாட்டு சூப்பர்பா' என்றார். தியேட்டருக்குள் பதினைந்து நிமிடங்களில் பாப்கார்ன் குப்பைகள் வாரப்பட்டு, மாலைக்காட்சிக்காக மக்கள் அனுமதிக்கப்பட்டனர். இம்முறை காங்கிரஸ் மகளிர் அணியினர் வாசலில் நின்று அனைவருக்கும் லட்டு வழங்கினார்கள்.

JamesFague
21st November 2014, 11:06 AM
உள்ளே சென்று அமர்ந்தோம். படம் துவங்கும்வரை ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக, ஆர்வத்துடன் சற்று சத்தமாக உரையாடிக்கொண்டிருந்ததால் எங்கும் ஆரவாரமாக இருந்தது. நான் முதலில் குறிப்பிட்டது போல, 1977-ம் ஆண்டு 72-ஐத் திரும்பக்கொண்டுவந்துவிட்டது போலத்தோன்றியது. படம் துவங்கியதும் ஆரவாரம் அதிகரித்தது. ஒரு முடிவோடு வந்திருந்த ரசிகர்கள் அனைவரும் காட்சிக்கு காட்சி கைதட்டி மகிழ்ந்தனர். 'அம்மானை... அழகுமிகும் கண்மானை' பாடலை மிக அட்டகாசமாகத்துவக்கியிருந்தார் மெல்லிசை மன்னர். இதற்குமுன் வெளியில் கேட்டிராத பாட்டு. கட்டம்போட்ட சஃபாரி சூட்டில் நடிகர்திலகமும், சிக்கென பாவாடை தாவணியில் மஞ்சுளாவும் தோன்ற அழகாக வெளிப்புறப்படப்பிடிப்பாக படமாக்கியிருந்தார் கே.எஸ்.பிரகாஷ்ராவ். வான்புகழ்கொண்ட 'வசந்த மாளிகை'யை இயக்கியவராயிற்றே. டி.எம்.சௌந்தர்ராஜனின் கம்பீரக்குரலும், வாணிஜெயராமின் கனிவுக்குரலும் பாடலை எங்கோ உயரத்துக்கு இட்டுச்சென்றன.

டி.கே.பகவதி, மேஜர் சுந்தர்ராஜன், எஸ்.வரலட்சுமி, வி.கே.ராமசாமி, எம்.பானுமதி ஆகியோர் மிக நிறைவாக நடித்திருந்தனர். ஸ்ரீகாந்தின் நடிப்பு படு அட்டகாசமாக அமைந்திருந்தது. தம்பியாக இருந்துகொண்டே வில்லனாகச்செயல்படும் காட்சிகளில் அருமையாகச் செய்திருந்தார். டென்னிஸ்கோர்ட்டில் உட்காரவைத்து நடிகர்திலகம் ஸ்ரீகாந்துக்கு அட்வைஸ் செய்யும் இடம், படத்தின் ஜீவக்காட்சிகளில் ஒன்று.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 'வணக்கம் பலமுறை சொன்னேன்' பாடல், கானக்குயில் சுசீலாவின் ஆலாபனையுடன் துவங்க, மாடிப்படியின் மேல்பகுதியில் சிவந்தமண் நாயகியைப்பார்த்ததும் ரசிகர்களின் கைதட்டல் அதிர வைத்தது. இப்பாடலில் நடிகர்திலகத்துக்கு அருமையான கருப்பு ஃபுல்சூட் உடையுடன் Hair Style -ம் அருமையாக இருக்கும். ஒரு கலெக்டருக்குரிய கண்ணியத்தோற்றம் அளித்தார். சற்றும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் பார்டருடன் கூடிய வெள்ளைப்புடவையணிந்த நடனமாதர்கள் பாடலில் பங்கேற்க ரசிகர்கள் உற்சாக வெள்ளம் கரை கடந்தது. நடிகர்திலகம் 'வண்ணத்திலகங்கள் ஒளிவீசும் முகங்கள்' என்ற சரணத்தைப்பாடியவாறு, காங்கிரஸ் புடவையணிந்த அந்த நடனமாதர்களின் முன்னால் ஸ்டைலாக நடந்துவரும்போது, ரசிகர்கள் ஆரவாரத்தில் தியேட்டரே ஒருவழியானது. நாங்கள் உணர்ச்சிவெள்ளத்தில் திக்குமுக்காடிப்போனோம். பின் வரிசையில் இருந்த நடுத்தர வயதைக் கடந்த ரசிகர் ஒருவர், 'சிவாஜி படத்துல இந்தமாதிரி ஆரவாரத்தைப்பார்த்து ரொம்ப நாளாச்சுப்பா' என்று சொல்லிக்கொண்டிருந்தார். உண்மைதான்.

அங்கங்கே நிறைய பொடியும், நெடியும் கலந்து எழுதப்பட்ட ஆரூர்தாஸின் வசனங்கள் ரசிகர்களாலும் மக்களாலும் புரிந்துகொள்ளப்பட்டு ரசிக்கப்பட்டன. கலெக்டர் பதவியை உதறித்தள்ளிவிட்டு பொதுவாழ்வில் இறங்கும் நடிகர்திலகம், பூங்காவிலிருக்கும் பெருந்தலைவர் சிலைக்கு மாலையணிவித்து ஊர்வலத்தைத் துவங்குவதாக அமைந்த பாடல் துவங்கியது......

வெள்ளை குர்தா, ஜிப்பா அணிந்து அதன்மேல் கட்டம் போட்ட கதர் ஷெர்வாணியும் அதன்மீது பேட்ஜும் அணிந்தவாறு பெருந்தலைவர் கர்மவீரர் சிலைமுன் இருக்கும் படிக்கட்டில் பெரிய மாலையுடன் ஏறும் நடிகர்திலகம்,
'நாளை என்ன நாளை... இன்றுகூட நமதுதான்
வேளை நல்ல வேளை.. விழுந்தவர்க்கு வாழ்வை
வழங்கவாரும் தோழரே'
என்ற முழங்கியவாறு சிலைக்கு மாலை அணிவிக்கும்போது கைதட்டல், விசில், காகித வீச்சு என கிருஷ்ணா தியேட்டரே ஆடிப்போனது. அதிலிருந்து பாடல் முடியும்வரை வரிக்கு வரி கைதட்டல்கள்தான். குறிப்பாக, 'ஞானத்தோடு வாழுவோம்.. நிதானத்தோடு வாழுவோம் மாபெரும்தலைவர் சொன்ன மானத்தோடு வாழுவோம்' என்ற வரிகளின்போது கூடுதல் ஆரவாரம். ஊர்வலத்தின் முன்வரிசையில் மஞ்சுளா, காஞ்சனா இருவரும் நடந்துவரும் காட்சியும் ரசிக்கப்பட்டது. படம் நிறைவுறும் தறுவாயில் நடிகர்திலகம் உரையாற்றும்போது, பாரதப்பெருந்தலைவி அன்னை இந்திரா அவர்களின் இருபது அம்சத்திட்டத்தை குறிப்பிட்டுப்பேசியபோதும், பெருந்தலைவரைப் புகழ்ந்து பேசியபோதும் கைதட்டல் விண்ணைப்பிளந்தது.

படம் முடிந்து வெளியே வரும்போது ரசிகர்கள் மத்தியில் ஒரே ஆரவாரம், 'அண்ணன் சிவாஜி வாழ்க', 'அன்னை இந்திரா வாழ்க' என்ற் கோஷங்கள் அவ்வழியே சாலையில் செல்வோரின் கவனத்தைத்திருப்பின. இன்னும் சில ரசிகர்கள் 'திரும்பியது எங்கள் பொற்காலம்' என்று கோஷமிட்டனர். அடுத்த காட்சிக்கு வரிசையில் நின்ற ரசிகர்களைப்பார்த்து, கட்டைவிரலை உயர்த்தி 'படம் சூப்பர்' என்று உற்சாகமளித்தனர். ஒரு பெரியவர் சொன்னது போல கிருஷ்ணாவைப்பிடித்து விட்டதாகவே தோன்றியது. அதுவரை பிடித்து வைத்திருந்தவர் மகாராணி பக்கம் ஒதுங்கினார். அதற்குப்பின் ‘அவரது’ நான்கு படங்கள் வெளிவந்தன. அனைத்தும் மகாராணியிலேயே. 'அவன் ஒரு சரித்திரம்' சென்னையிலேயே அதிகபட்சமாக ஸ்ரீகிருஷ்ணா தியேட்டரில்தான் அதிக நாட்கள் ஓடியது. பக்கத்தில் கிரௌன் திரையரங்கில் 'தீபம்' வெளியாகி பட்டையைக்கிளப்பியபோதும், அது இப்படத்தின் ஓட்டத்தைப் பாதிக்கவில்லை.

நினைக்க நினைக்க திகட்டாத எண்ண அலைகள்..... வண்ண நினைவுகள்.......

JamesFague
21st November 2014, 11:08 AM
Thanks to Mr Karthik

நடிகர்திலகம் - ஸ்ரீதர் இணைந்து படைத்த கடைசிக் காவியம்...
'மோகனப்புன்னகை' நினைவலைகள்
32-வது உதய தினம் (14.01.1981 - 14.01.2012)

இயக்குனர் ஸ்ரீதருடன் நீண்டகாலமாக ஸ்டில் போட்டோகிராபராகப் பணியாற்றிய 'ஸ்டில் சாரதி' தனது ‘சாரதி மோஷன் பிக்சர்ஸ்’ சார்பில் தயாரித்த படம் 'மோகனப்புன்னகை'. அவருக்கு ஆசை நடிகர்திலகத்தை வைத்து படம்பண்ண வேண்டுமென்று. அதே சமயம் தனக்கு நெடுங்காலமாக வாழ்வளித்த ஸ்ரீதர் கையால் இயக்கப்பட வேண்டும் என்பதும் அவரது எண்ணம். ஆகவே வைரநெஞ்சத்துக்குப்பிறகு நடிகர்திலகத்தை விட்டு திசைமாறிப்போயிருந்த ஸ்ரீதரையும் நடிகர்திலகத்தையும் இப்படத்தில் மீண்டும் ஒன்று சேர்த்தார். இடைப்பட்ட காலத்தில் ஸ்ரீதர் மாற்றுமுகாமில் இரண்டு படங்களையும், அதன்பின் கமல் ரஜினியை வைத்து இளமை ஊஞ்சலாடுகிறது படத்தையும், பின்னர் அழகே உன்னை ஆராதிக்கிறேன் போன்ற படங்களையும் இயக்கியிருந்தார். பெருந்தன்மையோடு எதையும் எடுத்துக்கொள்ளும் நடிகர்திலகமும் மீண்டும் ஸ்ரீதருடன் இணைந்து பணியாற்ற சம்மதித்தார். மோகனப்புன்னகை உருவானது.

நடிகர்திலகத்தின் படங்களிலேயே முதன்முறையாக நான்கு கதாநாயகிகள் (பாவை விளக்கில் எத்தனை?). அந்த நால்வர், வைரநெஞ்சத்தில் ஏற்கெனவே நடிகர்திலகத்துடன் இணைந்திருந்த பத்மப்ரியா, பிற்காலத்தில் கவர்ச்சி ஆட்டத்தில் கலக்கிய அனுராதா, மலையாளப்படங்களில் கொடிகட்டிப்பறந்த ஜெயபாரதி, மற்றும் இலங்கை நடிகை கீதா ஆகியோர். நெடுநாட்களுக்குப்பின் ஸ்ரீதரின் இயக்கம், மெல்லிசை மன்னரின் இசை, பி.என்.சுந்தரத்தின் ஒளிப்பதிவு எல்லாம் சேர்ந்து ரசிகர்களை அதிகம் எதிர்பார்க்க வைத்து விட்டது. மெல்லிசை மன்னரும், சுந்தரமும் ஏமாற்றவில்லை. கதைதான் சற்று பலவீனமாக அமைந்துவிட்டது.

சாந்தியில் விஸ்வரூபம் ஓடிக்கொண்டிருந்தபோது இப்படம் ‘சித்ரா’வில் வெளியானது. ஆகவே சாந்தியில் தினமும் மாலை நாங்கள் கூடிப்பேசிக் கொண்டிருந்தபோது, ஏற்கெனவே அப்படத்தின் சில காட்சிகளைப் பார்த்திருந்த நண்பர் சிவா படத்தை ஏகமாக புகழ்ந்து தள்ளினார். சித்ராவில் முதல்காட்சி பார்த்து விடலாம் என்று எண்ணியிருந்தபோது, ‘Oasis Entertainers’ என்ற அமைப்பினர் படம் ரிலீஸ் அன்று காலை மோகனப்புன்னகை சிறப்புக்காட்சியாக, பைலட் தியேட்டரில் ஒருகாட்சி மட்டும் திரையிட இருக்கிறார்கள் என்ற செய்தி வர, 'அட சித்ராவில் பார்ப்பதைவிட பைலட்டில் பார்க்கலாமே' என்ற ஆர்வம் எல்லோருக்கும் உண்டானது. அதற்கேற்றாற்போல மறுநாள் அந்த Oasis Entertainers அமைப்பினரே நேரடியாக வந்து சாந்தி வளாகத்தில் நின்ற ரசிகர்களிடம் டிக்கட் விற்கத்தொடங்கினர் (ஸ்பெஷல் காட்சியாதலால் கூடுதல் விலை). எல்லோருக்கும் முதல்நாள் பைல்ட்டில் பார்க்க இருக்கிறோம் என்ற சந்தோஷம். (ஏனோ சிவாஜி மன்றத்தில் இப்படத்தின் ஸ்பெஷல் காட்சி போடவில்லை).

ரிலீஸுக்கு முதல்நாள் இரவு 12 மணிவரை சித்ராவில் அலங்காரம் நடந்துகொண்டிருப்பதைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தோம். சேப்பாக்கம் மன்றத்தினர் பந்தல் அமைத்திருந்தனர். எங்கள் மன்றத்தின் சார்பில் நடிகர்திலகத்தின் கட்-அவுட்டுக்கு ராட்சத மாலை போட்டிருந்தோம். மற்ற மன்றத்தினர் தங்கள் மன்றங்களின் பேனர்கள் மற்றும் கொடிகளால் அலங்கரித்திருந்தனர். ‘சைதை சிவந்த மண் சிவாஜி’ மன்றத்தினர் வழக்கம்போல ராட்சத பேனர் அமைத்திருந்தனர். சித்ரா தியேட்டரின் கண்ணடிப்பெட்டியினுள் நமது ராகவேந்தர் சார் அழகுற அமைத்திருந்த வண்ண மயமான பதாகை அலங்கரித்திருந்தது.(அதைப்பார்வையிட்டுக் கொண்டிருந்தபோதுதான் 'அமரகாவியம்' படத்துக்கு தாஜ்மகால் வடிவில் ஒரு சிறப்பு பதாகை உருவாக்க இருப்பதாகச்சொன்னார்).

ரிலீஸன்று காலை 8 மணிக்கெல்லாம் பைலட் தியேட்டர் முன் கூடி விட்டோம். அப்போது அங்கே திரையிடப்பட்டிருந்த வேறு படத்தின் பானர்கள் கட்டப்பட்டிருந்தன. படம் ரிலீஸாகும் தியேட்டர் ஒன்று, நாங்கள் பார்க்க வந்திருக்கும் தியேட்டர் ஒன்று. அந்த வழியே பஸ்ஸில் போனவர்களெல்லாம், அங்கே திரையிடப்பட்டிருந்த படத்துக்குத்தான் இவ்வளவு கூட்டமும் என்று எட்டிப்பார்த்துக்கொண்டு போயினர். 8.40 அளவில் எல்லோரையும் உள்ளே அனுமதித்து, சரியாக 9 மணிக்கு படத்தைத் துவக்கினார்கள். படம் துவக்கத்திலிருந்தே நன்றாகவே இருந்தது.

நடிகர்திலகத்துக்கு நான்கு ஜோடிகள் இருந்தபோதிலும் அதில் மூன்று ஜோடி ஒருதலைக்காதல். இலங்கை நடிகை கீதாவுக்கும் அவருக்கும் மட்டும்தான் ஒரிஜினல் காதல். ஏற்கெனவே பத்மப்ரியாவுக்கு அவர் மேல் ஒருதலைக்காதல். அது நிறைவேறாமல் நடிகர்திலகம் - கீதா காதல் மணமேடை வரை வந்ததில் அவருக்கு வருத்தம். ஆனால் மணமேடையில் கீதா கொல்லப்பட, அந்த ஒரிஜினல் காதல் முறிந்து போகிறது. நாளடைவில் தன் அலுவலகத்திலேயே பணிபுரியும் ஜெயபாரதியுடன் நடிகர்திலகத்துக்கு காதல் ஏற்பட, அதையறியாத ஜெயபாரதி, நடிகர்திலகம் தன் காதலைச்சொல்ல வரும் நேரம் பார்த்து, தான் மணமுடிக்கப்போகும் நபரை அவருக்கே அறிமுகப்படுத்த அந்தக்காதலும் அவுட். இதனிடையே தான் வளர்த்து வந்த அனுராதாவும் தன்மீது காதல் கொள்வது கண்டு, அதிர்ச்சியடையும் நடிகர்திலகம், அதை முறிக்க அவரே அனுவுக்கு முன்னின்று வேறு ஒருவருடன் மணமுடிக்க, புதிய கணவனுடன் கப்பலில் பயணிக்கும் அனுராதா நடிகர்திலகத்தை மறக்க முடியாமல் கப்பலில் இருந்து குதித்து உயிரை விட, கடற்கரையில் சோகமே உருவாக அமர்ந்திருக்கும் நடிகதிலகத்தின் காலடியிலேயே அனுராதாவின் பிணம் ஒதுங்க, அதைத்தூக்கியவாறு அவர் கடலுக்குள் செல்வதோடு படம் முடிகிறது.

கொஞ்சம் சிக்கல் நிறைந்த கதைதான். இடையில் கொஞ்சம் சொதப்பியும் இருந்தார்கள். காதலி கீதா இறந்த சோகத்தில் முதலில் மதுப்பித்தராகவும், பின்னர் பெண்பித்தராகவும் மாறுவதாகக் காட்டியிருந்தது ரசிகர்களுக்கும், தாய்மார்களுக்கும் அவ்வளவாகப் பிடிக்கவில்லை. கீதா இறந்த பின் ஜெயபாரதியுடனான அவரது காதல் நிறைவேறுவதாக முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் அப்போதே பேசிக்கொண்டார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக படம் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. படம் நெடுகிலும் ரசிகர்கள் ஆரவாரமாக கைதட்டி ரசித்தார்கள். நாகேஷின் காமெடியும் நன்றாகவே அமைந்து ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. வம்பு பேச ஆளில்லாமல் கண்ணாடியில் தன்னைத்தானே பார்த்துப்பேசிக்கொள்ளும் இடம் வெகு ஜோர்.

குறிப்பாக பாடல் காட்சிகள் ரசிகர்களுக்குப் பிடித்திருந்தது. படத்தின் முதல் பாடலாக, கீதா அருவியில் குளிக்கும் காட்சியுடன் படமாக்கப்பட்ட 'தென்னிலங்கை மங்கை' பாடலும், கீதாவும் நடிகர்திலகமும் இணைந்து பாடும் டூயட் 'தலைவி.. தலைவி... என்னை நீராட்டும் ஆனந்த அருவி' பாடலும் கொண்டாட்டமாக ரசிக்கப்பட்டது என்றால், ஜெயபாரதி தன் வருங்காலக்கணவனை அறிமுகப்படுத்தியதும், அவரை வாழ்த்தி நடிகர்திலகம் பாடும் 'கல்யாணமாம் கச்சேரியாம்' பாடல் ரசிகர்களை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. கண்களில் சோகத்தைத்தேக்கி வைத்துக்கொண்டே சிரித்துக்கொண்டு பாடும் காடசிகளில் ரசிகர்களின் கைதட்டல் அரங்கத்தை அள்ளியது. அனுராதாவிடம் பாடும் பாடல் 'குடிக்க விடு... என்னைத் துடிக்க விடு' என்ற பாடலும் ரசிகர்களால் ஆரவாரத்துடன் ரசிக்கப்பட்டது. வெளிச்சத்துக்கு வராமல் போன நடிகர்திலகத்தின் பல தத்துவப்ப்பாடல்களில் இதுவும் ஒன்று.

பைலட் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, படம் நன்றாக இருக்கிறது நிச்சயம் வெற்றிபெறும் என்று எல்லோரும் பேசிக்கொண்டு சென்றனர். அன்று மாலைக்காட்சியின்போது ரெஸ்பான்ஸ் தெரிந்துகொள்வதற்காக சித்ராவுக்குப்போனோம். உள்ளே போய் படம் பார்க்கவில்லை. முதல்நாளாகையால் கடும் கூட்டம். மேட்னி பார்த்துவிட்டு வெளியே வந்த பொதுமக்கள், படம் நன்றாயிருப்பதாகச்சொல்லவே படம் வெற்றியென்று அப்போதே முடிவு செய்தோம். ஐந்தாம் நாள் இரண்டாம் முறையாக, 'சித்ரா'வில் மாலைக்காட்சி பார்த்தோம். அப்போதும் எல்லோரும் நன்றாகவே ரசித்தனர், கைதட்டினர், பாராட்டினர். குறிப்பாக 'கல்யாணமாம்' பாடலுக்கும், 'குடிக்க விடு' பாடலுக்கும் நல்ல வரவேற்பு.

இவ்வளவு ஆரவாரமாக வரவேற்கப்பட்ட 'மோகனப்புன்னகை' ஏன் பெரியதொரு வெற்றியைப் பெறவில்லையென்பது இன்றுவரை புரியாத காரணமாகவே இருக்கிறது.

JamesFague
21st November 2014, 11:10 AM
Thanks to Mr Raghavendar

சித்ரா தியேட்டர் என்றைக்குமே நம் தியேட்டராகவே இருந்தது. சாந்தி தியேட்டருக்கு முன் அது தான் நம் ரசிகர்களை வளர்த்தது என்றால் மிகையில்லை. பாசமலர் உள்பட பல முக்கியமான படங்களை வெளியிட்ட தியேட்டர். அங்கே மோகன புன்னகை வெளியான அன்று பழைய நினைவுகளுடனும் படத்தின் ரிசல்ட்டுடனும் உரையாடிக்கொண்டிருந்த நாட்கள் இன்றும் எனக்கு பசுமையாக நினைவில் உள்ளன என்றால், நீங்கள் அதையும் தாண்டி அடியேன் வைத்திருந்த சின்ன பேனருக்கே போய் விட்டீர்கள். எனக்கு ஞாபகம் உள்ள வரையில் உத்தமன் படத்திலிருந்து சின்னச் சின்ன சார்ட்டுகளை வைக்க ஆரம்பித்தேன். ஒவ்வொரு படத்திற்கும் ரிலீஸுக்கு முதல் நாள் தியேட்டரே கதி என்பது வாழ்க்கையில் ஓர் அங்கமாகவே ஆகி விட்டது. இதற்கெல்லாம் எதிர்ப்புகளைச் சந்திக்காமல் இல்லை. இருந்தாலும் அந்த வேகம், அந்த ஆர்வம், அந்த வெறி, நடிகர் திலகத்தின் ஆகர்ஷண சக்தி நம் அனைவரையும் கட்டிப் போட்டு விட்டது. படிப்படியாக முன்னேறினேன்.. எதில் வாழ்க்கையிலா.. இல்லை.. சார்ட்டின் டிசைனை மெருகேற்றுவதில்... அதற்காக பிளாசா தியேட்டர் வாசிலில் இருந்த முதியவர் தான் ஆபத் பாந்தவர்.. வரும் ஸ்டில்களையெல்லாம் வாங்கி விடுவோம்.. அநைத்தும் சார்ட்டில் ஏறி விடும் (இப்போது மிகவும் மனம் வருந்துகிறேன். அவற்றையெல்லாம் இன்னொரு காப்பி எடுத்திருக்கலாமே என்று ). [அடியேன் ஆரம்பித்து சில வருடங்களில் கிரிஜா அவர்களும் துவங்கி விட்டார். அவருடைய உழைப்பு மிகவும் அபாரமானது. அவருடைய உழைப்பைப் பாராட்டத் தனித்திரியே துவங்க வேண்டும்]. அப்படிப்பட்ட ஒரு சார்ட்டைத் தான் மோகனப் புன்னகைக்காக வடிவமைத்து அதைப் பற்றித் தாங்கள் கூறியிருப்பது. தங்களுக்கும் தங்கள் நினைவாற்றலுக்கும் என் உளமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.

மோகனப் புன்னகைக்கு வருவோம். நானும் பைலட்டில் தான் பார்த்தேன். அதற்கு முன்பாகவே சிறப்புக் காட்சியில் பார்த்து விட்டோம். அந்தக் காட்சியைப் பார்த்து விட்டு படம் முடிந்ததும் உடனே கிளம்ப முடியாமல் உணர்ச்சி மயமாய் அமர்ந்திருந்தோம்.

இப்போது பேசப் படும் Shuttle Acting, Method Acting, போன்றவற்றையெல்லாம் தன் முதல் படத்திலேயே ஊதித்தள்ளி விட்ட நடிகர் திலகம், மீண்டும் இப்படத்தில் அதற்கான பொருளை உணர்த்தினார். குறிப்பாக தலைவன் தலைவி பாடல் simply class.

சற்றே வித்தியாசமான கதையமைப்பு, புதிய ஜோடி, சிறந்த இசை, நல்ல ஒளிப்பதிவு என பல்வேறு சிறப்பம்சங்கள் படத்தில் இருந்தன.

இவற்றையெல்லாம் மீறி படம் ஓடவில்லை என்றால்..

ஒரே காரணம்...

துர்ப்பிரச்சாரம்...

நடிகர் திலகத்தைப் பற்றியும் அவரது உடலமைப்பைப் பற்றியும் கிளப்பப் பட்ட ஏச்சுக்களும் பேச்சுக்களும் பரவலாகப் பரப்பப்பட்டதாலும் அவரது படங்களைப் பற்றி கிண்டலும் கேலியும் மிகப் பரவலாக செயற்கையாக உருவாக்கப் பட்டதாலும் பல நல்ல படங்கள் சரியான முறையில் சென்றடைய விடாமல் தடுக்கப் பட்டதாலும் தான் 80 களில் அவரது படங்கள் பாதிக்கப் பட்டன. அப்படிப் பட்ட படங்களில் ஒன்று தான் மோகன புன்னகை. குறை சொல்லுமில்லாத சிறந்த படம். 80களில் மிகச் சோதனையான காலங்களில் அவருடனேயே இருந்த பல கோடி ரசிகர்களில் ஒருவன் என்ற முறையிலும் அந்த ஏளனங்களுக்கும் ஏகடியங்களுக்கும் பதில் கொடுத்து நின்ற ரசிகர்களில் ஒருவன் என்ற முறையிலும் பல முறை இப்படிப்பட்ட நல்ல படங்கள் தோல்வியடைந்த போது மனம் வேதனை யடைந்திருக்கிறேன். அதே போல் தான் கார்த்திக்கும் உணர்ந்திருப்பார் என்பதை அவருடைய பதிவுகளில் அனைவரும் உணர முடியும்.

நம்மையெல்லாம் அந்த அளவிற்கு உணர்ச்சி மயமாக்கிய மோகனப் புன்னகை பாடலைப் பார்த்து நினைவுகளை அசை போடுவோமே..

adiram
23rd November 2014, 01:18 PM
Chithoor Vasudevan,

Your recent recap article of Mr. Karthik about Justice Gopinath is already re-published in the same thread HERE by Mr. Karthik himself in previous pages.

I think now you took it from Nadigarthilagam General thread. You also recap it twice.

Murali Srinivas
30th November 2014, 12:22 AM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

தர்மம் எங்கே ரிலீஸ் நேரம் பார்த்த அனுபவம் தொடர்கிறது

கடந்த பதிவின் இறுதி பகுதி

சண்டையில் தோற்று நம்பியார் ஆற்றில் குதித்து போய்விட கொடுங்கோல் ஆட்சி ஒழிந்து மக்கள் நடிகர் திலகத்தை தோளில் ஏற்றி அரியணையேற்றும் காட்சியோடு இடைவேளை. ஒரு சில இந்தியா பாகிஸ்தான் போட்டிகளின்போது the atmosphere was electric என்று எழுதுவார்கள். அதாவது அந்த இடத்தில வீசும் காற்றை தொட்டால் ஷாக் அடிக்கும் என்ற அர்த்தத்தில். அன்றைய தினம் மதுரை ஸ்ரீதேவி தியேட்டரில் அத்தகைய சுற்றுசூழல்தான் நிலவியது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

இடைவேளை நேரத்திலும் ஒரே ஆரவாரம் உற்சாகம் கரை புரண்டு ஓடுகிறது. அதே நேரத்தில் படம் தொடங்கவதற்கு முன்பு நடந்த ஒரு விஷயம் பற்றி குறிப்பிட்டிருந்தேன். படத்திற்கு வந்திருந்த ஒரு ரசிகரின் கைகெடிகாரம் காணாமல் போனது பற்றியும் அதன் காரணமாக அனைவரும் சோதனை செய்யப்பட்டதையும் சொல்லியிருந்தேன். இடைவேளை நேரத்திலும் அது தொடர்ந்தது. இதை பார்த்தவுடன் என் கஸின் நீ தனியாக உட்கார வேண்டாம். எனக்கு பக்கத்தில் வந்து உட்கார்ந்து விடு என்று சொல்லி கூட்டி போய்விட்டான். ஸ்ரீதேவியில் கீழே 90 பைசா டிக்கெட் சேர்கள் அதற்கு முந்தைய வகுப்புகளை விட சற்றே உயரமாக அமைந்திருக்கும். 90 பைசா சேரில் முதல் வரிசையில் அமர்ந்தால் முன்னால் அமரிந்திருப்ப்பவரின் தலை மறைக்கிறது என்ற பிரச்சனைக்கே இடமில்லை. இடைவேளைவரை அப்படி முதல் வரிசையில் அமர்ந்து பார்த்த நான் இடைவேளைக்கு பிறகு பின் வரிசைக்கு சென்று கஷ்டப்பட்டு விட்டேன். 12 வயது சிறுவன் என்கின்றபோது இந்த பிரச்சனை அதிகமாகவே இருந்தது. இனி படத்திற்கு வருவோம்.

நடிகர் திலகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் கூடி நிற்கும் போராளிகள் கோஷம் எழுப்புவார்கள். நாட்டை காத்த உத்தமன் வாழ்க! கொடுங்கோல் ஆட்சியை வேரறுத்த தலைவன் வாழ்க என்று வசனங்கள் வரும்போது இடைவேளையில் கிடைத்த நேரத்தில் மீண்டும் எனர்ஜி கிடைத்த மக்கள் இடைவேளைக்கு பிறகு வந்த இந்த முதல் காட்சியிலே மீண்டும் அலப்பரையை ஆரம்பித்து விட்டனர். இந்தக் காட்சி முடிந்தவுடன் ஜெஜெ பாடி ஆடும் நான்கு காலமும் உனதாக பாடல் வந்தது. [இந்தப் பாடல் காட்சி சில நாட்கள் இருக்கும். சில நாட்கள் இருக்காது. ஏன் என்று யாருக்கும் காரணம் தெரியாது] அழகாக படமாக்கப்பட்டிருந்த இந்த பாடல் காட்சியைப் பற்றி எங்களுக்கு ஒரு குறை. இந்த பாடலில் ஜெஜெ மற்றும் ஆண் வேடத்தில் குமாரி பத்மினியும் ஆடுவார்கள். குமாரி பத்மினியை ஆண் வேடத்தில் ஆட வைக்காமல் அந்த பாடல் காட்சியில் நடிகர் திலகம் நடித்திருந்தால் மிகப் பிரமாதமாக அமைத்திருக்கும் என்பது எங்கள் எண்ணம்.

அதன் பிறகு முத்துராமன் தனக்கு பதவி கிடைக்கும் என நினைத்து சபைக்கு வருவது, அங்கே நான்கு திசைகளுக்கும் மார்த்தாண்ட நாயகர்களாக வேறு நபர்களை நடிகர் திலகம் அறிவித்து விட முத்துராமன் கோபமுற்று வெளியேறும் காட்சி. [இந்த காட்சியில் மார்த்தாண்ட நாயகர்களை நியமிக்கும்போது அவர்களை காட்டக் கூட மாட்டார்கள் என்று ஒரு முறை கோபால் எழுதியிருந்தார். ஆனால் அது தவறு. நான்கு பேர்களும் காண்பிக்கப்பட்டு அவர்கள் சுற்றி நிற்பவர்களின் கையொலியை ஏற்றுக் கொள்வதாகவே காண்பிக்கப்படும்]

முத்துராமன் தன கோபத்தை குமாரி பத்மினியிடம் காண்பித்து மெதுவாக நடிகர் திலகத்திற்கு எதிராக மாறும் காட்சிகள். அதற்கு நம்பியாரின் படையில் சிப்பாயாக இருந்த செந்தாமரை அவரிடம் சேர்ந்து அவரை மெதுவாக மாற்றுவது போன்ற காட்சிகள் வரும். இதற்கு நடுவில் நடிகர் திலகம் -ஜெஜெ இடையிலான ரொமான்ஸ் கெமிஸ்ட்ரி நன்றாக workout ஆகியிருக்கும். ஒவ்வொரு முறையும் நடிகர் திலகம் ஜெஜெவிடம் அந்தரங்கமாக ஏதோ சொல்ல விழைய அவரும் என்ன என்று ஒரு ஹஸ்கி குரலில் கேட்பது நன்றாக ரசிக்கும்படியாக இருக்கும். ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்று அவர்களை நெருங்க விடாமல் தடுக்க ஜெஜெ ஏமாற்றத்துடன் செல்வது எல்லாம் மக்கள் ரசித்துப் பார்த்தனர்.

குமாரி பத்மினி முத்துராமனை கூட்டிக் கொண்டு மாளிகைக்கு வரும் காட்சி. தங்கையை பார்த்தவுடன் பரவசமடையும் நடிகர் திலகம், முத்துராமன் ஏதோ ஒன்றை பேச விரும்புவதை உணர்ந்து என்ன என்பதை முகபாவத்திலே கேள்வியாக மாற்றும் அந்த லாவகம் படபடவென கைதட்டல்கள் விழுகிறது. முத்துராமன் எதிர்பார்ப்பது பதவி என்று தெரிந்ததும் நடிகர் திலகம் கேமராவைப் பார்த்து ஒரே குடும்பத்தை சேர்ந்தவங்களே பதவியில் இருப்பது நாட்டிற்கு நல்லதில்லே என்பார். கைதட்டல் இடியாய் இறங்கியது. நான் பதவியில் இருந்தாலென்ன நீ இருந்தாலென்ன என்று நடிகர் திலகம் முத்துராமனிடம் சொல்லும்போது அதற்கு முத்துராமன் "சேகர் முன்னாடியெல்லாம் உனக்கு பேசவே தெரியாதுன்னு சொல்வாங்க! இப்போ எவ்வளவு அழகா பேசறே" என்றவுடன் ஒரு சிறு புன்னகையுடன் நடிகர் திலகம் "இப்போலாம் மக்கள் நான் பேசுவதை கவனித்து ஏற்றுக் கொள்கிறார்கள்" என்பார். தியேட்டரே இரண்டுபட்ட கட்டம் அது.

இதற்கு பின் முத்துராமன் மேலும் கொதிப்படைந்து போவது, நம்பியார் படை தலைவனாக இருந்த எஸ்வி ராமதாஸ் மற்றும் செந்தாமரையும் ஒரு கூட்டதை சேர்த்து முத்துராமனை தலைவராக்குவது என்று காட்சிகள் விரிந்தன.

இதன் பின் மக்கள் சிலர் ஒரு குழுவாக வந்து முத்துராமனின் அராஜகம் பற்றி சொல்ல முதலில் அவர்கள் சொல்வதை நம்ப மறுக்கும் நடிகர் திலகம் அவர்களை சத்தம் போட சட்டென்று அவருக்கே முன்னொரு நாளில் இதே போல் தானும் நம்பியாரிடம் மோதியது நினைவிற்கு வர, அவர்களிடம் நடவடிக்கை எடுப்பதாக சொல்லி அனுப்பி விட்டு உள்ளே சென்று துப்பாக்கியை எடுப்பார். தடுக்கும் ஜெஜெவை தள்ளி விட்டு விட்டு போவார். உங்கள் உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் என்று கேட்கும் ஜெஜெவிடம் தனி மனிதன் போகலாம். ஆனால் என் கொள்கை தொடரும். அதை உயர்த்திப் பிடிக்க மனிதர்கள் வருவார்கள் என்பார் நடிகர் திலகம். மக்களுக்கு வேறொரு தலைவன் கிடைக்கலாம் ஆனால் எனக்கு என்று ஜெஜெ கேட்கும்போது இங்கே ஒரே ஆரவாரம்.

முறை தவறி நடக்கும் முத்துராமனை தட்டிக் கேட்டு [அப்போதும் ஒரு சண்டை உண்டு. நீளமாக இல்லாமல் உடனே முடிந்து விடும். இருந்தாலென்ன நமது ரசிகர்களுக்கு அலப்பரை செய்ய சொல்லியா கொடுக்க வேண்டும்?] அவரை கொல்லாமல் பிழைத்துப் போ என்று பார்வையாலே மிரட்டி விட்டு போவார் நடிகர் திலகம். கேட்கணுமா?

இதற்கு நடுவே நடிகர் திலகம் ஜெஜெவிடம் தன காதலை வெளிப்படுத்தி கல்யாணம் செய்துக் கொள்கிறேன் என்று சொன்னதும் வரும் பள்ளியறைக்குள் வந்த புள்ளி மயிலே பாடல் காட்சி. மீண்டும் தியேட்டர் அதகளமானது. ஒரு காட்சியில் நடிகர் திலகம் ஜெஜெயிடையே நடக்கும் ஒரு உரையாடலின்போது ஜெஜெ நடிகர் திலகத்தைப் பார்த்து பெருந்தலைவரே என்பார். தியேட்டர் மீண்டும் அலறியது.

சூழ்ச்சிகாரர்களின் சதி புரியாமல் நடிகர் திலகத்தை ஊருக்கு வெளியே உள்ள பாழடைந்த கோட்டைக்கு தனியே வர சொல்லும் முத்துராமன், தனியே வரும் நடிகர் திலகத்தை கொல்ல ஆணையிடும் ராமதாஸ், திகைத்து போய் என்ன சொல்கிறாய் என்று முத்துராமன் கேட்க அதுவரை கூட்டத்திலே ஒரு ஆளாக மறைந்து நிற்கும் நம்பியார் தன்னை வெளிபடுத்திக் கொள்ள அந்த சஸ்பென்சை மக்கள் ரசித்தார்கள். துரோகி என்று நம்பியாரை பார்த்து முத்துராமன் சீற " நீதான் துரோகி. நாளை வரலாறு உன்னைத்தான் பழிக்கும்" என்று பதிலடி கொடுக்கும் வசனமெல்லாம் பெரிதும் ரசிக்கப்பட்டது.

இறுதிக் காட்சி. துப்பாக்கிகள் முழங்க கோட்டையின் திறந்த வெளி மைதானத்தில் நடிகர் திலகம் ஓடி தப்பிக்கும் காட்சி [இந்த காட்சியின் படமாக்கம் சற்றே சொதப்பியிருக்கும். சற்று மெனக்கெட்டிருந்தால் பிரமாதமாக வந்திருக்கும்] கோட்டைக்கு உள்ளே ஒரு ஹாலில் தொட்டி போன்ற அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில விஷப்பாம்புகள் சுற்றிக் கொண்டிருக்க மேலிருந்து ஜெஜெவை தொங்கவிட கயிறு மெதுவாக அறுந்து கீழே வர நடிகர் திலகம் நம்பியாரிடம் சண்டை போடும் காட்சியெல்லாம் த்ரில்லாகவே மக்கள் பார்த்தனர். இறுதியில் நம்பியார் தொட்டிலில் விழுந்து பாம்புக்கடி ஏற்று உயிர் துறப்பார். தர்மம் எங்கேன்னு கேட்டவங்களுக்கெல்லாம் தர்மம் இங்கேன்னு சொல்ல வச்சுட்டே சேகர் என்று முத்துராமன் சொல்ல கரகோஷம்தான்.

படம் முடிந்து வெளியே வருகிறோம். அப்போதும் ஒரே ஆரவாரம்தான். படம் பெரும் வெற்றி பெறும் என்ற கணிப்பே எனக்கு இருந்தது. அதற்கேற்றார்போல முதல் வாரத்தில் தியேட்டர் பக்கமே போக முடியவில்லை, அப்படி கூட்டம் என்று கஸின் வந்து சொல்லிக் கொண்டேயிருந்தான். முதல் பத்து நாளைக்கு அனைத்துக் காட்சிகளும் ஹவுஸ் புல். அதன் பிறகு படத்திற்கு வரவேற்பு குறைய ஆரம்பித்தது என்ற பேச்சு வந்தது. படத்தின் கதை இடைவேளையோடு முடிந்து விட்டது. அதன் பிறகு வந்தவற்றை பொது மக்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை என்று ஒரு காரணம் சொல்லப்பட்டது. 1972-ஐ பொறுத்தவரை 100 நாட்கள் என்ற வெற்றிக் கோட்டை தொடும் வாய்ப்பை இழந்த ஒரே படம் என்ற பட்டதை தர்மம் எங்கே பெற்றது. 8 வார படமாக ஆனாலும் ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடம் படம் தர்மம் எங்கே!

படம் வெளிவந்து 36 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் AC திருலோக்சந்தரிடம் பேசிக் கொண்டிருந்தபோது எங்களைப் போன்ற ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த இந்தப் படம் 100 நாட்கள் ஒடவிலையே என்ற வருத்தத்தை பகிர்ந்துக் கொண்டபோது அவர் ஒரு விஷயம் சொன்னார். ஒரு ஆங்கிலப் படத்தின் inspiration-ஐ வைத்துதான் தர்மம் எங்கே படத்திற்கு திரைக்கதை அமைத்தோம். அதில் இறுதியில் கதாநாயகன் [Lawrence Oliver தான் நாயகன் என்று அவர் சொன்ன ஞாபகம்] துப்பாக்கி குண்டுகளால் சல்லடை கற்களாய் துளைக்கப்பட்டு உயிர் விடுவான். அவனின் நல்ல மனதை புரிந்துக் கொள்ளாமல் அவனை பழி வாங்க துணை போன அவன் மைத்துனன் தன தவறை உணர்ந்து திருந்துவதுதான் கிளைமாக்ஸ். ஆனால் நாங்கள் நாயகனை சாகடிக்க விரும்பவில்லை. அவன் தப்பிப்பதாக மாற்றி அமைத்தோம். ஒரு வேளை சோக முடிவாக அமைத்திருந்தால் வெற்றி பெற்றிருக்குமோ என்னவோ என்றார் ACT.

எது எப்படியோ, அது போன்ற உணர்ச்சிக் குவியலான ஒரு மக்கள் கூட்டத்தையும் அந்த ஆவேசத்தையும் அதே அளவில் நான் அதற்கு முன்பும் பார்த்ததில்லை. அதற்கு பின்பும் பார்த்ததில்லை. அந்த வகயில் தர்மம் எங்கே என்றுமே ஸ்பெஷல்தான்.

(தொடரும்)

அன்புடன்

RAGHAVENDRA
4th December 2014, 09:15 AM
https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-frc3/v/t1.0-9/s720x720/557496_570700992947509_1465872808_n.jpg?oh=4cb8618 121d877edec3475725bc2e197&oe=550AF290&__gda__=1426116859_c68529090dbb7bf17f5a15cdbb5775f e

கல்தூண் நூறாவது நாள் விழா..

மூப்பனாரின் பின்புறம் இருப்பவர் கொண்டல்தாசன். அவருக்கு இடப்புறம் இருக்கும் என் நண்பர் ரமணி... 33 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி...கொண்டல்தாசனுக்கு வலப்புறம் இருப்பவர் எம்.எல்.கான்.

முகநூல் நண்பரின் இணையப் பக்கத்திலிருந்து

Murali Srinivas
13th December 2014, 01:19 AM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம். இது புதிய பதிவு.

கடந்த பதிவின் இறுதி பகுதி

எது எப்படியோ, அது போன்ற உணர்ச்சிக் குவியலான ஒரு மக்கள் கூட்டத்தையும் அந்த ஆவேசத்தையும் அதே அளவில் நான் அதற்கு முன்பும் பார்த்ததில்லை. அதற்கு பின்பும் பார்த்ததில்லை. அந்த வகயில் தர்மம் எங்கே என்றுமே ஸ்பெஷல்தான்.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

தர்மம் எங்கே இப்படி அலப்பரை கொடுத்துக் கொண்டிருக்க மற்றொரு பக்கம் இதன் பாதிப்பு சிறிது கூட இல்லாமல் பட்டிக்காடா பட்டணமா தன வெற்றிப் பயணத்தை தொடர்ந்து கொண்டேயிருந்தது. அதன் வசூல் சூறாவளியில் சிக்கி முன்னர் நிறுவப்பட்டிருந்த அனைத்து வசூல் மைல் கற்களும் தகர்ந்து வீழ்ந்தன.

இதனிடையில் 1971-ம் ஆண்டு திரைப்பட தேசிய விருதுகள் வழங்கப்பட்டதில் பின்னணியில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை துக்ளக் இதழ் தொடர்ந்து எழுதியது. அப்போது மாதமிருமுறையாக வெளிவந்துக் கொண்டிருந்த துக்ளக் [1972 ஜூலை 1,15 மற்றும் ஆகஸ்ட் 1 என்று நினைவு] மூன்று இதழ்களில் இது பற்றிய விவாதங்களும் பேட்டிகளும் இடம் பெற்றன. 1972 மே முதல் வாரத்திலேயே விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட போதிலும் துக்ளக் இந்த விஷயத்தை கையிலெடுத்ததும் ஒரு பரபரப்பு நிலவியது. நடிகர் திலகத்திற்கு சவாலே சமாளி திரைப்படத்தின் மூலமாக கிடைக்க வேண்டிய சிறந்த நடிகர் விருது கிடைக்காமல் போனதில் ரசிகர்களுக்கு மிகுந்த மன வருத்தம் இருந்தாலும் இவற்றையெல்லாம் என்றுமே ஒரு பொருட்டாக கருதாத நடிகர் திலகம் தான் தலைவராக இருந்த தென்னிந்தியா நடிகர் சங்கத்தின் சார்பாக சிறந்த நடிகர் விருது பெற்ற எம்ஜிஆர் அவர்களுக்கு பாராட்டு விழா ஒன்றை நடத்தினார். ஜூலை 30 ஞாயிறன்று மாலை நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்ற இந்த பாராட்டு விழாவின் மூலமாக தன் பெருந்தன்மையை நிறுவினார்.

விவசாயிகள் போராட்டம் அதன் காரணமாக நடந்த உயிரிழப்பு போன்றவற்றால் அந்த வருடம் ஜூலை 15 தன் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என்று பெருந்தலைவர் முடிவெடுத்தார், வந்தது ஜூலை 23. அதற்கு சரியாக ஒரு வருடம் முன்பு அதே நாளில்தான் [1971 ஜூலை 23] ஒரு வருங்கால தூண் வெட்டி சாய்க்கப்பட்டது. மாணவர் திலகமாக திகழ்ந்த அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் தலைவர் உதயகுமார் அரசியல் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த நாள். 1971-ல் ரஷ்ய மையால் கிடைத்த வாழ்வை வைத்துக் கொண்டு திராவிட இயக்கத்தினர் மாற்று அரசியல் கட்சியினரை தங்கள் அரசியல் எதிரிகளாக பாவித்து அவர்கள் மேல் வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர்.

அரசு நிர்வாகத்தை செவ்வனே நடத்துவதை விட தங்களுக்கு தாங்களே பட்டங்கள் கொடுத்துக் கொள்வதிலும் பட்டங்களை தேடி சென்று வாங்குவதிலும் மிகுந்த விருப்பம் கொண்ட அன்றைய ஆளும் கட்சியினர் அன்றைய முதல்வருக்கு டாக்டர் பட்டம் வாங்கி கொடுக்க ஏற்பாடு செய்தனர். அரசின் தயவை வேண்டி நின்ற தனியார் பல்கலைக்கழகமான அண்ணாமலை பல்கலைக்கழகம் அதற்கு இசைவு தந்து பட்டமளிப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்தது. ஜனநாயக முறைப்படி கறுப்புக் கொடி காட்ட முயற்சித்த உதயகுமார் கொடூரமாக தாக்கப்பட்டு அங்கேயிருந்த குளத்தில் தூக்கி எறியப்பட்டு மறுநாள் காலை பிணமாக மிதந்தார். இறந்து போனது தங்கள் மகன்தான் என்று சொல்லி கதறி அழும் உரிமை கூட அந்த மாணவனின் பெற்றோருக்கு மறுக்கப்பட்டது. இறந்து போனது தங்கள் மகனே அல்ல என்று சொல்ல வைக்கப்பட்டார்கள். இப்படி பிணத்தின் மீது பட்டமளிப்பு விழா நடத்தி முடிந்தபின் மாணவர்கள், ஸ்தாபன காங்கிரஸ் மாணவர் அணி மற்றும் பொதுமக்கள் மற்றும் ஒரு சில நடுநிலை ஏடுகள் இதற்கு எதிராக போராட்டம் நடத்த ஆரம்பிக்க அரசு எந்திரம் பணிந்து ஒரு விசாரணை கமிஷனுக்கு உத்தரவிட்டது.

இந்த விவகாரம் என்றில்லை. தங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் அனைவருக்கும் எதிராக வன்முறை அடக்குமுறை கட்டவிழுத்து விடப்பட்டது சேலத்திலே ராமர் முதலான இந்து கடவுள்கள் படங்களுக்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் நடத்திய வீரமணி கூட்டத்தின் மேல் எந்த நடவடிக்கையும் கிடையாது. அந்த ஊர்வலத்தை புகைப்படம் எடுத்து போட்ட துக்ளக் பத்திரிக்கை பறிமுதல் செய்யப்பட்டது. தங்கள் ஆட்சியையும் கட்சியையும் விமர்சிக்கும் படம் என்பதனால் முகமது பின் துக்ளக் படம் வெளிவர எத்தனை தடைகள் உண்டோ அத்தனையும் செய்யப்பட்டது. படத்தை வெளியிடாமல் இருக்க சோ அவர்கள் மீது சாம தான பேத தண்ட முறைகள் பயன்படுத்தப்பட்டது. திரையுலகை சேர்ந்த சிலரே சோவை அழைத்து படத்தை வெளியிடக் கூடாது என்றெல்லாம் சொன்னார்கள். பின்னர் அதே நிலைக்கு தாங்களும் ஆளானார்கள் என்பது வரலாறு.

சிம்சன் தொழிற்சாலையில் தங்கள் கட்சியின் தொழிற்சங்க பிரிவை தொடங்க முடியாமல் போனபோது அங்கே தொழிற்சங்க தலைவராக பணியாற்றிக் கொண்டிருந்த குருமூர்த்தியை நீக்குவதற்கு சதி செய்து தங்களது ஆளான காட்டூர் கோபால் அங்கே திணிக்கப்பட்டு தொழிலாளர்களின் நலனை பாதிக்கும் வண்ணம் ஒப்பந்தங்கள் போடப்பட்டு பிறகு அந்த நிறுவனத்திற்கு எதிராக ஸ்ட்ரைக் வந்தபோது வளாகத்திற்கு உள்ளே கொலைவெறி தாக்குதல் நடத்தி அதன் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு நிறுவனம் லாக் அவுட் செய்ய 450 தொழிலாளிகள் வேலை இழந்த சாதனையை செய்த பெருமை திராவிட இயக்கத்தையே சாரும். இவையெல்லாம் கூட 1972 ஜூன் முதல் ஆகஸ்ட் வரை நடந்த சம்பவங்கள்தான். இந்த பிரச்சனை நீண்ட காலம் தொடர்ந்து 1976 வரை போனது. 1974-ல் தொழிலாளிகளின் ரகசிய வாக்கெடுப்பில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த குசேலர் தலைவரானது அதன் பின் நடந்த பேச்சுவார்த்தை ஒப்பந்தங்கள் எல்லாம் நீண்ட வரலாறு. அதையெல்லாம் விவரிக்க ஆரம்பித்தால் பக்கங்கள் போதாது.

இதையெல்லாம் நடிகர் திலகத்தின் கலைப் பயணத்தில் குறிப்பிட காரணம் எப்படிப்பட்ட எதிர்மறை சூழலில் நடிகர் திலகம் சாதித்தார் என்பதையும் தமிழக அரசியல் களத்தில் ஆளும் கட்சியினரால் உருவாக்கப்பட்ட வன்முறை நெருப்பாற்றில் எப்படி நீந்தி கரையேறினார் நடிகர் திலகம் எனபதையும் வாசகர்கள் உணரவே இந்த விஷயங்களையெல்லாம் கோடிட்டுக் காட்டுகிறேன். நடிகர் திலகம் சம்மந்தப்பட்ட விஷயங்களும் எப்படி பாதிக்கப்பட்டன என்பதற்கு உதாரணம் 1970 அக்டோபர் 25 அன்று சாந்தி தியேட்டர் தாக்கப்பட்டதும் தாக்கியவர்களை விட்டு விட்டு அப்போது தியேட்டர் வளாகத்தில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டதையும் கூற வேண்டும்.

ஒரு அரசாங்கத்தை தன் கையில் வைத்திருக்கும் ஆளும் கட்சி அரசு நிர்வாகத்தை எந்தளவிற்கு அதிகார துஷ்பிரயோகம் செய்ய முடியும் என்பதற்கு ஒரு மீகப் பெரிய உதாரணம் மதுரையில் ஆகஸ்ட் 4,5 மற்றும் 6 தேதிகளில் நடைபெற்ற திமுக மாநாடு. அன்றைய மதுரை மேயர் முத்து மாநகராட்சி நிர்வாகத்தையும், மாநகராட்சி ஊழியர்களையும் கட்சி மாநாட்டிற்கு பயன்படுத்தியதை மக்கள் திகைத்துப் போய் பார்த்தனர். அங்கே மாநாட்டிற்காக விளையாடிய பணம் அன்றாடம்காய்ச்சிகளாக இருந்த ஆளும்கட்சியினர் எப்படி கோடிஸ்வரர்களாக மாறி விட்டனர் என்று பெருந்தலைவர் குற்றம் சாட்டுவது முழுக்க முழுக்க உண்மை என்பதையும் மக்கள் புரிந்துக் கொண்டனர்.

இந்த மாநாட்டில் அன்றைய ஆளும் கட்சியில் இருந்த உட்கட்சி பூசலும் பகிரங்கமாக வெளியே தெரிய ஆரம்பித்தது. மாநாட்டு ஊர்வலத்தை முதல் நாள் முக முத்து தொடங்கி வைத்தபோதே ஆரம்பித்த பிரச்சனை ஊர்வலத்தை விளக்குத்தூண் அருகே நின்று பார்வையிட்ட அன்றைய முதல்வர், அவர் நின்றிருந்த மேடைக்கு முன்னால் சென்று நின்றுக் கொண்டு நகராமல் ஒரு குழுவினர் எம்ஜிஆர் அவர்களை வாழ்த்தி கோஷம் போட்டது, முதல் நாள் ஊர்வலத்தை துவக்கி வைக்க வருவதாக இருந்த எம்ஜிஆர் அவர்கள் மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று மாலை மட்டும் வந்துவிட்டு மேடையில் பேசி விட்டு புறப்பட்டு போய்விட அவருக்காக வந்த கூட்டம் அவர் சென்றவுடன் மாநாட்டு பந்தலை விட்டு வெளியேறி விட முதல்வர் திமுக தலைவர் மு.க. மேடையில் மயங்கி விழ அரசியல் பார்வையாளர்களுக்கு நடப்பது நன்றாகவே புரிந்தது. ஆனால் ஒன்று சொல்ல வேண்டும். இதற்கு இரண்டு மாதங்களுக்கு பிறகு [அக்டோபர் 72-ல்] திமுகவின் முக்கிய தலைவர்கள் முதல்வர் உட்பட பல அமைச்சர்களும் ஊழல் செய்து விட்டனர் என்று சொல்லி வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட எம்ஜிஆர் அவர்கள் இந்த மாநாட்டில் பேசும்போது வெளியேறியபோது அவர் யாரையெல்லாம் ஊழல் வாந்திகள் என்று சொன்னாரோ அவர்கள் அனைவரும் மேடையில் வீற்றிருக்க " இவர்கள் அனைவரும் ஊழல் செய்தவர்கள் என்று காமராஜர் கூறுகிறார். நீங்கள் சொல்லுங்கள் இவர்கள் ஊழல் செய்தவர்களா" என்று கூட்டத்தை பார்த்து கேட்க கூட்டம் இல்லையென்று சொல்ல " காமராஜர் வேண்டுமென்றே சொல்கிறார்" என்று ஊழல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்கியதையும் இங்கே குறிப்பிட வேண்டும். [மாநில சுயாட்சி கிடைக்காவிட்டால் ராணுவத்தை சந்திப்பேன் என்று சொன்னதெல்லாம் தனி கதை].

இப்படியாக நாம் கடந்து வந்துக் கொண்டிருக்கும் 1972 ஜூலை ஆகஸ்ட் காலகட்டம் தமிழக அரசியலிலும் சரி தமிழ் திரையுலகிலும் சரி பல்வேறு பரபரப்புகளை சந்தித்துக் கொண்டிருந்த நேரம்.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
17th December 2014, 11:35 PM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்.

கடந்த பதிவின் இறுதி பகுதி

இப்படியாக நாம் கடந்து வந்துக் கொண்டிருக்கும் 1972 ஜூலை ஆகஸ்ட் காலகட்டம் தமிழக அரசியலிலும் சரி தமிழ் திரையுலகிலும் சரி பல்வேறு பரபரப்புகளை சந்தித்துக் கொண்டிருந்த நேரம்.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

சென்ற பதிவில் தமிழகத்தின் அரசியல் களத்தில் பரபரப்பான காட்சிகள் அரேங்கேறி கொண்டிருந்த நேரம் என்று குறிப்பிட்டிருந்தேன். மக்கள் மனதில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு பெருந்தலைவரின் வழிகாட்டுதலை அவர் தலைமையை மீண்டும் தமிழகம் ஏற்கப் போகிறது என்பதற்கான அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்திருந்தன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த மாற்றம் வருங்கால தூண்களாகிய இளைஞர் சமுதாயத்திடமிருந்து துவங்கியதுதான்.

இப்படி சொல்வதற்கு காரணம் என்னவென்றால் அன்றைய நாள் தமிழகத்தில் [1972] செயல்பட்டுக் கொண்டிருந்த 172 கலை அறிவியல் மற்றும் சட்டக் கல்லூரிகளில் நடந்த மாணவர் பேரவை தேர்தலில் 146 கல்லூரிகளில் ஸ்தாபன காங்கிரஸ் சார்பு மாணவர்கள் தலைவர் பதவியை கைப்பற்றினார்கள். இவர்கள் அனைவரும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் என்பதோடு அன்றைய மாணவர் காங்கிரஸ் தலைவராக இருந்த நேதாஜி மற்றும் c. தண்டாயுதபாணி அவர்களின் சீரிய வழிகாட்டலில் பொறுப்பேற்ற நேரம்.

அண்ணாமலை பல்கலைகழக மாணவர் தலைவர் உதயகுமார் வன்முறையாளர்களால் உயரிழந்தது பற்றி பேசினோம். அவர் மரணம் பற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டிருந்ததை குறிப்பிட்டிருந்தேன். 1972 ஆகஸ்ட் 15, இந்தியா சுதந்திரம் அடைந்த வெள்ளி விழா ஆண்டு. அதை கொண்டாடும் வகையில் 1972 ஆகஸ்ட் 14 அன்று நள்ளிரவில் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்றது. அதன் பிறகு இரண்டு தினங்கள் கழித்து என்று நினைவு. அந்த விசாரணை கமிஷனின் அறிக்கை சட்டமன்றத்திலே தாக்கல் செய்யப்பட்டது. அனைவரும் எதிர்பார்த்தது போல் யார் மீதும் குற்றமில்லை என்ற வகையில்தான் அறிக்கை அமைந்திருந்தது. ஆனால் அந்த மாணவனின் உயிர் தியாகம் மாணவர்கள் மத்தியில் ஒரு பெரிய எழுச்சியை உருவாக்கியது என்றே சொல்ல வேண்டும். அந்த மாணவர் சக்தி அளவிடப்பட முடியாத சக்தியாக திகழ்ந்தது என்பதும் உண்மை. நேதாஜி, தண்டாயுதபாணி மற்றும் குடந்தை ராமலிங்கம் போன்ற மாணவர் மற்றும் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மாணவர் மற்றும் இளைஞர்களை வழி நடத்தி சென்ற முறை பாராட்டுக்குரியது. நேதாஜி போன்ற துணிவு மிக்க மாணவர் தலைவர் இருந்ததனால்தான் திருச்சி கிளைவ் ஹாஸ்டல் அராஜக தாக்குதல்களெல்லாம் வெளி வந்தன. அது இப்போது நாம் பேசும் நிகழ்வு நடந்து முடிந்த பிறகே நடந்தது என்பதால் அதை இப்போது விட்டு விடுவோம்.

தமிழகமெங்கும் இப்படி எழுச்சி கோலமாக நமது சக்தி ஆர்ப்பரித்து வரும் நேரம் அந்த மாணவர் சக்தியை ஒருமுகப்படுத்தி மேலும் எழுச்சி பெறும் வண்ணம் மாணவர் காங்கிரஸ் மாநாடு சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் 1972 ஆகஸ்ட் 26,27 சனி மற்றும் ஞாயிறு நாட்களில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு இரண்டாம் நாள் மாலை நடிகர் திலகம் உரையாற்றுவார் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதே காலகட்டத்தில் நடிகர் திலகத்தின் திரைப்பட சாதனை ஒரு இமாலய சாதனையாக மாறிக் கொண்டிருந்த நேரம். அதைப் பற்றிதான் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.

பாபு முதல் பட்டிக்காடா பட்டணமா வரை தொடர்ந்து இமாலய வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருந்த நடிகர் திலகத்திற்கு கண் பட்டதோ என்று எண்ணும் வண்ணம் ஜூலையில் வெளியான தர்மம் எங்கே எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை என்பதை சென்ற பதிவுகளில் பார்த்தோம். அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பு தவப்புதல்வன் செப்டம்பர் முதல் அல்லது இரண்டாம் வாரம் திரைக்கு கொண்டு வருவதற்கு முக்தா ஸ்ரீநிவாசன் முயற்சி எடுத்துக் கொண்டிருந்தார் என்பதை பற்றியும் வசந்த மாளிகையை பொறுத்தவரை அது நவம்பர் 4 தீபாவளியன்று வெளிவரும் என்றும் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தர்மம் எங்கே அது பெற வேண்டிய வெற்றியை பெறாமல் போனபோது தன்னுடைய படத்தை முன்கூட்டியே வெளியிடுவதற்கு முயற்சி எடுத்த முக்தா. VC சண்முகம் அவர்களிடம் பேசி ஆகஸ்ட் 26 அன்று வெளியிடுவதற்கு சம்மதம் வாங்கி விட்டார்.தர்மம் எங்கே வெளி வந்த ஜூலை 15 தொடங்கி 6 வார இடைவெளியில் தவப்புதல்வன் ஆகஸ்ட் 26 அன்று வெளியாவதாக விளம்பரம் வருகிறது.

படம் வெளியாவதற்கு ஒரு வாரம் முன்னால் நடிகர் திலகத்தை ஈன்றெடுத்த அன்னை ராஜாமணி அம்மையார் உடல்நலம் குன்றுகிறார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். ஆகஸ்ட் மாதம் 24-ந் தேதி வியாழன் மாலை உடல்நிலை கவலைக்கிடமான சூழலுக்கு செல்கிறது. அன்று மாலைதான் சௌகார் ஜானகி அவர்களின் மகளின் திருமண வரவேற்பு [ஆபட்ஸ்பரி அரங்கம் என்று நினைவு] நடைபெறுகிறது. சௌகார் வீட்டு திருமணம் என்பதனாலயே அதை தவிர்க்க முடியாமல் அங்கே சென்று விட்டு சாப்பிட்டு விட்டுதான் போக வேண்டும் என்று சொல்லும் சௌகாரிடம் மட்டும் உண்மை நிலவரத்தை சொல்லிவிட்டு வீட்டிற்கு விரைந்து திரும்பி வருகிறார் நடிகர் திலகம். தாயின் அறையிலேயே அவர் கட்டிலில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அன்றிரவு ராஜாமணி அம்மையாரின் உயிர் பிரிகிறது. நெஞ்சை பிளக்கும் சோகம் நடிகர் திலகத்தை தாக்குகிறது. பல முறை அவர் மூர்ச்சை ஆகி போகிறார்,

இந்த் நிலையில் 26 ந் தேதி சனிக்கிழமையன்று தவப்புதல்வன் வெளியாகிறது. அந்த படத்தின் ரிப்போர்ட் சுட்டிக் காட்டியது என்னவென்றால் தர்மம் எங்கே மூலமாக நடுவில் ஏற்பட்டது ஒரு சின்ன தடங்கலே அது நீக்கப்பட்டு மீண்டும் வெற்றி பாதையை நமக்கு திறந்து வைக்கின்றது. ஆனால் இந்த் வெற்றியை நடிகர் திலகத்தால் முழுமையாக கொண்டாட முடியவில்லை.

தாயார் இறந்து நான்கு நாட்கள் கூட ஆகவில்லை என்பதனால் நடிகர் திலகம் மாநாட்டிற்கு வரமாட்டார் என்றே அனைவரும் நினைத்தனர். அவரிடம் வருகிறீர்களா என்று கேட்க கூட யாருக்கும் தோன்றவில்லை. ஆனால் யாரை உயிருக்கு மேலாக மதித்தாரோ யார் பெயரால் தன் வீட்டிற்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்தாரோ அந்த தாயை விட தான் சார்ந்துள்ள இயக்கம், தான் ஏற்றுக் கொண்ட தன்னலமற்ற தலைவன், தன்னை உயிரென நேசிக்கும் மாணவர் மற்றும் இளைஞர்கள் அவர்களுக்கு கொடுத்த வாக்குதான் பெரிது என்று நினைத்த நடிகர் திலகம் 27-ந் தேதி ஞாயிறு மாலை மாநாட்டிற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று கொடுத்த வாக்கை காப்பாற்றியதுடன் மட்டுமல்லாமல் மாணவர்கள் இளைஞர்கள் ஆகியோரின் இலக்கு என்ன எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துரைத்தார். வெள்ளமென திரண்டிருந்த வீரர் கூட்டம் அன்றைய துக்க சூழலிலும் தங்களை தேடி வந்த நடிகர் திலகத்தை ஆவேசபூர்வமாக வாழ்த்தி வரவேற்றது. இன்று நினைத்தாலும் உடல் சிலிர்க்கும் நிகழ்வுகள் அவை.

இந்த விழாவின் புகைப்படங்கள் 9 மாதங்களுக்கு முன்பு நமது திரியில் பதிவிறக்கம் செய்யப்பட்டன அந்த படங்களை மீண்டும் நான் இப்போது பதிவு
செய்திருக்கிறேன். இந்த புகைப்படங்களை 9 மாதத்திற்கு முன்பு நடிகர் திலகம் திரியில் பதிவிறக்கம் செய்த வினோத் சாருக்கு நன்றி.

இனி தவப்புதல்வன் பற்றிய என் நினைவலைகளை அடுத்த பதிவில் பகிர்ந்துக் கொள்கிறேன்.

http://i61.tinypic.com/1zlrkpd.jpg

(தொடரும்​)

அன்புடன்

Murali Srinivas
26th December 2014, 09:15 PM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்.

கடந்த பதிவின் இறுதி பகுதி

இனி தவப்புதல்வன் பற்றிய என் நினைவலைகளை அடுத்த பதிவில் பகிர்ந்துக் கொள்கிறேன்.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

தவப்புதல்வன் - முக்தா பிலிம்ஸ் தயாரிப்பு. முக்தா ஸ்ரீனிவாசன் அதிகமாக பள்ளிப்படிப்பு படிக்காதவர். சிறு வயதிலேயே குடும்ப சூழல் காரணமாக வேலைக்கு போக நேர்ந்தவர். ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு அந்த இயக்கத்திலே இருந்தவர். பின் காங்கிரசின் தேசிய நீரோட்டத்தில் இணைந்தவர். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனதில் வேலை பார்த்து பின் எஸ். பாலச்சந்தர் போன்றவர்களிடம் assistant இயக்குனராக அந்த நாள் போன்ற படங்களில் பணியாற்றி முதன் முதலாக முதலாளி படத்தை இயக்கினார். பின் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களான நினைவில் நின்றவள், தேன் மழை, போன்றவற்றை இயக்கிய பிறகு நடிகர் திலகத்திடம் வந்து சேர்ந்தார். முதலில் நிறை குடம் அதன் பிறகு அருணோதயம். இதற்கு இடையில் ஜெய்சங்கரை வைத்து பொம்மலாட்டம், ஆயிரம் பொய் போன்ற படங்களையும் எடுத்தார். மிக மிக சாதாரண நிலைமையிலிருந்து முன்னேறி வந்தவர் என்பதால் படத்தயாரிப்பில் மிக கண்டிப்பாக இருப்பார் என்ற பெயர் இவருக்குண்டு. அனைத்து விஷயங்களையும் முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கேற்றார் போல் பட்ஜெட் போட்டு படத்தை சிக்கனமாக முடிக்கக் கூடியவர் என்ற பெயர் இவருக்கு திரையுலகில் உண்டு. இவரும் இவரது மூத்த சகோதரர் முக்தா ராமசாமியும் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் அனைவருக்கும் எந்த சூழலிலும் சரியாக பிரதி மாதம் 1-ந் தேதி சம்பளம் கொடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இவர்களின் கட்டுப்பாடான இந்த நடைமுறைதான் விசி சண்முகத்தை கவர்ந்தது என்று சொல்லுவார்கள். ஒரு முறை பிலிமாலயா மாத இதழில் ஜீனியஸ் கேள்வி பதிலில் சிவாஜியை வைத்து படமெடுக்க என்ன தகுதி வேண்டும் என்ற கேள்விக்கு "ஒன்று பாலாஜியை போல் இருக்க வேண்டும். இல்லை முக்தா ஸ்ரீநிவாசன் போல் நடக்க வேண்டும்" என்று பதில் சொல்லியிருந்தார்கள்.

முதலில் சொன்னது போல் முக்தா நடிகர் திலகத்தை வைத்து எடுத்த இரண்டாவது படமான அருணோதயம் 1971 மார்ச் 5-ந் தேதி வெளியானது. மிக சரியாக இந்திய பாராளுமன்றத்திற்கும் தமிழக சட்டமன்றத்திற்கும் பொது தேர்தல் நடைபெற்ற நேரத்தில் வெளியானதால் அது பெற வேண்டிய வெற்றியை பெறவில்லை. அது மட்டுமல்லாமல் அந்த 1971 ஜனவரி 14 முதல் ஏப்ரல் 14 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் நடிகர் திலகத்தின் 6 படங்கள் வெளியான தகவலை பார்த்தோம். 90 நாட்களில் இரு துருவம், தங்கைக்காக, அருணோதயம், குலமா குணமா பிராப்தம் சுமதி என் சுந்தரி என்று ஆறு படங்கள் ரிலீஸ் ஆன நிலையிலும் பெருவாரியான ஊர்களில் 8 வாரங்களை கடந்து ஓடிய அருணோதயம் வர்த்தக ரீதியான வெற்றியை பெற்றது. உடனே தனது அடுத்த படத்திற்கு date வாங்கிவிட்டார் முக்தா.

முக்தா எடுத்த ஆரம்ப கால நடிகர் திலகம் படங்களிலெல்லாம் ஒரு நோயை அடிப்படையாக கொண்ட நாயகன் அல்லது நாயகியை முன்னிறுத்தி கதை சொல்லியிருப்பார்கள். எனவே தவப்புதல்வன் படத்திற்கும் அப்படி ஒரு நோயை அடிப்படையாக வைத்து கதையை எழுதியிருந்தார் தூயவன். மாலைக் கண் நோய் என்று தமிழில் சொல்லப்படும் Night Blindness தான் இங்கு மெயின் விஷயம். தன் குடும்பத்தில் பாரம்பரியமாக வரும் இந்த நோய் தன் ஒரே மகனுக்கும் வந்துவிடக் கூடாது என தவிக்கும் தாய், தனக்கு ஏற்கனவே அந்த நோய் வந்துவிட்டது என்று தெரிந்தால் தாய் அதை தாங்க மாட்டாள் என்பதனால் தாயிடம் மறைக்கும் மகன், டாக்டராக பணிபுரியும் நாயகனின் முறைப்பெண், நாயகனின் சொத்திற்கு ஆசைப்பட்டு அவனின் இந்த நோயைப் பற்றியும் தெரிந்துக் கொண்டு அவனை பிளாக்மெயில் செய்யும் மற்றொரு பெண் என்று சுவையாக பின்னப்பட்டிருந்த கதை.

படம் வெளிவருவதற்கு முன் முழு கதையும் தெரியாது என்ற போதிலும் படத்தைப் பற்றிய ஒரு outline பல பத்திரிக்கைகள் மூலமாக ரசிகர்களுக்கு தெரிந்திருந்தது. அன்றைய நாளில் நடிகர் திலகத்தை வைத்து ஆரம்பிக்கப்படும் புதிய படங்கள் அனைத்தும் வண்ணப் படங்களாக அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இந்த படம் கருப்பு வெள்ளையில் தயாரிக்கப்படுவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த போதிலும் அன்றைய நாட்களில் பத்திரிக்கைகளில் வெளிவந்த நடிகர் திலகத்தின் ஸ்டில்ஸ் அட்டகாசமாக இருந்தது. பல ஸ்டில்களில் ஜிப்பா அணிந்து காட்சியளித்த நடிகர் திலகம் நிச்சயமாக திராவிட மன்மதனாகவே தோன்றினார். பெரிய எதிர்பார்ப்பு இல்லாவிட்டாலும் கூட ஒரு நம்பிக்கை இருந்தது.

சென்ற பதிவில் பார்த்தது போல் இந்த படம் 1972 ஆகஸ்ட் 26-ந் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டு வெளிவரும் நேரம்தான் நடிகர் திலகத்தின் அன்னையார் ராஜாமணி அம்மையார் ஆகஸ்ட் 24 அன்று காலமானார்.என்பதையும் பார்த்தோம். இதன் காரணமாக படம் வெளிவருவதில் ஏதேனும் சிக்கல் இருக்குமா என்று ஒரு சில ரசிகர்களுக்கு ஐயம் ஏற்பட்டபோதிலும் தொழில் வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதில் வெகு தெளிவாக இருந்த நடிகர் திலகமும் விசி சண்முகமும் படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிடுமாறு சொல்லிவிட்டார்கள். அதன்படி 1972 ஆகஸ்ட் 26-ந் தேதி சனிக்கிழமை தவப்புதல்வன் வெளியானது.

மதுரையில் சிந்தாமணியில் ரிலீஸ். ஒரு கால கட்டத்தில் தொடர்ந்து நடிகர் திலகத்தின் வெற்றிப் படங்களான காத்தவராயன், பாகப்பிரிவினை, விடிவெள்ளி, பாசமலர், புதிய பறவை, தில்லானா என்று தொடர்ந்து வெளியான சிந்தாமணியில் நடுவில் ஒரு சின்ன இடைவெளி விழுந்தது. 1968 ஜூலையில் வெளியாகி 132 நாட்கள் ஓடிய தில்லானாவிற்கு பிறகு சிந்தாமணியில் வெளியான நடிகர் திலகத்தின் படம் என்றால் அது தவப்புதல்வன்தான். இடையில் 1971 ஜூலையில் நடிகர் திலகத்தின் தேனும் பாலும் வெளியானது என்ற போதிலும் அது நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த காரணத்தினால் அதை பற்றிய ஒரு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஆகவே வெகு நாட்களுக்கு பிறகு சிந்தாமணியில் வெளியாகும் நடிகர் திலகம் படம் என்ற பெருமையையும் தவப்புதல்வன் பெற்றது.

ஒரு விஷயம் குறிப்பிட வேண்டும். அந்த 1972-ம் வருடத்தில் தொடர்ந்து நடிகர் திலகத்தின் நான்கு படங்கள் சனிக்கிழமையன்றே வெளியானது. 1972 மார்ச் 11 சனியன்று ஞான ஒளி, மே 6 சனிக்கிழமை பட்டிக்காடா பட்டணமா, ஜூலை 15 சனிக்கிழமை தர்மம் எங்கே, ஆகஸ்ட் 26 சனிக்கிழமை தவப்புதல்வன் என்று வெளியானது. என் நினைவிற்கு எட்டியவரை வேறு எந்த வருடத்திலும் இது போல் தொடர்ந்து சனிக்கிழமைகளில் நடிகர் திலகத்தின் நான்கு படங்கள் வெளியானதாக தெரியவில்லை.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
31st December 2014, 12:54 AM
1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்.

கடந்த பதிவின் இறுதி பகுதி

தவப்புதல்வன் பற்றிய என் நினைவலைகள் தொடர்கிறது.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

அந்த நாள் ஞாபகம்

படம் வெளியான அன்று எனக்கு ஸ்கூல் இருந்ததால் எனக்கு ஓபனிங் ஷோ போக முடியவில்லை. வழக்கம் போல் என் கஸின் போய் விட்டான். மதியம் ஸ்கூலிலிருந்து வந்தவுடன் படம் எப்படி என்று அவனிடம் கேட்க அதற்குள் மார்னிங் ஒபனிங் ஷோ பார்த்து விட்டு வந்திருந்த அவன் படம் நன்றாக இருப்பதாக சொன்னான்.நான் அதற்கு முன்பு வந்த படத்தின் ரிசல்ட்டை மீண்டும் அந்த கேள்வியை கேட்க அவன் புரிந்துக் கொண்டு முந்தைய படமான தர்மம் எங்கே படத்தை மனதில் வைத்து இதை கேட்கிறாய். அந்த படம் சரியில்லை என்று சொல்ல முடியுமா? ஏதோ சில காரணங்களினால் படம் சரியாக போகவில்லை. அனால் இது அப்படி ஆகாது என்றான். அன்று மாலையே படம் பார்த்த வேறு சில நபர்களிடம் கேட்க அனைவருமே நல்ல ரிப்போர்ட் சொன்னார்கள். மனதில் நம்பிக்கை வந்துவிட்டது. ஆனால் தர்மம் எங்கே படத்திற்கு வந்த கூட்டம் அன்று டிக்கெட் கிடைக்காமல் அலைந்தது அரசால் புரசலாக வீட்டிற்கு செய்தி போய் விட்டதால் முதல் இரண்டு நாட்களான சனி ஞாயிறு படத்திற்கு போக அனுமதி கிடைக்கவில்லை. மீண்டும் திங்களன்று ஸ்கூல். வருத்தமாகவும் கடுப்பாகவும் இருந்தது. முதல் வாரத்தில் ஆறாவது நாள் ஆகஸ்ட் 31-ந் தேதி வியாழக்கிழமையன்று ஸ்கூல் லீவ். அன்று பிள்ளையார் சதுர்த்தியா அல்லது கோகுலாஷ்டமியா என்பது நினைவில்லை. ஆனால் ஸ்கூல் லீவ். நினைவிருக்கிறது. அன்று போக வேண்டும் என்று வீட்டில் கேட்க ஓகே சொல்லி விட்டார்கள். எப்போதும் கஸினுடன் போகும் நான் இந்த முறை வித்தியாசமாக என் தந்தையுடன் சென்றேன். அன்று விடுமுறை என்பதனால் அவர் கூட்டி சென்றார். முதலில் கூட வருவதாக சொன்ன கஸின் வேறு வேலை வந்துவிட்டதால் எங்களுக்கு டிக்கெட் வாங்கி கொடுத்துவிட்டு போய்விட்டான். நான் கூட படத்திற்கு கூட்டம் எப்படி இருக்குமோ என்று யோசனையாக் போனேன். ஆனால் என் எதிர்பார்ப்பையும் மீறிய கூட்டம் . கீழ வெளி வீதியில் அமைந்திருக்கும் சிந்தாமணி டாக்கீஸின் இரண்டு பக்கவாட்டு சந்துகளில் மிக நீண்ட queue நிற்கிறது. கஸின் டிக்கெட் வாங்கி கொடுத்து விட்டதால் queueவில் நிற்காமல் நேரே உள்ளே போய் விட்டோம்.

அந்த வருடம் அது வரை வெளியான நான்கு படங்களுமே பெரிய அலப்பரையில் பார்த்த எனக்கு தவப்புதல்வன் படம் பார்த்தது ஒரு வித்தியாச அனுபவத்தை தந்தது. அன்றைய மாட்னி ஹவுஸ் புல். அதில் பெருவாரியான நபர்கள் பொது மக்களே. ரசிகர்கள் என்ற வகையில் பார்த்தால் அந்த எண்ணிக்கை குறைவுதான். அமைதியாக ரசிக முடிந்தது என்று சொன்னாலும் கைதட்டல்களுக்கும் ஆரவாரத்திற்கும் குறைவில்லை. நடிகர் திலகத்தின் பெயர் போடும்போது, அவரை முதலில் திரையில் காட்டும்போது அது போன்ற இடங்களில் பலமான கைதட்டல்கள் விழுந்தன. அதே போல் பாடல் காட்சிகள் என்று எடுத்துக் கொண்டோமானால் அனைத்து பாடல்களுக்கும் நல்ல response.

முதல் பாடல் Love is fine darling பாடலில் நடிகர் திலகத்தின் ஸ்டைல் மற்றும் சில நடக்கும், ஸ்டெப் வைக்கும், trumpet வாசிக்கும் அந்த போஸ் இவற்றுக்கெல்லாம் நல்ல வரவேற்பு. அடுத்தது இசை கேட்டால் பாடல். ஹிந்துஸ்தானி பாடகர் அக்தர் கானுடன் போட்டி போட்டு ஜெயிக்க வேண்டும் என்று வற்புறுத்தும் விஜயாவிடம் முதலில் வேண்டாம் என்று மறுத்துவிட்டு பிறகு அக்தர் கானை போட்டியில் சந்திக்கிறேன் என்று சொல்லும் நடிகர் திலகத்திடம் அக்தர் கான் என்ன இப்போ உங்களை தான்சேன் கூட ஜெயிக்க முடியாது என்பார் விஜயா. யார் அது தான்சேன் என கேட்கும் நடிகர் திலகத்திடம் தான்சேன் கூறுவார் விஜயா. அப்போது கனவு பாடலாக விரியும் அற்புத பாடல் இசை கேட்டால் புவி அசைந்தாடும் பாடல். [இது தீப் எனும் ஹிந்துஸ்தானி ராகத்தை அடிப்படையாக கொண்டது என்று சொல்லுவார்கள்]. முதலில் சிதார் வாசித்துக் கொண்டே பாட ஆரம்பிக்கும் நடிகர் திலகம் பல்லவி முடிந்ததும் எழுந்து விஜயா படுத்திருக்கும் படுக்கைக்கு அருகில் வந்து அங்கே நிற்கும் அரண்மனை வைத்தியரை பார்த்து கண்ணாலேயே எப்படி இருக்கிறது என்று கேட்க அவர் முன்னேற்றம் இல்லை என்ற வகையில் தலையசைக்க என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம் என்று சரணத்தை ஆரம்பிக்கும் நடிகர் திலகம் அப்போது காட்டும் சில கை அசைவுகள், அந்த சரணத்தை முடித்து விட்டு ஏழாம் கடலும் வானும் நிலவும் என்றவாறே ஸ்டைலிஷ் நடை போடும் நடிகர் திலகத்திற்கு விழுந்தது அப்ளாஸ். அது அடங்குவதற்குள்ளாகவே அங்கே சாத்தி வைத்திருக்கும் கம்பிக்களை வளைத்து இசை என்னிடம் உருவாகும் என்ற வரியில் நாணேற்றுவது போல் காண்பித்து இசை என்னிடம் உருவாகும் என்று கையை மேலே உயர்த்துவார். அதற்கும் செம அப்ளாஸ்,

உலகின் முதல் இசை தமிழிசையே பாடலில் வெள்ளை ஜிப்பா அணிந்து வேட்டி கட்டி இருப்பார். உண்மையிலே அந்த தோற்றத்தில் அவரை வெல்லக்கூடிய அழகு யாருக்குமே கிடையாது என்றே தோன்றும். இந்த போட்டி பாடலில் சரணத்தில் பாடும்போது இரண்டு வரி வரும்

மானிட ஜாதியும் மயங்கி வரும்; அந்த

வனவிலங்கும் ஆடி அசைந்து வரும்

அந்த இரண்டாவது வரியை அவர் இரண்டாவது முறை பாடும்போது ட்ராலியில் வரும் காமிராவைப் பார்த்து தலையை சாய்த்து கன்ன கதுப்பும் கண்களும் ஒரு போல அசைந்து ஒரு சின்ன மந்தகாச புன்னகையை உதிர்ப்பார். அதற்கும் பலமான கைதட்டல்கள்.

நான் எப்போதும் சொல்வதுண்டு. வார்த்தைகளுக்கும் வர்ணனைகளுக்கும் அப்பாற்பட்ட வசீகரம் அவரது கை அசைவில் உண்டு என்று. அது பார்வையாளர்களை அப்படியே ஆகர்ஷித்து விடும். அதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும் என்றபோதினும் ஒரு விஷயம் எனக்கு நினைவிற்கு வருகிறது.

1980-களின் நடுப் பகுதி. நான் கேரளத்தில் வேலை நிமித்தமாக இருக்கும் காலம். கோட்டயம் நகரத்திற்கு சற்று வெளியே எர்ணாகுளம் போகும் பாதையில் நிர்மலா என்றொரு தியேட்டர் அமைந்திருந்தது. அங்கே முழுக்க முழுக்க தமிழ் படங்கள் மட்டுமே திரையிடுவார்கள். நகரில் மொத்தமே ஐந்து திரையரங்குகள்தான் என்பதனாலும் அந்த ஐந்தில்தான் மலையாளம், தமிழ், ஹிந்தி சில நேரம் ஆங்கில படங்கள் திரையிடப்பட வேண்டும் என்பதனால் நகருக்குள் தியேட்டர் கிடைக்காத தமிழ் படங்கள் இந்த தியேட்டரில் வெளியாகும். அவை இல்லாத போது இந்த நிர்மலா தியேட்டரில் பழைய தமிழ்ப் படங்களும் திரையிடுவார்கள். அப்படி அங்கே தங்க சுரங்கம், ரத்த திலகம், மூன்று தெய்வங்கள் போன்ற பல நடிகர் திலகத்தின் படங்களைப் பார்த்திருக்கிறேன். மூன்று தெய்வங்கள் போட்டிருந்தபோது ஒரு சாதாரண வேலை நாளன்று மாலைக்காட்சிக்கு போயிருந்தேன். ஓரளவிற்கு நல்ல கூட்டம். 99% பொது மக்கள். நடிகர் திலகத்தை முதன் முதலில் காட்டும்போது கூட வெகு சிலரே கைதட்டினார்கள். வசந்தத்தில் ஓர் நாள் பாடல் வந்தது. அதில் விஷ்ணுவாக வரும் நடிகர் திலகம் வலது கையை உயர்த்தி ஆசி கூறுவதாக வரும் அந்த ஷாட் திரையில் வந்தபோது படபடவென்ற பலமான கைதட்டல். அதுவும் spontaneous ஆக விழுந்த கைதட்டல்கள். ஜாதி,மத,இன, மொழி மாநில, நாடு போன்ற அனைத்து வித்தியாசங்களையும் தாண்டியவர் நடிகர் திலகம் என்பதற்கு அன்று நானே நேரிடை சாட்சியாக இருந்தேன்.

மீண்டும் தவப்புதல்வனுக்கு வருவோம். படத்தின் மற்றொரு பாடலான கிண்கிணி கிங்கிணி மாதா கோவில் மணியோசை பாடல் சற்றே உணர்சிகரமாக இருக்கும். சோகத்தை நகைசுவை போல் வெளிகாட்டி மற்றவர்களை சிரிக்க வைத்து தான் அழுவார். பெண்கள் பகுதியில் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு. பாடல்கள் தவிர தன் நோயை விஜயாவிடம் மறைக்கும் போதும், இசைக் கருவிகளை அடித்து நொறுக்கும்போதும், விஜயாவிடம் உண்மையை சொல்கிறோம் என்று நினைத்து பேச அங்கே ஏ. சகுந்தலா நின்று கொண்டு இவரை கிண்டல் செய்து கோவமூட்ட சகுந்தலாவை அடிக்க பாய்ந்து எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் விழுந்து விடுவது போன்றவை தியேட்டரில் அனுதாபத்தை பெற்று தந்தது. அது போலவே டிஸ்பன்சரியை மூடப் போகிறேன் என்று சொல்லும் விஜயாவிடம் வேண்டாம் என்று நடிகர் திலகம் சொல்ல பழிக்கு பழியாய் கோவத்தோடு அனைத்தையும் விஜயா நொறுக்க ஒன்றுமே பேசாமல் நடிகர் திலகம் திரும்பி நடக்கும் காட்சியும் பெரிதும் ரசிக்கப்பட்டது. கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியும் ரசிக்கப்பட்டது. [சண்டையின்போது அங்கே வைக்கோல்போரில் தீ பற்றிக் கொள்ள கண் ஆபரேஷன் செய்துக் கொண்டிருக்கும் சிவாஜி அந்த வெளிச்சத்தில் எதிரிகளை இனம் கண்டு சண்டை போடுவதையும் மக்கள் ரசித்தனர்].

படம் முடிந்து வெளியே வரும்போது ஒரு நல்ல படத்தை பார்த்தோம் என்ற திருப்தி அனைவரின் முகத்திலும் பார்க்க முடிந்தது. படம் வெற்றிபெறும், நூறு நாட்களை கடக்கும் என்று ரசிகர்கள் சொன்னது நடக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அது போலவே சென்னை பைலட்டில் 100 நாட்களை கடந்தது. மதுரையில் வெற்றிகரமாக 70 நாட்களை நிறைவு செய்யும்போது வழக்கம் போல் விநியோகஸ்தர் சேது பிலிம்ஸ் வில்லனாக வந்து தேவர் படமான தெய்வம் படத்தை நவம்பர் 4 தீபாவளி முதல் திரையிட்டனர். ஆனால் தவப்புதல்வன் மதுரை விஜயலட்சுமி தியேட்டருக்கு ஷிப்ட் ஆகி 100 நாட்களை நிறைவு செய்தது.

வெகு எளிதாக 100 நாட்களை கடந்தது என்று சொல்கிறோம். ஆனால் யோசித்துப் பார்த்தோமென்றால் தவப்புதல்வனின் சாதனை சாதாரண விஷயமில்லை. ஒரு பக்கம் பட்டிக்காடா பட்டணமா என்ற இமயம் மற்றொரு பக்கம் தவப்புதல்வன் வெளியாகி ஐந்தே வார இடைவெளியில் செப் 29-ந் தேதி வெளியான வசந்த மாளிகை என்ற மற்றொரு பிரம்மாண்ட இமயம், இந்த இரண்டு இமயங்களுக்கும் இடையில் சிக்கி நசுங்கி விடாமல் வெற்றிகரமாக முன்னேறிய தவப்புதல்வன் பெற்ற வெற்றி மகத்தானது. மேலும் 45 நாட்களிலேயே அதாவது 1972 அக்டோபர் 10-ந் தேதிக்கு பின் தமிழகத்தில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், எந்த நேரத்தில் எங்கு வன்முறை வெடிக்குமோ என்ற பயங்கர சூழல் இப்படிப்பட்ட காலகட்டத்தையும் கடந்து, தீபாவளிக்கு வெளியான படங்களின் போட்டியையும் சமாளித்து தவப்புதல்வன் பெற்ற வெற்றி நிச்சயமாக பெரிய வெற்றி என்பதில் சந்தேகமேயில்லை.

(தொடரும்)

அன்புடன்

தவப்புதல்வன் படத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. காரணம் என் தந்தையோடு சென்றிருந்தேன் என்று சொன்னேன். என் வாழ்க்கையில் என் தந்தையோடு சேர்ந்து பார்த்த கடைசிப் படம் தவபுதல்வன்தான். எப்போதுமே ஒரு நிகழ்வு நடைபெறும்போது அதன் முக்கியத்துவம் நமக்கு தெரியாமல் போய் விடும். அதன் பிறகு நமக்கு நஷ்டமானதை நினைத்துப் பார்க்கும்போதுதான் இழந்ததன் magnitude புரியும். அந்த வகையில் தவப்புதல்வன் எனக்கு எப்போதும் மறக்க முடியாத மனதுக்கு நெருக்கமான படம்.

Murali Srinivas
21st January 2015, 06:41 PM
இந்த திரியில் நமது நடிகர் திலகத்தின் திரைக் காவியங்களை அவை முதன் முதலில் வெளியான காலகட்டத்தில் பார்த்தபோது ஏற்பட்ட அனுபவங்கள், அன்றைய நிகழ்வுகள் போன்றவற்றை மீண்டும் அசை போட்டுப் பார்க்கும் ஒரு nostalgic திரியாக விளங்குவதால் இன்று முதல் பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற இந்த திரியின் பெயர் அந்த நாள் ஞாபகம் என்று மாற்றப்படுகிறது. நாம் இங்கே பதிவிடும் விஷயங்களுக்கு இந்த பெயரே பொருத்தமாக இருக்கும் என்பதனால் இந்த முடிவு.

திரியை துவக்கிய ராகவேந்தர் சாரின் அனுமதியோடு நடந்த இந்த பெயர் மாற்றத்தை நிறைவேற்றிக் கொடுத்த NOV அவர்களுக்கு நன்றி. அனைவரின் பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் நாடும்

அன்புடன்

RAGHAVENDRA
29th March 2015, 02:21 PM
http://i1146.photobucket.com/albums/o528/imagivity/NTSnaps2/ADMATSHANTIAASNAP_zpsj20xi2xv.jpg


சென்னை சாந்தி திரையரங்கில் அவன் தான் மனிதன் திரையிடப் பட்ட போது...

காட்சி இடம் பெற்ற திரைப்படம் அன்பே ஆருயிரே...

இந்நிழற்படம் முன்பே நம் நடிகர் திலகம் திரியின் வேறோர் பாகத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்டது நினைவிருக்கலாம். இருந்தாலும் ஓர் நினைவூட்டலாக, இங்கே மீள்பதிவு..

Murali Srinivas
9th June 2015, 12:31 AM
அந்த நாள் ஞாபகம்

தவிர்க்க முடியாத பல வேலைகளினால் இந்த தொடர் நினைவலைகளை பதிவு செய்யும் பணியில் சிறிது தொய்வு. வாசகர்கள் மன்னிக்கவும். சீரிய இடைவெளியில் இதை தொடர முயற்சிக்கிறேன்.

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்.

கடந்த பதிவின் இறுதி பகுதி

தவப்புதல்வன் வெற்றி பெற்றதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்! 1972 பற்றிய என் நினைவலைகள் தொடர்கிறது.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

தவப்புதல்வன் 100 நாட்கள் ஓடியதைப் பற்றி சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதன் விளம்பரம் இதோ. மதுரையில் சிந்தாமணியிலிருந்து விஜயலட்சுமி அரங்கிற்கு ஷிப்ட் செய்யப்பட்ட தவப்புதல்வன் அங்கே 100 நாட்களை நிறைவு செய்தது. சென்னையில் பைலட் அரங்கிலும் 100 நாட்கள்.

http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4425a-1.jpg

[மதுரை 04.12.1972 தேதியிட்ட தினத்தந்தி விளம்பரம் -நன்றி சுவாமி]

அன்பு தாயார் ராஜாமணி அம்மையார் மறைந்து நான்கே நாட்களில் காங்கிரஸ் மாணவர் மாநாட்டில் நடிகர் திலகம் கலந்து கொண்டதை பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக உடனே வசந்த மாளிகை படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார் நடிகர் திலகம். முன்பே சொன்னது போல் தீபாவளிக்கு வருவதாக இருந்த வசந்த மாளிகை அதற்கு சற்று முன்னரே செப்டம்பர் 29 அன்று வெளியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டு படப்பிடிப்பு விரைவாக நடந்து வந்தது, மயக்கமென்ன பாடல் காட்சியும் ஒரு சில patch up காட்சிகளுமே பாக்கி என்ற சூழலில் அதற்காக போடப்பட்ட set-ம் ரெடியாக இருக்கிறது என்று தெரிந்தவுடன் உடனே ஷூட்டிங்-ல் கலந்து கொண்டு அதை விரைவாக முடித்துக் கொடுத்தார் நடிகர் திலகம். பல்வேறு படங்களின் சின்ன சின்ன படப்பிடிப்பு schedules முடித்துவிட்டு ஒய்வு எடுத்தார்.எப்படி என்றால் 1972 செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 5 வரை பாலாஜியின் நீதி படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருந்தார் நடிகர் திலகம். மைசூருக்கு அருகேயுள்ள கிராமப் பிரதேசங்களில் படப்பிடிப்பு பிளான் செய்திருந்தார்கள்.

நீதி ஷூட்டிங் தேதிகளுக்கும் அதற்கு முன் முடித்துக் கொடுத்த ஷூட்டிங் தேதிகளுக்கும் நடுவே கிடைத்த 5,6 நாட்கள் இடைவெளியைத்தான் சூரக்கோட்டை சென்று ஓய்வெடுப்பதற்காக பயன்படுத்திக் கொண்டார். அதை ஒய்வு என்று சொல்லுவதை விட தாயாரின் மறைவு அவருக்குள் ஏற்படுத்திய வெறுமையையும் சோகத்தையும் மறக்கவே பண்ணைக்கு சென்றார். ஓய்விற்கு என்று சொல்லி சென்றாலும் அங்கும் அவரை காண ரசிகர்களும், தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் வந்துக் கொண்டேயிருந்தனர் ஆக ஒய்வு எடுக்கப் போனாலும் அங்கேயும் பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்துக் கொண்டுதானிருந்தார்.

இதற்கிடையே பட்டிக்காடா பட்டணமா வெற்றி சூறாவளியாக சுழன்று அடித்துக் கொண்டிருந்தது. மதுரையை பொறுத்தவரை 100 நாட்களில் 4,19,000/- வசூலைப் பெற்று புதிய சரித்திரம் படைத்தது. 16 வாரத்தில் சுமார் 4,40,000/- ரூபாய் வசூல் செய்து அன்று வரை மதுரையில் அனைத்துப் படங்கள் [பணமா பாசமா நீங்கலாக] வெள்ளி விழா நாட்கள் ஓடி பெற்ற வசூலையெல்லாம் இந்த கருப்பு வெள்ளை காவியம் முறியடித்தது. அது மட்டுமா ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான தங்கத்தில் வெளியான படங்களிலேயே அதிகபட்சமாக 140 நாட்கள் ஓடி ரூபாய் 4,75,000/- சொச்சம் வசூல் பெற்ற கேஎஸ்ஜியின் பணமா பாசமா படத்தின் வசூலை தங்கம் தியேட்டரை ஒப்பிட்டு நோக்கினால் அதன் பாதி அளவே capacity உடைய சென்ட்ரல் திரையரங்கில் வெறும் 125 நாட்களுக்குள்ளாகவே கடந்தது பட்டிக்காடா பட்டணமா, [பணமா பாசமா வெளிவந்த 1968-ம் வருடத்தில் இருந்ததை விட டிக்கெட் கட்டணத்தில் 5 பைசா மட்டுமே 1972-ல் பட்டிக்காடா பட்டணமா வெளியானபோது அதிகமாக்கப்பட்டிருந்தது]. 19 வாரத்தில் ரூபாய் 4,90,000/- வசூலித்த இந்தப் படம் 20 வாரத்தில் மதுரையில் மற்றொரு வரலாற்று சாதனை புரிந்தது. மதுரையில் சினிமா திரையரங்குகள் தொடங்கிய காலம் முதல் அன்றுவரை மொத்த வசூலில் எந்தப் படமும் தொடாத 5 லட்சம் ரூபாயை தாண்டியது பட்டிக்காடா பட்டணமா. மிக சரியாக சொல்லவேண்டுமென்றால் 139வது நாள் இரவுக் காட்சியோடு 5 லட்சத்தை தொட்டது. அதாவது 1972-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ந் தேதி வியாழனன்று இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.

ஆம் நண்பர்களே! எந்த ஒரு மனிதன் அந்த நாளில் பிறந்து பின்னாட்களில் நடிகர் திலகத்தின் சாதனை பொன்னேடுகளையெல்லாம் அகில உலகமும் அறிந்துக் கொள்ளும்வண்ணம் தரவேற்றினானோ அந்த மனிதன் பிறந்த நாளன்றுதான் அதற்கு முன்பும் சரி அதற்கு பின்னும் சரி மதுரையில் எந்த கருப்பு வெள்ளை படமும் தொடாத 5 லட்சம் வசூல் என்ற வெற்றிக் கோட்டை கடந்து இன்று வரை ஏன் இனி எந்தக் காலத்திலும் முறியடிக்க முடியாத அந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. காண கிடைக்காமல் இருந்த நடிகர் திலகத்தின் பல்வேறு சாதனை ஆவணங்களை தேடி பிடித்து வெளிக் கொண்டுவந்து நமக்கு வழங்கிய இரா. சுவாமிநாதனுக்கு இந்த மதுரைக்காரன் dedicate செய்யும் ஒரு சாதனை துளி இது.

(தொடரும்)

அன்புடன்

HARISH2619
9th June 2015, 01:18 PM
Dear murali sir,
i felt very happy by reading your first nostalgic post of this year after a gap of nearly 6 months(5 months 8 days to be precise),please continue.

JamesFague
9th June 2015, 01:41 PM
கருப்பு வெள்ளையில் யாரும் நினைத்து பார்க்க முடியாத சாதனை செய்த ஒரே நடிகர் நடிகர் திலகம் மட்டும் தான்

Murali Srinivas
16th June 2015, 12:16 PM
அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான கால கட்டத்தைப் பற்றிய எனது நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்.

கடந்த பதிவின் இறுதி பகுதி

பட்டிக்காடா பட்டணமாவின் பிரம்மாண்டமான வெற்றி பற்றி பேசிக்கொண்டிருந்தோம்

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

பட்டிக்காடா பட்டணமா சூறாவளியாக சுழன்று அடித்துக் கொண்டிருப்பதை பார்த்தோம். அதே நேரத்தில் வசந்த மாளிகை ரிலீசிற்கு தயாராகி கொண்டிருந்தது. வசந்த மாளிகை பற்றி சொல்ல வேண்டுமென்றால் ஒரே வார்த்தை வெற்றி. அன்றைய காலகட்டத்தில் ஒரே நேரத்தில் பல படங்கள் தயாரிப்பில் இருக்கும்போது அந்தப் படத்தைப் பற்றிய செய்திகள், படமாக்கப்படும் காட்சி அமைப்புகள், படத்தின் கதையை பற்றி வெளிவரும் தகவல்கள் மற்றும் பத்திரிக்கையில் வெளிவரும் ஸ்டில்ஸ் ஆகியவற்றை வைத்து படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு படத்தின் வெற்றி வாய்ப்பு ஆகியவை அலசப்படும். அது என்னவோ தெரியவில்லை 1972 ஜனவரியில் தெலுங்கில் வந்து வெற்றியடைந்த பிரேம் நகர் படத்தின் தமிழாக்கமாக வரப் போகிறது என்ற செய்தியுடன் பூஜை போடப்பட்டு வசந்த மாளிகை என்று பெயர் அறிவிக்கப்பட்டபோதே படத்தின் வெற்றி உறுதியாகி விட்டது என்பது போலவே அனைத்து ரசிகர்களும் உணர்ந்தனர். படம் வளர வளர அந்த உணர்வு வலுபெற்றுக் கொண்டே இருந்தது.

படம் வெளிவருவதற்கு முன் பாடல்களும் வெளியாகி விட்டன. அதில் ஒ மானிட ஜாதியே இடம் பெறவில்லை. வெளிவந்த பாடல்களில் ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் மயக்கமென்ன ஆகியவை பெரும் ஹிட் ஆகும் என்று தெரிந்து விட்டது. படத்தின் கிளைமாக்ஸ் பற்றி விவாதங்கள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. சோகமான முடிவு என்றும் இறுதியில் நடிகர் திலகம் ஏற்றிருந்த ஆனந்த் காதல் தோல்வியால் தான் கட்டிய வசந்த மாளிகையை இடித்து தரைமட்டமாக்கி விட்டு விஷம் குடித்து உயிர் துறப்பதாக கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு சாரார் சொல்லிக் கொண்டிருந்தனர். வசந்த மாளிகை செப்டம்பர் 29 ரிலீஸ் மதுரையில் நியூசினிமாவில் வெளியாகிறது என்று பத்திரிக்கை விளம்பரம் வந்துவிட்டது

நமக்கு எப்போதும் மகிழ்ச்சி தொடர்ந்து வந்தால் அதன் பின்னாலேயே வருத்தம் வருவது வழக்கம்தானே! இதில் பெரும்பாலான நேரங்களில் இந்த வருத்தமும் கோவமும் நமது ஆட்களாலேயே வரவழைக்கபப்டுவது நாம் வாடிக்கையாக கண்ட ஒன்று. அது வசந்த மாளிகைக்கும் நடந்தது. வசந்த மாளிகை ரிலீஸ் ஆகப் போகிறது என்ற சந்தோஷத்திற்கு நடுவே அது சென்னை சேலம் போன்ற பல ஊர்களில் எந்தெந்த திரையரங்குகளிலெல்லாம் பட்டிக்காடா பட்டணமா படம் மிகப் பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்ததோ அதே அரங்குகளில் வசந்த மாளிகை வெளியாகிறது என்பதுதான் அந்த வருத்தத்துக்குரிய கோவத்தை கிளறிய செய்தி.

நமது படங்களைப் பொறுத்தவரை குறிப்பாக சென்னை சாந்தி போன்ற அரங்கில் நடிகர் திலகத்தின் படம் எவ்வளவு நன்றாக ஓடிக் கொண்டிருந்தாலும் நடிகர் திலகத்தின் அடுத்த படம் வரும்போது ஓடிக் கொண்டிருக்கும் படத்தை எடுத்துவிட்டு புதிய படத்தை வெளியிடுவது என்பது காலம் காலமாக நடந்து வருவதுதான். சென்னையை பொறுத்தவரை சாந்தி கிரௌன் புவனேஸ்வரியில் பட்டிக்காடா பட்டணமா திரைப்படம் தர்மம் எங்கே, தவப்புதல்வன் என்ற இரண்டு படங்களிடமிருந்து தப்பித்ததே பெரிய விஷயம் எனும்போது வசந்த மாளிகைக்கும் எதிராக தாக்கு பிடிக்க முடியும் என நினைப்பதில் அர்த்தமில்லை என்ற போதிலும் பட்டிக்காடா பட்டணமா நான்கு ஊர்களில் [சென்னை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் நகரங்களில்] வெள்ளி விழா காணும் என நினைத்திருக்க வசந்த மாளிகையின் புண்ணியத்தினால் மற்ற மூன்று ஊர்களில் ஷிப்டிங் செய்யப்பட்டு வெள்ளி விழா கொண்டாட மதுரையில் மட்டும் நேரிடையாகவே வெள்ளி விழா கொண்டாடியது. இதற்கிடையில் எம்ஜிஆரின் கடைசி கருப்பு வெள்ளைப் படமான அன்னமிட்ட கை செப்டம்பர் 15 அன்று வெளியானது

செப்டம்பர் 29 படம் என்றவுடன் ஓபனிங் ஷோ போவதற்கான எங்களின் முயற்சிகள் ஆரம்பித்தன. காலாண்டு தேர்வு முடிந்து [Quarterly Exams] விடுமுறை காலம் என்பதனால் ஒரு பெரிய நிம்மதி. ஆனால் அந்த 1972-ஐ பொறுத்தவரை ஓபனிங் ஷோ டிக்கெட்டுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் என்பது இந்தப் படத்திற்கும் தொடர்ந்தது.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
30th June 2015, 10:34 AM
அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

கடந்த பதிவின் இறுதி பகுதி

வசந்த மாளிகை முதல் நாள் ஓபனிங் ஷோ பார்பதற்காக டிக்கெட்டிற்கு அலைந்தது பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது

இந்த தொடரில் பலமுறை நான் மன்ற டோக்கன் டிக்கெட்டுகள் பற்றி குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். பிற்காலத்தில் ஒரு காட்சியை மட்டும் ஒதுக்கி அந்த ஷோவிற்குண்டான அனைத்து டிக்கெட்டுகளும் மன்றத்திடம் கொடுக்கப்பட்டு அவை விற்பனை செய்யப்படுவது அனைவரும் அறிந்திருக்க கூடும். அன்றைய நாட்களில் ஒவ்வொரு காட்சிக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே டிக்கெட்டுகள் மன்றத்தினரிடம் கொடுக்கப்பட்டு அவை ரசிகர்களுக்கு அல்லது கேட்பவர்களுக்கு விற்பனை செய்யப்படுவது வழக்கம். நான் முன்பே குறிப்பிட்டிருப்பது போல் எங்களைப் போன்றவர்களுக்கு இதில் உள்ள மிகப் பெரிய advantage என்னவென்றால் வரிசையில் நின்று கஷ்டப்பட வேண்டாம். அதுவும் தவிர மன்றத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற அவசியமுமில்லை. என் கஸினுக்கு மன்ற ஆட்களை தெரியும் என்பதனால் வாங்கி விடுவோம். இந்த டிக்கெட்டுகள் ரீலிசிற்கு ஒரு வாரம் முன்னதாக கொடுக்க ஆரம்பிப்பார்கள்.

செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ் 1972-ல் முதன்முறையாக வெள்ளிக்கிழமை படம் ரிலீஸ். 72-ல் முதல் படமான ராஜா ஜனவரி 26 ரிலீஸ். அது புதன்கிழமை. அதன் பிறகு வெளியான நான்கு படங்களும் [ஞான ஒளி, பட்டிக்காடா பட்டணமா, தர்மம் எங்கே மற்றும் தவப்புதல்வன்] சனிக்கிழமை வெளியானதால் தானாகவே முதல் நாள் 4 காட்சிகள் என்று ஆகிவிட்டது. ஆனால் இது வெள்ளிக்கிழமை என்பதனால் 3 காட்சிகள்தான் இருக்குமா அல்லது காலைக்காட்சி போடுவார்களா என்ற சந்தேகம் இருந்தது. அன்று 4 காட்சிகள் என்று விநியோகஸ்தர் தரப்பிலிருந்து உறுதிப்படுத்தப்பட மார்னிங் ஷோதான் ஓபனிங் ஷோ என்பது confirm ஆனது.

ஸ்கூல் வேறு லீவ் ஆகவே ஓபனிங் ஷோ டோக்கன் வாங்கி விட வேண்டும் என்று முடிவு செய்தோம் நமக்குதான் அனைவரையும் தெரியுமே அது மட்டுமல்ல இரண்டு டிக்கெட்டுகள்தானே என்ற நினைப்பில் என் கஸின் சற்று தாமதமாக போய் விட ஓபனிங் ஷோ டிக்கெட்டுகள் எல்லாம் விற்று விட்டன. அன்றைய நாட்களில் ரசிகர்களின் முதல் சாய்ஸ் ஓபனிங் ஷோவாக இருக்கும். அதற்கு அடுத்த சாய்ஸ் நைட் ஷோ. பிறகு ஈவினிங் ஷோ. கடைசி சாய்ஸ்தான் மாட்னி ஷோ. எவ்வளவு முயற்சித்தும் ஓபனிங் ஷோ டிக்கெட் கிடைக்கவில்லை. மாட்னி ஷோ டிக்கெட் மட்டும்தான் இருந்தது என்பதனால் அதை வாங்கிக் கொண்டு வந்துவிட்டான். எப்படியாவது ஓபனிங் ஷோ டிக்கெட்டுகள் தேற்றி விடலாம் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் எவ்வளவு முயற்சித்தும் மார்னிங் ஷோ டிக்கெட் கிடைக்கவேயில்லை. வீட்டருகே நியூசினிமா தியேட்டர் என்பதனால் காலையில் தியேட்டர் பக்கம் போய் பார்த்தோம். பயங்கரமான கூட்டம். தெரிந்தவர்கள் யாரைக் கேட்டாலும் இல்லை இல்லை என்றே கை விரித்து விட்டார்கள். ராஜா, பட்டிக்காடா பட்டணமா தர்மம் எங்கே போன்ற படங்களுக்கு எங்களுக்கு உதவி செய்த அதிர்ஷ்டம் இந்த முறை கை கொடுக்கவில்லை.

எப்படா 1 மணி ஆகும் என்று காத்திருந்து வீட்டை விட்டு கிளம்பி தியேட்டருக்கு போய் விட்டோம். 1.15 மணி வாக்கில் தியேட்டரின் மெயின் கேட் திறந்து வைக்கப்பட்டது. கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வெளியே வர ஆரம்பிக்க திடீரென்று ஒரு பெரிய கூட்டம் வெளியே வந்து சந்தோஷக் கூச்சலிட பட்டாஸ் வாலாக்கள் வெடித்து சிதற ஆரம்பித்தன. வெளியே வருபவர்கள் அப்படியே உற்சாகமும் சந்தோஷமும் துள்ள படம் டாப் என்று ரிசல்ட் சொல்ல (நான் ஏற்கனவே எழுதியிருந்தது போல சூப்பர் என்ற வார்த்தை அன்றைய காலகட்டத்தில் தமிழ் அகராதியில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை) அந்த ஏரியாவே ஜெகஜோதியானது.

தெரிந்தவர்கள் முகம் தென்பட அவர்களிடம் படம் பற்றி கேட்கிறோம். அந்நேரம் கஸினின் நண்பர்கள் குழாம் ஒன்று படம் பார்த்துவிட்டு வெளியே வருகிறது. அதில் ஒருவர் என் கஸினிடம் " காலையிலே எங்கடா போனே? டிக்கெட் எக்ஸ்ட்ரா இருந்தது. சரி உனக்கு கொடுக்கலாம்னு உங்க வீட்டுக்கு வந்தேன். நீ வெளியே போயிட்டேன்னு சொன்னாங்க. தியேட்டருக்கு வந்து பார்த்தேன். உன்னை காணோம். நம்ம பசங்க அவன் (என் கஸின் பெயர் சொல்லி) எப்படியாவது டிக்கெட் வாங்கியிருப்பான்னு சொன்னதனாலே அதை வேற ஆட்களுக்கு கொடுத்துட்டேன்" என்று சொல்ல எத்தனை டிக்கெட்-னு என் கஸின் கேட்க இரண்டு எக்ஸ்ட்ரா டிக்கெட் இருந்ததுனு நண்பர் சொல்ல எங்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பது நான் விளக்காமலே அனைவருக்கும் புரியும் என நினைக்கிறேன். நாங்கள் காலையில் தியேட்டர் போய் டிக்கெட்டுகளுக்காக அலைந்த நேரத்தில் அந்த நண்பர் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்.

அவர்களுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு நேரமாகி விட்ட காரணத்தினால் நாங்கள் உள்ளே செல்வதற்கு மெயின் கேட் பக்கத்தில் இருக்கும் சைடு கேட் அருகே சென்றோம். மன்ற டோக்கன் டிக்கெட்டுகள் வாங்கியவர்கள் அனைவரும் அந்த கேட் வழியாகதான் போக வேண்டும் என்று சொல்லி விட்டதால் அங்கே போய் நின்றோம். கையில் டிக்கெட் இருந்தும் உள்ளே போவதற்கு நாங்கள் பட்ட பாடு?

(தொடரும்)

அன்புடன்

HARISH2619
30th June 2015, 01:26 PM
திரு முரளி சார்,
ஆவலை அடக்க முடியவில்லை அதிக இடைவெளி தராமல் கூடிய சீக்கிரம் அடுத்த பதிவை இடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்

Murali Srinivas
7th July 2015, 09:50 AM
அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

கடந்த பதிவின் இறுதி பகுதி

வசந்த மாளிகை முதல் நாள் மதியக் காட்சிக்கு டிக்கெட் கையில் இருந்தும் உள்ளே போவதற்கு சிரமப்பட்ட அன்றைய சூழல் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்

இங்கிருந்து பதிவு தொடர்கிறது

நியூசினிமா தியேட்டர் என்பது நீளவாக்கில் அமைந்த தியேட்டர் கட்டிடம். தியேட்டரின் எதிரே அதே நீளவாக்கில் அமைக்கப்பட்டிருக்கும் ஜான்சி ராணி பூங்கா. தியேட்டருக்கும் ஜான்சி ராணி பார்க்கிற்கும் இடையில் ஒரு சின்ன சந்து. அந்த குறுகிய இடத்தில்தான் மக்கள் வரிசையில் நிற்க வேண்டும். நான் சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்ட சைடு கேட் என்பது பொதுவாக பெண்கள் உள்ளே போகும் வழி. அந்த வழியாகத்தான் மன்ற டோக்கன்களும் போக வேண்டும் என்று அரங்க நிர்வாகத்தினர் முடிவெடுத்ததால் வேறொரு பிரச்சனை வந்தது. பெண்களும் அப்படிதான் போக வேண்டும் என்பதால் பெண்கள் டிக்கெட்டுகள் கொடுத்து முடிக்கும்வரை மன்ற டோக்கன்களை உள்ளே அனுமதிப்பதில்லை என்ற முடிவுதான் அது. இதனால் என்னவாயிற்று என்றால் ஒரே நேரத்தில் பெண்களும் மன்ற டோக்கன் வைத்திருந்த ஆண்களும் மன்ற டோக்கனோ அல்லது வேறு டிக்கெட்டோ கையில் இல்லாமல் ஆனால் இருப்பது போல் நடித்து எப்படியாவது உள்ளே புகுந்து பிறகு டிக்கெட் வாங்கும் முயற்சியில் ஈடுபடலாம் என்ற நினைப்பில் இருந்த ஆட்களும் ஒரே நேரத்தில் முட்டி மோத அங்கே பெரிய தள்ளு முள்ளே நடந்தது. மன்ற டோக்கன் வைத்திருந்த ஒரு சிலரை உள்ளே அனுமதிக்க அதை பயன்படுத்திக் கொண்டு வேறு சிலர் உள்ளே நுழைய அதை கட்டுப்படுத்த முடியாமல் தியேட்டர் ஊழியர்கள் திணற இந்த களேபரத்தை கண்ட போலீஸ் லாத்தி வீச திரையரங்கம் அமைந்திருக்கும் இடமே ஒரு சின்ன சந்து என்பதால் கூட்டம் இரண்டு பக்கம் சிதற அங்கே ஒரு கலவர சூழல்.

டிக்கெட்டுகள் கையில் இருந்தும் உள்ளே போக முடியவிலையே என்ற பிரச்னை எங்களுக்கு. இருக்கும் சூழலை பார்த்தால் எங்களை உள்ளே போக விடுவார்களா என்ற பயம் வேறு. படத்தின் முதல் காட்சியே நடிகர் திலகத்தின் அறிமுக காட்சி அதுவும் பாடல் காட்சி என்ற விவரத்தையும் ஓபனிங் ஷோ பார்த்தவர்கள் சொல்லி விட்டார்களா, அதை மிஸ் பண்ணி விடப் போகிறோமோ என்ற கவலை, மேலும் ஒருவர் படத்தின் டைட்டில் போடுவதே டாப். ராஜாவை விட டைட்டில் காட்சி இதில் பிரமாதம் என்று வேறு சொல்லியிருந்தார். அத்தனையும் மிஸ் பண்ணப் போகிறோம் என்றே முடிவு கட்டி விட்டோம். அப்போது அங்கே இருந்த ஒருவரை மறக்கவே முடியாது. அந்த ரசிகர் காலில் அடிபட்டு blisters என்று சொல்வார்களே அது போன்று வெடிப்புகள் அதன் காரணமாக ஏற்பட்ட கொப்புளங்கள் என்று காலே ரணகளமாக இருக்கிறது. அந்த நிலையிலும் காலில் செருப்பு கூட இல்லாமல் அவரும் படம் பார்க்க அந்த சைடு கேட் வழியாக உள்ளே நுழைய முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார். அவர் காலை மிதித்து விடப் போகிறோமே என்ற பயத்தில் நாங்கள் சற்று விலகி நின்று உள்ளே போக முயற்சி செய்ய இதை அறியாத வேறு பலர் அந்த gap-ல் புகுந்து விட (அவர் கத்தினாரோ இல்லையோ) நாங்கள் கால் கால் என்று (காள் காள் என்று!) கத்தியது 43 வருடங்களுக்கு பிறகும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

ஒரு வழியாக மணி கதவு தாள் திறக்க உள்ளே ஓடி போய் டோக்கனை மாற்றி டிக்கெட் வாங்கி கொண்டு அரங்கத்திற்கு உள்ளே நுழைந்து இடம் பிடித்து அப்பா படம் ஆரம்பிப்பதற்கு முன் வந்து உட்கார்ந்து விட்டோம் என்று ஆசுவாச பெருமூச்சும் படம் பார்க்க போகும் ஆவலுமாய் திரையையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெல் அடித்து விள்க்குகள் அணைக்கப்பட்டு அரங்கத்தின் வாசல்களில் தொங்கவிடப்பட்டிருக்கும் திரைச்சீலைகள் மூடப்பட ஆரவார புயல் அரங்கத்தில் மையம் கொள்ள சென்சார் சர்டிபிகேட் திரையில் ஒளிர - - - -

(தொடரும்)

அன்புடன்

sivaa
7th July 2015, 11:00 PM
அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

கடந்த பதிவின் இறுதி பகுதி

வசந்த மாளிகை முதல் நாள் மதியக் காட்சிக்கு டிக்கெட் கையில் இருந்தும் உள்ளே போவதற்கு சிரமப்பட்ட அன்றைய சூழல் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்

இங்கிருந்து பதிவு தொடர்கிறது

நியூசினிமா தியேட்டர் என்பது நீளவாக்கில் அமைந்த தியேட்டர் கட்டிடம். தியேட்டரின் எதிரே அதே நீளவாக்கில் அமைக்கப்பட்டிருக்கும் ஜான்சி ராணி பூங்கா. தியேட்டருக்கும் ஜான்சி ராணி பார்க்கிற்கும் இடையில் ஒரு சின்ன சந்து. அந்த குறுகிய இடத்தில்தான் மக்கள் வரிசையில் நிற்க வேண்டும். நான் சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்ட சைடு கேட் என்பது பொதுவாக பெண்கள் உள்ளே போகும் வழி. அந்த வழியாகத்தான் மன்ற டோக்கன்களும் போக வேண்டும் என்று அரங்க நிர்வாகத்தினர் முடிவெடுத்ததால் வேறொரு பிரச்சனை வந்தது. பெண்களும் அப்படிதான் போக வேண்டும் என்பதால் பெண்கள் டிக்கெட்டுகள் கொடுத்து முடிக்கும்வரை மன்ற டோக்கன்களை உள்ளே அனுமதிப்பதில்லை என்ற முடிவுதான் அது. இதனால் என்னவாயிற்று என்றால் ஒரே நேரத்தில் பெண்களும் மன்ற டோக்கன் வைத்திருந்த ஆண்களும் மன்ற டோக்கனோ அல்லது வேறு டிக்கெட்டோ கையில் இல்லாமல் ஆனால் இருப்பது போல் நடித்து எப்படியாவது உள்ளே புகுந்து பிறகு டிக்கெட் வாங்கும் முயற்சியில் ஈடுபடலாம் என்ற நினைப்பில் இருந்த ஆட்களும் ஒரே நேரத்தில் முட்டி மோத அங்கே பெரிய தள்ளு முள்ளே நடந்தது. மன்ற டோக்கன் வைத்திருந்த ஒரு சிலரை உள்ளே அனுமதிக்க அதை பயன்படுத்திக் கொண்டு வேறு சிலர் உள்ளே நுழைய அதை கட்டுப்படுத்த முடியாமல் தியேட்டர் ஊழியர்கள் திணற இந்த களேபரத்தை கண்ட போலீஸ் லாத்தி வீச திரையரங்கம் அமைந்திருக்கும் இடமே ஒரு சின்ன சந்து என்பதால் கூட்டம் இரண்டு பக்கம் சிதற அங்கே ஒரு கலவர சூழல்.

டிக்கெட்டுகள் கையில் இருந்தும் உள்ளே போக முடியவிலையே என்ற பிரச்னை எங்களுக்கு. இருக்கும் சூழலை பார்த்தால் எங்களை உள்ளே போக விடுவார்களா என்ற பயம் வேறு. படத்தின் முதல் காட்சியே நடிகர் திலகத்தின் அறிமுக காட்சி அதுவும் பாடல் காட்சி என்ற விவரத்தையும் ஓபனிங் ஷோ பார்த்தவர்கள் சொல்லி விட்டார்களா, அதை மிஸ் பண்ணி விடப் போகிறோமோ என்ற கவலை, மேலும் ஒருவர் படத்தின் டைட்டில் போடுவதே டாப். ராஜாவை விட டைட்டில் காட்சி இதில் பிரமாதம் என்று வேறு சொல்லியிருந்தார். அத்தனையும் மிஸ் பண்ணப் போகிறோம் என்றே முடிவு கட்டி விட்டோம். அப்போது அங்கே இருந்த ஒருவரை மறக்கவே முடியாது. அந்த ரசிகர் காலில் அடிபட்டு blisters என்று சொல்வார்களே அது போன்று வெடிப்புகள் அதன் காரணமாக ஏற்பட்ட கொப்புளங்கள் என்று காலே ரணகளமாக இருக்கிறது. அந்த நிலையிலும் காலில் செருப்பு கூட இல்லாமல் அவரும் படம் பார்க்க அந்த சைடு கேட் வழியாக உள்ளே நுழைய முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார். அவர் காலை மிதித்து விடப் போகிறோமே என்ற பயத்தில் நாங்கள் சற்று விலகி நின்று உள்ளே போக முயற்சி செய்ய இதை அறியாத வேறு பலர் அந்த gap-ல் புகுந்து விட (அவர் கத்தினாரோ இல்லையோ) நாங்கள் கால் கால் என்று (காள் காள் என்று!) கத்தியது 43 வருடங்களுக்கு பிறகும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

ஒரு வழியாக மணி கதவு தாள் திறக்க உள்ளே ஓடி போய் டோக்கனை மாற்றி டிக்கெட் வாங்கி கொண்டு அரங்கத்திற்கு உள்ளே நுழைந்து இடம் பிடித்து அப்பா படம் ஆரம்பிப்பதற்கு முன் வந்து உட்கார்ந்து விட்டோம் என்று ஆசுவாச பெருமூச்சும் படம் பார்க்க போகும் ஆவலுமாய் திரையையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். பெல் அடித்து விள்க்குகள் அணைக்கப்பட்டு அரங்கத்தின் வாசல்களில் தொங்கவிடப்பட்டிருக்கும் திரைச்சீலைகள் மூடப்பட ஆரவார புயல் அரங்கத்தில் மையம் கொள்ள சென்சார் சர்டிபிகேட் திரையில் ஒளிர - - - -

(தொடரும்)

அன்புடன்
முரளி சார் உங்கள் ஞாபக சக்தி மிகமிக அபாரம்.
மிகுதியையும் உடன எழுதிவிடுங்கள் ஆர்வம் அதிகமாகிறது.

(எனது தனிமடல் பாருங்கள்)

RAGHAVENDRA
18th July 2015, 07:45 AM
Yesterday, 17th July, 2015, I was fortunate to chat with my long time ... nearly 40 years friend... Kudanthai Sadagopan Srinivasagopalan. What a time we had recollecting our golden period spending our times for Nadigar Thilagam. Ours was "THENNAGA SIVAJI KOLGAI PARAPPUM KUZHU" that was a group of pen friends & sivaji fans, who would share all the information regarding the release of Sivaji films in his / her respective town / village, how it performed at the box office, share collection details, etc. Pollachi Kirubakaran, Umaithurai Palanisamy, Madurai Jaihindpuram Kannan, Kovilpatti Rajasekaran, Ugene Rayan, Rajapalayam Engal Sivaji Vijayan, Bangalore Ulsoor Jeyakumar of Neethi Sivaji Ganesan Kalai Kuzhu, Mayavaram Sekar, Mukunthan of Ilaiya Thalaimurai Sivaji Ganesan Rasikar Mandram, Kandi Kathirkaman who used to send copies of Simmakural magazine from Sri Lanka, Haji Mohamad (now in Arab country I learn), His handwriting was exemplary and would be very catchy to the eyes...

Oh God, we can't get those days. We will write the matter that would normally run to 5 to 6 pages in a postcard. தபால் கார்டில் நுணுக்கி நுணுக்கி எழுதுவோம். வெளிநாட்டு நண்பர் ஏர்மெயில் கடிதத்தில் எழுதுவார். அந்தக் காலங்கள் வராதா என மனம் நிச்சயம் ஏங்கும். தென்னக சிவாஜி கொள்கை பரப்பும் குழு 1970 களின் மத்தியிலிருந்து 1980களின் மத்தி வரை மிகவும் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தோம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரில். இதில் பம்பாயிலிருந்து நண்பர் ஆறுமுகம் அவர்களும் எழுதுவார்கள். மற்றும் தமிழகத்தின் பல்வேறு ஊரிலிருந்து நாங்கள் அஞ்சல் மூலம் நடிகர் திலகத்தின் படங்களின் வசூல் விவரங்கள், மக்களிடம் வரவேற்பு, போஸ்டர்கள், நோட்டீஸ்கள் என அவரவரிடமிருக்கக் கூடியவற்றை மற்ற நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வோம்.

நடிகர் திலகத்திற்கு ரசிகனாய் இருந்தது மட்டுமின்றி இவ்வளவு பெரிய நட்பு வட்டாரத்தை அந்த காலத்திலேயே எங்களால் உருவாக்கி இன்று வரை அதைப் பேண முடிகிறது என்றால் அதுவே நடிகர் திலகத்தின் மகிமை எனலாம்.

தங்களுடன் உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி சீனிவாச கோபாலன் அவர்களே. இது போன்று நம்முடைய மற்ற நண்பர்களும் இணைந்து விரைவில் சந்தித்து மகிழ வேண்டும் என்பது என் ஆவல்.

Subramaniam Ramajayam
18th July 2015, 09:04 AM
My memories roll back to late sixties and eaely seventies when i too maintained penfriends by name radha and uma from coimbaore LMW by exchangingall releae details collection details papercuttings etc every week. originally radha alia radhakrrishnn baically madurai naive settled in cbe simultaneously give madurai details, those days cycle tokens were issued in the morning later with that tickets can be obtained. it was the pracice follwed and SIVANTAMANN accounted for the maximum numbers in the coimbatore area first time they displayed CYCLE TOKENS FULL. IN KOVAI ROYAL THEATRE.
What a a pleasnt memories. now iam not able to conact my friends eventhough they are in chennai TI groups.
thanks raghavendran for taking me to my penfriends sivaji rasigargal.upcorse.

Murali Srinivas
20th July 2015, 10:50 AM
அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

கடந்த பதிவின் இறுதி பகுதி

வசந்த மாளிகை முதல் நாள் மதியக் காட்சி பார்த்த அனுபவத்தை பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம்.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது.

படத்தின் காட்சிகளுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி என்னவென்று சொல்வது? ஒரு முறை 2007-ல் இங்கே சென்னை அபிராமியில் வசந்த மாளிகை பார்த்தபோது ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்களின் கொண்டாட்டத்தை ஆரவாரத்தை விவரித்தது நினைவிற்கு வருகிறது. அது போன்றே முதன் முதலில் பார்த்தபோதும் நிகழ்ந்தது.

பட டைட்டில் போடும்போது வசந்த மாளிகை என்று பெயர் காண்பிக்கப்படும்போது அது பல வண்ணங்களில் மின்னும். அந்த நாளிலும் சரி வரப்போகும் காலங்களிலும் சரி என்றுமே இந்த படம் மின்னும் என்பதைத்தான் அன்றே அது உணர்த்தியது என தோன்றும்.

ஒரு படத்தை பல முறை பார்த்து ரசிக்கும்போது பல் புதிய ரசிக்கத்தகுந்த நுணுக்கங்கள் தென்படும். அது வாடிக்கை. ஆனால் ஒரு சில காட்சிகளோ அல்லது வசனங்களோ முதல் முறை பார்க்கும்போதே மனதிற்கு மிகவும் பிடித்து ரசிகர்களின் ஆமோதிப்பை பெற்று விடும். அந்த வகையில் வசந்த மாளிகை படத்தில் முதல்முறை பார்த்தபோதே பல காட்சிகளும் வசனங்களும் ஆரவாரத்தோடு வரவேற்கப்பட்டது.

ஒ மானிட ஜாதியே பாடல் காட்சி, நடிகர் திலகத்தின் பிறந்தநாளுக்கு விஎஸ் ராகவன் மாலையிட்டு வாழ்த்துவது, ஏன் ஏன் பாடல்காட்சி முழுக்கவும் குறிப்பாக அதில் நான் சக்கரவர்த்தியடா என்ற அந்த கம்பீர போஸ், வண்டி ரெடியா இருக்கு எஜமான், ஆனா இந்த வண்டி ஸ்டெடியா இல்லையேடா, ஒரு கார்பரேஷன் லாரியை கூட்டிட்டு வந்து எல்லாரையும் அள்ளி போட்டுட்டு போடா போன்ற வசனங்கள், ராமதாசோடு சண்டை போடும்போதே கண்ணாடி பார்த்து ஹேர் ஸ்டைலை சரி செய்வது, நீச்சல் குளத்திலிருந்து ப்ளூ அண்ட் ப்ளூ ஷர்ட்,ஷார்ட்ஸ் கோகோ கிளாஸ் போட்டு வருவது,

இப்படி சொல்ல ஆரம்பித்தால் நான் முதலில் சொன்ன மாதிரி ஒவ்வொரு காட்சியையும் சொல்லிக் கொண்டே போக வேண்டியதுதான். எத்தனை வருடங்கள் ஆனாலும் அன்று முதல் இன்று வரை பட ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரே சுரத்தில் ஒரே அலைவரிசையில் ரசிகர்களால் ரசிக்கப்பட்ட படங்களில் முதலிடம் என்றுமே வசந்த மாளிகைக்குதான்.

படம் முடிந்து வெளியே வருகிறோம். வெளியே கடலலை போல் கூட்டம் அந்த தெருவையே ஆக்ரமித்து நிற்கிறது. இது போன்ற முதல் நாளில் படம் பார்த்துவிட்டு வரும்போது அடுத்த காட்சிக்கு வரிசை எந்தளவிற்கு நிற்கிறது என்பதை பார்ப்பதில் எனக்கு ஒரு curiosity உண்டு.

நியூசினிமாவைப் பொறுத்தவரை நான் முன்பே குறிப்பிட்டது போல் நீளம் கூடுதலாகவும் அகலம் குறைவாகவும் இருக்கும் ஒரு சின்ன தெருவில் அமைந்திருக்கும் தியேட்டர். மேற்கு பார்த்து அமைந்திருக்கும் தியேட்டர் வாசல். அந்த தெருவிற்கு இரண்டு பக்கமும் பாரலல் [Parallel] தெருக்களாக திண்டுக்கல் ரோடு/ நேதாஜி ரோடு ஒரு பக்கமும் மேங்காட்டுபொட்டலிலிருந்து ஆரம்பித்து நீளமாக செல்லும் தெற்காவணி மூலவீதி என்ற நகைகடை பஜார் மற்றொரு பக்கமுமாக அமைந்திருக்கும். ஆண்களுக்கான இரண்டு கீழ் வகுப்பு டிக்கெட் வரிசையும் மாடி என்று அழைக்கப்படும் பால்கனி டிக்கெட் வரிசையும் எப்போதும் தியேட்டர் வாசலிலிருந்து ஆரம்பித்து திண்டுக்கல் ரோடு பக்கம் நிற்க வைக்கப்படும். பெண்களுக்கான கேட் [நான் முன்பே குறிப்பிட்டது] இயல்பாகவே அரங்கத்தின் வலது பக்கம் அமைந்திருந்ததனால் அந்த வரிசை தெற்காவணி மூலவீதி பக்கமே நிற்க வைக்கப்படும்.

அன்றைய தினம் ஆண்களுக்கான மூன்று வரிசையில் கீழ் வகுப்பு டிக்கெட்டுக்களுக்கான வரிசை தியேட்டர் அமைந்திருக்கும் தெரு முழுக்க கடந்து திண்டுக்கல் ரோட்டில் வலது புறம் திரும்பி மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுர வாசலுக்கு செல்லும் வழியெல்லாம் நீண்டு தியேட்டர் அமைந்திருக்கும் தெருவிற்கு பின்புறமாக அமைந்திருக்கும் ம்தார்கான் டபேதார் சந்து வரை நீண்டு நின்றது. பால்கனி வரிசையோ திண்டுக்கல் ரோட்டில் இடது புறம் திரும்பி அந்த பிளாட்பாரத்தின் முடிவில் அமைந்திருந்த மாநகராட்சி அலுவலகம் வரை நின்றது. மிக பெரிய கூட்டம் என்பது சாதாரண வார்த்தை. அசாதாரண கூட்டம் என்பதே சரியாக இருக்கும்.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
28th July 2015, 10:47 AM
அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

கடந்த பதிவின் இறுதி பகுதி

வசந்த மாளிகை படத்திற்கு வந்த கூட்டத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது

திண்டுக்கல் ரோட்டில் நான் முன்பே குறிப்பிட்ட ம்தார்கான் டபேதார் சந்திற்கு சற்று முன்னதாக ஒரு சிறிய உணவகம் அமைந்திருந்தது. அதன் உரிமையாளரின் மகன் [சசிகுமார் என்று பெயர்] பின்னாட்களில் கல்லூர்ரியில் என்னுடன் ஒரே வகுப்பில் படித்தான். அவன் கல்லூரியில் படிக்கும் காலத்தில் சொன்னது என்னவென்றால் வசந்த மாளிகை அதற்கு அடுத்தபடியாக எங்கள் தங்க ராஜா படங்களுக்கு நின்ற வரிசை போல் பார்த்ததேயில்லை என்பான். ஸ்கூலில் படிக்கும் காலத்திலேயே கடையில் வியாபரத்தையும் கவனிக்க வேண்டிய சூழல் இருந்ததால் இதையெல்லாம் பார்த்திருக்கிறேன் என்று சொல்வான், இத்தனைக்கும் மாற்று முகாம் அபிமானி.

வசந்த மாளிகை எப்பேர்பட்ட பிரம்மாண்டமான வெற்றியை பெற இருக்கிறது என்பதன் அடையாளம் அந்த முதல்நாள் இரவுக் காட்சியிலே தெரிந்து விட்டது.

மாலைக்காட்சியை விட இரவுக் காட்சிக்கு கட்டுக்கடங்காத கூட்டம். தியேட்டர் பக்கமே போக முடியவில்லை. படத்தின் ரிப்போர்ட் பிரமாதமாக வந்ததால கூட்டம் அதிகமானது ஒரு பக்கம் என்றால் காலை மதியம் பார்த்த் ரசிகர்கள் மீண்டும் இரவுக் காட்சிக்கும் படையெடுத்ததால் திரண்ட கூட்டம் மறு பக்கம். இவை அனைத்தும் சேர்ந்து அங்கே மக்கள் வெள்ளமாக திரண்டது. என் கஸினும் அவன் நண்பர்களும் சேர்ந்து இரவுக்காட்சிக்கு போவதற்கு முடிவு செய்து டிக்கெட்டுகளும் வாங்கி விட்டனர். கல்லூரி மாணவனான கஸின் நண்பர்களுடன் இரவு combined study என்று சொல்லி போக முடிந்தது. நான் பொறாமைப்படத்தான் முடிந்தது.

ரிலீஸ் தினதன்று வசந்த மாளிகையை கொண்டாட பூமியில் மக்கள் வெள்ளம் நிறைந்தபோது அதையே வசந்த விழாவாக கொண்டாட வருண பகவானும் முடிவெடுத்தான்.

இரவு சுமார் 9.45 மணி இருக்கும். ஆங்காங்கே சில தூறல்கள் விழத் தொடங்கி சட்டென்று வேகம் பிடித்து சில நிமிடங்களில் மழை கொட்ட தொடங்கியது. நிமிடங்கள் செல்ல செல்ல மழை பெரிதாகி பேய் மழையாக பெய்தது.

ஆனால் மழை எத்தனை பலமாக பெய்தாலும் மக்கள் அதை பொருட்படுத்தாமல் கலைந்து செல்லாமல் அப்படியே வரிசையில் நின்று டிக்கெட் வாங்கினார்கள் அந்த மழையிலும் உள்ளே போவதற்கு பெரிய தள்ளு முள்ளு ஏற்பட்டு ஒரு வழியாக உள்ளே போய் அமர்ந்த விஷயத்தை கஸின் அடிக்கடி சொல்வதுண்டு. உள்ளே சென்று அமர்ந்த ஆண்கள் பெரும்பாலோனோர் இடைவேளை வரை தங்கள் அணிந்திருந்த சட்டையை கழட்டி காய வைத்து விட்டு படம் பார்த்ததாக கஸின் சொல்வான்.

அன்றைய தினம் நடந்த இந்த நிகழ்ச்சி பற்றி ஒரு சுவையான தகவல் உண்டு அன்றைய [முதல் நாள்] இரவுக் காட்சி சமயத்தில் மழை பெய்ததையும் அப்படி இருந்தும் மக்கள் அந்த அடாத மழையிலும் விடாது வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி படம் பார்த்த விவரத்தையும் நமது திரியிலே பல வருடங்களுக்கு முன்பு பதிவு செய்திருந்தேன்.

ஒரு நாள் நமது அருமை நண்பர் பம்மல் சுவாமியோடு பேசிக் கொண்டிருக்கும்போது "சார் நான் செக் பண்ணினேன் சார். நீங்கள் சொன்னது கரெக்ட்தான்" என்றார். என்ன சுவாமி? எதைப் பற்றி சொல்லுகிறீர்கள் என்று கேட்டேன். இல்லை சார். வசந்த மாளிகை வெளியான அன்று இரவு மழை பெய்தது என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். பழைய தினமணி பேப்பர் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தேன், நீங்கள் குறிப்பிட்டது போல் அன்று மதுரையில் மழை பெய்த விவரம் பேப்பரில் வந்திருக்கிறது என்றார்.

அவரிடம் மேலதிக விவரங்கள் கேட்க அதற்கு அவர் சொன்ன பதிலிலிருந்து அவர் எப்படி இந்த தகவலை தேடிப் பிடித்தார் என புரிந்தது.

விஷயம் என்னவென்றால் வசந்த மாளிகை படம் வெளியானது செப்டம்பர் 29 வெள்ளி. மூன்றாவது நாள் அக்டோபர் 1 ஞாயிற்றுக் கிழமை நடிகர் திலகத்தின் பிறந்த நாள். பழைய தினமணி நாளிதழ்களை [மதுரை பதிப்பு] பார்வையிடும் வாய்ப்பு சுவாமிக்கு கிடைத்தபோது அன்றைய தினம் அக்டோபர் 1 ஞாயிற்றுக் கிழமை மதுரை பதிப்பு தினமணியில் நடிகர் திலகத்தின் பிறந்த நாள் என்பதனால் ஏதேனும் விளம்பரமோ அல்லது செய்திகளோ வந்திருக்குமா என பார்த்திருக்கிறார். அப்போது ஒரு பெட்டி செய்தியாக வெள்ளிக்கிழமை இரவு மதுரை நகரிலும் சுற்று வட்டாரங்களிலும் பலத்த மழை பெய்தது என்று வந்திருக்கிறது. அதை பார்த்துவிட்டுத்தான் சுவாமி இதை கூறியிருக்கிறார்.

நான் அவரிடம் சொன்னேன். சுவாமி எப்போதும் நடந்தவற்றை பற்றி மட்டும் எழுதுவதுதான் என் பாணி. பொய்யாக நடக்காத ஒன்றை நடந்தது போல் அள்ளிவிட மாட்டேன். எழுதும் செய்தி நமக்கு இனிப்பாக இல்லாவிட்டாலும் கூட அதை பதிவு செய்வதில் தயக்கம் காட்ட மாட்டேன் என்று சொன்னேன்.
.
அப்படி வசந்த மாளிகையின் மாபெரும் வெற்றி செய்தியோடு மறுநாள் புலர்ந்தது

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
4th August 2015, 09:39 AM
அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

கடந்த பதிவின் இறுதி பகுதி

வசந்த மாளிகை வெளியான முதல் நாள் அன்று நடைபெற்ற நிகழ்வுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்

இங்கிருந்து பதிவு தொடர்கிறது

நாம் கடந்து வந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் பல முக்கியமான நிகழ்வுகள் நடந்தேறின. அவற்றில் சிலவற்றில் நடிகர் திலகமும் சம்மந்தப்பட்டிருப்பதால் அவைகளைப் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

1970 முதல் அக்டோபர் 1 அன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவும் அதற்கு அடுத்த நாள் அக்டோபர் 2 மகாத்மாவின் பிறந்த நாளையும் சேர்த்து கலை அரசியல விழாவாக அகில இந்திய சிகர மன்றம் கொண்டாடிக் கொண்டிருந்தது என்பதை முன்னரே பார்த்தோம். சென்னையை தாண்டியும் அதை நடத்த வேண்டும் என்ற ரசிகர்களின் வேண்டுகோளுகிணங்க அந்த வருடம் (1972) அந்த விழாவை கோவையில் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.

இந்த நேரத்தில் மதுரையை சேர்ந்த ஸ்தாபன காங்கிரஸில் ஒரு பிரிவினர் குறிப்பாக நெடுமாறனின் ஆதரவாளர்கள் மதுரையில் காங்கிரஸ் மாநாடு ஒன்றை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து அதற்கு பலத்த அழுத்தமும் கொடுக்க ஆரம்பித்தனர். இந்த நேரம் என்று சொன்னால் செப்டம்பர் முதல் வாரம் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆகஸ்டில் மதுரையில் நடந்த திமுக மாநாட்டிற்கு பதிலடியாக இருக்க வேண்டும் என்று அந்த கோரிக்கைக்கு காரணம் சொன்னார்கள். அதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்த தேதிகள் அதே அக்டோபர் 1,2.

பொதுவாகவே அகில இந்திய சிகர மன்றமோ அல்லது நடிகர் திலகமோ சிகர மன்றத்தின் சார்பில் இது போல் ஒரு மாநாடு அல்லது விழா நடத்துகிறோம் என்று அழைத்தால் உடனே மறுப்பேதும் சொல்லாமல் பெருந்தலைவர் அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வார். 1970,71 பிறந்த நாள் மாநாடுகளும் சரி 1970 ஜூலையில் கயத்தாறில் நடைபெற்ற கட்டபொம்மன் சிலை திறப்பு விழாவும் சரி அதற்கு உதாரணங்கள். .அது போன்றே பெருந்தலைவர் அல்லது ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் அழைத்தால் அந்த விழாக்களில் நடிகர் திலகமும் கலந்துக் கொள்வார். அன்னை ராஜாமணி அம்மையார் மறைந்தபோது நடைபெற்ற மாணவர் காங்கிரஸ் மாநாட்டில் நடிகர் திலகம் கலந்துக் கொண்டது பற்றி ஏற்கனவே பேசினோம்.

இதற்கு உதாரணமாய் மற்றொரு நிகழ்வையும் இங்கே சொல்ல வேண்டும். 1970 செப்டெம்பரில் மயிலை வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் மயிலாப்பூர் சித்ரகுளம் அருகே மகாத்மாவின் மார்பளவு சிலை ஒன்று அமைக்கப்பட்டு அதை திறந்து வைப்பதற்காக பெருந்தலைவரை அணுகியபோது அவர் நான் வருகிறேன், அதே நேரத்தில் நீ சிவாஜியை போய் பார்த்து இந்த விழாவிற்கு கூப்பிடு என்று அன்றைய தினம் மயிலை வட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த மயிலை பெரியசாமியிடம் சொல்ல அவர் சென்று நடிகர் திலகத்தை அழைக்க பெருந்தலைவர் சொல்லி இவர் வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் தனக்கு இருந்த படப்பிடிப்பை அட்ஜஸ்ட் செய்து அந்த சிலை திறப்பு விழாவில் கலந்துக் கொண்டிருக்கிறார். இப்போது மறைந்து விட்ட திரு பெரியசாமி இரண்டு வருடங்களுக்கு முன்னால் மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் நடிகர் திலகத்தின் நினைவுநாள் அன்று நடைபெற்ற அன்னதானம் நிகழ்ச்சியை துவக்கி வைக்க வந்தபோது இந்த தகவலை பகிர்ந்துக் கொண்டார். .

எதற்கு இதையெல்லாம் சொல்கிறோம் என்றால் நடிகர் திலகம் விழா என்றால் பெருந்தலைவர் நிச்சயம் கலந்துக் கொள்வார். ஆகவே கோவையில் சிகர மன்றம் சார்பாக நடக்கவிருந்த விழாவிலும் கலந்துக் கொள்ள சம்மதம் தெரிவித்து விட்டார். ஆனால் அதே தேதிகளிலேயே ஸ்தாபன காங்கிரஸ் மாநாடு மதுரையில் என்றவுடன் ஒரு குழப்பம் ஏற்பட்டது. இரண்டும் ஒரே நேரத்தில் நடைபெற்றால் அது மேலும் குழப்பத்தை உருவாக்கலாம் என்பதனால் நடிகர் திலகம் தன்னாலோ அல்லது தனது பெயரால் இயங்கும் மன்றதினாலோ அப்படி ஒரு நிலைமை உருவாவதை விரும்பாத காரணத்தினால் மன்ற விழாவை ஒரு வாரம் தள்ளி வைக்க உத்தரவிட்டார்.

சிகர மன்ற மாநாடு தேதி மாற்றப்பட்டதால் நெடுமாறன் தலைமையேற்று நடத்திய மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆனால் நடிகர் திலகத்திற்கு முறையான அழைப்பு இல்லை. எப்போதும் நடிகர் திலகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கக் கூடிய நெடுமாறன் தஞ்சை ராமமூர்த்தி அணி அன்றும் அதே போல் நடந்துக் கொண்டது.

ஆனால் நமது ரசிகர்கள் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் பெருந்திரளாக மாநாட்டில் கலந்துக் கொண்டனர். ஆட்சியையும் அதிகாரத்தையும் பண பலத்தையும் படோபத்தையும் பயன்படுத்தி திமுக மாநாடு நடைபெற்றது என்று சொன்னால் அந்த பின்புலங்கள் ஏதுமின்றி தொண்டர்கள் மற்றும் மக்கள் ஆதரவோடு காங்கிரஸ் மாநாடு மாபெரும் வெற்றி பெற்றது. மிகுந்த பொருட்செலவில் அலங்கார வளைவுகள் திமுக மாநாட்டிற்கு அமைக்கப்பட்டபோது வெறும் மூவர்ண துணியில் இங்கே வளைவுகள் அமைக்கப்பட்டன.

ஒரே ஒரு உதாரணம் மட்டும் சொல்ல விழைகிறேன். மேலமாசி வீதியில் ராஜேந்திரா காப்பி கடைக்கு எதிராக பொன்.முத்துராமலிங்கத்திற்கு சொந்தமான லாட்ஜ் ஒன்று இருந்தது. திமுக மாநாட்டிற்கு அந்த இடத்தில ஒரு பிரமாண்டமான ஆர்ச் அமைக்கப்பட்டு ஒரு பெரிய உலக உருண்டை தொங்கவிடப்பட்டிருந்தது. அப்படி எதுவும் செய்யாமல் அதே மேலமாசி வீதியில் நான் குறிப்பிட்ட இடத்தை தாண்டி சென்றால் வரக்கூடிய ஐயப்பன் கோவில் அருகே நெடுமாறனின் அலுவலகம் அமைந்திருந்த இடத்தில அமைக்கப்பட்ட மூவர்ண துணியில் எழுதப்பட்ட "தென்பாண்டி மதுரை இது நெடுமாறன் கோட்டை இது" என்ற வளைவு பெரிதும் பாராட்டப்பட்டது.

மாநாட்டின் முதல் நாள் மாலை அக்டோபர் 1 ஞாயிறன்று மாலை ஊர்வலம் நடைபெற்றது. அந்த ஊர்வலத்தை தெற்கு மாசி வீதி மேல மாசி வீதி சந்திப்பில் அமைக்கப்பட்ட மேடையிலிருந்து பெருந்தலைவர் பார்வையிட்டார். அவரை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நானும் என் கசினும் அந்த இடத்திற்கு அருகில் போக முயற்சித்தோம். ஆனால் அந்த கூட்டத்தை தாண்டி எங்களால் போகவே முடியவில்லை. மேலமாசி வீதியில் அமைந்திருந்த உடுப்பி ஹோட்டல் வரைதான் [இப்போது அந்த இடத்தில போத்தீஸ் மற்றும் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடை இருக்கிறது] போக முடிந்தது. கூட்டம் நெருக்கி தள்ள மூச்சு திணறி விட்டது. அதற்கு மேல் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்து திரும்பி விட்டோம். நடிகர் திலகம் வரவில்லை என்ற ஒரு குறையை தவிர்த்தால் மற்றபடி மாநாடு சிறப்பாகவே நடைபெற்று முடிந்தது.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
25th September 2015, 09:46 AM
அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

கடந்த பதிவின் இறுதி பகுதி

1972 அக்டோபர் 1,2 தேதிகளில் மதுரையில் நடைபெற்ற ஸ்தாபன காங்கிரஸ் மாநாடு பற்றி பார்த்தோம்

இங்கிருந்து பதிவு தொடர்கிறது

மதுரையில் ஸ்தாபன காங்கிரஸ் மாநாடு நடந்த நாட்களில் நடிகர் திலகம் மைசூர் அருகே நீதி படப்பிடிப்பில் கலந்துக் கொண்டிருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அக்டோபர் 1 அன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாள் அன்று காலையில் படப்பிடிப்பு நடத்திவிட்டு மதிய உணவு இடைவேளையோடு pack up ஆனது. மைசூரில் படப்பிடிப்புக் குழுவினர் தங்கியிருந்த ஹோட்டலில் மிகப் பெரிய கேக் வரவழைக்கப்பட்டு நடிகர் திலகம் கேக் வெட்ட பிறந்த விழாவும் அதை தொடர்ந்து விருந்தும் சிறப்பாக நடைபெற்றது. நீதி தயாரிப்பாளர் பாலாஜி அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தார். ஏராளமான தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் நடிகர் திலகத்தை காண வந்திருந்தார்கள் என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

சில பகுதிகளுக்கு முன்பு நீதி படத்திற்கு 15 நாட்கள் கால்ஷீட் என்றும் செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 5 வரை ஷூட்டிங் என்பதையும் சொல்லியிருந்தோம். அக்டோபர் 6 வெள்ளியன்று மைசூரிலிருந்து கிளம்பி கோவை வந்து சேர்ந்தார் நடிகர் திலகம். ஏற்கனவே சொல்லியிருந்தபடி அக்டோபர் 7,8 கோவையில் சிகர மன்ற மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்தார். அன்றைக்கு அவர் செல்லுமிடங்களிலெல்லாம் மக்கள் வெள்ளம் போல் கூடுவார். கோவையில் அன்றைய நாட்களில் மிக பிரபலமான ஹோட்டல் குருவில் தங்கியிருந்தார். ஹோட்டல் வாசலில் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்ததை புகைப்படமாகவும் செய்தியாகவும் பத்திரிக்கைகள் வெளியிட்டது இப்போதும் நினைவில் இருக்கிறது. .

எப்போதும் போல் இரண்டு நாட்கள் மாநாடு. முதல் நாள் கலைஞர்கள் கலந்துக் கொள்ளும் விழாவாகவும் இரண்டாம் நாள் அரசியல் மாநாடாகவும் நடைபெற்றது. முதல் நாள் பிரமாண்டமான ஊர்வலம் ஆரம்பித்து மாநாட்டு பந்தல் வரை சென்று முடிவடைந்தது. நடிகர் திலகம் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மேடையிலிருந்து ஊர்வலத்தை பார்வையிட்டு கை அசைத்து ரசிகர்களிடம் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ரசிகர்களோ சாதரணமாகவே கேட்கவே வேண்டாம். வெற்றி மேல் வெற்றியாக வந்துக் கொண்டிருந்த நேரம் எனும்போது மகிழ்ச்சி துள்ளல் அதிகமாகவே இருந்தது. ஊர்வலம் ஒரு இடத்தை கடக்க சுமார் ஒன்றரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை ஆனது என்று பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன. கடலலை போன்ற அந்த பிரமாண்ட கூட்டத்தை புகைப்படமாக பார்த்து பிரமித்தது இப்போதும் நினைவில் நிற்கிறது. ஊர்வலத்தையும் பின் நடைபெற்ற விழாவையும் ராமாநாயுடு தன் குழுவினரை வைத்து படமாக்கினார்.

முதன் முதலாக 1970-ம் ஆண்டு அகில இந்திய சிகர மன்றம் சார்பில் சென்னையில் நடைபெற்ற நடிகர் திலகம் பிறந்த நாள் விழா செய்தி தொகுப்பு ஒரு சில மாதங்களுக்கு பின் தமிழகமெங்கும் அப்போது ஓடிக் கொண்டிருந்த எங்கிருந்தோ வந்தாள் படத்தின் இடைவேளையின்போது காண்பிக்கப்பட்டது. 1971-ம் வருடம் ஜூலையில் திருச்சியில் நடைபெற்ற நடிகர் திலகத்தின் 150-வது படமான சவாலே சமாளி பட விழாவின் செய்தி தொகுப்பு சவாலே சமாளி திரைப்படத்தோடு காண்பிக்கப்பட்டது. 1971-ம் ஆண்டு நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழா செய்தி தொகுப்பு பாபு திரைப்படத்தோடு காண்பிக்கப்பட்டது. ஆனால் 1972-ல் கோவையில் நடைபெற்ற இந்த பிறந்த நாள் விழா வசந்த மாளிகையோடு காண்பிக்கப்பட்டதா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இந்த செய்தி தொகுப்பை நான் பார்த்த நினைவில்லை. ராகவேந்தர் சார் அல்லது வாசு போன்றவர்கள் தெளிவுபடுத்துவார்கள் என நம்புகிறேன்.

முதல் நாள் கலை விழாவில் அன்றைய முன்னணி நாயக நாயகியர், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். மிக அதிகமான தயாரிப்பாளர்கள் விழாவிற்கு வந்திருந்தது குறிப்பிட்டத்தக்க விஷயம். அன்றைக்கு நடிகர் திலகத்தின் கால்ஷீட் கிடைத்தால் போதும் என்று அனைவரும் காத்துக் கிடந்த நிலை. அன்றைய நிகழ்ச்சியின் ஹைலைட் என்னவென்றால் மேடையிலிருந்த இசைக்குழுவினரின் வாத்திய பின்னணியோடு நடிகர் முத்துராமன் அவர்கள் என்னடி ராக்கமா பாடலை பாடியதுதான். மாநாட்டு பந்தலே திமிலோகப்பட்டது என்று சொல்வார்கள்.

மறுநாள் அரசியல் மாநாடு. ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். அன்றைய அரசியல் நிலைமைக்கேற்ப பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பெருந்தலைவரின் பேச்சை கேட்க லட்சக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இறுதியாக நடிகர் திலகம் ஏற்புரை நிகழ்த்தினார். தானும் தனது ரசிகர் படையும் எந்நாளும் காங்கிரஸ் இயக்கத்திற்காக உழைப்போம் என்று சூளுரைத்தார். கொங்கு மண்டலமே குலுங்கிய மாநாடு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

அதே நாளில் (அக்டோபர் 8 ஞாயிறு) தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்பதை ஏற்படுத்திய பொதுக்கூட்டம் ஒன்று சென்னையை அடுத்த திருக்கழுக்குன்றம் ஊரில் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் பேசப்பட்ட விஷயங்களின் அடிப்படையில் அன்றைய ஆளும்கட்சியான திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் அக்டோபர் 10 செவ்வாயன்று கூட்டப்பட்டு அந்த கூட்டத்தில் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயற்குழுவில் பேச வேண்டியதை பொதுக்கூட்டத்தில் பேசினார் என்ற காரணத்தை சொல்லி திமுக பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து எம்ஜிஆர் அவர்கள் இடை நீக்கம் [suspend] செய்யபட்டார். தமிழகமெங்கும் பதட்ட நிலை ஏற்பட்டு அசம்பாவித சம்பவங்கள் நடந்தேறின. . .

(தொடரும்)

அன்புடன்

RAGHAVENDRA
26th October 2015, 07:08 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NTPLAYADS/PLAYADS01.jpg

RAGHAVENDRA
26th October 2015, 07:08 AM
http://i872.photobucket.com/albums/ab289/ragasuda/NTPLAYADS/PLAYADS02.jpg

Murali Srinivas
2nd November 2015, 09:40 AM
அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

கடந்த பதிவின் இறுதி பகுதி

அக்டோபர் மாத துவக்கத்தில் கோவையில் நடந்த நடிகர் திலகத்தின் சிகர மன்ற மாநாடு பற்றியும் தொடர்ந்து தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களையும் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது

இந்த தொடரில் அரசியல் பற்றி எழுத நேர்ந்தால் கூடுமானவரை நடிகர் திலகம் சார்ந்த அரசியல் சூழல்கள் பற்றி மட்டுமே எழுதி வர முயற்சித்திருக்கிறேன். தவிர்க்க முடியாத நேரங்களில் மட்டுமே மாற்று கட்சி அரசியலைப் பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் இரண்டாம் வாரம் நடைபெற்ற அரசியல் நிகழ்வு அதன் எதிரொலியாக நடந்த சம்பவங்களை இங்கே குறிப்பிட காரணம் இருக்கிறது

1972 அக்டோபர் 10 செவ்வாய்க்கிழமை என்று பார்த்தோம். .அந்த வார இறுதியில் 13-ந் தேதி வசந்த மாளிகை மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. அதாவது 15-வது நாள். படம் வெளியான முதல் நாள் முதல் அந்த நாளோடு அன்று வரை மதுரை நியூசினிமாவில் நடைபெற்ற 50-க்கும் மேற்பட்ட காட்சிகள் தொடர்ந்து அரங்கம் நிறைந்தது. 50 CHF Shows இதை குறிப்பிட காரணம் அன்றைய பதட்ட சூழலிலும் கூட அசம்பாவித வன்முறை சம்பவங்கள் நடைபெற்றபோதும் வசந்த மாளிகை அதனால் எந்தவித பாதிப்பும் அடையாமல் அரங்கு நிறைந்ததை பதிவு செய்யவே. . .

படத்தின் இமாலய வெற்றியை அன்றே உறுதி செய்யும் வண்ணம் மக்கள் ஆதரவு வசந்த மாளிகைக்கு இருந்தது. பதட்ட சூழலிலும் குறிப்பாக பெண்கள் பெருமளவில் திரண்டு வந்தது குறிப்பிட்டதக்கது.

அந்த நேரத்தில் வசந்த மாளிகை மட்டுமா எதிர்மறை சூழலை கடந்து வெற்றிப் பெற்றது? அதனுடன் பட்டிக்காடா பட்டணமாவும் தன பங்கிற்கு வெற்றி சூறாவளியாய் தொடர்ந்துக் கொண்டிருந்தது. வசந்த மாளிகை 50 காட்சிகளுக்கு மேல் தொடர்ந்து அரங்கம் நிறைந்து ஓடிக் கொண்டிருந்த அதே நாளில் அதாவது 1972 அக்டோபர் 13 அன்று மதுரை சென்ட்ரலில் பட்டிக்காடா பட்டணமா 23 வாரங்களை அதாவது 161 நாட்களை நிறைவு செய்தது. அது மட்டுமா மொத்த வசூலில் 5-1/4 [ஐந்தே கால்] லட்சத்தையும் தாண்டி புதிய வரலாறு படைத்துக் கொண்டிருந்தது. 23 வாரங்களில் மதுரை சென்ட்ரலில் 5,35,000/- [ஐந்து லட்சத்து முப்பத்தி ஐயாயிரத்தையும்] தாண்டிய வசூல் செய்தது.

http://i501.photobucket.com/albums/e413/subbuchennai/GEDC5759-1_zpsb4bfba7b.jpg

இந்த நேரத்தில் மற்றொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். மூக்கையாவும் ஆனந்த்-தும் அந்த சூழலில் வெற்றி தேரோட்டத்தில் முன்னோடிகளாக திகழ்ந்தார்கள் என்றால் அவர்கள் இருவருக்கும் சற்றும் சளைக்காமல் வெற்றியோட்டதில் முன்னோடியாக நிர்மலும் விளங்கினார் என்பதைத்தான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். ஆம் நண்பர்களே நாம் குறிப்பிடும் அதே 1972 அக்டோபர் 13 வெள்ளியன்று 7 வாரங்களை நிறைவு செய்த தவப்புதல்வன் நிர்மல் அதற்கு அடுத்த் நாள் [அக்டோபர் 14 சனிக்கிழமை] 50-வது நாளை மதுரை சிந்தாமணியிலும் மற்றும் தமிழகமெங்கும் கொண்டாடினார். இரண்டு இமயங்களுக்கு இடையில் சிக்கினாலும் கூட இந்த பதட்ட சூழலை கடந்து வர வேண்டியிருந்தபோதும் கூட அதற்கு அடுத்து குறுக்கிட்ட தீபாவளி திரைப்படங்களின் போட்டியையும் சமாளிக்க வேண்டி வந்தும் கூட நிர்மல் 100 நாள் வெற்றிக் கோட்டை தொட்டது, கடந்தது அனைத்தும் நடிகர் திலகத்தின் பாக்ஸ் ஆபிஸ் ஆளுமைக்கு சான்று.

வசந்த மாளிகையின் வெற்றி நிலை அடுத்தடுத்த வாரங்களிலும் தொடர்ந்தது. இங்கே வசந்த மாளிகை எதிர்கொண்ட மற்றொரு எதிர்மறை சூழல் பருவ மழை. திடீரென்று திடீரென்று மழை பெய்யும் ஒரு அக்டோபர் மாதமாக இருந்தது அந்த வருடம். அதையும் எதிர்கொண்டு தொடர் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக வெற்றி நடைப் போட்டுக் கொண்டிருந்தது வசந்த மாளிகை,

இப்படியாக பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளிவிழாவை நோக்கிய பவனி, வசந்த மாளிகையின் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகள் காணப் போகும் களிப்பு, தவப்புதல்வன் 100 நாட்கள் ஓடி விடும் என்று கிடைத்த உறுதி, பல புதிய பழைய தயாரிப்பு நிறுவனத்தினர் நடிகர் திலகத்தின் கால்ஷீட் வேண்டி முற்றுகையிடுகிறார்கள் என்ற மகிழ்வு இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் தித்திக்கும் செய்தி ஒன்று வந்தது

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
11th November 2015, 01:35 PM
அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

கடந்த பதிவின் இறுதி பகுதி

மதுரையில் பட்டிக்காடா பட்டணமா, தவப்புதல்வன் மற்றும் வசந்த மாளிகை ஆகிய படங்களின் வெற்றியைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது

தித்திக்கும் செய்தி என்று குறிப்பிட்டேன். அதற்கு முன்பே கூட பல தித்திப்பான தருணங்களை நடிகர் திலகம் எங்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார். பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா வாரத்தில் அடியெடுத்து வைத்து 1972 அக்டோபர் 27 அன்று 175-வது நாள்ளை நிறைவு செய்கின்றது. எனக்கு நினைவு தெரிந்து நான் மற்றும் என் வயதையொத்த மதுரை வாழ் ரசிகர்கள் பலரும் ஒரு வெள்ளி விழா வாரத்தை முதன் முறையாக பார்க்கிறோம். மற்றொரு தித்திப்பாக வசந்த மாளிகை 100 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளை காண்கிறது. அது மறுநாள் அதாவது அக்டோபர் 28 சனிக்கிழமை காலைக்காட்சி 100-வது காட்சியாக வந்தது

தொடர்ந்த வரும் இரண்டு நாட்களில் இரண்டு முக்கிய நிகழ்வுகள். இதை நேரில் காண்பதற்கு வசதியாக ஸ்கூல் வேறு லீவ் [அன்றைய பதட்ட சூழல் காரணமாக]. இந்த தொடரை படிப்பவர்கள் பலருக்கும் நான் அன்றைய நாட்களின் பதட்ட சூழலை அடிக்கடி குறிப்பிடுவது ஏன் என்று யோசிக்கலாம். காரணம் இருக்கிறது. ஆளும் கட்சியில் ஏற்பட்ட ஒரு நிகழ்வு அதன் காரணமாக ஏற்பட்ட பதட்ட நிலை என்று தள்ளி விட முடியாமல் பல்வேறு பிரச்சனைகள் அதன் காரணமாக spill over என்று சொல்வார்களே அதே போன்று தொடர்ந்து வன்முறை நிகழ்வகள் நடந்துக் கொண்டிருந்தன..

நான் குறிப்பிடும் வாரத்திலும் மதுரையில் ஒரு பதட்ட சூழல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. என்னவென்றால் அக்டோபர் 20 வெள்ளியன்று எம்ஜிஆரின் இதய வீணை மதுரை ஸ்ரீதேவியில் வெளியானது. அதே நேரத்தில் திமுகவின் செயற்குழு பொதுக்குழு விளக்கப் பொதுக்கூட்டம் [எப்போதும் நடப்பது போல்] ஏற்பாடு செய்யப்பட்டு அந்த கூட்டம் அக்டோபர் 22 ஞாயிறன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இடமோ தேவி தியேட்டருக்கு அருகில் உள்ள ஞாயிற்றுக்கிழமை சந்தை நடக்கும் மைதானம். சிறப்பு பேச்சாளரோ மதுரை முத்து. அனைவரும் அச்சப்பட்டது போலவே முத்துவின் பேச்சினால் பதட்டம் உண்டாகி வன்முறை சம்பவங்கள் நடந்தேறின.

இப்படியெல்லாம் நடந்தும் கூட நடிகர் திலகத்தின் படங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் வெற்றி நடை போட்டது என்ற உண்மையை மீண்டும் பதிவு செய்யவே அந்த சூழலை பற்றி குறிப்பிட நேர்கிறது..

பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா நாளன்று [1972 அக்டோபர் 27] சென்ட்ரல் திரையரங்கில் உள்ளேயும் வெளியேயும் கோலாகல கொண்டாட்டங்கள் நடந்தன. நான் போகவில்லை. வெளியிலிருந்து பார்த்ததுடன் சரி. ஆனால் மறுநாள் சனிக்கிழமை காலைக்காட்சி வசந்த மாளிகை பார்க்க நியூசினிமாவிற்கு நானுன் என் நண்பனும் என் கஸினுடன் போனோம் .

அதற்கு ஒரு காரணம் இருந்தது. பெரும்பாலும் நடிகர் திலகத்தின் படங்கள் சனிக்கிழமை வெளியாகும். ஒரு வாரத்திற்கு 23 காட்சிகள். 4 வாரத்திற்கு 92 காட்சிகள். 5-வது வார சனிக்கிழமை ஞாயிறு 4 காட்சிகள் வீதம் நடந்து பெரும்பாலும் ஞாயிறு இரவுக் காட்சி 100-வது காட்சியாக வரும். வெள்ளியன்று ரிலீஸ் ஆகியிருந்தால் பெரும்பாலும் வெளியான அன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி நடைபெற்று சனிக்கிழமை இரவுக் காட்சியாக வரும். எனவே அந்த தொடர்ந்து ஹவுஸ் புல் ஆகின்ற 100-வது காட்சியை பார்க்க முடியாமலே இருந்தது. .

வசந்த மாளிகையைப் பொறுத்தவரை 4 வாரத்தில் 96 காட்சிகள் நடைபெற்று அவை அனைத்தும் அரங்கு நிறைந்தது. ரீலிஸான செப்டம்பர் 30 வெள்ளியன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி. 4-வது நாள் திங்கள்கிழமை அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஒரு எக்ஸ்ட்ரா காட்சி. நவராத்திரியின்போது ஆயுத பூஜை விஜயதசமியின் போது மேலும் 2 எக்ஸ்ட்ரா காட்சிகள் நடைபெற்றதால் 28 நாட்களிலேயே 96 காட்சிகள் ஹவுஸ் புல் ஆகி விட்டது. இன்னும் ஒரு எக்ஸ்ட்ரா காட்சி நடைபெற்றிருந்தால் பட்டிக்காடா பட்டணமா வெள்ளி விழா கொண்டாடிய அதே அக்டோபர் 27 வெள்ளியன்றே வசந்த மாளிகையும் 100 தொடர் அரங்கு நிறைந்த காட்சிகளை நிறைவு செய்திருக்கும். அப்படி நடக்காததனால் சனிக்கிழமை காலைக் காட்சி பார்க்க போக எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

நான் முன்பே சொல்லியிருக்கிறேன். சனிக்கிழமை காலைக்காட்சி எப்போதும் சற்று டல்லடிக்கும். காரணம் அன்றைய நாட்களில் பள்ளிக்கூடங்கள், கல்லூர்ரி மற்றும் அலுவலகங்கள் அனைத்திற்கும் மதியம் வரை வேலை நாள் என்பதால் ஏற்படும் டல்னஸ். அப்படியிருந்தும் அன்று நியூசினிமா தியேட்டர் முன்பு ஏராளமானோர் கூடி நின்றனர். கீழ் வகுப்பு டிக்கெட்டுகள் மடமடவென்று விற்று தீர்ந்தது. பால்கனி டிக்கெட்டுகள் சற்றே நிதானமாக விற்றது என்றாலும் படம் தொடங்கும் 10.45 மணி நேரத்தில் ஹவுஸ் புஃல் போர்ட் மாட்டப்பட்டது. 1000 வாலா சரம் வெடித்து சிதற கைதட்டல் விசில் பறந்தது.. தியேட்டருக்கு உள்ளே வழக்கம் போல் அலப்பரை தூள் பறந்தது.

படம் முடிந்து வெளியே வருகிறோம். அப்போது தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கம் நிறைந்ததை ஒரு தட்டியில் பேப்பர் ஒட்டி அதில் விவரங்களை எல்லாம் எழுதி தியேட்டருக்கு எதிரே இருக்கும் ஜான்சி ராணி பூங்காவின் சுற்றுப்புற இரும்புக் கம்பிகளோடு சேர்ந்து இருக்கும் விளக்கு கம்பத்தில் கட்டிக் கொண்டிருந்தனர். அப்போதுதான் நான் சென்ற பதிவில் குறிப்பிட்ட தித்திப்பு செய்தி சொன்னார்கள். அதாவது மறுநாள் 1972 அக்டோபர் 29 ஞாயிறன்று பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு நடிகர் திலகம் நேரில் விஜயம் செய்கிறார் என்பதுதான் அந்த தித்திப்பு செய்தி. .

(தொடரும்)

அன்புடன்

HARISH2619
11th November 2015, 06:18 PM
Dear murali sir,
we are waiting........................

Murali Srinivas
9th December 2015, 10:37 PM
அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

கடந்த பதிவின் இறுதி பகுதி

பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளி விழாவிற்கு மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு நடிகர் திலகம் விஜயம் செய்கிறார் என்ற செய்தி வந்ததைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது

மறு நாள் அக்டோபர் 29 நடிகர் திலகம் வரப் போகிறார் என்று தெரிந்ததும் அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகரிக்க ஆராம்பித்தது அதற்கு முன்பு அவரை நேரில் பார்த்த அனுபவங்கள் மனதில் நிழலாட தொடங்கின.

நினைவு தெரிந்த பிறகு 1966-ல் அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தபோது மதுரையின் நான்கு மாசி வீதிகளில் ஊரவலமாக அழைத்து வரப்பட்டார் அப்போதுதான் அவரை முதன் முறையாக பார்த்தேன்.

1970- நவம்பரில் ராமன் எத்தனை ராமனடி 100-வது நாள் விழாவிற்கு நியூசினிமா வந்தபோது அந்த காட்சிக்கு போய் அவரைப் பார்த்தது இரண்டாம் முறை

1971- பொது தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது பார்த்தது மூன்றாம் முறை.

அதன் பிறகு அவர் பலமுறை மதுரை வந்திருந்தாலும் இப்போதுதான் அவரை பார்க்கும் வாய்ப்பு அமைகிறது. அதற்கு ஒரு முக்கிய காரணம் பல முறை அவர் வந்தபோதும் அவர் தங்கியிருந்த இடமோ அல்லது அவர் கலந்து கொள்ளும் நிகழ்வோ நடைபெற்றது நகரின் வேறு இடத்தில. ஆனால் இப்போது எங்கள் வீட்டிற்கு வெகு அருகே அமைந்திருக்கக் கூடிய சென்ட்ரல் சினிமாவிற்கு வருகிறார். ஆகவே வாய்ப்பு கூடுதல்

ஆனால் மனதில் ஒரு சந்தேகம். அவர் மதியக் காட்சிக்கு மட்டும் வருகிறாரா அல்லது மூன்று காட்சிகளுக்கும் வருகிறாரா என்பது குழப்பமாக இருந்தது பலரிடம் கேட்டும் யாருக்கும் சரியாக தெரியவில்லை. மாட்னி ஷோவிற்கு உறுதியாக வருகிறார் என்பது மட்டுமே சொன்னார்கள்.

எப்படி போவது? எப்படி டிக்கெட் வாங்குவது போன்ற கேள்விகள் மனதில் வட்டமிட ஆரம்பித்தன. கஸினிடம் கேட்டதற்கு பார்ப்போம் என்று சொன்னான். அதைப் பற்றியே நினைத்து நினைத்து பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் வீட்டருகே குடியிருந்த சக வயது நண்பன் ஒருவனும் [வசந்த மாளிகை 100-வது காட்சி பார்க்க என்னுடன் வந்தவன்] தானும் வருவதாக சொன்னான்.

மறுநாள் விடிந்தது. காலை தினத்தந்தி விளம்பரத்தில் மதியக் காட்சிக்கு சென்ட்ரல் திரையரங்கிற்கு விஜயம் செய்கிறார் நடிகர் திலகம் என்பதை குறிப்பிட்டிருந்தார்கள். நடிகர் திலகத்தோடு மற்ற நட்சத்திரங்களும் மேடையில் தோன்றும் அந்த வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்வு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து வசந்த மாளிகையின் மதுரை விநியோகஸ்தரும் விளம்பரம் கொடுத்திருந்தார். மட்டுமல்ல, முதல் நாள் இரவு வரை நடைபெற்ற 103 காட்சிகளும் அரங்கு நிறைந்ததையும் குறிப்பிட்டு வெள்ளிவிழாவை நோக்கி வெற்றி நடை போடுகிறது என்ற வாக்கியத்தையும் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. படம் வெளியான 31-வது நாளன்றே வெள்ளி விழா என்று கொடுக்கபப்ட்டது என்று சொன்னால் படத்தின் வெற்றி பற்றி எந்தளவிற்கு நம்பிக்கையாக இருந்தார்கள் என்பது புரியும்.

அன்றைய நாட்களில் நகரில் ஓடும் அனைத்துப் படங்களின் விளம்பரமும் தினசரி தினத்தந்தியில் வெளியாகும். மதுரை பதிப்பில் வெளியாகும் விளம்பரம் மதுரை ராமநாதபுரம் ஏரியாவில் படங்கள் ஓடும் பட்டியலை கொண்டிருக்கும். இந்த விளம்பர செலவு அந்தந்த ஏரியா விநியோகஸ்தரை சார்ந்தது.

இரண்டு மூன்று முறை தியேட்டர் பக்கம் போய் வந்தாகி விட்டது. தியேட்டர் வாசலில் பரபரப்பான சூழலும் ரசிகர்கள் கூடி நிற்பதையும் பார்க்க முடிந்தது. டிக்கெட் பற்றி கஸினிடம் கேட்டால் சொல்லியிருக்கேன். இன்னும் கிடைக்கலை என்றான். காலை முடிந்து பகல் வந்தது. ஆனாலும் ஒன்றும் தெரியவில்லை. தியேட்டர் பக்கம் போய் பார்த்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி சென்ற கஸினையும் காணவில்லை.

பகல் காட்சி ஆரம்பிக்கும் நேரம் கடந்து சென்றவுடன் புரிந்து விட்டது டிக்கெட் கிடைக்கவில்லை என்று. மூன்று மூன்றரை மணி சுமார் நானும் பக்கத்து வீட்டு நண்பனும் அப்படியே சென்ட்ரல் தியேட்டர் பக்கம் போகிறோம். ஹவுஸ் புல் போர்டு மாட்டப்பட்டிருக்கிறது. தியேட்டர் வாசலில் பெருங்கூட்டம். இன்னமும் நடிகர் திலகமும் ஏனைய நட்சத்திரங்களும் வரவில்லை என்பது புரிந்தது. ரேஸ் கோர்ஸ் அருகே அமைந்திருக்க கூடிய பாண்டியன் ஹோட்டலில் தங்கியிருந்த நடிகர் திலகமும் மற்றவர்களும் தியேட்டரின் முன்புற வாசல் வழியாகத்தான் உள்ளே செல்ல வேண்டும் என்பதால் அப்போது பார்த்து விடலாம் என்று பெரும்பாலானோர் அங்கே நிற்பது தெரிந்தது.

10,15 நிமிடம் அங்கேயே உலாத்தினோம். திடீரென்று பயங்கரமான கைதட்டலும் வாழ்க கோஷங்களும் கேட்க மேல மாசி வீதியிலிருந்து தியேட்டர் அமைந்திருக்கூடிய டவுன் ஹால் ரோடில் இடது பக்கமாக திரும்பி கார்கள் வருவது தெரிந்தது. ஆனால் அந்த கார்களை பார்த்தவுடன் கூட்டம் முன்னோக்கி பாய்ந்ததில் சிறுவர்களான நாங்கள் நிலைகுலைந்து போனோம். எங்களுக்கு முன்னால் எங்களை விட உயரம் கூடிய மனிதர்கள் நிற்க எத்தனை எம்பி எம்பி குதித்தும் யாரையும் பார்க்க முடியவில்லை என்பது மிகுந்த ஏமாற்றமாய் போனது.

அங்கே கூடியிருந்தவர்களில் ஒருவர் தன் அருகில் இருந்தவரிடம் நாம் மேல மாசி வீதி போய் விடலாம். காரணம் இந்த விழா முடிந்து திரும்ப நடிகர் திலகம் பாண்டியன் ஹோட்டல் போகும்போது மேல மாசி வீதி வழியாகத்தானே போக வேண்டும். அப்போது பார்த்து விடலாம் என சொல்லிக் கொண்டிருந்ததை கேட்ட நாங்கள் இருவரும் தியேட்டர் எதிரே அமைந்திருக்க கூடிய கோபால கொத்தன் தெரு தட்டார சந்து வழியாக மேல மாசி வீதி சென்றடைந்தோம்.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
13th January 2016, 08:36 PM
அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

கடந்த பதிவின் இறுதி பகுதி

பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளி விழாவிற்கு மதுரை சென்ட்ரல் திரையரங்கிற்கு நடிகர் திலகம் விஜயம் செய்த நாளன்று நடந்த நிகழ்வுகளை பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது

மேல மாசி வீதி போய் விட்டோம். நாங்கள் சென்ற அந்த தட்டார சந்து சென்று சேரும் இடத்தில இடது புறம் ஒரு நடைமேடை கோவிலும் வலது புறத்தில் White Taylor என்ற கடையும் அமைந்திருக்கும். நாங்கள் கடையின் முன்புறத்தில் போய் நின்றோம். அப்போது கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. அங்கே நிற்கும்போது ஒரு சந்தேகம் எழுந்தது. நாம் இந்த வழியாக போவார் என்று நம்பி இப்படி வந்து நிற்கிறோம். ஒரு வேளை இந்த வழியாக வரவில்லையென்றால் என்ன செய்வது? அபப்டியே வந்தாலும் காருக்குள்ளே இருப்பவரை எப்படி பார்க்க முடியும் என்றெல்லாம் நானும் என் நண்பனும் பேசிக் கொண்டேயிருக்கிறோம். இத்தனை பேர் நிற்கிறார்களே எனவே இந்த வழியாக் வருவார் என்று சமாதானப்படுத்திக் கொண்டோம்.

நேரம் ஆக ஆக கூட்டம் கூடிக் கொண்டே போனது. மக்கள் அடுத்தடுத்து வந்து நிற்க எங்களுக்கு மறைக்க ஆரம்பித்தது. White Taylor கடையின் உரிமையாளருக்கு [அவர் பெயர் ராஜாராம் என்று நினைவு] என்னை நன்றாக தெரியும் என்பதனால் என்னையும் நண்பனையும் அழைத்து ஒரு ஸ்டூலை கொடுத்து கடையின் முன் அமைந்திருந்த ஒரு விளக்கு கம்பத்திற்கு அருகில் போட்டுக் கொள்ள சொன்னார். விளக்கு கம்பத்திற்கு அடியில் இருக்கக் கூடிய சதுரமான இடமும் அவர் கொடுத்த ஸ்டூலும் சேர்ந்து எங்கள் இருவருக்கும் முதலில் அமரவும் பிறகு ஏறி நிற்கவும் பயன்பட்டது.

வெகு நேரம் ஆனது போல் தோன்றியது. ஆனால் மணி பார்த்தால் 4.30 தான் ஆகியிருந்தது. கூட்டம் அதிகமாகிறது. 10 நிமிடம் ஆகியிருக்கும் சட்டென்று ஒரு ஆரவாரம். சத்தம் அதிகமாகி அதிகமாகி வந்து காதை அடைக்கும் அளவிற்கு போகிறது. ஏறி நின்று எட்டிப் பார்க்கிறோம். முன்னால் ஒரு திறந்த ஜீப் வருவது தெரிந்தது. அருகில் வர வர நமது ஆருயிர் நாயகன் தெரிந்தார் அன்றைய காலகட்டத்திலே அவர் பொது நிகழ்ச்சிகளுக்கு அணியக் கூடிய வெள்ளை/கிரீம் நிற ஜிப்பா மற்றும் டைட் பைஜாமா அணிந்து வலது கையை வீசியபடியே வருகிறார்.

[எங்கள் எதிர்பார்ப்பு அவர் காரில் வருவார் என்பது. ஆனால் அவர் வந்ததோ திறந்த ஜீப்பில். அரங்கத்தினுள்ளில் நடைபெற்ற விழாவில் அவர் கலந்துக் கொண்டபோது அரங்கிற்கு வெளியேயும் தெருக்களிலும் ஏராளமான மக்கள் கூடி நிற்கிறார்கள் என்ற தகவல் தெரிந்தவுடன் திறந்த ஜீப் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதில் நின்று கொண்டே நடிகர் திலகம் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பயணம் செய்யுமாறு அமைக்கப்பட்டது என்பது பின்னர் தெரிய வந்தது].

சுருள் சுருளான கேசம், அன்றைய காலகட்டத்தில் அனைவரின் மனதையும் கொள்ளையடித்த அந்த கிருதா, அந்த டிரேட் மார்க் குர்தா பைஜாமா எவரையும் வசீகரிக்கும் அந்த மலர்ந்த முக புன்னகையை ஆபரணமாக அணிந்து நடிகர் திலகம் வந்தபோது அணையை உடைத்துக் கொண்டு பாயும் வெள்ளம் போல் மக்கள் அவர் ஜீப்பை நோக்கி பாய்ந்தனர்.

எங்கிருந்துதான் வந்ததோ அந்த மக்கள் வெள்ளம் என தோன்றும் வண்ணம் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடிவிட அந்த மக்கள் வெள்ளத்தில் ஜீப் மெதுவாக நீந்தி செல்ல அந்த மெதுவான ஓட்டத்தின் காரணமாக நாங்கள் சற்று அதிக நேரம் நடிகர் திலகத்தை பார்க்கக் கூடிய வாய்ப்பு கிடைத்தது

உணர்ச்சிவசப்பட்டு ஆர்வக் கோளாறால் நடிகர் திலகத்தை தொட்டு பார்க்க ஜீப்பில் ஏற முயற்சித்தவர்கள், முடியாமல் ஜீப் பின்னால் ஓடியவர்கள் போலீஸாரின் லாத்தி வீச்சையும் பொருட்படுத்தாமல் பாய்ந்தவர்கள் என்று செயல்பட்ட வெறித்தனமான ரசிகர் கூட்டத்தை நேரில் பார்த்தவர எவரும் அந்த காட்சியை வாழ்நாளில் மறக்க மாட்டார்கள். அது மட்டுமல்ல நடிகர் திலகத்தின் ரசிகர் படை என்பது எத்தனை வலிமையும் தீவிரமும் வாய்ந்தது என்பதற்கு அது ஒரு கண் கண்ட சாட்சி.

நாங்கள் நின்றிருந்த பக்கமும் அவர் கைவீசி விட்டு போக அவர் என்னவோ எங்களுக்கு தனிப்பட்ட முறையில் கைவீசியது போன்ற சந்தோஷம் எங்கள் மனதில். ஜீப் எங்களை தாண்டி சென்றாலும் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்றோம். அதையே நினைத்து அதையே பேசி வீட்டிற்கு வந்த பிறகும் அனைவரிடமும் அதைப் பற்றி விவரித்து ஏகத்திற்கும் சந்தோஷப்பட்டது இப்போதும் மனதில் பசுமையாக நிற்கிறது.

ஆக சனிக்கிழமை வசந்த மாளிகை 100-வது தொடர் ஹவுஸ் புல் காட்சி பார்த்த சந்தோஷம் மறுநாள் நடிகர் திலகத்தையே நேரில் பார்த்துவிட்ட இரட்டிப்பு சந்தோஷம் இவை இரண்டும் சேர்ந்து அந்த வார இறுதியில் வர இருந்த தீபாவளி சந்தோஷத்தை விட அதிகமாக இருந்தது. நடிகர் திலகத்தை நேரில் பார்த்தது அக்டோபர் 29 ஞாயிறு. நவம்பர் 4-ந் தேதி சனிக்கிழமையன்று தீபாவளி. 1965-ற்கு பிறகு நடிகர் திலகத்தின் திரைப்படம் வெளிவராத தீபாவளி 1972-ல் தான் வந்தது. [இதற்கு பிறகு அவர் active -ஆக நடித்துக் கொண்டிருந்த 1987-ம் ஆண்டு வரை எடுத்துக் கொண்டோமோனால் 1987 தீபாவளிக்குதான் நடிகர் திலகத்தின் படம் வெளிவரவில்லை]. இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ஈடுகட்டும் அளவிற்கு இந்த இரட்டிப்பு சந்தோஷம் அமைந்தது என்றே சொல்ல வேண்டும்

இப்படியாக பல மகிழ்ச்சியான நினைவுகளை விதைத்து விட்டு அந்த 1972 அக்டோபர் மாதம் விடைபெற்றது.

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
10th May 2016, 10:39 AM
அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

கடந்த பதிவின் இறுதி பகுதி

நடிகர் திலகத்தை நேரில் பார்த்தது அக்டோபர் 29 ஞாயிறு. நவம்பர் 4-ந் தேதி சனிக்கிழமையன்று தீபாவளி. 1965-ற்கு பிறகு நடிகர் திலகத்தின் திரைப்படம் வெளிவராத தீபாவளி 1972-ல் தான் வந்தது. [இதற்கு பிறகு அவர் active -ஆக நடித்துக் கொண்டிருந்த 1987-ம் ஆண்டு வரை எடுத்துக் கொண்டோமோனால் 1987 தீபாவளிக்குதான் நடிகர் திலகத்தின் படம் வெளிவரவில்லை]. இதனால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ஈடுகட்டும் அளவிற்கு இந்த இரட்டிப்பு சந்தோஷம் அமைந்தது என்றே சொல்ல வேண்டும். இப்படியாக பல மகிழ்ச்சியான நினைவுகளை விதைத்து விட்டு அந்த 1972 அக்டோபர் மாதம் விடைபெற்றது.

இங்கிருந்து பதிவு தொடர்கிறது

பல ஊர்களிலும் பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளிவிழா நடைபெற்றபோதும் சென்னையில் விழா பல காரணங்களால் தள்ளிப் போனது. தமிழகத்தின் பல இடங்களிலும் அசம்பாவித நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருந்த காரணத்தினால் கல்வி நிறுவனங்களுக்கு தொடர் விடுமுறையாக இருந்தது.

இந்த நேரத்தில் தீபாவளியன்று வெளியாவதாக இருந்த ராமண்ணாவின் சக்தி லீலை தள்ளிப் போடப்படுகிறது என்ற செய்தி வந்தது. இதை தொடர்ந்து சென்ட்ரல் சினிமாவில் ரிலீஸ் ஆவதாக இருந்த சக்தி லீலை தள்ளிப் போடப்படுவதால் பட்டிக்காடா பட்டணமாவே தொடரும் என்ற ஒரு தகவலும் வந்தது. சக்தி லீலை தீபாவளியன்று [நவம்பர் 4] வராது எனபது உண்மைதான். ஆனால் நவம்பர் 10 வெள்ளியன்று வெளியீடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு விட்டதாக தயாரிப்பாளர் அறிவிக்கவே, நவம்பர் 4 முதல் 9 வரை உள்ள 6 நாட்களுக்கு சென்ட்ரல் சினிமாவில் துஷ்மன் இந்திப் படம் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது.

வசந்த மாளிகை தொடர்ந்து வெற்றி பேரிகையை முழங்கிக் கொண்டிருந்தது. தீபாவளியன்று நடிகர் திலகத்தின் புதிய படம் வெளிவராததால் அன்று காலை நியூசினிமாவில் கூட்டம் அலை மோதியது. 6-வது வாரம் சனிக்கிழமை காலைக்காட்சிக்கு ப்ளாக்கில் டிக்கெட் விற்கப்பட்டதை பார்த்தோம். அதற்கு முன் அப்படி ஒரு நிகழ்வு நடந்திருக்க வாய்ப்பில்லை என்றே சொல்ல வேண்டும். மதுரையில் பட்டிக்காடா பட்டணமாவும் தவப்புதல்வனும் ஷிப்ட் செய்யப்பட்டு ஓட சென்னையைப் பொறுத்தவரை வசந்த மாளிகையும் தவப்புதல்வனும் ரிலீஸ் தியேட்டர்களில் தொடர, பட்டிக்காடா பட்டணமா ஷிப்டிங்கில் தொடர்ந்தது.

நடிகர் திலகத்தின் அடுத்த ரிலீசாக வெளியாவதாக இருந்த நீதியின் ஒரிஜினல்தான் துஷ்மன் என்பதை தெரிந்திருந்த நானும் என் கஸினும் தீபாவளியன்று மாலை காட்சிக்கு துஷ்மன் பார்க்க சென்ட்ரல் சினிமாவிற்கு போகிறோம். நல்ல கூட்டம். ஆனால் படம் பெரிய அளவிற்கு எங்களை impress பண்ணவில்லை. இந்த கதை தமிழ் சினிமாவிற்கு எப்படி சூட் ஆகும் என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால் நடிகர் திலகம், பாலாஜி சிவிஆர் கூட்டணி இருப்பதால் அதை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்ற ஒரு நம்பிக்கையும் இருந்தது. மாப்பிளையை பார்த்துகடி மைனா குட்டி பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டதை பத்திரிக்கையில் படித்திருந்தோம். அது போல் நாளை முதல் குடிக்க மாட்டேன் பாடல் ரிகார்டிங் செய்யப்பட்டதும் செய்தியாக வந்திருந்தது.

இந்த நேரத்தில் மற்றொரு செய்தியும் வந்தது. ஒய்வு ஒழிச்சல் இல்லாமல் நடிகர் திலகம் சினிமா படப்பிடிப்பில் காங்கிரஸ் கட்சி கூட்டங்களில், நடிகர் சங்க வேலைகளில் மூழ்கி இருக்கும் நேரம், அது அவரது உடல்நிலையை பாதித்து ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்தவர் vomit செய்ய அதில் ரத்தம் கலந்திருந்ததைப் பார்த்துவிட்டு வீட்டில் இருந்தவர்கள் பயந்துபோய் டாக்டரை கூப்பிட, டாக்டர் BP சற்று அதிகமாக இருக்கிறது அதனால் ஒய்வு எடுக்கவேண்டும் என்று கூற நாளை காலை எனக்காக செங்கல்பட்டு பக்கத்தில் எல்லா ஆர்டிஸ்ட்ம் காத்திருப்பார்கள். பாலாஜியும் சிவிஆரும் காத்திருப்பார்கள். அவ்வளவு பேர் கால்ஷீட்டும் வேஸ்ட் ஆகிவிடும். நான் போகவேண்டும் என்று கிளம்பி போய்விட்டாராம்.

அன்றைக்குத்தான் கிளைமாக்ஸ்-ற்கு முந்தைய அனைவரும் பாடும் பாடல் காட்சியான எங்களது பூமி பாடல் படமாக்கப்பட்ட தினம். படத்தில் இந்த பாடல்காட்சியில் மட்டும்தான் அந்த கருநீல டிரைவர் யுனிபார்ம் தவிர்த்து வொயிட் அண்ட் வொயிட் ஷெர்வானி அணிந்திருப்பார் நடிகர் திலகம். ஒரு துப்பட்டாவும் அணிந்திருப்பார். அது சிவப்பு கலரில் இருக்கும். முதல் நாள் இரவு ஏற்பட்டது போல ரத்த வாந்தி வந்தால் அதை அடக்குவதற்கும் மீறி வந்தால் மற்றவர்களுக்கு தெரியாமல் இருப்பதற்கும்தான் சிவப்பு கலர் துப்பட்டாவை பயன்படுத்தினார் என்று ரசிகர்கள் சொல்லி கேள்விபட்டிருக்கிறேன். அது எந்தளவிற்கு உண்மை என்று தெரியாது. ஆனால் இப்போதும் அந்த பாடல் காட்சியை பார்த்தோம் என்றால் இரண்டு மூன்று ஷாட்களில் அந்த துப்பட்டாவை அவர் வாயின் மேல் பொத்தி பிடிப்பதை கவனிக்கலாம். தன்னால் தயாரிப்பாளருக்கோ மற்றவர்களுக்கோ எந்தவித பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்ற அந்த பெரிய மனதிற்கு தலை தாழ்ந்த வணக்கம்!

நான் முன்பே குறிப்பிட்டது போல தமிழக அரசியல் வானிலும் பல்வேறு விஷயங்கள் நடந்துக் கொண்டிருந்த நேரம். அதன் எதிரொலியாக பல சம்பவங்கள் நடந்துக் கொண்டிருந்தன. அன்றைய ஆட்சியின் முதல் அமைச்சர் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீது ஊழல் புகார்களை அன்றைய ஆளுநராக இருந்த கே.கே.ஷா அவர்களிடம் எம்ஜிஆர் அவர்களும் இந்திய கம்யூனிஸ்ட் காட்சி தலைவர் M. கல்யாணசுந்தரம் அவர்களும் கொடுக்க அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்த புகார்களை நான் தமிழக அமைச்சரவையிடம்தான் அனுப்பி அவர்கள் கருத்தை கேட்க முடியும் என்று ஆளுநர் சொல்லிவிட அதனால் அவரிடம் கொடுத்தை திரும்பபெற்று டெல்லி சென்று அன்றைய குடியரசு தலைவர் வி.வி.கிரியிடம் அளித்தனர். ஆனால் அங்கிருந்தும் அது தமிழக அமைச்ச்சரவையிடம்தான் வந்து சேர்ந்தது என்பது வேறு விஷயம். இதே நேரத்தில்தான் (1972 நவம்பர் மத்தியில்) பாளையங்கோட்டை கல்லூரி பேராசிரியர் சீனிவாசன் தாக்கப்பட்டார் இதன் காரணமாக ஏற்பட்ட பதட்ட நிலையால் மீண்டும் கல்வி நிறுவனங்கள் காலவரையின்றி மூடப்பட்டன.

இதையெல்லாம் இங்கே குறிப்பிட காரணம் இந்த பதட்ட சூழலிலும் நடிகர்திலகத்தின் படங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது என்பதை பதிவு செய்யவே!

(தொடரும்)

அன்புடன்

Murali Srinivas
30th May 2016, 08:20 PM
அந்த நாள் ஞாபகம்

1960-களின் இறுதியில் துவங்கி நடிகர் திலகத்தின் படங்கள் வெளியான காலகட்டத்தை பற்றிய என் நினைவலைகளை தாங்கிய இந்த தொடர் பதிவின் அடுத்த கட்டம்

கடந்த பதிவின் இறுதி பகுதி

இதையெல்லாம் இங்கே குறிப்பிட காரணம் இந்த பதட்ட சூழலிலும் நடிகர்திலகத்தின் படங்கள் எந்த பாதிப்பும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது என்பதை பதிவு செய்யவே!

இங்கிருந்து பதிவு தொடர்கிறது

பதட்ட சூழ்நிலை ஒரு பக்கம் என்றால் மழை மற்றொரு பக்கம். மற்ற ஊர்களில் எப்படியோ மதுரையில் அந்த சீசனில் நல்ல மழை. [இதை சொல்ல காரணம் 1973-ல் தமிழகத்திலே வறட்சியும் மின்வெட்டும் கடுமையாக இருந்தன]. இருப்பினும் வசந்த மாளிகை மட்டுமல்ல ஷிப்டிங் செய்யப்பட்ட பட்டிக்காடா பட்டணமாவும் சரி தவப்புதல்வனும் [மதுரை விஜயலட்சுமியில்] சரி பிரமாதமாக ஓடிக் கொண்டிருந்தது.

பல காரணங்களால் தள்ளிப் போன பட்டிக்காடா பட்டணமாவின் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் நவம்பர் மூன்றாவது வாரத்தில் நடைபெற்றது, நவம்பர் 19 அல்லது 21 என்று நினைவு. சென்னை உட்லண்டஸ் ஹோட்டலில் நடைபெற்றது. பெருந்தலைவர் விழாவிற்கு தலைமை தாங்கி கலைஞர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கேடயம் வழங்கினார். ஏர் கலப்பை மாடலில் நடிகர் திலகத்திற்கு பரிசு வழங்கப்பட்டது அந்த சமயத்தில் மதுரையில் ஷிப்டிங் செய்யப்பட்ட பட்டிக்காடா பட்டணமா 200-வது நாளை நிறைவு செய்தது. மாளிகை 50 நிறைவு செய்தது

நீதி டிசம்பர் 7 அன்று வெளியாவதாக தகவல் வந்தது. சென்னையை பொறுத்தவரை ராஜா வெளியான அதே அரங்குகளில்தான் [பாரடைஸ் அகஸ்தியா ராக்ஸி] நீதியும் வெளியாகிறது என்ற செய்தி வந்த அதே நேரத்தில் மதுரையில் தங்கம் தியேட்டரில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாயின. தங்கம் தியேட்டரா என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்தது. காரணம் வேறொன்றுமில்லை. பொதுவாக சென்ட்ரல், நியூசினிமா, ஸ்ரீதேவி மற்றும் சிந்தாமணி ஆகியவைதான் முதல் சாய்ஸ். அந்த நேரத்தில் நியூசினிமாவில் வசந்த மாளிகை, ஸ்ரீதேவியில் இதய வீணை, சிந்தாமணியில் தெய்வம் [நீதியின் விநியோகஸ்தரான சேது பிலிம்ஸ்தான் தெய்வதிற்கும் விநியோகம்] ஆகியவை ஓடிக் கொண்டிருந்த காரணத்தினால் சென்ட்ரல் மட்டுமே இருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ சென்ட்ரலில் படம் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. அந்த நேரத்திலும் சரி அதற்கு பிறகும் சரி அடுத்து வெளியாகும் புதுப் படங்கள் எதுவும் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல் வரவில்லை. அப்படியிருக்க ஏன் சென்ட்ரல் சினிமா ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. 1973 பொங்கலுக்கு சென்ட்ரலில் கங்கா கௌரி வெளியானது என்று சொன்னால் கூட அதனால் நீதி அங்கே வெளியாகவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமலே இருந்தது. இத்தனை விளக்கமாக சொல்ல காரணம் அதன் பிறகு பெரிய படமாக மார்ச் 24-ந் தேதி சென்ட்ரலில் பாரத விலாஸ் வெளியானது, எனவே நீதி சென்ட்ரலில் வெளியாகியிருந்தால் 107 நாட்கள் ஓடியிருக்குமே என்ற ஆதங்கம்தான்

இதற்கு நடுவே நடிகர் திலகத்தின் பல புதிய படங்களும் வேகமாக வளர்ந்து வரும் செய்திகள் வந்துக் கொண்டேயிருந்தன. ஹீரோ 72 ஷூட்டிங் ஆரம்பமாகிவிட்டது. என்னைப் போல் ஒருவன், ரோஜாவின் ராஜா, கெளரவம், ராஜபார்ட், சித்ரா பௌர்ணமி, ஜெகபதி ஆர்ட் பிக்சர்ஸ் படம் [எங்கள் தங்க ராஜாவிற்கு முன்பாக வேறு ஒரு கதை படமாக்கப்பட்டு அதில் நடிகர் திலகம் ஒரு டாக்டர் ரோலிலும் சௌகார் ஒரு முக்கியமான பாத்திரத்திலும் நடித்து வந்தனர். பின்னர் அந்த கதை கைவிடப்பட்டு எங்கள் தங்க ராஜா எடுக்கப்பட்டது] . .

மன்னவன் வந்தானடி, ஜெயந்தி பிலிம்ஸ் படம், குகநாதனின் அன்னை பூமி, முக்தா பிலிம்ஸ் படம், கிழக்கும் மேற்கும், புனித பயணம் கருப்பு வெள்ளை படங்களான பொன்னுஞ்சல், தாய் முதலிய படங்கள் பற்றிய செய்திகள் பரவலாக வெளிவந்துக் கொண்டிருந்தது..

நீதி வெளியாவதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது டிசம்பர் முதல் வாரத்தில் நடந்த இரண்டு அரசியல் நிகழ்வுகள் மீண்டும் தமிழகத்தில் பதட்ட நிலையை உருவாக்கின.

(தொடரும்)

அன்புடன்