PDA

View Full Version : கதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன்



RAGHAVENDRA
4th November 2014, 10:09 PM
பொம்மை மாத இதழில் தொடராக வெளிவந்து, பின்னர் புத்தகமாக பதிப்பிக்கப்பட்ட நடிகர் திலகத்தின் கதாநாயகனின் கதை 05.10.2014 ஞாயிறு தொடங்கி தினமலர் வார மலரில் தொடராக இடம் பெறுகிறது. தினமலர் வாரமலர் கிடைக்கப் பெறாத நம் ரசிக நண்பர்களின் வசதிக்காக இங்கே மீள்பதிவு மற்றும் இணைப்பு தரப்படுகிறது.

தினமலர் வாரமலர் கிடைக்கப் பெறும் வசதியுள்ள நண்பர்கள் வாங்கிப் படிக்குமாறு அன்புடன் வேண்டப்படுகிறார்கள்.

கதாநாயகனின் கதை - 1

தினமலர் வாரமலர் 05.10.2014




http://img.dinamalar.com/data/uploads/E_1412450935.jpeg

வி.சி.கணேசனாக இருந்து, நடிகர் திலகம் சிவாஜி கணேசனாக சிகரம் தொட்ட சுயசரிதை இது. சிவாஜி கணேசன், 'பொம்மை' இதழில் எழுதிய கட்டுரை மற்றும் பேட்டிகளின் தொகுப்பு; நுாலாகவும் வெளிவந்தது. சாதனை புரிய எவ்வளவு உழைக்க வேண்டும் என்ற படிப்பினையை, இத்தொடர் தரும் என்பதில் சந்தேகமில்லை.

விழுப்புரம், சின்னையா மன்றாயரின் மகனான என்னை, 'சிவாஜி' கணேசனாக்கி, 'பராசக்தி' கணேசனாக உருவெடுக்கச் செய்து, 'நடிகர் திலகம்' கணேசன் என அன்புடன் அழைத்து, பத்மஸ்ரீ விருது பெரும் கணேசனாக மாற்றியது யார்?
கலை உள்ளம் கொண்ட நீங்கள் தான்! திருச்சி, சங்கிலியாண்ட புரத்து, என் இளமைக் காலத்து வாழ்க்கை, இப்போது நினைவுக்கு வருகிறது. அது ஒரு வகை அலாதியான வாழ்க்கை! சங்கிலியாண்டபுரத்தில் எனக்கென்று தனியாக, ஒரு நண்பர்கள் கூட்டம் உண்டு.
ஊருக்குள் எங்களுக்கு ஒரு பட்டப்பெயர் உண்டு. அது, 'துஷ்டர்கள்!' ஆக, சின்ன வயதிலேயே எனக்கும், பட்டத்திற்கும் ஒரு தனிப்பிடிப்பு உண்டு.
வீதியிலே நாங்கள் விளையாடிக் கொண்டிருப்போம். திடீரென்று ஏதேனும் ஒரு அழுகுரல் கேட்கும். 'யாரடிச்சா... பாவம் பையன் அழறானே...'என்று கேட்டால், 'கணேசன் அடிச்சிட்டான்...' என்று, பல குரல்கள் ஒலிக்கும். அந்த அளவுக்கு, அப்போது என் கை ஓங்கி, தவறு... நீண்டிருந்தது.
அடி வாங்கிய சிறுவனின் தாயோ, அக்காவோ என் தாயாரிடம், என் வீரத்தை பற்றி புகார் சொல்வர்.
என் தாயார் நான் வீடு திரும்புவதை எதிர்பார்த்து, கையில் வெங்காயத்துடன் ஆவலாக காத்திருப்பார்.
வீட்டிற்குள் நுழைந்ததும் நுழையாததுமாக, 'வாடா மகனே... ஏன்டா என் வயித்தெரிச்சலைக் கொட்டிக்கறே...' என்று அன்புடன் அழைத்து, கையில் மறைத்து வைத்திருந்த வெங்காயத்தை, என் தந்தையின் துணையுடன், கண்களில் பிழிந்து விடுவார்.
துடிப்பேன்... கதறுவேன்... கண்ணீர் வடிப்பேன்.
'இனிமே இப்படிச் செய்ய மாட்டியே... வீண் வம்புக்கு போக மாட்டியே...'என்று, முதுகிலும் அன்பளிப்பு வழங்குவார்.
இவ்வளவு வாங்கியும், நான் திருந்தினேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை.
மறுநாளே என் துஷ்டத்தனம் மீண்டும் தலைதுாக்க ஆரம்பித்து விடும்.
இதனாலேயே என் பெற்றோர் எங்காவது வெளியே செல்வதென்றால், என்னை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டே செல்வர். சில சமயம், வெளிக்கதவை பூட்ட மறந்து, தாழ்ப்பாள் மட்டும் போட்டு விட்டு போய் விடுவர். அதைத் தெரிந்து, நானும் கதவை சாமர்த்தியமாக ஆட்டி அசைத்து, தாழ்ப்பாளை விடுவித்து, மதில் சுவரை தாண்டி குதித்து வெளியேறி விடுவேன்.
'கணேசன் வந்துட்டான் டோய்...' என்று என் சகாக்கள் மகிழ்ச்சிக் குரல் எழுப்புவர்; அதைக் கேட்கும் போது, பெருமையாக இருக்கும்.
என் பெற்றோர் வீடு திரும்பியதும், நான் வீட்டில் இல்லாததைக் கண்டுபிடித்து விடுவர். இரவு வீட்டிற்கு வரும் போது, வழக்கம் போல வெங்காயம் காத்திருக்கும்.
அந்த அளவுக்கு படு துஷ்டை நான்.
ஒரு சமயம் என் அண்ணன் தங்கவேலுக்கும், எனக்கும் ஏதோ தகராறு வந்து விட்டது.
'வாடா வா... இன்னிக்கு ராத்திரி உன்ன அடிச்சுக் கொன்னுடறேன் பாரு...' என்று ஒரு தடியை துாக்கி வைத்துக் கொண்டேன்.
பயந்து போய் அம்மாவிடம் தஞ்சம் அடைந்து விட்டார் என் அண்ணன்.
'பாவிப்பய, உதவாக்கரை... செஞ்சாலும் செஞ்சுப்புடுவான்...' என்று, அன்றிரவு முழுவதும் துாங்காமல், என் அண்ணன் பக்கத்திலேயே படுத்திருந்தார் அம்மா.
ஆனால், நானோ தடியை பக்கத்தில் வைத்துக் கொண்டே நிம்மதியாக துாங்கி விட்டேன்.
அப்போது, ஊர்க்காவல் என்று ஒரு வழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. திருடர்கள் வராமல் தடுக்க, நான்கு வீட்டுக்கு ஒருவராக சிலர் சேர்ந்து, இரவு நேரத்தில் தெருவில் ரோந்து வருவது வழக்கம்.
திருடனை சமாளிக்க வேண்டுமென்றால், முரட்டுத்தனம் உள்ளவர்கள் தானே வேண்டும்? என்னிடம் அப்போது அது தாராளமாக இருந்ததால், இந்த ரோந்து காவல் குழுவில் நானும், என் வீட்டின் சார்பில் கலந்து கொண்டேன்.
எங்களுக்கு சின்ன வயதாக இருக்கலாம்; ஆனால் முரட்டுத்தனமும், பிடிவாதமும் எக்கச்சக்கமாக இருந்தன.
ஏதாவது பாட்டு பாடியோ, கோஷமிட்டபடியோ வீதியை சுற்றி வருவோம்.
சில சமயங்களில் விளையாடவும் செய்வோம்.
'பச்சை இலை கொண்டு வருவது' என்று ஒரு விளையாட்டு; 'கண்ணாமூச்சி' விளையாட்டைப் போன்றது.
'இன்ன இடத்தில், இன்ன மரத்தில் இருந்து, பத்து இலை பறித்து வா...' என்று ஒருவனிடம் சொல்வர். அவன் போவான்; அவன் கூடவே மற்றவர்களும் போவர். அவன் மரத்தில் ஏறி இலை பறிக்கும் நேரத்தில், மற்றவர்கள் ஓடிப் போய் ஒளிந்து கொள்வர். சொன்னபடி இலையை பறித்து திரும்பும் அவன், யாரை முதலில் பார்த்து பிடித்து விடுகிறானோ, அவன் தோற்றவனாகி விடுவான். தோற்றவன் இலை பறிக்க வேண்டும்.
இந்த விளையாட்டின் போது, சில சமயம் வேண்டுமென்றே, 'சுடுகாட்டு பக்கத்தில் உள்ள மரத்திலிருந்து இலை பறித்து வா...' என்று சொல்வர். ஒருசமயம் நானே இம்மாதிரி போய் பறித்து வந்திருக்கிறேன்.
இம்மாதிரியான விளையாட்டுகள், சில சமயங்களில் விபரீதமாகவும் முடியும்!
ஒரு நாள், விளையாடிக் கொண்டிருந்த போது, ராஜு என்ற நண்பன், ஏதோ ஆத்திரத்தில் பேனாக் கத்தியால், என் முதுகில் குத்தி விட்டான். அந்தத் தழும்பு, இப்போதும் என் முதுகில் இருக்கிறது.
என் தாயார் என்னை கண்டிக்கும் போது, சில நேரம் எனக்கு கோபம் வந்து விடும்.
'வீட்டை விட்டு போய் விடுகிறேன்...' என்று சொல்லி, ஆத்திரத்துடன் வெளியே கிளம்பி விடுவேன்.
எங்கே போவேன் என்று நினைக்கிறீர்கள்... மலைக்கோட்டை பிள்ளையார் கோவிலில் போய் உட்கார்ந்து விடுவேன் அல்லது வேறு எங்காவது மரத்தடிக்கு போய் விடுவேன்.
மாலை வரும்; என் வீராப்பை விட்டு, 'ஜம்'மென்று வீட்டுக்குள் காலடி எடுத்து வைப்பேன்.
என் தாயார் என்னைப் பார்த்ததும், பார்க்காதது போல நடிப்பார்.
எந்தப் பெற்றோருக்கும், தன் மகன் நன்றாக படித்து பெரிய உத்தியோகத்தில், சீரும் சிறப்புமாக இருப்பதைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவது இயற்கை.
என் பெற்றோருக்கும், அந்த ஆவல் இருந்தது.
திருச்சியில், ஒரு கிறிஸ்துவப் பள்ளியில் என்னை சேர்த்து விட்டனர். அப்போதெல்லாம், நான் அருமையாகப் பாடுவேன். 'ஞான சங்கீதப்பன் மணி மண்டபம்...' என்று, நான் பாட ஆரம்பித்து விட்டால், அதைக்கேட்டு ரசிக்க, என்னைச் சுற்றி ஒரு கூட்டமே நிற்கும். பள்ளியில் படிக்கும் போதும், எனக்கு பாட்டில்தான் நிறைய மதிப்பெண் கிடைக்கும். அதில் தான், முதலில் வருவேன்; மற்றவற்றில் சுமாரான மதிப்பெண்கள் தான் கிடைக்கும். கணக்கிலோ பெரிய பூஜ்யம்!
'காட் சேவ் தி கிங்' (கடவுள் அரசரைக் காக்கட்டும்) என்ற ஆங்கில பாட்டுத்தான், அப்போது பள்ளியில் கடவுள் வணக்கப்பாட்டு. என் குரலில் இனிமையைக் கண்ட ஆசிரியைகள், என்னையும் கடவுள் வணக்கம் பாடும் மாணவர்கள் கோஷ்டியில் சேர்த்து விட்டனர்.
என் வீட்டுக்கும், பள்ளிக்கும் குறைந்த துாரமோ அல்லது நீண்ட துாரமோ அது எனக்கு தெரியாது. ஆனால், படிப்புக்கும், எனக்கும் வெகு துாரம் என்பது உடனே தெரிந்துவிட்டது.
அந்த பதினைந்து மாத பள்ளி வாழ்க்கைக்கு பின், என்ன நடந்தது...

— தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை - 26.



இத்தொடர் இடம் பெற்றுள்ள தினமலர் வாரமலர் இணைய தளப்பக்கத்திற்கான இணைப்பு -

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22182&ncat=2

RAGHAVENDRA
4th November 2014, 10:13 PM
கதாநாயகனின் கதை - 2

தினமலர் வாரமலர் - 12.10.2014




http://img.dinamalar.com/data/uploads/E_1412938711.jpeg

என் பள்ளிக்கூடப் படிப்பு, ஒரு முடிவுக்கு வந்தது. என் தந்தையார் பார்த்து வந்த ரயில்வே வேலை போய்விட்டதால், ஒரு பஸ் கம்பெனியில், குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வந்தார்.
அந்தக் குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்த, என் தாயார் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. எனக்கும், அப்போதுதான் குடும்ப கஷ்டங்கள் ஓரளவுக்கு தெரிய ஆரம்பித்தன. அதனால், சீக்கிரம் பெரியவனாகி, கை நிறைய சம்பாதித்து, என் தாயாரின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்று மனதில் எழுந்த எண்ணம், வெறியாகமாறி சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன்.
அதுவும், 'கட்ட பொம்மன்' நாடக உருவில் வந்தது.
ஒரு நாள், நான் தங்கியிருந்த தெருவிலேயே, 'கட்டபொம்மன்' கூத்து நடைபெற்றது. இதைக் கூத்திலும் சேர்க்க முடியாது; நாடகம் என்றும் சொல்ல முடியாது. இரண்டும் கலந்த ஒரு ஆட்டம்.
இந்த கட்ட பொம்மனைப் பார்த்ததும் தான், என் மனதில், நாமும் இம்மாதிரி நடித்தால் என்ன என்ற எண்ணம் துளிர்விட ஆரம்பித்தது.
சக்கரபாணி என்ற தோழனின் உதவியால், பொன்னுசாமி பிள்ளை நடத்தி வந்த மதுரை ஸ்ரீ பால கான சபையில் சேர்ந்தேன்.
இதில், பல நாடகங்களில், பல்வேறு வேடங்களை ஏற்று நடித்தேன். ராமாயண நாடகத்தில், முற்பகுதியில், அழகு சுந்தரியான சீதையின் கதாபாத்திரத்திலும், பிற்பகுதியில், சூர்ப்பனையாகவும், கடைசி நாட்களில், இந்திரஜித்தாகவும் தோன்றுவேன்.
நான் நாடகக் கம்பெனியில் சேர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு பின், ஒரு சமயம் பொள்ளாச்சியில், 'இழந்த காதல்' நாடகம் நடந்து கொண்டிருந்தது. என்னைப் பார்க்க, யாரோ ஒருவர் வந்திருப்பதாக கூறினர். யாரோ, என்னவோ என்று பதற்றத்துடன் போனேன். என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.
என் தாயார், ஒரு கையில் பையும், மறுகையில் ஒரு சிறு பையனையும் பிடித்தபடி நின்று கொண்டிருந்தார். என் தாயாரை, ஆறு ஆண்டுகளுக்குப் பின் பார்த்த மகிழ்ச்சியில், 'அம்மா' என்று கூவி, அவரை ஓடிப்போய் அணைத்துக் கொண்டேன். தன் கூட வந்த பையனை சுட்டிக்காட்டி, 'உன் தம்பிடா... சண்முகம்ன்னு பேர்; நீ வந்ததுக்கப்பறம் பிறந்தவன்டா...' என்றார்.
'அடேய் தம்பி...' என்று அவனைத் தூக்கி, ஒரு சுற்றுச் சுற்றினேன், அவன் பயந்து விட்டான்.
என் தாயார், முறுக்கு, சீடை, பலகாரங்கள் எல்லாம் கொண்டு வந்திருந்தார். தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்ததால், முதலாளியிடம் சொல்லி பண்டிகைக்காக, என்னை கையோடு ஊருக்கு அழைத்து வந்துவிட்டார். நான் சம்பாதித்த பணத்திலிருந்து வெடி வாங்கி வெடித்தேன். இன்றும் தீபாவளி பண்டிகை வரும்போதெல்லாம், இந்தச் சம்பவம் நினைவுக்கு வரும்.
அந்தக் காலத்தில், கம்பெனி வாழ்க்கை என்பது குருகுல வாசம் போன்றது.
ஒவ்வொரு பையனுக்கும் ஒரு பெட்டி, படுக்கை இருக்கும். காலையில் எழுந்ததும் படுக்கையைக் சுருட்டி, பெட்டியின் மேல் வைத்து, பின், குளித்துவிட்டு வர வேண்டும். அதன்பிறகு, சிற்றுண்டி, காபி தருவர். எல்லாம் முடிந்த பின், நாடக பாடங்களைப் கேட்பர்.
எல்லாருக்கும் எல்லா நாடகங்களின் பாடமும் சொல்லித் தரப்படும்.
பகல் மணி, 12:30 க்கு பூஜை நடக்கும்; இதில், எல்லாரும் கலந்து கொள்வோம். ஒரு மணிக்கு சாப்பாடு. பின்னர் தூங்கப் போக வேண்டும். வலுக்கட்டாயமாக தூங்க வைத்து விடுவர்.
மாலை, 4:00 அல்லது 4:30 மணிக்கு காபி, பலகாரம் தருவர். கொஞ்ச நேரம் பாடம் கேட்பர். பின் கொஞ்சம் ஓய்வு இருக்கும். இரவு மணி, 7:30க்கு சாப்பாடு, உடனே, நாடகம் நடிக்க தியேட்டருக்குப் போய் விடுவோம். நாடகம் இரவு, 10:00 மணிக்கு ஆரம்பமாகும்; முடிய இரவு இரண்டாகும். சில சமயம், அதற்கு மேலும் ஆகும்; இதுதான் கம்பெனி வாழ்க்கை.
கம்பெனியில் எல்லாரும் ஒன்றாகப் பழகுவோம். ஒரே குடும்பத்தில் இருப்பதைப் போலவே நினைத்து வந்தோம். பாடம் சரியாகச் சொல்லாவிட்டாலோ, ஏதாவது தப்புத்தண்டா செய்து விட்டாலோ, அடி, உதை நிச்சயம்! கம்பெனியில், என்னை மாதிரி உதை வாங்கியவர்கள் யாரும் கிடையாது. ஏன், பெரியவனாகியும், அதாவது, 1944ல் கூட, கே. சந்தானத்திடம் உதை வாங்கியிருக்கிறேன். அவர், என்னை அடித்த அடியில், பிரம்பு இரண்டாக உடைந்து விட்டது என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.
ஆனால், இம்மாதிரி வாங்கிய அடிகளெல்லாம் பின்னால் நான் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு உதவியாக இருந்தன. பெரியவர்களிடம் இம்மாதிரி அடி, உதை வாங்கியதெல்லாம் எனக்கு நிரம்பவும் பயனளித்தன. அப்படி அடி வாங்கிய சம்பவங்களை நினைக்கும் போது, நான் தவறை செய்யாமலிருக்க, அவை எச்சரிக்கையாக நிற்கின்றன.
தெரியாமலா பெரியவர்கள் சொன்னார்கள், 'அடி உதவுவதைப் போல அண்ணன் தம்பி கூட உதவ மாட்டார்கள்...' என்று!
ஆனால், எனக்கு அடியும் உதவியிருக்கிறது, என் அண்ணனும், தம்பியும் கூட இப்போது பேருதவியாக இருந்து வருகின்றனர். இதுவும் நான் பெருமைப் பட வேண்டிய விஷயம் தான்!
கட்டபொம்மனைப் பற்றியோ, ஆங்கிலேயர் ஆட்சி பற்றியோ, சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியோ அதிகமாக புரிந்து கொள்ள முடியாத சிறு வயது எனக்கு. ஆனாலும், நாடகம் நடக்கிறது அதைப் பார்க்கப் போகிறோம் என்ற பொதுவான ஆவலினால், இந்த நாடகத்தைப் பார்த்தேன். இந்த நாடகம்தான், என் மனதில் ஒரு புதிய எண்ணத்தை எழுப்பி, நடிப்பு துறையில் என் வாழ்க்கையை அமைக்க அஸ்திவாரமாக அமைந்தது.
ஆம்... அந்த நாடகத்தைப் பார்த்ததும் தான் என்னுள்ளத்தில், நானும் ஒரு நடிகனாக வேண்டும் என்ற ஆவல் மொட்டு விட்டது.
சாதாரணமாக சொல்வதுண்டு... ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை உள்ளுக்குள் மறைந்து இருக்கிறது; அதை, தூண்டி விடக் கூடிய சம்பவமோ, சந்தர்ப்பமோ கிடைக்கும்போது, அந்தத் திறமை வெளிப்பட்டு விடுகிறது என்று சொல்வர்.
என்னைப் பொறுத்தவரை என்னிடம் திறமை இருக்கிறதோ இல்லையோ, நடிப்புத் துறைக்கு என்னை இழுத்து வர, நடிப்புத் துறையில் என்னை ஈடுபடச் செய்ய, அன்று நான் பார்த்த கட்டபொம்மன் நாடகம் தான் தூண்டுகோலாக அமைந்தது. அந்நாடகம், என் மனதில் பசுமையாகப் பதிந்து விட்டதுடன், அந்நாடகத்தின் மீது ஒரு தனிப்பற்றுதலை உண்டாக்கி, தேசிய உணர்வையும் ஏற்படுத்திவிட்டது.
பல ஆண்டுகளுக்குப் பின், நான் திரையுலகில் அறிமுகமாகி, ஓரளவுக்கு நடிகனாக வந்தபோது, அந்தப் பழைய நினைவிலிருந்து மீள முடியாத காரணத்தினாலும், அதன் பேரில் ஏற்பட்ட தணியாத ஆர்வத்தாலும் தான், கட்டபொம்மன் சரித்திர நாடகத்திலும், திரைப் படத்திலும் நடித்தேன்.
என் குடும்பத்தில், எனக்கு முன் யாருமே நடிப்புத் துறையில் ஈடுபட்டிருக்கவில்லை. என் தந்தையார், ரயில்வேயில் பணி புரிந்தார்; என் பாட்டனார் இன்ஜினியராக இருந்தவர். நான் பிறந்த அன்றே, என் தந்தையார், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக, கைது செய்யப்பட்டு, சிறைக்கு அழைத்துச் செல்லப் பட்டுவிட்டார்.
எங்கள் குடும்பம் விழுப்புரத்திலிருந்து, திருச்சிக்கு இடம் பெயர்ந்தது. திருச்சியிலும் நாங்கள் நிரந்தரமாகத் தங்க முடியவில்லை. தஞ்சாவூர் திருச்சி என்று மாறி மாறி குடித்தனத்தை நடத்த வேண்டி வந்தது. இதனால், எந்த ஒரு பள்ளிக் கூடத்திலும் தொடர்ந்து படிக்க முடியாத நிலை எனக்கு ஏற்பட்டது. தவிர, குடும்பத்தில் சிரமமான நிலையும் வளர ஆரம்பிக்கவே, ஏதாவது, தொழில் செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நிலைக்கு நானும் விரட்டப்பட்டேன்.
அந்த வயதில், நான் படித்திருந்த அரை குறைப் படிப்புக்கு என்ன வேலை கிடைக்கும்?
— தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.




தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22265&ncat=2

RAGHAVENDRA
4th November 2014, 10:16 PM
கதாநாயகனின் கதை - 3

தினமலர் வாரமலர் 19.10.2014



http://img.dinamalar.com/data/uploads/E_1413462791.jpeg

நாடகக் கம்பெனியில் சேர்ந்தேன். குறைந்த சம்பளம்தான்; ஆனால், என் மனதுக்கு நிறைவான வேலை.
வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும், ஒரு லட்சியம் இருக்கும். கல்லூரியில் காலடி எடுத்து வைக்கும் ஒரு மாணவன், எதிர்காலத்தில் ஒரு வக்கீலாகவோ, டாக்டர் ஆகவோ, இன்ஜினியராகவோ, கணக்கராகவோ இப்படித் தனக்கு ஏற்ற ஒரு உத்தியோகத்தை மனதில் வைத்து, அதற்கேற்ற பாடத்தைத் தேர்ந்தெடுத்து படிக்கிறான். படித்துப் பட்டம் பெற்றதும், அந்த துறையில் பெரும் புகழ் பெற வேண்டும் என்பது அவன் லட்சியமாகி விடுகிறது.
ஒரு சிலர்தான் இதற்கு விதிவிலக்கு. அவர்களது உள்ளத்தில் ஊறிக் கொண்டிருக்கும் ஆர்வம் மற்றும் திறமை காரணமாக, வேறு ஒரு தொழிலில் ஈடுபட வேண்டிய அவசியத்தை, சூழ்நிலை உருவாக்கித் தந்து விடுகிறது.
நடிப்புத் துறையில் சிறு வயதிலேயே ஈடுபடும் பெரும்பாலோருக்கு, அவர்களது மனதின் அடித் தளத்தில் ஒரு ஆசை பூத்துக் கிடக்கும்.
அதை, ஆசை என்று சொல்வதை விட லட்சியம் என்றே சொல்லலாம்.
அது தான், கதாநாயகன் வேடம்! நடிப்புத் துறையில் பதவி உயர்வின் உச்சமே, கதாநாயகன் வேடம்தானே!
'என்றாவது ஒரு நாள், நாம் கதாநாயகன் வேடம் போடப் போகிறோம், கதாநாயகனாக மாறப் போகிறோம்' என்ற ஆசை, அவர்களது உள்ளத்தில் ஊறிக் கொண்டே இருக்கும்.
சின்னஞ் சிறுவனாக நாடகக் கம்பெனியில் நுழைந்து, அங்கு, எடுபிடி வேடம் போட்டு கதாநாயகனாக வருவதற்குள், எப்படியெல்லாம் ஒரு நடிகன் பாடுபட வேண்டியிருக்கிறது, எத்தனை வேடங்களில் நடிக்க வேண்டியிருக்கிறது, என்னவெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.
உண்மையிலேயே நாடக மேடைதான், ஒரு நடிகனுக்கு நல்ல பயிற்சி சாலை. அவன் பலதரப்பட்ட பாடங்களை கற்றுத் தேர்ச்சி பெற உதவும் பல்கலைக் கழகம்.
வேறுபட்ட வேடங்களை ஏற்று நடிக்கும்போதும், ஒவ்வொரு ஊர்களாக முகாம் மாறி, பலதரப்பட்ட மனிதர்களைச் சந்திக்கும்போதும், வெவ்வேறு சூழ்நிலைகளில் அவன் வளரும் போதும், அவன் பெறும் உலக அனுபவம் பெரிது. இதனால் தான், 'பாய்ஸ் கம்பெனி'யிலிருந்து வரும் எந்த நடிகரும், எந்தப் பாத்திரத்தையும் ஏற்று திறமையாக நடித்துக் காட்ட முடிந்தது.
நான் சிறுவனாகத்தான் நாடக மேடையில் பயிற்சி பெற நுழைந்தேன்.
முதன் முதலாக நான் மேடைக்கு சென்று, மக்கள் முன் நின்றபோது, எனக்கு எப்படி இருந்தது, நான் மேடையில் ஏற்று நடித்த முதல் வேடம் என்ன என்பதும் என் நினைவில் நிலைத்துவிட்டது.
அந்த முதல் வேடத்திலிருந்து, படிப்படியாக நான் போட்டு வந்த வேடங்கள் எத்தனை...
பெண் வேடம் போட்டுக் கொள்ள வேண்டிய அவசியம் கூட வந்ததே... அது ஏன், எப்படி என்ற விவரங்களும் என் ஞாபகத்தில் அப்படியே நிழலாடுகின்றன.
இத்தனை வேடங்களையும் ஏற்று, கடைசியாக கதாநாயகன் வேடத்தை ஏற்று, நடிக்க வந்த போது, எனக்கு ஏற்பட்ட உணர்ச்சி என்ன, நான் முதன் முதலாக கதாநாயகனாக ஏற்று நடித்த வேடம் எது, கதாநாயகனாக மாறியது எப்போது என்பதும், என் நினைவில் அப்படியே இருக்கிறது.
நான் ஆரம்பத்தில் போட்ட அந்தச் சின்னஞ்சிறிய வேடத்திலிருந்து, கதாநாயகனாக வேடம் போட்டு நடித்தது வரை, எனக்கு நாடக மேடையிலும், நடிப்புத் துறையிலும் ஏற்பட்ட அனுபவங்களைத்தான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.
அது தான், 'கதாநாயகனின் கதை!'
கட்டபொம்மன் நாடகத்தைப் பார்த்த அன்றிரவு, எனக்கு தூக்கமே வரவில்லை. இரவு நெடுநேரம் வரை அந்த நாடகத்தைப் பற்றிய சிந்தனைகள், அடுக்கடுக்காக மனதில் வந்து கொண்டிருந்தன.
'வானம் பொழிகிறது... பூமி விளைகிறது... உனக்கு ஏன் நான் கப்பம் கட்ட வேண்டும்...' என்று, தன்மானத்தைத் தன் குரலாக்கி, கட்டபொம்மன் இடி முழக்கம் செய்த போது, சபையிலே எழுந்த கைதட்டல்கள் என் காதில், ரீங்காரமிட்டன.
கட்டபொம்மனாக நடித்த நடிகருக்கு கிடைத்த பாராட்டுதல்களை நினைத்து, 'ஆஹா... நடிகனாகி விட்டால் எவ்வளவு கைதட்டல்களும், பாராட்டும் கிடைக்கும்...' என்று நினைத்தேன்.
என் பிஞ்சு மனதில் ஆசைகள் எழ எழ, நாடக மேடையின் பக்கமாக நெருங்கி வந்து கொண்டிருந்தேன். நடிகனாக வேண்டும் என்ற ஆவல் என்னைத் துரத்த ஆரம்பித்தது.
நான் இந்த நாடகக் கம்பெனியில் சேர்ந்த போது, காக்கா ராதாகிருஷ்ணன் கம்பெனியில் இருந்தார். கம்பெனியில் இருந்த எம்.ஆர்.ராதா அண்ணன் சினிமாவில் நடிப்பதற்காக அப்போது போயிருந்தார். ரொம்ப நாட்கள் கழித்து அவர் வந்தார்.
நாடகக் கம்பெனியில் சேர்ந்த முதல் சில நாட்கள், நான் அங்கு நடப்பவைகளை பொதுப்படையாகக் கவனித்து வந்தேன். சில நாட்களுக்குப் பின், எனக்குப் பாடம் கொடுத்து படிக்கச் சொல்லியும், சின்ன வேஷம் கொடுத்து நடிக்கவும் கூறினர்.
வாத்தியார் சொல்லிக் கொடுத்ததை, எந்த விதமான தப்பும் செய்யாமல், அவர் சொல்லிக் கொடுத்தபடியே நடித்துக் காட்டினேன். அப்போது, நான் என்னுள் இருந்து நடிக்கவில்லை; என் ஆசிரியர் தான் உள்ளிருந்து நடித்தார் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.
என் மீது ஏற்பட்ட நம்பிக்கையினால், நான் கம்பெனியில் சேர்ந்த பத்தாவது நாளிலேயே, நாடகத்தில் நடிக்க எனக்கு ஒரு வேடம் கொடுத்தனர்.
என்ன வேடம் தெரியுமா? சீதை வேடம். ஆம், நான் வாழ்க்கையில் போட்ட முதல் வேடம், பெண் வேடம் தான். அதுவும், நாடகம் முழுவதும் வரும் சீதை வேடம் அல்ல, கன்னி சீதையின் வேடம். அதாவது, கன்னிகா மாடத்தில் நின்ற சீதை, ராமனைப் பார்த்து, அவர் வில்லை ஒடித்து மணக்கும் வரை உள்ள சீதை.
மூன்றே காட்சிகள் தான் வரும்.
'யாரென இந்தக் குருடனை அறியேனே... என் ஆசைக்கினிய என் முன்னே நின்றவன்...' என்று சீதை பாடுவாள்.
கம்பெனியிலே, 'மேக்-அப்' போடுவதற்கென்று தனியாக ஒப்பனைக் கலைஞர்கள் இருக்க மாட்டார்கள். நடிகர்களே தங்களுக்குப் போட்டுக் கொள்வர். நடிப்போடு, கூடவே, 'மேக்-அப்' போட்டுக் கொள்வதையும் சொல்லிக் கொடுத்து விடுவர். நடிகர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் போட்டு விடுவதும் உண்டு.
சில சமயங்களில் வாத்தியாரும் போட்டு விடுவார்.
நாடகம் நடக்கும் போது, வாத்தியார் மேடையின் பக்கவாட்டில் வந்து நின்று கொள்வார். முக்கியமான வேடமாக இருந்தால், அவர் தாளம் போட்டு தட்டிக் காண்பிப்பார். அவரைப் பார்க்கப் பார்க்க அப்படியே மனப்பாடம் செய்திருந்த வசனமும், சொல்லிக் கொடுத்த நடிப்பும் வந்துவிடும்.
நாடகத்தில் நடிக்காதவர்களும், பக்கவாட்டில் வந்து நின்று கொண்டு கவனிப்பர், கவனிக்க வேண்டும். இது தவிர, நாடகத்தில் பங்கு எடுத்துக் கொள்ளாதவர்கள், திரைக்குப் பின்னால், சீன் தள்ளுவது, காட்சிக்கான சாமான்களைப் பொருத்தமான இடத்தில் வைப்பது போன்ற வேலைகளையும் செய்வர். நீண்டநாள் அனுபவம் வாய்ந்த சில பெரியவர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் உள்ளே எங்கேயாவது இருப்பர்.
சீதையாக நான் அலங்கரிக்கப்பட்டுவிட்டேன்.
மனதிற்குள்ளேயே, கடவுளை வேண்டிக் கொண்டேன். ஏதேனும் உளறிக் கொட்டி, கெட்ட பெயர் வாங்கிவிடக் கூடாதே என்ற ஒரு வகை பயம் மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
நாடகம் ஆரம்பமாயிற்று, திரை தூக்கப்பட்டுவிட்டது. நான் மேடைக்குள் செல்ல வேண்டிய நேரம் வந்தது.
கடவுளையும், என் குருநாதரையும் மனதில் நினைத்தபடி மேடைக்குள் நுழைந்தேன்.
நான் போட்டிருந்த வேடம், என் பாவனை, என் வேடத்திற்கு வேண்டிய உணர்ச்சி மற்றும் நடிப்பு இவை மட்டும் தான் என் கவனத்திலும், கண் முன்னும் வந்து நின்றன.
எதிரே நாடகம் பார்க்க வந்த ரசிகர்கள், என் கண் முன் தெரியவில்லை. மூன்று காட்சிகள் முடிந்தன. நான் உள்ளே வந்தேன்.
'ரொம்ப நல்லா செஞ்சுட்டேடா...' என்று, என் வாத்தியார் சின்ன பொன்னுசாமி, இரண்டு முறை முதுகில் தட்டிக் கொடுத்தார்.
எனக்கு இமயத்தையே வென்று விட்ட எக்களிப்பு; நூற்றுக்கு நூறு வாங்கிவிட்ட மாணவனின் நிலை.
கம்பெனியில் சேர்ந்த பின், இரண்டாவது முறையாக அன்றிரவும் நான் தூங்கவில்லை. என் மனதில் ஆயிரம் கனவுகள்; ஆயிரம் கற்பனைகள்.
கம்பெனி திருச்சியில் தங்கியிருந்த கடைசி நாட்களில் தான் நான் போய்ச் சேர்ந்தேன். நான் சேர்ந்த சில நாட்களில், கம்பெனி திண்டுக்கல்லுக்கு முகாம் மாறியது.
திண்டுக்கல்லில் முகாமிட்டபோது தான், ஒரு நாள் வாத்தியார் என்னைக் கூப்பிட்டார்.
'உனக்கு பிரமோஷன் கொடுத்திருக்கிறேன்...' என்று கூறி, அந்தப் பிரமோஷன் என்ன என்பதை கூறினார். அதைக் கேட்டு, நான் அப்படியே திகைத்து நின்றுவிட்டேன்.
— தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.


தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22365&ncat=2

RAGHAVENDRA
4th November 2014, 10:18 PM
கதாநாயகனின் கதை - 4

தினமலர் வாரமலர் 26.10.2014



http://img.dinamalar.com/data/uploads/E_1414138708.jpeg

என்னுடைய திகைப்புக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, இவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு, ' பிரமோஷன்' கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை; இரண்டு, 'பிரமோஷன்' கிடைத்தால், அது ஆண் வேடமாகத்தான் இருக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், எனக்கு கிடைத்ததோ பெண் வேடம்; அதுவும் கொஞ்சம் பெரிய வேடம் என்பது தான் திகைப்புக்குக் காரணம்.
பெரிய வேடம் என்றால், என்ன வேடம்?
சீதையாக இருந்த நான், சூர்ப்பனகையாக்கப் பட்டேன்!
ராமாயணத்தில் சீதையைவிட, முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமல்ல சூர்ப்பனகையின் வேடம்!
ஆனால், என்னைப் பொறுத்தவரை, சீதையை விட, சூர்ப்பனகையே முக்கியமானவராகக் காட்சி தந்தார். காரணம், அதுவரை, ராமாயணத்தில் நான் போட்டது, கன்னி மாடத்து சீதை; மூன்றே காட்சிகள்தான் வரும் என்று முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். இந்த கதாபாத்திரத்தில் திறமையைக் காட்டவோ, பார்வையாளர்களை கவரவோ அதிக சந்தர்ப்பம் இல்லை.
ஆனால், சூர்ப்பனகையின் வேடம் அப்படி அல்ல, அழகு சுந்தரியாக அவள் வந்து, லட்சுமணனை மயக்க ஆடி, பாட வேண்டும்; அவனுடன் கொஞ்ச வேண்டும்; கடைசியில், லட்சுமணனிடம் மூக்கறுபட்டு, கோபத்துடன் செல்ல வேண்டும்; ஆடல், பாடல், காதல், கோபம் - இப்படி எல்லாம் நிறைந்த வேடம் அது!
'நல்ல வேடம் எது?' என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, சீதையைவிட, சூர்ப்பனகை வேடமே பெரிது என்று தோன்றியது. அதனால் தான் சூர்ப்பனகையின் வேடத்தை எனக்கு தரப்போவதாக சொன்ன போது கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது.
சாதாரணமாக, மூக்கும் முழியுமாக சிறிது லட்சணமாக இருக்கும் நடிகர்களுக்குத்தான் சூர்ப்பனகை வேடம் தரப்படும். எனவே, கம்பெனியின் பார்வையில், நானும் ஒரு அழகனாக கருதப்பட்டிருந்ததை எண்ணியபோது எனக்குப் பெருமையாகவே இருந்தது.
நான் சூர்ப்பனகையாக நடித்த போது, லட்சுமணனாக துறையூர் நடராஜன் நடித்தார். அவருக்கு கண்கள் சற்றுப் பெரியதாக இருக்கும்; அதனால் அவரை, முண்டக்கண் நடராஜன் என்று அழைப்போம்.
லட்சுமணனை மயக்குவதற்காக, கண்ணை ஒரு வெட்டு வெட்டி, இடுப்பை ஒரு ஒடி ஒடித்து, பாட ஆரம்பித்தால் போதும்... அந்தக் கண் வெட்டுக்கும், இடுப்பு ஒடிப்புக்குமே, 'அப்ளாசு'ம், 'ஆகா'வும் கொட்டகையில் எழும்!
என் வாத்தியாருக்கு இதையெல்லாம் கண்டு ரொம்பவும் சந்தோஷம்; என் மீது கொஞ்சம் அதிகமாகவே பிரியம் வைக்க ஆரம்பித்தார்.
அந்த பிரியத்தில் தான், 'அபிமன்யு சுந்தரி, பம்பாய் மெயில் மற்றும் வேதாள உலகம்' போன்ற நாடகங்களில் கதாநாயகியின் வேடம் கொடுத்து, அவற்றிற்கான பாடங்களை படிக்க வைத்து, அந்த வேடங்களை ஏற்று நடிக்க, எனக்கு சந்தர்ப்பம் தந்தார்.
இந்தப் பாடங்களை எல்லாம் பத்து, பதினைந்து நாட்களுக்குள்ளேயே மனப்பாடம் செய்து விட்டேன்.
பொதுவாகவே, நாடகக் கம்பெனிகளில் அப்போது ஒரு பழக்கம் உண்டு; முக்கிய நடிகர்கள் என்று சொல்லப்படுவோர் அனைவரும், அந்த நாடகக் கம்பெனி நடத்தும் நாடகங்களில் வரும் எல்லா கதாபாத்திரங்களின் வசனத்தையும் மனப்பாடம் செய்திருக்க வேண்டும். எந்த ஒரு காரணத்திலாவது, வழக்கமாக ஒரு வேடத்தைச் செய்பவர், அதைச் செய்ய இயலாமல் போய்விட்டால், நாடகம் நின்றுவிடக் கூடாதல்லவா? உடனே, யாராவது ஒருவர், அந்த வேடத்தில் நடிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த முன்னேற்பாடு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
இந்த ஏற்பாட்டின்படி, நானும் எல்லா முக்கிய வேடங்களின் பாடங்களையும் படித்து, மனப்பாடம் செய்து வைத்திருந்தேன்.
சுருங்கச் சொல்வதானால், பெரும்பாலான நடிகர்களுக்கு, ஒவ்வொரு நாடகமும் அப்படியே மனப்பாடம் ஆகி இருக்கும்.
ஒவ்வொரு ஊராகச் சென்று முகாமிட்டதும், கம்பெனியிலுள்ள முக்கியமானவர்கள் முதல் முக்கிய நடிகர்கள் வரை, முதல் வேலையாக அந்த ஊரிலுள்ள பெரிய மனிதர்களை, பெரிய அதிகாரிகளை தெரிந்து, அவர்களது வீட்டிற்கு நேரில் போய் பார்ப்பர்.
'நாங்கள் உங்கள் ஊருக்கு நாடகம் நடத்த வந்திருக்கிறோம்; உங்கள் ஒத்துழைப்பையும், ஆதரவையும் தந்து எங்களை ஊக்கப்படுத்தி, கலையை வளர்க்க வேண்டுகிறோம்...' என்று பெண் வீட்டார், சம்பந்திகளை அழைப்பது போல அழைப்பர். இதனால், ஒவ்வொரு ஊரிலும் முகாமிடும்போது, அவ்வூரிலுள்ள முக்கியமானவர்களுக்கும், கம்பெனிகளுக்கும் நல்ல தொடர்பு ஏற்பட்டு விடும்.
ஊர்ப்பெரியவர்களும், கம்பெனியில் உள்ளவர்களைக் கவுரவப்படுத்தும் வகையில், தங்கள் வீட்டுக்கு அழைத்து, விருந்து வைத்து, பரிசுகளும் கொடுத்து அனுப்புவர்.
அந்த மாதிரி விருந்துகளுக்கு போவதென்றால், எங்களுக்குத் தனி, 'குஷி!'
திண்டுக்கல்லில் நாங்கள் முகாமிட்டிருந்த போது, இப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.
திண்டுக்கல்லின் புகழை, தமிழ்நாடெங்கும் பரப்பியவர்களில், 'அங்கு விலாஸ்' புகையிலை நிறுவனரும் ஒருவர். அதன் உரிமையாளர் முத்தையா பிள்ளை, எங்கள் கம்பெனி நாடகங்களைப் பார்த்து, பெரிதும் மனமகிழ்ந்து, மேடைக்கு முன் தொங்க விடுவதற்காக, பெரிய திரைச் சீலை ஒன்றை பரிசளித்தார். வெள்ளிச் சரிகையும், ரங்கூன் டைமண்ட் கற்களும் கொண்டு, சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டு, கவர்ச்சியுடன் விளங்கிய அந்தப் படுதாவின் விலை, அப்போதே பல ஆயிரம் ரூபாய் இருக்கும்.
அது மட்டுமல்ல, அவரது வீட்டுக்கு எங்கள் எல்லாரையும் அழைத்துச் சென்று, ஒரு பெரிய விருந்து அளித்தார். பின்னர் வேட்டி, பைஜாமா, ஜிப்பா என்று கம்பெனியிலிருந்த நடிகர்களுக்கு புது உடைகளையும் பரிசளித்தார்.
கம்பெனி நடிகர்களில், அவர்களது அனுபவத்திற்கும், அவசியத்திற்கும் ஏற்ப விடுமுறை தரப்படும்.
ஒரு சமயம் கம்பெனியில் இருந்த காக்கா ராதாகிருஷ்ணன் திருச்சிக்கு போய் வந்தார். திரும்பி வந்தபோது என்னை தனியே அழைத்து, என் அண்ணன் திருஞானசம்பந்தமூர்த்தி தவறி விட்ட சோகச் செய்தியைச் சொன்னார்.
அவர் இறப்பதற்கு முன்தினம், அவர் பக்கத்திலேயே காக்கா ராதாகிருஷ்ணன் படுத்திருந்ததாகவும், என்னைப் பற்றியும், என் கம்பெனி வாழ்க்கையைப் பற்றியும், அக்கறையுடன் அவர் விசாரித்தாக கூறினார். இதைக் கேட்டதும் நான் இடிந்து போய், கண்ணீர் விட்டேன்.
அன்று பூராவுமே, என் மனம் ஒரு நிலையிலும் இல்லாமல் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
வீட்டிலுள்ளவர்களைப் பார்க்க வேண்டும்; அதுவும் உடனடியாகப் போய் என் தாயார், அண்ணன், தம்பி, ஏன் எல்லாரையும் கண்டு பேசிவிட்டு வர வேண்டும் என்ற ஒரு ஆசை, ஏக்கம் என் நெஞ்சில் பீறிட்டு எழுந்தது.
பிரிவின் வேதனையை, என் மனம் மீண்டும் அனுபவிக்க ஆரம்பித்து விட்டது.
ஆனால், எப்படி, எதைச் சொல்லி விடுமுறை வாங்குவது என நினைத்த போது, கூடவே அந்த பயமும் பிடித்துக் கொண்டது.
— தொடரும்.
தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.


தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22457&ncat=2

RAGHAVENDRA
4th November 2014, 10:21 PM
கதாநாயகனின் கதை - 5

தினமலர் வாரமலர் 02.11.2014



http://img.dinamalar.com/data/uploads/E_1414742500.jpeg

ஊருக்குப் போய் என் அம்மாவையும், அண்ணனையும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டதும், கம்பெனியிலுள்ள முக்கியமானவர்களிடம் சென்றேன். என் தமையனார் இறந்து விட்டதையும், நான் ஊருக்குப் போக வேண்டிய அவசியத்தையும் எடுத்துச் சொன்னேன்.
என் தமையனார் இறந்த செய்தியைக் கேட்டு அனுதாபப்பட்டனர்; ஆனால், ஊருக்குப் போக அனுமதி கிடைக்கவில்லை. ஏன் என்று இப்போதும் ஞாபகம் இல்லை. என் தமையனாரின் நினைவாகவே கொஞ்ச நாட்கள் இருந்தேன். நாட்கள் செல்லச் செல்ல, வேலையும் அதிகரிக்கவே, அதைக் கொஞ்ச கொஞ்சமாக மறந்துவிட்டேன்.
புதுப் படங்கள், புதுப் புது நாடகங்கள் அடுத்தடுத்து வரவே, வேலை மும்முரத்தின் நடுவே, அந்த ஒரே சம்பவத்தை நினைத்துக் கொண்டு இருக்க முடியுமா? வீட்டிலிருந்தும் எனக்குக் கடிதம் வரவில்லை; நானும் போடவில்லை. சொல்லப் போனால், கடிதப் போக்குவரத்தின் முக்கியத்துவத்தை அப்போது நான் பரிபூரணமாகத் தெரிந்து கொள்ளவில்லை என்று சொல்லலாம்!
கம்பெனியில் அவ்வப்போது சினிமாவுக்கு அழைத்துப் போவர். திண்டுக்கல்லில் நாங்கள் முகாமிட்டிருந்தபோது, தியேட்டருக்கு படம் பார்க்க அழைத்துச் சென்றனர். அண்ணன் சிதம்பரம் ஜெயராமன் நடித்த, கிருஷ்ணருடைய வரலாற்றுப் படம்; பெயர் எனக்குச் சரியாக நினைவில்லை. படத்தில் நிறைய பாடல் இடம் பெற்றிருந்தன. அக்காலத்தில் இப்போதுள்ளதைப் போல, 'பிளே - பாக் சிஸ்டம்' அதாவது, பின்னணியில் பாடும் முறை கிடையாது.
படத்தில் நடிக்க வருவோருக்கு பாடத் தெரிந்திருக்க வேண்டும்; நடிக்கும் போதே பாட வேண்டும். அப்படியே, அங்கேயே ஒலிப்பதிவு செய்து விடுவர். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது... அண்ணன் சிதம்பரம் ஜெயராமன், ஒரே இடத்தில் நின்றபடியே ஒரு முழுப் பாடலைப் பாடியிருப்பார். ஒரே, 'ஷாட்'டில் இந்தப் பாட்டு முழுவதும் எடுக்கப்பட்டிருக்கும்.
அக்காலத்துப் படங்களோடு, இப்போதுள்ள திரைப்படத் தொழில் வளர்ச்சியை எண்ணிப் பார்க்கும்போது, ஏணி வைத்தால் கூட எட்டாது.
அந்தக் குறைவான வசதிகளைக் கொண்டு, அவர்கள் உருவாக்கிய படங்களைப் பார்க்கும் போது, பிரமிப்பு தான் ஏற்படுகிறது. படம் பார்த்து விட்டு வந்த பின், அன்று முழுவதும், நாங்கள் ஒருவருக்கொருவர் படத்தில் வந்த பாடல்களைப் பாடியபடி, அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம்.
ஒரு ஊரைவிட்டு, இன்னொரு ஊருக்குப் போகும்போது, கடைசி நாளன்று, 'பட்டாபிஷேகம்' (ராமாயணம்) நடத்தி விட்டுத்தான் இடம் பெயர்வோம்; இதை, ஒரு வழக்கமாகவே வைத்திருந்தனர். இதே ராமாயணத்தை எத்தனை முறை நடத்தி இருந்தாலும், கடைசி நாளன்று நடக்கும் இந்த நாடகத்திற்கு நிறைய கூட்டம் வரும்.
பொதுவாக நாடக மேடையின் முன், ஒரு படுதா தொங்கும்; இதை, நாடகம் நடக்கும்போது, அப்படியே அவிழ்த்து விடுவர்.
சாதாரண நாட்களில் இப்படி எல்லாரும் வந்து நிற்க மாட்டார்கள். நடிகர்கள் தங்கள் காட்சியில் நடித்து முடித்த பின், உள்ளே போய்விடுவர். ஆனால், ஊரைவிட்டு கிளம்புவதற்கு முன், கடைசியாக நடத்தப்படும், 'பட்டாபிஷேகம்' நாடகத்தில், கடைசி காட்சி முடிந்ததும், எல்லா நடிகர்களும், மேடையில் அப்படியே நிற்பர். நாடகத்தில் வேலை செய்யும் மற்ற தொழில் துறை நண்பர்களும், கலைஞர்களும் கூட மேடையில் வந்து நிற்பர்.
கடைசி நாள், 'பட்டாபிஷேகம்' நாடகம் முடிந்து, மேடைக்கு முன் தொங்கவிடப்படும் படுதா சுருட்டி கட்டப்பட்டு, மேலே இருந்து அப்படியே கீழே இறக்கப்படும். நடிகர்கள் தங்கள் கைகளைக் கூப்பி வணக்கம் சொல்வர். சில நடிகர்களுக்கு பரிசுகளும் கிடைக்கும்; மாலையும் போடுவர்.
கம்பெனிக்கு நிறைய வெள்ளிக் கோப்பைகளும், பரிசுகளும் கிடைக்கும். அன்று எங்களுக்குக் கொண்டாட்டம் தான்!
கம்பெனி ஊரை விட்டுப் புறப்படுவதற்கு சில நாட்கள் ஆகும்; மூட்டைகளையெல்லாம் கட்ட வேண்டாமா?
அப்படிப்பட்ட நாட்களில் வழக்கம் போல பாடம் படிப்பது, பாட்டு சொல்லிக் கொள்வது, நடனப் பயிற்சி போன்றவை இருக்காது. விடியற்காலையில் எழுந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லாமல், அவரவர் இஷ்டப்படி, சுதந்திரமாக இரண்டு, மூன்று நாட்களுக்கு விடப்படுவர். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில், கம்பெனியில் உள்ளவர்கள் ஊரைச் சுற்றிப் பார்ப்பதோ, அல்லது அக்கம் பக்கத்திலுள்ள உறவினர்களைப் பார்ப்பதற்கோ செல்வர்.
நாங்கள் ஒரு சிலர் சேர்ந்து, திண்டுக்கல் மலை மீதுள்ள கோட்டைக்குச் சென்றோம். அங்கிருந்த ஒருவர், 'இதுதான் ஊமையன் கோட்டை; இங்க தான் அவன், வெள்ளைக்காரர்களை எதிர்த்து சண்டை போட்டான்...' என்றெல்லாம் கூறினார்.
அதைக் கேட்க கேட்க, எனக்கு உடல் புல்லரித்தது.
'கட்டபொம்மன்' நாடகத்தைப் பார்த்துத் தான், நான் நடிப்புத் துறையில் ஈடுபட்டேன். அந்த, கட்டபொம்மனின் வலது கையாக விளங்கி வந்த ஊமைத்துரையின் கோட்டையில் நின்று, அவனது வீர பிரதாபங்களைக் கேட்ட போது, என்னை அறியாமலேயே, ஒரு சந்தோஷ உணர்ச்சி ஏற்பட்டது.
பல ஆண்டுகளுக்குப் பின், எங்கள் நாடகக் குழுவின் சார்பில், கட்ட பொம்மன் நாடகத்தை நடத்த முனைந்த போது, அது, ஊமையன் கோட்டையும் இல்லை; ஊமைத்துரை அந்தப் பக்கம் கூட வரவில்லை என்பதை, தெரிந்து கொண்டேன்.
எங்களது அடுத்த முகாம், பழனி - திண்டுக்கல்லில் இருந்து நடிகர்கள் அனைவரும் பஸ்சிலேயும், நாடக பொருட்கள் லாரிலேயும் வந்தன.
இங்கே, முதன் முதலில்,'கிருஷ்ணலீலா' நாடகத்தை தான் நடத்தினோம்.
இதில் யசோதை, ருக்மணி, பூதகி, நடனமாடும் கோபிகைப் பெண் - இப்படி பல வேடங்களை, நான் மாறி மாறிப் போடுவேன்.
ஒரு நாள், 'கிருஷ்ணலீலா' நாடகத்தின் போது, ஒரு சுவையான சம்பவம் நடைபெற்றது. அன்று, நான், பூதகி வேடம் போட்டிருந்தேன்.
தன் எதிரியாக வளர்ந்து வரும் கிருஷ்ணனைக் கொல்ல, கம்சன், தன் தங்கையான பூதகியை அழைத்து, விஷப்பால் கொடுத்து, கிருஷ்ணனைக் கொன்று விடும்படி கூறுகிறான்.
கோர ரூபம் படைத்த அந்த பூதகி, கிருஷ்ணனைத் தேடிப் புறப்பட்டு வருவாள்.
வரும் வழியில், நாரதர் அவளைப் பார்த்து,'எங்கே போகிறாய் பூதகி?' என்று கேட்பார்.
பூதகி விஷயத்தைச் சொன்னதும், அதைக் கேட்டு சிரிப்பார் நாரதர்.
'ஏன் சிரிக்கிறாய் நாரதா?' என்று பூதகி கேட்க, நாரதர், 'இந்த கோர உருவத்துடன் போனால் எந்தக் குழந்தை உன்னிடம் நெருங்கி வரும்? அழகான உருவத்துடன் போனால் தானே குழந்தைகள் உன்னிடம் ஆசையோடு ஓடி வரும்...' என்று சொல்வார்.
'உண்மைதான் நாரதா! இப்போதே நான், அழகான பூதகியாக மாறுகிறேன்...' என்று கோர பூதகி சொல்வாள்.
அப்போது மேடையில் விளக்கு அணையும். கோர பூதகி வேடம் போட்டவர் உள்ளே சென்று விடுவார்; அழகியான பூதகி வேடம் போட்டவர், வந்து நிற்பார்.
மீண்டும் விளக்கு எரியும். கோரபூதகி இருந்த இடத்தில், அழகான பூதகியை கண்டதும் மக்கள் மத்தியில் ஒரு ஆரவாரம் எழும்.
இவ்வளவும் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விடும். கோர பூதகியாக மாதவ அய்யர் வேடம் போடுவார். அவர், ரொம்பவும் சீனியர்; எங்களுக்கு நடனம் சொல்லித் தருவார்.
விளக்கு அணைந்ததுமே, அவர் தன் தலையிலுள்ள டோப்பாவைக் கழற்றிய படியே உள்ளே போய் விடுவார்; இது வழக்கம்.
மேடையிலே பக்கவாட்டில் இரண்டு பக்கமும் வழிகள் இருக்கும். அதன் வழியாகத்தான் அவர் உள்ளே போவார்; எல்லாருக்கும் அதுதான் வழி!
குறிப்பிட்ட தினம், இந்த மாதிரி பக்கவாட்டில் நுழைந்து, உள்ளே செல்வதற்குப் பதிலாக, மாதவ அய்யர், முன் பக்கம் பக்கவாட்டில், எங்கள் கம்பெனிக்குக் கிடைத்துள்ள பதக்கங்கள், கோப்பைகள் இவை எல்லாம் அலங்காரமாக வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் வந்து நின்று விட்டார்.
விளக்கு மீண்டும் எரிந்த போது, கையில் டோப்பாவுடன் நின்ற மாதவ அய்யரையும், அழகான பூதகியாக நின்ற என்னையும் பார்த்த போது, பார்வையாளர்கள் சிரித்து, ஆரவாரம் செய்தனர்.
மாதவ அய்யர் உள்ளே ஓடிவிட்டார்.
— தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.


தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22547&ncat=2

RAGHAVENDRA
9th November 2014, 09:19 AM
கதாநாயகனின் கதை - 6

தினமலர் வாரமலர் 09.11.2014



http://img.dinamalar.com/data/uploads/E_1415354147.jpeg

பழனியில் மூன்று மாதங்கள் தங்கி இருந்தோம்.
'கிருஷ்ணலீலா' தவிர, 'ராமாயணம், பவளக்கொடி, பதி பக்தி மற்றும் கதரின் வெற்றி' போன்ற நாடகங்களையும் இங்கு நடத்தினோம். இந்த நாடகங்களில் எல்லாம் எனக்கு வேடம் உண்டு.
'பதி பக்தி'யில், கதாநாயகனின் சகோதரியாக நடிப்பேன். 'கதரின் வெற்றி'யில் இரண்டு சிறுவர்கள் வருவர்; அவர்களில் ஒருவனாக வருவேன். 'பவளக்கொடி'யில் சில சமயம் பவளக்கொடியாகவும் நடிப்பேன்.
பழனியில் இருந்தபோது தான், என் தாயாரிடமிருந்து கடிதம் வந்தது. அக்கடிதத்தைப் பார்த்ததும், என் தாயைப் பார்ப்பது போலவே இருந்தது. பாசத்தையும், என் பிரிவின் ஏக்கத்தையும், கடிதத்தின் வாசகங்களில் தேக்கி எழுதி இருந்தார்.
என் நலனைப் பற்றி அக்கறையுடன் விசாரித்து, 'எப்போது ஊருக்கு வருகிறாய்?' என்று கேட்டு எழுதியிருந்தார்.
'ஊருக்கு எப்போது வருவேன் என்று எனக்கே தெரியாது...' என்று பதில் போட்டேன்.
தவிர, ஊருக்குப் போக வேண்டும் என்ற ஆர்வத்தைவிட, நடிப்பிலும், பாடங்களிலும் தான் எனக்கு அதிக அக்கறையும், ஆர்வமும் அப்போது இருந்தது.
அப்படியானால், 'குடும்பப் பாசமே உங்களுக்கு இல்லையா?' என்று கேட்காதீர்கள்.
அதுவும் இருந்தது; அதைவிட தொழிலில் இருந்த கவனமே வென்றது.
எங்களது அடுத்த முகாம் - மதுரை!
மதுரையில் பிரமாண்டமான முறையில், 'கிருஷ்ண லீலா' நாடகத்தை நடத்த ஆரம்பித்தோம். பழைய கோல்டன் கம்பெனியிலிருந்து சீன், செட்டிங் மற்ற எல்லா பொருட்களையும் வாங்கி இருந்தோம்.
நாடகத்தில் ஒவ்வொரு காட்சியும் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தும்படி இருக்கும்.
இந்த நாடகத்தில், வைகுண்டத்தின் கதவுகள் திறக்கும் காட்சியை பார்ப்பதற்காகவே, மக்கள் அடிக்கடி வருவர்; இக்காட்சிக்காக, பிரமாண்டமான கதவுகள் இருக்கும்.
ஒரு நாளைக்கு இரு காட்சிகள் வீதம், மூன்று மாதம், 'கிருஷ்ண லீலா' நாடகம் மதுரையில் நடந்தது.
மதுரையில் கம்பெனி முகாமிட்டிருந்த காலத்தை பொற்காலம் என்றே சொல்லலாம். பாலும், தேனும் கம்பெனியில் ஆறாக ஓடிய காலம் அது. தாராளமாக செலவு செய்தனர். அப்படிச் செலவு செய்யும் அளவுக்கு, வசூலாகி, நிறைய வருமானமும் வந்தது.
இவ்வளவு சிறப்பாக கம்பெனி நடந்து கொண்டிருந்த போது தான், இரண்டு துயரமான சம்பவங்கள் நடைபெற்றன. 'கிருஷ்ண லீலா'வில் ஒரு காட்சி - கம்சன் தன் தங்கை தேவகியின் திருமணத்தை மிகச் சிறப்பாகக் கொண்டாடி விட்டு, தங்கையையும், தன் மைத்துனனையும் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஏற்றிக் கொண்டு வருவான்.
அப்படி வரும்போது, ஆகாயத்திலிருந்து, 'கம்சா... உன் தங்கையின் வயிற்றில் பிறக்கும் எட்டாவது குழந்தையால் உன் உயிருக்கு ஆபத்து வரப் போகிறது...' என்று அசரீரி ஒலிக்கும்.
இக்காட்சியை, தந்திரக் காட்சியாக அமைத் திருந்தனர்.
கம்சன் ரதத்தை ஓட்டி வரும்போது மின்னல் ஒன்று பளிச்சிடும்; உடனே மேடைக்கு மேலே தலை மாதிரி ஓர் உருவம் வரும். அதன் பின், நட்சத்திரம் ஒன்று சுழன்று கொண்டே இருக்கும்; அதிலிருந்து குரல் வரும்.
மக்கள் இக்காட்சி வரும்போது கைதட்டி, தங்கள் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவர்.
அன்று, அந்த நட்சத்திரம் சுற்றவில்லை. எங்கள் கம்பெனியில் சுப்பையா என்பவர்தான் எலக்ட்ரீஷியன்; மின்சாரம் சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளையும் அவர்தான் செய்வார்.
நட்சத்திரம் சுற்றாமல் இருப்பதைக் கண்ட அவர், உடனே மேடை மீதுள்ள உத்தரத்திற்குத் தாவி, அதைச் சுற்ற முயன்றார். அவ்வளவுதான்! மின்சாரம் பாய்ந்து விட்டது. அங்கேயே தலைகீழாக, வவ்வாலைப் போல தொங்கி விட்டார்.
அப்போது, பிரபல ஹாஸ்ய நடிகர் எம்.ஈ. மாதவன், எங்கள் கம்பெனியில் இருந்தார். அவர் வாத்தியக்காரர்கள் வாசிக்கும் இடத்தில் உட்கார்ந்திருந்தார்.
மின்சாரம் பாய்ந்து சுப்பையா தலை கீழாக தொங்குவதைப் பார்த்த அவர், உடனே ஓடிப் போய், 'மெயின் ஸ்விட்சை' அணைத்து விட்டார்.
சுப்பையாவை கீழே இறக்கி என்னவெல்லாமோ சிகிச்சை செய்து பார்த்தோம்; சுப்பையா பிழைக்கவே இல்லை.
சுப்பையா இறந்த மறுநாள், எங்களில் யாருக்கும் வேலையே ஓடவில்லை.
இந்த ஏக்கம், எங்கள் கம்பெனி நடிகர்களிடையே எந்த அளவுக்கு ஆழமாக இருந்தது என்பதற்கு மற்றொரு சோகமான சம்பவத்தையும் சொல்கிறேன்.
கேரளாவை சேர்ந்த ஒரு பையன் எங்கள் கம்பெனியில் இருந்தான். சிவப்பாக, அழகாக இருப்பான்.
பெண் வேடத்தில் மேடையில் நடனம் ஆடுவான் பாருங்கள்... ஆகா... அழகு அப்படியே சொட்டும்!
ஒரு நாள் நாடகம் முடிந்த பின், நாங்கள் எல்லாரும் தூங்கிக் கொண்டு இருந்தோம்.
இந்தப் பையன் தூக்கத்திலிருந்து எழுந்து, பிரமை பிடித்தவன் போல் தோட்டத்துப் பக்கம் சென்றிருக்கிறான்.
எங்களை கவனித்துக் கொள்ள ஒரு பயில்வான் இருப்பார்; அவர் தோட்டத்துப் பக்கத்தில் படுத்திருப்பார்.
இந்த பையன் வரும் சத்தத்தைக் கேட்டு விழித்துக் கொண்ட பயில்வான், அவனை நிறுத்தி, 'எங்கேடா போறே?' என்று கேட்டார்.
அவன், 'சுப்பையா கூப்பிடுறாரு; நான் போறேன்...' என்று பதில் சொன்னான்.
'சுப்பையாதான் செத்துப் போயிட் டானே... நீ வா, உள்ளே போய் படுக்கலாம்...' என்று சொல்லி, அவனை அழைத்து வந்து, படுக்க வைத்தார் பயில்வான்.
அன்று படுத்தவன், மீண்டும் எழுந்திருக்கவே இல்லை.
சுப்பையாவின் மரணத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சி, அவனை இரண்டு நாட்கள் வரை படுக்கையில் கிடத்தி, மூன்றாம் நாள் சுப்பையாவிடமே சேர்த்து விட்டது.
இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், ஜாதி, மதம், பணக்காரன், ஏழை என்ற வித்தியாசமில்லாமல் வளர்ந்தது தான் இதற்கு காரணம். இந்த பாரபட்சமற்ற மனநிலையை குருகுல வாசம் எங்களுக்கு கற்றுத் தந்தது.
அதனால் தான் இன்றும் அதே எண்ணத்துடன் என்னால் இருக்க முடிகிறது.

இவ்வளவு சீரும், சிறப்புமாக மதுரையில் நாடகம் நடத்திவிட்டு, மேலூர் வந்து சேர்ந்தோம்.
மேலூரில் காலடி எடுத்து வைத்ததும், மதுரைக்கு நேர் மாறாக, வறுமைதான் எங்களை வரவேற்க காத்திருந்தது.
அந்த ஊரில் கீற்றுக் கொட்டகையைப் போட்டு, எங்கள் சொந்த, ஜெனரேட்டரை வைத்து மின்சாரத்தை உண்டாக்கி, நாடகம் நடத்த ஆரம்பித்தோம்.
ஊரில் மக்களைவிட தேள், நட்டுவாக்காளி, பாம்பு இவைதான் அதிகம். தலையில் வைக்க டோப்பாவை, மாட்டிய இடத்திலிருந்து எடுத்தால், அதில் இரண்டு தேள் இருக்கும். ஆனால், நல்ல வேளை, மேலூரில் நாங்கள் இருந்த வரை இந்த விஷ ஜந்துக்கள், எங்களை ஒன்றும் செய்யவில்லை.
இந்த நிலையில் நாங்கள் கஷ்டப்பட்டு நாடகம் நடத்தியும் வசூல் கிடைக்கவில்லை.
ஒரு நாளைக்கு, ஒரு வேளை சோறு என்ற நிலைமை கூட மாறி, பல நாட்கள், வெறும் மோர் சாதம் மட்டுமே சாப்பிட்டு, இங்கு காலத்தை ஓட்டினோம்.
ஆனால், அப்படி இருந்தும் வறுமையின் கொடுமையோ, பசியின் வேகமோ எங்களுக்கு தோன்றியதில்லை. ஒரே நினைப்புடன், அதாவது நடிப்பது என்ற ஒரே எண்ணத்துடன் சிறுவர்களாகிய நாங்கள் எல்லாரும் பழகி வந்ததுதான் இதற்கு காரணமாக இருக்கும்.
எங்களின் அடுத்த முகாம் பரமக்குடி அங்கு...
— தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.


தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு
http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22623&ncat=2

Russellbpw
18th November 2014, 09:08 AM
is that all ?

RAGHAVENDRA
20th November 2014, 07:26 AM
கதாநாயகனின் கதை - 7

தினமலர் வாரமலர் 7 - 16.11.2014



http://img.dinamalar.com/data/uploads/E_1415867617.jpeg

எங்கள் நாடகக் கம்பெனி பரமக்குடிக்கு சென்றிருந்த காலத்தில் தான், சினிமாவில் நடிக்கப் போன ராதா அண்ணன், மீண்டும் எங்கள் கம்பெனிக்கு வந்து சேர்ந்தார்.
ராதா அண்ணன் வந்ததும், எல்லாருக்கும் உற்சாகம் வந்துவிட்டது. கம்பெனிக்கே ஒரு தனி வேகம் வந்து விட்டது என்று சொல்லலாம்.
ராதா அண்ணன் என் மீது ரொம்பவும் பிரியமாக இருப்பார்.
கொஞ்சம் பெரிய பையன்களை வைத்து, கம்பெனியில் உள்ள மற்ற பிள்ளைகளைக் குளிப்பாட்டுவது, தலை வாரி, டிரஸ் செய்து விடுவது அவரது வேலை. அவரது தலைமையில் கம்பெனியில், உள்ள பிள்ளைகள் பாத்ரூமை சுத்தப்படுத்துவர். எங்களுக்கெல்லாம் ஒரு தளபதி மாதிரி இருப்பார்.
நடிகர்களிலேயே ராதா அண்ணனைப் போன்ற திறமைசாலியை நான் பார்த்ததில்லை. அவருக்கு மிக நன்றாக நடிக்கத் தெரியும் என்பது மட்டுமல்ல, வேறு பல வேலைகளிலும் அவர் நிபுணராக விளங்கினார். மின்சாரம் சம்பந்தமான, நுணுக்கமான வேலைகளிலும், ரேடியோவைப் பழுது பார்க்கும் கலையிலும் வல்லவர். பம்புசெட், இன்னும் பல கருவிகளையும் நொடியில் பழுது பார்த்து, சரிசெய்து விடுவார்.
மின்சாரத்தினால் இயங்கும் உபகரணங்களை புதிது புதிதாக அமைத்து, நாடகத்திற்கான தந்திரக் காட்சிகளை அமைத்துக் கொடுப்பார்.
ராதா அண்ணன் அதிகம் படிக்காதவர் என்றாலும், ஒரு விஷயத்தை ஒரு முறை சொன்னால் போதும், அதை அப்படியே மனதில் பதிய வைத்து, அதை மேலும் விரிவுபடுத்தி, மெருகு கொடுத்து அழகாகச் சொல்லி விடுவார்.
ஒவ்வொரு நாளும் பத்திரிகைகளைப் படிக்கச் சொல்லிக் கேட்பார். காலையிலோ, பிற்பகலிலோ அவர் ஓய்வில் படுத்திருக்கும்போது, தலைமாட்டில் உட்கார்ந்து, நான் தான் பத்திரிகைகளை படிப்பேன்.
'அது அப்படி இருக்கும்; அதனால்தான் இப்படி ஆயிற்று...' என்று ஒவ்வொரு செய்தியையும் படித்து முடித்த தும், விமர்சனம் செய்வார்.

கம்பெனியில் அவர் மீண்டும் வந்து சேர்ந்தபோது, நடித்த முதல் நாடகம், 'லட்சுமி காந்தன்!'
இதில், சிங்கக் குட்டி கோவிந்தன் என்ற வேடத்தை ஏற்று அவர் நடித்த நடிப்பு இருக்கே... அப்பப்பா... என்ன ஒரு நடிப்பு! இன்று நினைத்தாலும் என் கண் முன் அவரது நடிப்பு அப்படியே நிழலாடுகிறது. அவ்வளவு அற்புதமாக காமெடி செய்திருப்பார்.
அடுத்தது, 'பதிபக்தி!'
இதில், வில்லன் கங்காதரனாக வருவார்.
பார்ப்போர் பயப்படும்படியாக அவ்வளவு அற்புதமாக நடித்திருப்பார். இந்நாடகத்தில், சரஸ்வதி என்ற பெண்ணாக வருவேன்.
ஒரு காட்சியில் அவர் முடியைப் பிடித்து உலுக்கி, கீழே தள்ளி, அவரை நான் மிதிக்க வேண்டும்.
நன்றாக மிதிக்கச் சொல்வார். நான் மெதுவாக மிதித்தால், 'நல்லா மிதிடா...' என்று, என் காதுக்கு மட்டும் கேட்கும்படி மிரட்டுவார். தலைமுடியைப் பிடித்து எப்படி உலுக்க வேண்டும் என்று அவரே சொல்லித் தருவார். சரியாகச் செய்யாவிட்டால், மேடையிலேயே யாருக்கும் தெரியாத வகையில் அடியும் கொடுப்பார்.
மேடையில் சண்டைக் காட்சிகளை அந்தக் காலத்திலேயே மிகவும் விறுவிறுப்பாகவும், கவர்ச்சியாகவும் அமைத்தவர் ராதா அண்ணன். இந்த சண்டைக் காட்சிகளில் உண்மையிலேயே அவர் நிறைய அடி வாங்குவார்; சில சமயம் கொடுக்கவும் செய்வார். அம்மாதிரி ஒரு நாள் நடிக்கப் போய், அவரது பல் உடைந்து விட்டது. அவ்வளவு தத்ரூபமாக நடிப்பார்.
ராதா அண்ணனின், சண்டைக் காட்சிகளை பார்ப் பதற்காகவே நிறைய பேர் வருவர்; அதனால், நாடகத்திற்கு அதிக வசூல் கிடைக்கும்.

பரமக்குடியில்,'ராமாயணம்' நாடகம் அடிக்கடி நடக்கும். எத்தனை முறை, 'ராமாயணம்' நாடகம் போட்டாலும் நல்ல கூட்டம் வரும்; பார்த்தவர்களே திரும்பத் திரும்ப வந்து பார்த்ததால், நல்ல வசூலும் கிடைத்தது.
பெரும்பாலும் இரவு, 9:00 மணிக்கு மேல் தான் நாடகம் ஆரம்பமாகும். இரவு ஆரம்பித்தால், விடியற்காலை வரை நடக்கும். மக்கள் இடையில் எழுந்து போகாமல், தூங்கி வழியாமல், ஆர்வத்துடன் பார்ப்பர்.
நாடகம் முடிந்ததும் காலை, 6:00 அல்லது 6:30 மணிக்கு, எல்லாரும் வைகை ஆற்றுக்குப் சென்று, தலை நிறைய எண்ணெய் வைத்து, வைகை படுகையில் ஊற்றுத் தோண்டி, தண்ணீர் வரவழைத்து குளிப்போம். அவ்வளவு சுகமாக இருக்கும்; இரவு கண் விழித்து நடித்த களைப்பெல்லாம் பறந்து விடும்.
அக்காட்சிகள் என் மனதில் அப்படியே பதிந்து விட்டன; சில சமயம், இவை எல்லாம் கனவு போல் தோன்றுவதும் உண்டு.
இந்நேரத்தில் கம்பெனியில், 'தேச பக்தி' என்ற பெயரில், நாடகம் நடத்தினோம்.
தேச பக்தி உணர்வை தூண்டக் கூடிய வகையிலும், குறிப்பாக காங்கிரசின் லட்சியங் களையும், மகாத்மா காந்தியின் கொள்கைகளை விளக்கும் விதமாக அமைந்த நாடகம் இது. நாட்டில் பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய, 'கதர் இயக்கம்' அப்போது தான் நடந்தது.
இந்நாடகத்தில் ஒரு காட்சியில், சிறுவர்களாகிய நாங்கள், கதர்க்கொடியுடன் மேடைக்கு வந்து, 'வந்தே மாதரம்' என்று குரல் கொடுப்போம்.
நாங்கள், சொல்லி முடித்த மறு நிமிஷமே, நாடகம் பார்க்க வந்த நூற்றுக்கணக்கான மக்களும், 'வந்தே மாதரம்' என்று உரத்த குரலில் முழங்குவர். கொட்டகையே, 'கிடுகிடு'க்கும்!
அடுத்ததாக,'மகாத்மா காந்திக்கு' என்று சொல்லி முடிக்கும் முன், 'ஜே' என்று இடி முழக்கம் எதிரொலிக்கும்.
அப்போது உடல் புல்லரித்து, இனம் தெரியாத ஒரு வேகம், ஆவேசம் எங்களுக்குள் ஏற்படும்.
'தேச பக்தியே தங்கள் லட்சியம்...' என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்த நேரம் அது! ஒவ்வொரு நாடகத்திற்கும் வெள்ளம் போல் மக்கள் திரண்டு விடுவர்.
பரமக்குடியில் நடத்திய எல்லா நாடகங்களுக்குமே, பொதுமக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்தது.
கம்பெனிக்கும் நல்ல பெயர்; நல்ல வருமானம்; எல்லாருக்குமே பெரும் மகிழ்ச்சி.
'தேச பக்தி' நாடகத்தைப் பார்க்க, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அடிக்கடி வந்ததாக நினைவு.
தேச பக்தி உணர்வுடன் அவர், கலை ஆர்வமும், கலை வளர்ச்சியில் பெரும் அக்கறையும் உள்ளவர்.
— தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.


நன்றி - தினமலர்

தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22715&ncat=2

RAGHAVENDRA
23rd November 2014, 10:38 PM
கதாநாயகனின் கதை - 8

தினமலர் வாரமலர் 23.11.2014



பரமக்குடியிலிருந்து, மதியம், 3:00 மணிக்கு, ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் கிளம்பும். எங்கள் முகாமை பரமக்குடியில் முடித்து, சேலம் போக, அந்த எக்ஸ்பிரசில் ஏறினோம்.
திருச்சிக்கு, இரவு, 10:30 மணிக்கு வண்டி வந்து சேர்ந்தது.
அன்றிரவு, திருச்சியில் உள்ள சின்னய்யா பிள்ளை சத்திரத்தில் தங்கினோம்.
மறுநாள் திருச்சியிலிருந்து பஸ்சில் கிளம்பி, சேலம் போய் சேர்ந்தோம். சேலத்தில் நியூ ஓரியண்டல் தியேட்டர்ஸ் (பின்னாளில் அது, 'நியூ சினிமா'வாக மாறிவிட்டது) கொட்டகையில், எங்கள் நாடகங்களை நடத்த ஆரம்பித்தோம்.
'இந்தியன் டக்லஸ்' ('டக்லஸ் பேர் பாங்க்ஸ்' - புகழ் பெற்ற அமெரிக்க நடிகர்) எம்.ஆர்.ராதா நடிக்கும், 'இழந்த காதல்' நாடகம் நடைபெறும் என்று விளம்பரப்படுத்தி, முதல் நாடகத்தை ஆரம்பித்தோம். ஆறு மாதங்கள் இந்த நாடகம் அங்கு நடைபெற்றது.
இப்போது படங்களில் வரும் முக்கிய காட்சிகளை படம் எடுத்து, 'போஸ்டர்' வைப்பதைப் போல, 'இழந்த காதல்' நாடகத்திற்காக முதன் முதலாக புகைப்படங்கள் எடுத்து, 'போஸ்டர்' வைத்திருந்தனர். இம்மாதிரி ஒரு நாடகத்தில் வரும் முக்கிய காட்சிகளை புகைப்படமெடுத்து, 'போஸ்டர்' வைத்தது, இதில் தான் என்று நினைக்கிறேன். 'இழந்த காதல்' தவிர, எங்கள் கம்பெனியின் மற்ற எந்த நாடகங்களுக்கும் இம்மாதிரி செய்யவில்லை.
எங்கள் கம்பெனி நாடகங்களில் மாயாஜால தந்திரக் காட்சிகள் அவ்வளவாக இருக்காது. கதையும், நடிப்பும் தான் நாடகங்களுக்கு ஜீவன்.
எம்.ஆர்.ராதா, கே.டி.சந்தானம், எம்.ஈ.மாதவன், சி.எஸ்.பாண்டியன், டி.கே.சம்பங்கி, காகா ராதா கிருஷ்ணன் போன்ற பல திறமை வாய்ந்த நடிகர்கள் கம்பெனியில் இருந்தனர். கே.டி.சந்தானம் நாடகத்திற்குரிய பாடங்களையும், நடிப்பையும் சொல்லித் தரும் ஆசிரியராக இருந்தார்.
கம்பெனி நிர்வாகத்தை ராமசுப்பைய்யர் கவனித்து வந்தார். எங்கள் தலைமுறைக்கு முந்தி, ஜகந்நாதய்யர் கம்பெனி என்று ஒரு பிரபல நாடகக் கம்பெனி இருந்தது.
அந்நாளில் புகழ் பெற்று விளங்கிய கண்ணையா கம்பெனியுடன், இந்த ஜகந்நாதய்யர் கம்பெனியையும் ஒப்பிட்டுச் சொல்வர்.
அந்த ஜகந்நாதய்யருடைய மகன் தான் ராமசுப்பைய்யர். நிர்வாகத்திலும், கண்டிப்பிலும் எப்படியோ, அப்படியே அன்பை பொழிவதிலும்!
'இழந்த காதல்' நாடகத்தில், கம்பெனியில் இருந்த பாதி பேருக்கு வேலை இல்லை. இதனால், அய்யர், ஒரு சாமர்த்தியமான வேலை செய்தார்.
வேலை இல்லாமல் நடிகர்களை வைத்து பராமரிப்பது கம்பெனிக்கும் நஷ்டம், நடிகர்களிடையேயும் ஒருவித சலிப்பை ஏற்படுத்திவிடக் கூடும் என்பதை உணர்ந்து, வேலை இல்லாத நடிகர்களை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து, மதுரை ஸ்ரீ பால கான சபாவின் கிளையாக, ஒரு தனிக் கம்பெனியை ஏற்படுத்தி, சேலம் சுற்று வட்டார ஊர்களில் நாடகம் நடத்த ஆரம்பித்தார் ராமசுப்பைய்யர்.
கிளைக் கம்பெனிக்கும் இதே பெயர் தான். கிளைக் கம்பெனியில், நானும் சேர்த்துக் கொள்ளப்பட்டேன். எங்கள் முதல் முகாம், நாமக்கல்.
வழக்கம் போல, 'ராமாயணம், லவகுசா, கள்வர் தலைவன், வேதாள உலகம், தேசபக்தி மற்றும் கதரின் வெற்றி' என, பல நாடகங்களில் நடித்தோம்.
நாமக்கல்லில் ஒரு மாதம் நாடகம் நடத்தினோம். அங்கே முகாமிட்டிருந்த போது தான், நாடக உலகில் தனிப் பெரும் புகழ் பெற்றிருந்த, சாமண்ணா அய்யரை சந்தித்தேன்.
எங்களுடைய நாடகம் இல்லாத நாட்களில், நாமக்கல்லில் உள்ள அதே கொட்டகையில், சாமண்ணா அய்யரின் ஸ்பெஷல் நாடகங்கள் நடைபெறும்.
'டம்பாச்சாரி' நாடகத்தில் ஒன்பது விதமான வேடங்களில் அற்புதமாக நடித்திருப்பார் அய்யர். அம்மாதிரி பல தரப்பட்ட வேடங்களை ஒரே நாடகத்தில் செய்ய வேண்டும் என்ற ஆசை, என் உள்ளத்திலும் துளிர் விட்டது. ஆனால், 'அது சாத்தியமா...' என்ற கேள்வியும் எழுந்தது. அன்றைய நிலையில் என்னால் அப்படித்தான் நினைக்க முடிந்தது.
பல ஆண்டுகளுக்குப் பின், நவராத்திரியில் ஒன்பது வேடங்களை ஏற்று நடித்த போது தான், அன்றைய கேள்விக்கான, பதில் கிடைத்தது.
நாமக்கல்லை அடுத்து, ராசிபுரம் சென்றோம்.
சந்தை திடலுக்கு எதிர்வாக்கில் உள்ள கொட்டகையில் தான் எங்கள் நாடகங்கள் நடந்தன.
பொதுவாக கம்பெனி நடிகர்கள் தங்கி இருக்கும் வீட்டுக்கும், நாடகம் நடக்கும் கொட்டகைக்கும் எட்டு கி.மீ., துாரம் இருக்கும்.
ஆறு வயதிலிருந்து, இருபது வயது வரை உள்ள பையன்கள், எங்கள் கம்பெனியில் நடிகர்களாக இருந்தனர். அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடை அணிந்து, உயரத்திற்கு ஏற்றபடி அடுத்தடுத்து நின்று, வரிசையாக கம்பெனி வீட்டிலிருந்து நாடகக் கொட்டகைக்கு அழைத்துச் செல்லப்படுவர். கட்டுப்பாட்டுடன் இப்படி நாங்கள் நடந்து செல்வதைப் பார்க்க, வீட்டுக்கு வெளியே வருவர் ஊர் மக்கள்.
ராசிபுரத்துக்கு அடுத்தபடி நாங்கள் வந்தது தர்மபுரி. இங்கு விசேஷமாகக் குறிப்பிடும்படி எதுவும் இல்லை.
ராமசுப்பைய்யர் மிகவும் கண்டிப்பானவர் என்று சொன்னேன் அல்லவா? அவர் எங்களிடம் காட்டிய அன்பையும் குறிப்பிட வேண்டும்.
மாதத்தில் ஒரு முறை, எங்கள் அனைவருக்கும் பேதி மருந்து சாப்பிடக் கொடுப்பார். அதற்காக எண்ணெய் கொடுக்கும் நாளில், அண்டா நிறைய ரசம் வைக்கச் சொல்வார். அன்று மாலை வரை, வயிற்றுக்கு ஒன்றும் தர மாட்டார்.
இப்படி பையன்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து செயலாற்றிய அந்த நல்ல உள்ளத்தை, உயர்ந்த மனிதரை, சாகும் வரை மறக்க முடியாது.
என்ன கேட்டாலும் கொடுப்பார். வயிறாரச் சோறு போட்டு, துணிமணி வாங்கிக் கொடுத்து, தேவைக்குப் பணம் தந்து, வாழத் தொழிலும் கற்றுக் கொடுத்தார்; அதேசமயம் கண்டிப்புடனும் இருந்தார். அதுவும் தொழிலில் மிகவும் கண்டிப்பு. சரியாகப் பாடத்தைச் சொல்லாவிட்டால், அவ்வளவு தான்! பிரம்படி தான் பரிசு!
முதலில் பாடம் சொல்லி தந்தவுடன், இரண்டு நாள் இடைவெளி விடுவர். இந்த இரண்டு நாளில் பாடத்தை நன்றாக மனப்பாடம் செய்திருக்க வேண்டும். மூன்றாவது நாள் அவர் பாடம் கேட்கும் போது ஒரு வார்த்தை தடுமாறாமல், தங்கு, தடையின்றி சொல்ல வேண்டும். வார்த்தையைத் தவற விட்டால் போதும்... அந்த இடத்திலேயே படுக்க வைத்து, வெறும் உடம்பில் பிரம்பால் ஓங்கி அடிப்பர். ஒரு அடி, இரண்டு அடி அல்ல, கை ஓயும் வரை அடிப்பார்!
இந்தப் பிரம்படி பரிசை நானும் வாங்கி இருக்கிறேன்.
இரவு சாப்பாட்டுக்குப் பின், எங்கள் எல்லாரையும் அழைத்து உட்கார வைத்து, அவரவர்களுக்குத் தெரிந்த நடிப்பை, செய்து காட்டச் சொல்வார்.
பாடத் தெரியாதவனை வேண்டுமென்றே பாடச் சொல்வார். அப்படி அவன் பாடவில்லை என்றால், அவனைத் திட்டி, அன்பாக உதைப்பார். அதிலே மற்ற பையன்களுக்கு ஒரு தமாஷ்!
அப்போது பாகவதர் நடித்த, திருநீலகண்டர் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.
அதிலே கலைவாணர், மதுரம், டி.எஸ்.துரைராஜ் நடித்த காமெடி காட்சியை நான், காகா ராதாகிருஷ்ணன், திருச்சி தங்கவேலு மூவரும் நடித்துக் காட்டினோம்.
நான் மதுரமாகவும், காகா ராதாகிருஷ்ணன் என்.எஸ்.கே., வேடத்திலும் நடித்தோம்.
இரவு,8:00 மணிக்கு ஆரம்ப மாகும் இந்த கேளிக்கைகள், இரவு, 10:00 அல்லது 11:00 மணி வரை நடக்கும். அதாவது, எங்களுக்கு துாக்கம் வரும் வரை!
இம்மாதிரி கேளிக்கைகளை நடத்துவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று, புதிதாக மற்றொரு ஊருக்குப் போகும்போது, உற்சாகமாக இருப்பர் என்பது. இரண்டாவது, சாப்பிட்ட உடனே படுத்துத் துாங்குவது ஆரோக்கியத்திற்கு கெடுதல் என்பதால், அதைத் தடுப்பது!
தர்மபுரியிலிருந்து குமாரபாளையம், ஈரோடு, கோவை, ஊட்டி மற்றும் சிங்காநல்லுார் ஆகிய இடங்களுக்கு எங்கள் முகாம் மாறியது. இவை எல்லாமே சிறப்பு வாய்ந்த ஊர்கள்.
குமாரபாளையத்தில் நாடகம் நடத்தச் சென்ற போது, ஒரு பயங்கரச் சம்பவம் நடைபெற்றது.
அது...
— தொடரும்.
தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.


நன்றி - தினமலர்
தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22813&ncat=2

RAGHAVENDRA
30th November 2014, 11:24 PM
கதாநாயகனின் கதை - 9

தினமலர் வாரமலர் 30.11.2014



http://img.dinamalar.com/data/uploads/E_1417069649.jpeg
ஒரு நாள் காலை, பவானி ஆற்றில் நாங்கள் எல்லாரும் (200 பேர்) குளித்துக் கொண்டிருந்தோம்.
வெள்ளம் வரப்போவது பற்றி ஊர் தலையாரி தமுக்கடித்து சொல்லியிருந்தது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் அங்கு போவதற்கு முன்தினம் சொல்லி இருப்பாரோ என்னவோ!
திடீரென வெள்ளம் வந்து விடவே, நாங்கள் திக்குமுக்காடிப் போனோம். கரைக்கு ஓடி வருவதற்குள் வெள்ளம் எங்களை சூழ்ந்து விட்டது. நாங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பதைக் கண்ட, சில பெரியவர்கள் உடனே ஆற்றில் குதித்து, எங்களை தோளில் தூக்கி கரை சேர்த்தனர். அன்று, அவர்கள் அப்படி செய்திராவிட்டால், எங்களில் பலர், வெள்ளத்துடன் போயிருப்பர்; நானும் போயிருப்பேன். நல்லவர்களின் ஆசியே எங்களைக் காப்பாற்றியது.
ஊட்டியில் நல்ல குளிர், எங்களுக்கெல்லாம் கம்பளிச் சட்டை, போர்வை, மப்ளர் எல்லாம் வாங்கித் தந்தனர்.
காலையில் பல் தேய்க்க, வெந்நீர் போட்டுத் தருவர். 'புளு மவுண்டன் டாக்கீஸ்' என்ற கொட்டகையில் தான் எங்கள் நாடகங்கள் நடந்தன. அதன் கீழே ஒரு பெரிய உருளைக்கிழங்கு கிடங்கு இருந்தது. நாடக நாட்களில் எங்களுக்கு அங்கு நல்ல வேட்டை. தினசரி உருளைக் கிழங்கு இல்லாமல் சாப்பாடே இருக்காது.
ஊட்டியில், 'தோடர்கள்' என்ற மலை ஜாதியினர் உள்ளனர். நாங்கள் தங்கி இருந்த வீட்டுக்கு சிறிது தூரத்தில் தான் அவர்கள் வசித்து வந்தனர். அவர்களை நாங்களும், எங்களை அவர்களும் அதிசயமாகப் பார்த்துக் கொண்டோம்.
காலையில் பாடம் படித்து முடித்ததும், நாங்கள் அவர்கள் இடத்திற்குப் போய் விடுவோம். அவர்களது உடை, வசிக்கும் வீடு, பேசும் மொழி இவை எல்லாம் எங்களுக்குப் புதுமையாக இருந்தது. அவர்களை பாடச் சொல்வோம்; அவர்களும் பாடுவர். பட்டாபிஷேகம் நாடகம் முடிந்து, ஊட்டியை விட்டுக் கிளம்புவதற்கு முன்பாக, அங்கு நடைபெற்ற மலர் கண்காட்சியையும் பார்த்தோம்; ரொம்பவும் அருமையாக இருந்தது.
ஊட்டிக்கு அடுத்து சிங்காநல்லூருக்கு வந்தோம். இதே சமயம் கோவையில் டி.கே.எஸ்., சகோதரர்கள் நாடகங்களை நடத்தி வந்தனர்.
இந்த ஊரில் தான் என் வாழ்க்கையில் ஒரு முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் பல படங்கள் தயாராகி வந்தன. ஒரு நாள் ராதா அண்ணன், முதன் முதலாக என்னை சினிமாவில் சேர்த்து விடுவதற்காக அழைத்துப் போனார். எனக்கு ஒரே சந்தோஷம்!
ஆனால், என்னைப் பார்த்ததும் அந்த வேஷத்திற்கு நான் உயரமாக இருப்பதாகச் சொல்லி அனுப்பி விட்டனர்; ஏமாற்றத்துடன் திரும்பினேன். பின், இந்த வேஷத்திற்கு காகா ராதாகிருஷ்ணன் பொருத்தமாக இருக்கிறார் என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
கலைவாணர் என்.எஸ்.கே.,யுடன் நடிக்க வேண்டிய படம் என்பது நினைவு!
சிங்காநல்லூரில் பழையபடி கம்பெனிக்கு கஷ்ட நிலை வந்து விட்டது. இரவோடு இரவாக வண்டியில் நாடக சாமான்களை ஏற்றி, கம்பெனியில் இருந்தவர்களில் பாதி பேர் கால்நடையாகவே கிளம்பினோம்.
சென்ட்ரல் ஸ்டுடியோவில் என்.எஸ்.கே.,யுடன் படத் தயாரிப்பு விஷயமாக கோவைக்கு வந்திருந்த எஸ்.வி.சகஸ்ரநாமம் இந்தக் கட்டத்தில், எங்கள் உதவிக்கு வந்தார். அவர் ஒரு காரை எடுத்து வந்து, சின்னப் பையன்களை அதில் ஏற்றி, பொள்ளாச்சியில் கொண்டு போய் விட்டு வந்தார். இப்படி இரண்டு, மூன்று முறை அவர் வண்டியில் ஏற்றி பொள்ளாச்சிக்கு எங்களைக் கொண்டு போய் சேர்த்தார்.
அவரது பெருந்தன்மையான செயல், எங்கள் உள்ளத்தில் நன்றியுணர்வை உண்டாக்கியது.
பொள்ளாச்சி முகாமை என்னால் மறக்க முடியாது. இங்கு தான் என் வாழ்க்கையில் ஒரு சிறு திருப்பம் ஏற்பட்டது. தீபாவளிப் பண்டிகை நெருங்கிக் கொண்டிருந்தது. ரொம்ப நாட்களுக்கு பிறகு ஊருக்குப் போவதற்காக, கம்பெனி நிர்வாகிகளிடம் அனுமதி பெற்று, நானும், திருச்சி தங்கவேலுவும் ஊருக்குக் கிளம்பினோம்.
என் வீட்டாருக்கு என்னைக் கண்டதில் பெரும் மகிழ்ச்சி; தீபாவளியை அந்த வருஷம் கோலாகலமாகக் கொண்டாடினோம். நாங்கள் கம்பெனிக்கு திரும்ப வேண்டிய நாட்களும் நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ஒரு நாள் எம்.ஆர்.ராதா அண்ணன், என் வீட்டிற்கு வந்தார்.
ராதா அண்ணனைப் பார்த்ததில், எங்கள் எல்லாருக்கும் ஒரே சந்தோஷம். 'உன்னைப் பாக்க தான் வந்தேன்...' என்று, அவர் சொன்னதைக் கேட்டதும், எனக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. ராதா அண்ணன், என்னைத் தேடி வந்த காரணத்தைச் கூறினார். அவர் தனியே நாடகக் கம்பெனி ஆரம்பிக்க இருப்பதாகவும், அதில், என்னைச் சேரச் சொல்லி அழைப்பு விடுத்தார். என்னுடன் ஊருக்குப் புறப்பட்டு வந்த தங்கவேலுவையும், தன்னுடன் சேர்ந்து விடும்படி அழைத்தார். அப்போது தான் ராதா அண்ணன், எங்கள் கம்பெனி முதலாளியுடன் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து வந்த விவரம் எங்களுக்கு தெரிய வந்தது.
ஆனால், அது என்ன காரணத்திற்காக என்பது தெரியவில்லை; கேட்கவும் தைரியம் வரவில்லை. இரு நாட்கள் அவர் எங்கள் வீட்டிலேயே தங்கினார்; அந்த இரு நாட்களிலும் பலவாறு யோசித்துப் பார்த்தேன். 'கம்பெனியிலேயே பழையபடி போய்ச் சேர்ந்து விடுவதா அல்லது ராதா அண்ணனுடன் போவதா?' என்று!
கடைசியில், 'ராதா அண்ணன் பெரிய நடிகர்; சினிமாவில் நடித்துப் புகழ் பெற்றவர். அவரே என் வீட்டுக்கு வந்து கூப்பிடும்போது, போகாமல் இருந்தால் நன்றாக இருக்குமா? தவிர, ராதா அண்ணன் கம்பெனியில் பெரிய வேடங்கள் போடுவதற்கு, சீக்கிரத்திலேயே சந்தர்ப்பமும் கிடைக்கும்...' என்றெல்லாம் எண்ணிய நான், ராதா அண்ணனுடன் செல்வதென்ற முடிவுக்கு வந்தேன்.
வீட்டாரிடம் சொன்னேன்; என்னுடைய முடிவுக்கு அவர்கள் தடையாக நிற்கவில்லை. ராதா அண்ணனிடம், அவருடன் வருவதாகச் சொன்னோம்; எங்கள் முடிவை சந்தோஷத்துடன் ஏற்றுக் கொண்டார். நானும், தங்கவேலுவும் அவருடன் கிளம்பினோம்.
சென்னையைப் பற்றி பலவாறாக பிரமாண்டமாகக் கற்பனை செய்து வைத்திருந்ததால், நான், முதன் முதலாக அந்தச் சென்னையில், ஒருவகை புல்லரிப்புடன் காலடி எடுத்து வைத்தேன்.
கோவிந்தப்ப நாயக்கன் தெரு என்று நினைக்கிறேன். அங்கு ஒரு வீட்டில் தங்கினோம். மறுநாள் காலை, அங்கிருந்து டிராம் வண்டியில் (அப்போது சென்னையில் டிராம் ஓடிய காலம்) ஏறி, புகழ்பெற்ற மூர் மார்க்கெட்டுக்கு வந்தோம். எனக்கும், தங்கவேலுவுக்கும் புதுச் சட்டை, துணிகளை வாங்கிக் தந்தார் ராதா அண்ணன். அப்போது, மூர்மார்க்கெட்டில் பானு ஓட்டல் பிரபலம்; அங்கே தான், நாங்கள் தினமும் சாப்பிடுவோம்.
எங்கள் ரெண்டு பேருக்கும் ஒரு ரிக் ஷாவை ஏற்பாடு செய்து, ரிக் ஷாக்காரனிடம் சென்னையில் பார்க்க வேண்டிய முக்கியமான இடத்திற்கெல்லாம் எங்களை அழைத்துச் செல்லும்படி சொல்லி. செலவுக்கு கைநிறைய காசும் கொடுத்து அனுப்புவார் ராதா அண்ணன்.
உயிர் காலேஜ் (மிருகக் காட்சி சாலை), செத்த காலேஜ் (மியூசியம்), லைட் - ஹவுஸ், துறைமுகம் என, புதிதாக சென்னைக்கு வருபவர்கள், எந்த இடங்களை எல்லாம் பார்க்க விரும்புவார்களோ, அந்த இடங்களை எல்லாம், ஒன்று விடாமல் பார்த்தோம். காலையில் கிளம்பும் நாங்கள், நன்றாக இருட்டிய பின் தான், வீடு திரும்புவோம்.
ராதா அண்ணன், தான் தயாரிக்கவிருந்த நாடகங்களுக்கான உடைகளையும், மற்ற பொருட்களையும் வாங்குவதற்காகவே சென்னை வந்தார். குறிப்பாக, சில சினிமா கம்பெனிகளிடமிருந்து அவர்கள் தயாரித்து வெளியிட்ட படங்களில் உபயோகித்திருந்த உடைகளை வாங்கினார். மாத்ரு பூமி படத்தை வெளியிட்டிருந்த கம்பெனியிலிருந்து, நிறைய உடைகளை வாங்கினார்.
ஒரு நாள் ராதா அண்ணன், எங்கள் இருவரையும் ஒரு கம்பெனிக்கு அழைத்துப் போனார். பிரகதி ஸ்டுடியோவை சேர்ந்த கம்பெனி வீடு என்று நினைவு.
அங்கே...
— தொடரும்.

நன்றி - தினமலர்
தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு
http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22909&ncat=2

RAGHAVENDRA
7th December 2014, 09:00 AM
கதாநாயகனின் கதை - 10

தினமலர் வாரமலர் 07.12.2014



http://img.dinamalar.com/data/uploads/E_1417772190.jpeg

ராதா அண்ணனைக் கண்டதும், ஒருவர் ஓடோடி வந்தார். முட்டைக் கண்களும், ஒல்லியாக ஒடிந்து விழுவது போன்ற உடலமைப்பும் கொண்ட அவர், மரியாதையோடும், மிகுந்த அன்போடும் ராதா அண்ணனை வரவேற்றார்.
'சவுக்கியமா இருக்கியா?' என்று அவரைப் பார்த்து கேட்டார் ராதா அண்ணன்.
'சவுக்கியமா இருக்கேண்ணே...' என்று பணிவுடன் பதில் சொன்னவர், 'காபி சாப்பிடறீங்களா?' என்று கேட்டார்.
'வேண்டாம்... இப்போது தான் குடிச்சிட்டு வந்தோம்..' என்றார் ராதா அண்ணன்.
'அதனாலென்ன காபி தானே தரப் போகிறேன்; குடிச்சிட்டுப் போங்க...' என்று வற்புறுத்தினார் அவர்.
'வேண்டாம்பா...' என்றார் ராதா அண்ணன்.
'அப்படிச் சொல்லிட்டா எப்படி? நான் காபி கொடுக்கத்தான் போறேன்; நீங்க குடிச்சிட்டுத் தான் போகணும்...' என்று கட்டாயப்படுத்த ஆரம்பித்தார் அவர்.
'சரி சரி... கொண்டு வா; குடிச்சிட்டே போறேன்...' என்று சொன்னார் ராதா அண்ணன்.
ராதா அண்ணனின் பதிலைக் கேட்டதும், மகிழ்ச்சி பொங்க உள்ளே போனார் அவர்.
போன வேகத்திலேயே, முகத்தில் அசடு வழிய திரும்பி வந்தவர், 'காபி இல்லயாம்; தீர்ந்து போச்சாம்...' என்று சங்கோஜப்பட்டு கொண்டே சொன்னார்.
அவருக்கு ஒரே வெட்கமாகி விட்டது!
ராதா அண்ணன் பெருந்தன்மையுடன், 'அதனாலென்ன பரவாயில்ல; அப்போ நான் போயிட்டு வர்றேன்...' என்று அவரிடம் விடை பெற்று கிளம்பினார்.
அவர் யார் தெரியுமா?
அவர் தான், பிரபல காமெடி நடிகர் டி.ஆர்.ராமச்சந்திரன்.
அவர் யாரென்று அப்போது எனக்கு தெரியாது. பல நாட்களுக்குப் பிறகு தான், அவரைப் பற்றி தெரிந்து கொண்டேன்.
ஆரம்பத்தில் எல்லா நடிகர்களுக்கும், கம்பெனி வீட்டில் இப்படிப்பட்ட நிலைமைதான் இருக்கும். அவர்களுக்கு செல்வாக்கு வளர வளரத் தான், கம்பெனியிலும் அவர்களுக்கு மதிப்பும், வசதியும், பெருகும்.
அதாவது, அவர்கள் வளரும் போது, இவை எல்லாம் வளரும். ஆனால், வளரும் போதோ அவர்கள் கம்பெனியில் இருக்க மாட்டார்கள்.
ராதா அண்ணன், கம்பெனிக்காக வாங்க வேண்டிய சாமான்களை வாங்கி முடித்ததும், பழையபடி பொள்ளாச்சிக்கே திரும்பி வந்தோம். இங்கு வந்ததும் தான் ராதா அண்ணன், எங்களை கம்பெனியிலிருந்து பிரித்து அழைத்துச் சென்று விட்டது பற்றி, காரசாரமான விவாதங்கள், கம்பெனியில் நடைபெற்றதாகக் கேள்விப்பட்டோம்.
புதிய காட்சி ஜோடனைகளையும், சீன்களையும் (திரைச்சீலைகள்) தயார் செய்தார் ராதா அண்ணன். 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து, நாடகத்தை ஆரம்பித்தார். அந்த நாளில் இவ்வளவு பெரிய தொகையைச் செலவிட்டு ஆரம்பித்த கம்பெனி, ராதா அண்ணனுடைய தாகத் தான் இருக்கும்.
இப்படி பெருஞ்செலவில் உருவாக்கிய சீன்களையும், பல நல்ல நடிகர்களையும் ஒன்று சேர்த்து ஈரோட்டில் நாடகம் நடத்த ஆரம்பித்தார்.
ஈ.வெ.ரா.,வுக்கு சொந்தமான தியேட்டரில் தான் நாடகம் நடந்தது.
முதல் நாடகம், 'லட்சுமி காந்தன்!'
ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக வந்த மக்கள் கூட்டம், பத்து நாட்களில் குறைய ஆரம்பித்தது.
ஏன் என்று ஒருவருக்குமே புரியவில்லை.
இதனால், கம்பெனிக்கு நஷ்டம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கில், கடன் வாங்கும் நிலையும் ஏற்பட்டது.
நாடகத்தை ஆரம்பித்ததற்கும், பெரிய நஷ்டம் வருவதற்கும் இடையில் அதிக நாட்கள் கூட இல்லை. இறுதியில், தியேட்டருக்கான வாடகை பணத்தைக் கூட கொடுக்க முடியாமல், அதற்குப் பதிலாக பெரும் செலவில் உருவாக்கிய சீன்களை, அங்கேயே விட்டு விட்டு மீண்டும் பொள்ளாச்சிக்கே வரும்படி ஆகிவிட்டது.
இந்நிலையில், ராதா அண்ணனுக்கும், அவருடன் கம்பெனியில் பாகஸ்தர்களாக இருந்தவர்களுக்கும் இடையில் மன வேறுபாடு ஏற்பட்டு, கம்பெனியை இரண்டாகப் பிரிப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.
கம்பெனியில் பணம் போட்டவர்கள், சில முக்கியமான நடிகர்களையும், பையன்களையும் அழைத்து, ராதா அண்ணன் பேரில் புகார் சொல்லி, நல்லது கெட்டதைப் பாகுபடுத்திப் பார்க்க முடியாத பருவத்திலிருந்த சிறுவர்களாகிய எங்கள் மனதைக் கலைத்து, அவர்கள் கூடவே நாங்கள் இருக்கும்படி எங்கள் மனதைத் திருப்பி விட்டனர்.
ராதா அண்ணனும், அவர்களும் பிரிந்து கொள்வதற்காக ஒரு பஞ்சாயத்து நடந்தது.
'யார் யார், ராதா அண்ணனுடன் போகின்றனர், யார் யார் இங்கேயே இருக்கப் போகின்றனர்?'என்ற கேள்வியை பஞ்சாயத்தார் எல்லாரிடமும் கேட்டனர்.
கம்பெனியில் இருந்த பெரும்பாலோர், ராதா அண்ணனுடன் போகாமல், அங்கேயே தங்கி விடுவதாகக் கூறினர். அப்படிச் சொன்னவர்களில் நானும் ஒருவன்.
எங்கள் முடிவைக் கேட்டதும், ராதா அண்ணன் மன வேதனையுடன் பிரிந்து போனார்.
பணம் போட்டவர்கள், பாலக்காடு கிருஷ்ணப் பிள்ளை தலைமையில், எங்களை அழைத்துக் கொண்டு பாலக்காட்டுக்கு வந்தனர்.
பாலக்காடு, நெம்மாரா, வல்லங்கி, கொல்லங்கோடு போன்ற ஊர்களிலும் மற்றும் பல சின்ன சின்ன ஊர்களிலும் வழக்கம் போல ஸ்ரீ கிருஷ்ண லீலா, ராமாயணம் போன்ற நாடகங்களை நடத்த ஆரம்பித்தோம்.
கொல்லங்கோடு மகாராஜா மிகச் சிறந்த கலா ரசிகர். அவர் தன் குடும்பத்துடன், அடிக்கடி எங்கள் நாடகத்தை பார்க்க வருவார். கொல்லங்கோட்டில் தான், 'மனோகரா' நாடகத்தில், முதன் முதலாக மனோகரனாக, கதாநாயகன் வேடத்தில் நடிக்க ஆரம்பித்தேன்.
என் வாழ்க்கையில் பெரிய திருப்பமும், லட்சியமும் கொல்லங்கோட்டில் தான் நிறைவேறியது. ஆம்! கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற என் கனவு மற்றும் லட்சியம், இங்கே தான் ஈடேறியது. இந்நாடகத்தில் மனோகரனாக நடித்த என் நடிப்பை பாராட்டி, கொல்லங்கோடு மகாராஜா, வெள்ளியால் தயாரிக்கப்பட்ட விலை உயர்ந்த ஆடை ஒன்றை பரிசாக தந்தார்.
கதாநாயகன் வேடம் போட்ட முதல் நாடகத்திலேயே எனக்கு இப்படி ஒரு பரிசு. அதுவும் சிறந்த கலா ரசிகரான, ஒரு மகாராஜாவால் கொடுக்கப்பட்டதை பெரும் பாக்கியமாகவே நினைத்தேன்.
மீண்டும் நாடகப்பணியில் தொய்வு ஏற்படவே, 'நாடகமும் வேண்டாம்; நடிப்புத் தொழிலும் வேண்டாம்...' என்று தற்காலிகமாக ஒரு முழுக்குப் போட்டு, திருச்சி - ஸ்ரீரங்கம் டிரான்ஸ்போர்ட் பஸ் கம்பெனியில் மெக்கானிக்காகச் சேர்ந்தேன்.
நடிப்புக்கு முழுக்குப் போட்டேனே தவிர, அந்த ஆர்வத்தை என்னால் தணிக்க முடியவில்லை. உள்ளூரில் அவ்வப்போது நடந்த அமெச்சூர் நாடகங்களில் நடித்தேன். இதுவும், என் கலை ஆர்வத்திற்கும், தாகத்திற்கும் போதுமானதாக இல்லை.
மறுபடியும் பொன்னுசாமி பிள்ளை கும்பகோணத்தில் கம்பெனி ஆரம்பித்து, என்னை அழைத்தார். அதில் சேர்ந்தேன்.
சென்னையில் முகாமிட்டிருந்த போது, இக்கம்பெனியை என்.எஸ்.கிருஷ்ணன் வாங்கினார். என்.எஸ்.கே.,யுடன் சில நாடகங்களில் நடித்தேன். துரதிருஷ்டவசமாக அவர் சிறை சென்று விடவே, நானும், கே.ஆர்.ராமசாமியும் தனியே பிரிந்து சென்று, தஞ்சாவூரில் ஒரு கம்பெனி ஆரம்பித்தோம்.
இதற்கிடையில், சென்னை சவுந்தர்ய மகாலில், ஈ.வெ.ரா., தலைமையில், ஏழாவது சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. இதில், 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' என்ற நாடகத்தில், சத்ரபதி சிவாஜியாக நடித்த என்னை அழைத்த ஈ.வெ.ரா., கணேசன் பெயரோடு ஒரு அடைமொழியைச் சேர்த்தார். அதுவே எனக்கு நிறந்தர பெயராக அமைந்து விட்டது.
அது...
— தொடரும்.
தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.


நன்றி - தினமலர்
தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22989&ncat=2

Russellisf
8th December 2014, 04:13 PM
comments portion a diehard nt fan

இந்த படத்தில் இருக்கும் நம் நடிகர் திலகத்தின் கம்பீரம், அழகு போதுமய்யா . நிஜ சத்ரபதி சிவாஜியே கண்முன்னே நிற்பது போல் உள்ளது. அந்த கணங்கள் ஒன்றே போதும் ஆயிரம் கதைகள் சொல்லும். மாபெரும் கலைஞன். இந்தியாவில் பிறந்தது மட்டுமே குற்றம். பல கோடிகளுக்கு அதிபதியாகி உலகமே மெச்சுகின்ற அளவுக்கு போகவேண்டியவர். திறமைக்கு மதிப்பில்லை. இறந்த பிறகு தான் அவருக்கு விருது வழங்கப்பட்டது. இப்போது எல்லாம் பல நாய்கள் நடிப்புங்கிற பெயரில் கைய, கால ஆட்டி 3 படங்கள் ஹிட் கொடுத்தவுடன் பல கோடிகள் சம்பளம் கேக்குதுங்க, தனக்கு தானே கட்டவுட் பாலபிஷேகம் பட்டம் வேறு. விளக்குமாறுக்கு பட்டு குஞ்சலம்

RAGHAVENDRA
14th December 2014, 09:17 AM
கதாநாயகனின் கதை - 11

தினமலர் வாரமலர் 14.12.2014




http://img.dinamalar.com/data/uploads/E_1418325014.jpeg

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' என்ற நாடகத்தில், சத்ரபதி சிவாஜியாக நடித்த என்னை, 'சிவாஜி கணேசன்' என்று அழைத்தார் ஈ.வெ.ரா.,
விழுப்புரம் சின்னையா மன்றாயரின் மகனான வி.சி.கணேசன், அன்று முதல், சிவாஜி கணேசன் ஆகிவிட்டேன். இச்சம்பவம், என் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பமாக அமைந்தது.
சென்னையில் சக்தி நாடக சபை சார்பில், நாடகங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, 'சம்சார நவுகா' என்ற நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார் பி.ஆர்.பந்துலு. அதில், அவரது நடிப்பு என்னை கவர்ந்து விட்டது. அன்று
முதல் அவரது விசிறியாகி விட்டேன்.
பி.ஆர்.பந்துலுவுக்கு மட்டுமல்ல, ராதா அண்ணன் நடிப்புக்கும் நான் விசிறி!
சக்தி நாடக சபையிலிருந்த முக்கிய நடிகர்கள் பலர் விலகி விடவே, எனக்கு அதில் சேர அழைப்பு வந்தது; அதில் சேர்ந்தேன்.
அப்போது அதன் முக்கிய நாடகங்களில், 'விதி' என்ற நாடகமும் ஒன்று. வேலூரில் இந்நாடகத்தைப் பார்த்த பி.ஏ.பெருமாள், கம்பெனி நடிகர்களை வைத்தே இதைப் படமாக்க விரும்பினார். ஆனால், என்ன காரணத்தினாலோ அது நடைபெறவில்லை.
கடந்த, 1950ல், திருச்சியில் எங்கள் நாடகம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தான், என் வாழ்க்கையில் மற்றொரு பெரிய திருப்பம் ஏற்பட்டது.
சினிமாவில் நடிக்க வைப்பதற்காக கிருஷ்ணன், பஞ்சு மற்றும் பெருமாள் போன்றோர் திருச்சியிலிருந்து என்னை சென்னைக்கு
அழைத்து வந்தனர்.
அவர்கள் முயற்சியால், பராசக்தி கணேசனாகி விட்டேன். ஆனாலும், என்னை இந்தத் தொழிலுக்கு இழுத்து வந்த கட்டபொம்மனை மறக்க முடியவில்லை. ஒரு நாளாவது கட்டப்பொம்மனாக நடித்து விட வேண்டுமென்ற எண்ணம், என்னை விட்டு அகலாதிருந்தது. இந்த என் எண்ணம் தான், சிவாஜி நாடக மன்றத்தில், 'கட்டபொம்மன்' நாடகம் உதித்ததற்கு காரணம்.
ஒரு நாள், கோவில்பட்டியில் நாடகம் நடத்திவிட்டு, கட்டபொம்மன் தூக்கில் தொங்கிய கயத்தாறு வழியாக திருநெல்வேலிக்கு காரில் போய்க் கொண்டிருந்தோம். எங்கள் தலைவர் சக்தி கிருஷ்ணசாமியும் உடன் இருந்தார். அவரிடம் என் வெகுநாளைய ஆசையைக் கூறி, கட்டபொம்மன் கேரக்டரை ஒரு சிறந்த நாடகமாக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினேன்.
அவர் நாடகத்தை எழுதி முடித்ததும், படித்துப் பார்த்தேன். நாடக அமைப்பும், அவர் எழுத்தும், தரமாகவும், புதுமையாகவும் இருந்தன. என் வெகுநாளையத் துடிப்புக்கு இரட்டிப்பு ஊக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், மற்றொரு எண்ணமும் பிறந்தது.
'சிவாஜி நாடக மன்றக் குழு'வில் ஏறக்குறைய, 60 கலைத் தொழிலாளர் இருந்தனர். அவர்களில் ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலோர் குடும்பம், குழந்தைகள் என உள்ளவர்கள்; அவர்கள் நாடக வருமானத்தையே பெரிதாக எதிர்பார்க்கும் நிலையில் இருந்ததால், அவர்கள் ஊதியத்தை அதிகமாக்க நினைத்தேன். ஆனால், அடிக்கடி நாடகம் நடந்தால் தான் அவ்வாறு செய்ய முடியும். அதனால், கட்டபொம்மன் நாடகத்தை எந்த குறையும் இல்லாமல், சிறப்பாக நடத்துவதற்காக புதிதாகவே தயாரிக்கத் திட்டமிட்டேன்.
'வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகத்தைத் தயாரிக்க ஏறக்குறைய, 20 மாதங்கள் ஆயின.
சக்தி கிருஷ்ணசாமியால் நாடகம் எழுதி முடிக்கப்பட்டதும், அதற்கான காட்சிகளின் சித்திரங்களை வரைய, தர்மராஜ் என்பவர் நியமிக்கப்பட்டார்.
ஆடை, அணி தயாரிப்புக்கென, டெய்லர் ராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். காட்சி ஜோடனைக்கும், உடைத் தயாரிப்புக்குமாக ஓராண்டு ஆனது. அதற்கென, 50 ஆயிரம் ரூபாய் செலவழிக்கப்பட்டது.
பின், ஓரிரு மாதங்கள் நாடகத்துக்கான ஒத்திகை நடைபெற்றது. பத்து நாட்கள் அண்ணாமலை மன்ற மேடையில் நாடக ஒத்திகையும், கடைசி நாள், முழு அமைப்போடு நாடக ஒத்திகையும் நடைபெற்றது.
ஆக., 28, 1957ம் ஆண்டு, புதன்கிழமை, 'வீரபாண்டிய கட்டபொம்மன்' நாடகம் முதன்முதலாக சேலம் கண்காட்சி கலையரங்கத்தில் அரங்கேற்றப்பட்டது. அதற்கு தலைமை தாங்கியவர், டாக்டர் மு.வ., அவர் நாடகத்தைப் பெரிதும் வியந்து, புகழ்ந்து பாராட்டினார். மக்கள் ஆதரவு, நாளுக்கு நாள் எதிர்பாராத வகையில் பெருக்கெடுத்தது. முயற்சியும், உழைப்பும், ஆசையும் வீணாகவில்லையென்ற உவகை, என் மனதை நிறைத்தது.
அதைத் தொடர்ந்து, சென்னையில் பல நாடகங்கள் நடந்து விட்டன. ஓய்வில்லாத படப்பிடிப்பிற்கிடையிலும், 25 நாட்களுக்குள்,
16 நாடகங்கள் நடந்தன.
பல நாடகங்களில், அதிக வேலையுள்ள பெரும் பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறேன். கட்டபொம்மன் நாடகத்தில் இயற்கையாக எழும் உணர்ச்சி, நாடக முடிவில் எத்தகைய களைப்பை, சிரமத்தை உண்டாக்கும் என்பதை நினைத்த போது பயமாக இருந்தது என்றாலும், என் குழுவினர்களோடு ஒன்றுபட்டுச் செயல்படுவதில் காணும் இன்பமும், மக்களின் பாராட்டுதலை நேருக்கு நேர் பெறும் வாய்ப்பும், எனக்கு, எதிலும் பெற முடியாத ஒரு தனி மகிழ்ச்சியைத் தந்தது.
— தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.


நன்றி தினமலர்

தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23081&ncat=2

RAGHAVENDRA
21st December 2014, 04:11 PM
கதாநாயகனின் கதை - 12

தினமலர் வார மலர் 21.12.2014



http://img.dinamalar.com/data/uploads/E_1418894594.jpeg

அலைகடல் ஓரம் நின்று கொண்டிருந்தேன். அலைகள் உருண்டு ஒன்றோடு ஒன்று மோதுகின்றன. அப்போது ஆயிரக்கணக்கான முத்துகளை உதிர்க்கின்றன; கரையோரம் வந்து தவழ்ந்து, பழையபடியே கடலுக்குள் சென்று சங்கமம் ஆகின்றன.
இதே போன்று தான் நடிப்பு என்பதும் ஒரு பெரிய கடல். இதில், காட்டப்படும் ஆயிரமாயிரம் உணர்ச்சிகள் தான் அதன் முத்துகள்; பலதரப்பட்ட பாவங்கள் அதன் அலைகள்!
கடலைப் போல் நடிப்பும் எல்லையில்லாதது; அதேசமயம் எல்லைகளைக் கடந்து நிற்பதும் அது தான்!
அத்தகைய நடிப்பைப் பற்றி நான் கற்றிருப்பதோ கை மண்ணளவே!
அப்படியானால் இதை நான் ஏன் எழுத வேண்டும்... அதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது?
நமக்குத் தெரிந்ததை, அது சிறிதளவானாலும், பிறருடன் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை. அதேசமயம், 'எனக்குத் தெரிந்தது இது தான்; இன்னும் நான் கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது...' என்று சொல்லிக் கொள்வதிலும் தவறில்லை; வெட்கப்பட வேண்டியதும் இல்லை. எனக்குத் தெரியாததை, மற்றவர்கள் கற்றுத் தரலாம் அல்லவா?
சிலரை, 'பிறவி நடிகன்' என்று அடைமொழி கொடுத்து அழைப்பர். என்னைக் கேட்டால், உலகில் உள்ள ஒவ்வொருவருமே பிறக்கும் போதே நடிகனாகத் தான் பிறக்கிறான். நடிப்பு என்பது, மனிதர்களின் ரத்தத்துடன் கலந்தே இருப்பது.
ஒரு சிறு குழந்தை, தன் பிஞ்சுக் கரங்களால், தன் கண்களை மூடியபடி, தன் அம்மாவையோ, அப்பாவையோ பார்த்து, 'ஆ.... பூச்சாண்டி...' என்று பயமுறுத்துகிறது. அதைக் கண்டு குழந்தையின் பெற்றோர், பயப்படுவது போல நடிக்கின்றனர்.
குழந்தை பூச்சாண்டி காட்டுவதும், பெற்றோர் அதைக் கண்டு பயப்படுவதும் நடிப்பு தானே!
இதை யார் சொல்லிக் கொடுத்தது? இறைவனே தந்தது; இயல்பாகவே, இயற்கையாகவே அமைந்தது.
கடன்காரன் வருகிறான்... 'அவர் வீட்டில் இல்லயே...' என்று, கணவன் வீட்டிலிருக்கும் போதே, இல்லாதது போல நடிக்கிறாள் மனைவி. வருபவனும் அதை நம்பி விடுகிறான்.
இங்கே, அந்த மனைவிக்கு நடிப்பைச் சொல்லிக் கொடுத்தது யார்?
இறைவன், இயற்கை, இயல்பு!
கடன் கேட்க வருபவன், தன் கஷ்டத்தை எல்லாம் பலவாறு முகத்தில் படம் பிடித்துக் காட்டுகிறான். அவன் முக பாவம், குரலின் ஏற்ற இறக்கத்தினால் அவன் கஷ்டத்தை உணர்ந்து, மனம் இரங்கி, இன்னொருவன் கடன் கொடுக்கிறான்.
இங்கே, கடன் கேட்பவனுக்கு நடிப்பைச் சொல்லித் தந்தது யார்?
இப்படியே, ஒவ்வொருவருமே ஒவ்வொரு கட்டத்தில், தினமும் நடிக்கத்தான் செய்கின்றனர்; அந்த நடிப்பை பலர் நம்பத்தான் செய்கின்றனர்.
இப்படி பலதரப்பட்ட மனிதர்களின் செயல்களையே நாங்கள் மேடையிலும், திரையிலும் கலை என்கிற பெயரில் செய்கிறோம்.
இக்கலை, நம் நாட்டில் எப்போது வந்தது? காலம் காட்ட முடியாத பழங்காலத்தில் இருந்தே, தமிழ் இலக்கியங்கள் தோன்றிய காலத்திலிருந்தே வந்திருக்கிறது.
அப்போது, இது, கூத்து என்று அழைக்கப்பட்டது.
கடந்த, 19ம் நூற்றாண்டில் நாடகக் கலைக்கு உயிர் கொடுத்தார் சங்கரதாஸ் சுவாமிகள்.
நாடகம் என்றால் என்ன, அதன் இலக்கணம் என்ன, அது எப்படி அமைக்கப்பட வேண்டும், எப்படி நடிக்க வேண்டும் என்பதையெல்லாம் எடுத்துச் சொன்னவர் சுவாமிகள் தான். 40க்கும் மேற்பட்ட நாடகங்களை இவர் எழுதியுள்ளார்.
இதேபோல், அமெச்சூர் கோஷ்டி வகையில், நாடகத்தை ஆரம்பித்து, அதற்கு ஒரு மறுமலர்ச்சியைக் கொடுத்தவர் பம்மல் சம்பந்த முதலியார்.
இவர், மனோகரா மற்றும் வேதாள உலகம் ஆகிய நாடகங்களை எழுதியதோடு, மேடையில் நடித்தும் காட்டினார். முதன் முதலாக ஆங்கில கவிஞர் ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும், வடமொழிக் கவி காளி தாசனின் நாடகங்களையும், தமிழில் மொழி பெயர்த்தவர் இவரே!
கடந்த, 1922ல் தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர், கதரின் வெற்றி என்ற நாடகத்தை எழுதினார். தமிழில் எழுதப்பட்ட முதல் தேசிய நாடகம் இது. மேலும், இவர், தேசியக் கொடி என்ற நாடகத்தை, சுதந்திரப் போராட்டத்தை அடிப்படையாக வைத்து எழுதினார்.
இவர், சொந்தமாக ஒரு நாடகக் குழு வைத்திருந்ததோடு, லண்டனில் தமிழ் நாடகங்களையும் நடத்தி, நம் நாடகக் கலையின் மேன்மையை உணர்த்தியவர்.
பதி பக்தி, பம்பாய் மெயில் மற்றும் பர்த்ருஹரி - ஆகியவை பாவலரின் படைப்புகளே!
இதன்பின், எம்.கந்தசாமி முதலியார், நாடகக் கலையின் வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத்தார். பெரும்பாலான நடிகர்கள், ஏதாவது ஒரு வகையில் இவருடன் தொடர்பு கொண்டவர்களாகவே இருப்பர்.
நடிப்புக் கலை நம் நாட்டில் எப்படி வளர்ந்தது, வேரூன்றியது என்பதற்காகவே இவற்றை சொல்கிறேன்.
இப்படி பல மேதைகளால் வளர்க்கப்பட்டு, உருவாக்கப்பட்ட இக்கலையில், நான் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது.
ஆனால், ஒரு நடிகன் என்ற நிலையில், 'என் நிலை மற்றும் என் எண்ணம் என்ன?' என்பதையே நான் இங்கு சொல்ல முயற்சி செய்திருக்கிறேன்.
ஆரம்பத்தில் சொன்னது போல, நடிப்பு என்பது ஒரு பெரிய இலக்கியம் போன்றது.
நடிப்பை நாட்டின் வளர்ச்சிக்கும், சமூகத்தின் வளர்ச்சிக்கும் எந்தெந்த வகையில் பயன்படுத்தலாம், இன்னும் எந்தெந்த வகைகளில் நடிப்பில் புதுமையை உண்டாக்க முடியும் என்று பார்க்க வேண்டும்.
கை, கால்களை ஆட்டி, முக அசைவுகளை உண்டாக்கி நடிப்பது ஒரு வகை என்றால், மனதில் உள்ள உணர்ச்சிகளை வெளியே காட்டாமல், வசனம் பேசி நடிப்பது மற்றொரு வகை.
அதிகம் பேசாமல், கண் அசைவிலும், உதட்டின் நடுக்கத்திலும் நடிப்பது பிரிதொரு வகை நடிப்பாகும்.
எந்த உணர்ச்சியும் இல்லாமல், ஜடமாக நிற்பதும் ஒரு வகை நடிப்பு தான்!
இவை அத்தனையிலும் ஏதாவது ஒரு வகையில் மாறுபாட்டை உண்டாக்க விரும்பி, அதில், இப்போது தான் முதல் படி எடுத்து வைத்திருக்கிறேன். இன்னும் ஆயிரம் படிகள் மேலே இருக்கின்றன.
ஏதாவது ஒரு சம்பவம் ஏற்பட்டு, அந்தச் சம்பவத்தின் தன்மையை பிரதிபலிக்க முடியாமல், சில சமயத்தில் முகத்தை மூடிக் கொள்கிறோமே... என்ன காரணம்? அந்தச் சம்பவத்துக்குத் தகுந்தாற் போல, நம்மால் அப்போது உணர்ச்சியை முகத்தில் காட்ட முடிவதில்லை.
சில சமயம் தேர்ந்த நடிகர்களாலும், இது முடிவதில்லை.
உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.
'சொர்க்கத்தில் அவளை விட்டு விடு' என்று ஒரு ஆங்கிலப் படம்.
இப்படத்தில் ஒரு காட்சியில், படத்தின் கதாநாயகி, தன் சொந்த மைத்துனனையே தண்ணீரில் மூழ்கடித்து சாகடிப்பது போல ஒரு காட்சி.
தன் கையாலேயே, தன் நெருங்கிய உறவினரையே கொல்லும் போது, அவளது முக பாவம் எப்படி இருக்கும்?
இதில், கதாநாயகியாக ஜீன் டிரனி என்ற ஒரு நடிகை நடித்தார். எவ்வளவோ முயற்சித்தும், அந்த உணர்ச்சியை அவரால் முகத்தில் கொண்டு வர முடியவில்லை.
இயக்குனர் பொறுமையை இழந்து விட்டார்.
நடிகையிடம் ஒரு கூலிங் கிளாசை போட சொல்லி, கண்களை மறைத்து விட்டார்; அவர் எத்தகைய உணர்ச்சியை வெளிக்காட்டினார் என்பதே தெரியவில்லை.
இங்கே அந்த நடிகைக்கு வெற்றி இல்லை; இயக்குனருக்கு தான் வெற்றி!
ஆனால், என்னைப் பொறுத்தவரை, அந்தக் கூலிங் கிளாசை அணியாமல், எவ்வளவு உணர்ச்சிகளைக் கொட்டி நடிக்க வேண்டுமோ, அதைக் காட்டி நடிக்கவே முயற்சிப்பேன்; அதில் வெற்றி பெற, எவ்வளவு கடினமாக உழைக்க வேண்டுமோ அதைச் செய்வேன்.
இப்படி சொல்வது ஆணவத்தின் அடிப்படையில் அல்ல; ஆசை, ஆர்வம் மற்றும் திறமையைக் காட்ட வேண்டும் என்ற துடிப்பினால் தான்.
நான் ஒரு பெரிய சுயநலக்காரன்; ஆம்! நடிப்பில் புதுமைகளைப் புகுத்தி, சமூகத்திற்கு அதை எப்படிப் பயன்படுத்தலாம், மக்களை எப்படி மகிழ்விக்கலாம் என்ற எண்ணம் இருந்தாலும், அதே நடிப்பால் என்னை வளர்த்துக் கொள்வது எப்படி என்பது குறித்து சிந்திப்பேன். ஒருவன் தான் ஈடுபட்டிருக்கும் கலையில், மேலும் வளர்ச்சி பெற்று, முன்னேற்றம் காண முயற்சிப்பதில் தவறு இல்லையே! நடிகனுக்கு தன் மீது அதிக அக்கறை ஏற்பட்டால் தான், அந்த அக்கறை மற்றவர்களுக்கும் பயன்படும்; பயன்படுத்த முடியும்.
கண்கள் ஆயிரம் கதை பேசும் என்று சொல்வர். அது, காவியமே பேசும்!

கண்களாலேயே பலவித பாவங்களைக் காட்ட முடியும். உள்ளத்தில் இருப்பதை இரண்டு விழிகளினாலேயே உணர்த்தி விடலாம்.
அகத்தின் அழகை, முகத்தில் பார்க்கலாம் என்று இதனால் தான் சொல்கின்றனர்.
அந்த முகத்திலேயே, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது விழிகள் தான். உள்ளத்தின் ஜன்னல்கள் அவை!
பார்வைக்குப் பார்வை, வித்தியாசத்தையும், உணர்ச்சிகளிலே வேற்றுமைகளையும் காட்டலாம்.
பேசும் கண்கள் என்று சொல்வரே... அது உண்மை. நாள் கணக்கில் பேச வேண்டியதை, ஒரு பார்வையே சொல்லிவிடும். பார்வையாலேயே பலவித நடிப்புகளை காட்டலாம்.
— தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை


நன்றி தினமலர்

தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23172&ncat=2

RAGHAVENDRA
28th December 2014, 11:08 AM
கதாநாயகனின் கதை - 13

தினமலர் வாரமலர் 28.12.2014



http://img.dinamalar.com/data/uploads/E_1419495759.jpeg

சிறுவனாக இருந்த போது ஒடிந்து விழுவது போலத்தான் இருப்பேன். உடலில் சதை அதிகம் இருக்காது. முகத்தில் பெரிதாக விழிகள் மட்டும் தான் இருக்கும். இந்த விழிகளைப் பார்த்துத்தான், 'மூக்கும், முழியும் பையனுக்கு நன்றாக இருக்கிறது...' என்று கூறி, நாடகக் கம்பெனியில் சேர்த்துக் கொண்டனர்.
கம்பெனியில் எங்கள் ஆசிரியர் சின்ன பொன்னுச்சாமி பிள்ளை என்னை பார்த்து, 'பையன், குறுகுறுன்னு இருக்கான்; நல்ல முழிகள் இருக்கு...' என்று சொல்லி, கிருஷ்ணர் வேஷத்தைத் தான் முதலில் கொடுத்தார். அடுத்தபடியாக சூர்ப்பனகை வேஷத்தை அளித்தார்.
'கண்களால் தான் நிறைய உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியும். இப்படிப்பட்ட வேஷங்களைக் கொடுத்தால் நன்றாகச் செய்வான்...' என்று அப்போது, அவர் நினைத்தார். தவிர, அவ்வப்போது என்னை அழைத்து, 'நடிக்கும்போது நல்லா கண்ணை உருட்டிப் பாரு...' என்பார். நானும் கண்களை விரித்து, அப்படி இப்படிப் பார்த்து, கரகோஷம் வாங்குவதும் உண்டு.
ஆனால், இம்மாதிரி தேவைப்படும் போது, தேவைப்படும் அளவுக்கு, உணர்ச்சிகளைக் கொட்டவும், அதற்கேற்ப உடலின் அங்க, அவயங்களை உபயோகிக்கவும், பல நாள் பயிற்சி பெற வேண்டும். எடுத்த எடுப்பிலேயே வந்து விடாது.
எந்த வேடமானாலும், அதை, அவன் பல முறை தன் மனத்திற்குள் எண்ணிப் பார்க்க வேண்டும். கற்பனையில் அப்பாத்திரத்தை உருவகப்படுத்தி, வாழ்க்கையில் அந்தப் பாத்திரங்களைப் போல் அவன் சந்தித்தவர்களை எண்ணிப் பார்த்து, மனக்கண் முன் கொண்டு வர வேண்டும்; பின், அம்மாதிரி நடிக்க கொஞ்சம் கொஞ்சமாக முயற்சிக்க வேண்டும். இந்த மாதிரியான பயிற்சி தான் ஒத்திகை.
பல் துலக்கும் போதும், முக சவரம் செய்து கொள்ளும் போதும், குளிக்கும் போதும் எப்படி முகபாவங்கள் மாறுகின்றன என்பதை யெல்லாம் ஒரு நடிகன் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
ஏனெனில், அவனுக்கு அந்த உணர்ச்சிகளையும், பாவங்களையும் காட்டக்கூடிய சந்தர்ப்பம் எந்தக் கட்டத்திலும், எந்தப் படத்திலும் வரலாம். இதற்கெல்லாம் தனித்தனியாக ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா!
எந்த ஒரு நடிகனுக்கும் தன் வேடத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க, அமைதியான சூழ்நிலை முக்கியம்.
தனிமையில், அமைதியாக இருக்கும் போது தான், தான் நடிக்கவிருக்கும் வேடம் குறித்து உருவகப்படுத்திப் பார்க்க முடியும்.
ஒரு எழுத்தாளனுக்கு தனிமை எப்படி முக்கியமோ, அது போலவே நடிகனுக்கும் முக்கியம்.
பெரும்பாலும் குளியல் அறையில் தனிமையில் இருக்கும்போது தான், அன்று செய்ய வேண்டிய வேடத்தைப் பற்றி சிந்திப்பேன்; என் மனத்திற் குள்ளேயே, பல முறை ஒத்திகை பார்த்துக் கொள்வேன்.
இது என் வேலையை சுலபமாக்கி விடும்.
'ஆள் பாதி ஆடை பாதி' என்பர்.
வெறும் வேடம் மட்டும் நடிகனுக்கு உதவாது; வேடத்திற்குப் பொருத்தமான உடை அணிய வேண்டும். ராஜா வேடம் போட வேண்டுமானால், பட்டாடை அணிந்து, தலையில் கிரீடம் வைத்துக் கொள்ள வேண்டும். அரக்கன் வேடம் என்றால், மீசை கண்டிப்பாக இருக்க வேண்டும். நடிக்கும் பாத்திரங்களின் குணாதிசயங்களுக்கு ஏற்றபடி, உடை அணியவும் தெரிந்திருக்க வேண்டும்.
வேடம், உருவம், உடை மூன்றும் இருந்தால் போதாது; போட்டிருக்கும் வேடத்திற்கேற்ற உணர்ச்சியையும் கொண்டு வர வேண்டும்.
நடிகனின் பணி அப்போது தான் முற்றுப் பெறுகிறது.
கப்பலோட்டிய தமிழன் படத்தில், ஒரு காட்சி. வ.உ.சி.,க்கு, 60 வயது ஆகிவிடுகிறது; இதற்காக, 60 வயது கிழவனைப் போல நான், 'மேக்-அப்' போட்டுக் கொண்டேன். வ.உ.சி.,யிடம் அவரது நண்பர் ஒருவர் வந்து, பாரதியார் இறந்து விட்டதாகச் சொல்வார். அதைக் கேட்டதும், வ.உ.சி., 'ஓ'வென்று கதறி அழ வேண்டும். அஞ்சா நெஞ்சம் படைத்த வ.உ.சி.,யையே கலங்க வைத்து விட்ட இந்தக் காட்சியில் சிறப்பாக நடிக்க வேண்டும்.
வைர நெஞ்சம் படைத்த வ.உ.சி., எப்படி அழுதிருப்பார், இந்தக் கட்டத்தில் நான் எப்படி நடிக்க வேண்டும், எப்படி நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்வர் என்பது பற்றி இரண்டு, மூன்று நாட்கள் யோசித்தபடி இருந்தேன். வெறுமே கதறி அழுது நடித்தால் மட்டும் போதாது; உண்மையான உணர்வு வர வேண்டும். இதை எப்படிக் கொண்டு வருவது?
அரும்பாடுபட்டேன்; எப்படி எப்படி யெல்லாமோ சிந்தித்து பார்த்தேன். ஒன்றும் புலப்படவில்லை. படப்பிடிப்பு தினம் வந்தது; செட்டுக்குள் வந்து விட்டேன். நான் நடிக்க வேண்டிய நேரமும் வந்துவிட்டது. கேமராவுக்கு முன்னால் போய் நிற்கிறேன்...
நான் எதிர்பார்த்த, மனதில் உருவகப்படுத்திக் கொண்ட பாவம் வரவேயில்லை.
கேமரா ஓடிக் கொண்டே இருக்கிறது... கேமரா ஓடிக் கொண்டிருக்கிறதே என்று நினைத்தேன். திடீரென்று, என்னையும் அறியாமல் ஒரு வெறி, வேகம்... எங்கிருந்தோ உணர்ச்சி பொங்கி வந்தது. நான் தான் அதைக் கொட்டி நடித்தேன் என்று சொல்ல முடியாது. கடவுள் தான் அப்போது எனக்கு உதவி செய்தார் என்று சொல்வேன்.
காட்சி முடிந்தது; கேமரா நிற்கவில்லை. 'கட்' என்று சொல்ல, டைரக்டராலும் முடியவில்லை; காரணம், அவரும் அழுது கொண்டு இருந்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது?
வேடத்தைப் பற்றியும், காட்சியைப் பற்றியும் நடிக்கப் போகும் முன், கூடுமான வரை சிந்தித்துப் பார்ப்பது நல்லது. நடிகனும் ஒரு மனிதன். அவனுக்கும் அன்றாடப் பிரச்னைகள், கடமைகள், ஆசாபாசம், சொந்த அலுவல்கள் உண்டு. வீட்டை விட்டு இறங்கி, 'மேக்-அப்' அறைக்குள் நுழைந்தால், அவன் வீட்டை மறந்து, தன் கதாபாத்திரத்தைப் பற்றியே நினைக்க வேண்டும். அதேசமயம், தன்னை மறந்து விடவும் கூடாது. இதை ஒரு உதாரணம் சொல்லி, விளக்குகிறேன்.
பாசமலர் படத்தின் கடைசி காட்சி!
'கை வீசம்மா கை வீசு...' என்று உணர்ச்சிகரமாக பாடியபடி நானும், சாவித்திரியும் நடிக்க வேண்டும். டைரக்டர் பீம்சிங் காட்சியை விளக்கி, 'உணர்ச்சி முழுவதையும் கொட்டி நடிக்க வேண்டும்...' என்று சொன்னார். அவர் சொன்னது ரொம்ப அழகாகவும், விளக்கமாகவும் இருந்தது.
ஆனாலும், 'எப்படி நடித்தால் நன்றாக இருக்கும்...' என பலவாறு சிந்தித்தும், தெளிவான உருவம் கிடைக்கவில்லை. நானும், சாவித்திரியும் நடிக்க ஆரம்பித்தோம். கப்பலோட்டிய தமிழன் படத்தில் வ.உ.சி., கதறி அழும் கட்டத்தில் வந்தது போல, கடைசி நிமிடத்தில் என்னைச் சுற்றிலும் இருப்பவர்களை மறந்து, கேமராவை மறந்து, என் பக்கத்திலிருந்த சாவித்திரியையும் மறந்து, 'எனக்கும் இப்படி ஒரு தங்கை இருந்து, அவளுக்கு இப்படி ஒரு நிலை வந்தால், எப்படி இருக்கும்...' என்ற எண்ணம் வந்தபோது தான், அந்த உணர்ச்சி பொங்கிப் பீறிட்டு வந்தது.
சாவித்திரியும், நானும் நடித்து முடித்தோம். சாவித்திரி அழுகையை நிறுத்த, ஒரு மணி நேரத்திற்கு மேலாகி விட்டது.
அவ்வளவு தூரம் நெகிழ்ந்து இருந்தார்.
— தொடரும்.
தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.


நன்றி - தினமலர்
தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23252&ncat=2

RAGHAVENDRA
4th January 2015, 08:51 AM
கதாநாயகனின் கதை - 15

தினமலர் வாரமலர் 04.01.2015



http://img.dinamalar.com/data/uploads/E_1420101693.jpeg

நான் ஆரம்பத்தில் சொன்னபடி நடிகர்கள் தங்களை மறக்கக்கூடாது என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். ஏனெனில், அவன், தன்னை மறந்து விட்டால், கேமராவுக்கு எந்தக் கோணத்தில் தன் முகத்தை வைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும், எந்த இடத்தில் நாம் நிற்கிறோம், வசனத்தை எந்த இடத்தில் எப்படி அழுத்தியோ, மெல்லவோ பேச வேண்டும், எப்படி நடிக்க வேண்டும் என்பதையெல்லாம் அவனால் நிர்ணயித்துக் கொள்ள முடியாமல் போய்விடும். பாத்திரத்தின் முழு தன்மைக்கேற்ப தன்னை உருவகப் படுத்திக் கொள்ளும் அவன், தான் நடிப்பது நடிப்பு என்பதையும் உணர்ந்து, தன்னை மறக்காமல் இருக்க வேண்டும். மறந்து விட்டால், அவனுக்கே அவன் செய்வது என்ன என்பது தெரியாது.
மக்களைப் கவர அவன் தன் நடிப்பைத் தான் பயன்படுத்துகிறானே தவிர, தன்னை அல்ல என்பதை நடிகன் உணர வேண்டும்.
நடிப்பு மட்டும் யாரையும் எந்த விதத்திலும் வசப்படுத்தாது; பார்ப்பவர்களிடம் எந்தவிதமான மாறுதலையும் உண்டாக்காது. உணர்ச்சியுடன் அது வரும்போது தான் நடிப்புக்குண்டான சக்தியே விஸ்வரூபம் எடுக்கிறது. நடிப்புக்கு அப்படி என்ன பெரிய சக்தி இருக்கிறது? எழுத்துக்கு எவ்வளவு சக்தி உண்டோ, அதை விட அதிகமான சக்தி நடிப்புக்கும் உண்டு. எழுத்தைப் படித்தால் மட்டுமே உணர முடியும். நடிப்பைப் பார்த்தாலே உணர முடியும்.
இதனால் தான் மக்கள் மனதில் எதைச் சொல்வதற்கும் நடிப்பே முக்கியமானது என்று பலர் கருதுகின்றனர்.
நல்ல நடிப்பால் மனம் மாறியவர்களும் உண்டு; தங்கள் வாழ்க்கையையே மாற்றிக் கொண்டவர்களும் உண்டு. 20ம் நுாற்றாண்டின் மிகப் பெரிய தலைவர்களில் ஒருவரான காந்திஜி ஒரு சமயம், ஹரிச்சந்திரா நாடகத்தைப் பார்த்தார்.
பொய் பேசுவது எவ்வளவு இழிவான செயல், சத்தியம் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை இந்த நாடகத்தைப் பார்த்ததும் புரிந்து கொண்டார். பொய் பேசுவதை விட்டொழிக்க காரணமாக அமைந்தது, அன்றைய தினம் அவர் பார்த்த ஹரிச்சந்திரா நாடகம் தான் என்று காந்திஜியின் வாழ்க்கை வரலாற்றில் படித்திருக்கிறோம். சத்திய வழிக்கு காந்திஜியை திருப்பியது அந்த ஒரு நாடகம் தான்.
அப்படியானால், நடிப்புக்கு எவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது.
நான் சிறு வயதில் பார்த்த, கட்டபொம்மன் தெருக்கூத்து தான், என்னுள்ளே, நானும் ஒரு நடிகனாக வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்பியது. அது மட்டுமல்ல, என்னிடம் தேசிய உணர்ச்சியையும் அந்தத் தெருக்கூத்து தான் ஏற்படுத்தியது. அப்போது, அவர்கள் நடித்த கூத்து, இன்றும் என் மனதில் பசுமரத்தாணி போலப் பதிந்திருக்கிறது.
சிறந்த நடிகன் யார்?
'நடிப்புக் கலையில் இவன் பரிபூரணத்துவம் பெற்று விட்டவன்...' என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்து, அழைக்கக்கூடிய ஒரு நடிகர் எப்போதுமே இருக்க முடியாது.
ஏனெனில், நடிப்பு என்பது முற்றுப் பெற முடியாதபடி வளர்ந்து கொண்டே இருக்கும் ஒரு பெரிய கலை.
இதில் முற்றிலும் தேர்ச்சி பெற்று விட்டதாகச் சிலரைக் குறிப்பிட்டு அழைப்பது எப்படி பொருத்தமாகும்?
ஆனால், 'நடிப்புக் கலையில் நல்ல பயிற்சி உள்ளவர்கள் இவர்கள்...' என்று வேண்டுமானால் அழைக்கலாம்.
எனக்கே புதிராக உள்ள பல விஷயங்கள் இக்கலையில் இருக் கின்றன. ஒவ்வொரு முறையும் இந்தப் புதிர்களுக்கு நான் விடை காண முயலும்போது, ஒன்றல்ல, பல விடைகள் கிடைக்கின்றன. சரியான விடை எது என்று என்னால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை.
ஆம், ஆரம்பத்தில் நான் சொன்னது போல நடிப்பு ஒரு பெரிய கடல். அதன் கரையில் தான் நான் நின்று, வியப்புடன் பார்த்தபடி இருக்கிறேன்.
நாலும் தெரிந்தவன் தான் நடிகனாக முடியும்.
அந்த நான்கு என்ன?
* தொழிலில் ஆர்வம்
* ஆழ்ந்த பயிற்சி
* புரிந்து செயல்படும் திறன்
* தன்னம்பிக்கையின் துணை
— இவை தான் அந்த நான்கு.
இந்த நான்கும் நான் சொன்னது அல்ல; இந்தத் துறைக்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்த பல பெரியோர்கள் சொன்ன கருத்துகள்.
கருத்து என்று சொல்வதை விட, நடிப்புக் கலைக்கு வகுத்துள்ள இலக்கணம் என்றே சொல்லலாம்.
இந்த நான்கையும் நான் கடைப்பிடிக்கிறேனா?
இந்த இலக்கணத்தின் எல்லைக்குள் தான், என் கலைப் பணியைச் செய்து வருகிறேனா?
சொல்வது சுலபம்.
செய்வது கடினம்!
என்னால் முடிந்தவரை இவற்றை கடைப்பிடித்து வருகிறேன்.
'முடிந்த வரை' என்று தான் சொல்லி இருக்கிறேன்; 'முழுக்க முழுக்க' என்று நான் சொல்லவில்லை.
ஏன் முழுக்க முழுக்கக் கடைப்பிடிக்க முடியாதா?
முடியும்!
ஆனால், எல்லாராலும் அது முடியுமா, எந்த அளவுக்கு சந்தர்ப்பம் ஒத்துழைக்கும் என்பதையும் பார்க்க வேண்டும்.
தவிர, முழுமையாகவே கடைப்பிடித்து, அதில் சொல்வதற்கு இனி ஒன்றுமில்லை என்று சொல்வதும் சரியல்ல என்பதே என் வாதம்!
ஏன்?
எதையுமே முழுமையாகக் கற்றுத் தேர்ந்தவர் இந்த உலகில் இல்லை! கற்றது கை மண்ணளவு என்ற கணக்குத் தான், எல்லா பாடங்களுக்குமே சரியான விடை.
என்னையே நான் இப்போது விமர்சித்துக் கொள்கிறேன்.
தொழிலில் ஆர்வம் என்பது இயல்பாகவே ஒவ்வொருவரிடமும் ஏற்பட வேண்டும்.
எனக்கு நடிப்புத் தொழில் மீது சிறு வயதிலிருந்தே ஆர்வம் அதிகம் உண்டு. அதனால் தான், நான் சிறுவனாக இருந்தபோதே, என் பெற்றோர் என்னை நாடகக் கம்பெனியில் சேர்த்து விட்டனர்.
ஒருவனுக்கு எந்தக் கலையில் விருப்பம் அதிகம் இருக்கிறதோ, அந்தக் கலையில் அவனை ஈடுபடுத்தி, உற்சாகப்படுத்தி, ஊக்குவித்து வந்தால், விரைவில் அவன் அக்கலையில் தேர்ச்சி பெற முடியும்.
இது, பொதுவான உண்மை!
இந்த உண்மை என் விஷயத்தில் நடிப்புக் கலையின் மீது நான் கொண்டிருந்த ஆர்வத்தின் உருவில் இருந்தது.
அது மட்டுமல்ல, இந்த ஆர்வம் தொடர்ந்து வளர்ந்து வர வேண்டும்.
இதில் கொஞ்சமும் குறைவோ அல்லது தளர்ச்சியோ ஏற்பட்டு விடக் கூடாது.
அப்போது தான், தொழிலில் ஏற்படும் இந்த ஆர்வம் உண்மை யானதாக இருக்க முடியும்.
எந்த ஒரு தொழிலுக்கும், கலைக்கும் பயிற்சி அவசியம்.
பாடப் பாட ராகம்!
இதையும் நான் சொல்லவில்லை;
பெரியவர்கள் சொன்னது.
நடிப்புக் கலைக்கும் பயிற்சி தேவை.
இந்தப் பயிற்சி எங்கே கிடைக்கும்?
நாடக மேடைகள்தான் நடிப்புக் கலையை வளர்த்துக் கொள்ள, நல்ல பயிற்சிக் கூடங்களாக, பள்ளிகளாக நம் நாட்டில் இருந்து வருகின்றன.
— தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.


நன்றி - தினமலர்
தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23350&ncat=2

RAGHAVENDRA
11th January 2015, 09:33 AM
கதாநாயகனின் கதை - 16

தினமலர் வாரமலர் 11.01.2015



http://img.dinamalar.com/data/uploads/E_1420711316.jpeg

ஏ.வி.எம்., ஸ்டுடியோவின் மூன்றாவது படப்பிடிப்பு தளத்தில், படப்பிடிப்பின் இடைவெளியில் பத்திரிகை நண்பர் ஒருவர் என்னைப் பார்க்க வந்தார். 'வணக்கம்...' சொல்லி, என் வலது கையை, தன் வலது கையால் பற்றிக் கொண்டு, 'வாழ்த்துகள்...' என்று சொல்லியபடி குலுக்கினார். இந்த வாழ்த்து எதற்கென்று தெரியாமல் விழித்தேன்.
பதில் அவரிடமிருந்தே வந்தது... '1968ன் சிறந்த தமிழ்ப்படம், தில்லானா மோகனாம்பாள்...' என்று இந்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜனாதிபதியின் பரிசு கிடைத்திருப்பதைச் சொல்லி, 'நீங்கள் அதில் கதாநாயகன் ஆயிற்றே...' என்று, விளக்கம் தந்தார். 'நன்றி' என்றேன்.
அவருக்கு நான் அப்படி சொல்லிக் கொண்டிருந்தபோது, படப்பிடிப்பு தளத்திற்குள் வந்து கொண்டிருந்த ஒரு ஆஜானுபாகுவான உருவத்தையும், என் கண்கள் நன்றிப் பெருக்குடன் பார்த்தன.
அந்த ஆஜானுபாகுவான உருவம், இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தருக்கே சொந்தமான உருவம். அவரைப் பார்த்ததும், தெய்வமகன் படம் ஆஸ்கர் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதும், என் நினைவுக்கு வந்தது. தெய்வமகன் ஆஸ்கர் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் செய்தியை, என்னிடம் முதலில் கூறியவரும், இயக்குனர் திருலோகசந்தர்தான். தில்லானா மோகனாம்பாள் படம் இந்திய அரசின் பரிசுக்கு, தெய்வமகன் படம் அமெரிக்க ஆஸ்கர் விருது போட்டிக்கு!
இந்த பெருமை எல்லாம் யாருக்கு?
தமிழ்க் கலைஞர்கள் அனைவருக்கும் சொந்தமானது. அப்படித்தான் நான் நினைக்கிறேன். தில்லானா மோகனாம்பாளை எடுத்துக் கொள்ளுங்கள். இதில், சிக்கல் சண்முக சுந்தரத்தையும், தில்லானா புகழ் மோகனாம்பாளையும் படைத்த கொத்தமங்கலம் சுப்புவையும் மறக்க முடியுமா?
அவர், இந்தப் பாத்திரங்களை படைத்திரா விட்டால் படம் எங்கே?
தில்லானா மோகனாம்பாள் தொடர் கதையாக வந்து முடிந்ததும், அதைப் படமாக்க விரும்பிய இயக்குனர் ஏ.பி.நாகராஜன், சுப்புவிடம் தன் எண்ணத்தை வெளியிட்டார். சுப்பு, அந்த கதையின் உரிமை, ஜெமினி வாசனிடம் இருப்பதாகச் சொல்லி விட்டார். ஜெமினியின் சார்பில், அதை, வாசன் படமாக்கலாம் என நினைத்து, ஏ.பி.என்., மேலே தொடாமல் அப்படியே விட்டு விட்டார்.
மாதங்கள் பல கடந்தன. ஜெமினி நிறுவனத்தில், 'தில்லானா'வைப் படம் எடுப்பதற்கான அடையாளங்களே தென் படவில்லை.
ஏ.பி.என்., மனதில் மீண்டும், மோகனாம்பாளின் மீதுள்ள ஆசை துளிர்விட்டது. வாசனிடம் சென்று, 'நான் மோகனாம்பாளைப் படமாக்க நினைக்கிறேன்...' என்றார்.
'நானும் அதைப் படமாக்கலாம் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறேன்; வேண்டுமானால் இப்படிச் செய்யலாம். நாம் இருவரும் இணைந்து, அதை எடுக்கலாம்...' என்று பதில் கூறினார் வாசன்.
'வாசன் ஒரு இமயமலை; ஜெமினி நிறுவனம் பெருங்கடல்; நாமோ சிறு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்...' என்ற எண்ணத்தில், ஏ.பி.என்., இரண்டாவது முறையாக எழுந்த மோகனாம்பாள் ஆசையை, சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார்.
மாதங்கள் பல சென்றன. மோகனாம்பாள் படத்தைப் பற்றிய பேச்சே இல்லை.
ஏ.பி.என்., சிந்தனையில் மீண்டும் மோகனாம்பாளின் முற்றுகை. 'முயல்வதை மும்முறை முனை' என்பது பழம் பெரும் தமிழ் வாக்கு.
ஏ.பி.என்., மூன்றாவது முறையாக மோகனாம்பாளைப் படமெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். வாசனிடம் சென்று, தன் எண்ணத்தை வெளியிட்டார்.
மோகனாம்பாளைப் படம் எடுப்பதில் ஏ.பி.என்.,க்கு இருந்த ஆர்வத்தைக் கண்ட வாசனுக்கு என்ன தோன்றியதோ, 'உரிமைகளை உங்களுக்கே தருகிறேன்; நீங்களே படத்தை எடுங்கள்...' என்று சொல்லி, தன் அனுமதியையும் தந்தார். ஏ.பி.என்., படப்பிடிப்பில் இறங்கினார்.
தில்லானா மோகனாம்பாள் படமாக வந்து, பெரும் வெற்றி பெற்றது. பெரும்பாலும், வாசகர்களிடையே அமோகமான வரவேற்பைப் பெற்ற ஒரு நாவல், திரைப்படமாக வெளியே வரும்போது, பெரும் வெற்றியைப் பெறுவதில்லை. ஆனால், ஏ.பி.என்., தில்லானா மோகனாம்பாளை ஒரு பெரும் வெற்றிச் சித்திரமாக்கி, உழைப்புக்கேற்ற பரிசைப் பெற்றார். தில்லானா மோகனாம்பாள் படம் இந்திய அரசின் ஜனாதிபதி பரிசைப் பெற்றிருக்கிறது. ஏ.பி.என்.,க்கு இப்பரிசில் பெரும் பங்கு உண்டு. அதில் நடித்த என்னைப் போன்ற கலைஞர்கள், இந்தப் படத்தை உருவாக்க உழைத்த கலை வல்லுனர்கள் எல்லாருக்கும் இதில் பங்கு இருக்கிறது.
தில்லானாவுக்கு கிடைத்த பெருமை, தமிழ்க்கலை உலகின் பொதுச் சொத்து. அமெரிக்க ஆஸ்கர் போட்டியில், சிறந்த வெளிநாட்டுப் படம் ஒன்றுக்கும் ஆஸ்கர் பரிசு தருவதுண்டு. ஒவ்வொரு நாட்டிலிருந்தும், ஒரு படத்தை மட்டுமே இந்தப் போட்டியில் சேர்த்துக் கொள்வர்.
வந்திருக்கும் வெளிநாட்டுப் படங்கள் அத்தனையும் திரையிட்டு, அவற்றில் சிறந்த படத்தைத் தேர்ந்தெடுப்பர்.
இந்த ஆண்டு ஆஸ்கர் போட்டிக்கு, இந்திய நாட்டின் சார்பில், தெய்வ மகன் படம் அனுப்பப்பட்டது. தில்லானாவுக்கு சொன்னது போலவே, தெய்வ மகன் படத்திற்கு கிடைத்திருக்கும் இந்தப் பெருமையும் தமிழ்க்கலை உலகின் பொதுச் சொத்து.
ஒரு கலைஞனுக்குள்ள திறமையை, மேலும் வளர்க்க உதவுவதுடன், அவன் ஈடுபட்டிருக்கும் துறையில், அவன் மேலும் உற்சாகமுடன் ஈடுபட்டு, ஊக்கமுடன் உழைத்து, சிறப்பாகப் பணியாற்றவும், இத்தகைய பரிசுகளும், பட்டங்களும் உதவுகின்றன. ஒவ்வொரு முறையும் நான் பரிசைப் பெறும்போது, 'நாம் மேலும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்...' என்று தான் நினைத்துக் கொள்வேன்.

— தொடரும்.

தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.


நன்றி - தினமலர்
தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23447&ncat=2

RAGHAVENDRA
18th January 2015, 12:02 PM
கதாநாயகனின் கதை - 17

தினமலர் வாரமலர் 18.01.2015



http://img.dinamalar.com/data/uploads/E_1421388178.jpeg

அது, சம்பூர்ண ராமாயணம் படம் வெளியான நேரம்... நடமாடும் தெய்வம் என வணங்கப்படும் காஞ்சி பரமாச்சாரியார், நாடகத்தில், நான் பரதனாக நடித்திருக்கும் காட்சிகளை பார்த்து, என்னை சந்திக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார். அப்பா, அம்மா மற்றும் என் மனைவியுடன் காஞ்சிபுரம் சென்றேன். நாங்கள் வந்திருக்கும் செய்தி, அவருக்கு தெரிவிக்கப்பட்டது. நாங்கள் அவர் அருகில் சென்றதும், நீண்ட நேரம் என்னையே உற்றுப் பார்த்தவர், என் அம்மாவிடம், 'இந்த குழந்தையை பெற்றதற்கு நீ ரொம்ப புண்ணியம் செய்திருக்கணும்; உனக்காக நான் பிரார்த்தனை செய்றேன்...' என்று சொல்லி ஆசிர்வாதம் செய்தார். பரமாச்சாரியர் முன், என்னால் எதுவும் பேச முடியவில்லை. என் அம்மாவின் முகத்தை பார்த்தேன். விவரிக்க முடியாத சந்தோஷத்துடன், அம்மாவின் கண்களில் ஆனந்த கண்ணீர். பரமாச்சாரியர் கூறிய பாராட்டு வார்த்தைகள், அம்மாவின் முன், எனக்கு கிடைத்த விருது.

ராஜா அண்ணாமலை மன்றத்தில், வியட்நாம் வீடு நாடக அரங்கேற்றம். நாடகத்தில் எனக்கு அம்மாவாக எஸ்.எஸ்.வாசனுடைய அம்மாவின் புகைப்படத்தை மாட்டி வைத்தனர். ஒரு காட்சியில் நான் வசனம் பேசிக் கொண்டு வரும் போது, அப்புகைப்படத்தின் முன் நின்று, 'எங்க அம்மா வீடு வீடா மாவாட்டி என்னை படிக்க வைச்சா... பிரஸ்டீஜ் பத்மநாபன் அப்படி வளர்ந்தவன்...' என்று உணர்ச்சிகரமாக நடித்துக் கொண்டிருக்கும் போது, அரங்கமே அமைதியாக இருந்தது. ஆனால், முதல் வரிசையிலிருந்து ஒரு விசும்பல் குரல் கேட்டது. நான் மேடையிலிருந்து கீழே பார்த்தேன். எஸ்.எஸ்.வாசன் அழுது கொண்டிருந்தார். அன்று என் அப்பாவும் நாடகத்திற்கு வந்திருந்து, மேடையில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்தார். நாடகம் முடிந்ததும் எஸ்.எஸ்.வாசன் நேராக மேடைக்கு வந்து அப்பாவை கட்டிக் கொண்டு, 'அடடா... இப்படி ஒரு புள்ளய பெத்திருக்கீங்களே...' என்று ஆனந்தக் கண்ணீர் விட்டார். இது, என் தந்தை முன், என் நடிப்பிற்கு, திரையுலக மேதையிடம் இருந்து கிடைத்த விருது.

எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில்; ஒரு பிராமண குடும்பம் இருந்தது; பனகல் குடும்பம் என்று பெயர். ஒருநாள் ஷூட்டிங்கிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அப்போது எதிர்வீட்டில் இருந்த வயதான மாமி, என்னை வழியனுப்ப வந்த என் மனைவியிடம், 'கமலாம்மா... நேத்திக்கு உன் ஆம்படையான் நடிச்ச, வியட்நாம் வீடு நாடகம் பார்த்தேன்டீ; என்னம்மா நடிச்சிருக்காரு. பிராமணனா பொறந்திருக்க வேண்டியவன். நானும் ஒரு குழந்தைய சுவீகாரம் எடுத்திருக்கேன். அவனுக்கு கூட இவ்வளவு சரியா சந்தியா வந்தனம், அபிவாதயே செய்யத் தெரியல. உன் ஆம்படையான் பிரஸ்டீஜ் பத்மநாபனாகவே வாழ்ந்து காட்டீட்டார் போ...' என்று பாராட்டு மழை பொழிந்தார். நான் கமலாவை ஏறிட்டு பார்த்தேன். அவள் முகத்தில் என்றைக்கும் இல்லாத சந்தோஷமும், மகிழ்ச்சியும் நிறைந்திருந்தது. இது, என் மனைவி முன், எனக்கு கிடைத்த விருது.

'செவாலியர்' விருது எனக்கு கிடைத்திருக்கிற செய்தியை அறிந்த இயக்குனர் கிருஷ்ணன் (பஞ்சு), என்னை பாராட்டுவதற்காக மாலையோடு வந்தார். அவருக்கு வயது, 85. என் இத்தனை வெற்றிக்கும் காரணியாக இருந்தவர்களில் முதலாமவர் பெருமாள் முதலியார். பராசக்தி படப்பிடிப்பின் போது என்னை திட்டியும், பேசியும், சிலர் அலட்சியப்படுத்திய போது, 'இதற்கெல்லாம் மனம் தளர்ந்து விடாதே; இதை, ஒரு காதில் வாங்கி, மறுகாதில் விட்டு விடு. நீ நிச்சயம் ஒரு நல்ல நிலைக்கு வருவாய்...' என்று என்னை உற்சாகப்படுத்தியவர். அதன்பின், 32 ஆண்டுகள் என்னுடைய வளர்ச்சியை கண்டு மகிழ்ந்தவர். அப்படத்தின் இயக்குனர் (கிருஷ்ணன் பஞ்சு) நேரில் வந்து என்னை பாராட்டுகிறார் என்றால், இதை விட எனக்கு வேறு பெரிய விருது எது?

பொன்னல்ல பொருளல்ல; புவியாளும்
மன்னர் தரும் என்னவெல்லாம் அறியாத எதுவும் அல்ல!
மின்னி வரும் மெய்க் கவியின் மெய்
அழகை காண்போர்தம் கண்ணில் வரும்
ஒருதுளியே கலைஞனுக்கு கோடி!
என்றார் கண்ணதாசன்.
கோடி கோடியா கொட்டி கொடுப்பதை விட, திறமையை உணர்ந்து, மெய்சிலிர்த்து, ஒரு சொட்டு கண்ணீர் விட்டாலே போதும். அது, ஒரு கலைஞனுக்கு கோடி ரூபாய் கொடுத்த சந்தோஷத்தை தரும்.
— அடுத்த இதழில் முடியும்.

தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை' விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.


நன்றி - தினமலர்
தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23530&ncat=2

RAGHAVENDRA
25th January 2015, 12:00 PM
கதாநாயகனின் கதை - 18

தினமலர் வாரமலர் 25.01.2015



http://img.dinamalar.com/data/uploads/E_1421828747.jpeg

மதுரை, 'ஸ்ரீபாலகான சபா' சென்னையில் முகாமிட்டிருந்த சமயம். நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் தான் சகோதரர் எம்.ஜி.ஆர்., வீடு இருந்தது. காலையிலும், நாடகம் முடிந்த பின்பும் மற்றும் ஓய்வு நேரங்களிலும் அவரது வீட்டிற்குச் செல்வேன். அவரது அம்மா, என்னையும் ஒரு மகனாக எண்ணி பழகியதை, என்னால் மறக்க முடியாது.
இரு மலர்களால் தொடுக்கப்பட்ட எங்களுடைய நட்பை பற்றி சொல்ல வேண்டுமானால், கண்ணதாசன் எழுதிய,
நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே...
கண்ணில் மணி போல மணியில் நிழல் போல கலந்து பிறந்தோமடா
இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதடா
உறவை பிரிக்க முடியாதடா...
- என்பதைப் போன்றது.
தினமும் காலையில் உடற்பயிற்சி செய்து, குளித்து, எனக்காக காத்திருப்பார் எம்.ஜி.ஆர்., நான் சென்றதும், இருவரும் அருகருகே அமர்ந்த பின்தான், அவரது அம்மா எங்களுக்கு காலை சிற்றுண்டியை பரிமாறுவார். நான் செல்வதற்கு சிறிது தாமதமாகி, அதற்குள் அண்ணனுக்கு பசி எடுத்து விட்டால், 'அம்மா... எனக்கு பசிக்கிறது...' என்று சொல்வார்.
அதற்கு, 'இரு... கணேசன் வரட்டும்; சேர்ந்து சாப்பிடலாம்...' என்பார் சத்யா அம்மா.
நாங்கள் இருவருமே தாய்ப்பாசத்தில் அதிக பற்று கொண்டவர்கள்; தாய் சொல்லை தட்டாதவர்கள்; தாயை தெய்வமாக மதிப்பவர்கள்.
'மதுரை ஸ்ரீபால கான சபா' என்றிருந்த பொன்னுசாமி பிள்ளையின் கம்பெனி, 'மங்கள பால கான சபாவாகி' கும்பகோணத்திலிருந்து சென்னை வந்தோம். அந்நேரத்தில் கம்பெனி ரொம்ப நொடித்து விட்டது. கம்பெனியை என்.எஸ்.கிருஷ்ணன் வாங்கினார். அங்கே, மனோகரா மற்றும் கிருஷ்ண லீலா நாடகங்களை நடத்தினோம்.
அச்சமயத்தில் தான் அண்ணனுக்கும், எனக்கும் ரொம்ப நெருக்கமான உறவு ஏற்பட்டது. அப்போது நாங்கள் வால்டாக்ஸ் முனையில் இருந்த ஒரு பெரிய பில்டிங்கில் தங்கி இருந்தோம். அதிலிருந்து சிறிது தள்ளியிருந்த மூன்றாவது வீட்டில் தான் அண்ணன் இருந்தார். அப்போது அவர் பல கம்பெனிகளில் வேலை தேடுகிற நேரம். இருந்தாலும், டிபன் சாப்பிட எனக்காக காத்திருப்பார். நாங்கள் இருவரும் சாப்பிட்டதும் அவர் சென்று விடுவார்; நானும் வந்திடுவேன். பகல் சாப்பாடும் இப்படித்தான் நடக்கும். ஆனால், இரவில், நான் நாடகம் முடிந்து வரும் வரை காத்திருப்பார். இரவு, 10:00 மணிக்கு மேல் தான் நாடகம் முடியும். அதற்குபின், நாங்கள் நடந்து போய், சினிமா பார்ப்போம்.
சினிமாவில் அண்ணன் நடிக்க ஆரம்பித்து, ரசிகர்களுக்கு அறிமுகமாகியிருந்த நேரம் அது! அதனால், தலையில் முண்டாசும், வேட்டியை வரிந்து கட்டி, சினிமாவுக்கு வருவார். ஆனால், என்னை யாருக்கும் தெரியாது. சினிமா பார்த்து விட்டு, இரவு, 1:00 மணிக்கு திரும்பி வரும் போது, மின்ட் தெருவில் இருந்த சேட்டு கடையில் சப்பாத்தி மற்றும் பால் சாப்பிடுவோம். எல்லாம் அண்ணன் செலவு தான். அப்போ, என்கிட்ட ஏது பணம்? அப்பவே பிறருக்கு உதவி செய்யும் பழக்கம் அவருக்கு அதிகம். அன்றைய நிலையிலேயே நண்பர்களுக்காக நிறைய செலவு செய்வார். வசதியாய் இருக்கும் போது எவ்வளவு செய்திருப்பார்ன்னு நினைத்து பாருங்கள்... இதற்கு பின், நான் தங்கியிருக்கும் வீட்டில் என்னை, விட்டு விட்டு, அவர் வீட்டுக்கு போவார். இம்மாதிரி வளர்ந்தது தான் எங்கள் நட்பு. அன்பை பொழிவதில் அவருக்கு இணை கிடையாது.
ஒருமுறை, தி.மு.க., கட்சி சார்பில், ஏழாவது சுயமரியாதை மாநாட்டை நடத்தும் மும்முரத்தில் இருந்தார் அண்ணாதுரை. மாநாட்டில், 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்' என்ற நாடகத்தை அரங்கேற்றுவதற்காக கதை, வசனம் எழுதினார் அண்ணாதுரை.
அப்போது, கோவையில் இருந்தார் எம்.ஜி.ஆர்., அச்சமயம், அவர், காங்கிரஸ்காரர். விபூதி பூசியிருப்பார். கதர் தவிர வேறு எதுவும் அணிய மாட்டார். கட்சி மற்றும் கொள்கை வேறுபட்டாலும் ரொம்ப பரந்த உள்ளம் கொண்ட தேசியவாதி அவர்.
அண்ணாதுரை எழுதிய, சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் நாடகத்தில், சிவாஜி வேடத்தில் அண்ணன் நடிப்பதாக இருந்தது; ஆனால், அவர் நடிக்கவில்லை. அண்ணாதுரை என்னைப் பார்த்து, 'கணேசா... நீ நடிக்கிறாயா?' எனக் கேட்டதும், 'நடிக்கிறேன்...' என்று கூறினேன். அந்நாடகத்தின் மொத்த வசனம், 110 பக்கம்; அதை காலையில் என்னிடம் கொடுத்து விட்டு வீட்டிற்கு போய் விட்டார் அண்ணாதுரை. அன்று மாலை, நான் தங்கியிருந்த,'திராவிட நாடு' அலுவலகத்திற்கு வந்தவர், 'என்ன படிச்சியா?' என்று கேட்டார். உடனே நான், 'பாடமே செய்துட்டேன்...' என்றேன்.
'உண்மையாகவா!' என்றார் ஆச்சரியத்துடன்.
'ஆமாம்...' என்றேன்.
'சொல்லு பார்க்கலாம்...' என்றார்.
அப்போது அண்ணாதுரையின் நண்பர்கள் தங்கவேலு முதலியார் மற்றும் ராஜகோபாலும் உடன் இருந்தனர். நான், அண்ணாதுரை முன், நடித்து காட்டினேன். கோட்டையை உடைக்கிற அக்காட்சியை நடித்து காட்டி முடித்ததும், ஓடி வந்து என்னை கட்டி தழுவினார் அண்ணாதுரை. அதன்பின் தான் நாடகத்தில் சிவாஜியாக நடித்தேன்.
சிவாஜி வேடத்தில் அண்ணன் எம்.ஜி.ஆர்., நடிக்காததால், அந்த வேடம் எனக்கு கிடைத்தது மட்டுமல்லாமல், அந்த வேடத்தின் பெயரே எனக்கு நிலைத்து விட்டது. இதுவே, என் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
— முற்றும் —
தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை' விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.


நன்றி - தினமலர்
தினமலர் இணையதளத்தில் இப்பக்கத்திற்கான இணைப்பு

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23615&ncat=2

JamesFague
25th January 2015, 12:27 PM
It will be lesson for the upcoming as well as present day artists the dedication,devotion,determination shown by

NT in his work.


Regards