PDA

View Full Version : ஊதாரி



Russellhni
17th September 2015, 12:57 PM
கணேஷ் , சென்னையில் ஒரு தொழில் அதிபர். டைமன்ட் எக்ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் வெளிநாட்டு ஆடைகள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலையின் சொந்தக்காரன்.

அண்ணா நகரில் ஐ .சி. யு வங்கியில் ஐந்து கோடி கடனில் கட்டிய அட்டகாசமான வீடு.


https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcSTQrEcCj6Vkgh2gixCYOmTJutyMkm2Z hhvWtXGrni-HrVW6mmH7w


இருக்கவே இருக்கிறது அரசு வங்கி, அங்கே வாங்கிய நான்கு கோடி கடனில் அம்பத்தூர் தொழில் வளாகத்தில் டைமன்ட் எக்ஸ்போர்ட்ஸ். அவனிடம் இரண்டு சொகுசு கார், ஆடம்பர வாழ்க்கை. வருஷம் ஒரு தடவை வெளிநாடு சுற்றுலா. அடிக்கடி பார்ட்டி , கோல்ப் கிளப், இத்யாதி இத்யாதி.

கணேஷின் அப்பா அடிக்கடி சொல்வார். “ இதோ பாரு கணேஷ்!. சம்பாதிக்கறதை செலவு பண்ணிட்டு, மிச்சமிருந்தா மீதியை சேமிக்கணும்னு நினைக்காதே. அது முட்டாள்தனம். சம்பாதிக்கிறதிலே, சேமிப்பு போக, மிச்சத்தை செலவு பண்ணு. அதுதான் புத்திசாலித்தனம்.”

அது 45 வயது இளைஞன் கணேஷை பொருத்தவரை செவிடன் காதில் சங்கு. பெருசுக்கு வேறே வேலை இல்லை. வாழ்க்கையை அனுபவிக்க தெரியாத வேஸ்ட் பீஸ்.

கணேஷின் மனைவி ஊர்மிளா கணேஷை விட ஒரு படி அதிக ஊதாரி. பகட்டு, படாடோபம், டாம்பிகத்திற்கு ஒரு ரோல் மாடல். சரியான நகைப் பைத்தியம் .

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTb80eOxarmxsqmfHGRB4b7A_PXbSLeO 3yoHi6uqs5t9XzjjffR

கணேஷ் ஊர்மிளா தம்பதியின் அகராதியில் சேமிப்பு என்கிற வார்த்தைக்கு இடமே இல்லை.

***
கணேஷ் வீடு

“என்னங்க! ரொம்ப வாட்டமாயிருக்கீங்க! பாக்டரியிலே ஏதாவது பிரச்னையா?” – மனைவி ஊர்மிளா கேட்டாள்.

“உனக்கு தெரியாததா ஊர்மிளா? பிசினஸ் கொஞ்ச நாளா ரொம்ப டல். எக்ஸ்போர்ட் ஆர்டர் எதுவும் இல்லை. கடன் கொடுத்தவங்க நெருக்கராங்க. பாக்டரி கடன், வீட்டு கடன், வட்டியோட சேர்ந்து பூதாகாரமா நிக்குது. என்ன பண்றதுன்னே தெரியலே! .”

“ஐயோ! நமக்கு ஏன்தான் இந்த கஷ்ட காலமோ? வேறே ஏதாவது கடன் கிடன் முயற்சி பண்ணீங்களா? ”

“பண்ணேன். ஒண்ணும் கிடைக்கலே. பேங்க் கையை விரிச்சுட்டாங்க. முதல்லே கடனை சரி பண்ணு. பின்னாலே பாக்கலாம்னு சொல்லிட்டாங்க. அப்பாகிட்டே பணம் கேட்டேன். அவரது திருச்சி பக்கத்திலே தரிசு நிலத்தை வித்துக்க சொன்னார்”

“நீங்க என்ன சொன்னீங்க?”

“அது வேஸ்ட் ஊர்மிளா. எப்போவோ சல்லிசா வரதுன்னு வாங்கி போட்டார்.. அதை வித்து வர காசு, கால் வாசி கடனுக்கு கூட காணாதும்மா. எனக்கு குறைந்தது ஒரு இரண்டு கோடியாவது வேணும், இப்பத்திக்கு கடனை சமாளிக்க.”

“வேறே என்ன வழி?”

“இந்த வீட்டை வித்துடலாம்!. கடன் போக, கிடைக்கும். மிச்சத்தை அங்கே இங்கே வாங்கி சமாளிச்சிப்பேன். ஆனால், ரியல் எஸ்டேட் காரங்க அடி மாட்டு விலைக்கு கேக்கிறாங்க! கொடுமை டா சாமி ! ”

“ஐயோ! அப்போ நாம்ப எங்கே போறது? நடு ரோட்டுக்கா? இப்பத்தான், நிறைய செலவு பண்ணி, வாசல் லான், தோட்டம், ஊஞ்சல் அப்பிடின்னு , பாத்து பாத்து பண்ணியிருக்கேன். வீட்டை உள்பக்கம் இடிச்சி ரி மாடல் பண்ணிட்டிருக்கேன்.. இந்த ஐடியாவை விட்டுடுங்க. ப்ளீஸ்”

“அதுவும் சரிதான். அப்போ நகைகளை வேணா வித்துடலாமா?”

“என்ன, உங்களுக்கு விளையாட்டா இருக்கா? இதெல்லாம் பின்னாடி குழந்தைகள் கல்யாணத்திற்கு சேர்த்துக்கிட்டிருக்கேன் . அதுவுமில்லாமே, எல்லாமே பேன்சி நகைகள். கல் வெச்சி, மாடர்ன் டிசைன். வித்தா சேதாரம் போய், ரொம்ப கம்மியாத்தான் கிடைக்கும். போயும் போயும் உங்களுக்கு இப்படி கேவலமா ஐடியா தோணுதே? நகையை விக்கறதாம்? ம்..” முகவாய்க் கட்டையை தோளில் இடித்துக் கொண்டாள்.

“பின்னே என்னதான் வழி ஊர்மிளா? பேங்க் காரங்க ஜப்திக்கு நோட்டீஸ் கொடுப்பாங்க.போல ”

“யோசனை பண்ணுங்க!. எதாவது பிளான் போடுங்க. பேங்க் மேனேஜர் கிட்டே டைம் கேளுங்க. வீடு விக்கறது, நகை விக்கறதெல்லாம் வேணாம்.”

கணேஷ் யோசித்தான். என்ன பண்ணலாம்? ஏதாவது பண்ணியே ஆகவேண்டும்.

****


ஒரு பதினைந்து நாள் கழித்து – அகமதாபாத்

கணேஷ், வியாபார நிமித்தமாக குஜராத் போயிருந்தான். ஹோட்டல் அறையில், இரவு 10.15 க்கு மணிக்கு அவனுக்கு மனைவியிடமிருந்து அலைபேசி அழைப்பு.

ஊர்மிளா பதற்றமாக, “என்னங்க! நம்ப பாக்டரி கோடவுன்லே தீ விபத்தாங்க! நம்ம சுபெர்வைசர், முத்துதான் போன் பண்ணினார்.”

“என்னது? எப்படி? எப்போ?”

“இப்போதான் ஒரு பத்து மணிக்கு. எப்படின்னு தெரியலே. வாட்ச்மன் சொல்லி, தீயணைப்பு படை வரதுக்குள்ளே, உள்ளே இருந்த அத்தனை பொருளும் எரிந்து போச்சாம்”

“அத்தனையும் ஜெர்மனிக்கு அனுப்ப வேண்டிய லேடீஸ் ரெடிமேட் துணிகளாச்சே. ஷிப்பிங்க்கு ரெடியா கோடவுன் அனுப்பிச்சிட்டு வந்தேனே, அதுவா? ”

ஊர்மிளா “அது தெரியலே. முத்து உங்களுக்கு போன் பண்ணி சொல்றேன்னு சொன்னார்”

“யாருக்காவது எதாவது விபத்து?”

“நல்லவேளையா அப்போ அங்கே யாரும் இல்லையாம். நீங்க உடனே புறப்பட்டு வாங்க”

“சரிம்மா! நீ எதுக்கும் கவலைப் படாதே. நான் நாளைக்கே வந்துடறேன். ச்சே ! அடி மேல அடியா விழுதே !. நான் இப்போவே முத்துவுக்கு போன் பண்றேன் ! ”


https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQ-P2PXQiGvPWIWl2Err-UkHximvrZpRccl_DOgRD_JgN7FXytYAA


****

ஒரு மணி நேரம் கழித்து , கணேஷின் பாக்டரி சுபெர்வைசர் முத்துவிடமிருந்து போன் வந்தது.

“சார்! நீங்க சொன்னமாதிரியே செஞ்சுட்டேன். ஒரு பிரச்னையும் இல்லே”

“வெரி குட் முத்து. யாருக்கும் தெரியாதே?”

“மூச்! ஈ, காக்கைக்கு கூட தெரியாது சார். நானே, எல்லாத்தையும் கிட்டே இருந்து, அழகாக பண்ணிட்டேன். உதவிக்கு நம்பகமா , வெளி ஆட்களை என் சொந்த ஊரிலிருந்து வரவழைசிக்கிட்டேன். ”

“ குட் ! என்ன பண்ணினே ? கொஞ்சம் விவரமா சொல்லு! ஏதும் பிரச்னை இல்லையே ?”

“ பிரச்சனை ஒன்னும் இல்லே சார் !. பாக்டரிலே எக்ஸ்போர்ட் பண்ற 2000 காலி அட்டை பெட்டிங்களை எடுத்து., அதன் உள்ளே பழைய பேப்பர், பழைய துணி, ரிஜெக்ட் பண்ணின டிரஸ் எல்லாம் வெச்சு நம்ம திருமழிசை கோடவுன்க்கு அனுப்பிட்டேன்”

“குட்”

“அப்புறம், பாக்டரி எம்ப்ளாய்ஸ் ஒருத்தருக்கும் சந்தேகம் வராத மாதிரி, ராத்திரி பத்து மணிக்கு, யாரும் இல்லாத போது, வெளி ஆட்களை வச்சு, அந்த திருமழிசை கோடவுன்க்கு நெருப்பு வெச்சுட்டேன். ”

“குட். குட் ! . என் மனைவிக்கு கூட எதையும் சொல்லாதே. உளறிடுவா. சமயம் பார்த்து நானே சொல்லிக்கறேன்.”

“சரி சார்”

“அப்போ, நான் உடனே கிளம்பறேன். நாளைக்கு காலைலே முதல் ப்ளைட் பிடிச்சி சென்னை வந்துடறேன். அதுக்குள்ளே, நீ, போலீஸ் ரிப்போர்ட், எப்.ஐ.ஆர், தீ அணைப்பு படை ரிப்போர்ட். எல்லாம் வாங்கிக்கோ. நம்ப எம்.எல்.ஏ கிட்டே நான் இப்போவே பேசறேன். அவர் எல்லா ஏற்பாடும் பண்ணிடுவார். நீ அவரைப் போய் பார் !”

‘சரி சார்”

“சொல்ல மறந்துட்டேன். இந்த விபத்து , மின்சார ஷார்ட் சர்கியுட்னாலே ஏற்பட்டதுன்னு , எப்.ஐ.ஆர், ரிபோர்ட் வாங்கு. அதிகாரிங்க கிட்டே நம்ம மினிஸ்டர் பேர் சொல்லி அவர் ஆளுன்னு சொல்லு. பிரச்சனை பண்ணாம கொடுத்துடுவாங்க. அவங்க என்ன கேக்கிராங்களோ, அதை நீயும் கொடுத்துடு.”

“அப்படியே பண்றேன் சார்”

“மறக்காமே, நான் சொன்ன மாதிரி, நம்ம தீ விபத்து, தினசரிலே நாளைக்கு இல்லே நாளன்னிக்கு வரதுக்கு ஏற்பாடு பண்ணிடு. தீ விபத்து நடந்தப்போ, போட்டோ எடுத்தாங்களா? அதை செக் பண்ணு முத்து.! விட்டுடாதே ! நீயும் கோடவுன் போய் , சைட் போட்டோ பிரிண்ட் போட்டுக்கோ. அது நமக்கு கட்டாயம் வேண்டும்”

“சரி சார்”

“இன்சூரன்ஸ் கிளைம் பாரம் உடனே, நம்ம ஏஜென்ட் மூலமா வாங்கி, தயாரா ரெடி பண்ணிக்கோ. நானும் அவரோட பேசறேன். என்ன பண்ணனும்னு அவருக்கும் சொல்லறேன். ”

“சரி சார்”.

“நான் வந்து மிச்சத்தை பார்த்துக்கறேன். வெச்சுடட்டுமா?”

****

ஒரு வாரம் கழித்து

தனியார் இன்சூரன்ஸ் அலுவலகம் : வைஸ் பிரசிடென்ட்(க்ளைம்ஸ்) அறை.

“மணி, டைமன்ட் எக்ஸ்போர்ட்ஸ், சென்னை கோடவுன் தீ விபத்து கிளைம் ஸ்டேடஸ் என்ன? காலைலேயிருந்து கால் மேலே கால். அரசியல் செல்வாக்கு உள்ளவங்க போல. ஓயாம மினிஸ்டர் பேரை சொல்லிக் கிட்டிருக்காங்க!” – மோகன், வைஸ் பிரசிடென்ட்(க்ளைம்ஸ்) .

“அதைதான் பாத்துக்கிட்டேயிருக்கேன் சார்”. – மணி, மோகனின் உதவி கிளைம்ஸ் அதிதாரி.

“சரி, எவ்வளவு கிளைம் கேட்டிருக்காங்க?”

“ரூபா ரெண்டு கோடி சார், பாலிசி அமௌன்ட். அவங்க மார்க்கெட் ரேட் இழப்பு ரூபா 3.2 கோடி சார் .”

‘எல்லா டாகுமென்ட்ஸ்ம் இருக்கா?”

“எல்லாம் சரியா இருக்கு சார். அதிலே ஒரு பிரச்னையும் இல்ல.”

“கிளைம் இன்ஸ்பெக்டர் ஒப்புதல் கொடுத்திருக்காரா?”

“அதுவும் இருக்கு சார்”

“சரி, அப்போ ப்ராசஸ் பண்ணி, உன் ஒப்புதலோட எனக்கு உடனே அனுப்பி வை”

“சார், அதிலே எனக்கு இரண்டு மூணு சந்தேகம் இருக்கு!” இழுத்தான் மோகன்.

“என்ன! போகஸ் கிளைமா? உனக்கு எதாவது இடிக்குதா?”

“அப்படித்தான் தோணுது சார். ஆனா நிச்சயமா சொல்ல முடியலே”

“என்ன மணி , எதை வெச்சி சந்தேகப் படறே?”

“விசாரிச்சதிலே, டைமன்ட் எக்ஸ்போர்ட்ஸ் முதலாளி கணேஷ்க்கு நிறைய கடன் தொல்லை இருக்கு போலிருக்கு சார். கொஞ்ச நாளா,தொழில் நஷ்டம்ன்னு தெரியுது.”

“மோசடி மோடிவ் போல இருக்கா என்ன ?”

“ஆமா சார். என்னமோ தோணிச்சி, சந்தேகத்தின் பேரில், அவங்க ஸ்டாக் ஸ்டேட்மெண்ட் வாங்கி பார்த்தேன். கோடவுன்லே வைக்கற அளவு , ரா மட்டிரியல் அவங்க கையிருப்பிலே இல்லே போல சார். ”

“இது நல்ல பாய்ன்ட் தான். ஆனால், கிளைம் தள்ளுபடி செய்ய இன்னும் வேறே நல்ல ஆதாரம் வேணுமே.”

“நான் அந்த முதலாளி கணேஷ், அவர் சுப்பெர்வைசரோட பேசினேன். அவங்க கிட்டே எந்த பதட்டமும் இல்லே. கோடவுன் எரிஞ்சி போச்சேன்னு கவலை இல்லை. டெலிவரி டிலே பத்தி பேசவே மாட்டேங்கறாங்க. எதுக்கு இதை கேக்கறீங்கன்னு காட்டமா கேக்கறாங்க. வேறே ஏதோ பேசி மழுப்பறாங்க.”

“இதுவும் மோசடி கிளைம்க்கான நல்ல இன்டிகேட்டர் தான். ஆனால், இதுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிற தைரியம் கூட காரணமா இருக்கலாம் இல்லியா?”

“இருக்கலாம் சார். நீங்க சொல்லுங்க சார், அப்படியே பண்ணிடலாம்.”

“ம். நீ சொல்றதும் யோசிக்கரா மாதிரி தான் இருக்கு. எதுக்கும், நீயும் ஒரு தடவை பாக்டரிலே செக் பண்ணு. விசாரி. தீ விபத்து நடந்த இடத்தை பார்வை இடு. ஏதாவது துப்பு கிடைக்குதான்னு பாரு. மூணு நாளிலே ரிப்போர்ட் கொடு. குட் லக் மணி”

“தேங்க்ஸ் சார்”

****

டைமன்ட் எக்ஸ்போர்ட்ஸ் அலுவலக அறை

“வணக்கம் சார், நான் இன்சூரன்ஸ் அதிகாரி மணி”

“வாங்க! வாங்க! காத்துக்கிட்டு இருக்கேன். கிளைம் கிளியரன்ஸ் ஆயிடுச்சா? செக் கொண்டுவந்திருக்கீங்களா? – வரவேற்றான் கணேஷ். அவனுடன் சுப்பெர்வைசர் முத்து.

“இல்லே சார். இன்னும் கொஞ்சம் கோடவுன் தீ விபத்து பற்றிய தகவல் வேணும். அது பத்தி பேசத்தான் வந்திருக்கேன்”

“அதான் வேனப்பட்ட டாகுமென்ட்ஸ் கொடுத்திருக்கோமே! இன்னும் என்ன வேண்டும்?” எரிந்து விழுந்தான் கணேஷ்.

“சொல்றேன் சார். கோபப் படாதீங்க. எரிந்து போன எக்ஸ்போர்ட் துணிமணிகள் சாம்பிள் இருக்கா?”

“எதுக்கு கேக்கறீங்க?”

“இல்லே. இதெல்லாம் ஒரு பார்மாலிட்டி தான்”- மணி ரொம்ப பணிவாக.

“ம். சரி. கொடுக்கச்சொல்றேன். சீக்கிரமே கிளைம் செட்டில் பண்ணுங்க. இல்லாட்டி, மினிஸ்டர் கோபப் படுவாரு.”

“சார், தீ விபத்து நடந்த இடத்தை இன்னோரு முறை பார்க்கணும்.”

“எதுக்கு இப்படி டிலே பண்ணறீங்க? உங்க இன்சூரன்ஸ் இன்ஸ்பெக்டர் தான் பாத்து ரிப்போர்ட் கொடுத்திருப்பாரே!”- கணேஷ் சூடாக கேட்டான்.

“இல்லே சார், நெருப்பு முதல்லே கோடவுன் பின்னாடிதான் ஆரம்பிச்சிருக்கு. ஆனால், மின்சார மெயின் போர்ட் முன் பக்கம் இருக்கு. அது எப்படின்னு பாக்கணும்?”

“இதோ பாருங்க. விபத்து நடந்த போது, நான் ஊரிலேயே இல்லை. போலீஸ் ரிப்போர்ட்லே ரொம்ப தெளிவா , விபத்துக்கு காரணம் மின்சார குளறுபடின்னு சொல்லியிருக்கில்லே. அவங்களை போய் கேளுங்க. நீங்க என்ன தனியா செக் பண்றது? முத்து மினிஸ்டருக்கு போன் போடு !”

“இல்லே சார், கேக்க வேண்டியது என் கடமை. கோபப் படாதீங்க”

“சரி சரி, முத்து இவரை கோடவுன்க்கு அழைச்சிட்டு போ! ”

மணி மெதுவாக கனைத்தான். “சார், அங்கே, எதையும் வெளியே எடுத்துப போடல இல்லையா? எரிஞ்ச சாமான்கள், துணி சாம்பல் எல்லாம், அப்படியே தானே இருக்கு?”

“ஆமா. நீங்க கிளைம் அப்ரூவ் பண்ற வரைக்கும் அப்படியே விட்டு வைக்க சொன்னாங்க”

” சரி! நான் கிளம்பட்டுமா?”

“இந்தாங்க! நீங்க கேட்ட எக்ஸ்போர்ட் துணி சாம்பிள் பாக்கெட்”

“தேங்க்ஸ்”

கணேஷ் இப்போது தன் தொனியை மாற்றிக் கொண்டான்.

போகும்போது கொஞ்சம் குழைவாக “சீக்கிரம் முடிங்க மிஸ்டர் மணி.. எனக்கு அரசியல் செல்வாக்கு இருக்கு. உங்களுக்கு தான் தெரியுமே ! உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணாலும் கட்டாயம் வீடு தேடி வந்து பண்ணி கொடுக்கறோம். நீங்க எதுக்கும் கவலையே படாதீங்க. நான் பாத்துக்கறேன்”

‘இதெல்லாம் நீங்க சொல்லனுமா சார்! நான் பாத்துக்கிறேன். வரட்டுமா?” மணி கிளம்பினான்.

“அப்பா!” மூச்சு வந்தது கணேஷுக்கு.

***


இரண்டு நாள் கழித்து


இன்சூரன்ஸ் அலுவலகம் – மணியின் அறை.

கணேஷ் மணியுடன் உட்கார்ந்து கொண்டிருந்தான். “என்ன மணி சார், வரச் சொன்னீங்க ! செக் ரெடியா? மினிஸ்டர் ஐயா கூட கேட்டாரு, ஏன் கணேஷ்! இன்னுமா கிளைம் செட்டில் ஆவலன்னு?”- கணேஷ்

மணி உதட்டை சுழித்து சிரித்தான். “சார்! மன்னிக்கணும், செக் ரெடியாயில்லே. வேணா, உங்க கைக்கு போட, விலங்கு ரெடி பண்ணிடலாம். ”

“என்ன சார் சொல்றீங்க! நான் யாரு தெரியுமா?”

“தெரியும். அதானலேதான், இங்கே உங்களை கூப்பிட்டு பேசிக்கிட்டிருக்கேன். இல்லேன்னா, இந்த நேரம் போலீஸ் கம்ப்ளைன்ட் போயிருக்கும், மோசடி குற்றத்திற்காக”

கணேஷ் திகைத்தான் “வாட்?”

“எல்லாம் நல்லாத்தான் ஜோடனை பண்ணீங்க. ஆனால், சில விஷயங்களை கோட்டை விட்டுட்டீங்களே கணேஷ் சார்” – மணி சிரித்தான்

“நிறுத்துங்க. நான் இப்போவே உங்க மேலதிகாரியை பாக்கிறேன்”

“அதுக்கு முன்னாடி நான் சொல்றதை கேளுங்க மிஸ்டர் கணேஷ்”

“சொல்லுங்க! உங்களுக்கு நீங்களே குழி வெட்டிக்கிறீங்க மணி”

மணி “பாக்கலாம் யாருக்கு வெட்டியிருக்காங்கன்னுட்டு. உங்க தீ விபத்து இடத்திலே நான் பார்வை இட்டதிலே, இந்த ஹூக்ஸ் கொஞ்சம் கிடைச்சது. இதெல்லாம், நம்ம ஊரு நைட்டீஸ், பாண்ட்ஸ் இதிலே தான் இருக்கும். இது எப்படி கோடவ்ன்லே வந்தது? கொஞ்சம் சொல்ல முடியுமா?”

“அது எப்படி எனக்கு தெரியும்? முன்னாடி அங்கே சில துணிகள் இருந்திருக்கலாம்! அதிலே இந்த ஹூக்ஸ் இருந்திருக்கலாமே?”

“ரொம்ப சரி. மிஸ்டர் கணேஷ். அப்படியும் இருக்கலாம். அப்போ, உங்க ஏற்றுமதி செய்யற துணியிலே ஏதாவது உலோக பாகம் இருந்தா, அவை அங்கே எரியாம இருந்திருக்கனுமில்லே?”

“நீங்க என்ன சொல்லவரீங்க மணி? ” – கணேஷ் குரல் லேசாக நடுங்கியது.

“உங்க லேடீஸ் கார்மென்ட் ஏற்றுமதி சாம்பிள் பார்த்தேன், அதைதான் நீங்க கோடோவுன்க்கு அனுப்பியிருக்கீங்க. அதிலே, இடுப்பு பகுதியில் துணி பெல்ட் இருக்கு. அதை இறுக்கி கட்ட, ஒரு பான்சி மெடல் பின் அதோட இனைச்சிருக்கீங்க. பித்தளைலே. கழட்டி மாட்ட வசதியா! சரியா?”

“ஆமா! அதுக்கென்ன இப்போ?” கணேஷ் முகம் கொஞ்சம் இருண்டது.

“அங்கே தான் தப்பு பண்ணிட்டீங்க மிஸ்டர் கணேஷ். ! நெருப்பிலே அழியாத ஐட்டங்கள் சில இருக்கு உதாரணத்திற்கு, மெடல் பீசெஸ், பைபர் கிளாஸ், கருவிகள். எரிந்து போன அந்த கோடவுனில், மாதிரிக்கு கூட ஏற்றுமதி டிரஸ்லே இருக்க வேண்டிய ஒரு பான்சி மெடல் பின் கூட காணோம். உங்க கணக்கு படி கிட்டதட்ட 2000 பீஸ் இருக்கணும். கோடவுனிலே காணோமே ! எங்கே போச்சு? எரிஞ்சு போச்சா?”

“அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?” - கணேஷ் குரல் கம்மியது. முகம் வெளிறி விட்டது.

“இதோ பாருங்க கணேஷ். எனக்கு நடந்தது என்னன்னு தெரியும். உங்க கம்பனி நிதி நிலைமை, உங்க கடன், நஷ்டம் எல்லாம் எங்க கிட்ட ஆதாரம் இருக்கு. நீங்களா ஒப்புக்கொண்டு, உங்க கிளைமை வாபஸ் வாங்கிக் கொண்டால் ஓகே. இத்தோட விட்டுடலாம். இல்லையா, விசாரணை பண்ண வேண்டி வரும். கோர்ட், போலீஸ், இங்கே போனால், உங்க வண்டவாளம் வெளிலே வரும். என்ன சொல்றீங்க?”

“சரி. வேறே வழியில்லே. கிளைம்வாபஸ் வாங்கிக்கறேன். மடையன், முத்து, இதை யோசிக்கலையே?” – கணேஷ் புலம்பினான்.

“அடுத்த தடவை, சரியா பிளான் பண்ணி, போகஸ் கிளைம் பண்ணலாமோன்னு நினைக்காதீங்க மிஸ்டர் கணேஷ். . வேறே ஏதாவது தப்பு வரும்.. மாட்டிக்குவீங்க”

“அப்போ கோடோவுன் எரிந்தது தான் மிச்சமா?”

“நீங்க முதல் தடவையா இந்த மாதிரி மோசடி பண்றதாலே, அதுவும் பெரிய இடத்து சம்பந்தம் இருக்கிறதாலே, இந்த அளவோட விடறோம். அதுக்கு சந்தோஷப் படுங்க. குட் பை மிஸ்டர் கணேஷ்”

தொங்கிய முகத்துடன் கணேஷ் வெளியே வந்தான்.

****

கணேஷ் வீடு

சோர்ந்து போய் வீட்டுக்கு வந்தான் கணேஷ். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம். இனிமே இந்த வழிக்கே போகமாட்டேன். பேசாம, இருக்கிற வீட்டை விக்க வேண்டியது தான். நகையையும் வந்த விலைக்கு விக்க வேண்டியதுதான். வேறே வழி?

அவனது அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது. “கணேஷ், வேண்டாம்பா இந்த ஆடம்பரம். இன்னிக்கு தேவையில்லாமல் வாங்கினால், நாளைக்கு தேவையானதை எல்லாம் விக்க வேண்டியிருக்கும். சேமிப்பு அவசியம்பா.”

எவ்வளவு சரியான வார்த்தை? இன்னிக்கு கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம். இப்போ வருந்தி என்ன பிரயோசனம்?

விட்டத்தை பார்த்து, வீட்டில், வராந்தாவில் உட்கார்ந்திருந்தான். அப்பா கிட்டேயிருந்து போன்.

“கணேஷ்! அப்பா பேசறேன்ப்பா! ரொம்ப நாளைக்கு முன்னாலே, திருச்சியிலே வாங்கி போட்டிருந்தேனே, ஐந்து ஏக்கர் நிலம், அதை இப்போ விலைக்கு கேக்கறாங்க. ஏதோ பாக்டரி கட்ட போறாங்களாம். ஐந்து கோடிக்கு கிட்டே போகும் போல இருக்கு. உனக்காக வித்துடலாம்னு பாக்கிறேன். என்ன சொல்றே? நீயும் ஏதோ பணமுடை, நஷ்டம்ன்னு சொன்னியே. உனக்கில்லாததா? வரியா? என்ன சொல்றே ? ”

“அப்பா! ரொம்ப தேங்க்ஸ்பா. இப்போவே வரேன்”

போனை வைத்தான்.

‘ஊர்மிளா, நான் நாளைக்கு ஊருக்கு போயிட்டு பணத்தோட வரேன்”

“அட! பரவாயில்லியே. பிரச்சனை தீர்ந்ததா?”

“ஆமா. நல்ல வேளை, எங்கப்பா என்னை மாதிரி ஊதாரி இல்லை”

***

அன்று இரவு. கணேஷின் படுக்கை அறை.

“என்னங்க! நமக்கு தான் பைசா வருதே. நான் வேணா ஒரு வைர நெக்லஸ் வாங்கிக்கவா?

“ஒ! வாங்கிக்கோ செல்லம். என்ஜாய்.! அப்படியே, நம்ம அசோக் ட்ராவல்ஸ்க்கு போன் பண்ணி, ஆஸ்திரேலியா டூர்க்கு புக்கிங் பண்ணிடு. அக்டோபெர்லே போலாம்”

“அட! இந்த வருஷமும் போறோமா?”

பின்னே! எங்க அப்பா இருக்குற வரைக்கும் நம்ம காட்டிலே மழைதான். கறந்துடலாம்.”

“அப்புறம்?”

“இருக்கவே இருக்கு, இன்சூரன்ஸ் கம்பெனி” - கணேஷ் காப்பீடை விடறதாயில்லை.

“ரொம்ப சரி. ஆனால், இந்த தடவை சொதப்பக் கூடாது” – ஊர்மிளா சிரித்தாள். அவள் கணேஷ் என்கிற ஜாடிக்கேத்த மூடி.

“ஆகட்டும் கண்மணி. ஆனால் பாக்டரி வேணாம். இந்த தடவை வீட்டை எரிச்சுடலாம்.”

“சூப்பர். அப்படியே இன்னொரு ஐடியா. முதல்லே, நகை திருட்டு போச்சுன்னு இன்சூரன்ஸ் கிளைம் பண்ணிட்டு அப்புறம் வீட்டை எரிச்சுடலாம். எனக்கும் புது வீடு போகணும் போல ஆசையாக இருக்குதுங்க”

“ஆஹா! என்னை மாதிரி எப்படியெல்லாம் மாத்தி மாத்தி யோசிக்கறே? என் ராசாத்தி !”

"பெட் ரூம் போட்டு ஏமாத்த யோசனை பண்ரோமில்லே! அதான்." சிரித்தார்கள், இந்த எதிர்கால ஏமாற்றுக்காரர்கள்.

ஆனால், இவர்கள் எதிர்காலம் ஒரு ? தான்.


*** முற்றும்
/... Inspired by Jeffery Archer/

pavalamani pragasam
17th September 2015, 08:58 PM
Very good reproduction! Congrats!

Russellhni
18th September 2015, 09:26 AM
நன்றி மேடம் :ty: