PDA

View Full Version : MAKKAL THILAGAM MGR (Part 2)



Pages : 1 2 3 4 5 6 7 [8] 9 10 11 12 13 14 15 16

Thirumaran
12th July 2012, 06:57 PM
ஏற்கெனவேயே –
எம்.ஜி.ஆர். முகம் –
காலைச் சூரியனைக் கையால் வழித்துக் கன்னங் கதுப்புகளில் அப்பினாற்போல் அரக்கு நிறங்காட்டும்; கோபத்தில் கேட்க வேண்டுமா? குங்குமம் குழைத்துப் பூரா முகத்திலும் பூசினாற்போல் – ‘செவசெவ’ எனச் செக்கர் ஏறிக்கிடந்தது!

‘இந்தப் பாட்டெ, எங்கிட்ட காட்டாமயே Record பண்ணிட்டு – இப்ப வந்து காட்டினா என்ன அர்த்தம்?’
– என்று பாட்டு Copyஐ, என் கையில் எம்.ஜி.ஆர். திணிக்கவும் –
’Shot Ready’ என்று ஆதூர்த்தி சுப்பாராவ் அழைக்கவும் சரியாக இருந்தது.
எம்.ஜி.ஆர். – Shot க்குப் போய் விட்டார்!

--------------------------------------------------------------------------------

சத்யா ஸ்டூடியோவில் –
‘தாயின் மடியில்’ படத்தின் Shooting–ல்தான் நான் எம்.ஜி.ஆரை சந்திக்கப் போனேன். அது, பிரபல இயக்குநர் திரு.ஆதூர்த்தி சுப்பாராவ் இயக்கும் படம். என் நெருங்கிய நண்பர் திரு. கே.ஆர்.பாலன்தான் தயாரிப்பாளர்.
என் பாட்டுக்குத்தான் – எம்.ஜி.ஆர். சரோஜா தேவியோடு, புரவியாட்டம் ஆடிக் கொண்டிருந்தார்.
Shot முடிந்து,
எம்.ஜி.ஆர். என்னிடம் வந்தார்.
“அண்ணே! உங்க கிட்டே, பாட்டெக் காட்டாமெ எப்படியண்ணே Recording நடக்கும்? போனவாரம் – நானும், ராதாகிருஷ்ணனும் வந்து பாட்டெக் காட்டினோம். ‘உங்களுக்கு O.K.ன்னா – எனக்கு O.K.!’ அப்படீன்னு, செல்லமா என் கன்னத்தெக் கிள்ளிட்டு – ராதா கிருஷ்ணனோடு தனியாப் பேசப் போயிட்டீங்க!” என்றேன் நான்.
திரு.ராதாகிருஷ்ணன், திரு. நாகி ரெட்டியார் சார்பாக, ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தைக் கவனித்து வந்தவர்.
வழக்கம் போல், வலக்கரத்தால் தன் மூக்கை வருடிவிட்டு –
‘அப்படியா?’ என்று எம்.ஜி.ஆர். சமாதானமடைந்து பாட்டை வாங்கிப் பார்த்தார்.
எம்.ஜி.ஆர். கோபம் எப்போதுமே சோனையல்ல; ஊசித்தூற்றல்!
‘பல்லவி – சரணம் – இந்த ரெண்டிலும் இன்ன இன்ன வரிகள் கூடாதுன்னு, சென்ஸார் Officer மிஸ்டர் காசிபதி சொன்னார்னு, நாகி ரெட்டியார் என்கிட்ட – சிவப்பு மையால் கோடிட்டிருந்த பாட்டு வரிகளைக் காட்டினாரண்ணே! கிட்டத்தட்ட வேற பாட்டே எழுதி Record பண்ணாத்தான் நல்லாருக்கும்; அதான், உங்ககிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு....”
– என்று நான் வாக்கியத்தை முடிப்பதற்குள்,
‘ரொம்ப அக்கிரமம்!’ என்றார் எம்.ஜி.ஆர்.
‘ஆமாண்ணே! நம்ம பாட்டுன்னாலே – சென்ஸார் இப்படித்தான்’ என்றேன் நான்.
உடனே எம்.ஜி.ஆர். ‘நான், சென்ஸாரை சொல்லல்லே! நீங்க எழுதியிருக்கறதைத்தான் – ரொம்ப அக்ரமம்னு சொன்னேன்!’ என்று கூறிவிட்டு என்னைப் பார்த்தார்.
நான் ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தேன்.
எம்.ஜி.ஆர். என் பாட்டை வைத்துக் கொண்டு Post - Mortem – செய்யலானார்.
‘நான் – அரசனென்றால்
என் – ஆட்சியென்றால்
இங்கு –
ஏழைகள் வேதனைப்பட மாட்டார்’னு பல்லவியை எழுதியிருந்தேன்.
இதுபற்றி எம்.ஜி.ஆர். –
‘இங்கேயும் அங்கேயும் காங்கிரஸ் ஆட்சிதான் நடக்குது; அப்ப – அவங்க ஆட்சீல, ஏழைகள் வேதனைப்படுவாங்கன்னு அர்த்தமாகுதில்லே! இது நமக்குத் தேவையா? ஏன், வேண்டாத வம்பெ விலைக்கு வாங்கணும்? எதையும், இலை மறைவாக் காய் மறைவா சொல்லாமே – இப்படித் தேங்கா உடைச்ச மாதிரி சொன்னா என்ன அர்த்தம்?’ என்று என் பல்லவிக்குப் புதிய வியாக்கியானம் சொன்னார்.
‘இப்படியெல்லாம் அர்த்தம் பண்ணா, எப்படீண்ணே?’ என்று நான் சற்றே சலித்தேன்.
‘நீங்க எழுதுவீங்க; பாடுறவன் நான்! எந்த வரியையும் – கழகத்தோட Colour கொடுத்துதான் பார்ப்பாங்க!’ என்று குரலை சற்று உயர்த்திப் பேசினார்.
பிறகு – சரணங்களை அக்கு வேறு, ஆணி வேறாக அலச ஆரம்பித்தார்.
முதல் சரணத்தில் –
‘எதிர்காலம் வரும்;
என் கடமை வரும்; இந்தக்
காக்கைகள்
கூட்டத்தை ஒழிப்பேன்!’ என்று எழுதியிருந்தேன்.
‘காக்கைகள்’ என்னும் வார்த்தையைக் கண்டிப்பாக மாற்ற வேண்டும் என்று காசிபதி குறிப்பிட்டிருந்தார்.
திரு.காசிபதி சொன்னது ‘கரெக்ட்’ என்று சற்று அழுத்தம் கொடுத்து சொன்னார் எம்.ஜி.ஆர். ‘எப்படியண்ணே?’ என்றேன் நான்.
‘காக்கைகள்ங்கிற வார்த்தெ – காமராஜரோட தொண்டர்களெக் குறிப்பிட்ட மாதிரி எடுத்துக்க மாட்டாங்களா?’ என்று வினவினார் எம்.ஜி.ஆர்.
‘இது என்னண்ணே! மொட்டைத் தலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சுப் போட்ட மாதிரி!’ என்று எள்ளலாகச் சிரித்தேன் நான்.
‘கழகத்துல – சில பேச்சாளர்கள், காமராஜரோட நிறத்தெ வெச்சு... காக்கைன்னு பேசறாங்ளே! அப்புறம் எப்படி?’ என்று சற்று கோபத்தோடு கேட்டார் எம்.ஜி.ஆர்.
“சரி – அது இருக்கட்டும்! ரெண்டாவது சரணத்துல –
‘ஒரு தலைவன் உண்டு;
அவன் கொள்கை உண்டு!’
– அப்படீன்னு வருதே, அதுலயும் ‘தலைவன்’கிற வார்த்தையை மாத்தச் சொல்றாங்க!” என்று நான் சொல்ல,
“நான் பாடறப்போ – ‘தலைவன்’கிற வார்த்தெ, அண்ணாவெத்தானே குறிக்கும்; அதெ எப்படி, அனுமதிப்பாங்க?” என்று எம்.ஜி.ஆர். என்னையே கேட்டார்.
தொடர்ந்து –
‘நான் – சென்ஸார் Officer ஆ – இருந்தேன்னா, மொத்தப் பாட்டையும், மாத்தச் சொல்லியிருப்பேன்!’ என்று சிரித்தபடி சொன்னார்; அவரே மேலும் பேசினார்.
‘ஆண்டவனே!’ – எப்பவும் இப்படித்தான் எம்.ஜி.ஆர். என்னை அழைப்பார்.
‘ஆண்டவனே! நீர் காதல் பாட்டு எழுதினா ரெண்டு மூணு அர்த்தம் வர்ற மாதிரி எழுதுறீரு! என்னுடைய Solo பாட்டு எழுதினா, அதுல ஏகப்பட்ட அர்த்தங்கள் வர்ற மாதிரி எழுதுறீரு... அது, ஆளுங்கட்சிக்கு அலர்ஜியாயிருக்குது! பாட்டைக் கொண்டு, பதவியில இருக்கறவங்களெ, பயமுறுத்துற கவிஞர் நீர்தான்யா!’ என்று எம்.ஜி.ஆர். என் கன்னத்தில் செல்லமாக அறைந்தார்!

--------------------------------------------------------------------------------

பிறகு –
‘நான் –
அரசனென்றால் – என்
ஆட்சியென்றால்...’ என்று இருந்ததை –

‘நான் -
ஆணையிட்டால் – அது
நடந்து விட்டால்...’ என்றும்;

‘இந்தக்
காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்’ என்றிருந்ததை –
‘இந்தக்
கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்’ என்றும்;

‘ஒரு –
தலைவன் உண்டு; அவன் கொள்கை உண்டு’ என்றிருந்ததை –

‘ஒரு
கடவுள் உண்டு; அவன் கொள்கை உண்டு’ என்றும் மாற்றிக் கொடுக்க



மீண்டும் திரு. டி.எம்.எஸ். அவர்களை வரவழைத்துப் பாட்டை திரு. எம்.எஸ்.வி. அவர்கள் ஒலிப்பதிவு செய்தார்கள்.

--------------------------------------------------------------------------------

காங்கிரஸ் ஆட்சியையே கவிழ்த்துப் போடும் அளவு – என் பாட்டுகளுக்கு பலம் இருந்ததாய் நான் எண்ணினால், அது பைத்தியக்காரத்தனம்.
அந்தப் பாட்டு வரிகள் – எம்.ஜி.ஆர். உதடுகளில் ஏறி உட்கார்ந்ததால்தான் – எளிய சொற்கள் கூட எரி கற்களாக மாறி, குற்றமுள்ள நெஞ்சங்களைக் குறி வைத்துச் சுட்டன!

--------------------------------------------------------------------------------

அற்றை நாள்களில் –
அண்ணா என்ற பெயரே, படத்தில் வந்தால், காஞ்சிரங்காய்க் கஷாயம் சாப்பிட்டது போல் ஆளுங்கட்சிக்கு அடி நாக்கில் கசந்தது.
‘பெற்றால்தான் பிள்ளையா’ எனும் படத்தில் ஒரு பாட்டு, ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி’ என்று தொடங்கும். அதன் சரணத்தில் –

‘அறிவுக்கு இணங்கு
வள்ளுவரைப் போல்;
அன்புக்கு வணங்கு
வள்ளலாரைப் போல்;
கவிதைகள் வழங்கு
பாரதியைப் போல்;
மேடையில் முழங்கு
அறிஞர் அண்ணா போல்!’ என்று வரும்.

“ ‘அறிஞர் அண்ணா’வை அகற்றுக” என்று தகித்தார் தணிக்கை அதிகாரி.
உடனே நான் –
‘மேடையில் முழங்கு
திரு வி கா போல்’ என்று மாற்றிக் கொடுத்தேன்.

இந்த வரிக்கு –
அதிர்ந்தது தியேட்டர், அப்ளாஸ்களில்!
காரணம் –
திரு.வி.கா போல் என்று பாடப் பெற்றது –
தி.மு.க.போல் என்று காதில் விழுந்தது!

--------------------------------------------------------------------------------

ஒரு காலை வேளையில் –
ஏவி.எம். ஸ்டூடியோவில் Song Composing ஒதுக்கப்பட்ட அறையில் –
‘அன்பே வா!’ படத்தில் வரும், ‘புதிய வானம்; புதிய பூமி’ என்னும் பாட்டுக்கான சரணத்தை எழுதிக் கொண்டிருந்தேன்.
‘உதயசூரியனின் பார்வையிலே’ என்று நான் எழுதுகையில், தோசை மிளகாய்ப் பொடி வாசனை நானிருந்த அறைக்குள் ‘குப்’பென்று வீசியது!
திரும்பிப் பார்த்தேன்.br> காலைப் பலகாரமாய் – தோசை மிளகாய்ப் பொடியைச் சாப்பிட்டு விட்டு –
அந்த மணம் கமகமக்க, என் பின்னால் வந்து திரு. ஏவி.எம். செட்டியார் அவர்கள் நின்று கொண்டிருந்தார்.
‘என்ன மிஸ்டர் வாலி! எம்.ஜி.ஆரை வைத்துப் படமெடுத்தா – உதயசூரியன்னு எழுதணுமா என்ன? சென்ஸார்ல ஒத்துக்க மாட்டாங்க... You kindly remove it' என்றார் செட்டியார்.
‘இதுல – ஒண்ணும் பிரச்னை வராது சார்! இந்த வரி வரச்சே தியேட்டர்ல –
Roaring Applause இருக்கும்!’ என்றேன் நான்.
‘எனக்கென்னவோ – நீங்க பிடிவாதம் பிடிக்கிறீங்க... Censor won't accept this உதயசூரியன்!’ என்று எச்சரித்து விட்டு செட்டியார் சென்று விட்டார்.
கடைசியில் –
செட்டியார் வாக்குத்தான் பலித்தது; ‘உதயசூரிய’னை சென்ஸார்; ஒத்துக் கொள்ளவில்லை. ‘புதிய சூரியன்’ என்று மாற்றினேன். ‘அது என்ன – புதிய சூரியன்; பழைய சூரியன். இருக்கிறதே, ஒரு சூரியன்தானே!’ என்றார் செட்டியார்.
‘இல்லெ சார்... புதிய சூரியன் கிற வார்த்தை – எம்.ஜி.ஆர். வாயிலிருந்து வருகிறபோது – உதயசூரியன்னே கேக்கும்... கைத்தட்டுல தியேட்டரே அதிரும் சார்!’ என்றேன்.
அப்படியே நடந்தது!

--------------------------------------------------------------------------------

‘அவதார புருஷன்’ நூலில் – விசுவாமித்திரரைத் தொடர்ந்து ராம லட்சுமணர்கள், தாடகை இருந்த வனத்திடையே செல்லுங்கால் –
கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தேன்.

‘காலைச், சுடாத
காலைச் சூரியன்,
உச்சிக்கு வந்ததும்
உச்சியைச் சுட்டது’ என்று.
உலகறிந்த
உண்மை யாதெனில் –
உச்சிச் சூரியன்தான் சுடுமே யல்லாது –
உதயசூரியன் சுடாது.

ஆனால் –
அற்றைநாள் தணிக்கை அதிகாரிகளுக்கு – ‘உதயசூரியன்’ சுட்டது; ஏனெனில், அது வானிலிருந்து எழாமல், எம்.ஜி.ஆர். வாயிலிருந்து எழுந்ததால்தான்!

(தொடரும்)

Richardsof
13th July 2012, 11:53 AM
'உலகம் சுற்றும் வாலிபன்'. 1973ல் வெளியானபோது வாலிபனுக்கு வயது 55. என்ன தில் இருக்க வேண்டும். இன்னும் குறைந்தது நூறு ஆண்டுகளுக்கு எவரும் தமிழகத்தில் எட்ட முடியாத மாஸ். நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்று மூன்றே மூன்று படங்களைதான் தலைவர் இயக்கியிருக்கிறார். எம்.ஜி.யார் பிக்சர்ஸ் லோகோ அதிகாரப்பூர்வமாக வெள்ளித்திரைக்கு வந்த முதல் படம். தலைவரின் மாஸ்டர்பீஸ். அந்த காலத்திலேயே அறுபது நாட்களில் தேவிபாரடைஸ் திரையரங்கில் மட்டும் ஐந்து லட்சத்தை வசூலித்த வசூல் சக்கரவர்த்தி. சென்னையிலும், மதுரையிலும் வெள்ளி விழா கண்ட படம். தொடர் ஹவுஸ்ஃபுல் காட்சிகளில் இன்று வரை சாதனையை தக்கவைத்துக் கொண்டிருக்கும் படம். தடைகளை தவிடுபொடியாக்கிய சரித்திரம்.
இப்படத்தை திரையரங்கிலும், டி.வி.டி.யிலும் எத்தனைமுறை பார்த்திருப்பேன் என்பதற்கு கணக்கே இல்லை. கண்ணை மூடிக்கொண்டு படத்தின் ஸ்க்ரிப்டை மடமடவென்று ஒரு 192 பக்க நோட்டுப்புத்தகத்தில் எழுதித்தள்ள முடியும். இத்தனை முறை பார்க்குமளவுக்கு படத்தில் என்னதான் இருக்கிறது. உலகத்தரமா.. வித்தியாசமான கதையா? இது இரண்டுமே இல்லை. ஃப்ரேமுக்கு ஃப்ரேம் கொண்டாட்டம். கொண்டாட்டத்தைத் தவிர வேறெதுவுமில்லை. தலைவரே பாடுவது போல் 'எங்கேயும் எப்போதும் கொண்டாட்டம்'
இந்தியாவின் தலைசிறந்த(?) விஞ்ஞானிகளில் ஒருவரான முருகன் மின்னலின் ஒட்டுமொத்த சக்தியை சிறு கேப்ஸ்யூல்களில் அடக்கிவிடக்கூடிய தொழில்நுட்பத்தை கண்டறிகிறார். அதை ஆக்கசக்திக்கு பயன்படுத்தும் விதமான அடுத்தக்கட்ட ஆராய்ச்சிகளுக்கு முயல்கிறார். அழிவுசக்திகளுக்கு இந்த ஃபார்முலாவை விற்று கோடி கோடியாக சம்பாதிக்க நினைக்கிறார் சக விஞ்ஞானி பைரவன். ஃபார்முலாவை முருகன் எங்கோ மறைத்துவைத்திருக்க அதை தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பைரவன் முருகனை கடத்தி விடுகிறார். கடத்தலுக்கு முன்பாக முருகன் நினைவாற்றலை இழந்துவிடுகிறார். ஒருபக்கம் வில்லன் குழு ஃபார்முலாவை தேட, மறுபுறம் முருகனின் தம்பியும், போலிஸ் சிஐடியுமான ராஜூ ஃபார்முலாவையும், அண்ணனையும் சேர்த்து தேடுகிறார். ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் என்று பலநாடுகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு இறுதி வெற்றி நல்லவர்களுக்கே.
* இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் தலைவர் ஒரு கெட்டப்புக்கு வித்தியாசம் காட்டுவதற்காக குறுந்தாடி வைத்து அசத்துவார். விஞ்ஞானி பாத்திரம் என்பதால் தாடி பொருத்தமாகவே இருக்கும்.
* தலைவர் ஆங்கிலத்திலும் விட்டு விளாசியிருப்பார். ஹோட்டல் ரிசப்ஷனில் "மே ஐ மீட் மிஸ்டர் பைரவன்?" என்று ஆங்கிலத்தில் கேட்கும்போது அரங்கமே அதிரும்.
* லதா, மஞ்சுளா, சந்திரகலா, தாய்லாந்து நடிகை என்று தலைவருக்கு நாலு ஹீரோயின்கள். ஒவ்வொரு ஹீரோயினுடனும் குஜாலான டூயட்கள் உண்டு.
* மனோகர், அசோகன், தேங்காய்சீனிவாசன், நம்பியார் என்று ஏராளமான வில்லன்கள். ஏராளமான சண்டைகள். சிகப்பு விளக்கு ஒளிகாட்டவே தலைவர் பல ஆயிரங்களை செலவழிக்க வேண்டியிருந்திருக்கும்.
* சந்திரகலாவை ஒரு நடன ஓட்டலில் இருந்து தலைவர் மீட்கும் காட்சியில் ஸ்டண்ட் அட்டகாசம். தலைவரை விட பலமடங்கு எடை கூடி இருக்கும் வில்லனை அசால்ட்டாக தூக்கி எறிவார். அந்த சண்டைகாட்சியின் போது வளையவரும் அயல்நாட்டு கவர்ச்சித்தாரகைகளால் நம் கண்ணுக்கும் பசுமை.
* இறுதிக்காட்சி ஸ்கேட்டிங் ஃபைட்டுக்காகவே வாத்தியார் ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்திருந்தார்.
* வாலி - எம்.எஸ்.வி கலக்கல் காக்டெயில். பாடல்கள் ஒவ்வொன்றும் காதில் தேன்மழை. சீர்காழி குரலில் 'வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்' கம்பீரமான ஓபனிங் சாங்க். 'லில்லி மலருக்கு கொண்டாட்டம்' விஷூவல் ட்ரீட். 'சிக்குமங்கு சிக்குமங்கு சிக்கப்பாப்பா' பாட்டில் தலைவரின் குழந்தைத்தனம் வெளிப்படும். 'தங்கத் தோணியிலே' அசத்தலாக போட்டில் படமாக்கப்பட்ட பாடல். 'நிலவு ஒரு பெண்ணாகி' பாடலில் வரும் வார்த்தைகள் 'மடல்வாழை துடையிருக்க மச்சமொன்று அதிலிருக்க' இளமைக்குறும்பு. 'பச்சைக்கிளி முத்துச்சரம்' பட்டாசு, சிகப்புச்சட்டை, நீலநிற ஃபேண்ட், கழுத்தில் கர்ச்சீப், டீனேஜ் ஹீரோயின் என்று அதகளப்படுத்தியிருப்பார் தலைவர், போதாதற்கு 'கண்ணில் ஆடும் மாங்கனி கையில் ஆடுமா?' கிளர்ச்சியூட்டும் வரிகள். 'பஞ்சாயீ' இனிமை. 'அவள் ஒரு நவரச நாடகம்' படமாக்கப்பட்ட விதம் ஆச்சரியம். 'உலகம் அழகுக்கலைகளின் சுரங்கம்' டோக்கியோ டூர்.
* படத்தில் எனக்கு ஒரே ஒரு குறை. தலைவரின் இளமைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஹீரோயின் சந்திரகலா முத்திய முகமாக இருப்பார். புரட்சித்தலைவி நடித்திருந்தால் செம மஜாவாக இருந்திருக்கும். அந்த நேரத்தில் தலைவருக்கும், தலைவிக்கும் ஊடல் இருந்ததாக சொல்வார்கள். ஆனாலும் சந்திரகலாவின் நடனம் பரவசம்.
* "நீங்க என்னாச்சி? என்னாச்சின்னு கேட்குறீங்க.. அவர் யார் ஆட்சி? யார் ஆட்சின்னு கேட்குறாரு...", "நாயோட திறமைய அவர் பார்க்கட்டும். என்னோட திறமைய நீ பாரு" - பஞ்ச் டயலாக்குகள், தவுசண்ட் வாலா சரங்கள்.
* பச்சைக்கிளி டூயட்டில் தாய்லாந்து ஹீரோயினை கசக்கி, தடவிய அடுத்தக் காட்சியில் தலைவர் "தங்கச்சீ..." என்று பாசமழை பொழிய, ஹீரோயினும் "அண்ணா.." என்று ஆரத்தழுவிக்கொள்வது அசத்தல் காமெடி. நாகேஷின் காமெடியை விட தலைவரின் காமெடி படத்தில் கொடிகட்டிப் பறக்கும்.
* தெத்துப்பல் நம்பியாருடனான சண்டைக்காட்சி தான் படத்தின் ஹைலைட். புத்தவிகாரத்தில் நடைபெறும் சண்டையில் அனலும், ஆவியும் பறக்கும். புத்த விகாரத்துக்குள் நுழையும்போது தலைவர் ஷூவை கழட்டிவிட்டு நுழையும் காட்சியில் இன்றும் கைத்தட்டல்.
* படத்தின் படப்பிடிப்பின் போது தலைவர் திமுகவில் இருந்ததால் ஆங்காங்கே கருப்பு சிகப்பு தெரியும். மிகக்கஷ்டப்பட்டு எடிட்டிங்கில் அவற்றை வெட்டியிருந்தாலும் பலகாட்சிகளில் கருப்பு சிகப்பு இன்னமும் பளீரிடுகிறது.
* படத்தின் எண்ட் கார்டில் 'எமது அடுத்தத் தயாரிப்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' என்று போடுவார்கள். தலைவர் முதல்வர் ஆகிவிட்டதால் இன்னொரு சாதனைப்படத்தை தமிழ் திரையுலகம் இழந்தது.

Richardsof
13th July 2012, 12:33 PM
[தலைவர். எம்.ஜி.ஆர்

படமாக்கத்தில் சாதனை நிகழ்த்தியதை போல் திரையிடப்பட்டதிலும் சாதனை நிகழ்த்தியது உலகம் சுற்றும் வாலிபன். உலகம் சுற்றும் வாலிபன் அயல்நாடுகளில் படமாக்கப்பட்டதன் காட்சிகள் அடங்கிய நெகடிவ் நாசமாகிவிட்டது என்று தமிழகமெங்கும் வதந்தியாக செய்திகள் பரப்பப்பட்டது. இதையெல்லாம் மீறி படம் தயாரானால், சென்னை போட்டோல் படம் திரையிடுவதற்கு தியேட்டர் கிடைப்பது கேள்விக்குறியானது. கலைஞர் ஆட்சியின் மிரட்டல்களை சந்திக்கத் துணிந்து தியேட்டர்கள் கிடைத்தன. போஸ்டர்கள் ஒட்டினால் அதை கிழிப்பதற்கு தி.மு.கவினர் தயாராக இருந்தனர்.


தினத்தந்தியுடன் அப்போது எம்.ஜி.ஆருக்கு சுமூகமான உறவு இல்லை. அதனால் சமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.ஜி.ஆரது பட விளம்பரங்களே தினத்தந்தியில் இடம் பெறவில்லை. அதனால் சென்னை போட்டோல் போஸ்டர்களே ஒட்டாமல், பிற நாளிதழ் விளம்பரங்களாலும், ஸ்டிக்கர் விளம்பரத்தாலும் (தமிழில் ஸ்டிக்கர் விளம்பரம் அறிமுகமானது இதிலிருந்துதான்) உலகம் சுற்றும் வாலிபன் வெள்ளி விழா கண்டது. படத்தின் பிரிண்டுகளை வெளியூர்களுக்கு அனுப்பும்போது எதேனும் அசம்பாவிதங்கள் நடத்தக்கூடும் என்று கருதிய எம்.ஜி.ஆர். அதற்கும் ஒரு வழி செய்தார்.

ஒரே ஊருக்கு மூன்றுவிதமான படப்பெட்டிகளை எம்.ஜி.ஆர் அனுப்பி வைத்தார். மூன்றில் ஏதேனும் ஒன்றில்தான் நிஜமான படப்பிரதி இருக்கும். மற்றொன்றில் கற்கள் அடுக்கப்பட்டிருக்கும், மூன்றாவதில் குப்பை அல்லது கழிவு ஃபிலிம் இருக்கும். இப்படி மூக்கில் விரல் வைக்கும் அதிரடி நடவடிக்கைகளை எடுத்ததன் பலனாக உலகம் சுற்றும் வாலிபன் 20 திரையரங்குகளில் 100 நாட்களை கண்டது. 5 வருடங்களுக்கு ஒரு முறையல்ல, ஆண்டு தவறாமல் திரையரங்குகளுக்கு படையெடுத்து வசூலை வாரிக் குவிக்கும் ஒரே தமிழ் திரைப்படம் உலகம் சுற்றும் வாலிபனே.

நேற்று இன்று நாளை அரசியல் நெடி சற்று அதிகமுள்ள எம்.ஜி.ஆர். படம் இது. மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்- தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்வார் என்று தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று என்ற பாடலில் எம்.ஜி.ஆர். பாடுவதாக உள்ள வரிகள் தி.மு.க ஆட்சிக்கெதிரான வலுவான பிரச்சாரமாக அமைந்தது. இந்தப் படமும் பல கெடுபிடிகளுக்கிடையில்தான் தமிழகமெங்கும் திரையிடப்பட்டது. வெற்றியும் கண்டது. போட்டோமைக்குரல் ஒரேயரு கனவுப்பாடல் தவிர படம் முழுக்க எம்.ஜி.ஆருக்கு வேஷ்டி சட்டைதான். ஸ்ரீதர் இயக்கி முதன் முதலாக எம்.ஜி.ஆர். நடித்த எளிய கிராமியப் படமான போட்டோமைக்குரல் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு ஈடான வெற்றியைப் பெற்றது. இது கன்னடப் படமொன்றின் தழுவலாகும். சிரித்து வாழ வேண்டும் போட்டோமைக்குரல் வெளிவந்த 3 வார இடைவெளியில் எம்.ஜி.ஆர் படங்களின் இடைவெளிக்குபின் இதுவும் 100 நாட்கள் வெற்றிப் படமானது. அமிதாப், பரான் நடித்த ஜஞ்ஜீர் என்ற இந்திப் பட தழுவலான இதில் எம்.ஜி.ஆர் இரண்டு வேடங்களையும் ஏற்றிருந்தார்.

தொடர்ந்து ராஜேஷ்கன்னா இரட்டை வேடத்தில் நடித்த சச்சா ஜுட்டட இந்தித் தழுவலான நினைத்ததை முடிப்பவன், யாதோங்கி பாரத் இந்தித் தழுவலான நாளை நமதே என்று வரிசையாக எம்.ஜி.ஆர். மொழிமாற்று படங்களாக நடித்து அவையும் வெற்றி. இதயக்கனி ஏதோ ஓய்வெடுத்து நடிக்க வந்தது போல் (60 வயதில்) ஜம்மென்று இருப்பார் எம்.ஜி.ஆர். நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற, என்ற பாடலின் ஆரம்ப வரிகளாக வரும் தென்னகமாம் இன்பத் திருநாட்டில் என்ற வரிகளுக்கேற்ப காவிரி உற்பத்தியாகி பாயும் இடங்கள் வரை எம்.ஜி.ஆரை உதாரணம் காட்டுவதற்காக சுமார் 2000 மைல்கள் சுற்றிப் படமாக்கியிருக்கிறார்கள்.

படத்தில் எம்.ஜி.ஆரது இளமையோடு போட்டி போடுபவர் ராதா சலூஜா. எங்க வீட்டுப் பிள்ளையில் எம்.ஜி.ஆர் எப்படி இருந்தாரோ அதேபோல் இருந்தார் இதயக்கனியிலும். 1975-ன் சூப்பர் ஹிட் படம் இது. பல்லாண்டு வாழ்க தோ ஹாங்கேன் பாரா ஹாத் என்ற சாந்தாராம் படத்தழுவல் இது முழுக்க அவுட்டோரில் (மைசூர் படம் இது. பத்திரிகையாளர் மணியன் தயாரிப்பில் இது 3-வது எம்.ஜி.ஆர். படம்) இதுவும் வெற்றி. நீதிக்கு தலைவணங்கு அறியாமல் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக தானே தண்டனை வாங்கிக் கொள்ளும் வித்தியாசமான வேடத்தில் எம்.ஜி.ஆர். நடித்திருந்தார். படத்தில் ஒரேயரு டூயட்தான். இதுவும் எம்.ஜி.ஆர் படங்களின் வழக்கத்திற்கு மாறானது. இன்றைக்கு வெளிவரும் படங்களோடு ஒப்பிடும்போது நீதிக்கு தலைவணங்கு கலையம்சமுள்ள படமாகவே கருதப்பட வேண்டும். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் ஒரே மொழியில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்ததிலிருந்து கடைசிப்படம் வரை கதாநாயகனாகவே நடித்து வெற்றிகரமாக திரையுலகை விட்டு விலகிய ஒரே நடிகர் எம்.ஜி.ஆர். தான் என்பதற்கு மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் என்ற எம்.ஜி.ஆரின் கடைசிப்படம் ஒரு உதாரணம்.

joe
13th July 2012, 12:53 PM
‘அறிவுக்கு இணங்கு
வள்ளுவரைப் போல்;
அன்புக்கு வணங்கு
வள்ளலாரைப் போல்;
கவிதைகள் வழங்கு
பாரதியைப் போல்;
மேடையில் முழங்கு
அறிஞர் அண்ணா போல்!’ என்று வரும்.

“ ‘அறிஞர் அண்ணா’வை அகற்றுக” என்று தகித்தார் தணிக்கை அதிகாரி.
உடனே நான் –
‘மேடையில் முழங்கு
திரு வி கா போல்’ என்று மாற்றிக் கொடுத்தேன்.

பொதுவா அந்த கால காங்கிரஸ் காரர்கள் பத்தரை மாற்றுத்தங்கள் , நாகரீக சிங்கங்கள் என பலர் புகழ்ந்து தள்ளுவதை கேட்டிருக்கிறேன் ..அதிகாரம் கையில் இருக்கும் போது எதிர் தரப்பிலிருந்து தாக்குதல் வந்தால் அவை தடுக்கப்படுவது கூட சகஜம் என எடுத்துக்கொள்ளலாம் .ஆனால் எதிர்தரப்பினர் பாராட்டப்படுவதை கூட தடை செய்யும் சில்லறைத்தனம் ரொம்பவே உறுத்துது .. படம் எடுக்குறவன் 'அறிஞர் அண்ணா'-வை புகழ்ந்தால் இவர்களுக்கு என்ன வந்தது ? அதை கூட பொறுத்துக்கொள்ள முடியாதது என்ன ஒரு சின்னப் புத்தி? எதிர்தரப்பை எதிர்ப்பது போல இருந்தால் அதில் ஆட்சேபிக்கலாம் ..ஆனால் 'அறிஞர் அண்ணா' 'உதயசூரியன்' என்ற பெயர் வருவதே தேசதுரோகம் என்பது போல தடை செய்வது என்ன நாகரீகமோ ?

Richardsof
13th July 2012, 02:38 PM
[எம்.ஜி.ஆர். படங்கள் என்றால் படிப்பு, உணவு மறந்து பார்த்த காலம அது. வருடம் ஒன்றுக்கு மூன்று அல்லது நான்கு எம்.ஜி.ஆர். படங்களே வெளிவந்து கொண்டிருந்த பொழுது, எம்.ஆர். ராதாவின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு 1968ம் வருடம் எம்.ஜி.ரின் எட்டுப் படங்கள் வெளியாகி இருந்தன. ஒரு மாதத்திற்கு ஒரு படம் பார்ப்பதற்கே வீட்டில் அனுமதி இருந்தது. அதனால் அடுத்தடுத்து வந்த எம்.ஜி.ஆர். படங்களைப் பார்க்க முடியாது நான் திக்குமுக்காடிப் போனேன்.

குடியிருந்த கோயில் படம் எனது நகரத்தில் திரையிடப் பட்டிருந்தது. ஆனால் பார்ப்பதற்கான நேரம்தான் சரி வர அமையவில்லை. அந்த மாதத்திற்கான படம் ஒன்று ஏற்கனவே பார்த்தாயிற்று. இனி அடுத்த மாதம்தான் படம் பார்க்க முடியும். அதுவரை தியேட்டரில் இருந்து குடியிருந்த கோயில படத்தை எடுக்கமால் இருக்க வேண்டும். இந்த நிலையில் எனக்கிருந்த ஒரே ஒரு ஆறுதல், இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்தான். அதில் ஒலிபரப்பாகும் குடியிருந்த கோயில் திரை விமர்சனம் மற்றும் திரைப்பாடல்களை கேட்டு, படத்தினைப் பற்றிய கற்பனையில் மூழ்கியிருப்பேன்.

அன்று பண்டிதர் பரந்தாமன் வீட்டிற்கு வந்திருந்தார். அவர் எனது அண்ணன் ரி.நித்தியகீர்த்தி (ஏ.ரி.நிதி) எழுதி இயக்கிய மரகத நாட்டு மன்னன் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தார். நாடக ஒத்திகை பார்ப்பதற்கு முன்னர் அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தனர். அந்தவேளை வானொலியில் குடியிருந்த கோயில் திரைப்படத்தில் இருந்து நான் யார்? நான் யார்? நீ யார்? என்ற ரி.எம்.சௌந்தரராஜன் பாடிய பாடல் ஒலி பரப்பானது. நான் ஓடிப் போய் வானொலியை கொஞ்சம் சத்தமாக வைத்தேன். பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த பண்டிதர் பரந்தாமன் தலையை இடம் வலமாக ஆட்டிக் கொண்டிருந்தார். பாடலை இரசிக்கிறார் என எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பாடல் முடிந்ததும் அவரிடம் இருந்து வந்த வார்த்தைகள் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.


„இந்தப் பாடல் சுத்தப் பைத்தியக்காரத்தனமா இருக்கு. இதை ஒரு பைத்தியக்காரன்தான் பாடுவான். எம்.ஜி.ஆர். படத்தில் இப்படி ஒரு பாடலா?“ என அவரிம் இருந்து வார்த்தைகள் வந்து விழுந்து எனது முகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
அதிர்ஸ்டவசமாக அடுத்த மாதமும் எங்கள் ஊரில் குடியிருந்த கோயில் திரைப் படம் காண்பிக்கப் பட்டுக் கொண்டிருந்ததால் அதைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. படம் ஆரம்பிக்கப் பட்டதில் இருந்து "நான் யார்? நான் யார்? நீ யார்? ..." பாடல் எப்பொழுது வரும் என்ற நினைவே எனக்கு அதிகமாக இருந்தது. பாடலும் வந்தது எனக்குப் பரவசமும் கூடவே வந்தது. வாகன விபத்தில் சிக்கிய எம்.ஜி.ஆர். சித்தம் குழம்பி பாடும் பாடலாக நான் யார்? நான் யார்? நீ யார்? என்ற பாடல் இடம் பெற்றிருந்தது.

பைத்தியக்காரத்தனமான பாடல்தான். ஒரு பைத்தியக்காரன் பாடுவதாகத்தான் அந்தப் பாடல் இருக்கிறது என ஓடிப்போய் பண்டிதர் பரந்தாமனிடம் சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால் சொல்லவில்லை.

இந்த சம்பவத்தை நான் எழுதும் போது சமீபத்தில் வெளிவந்த வம்புச் சண்டை என்ற திரைப் படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது. அதில் சத்தியராஜ் மனநிலை குன்றியவராக நடித்திருந்தார். படத்தில் அவர் பாடுவதாக இந்தப் பாடலை ரீமிக்ஸ் செய்திருந்தார்கள். ஆக பைத்தியக்காரத்தனமாகத் தென்பட்டாலும் சில பாடல்கள் நினைவை விட்டு அகலாதவை.

இந்தப் பாடல் சம்பந்தமாக அதை எழுதிய புலமைப் பித்தன் இப்படிச் சொல்கிறார்.
புலவர் படிப்பு படித்துவிட்டு கோவையில் தமிழாசிரியராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். 1966-ம் வருடம் இயக்குநர் கே. சங்கர் என்னை சென்னைக்கு அழைத்தார். திடீரென வந்தது திரைப்பாடல் எழுதுகிற வாய்ப்பு. யார் யாரோ எழுதி சரி வராமல் போக, கடைசியில் என்னை எழுதச் சொன்னதாக நினைவு. மாம்பலம் பவர்ஹவுஸ் அருகில் ஒரு பெட்டிக்கடை வாசலில் நின்றுகொண்டே 'குடியிருந்த கோயில்' படத்துக்காக நான் எழுதிய பாடல்தான் -
நான் யார்? நான் யார்? நீ யார்? நாலும் தெரிந்தவர் யார்- யார்? தாய் யார்? மகன் யார்? தெரியார்; தந்தை என்பார் அவர் யார்- யார்? உறவார்? பகை யார்? உண்மையை உணரார்; உனக்கே நீ யாரோ? வருவார்; இருப்பார்; போவார்; நிலையாய் வாழ்வார் யார் யாரோ?
'ஒரு பைத்தியக்காரன் பாடுவது போல் எழுதுங்கள்!' என்று சொன்னதும் எனக்குத் தோன்றியது 'நான் யார்?' என்கிற கேள்விதான். எல்லோரும் தன்னைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வி இது. பட்டினத்தான் கேட்டாலும் இதைத்தான் கேட்பான். பட்டினத்தானும் பைத்தியக்காரனும் ஒன்றுதானே...

selvakumar
13th July 2012, 03:20 PM
Joe - That is by the censor board. Neenga censor congress party kaarangalannu thiruppi enna ketka koodathu :)

mr_karthik
13th July 2012, 04:19 PM
உலகம் சுற்றும் வாலிபன் வெளியீட்டின்போது கலைஞரும், அவர் தலைமையில் இருந்த அரசும் மிகவும் சில்லறைத்தனமாக நடந்துகொண்டது என்பது தெளிவு. அதுவே எம்.ஜி.ஆருக்கு பெரிய பலமாக அமைந்தது.

பட வெளியீட்டின்போது சென்னை மாநகராட்சி, சினிமா போஸ்ட்டர் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியது. இதனால நகரில் எங்குமே உலகம் சுற்றும் வாலிபன் பட போஸ்ட்டர்கள் ஒட்டப்படவில்லை. எம்.ஜி.ஆர். படத்துக்கு விளம்பரம் தேவையில்லை சரி. ஆனால் மற்ற படங்களுக்கு..?. இதனால் மற்ற படங்கள் அதிகம் பாதிக்கப்பட்டன.

எம்.ஜி.ஆர். புதிய கட்சி துவங்கி அரசியலில் பிஸியாக இருந்ததால், 1972 செப்டம்பர் 30 அன்று வெளியான 'இதயவீணை' படத்துக்குப்பின் வேறு படங்களே வரவில்லை. அப்போது தயாரிப்பில் இருந்த உலகம் சுற்றும் வாலிபன், நேற்று இன்று நாளை, நினைத்ததை முடிப்பவன், பட்டிக்காட்டு பொன்னையா ஆகியன ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தன.

இதனை சாக்காக வைத்து, தி.மு.க.வினர், 'உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் நெகட்டிவ்கள் யாவும் அழிந்து விட்டன. அந்தப்படம் வருவதற்கு சாத்தியமே இல்லை' என்று ஒரு பொய்யைப்பரப்பினர். பலர் நம்பாவிட்டாலும், சில தீவிர எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு இச்செய்தி உண்மையாக இருக்குமோ என்ற அச்சத்தைத் தோற்றுவித்தது.

1973 மார்ச் 31 அன்று ராஜராஜ சோழன் வெளியான தினத்தில், அதிமுகவின் அன்றைய அதிகாரபூர்வ நாளேடான 'தென்னகம்' பத்திரிகையின் கடைசிப்பக்கத்தில் 'மே வெளியீடு எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன்' என்ற முழுப்பக்க விளம்பரம் திடீரென்று வெளியானது. ரசிகர்களுக்கு உற்சாகம் கரைபுரண்டு ஓடினாலும், இன்று ராஜராஜ சோழன் ரிலீஸானதால், அதை மட்டுப்படுத்த இப்படி ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்தது. அந்த விளம்பரத்துக்காகவே அன்றைய பத்திரிகை அதிகம் விற்றுத்தீர்ந்தது. ரசிகர்கள் பரபரப்புடன் வாங்கி தங்கசாலை மணிக்கூண்டு முச்சந்தியில் கூட்டம் கூட்டமாக நின்று விவாதித்துக் கொண்டிருந்தனர்.

(இதனிடையே, பொங்கல் வெளியீடாக வந்து மிட்லண்ட், அகஸ்தியா, உமா, சீனிவாஸா தியேட்டர்களில் ஓடிய தன்னுடைய தயாரிப்பான 'மணிப்பயல்' படத்தை 50 நாட்கள் ஓட்டினால்தான் உலகம் சுற்றும் வாலிபன் படத்தைத்தருவேன் என்று கூறி திரையரங்க உரிமையாளர்களை நிர்ப்பந்தித்தார் ஆர்.எம்.வீரப்பன். தங்களுடைய தியேட்டர்களுக்கு உ.சு.வா. படம் கிடைக்காது என்ற நிச்சயத்தில் மிட்லண்ட், சீனிவாஸா தியேட்டர்கள் மணிப்பயலைத் தூக்கி கடாசின. ஆனால் அகஸ்தியா, உமா தியேட்டர்கள் மணிப்பயலுக்கு 50 நாள் போஸ்ட்டர்கள் ஓட்டின).

உலகம் சுற்றும் வாலிபன் விளம்பரம் பொய்யல்ல, வெளியாவது உண்மைதான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மே 1-ம் தேதி செய்தித்தாளில் 'மே 11 முதல் சென்னை தேவி பாரடைஸ், அகஸ்தியா, உமா மற்றும் தென்னாடெங்கும் எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன்' என்ற விளம்பரம் வந்து உறுதிப்படுத்தியது. மே 9 அன்று ரிசர்வேஷன் ஆரம்பிக்க, அப்படத்துக்கு ரிசர்வேஷனுக்கு வந்த கூட்டம் இன்றுவரை தமிழ்த்திரைப்பட வரலாறு காணாதது.

படம் வெளியானதன் மூலம் 'நெகட்டிவ் அழிந்து விட்டது' என்ற பொய் நிர்மூலமானது.

போஸ்ட்டர் ரேட்டை அதிகப்படுத்தியதால், போஸ்ட்டர் ஒட்டாமலேயே வெற்றிபெற்ற படம் என்ற பெருமை பெற்றது.

தினத்தந்தி, மாலைமுரசு, அலை ஓசை போன்ற அன்றைய லீடிங் பத்திரிகைகளில் விளம்பரம் வராமல் தென்னகம், தினமணி, தினமலர் போன்ற பத்திரிகைகளில் மட்டுமே விளம்பரம் வந்தும் வெற்றி பெற்றது.

திண்டுக்கல் இடைத்தேர்தலுக்கு சரியாக எட்டு நாட்களுக்கு முன் உலகம் சுற்றும் வாலிபனை எம்.ஜி.ஆர். வெளியிட, அது தி.மு.க.வுக்கு பேரிடியாக வந்து சேர்ந்தது.

mr_karthik
13th July 2012, 04:40 PM
குடியிருந்த கோயில் படத்தில் வரும் 'நான் யார்?' பாடலை ஆழ்ந்து கவனித்தால் புலமைப்பித்தனது புலமை தெரியும். அது கண்ணதாசனின் 'அத்திக்காய்' வகையைச்சேர்ந்த பாடல்.

வாலியின் வரிகளைப்போல கேட்டதும் பளிச்சென்று தெரியும் அர்த்தங்கள் அல்ல அவை.

பிணியார் வருவார்.. மருந்தார் தருவார்
பிழைப்பார் யார் யாரோ..

அடிப்பார் வலியார்.. துடிப்பார் மெலியார்..
தடுப்பார் யார் யாரோ..

போன்ற வரிகள் உற்று நோக்கத்தக்கவை.

Richardsof
13th July 2012, 04:44 PM
அன்பே வா - எம் ஜி ஆர் - ஷூட்டிங்க் - விகடன் பொக்கிஷ பக்கங்கள்
சென்னை விமான நிலையத்தில் அன்பர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எண்ணற்ற பூமாலைகள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.-ன் கழுத்தைத் தழுவுகின்றன. 'காரவல்’ டெல்லிக்குப் புறப்படப்போவதை அசரீரிக் குரல் அறிவிக்கிறது.


மக்கள் திலகத்துடன் சிம்லாவுக்குச் செல்லும் குழுவினர் சுமார் 20 பேரும் 'காரவல்’ நோக்கி நடக்கிறார்கள். எல்லோரும் ஏவி.எம். ஸ்டுடியோவின் வண்ணத் தயாரிப்பான 'அன்பே வா’ படப்பிடிப்பு சம்பந்தப்பட்டவர்கள். 'காரவல்’ டெல்லியை அடைந்தபோது நன்கு இருட்டிவிட்டது.


''கால்கா வரை ரயிலில் செல்கிறோம். அங்கிருந்து சிம்லாவுக்கு காரில் போகிறோம். 'இம்பாலா’ கார்கள் மூன்று இங்கிருந்தே நம்மைத் தொடர்ந்து வரும். இரவு 10-30 மணிக்கு ரயில் புறப்படுகிறது. 'ஜல்தி... ஜல்தி’ என்று துரிதப்படுத்தினார் டெல்லி ஏவி.எம். அலுவலகத்தைச் சேர்ந்த ராஜகோபாலன்.
ரயில் புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் சரோஜா தேவி, நடுங்கும் குரலில் எம்.ஜி.ஆரைப் பார்த்து, ''என்னங்க! கால்காவுல 'க்ளவுஸ்’ கிடைக்குமா?'' என்று கேட்டார்.



''இங்கேயே கிடைக்குமே'' என்றார் எம்.ஜி.ஆர்.
'இங்கே எப்படிக் கிடைக்கும்?’ என்பதைப் போல் எம்.ஜி.ஆரைப் பார்த்தார் சரோஜா தேவி. உடனே எம்.ஜி.ஆர். வெள்ளை நிற 'க்ளவுஸ்’ இரண்டை எடுத்து வந்து சரோஜா தேவியிடம் கொடுத்தபோது, ''அடடே... நீங்களே வெச்சிருக்கீங்களா! தேங்க்ஸ்'' என்று வாங்கிக்கொண்டார்.



''எம்.ஜி.ஆரிடம் நிறைய 'க்ளவுஸ்’ இருக்கும்போல் இருக்கிறதே'' என்று எம்.ஜி.ஆருடன் வந்திருந்த அவருடைய டாக்டர் பி.ஆர்.சுப்பிரமணியம் அவர்களிடம் சொன்னேன். ''அதை ஏன் கேக்கறீங்க? ஊட்டியில 'அன்பே வா’ ஷூட்டிங் நடக்கிறப்போ, அதில் சம்பந்தப்பட்ட அத்தனை தொழிலாளர்களுக்கும் ஸ்வெட்டரும் பனிக் குல்லாவும் வாங்கிக் கொடுத்தார் எம்.ஜி.ஆர். அவர்களுக்கெல்லாம் ஒரே குஷி'' என்றார் டாக்டர்.


'சென்னையில் உள்ள ரிக்ஷாக்காரர்கள் அத்தனை பேருக்கும் மழை கோட்டு வாங்கிக் கொடுத்தவருக்கு, இது ஒரு பிரமாதமா?’ என்று எண்ணிக்கொண்டேன்.
'பிளெஸ்ஸிங்டன் கோர்ட்’ என்பது அந்தக் காலத்தில் வெள்ளைக்காரர்கள் சறுக்கி விளையாடு வதற்காக ஏற்படுத்தப்பட்ட பனிக்கட்டிச் சறுக்கு முற்றம். தென் கிழக்கு ஆசியாவிலேயே இத்தகைய சறுக்கு மேடை சிம்லாவில் மட்டுமே உள்ளது. மலைச் சரிவுகளைப் பின்னணியாகக்கொண்டு, இயற்கைச் சூழ்நிலையில் அமைந்துள்ள இந்த அழகிய இடத்துக்கு அருகில் போய் நிற்கும்போது, நம் உள்ளம் குளிர்கிறது.


உடல் 'வெடவெட’வென்று நடுங்குகிறது. இந்த அருமையான இடத்தை இப்போது சர்க்கார் பஸ் ஸ்டாண்டாக மாற்றப்போகிறார்களாம். இந்த சேதியைக் கேட்ட போது எம்.ஜி.ஆர். பதறிப்போய் ''இதென்ன பைத்தியக்காரத்தனம்? பஸ் ஸ்டாண்டுக்கு வேறு இடம் இல்லாமலா போய்விட்டது? இது ரொம்ப அக்கிரமம். விகடனில் இதைப் பற்றி எழுதுங்கள் சார்'' என்றார்.



பஞ்சாப் அழகு ஜோடிகள் சறுக்கி விளையாடும் அபூர்வ காட்சியை எம்.ஜி.ஆரும் சரோஜா தேவி யும் கண்கொட்டாமல் கவனமாகப் பார்த்துக்கொண்டு இருந்தனர். ''என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? நீங்கள்கூடச் சறுக்கலாம். ரொம்ப சுலபம். நாலு தடவை கீழே விழுந்தால் தன்னால் வந்துவிடும்'' என்று எம்.ஜி.ஆருக்குத் தைரியம் கூறினார் சிம்லா தமிழர் ஒருவர். ''அது சரி, நான் கீழே விழுவதைப் படமெடுத்துக் காட்டினால், சிரிப்பார்களே'' என்றார் எம்.ஜி.ஆர்.


எப்படியோ எம்.ஜி.ஆரும் சரோஜா தேவியும் சறுக்கி விளையாடும் காட்சியை இரண்டே நாட்களில் படமாக்கி முடித்துவிட்டார்கள்.


சிம்லாவுக்கு 13 மைல் தூரத்தில் 'குஃப்ரி’ (ரிuயீக்ஷீவீ) என்றோர் இடம் இருக்கிறது. 8,600 அடி உயரத்தில் உள்ள அந்த மலை உச்சியில் போய் நின்று பார்த்தால், தூரத்தில் இமய மலைச் சிகரங்கள் மீது வெள்ளைப் பனி உறைந்துகிடப்பது தெரிகிறது. அந்த இயற்கை எழிலில் மயங்கிப் பரவசத்தில் நின்ற எம்.ஜி.ஆரிடம் ''என்ன பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.


''இமயத்தைக் காணும்போது நாம் எவ்வளவு சிறியவர்களாகிவிடுகிறோம் பார்த்தீர்களா?'' என்றார்.


அந்தச் சமயம் திடீரென்று நாங்கள் இருக்கும் இடத்தை நோக்கி இரண்டு மூன்று ஜீப்புகள் வேகமாக வந்தன. அவற்றில் இருந்து இறங்கிய ராணுவ வீரர்கள் பரபரப்புடன் ஓடி வந்து ''வணக்கம் அண்ணே'' என்று புரட்சி நடிகரைப் பார்த்து வணங்கினர்.


''அடடே! நம் ஊர்க்காரர்களா? வாங்க... வாங்க... வணக்கம், வாழ்க. நீங்கள் எல்லாம் தமிழ்நாட்டைவிட்டு வந்து எத்தனை வருஷமாச்சு? சௌக்கியமா இருக்கீங்களா? இடையில எப்பவாவது ஊருக்குப் போய் வந்தீங்களா?'' என்று அன்புடன் விசாரித்தார்.


எம்.ஜி.ஆரைக் கண்டதும் தமிழ்நாட்டையே நேரில் பார்த்தது போன்ற உற்சாகம் அந்த வீரர்களுக்கு. மக்கள் திலகத்தின் கையைப் பிடித்துக் குலுக்கினார்கள். சிலர் மார்போடு அவரைத் தழுவிக்கொண்டார்கள். கடைசியில், எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டதும் வாழ்வின் பயன் பெற்ற திருப்தியுடன் ''போய் வருகிறோம்'' என்று கூறிப் புறப்பட்டனர்.


மக்கள் திலகம் அவர்களைக் கையைத் தட்டி அழைத்து, ''ஆமாம், விலாசத்தைக் கொடுக்காமல் புறப்பட்டுவிட்டீர்களே... என்ன அர்த்தம்? இப்போது எடுத்துக்கொண்ட போட்டோவை உங்களுக்கு அனுப்ப வேண்டாமா?'' என்று கேட்டபோது, அந்த வீரர்கள் நன்றிப் பெருக்குடன் எம்.ஜி.ஆரைப் பார்த்த காட்சியைப் படம் எடுக்கவில்லையே என்று தோன்றியது.



'புதிய வானம்-புதிய பூமி’ என்ற பாட்டைப் பாடியவண்ணம் எம்.ஜி.ஆர். உல்லாசமாக நடந்துவரும் காட்சியை, குஃப்ரி மலைச் சிகரத்தில் படமாக்கினார்கள். வாலி எழுதிய இந்தப் பாட்டுக்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது அந்த இடம். எம்.ஜி.ஆர். தமது கைகளை வீசி வானத்தையும் பூமியையும் காட்டிப் பாடிக்கொண்டு இருந்த சமயம், வானத்தில் பட்சிகள் கூட்டம் ஒன்று சிவ்வெனச் சிறகடித்துப் பறந்து சென்றது. பட்சிகள் பறக்கும் அந்த அழகிய காட்சியை 'அன்பே வா’ படத்தில் சேர்த்துவிட வேண்டும் எனத் துடித்தார் தயாரிப்பாளர் சரவணன்.


''அடடா! என்ன அழகான காட்சி? டைரக்டர் சார், இந்தப் பறவைகளை ஏதாவது செய்ய வேண்டுமே...'' என்றார் அவர்.


''சுட்டுச் சாப்பிடலாம் சார்?'' என்றார் ஒரு சாப்பாட்டு ரசிகர்.


''அவற்றை ஏற்கெனவே ஷூட் செய்தாயிற்று, கவலைப்படாதீர்கள்'' என்றார் டைரக்டர்.


போகும் வழியில் மலைப் பிரதேசங்களில் ஆங்காங்கே 'பளிச் பளிச்’ என்று வெயில் அடித் துக்கொண்டு இருப்பதைக் கண்ட எம்.ஜி.ஆர்., ''வெயிலெல்லாம் வீணாகப்போகிறதே, இன்னும் கூட இரண்டு ஷாட் எடுக்கலாமே? கொஞ்சம் காரை நிறுத்தப்பா. மாணிக்கம்... பின்னாலே டைரக்டர் சார் வண்டி வருது. நிறுத்தி இன்னும் ஏதாவது எடுக்கப்போறாங்களானு கேளு'' என்றார்.


''ஒன்றும் இல்லை; நேராக சிம்லா போக வேண்டியதுதான்'' என்று டைரக்டர் பதில் கூறிவிடவே எம்.ஜி.ஆருக்குச் சப்பென்று ஆகிவிட்டது.


''காலை முதல் கொஞ்சம்கூட ஓய்வு இன்றி மலைச் சரிவில் ஓடி ஆடி வேலை செய்தீர்களே... களைப்பாக இல்லையா? இன்னமும் ஷூட்டிங் இருக்கிறதா என்று கேட்கிறீர்களே?'' என்றேன்.


''உழைத்தால்தான் சார் எனக்கு உற்சாகமாக இருக்கிறது'' என்றார் எம்.ஜி.ஆர்.


'மால்’ என்பது சிம்லா நகரின் மலைச் சிகரத்தில் அமைந்துள்ள ஓர் அழகு வாய்ந்த இடம். இங்கேயும் இரண்டு மூன்று நாள் ஷூட்டிங் நடைபெற்றது. கொழுகொழுவென்ற திபெத் நாட்டு அநாதைக் குழந்தைகள் இந்தச் சாலை வழியாக நடந்துபோகிறார்கள்.


''பிள்ளைக் கூட்டங்களைப் பார்க்கையிலே...
பிஞ்சு மொழிகளைக் கேட்கையிலே...''


என்று பாடிக்கொண்டு வரும் எம்.ஜி.ஆர். அந்தப் பிள்ளைகளில் இருவரைத் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சுகிறார்.


அடுத்தாற்போல்,
''நல்லவரெல்லாம் நலம் பெறுவார்
என்ற நம்பிக்கை பிறக்கிறது...''


என்ற அடியைப் பாடும்போது, அங்குள்ள காந்தி மகாத்மாவின் சிலையைப் பார்த்துக் கும்பிடுகிறார்.


அன்று மாலை நான் எம்.ஜி.ஆரிடம் ''தாங்கள் மகாத்மாவை வணங்கும் காட்சி என்னைப் புல்லரிக்கச் செய்துவிட்டது. இந்தக் காட்சியைப் படத்தில் பார்க்கும் பொதுமக்கள் பெரிதும் ரசிப்பார்கள்'' என்றேன்.



''காந்தியிடம் எனக்கு எப்போதுமே பக்தி உண்டு. என் வீட்டில் நான் கும்பிடும் என் தாயாரின் படத்துடன் காந்தியின் படத்தையும் வைத்திருக்கிறேன். உலகத்தில் அந்த மாதிரி ஒரு மகானைப் பார்த்தது இல்லை. இயேசுவும் புத்தரும்கூட மதத்தைத்தான் பரப்பினார்கள். ஆனால், காந்தி ஒருவர்தான் அரசியலை நேர்மையோடு நடத்தினார்'' என்றார்.



சிம்லாவில் உள்ள திபெத் அநாதைக் குழந்தைகள் இல்லத்தை பிரிட்டிஷ்காரர் ஒருவர் நடத்திவருகிறார். உயரமான மலை உச்சி மீது அமைந்துள்ள அந்த இல்லத்தைப் பார்க்க வரும்படி எங்களை அந்த வெள்ளைக்காரர் கேட்டுக்கொண்டார். அந்த அநாதை இல்லத்துக்குச் செல்லும் பாதையில் கார் போக முடியாதாகையால், எங்களை அழைத்துச் செல்வதற்கு என அந்த வெள்ளைக்காரர் ஜீப் அனுப்பி இருந்தார்.


செங்குத்தான அந்தப் பாதையில் எங்கள் ஜீப் முக்கி முனகிக்கொண்டு மேலே ஏறியபோது, நாங்கள் பிராணத் தியாகம் செய்வதற்குத் தயாராகிவிட்டோம். ஓர் இடத்தில் அந்த ஜீப் பின்னுக்குப் போய் 'டர்ன்’ எடுத்தபோது பின் பக்கம் திரும்பிப் பார்த்தோம். அதல பாதாளத்துக்கும் எங்களுக்கும் இடையே அரை அங்குலம் இடைவெளிதான். மயிர்இழையில் ஊசலாடிக்கொண்டு இருந்த ஜீப்பை அந்த டிரைவர் ஒரு பிரேக் போட்டு நிறுத்தி, மீண்டும் முன்னால் கொண்டுபோனபோது, எம்.ஜி.ஆர். 'முருகா’ என்று கத்திவிட்டார்.


அந்த அநாதைக் குழந்தைகள் இல்லத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது, எம்.ஜி.ஆர். அந்த வெள்ளைக்காரரின் கையைப் பிடித்துக் குலுக்கினார். அப்போது அவருடைய கையில் இருந்த 100 ரூபாய் நோட்டுக் கற்றை ஒன்று வெள்ளைக்காரரின் கைக்கு மாறியது.



''இந்தக் குழந்தைகள் இல்லத்துக்கு இதைப் பயன்படுத்துங்கள்'' என்றார் எம்.ஜி.ஆர். 'எவ்வளவு கொடுக்கிறோம் என்று கணக்குத் தெரியாமலே இப்படி அள்ளிக் கொடுக்கிறாரே’ என்று எண்ணிக்கொண்டேன். ஆனால் 'எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்?’ என்று நான் அவரைக் கேட்கவில்லை. ஏனெனில், கேட்டாலும் அவர் சொல்ல மாட்டார் என்பது எனக்குத் தெரியும்.



வளமும் வனப்பும் மிக்க சிம்லாவிலும் குஃப்ரியிலும் உள்ள வண்ண வண்ணமான இயற்கைக் காட்சிகளுக்கு இடையே எம்.ஜி. ஆரை ஓடவிட்டு, ஆடவிட்டு, பாடவிட்டுக் கண்ணுக்கு இனிய கலர் படமாக ஆக்கிய பிறகு தான், தயாரிப்பாளருக்கும் டைரக்டருக்கும் பூரண திருப்தி. 'அன்பே வா’ படத்தில் வரப்போகும் அந்த எழில்மிகு இயற்கைக் காட்சிகளைப் பற்றியோ, எம்.ஜி.ஆரின் புதுமை மிக்க உல்லாச நடிப்பைப் பற்றியோ நான் இங்கே ஒன்றும் கூறப்போவது இல்லை. ஏனெனில், நீங்களே அவற்றை எல்லாம் படத்தில் பார்க்கப்போகிறீர்களே!



திரும்பி வரும்போது கால்கா ஸ்டேஷன் பிளாட்ஃபாரத்தில் ஜன நடமாட்டமே இல்லை. எம்.ஜி.ஆருக்கு ஒரே குஷி. பிளாட்ஃபாரத்தில் அப்படியும் இப்படியும் உற்சாகத்தோடு அலைந்தார். ''அடடா! இவ்வளவு சுதந்திரமாகத் தென்னாட்டில் நடந்து போக முடியுமா? இதற்குள் ஆயிரம் பேர் என்னைச் சுற்றி வளைத்துக்கொண்டு இருப்பார்களே. எனக்கு இந்த இடம் எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது தெரியுமா?'' என்று சிறு குழந்தைபோல் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.



''டெல்லியில் நான் காந்தி சமாதி, நேரு சமாதி, காந்தியின் உயிர் பிரிந்த இடம் இந்த மூன்றையும் பார்த்துவிட்டு மறுநாள்தான் சென்னைக்குப் போகப் போகிறேன்'' என்றார் எம்.ஜி.ஆர்.


மறுநாள் பகல் 11 மணி சுமாருக்கு ராஜ்காட்டுக்குப் புறப்படுவதற்காக நாங்கள் அசோகா ஹோட்டலை விட்டுக் கீழே இறங்கியபோது, எம்.ஜி.ஆரை நோக்கி ஒரு பெரும் கூட்டம் 'திமுதிமு’வென்று ஓடி வந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்தத் தொழிலா ளர்கள், எம்.ஜி.ஆர். வந்திருக்கும் செய்தியை எப்படியோ தெரிந்துகொண்டு, காலையில் இருந்தே அந்த ஹோட்டல் வாசலில் காத்திருந்தனர்.



ராஜ்காட்டுக்குச் செல்லும்போது, ''இவர்களுக்கு எல்லாம் உங்களிடம் இத்தனை அன்பு எப்படி உண்டாயிற்று?'' என்று கேட்டேன்.


''அரண்மனை போன்ற இந்த அசோகா ஹோட்டல் மாடியில் இருந்து நான் 'லிஃப்டில்’ இறங்கி வருகிறேன். ஆனாலும், இவர்களுக்கு என்னைக் கண்டு துளியும் பொறாமை ஏற்படவில்லை. அதற்குப் பதில் என்னிடம் அன்பும் நம்பிக்கையும்கொண்டு இருக்கிறார்கள். நான் இத்தனை அந்தஸ்தில் வாழ்வதே அவர்களுக்காகத்தான் என்று எண்ணுகிறார்கள்'' என்றார்.



கார் ராஜ்காட்டில் போய் நிற்கிறது. முதலில் காந்தி சமாதிக்குச் சென்று அந்தச் சமாதி மீது மலர் வளையத்தைப் பக்தியோடு வைத்து வணங்குகிறார் எம்.ஜி.ஆர். பிறகு, சமாதியை ஒருமுறை வலம் வந்து, மௌனமாக உட்கார்ந்துகொள்கிறார். சிறிது நேரம் கண்களை மூடிய வண்ணம் தியானத்தில் ஈடுபடுகிறார்.


உணர்ச்சிப் பெருக்கினால் அவர் கண்களில் நீர் பெருகி வழிகிறது. பின்னர், மெதுவாக எழுந்து நேருஜியின் சமாதிக்குச் செல்கிறார். நாமும் அவரைப் பின்பற்றிச் செல்கிறோம். சமாதியை வலம் வருகிறோம். மலர் வளையங்கள் வைத்து வணங்குகிறோம். இந்த நாட்டின் உய்வுக்காகப் பெரும் தலைவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். அன்று மாலை காந்திஜி கொல்லப்பட்ட நேரத்திலேயே, அந்த இடத்துக்குப் போய்க் கண்ணீர் சிந்திவிட்டுத் திரும்பினோம்.


மறுநாள் காலை 6 மணிக்கு டெல்லியைவிட்டுப் புறப்பட்ட 'காரவல்’ 9 மணிக்குள் சென்னையை அடைந்துவிட்டது. வானத்தில் இருந்து பூமியில் இறங்கி நடந்தபோது, குளிரெல்லாம் போய்க் கதகதவென்று இருந்தது. ''எப்படி இருக்கிறது?'' - புன்சிரிப்போடு கேட்டார் எம்.ஜி.ஆர்.


''பழைய வானம்... பழைய பூமி என்று பாடலாம் போல் இருக்கிறது'' என்றேன் நான்.






2

Richardsof
13th July 2012, 04:55 PM
எம்.ஜி.ஆரின் சொந்தப்படம் "அடிமைப்பெண்" வெள்ளி விழா கொண்டாடியது

1969_ம் ஆண்டில் "அடிமைப் பெண்", "நம் நாடு" ஆகிய 2 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். இரண்டுமே வெற்றிப்படங்கள் என்றாலும், "அடிமைப்பெண்" மெகாஹிட் படம். எம்.ஜி.ஆரின் சொந்தப்படம். நாடோடி மன்னனுக்குப்பிறகு, அவர் பிரமாண்டமாக தயாரித்த படம். ஆனால், இதை எம்.ஜி.ஆர். டைரக்ட் செய்யவில்லை. கே.சங்கர் டைரக்ட் செய்தார்.

அடிமைப்பெண்ணின் கதையை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகா எழுதியது. வசனத்தை சொர்ணம் எழுதினார். பாடல்களை வாலி, ஆலங்குடி சோமு, புலமைப்பித்தன், அவிநாசி மணி ஆகியோர் எழுத, கே.வி.மகாதேவன் இசை அமைத்தார்.

ஆரம்பத்தில், இப்படத்தின் கதாநாயகியாக கே.ஆர்.விஜயா ஒப்பந்தம் செய்யப்பட்டார். சில காட்சிகளும் எடுக்கப்பட்டன. பின்னர், அவருக்கு பதிலாக ஜெயலலிதா நடித்தார். அசோகன், ஆர்.எஸ்.மனோகர், "சோ", ஓ.ஏ.கே.தேவர், பண்டரிபாய், ஜோதிலட்சுமி, பேபி ராணி ஆகியோரும் நடித்தனர். "அடிமைப்பெண்" கதை, நிறைய சம்பவங்களும், திருப்பங்களும் கொண்டது.

செங்கோடன் (அசோகன்) கொடியவன். வேங்கை மலைத் தலைவி மங்கம்மா (பண்டரிபாய்) மீது மோகம் கொள்கிறான். அவள் வெறொருவரை மணந்து, தாயான பிறகும் அவளை அடைய முயற்சி செய்கிறான்.

"உன் குழந்தையைக் கொலை செய்வேன்" என்று மிரட்டுகிறான். ஆனால் அவளோ புலியென மாறி, அவன் காலைத் துண்டாக்குகிறாள். ஒரு காலை இழந்த செங்கோடன், மங்கம்மாவை பழி தீர்த்துக் கொள்ள அவளுடைய 2 வயது மகன் வேங்கையனை கடத்திச் சென்று, ஒரு சிறு இருட்டறையில் அடைத்து வைக்கிறான். இதனால், வேங்கையன் கூனிக்குறுகி வளருகிறான்.

மங்கம்மா, செங்கோடன் கண்ணில் படாமல் மறைந்து வாழ்கிறாள். அவளைக் கண்டுபிடித்து அவள் கண் எதிரே வேங்கையனின் கால்களைத் துண்டிக்கப்போவதாக சபதம் செய்கிறான், செங்கோடன். பெண்களை அடிமையாக்கி, கால்களில் விலங்கு மாட்டுகிறான். எதிர்க்கும் ஆண்களின் தலை துண்டிக்கப்படுகிறது.

இருட்டறையில் கூனனாகவே வளர்ந்து வரும் வேங்கையன், வாலிபனான பிறகும் பேசக்கூட முடியாத அளவுக்கு குழந்தை போல் இருக்கிறான்.

ஒரு அழகி (ஜெயலலிதா) மூலம், அவனுக்கு விடிவுகாலம் ஏற்படுகிறது. கூன் நிமிர்ந்து, செங்கோடனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குகிறான். கொடியவர்களை ஒடுக்குகிறான். அடிமைப்பெண்களை விடுவிக்கிறான்.

1_5_1969_ல் வெளியான இந்தப் படத்தில், எம்.ஜி.ஆர். மாறுபட்ட வேடத்தில் சிறப்பாக நடித்திருந்தார். ஆரம்பக் காட்சிகளில், முதுகை வளைத்து கூனனாக நடித்த காட்சிகளில், ரசிகர்களின் கைதட்டலைப் பெற்றார். பின்னர் கூன் சரியாகி வீரதீரச் செயல்கள் செய்யும்போது, வழக்கமான எம்.ஜி.ஆரைக் கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

இப்படத்தில் ஜெயலலிதா மிகச்சிறப்பாக நடித்ததோடு, "அம்மா என்றால் அன்பு" என்ற வாலியின் பாடலை சொந்தக் குரலில் பாடினார். வாலி எழுதிய "ஏமாறாதே... ஏமாற்றாதே" என்ற பாடலும், ஆலங்குடி சோமு இயற்றிய "தாயில்லாமல் நானில்லை" என்ற பாடலும், புலமைப்பித்தனின் "ஆயிரம் நிலவே வா" பாடலும் `ஹிட்'டாகின.

"ஆயிரம் நிலவே வா" பாடல் மூலம்தான், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தமிழ்த் திரை உலகுக்குப் பின்னணி பாடகராக அறிமுகம் ஆனார். சண்டைக் காட்சிகள் புதுமையான முறையில் விறுவிறுப்பாக அமைந்தன. சிங்கத்துடன் எம்.ஜி.ஆர். சண்டை போடும் காட்சி, மெய் சிலிர்க்கச் செய்தது.

"அடிமைப்பெண்" மதுரை சிந்தாமணி தியேட்டரில் 176 நாட்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது. சென்னையில் மிட்லண்ட் உள்பட 4 தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.

திருச்சி, கோவை, சேலம் உள்பட 9 நகரங்களில் 100 நாள் ஓடியது. நெல்லையில் சென்ட்ரல் தியேட்டரில் 120 நாள் ஓடியது குறிப்பிடத்தக்கது. 1969_ம் ஆண்டின் சிறந்த படத்துக்கான தமிழக அரசின் விருது இப்படத்துக்குக் கிடைத்தது.

நாகிரெட்டி _ சக்ரபாணி ஆகியோர் "விஜயா இன்டர்நேஷனல்" சார்பாக தயாரித்த படம் "நம் நாடு". இதை டைரக்ட் செய்தவர் ஜம்பு. வசனம்: சொர்ணம். இசை: எம்.எஸ்.விஸ்வநாதன். எம்.ஜி.ஆர் _ ஜெயலலிதா இணைந்து நடித்த இந்தப்படம் 7_11_1969_ல் வெளிவந்தது.

எம்.ஜி.ஆர். வெகு இயற்கையாக நடித்த படம். பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. சென்னையில் மூன்று தியேட்டர்களில் நூறு நாட்கள் ஓடியது. மதுரையில் 147 நாட்கள், திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது.

Raajjaa
13th July 2012, 07:39 PM
கலக்குறீங்க வினோத் சார்.

உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பற்றிய தகவல் தந்த கார்த்திக் சாருக்கு ந்ன்றி.

app_engine
13th July 2012, 07:43 PM
நேற்று இன்று நாளை அரசியல் நெடி சற்று அதிகமுள்ள எம்.ஜி.ஆர். படம் இது. மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்- தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்வார் என்று தம்பி நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று என்ற பாடலில் எம்.ஜி.ஆர். பாடுவதாக உள்ள வரிகள் தி.மு.க ஆட்சிக்கெதிரான வலுவான பிரச்சாரமாக அமைந்தது. இந்தப் படமும் பல கெடுபிடிகளுக்கிடையில்தான் தமிழகமெங்கும் திரையிடப்பட்டது. வெற்றியும் கண்டது. போட்டோமைக்குரல் ஒரேயரு கனவுப்பாடல் தவிர படம் முழுக்க எம்.ஜி.ஆருக்கு வேஷ்டி சட்டைதான். ஸ்ரீதர் இயக்கி முதன் முதலாக எம்.ஜி.ஆர். நடித்த எளிய கிராமியப் படமான போட்டோமைக்குரல் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு ஈடான வெற்றியைப் பெற்றது. இது கன்னடப் படமொன்றின் தழுவலாகும். சிரித்து வாழ வேண்டும் போட்டோமைக்குரல் வெளிவந்த 3 வார இடைவெளியில் எம்.ஜி.ஆர் படங்களின் இடைவெளிக்குபின் இதுவும் 100 நாட்கள் வெற்றிப் படமானது. அமிதாப், பரான் நடித்த ஜஞ்ஜீர் என்ற இந்திப் பட தழுவலான இதில் எம்.ஜி.ஆர் இரண்டு வேடங்களையும் ஏற்றிருந்தார்.


எப்படி உரிமைக்குரல் போட்டோமைக்குரல் ஆனது?
:confused2:

eehaiupehazij
13th July 2012, 10:16 PM
Unlike Sivaji's overnight stardom, MGR's career progress was not a bed of roses but a path of thorns. Before achieving the status of a Hero, he had done more than a dozen movies as a side actor in insignificant roles including Sathileelavathy and Ashok Kumar. Even in Alibabavum 40 thirudarhalum, Banumathi dominated over MGR and he played almost subtle even as his brother Chakrabani and Thangavelu could take significant screen space. Of course MGR retired off screen as a Hero only, as ageing and political entry warranted

Richardsof
14th July 2012, 08:57 AM
சின்னப்ப தேவருடன் மீண்டும் நட்புறவு ஏற்பட்டதும், அவர் படங்களில் எம்.ஜி.ஆர். தொடர்ந்து நடிக்கலானார். ஒரு படத்துக்கு கொடுக்க வேண்டிய பணத்தை எம்.ஜி.ஆருக்கு மொத்தமாகக் கொடுத்து விடுவது தேவரின் வழக்கம். அத்துடன், அடுத்த படத்துக்கும் "அட்வான்ஸ்" கொடுத்து விடுவார்! இதனால், தேவர் பிலிம்ஸ் எடுக்கும் படம் ஒன்றில் எம்.ஜி.ஆர். தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பார். தேவர், இடையிடையே வேறு நடிகர்_ நடிகைகளை வைத்து பக்திப் படங்களும் எடுப்பார்.

இதற்கு முன்பெல்லாம், வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களில் மட்டும் நடித்து வந்த எம்.ஜி.ஆர்., 1962 முதல் ஐந்து அல்லது ஆறு படங்களில் நடிக்கத் தொடங்கினார். 1962_ல் "ராணி சம்யுக்தா", "மாடப்புறா", "தாயைக் காத்த தனயன்", "குடும்பத் தலைவன்", "பாசம்", "விக்ரமாதித்தன்" ஆகிய 6 படங்களில் நடித்தார். அதாவது 2 மாதங்களுக்கு ஒரு படம்!

மேற்கண்ட 6 படங்களில் "மாடப்புறா", "பாசம்" தவிர மற்ற படங்கள் வெற்றிப்படங்கள். பி.வள்ளிநாயகம் என்பவர் "பி.வி.என்" புரொடக்ஷன்ஸ் என்ற படக்கம்பெனியைத் தொடங்கித் தயாரித்த படம் "மாடப்புறா". நாராயணசாமி என்பவர் வசனம் எழுத, எஸ்.ஏ.சுப்பு ராமன் டைரக்ட் செய்தார். எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி நடித்த இந்தப்படம் ஓடாததற்குக் காரணம், கதை அம்சம் சரி இல்லாததுதான்.

"பாசம்" படத்தை தயாரித்து இயக்கியவர் டி.ஆர். ராமண்ணா. எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி, ஷீலா நடித்த இந்தப்படம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், எம்.ஜி.ஆர். இறந்து விடுவது போல படத்தை முடித்திருந்தார்கள். எம்.ஜி. ஆர். ரசிகர்கள் இதை ஏற்பார்களா? எம்.ஜி.ஆர். படத்தை பத்துப் பதினைந்து முறை பார்க்கும் அவரது ரசிகர்கள், ஒரே தடவையுடன் நிறுத்திக் கொண்டார்கள்! படம் சரியாக ஓடவில்லை.

இன்னொன்றை கவனிக்க வேண்டும். எம்.ஜி. ஆர். படங்களில் சில படங்கள் 100 நாள் வரை ஓடாவிட்டாலும், அது தோல்விப்படம் என்று அர்த்தமல்ல. மற்ற எம். ஜி.ஆர். படங்களைவிட வசூலில் குறைவாக இருக்கலாமே தவிர, பட அதிபர்களுக்கோ, விநியோகஸ்தர்களுக்கோ நஷ்டத்தை ஏற்படுத்தி விடாது. "யானை படுத்தால் குதிரை மட்டம்" என்று கூறுவதுபோல், நஷ்டம் ஏற்படாத அளவுக்கு வசூலித்துக் கொடுத்துவிடும்.

"தாயைக் காத்த தனயன்", "குடும்பத் தலைவன்" இரண்டும் தேவர் பிலிம்ஸ் தயாரித்த படங்கள். எம்.ஜி.ஆரை வைத்து ஒரே ஆண்டில் இரு படங்களைத் தயாரித்தவர் தேவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.

இரண்டு படங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜாதேவி. இரண்டு படங்களுக்கும் வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ்; இரண்டு படங்களையும் டைரக்ட் செய்தவர் தேவரின் தம்பி எம்.ஏ.திருமுகம். இரு படங்களுமே வெற்றிப் படங்கள்.

"ராணி சம்யுக்தா", ஏ.சி.பிள்ளையின் "சரஸ்வதி பிக்சர்ஸ்" தயாரிப்பு. எம்.ஜி.ஆரும், பத்மினியும் இணைந்து நடித்தனர். யோகானந்த் டைரக்ட் செய்தார். வசனங்களை கண்ணதாசன் எழுதினார். இசை: கே.வி.மகாதேவன்.

ஏற்கனவே பி.யு.சின்னப்பா _ஏ.சகுந்தலா நடித்த "பிருதிவிராஜன்" படத்தின் கதைதான் "ராணி சம்யுக்தா." சின்னப்பா வின் படம் கூட, சுமாரான வெற்றியைத்தான் பெற்றது. எம்.ஜி. ஆரின் "ராணி சம்யுக்தா" வெற்றிப்படமாக அமைந்தாலும் "சூப்பர் ஹிட்" படம் அல்ல.

ஜெயபாரத் புரொடக்ஷன்ஸ் அதிகப்பொருட்செலவில் தயாரித்த படம் "விக்ரமாதித்தன்". டி.ஆர்.ரகுநாத்தும், என்.எஸ்.ராமதாசும் இணைந்து டைரக்ட் செய்த படம். இசை: ராஜேஸ்வராவ். இதில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக பத்மினி நடித்தார்.

இந்தக் காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவியும், சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக பத்மினியும், ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக சாவித்திரியும் நடித்து வந்தனர். இந்த ஜோடிப் பொருத்தத்தை ரசிகர்கள் மிகவும் விரும்பினர். படங்கள் மிக நன்றாக ஓடின.

ஆனால், ஜோடி மாற்றத்தை ஏனோ ரசிகர்கள் விரும்பவில்லை. ஜோடி மாற்றப்பட்ட படங்கள், அவை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், எதிர்பார்த்ததற்கு சற்று குறைவாகவே ஓடின! அந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டிய படம் "விக்ரமாதித்தன்"!

mr_karthik
14th July 2012, 10:28 AM
//இந்தக் காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவியும், சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக பத்மினியும், ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக சாவித்திரியும் நடித்து வந்தனர். இந்த ஜோடிப் பொருத்தத்தை ரசிகர்கள் மிகவும் விரும்பினர். படங்கள் மிக நன்றாக ஓடின.

ஆனால், ஜோடி மாற்றத்தை ஏனோ ரசிகர்கள் விரும்பவில்லை. ஜோடி மாற்றப்பட்ட படங்கள், அவை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், எதிர்பார்த்ததற்கு சற்று குறைவாகவே ஓடின! அந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டிய படம் "விக்ரமாதித்தன்"!//

ஜோடி மாற்றத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்பதை ஒப்புக்கொள்ள முடியவில்லை.

ஏனென்றால், அதே பத்மினியுடன் எம்.ஜி.ஆர். ஜோடியாக நடித்த மதுரை வீரன், மன்னாதி மன்னன் படங்கள் வெற்றியடைந்துள்ளன.

அதுபோல மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சிறந்த ஜோடியான சரோஜாதேவி, அதே காலகட்டத்தில் நடிகர்திலகத்துடன் நடித்த நடித்த பாகப்பிரிவினை, பாலும் பழமும், பார்த்தால் பசிதீரும், விடிவெள்ளி, ஆலயமணி, இருவர் உள்ளம், புதிய பறவை ஆகியவை பெருவெற்றி கண்டுள்ளன.

mr_karthik
14th July 2012, 10:32 AM
//"தாயைக் காத்த தனயன்", "குடும்பத் தலைவன்" இரண்டும் தேவர் பிலிம்ஸ் தயாரித்த படங்கள். எம்.ஜி.ஆரை வைத்து ஒரே ஆண்டில் இரு படங்களைத் தயாரித்தவர் தேவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.//

After he re-joined with MGR again, Devar made a record that he is the only producer giving two movies per year with MGR.....

1962
thAyaikAththa thanayan
kudumba thalaivan

1963
dharmam thalaikAkkum
needhikkuppin pAsam

1964
vEttaikkAran
thozhilALi

1965
kanni thAi

1966
thanipiravi
mugarAsi

1967
thAikku thalai magan
vivasAyi

1968
thEr thiruvizhA
kAdhal vAganam

(after this, Devar made films with other actors like Jaishankar, Muthuraman, A.V.M.Rajan)

1972
nalla nEram (last one with MGR)

Thirumaran
14th July 2012, 10:55 AM
1958-ல்
முதல் பாட்டை எழுதினேன்.
‘கோபி’ என்று கோடம்பாக்கத்தாரால் அறியப் பெற்ற திரு. வி. கோபால கிருஷ்ணன்தான் –
என்னுள் இருந்த என்னை எனக்கே காட்டியவர்; நாளும் பொழுதும் என் நெஞ்சுக்கு நம்பிக்கைச் சோறு ஊட்டியவர்.
திருவரங்கத்திலிருந்து நான் திருவல்லிக்கேணிக்கு இடம் பெயரக் காரணம் –
திரு. கோபி!

ஒரு வைகறைக்கான வாய்ப்பே இல்லையென்று – என் நீல இரவு, சீனத்துச் சுவர் போல் நீள இரவாகக் கிடந்தபோது –
இந்த கோபிதான், ஒரு கொண்டைச் சேவலாகி, என் கும்மிருட்டு விடியக் கூவியவன்!

‘மிஸ். மாலினி’ படத்தில் கொத்தமங்கலம் சுப்புவோடு நடித்த கோபியை;
‘ஏழை படும் பாடு’ படத்தில் பத்மினியோடு அவரது முதல் கதாநாயகனாக நடித்த கோபியை;
‘நானே ராஜா’ படத்தில் சிவாஜி கணேசன் வில்லனாக வர – ஒரு He-Man Hero - வாக வந்து, கதாநாயகியோடு டூயட் பாடிய கோபியை;
‘பாசவலை’யில், பட்டுக்கோட்டை பாடல்களோடு என்னைப் பரவசப் படுத்திய கோபியை;
திருச்சி ரெட்டை மால் தெரு, வக்கீல் திரு. நடேசய்யர், வீட்டில்தான் முதன் முதலில் சந்தித்தேன். திரு. நடேசய்யர் அவர்களின் மகன், திரு. N. சீதாராமன் எனக்கு நன்கு அறிமுகமானவர். அவர் வீட்டுக் கல்யாணம் ஒன்றில்தான், சீதாராமன் எனக்கு கோபியை அறிமுகப்படுத்தினார்.
இந்த சீதாராமன்தான் புகழ் வாய்ந்த திரு. ஜாவர் சீதாராமன்.
சீதாராமன் மூலமாக கோபியும்; கோபியின் மூலமாக திரு. எம்.ஜி.ஆரும் எனக்கு அறிமுகமாக வேண்டும் என்பது ஆண்டவன் கட்டளை!
இந்த இடத்தில் ஒன்றை நான் சொல்ல வேண்டும்; தள்ளிப் போட்டால், மறந்து விடக்கூடும்! அது –ஆண்டவன் கட்டளை பற்றியது!

எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் படம் ஒன்று. திரு. எம்.ஜி. சக்ரபாணி அவர்களின் மேற்பார்வையில் –
திரு. கே. சங்கர் இயக்கத்தில் தொடங்கி –
பிறகு, எம்.ஜி.ஆர். குண்டடி பட்ட காரணத்தால் படப்பிடிப்பு தள்ளிப் போய் –
திரு. எம்.ஜி.ஆர். உடல் நலம் தேறிய பின் மீண்டும் தொடங்கியது.
ஆரம்பத்தில் –
அந்தப் படத்தின் இசையமைப்பாளர் திரு. எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்கள்.
நான் எழுதி – அவரது இசையில் ஓரிரு பாட்டுகளும் பதிவாயின.
படம் – மீண்டும் தொடங்கப் பெற்றபோது – திரு. கே.வி. மகா தேவன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப் பெற்றார்.
‘புத்தம் புதிய புத்தகமே – உனைப்புரட்டிப் பார்க்கும் புலவன் நான்!’
– என்கிற பாடலை நான் எழுதி முடித்தேன்.
இது, திருமதி. சரோஜா தேவியும் எம்.ஜி.ஆரும் பாடுகிற டூயட்.
மறுநாள் –
எம்.ஜி.ஆர். என்னை அழைத்து ஜெயலலிதா பாட வேண்டிய ஒரு Solo song எழுதச் சொன்னார்.
‘அதை எழுதிக் கொடுத்தால் மட்டும் போதாது; இன்னும் ஒரு பாட்டு – நான் Solo-வாகப் பாடுவது; அதையும், நாளைக்கு வந்து எழுதிக் கொடுத்து விட்டுத்தான், சிவாஜி படத்துக்கு நீங்க போகணும்!’ என்று எம்.ஜி.ஆர். அன்பாக எச்சரித்தார்.
“நான் – சிவாஜி நடிக்கும் ‘இரு மலர்கள்’ படத்திற்கு, நாளை போயாக வேண்டும்; இனிமேயும் அதை நான் தள்ள முடியாது” என்று –
முதல் நாள் Production Manager திரு. பத்மநாபனிடம் நான் உறுதி படச் சொல்லியிருந்தது, அவர் காதுக்கு எட்டியிருந்ததால்தான் – எம்.ஜி.ஆர். என்னை, அவர் வேலைக்குத்தான் நான் First preference கொடுக்க வேண்டுமென்பதை ஓர் எச்சரிக்கையாகவே சொன்னார்.
நான், சிரித்துக் கொண்டே –
‘அண்ணே! உங்க வார்த்தையை நான் எப்படீண்ணே மீறுவேன்? இன்னிக்கு நான் நிறையப் படங்கள்ளே பாட்டு எழுதறேன்னா – அது நீங்க போட்ட பிச்சை! என் மனசுல, உங்களப் பத்தி நான் என்ன நெனச்சுக்கிட்டிருக்கேன் தெரியுமா?’ என்று நிறுத்தினேன்.
‘என்னைப் பத்தி, என்ன நினைச்சுக்கிட்டிருக்கீங்க? சொல்லுங்களேன், கேப்போம்!’ என்றார் எம்.ஜி.ஆர்.
“எனக்கு நீங்க யாருன்னு – ரெண்டே வரீல, ஒரு கவிதை சொல்றேன் –
‘என்னைப்
பாட வைத்தவன் ஒருவன்;
என் –
பாட்டுக்கு அவன்தான் தலைவன்!’
– இதுதாண்ணே, எனக்கு நானே காலையிலே தினம் கண் முழிச்சு எழுந்ததும் – நன்றியோட சொல்லிக்கிற பாட்டு!”
– இப்படி நான் சொன்னவுடன், எம்.ஜி.ஆர். மகிழ்ந்து, நெகிழ்ந்து என்னைப் பக்கத்தில் இழுத்து உச்சந்தலையில் முத்தம் கொடுத்தார்.
உடனே – டைரக்டர் சங்கர்,
‘கவிஞரே! இப்ப சொன்னதையே பல்லவியா வெச்சு – ஒரு முழுப் பாட்டு எழுதிக் கொடும்’ என்று துரிதப்படுத்தி, பேப்பர் Pad-ஐ என் பக்கம் நீட்டிப் பேனாவையும் கொடுத்தார்.
நான் சரணங்களை கிடுகிடுவென்று எழுதினேன். அதற்கு முன், பல்லவியில் இன்னும் இரண்டு வரிகள் சேர்த்தேன்.

‘என்னைப்
பாட வைத்தவன் ஒருவன்! – என்
பாட்டுக்கு அவன்தான் தலைவன்!
ஒரு –
குற்றமில்லாத மனிதன்! அவன்
கோயில் இல்லாத இறைவன்!

அவன் –
தோட்டத்தில் பறவைகள் கூட்டம்;
அவன்
சபைகளில் எத்தனை ஆட்டம்!;
அவன்
கலைகளுக்கெல்லாம் மன்னன்;
நல்ல
கலைஞருக் கெல்லாம் வள்ளல்!
– அவன்
வீட்டுக்குக் கதவுகள் இல்லை! – அந்த
வாசலில் காவல்கள் இல்லை! அவன்
கொடுத்தது எத்தனை கோடி? –
அந்தக்
கோமகன் திருமுகம் வாழி!’

பாட்டை நான் எழுதி முடித்து எம்.ஜி.ஆரிடம் படித்துக் காட்டியவுடன் –
‘சரி... இதுதான் அம்மு பாட வேண்டிய solo song...! இதை நான், மாமா கிட்டே மெட்டுப் போட்டு வாங்கிக்கறேன்... நீங்க, என் solo song ஒரு பல்லவி சொல்லுங்க!’ என்று பாட்டை வாங்கித் தன் சில்க் ஜிப்பாவின் பைக்குள் செருகிக் கொண்டார்.
‘அம்மு’ என்று அவர் குறிப்பிட்டது – செல்வி. ஜெயலலிதாவை!

டைரக்டர் கே. சங்கர், என்னிடம் எம்.ஜி.ஆர். பாட்டுக்கான காட்சியை விளக்கினார்.
‘நாட்டில் –
ஒரு சர்வாதிகாரி மன்னனாக இருந்து ஆட்சி நடத்துகிறான். மக்களைக் கொத்தடிமையாக்கி – அவர்களை அரசன் தன் விருப்பத்திற்கேற்ப இயங்க வைக்கிறான்.
ஒரு நடன மாது; அவள் தன் குழுவினருடன் ஆடித் தெருமக்களை மகிழ்விப்பவள்; அவளால்,
மக்கள் மான உணர்வு பெறுகிறார்கள் என்று அறிந்த மன்னன் –
அவளை ஆடக் கூடாது என்று கட்டளையிட்டு அதிகாரிகள் மூலம் தாக்கீது அனுப்புகிறான்.
அந்த நடனமாது, மன்னன் கட்டளையை எப்படி மீறுவது என்று அஞ்சித் தன் குழுவினரோடு புறப்பட எத்தனிக்கையில் –
கதாநாயகன், அவள் அச்சத்தைப் போக்கும் விதமாக ஓர் எழுச்சிப் பாடலைப் பாடி ஊர்ச்சனங்களையும் கூட்டி, அவர்களுக்குள் விடுதலை வேட்கையை விதைக்கிறான்!’
– இப்படி சங்கர் அவர்கள் சொன்னவுடன் நான், ‘உலகத்தில் இறைவன் கட்டளைதான் செல்லும்; வேறு எவன் கட்டளையும் எடுபடாது’ எனும் பொருள்படும்படி –

‘ஆண்டவன் கட்டளை முன்னாலே – உன்
அரச கட்டளை என்னாகும்?’

– என்று பல்லவியைத் தொடங்கி எழுதலானேன்.
இயக்குநர் சங்கரின் முகம், திடீரென்று இறுகியது; சுற்றியிருந்த உதவி இயக்குநர்கள் முகங்களும் ஒருவகை அச்சத்தில் வெளிறின!
எம்.ஜி.ஆர். ஒரு வினாடி, என்னை உற்று நோக்கினார்.
சற்று முன், என்னுடைய முந்தைய பாடலைக் கேட்டு நெகிழ்ந்த அவர் –
சகல சந்தோஷங்களையும் தொலைத்து விட்டு – என்னை சந்தேகக் கண் கொண்டு பார்த்தார்.
எம்.ஜி.ஆர். உள்பட – இப்படி என்னைச் சுற்றியிருந்த எல்லோருடைய முகங்களிலும் ஏன் எதற்காக எது குறித்து, இத்தகு மாற்றம் என்பது எனக்குப் புலப்படாது போனதால் –
நான், குழப்பம் என் விழிகளில் குமிழியிட்டடிக்க, சற்று அசௌகரியமான சூழ்நிலைக்கு ஆட்பட்டேன்.
எப்பாதும் என்னை ‘ஆண்டவனே!’ என்று விளிக்கும் எம்.ஜி.ஆர். –
‘என்னங்க வாலி!’ என்று அழைத்து மேலும் தொடர்ந்தார்.
‘உங்களுக்கு – என்னை அவமானப்படுத்தணும்னு எண்ணம் இருந்தா, அதை நேர்லயே செய்யலாமே! ஏன் – இப்படி ஒரு பாட்டு எழுதி என்னை ஏளனம் செய்யுறீங்க?’
– எம்.ஜி.ஆர். இப்படிக் கேட்டதும், நான் வேர்த்து வெலவெலத்துப் போனேன்; ஒரு விநாடி என் மேல் அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது நாக்கு!
பிறகு –
அச்சத்திலிருந்து விடுவித்து என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு –
‘என்னண்ணே, இப்படிப் பேசுறீங்க? நான் எங்கே உங்களை அவமானப்படுத்தினேன்? அதுவும் இந்தப் பாட்டுலே உங்களை ஏளனம் பண்ணதாச் சொல்றீங்க! எனக்கு ஒண்ணுமே புரியல்லியே அண்ணே!’
என்று, தலையும் வாலும் புரியாத ஒரு குற்றச்சாட்டாக இருக்கிறதே எனும் வியப்பு என்னை ஒருபுறம் விரட்ட, வினவினேன்.
‘நீங்க – என்ன பல்லவி எழுதியிருக்கீங்க? அதை நீங்களே படிச்சுப் பாருங்க... நான் சொல்றது, உங்களுக்குப் புரியும்!’ என்று எம்.ஜி.ஆர். சினம் குறையாமல் என்னைச் சீண்டினார்.
நான் – பல்லவியைப் படித்தேன்.
‘ஆண்டவன் கட்டளை முன்னாலே – உன்
அரச கட்டளை என்னாகும்?’
– என்று படித்துப் பின், மேற்கொண்டு எம்.ஜி.ஆரிடம் கேட்டேன், ‘இதுல என்னண்ணே தப்பு?’ என்று,
‘இந்தப் படத்துக்கு நான் என்ன பெயர் வெச்சிருக்கேன்னு உங்களுக்குத் தெரியுமா?’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார்.
‘தெரியுமண்ணே! அரச கட்டளை-ன்னு வெச்சிருக்கீங்கன்னு தெரியுமே!’ என்று விடையிறுத்தேன் நான்.
இறுதியாக –
எம்.ஜி.ஆர். தன் கோபத்திற்கான காரணத்தை விளக்கலானார்.
“ ‘அரசகட்டளை’ நான் நடிக்கிற படம்; ‘ஆண்டவன் கட்டளை’ சிவாஜி நடிச்ச படம். நீங்க என்ன எழுதியிருக்கீங்க? ‘ஆண்டவன் கட்டளை முன்னாலே, உன் அரச கட்டளை என்னாகும்?’னு எழுதினா, சிவாஜி படத்துக்கு முன்னாடி உன் படம் என்னாகும்னுதானே கேக்கறதா அர்த்தம்!” என்று படபடவென்று பொரிந்து தள்ளினார் எம்.ஜி.ஆர்..
அப்போதுதான் அந்தப் பாடல், இப்படி ஒரு அர்த்தம் கொடுக்கிறது என்பதை நான் அறிந்தேன்.
‘அண்ணே! கடவுள் சத்தியமா – இப்படி ஒரு அர்த்தத்தை மனசுல வெச்சு நான் எழுதலே!
கதைக்குத் தகுந்த மாதிரி, நாடாளும் மன்னனைப் பார்த்து, ‘கடவுளை விட உன் ஆணை பெரிதா என்று நீங்க கேக்கற மாதிரி எழுதினேனே தவிர – இதுலே, வடிவேலறிய வஞ்சனை இல்லை’ என்று நான் –
ஊரில் உள்ள தெய்வங்களின் மேலெல்லாம் சத்தியம் பண்ணியும், எம்.ஜி.ஆர். ஏதோ ஒப்புக்கு சமாதானமானாரே தவிர, முழுக்க convince ஆகவில்லை!
மறுநாள் –
அந்தப் பாட்டை திரு. முத்துக்கூத்தனை எழுத வைத்து, recording செய்து விட்டார்!
அந்தப் பாடல்தான் :
‘ஆடிவா! ஆடிவா! ஆடப் பிறந்தவளே! ஆடி வா!’
– என்பது!

சரி; விட்ட இடத்திற்கு மீண்டும் வருகிறேன்; இந்நிகழ்வுக்கு ஏறத்தாழப் பத்தாண்டுகள் முன்னம் –
திரு. கோபி மூலமாக நான் எம்.ஜி.ஆரை சந்தித்த – அந்த முதல் சந்திப்பைச் சொல்லுகிறேன்!

(தொடரும்)

Richardsof
14th July 2012, 01:20 PM
[
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படமான "ஆயிரத்தில் ஒருவன்" மாபெரும் வெற்றி பெற்று, வசூலில் சாதனை படைத்தது. சிவாஜிகணேசனை வைத்து, பல படங்களை எடுத்தவர், பி.ஆர்.பந்துலு. அவரது "வீரபாண்டிய கட்டபொம்மன்" மகத்தான வெற்றி பெற்றதுடன் பல பரிசுகளையும் பெற்றது.

பின்னர் சிவாஜியை வைத்து அவர் தயாரித்த "கர்ணன்", "கப்பலோட்டிய தமிழன்" ஆகிய படங்கள் தரமானவையாக இருந்த போதிலும், போதிய வசூல் இல்லை. கடன் சுமையினால் பந்துலு தவித்தார்.

கடனில் இருந்து மீள, எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்கத் தீர்மானித்தார். எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசினார். அவர் படத்தில் நடிப்பதற்கு எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டு, கால்ஷீட் கொடுத்தார். "ஆயிரத்தில் ஒருவன்" என்ற பெயரில், படத்தை பிரமாண்டமாக கலரில் தயாரிக்க பந்துலு ஏற்பாடு செய்தார்.

கதாநாயகியாக ஜெயலலிதா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த முதல் படம் இதுதான். மற்றும் எம்.என்.நம்பியார், மனோகர், ராம்தாஸ், நாகேஷ், எல்.விஜயலட்சுமி, மாதவி ஆகியோரும் நடித்தனர்.

நாடோடி மன்னன் கதை எவ்வாறு திருப்பங்களோடும், விறுவிறுப்பான சம்பவங்களோடும் உருவாக்கப்பட்டதோ, அதுபோல் "ஆயிரத்தில் ஒருவன்" கதையும் நவரசங்களுடன் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டது.

ஒரு சர்வாதிகாரியை எதிர்த்து மணிமாறன் என்ற இளைஞன் நடத்தும் போராட்டமே கதையின் மையக்கரு. கடல், கப்பல், அடிமைகள் என்று, மேல்நாட்டுப் படங்களைப் போன்ற பிரமாண்டமான பின்னணியில் கதை உருவாகியது. ஆர்.கே.சண்முகம் வசனம் எழுதினார்.

கண்ணதாசனும், வாலியும் பாடல்களை எழுத, விஸ்வநாதன் _ ராமமூர்த்தி இசை அமைத்தனர். பந்துலு டைரக்ட் செய்தார். படத்தின் பெரும் பகுதி கோவாவிலும், அதன் அருகே கடல் பகுதியிலும் படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரும், நம்பியாரும் மோதும் கடல் சண்டை, ஏராளமான பொருட்செலவில் ஆங்கிலப்படங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டது.

9_7_1965_ல் "ஆயிரத்தில் ஒருவன்" வெளிவந்தது. முதல் காட்சியிலேயே அது "மெகா ஹிட்" படம் என்பது தெரிந்து விட்டது. தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மிகச்சிறப்பாக நடித்திருந்தனர். அவர்கள் ஏராளமான படங்களில் இணைந்து நடிக்க, "ஆயிரத்தில் ஒருவன்" வழிவகுத்தது.

கருத்தாழம் மிக்க இனிய பாடல்கள், படத்தின் வெற்றிக்குத் துணை புரிந்தன. கண்ணதாசன் எழுதிய அதோ அந்தப்பறவை போல வாழவேண்டும்", "நாணமோ", "ஓடும் மேகங்களே" ஆகிய பாடல்களும், வாலி இயற்றிய "பருவம் எனது பாடல்", "உன்னை நான் சந்தித்தேன்", "ஆடாமல் ஆடுகிறேன்", "ஏன் என்ற கேள்வி" ஆகிய பாடல்களும் திக்கெட்டும் எதிரொலித்தன.

பி.ஆர்.பந்துலு, வசூல் மழையில் நனைந்தார். கடன் பிரச்சினையில் இருந்து மீண்டார். 1965_ல் எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன் ஆகியவை தவிர, பணம் படைத்தவன், கலங்கரை விளக்கம், கன்னித்தாய், தாழம்பூ, ஆசை முகம் ஆகிய படங்களிலும் எம்.ஜி.ஆர். நடித்தார்.

"கலங்கரை விளக்கம்" ஜி.என்.வேலுமணி தயாரித்த படம். வசனத்தை சொர்ணம் எழுத, கே.சங்கர் டைரக்ட் செய்தார். "காற்று வாங்கப்போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்" என்ற புகழ் பெற்ற வாலியின் பாடல் இடம் பெற்ற படம் இது.

"கன்னித்தாய்" _ தேவர் பிலிம்ஸ் தயாரிப்பு. இதில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்தார். இதற்கு வசனம் எழுதியவர் ஆர்.கே.சண்முகம். கே.வி.மகாதேவன் இசை அமைக்க, எம.λஏ.திருமுகம் டைரக்ட் செய்தார். பத்மா பிலிம்ஸ் தயாரித்த படம் "தாழம்பூ". இதில் எம்.ஜி.ஆருடன் கே.ஆர்.விஜயா இணைந்து நடித்தார். எஸ்.ராமதாஸ் டைரக்ட் செய்தார்.

மலையாள எழுத்தாளர் கொட்டாரக்கரா எழுதிய கதை. "சஸ்பென்ஸ்" நிறைந்த படம். "ஆசை முகம்", மோகன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.எல்.மோகன்ராம் தயாரித்த படம். எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர்.

தொடக்கத்தில், துறைοர் மூர்த்தி வசனம் எழுதினார். எம்.ஜி.ஆருடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு அவர் விலகிக் கொண்டார். எனவே, ஆரூர்தாஸ் வசனம் எழுதினார். எஸ்.எம்.சுப்பையா இசை அமைத்தார். பி.புல்லையா டைரக்ட் செய்தார்.

இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். அத்துடன் எம்.ஜி.ஆர். போல முகத்தை மாற்றிக்கொண்டு வில்லன் குழப்பங்கள் செய்வான். எனவே, எம்.ஜி.ஆர். மூன்று வேடங்களில் தோன்றினார்.

goldstar
14th July 2012, 02:13 PM
[
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படமான "ஆயிரத்தில் ஒருவன்" மாபெரும் வெற்றி பெற்று, வசூலில் சாதனை படைத்தது. சிவாஜிகணேசனை வைத்து, பல படங்களை எடுத்தவர், பி.ஆர்.பந்துலு. அவரது "வீரபாண்டிய கட்டபொம்மன்" மகத்தான வெற்றி பெற்றதுடன் பல பரிசுகளையும் பெற்றது.

பின்னர் சிவாஜியை வைத்து அவர் தயாரித்த "கர்ணன்", "கப்பலோட்டிய தமிழன்" ஆகிய படங்கள் தரமானவையாக இருந்த போதிலும், போதிய வசூல் இல்லை. கடன் சுமையினால் பந்துலு தவித்தார்.



Correction Karnan was a one of the super hit and run 100 days in 4 theaters and made huge collections and but agreed that KT did not run well. Where as AO run 100 days only in 3 theaters. So if logic of 100 days in 4 theaters has not collected big money then don't know how can AO considered as BO hit by running 100days only in 3 theaters.

This is just for correction, nothing else.

Cheers,
Sathish

Richardsof
14th July 2012, 02:59 PM
Correction Karnan was a one of the super hit and run 100 days in 4 theaters and made huge collections and but agreed that KT did not run well. Where as AO run 100 days only in 3 theaters. So if logic of 100 days in 4 theaters has not collected big money then don't know how can AO considered as BO hit by running 100days only in 3 theaters.

This is just for correction, nothing else.

Cheers,
Sathish
Dear sir
i have copied from malaimalar cine varalaru .i understand about your correction. ayirathil oruvan , no doubt a real box office hit in 1965 and considered as bandhulu made more money than karnan.

mr_karthik
14th July 2012, 07:05 PM
//உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பற்றிய தகவல் தந்த கார்த்திக் சாருக்கு ந்ன்றி.//

நன்றி ராஜா சார்,

அது சரி, மிக அருமையாக நீங்கள் வழங்கிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் வெள்ளிவிழா, 100-வது நாள், 50-வது நாள் இவற்றின் செய்தித்தாள் விளம்பர வரிசையை ஏன் திடீரென்று நிறுத்தி விட்டீர்கள்?.

அவை, 'தங்களின் ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதுவதற்கு இடையூறாக இருப்பதாக' இந்த திரியில் யாரும் சொல்லவில்லையே.

அப்புறம் என்ன?. தொடருங்கள்.

(இங்கேயும் அவர்கள் நீட்டி முழக்கும்போது நிறுத்திக்கொள்வோம்).

Richardsof
15th July 2012, 10:18 AM
One of our Makkal thilagam MGR friend Mr.senthilnathan from nagercoil forwarded his old memeories to me.

just i am sharing with this blog.எனது பார்வையில் ..........1971 திரை பட கண்ணோட்டம் .

அந்த நாட்கள் இனிமையான கல்லூரி காலம்.. மவுண்ட் ரோடில் எங்களது நண்பர்கள் ஆட்சி செய்த பொற்காலம் .
தேவிபாரடைஸ் - சாந்தி - சித்ரா -பிளாசா - வெல்லிங்டன் -midland - odeon - ஸ்டார் -pilot -ஆனந்த் - safire -தேவி -gaiety - காசினோ - globe - என எங்களது ஜங்ஷன் கூடுமிடம் .

தமிழ் - ஹிந்தி - இங்கிலீஷ் என மும்மொழி படங்களை தொடர்ந்து கண்டு ஆனந்தமடைந்த பொற்காலம் அது.
எங்கள் முதல்வர்கள் மக்கள் திலகம் , நடிகர் திலகம் , ஜெமினி ஜெய் ,, ரவிச்சந்திரன்
முத்ராமன் மற்றும் ஏவிஎம் ராஜன் .எல்லா நடிகர்களின் அபிமானிகள் இருந்ததால் சுழற்சி முறையில் எல்லா படங்களையும் காணும் வாய்ப்பு கிட்டியது .
நடிகர் திலகம் ;

சாந்தி திரையரங்கில் தங்கைக்காக , சவாலே சமாளி , பாபு படங்களையும் வெல்லிங்டன் திரையரங்கில் இருதுருவம் , அருணோதயம் , மிட்லேன்ட் அரங்கில் தேனும் பாலும், ப்ராப்தம் , சித்ராவில் சுமதி என் சுந்தரி , மூன்று தெய்வங்கள் பிளாசாவில் குலமா குணமா , பத்து படங்களை கண்டு மகிழ்ந்தோம் .
குலமா குணமா , சவாலே சமாளி , பாபு வெற்றி படமாக ஓடியது . அனால் மற்ற 7 சிவாஜியின் படங்கள் வெற்றி பெறவில்லை .
1971 பொங்கல் அன்று வெளியான உத்தரவின்றி உள்ளே வா படத்தை சித்ராவில் நாங்கள் பகல் காட்சி பார்த்தோம் . இனிமையான பாடல்கள் மற்றும் நகைச்சவை படமாக
இருந்தது . இரவு காட்சி வெலிங்டனில் இரு துருவம் பார்த்தோம் .

எங்கள் குழுவில் இருந்த சிவாஜி தீவிர ரசிகர்கள் பாஸ்கரன் மற்றும் கதிரேசன் இருவரும் படம் துவக்கம் முதல் இறுதி வரை அடித்த கமெண்ட்ஸ் , விசில் . ஆரவாரம் இன்றும் மறக்க முடியாத காட்சியாகும் . ஆனாலும் இருதுருவம் வெற்றி பெறாத தால் அவர்கள் இருவரும் மிகவும் சோகத்துடன் இருந்தார்கள் .
எங்கள் குழுவில் நான் , சங்கரநாராயணன் , குமார் மூவரும் மக்கள் திலகம் MGR
தீவிர ரசிகர்கள் .
26 .1 . 1971 அன்று குமரிகோட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள குளோப் அரங்கில் மதிய காட்சி எல்லா நண்பர்களுடன் பார்த்தோம். எங்களுக்கு எல்லையில்லா ஆனந்தம் ... படம் துவங்கிய முதல் ... என்னம்மா ராணி பாடல் , எங்கே அவள் என்றே மனம் பாடல் , நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் ஆகிய பாடல்கள் மனதை கொள்ளை அடித்தது . ஜஸ்டின் மற்றும் மனோகர் சண்டை காட்சிகள் விறுவிறுப்பாக இருந்தது . மொத்தத்தில் MGR ரசிகர்களை மேலும் தீவிர ரசிகர்களாக மாற்றிய படம் .
ஒருபுறம் சிவாஜி ரசிகர்கள் வேதனையுடன் அடுத்த படமான தங்கைக்காக நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்கள் .

நினைவுகள் தொடரும் ........
.

Thomasstemy
15th July 2012, 10:58 AM
Correction Karnan was a one of the super hit and run 100 days in 4 theaters and made huge collections and but agreed that KT did not run well. Where as AO run 100 days only in 3 theaters. So if logic of 100 days in 4 theaters has not collected big money then don't know how can AO considered as BO hit by running 100days only in 3 theaters.

This is just for correction, nothing else.

Cheers,
Sathish

Dear Gold Star,

Esvee Sir has just reproduced an article from Maalaimalar. It doesn't mean that whatever is "written" as article in magazine or paper is true.
All knows that Karnan is an all time winner at Box Office. This includes the re-release of 2012 too.

Unreasonable claim of Expected Profits:
One may expect unreasonable expected profits and is quite natural being producers. If a question raised to the producer "Did Karnan made Profit?" the answer will be "YES, t did but not at the expected level". So, expected Level is something fictitious and very close to greediness. Let us not bother about that.
Bottom line is Karnan has run more than 100 days in 4 centers including Madurai Thangam(2538 Capacity), crossed 75 plus days in about 14 Centers and had to be lifted due to the release of AVM's Pachchai Vilakku.
No magazine will write about Nadigar Thilagam having done a movie free for BRB when KT failed at BO. We know these are all politics.

sometime later you may also get to read statement made by APN "Sivajiya vechu nalla padam panninaen aana Mgr'a vechu pannam sambaadhichaen" -

Everybody knows this is a made to order statement from APN and quite a foolish one too ! It is very open that, APN did just one movie called "Navarathinam" with MGR and that was his last too before he breathed last.

And, all knows about the fate of Navarathnam when it comes to Box Office that it was a big time disaster. Equally, everybody knew how much money APN could have made from Navarathri, Thiruvilayadal, Kandhan Karunai, Saraswathi Sabatham etc., Going by APN, it means, all these films didnt run and collect at all and whatever he had lost from these, he gained by doing "Navarathinam"..Idha Ennanu Sollamudiyum?

So, certain things, we need to ignore ..BRB's statement is one such - made to order statement. Let us ignore and enjoy reading the articles
:smokesmile:

Richardsof
15th July 2012, 12:17 PM
அந்த நாளும் வந்தது ....

சாந்தியில் தங்கைகாக படம் முதல் நாள் எங்கள் படை சூழ முதல் காட்சியில் சங்கமம் .
சிவாஜி நண்பர்கள் முகத்தில் ஒருவிதமான பட படப்பு... இருதுருவம் ஏமாற்றிய வழியில் தங்கைகாக படமும் சேர்ந்து விட்டதே என்று சொல்லாமல் சொல்லியது படத்தின் ரிசல்ட் . அடுத்து அருணோதயம் ........ தொடர்ந்து மூன்றாவது தோல்வி ....

குமரி கோட்டம் படம் வெற்றியுடன் ஓடிகொண்டிருந்த போது அடுத்த mgr padam எது என்று எல்லோரும் ஏங்கி கொண்டிருந்த நிலையில் மே மாதம் ரிக்ஷாக்காரன் சென்னை தேவிபாரடைஸ் - ஸ்ரீகிருஷ்ணா - சரவணா வெளியாகிறது என்ற இனிப்பான தகவல் வந்த போது சிவாஜி நண்பர்கள் குலமா குணமா வெற்றி பெற்ற இனிப்பில் இருந்தனர் .
பிராப்தம் - சுமதி என் சுந்தரி இரண்டு படமும் சரியாக ஓடாத நிலையில் நடிகர் திலகத்தின் 150 வது படமான சவாலே சமாளி வெற்றி நமது சிவாஜி நண்பர்களை ஓரளவு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது .
இதற்கிடையில் ரிக்ஷாக்காரன் புயல் சாதனை எல்லா முந்தைய பட சாதனைகளை முறியடித்து மாபெரும் வெற்றி கண்டார் மக்கள் திலகம் .
மீண்டும் தேனும் பாலும் -மூன்று தெய்வங்கள் தோல்வி ...........

தீபாவளி அன்று வெளியான பாபு சென்னையில் 100 நாட்கள் ஓடியது சிவாஜி ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்தது .
ஒருபக்கம் ஆதி பராசக்தி , மறுபக்கம் jaishankarin வீட்டுக்கு ஒரு பிள்ளை வெற்றிபெற
மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் தோல்வி ..... எங்களுக்குள் ஒரு பெரிய கேள்வி .
தொடர்ந்து ஒரு தாய் மக்கள் தோல்வி .....
2 /4 ..இது.....MGR ...............7 /10 இது சிவாஜி தோல்வி சதம் .

நினைவுகள் தொடரும்

mr_karthik
15th July 2012, 12:38 PM
எஸ்.வீ.சார்,

1971 நினைவுகள் நன்றாக உள்ளன. எந்தெந்த தியேட்டர்களில் எந்தெந்த படங்கள் என்ற விவரம் பழைய நினைவுகளைக்கிளறியது.

இருந்தாலும் சில திருத்தங்கள்....

சுமதி என் சுந்தரி படத்தை தோல்வி பட லிஸ்ட்டில் சேர்த்திருப்பது அநியாயம். 100-வது நாள் போஸ்ட்டர் ஒட்டினால்தான் வெற்றி என்று பொருளல்ல. சென்னை உள்பட பட ஊர்களில் 80 நாட்கள் வரை ஓடிய வெற்றிப்படம் அது.

பாபு படம் சென்னையில் மட்டுமல்ல திருச்சியிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. (ஆதாரம்: பம்மலார் தந்திருக்கும் 100-வது நாள் விளம்பரம்).

நடிகர்திலகமும் 10 படங்களை விடாமல் நாலைந்து படங்கள் மட்டும் விட்டிருந்தால் வெற்றி சதவீதம் அதிகரித்திருக்கும் என்பது உண்மை. நாலு படங்களை வெளியிட்டு அதில் இரண்டு வெற்றி என்பதை விட பத்து வெளியிட்டு அதில் நான்கு வெற்றி என்பது ஒன்றும் குறைந்த சாதனை அல்ல.

அடுத்து 1972 நினைவுகளை, ஒளிவுமறைவின்றி தருவீர்கள் என்று நம்புகிறோம்.

Richardsof
15th July 2012, 12:57 PM
எஸ்.வீ.சார்,

1971 நினைவுகள் நன்றாக உள்ளன. எந்தெந்த தியேட்டர்களில் எந்தெந்த படங்கள் என்ற விவரம் பழைய நினைவுகளைக்கிளறியது.

இருந்தாலும் சில திருத்தங்கள்....

சுமதி என் சுந்தரி படத்தை தோல்வி பட லிஸ்ட்டில் சேர்த்திருப்பது அநியாயம். 100-வது நாள் போஸ்ட்டர் ஒட்டினால்தான் வெற்றி என்று பொருளல்ல. சென்னை உள்பட பட ஊர்களில் 80 நாட்கள் வரை ஓடிய வெற்றிப்படம் அது.

பாபு படம் சென்னையில் மட்டுமல்ல திருச்சியிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. (ஆதாரம்: பம்மலார் தந்திருக்கும் 100-வது நாள் விளம்பரம்).

நடிகர்திலகமும் 10 படங்களை விடாமல் நாலைந்து படங்கள் மட்டும் விட்டிருந்தால் வெற்றி சதவீதம் அதிகரித்திருக்கும் என்பது உண்மை. நாலு படங்களை வெளியிட்டு அதில் இரண்டு வெற்றி என்பதை விட பத்து வெளியிட்டு அதில் நான்கு வெற்றி என்பது ஒன்றும் குறைந்த சாதனை அல்ல.

அடுத்து 1972 நினைவுகளை, ஒளிவுமறைவின்றி தருவீர்கள் என்று நம்புகிறோம்.

Dear Karthik sir

i have posted ninavugal - 1971 from one of my old college friend from nagercoil. what he wrote about his memory days about 1971 released movies were concerned .

please don't take serious.just collect old memories with pleasent.

may be sumathi en sundari ran 80 days .agreed.

you can see 1972 records ACTUAL RECORDS.

Thomasstemy
15th July 2012, 01:02 PM
அந்த நாளும் வந்தது ....

சாந்தியில் தங்கைகாக படம் முதல் நாள் எங்கள் படை சூழ முதல் காட்சியில் சங்கமம் .
சிவாஜி நண்பர்கள் முகத்தில் ஒருவிதமான பட படப்பு... இருதுருவம் ஏமாற்றிய வழியில் தங்கைகாக படமும் சேர்ந்து விட்டதே என்று சொல்லாமல் சொல்லியது படத்தின் ரிசல்ட் . அடுத்து அருணோதயம் ........ தொடர்ந்து மூன்றாவது தோல்வி ....

குமரி கோட்டம் படம் வெற்றியுடன் ஓடிகொண்டிருந்த போது அடுத்த mgr padam எது என்று எல்லோரும் ஏங்கி கொண்டிருந்த நிலையில் மே மாதம் ரிக்ஷாக்காரன் சென்னை தேவிபாரடைஸ் - ஸ்ரீகிருஷ்ணா - சரவணா வெளியாகிறது என்ற இனிப்பான தகவல் வந்த போது சிவாஜி நண்பர்கள் குலமா குணமா வெற்றி பெற்ற இனிப்பில் இருந்தனர் .
பிராப்தம் - சுமதி என் சுந்தரி இரண்டு படமும் சரியாக ஓடாத நிலையில் நடிகர் திலகத்தின் 150 வது படமான சவாலே சமாளி வெற்றி நமது சிவாஜி நண்பர்களை ஓரளவு மகிழ்ச்சியில் ஆழ்த்தியது .
இதற்கிடையில் ரிக்ஷாக்காரன் புயல் சாதனை எல்லா முந்தைய பட சாதனைகளை முறியடித்து மாபெரும் வெற்றி கண்டார் மக்கள் திலகம் .
மீண்டும் தேனும் பாலும் -மூன்று தெய்வங்கள் தோல்வி ...........

தீபாவளி அன்று வெளியான பாபு சென்னையில் 100 நாட்கள் ஓடியது சிவாஜி ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்தது .
ஒருபக்கம் ஆதி பராசக்தி , மறுபக்கம் jaishankarin வீட்டுக்கு ஒரு பிள்ளை வெற்றிபெற
மக்கள் திலகத்தின் நீரும் நெருப்பும் தோல்வி ..... எங்களுக்குள் ஒரு பெரிய கேள்வி .
தொடர்ந்து ஒரு தாய் மக்கள் தோல்வி .....
2 /4 ..இது.....MGR ...............7 /10 இது சிவாஜி தோல்வி சதம் .

நினைவுகள் தொடரும்

KS Gopalakrishnan's Adhiparasakthi (Color), Makkal Thilagam's much publicized Neerum Neruppum with huge starcast, grand color, excellent sword fights with grand production Value and Jaishankar's Veetukku oru Pillai , Nadigar Thilagam's Babu release was announced on the same date. Most of Sivaji Fans did not expect this yet another low profile film "Babu" as it was the Black and White Film with though an excellent story content, a sobber subject to get released amidst the color extravaganza especially of Makkal Thilagam's Neerum Neruppum.

The first day of the release, All eyes including the trade watched which one would emerge successful. The first show was completed and all eyes waiting for the evening show, watching closely the audience who are returning from the first show. The united expressions was " Arumayaana Nadippunga" Arumayaana Padam !" Some hopes returned back to Nadigar Thilagam Fans and as the number of shows increased.....the result everybody were awaiting for, were announced, BABU emerged out as the Winner along with AdhiParasakthi and Jaishankar's Veetukku oru Pillai. On the contrary, much anticipated and publicized Neerum Neruppum could not win the hearts of movie goers and the Box Office. Neerum Neruppum was a remake of Sri.K.R.Ramasamy's Aboorva Sagodharargal....Every 43rd day Nadigar Thilagam Films were released turning out to be a competition for his own films as the year 1972 was fast approaching ......None in the Industry knew at that point in time that it is going to be the year of Sivaji Ganesan by all means !!

mr_karthik
15th July 2012, 01:35 PM
வாலியின் 'இரண்டு கட்டளை' பதிவைப்படித்தபோது, சில உண்மைகள் தெளிவாகின...

இன்று காவியக்கவிஞர் என்று போற்றப்படும் வாலி, துவக்கத்தில் எம்.ஜி.ஆர்.படங்களில் ஒரு துதிபாடியாகத்தான் இருந்திருக்கிறார். அதற்கு ஒரு நல்ல உதாரணம் அவர் எழுதிய 'என்னைப்பாட வைத்தவன் ஒருவன்' பாடல். ஒவ்வொரு வரியிலும் வார்த்தையிலும் துதிபாடல் என்னும் ஜால்ரா சத்தம் மேலோங்கியிருக்கிறது.

இரண்டாவது பாடலின் பல்லவியைப் பார்த்து அவ்வளவு சீரிய எம்.ஜி.ஆர். "முதல் பாடலில் ஏன் என்னை அவ்வளவு புகழ்ந்து எழுதியுள்ளீர்கள்?" என்று ஒரு வார்த்தை கேட்காமல், பாடலை வாங்கி பாக்கெட்டில் வைத்துக்கொண்டுள்ளார். ஆக அவரும், தன்னைப்புகழ்ந்து எழுதுவதை மிகவும் விரும்பியிருக்கிறார்.

அதனால்தான் தன் சொந்தப்படத்திலேயே 'காலத்தை வென்றவன் நீ.. காவியமானவன் நீ' என்று எழுதவைத்து, அதைப்படமாக்கி மகிழ்ந்தவர், இன்னொரு படத்தில் 'நான் அளவோடு ரசிப்பவன்.. எதையும் அளவின்றிக்கொடுப்பவன்' என்று தானே வாயசைத்து, தற்பெருமையாகப்பாடி மகிழ்ந்துள்ளார்.

அவை மட்டுமா, இன்னும் எத்தனை படங்களிலெல்லாம் 'உள்ளத்தால் வள்ளல்தான் ஏழைகளின் தலைவன்' (ஆயிரத்தில் ஒருவன்) என்றும், 'உள்ளமதில் உள்ளவரை அள்ளித்தரும் நல்லவரை விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்?' (ஒளிவிளக்கு) என்றும், 'பாடுபட்டு சேர்த்த பொருளை கொடுக்கும்போதும் இன்பம்' (இதயக்கனி) என்றும் எழுத வைத்து, பாட வைத்து மகிழ்ந்திருக்கிறார் (இதெல்லாம் ஜஸ்ட் சாம்பிள்கள் மட்டுமே. உட்புகுந்தால் நிறையக்கிடைக்கும்). இதுபோக ஏகப்பட்ட படங்களில் 'கொடுத்துக்கொடுத்து சிவந்த கைகள்' என்ற வசனங்கள் வேறு.

எம்.ஜி.ஆர். வள்ளல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவற்றை தன் படங்களில் பாட வைத்து, பேசவைத்து விளம்பரப் படுத்துவது என்பதை அவர் ஒரு குறையாக உணரவில்லையா?.

Thomasstemy
15th July 2012, 01:42 PM
வாலியின் 'இரண்டு கட்டளை' பதிவைப்படித்தபோது, சில உண்மைகள் தெளிவாகின...

இன்று காவியக்கவிஞர் என்று போற்றப்படும் வாலி, துவக்கத்தில் எம்.ஜி.ஆர்.படங்களில் ஒரு துதிபாடியாகத்தான் இருந்திருக்கிறார். அதற்கு ஒரு நல்ல உதாரணம் அவர் எழுதிய 'என்னைப்பாட வைத்தவன் ஒருவன்' பாடல். ஒவ்வொரு வரியிலும் வார்த்தையிலும் துதிபாடல் என்னும் ஜால்ரா சத்தம் மேலோங்கியிருக்கிறது.

இரண்டாவது பாடலின் பல்லவியைப் பார்த்து அவ்வளவு சீரிய எம்.ஜி.ஆர். "முதல் பாடலில் ஏன் என்னை அவ்வளவு புகழ்ந்து எழுதியுள்ளீர்கள்?" என்று ஒரு வார்த்தை கேட்காமல், பாடலை வாங்கி பாக்கெட்டில் வைத்துக்கொண்டுள்ளார். ஆக அவரும், தன்னைப்புகழ்ந்து எழுதுவதை மிகவும் விரும்பியிருக்கிறார்.

அதனால்தான் தன் சொந்தப்படத்திலேயே 'காலத்தை வென்றவன் நீ.. காவியமானவன் நீ' என்று எழுதவைத்து, அதைப்படமாக்கி மகிழ்ந்தவர், இன்னொரு படத்தில் 'நான் அளவோடு ரசிப்பவன்.. எதையும் அளவின்றிக்கொடுப்பவன்' என்று தானே வாயசைத்து, தற்பெருமையாகப்பாடி மகிழ்ந்துள்ளார்.

அவை மட்டுமா, இன்னும் எத்தனை படங்களிலெல்லாம் 'உள்ளத்தால் வள்ளல்தான் ஏழைகளின் தலைவன்' (ஆயிரத்தில் ஒருவன்) என்றும், 'உள்ளமதில் உள்ளவரை அள்ளித்தரும் நல்லவரை விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்?' (ஒளிவிளக்கு) என்றும், 'பாடுபட்டு சேர்த்த பொருளை கொடுக்கும்போதும் இன்பம்' (இதயக்கனி) என்றும் எழுத வைத்து, பாட வைத்து மகிழ்ந்திருக்கிறார் (இதெல்லாம் ஜஸ்ட் சாம்பிள்கள் மட்டுமே. உட்புகுந்தால் நிறையக்கிடைக்கும்). இதுபோக ஏகப்பட்ட படங்களில் 'கொடுத்துக்கொடுத்து சிவந்த கைகள்' என்ற வசனங்கள் வேறு.

எம்.ஜி.ஆர். வள்ளல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவற்றை தன் படங்களில் பாட வைத்து, பேசவைத்து விளம்பரப் படுத்துவது என்பதை அவர் ஒரு குறையாக உணரவில்லையா?.

Dear Sir,

Let us not get into all those things sir please..! let us read the article that we didn't have access to.
Please dont mistake me sir !

:smokesmile:

mr_karthik
15th July 2012, 01:52 PM
Barrister sir,.... accepted.

But when we read something, we have to look both sides.. isnt it?.

Thomasstemy
15th July 2012, 02:37 PM
:smokesmile:

Thomasstemy
15th July 2012, 02:46 PM
Barrister sir,.... accepted.

But when we read something, we have to look both sides.. isnt it?.

Dear Karthik Sir,

You are absolutely right Karthik sir,

But we are in Tamilnadu we should remember where there is no room for Truth and Gnayam. So, cant take everything seriously and respond. I was doing that but soon realized that it is absolutely foolish.

Vaali is a big time jaalra. All knew about it. He had to survive amidst Kannadasan's and others competition. Therefore, the Jaalra. When you compare Kannadasan, Vaali is nothing and just a peanut. He is also a Chameleon in nature. If DMK comes to power, he will praise MK, If ADMK comes to power, he will praise MT and his Amma. Even if I come to power, he will do the same thing. Not his mistake, he had grown like that.

Recently, when he was approached by Kalaignar TV for a programmed called Marakka Mudiyuma on Actor Jaishankar, he demanded 3 Lakhs from the programme Director. I am not saying it is wrong..what am trying to point out here is his nature. If you pay money, Vaali will say "You are Srirama !! - Adhu Dhaan Vaali.

mr_karthik
15th July 2012, 03:14 PM
நான் சிறுவனாக இருந்த காலத்தில் லாயிட்ஸ் ரோட்டில் இருந்த எம்.ஜி.ஆர். அவர்களின் வீட்டுக்கு என் தந்தை ஒய்.ஜி.பி. அவர்களுடன் பலமுறை போயிருக்கிறேன். ஒருமுறை அப்படி போயிருந்த சமயம் எம்.ஜி.ஆரும் என் தந்தையும் பேசிக்கொண்டிருந்தபோது, நான் மட்டும் மெல்ல நகர்ந்து சென்று அந்த வீட்டின் ஒவ்வொரு இடமாகப் பார்த்துக்கொண்டு வந்தேன்.

ஒரு அறையில் அவர் அப்போது படங்களில் பயன்படுத்தியிருந்த வாட்களும் கேடயங்களும் சாத்தி வைக்கப்பட்டிருந்தன. யாரும் இல்லை என்ற தைரியத்தில் அவற்றில் ஒரு வாளை எடுத்து, அவர் படங்களில் ஸ்டைலாகச் சுழற்றுவது போல சுழற்றிக்கொண்டிருந்தேன். அப்போது என் பின்னால் வாசல் பக்கம் ஏதோ நிழல் தெரிய திரும்பிப்பார்த்தேன். எம்.ஜி.ஆர். அவர்கள் புன்சிரிப்போடு என்னைப்பார்த்துக்கொண்டு நின்றார். திடுக்கிட்டுப்போன நான் சட்டென்று சுழற்றுவதை நிறுத்தி விட்டேன்.

உள்ளே வந்தவர், என்னைப்பார்த்து சிரித்துக்கொண்டே "என்ன, காற்றோடு சண்டை போடுறியா?. இப்போ என்னோடு சண்டை போடு பார்க்கலாம்" என்று அவரும் ஒரு வாளை எடுத்துக்கொண்டு என்னோடு விளையாட்டாக வாள்சண்டை போட்டார்.

இந்த மாதிரி வாய்ப்பெல்லாம் யாருக்கு கிடைக்கும்?. எந்த வயதினரையும் நாம் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பது எம்.ஜி.ஆரிடம் நான் கற்றுக்கொண்ட பாடம்.

- நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன்.

Richardsof
16th July 2012, 08:07 AM
1971 .. தீபாவளி வெளியான .... நீரும் நெருப்பும் ...... டிசம்பரில் வெளியான ஒரு தாய் மக்கள் தோல்வி எங்களை மிகவும் பாதித்தது .சிவாஜி நண்பர்கள் ...உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தது கவனித்தோம் .

அடுத்த கட்டம் .... 1972 .....
பொங்கல் அன்று மக்கள் திலகம் , நடிகர் திலகம் நடித்த படங்கள் எதுவும் வரவில்லை .ஆனால் 26 .1 .1972 அன்று சிவாஜியின் ராஜா தேவிபாரடைஸ் திரையரங்கில் வெளியாகி வெற்றி பெற்றது .
மக்கள் திலகம் நடித்த சங்கே முழங்கு 4 .2 .1972 வெலிங்டன் அரங்கில் வெளியானது .
இனிமையான பாடல்கள், மக்கள் திலகத்தின் மாறுபட்ட நடிப்பு என்று எல்லா அம்சமும் இருந்தும் எதிர் பார்த்த வெற்றி பெறவில்லை .
மீண்டும் சிவாஜி நண்பர்கள் முகத்தில் புன்னகை .
மார்ச் மாதம் சித்ராவில் நல்ல நேரம் pilazavil ஞா ன ஒளி வெளியானது .
மூன்று தோல்வி படங்களுக்கு பின்னர் நல்ல நேரம் மாபெரும் வெற்றி எங்களை மிக மிக மகிழ்ச்சியில் ஆழ்த்தியது . சித்ரா மற்றும் மகாராணி இரண்டு அரங்கில் நூறு காட்சிகள் தொடர்ந்து ஹவுஸ் புல் .
அந்த ஆண்டு சென்னையில் சித்ரா - மகாராணி -மேகலா -ராம் என நான்கு அரங்கில் நூறு நாட்கள் ஓடிய ஒரே படம் .
சிவாஜியின் ராஜா மற்றும் ஞா ன ஒளி 100 நாட்கள் ஓடியது .
ராமன் தேடிய சீதை ........
அருமையான பாடல்கள் , காஷ்மீர் படபிடிப்பு ,மக்கள் திலகம் மிகவும் இளமை துள்ளலுடன் ,நேர்த்தியான சண்டை காட்சிகளுடன் வந்த படம் .இனிமையான இன்னிசை .. midland - கிருஷ்ணா - சரவணா அரங்கில் 50 நாட்கள் ஓடி மக்கள் திலகம் ரசிகர்களை ஏமாற்றிய படம் .
பட்டிகாடா பட்டணமா - தவபுதல்வன்-வெற்றி சிவாஜி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது .

நான் ஏன் பிறந்தேன் ........
தொடரும் .................................

Richardsof
16th July 2012, 08:44 AM
....நான் ஏன் பிறந்தேன் .. முற்றிலும் மாறுபட்ட நல்ல குடும்ப கதையில் மக்கள் திலகம் நடித்து ரசிகர்கள் உள்ளங்களை கொள்ளை கொண்டார் . இனிமையான பாடல்கள் . நேர்த்தியான நடிப்பு ..குளோப் திரை அரங்கில் முதல் நாள் எங்கள் நண்பர்கள் அனைவரும் கண்டு மகிழ்ந்தோம் . ஆனால் படத்தின் ரிசல்ட் ......
ராமன் தேடிய சீதை ..... தொடர்ந்து நான் ஏன் பிறந்தேன் ......நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்து மக்கள் திலகம் நடித்து வெளி வந்த கடைசி கருப்பு -வெள்ளை படம் அன்னமிட்டகை - செப்டம்பர் .. அண்ணா பிறந்த நாளில் சென்னை பிளாசா வில் பார்த்தோம் .
மூன்று தொடர் தோல்விகள் ...
ஒரு சமாதனம் . அது சிவாஜி நடித்து வெளிவந்த பிரமாண்ட படைப்பான தர்மம் எங்கே
ஓடியன் அரங்கில் பார்த்தோம் . படத்தின் ரிசல்ட் சிவாஜி நண்பர்களை சோகத்தில் தள்ளியது .
ஒரு பக்கம் சிவாஜி பல புதிய படங்களில் ஒப்பந்தமாகி , நடித்து வந்த செய்திகளை பேசும் படம் , பொம்மை , மதிஒளி ,சித்ராலயா போன்ற மாத இதழ்களிலும் ,சுதேசமித்திரன் ,நவசக்தி, நவமணி , முரசொலி போன்ற தினசரி இதழ்களில் தொடர்ந்து செய்தகள் வந்த வண்ணம் இருந்தது .
மறுபக்கம் ...... மக்கள் திலகம் .... கலை பயணத்திலும் அரசியல் பயணத்திலும் தொடர்ந்து வெற்றி பெற்ற நிலையில் பாரத் பட்டம் ஒரு மாபெரும் திருப்பம் ......
நடிகர் திலகத்தின் வசந்த மாளிகை மகத்தான வெற்றி .......

இரண்டு திலகங்களின் வெற்றி மேல் வெற்றி என்ற சூழ்நிலையில் .....

மக்கள் திலகம் அவர்கள் சந்தித்த நெருக்கடிகள் ....பிரச்சனைகள் .....துரோகங்கள் .. செய்தி தாள்களில் இருட்டடிப்பு .... எம்ஜியார் மன்றங்கள் கலைக்க மிரட்டல்கள் ...mgr பட தயாரிப்பாளர்கள் மீது எச்சரிகைகள் .. [ முகவின் சுயநல -அதிகர போதை கண்ணை மறைத்த காலம் அது ] பின்னர் கட்சியிலிருந்து நீக்கம் ...........
இதய வீணை ................
தொடரும் ......

Richardsof
16th July 2012, 09:22 AM
உண்மையில் இது மிக ஆச்சரியமான விஷயம். அவர் மெத்தப் படித்தவர் இல்லை. தமிழில்தான் சுலபமாக பேச முடியும். (ஆங்கிலமும் ஹிந்தியும் பேச வராததால்தான் பிரதமர் பதவியை ஒதுக்கினார் என்று சிலர் சொல்கிறார்கள்.) பணக்காரர் இல்லை. கோவிலுக்குள் நுழைய முடியாத கீழ் ஜாதிக்காரர். (வைத்தியநாத ஐயர் மீனாட்சி கோவிலுக்குள் அழைத்து போனவர்களில் இவரும் இருந்தாரோ? இல்லை கக்கன் மட்டும்தானா? இவர் இல்லை என்று தெரிகிறது. அந்த கூட்டத்தில் கக்கன் உள்ளிட்ட ஐந்து தலித்களும், ஷண்முக நாடாரும் இருந்தார்களாம். அப்போது தலித்களுக்கும், நாடார்களுக்கும் மீனாக்ஷி கோவிலில் நுழைய அனுமதி இல்லை. இது பற்றிய மேல் விவரங்களை இங்கே காணலாம்.) சிறந்த பேச்சாளரோ, எழுத்தாளரோ இல்லை. எம்ஜிஆர், அண்ணா, ஏன், கலைஞர் போலக் கூட மக்களை கவரக் கூடிய எதுவும் அவரிடம் இல்லை. அவரை விட சிஎஸ், ஆர்வி போன்றவர்கள் சிறந்த நிர்வாகிகள். அவரே பிற்காலத்தில் காங்கிரஸ் தலைமையாக மாறினாலும், காங்கிரஸ் தலைமையிடம் – காந்தி, நேரு, படேல், ஆசாத் போன்றவர்களிடம் – அவருக்கு ராஜாஜி மாதிரி செல்வாக்கு எல்லாம் இருந்ததில்லை. அவர் பெரியார் மாதிரி புரட்சி எதுவும் செய்ய முயசிக்கவில்லை.

அவருடைய ரகசியம் இதுதான் – மக்களுக்கு/கட்சிக்கு எது நல்லது, அதை எப்படி செய்வது என்று ஓயாமல் சிந்திக்கும் குணம். அந்த சிந்தனைகளை செயல்படுத்தும்போது வரக்கூடிய இடையூறுகளை தாண்டியே தீர வேண்டும் என்ற வெறி.

அவர் மந்திரிகளுக்கு சொன்ன அறிவுரை இதுதானாம் – “பிரச்சினைகளிடமிருந்து ஓடக் கூடாது. பிரச்சினையை சமாளிக்க ஒரு சின்ன முயற்சியாவது எடுங்கள். மக்கள் திருப்தி அடைந்துவிடுவார்கள்”. அற்புதமான அறிவுரை. அவரும் அதை கடைப்பிடித்திருக்கிறார்.

இதனால் அவர் குறைகள் இல்லாத மாமனிதர் என்று அர்த்தமில்லை. ராஜாஜியை அமுக்க அவர் 42-54 கால கட்டத்தில் செய்த முயற்சிகள், அவரோடு போட்ட சண்டைகள் அவருக்கு பெருமை சேர்ப்பதில்லை. ராஜாஜிக்கும் பெருமை சேர்ப்பதில்லை என்பதும் உண்மைதான். அவர் கர்வி இல்லை, ஆனால் தொண்டர்களை அணுக விட்டதில்லை. ஏதாவது உதவி கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயம்தான். சோவே கூட அவர் மற்ற தமிழக் தலைவர்களை வளரவிடவில்லை, தன் கைக்குள்ளேயே வைத்துக் கொள்ள ஆசைப்பட்டார் என்று சொல்லி இருக்கிறார். ஜெயலலிதா ராஜினாமா செய்து பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த காலத்தில் ஒரு முதலமைச்சரின் உள்ளக் குமுறல் என்று குமுதத்திலோ விகடனிலோ ஒரு கட்டுரை வந்தது. எப்படி தலைவர் தன்னை முழுமையாக நம்பவில்லை, சுதந்திரமாக இயங்க விடவில்லை, தலைவர் ஒரு சூப்பர் முதலமைச்சராக நடந்து கொள்கிறார் என்று முதல்வர் வருத்தப்படுகிறார். அது பக்தவத்சலம் காமராஜை பற்றி வருத்தப்பட்டது, பன்னீர்செல்வம் ஜெவை பற்றி அல்ல. தேவிகுளம், பீர்மேடு ஆகியவற்றில் அவர் செய்தது தவறு. அவர் குறைகள் உள்ள மாமனிதர்.

சுதந்திரப் போராட்டத்தில் பல முறை ஜெயிலுக்கு போயிருக்கிறார். ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தில் உப்பு ஸத்யாக்ரஹத்தில் பங்கேற்றிருக்கிறார். சத்யமூர்த்தியின் அணுக்க சீடர். கொஞ்ச நாள் அவர் தமிழ் நாடு காங்கிரஸில் தலைவராகவும் காமராஜ் செயலாராகவும் இருந்திருக்கிறார்கள். பிறகு இவர் தலைவர், அவர் செயலாளர். :-) சத்தியமூர்த்தியின் மறைவுக்கு பின்னால், ராஜாஜி காங்கிரசை விட்டு வெளியேறிய பின்னால் இவர் தமிழ் நாட்டு காங்கிரஸின் ஜீவ நாடி ஆகிவிட்டார். அவரால் ராஜாஜி மீண்டும் காங்கிரசுக்குள் வருவதற்கு கூட பல முட்டுக்கட்டைகள் போட முடிந்தது.

அவரது பலங்களில் அவருடைய எளிமையான பின்புலமும் ஒன்று. அவருடைய மதிய உணவுத் திட்டத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவருக்கும் ராஜாஜிக்கும் ஒரே குறிக்கோள்தான். அரசியல் நிர்ணய சட்டத்தில் சொன்னபடி எல்லாருக்கும் கல்வி என்பதை விரைவாக நிறைவேற்றுவது. இரண்டு பேருக்கு ஒரே பிரச்சினைதான். கிராமங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வருவது குறைவாக இருக்கிறது. ராஜாஜி கண்ட தீர்வு பகுதி நேரக் கல்வி. (திராவிட இயக்கத்தினர் குலக் கல்வி என்று அழைத்த இந்த திட்டத்தை பற்றி மேலும் விவரங்கள் இங்கே) பகுதி நேரக் கல்வி என்பது சிறந்த நிர்வாக முடிவு. அதனால் கல்வி அறிவு செலவு அதிகம் ஆகாமல் அதிகரித்திருக்கும். ஆனால் அது ஒரு bean counter’s logical, cold hearted தீர்வு. காமராஜ் கண்ட தீர்வில் செலவு அதிகம்தான். ஆனால் அந்த பணம் well spent என்று அவரது படிக்காத ஏழை மனதுக்கு மட்டும்தான் புரியும். ஜீனியஸ் என்றே சொல்லக் கூடிய ராஜாஜிக்கு அந்த தீர்வு எப்போதும் தோன்ற வாய்ப்பில்லை.

விவசாயம், மின்சாரம், தொழில் பேட்டிகள் அமைப்பு ஆகியவற்றில் தனி கவனம் செலுத்தினார். அரசு விதிகளை கண்மூடித்தனமாக பின்பற்றுவதை விட மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆர்வியும் இதை குறிப்பிட்டு சொல்கிறார்.

எதிரிகளையும் அணைத்து செல்லும் பக்குவம் அவரிடம் இருந்தது. முதல்வர் போட்டிக்கு அவரை எதிர்த்து போட்டி இட்ட சிஎஸ்தான் அவரது அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில் இருந்தார். சிஎஸ், ஆர்வி, கக்கன், பக்தவத்சலம் போன்ற திறமைசாலிகளை அவர் அரவணைத்து சென்றார். அதே நேரத்தில் அவர் கடுமை காட்ட வேண்டிய நேரத்தில் கடுமை காட்டவும் தயங்கியதில்லை. மொரார்ஜியை அவர் அடக்கிய விதம் சூப்பர். கலைஞரால் கூட இப்படி செய்திருக்க முடியாது.

காமராஜ் திட்டம் எல்லாம் போட அவரால்தான் முடியும். பதவி ஆசை அவருக்கு அவ்வளவாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அவருக்கு ராஜாஜி ஒரு வீக்னெஸ். அங்கே அவரது பெருந்தன்மை, நல்ல குணங்கள் வெளிப்படவில்லை. சத்தியமூர்த்திக்கு பதிலாக ராஜாஜியை காங்கிரஸ் மேலிடம் – குறிப்பாக காந்தி – முதல்வராக ஆக்கியதால் ஏற்பட்ட வெறுப்பு, ராஜாஜி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொள்ளாமல் காங்கிரசை விட்டு விலகியதும் தீவிரம் அடைந்தது. 46-இல் ராஜாஜி மீண்டும் காங்கிரசுக்குள் நுழையக் கூடாது என்று காமராஜ் பெரிதும் முயன்றார். கட்சி அவரது கண்ட்ரோலில் இருந்தாலும், ராஜாஜிக்கு கணிசமான ஆதரவு இருந்தது – மேலிடத்து சப்போர்ட்டும் இருந்தது. அதனால் ராஜாஜி காமராஜை மீறி உள்ளே நுழைந்தார். ராஜாஜி மத்திய அரசாங்கத்துக்கு போய்விட்டதால் சண்டை இன்னும் பெரிதாக வெடிக்கவில்லை. ராஜாஜி முதல்வராக இருந்தபோது அவர் சில உள்குத்து வேலைகள் செய்திருக்கிறார். காமராஜ் படத்தில் அவர் ஒரு விழாவில் ராஜாஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஒரு பொதுக் கூட்டத்தில் பேசுவதாக காட்டுகிறார்கள்.

தேவிகுளம், பீர்மேடு ஆகியவற்றில் அவர் கோட்டை விட்டுவிட்டார். கேரளாவில் இருந்தாலென்ன, தமிழ் நாட்டில் இருந்தாலென்ன, இரண்டும் இந்தியாதானே என்று அவர் நினைத்திருக்க வேண்டும். பிராந்திய உணர்ச்சிகள் இவ்வளவு தீவிரமாக வளரும் என்று அவர் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். அவருடைய அலட்சியத்துக்கு தமிழர்கள் இன்றும் ஒரு விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

அவருடைய மிக பெரிய தோல்வி இந்திரா காந்திதான். அவர் தோளில் நின்று பிரதமரான இந்திரா அவரையே யார் என்று கேட்டது அவரை நிலை குலைய செய்திருக்க வேண்டும். அறுபதுகள் காங்கிரசுக்கு நல்லதாக இல்லை. சீனாவோடு சண்டை, ஹிந்தி எதிர்ப்பு, வேலை இல்லா திண்டாட்டம், பொதுவாக இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டிருந்த அதிருப்தி, சோஷலிசத்தின் குறைகள் வெளிப்பட ஆரம்பித்தது எல்லாம் அவரை புரட்டி போட்டுவிட்டன. Indira usurped his socialistic plank. ராஜ மானியம் ஒழிப்பு, வங்கிகள் தேசிய மயம், என்றெல்லாம் ஆரம்பித்தது உண்மையான சோஷலிஸ்ட்டான அவரை வலது சாரி தலைவராக காட்டியது – அவருக்கு மிஞ்சிய கூட்டாளிகள் எல்லாம் வலது சாரி நிஜலிங்கப்பா, மொரார்ஜி, எஸ்.கே.பாட்டில், சஞ்சீவ ரெட்டி போன்றவர்கள்தான். A great irony.

முதல்வர் பதவியில் இருந்து விலகிய நாளிலிருந்து அவர் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் போல மத்தியிலும் மாநிலத்திலும் இயங்க முயன்றார். மத்தியில் வெற்றி பெற்றவர் மாநிலத்தில் கோட்டை விட்டுவிட்டார். அது மத்தியிலும் அவர் தோல்வி அடைய காரணம் ஆகிவிட்டது. 67-இல் காங்கிரஸ் தமிழ் நாட்டில் ஜெயித்திருந்தால் இந்திராவால் அவரை அவ்வளவு சுலபமாக உதறி இருக்க முடியாது. 71-இலோ பங்களாதேஷ் போர் இந்திராவுக்கு அமோக வெற்றி தந்தது. காமராஜ் அந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டார். அதற்கு பிறகு அவர் ஒரு மாநில அளவு தலைவர் அவ்வளவுதான். அவ்வளவு பெரிய தலைவருக்கும் sell-by-date கடந்து விட்டது.

இன்று ஒரு காமராஜ் இருந்தால் என்று பெருமூச்சுதான் விட முடிகிறது. கம்யூனிசம், சோஷலிசம், காபிடலிசம், போன்ற இசங்களை விட நல்ல தலைவர்கள் ஏதோ ஒரு இசத்தை செயல்படுத்த வேண்டும் என்பதுதான் முக்கியம் என்று எனக்கு தோன்றுகிறது. கன்சர்வேடிவ் ராஜாஜி, சோஷலிஸ்ட் காமராஜ் இருவருமே நல்ல முதல்வர்கள்தானே!

அவரைப் போன்ற ஒரு தலைவர் இந்தியாவின் வரப்பிரசாதம்.

Richardsof
16th July 2012, 11:16 AM
1950 களில் நாடகங்கள் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்து, 1960 களில் முடி சூட்டி, 1970களிலும் கொடி கட்டி பறந்த சரித்திர நாயகர்கள் எம்ஜிஆர்-சிவாஜி. அதிக வருடங்கள் அடுத்த தலைமுறை நடிகர் கூட இல்லாத நிலை இவர்களின் காலங்கள். இவர்களின் ரசிகர்களே தமிழ் சினிமாவின் வெற்றி தோல்வியை
நிர்ணயிப்பவர்கள். இவர்களின் படங்களே திரைஉலகின் வாழ்வாதாரங்கள். இருவேறு கட்சிகளின் அனுதாபிகளாக தங்களை காட்டிகொண்டதாலே இவர்கள் இரு துருவங்களாக ஆக்கப்பட்டு, தமிழ் ரசிகர்களின் முதலிரு இடங்களில் கோலோச்ச வைத்தது. காங்கிரஸ் கட்சியின் நாயகனாக சிவாஜியும், திராவிட கட்சியின் நாயகனாக எம்ஜிஆரும் பார்க்கபட்டார்கள். குடும்ப சித்திரம், நடிப்பு, சரித்திர படங்கள், என்று சிவாஜி ஒரு புறமும், சமூக படங்கள், பொழுதுபோக்கு படங்கள் என்று எம்ஜிஆர் ஒரு புறமும் ரசிகர்களை தங்கள் பக்கம் மயங்க வைத்தார்கள். எம்ஜிஆர், சிவாஜி பற்றி சொல்லும் விஷயங்கள் அனைத்தும் அனைவரும் அறிந்ததே. ஆனால் ஆரம்பத்தில் திராவிட அனுதாபியாக இருந்து காமராஜரின் பால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் பக்கம் சென்றவர் சிவாஜி. காங்கிரஸ் அனுதாபியாக இருந்து அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு திராவிட கட்சியின் பக்கம் சென்றவர் எம்ஜிஆர் என்பது பலரும் அறியாத உண்மை. எம்ஜியார், சிவாஜி படங்கள் ஒன்றாக வெளியாகும் நாட்களே தீபாவளி போலானது. கிலோமீட்டர் கணக்கில் வரிசையில் நின்று, இரண்டு நாட்கள் கூட திரைஅரங்குகளின் நின்று படம் பார்த்த ரசிகர்கள் ஏராளம். அவையே திரையுலகின் பொற்காலமாக கருதப்பட்டது. இவர்களுக்கு அடுத்து ஜெமினி, ssr , முத்துராமன், ஜெய்ஷங்கர் என்று பல நட்சத்திரங்கள் மின்னினாலும், எம்ஜியாரும், சிவாஜியும் சூரியனும், சந்திரனும் போல திரைவானில் தனித்தே ஜொலித்தனர். எம்ஜிஆரும்
அரசியல் பக்கம் ஒதுங்க, சிவாஜியும் வயதாகி குணசித்திர வேடங்களில் நடிக்க தொடங்கிய பின்னரே அடுத்த தலைமுறை தலைஎடுத்தது.

joe
16th July 2012, 11:20 AM
esvee,
வேறு தளங்களிலிருந்து அப்படியே எடுத்து போடும் போது குறைந்தபட்சம் அதற்கான சுட்டி கொடுங்கள். இதை நீங்கள் வாசித்துப் பார்த்தீர்களா என்று கூட தெரியவில்லை ..அதிலே சில இடத்தில் 'இங்கே' என சுட்டி உள்ளது ..அதை இப்படி மொட்டையாக எடுத்துப்போட்டால் எப்படி சுட்டுவது ?

http://koottanchoru.wordpress.com/2009/03/21/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%A E%9C%E0%AF%8D/

Richardsof
16th July 2012, 01:42 PM
[QUOTE=joe;901219]esvee,
வேறு தளங்களிலிருந்து அப்படியே எடுத்து போடும் போது குறைந்தபட்சம் அதற்கான சுட்டி கொடுங்கள். இதை நீங்கள் வாசித்துப் பார்த்தீர்களா என்று கூட தெரியவில்லை ..அதிலே சில இடத்தில் 'இங்கே' என சுட்டி உள்ளது ..அதை இப்படி மொட்டையாக எடுத்துப்போட்டால் எப்படி சுட்டுவது ?

dear joe

thanks for your correction .

Thomasstemy
16th July 2012, 04:57 PM
1971 .. தீபாவளி வெளியான .... நீரும் நெருப்பும் ...... டிசம்பரில் வெளியான ஒரு தாய் மக்கள் தோல்வி எங்களை மிகவும் பாதித்தது .சிவாஜி நண்பர்கள் ...உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தது கவனித்தோம் .

அடுத்த கட்டம் .... 1972 .....
பொங்கல் அன்று மக்கள் திலகம் , நடிகர் திலகம் நடித்த படங்கள் எதுவும் வரவில்லை .ஆனால் 26 .1 .1972 அன்று சிவாஜியின் ராஜா தேவிபாரடைஸ் திரையரங்கில் வெளியாகி வெற்றி பெற்றது .
மக்கள் திலகம் நடித்த சங்கே முழங்கு 4 .2 .1972 வெலிங்டன் அரங்கில் வெளியானது .
இனிமையான பாடல்கள், மக்கள் திலகத்தின் மாறுபட்ட நடிப்பு என்று எல்லா அம்சமும் இருந்தும் எதிர் பார்த்த வெற்றி பெறவில்லை .
மீண்டும் சிவாஜி நண்பர்கள் முகத்தில் புன்னகை .
மார்ச் மாதம் சித்ராவில் நல்ல நேரம் pilazavil ஞா ன ஒளி வெளியானது .
மூன்று தோல்வி படங்களுக்கு பின்னர் நல்ல நேரம் மாபெரும் வெற்றி எங்களை மிக மிக மகிழ்ச்சியில் ஆழ்த்தியது . சித்ரா மற்றும் மகாராணி இரண்டு அரங்கில் நூறு காட்சிகள் தொடர்ந்து ஹவுஸ் புல் .
அந்த ஆண்டு சென்னையில் சித்ரா - மகாராணி -மேகலா -ராம் என நான்கு அரங்கில் நூறு நாட்கள் ஓடிய ஒரே படம் .
சிவாஜியின் ராஜா மற்றும் ஞா ன ஒளி 100 நாட்கள் ஓடியது .
ராமன் தேடிய சீதை ........
அருமையான பாடல்கள் , காஷ்மீர் படபிடிப்பு ,மக்கள் திலகம் மிகவும் இளமை துள்ளலுடன் ,நேர்த்தியான சண்டை காட்சிகளுடன் வந்த படம் .இனிமையான இன்னிசை .. midland - கிருஷ்ணா - சரவணா அரங்கில் 50 நாட்கள் ஓடி மக்கள் திலகம் ரசிகர்களை ஏமாற்றிய படம் .
பட்டிகாடா பட்டணமா - தவபுதல்வன்-வெற்றி சிவாஜி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது .

நான் ஏன் பிறந்தேன் ........
தொடரும் .................................

[B][COLOR="#800080"]Esvee Sir,
I remember some of my friend's father who relishes on the flashback of the year 1972, I was told it started quite interesting and lot of happenings on the film and political front from 1972 onwards..In terms of 1972, it was one of the peak year for Nadigar Thilagam's films as it started with the roaring success of Raja that surpassed previous year Makkal Thilagam's Rickshawkaran's Collection in Deviparadise. During the month of March, it was too tight a situation as Makkal Thilagam's Nalla Neram and Nadigar Thilagam's GnanaOli released. Both the fans celebrated Diwali in the month of march itself. While Nalla Neram had 100 CFH (continous Full House) as mentioned by you, Gnana Oli had 134 CFH (Continuous House Full Shows..News paper cutting attached). One more things is almost 20 Films of Nadigar Thilagam Sivaji Ganesan was already running across Tamilnadu when Gnanaoli was released. Amidst, his own film competing with his new film apart from Makkal Thilagam and the films, of other actors also, 134 CFH is something unheard of ever. Similarly, Pattikada Pattanama, considered dark horse at that time due to its black and white film, became an instant block buster from Nadigar Thilagam. The song in line with today's kuthupaatu " Ennadi Raakamma Pallakku Eduththu" and "Kaytukkodi Urumi melam" are classical status even now. If we closely see from the top most perspective, "Periya Idathu Penn", Pattikaada Pattanama, Sakalakala Vallavan, Savalae Samalee - all more or less fall under the same basic storyline isnt it? The year ended with Thavaputhalvan enjoying a 100 days run, thus making the year 1972, commercially belonging to Nadigar Thilagam.
If we notice, both Makkal Thilagam and Nadigar Thilagam had their own good times and bad times, yet we all enjoy both their competition in a much ethical and professional way. That's their Victory I guess !!

Richardsof
17th July 2012, 09:11 AM
இதய வீணை ............

உதயம் production முதல் படம் மக்கள் திலகம் நடித்த இதய வீணை .. மணியனின் கதை .
திமுகவிலிருந்து மக்கள் திலகம் நீக்கப்பட்டபின் வெளி யான முதல் படம் . தமிழ் நாடு முழுவதும் எம்ஜீயார் அலை வீசி கொண்டிருந்த நேரம் .திமுகவின் அடக்குமுறை , அதிகார மிரட்டல்கள் ,போலீஸ் கெடுபிடி .......
வசந்த மாளிகை வெற்றி ஒருபக்கம் ..வெள்ளிவிழா சென்னை மற்றும் மதுரையில் ஓடியது .
புரட்சி நடிகர் புதிய கட்சி துவங்கி புரட்சி தலைவர் ஆனார் . லட்ச கணக்கான ரசிகர்களும் பொது மக்களின் ஆதரவும் ஒன்று சேர்ந்ததால் அண்ணா தி மு க உதயமானது ..
மக்கள் திலகத்தின் புகழ் இமயத்தின் உச்சிக்கே சென்று விட்டது .
1972 நடிகர் திலகத்தின் ஏழு படங்களில் பட்டி காட பட்டணமா மதுரையிலும் வசந்த மாளிகை சென்னை சாந்தி மதுரை நியூ சினிமா விலும வெள்ளி விழாவும் தவபுதல்வன்- பைலட் மற்றும் ஞா ன ஒளி - பிளாசா நூறு நாட்கள் ஓடியது . நீதி -சென்னையில் 99 நாட்கள் ஓடியது. நடிகர் திலகத்தின் நண்பர்கள் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருந்தாலும் ,,,,,,,,, அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை மக்கள் திலகத்தின் கலை உலக வெற்றி அரசியல் வெற்றி உலக அளவில் பேசப்பட்ட புகழ் பெற்ற ஆண்டு என்றல் அது 1972 .
எந்த அளவிற்கு சாதனை படைத்தாரோ அந்த அளவிற்கு கடும் சோதனை கண்டு எதிர்களை வென்று அடுத்த கட்டமான உலகம் சுற்றும் வாலிபன் சந்தித்த தடைகளை
வென்று திண்டுக்கல் இடை தேர்தல் எதிர் கொண்டு .........

தொடரும்

Thomasstemy
17th July 2012, 03:33 PM
இதய வீணை ............

உதயம் production முதல் படம் மக்கள் திலகம் நடித்த இதய வீணை .. மணியனின் கதை .
திமுகவிலிருந்து மக்கள் திலகம் நீக்கப்பட்டபின் வெளி யான முதல் படம் . தமிழ் நாடு முழுவதும் எம்ஜீயார் அலை வீசி கொண்டிருந்த நேரம் .திமுகவின் அடக்குமுறை , அதிகார மிரட்டல்கள் ,போலீஸ் கெடுபிடி .......
வசந்த மாளிகை வெற்றி ஒருபக்கம் ..வெள்ளிவிழா சென்னை மற்றும் மதுரையில் ஓடியது .
புரட்சி நடிகர் புதிய கட்சி துவங்கி புரட்சி தலைவர் ஆனார் . லட்ச கணக்கான ரசிகர்களும் பொது மக்களின் ஆதரவும் ஒன்று சேர்ந்ததால் அண்ணா தி மு க உதயமானது ..
மக்கள் திலகத்தின் புகழ் இமயத்தின் உச்சிக்கே சென்று விட்டது .
1972 நடிகர் திலகத்தின் ஏழு படங்களில் பட்டி காட பட்டணமா மதுரையிலும் வசந்த மாளிகை சென்னை சாந்தி மதுரை நியூ சினிமா விலும வெள்ளி விழாவும் தவபுதல்வன்- பைலட் மற்றும் ஞா ன ஒளி - பிளாசா நூறு நாட்கள் ஓடியது . நீதி -சென்னையில் 99 நாட்கள் ஓடியது. நடிகர் திலகத்தின் நண்பர்கள் எல்லையில்லா மகிழ்ச்சியில் இருந்தாலும் ,,,,,,,,, அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை மக்கள் திலகத்தின் கலை உலக வெற்றி அரசியல் வெற்றி உலக அளவில் பேசப்பட்ட புகழ் பெற்ற ஆண்டு என்றல் அது 1972 .
எந்த அளவிற்கு சாதனை படைத்தாரோ அந்த அளவிற்கு கடும் சோதனை கண்டு எதிர்களை வென்று அடுத்த கட்டமான உலகம் சுற்றும் வாலிபன் சந்தித்த தடைகளை
வென்று திண்டுக்கல் இடை தேர்தல் எதிர் கொண்டு .........

தொடரும்


Dear Esvee Sir,

Nice article to be read. But, even you have mentioned that NT fans were unable to digest the political and cinema success of MGR, I partially disagree with this because you cannot mention all the fans here. Some would have been there and such people do exist in MGR fans also. However, record Sivaji films do (or) How many ever times Sivaji Films would have surpassed MGR films collection, they will not agree and accept the truth at all. We cannot blindly say, that all MGR fans could not digest because there are lots and lots of MGR fans who have also equally admired the success of NT's film success. One segment who cannot digest the success is always there in both the sides.

1972 solely, belonged to Nadigar Thilagam in terms of Tamil Cinema is concerned and everybody including your kind self am sure will admit that. 7 Films were released and but for Dharmam Enge, all 6 Films were SuperHits. Out of 6 Superhits, 2 Sliver Jubilees ( VasanthaMaligai & Pattikada Pattanama) 3 Hundred plus days films ( GnanaOli, Dhavapudhalvan, Raja) 1 Film 99 days (Needhi). Needhi was removed because Producer Balaji had committed additional amount to the original story holders on Needhi crossing 100 days. therefore, he deliberately removed it in 99 days. In all sense, NT was HERO 72.

Regards

:smokesmile:

Richardsof
17th July 2012, 04:22 PM
Dear sir
என்னுடைய நண்பர் அனுப்பிய நினைவுகள் தொகுப்பினை நான் எழுதினேன் .அந்த கால கட்டத்தில் இரண்டு திலகங்களின் ரசிகர்களும் இரண்டு வகை இருந்தனர் .
வசூல் ஒப்பீடு ,புள்ளிவிவரங்கள் ,பேப்பர் விளம்பரங்கள் ,சாதனை நோட்டீஸ்,சுமாராக இருந்தாலும் இல்லை ...படம் பிரமாதம் என்று தீவிர ரசிகர்களாக சிலரும் ,நடுநிலையோடு அனுசரித்து போகும் ரசிகர்களாகவும் இருந்தனர் என்பது உண்மை .

1972 பொறுத்த வரை நடிகர்திலகம் பெற்ற வெற்றி குறைத்து மதிப்பிடவில்லை . அதே நேரம் மக்கள் திலகம் நிகழ்த்திய இமாலய சாதனை பாரத் பட்டம் பெற்றது , தனி கட்சி துவங்கியது ,நல்ல நேரம் மற்றும் இதய வீணை மகத்தான வெற்றி , பல எதிர்ப்புகளை மீறி புதிய படங்களில் ஒப்பந்தமானது என்று தமிழக எல்லை தாண்டி உலகளவில் புகழ் பெற்று சாதனை படைத்தது என்று பார்த்தால்
அரசியல் மற்றும் கலை துறையில் மக்கள் திலகமும் கலைத்துறையில் நடிகர் திலகம் அவர்களும் NO 1 . இது வரலாற்று உண்மை .

eehaiupehazij
17th July 2012, 09:43 PM
Dear Esvee sir. No doubt MGR as Makkal Thilagam proved his mettle in politics too by way of remaining the unbeatable CM till he attained his immortal status in the hearts and minds of people. There was competition between NT and MT movies but both contributing to the development of Tamil Cinema. MGR carved out his career in a meticulously planned way to become the Makkal Thilagam, knowing fully well that he was nowhere nearer to Sivaji Ganesan as far acting is concerned. MGR remained as a single screen do-gooder personality but NT concentrated and devoted his full time with his astonishing punctuality in bringing out multi-various characterizations like Karnan or Deiva Magan or Pudiya Paravai like that. With conscience one needs to compare NT's achievement even after his attaining immortal status, by way of the lively proof of Karnan's mega success after nearly 50 years. Only Sivaji movies are now in consideration for successive rereleasess in modern format of presentations as the story contents and acting caliber of NT matches all times and all generations.Even now, NT remains the No.1 emperor of acting and his rereleased films draw in huge crowds. We can understand that MGR fans are now helplessly watching the glory of NT rising on the chart and they need to do something to stabilise MGR's screen image that is now confined only to TV screens as it involves lot of planning and action in revitalising MGR movies and financial risks in doing so is the main obstacle. MGR movies certainly convey some unique message but whether those things can count down in the present era of technological development and paradigm shift in fans' tastes to accept! The modern fans also get astonished and become spell bound upon watching the multi-dimensional acting skills of NT.

eehaiupehazij
18th July 2012, 07:13 AM
While NT remained the doyen of acting MT remained the king of action during their regime. But, as time went on the action genre had changed with the inflow of legends like Bruce Lee, Jackie Chan, Arnold, Stallone whose influences in Tamil movies were tremendous and the simple tishyum tishyum of MT could not withstand. If one observes closely, it would be amazing to watch the professionalism of MGR in his stunt scenes far above anyone else. The silambam scenes in Padakotti or Rickshawkaran (superb on a rickshaw and riding it too!). The Adimaippen stunt on a net with spears.... and what not?Had MGR tried his hands in Hollywood at his right age, certainly his screen presence in stunt scenes would have drawn accolades. If one watches Return of the Dragon where Lee tries with silambam, it flashes into our minds MGR's meticulous silambam style

Richardsof
18th July 2012, 09:07 AM
Dear senthil sir,
கர்ணன் மறு வெளியீடு நடிகர்திலகம் அவர்களின் சாதனைக்கு ஒரு மைல் கல் .நீண்ட கால முயற்சி ,பண முதலீடு ,அயராத உழைப்பு , ரசிகர்களின் ஆதரவு , ஊடகங்கள் மற்றும் தினசரி பத்திரிகைகளின் விளம்பரங்கள் போன்ற பல கூட்டு முயற்சியின் அடையாளம் தான் கர்ணனின் வெற்றி .
தாங்கள் குறிப்பிட்டது போல் மக்கள் திலகத்தின் படங்களை டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்து வெளியிட எவருக்கும் விருப்பமில்லை என்பது தெரிகிறது .

எந்தவித முதலீடு இன்றி கடந்த காலங்களில் 2005 , 2006 ,2007 , 2008 , 2009 என தொடர்ந்து 5 ஆண்டுகள் மக்கள் திலகத்தின் நாடோடிமன்னன் , அடிமைபெண், ஆயிரத்தில் ஒருவன் , உலகம் சுற்றும் வாலிபன் , போன்ற படங்கள் தமிழ்நாடு முழுவதும் நூற்று கணக்கான திரையரங்கில் தொடர்ந்து ஓடி நல்ல வசூல் சாதனை படைத்தது . மேலும் மக்கள் திலகத்தின் சுமார் 65 படங்கள் பல்வேறு நகரங்களிலும் கிராமங்களிலும் இன்றளவும் ஓடி கொண்டிருப்பதும் மகத்தான சாதனைதான்.
மதுரை , கோவை , திருச்சி , நெல்லை , சேலம் போன்ற நகரங்களில் இன்றும் மக்கள் திலகத்தின் படங்கள் ஓடி கொண்டுதான் இருக்கின்றன .தூத்துகுடியில் தொடர்ந்து நூறு வாரங்கள் மக்கள் திலகத்தின் படங்கள் திரையிட்டு உலக சாதனை புரிந்தது .

சென்னை சரவணா திரை அரங்கில் 15 வாரங்கள் தொடர்ந்து MGR படங்கள் திரையிட்டு நல்ல வசூல் ஆனது .

2011 பெங்களூர் - அடிமை பெண் 6 திரையரங்கில் வெளியாகி இரண்டு வாரங்களில் சுமார் 10 லட்சம் வசூலாகி மாபெரும் வரலாறு படைத்தது .
எனவே மக்கள் திலகம் படங்கள் நேற்றல்ல - இன்றல்ல - என்றென்றும் வந்து மக்களை மகிழ்விக்கும் என்பது உண்மை .
ரசிகர்களும் மக்களும் மக்கள் திலகம் படங்களை விரும்பி பார்க்கும் காரணம் அவருடை சண்டை காட்சிகளும் அதில் உள்ள திறமைகளும்தான் .காலத்தால் அழிக்க முடியாத சண்டைகாட்சிகள் ...எந்த காலத்திலும் மறக்க முடியாது . எதிர் கால ரசிகர்களும் நிச்சயம் விரும்பி பார்க்க கூடிய படங்கள் என்றால் அது மக்கள் திலகத்தின் படங்கள்தான் .
ஆளும் கட்சியோ ,மக்கள் திலகத்தின் பெயரால் பல லட்சங்கள் சம்பாதித்த நபர்களோ
யாருக்கும் அவரின் படங்களின் neagtive காப்பாற்ற துணிவில்லை . முன்வரவில்லை .
இன்னமும் அவரின் பெயரை சொல்லி பிழைக்கும் கூட்டங்கள் அவரின் படத்தை கூட போடுவதற்கு தயக்கம் காட்டும் கோழைகள் இருக்கும் நிலையில் மக்கள் திலகத்தின் பழைய படைகளை டிஜிட்டல் மற்றம் செய்யவோ ,neagative காப்பாற்றவோ முன் வருவார்கள் என்பது சந்தேகமே .
இந்த சூழ்நிலையில் வாரம் தோறும் மக்கள் திலகத்தின் பல படங்கள் எங்கேயாவது ஓடிகொண்டிருப்பது ஆறுதலான விஷயமாகும் .

Richardsof
18th July 2012, 09:51 AM
1588 vettaikaran is running with good collection at Royal theatre at kovai

mr_karthik
18th July 2012, 10:25 AM
எஸ்.வீ.சார்,

நீங்கள் சொன்னதுபோல, என்னதான் பொருட்செலவு பண்ணினாலும், பத்திரிகை விளம்பரங்கள் செய்தாலும், மக்கள் வந்து பார்த்து ஆதரவளித்தால் மட்டுமே ஒரு படம் வெற்றியடைய முடியும்.

அந்த வகையில் தற்போது கர்ணனும் பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவினால்தான் வெற்றியடைந்திருக்கிறது. ரசிகர்கள் மட்டும் பார்த்து ஒரு படத்தை ஓட்டிவிட முடியுமென்றால் எந்தப்படமும் தோல்வியடைந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ரசிகன் அல்லாத பொதுமக்களின் சப்போர்ட் மட்டுமே வெற்றியைத்தர முடியும்.

அப்படித்தான், ஏற்கெனவே தொலைக்காட்சி சேனல்களில் பலமுறை ஒளிபரப்பாகியும், பலமுறை விசிடி, டிவிடிக்களில் பார்த்திருந்தும் கூட கர்ணனை திரையில் வந்து பார்த்து பொதுமக்கள் பரவசப்பட்டனர்.

ஒரு பழைய திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழகமெங்கும் 75 தியேட்டர்களுக்கு மேல் ஓடிக்கொண்டிருந்தது என்பது இதுவரை இல்லாத சாதனை அல்லவா?.

Richardsof
18th July 2012, 02:10 PM
15891589

makkal thilagam mgr function at chennai on 5th August 2012.

eehaiupehazij
18th July 2012, 03:09 PM
Dear Esvee sir. The legends are gone, leaving us still getting delighted and living in our hearts. Even Karnan could achieve this height of record only because of the loyal team of fans who took initiative to restore this epic with a sincere objective of making the message of this evergreen classic to reach the generations to come. Where have gone the loyal fans of Makkal Thilagam? Are they remaining silent due to political reasons? The sheer entertainers of MGR with lot of guidance to life, self-confidence, courage, modesty, activeness and a pure living with ideals shall not be let down. I hope as other NT fans also agree with me, that the die hard erstwhile MGR fans who are still in power and positions with wealth may pay tributes to their beacon of light MGR to come forward for the restoration of his movies and presentation to the generations to come. In this context, the NT fans like me are always grateful to Shanthi Chokkalingam, Pammalar,VAsudevan,Joe,....an endless list of NT followers still on the anvil of renewing and restructuring the acting glory of NT in the young minds.

Richardsof
18th July 2012, 03:14 PM
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்

Richardsof
18th July 2012, 04:29 PM
1973 நினைவுகள் .........

இதய வீணை வெற்றிகரமாக 100 நாட்களை பல வித இன்னல்களை மீறி சென்னை -குளோப்- மதுரை - தேவி - திருச்சி - பாலஸ் ஆகிய மூன்று ஊர்களில் கண்டது .
உலகம் சுற்றும் வாலிபன் .

எம்.ஜி.ஆரின் தயாரிப்பின் உருவாகியிருந்த உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம். திமுகவில் இருந்தபோது தொடங்கப்பட்ட படம். வெளியிடும் தருணத்தில் புதிய கட்சியைத் தொடங்கியிருந்தார் எம்.ஜி.ஆர்.

படத்துக்கான சுவரொட்டியைக்கூட ஒட்டமுடியாத சூழல். ஒட்டிய சுவரொட்டிகளை எல்லாம் திமுகவினர் கிழித்தெறிந்ததாகச் செய்திகள் பரவிக்கொண்டிருந்தன. இதன் பின்னணியில் இருப்பவர் திமுகவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான மதுரை எஸ். முத்து என்றனர் எம்.ஜி.ஆர் ரசிகர்கள். படம் திரையில் ஓடாது; ஓடினால் சேலை கட்டிக்கொள்கிறேன் என்று முத்து சவால் விட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.

பலத்த நெருக்கடிகளுக்கு மத்தியில் உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது. அரசியல் வாடையே வீசாத வகையில் எடுக்கப்பட்ட படம் அது. திடீரென உருவான அரசியல் பிரச்னைகளுக்கு ஆளாகியிருந்தது. எனினும், படம் பிரம்மாண்டமான வெற்றி. உண்மையில் அந்த வெற்றி திமுகவினரை அதிர்ச்சியடையச் செய்தது. அதற்குக் காரணம் இருந்தது. 1964ல் திடீரென மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தபோது திமுகவினர் பலத்த அதிருப்தி அடைந்தனர். அதன் தொடர்ச்சியாக வெளியான என் கடமை படம் தோல்வியைச் சந்தித்தது. ஆகவே, உலகம் சுற்றும் வாலிபன் படமும் தோல்வியடையும் என்று நினைத்தனர். முடிவு நேர்மாறாக அமைந்திருந்தது.

இ டைத்தேர்தலில் சுமார் ஐந்து லட்சம் வாக்குகள் பதிவாகின. அதிமுகவின் மாயத்தேவர் 2,60,930 வாக்குகளைப் பெற்று அபாரவெற்றியைப் பெற்றிருந்தார். ஸ்தாபன காங்கிரஸின் என்.எஸ்.வி. சித்தன் 1,19,032 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மாறாக, திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கம் 93,496 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தார். கருணாநிதியை அதிர்ச்சியில் உறையவைத்த தேர்தல் முடிவு இது.

Thirumaran
18th July 2012, 07:47 PM
எனக்குள் M.G.R.! - ஒரு X - Ray தெடர் - வாலி
அது அவன் கையில்!


திருவல்லிக்கேணி, ‘கெல்லட் ஹைஸ்கூல்’ பக்கத்தில் ஒரு Blind Street; ‘சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில் தெரு’ என்று பேர்.
அங்குதான் – ஒரு வீட்டின் முன்புறம் இருந்த அறையில், அஞ்சு ரூபாய் வாடகையில் ஏற்கெனவே இருந்த இருவரோடு மூன்றாவது நபராக நான் குடியிருந்தேன். சென்ற நூற்றாண்டின் 57 – 58 களில் இவையெல்லாம் சாத்தியமாக இருந்தன!

தினமும் –
காலையில் திருவல்லிக்கேணியிலிருந்து பஸ் பிடித்து, தியாகராய நகர் வாணி மஹால் நிறுத்தத்தில் இறங்கி –
திருமலைப் பிள்ளை ரோடில் – காமராஜர் வீட்டிற்கு எதிர்த்தாற் போலிருந்த, சின்னையாப்பிள்ளை தெரு –
பத்தாம் நெம்பர் வீட்டுக்குப் போவேன்!

அதுதான்.
திரு. கோபி அவர்களின் வீடு.
லண்டன் மாநகரில் – ‘டௌனிங் தெரு’ பத்தாம் நெம்பர் வீடு, பிரதமரின் இல்லமாகும்; நிறையப் பிரமுகர்களின் வருகையால், தினம் அங்கு திருவிழாக் கூட்டமாக இருக்குமாம். அது போலவே – சின்னையாப் பிள்ளை தெரு, பத்தாம் நெம்பர் வீடும், நிதம் காலை வேளையில் நிறைய நண்பர்களால் நிரம்பி வழியும்!
‘பரோபகாரம் இதம் சரீரம்’ எனும் வடமொழியில் உள்ள ஒரு சொலவடைக்கு ஏற்ப – அடுத்தவர்க்கு உதவுவதையே ஓர் அறமாகக் கொண்டு வாழ்ந்தவர் கோபி.
எனக்குத் தெரிந்து, அவர் ஏணியாயிருந்து ஏற்றிவிடப் பெற்றோர் ஏராளம்.
திரு. கண்ணதாசனுக்குக் கே. ராம்னாத்திடம் சொல்லி –
‘கன்னியின் காதலி’ படத்தில் முதல் பாட்டு எழுதும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்தவர் திரு. கோபிதான்! எனக்கும் –
‘அழகர்மலைக் கள்ளன்’ என்னும் படத்தில் முதல் வாய்ப்பை வாங்கிக் கொடுத்ததும் கோபிதான்!
எழுத்தாளர் திரு. பி.எஸ்.ராமையா எழுதி இயக்கிய – ‘தன அமராவதி’ படத்தில் திரு. சந்திரபாவுக்கு நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்து, அவர் நலிவைப் போக்கியவர் கோபிதான்!
அன்றாடம் அதிகாலையில் அவர் வீட்டில் போய் நிற்கும் அடியேனுக்கு –
அற்றை நாளில் அறிமுகமான அறிவுஜீவிகள் அனேகர்.
திரு. ஜெயகாந்தன்; திரு. கோ.வி. மணிசேகரன்; திரு. எம்.பி. ஸ்ரீனிவாசன் – இத்யாதி; இத்யாதி!

ஒருநாள் ஒரு மாலை நேரம். நான் கோபியைப் பார்க்கப் போனேன்.
ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து கொண்டிருந்தவர் –
‘வாலி! ஏறுங்க பின்னாலே; உங்களெ எம்.ஜி.ஆர். கிட்ட அறிமுகப்படுத்தி வைக்கிறேன்!’ என்று சொல்லி, ஓர் ஆனந்த அதிர்ச்சியை ஏற்படுத்தினார்!
பின் இருக்கையில் நான் அமர – கோபி, வாஹினி ஸ்டூடியோவை நோக்கி விரட்டினார் ஸ்கூட்டரை; என் சிந்தனை கோபியைச் சுற்றிச் சுழன்றது.

கோபி – சற்றுக் குட்டையானவர். ஆனால் அவரது கை குட்டையல்ல; அது கைக்குட்டை! ஆம்; பலரது கண்ணீரை அது துடைத்திருக்கிறது.
திரு. எஸ்.வி. சஹஸ்ரநாமம் அவர்களின், ‘ஸேவா ஸ்டேஜ்’ நடிகர்கள் பலருக்கு –
அவர்களது சிரம தசைகளில் வலியச் சென்று தோள் கொடுத்த வண்மைக் குணம் கண்டு –
கோபியைத் தூக்கி கோபுரத்தில் வைத்து வழிபடும் என் மனம்.
அதே நேரத்தில்.
ஆங்கில நடிகர்களுக்கு ஒப்பான அவரது நடிப்புத் திறனை – கோடம்பாக்கம் ஏன் பெரிதாகக் கொண்டாடவில்லை என்று நான் வியந்தும் விசனித்தும் இருக்கிறேன்!

ஒரு முறை – சென்னை மியூசியம் தியேட்டரில்
– 'Madras Players' என்ற அமைப்பு ஷேக்ஸ்பியரின் ‘ஒதெல்லோ’ நாடகத்தை – அதன் மூல உரையாடல்களோடு அரங்கேற்றினார்கள்.
அந்த நாடகத்தில் மிக முக்கியப் பாத்திரமான ‘இயாகோ’ வாக – கோபி நடித்து நான் பார்த்திருக்கிறேன். அவரது ஆங்கில உச்சரிப்பும்; அங்க அசைவுகளும்; அதிகம் அலட்டிக் கொள்ளாத மேல்நாட்டுப் பாணியைப் பின்பற்றி நின்ற மேதைமையும் – ‘ஆண்டனி க்வின்’; ‘லாரன்ஸ் ஒலிவர்’; – இன்னும் இன்னோரன்ன நடிகர்களின் வரிசையிலே வைத்து வணங்கத் தோன்றும்.
பிரிட்டிஷ் கவுன்சிலிலிருந்து நாடகம் பார்க்க வந்திருந்த பிரமுகர்களே – மேடைக்கு வந்து பிரமிப்போடு கோபியின் கைகளைப் பற்றிக் குலுக்கியதுண்டு!
இத்தகு வித்தகருக்கு –
உரிய இடத்தை ஏன் தமிழ் சினிமா உதவாமல் போனது?

கண்ணதாசனின் ஒரு படப் பாடலை, மேற்கண்ட வினாவிற்கு விடையாகக் கொள்ளலாம், ஓரளவு!

‘வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி யில்லை;
புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை!’

– பாடல் இதுதான்; ஆயினும் தக்கார் தகவு பெறாததும், தகவிலார் தகவு பெறுவதும் ஏன் என ஆராயப் புகுந்தால் –
இன்னாரைக் கொண்டு இன்ன இடத்தை இன்ன தருணத்தில் இட்டு நிரப்புவது என்பது இறைமையின்பாற் பட்டது என்பதுதான் தேற்றமாக வரும்!
இந்த இடத்தில் –
கோபி சம்பந்தப்பட்ட இரு நிகழ்வுகளை அவரே சொல்ல நான் கேட்டதை, மேற்சொன்ன தத்துவத்திற்கு இரு சான்றுகளாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

எல்லோருக்கும் தெரியும் –
‘ஜெமினி சந்திரலேகா’ அற்றை நாளில் வெளியாகி, வையத்தையே தன் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த கதை.
அந்தப் படம் – ஆண்டுகள் பலவாகத் தயாரிப்பில் இருந்த போது, அதில் ஒரு சிறிய வேடத்திலாவது தலைகாட்டி விட வேண்டும் என்ற தாளாத அவா, பல நாடக நடிகர்களுக்கு இருந்தது.
அந்தப் படத்தில் –
திரு. எம்.கே.ராதா இளவரசனாக வருவார். அவர் நகர்வலம் சென்று வெண்புரவியில் அரண்மனைக்குத் திரும்பி உள்ளே வந்ததும் –
அவரது Shoe-வின் Lace–ஐ, ஒரு பணியாள் வந்து பயபக்தியுடன் அவிழ்க்க வேண்டும்; அது ஓரளவு Mid-Shot ஆகப் படத்தில் வரும்.
அந்தப் பணியாள் வேஷத்தைச் செய்யப் பலர் அவாவினர்.
அவ் அமயம் –
சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் ஒரு நாடகக் கம்பெனி முகாமிட்டிருந்தது. அந்த நாடகத்தில் சிறப்பாக நடித்த ஒரு நடிகர், எவர் மூலமாகவோ சிபாரிசு செய்யப் பெற்று –
திரு. வேப்பத்தூர் கிட்டு அவர்களைப் பார்க்க வந்திருந்தார், ஜெமினி ஸ்டூடியோவுக்கு!
திரு. வேப்பத்தூர் கிட்டு, ஜெமினி கதை இலாகாவில் பணிபுரிந்ததோடு மட்டுமின்றி –
‘சந்திரலேகா’வில் முக்கியமான வேடத்திலும் நடித்துக் கொண்டிருந்தார்.
ஒற்றைவாடை நாடகத்தில் நடித்திருந்த – தன்னிடம் சிபாரிசுக் கடிதத்துடன் வந்திருந்த – அந்த இளைஞரை –
திரு. எம்.கே.ராதாவின் Shoe Lace –ஐ அவிழ்க்கும் காட்சியில் பயன்படுத்தலாம் என்று தீர்மானித்து –
அந்த இளம் நடிகரை திரு. வாசன் முன் கொண்டு போய் நிறுத்தினார் வேப்பத்தூர் கிட்டு!
அந்த நடிகரின் ஆகிருதி, வாசனை வசீகரிக்கவில்லை.
'Why you are wasting my precious Time?' என்று வேப்பத்தூர்க் கிட்டுவைக் கடிந்து கொண்டு விட்டு –
‘மிஸ்.மாலினியில் நடித்த கோபியைப் போடுங்க, அந்த வேஷத்துக்கு!’ என்று பணித்தார், திரு. வாசன்.
‘சந்திரலேகா’ படத்தில் திரு. கோபிதான், எம்.கே.ராதாவுடன் அந்தக் காட்சியில் நடித்தார். எதிர்பாராமல் – கோபியின் வீடு தேடி வந்த அழைப்பு இது!

‘பராசக்தி’ நாடகத்தை நேஷனல் பிக்சர்ஸ் திரு. பெருமாளுடன் கூட்டுச் சேர்ந்து திரு. ஏ.வி.எம். அவர்கள் தயாரிக்கத் தீர்மானித்தவுடன் –
கதையில் வரும் சகோதரர்களில் கடைசி சகோதரனாக – அதாவது, கதாநாயகனாக வரும் வேஷத்திற்கு –
திரு. வி.கோபால கிருஷ்ணனைத்தான், அதாவது கோபியைத்தான் போட வேண்டுமென்று விரும்பினார்.
இயக்குனர் திரு. பஞ்சுவிடம், ‘நீங்க போய், ஆனந்தம்மாள் பையனைப் பேசிவிட்டு வாங்க!’ என்று அனுப்பி வைத்தார் திரு. ஏ.வி.எம். அவர்கள்; திருமதி. ஆனந்தம்மாள்தான் கோபியின் தாயார்.
செட்டியார் சொல்லியபடி
பஞ்சு அவர்கள் மைலாப்பூர் அப்பர் ஸ்வாமி கோயில் தெருவில் அப்போது குடியிருந்த திருமதி. ஆனந்தம்மாள் வீட்டிற்குச் சென்று விவரத்தைச் சொன்னார்.
‘பராசக்தி’ படத்தில் தன் மகன் நடிக்க இயலாது என்று பவ்வியமாகத் திருமதி. ஆனந்தம்மாள் மறுத்து விட்டார்.
‘கோபிக்கு – ஹானர்ஸ் Final Year இது; படிப்பை விட்டுட்டு நடிக்க வரது, இப்ப சாத்தியமில்லே!’ என்று அந்த அம்மையார் சொன்னதை,
திரு. பஞ்சு அவர்கள் திரு. ஏ.வி.எம். அவர்களிடம் தெரிவித்த பிற்பாடுதான் –
திரு. சிவாஜி அவர்கள் ‘பராசக்தி’யின் கதாநாயகனாகப் பிரவேசிக்கிறார்!

இந்த
இரு நிகழ்வுகளில், என்ன அறியக் கிடக்கிறது என்று வாசகர்கள் எண்ணலாம்.
இறைவன் திருவுள்ளப்படிதான் இவ் வையத்தின் மாட்டு எதுவும் நிகழ்கிறது என்பது நிரூபணமாகிறது என்பேன்.
‘பராசக்தி’யில் –
திரு. கோபிக்கு வந்த வாய்ப்பு சிவாஜிக்குச் சென்றது போல் –
‘சந்திரலேகா’வில் –
ஒற்றைவாடை நாடகத்தில் நடித்த ஒரு இளம் நடிகருக்கு வர வேண்டிய வாய்ப்பு திரு. கோபிக்குச் சென்றது என்றேனே –
அந்த இளம் நடிகர் வேறு யாருமல்ல; சாட்சாத் சிவாஜி கணேசன் அவர்கள்தான்!

‘நடந்ததற்கும்;
நடப்பதற்கும்;
நடக்கப் போவதற்கும்
நானோ காரணம் கச்சி ஏகம்பனே!’

– என்று ஒரு சமயக்குரவர் பாடி வைத்தது சத்தியப் பிரமாணமாகும்; ஆம் –

வாய்க்கால்களை
வல்லானே
வகுக்கின்றான்!

ஸ்கூட்டரின் பின் இருக்கையில் அமர்ந்தவாறு நான் இன்னணம் –
திரு. கோபியைப் பற்றிய நினைவோட்டத்தில் நீந்தி முடிக்கவும் –
வாஹினி ஸ்டூடியோ வரவும் சரியாக இருந்தது.
ஸ்கூட்டரை –
ஒரு மரத்தடியில் நிறுத்தி விட்டு, மூன்றாம் தளத்தில் படப்பிடிப்பில் இருந்த – திரு. எம்.ஜி.ஆரிடம் என்னை அழைத்துப் போனார் கோபி!

(தொடரும்)

rajeshkrv
18th July 2012, 10:15 PM
Dear Karthik Sir,

You are absolutely right Karthik sir,

But we are in Tamilnadu we should remember where there is no room for Truth and Gnayam. So, cant take everything seriously and respond. I was doing that but soon realized that it is absolutely foolish.

Vaali is a big time jaalra. All knew about it. He had to survive amidst Kannadasan's and others competition. Therefore, the Jaalra. When you compare Kannadasan, Vaali is nothing and just a peanut. He is also a Chameleon in nature. If DMK comes to power, he will praise MK, If ADMK comes to power, he will praise MT and his Amma. Even if I come to power, he will do the same thing. Not his mistake, he had grown like that.

Recently, when he was approached by Kalaignar TV for a programmed called Marakka Mudiyuma on Actor Jaishankar, he demanded 3 Lakhs from the programme Director. I am not saying it is wrong..what am trying to point out here is his nature. If you pay money, Vaali will say "You are Srirama !! - Adhu Dhaan Vaali.

I dont think that he will say anythng for money. Recently he is demanding more money thinking they will not trouble him(sine he has some ailments). If the channel still needs him they will come to him
And why do you call it jalra. He was friendly with eveyone including MGR,Sivaji and many others.. He did not take side like VM did. So that's about it.

Thomasstemy
18th July 2012, 10:19 PM
15891589

makkal thilagam mgr function at chennai on 5th August 2012.

While Karnan's 150th day function is on 4th August fixed, am sure, this is a fixed match between India and Pakistan...

Lots of fun and enjoyment for us, i guess....Vetrivel...Veeravel....hahahaha !

Papers, Magazines will enjoy the benefit of selling additional copies...


:smokesmile:

app_engine
18th July 2012, 10:28 PM
புலவர்கள் புரவலர்களைப் புகழ்வது புதிதொன்றுமில்லை (அளவாகவும், அளவுக்கு அதிகமாகவும்).

இதில் தமிழ்ப் புலவர்களும் விலக்கில்லை, சங்க காலமோ சமீப காலமோ இதில் மாற்றமொன்றுமில்லை.

வாலி எழுதிய புகழும் பாடல்களை அவ்விதத்தில் பார்த்தால் போதும் :-)

(அவ்வையார் தொண்டைமானிடம் போர் நிறுத்தச்சொல்லிப்பேசியது போலவும் அவ்வப்போது செய்தால் அவர் இன்னமும் உயர்ந்த புலவராவார்) !

balaajee
19th July 2012, 02:24 AM
http://www.itimes.com/files/rsz/fit_s_400x600/files/07-2012/282/5547cd31531899d041ee45af9012e77b_1342524767.jpg

Richardsof
19th July 2012, 10:23 AM
By the early fifties three actors rose to fame in Tamil film industry and they ruled the film world in the fifties, sixties and seventies. They were M.G.Ramachandran(M.G.R), Sivaji Ganesan and Gemini Ganesan.

M.G.Ramachandran made his debut in Ellis R Dungan's 1935 film Sati Leelavati. His breakthrough role was in the 1947 film Rajakumaari, which was written by M.Karunanidhi. He attained superstardom after his 1954 movie Malaikallan. He played the hero in a number of blockbusters including Alibabavum Narpadhu Thirudargalum(first full length color film in Tamil,released in 1955), Madhurai Veeran, Pudhumai Pithan, Nadodi Mannan, Thaayai Kaatha Thanayan, Dheiva Thaai, En Kadamai, Aayirathil Oruvan, Enga Veettu Pillai, Anbe Vaa, Nadodi, Chandhrodhayam, Ragasiya Police 115, Pudhiya Bhoomi, Adimai Penn, Engal Thangam, Rickshawkaran(won him National Film Award for Best Actor in 1971), Raaman Thediya Seedhai, Ulagam Sutrum Valiban and Idhayakkani. M.G.R is considered the numero uno in the history of Tamil cinema and was fondly called Puratchi Thalaivar. He became the Chief Minister of Tamilnadu in 1977 and continued in the position till his death in 1987.

Sivaji Ganesan was one of the first and finest method actors in Indian cinema. His highly expressive eyes, mobile face and fine voice made him a moving force in Tamil cinema. He was fondly called as Nadigar Thilakam. Sivaji Ganesan entered film world through the 1952 film Parasakthi which was written by M.Karunanidhi. Parasakthi is among the clasics of Tamil cinema and helped Sivaji Ganesan rise to instant stardom. He rendered fine performances in movies like Veerapandiya Kattabomman, Paasamalar, Kappalottiya Thamizhan, Vietnam Veedu, Vasantha Maligai, Pattikkada Pattanama, Thangapathakam and Thirisoolam. In the 1964 film Navarathri, Sivaji Ganesan essayed nine different roles each representing a different emotional state of a man.

Gemini Ganesan, nicknamed Kadhal Mannan got his first break with Miss Malini. Then he played Lord Krishna in Chakravarthi. The actor in him was noticed with the 1953 film Thai Ullam in which he played the villain. Next year he was casted as the hero in Manampol Mangalyam opposite his future wife Savithri. Some of his best works include Missi Amma, Pennin Perumai, Miss Mary, Maya Bazar, School Master, Parthiban Kanavu, Kalathur Kannamma, Kalyana Parisu, Konjum Salangai, Kanavane Kan Kanda Deivam, Vanjikottai Valiban, Then Nilavu, Meenda Sorgam, Santhi Nilayam, Vaazhkai Padagu, Katpaham, Ramu, Thamarai Nenjam and Punnagai and Naan Avan Illai. His talents were not properly exploited and was mostly confined to boy meets girl romantic films.

Richardsof
19th July 2012, 10:57 AM
A friendly match between vettaikaran - karnan.

Yaear of the match 14.01.1964 pongal day.

Play ground - chithra - santhi
brodway -prabhath
mekala - sayani

organaised by devar flims & padmini flims

mma chinnappa devar - b r bandhulu

vettaikaran team - captain m.g.r.
Karnan team captain sivaji
100 runs for vettiakaran - chennai - chithra - brodway - mekala madurai, trichy and salem.
100 runs for karnan chennai santhi - prabhath - sayani and madurai thangam.

Man of the match - vettaikaran team - mgr
highest score vettaikaran salem - siddeswara 147.
Best performance karnan team - sivaji .
Winner- vettaikaran.
Runner -karnan

just for funny .
Take it easy .

balaajee
19th July 2012, 12:44 PM
எனக்குள் M.G.R.! - ஒரு X - Ray தெடர் - வாலி
‘ஜெமினி சந்திரலேகா’ அற்றை நாளில் வெளியாகி, வையத்தையே தன் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த கதை.
அந்தப் படம் – ஆண்டுகள் பலவாகத் தயாரிப்பில் இருந்த போது, அதில் ஒரு சிறிய வேடத்திலாவது தலைகாட்டி விட வேண்டும் என்ற தாளாத அவா, பல நாடக நடிகர்களுக்கு இருந்தது.
அந்தப் படத்தில் –
திரு. எம்.கே.ராதா இளவரசனாக வருவார். அவர் நகர்வலம் சென்று வெண்புரவியில் அரண்மனைக்குத் திரும்பி உள்ளே வந்ததும் –
அவரது Shoe-வின் Lace–ஐ, ஒரு பணியாள் வந்து பயபக்தியுடன் அவிழ்க்க வேண்டும்; அது ஓரளவு Mid-Shot ஆகப் படத்தில் வரும்.
அந்தப் பணியாள் வேஷத்தைச் செய்யப் பலர் அவாவினர்.
அவ் அமயம் –
சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் ஒரு நாடகக் கம்பெனி முகாமிட்டிருந்தது. அந்த நாடகத்தில் சிறப்பாக நடித்த ஒரு நடிகர், எவர் மூலமாகவோ சிபாரிசு செய்யப் பெற்று –
திரு. வேப்பத்தூர் கிட்டு அவர்களைப் பார்க்க வந்திருந்தார், ஜெமினி ஸ்டூடியோவுக்கு!
திரு. வேப்பத்தூர் கிட்டு, ஜெமினி கதை இலாகாவில் பணிபுரிந்ததோடு மட்டுமின்றி –
‘சந்திரலேகா’வில் முக்கியமான வேடத்திலும் நடித்துக் கொண்டிருந்தார்.
ஒற்றைவாடை நாடகத்தில் நடித்திருந்த – தன்னிடம் சிபாரிசுக் கடிதத்துடன் வந்திருந்த – அந்த இளைஞரை –
திரு. எம்.கே.ராதாவின் Shoe Lace –ஐ அவிழ்க்கும் காட்சியில் பயன்படுத்தலாம் என்று தீர்மானித்து –
அந்த இளம் நடிகரை திரு. வாசன் முன் கொண்டு போய் நிறுத்தினார் வேப்பத்தூர் கிட்டு!
அந்த நடிகரின் ஆகிருதி, வாசனை வசீகரிக்கவில்லை.
'Why you are wasting my precious Time?' என்று வேப்பத்தூர்க் கிட்டுவைக் கடிந்து கொண்டு விட்டு –
‘மிஸ்.மாலினியில் நடித்த கோபியைப் போடுங்க, அந்த வேஷத்துக்கு!’ என்று பணித்தார், திரு. வாசன்.
‘சந்திரலேகா’ படத்தில் திரு. கோபிதான், எம்.கே.ராதாவுடன் அந்தக் காட்சியில் நடித்தார். எதிர்பாராமல் – கோபியின் வீடு தேடி வந்த அழைப்பு இது!

‘பராசக்தி’ நாடகத்தை நேஷனல் பிக்சர்ஸ் திரு. பெருமாளுடன் கூட்டுச் சேர்ந்து திரு. ஏ.வி.எம். அவர்கள் தயாரிக்கத் தீர்மானித்தவுடன் –
கதையில் வரும் சகோதரர்களில் கடைசி சகோதரனாக – அதாவது, கதாநாயகனாக வரும் வேஷத்திற்கு –
திரு. வி.கோபால கிருஷ்ணனைத்தான், அதாவது கோபியைத்தான் போட வேண்டுமென்று விரும்பினார்.
இயக்குனர் திரு. பஞ்சுவிடம், ‘நீங்க போய், ஆனந்தம்மாள் பையனைப் பேசிவிட்டு வாங்க!’ என்று அனுப்பி வைத்தார் திரு. ஏ.வி.எம். அவர்கள்; திருமதி. ஆனந்தம்மாள்தான் கோபியின் தாயார்.
செட்டியார் சொல்லியபடி
பஞ்சு அவர்கள் மைலாப்பூர் அப்பர் ஸ்வாமி கோயில் தெருவில் அப்போது குடியிருந்த திருமதி. ஆனந்தம்மாள் வீட்டிற்குச் சென்று விவரத்தைச் சொன்னார்.
‘பராசக்தி’ படத்தில் தன் மகன் நடிக்க இயலாது என்று பவ்வியமாகத் திருமதி. ஆனந்தம்மாள் மறுத்து விட்டார்.
‘கோபிக்கு – ஹானர்ஸ் Final Year இது; படிப்பை விட்டுட்டு நடிக்க வரது, இப்ப சாத்தியமில்லே!’ என்று அந்த அம்மையார் சொன்னதை,
திரு. பஞ்சு அவர்கள் திரு. ஏ.வி.எம். அவர்களிடம் தெரிவித்த பிற்பாடுதான் –
திரு. சிவாஜி அவர்கள் ‘பராசக்தி’யின் கதாநாயகனாகப் பிரவேசிக்கிறார்!

இந்த
இரு நிகழ்வுகளில், என்ன அறியக் கிடக்கிறது என்று வாசகர்கள் எண்ணலாம்.
இறைவன் திருவுள்ளப்படிதான் இவ் வையத்தின் மாட்டு எதுவும் நிகழ்கிறது என்பது நிரூபணமாகிறது என்பேன்.
‘பராசக்தி’யில் –
திரு. கோபிக்கு வந்த வாய்ப்பு சிவாஜிக்குச் சென்றது போல் –
‘சந்திரலேகா’வில் –
ஒற்றைவாடை நாடகத்தில் நடித்த ஒரு இளம் நடிகருக்கு வர வேண்டிய வாய்ப்பு திரு. கோபிக்குச் சென்றது என்றேனே –
அந்த இளம் நடிகர் வேறு யாருமல்ல; சாட்சாத் சிவாஜி கணேசன் அவர்கள்தான்!

‘நடந்ததற்கும்;
நடப்பதற்கும்;
நடக்கப் போவதற்கும்
நானோ காரணம் கச்சி ஏகம்பனே!’


Really intresting, Thanks much THIRUMARAN.

Richardsof
19th July 2012, 02:20 PM
1594

mgr padangalin peyaril oru kavidhai by dindugal mgr fans.

eehaiupehazij
19th July 2012, 03:42 PM
A friendly match between vettaikaran - karnan.

Yaear of the match 14.01.1964 pongal day.

Play ground - chithra - santhi
brodway -prabhath
mekala - sayani

organaised by devar flims & padmini flims

mma chinnappa devar - b r bandhulu

vettaikaran team - captain m.g.r.
Karnan team captain sivaji
100 runs for vettiakaran - chennai - chithra - brodway - mekala madurai, trichy and salem.
100 runs for karnan chennai santhi - prabhath - sayani and madurai thangam.

Man of the match - vettaikaran team - mgr
highest score vettaikaran salem - siddeswara 147.
Best performance karnan team - sivaji .
Winner- vettaikaran.
Runner -karnan

just for funny .
Take it easy .
Dear Esvee Sir. Take this easy. The winner as claimed by you has now run away from the memory of people in this year 2012 during which the runner as described by you has become the unbeatable winner proving that NT alone remains as the acting king in the minds of people. Where has gone vettaikkaran now? sleeping in the film boxes?

Richardsof
19th July 2012, 04:06 PM
1595

Dear senthil sir

vettaikaran is always alive . now running at kovai - royal theatre with good collection .

Richardsof
19th July 2012, 05:07 PM
15961597[QUOTE=esvee;904469]1595


1964 movie again rereleased in 1976 at 7 screens at chennai.

eehaiupehazij
19th July 2012, 06:18 PM
dear esvee. happy that MT's Vettaikkaran is back and running successfully. Let us now take efforts to revitalize all MT classics instead of wasting our time on mere past time collection comparisons and present time realities. We, NT fans would be happy if our respected and revered MGR's movies are once again flashing in theater screens in modern formats, whether they will be able to outdo NT's present records of Karnan and the movies to follow, is a separate issue. Somehow, as time passed on and the legends are also no more, we do not have any hatred on MT fans or his movies. Rather now we have started loving him too for his valuable contributions to Tamil Cinema. Now let us initiate our efforts to plant the glory of MGR in the young minds in the days to come rather than attempting to tom tom the past things. Please do not mistake me.

joe
19th July 2012, 07:17 PM
Deleted by self

Richardsof
19th July 2012, 08:39 PM
Dear joe sir

thanks for your compliments and kind words.hope makkal thilagam mgr charisma and his memories will continue in this thread.

joe
19th July 2012, 08:47 PM
Deleted by self

Thirumaran
19th July 2012, 09:42 PM
எனக்குள் M.G.R.! - ஒரு X - Ray தொடர் - வாலி
8. முதல் சந்திப்பு!

அவரே தயாரிப்பாளர்; அவரே இயக்குநர்; அவரே ஒளிப்பதிவாளர்!
அவர்தான் –
திரு. ஆர்.ஆர்.சந்திரன். சிவாஜியை வைத்து, ‘நானே ராஜா’; ‘மகாகவி காளிதாஸ்’ முதலிய படங்களும்;
பி.பானுமதியை வைத்து ‘ரம்பையின் காதல்’; மற்றும் சில படங்களும் தயாரித்தவர்.
கோபியின் மிக மிக நெருங்கிய நண்பர். எனக்குத் தெரிந்து, எம்.ஜி.ஆருக்கு நேரே புகைபிடிப்பவர் திரு. சந்திரன் ஒருவர்தான்!
திரு. கிருஷ்ணன் பஞ்சு – இரட்டையரில் திரு. பஞ்சு மட்டும் எம்.ஜி.ஆரிடம் இருந்து சற்று தள்ளி நின்று புகைப்பார்!

வாஹினியின் மூன்றாம் தளத்தில் அன்று நடந்து கொண்டிருந்த படப்பிடிப்பு -
ஆர்.ஆர்.சந்திரனின் சொந்தப் படத்திற்கானது.
படத்தின் பெயர் –
‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி.’ கதை, அறிஞர் அண்ணா; திரைக்கதை உரையாடல்கள் திரு.இராம.அரங்கண்ணல்.
எம்.ஜி.ஆரும், ஜமுனாவும் சேர்ந்து நடித்த ஒரே படம் அதுதான் என்பது என் எண்ணம்!

இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான திரு.சந்திரன் –
ஒரு Trolley Shot – ஐ வைத்து விட்டு, சாக்பீஸால் மார்க் பண்ண வேண்டிய இடங்களை உதவியாளர்களுக்குச் சுட்டிக் கொண்டிருந்தார்.
Floor – ன் ஒரு மூலையில் – ஒரு ராட்சத Pedestal Fan சுழன்று கொண்டிருக்க –
காற்று வாங்கியபடியே – அவரவர்க்கான நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு, எம்.ஜி.ஆரும்; ஜமுனாவும், தமது காட்சிக்கான உரையாடல்களை, திரு.அரங்கண்ணல் படித்துக்காட்ட, கவனித்துக் கேட்ட வண்ணம் இருந்தனர்.

கோபி, என்னை அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்.
‘வாங்க கோபி!’ என்று எம்.ஜி.ஆர். வாஞ்சையோடு அழைத்துக் கோபியைத் தன் அருகில் அமர்த்திக் கொண்டார்.
ஒரு ஓரமாக நின்றபடி – நான், எம்.ஜி.ஆரையே விழியால் விழுங்கிக் கொண்டிருந்தேன்; அதற்குக் காரணம், அவ்வளவு அருகில் அன்றுதான் நான் முதன் முதலாக திரு.எம்.ஜி.ஆரைப் பார்க்கிறேன்.
எனக்குத் தெரிந்து –
திரு. எம்.கே. தியாகராஜ பாகவதர்தான், எச்சில் விழுங்குவது தொண்டையில் தெரியுமளவு –
செக்கச் செவேலென்றிருப்பார்; ஜரிகை வேட்டி கட்டி ஜவ்வாது பூசி – ஒரு ரோஜாத் தோட்டம் உலா வருவது போலிருக்கும்!
அதற்குப் பிறகு, அத்தகு மேனிச் சிவப்பை நான் எம்.ஜி.ஆரிடம்தான் பார்த்தேன்; பக்கத்தில் நின்று பார்த்த மாத்திரத்தில் வேர்த்தேன்!

எப்பொழுதும் நான் ஒரு நாற்பது பக்க நோட்டு கையோடு வைத்திருப்பேன். அதில்தான், படக் கம்பெனிகளுக்குக் காட்ட சில மாதிரிப் பாடல்களையும் – கவிதைகளையும் எழுதி வைத்திருப்பேன்.
ஸ்ரீரங்கத்திலிருந்து நான் சென்னைக்கு வரும்போது – என்னுடன் எடுத்து வந்த மூலதனம் அதுதான்!
அதில் உள்ள ஓரிரு பாடல்களைப் படித்துத்தான், கோபி அவர்கள் –
‘பாட்டெல்லாம் நல்லாருக்கு வாலி! You Have Got a Bright Future!'என்று என்னை உற்சாகப்படுத்தி –
தனது Scooter – ல் ஏற்றிக் கொண்டு என்னைக் கம்பெனி கம்பெனியாய்க் கூட்டிப் போனார்!
அந்த நோட்டில் –
நான் எம்.ஜி.ஆரைப் பற்றி ஒரு வசன கவிதை எழுதி வைத்திருந்தேன் – எப்பொழுதாவது எம்.ஜி.ஆரை சந்திக்க நேர்ந்தால் – அந்தக் கவிதையை அவர் முன் படிக்க வேண்டுமென்று! இறைவன் திருவுள்ளம் – இப்போது அதற்கான வாய்ப்பு வந்தது.

கோபி, என்னை அருகே வரச் சொல்லி, எம்.ஜி.ஆரிடம் அறிமுகப்படுத்தினார்.
‘அண்ணே! இவர், வாலீன்னு பேரு; திருச்சி A.I.R.ல – வேலெ பாக்கறாரு. பாட்டெழுத வாய்ப்புத் தேடி சென்னைக்கு வந்திருக்காரு... நான்தான் வரச் சொன்னேன். உங்களைப் பத்தி கூட ஒரு கவிதை எழுதி வெச்சிருக்காரு!’ என்று கோபி சொன்னதும் நான் வணக்கம் போட்டு விட்டு, கை கட்டிக் கொண்டு பவ்வியமாக நின்றேன்.
‘என்னைப் பத்திக் கவிதையா? படிங்க கேட்போம்!’ என்று எம்.ஜி.ஆர். எனக்காக ஒரு நாற்காலி கொண்டு வரச் சொல்லி, அருகே அமரச் சொன்னார்.
நான் சற்றுத் தயங்கினேன்.
‘என்ன தயக்கம்? தமிழ்க் கவிஞர்களெல்லாம் மரியாதைக்குரியவங்க... உக்காருங்க...
என்னெப் பத்தின பாட்டெப் படீங்க; கேப்போம்!’ நீயும் கேளும்மா!’ என்றார் ஜமுனாவிடம்.
நான் படித்த கவிதை இதுதான்.
“மக்கள் திலகமே! – ஏழை
மக்கள் உலகமே!
அதிகாலை
ஆதவனில்;
அலர்கின்ற
அரவிந்தத்தில்;
இருக்கின்ற சிவப்பையெல்லாம்
இப்படி –
நீயொருவனே
நீள நெடுக – உனது
ஆக்கை முழுதும்
அப்பிக் கொண்டால்.....
‘எங்கள் கதி
என்னாவது? என்று –
முதிர்கன்னிகள் முனகாரா
மூக்கைச் சிந்தியவாறு நின்று?
வாரி வழங்கும்
வள்ளலே! உன்
சிவப்பு நிறத்தில்
செம்பாதியை வழித்து எடு; அதை –
கறுப்பு நிறத்தால் கல்யாணமாகாது
கவலும் கன்னியர்க்குக் கொடு!”
– நான், கவிதையைப் படித்து முடித்ததும், எம்.ஜி.ஆர். –
‘வாழ்க! வாழ்க!’ என்று என் கைகளைப் பற்றிக் குலுக்கினார்.
கவிதையின் உள் அர்த்தத்தை, அதிகம் தமிழ் தெரியாத ஜமுனாவிற்கு விளக்கிக் கூறினார்.
அந்த அம்மையார் –
'Fantastic' என்று என்னை ஆங்கிலத்தில் பாராட்டினார். அரங்கண்ணலும், வெகுவாக என்னை சிலாகித்து, என் விலாசத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டார்.
அந்த நேரத்தில் –
அந்தப் படத்தின் இசையமைப்பாளர் திரு.டி.ஆர்.பாப்பா அங்கு வந்தார்.
அவர் எம்.ஜி.ஆருக்கு வணக்கம் போடவும்; ‘வாங்க! வாங்க’ என்று பதில் வணக்கம் போட்டவாறே –
எம்.ஜி.ஆர்.. ஜமுனாவோடு, ஆர்.ஆர். சந்திரனின் Associate அழைத்ததன் பேரில் – Shot– க்குப் போனார்.
கோபி, என்னைத் திரு. பாப்பா அவர்களிடம் அறிமுகப்படுத்தினார்.
நான் – திருச்சி வானொலியில் பணியாற்றுகிறேன் என்று தெரிந்தவுடன், பாப்பா அவர்கள் என்னிடம் அதிகம் பிரியம் காட்டிப் பேசலானார். அதற்குக் காரணம், அவர் சென்னை வானொலியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அது மட்டுமல்ல; அவரது மாமனார் ஊர் திருச்சி. எங்களது இருவர் நுரையீரல்களிலும் காவிரிக் கரைக் காற்று நிரம்பியிருந்ததால், முதல் சந்திப்பிலேயே எங்களுக்குள் ஓர் ஆத்மார்த்தமான அன்பு முகிழ்த்ததெனலாம்!
படத்துறையைச் சேர்ந்த ஒரு பிரபல இசையமைப்பாளரைச் சந்தித்து விட்டோம் என்கின்ற பெருமிதம், என் நாடி நரம்புகளில் பரவி –
நானும் ஒருநாள் படத்திற்குப் பாட்டெழுத என் பேனா மூடியைத் திறப்பேன் எனும் நம்பிக்கையை என் நெஞ்சம் அன்று வரவு வைத்துக் கொண்டது!
கோபி சொன்னதன் பேரில் – என் பாட்டு நோட்டைப் பாப்பா அண்ணனிடம் காட்டினேன். அவர் ஆர்வமுடன் – நிஜமான அக்கறையுடன் ஓரிரு பாடல்களைப் படித்துப் பார்த்து விட்டு –
திடீரென்ற விழிகளில் வியப்பு பொங்க –
‘இது நீங்க எழுதின பாட்டா? ப்ரமாதம்; ப்ரமாதம்! இதெ நான், வானொலி மெல்லிசை நிகழ்ச்சீல, T.M.S. பாடிக் கேட்டிருக்கேன்! இது, படத்துல வந்திருந்தா நீங்க இவ்வளவு நாள் பாப்புலர் ஆகியிருப்பீங்க!’ என்று ஏகத்துக்கு சிலாகித்தார்.
அந்தப் பாட்டு இதுதான்
‘நிலவுக்கு முன்னே
நீ வரவேண்டும்;
நீ வந்த பின்னே
நிலவெதற்கு வேண்டும்?
மலருக்கு முன்னே – நின்
முகம் பார்க்க வேண்டும்; நின்
முகம் பார்தத்த பின்னே –
மலரெதற்கு வேண்டும்?


இந்த நேரத்தில் –
திடீரென்று பாப்பா அண்ணன் வந்ததற்கான காரணத்தை கோபி வினவினார்.
‘என்னண்ணே! Radio Station-» Permission போட்டுட்டு வந்திருக்கீங்களா? ஏதாவது Song Composing- ஆ?’
– இப்படி கோபி கேட்டதும், ‘அதெல்லாம் ஒண்ணுமில்லே! இந்தப் படத்தெ எடுத்து எடிட் பண்ண வரைக்கும் – பாக்கிறத்துக்காக அண்ணா வர்றாங்கன்னு Phone வந்துச்சு;
அதான், உடனே புறப்பட்டு வந்தேன்!’ என்றார் பாப்பா அவர்கள்.


‘ஆஹா! அண்ணாவையும் பார்க்கின்ற ஓர் அருமையான வாய்ப்பு நமக்கு வாய்த்திருக்கிறதே! இனிமேல் – நல்ல காலம்தான்!’
– என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
அண்ணாவினுடைய தமிழில் ஆர்தான் தோயாதார்?
பிள்ளைப் பிராயத்திலிருந்தே – அண்ணாவின் பிரசங்கங்களைப் பிரியப்பட்டுக் கேட்டவன் நான்.
வினைச் சொற்களை முன்னால் போட்டு – வாக்கியங்களைத் தொடுக்கும் வித்தகம் ஆங்கிலத்தில் மட்டும்தான் இருந்தது; அத்தகு வித்தியாசமான நடையைத் தன் நாவாலும், பேனாவாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் அறிமுகப்படுத்தி வைத்த அறிஞர் பெருந்தகை அண்ணாதான்!
உரையாடல்களில் புதிய உத்திகளைக் கையாண்டதாலேயே –
கவிஞர் பெருமான் திரு. திருலோக சீதாராம்; துறையூர் அ.வெ.ர.கிருஷ்ணசாமி ரெட்டியார்; அகிலன்; சுகி சுப்பிரமணியம் இவர்களோடு, அடியேனும் –
‘வேலைக்காரி’ படத்தையும்; ‘சொர்க்க வாசல்’ படத்தையும் –
திருச்சி ஸ்டார் டாக்கீஸில், அற்றை நாளில், முன்னதாகவே டிக்கெட்டுகள் பதிவு செய்து விட்டுப் போய்ப் பார்த்ததுண்டு!
அஃதே போல் –
நாங்கள், திருச்சி தேவர் ஹாலில் அண்ணாவின் நாடகங்களையும் முன் வரிசையில் உட்கார்ந்து விடிய விடியப் பார்த்து விழி சிவந்த நாள்கள் உண்டு!

அண்ணா, ஒரு சில நண்பர்களோடு காரில் வந்து இறங்கினார்.
எம்.ஜி.ஆர். வணக்கம் செலுத்திவிட்டு, அண்ணாவின் கையைப் பற்றி –
Projection நடக்கும் தியேட்டருக்கு அழைத்துப் போக –
அரங்கண்ணல்; ஆர்.ஆர்.சந்திரன்; டி.ஆர்.பாப்பா முதலியோர் உடன் போக –
கோபியும், உதவி இயக்குநர்களும் பின் தொடர்ந்தனர்.
கோபி, என்னையும் சைகை காட்டி உடன் வரச் சொன்னார்!

‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ – படம், எடுத்து எடிட் செய்யப் பெற்ற எட்டு ரீல்கள் திரையில் ஓட ஆரம்பித்தது.
ஓர் ஓரமாய் நான் உட்கார்ந்து படம் பார்த்தபோது –
அண்ணா; எம்.ஜி.ஆர்.; டி.ஆர். பாப்பா –
இந்த மூவரோடும் இணைந்து பின்னொரு நாளில் நான் பணியாற்றுவேன் என்பதைக் –
காலம் என்னிடம் சொல்லாமல் கரந்து வைத்திருந்தது!

(தொடரும்)

Richardsof
20th July 2012, 07:58 AM
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது ஆணவச் சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ
ஆனந்தச் சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது,
அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார்
தெரியும் அப்போது


வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி
பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி
மனிதன் என்ற போர்வையில்,
மிருகம் வாழும் நாட்டிலே
நீதிஎன்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே! ....



நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா?
தர்மத் தாயின் பிள்ளைகள்
தாயின் கண்ணை மறைப்பதா?
உண்மைதன்னை ஊமையாக்கித்
தலைகுனிய வைப்பதா?



தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ..
நான் ஒரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன்
போகப் போகக் காட்டுகிறேன்

Richardsof
20th July 2012, 03:15 PM
SUPER-STAR " MGR"


There was an actor called MGR
By seeing his films happy we are
He was poor people’s superstar
Against pessimism he waged a war

He acted right from his childhood
During his youth he struggled for bread
He regarded as sacred holy motherhood
His songs gave morals to human head

By poor people he was absolutely admired
To help the entire World he really desired
By his films, minds of all he finely inspired
He loved all until he permanently retired

Using songs noble ideals he wisely taught
Questioning cruelties he very bravely fought
Cinema medium helped him really a lot
To poor people huge funds he did kindly allot

The World was benefited by his massive donation
He loved the beauties of each and every Nation
Wherever he went he faced a standing ovation
He wonderfully worked as a one-man corporation

On seeing him poor people developed positive delirium
They bestowed upon him an unbelievable encomium
His reputation was always at an unimaginable premium
He advised against tea, coffee, drinks and things like opium

As an actor he also participated in politics
The entire World adored his kind tactics
He was regarded as an expert in fixing lyrics
Love, mercy and bravery in songs he did mix

Not even a single day, his name, newspapers missed
To benefit the entire Universe he hopefully promised
The heart of the whole humanity he affectionately kissed
He was by God blessed and the World he truly blessed

Against corruption, hatred and untouchability
He waged a fight with his fullest capability
He brought to the minds of all unique stability
He preached against pessimism as a liability

He was beautiful, charming and intelligently handsome
Once being shot at, speech became to him cumbersome
His fame and popularity made mood of some irksome
He was everyone’s chum especially for those in the slum.

Though we can write about him a huge book
Simply we can say he had a divine outlook
His greatness filmdom can never overlook
The obvious truth is he had an Angelic look

Undoubtedly this person is my true hero
As he lived for those whose wealth was zero
His attitude was ever broad never at all narrow
He admiringly grew making the World also grow

Though he is now sadly no more
His greatness even now all adore
His name and fame still soar
During living he was never a bore.

M V VENKATARAMAN

Richardsof
21st July 2012, 09:01 AM
இன்று நடிகர் திலகத்தின் நினைவு நாள் .என்றென்றும் மறக்க முடியாத இரண்டு திலகங்களின் அன்பு உள்ளங்கள் பரிமாறும் நேச உணர்வுகள் என்றென்றும் நிலைத்திருக்க விரும்பும் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி .
அன்புடன்
esvee1601

Thomasstemy
21st July 2012, 09:21 AM
இன்று நடிகர் திலகத்தின் நினைவு நாள் .என்றென்றும் மறக்க முடியாத இரண்டு திலகங்களின் அன்பு உள்ளங்கள் பரிமாறும் நேச உணர்வுகள் என்றென்றும் நிலைத்திருக்க விரும்பும் அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் நன்றி .
அன்புடன்
esvee1601

நன்றி

Richardsof
21st July 2012, 03:09 PM
சிவாஜி பற்றி
சில வரிகள்
எதை எழுதுவது ;
எதை விடுவது ?
இமய மலையின் எந்த
மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும் ?
கடலிலே எந்தப் பகுதி
அழகான பகுதி ?
சிவாஜி ஒரு மலை ;
ஒரு கடல் ;
கண்களின்
கூர்மையைச் சொல்வேனா ?
அல்லது
கம்பீரத் தோற்றத்தைச் சொல்வேனா ?
ஒன்பது பாவத்தைத்
தொண்ணூறு வகையாகக்
காட்டும்
உன்னத நடிப்பைச்
சொல்வேனா ?
அவரைப்போல் இதுவரை
ஒருவர் பிறந்த தில்லை;
இனி பிறப்பார் என்பதற்கும்
உறுதி இல்லை !
இது உண்மை
உலகறிந்ததே !

–கவியரசு கண்ணதாசன்

eehaiupehazij
21st July 2012, 09:25 PM
Thanks a lot dear Esvee for your right inclusion of right description in terms of Kavignar at the right time of NT's memories. When we think of NT it goes without saying that we do think of MT in tandem, which is the unknown binding of an NT fan to MT

Richardsof
22nd July 2012, 11:52 AM
[என்ன பொருத்தம் ......

அரச கட்டளை ஆண்டவன் கட்டளை
உழைக்கும் கரங்கள் அன்பு கரங்கள்
என் தங்கை தங்கை

புதிய பூமி புதிய வானம்
ராணி சம்யுக்தா ராணி லலிதாங்கி
தெய்வ தாய் தாய்
ஒளிவிளக்கு வம்ச விளக்கு
உரிமை குரல் முதல் குரல்
நவ ரத்னம் நவராத்திரி
பாசம் ரத்த பாசம்
பணக்கார குடும்பம் நல்லதொரு குடும்பம்
என் அண்ணன் என் தம்பி
நீரும் நெருப்பும் தேனும் பாலும்
அன்னமிட்ட கை கொடுத்த தெய்வம்
பணம் படைத்தவன் பணம்
பாக்தாத் திருடன் திருடன்
ராஜா தேசிங்கு ராஜா ராணி
சபாஷ் மாப்பிளே சபாஷ் மீனா
தனி பிறவி தெய்வ பிறவி
மதுரை வீரன் சித்தூர் ராணி பத்மினி
எங்க வீட்டு பிள்ளை எங்கள் ஊர் ராஜா
பரிசு அன்பளிப்பு
ரகசிய போலீஸ் 115 அஞ்சல் பெட்டி 520
நீதிக்கு பின் பாசம் நீதி
எங்கள் தங்கம் எங்கள் தங்க ராஜா
ஆயிரத்தில் ஒருவன் வெற்றிக்கு ஒருவன்

mr_karthik
22nd July 2012, 06:57 PM
காவல்காரன் - காவல் தெய்வம்
குடியிருந்த கோயில் - குடும்பம் ஒரு கோயில்
அண்ணா என் தெய்வம் - அண்ணன் ஒரு கோயில்
மலைக்கள்ளன் - கள்வனின் காதலி
பட்டிக்காட்டு பொன்னையா - பட்டிக்காடா பட்டணமா
காஞ்சித்தலைவன் (அண்ணா) - சிவகாமியின் செல்வன் (காமராஜ்)

Richardsof
23rd July 2012, 08:18 AM
நன்றி கார்த்திக் சார்

அந்தமான் கைதி - அந்தமான் காதலி
ராஜ ராஜன் - ராஜராஜ சோழன்
ம . மீ .சுந்தரபாண்டியன் வீர பாண்டிய கட்ட பொம்மன்
அன்பே வா - வா கண்ணா வா
அனந்த ஜோதி - இல்லற ஜோதி
நல்ல நேரம் - நல்ல வீடு
நாம் நாம் இருவர்

Thirumaran
23rd July 2012, 09:00 AM
எனக்குள் M.G.R.! - ஒரு X - Ray தொடர் - வாலி
9. நாங்கள் நால்வர்


கீர்த்தன குலசேகர –
சங்கீத கலாநிதி –
திரு. எம்பார். விஜயராகவாச்சாரியார் எங்க ஊர்க்காரர். எனது பிள்ளைப் பிராயத்தில், அவர் வீட்டுத் திண்ணையில் புரண்டவன் நான்.

தம்பிடி அளவு தமிழ்ஞானம் என்னிடம் இருக்குமாயின், அது எம்பார் எனக்கிட்ட பிச்சை என்பேன். அந்த தம்பிடி ஞானத்தை வைத்துக் கொண்டுதான், தம் பிடித்துக் கொண்டிருக்கிறேன் இன்றைய பரியந்தம்!
‘எம்பார் அளவு, எம்பார் ஆரும்!’ என்று – அவரிடமே நான் அகடவிகடமாகப் பேசியதுண்டு, அற்றை நாளில். அதற்குப் பெயர்தான், தீட்டிய மரத்திலேயே கூர்பார்ப்பது என்பது!

அவருக்கிருந்தாற் போல் – பௌராணிகர்களில், ஒரு Profound Knowledge – பிறிதொருவரிடம் நான் பார்த்ததில்லை.
நாலாயிரம்; தேவாரம் என, நூலாயிரம் நுனி நாக்கில் அடுக்கி வைத்திருப்பார். காளிதாசன்; வால்மீகி போல் – கம்பனும் வில்லிபுத்தூராரும் அவருக்கு அத்துப்படி. எழுபத்திரண்டு மேளகர்த்தாக்களும் அவர் எப்பொழுது கூப்பிட்டாலும் எதிர் வந்து நிற்கும். பல கீர்த்தனங்கள் சிதம்பரம் திரு. பாடக சுந்தரம் பிள்ளையிடம் அவருக்குப் பாடாந்தரம். மஹாவித்வானான திரு.சுந்தரம் பிள்ளைதான் – கலைஞர் அவர்களின் மாமனார். சிதம்பரம் ஜயராமன் அவர்களின் தந்தை. எம்பார் அவர்களுக்கும் பூர்வீகம் சிதம்பரம்தான்!

எதற்கு எம்பாரைப் பற்றி, இவ்வளவு பீடிகை என்றால் –
எனக்குத் தமிழ் இலக்கணத்தையும்; கர்நாடக இசையில் காகலி நிஷாதம் என்றால் என்ன – கைசிக நிஷாதம் என்றால் என்ன என்பதையும்; ஆதி, ரூபகம், மிஸ்ரம், கண்ட ஜாதி – இவற்றிற்கெல்லாம் எத்துணை அட்சரங்கள் என்பதையும்; பாட்டை உசியில் எடுப்பது, சமத்தில் எடுப்பது என்பதெல்லாம் பற்றியும் –
இலகுவாக எனக்கு போதித்தவர் எம்பார்தான். கயிற்றுக் கட்டிலில் அவர் படுத்தவாறே கற்பிக்க – காலடியில் அமர்ந்து கற்றவன் நான்.
இசை பற்றிய இந்தக் கற்புதான் – இன்றைய இசையமைப்பாளர்களிடையே, எனக்கொரு கவுரவத்தை ஏற்படுத்தித் தந்திருக்கிறது!

எம்பாரால் நான் எய்திய மேன்மைகள் இம்மட்டோ?
திருவரங்கத்தில் – என் தகப்பனார் காலமான பிறகு, பம்பாயில் உள்ள என் தமையனாரிடம் என் தாயைச் சேர்த்து விட்டு –
நான் பிழைப்பு தேடிச் சென்னைக்குப் புறப்படுகையில் –
‘இதைப்படி தினமும்; ஒருநாள் நல்ல காலம் வரும்!’ என்று என்னை ஆசீர்வதித்து என்கையில் ஒரு சின்னஞ்சிறிய புத்தகத்தைக் கொடுத்தார் எம்பார்.
அதுதான் –
அபிராமிபட்டர் அருளிய ‘அபிராமி அந்தாதி!’
எம்பார் செய்த உதவியை விடவும், எம்பாரின் மகன் திரு. வேதம் எனக்குச் செய்த உதவிதான் எஞ்ஞான்றும் நான் நன்றியோடு எண்ணத் தகுந்தது.

திருவல்லிக்கேணியில் இருந்த நான், தியாகராயநகருக்கு இடம் பெயர்ந்தது இந்த வேதத்தால்தான்.
உஸ்மான் ரோடில் –
சிவா விஷ்ணு ஆலயத்திற்கு எதிர்ப்புறம் இருந்த –
Club House – என்னும் இடத்தில்தான், தானிருந்த அறையில் தன்னோடு என்னையும் அவன் தங்க வைத்துக் கொண்டான்.
சில காலங்களுக்குப் பிறகு –
திரு. வேதம் ஸ்ரீரங்கம் சென்று விட – நான் Club House – ல் நிரந்தரமாகத் தங்கிவிட்டேன்!

என் பக்கத்து அறையில் –
மூவர் இருந்தனர். அனேகமாகப் பெரும்பொழுது, அந்த மூவரோடு நால்வராய் நானும் அங்குதான் இருப்பேன்.
திரு.குண்டுராவ்;
திரு.வெங்கட்ராமன்;
திரு. சுந்தரராஜன்;
– இந்த மூவருமே, என் போல் விழிகளில் சினிமாக் கனவுகளை வாரி அப்பிக் கொண்டு, நாள்களை நம்பிக்கையோடு நகர்த்திக் கொண்டிருந்தவர்கள்.
மேற்கண்ட –
மூவருக்குமே இசையில் ஈடுபாடு உண்டு; நான் பாட்டு எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவன் என்பதை அவர்கள் அறிவர்.
‘ஏண்டா, வாலி! மரபெஞ்சிலே – மரவட்டை மாதிரி சுருண்டு படுத்துண்டு, சதா நேரத்தைக் கொன்னுண்டிருக்கே? எதைப் பத்தியாவது, ஏதாவது பாட்டுகள் எழுதேன்டா! ஊதுற சங்கை ஊதேன்; விடியறபோது விடியட்டும்!.... இந்தா – பேப்பர், பேனா; உனக்காக ரெடியா வெச்சிருக்கேன்!’
– என்று குண்டுராவ், என்னைக்குண்டுக் கட்டாகத் தூக்கி உட்கார வைத்துப் பாட்டுகளை எழுத வைப்பான்.
சில சமயம் –
‘நீ சொல்லுடா! நான் எழுதறேன்’ என்று ஒரு சார்மினார் சிகரெட்டைப் பற்ற வைத்துப் புகைப்பான்!
நான் சொல்லச் சொல்ல, வரிகளை அவன் வாங்கி எழுதுகையில் –
‘அடேய்! ஸ்ரீரங்கம் ரங்கராஜா! இப்படி ஏராளமா வெச்சுண்டு, ஏண்டா வெளிய சொல்லாம, வஞ்சனெ பண்ணிண்டிருக்கே?’ என்று என் பாட்டுகளைச் சிலாகித்துச் சிலிர்ப்பூட்டுவான்.
‘இந்த அழுக்கு ஜிப்பா தாண்டா, உனக்கு அதிர்ஷ்டம்; பாட்டு எழுதற போதெல்லாம் இதையே போட்டுக்கோ!’ என்று, என்னிடமிருந்த அந்த ஒரு ஜிப்பாவையும், அவன் துவைக்க விடமாட்டான்.
அந்த அற்புதமான – என் ஆருயிர் நண்பன் –
குண்டுராவ் மட்டும்தான், தான் இறக்கும் வரை எங்கு கண்டாலும் என்னை ‘ஸ்ரீரங்கம் ரங்கராஜா!’ என்று வாய் நிறைய வாஞ்சை வழிய அழைப்பான்.
திரு.குண்டுராவ்தான் –
தமிழ் சினிமாவை ஏறத்தாழ இருபது வருடங்கள், தன் கைக்குள் வைத்திருந்த –
திரு.நாகேஷ்!

என்னிடம் எழுதி வாங்கிய பாட்டுகளை சுந்தரராஜனிடம் கொடுத்து வர்ணமெட்டமைக்கச் சொல்லுவான் நாகேஷ்.
திரு. சுந்தரராஜன் தாராபுரத்தைச் சேர்ந்தவர். நாகேஷின் ஊரும் தாராபுரம்தான்.
பால்ய சினேகிதனான சுந்தரராஜனைத் தன்னுடைய அறையிலேயே தங்க வைத்துக் கொண்டு –
எப்படியாவது சினிமாவில் பாடுகின்ற வாய்ப்பை சுந்தரராஜனுக்கு வாங்கித் தந்து விட வேண்டு மென்று நாகேஷ் முயன்று கொண்டிருந்த காலம் அது!

சுந்தரராஜனும் சாதாரணமான ஆள் அல்ல; அண்ணாமலை சர்வகலா சாலையில் இசை பயின்று ‘சங்கீத பூஷணம்’ விருது வாங்கியவர்.
அது தவிர –
இசையரசு எம்.எம்.தண்டபாணி தேசிகரின் பிரதான சீடர்.
எனக்கு சுந்தரராஜனின் பாட்டு பிடிக்கும். சன்னமான சாரீரம்தான்; ஆனால் ரவை ஜாதி சாரீரம். பொடி சங்கதிகள் பொலபொலவென உதிரும்.
என் பாட்டுகளுக்கெல்லாம் சுந்தரராஜன் அற்புதமாக மெட்டமைத்துப் பாடலானான்.
சிறிது காலத்திற்குள்ளாகவே சுந்தரராஜனை ‘அன்’ விகுதி போட்டு அழைக்குமளவு நெருக்கமாகி விட்டேன். அவனும் என்னை ஏக வசனத்தில்தான் அழைப்பான்!

‘இறைவனில்லா ஆலயத்தில்
ஏற்றிவைத்த தீபம்;
இரவு பகல் எரிவதனால்
எவருக்கென்ன லாபம்?’
‘அக்கா மகளுக்கு சடை நீளம்;
அதுதான் அவளுக்கு அடையாளம்;
முக்கா மொழத்துல பூமுடிப்பா:
மூணாம் பிறெபோல புருவமப்பா!’
‘கொடுத்ததெல்லாம் கொடுத்தான்;
அவன்
யாருக்காகக் கொடுத்தான்?
ஒருத்தருக்கா கொடுத்தான்? –
இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்!’
‘கூவியழைத்தால் குரல் கொடுப்பான்! பரங்குன்றமேறி நின்று குமரா வென்று’
– இப்படி என்னுடைய எத்துணையோ பாட்டுகள் சுந்தரராஜனின் வர்ணமெட்டுகளால், – Club House வாசிகளிடையே மிகவும் பிரபலமாகிப் போயின!

இந்த –
தாராபுரம் சுந்தரராஜன்தான் பின்னாளில், படங்களில் பிரபலமான பல பாடல்களைப் பாடியதோடல்லாமல் –
இரண்டு மூன்று படங்களுக்கு இசையமைத்துப் புகழ் பெற்றான்.
இயக்குநர் திலகம் திரு.கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கி – திரு. கே.வி.மகாதேவன் இசையில் நான் எழுதிய பாட்டை –
‘செல்வம்’ படத்தில் பாடி, சிவாஜி நடித்துப் பிரபலமானதே –
‘எனக்காகவா! –
உனக்காகவா!
என்னைக் காண வா! என்னில்
உன்னைக் காண வா!’
– இந்தப் பாட்டு, தாராபுரம் சுந்தரராஜன் திருமதி. ஜமுனாராணியுடன் பாடியது!
திரு. சித்ரமகால் கிருஷ்ணமூர்த்தி படம் ஒன்றும் – திரு.ராமண்ணா படம் ஒன்றும்,
சுந்தரராஜன் இசையமைப்பில் வெளிவந்தன!

இரவெல்லாம் –
நாகேஷ் அறையில் பாட்டுக் கச்சேரிதான்.
அப்பொழுது –
நான்; நாகேஷ்; தாராபுரம் சுந்தரராஜன் மூவரும் –
பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியிருந்தோம்.
அந்த அறையில் –
உடன் இருந்த திரு. வெங்கட்ராமன்தான், அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்ததால் – மாத வருமானமுள்ள ஒரே நபர்!
திரு.வெங்கட்ராமனை, ‘வெங்கி’ என்றும் அழைப்பதுண்டு.
அருமையாக சமையல் செய்து ஒரு தாய் போல் – அற்றை நாளில் எங்களுக்குச் சோறூட்டிய திரு. வெங்கட்ராமனை நாங்களெல்லாம் ‘ராஜா’ என்றுதான் அழைப்போம்.
இந்த ‘ராஜா’தான் –
‘ஸ்ரீகாந்த்’ என்னும் பேரில் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ மூலம் அறிமுகமாகி –
‘தங்கப் பதக்கம்’; ‘ராஜபார்ட் ரங்கதுரை’; – என்று சிவாஜியோடும், தனியாகவும் திரைப்படங்களில் தன் முத்திரையைப் பதித்தவன்; அவனது நூற்றுக்கணக்கான படங்களில், ‘சில நேரங்களில், சில மனிதர்கள்’ – ராஜாவின் உச்சமான நடிப்பைக் கொண்ட படம்!

ஒரே அறையில் –
ஓரிரு வருடங்கள் நாங்களெல்லாம் போராடிக் கொண்டிருந்த காலத்தில் –
நாகேஷ் அறைக்கு வந்த ஒரு திரையுலக எழுத்தாளர் –
நான் இல்லாதபோது, என் பாட்டு ஒன்றை தாராபுரம் சுந்தரராஜன் பாடக் கேட்டு விட்டுப் போனார்!


அந்தப் பாட்டுதான் –
அறிஞர் அண்ணாவிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தது!

(தொடரும்)

Richardsof
23rd July 2012, 01:19 PM
முதல் பத்தியில் ஸ்ரீதர் சொல்லியிருக்கும் “காதலிக்க நேரமில்லை“(1964). புத்தகத்திலிருந்து மற்றொரு சிறு பகுதி…

பரணி ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு காட்சி முடிந்து, அடுத்த காட்சிக்காக லைட் அட்ஜெஸ்ட்மண்ட் நடந்து கொண்டிருந்தது. நானும் சிவாஜியும் எதிரெதிரே உட்கார்ந்து, பேசிக் கொண்டிருந்தோம். ஸ்டுடியோவில் நுழைவாயிலை நோக்கியபடி உட்கார்ந்திருந்த எனக்கு திடீரென்று ஒரு அதிர்ச்சி.கேட்டை திறந்து கொண்டு திமுதிமுவென ஐம்பது, அறுபது இளைஞர்கள் உள்ளே நுழைந்து எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.



அடுத்தாற்போல் அந்த கூட்டத்துடன் வந்துகொண்டிருந்த மனிதரைப் பார்த்தவுடன் மேலும் அதிர்ச்சி.”அண்ணே திரும்பிப் பாருங்க. எம்.ஜி.ஆர். ஐம்பது அறுபது பேரோட வந்துகிட்டு இருக்காரு” என்றேன். திரும்பிப் பார்த்த சிவாஜிக்கும் எம்.ஜி.ஆர். ஏன் இப்போது, இத்தனை பேருடன் இங்கே வருகிறார் என்று புரியவில்லை. இதற்குள் எம்.ஜி.ஆர் எங்களை நெருங்கிவிட்டார். “அண்ணே வாங்க வாங்க… எங்க இவ்வளவு தூரம்?” என்றார் சிவாஜி. தம்முடன் வந்த இளைஞர்களைக் காட்டி “இவங்களெல்லாம் உங்க ரசிகர்களாம். காலையில் ஸ்டூடியோவைத் தாண்டிப் போகிறபோது, இவங்களெல்லாம் ஸ்டூடியோவுக்கு வெளியில் நிற்கறதைப் பார்த்தேன். இப்போ திரும்பிப் போகிறபோதும் பார்த்தேன்.வெளியிலேயே நின்னுகிட்டு இருந்தாங்க. அதான் உங்களை சந்திக்கட்டுமேன்னு உள்ளே கூட்டிக்கிட்டு வந்தேன். நான் வரட்டுமா?” என்று கூறி விடைபெற்றார். அந்த ரசிகர்கள் புறப்பட்டு போனபின் சிவாஜி தமாஷாய் , “என்னோட இந்த ரசிகர்களில் பாதிபேர் எம்.ஜி.ஆர் ரசிகரா இன்னியிலே யிருந்து மாறிடுவாங்க” என்றார்.

சிவாஜி ரசிகர்கள் என்று தெரிந்தும், சிவாஜியை அவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ததை எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை என்பதா? ராஜதந்திரம் என்பதா?

Raajjaa
23rd July 2012, 02:50 PM
//உலகம் சுற்றும் வாலிபன் படத்தை பற்றிய தகவல் தந்த கார்த்திக் சாருக்கு ந்ன்றி.//

நன்றி ராஜா சார்,

அது சரி, மிக அருமையாக நீங்கள் வழங்கிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் வெள்ளிவிழா, 100-வது நாள், 50-வது நாள் இவற்றின் செய்தித்தாள் விளம்பர வரிசையை ஏன் திடீரென்று நிறுத்தி விட்டீர்கள்?.

அவை, 'தங்களின் ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதுவதற்கு இடையூறாக இருப்பதாக' இந்த திரியில் யாரும் சொல்லவில்லையே.

அப்புறம் என்ன?. தொடருங்கள்.

(இங்கேயும் அவர்கள் நீட்டி முழக்கும்போது நிறுத்திக்கொள்வோம்).

கொஞ்சம் இடைவேளை சார்.

Raajjaa
23rd July 2012, 02:53 PM
சீனப் போரின் போது எம்.ஜி.ஆர் அளித்த நன்கொடைக்கு நன்றி தெரிவித்து நேரு அனுப்பியக் கடிதம்.

http://i45.tinypic.com/2073nuu.jpg

Raajjaa
23rd July 2012, 02:56 PM
பாரிஷ்டர்,

ஒரு மாதம் ஆகி விட்டது.

உங்களின் பதிலுக்காக காத்து கொண்டு இருக்கிறேன்.

Richardsof
23rd July 2012, 03:05 PM
1973 நினைவுகள் ........தொடர்ச்சி ..........

நடிகர் திலகத்தின் பாரத விலாஸ் மார்ச் மாதம் சென்னை - சாந்தியில் வெளிவந்தது . தேசிய ஒருமைபாட்டை எடுத்து காட்டிய படம் .நூறு நாட்கள் ஓடியது படம்
அதே மாதம் இறுதியில் ஆனந்த் திரையரங்கில் ராஜா ராஜா சோழன் வெளியானது . . ராஜராஜ சோழன் எதிர் பார்த்த அளவு போகவில்லை .
மே மாதம் உலகம் சுற்றும் வாலிபன் சென்னை - தேவி பாரடைஸ் அரங்கில் வெளியானது .இப்படத்தின் மகத்தான சாதனை பற்றி இந்த நாடே அறியும்.
எங்கள் தங்க ராஜா .... சாந்தி அரங்கில் வெளியானது . நூறு நாட்கள் ஓடி வெற்றி பெற்றது .
மக்கள் திலகத்தின் பட்டிகாட்டு பொன்னையா ..... குளோப் அரங்கில் வெளியானது . படம் தோல்வி அடைந்தது .

Thomasstemy
23rd July 2012, 03:25 PM
பாரிஷ்டர்,

ஒரு மாதம் ஆகி விட்டது.

உங்களின் பதிலுக்காக காத்து கொண்டு இருக்கிறேன்.

Raajjaa,
I can reply and respond yet.
But, I came to know about your tricks from fellow hubbers ! Your provocation will yield no result for you !
Aduththa Aala paarunga Annae ! :-D

kalnayak
23rd July 2012, 03:41 PM
Raajjaa,
I can reply and respond yet.
But, I came to know about your tricks from fellow hubbers ! Your provocation will yield no result for you !
Aduththa Aala paarunga Annae ! :-D

என்ன பாரிஸ்டர் இப்பிடி பண்ணிட்டீங்க? நீங்களாவது அண்ணன் கேட்கிற ஆதாரத்தை கொடுத்து இந்த விவாதத்தை முடிப்பீங்க-ன்னு பார்த்தால்... முதல்ல gang leader-ஆன்னு கேட்டதுக்கு பயந்தது மாதிரியே, அண்ணனை பத்தி இப்பிடி சொன்னாங்க, அப்பிடி சொன்னங்க-ன்னு நழுவரீங்களே!!! இது முன்னாடியே தெரிஞ்சதுதான்.

அண்ணே இனி உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது. ஸ்டார்ட் மியூசிக்.

Thomasstemy
23rd July 2012, 03:51 PM
முதல் பத்தியில் ஸ்ரீதர் சொல்லியிருக்கும் “காதலிக்க நேரமில்லை“(1964). புத்தகத்திலிருந்து மற்றொரு சிறு பகுதி…

பரணி ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு காட்சி முடிந்து, அடுத்த காட்சிக்காக லைட் அட்ஜெஸ்ட்மண்ட் நடந்து கொண்டிருந்தது. நானும் சிவாஜியும் எதிரெதிரே உட்கார்ந்து, பேசிக் கொண்டிருந்தோம். ஸ்டுடியோவில் நுழைவாயிலை நோக்கியபடி உட்கார்ந்திருந்த எனக்கு திடீரென்று ஒரு அதிர்ச்சி.கேட்டை திறந்து கொண்டு திமுதிமுவென ஐம்பது, அறுபது இளைஞர்கள் உள்ளே நுழைந்து எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.



அடுத்தாற்போல் அந்த கூட்டத்துடன் வந்துகொண்டிருந்த மனிதரைப் பார்த்தவுடன் மேலும் அதிர்ச்சி.”அண்ணே திரும்பிப் பாருங்க. எம்.ஜி.ஆர். ஐம்பது அறுபது பேரோட வந்துகிட்டு இருக்காரு” என்றேன். திரும்பிப் பார்த்த சிவாஜிக்கும் எம்.ஜி.ஆர். ஏன் இப்போது, இத்தனை பேருடன் இங்கே வருகிறார் என்று புரியவில்லை. இதற்குள் எம்.ஜி.ஆர் எங்களை நெருங்கிவிட்டார். “அண்ணே வாங்க வாங்க… எங்க இவ்வளவு தூரம்?” என்றார் சிவாஜி. தம்முடன் வந்த இளைஞர்களைக் காட்டி “இவங்களெல்லாம் உங்க ரசிகர்களாம். காலையில் ஸ்டூடியோவைத் தாண்டிப் போகிறபோது, இவங்களெல்லாம் ஸ்டூடியோவுக்கு வெளியில் நிற்கறதைப் பார்த்தேன். இப்போ திரும்பிப் போகிறபோதும் பார்த்தேன்.வெளியிலேயே நின்னுகிட்டு இருந்தாங்க. அதான் உங்களை சந்திக்கட்டுமேன்னு உள்ளே கூட்டிக்கிட்டு வந்தேன். நான் வரட்டுமா?” என்று கூறி விடைபெற்றார். அந்த ரசிகர்கள் புறப்பட்டு போனபின் சிவாஜி தமாஷாய் , “என்னோட இந்த ரசிகர்களில் பாதிபேர் எம்.ஜி.ஆர் ரசிகரா இன்னியிலே யிருந்து மாறிடுவாங்க” என்றார்.

சிவாஜி ரசிகர்கள் என்று தெரிந்தும், சிவாஜியை அவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ததை எம்.ஜி.ஆரின் பெருந்தன்மை என்பதா? ராஜதந்திரம் என்பதா?

Esvee Sir,
Vandhavargal 1) Studio Ullae Vandhirukkalaam or atleast Security idam thangaludya Virupaththai Solli irukkalaam ! May be Security allow pannaamal irundhirukalaam. Mayloatamaaga Padipavargallukku idhu, as if Sivaji deliberately made them to stand outside the studio endroru Karuthu thoandra cheiyyum oru write up idhu, even though it is told by Sridhar. I would say, it is Rajathandhiram rather than Perunthanmai.
:smokesmile:

Thomasstemy
23rd July 2012, 04:04 PM
என்ன பாரிஸ்டர் இப்பிடி பண்ணிட்டீங்க? நீங்களாவது அண்ணன் கேட்கிற ஆதாரத்தை கொடுத்து இந்த விவாதத்தை முடிப்பீங்க-ன்னு பார்த்தால்... முதல்ல gang leader-ஆன்னு கேட்டதுக்கு பயந்தது மாதிரியே, அண்ணனை பத்தி இப்பிடி சொன்னாங்க, அப்பிடி சொன்னங்க-ன்னு நழுவரீங்களே!!! இது முன்னாடியே தெரிஞ்சதுதான்.

அண்ணே இனி உங்களை அடிச்சுக்க ஆளே கிடையாது. ஸ்டார்ட் மியூசிக்.

Nayak Sir,
:smokesmile: No Questions !

Regards
:smokesmile:

Raajjaa
23rd July 2012, 04:48 PM
http://i50.tinypic.com/118zl0p.jpg

Raajjaa
23rd July 2012, 04:49 PM
http://i49.tinypic.com/24479qh.jpg

Raajjaa
23rd July 2012, 04:50 PM
http://i46.tinypic.com/50h17k.jpg

Richardsof
23rd July 2012, 05:25 PM
நெஞ்சம் உண்டு ....
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து
பாரு ராஜா

அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து
ஓடு ராஜா
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா

Raajjaa
24th July 2012, 10:12 AM
பழைய பாடல்கள் விரும்பிகளுக்கு இப்பொழுது அடித்து இருக்கிறது ஜாக்பாட்.

முரசு டிவி- பட்டையை கிளப்புகிறார்கள்.

Thomasstemy
24th July 2012, 11:50 AM
நெஞ்சம் உண்டு ....
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து
பாரு ராஜா

அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து
ஓடு ராஜா
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா

Adimayin Udambil Raththam Edharkku
Dhinam Achchapatta Koazhaikku veeram edharkku
Kodumayai Kandu Kandu Bayam Edharkku
Nee Kondu vandhadhennada Meesai Murukku ..Haei...Nenjam Unndu Nermai Unndu...

Ka..Ka..durrrr.....

Annandhu Paarkinra Maaligai Katti
Adhan Aruginil Oalai Kudisai katti
Ponnana Ulagendru Peyarum ittal
Pnnana Ulagendru Peyarum ittal
Indha Bhoomi Sirikkum
Andha Saami Sirikkum....Haei...Nenjam Undu Nermai Undu Modhu raja Neram Varum Kaathirindhu Paaru Raaja..

Richardsof
24th July 2012, 01:08 PM
http://i47.tinypic.com/1zpibo0.jpg

Richardsof
24th July 2012, 01:12 PM
http://i47.tinypic.com/346avpc.jpg

Richardsof
24th July 2012, 01:20 PM
http://i45.tinypic.com/2yy61s2.jpg

Richardsof
24th July 2012, 02:09 PM
http://i48.tinypic.com/30uwfbq.jpg

Richardsof
24th July 2012, 02:13 PM
http://i46.tinypic.com/2sb08lz.jpg

Raajjaa
24th July 2012, 04:21 PM
நன்றி வினோத் சார்.

வசூல் சக்கரவர்த்தியின் வெற்றி பவனி இன்று முதல் மீண்டும் ஆரம்பம்.

Richardsof
25th July 2012, 08:19 AM
http://i50.tinypic.com/27zg9d2.jpg

Richardsof
25th July 2012, 08:30 AM
http://i49.tinypic.com/35ba5hk.jpg

Richardsof
25th July 2012, 08:38 AM
http://i45.tinypic.com/5fkytt.jpg

VETTAIKARAN 1964 - BANGALORE - AJANTHA THEATRE.

Richardsof
25th July 2012, 10:34 AM
http://i46.tinypic.com/311rwjs.jpg

Richardsof
25th July 2012, 10:37 AM
http://i48.tinypic.com/2i231ae.jpg

Richardsof
25th July 2012, 10:39 AM
http://i50.tinypic.com/mj8eas.jpg

Richardsof
25th July 2012, 10:44 AM
.http://i50.tinypic.com/vnmes3.jpg

Richardsof
25th July 2012, 11:19 AM
http://i48.tinypic.com/1z52qsn.jpg

vasudevan31355
25th July 2012, 11:55 AM
டியர் esvee சார்,

நடிகர் திலகம் நினைவு தினத்தை முன்னிட்டு அந்த மாபெரும் நடிப்புலக மேதைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கவியரசர் அவர்களின் அற்புத கவிதையை M.T.thread இல் பதிப்பித்து எங்கள் கண்களில் கண்ணீரைப் பெருகச் செய்து விட்டீர்கள். மக்கள் திலகத்தின் ரசிகர்கள் நடிகர் திலகத்தின்பால் பேரன்பு கொண்டவர்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாய் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல அருமையாய் நிரூபித்து விட்டீர்கள். அது மட்டுமல்ல...நடிகர் திலகத்தின் புதியபறவை, கை கொடுத்த தெய்வம் பேப்பர் ads-யும் கொடுத்து உள்ளீர்கள். அனைத்திற்கும் எனது சார்பிலும், அனைத்து நடிகர் திலகத்தின் ரசிகர்கள் சார்பிலும் தங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களுக்காக எனது அன்புப் பரிசாக ஒரு அருமையான பதிவை அளிக்கிறேன். தங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்றும் நம்புகிறேன்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/m1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/m2.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

Richardsof
25th July 2012, 12:44 PM
அன்பு நண்பர் திரு . வாசுதேவன் அவர்களுக்கு எனது நன்றி . மக்கள் திலகமும் நடிகர் திலகமும் கலை உலகின் இரண்டு தூண்கள் . உலகம் உள்ளவரை இரண்டு திலகங்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பது உண்மை .மக்கள் திலகத்தின் பெயரில் இந்த திரியை துவக்கி சாதனை படைத்தவர்கள் ........நீங்கள் ......[ நடிகர் திலகம் புகழ் திரு பம்மலார், தங்கள், திரு joe , திரு கார்த்திக் திரு மகேஷ் , மற்றும் பலர் ] நடிகர் திலகம் ரசிகராக இருந்து பெருந்தன்மையுடன் மக்கள் திலகத்தின் திரியை கொண்டு வந்தமைக்கு மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .கடந்த கால சில கசப்பான அனுபவங்களை நாம் இரு சாராரும் மறந்து எதிர் காலத்தில் நமது திலகங்களின் சாதனைகளை தொடர்ந்து வெளியிட்டு சாதனை படைப்போம் .

உங்கள் அனைவரது உழைப்பில் உருவான நடிகர் திலகம் திரியில் தொடர்ந்து பல தகவல்கள் , புகை படங்கள் ,விளம்பரங்கள் தாங்கி மீண்டும் புது பொலிவுடன் அரங்கேறும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் .
வாசு சார்
தங்கள் பதிவிட்ட கே.பி. ராமகிருஷ்ணன் அவர்களின் கட்டுரை அருமை .. மிக்க நன்றி சார் ..

தொடர்ந்து தங்களின் பதிவுகளை எதிர்பார்க்கும்

மக்கள் திலகத்தின் அன்பு ரசிகர்கள் சார்பாக
esvee .

Richardsof
26th July 2012, 09:53 AM
எம்.ஜி.ஆரின் முதல் ரசிகன் !!











‘ஞானாம்பிகா’ ஜெயராமன் கூறுகிறார்…..

எம்.ஜி.ஆர். திரையுலகிலும், அரசியலிலும் கொடி கட்டி வாழ்ந்த காலத்தில் அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், எம்.ஜி.ஆரின் முதல் ரசிகன் நான்தான் எனச் சொல்லிக் கொள்கிற பெரும் பாக்கியமும் உரிமையும் எனக்கு உண்டு.

அப்போது எனக்கு 13 வயது. எம்.ஜி.ஆருக்கு 16 வயது. . அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். துளியளவும் பெயர் பெற்றிருக்கவில்லை. ஆனால், பார்ப்பவர்களை நின்று நிலைத்துத் திரும்பிப் பார்க்கிற அளவுக்கு எம்.ஜி.ஆர். பேரழகுடன் இருந்தார். செக்கச் சிவந்தவரான எம்.ஜி.ஆரை எப்படியும் சினிமாவில் சேர்த்துப் பெரிய ஆளாக்கிவிட வேண்டும் என்ற நோக்கில் அவருக்கு குஸ்தி விளையாட்டு கற்றுக் கொடுத்தார்கள்.

பாணாதுறையில் இருந்த அசேன் உசேன் என்கிற பிரசித்தி பெற்ற குஸ்தி வாத்தியார்தான் எம்.ஜி.ஆருக்குப் பயிற்சி கொடுத்து வந்தார். எம்.ஜி.ஆர். கம்பு சுற்றும் அழகை தினமும் வேடிக்கை பார்ப்பேன். என்னோடு இன்னும் சிலரும் எம்.ஜி.ஆர். கம்பு சுற்றும் வேகத்தைக் கண்டு வியந்து பேசுவார்கள். குஸ்தி கற்க வரும் எம்.ஜி.ஆரிடம் பல முறை வலியப் போய் பேசியிருக்கிறேன். நான் மட்டுமல்ல, எம்.ஜி.ஆர். சினிமாவுக்குப் போகப் போகிறார் என்பதாலேயே பலரும் அவரோடு நெருங்கி வந்து பேசுவார்கள். அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர். அதிகம் பேச மாட்டார். அவராக நம்மைப் பார்த்து ஒரு வார்த்தை கேட்க மாட்டாரா எனப் பல முறை ஏங்கி இருக்கிறேன்.

பல வருடங்களுக்குப் பிறகு அவரே வாய் குளிர என்னையும், எனது சமையலையும் பாராட்டுகிற நேரம் எனக்கு வாய்த்தது. எம்.ஜி.ஆர். அமெரிக்காவுக்குப் போய் தன் உடல்நிலையைச் சரிசெய்து கொண்டு திரும்பி வந்த நேரம். அவர் குணமடைந்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக அன்னதான விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான முழுப் பொறுப்பும் என்னிடம் கொடுக்கப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர். மீது பேரபிமானம் கொண்டிருந்த எனக்கு சொல்ல வேண்டுமா என்ன? சாதத்தை மலை போல் சமைத்து ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்க கடகடவென ஏற்பாடு செய்தேன். அண்ணாமலையாரின் திருவுருவத்தை சாப்பாட்டாலேயே ஜோடித்து வைத்திருந்தேன். ஆனால் அந்த அன்னதான விழாவுக்கு எம்.ஜி.ஆரால் வர முடியாத சூழல். இருந்தாலும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த நண்பர்கள் சாதத்தாலேயே வடிவமைக்கப்பட்ட அண்ணாமலையாரின் திருவுருவத்தைப் பற்றிய விஷயங்களை எல்லாம் சொல்லி எம்.ஜி.ஆரை அழைத்து வந்து விட்டனர்.

ஜானகி அம்மையாருடன் எம்.ஜி.ஆர். அந்த அன்னதான விழாவுக்கு வந்தார். சாதத்தால் உருவாக்கப்பட்ட அண்ணாமலையாரின் உருவத்தைக் கண்டார். அவர் என்ன சொல்லிப் பாராட்டப் போகிறார் எனப் புரியாமல் ஏக்கமாக நின்று கொண்டிருந்தேன். ’இந்த ஏற்பாட்டை யார் செய்தது?’ எனக் கேட்டார். அருகே நின்ற அனைவரும் என்னைக் கைகாட்டினார்கள். சட்டென என் கையைப் பிடித்தவர், ‘இது அண்ணாமலையா…. இல்லை அன்னமலையா!’ எனக் கவிதை பாணியில் பாராட்ட, நான் புல்லரித்துப் போனேன். அவரது சாதாரண வார்த்தைகளைக் கேட்கவே ஏங்கிய எனக்கு, அவர் வாஞ்சையோடு வாரியணைத்து வாழ்த்துச் சொனனபோது என்னையும் மீறி ஆனந்த அழுகை வந்துவிட்டது!

Richardsof
26th July 2012, 01:37 PM
MAKKAL THILAGAM MGR IN EN ANNAN AT SALEM - ALANKAR THEATRE 1970 - CUT OUThttp://i49.tinypic.com/2nvf4si.jpg

Richardsof
26th July 2012, 01:41 PM
engal thangam -1970
chennai - chithra theatre http://i46.tinypic.com/30szsrb.jpg

Raajjaa
26th July 2012, 04:20 PM
வினோத் சார்,

எம்.ஜி.ஆரின் கட் அவுட் எல்லம் அருமையாக இருக்கிறது. சேலத்தில் அப்பொழுதே இவ்வளவு பெரிய கட் அவுட் வைத்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

மதுரை படங்கள் இருந்தால் இங்கே போடவும்.

Raajjaa
26th July 2012, 05:27 PM
எழுபதுகளில் புதிய படங்களே 3 அல்லது 4 திரை அரங்குகளில் தான் திரையிடுவார்கள். ஆனால் வேட்டைக்காரன் படம் மறு வெளியீட்டில் 7 திரை அரங்குகளில் திரையிடப்பட்டது.

http://i45.tinypic.com/2rm35om.jpg

vasudevan31355
26th July 2012, 07:59 PM
அன்பு எஸ்வி சார்,

தங்கள் பரந்த, தூய்மையான உள்ளத்திற்கு என் அன்பு கலந்த நன்றிகள். தங்களைப் போன்று அனைவரும் நினைத்து விட்டால்... ஆஹா! நினைக்கவே தேனாக இனிக்கிறது. நடிகர் திலகத்திற்கு புதிய திரி நம் அன்பு பம்மலார் அவர்களால் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. தாங்கள் அங்கு வழக்கம் போல அருமையான பதிவுகளைக் கண்டு களிக்கலாம்.

கீழ்க்கண்ட லிங்கை சொடுக்கினால் நடிகர் திலகத்திற்கான புதிய திரியைக் காணலாம்.

http://www.mayyam.com/talk/showthread.php?9939-Nadigar-Thilagam-The-Greatest-Actor-of-the-Universe-amp-The-One-amp-Only-BO-Emperor

நிச்சயம் நேரம் கிடைக்கும் போது மக்கள் திலகம் திரியில் அவசியம் பதிவுகள் இடுகிறேன். அதைப் பெருமையாகவும் நினைக்கிறேன். அன்பு நண்பர் raajjaa அவர்களை விசாரித்தேன் என்று சொல்லுங்கள். தங்கள் இருவரின் பங்களிப்புகள் மிகவும் அற்புதம். மீண்டும் விரைவில் சந்திக்கலாம். நன்றி!

vasudevan31355
26th July 2012, 08:10 PM
'குடியிருந்த கோவில்' படத்தில் மக்கள் திலகம்.

http://www.shotpix.com/images/03133863585448114561.pnghttp://www.shotpix.com/images/91624245949699369940.png
http://www.shotpix.com/images/14195040811510145051.pnghttp://www.shotpix.com/images/93238705247844179117.png

http://ttsnapshot.com/out.php/i14047_vlcsnap-2012-07-03-00h14m00s23.jpg?id=b2328d6aae6f2057333033363231

'குமரிக்கோட்டம்' படத்தில் மக்கள் திலகம்.

http://ttsnapshot.com/out.php/i12421_vlcsnap-2012-06-20-09h39m42s121.png

Richardsof
27th July 2012, 08:10 AM
http://i48.tinypic.com/259kcd5.jpg
mattukkara velan - madurai - chinthamani theatre1970 -

Richardsof
27th July 2012, 08:47 AM
அன்புள்ள வாசு சார்
தாங்கள் பதிவிட்ட மக்கள் திலகத்தின் குடியிருந்த கோயில் மற்றும் குமரி கோட்டம் வண்ண படங்கள் நெஞ்சத்தை கொள்ளை கொண்டது .
நடிகர் திலகத்தின் திரி மிக அருமையாக உள்ளது . மக்கள் திலகத்தின் திரியும் நடிகர் திலகத்தின் திரியும் தொடர்ந்து சிறப்புடன் பலரும் வியக்கும் வண்ணம் வெற்றி நடை போடவிரும்புகின்றேன் ..

Richardsof
27th July 2012, 08:51 AM
http://i48.tinypic.com/6tpklk.jpg

Richardsof
27th July 2012, 09:02 AM
http://i50.tinypic.com/4hqlnc.jpg

Richardsof
27th July 2012, 09:04 AM
http://i45.tinypic.com/1265xf9.jpg

Richardsof
27th July 2012, 09:08 AM
http://i49.tinypic.com/2i08wsk.jpg

Richardsof
27th July 2012, 09:10 AM
http://i48.tinypic.com/f0wyli.jpg

Richardsof
27th July 2012, 09:12 AM
http://i45.tinypic.com/2wnbxpw.jpg JAAFNA - MGR MOVIE

Richardsof
27th July 2012, 09:15 AM
http://i45.tinypic.com/mj78w.jpg

BANGALORE - NEWCITY THEATRE - 1970

Richardsof
27th July 2012, 09:19 AM
http://i49.tinypic.com/xmkd20.jpg

Richardsof
27th July 2012, 09:21 AM
http://i46.tinypic.com/b4c7r9.jpg

Richardsof
27th July 2012, 09:22 AM
http://i45.tinypic.com/288b1b7.jpg

Richardsof
27th July 2012, 09:28 AM
http://i49.tinypic.com/w9cjn7.jpg engal thangam cut out - chennai -1970

Richardsof
27th July 2012, 09:32 AM
nam nadu - 1969- bangalore - shree talkies.http://i48.tinypic.com/16l4kl.jpg

Richardsof
27th July 2012, 09:34 AM
http://i48.tinypic.com/2m422o5.jpg

Richardsof
27th July 2012, 09:36 AM
http://i46.tinypic.com/orl7y8.jpg

Richardsof
27th July 2012, 09:39 AM
1969 - mount road - near gemini studio - mgr in thalivan - coming banner

http://i48.tinypic.com/9qv3u9.jpg

Richardsof
27th July 2012, 09:46 AM
http://i50.tinypic.com/23vggw5.jpg

Raajjaa
27th July 2012, 11:56 AM
வினோத் சார்,

உங்களுடைய ஆவணங்கள் எல்லாம் மலைக்க வைக்கிறது.

நான் மதுரையில் உள்ள மதுரா கோட்சில் கொஞ்ச நாள் வேலை பார்த்தேன். அங்கு வேலை பார்த்த பெரியவர்கள் எம்.ஜி.ஆர் படங்களை பற்றி பேசுவார்கள்.

அடிமைப் பெண் படம் பார்ப்பதற்கு படம் வெளி வருவதற்கு முதல் நாள் இரவே தியேட்டர் கவுண்டரில் போய் நின்று விட்டார்களாம். அந்தளவுக்கு வெறித்தனமாக் இருந்து இருக்கிறார்கள்.

Richardsof
27th July 2012, 12:02 PM
எங்கள் எம்ஜிஆர்

கலைஞனாய் – வள்ளலாய் – அரசியலாளராய் நமது நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் சத்தியதாய் பெற்றெடுத்த உத்தமர் பொன்மனசெம்மலை அடியேன் தொற்றிக்கொண்டதை நினைத்து மகிழ்ந்து ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ளும் எழுத்துமாலையை படிக்கும் ஒவ்வொருவருக்கம் சூடி மகிழ்கிறேன்.

ஈழத்தின் வடவளைவுகளை முத்தமிட்டுக்கொண்டிருக்கும் ”அராலி” எனது ஊராகும் குடும்பத்தினருக்கும் எம்ஜிஆருக்கும் நெருக்கம் இல்லை ஆக சிவாஜியின் கண்ணீர்காவியங்களுடன் எனது வளரும் பருவமும் கரைகிறது எனது மாமாவும் அவரின் நண்பரும் திடீர்மழையென ”சந்திரோதயம்” படம் பார்க்க என்னை கூட்டிசென்று எம்ஜிஆரின் அழகை முதன்முதலில் திரையில் காண வழிசெய்தார்கள் சந்திரபிம்பத்துள் சிரித்தமுகத்துடன் எம்ஜிஆர்
தோன்றி தனது இரசிகர்களைபார்த்து கண்சிமிட்டி தலையசைத்து செல்வார் இன்று நினைத்தாலும் மனம் உவகைபடுகின்றது.

காலங்கள் கரைந்து அடியேன் 17 வயதை தொட்டிருக்கும் காலத்தில் ஒரு நாள் தெற்குராலியில் பாட்டியாச்சிவீட்டில் 3ரூபாய்க்கு 2படம் காண்டினார்கள் முதலாவதாக சிவாஜியின் ”ரத்தபாசம்” பின்னர் புரட்சிநடிகரின் ”பாசம்” அன்று பாசம் படத்தின் கதையுடன் நன்றாய் ஒட்டிப்போன என்னால் இன்றுவரை அந்தப்படத்தின் நியாயக்கேள்வியில் இருந்து வெளிவரமுடியவில்லை

அந்தப்படத்தின் ஈர்ப்பே என்னை எம்ஜிஆரின் இரசிகனாக்கியது பின்னர் யாழ் வெலிங்டன் திரையில் ”நாடோடி” பார்க்கின்றேன் மனம் மேலும் எம்ஜிஆரை விரும்பச்செய்கின்றது காரணம் படத்தின் கதையும் அலட்டிக் கொள்ளாத இயல்பான நடிப்பும் பிறகு யாழ் ராஜா திரையில்”ஒளிவிளக்கு” காலை காட்சி 10:30 க்கு 8:30க்கே முதல் வகுப்பு சீட்டை வாங்க வரிசையில் நிற்கின்றேன் நீண்டநேர வரிசைகாத்திருப்பில் பின்னால் நின்ற எனது வயதை ஒத்தவரும் அவரின் தம்பியும் எனக்கு நட்பு முகம் காட்ட மகிழ்ச்சியுடன் மக்கள் திலகத்தை தரிசிக்கும் நினைப்பில் இருக்கும் போது தீடிரென என்னை நோக்கி கதைக்கின்றான்

நாங்கள் வல்வெட்டிதுறையிலிருந்து வந்திருக்கின்றோம் நீ? என என்னை மரியாதைகுறையாக கேட்க உடனே அண்ணன் தம்பியை அதட்டி அடக்க மீண்டும் விட்டான் சிறுவன் யாழ்ப்பாணத்து மக்களின் பொதுக்கேள்வியை அதுதான் நீ என்ன சாதி- நான் கேள்வியில் சற்றே உதறி விடை சொல்
வதற்குள் அண்ணன் ஒரு குட்டு போட்டு தம்பியாரை ஒட்டு மொத்தமாய் அமுக்கிவிட்டார் இச் சம்பவம் எனக்குள் இனிய நினைவாக என்றுமே படர்ந்திருக்கின்றது. ”ஒளிவிளக்கு” திரையரங்கினுள் இரசிகர்கள் உற்சாக மழையில் நடமாடியதைப்போல் வேறெங்கும் திரையரங்கத்துள் அதீத உற்சாகத்துடன் நடமாடியதை யான் கண்டதில்லை ”தைரியமாக சொல் நீ மனிதன் தானா” பாடல் காட்சியில் 6 எம்ஜிஆரை அழகிய உடைகளில் பார்த்து இரசிக பித்து பிடித்தது உண்மை இரசிகர்களின் சீட்டி அடிப்புகள் அபாரம் உள்ளங்களை எம்ஜிஆர் தனது உற்சாக நடிப்பாலும் விறுவிறுப்பான சண்டை காட்சிகளாலும் கட்டிப்போட்டிருந்தார்.

அடுத்து வெலிங்டன் திரையில் ”அன்பேவா” ஒரு இளந்தென்றலை சுகித்து மகிழ்ந்த €ன்பத்தை தந்த படம் ”புதியவானம் புதிய…” பாடல் காட்சி என்றும் மறக்கமுடியாதது ”அன்பேவா” இரம்மியமான எம்ஜிஆர் படம் அடுத்து தனபாலண்ணை வீட்டில் தொலைகாட்சி காண்பிப்பாக காட்டப்பட்ட ஊர்மக்கள் ஒன்றாக கூடி பார்த்து இரசித்த ”குடியிருந்தகோயில்” என்னென்று சொல்வது படத்தின் விறுவிறுப்பு எழுத்தோட்டம் அற்புதம் சாதாரண பழிக்கு பழி வாங்கும் கதை ஆனால் தன்னிகரற்ற விதத்தில் படத்தை எடுத்து இரசிகர்களை முழுத்திருப்திக்குள் ஆக்கியிருந்தார்கள் முதலாவது சண்டை காட்சியே படத்தின் பெருமைக்கு சான்றுபகர்க்கும் 51வயதினில் எம்ஜிஆர் ஆடிய வேகம் ”ஆடலுடன்பாடல்”காட்சியில் அற்புதம் வேறுயாரும் நினைத்து பார்க்கமுடியாது.

மேற்கொண்டு மணியக்கா வீட்டில் ”மாட்டுக்காரவேலன்” எம்ஜிஆர் படங்களில் கலகலப்புக்கு முத்தாய்ப்பான படம் நல்லதொரு பாடலான ”சத்தியம் நீயே” பாடலை எழுத்தோட்டத்துக்குள் போட்டு சாம்பாராக்கி விட்டார்கள் என்று நான் வருத்தப்படுவதுண்டு எழுத்தோட்டம் முடியவிட்டு எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாயிருந்திருக்கும் என்று நினைப்பதுண்டு இனி ஒன்றுமே செய்யமுடியாது இருப்பதை இரசிக்க வேண்டியதே ”மாட்டுக்காரவேலன்” மாபெரும் மணிப்படம்.

வழியே ”படகோட்டி” கறுப்பு சிவப்பு ஆடையில் முதல் காட்சியிலே தோன்றி சிலம்பாடும் காட்சியுடன் எம்ஜிஆர் குதிப்பார் அழகும் விறுவிறுப்பும் நானா நீயா என போட்டி போடும் சிலம்பாடும் வேகம் அபாரம் வண்ணத்தில் வள்ளலை வைத்து சரவணாபடக்குழு எடுத்து வெற்றியீட்டியது பாட்டுக்கொரு படகோட்டியென புகழ்க்கொடி பறக்கவிட்ட ”படகோட்டி” வெற்றிவாகை சூடி நின்றது.

குலனையில் தொலைகாட்சி காண்பிப்பாக தர்மயுத்தம் வேறொரு படம் காண்பிப்பதாக சொல்லியிருந்தார்கள் முதலாவதாக தர்மயுத்தம் காண்பித்த கையுடன் ஒரு படத்தை இரண்டாவதாக போட்டார்கள் இரவின் சோம்பல்கொள்ள அங்கும் €ங்குமாய் இருந்தோம் திடீரென முதியவர்கள் சிலர் அடிமைப்பெண்ணடா என்று சத்தமாய் கூவியபடி தொலைகாட்சி பெட்டியை நோக்கி முன்னேறினார்கள் உடன் நானும் சோம்பலை நீக்கி முன்னேறி நோக்கினேன் அடடா எதிர்பார மகிழ்வு

”அடிமைப்பெண்” 3மணி நேரம் படத்துடன் ஐக்கியம் இப்படியும் ஒரு வீரகாவியம் தமிழ்ப்படவுலகில் என எண்ணி பேருவகைப்படவைத்த மாபெரும் எம்ஜிஆர் சொந்தப்படம். ”தாயில்லாமல் நானில்லை” பாடல் காட்சியில் எம்ஜிஆர் வித்தியாசமான ஆடையில் புரட்சி கட்டுடன் தோன்றி இரசிகர்களை பேரானந்தப்படுத்தியிருப்பார் அதேபோல் ”உன்னைபார்த்து உலகம் சிரிக்கிறது” பாடல் காட்சியில் புரட்சி பு£வாய் மலர்ந்து இறுதியில் வீரக்கனலாவார் நடிப்பால் அதிரடியான எம்ஜிஆர் படம் என்றால் நன்றாய் பொருந்தும் அடிமைப்பெண்.

அராலி பாரதி சனசமுக நிலையத்தினர் தொலைகாட்சியில் காண்பித்த இன்னொரு பெருமைக்குரிய எம்ஜிஆர் படம் “எங்கவீட்டுபிள்ளை” இந்தப்படம் பின்னர் யாழ் புதிய றீகல் திரையில் இரண்டாம் தடவையாக வந்த பொழுது கரையுர் – பாசையுர் – நாவாந்துறை மக்களின் அன்புதொல்லை படையலுக்குள் இருந்து பார்த்து பரவசப்பட்ட படம் “நான் ஆணையிட்டால் பாடல் வருவதற்கு 3 நிமிடங்களுக்கு முன்னரே சீட்டியடிப்பும் குதூகலமும் இரசிகர்களிடமிருந்து பறியும் படமெண்டா படம்தான் என எண்ணிக்கொண்டு வெளியில்; வந்தது “எங்கவீட்டுபிள்ளை”யை பார்த்தவிட்டு.

மழையோ மழை அப்படியொரு மழையன்று யாழ் மனோகராவிலும் ஸ்ரீதர் திரையிலுமாய் மக்கள் திலகத்தின் “உலகம் சுற்றும் வாலிபன்” நனைந்தபடி இரசிகர்கள் சீட்டுக்காய் ஸ்ரீதரில் சனத்திரளுக்குள் காக்குளிருக்குள் வெளிநாட்டு அழகை 3ரூபாயுடன் நான் பார்த்து இரசித்த படம் மஞ்சுளாவை அசோகன் தொல்லை பண்ண தொடங்க எம்ஜிஆர் சப்பாத்துகயிறுகளை கட்ட யாழ்ப்பாணத்து இரசிகன்; சீட்டியொலியெழுப்ப ஆகா என்ன΄மகா எதிர்பார்ப்பு கொடுக்கப்போகிறார் வாத்தியார் அசோகனுக்கென்று அருமையோ அருமை இன்று கேட்டாலும் நேற்று வந்த பாடலைப்போல் தரம் கொண்ட பாடல்களை கொண்ட படம் “உலகம் சுற்றும் வாலிபன்” புத்தர் கோயில் காட்சியமைப்பு மகா பிரமிப்பை தந்தது ஊசிக்குத்து சண்டை ஆ போட வைத்தது இன்று நடக்கும் ஆயுதமோக அழிவுகலாச்சாரத்தை எம்ஜிஆர் அன்றே தனது படக்கதையில் சொல்லியிருந்தார் எம்ஜிஆரின் சொந்தப்படமான “உலகம் சுற்றும் வாலிபன்” என்றும் மக்கள் பார்த்து பயனடைய வேண்டிய படமென்பேன்.

யேர்மனில் முன்சன் அகதிகள் விடுதியில் “குலேபகாவலி” படத்தைப் பார்த்து இரசிக்கின்றோம் திடீரென அறைக்குள் நுழைந்த மரியதாசு சொல்லுகிறார் கேலியாக உங்கா வாத்தி கிழட்டுபுலியோடை சண்டைபிடிக்குதென்று உடனே கடுப்பான இரசிகர் யோகநாதன் மரியதாசை கேட்டார் சரி எம்ஜிஆர் கிழட்டுபுலியுடன் சண்டை பிடிக்கிறார் நீ கிழட்டுபுலிக்கு முன்னால் நிப்பாயாவென்று- வெட்கித்த மரியதாசு தலையை திருப்பி அறையைவிட்ட நீங்கினார் “குலேபகாவலி” நாடறிந்த நல்ல படம்.

எம்ஜிஆர் சண்டைகளில் எனக்கு மிகவும் பிடித்தது அவரின் சிலம்பாட்டமே அற்புதமான படமாயிருந்தும் இரசிகர்களின் பேராதரவை பெறாத படம் “நீரும் நெருப்பும்” காரணம் இறுதியில் நெருப்புஎம்ஜிஆர் இறப்பதாக காண்பித்தமையாகலாம் திரைப்படத்து கதையில்கூட எம்ஜிஆர் €றப்பதை இரசிகர்கள் விரும்புவதில்லை €துவரையில் வணக்கம் சொல்லி முடித்துக்கொள்ளுகின்றேன்.

ம.இரமேசு

Raajjaa
27th July 2012, 12:04 PM
அடிமைப் பெண் - விகடன் விமர்சனம்.

கிருஷ்ணன்: இது ஒரு புது மாதிரியான படம். இந்த மாதிரி படத்தை தமிழிலே நான் பார்த்ததில்லே!

லலிதா: அவர் சொல்றது ஒரு வகையில் கரெக்ட்தான். ஆனால், சண்டைக் காட்சிகள் கொஞ்சம் அதிகமா இருப்பதாக எனக்குப் படுது.

சேது: ஆனா, பல பேர் அதை ரசிக்கிறாங்க! ஜெய்ப்பூர், பாலைவனம் இதைப் பத்தி எல்லாம் நான் கேள்விதான் பட்டிருக்கேன்; இந்தப் படத்திலேதான் பார்த்தேன்.

ஜெயராம்: ‘பென்ஹர்’, ‘ஸாம்ஸன் அண்ட் டிலைலா’ போன்ற ஆங்கிலப் படங்களில்தான் இந்த மாதிரி வெளிப்புறக் காட்சிகள் வந்ததா நான் நினைக்கிறேன்.

ராமன்: ஜெயலலிதா டான்ஸ் பண்றாங்களே! அதிலே கூட பல பாணிகள் நல்லா இருந்தது. ‘ஈஜிப்ஷியன் பெல்லி டான்ஸ்’… ஐ லைக் இட்!
சேது: போட்டோகிராபியும், கலரும் ரொம்ப நல்லா இருந்தது.

தேவிகா: ஆமாம். காமிராமேன் ராமமூர்த்தி எடுத்த ஒண்ணோ ரெண்டோ கலர் படங்களில் நான் நடிச்சிருக்கேன். எல்லாத்தையும் விட இந்தப் படத்தை இவ்வளவு நல்லா எடுத்திருக்காரே, இதில் நான் நடிக்கலையேன்னு வருத்தப்படறேன்.

கமலம்: எனக்கு ஜெயலலிதாவோட நடிப்பும் பிடிச்சுது; அவங்க சொந்தக் குரல்ல பாடற பாட்டும் பிடிச்சுது.

தேசிகாமணி: ஆமாம்! ஆனால் மனசிலே பதியற பாட்டு…

பல குரல்கள்: ‘ஏமாற்றாதே… ஏமாறாதே..!’

சேது: அந்தப் பாட்டு பாடற இடம், டான்ஸ்… எல்லாமே நல்லா இருந்தது.

ஜெயராம்: பாலசுப்பிரமணியம் பாடற பாட்டு..?

கமலம்: ‘ஆயிரம் நிலவே’ தானே! குரல் கொஞ்சம் புதுமையா இருந்தது.
தேசிகாமணி: சண்டைக் காட்சிகளை ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. சிங்கத்தோடு சண்டை போடும் போது, எம்.ஜி.ஆர். உயிரைக் கூட மதிக்காம நடிச்ச மாதிரி தெரியுது.

தேவிகா: நான் முன்னே இன்னொரு படத்திலே எம்.ஜி.ஆர். புலிச் சண்டை பார்த்தேன். ஆனால், இந்தச் சண்டை அதைவிட ரொம்ப இயற்கையா இருக்கு. அதிலும் அந்தச் சிங்கம் நாக்கை இப்படி அப்படிப் பண்ணி…இந்தப் படத்திலே சிங்கம்கூட அருமையா ஆக்ட் பண்ணியிருக்கு.

லலிதா: எல்லா காட்சியையும் விட, சோ விஷம் மாத்தற காட்சிதான் எனக்கு ரொம்ப பிடிச்சுது.

கமலம்: பண்டரிபாய் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையா தன் பிள்ளையைப் பார்க்கணும்னு ஆசைப்படறாங்க. ஜெயலலிதா தடுத்துடறாங்க. ஆனால், அந்தப் பிள்ளை நேரே வந்ததும் ‘நான் உன்னைப் பார்க்க விரும்பலே’னு சொல்றாங்க. அங்கே ஒரு மாதிரி குழப்பமா இருக்கே?

கிருஷ்ணன்: முதல் தடவை தன் மகனைப் பார்க்கணும் என்கிற ஆசை அந்தத் தாய்க்கு வருது! அப்புறம், ‘அவன் என் மகன் மட்டும் அல்ல; ஊருக்கே உழைக்க வேண்டிய மகன். பலரின் அடிமைத்தனத்தைப் போக்க வேண்டியவன்’ என்கிற எண்ணம் வந்ததும், பார்க்க மாட்டேன்னு சொல்லிடறாங்க. ஒரு குழப்பமும் இல்லே!

ஜெயராம்: அந்த பேபி ராணி… ஆறு விரல் பாயின்ட்… கதையிலே புகுத்தப்பட்ட சின்ன, நல்ல பாயின்ட். ஆனால், எந்த நாட்டிலேருந்து எந்த நாட்டுக்குப் போறாங்க என்பதிலெல்லாம் கொஞ்சம் குழப்பம் இருந்தது.

கமலம்: கரெக்ட்! அந்த ரெண்டு ஜெயலலிதா மாறுகிற இடம் ரொம்பக் குழப்பம். திடீர்னு அசோகனோடு பேசறது எந்த ஜெயலலிதான்னு புரியாம கஷ்டப்பட்டேன்.

சேது: எனக்குப் படத்திலே எங்கேயும் தொய்வு தெரியலே! கண்ணுக்குக் குளிர்ச்சியா ஏதோ இங்கிலீஷ் படத்தோட போட்டி போடற தமிழ்ப் படம் மாதிரி இருந்ததுன்னு சொல்வேன்.

Raajjaa
27th July 2012, 12:07 PM
எங்க வீட்டு பிள்ளை - விகடன் விமர்சனம்.

சந்தர்: ஒரே மாதிரி இருக்கும் இரு நபர்களின் ஆள் மாறாட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வந்த படங்களிலேயே இதுதான் சிறந்த படம்.

சேகர்: இடம் மாறி வந்தவர்கள், தொடர்ந்து அங்கேயே தங்கிவிடவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி இருப்பதில் இந்தக் கதை புதுமையாக இருந்தது. முன் பின் தெரியாத ஒருத்தியின் நல்வாழ்வுக்காகவும், அவள் குழந்தையின் மேல் உள்ள பாசத்துக்காகவும் ஜமீன்தார் வீட்டில் இளங்கோ ராமுவாகவே இருக்கவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியது மிகவும் பொருத்தமாக இருந்தது.

சேகர்: ஆமாம், இளங்கோ ஜமீன் மாளிகைக்குள் நுழைந்தவுடன், அந்த வீட்டுக் கதை முழுவதையும் பாத்திரங்களின் பேச்சின் மூலமே இளங்கோவுக்குப் புரிய வைத்தது, நல்ல அமைப்பு!

சந்தர்: இரட்டையரின் இரு பாத்திரப் படைப்புகளுமே பிரமாதம்தான்!

சேகர்: அதை எம்.ஜி.ஆர். நடித்த விதம், அதை விடப் பிரமாதம்! பயந்தங்கொள்ளியாக வரும்போது, சிரிப்புடன் அழவும் வைக்கிறார். முரடனாக வரும்போது, வீரத்தைக் காட்டிச் சிரிக்க வைக்கிறார்.

சந்தர்: நம்பியாரிடம் அவர் சவுக்கடி வாங்கி, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன், ‘நானும் உங்களுடன் வந்துவிடுகிறேன் அப்பா’ என்று பெற்றோரின் படத்துக்கு முன் நின்று சைகையால் பேசும் இடம், எவர் உள்ளத்தையும் உருக வைக்கும்.

சேகர்: இரண்டு பாத்திரப் படைப்பும் நன்றாகவே இருந்தன. ஆனால் வீட்டை விட்டு வந்த இரண்டு பேரும் அம்மாவைப் பற்றியோ, அக்காவைப் பற்றியோ கொஞ்சமும் கவலைப்படாமல் இருந்ததுதான், அவ்வளவு சரியாக இல்லை!

சந்தர்: சரோஜா தேவிக்குப் புது மாதிரி ரோல். எப்போது பார்த்தாலும் அப்பாவை மட்டம் தட்டிக்கொண்டு, தினுசு தினுசாகப் புடவை கட்டிக் கொண்டு, காதிலே ஏதேதோ மாட்டிக் கொண்டு, அந்த அருமையான கலருக்கும், படப்பிடிப்புக்கும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!

சேகர்: வின்சென்ட் – சுந்தரம் படப்பிடிப்பு, படத்துக்குத் தனிச் சிறப்பு கொடுத்தது. முக்கியமாக, பிருந்தாவனத்தில் அழகு கொழித்தது. ஓரிடத்தில், கீழே படுத்திருக்கும் எம்.ஜி.ஆரை மாடியிலிருந்து மிக அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள்.

சந்தர்: இந்தப் படத்திலே இன்னொரு புதுமை பார்த்தியா? தங்கவேலு – நாகேஷ் காமெடி ஜோடி!

சேகர்: ரொம்ப நாளைக்கப்புறம் தங்கவேலுவைப் பார்க்கிறதே சந்தோஷமா இருந்தது. அந்த மாவு மில்லிலே அவர் நடுங்கிக்கொண்டே நடக்கிற இடம்…

சந்தர்: அது தங்கவேலு முத்திரை! நாகேஷ் அந்த அசட்டு முகத்தையும், அரை மீசையையும் வைத்துக் கொண்டு அடிக்கொரு தரம் தப்பு தப்பா வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு ரொம்ப பிரமாதமாக கடிச்சிருக்கார்… சே… நடிச்சிருக்கார்..!

சேகர்: மொத்தத்திலே பொழுது போகிறதே தெரியாமல் விறுவிறுப்பாகப் போகிறது படம். சமீபத்தில் வந்த நல்ல தமிழ்ப் படங்களில் எங்க வீட்டுப் பிள்ளைக்கு ஓர் இடம் உண்டு.

Richardsof
27th July 2012, 02:05 PM
http://i46.tinypic.com/34rd4s8.jpg

Richardsof
27th July 2012, 02:08 PM
http://i48.tinypic.com/15zqbgo.jpg

vasudevan31355
27th July 2012, 02:10 PM
1 March 2012 cinema express

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-3-2012thirulokchanthar-56.jpg

Richardsof
27th July 2012, 02:11 PM
http://i50.tinypic.com/34etdhw.jpg

Richardsof
27th July 2012, 02:14 PM
http://i46.tinypic.com/20qhovk.jpg

vasudevan31355
27th July 2012, 02:21 PM
'அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்தில் மக்கள் திலகத்தின் தோற்றங்கள்.

http://i790.photobucket.com/albums/yy189/raja_warrior/DVD-RIPAlibabavum40Thirudargalumx264ISTWarriormp4_snap shot_001219_20101212_121030.jpg

http://desmond.imageshack.us/Himg64/scaled.php?server=64&filename=alibabavumcolo68.jpg&res=landing

http://img9.imageshack.us/img9/3604/alibaba00049.png

http://desmond.imageshack.us/Himg69/scaled.php?server=69&filename=alibaba00051.png&res=landing

http://desmond.imageshack.us/Himg39/scaled.php?server=39&filename=alibabavumcolo46.jpg&res=landing

http://desmond.imageshack.us/Himg705/scaled.php?server=705&filename=alibaba00035.png&res=landing

http://desmond.imageshack.us/Himg13/scaled.php?server=13&filename=alibaba00060.png&res=landing

http://desmond.imageshack.us/Himg811/scaled.php?server=811&filename=alibaba00063.png&res=landing

Richardsof
27th July 2012, 02:35 PM
அன்புள்ள ராஜா சார்
தாங்கள் பதிவிட்ட விமர்சனங்கள் அருமை .மக்கள் திலகத்தின் படங்கள் அந்த கால கட்டத்தில் வெற்றி - தோல்விகளை நிர்ணயிப்பதில் மதுரைக்கு பெரும் பங்கு இருந்தது .

Richardsof
27th July 2012, 02:59 PM
இதயங்கனிந்த நன்றி வாசு சார் அவர்களே

அலிபாபா வும் 40 திருடர்களும்- கண்ணை பறிக்கும் மக்கள் திலகத்தின் கொள்ளை கொள்ளும் அழகும் , அணைத்து படங்களும் அருமை .

vasudevan31355
27th July 2012, 03:27 PM
மிக மிக நன்றி esvee சார்.

Richardsof
27th July 2012, 04:00 PM
ஆயிரத்தில் ஒருவன்


எம்.ஜி.ஆர் இறந்த அதே 1987 -ல் நான் பிறந்தேன். பின் எவ்வாறு நான் எம்.ஜி.ஆர் ரசிகனானேன்? என்பதை எண்ணுகையில் வியப்பாக இருக்கிறது. எம்.ஜி.ஆர் ஆரமித்துவைத்த சத்தணவு திட்டத்தின் மூலம் எங்கள் ஊரில் ஒரு பெண்ணிற்கு வேலை கிடைத்தது. அந்த வேலையை வைத்து அவளின் ஆறு பெண் பிள்ளைகளையும் நன்றாக வளர்க்க முடிந்தது. அந்த ஆறில் ஒருவர் என் அன்னை. அந்த பெண்மணி என் அம்மாச்சி. இதனால் அம்மாச்சி எப்போதுமே எம்.ஜி.ஆரைப் பற்றி புகழந்து கொண்டிருப்பார். அம்மாச்சிக்கு அரசியல் தெரியாது அதனால் அவர் எம்.ஜி.ஆரின் அரசியல் பற்றி புகழமாட்டார். அம்மாச்சி அதிகமாக படங்களை பார்த்தது கிடையாது, பாட்டாளியாக உழைக்கவே நேரமில்லாத காலத்தில் படம் எப்படி பார்ப்பார். அதனால் எம்.ஜி.ஆரின் படங்களைப் பற்றி அதிகம் புகழமாட்டார். அவர் எம்.ஜி.ஆர் பற்றி கூறுவதெல்லாம் சத்துணவு சார்ந்தவைகள் மட்டுமே.

எம்.ஜி.ஆர் திருச்சிராப்பள்ளியில் அந்த திட்டத்தினை ஆரமித்துவைத்தது முதற்கொண்டு, அந்த திட்டத்தில் கொடுக்கப்பட்ட காய்கறி அளவுகள், எண்ணைய், பருப்பு வைகைகளின் அளவுகள் என்று எல்லாமும் அம்மாச்சிக்கு அத்துபடி. கட்டைவிரல் மடக்கி நான்கு விரல்களை அளவாக காண்மித்து “அந்த காலத்துல இம்புட்டு எண்ணைய் ஒரு புள்ளைக்குன்னு கொடுப்பாங்க பாரு. அதே அளவு எடுத்துப் போட்டா,.. புள்ளைகளுக்கு கழிசலே வந்துடும்” என்பார். “அம்மாம் பெரிசா யானமெல்லாம் தன் கையாலேயே கொடுத்தாரு” என்று சொல்லும் போது அம்மாச்சியின் கண்களில் இன்றும் பிரகாரம் மிளிரும். இப்படி ஆயிரம் முறை கூறக் கேட்டும் இன்னும் சலிக்காமல் இருப்பதுதான் எம்.ஜி.ஆரின் புகழ்.

அதன் பின் எம்.ஜி.ஆரின் திரைப்படம், அரசியல், அன்பு, ஈகை, வீரம் என பல பரிணாமங்களை கண்டு இன்றும் வியந்து கொண்டிருக்கிறேன். எம்.ஜி.ஆர் பற்றி படிக்கும் போதும், பிறர் பேச கேட்கும் போதும் மனம் துள்ளலாக இருக்கும். அவரைப் பற்றி விக்கியில், வலையில், முகநூலில் என கிடைக்கும் இடங்களிலெல்லாம் எழுதி தள்ளியிருக்கிறேன். சகோதரனிலும் அவரைப் பற்றி சில இடுகைகள் எழுதியிருப்பேன், என்றாலும் ஒரு தொடராக அவரைப் பற்றி எழுத வேண்டும் என ஆசைப்பட்டேன். அதற்காகவே அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு சென்று கடந்த சில வாரங்களாக செய்திகளை சேகரித்துக் கொண்டிருக்கிறேன்.

“நான் ஏன் பிறந்தேன்” என்று எம்.ஜி.ஆர் தொடங்கி, அவருடன் இருந்த புகைப்படக்காரர் வரை எம்.ஜி.ஆர் வாழ்வில் நடந்த பல்வேறு சுவாரசியங்களை தந்துள்ளார்கள். அவைகள் நூலகத்தில் இருக்கின்றன. ஆனால் இணையத்தில் சொற்பமே கிடைக்கின்றன. அவைகளில் சுவாரசியம் மிகுந்தவையை சிறு சிறு தகவல்களாக தந்தால் நன்றாக இருக்கும். ஏற்கனவே எம்.ஜி.ஆர் 25 என ஆனந்தவிகடன் வெளியிட்டு விட்டது. எம்.ஜி.ஆர் 100 என நக்கீரன் புத்தகமே வெளிவந்துள்ளது. இவைகளைப் போல ஆயிரம் தகவல்களை திரட்ட முடிவு செய்திருக்கிறேன். அப்படியே சுவாரசியம் குன்றினால் தொகுத்தோடு நிறுத்திவிடலாம். நம்பிக்கை இருக்கிறது. இனி ஈசன் அருள் செய்ய வேண்டும்.

ஆயிரத்தில் ஒருவன் -

1) ஒரு வருடத்தின் உதயம் ஜனவரி மாதம். மறைவு டிசம்பர் மாதம். எம்.ஜி.ஆர் உதித்தது ஜனவரி 17, 1917, மறைந்தது டிசம்பர் 24, 1987. இதை ஆண்டவனின் விளையாட்டாக எண்ணுவதா, இல்லை விருப்பமாக எண்ணுவதா என தெரியவில்லை. எம்.ஜி.ஆரின் பிறப்பும், இறப்பும் கூட தனிசிறப்பாக இருக்கிறது.

2) எம்.ஜி.ஆருக்கு ஒரு பைட் மாஸ்டருக்கு என்ன என்ன தெரிந்திருக்க வேண்டுமோ, அத்தனையும் தெரியும். சிலம்பம், வாள், குஸ்தி, குதிரையேற்றம், தற்காப்பு கலைகள், சண்டை முறைகள் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

3) எம்.ஜி.ஆர் இருந்த காலத்தில் குறைந்த வேகத்தில் சண்டைகளை எடு்த்துவிட்டு, பின் திரையில் அதிக வேகத்துடன் ஓட வைக்கும் கேமிராக்கள் வரவில்லை. எம்.ஜி.ஆரும், நம்பியாரும் மோதும் காட்சிகளில் இருக்கும் வேகம் உண்மையான சண்டை வேகம்.

4) “காதல் வாகணம்” என்ற தேவர் பிளிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த படத்தில் எம்.ஜி.ஆரை பெண் வேடத்தில் காணலாம். நாடகத்துறையில் இருந்தபோது நிறைய முறை பெண் வேடமேற்று நடித்திருந்தாலும், திரையுலகில் எம்.ஜி.ஆர் பெண்ணாக நடத்தது ஒரே ஒரு படத்தில்தான்.

5) அண்ணா தி.மு.க வின் கட்சி சின்னம் இரட்டை இலை. இந்த சின்னத்தினை எம்.ஜி.ஆர் உருவாக்கவில்லை, தேர்ந்தெடுக்கவும் இல்லை. அப்போதெல்லாம் சுவர் ஓவியங்கள் மூலமாகவே விளம்பரம் செய்ய வேண்டிருந்தது. எனவே இந்த இலை சின்னம் வரைய எளிதாக இருக்கும் என்று தேர்ந்தெடுத்தவர் திண்டுகல் தொகுதி வேட்பாளர் மாயத் தேவர். அந்தளவிற்கு செல்வாக்கு மிக்கவர்களாக தொண்டர்களைம், வேட்பாளர்களையும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.

6) எம்.ஜி.ஆரின் தாய் சத்தியபாமாவின் குலதெய்வம் மூகாம்பிகை. அதன் காரணமாகவே எம்.ஜி.ஆருக்கு மூகாம்பிகையை பிடிக்கும். தாயார் இறந்த பின் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். மூகாம்பிகையை பார்க்கும் போதெல்லாம் என் தாயை பார்ப்பது போல இருக்கிறது என்பார்.

7) தமிழக மக்களுக்கு “எம்.ஜி.ஆர்”. நடுநிலை பேசுகிறவர்களுக்கு “எம்.ஜி.ராமச்சந்திரன்”. தொண்டர்களுக்கு “புரட்சி தலைவர்”. இப்படி பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும், எம்.ஜி.ஆரின் அன்பான செல்ல பெயர் என்ன தெரியுமா?. ராமு.

8) எப்போதுமே தரையில் சம்மனமிட்டு அமர்ந்து சாப்பிடுவதே எம்.ஜி.ஆருக்கு பிடிக்கும். விருந்தாளிகள் வந்தால் மட்டும்தான் டைனிங் டேபிலில் அமர்ந்து சாப்பிடுவாராம் எம்.ஜி.ஆர்.

9) டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்,பிளொட் இந்த பெயர்கள் உங்களுக்கு தெரிந்திருந்தால்,. நீங்கள் ஈழம் பற்றி அறிந்தவராவீர்கள். இத்துடன் சேர்த்து விடுதலைப்புலிகள் என ஐந்து அமைப்புகள் ஈழத்தினை பெறுவதற்காக போராடிக் கொண்டிருந்தார்கள். இவற்றில் விடுதலைப் புலிகள் மட்டும் மிகப் பெரும் அளவிற்கு வருவதற்கு பிரபாகரனும், அவருக்கு பக்கபலமாக இருந்த எம்.ஜி.ஆரும் காரணம்.

10) ரிக்சாகாரன் படவெற்றியை கொண்டாட சென்னையில் இருக்கும் 6,000 ரிக்சா காரர்களுக்கு மழைகாலங்களில் உதவியாக இருக்கும்படி, மழைநீர் கோர்டுகளை வாங்கிதந்தார். இன்று கூட ஆட்டோக்களில் எம்.ஜி.ஆரின் உருவம் பதித்து வலம் வர அவரின் இந்த தொழிலாளர்களை மதிக்கும் தன்மையை காரணமென நினைக்கிறேன்,.

ஆயிரம் புகழ் மாலைகள் நோக்கி…

vasudevan31355
27th July 2012, 08:18 PM
டியர் esvee சார்,

from inayathalam - sagodharan (ஆயிரத்தில் ஒருவன்) கட்டுரை very interesting. கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் 'காதல் வாகனம்' திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் பெண்வேடமிட்டு நடித்த அந்த பாடல் காட்சியை இப்போது காணலாம். எம்.ஜி.ஆர் அவர்கள் பெண்வேடமிட்டு நடித்த ஒரே படம் என்பதால் முக்கியத்துவம் பெற்று விட்ட படம் 'காதல் வாகனம்'. அதுமட்டுமல்ல... எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பின்னணி பாடி குரல் கொடுத்த அரிய வாய்ப்பை பெற்ற பெருமைக்குரியவராகி விட்டார் பின்னணிப் பாடகி எல்.ஆர். ஈஸ்வரி.

"என்ன மேன்...
பொண்ணு நான்...
ச்சும்மா ச்சும்மா பாக்காதே"....


http://www.youtube.com/watch?v=DvvMUixAu20&feature=player_detailpage

Thomasstemy
28th July 2012, 08:04 AM
அன்பு நண்பர் திரு . வாசுதேவன் அவர்களுக்கு எனது நன்றி . மக்கள் திலகமும் நடிகர் திலகமும் கலை உலகின் இரண்டு தூண்கள் . உலகம் உள்ளவரை இரண்டு திலகங்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பது உண்மை .மக்கள் திலகத்தின் பெயரில் இந்த திரியை துவக்கி சாதனை படைத்தவர்கள் ........நீங்கள் ......[ நடிகர் திலகம் புகழ் திரு பம்மலார், தங்கள், திரு joe , திரு கார்த்திக் திரு மகேஷ் , மற்றும் பலர் ] நடிகர் திலகம் ரசிகராக இருந்து பெருந்தன்மையுடன் மக்கள் திலகத்தின் திரியை கொண்டு வந்தமைக்கு மக்கள் திலகத்தின் ரசிகர்கள் சார்பாக எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .கடந்த கால சில கசப்பான அனுபவங்களை நாம் இரு சாராரும் மறந்து எதிர் காலத்தில் நமது திலகங்களின் சாதனைகளை தொடர்ந்து வெளியிட்டு சாதனை படைப்போம் .

உங்கள் அனைவரது உழைப்பில் உருவான நடிகர் திலகம் திரியில் தொடர்ந்து பல தகவல்கள் , புகை படங்கள் ,விளம்பரங்கள் தாங்கி மீண்டும் புது பொலிவுடன் அரங்கேறும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் .
வாசு சார்
தங்கள் பதிவிட்ட கே.பி. ராமகிருஷ்ணன் அவர்களின் கட்டுரை அருமை .. மிக்க நன்றி சார் ..

தொடர்ந்து தங்களின் பதிவுகளை எதிர்பார்க்கும்

மக்கள் திலகத்தின் அன்பு ரசிகர்கள் சார்பாக
esvee .

திலக சங்கமம்
:smokesmile:

Richardsof
28th July 2012, 08:36 AM
Thilaga sangamam - really a great achivement .

Thanks a lot br sir .

Vasudevan sir

thanks for your video upload of kadhal vaganam.

Richardsof
28th July 2012, 08:40 AM
thirudathe function - album.


r
http://i45.tinypic.com/idzj8k.jpg

Richardsof
28th July 2012, 08:42 AM
http://i45.tinypic.com/33eikd4.jpg

Richardsof
28th July 2012, 08:48 AM
http://i45.tinypic.com/2ufbno4.jpg

Thomasstemy
28th July 2012, 08:48 AM
Dear Friends,

It was a nice experience yesterday. I had been to coimbatore on an official trip. While, i was travelling in an auto, I could catch a glimpse of fresh poster that of the Puratchi Thalaivar's not much famous film but APN's one and only film with Vaadhyaar "Navarathinam". It sort of re-kindled my memory of watching the same about 25-28 years back in Chennai, Chitra Theater in one of its re-release at that point in time.

Watching Navarathnam in Chitra still stays fresh in my memory as I watched "Thangamalai Ragasiyam" the previous day in Paragon, Chennai and "CID Shankar" in Plaza, the next day. It used to be a treat for us when Chitra,Plaza,Paragon and low profile Star theater existed in and around Triplicane and Ellis Road.

With this nostalgia, I went to Delight Coimbatore with one of my friend who is managing the theater. It was 9th day, I was told. The film had just started as we entered, with a scattered audience of around 70 - 80. The print was Average but had good jumps and cuts within first few reels.

One hour of the film passed, the comment of the friend was, we can see the film is deliberately made as a poor man version in the shadow of NT's 100th movie "Navarathri". The difference is APN failed to bring in the Quality of "Navarathiri". My reply had the discussion happened 28 years before would have been a different one. Now, years had passed by and maturity level increased, my reply was only a "smile".

Coming back to the viewing experience, a lot has been changed i guess, as i could not even hear "One Whistle" (or) "One Clap" when Vaadhyar appears on screen !!!!!!!!!!! Surprising, may be it is because of 9th day and all charm would have already lost in the previous sunday show, or viewers of Vaadhyaar films too wanted to watch the film peacefully or may be this film does not have the charm of getting a whistle or clap, it could be anything.. Could be ! Who knows ! Times are Changing !

As i started to board my bus, one thought still existed in my mind....Yaen APN indha Visha Pareekshayil Eranginaar ? Puratchi Thalaivarain heroism was totally wasted in this film by Sri.APN. Indha Padathinaala, Thiru.APNukkum Prayojanam illa, Namma Vaadhyarukkum prayojanam illa but for the remuneration he would have received.

Sun Tv paaniyil oru Vimarsanam....Navarathinam, Jolithirukkavaendiyadhu, Thattaan Thavaru !! !

Richardsof
28th July 2012, 09:04 AM
http://i50.tinypic.com/72aa9x.jpg

Richardsof
28th July 2012, 09:07 AM
http://i46.tinypic.com/wiwv9g.jpg

Richardsof
28th July 2012, 09:08 AM
http://i50.tinypic.com/w17kut.jpg

Richardsof
28th July 2012, 09:22 AM
http://i47.tinypic.com/3167l00.jpg

Richardsof
28th July 2012, 09:26 AM
http://i46.tinypic.com/2q8r5sm.jpg

Richardsof
28th July 2012, 09:30 AM
http://i49.tinypic.com/oku6hv.jpg

Richardsof
28th July 2012, 09:42 AM
http://i46.tinypic.com/2w2oft5.jpg

Richardsof
28th July 2012, 09:47 AM
http://i45.tinypic.com/nyb692.jpg

Richardsof
28th July 2012, 09:53 AM
http://i45.tinypic.com/2hov8mo.jpg

Richardsof
28th July 2012, 09:55 AM
http://i48.tinypic.com/2960ra0.jpg

Richardsof
28th July 2012, 09:58 AM
http://i45.tinypic.com/2eyie7q.jpg

Richardsof
28th July 2012, 10:10 AM
http://i50.tinypic.com/2s6vcd0.jpg










thirudathe function 2011 at chennai - old heroines at the stage

Richardsof
28th July 2012, 10:16 AM
http://i47.tinypic.com/2q8mrzc.jpg

Richardsof
28th July 2012, 10:24 AM
http://i45.tinypic.com/2a98ajr.jpg

Richardsof
28th July 2012, 10:41 AM
http://i47.tinypic.com/b7m0r7.jpg

pic sent by our makkal thilagam mgr hardcore fan from tiruppr s. Ravichandran.

Richardsof
28th July 2012, 12:23 PM
http://i47.tinypic.com/ziufqf.jpg BANGALORE - ADIMAI PENN - 2011- LAVANYA THEATRE-

Richardsof
28th July 2012, 12:25 PM
http://i48.tinypic.com/29zvex3.jpg

Richardsof
28th July 2012, 12:28 PM
http://i48.tinypic.com/2gu0hhd.jpg

Raajjaa
28th July 2012, 01:10 PM
வேட்டைக்காரன் மறுவெளியீட்டில் 7 திரை அரங்குகளில் 1976ம் ஆண்டு சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது.

உலகம் சுற்றும் வாலிபன் 1994ம் ஆண்டு பெங்களூரில் 11 திரை அரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது.

வசூல் சக்கரவர்த்தி என்ற வார்த்தைக்கு அர்த்தம் இது தான்.

Raajjaa
28th July 2012, 01:15 PM
வினோத் சார்,

நன்றி சொல்ல வார்த்தை இல்லை.

Raajjaa
28th July 2012, 01:20 PM
வாசுதேவன் சார்,

அலிபாபாவும் 40 திருடர்களும் படத் தொகுப்பை வெளியிட்டதற்க்கு மிகவும் நன்றி.

Richardsof
28th July 2012, 01:36 PM
makkal thilagam mgr fan c.s.kumar article in kalki weekly magazinehttp://i45.tinypic.com/33mwnkx.jpg

Richardsof
28th July 2012, 02:29 PM
http://i48.tinypic.com/2n6x6z5.jpg

Richardsof
29th July 2012, 10:27 AM
http://i49.tinypic.com/3523rlk.jpg


mannadhi mannan - panathottam - mysore theatre notice

Richardsof
29th July 2012, 10:34 AM
http://i47.tinypic.com/54buch.jpg1964 - bangalore - thozhilali - vettaikaran advertisement in deccan herald news paper

Richardsof
29th July 2012, 10:37 AM
http://i46.tinypic.com/a0f6op.jpg

Richardsof
29th July 2012, 10:40 AM
http://i48.tinypic.com/bivu4z.jpg

Richardsof
29th July 2012, 10:51 AM
makkal thilagam mgr in madapura 50 th year remembrance .

http://i48.tinypic.com/20ob4g.jpg

Richardsof
29th July 2012, 10:55 AM
makkal thilagam mgr in araslinkumari http://i48.tinypic.com/316uf6r.jpg

Richardsof
29th July 2012, 10:57 AM
http://i47.tinypic.com/22geau.jpg

Richardsof
29th July 2012, 10:59 AM
http://i45.tinypic.com/29z4ms3.jpg

Richardsof
29th July 2012, 12:10 PM
http://i46.tinypic.com/v2xorc.jpg

Richardsof
29th July 2012, 12:12 PM
http://i45.tinypic.com/208tkpe.jpg

vasudevan31355
29th July 2012, 12:15 PM
டியர் esvee சார், அனைத்து தென்னிந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட மக்கள் திலகம் நடித்த படங்களின் தொகுப்புகளை அமுத சுரபியாய் அள்ளி வழங்கி விட்டீர்கள். எல்லாமே நன்றாக உள்ளன. பாராட்டுக்கள். இதோ இப்போது உங்கள் அனைவருக்காகவும் 'படகோட்டி' நிழற்படங்கள்.

http://img442.imageshack.us/img442/4421/snapshot20080201113913dd3.jpghttp://img267.imageshack.us/img267/9446/snapshot20080207170246dx6.jpg
http://img341.imageshack.us/img341/540/snapshot20080207172425mu6.jpghttp://img252.imageshack.us/img252/5488/snapshot20080207174323ra1.jpg
http://img339.imageshack.us/img339/3905/snapshot20080207173923uk5.jpghttp://img267.imageshack.us/img267/7403/snapshot20080207174510zi4.jpg

Richardsof
29th July 2012, 12:16 PM
http://i48.tinypic.com/3443xwm.jpg

Richardsof
29th July 2012, 12:19 PM
Dear vasu sir

excellent stills from padakoti .thanks a lot for posting makkal thilagam movies. hope we will continue our postings in both hubs.

vasudevan31355
29th July 2012, 12:20 PM
'ரிக்ஷாக்காரன்' படத்தில் புகழ் பெற்ற சுருள் சண்டைகாட்சி வீடியோவாக. இந்த சண்டைக்காட்சியை திரு.esvee சார் அவர்களுக்காவும், நண்பர் திரு.raajjaa அவர்களுக்காகவும் சமர்ப்பிக்கிறேன்.


http://www.youtube.com/watch?v=Oxy5eijf1Sg&feature=player_detailpage

Richardsof
29th July 2012, 12:22 PM
http://i48.tinypic.com/2gxqtn6.jpg

vasudevan31355
29th July 2012, 12:22 PM
டியர் raajjaa சார்,

தங்கள் அன்புப் பாராட்டிற்கு என் உளமார்ந்த நன்றி!

vasudevan31355
29th July 2012, 12:26 PM
Thank u very much esvee sir,

both opinions are same. kalakkalaam.

mr_karthik
29th July 2012, 04:59 PM
எஸ்.வீ.சார்,

மக்கள்திலகத்தின் ஆவணப்பதிவுகள் வரிசை அட்டகாசம்.

காணக்கிடைக்காத அபூர்வ ஸ்டில்கள் மற்றும் விளம்பரங்கள்.

தொடர்ந்து அசத்துங்கள்.

Richardsof
30th July 2012, 08:29 AM
http://i47.tinypic.com/2wqucsw.png

Dear karthik sir
thanks a lot for your nice comments.

Richardsof
30th July 2012, 08:58 AM
http://i49.tinypic.com/dcrli1.png

Richardsof
30th July 2012, 09:00 AM
http://i48.tinypic.com/21jsok4.png

Richardsof
30th July 2012, 09:02 AM
http://i47.tinypic.com/ixsilz.png

Richardsof
30th July 2012, 09:04 AM
http://i45.tinypic.com/m0c9i.png

Richardsof
30th July 2012, 09:48 AM
http://i49.tinypic.com/20p1rav.jpg

Richardsof
30th July 2012, 09:49 AM
http://i45.tinypic.com/35knxap.jpg

Richardsof
30th July 2012, 09:54 AM
http://i47.tinypic.com/261ovx2.jpg

vasudevan31355
30th July 2012, 10:17 AM
http://4.bp.blogspot.com/_DInijIeuhtU/SoZFCH8z1CI/AAAAAAAAASU/MfAcID2WUss/s320/mgr-Aayirathil-Oruvan.jpg

http://www.shotpix.com/images/49779319054781185158.pnghttp://www.shotpix.com/images/30664425473814697631.png

Richardsof
30th July 2012, 10:18 AM
1961- THIRUDATHE - BANGALORE - PAPER CUTTING

1964 - VETTAIKARAN -AND PADAKOTI . - BANGALORE PAPER CUTTINGS
http://i45.tinypic.com/330s4dv.jpg

Richardsof
30th July 2012, 10:28 AM
]1958 - nadodi mannan - bangalore paper cutting

1966 - rereleased alibaba 40 thirudargal at bangalore paper cutting

http://i49.tinypic.com/2vualop.jpg

Richardsof
30th July 2012, 10:37 AM
http://i45.tinypic.com/b480nq.jpg

Richardsof
30th July 2012, 10:39 AM
http://i45.tinypic.com/uadt0.jpg

Richardsof
30th July 2012, 10:40 AM
http://i48.tinypic.com/sm7k8y.jpg

Richardsof
30th July 2012, 10:41 AM
http://4.bp.blogspot.com/_DInijIeuhtU/SoZFCH8z1CI/AAAAAAAAASU/MfAcID2WUss/s320/mgr-Aayirathil-Oruvan.jpg

http://www.shotpix.com/images/49779319054781185158.pnghttp://www.shotpix.com/images/30664425473814697631.png
super stills vasudevan sir .

Richardsof
30th July 2012, 11:01 AM
http://i45.tinypic.com/2881du.jpg

groucho070
30th July 2012, 11:11 AM
Is this a scene from a movie. Asokan driving, right?


http://i48.tinypic.com/sm7k8y.jpg

Richardsof
30th July 2012, 11:25 AM
Sir.
yes


this still from anbe vaa. during climax secene asokan driving the car.

esvee

hattori_hanzo
30th July 2012, 11:44 AM
Is this a scene from a movie. Asokan driving, right?

yeah :-) and look at how the extras are made-up to match MGR's complexion.

esvee, just one suggestion. When uploading small pictures(not AnbE Vaa, but some of your earlier uploads), please crop the white parts and re-size. I think some of those photos need a higher resolution scan.

Richardsof
30th July 2012, 12:15 PM
http://i49.tinypic.com/16atlpl.jpg

Richardsof
30th July 2012, 12:18 PM
http://i49.tinypic.com/2chbchx.jpg

Richardsof
30th July 2012, 12:21 PM
http://i49.tinypic.com/29lo0mh.jpg

Richardsof
30th July 2012, 12:23 PM
http://i48.tinypic.com/33aqnox.jpg

Richardsof
30th July 2012, 12:25 PM
http://i49.tinypic.com/96fclt.jpg

Richardsof
30th July 2012, 12:28 PM
http://i46.tinypic.com/358vq8o.jpg

Richardsof
30th July 2012, 12:29 PM
http://i45.tinypic.com/20702mq.jpg

groucho070
30th July 2012, 12:51 PM
Thanks esvee and H_H, long time since I saw the movie.

and good job, esvee, some shots I have not seen before. Thanks again.

Richardsof
30th July 2012, 12:51 PM
அக்டோபர் 71இல் விகடனில் வந்த விமர்சனம். விமர்சனத்தை எழுதியவர் எம்.கே. ராதா! ராதாதான் இந்தப் படத்தின் ஒரிஜினலான அபூர்வ சகோதரர்கள் படத்தின் ஹீரோ, அதில் அவர் டபிள் ரோல் செய்திருந்தார். நன்றி, விகடன்!

என் விமர்சனத்தை நான் முன்னாலேயே எழுதிவிட்டேன், அதை இங்கே காணலாம்.

பல ஆண்டுகளுக்கு முன், நான் நடித்து வெளியான ஜெமினியின் ‘அபூர்வ சகோதரர்கள்’ கதை, இன்று ‘நீரும் நெருப்பும்’ என்ற வண்ணப்படமாக வெளிவந்திருக்கிறது.

முந்தைய படத்தில் நடித்த நடிகன் என்ற முறையிலோ அல்லது ஒரு விமர்சகன் என்ற நோக்கிலோ நான் இப்படத்தைப் பற்றிக் கருத்து கூறவில்லை. ஒரு ரசிகன் என்ற முறையிலேயே இதை எழுதுகிறேன்.

‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நீரும் நெருப்பும்’ ஆகிய இரு படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. இரண்டுமே அந்தந்தக் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றிருப்பவை.

இந்த வெற்றிக்கு முதல் காரணம் கதைதான். எந்தக் காலத்திலும் எல்லோராலும் ரசிக்கத்தக்க அருமையான கதை இது. விறுவிறுப்பான சம்பவங்களோடு, ஒருவர் உணர்ச்சியை மற்றவரும் சேர்ந்து அனுபவிக்கும் விசித்திரமான இரட்டைச் சகோதரர்களின் மனத்தில் பொங்கும் புயல்தான் கதைக்கு ஜீவநாடி.

‘அபூர்வ சகோதரர்கள்’ படம் கறுப்பு வெள்ளையில், அக்கால கட்டுப்பாட்டுக்கேற்ப 11,000 அடி அளவுக்குத் தயாரிக்கப்பட்டது.

‘நீரும் நெருப்பும்’ படம் தேவையான பொழுதுபோக்கு அம்சங்களோடு, வண்ணத்தில், பிரமாண்டமான காட்சி அமைப்புகளோடு கம்பீரமாகவும் விறுவிறுப்பு குன்றாமலும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

பழைய படத்தில் நான் சிரமப்பட்டு நடித்திருப்பதைப் போல், இப்படத்திலும் திரு. எம்.ஜி.ஆர். கடுமையாக உழைத்து சிறப்பாக நடித்திருக்கிறார். தம்பியின் (கரிகாலன்) பாத்திரத்தில் அவர் நடிப்பு அற்புதமாக அமைந்திருக்கிறது. தனது உள்ளத்துப் புயலைக் குமுறலோடு வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களில் அவருடைய நடிப்பின் சிறப்பு சுடர் விடுகி றது. அண்ணன் அடிபடும்போது சிரித்துக்கொண்டே துடிக்கும் இடமும், முடிவில் அடிபட்டு விழுந்திருக்கும்போது அண்ணன் சண்டை போடுவதை ரசிக்கும் காட்சியும் அருமை. சீன வியாபாரி பிரமாதம்.

திருமதி பானுமதி ஏற்ற பாத்திரத்தை இன்னொரு நடிகை ஏற்று நடிப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் ஜெயலலிதாவும் பாராட்டும்படி நடித்திருக்கிறார். அவருடைய விளையாட்டும் துள்ளலும் நல்ல கலகலப்பைத் தருகின்றன. ‘லட்டு லட்டு’ எனப் பாடி ஆடும் திருமதி பானுமதியின் பிரசித்தி பெற்ற காட்சியில் ஜெயலலிதாவும் சிரமப்பட்டு செய்திருக்கிறார். என்றாலும், எனக்கென்னவோ ‘லட்டு லட்டு’ பாடலின் இனிமை இந்தப் பாட்டில் இல்லை என்றே தோன்றுகிறது. அது பானுமதியின் குரல் மகிமையாகவும் இருக்கலாம்!

மார்த்தாண்டம் பாத்திரத்தை அசோகன் நகைச்சுவை கலந்து செய்திருக்கிறார். டி.கே.பகவதியும், மருதுவாக வரும் மனோகரும், மேக்கப்காரராக வரும் தேங்காய் சீனிவாசனும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ப.நீலகண்டன் அவர்களின் டைரக்ஷன் சிறப்பு பல இடங்களில் மின்னுகிறது.

மனோரமாவின் கொங்கு நாட்டுத் தமிழ் ஒரு சுவாரசியம்.

பாடல்களை என்னால் பிரமாதமாகச் சொல்ல முடியவில்லை என்றாலும், எம்.எஸ்.விசுவநாதனின் ரீரிகார்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது.

பொதுவாக, தரமான கதையும், பொழுதுபோக்கு அம்சங்களும் இணைந்திருப்பதில்லை. இந்தப் படத்தில் அவை இணைந்திருக்கின்றன. அதுவே படத்தின் சிறப்பு!

Richardsof
30th July 2012, 12:56 PM
பிரபல எழுத்தாளரும் வீணை வித்வானுமான திருமதி கீதா பென்னட், என் பிளாக்குகளைத் தொடர்ந்து படித்துப் பாராட்டி வருபவர். அவர் சமீபத்தில் எனக்கு அனுப்பிய ஒரு இ-மெயிலுக்கான பதிலை இன்றுதான் அவருக்கு அனுப்பினேன். அதுவே இன்றைய ‘என் டயரி’யின் பிளாக் விஷயமாகிவிட்டது.

இதோ...

அன்புள்ள திருமதி கீதாபென்னட் அவர்களுக்கு,

வணக்கம். தங்களுக்கும் ‘நீரும் நெருப்பும்’ படம் பிடிக்கும் என்று ஒரு தகவலாகத்தான் சொல்கிறீர்கள் என்று நினைத்தேன். எனக்கு அந்தப் படம் பிடித்ததற்கான காரணத்தை அறிய இத்தனை ஆவலாக இருப்பீர்கள் என்று நினைக்கவில்லை.

பொதுவாக எனக்கு எம்.ஜி.ஆர். படங்களே பிடிக்காது. அடிப்படையில் நான் ஒரு சிவாஜி ரசிகன். நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர். படம் ’குமரிக்கோட்டம்’. அது ரிலீசான சமயத்தில் நான் எட்டாம் வகுப்போ, ஒன்பதாம் வகுப்போ படித்துக்கொண்டிருந்தேன். அந்தப் படம் எனக்குச் சற்றும் பிடிக்கவேயில்லை. அது ஜீரணமாகவேண்டும் என்பதற்காக அடுத்த காட்சியிலேயே சிவாஜியின் ’தங்கைக்காக’ பார்த்தவன் நான்.

என்றாலும், ’குமரிக்கோட்டம்’ படப் பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தன. ‘எங்கே அவள்... என்றே மனம்... தேடுதே ஆவலாய்...’, ‘நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள்...’ இரண்டும் எனக்கு அத்தனைப் பிடிக்கும். பாடகர்களில் நான் பெரிதும் டி.எம்.எஸ். ரசிகன். சின்ன வயதிலிருந்தே அவரது பாடல்களைக் கேட்டு, உண்டு, சுவாசித்து வளர்ந்தவன். எனக்கு நினைவு தெரிந்து, ‘கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி, விவசாயி...’, ‘நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்...’ போன்ற எம்.ஜி.ஆர். படப் பாடல்களையும், அவை டி.எம்.எஸ். பாடியவை என்பதால் ரசித்திருக்கிறேன்.

அந்த வகையில் ’குமரிக்கோட்டம்’ படப் பாடல்களும் இனிமையாக இருக்கவே, அதன்பின் எம்.ஜி.ஆர். படங்களையும் பார்க்கத் தொடங்கினேன். பல படங்கள் பார்த்திருக்கிறேன். அவற்றில் எனக்குப் பிடித்தவை நீரும் நெருப்பும், நல்ல நேரம், மலைக்கள்ளன் ஆகியவை. ’பல்லாண்டு வாழ்க’ படத்தையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.

’பல்லாண்டு வாழ்க’ படத்தில் பல அபத்தங்கள் இருந்தாலும், கதை மனதுக்கு இதமாக இருந்தது. அதில் எம்.ஜி.ஆரின் கதாபாத்திரம் மென்மையாக இருந்தது. எனவே, அந்தப் படம் பிடித்தது.

மலைக்கள்ளனில் நிஜமாகவே எம்.ஜி.ஆர். நடிப்பு அருமையாக இருந்தது.

’நல்ல நேரம்’ யானைகளுக்காக ரசித்துப் பார்த்த படம்.

’நீரும் நெருப்பும்’ படத்துக்கு வருவோம். தலைப்பே என்னைக் கவர்ந்தது. கதை, கதாநாயக நடிகர் என எதைப் பற்றியும் யோசிக்காமல், காளிதாஸ் முதல் நேற்றைக்கு வெளியான மாசிலாமணி வரைக்கும் வெறுமே சினிமா தலைப்புகளை மட்டுமே கொடுத்து எனக்குப் பிடித்த முதல் பத்து தலைப்புகளைப் பட்டியலிடச் சொன்னால், அந்த முதல் பத்தில் முதலாவதாக ’நீரும் நெருப்பும்’ இருக்கும். அது ஏன் என்றே தெரியவில்லை, எனக்கு அந்தத் தலைப்பு அத்தனைப் பிடிக்கும். அந்தத் தலைப்புக்காகவே அந்தப் படத்துக்கு நான் போனேன்.

படத்தின் கதை அந்த நேரத்தில் எனக்கு மிகப் புதுமையாகத் தெரிந்தது. அண்ணனை அடித்தால் தம்பிக்கு வலிக்கும் என்கிற சமாசாரமே வித்தியாசமாக இருந்தது. பிரமாதமான கலரில் படமாக்கப்பட்டு இருந்தது அந்தப் படம். எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேஷம். நன்றாகவே வித்தியாசம் காட்டி நடித்திருந்ததாக ஞாபகம். இதெல்லாவற்றையும்விட படத்தில் எனக்கு ரொம்பப் பிடித்திருந்த அம்சம், இரண்டு எம்.ஜி.ஆர்களும் ஒருவரோடொருவர் சண்டை போடும் காட்சி. படு த்ரில்லிங்காக இருந்தது. அதற்கு முன் இப்படியான டபுள் ஆக்ட் படம் எதையும் நான் பார்த்திருக்கவில்லை. எனவே, இரண்டு எம்.ஜி.ஆர். ஒரே காட்சியில் தோன்றியதே எனக்குப் புதுசாக இருந்ததென்றால், அவர்கள் ஒருவரோடொருவர் வாள் சண்டை வேறு ஆக்ரோஷமாகப் போட, ரொம்பவே ரசித்துப் பார்த்தேன். அந்தக் காட்சியில் எடிட்டிங் படு பிரமாதம்! இவர் வாளை வீச, சட்டென்று அவர் தலையைப் பின் வாங்க, அவர் கத்தி சுழற்ற, இவர் ஒதுங்கித் தப்பிக்க என இருவரையும் மாறி மாறி எடிட் செய்து காட்டுவது அத்தனை லேசான சமாசாரமில்லை. ஆனால், அந்த நேரத்தில் எனக்கு இந்த டெக்னிக் எதுவும் தெரியாது. என்றாலும், ‘அட, எப்படி ரெண்டு எம்.ஜி.ஆர். சண்டை போடுற மாதிரி எடுத்தாங்க?!’ என்று வியந்துகொண்டே படம் பார்த்தேன்.

நான் ரசித்துப் பார்த்து என்ன..? அந்தப் படம் ஃப்ளாப்! அது பெரும்பாலானோருக்கு ஏன் பிடிக்கவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் வேறு எதையோ எதிர்பார்க்கிறார்கள். எனக்கு ஒரு படத்தில் ஏதாவது ஒரு அம்சம் நன்றாக இருந்துவிட்டாலும் போதும், என்னால் அதை ரசிக்க முடியும். ரசிப்பேனே தவிர, அது சிறந்த படமா, இல்லையா என்பது வேறு விஷயம்! நன்றாக ஓடிய எத்தனையோ படங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. அதற்கென்ன செய்வது?

அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய ஆங்கிலக் கதையை, 1949-லேயே எஸ்.எஸ்.வாசன் அவர்கள், ‘அபூர்வ சகோதரர்கள்’ என்ற தலைப்பில் எம்.கே.ராதா (இரு வேடங்கள்), பானுமதி ஆகியோரைப் போட்டு, இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் திரைப்படமாக எடுத்து வெளியிட்டார். அதிலும் எம்.கே.ராதாவும் எம்.கே.ராதாவும் போடும் கத்திச் சண்டை படு பிரமாதம் என்பார்கள். நன்றாக ஓடிய படம் அது. அதைத்தான் 1971-ல் எம்.ஜி.ஆரை வைத்து ப.நீலகண்டன் டைரக்ட் செய்து வெளியிட்டார். பொதுவாக எம்.ஜி.ஆர். படம் எதுவும் அதிகம் ஃப்ளாப் ஆனதில்லை. ‘நீரும் நெருப்பும்’ ஏன் ஓடவில்லை என்று எனக்குப் புரியவில்லை.

இந்தப் படம் மட்டுமல்ல, நான் ரசித்துப் பார்த்த பல படங்கள் ஃப்ளாப் ஆகியிருக்கின்றன. ஸ்ரீதர் இயக்கிய ‘ஓ மஞ்சு’ படமும் அவற்றில் ஒன்று.

கௌரவம், ராஜபார்ட் ரங்கதுரை, ரத்தக்கண்ணீர் தவிர, பொதுவாக அன்றைக்கு நான் ரொம்ப ரசித்துப் பார்த்த பல படங்களை இன்றைக்குப் பார்க்கிறபோது அத்தனை ரசனையாகத் தெரியவில்லை. காரணம், கால மாற்றம். ’பாலும் பழமும்’ படத்தை அத்தனை ரசித்துப் பார்த்திருக்கிறேன். அதே போல் ‘பாச மலர்’. அவற்றைச் சமீபத்தில் பார்த்தபோது, போரடித்தன.

நீரும் நெருப்பும், ஓ மஞ்சு உள்ளிட்ட படங்களும்கூட இன்றைக்குப் பார்த்தால், ஒருவேளை போரடிக்குமோ என்னவோ! ஆனால், அவற்றை மீண்டும் ஒருமுறை பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை.

groucho070
30th July 2012, 12:57 PM
M. K. Radha was also MGR's stage guru, no? I know he was the hero in Sathi Leelavathi.

Richardsof
30th July 2012, 01:10 PM
முதியவர் ஒருவர் இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்வதற்குப் பக்கத்து வீட்டு இளைஞனையும் அழைத்துக் கொண்டு பெண் பார்க்கச் செல்கிறார். முதியவருடன் வந்த இளைஞனின் அழகில் மனதைப் பறிகொடுத்த பெண் இளைஞன் தான் மணமகன் என நினைத்து சந்தோஷக் கனவில் மிதக்கிறυள். தன்னைப் பெண் பார்க்க வந்தது முதியவர் என்பதை மண மேடையில் அறிந்து அதிர்ச்சியடைகிறாள். இளைஞனை மனதில் நினைத்துக் கொண்டு முதியவரின் தாலியைக் கழுத்த்தில் சுமக்கும் இளம் பெண் ணின் கதை தான் தாலி பாக்கியம்.
எம்.ஜி.ஆரின் பக்கத்து வீட்டில் சரோஜாதேவி வசிக்கிறார். சிறு வயது முதலே பழகும் எம்.ஜி. ஆரும் சரோஜாதேவியும் பருவ வயதை அடைந்ததும் காதல் வலையில் வீழ்கிறார்கள். சரோஜாதேவியின் தகப்பன் மறுமணம் செய்வதற்காகப் பெண் பார்க்கப் போகும் போது எம்.ஜி. ஆரையும் அழைத்துச் செல்கிறார். மணமகளான எம்.என். ராஜம் தனது எதிர்காலக் கணவன் எம்.ஜி.ஆர் எனத் தவறாக நினைத்து மனதைப் பறிகொடுக்கிறாள். எஸ்.வி. சுப்பையாவுக்கு எம்.என். ராஜத்தைப் பிடித்து விடுகிறது. ஆகையால் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிக்கிறார் எம்.ஜி.ஆர். தான் தனது கணவன் என்ற கனவில் மிதக்கும் எம்.என். ராஜம் திருமண நாளை எதிர்பார்க்கிறாள்.மணமேடையில் எஸ்.வி. சுப்பையாவைக் கண்ட எம்.என். ராஜம் அதிர்ச்சியடைகிறாள். சந்தர்ப்ப சூழ்நிலையினால் எஸ்.வி. சுப்பையாவுக்கு மனைவியாகிறாள் எம்.என். ராஜத்தின் மனதில் எம்.ஜி. அதன் உருவம் ஆழமாகப் பதிந்ததனால் எம்.ஜி. ஆரை மறக்க முடியாது தடுமாறுகிறார் எம்.என். ராஜம். தன் மனதில் உள்ள ஆசையை ஒருநாள் எம்.ஜி.ஆரிடம் கூறுகிறார் எம்.என். ராஜம். எம்.என்.ராஜத்தின் விபரீத ஆசை தவறெனக் கூறுகிறார் எம்.ஜி.ஆர். எம்.என். ராஜத்துக்கும் புத்திமதி கூறி அனுப்புகிறார். இவர்கள் பேசியதை மறைந்திருந்து கேட்ட நம்பியார் தனது குள்ளநரித்தனத்தால் எம்.ஜி. ஆரின் குடும்பத்துக்கும் எஸ்.வி. சுப்பையாவின் குடும்பத்துக்கும் இடையில் பூசலை உருவாக்குகிறார். நம்பியாரின் மிரட்டலுக்குப் பணிந்த எம்.என். ராஜமும் இதற்கு உடந்தையாகச் செயற்படுகிறார்.
குடும்பப் பிரச்சினை விஸ்வரூபமானதால் எம்.ஜி.ஆ.ரின் மீதான சரோஜாதேவியின் காதலுக்குத் தடை ஏற்படுகிறது. சரோஜா தேவியின் கழுத்தில் தாலி கட்டுவேன் என்று எம்.ஜி.ஆர். சவால் விடுகிறார். சரோஜாதேவியின் கழுத்தில் எம்.என். ராஜம் தாலியைக் கட்டி விட்டு எம்.ஜி.ஆர். திருட்டுத் தாலி கட்டி விட்டதாகக் கூறுகிறார். இந்தப் பிரச்சினையை விசாரித்த ஊர்ப் பஞ்சாயம் எம்.ஜி.ஆரை ஊரைவிட்டு விலக்கி வைக்கிறது. தான் குற்றமற்றவன் என்பதை இறுதியில் நிரூபிக்க எம்.ஜி.ஆர். சரோஜாதேவியை கரம் பிடிக்கிறார்.
எம்.ஜி.ஆர். சரோஜாதேவி, எஸ்.வி. சுப்பையா எம்.என். நம்பியார், வி. நாகையா நாகேஷ், மனோரமா ஆகியோர் நடித்தனர். புளுவாரூர்சுந்தராமவின் மூலக் கதைக்கு ஆருர்தாஸ் வசனம் எழுதினார். பாடல்கள் வாலி, இசை கே.வி. மகாதேவன். அன்னை இல்லாமல் பிறந்தவர் யார், கண் பட்டது நெஞ்சம் புண்பட்டது நெஞ்சம், உள்ளம் ஒரு கோயில், இதயத்தை அந்த இறைவன் படைத்து வைத்தான் ஆகிய பாடல்கள் கதைக்கு வலுச் சேர்த்தன.
வரலஷ்மி நிறுவனத்தின் பெயரில் கண்ணாம்பா தயாரித்த இப்படத்தை அவரது கணவன் கே.பி. நாகபூஷணம் இயக்கினார்.
ரமணி
மித்திரன்13/05/12
Posted by வர்மா at 7:18 AM No comments:

Richardsof
30th July 2012, 01:18 PM
[அன்பு மூன்றெழுத்து, அறிவு மூன்றெழுத்து, அண்ணா மூன்றெழுத்து என்று அடுக்கிக்கொண்டே போவார் கலைஞர் மு.கருணாநிதி. ஆனால், மக்களை ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக மயங்க வைத்த அந்த மந்திர மூன்றெழுத்து - எம்.ஜி.ஆர்-தான்! இன்றைக்கும் அவரின் பிறந்த நாளை முன்னிட்டுத் திரும்பும் திசையெல்லாம், தெரு முக்குகளில் எல்லாம் ஒரு ஸ்டூல் போட்டு, எம்.ஜி.ஆரின் படத்தை வைத்து மாலை அணிவித்து, ஊதுவத்தி ஏற்றி, அருகே ஸ்பீக்கரில் எம்.ஜி.ஆரின் படப் பாடலை ஒலிக்கவிட்டு, தங்கள் தலைவனை நெகிழ்ச்சியோடு மக்கள் நினைவுகூர்வதைப் பார்க்க முடிகிறது.

எனக்கு நினைவு தெரியத் தொடங்கிய காலத்திலிருந்தே நான் சிவாஜி ரசிகனாகத்தான் வளர்ந்தேன். நான்காம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது, என்னைப் போன்று சிவாஜி ரசிகர்களாக இருக்கும் பிள்ளைகளுடன்தான் நட்பு பாராட்டுவேன். எம்.ஜி.ஆரை ஒரு பையன் ரசிக்கிறான் என்றால், அவன் நிச்சயம் ஒரு ரவுடியாகத்தான் இருப்பான் என்று என்னவோ இனம்புரியாத பயம் அந்தப் பிஞ்சுப் பருவத்தில் என் மனதில் எழுந்திருந்தது. சிவாஜியின் படப் பாடல்களை ரசித்துக் கேட்கும் நான், எம்.ஜி.ஆர். பாடலையும் உள்ளுக்குள் ரசிப்பேன். வெளியே காண்பித்துக் கொள்ள மாட்டேன். சிவாஜியே சொந்தக் குரலில் பாடுகிறார் என்பது என் அப்போதைய எண்ணம். சிவாஜி அளவுக்கு எம்.ஜி.ஆரும் பாடிவிடுகிறாரே என்று மனசுக்குள் ஒரு காழ்ப்பு உணர்வு எழும். இருவருக்குமே டி.எம்.எஸ். என்கிற ஒரு காந்தர்வக் குரலோன்தான் பின்னணி பாடுகிறார் என்கிற உண்மை எனக்கு எட்டாம் வகுப்பு படிக்கும்போதுதான் தெரிய வந்தது. டி.எம்.எஸ்ஸின் அற்புதமான பாடல்களாலேயே நான் என்னையும் அறியாமல் எம்.ஜி.ஆரை ரசிக்கத் தொடங்கியிருந்தேன்.

நான் பார்த்த முதல் எம்.ஜி.ஆர். படம் ‘குமரிக் கோட்டம்’. என் சின்ன வயதில் மிகவும் அரிதாகத்தான் நான் திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் சிவாஜி படங்கள்தான். இல்லையென்றால் பக்திப் படம். பத்தாம் வகுப்புக்கு வந்த பின்னர்தான், நான் தனியே சென்று திரைப்படங்கள் பார்க்கத் தொடங்கினேன். சிவாஜிக்கு அடுத்தபடியாக நான் அப்போது சென்று ரசித்துப் பார்த்தவை ஜெய்சங்கர் படங்கள்தான்.

எம்.ஜி.ஆர். படங்களில் நீரும் நெருப்பும், பல்லாண்டு வாழ்க இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த படங்கள். தவிர, மாட்டுக்கார வேலன், தாயைக் காத்த தனயன், எங்க வீட்டுப் பிள்ளை, நான் ஆணையிட்டால், அடிமைப் பெண், ஒளிவிளக்கு, சிரித்து வாழ வேண்டும், பறக்கும் பாவை எனப் பல படங்கள் பார்த்திருக்கிறேன். ரசித்தும் இருக்கிறேன்.

சிவாஜி நடிப்போடு எம்.ஜி.ஆர். நடிப்பை ஒப்பிடக் கூடாது. சிவாஜி படத்தோடு எம்.ஜி.ஆர். படத்தை ஒப்பிடக் கூடாது. இட்லி இட்லிதான்; தோசை தோசைதான்; பொங்கல் பொங்கல்தான்; பூரி பூரிதான். ஒவ்வொன்றும் ஒவ்வொறு சுவை. ஒன்றோடு ஒன்றை ஒப்பிடக் கூடாது. இந்த ஞானம் வந்த பின், நான் நிறைய எம்.ஜி.ஆர். படங்களையும் பார்க்கத் தொடங்கினேன்.

எம்.ஜி.ஆர். தமிழக முதல்வர் ஆனதிலிருந்து அவர் மறையும் வரையில் நான் அ.தி.மு.க. விசுவாசியாகத்தான் இருந்தேன். அவர் உயிரோடு இருந்திருந்தால், இன்றைக்கும் என் ஓட்டு அவருக்குத்தான்.

எனக்குத் தெரிந்து அவரின் ஆட்சி, பொற்கால ஆட்சிதான். அவரின் ஆட்சியிலும் எத்தனையோ போராட்டங்கள், வன்முறைச் சம்பவங்கள், கொலை, கொள்ளை போன்றவை நிகழ்ந்திருக்கலாம். ஆனால், இன்று போல் ஒட்டு மொத்தமாகச் சட்டம், ஒழுங்கு கெட்டுப் போய்விடவில்லை. எம்.ஜி.ஆர். இருக்கிறார்; அவர் பார்த்துக் கொள்வார்; ஜனங்களுக்கு எது நல்லது என்று அவருக்குத் தெரியும்; அவர் ஒரு முடிவு எடுத்தால், அது சரியாகவே இருக்கும். அவர் ஏழை எளியவர்களைக் கைவிட மாட்டார்; தவறு செய்கிறவர்கள் தக்க தண்டனை பெறுவார்கள் என்கிற நம்பிக்கை ஒவ்வொரு குடிமகனிடமும் அன்றைக்கு இருந்தது.

1983 அல்லது 1984 என்று நினைக்கிறேன்... வருடம் சரியாக நினைவில் இல்லை; அப்போது நான் சென்னை, குரோம்பேட்டையில் உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில் தங்கிக்கொண்டு, டைப்ரைட்டிங் இன்ஸ்ட்ரக்டர் கோர்ஸுக்குப் படித்துக்கொண்டு இருந்தேன். ஆறு வார கோர்ஸ் அது. கோடை விடுமுறையில், அந்தப் பள்ளி வளாகத்தின் வகுப்பறைகளை எங்களைப் போன்ற மாணவர்கள் குழுக் குழுவாகத் தங்கிக் கொள்ள அனுமதித்திருந்தார்கள். ஆறு வார முடிவில் அந்தப் பள்ளியிலேயே தேர்வு நடத்தப்பட்டது.

மெயின் ரோட்டிலிருந்து உள்ளடங்கி இருந்த அரசுப் பள்ளி அது. காபி, டிபன், சாப்பாடு சாப்பிட வேண்டுமென்றால் நீள, நெடுக நடந்து ‘வெற்றி’ தியேட்டர் வரை வர வேண்டும். அப்படி ஒரு நாள் காலையில் 8 மணி சுமாருக்கு, நானும் என் நண்பர்களுமாக வந்து டிபன், காபி சாப்பிட்டுவிட்டுத் திரும்பிச் செல்கிறபோது, அங்கேயுள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒரே கூட்டமாக இருந்ததைப் பார்த்தோம். கூட்டம் என்றால் பெருங்கூட்டம் இல்லை; ஒரு முப்பது நாற்பது பேர் இருப்பார்கள். என்னவென்று அறிய ஆவலோடு போய் எட்டிப் பார்த்த எங்களுக்கு இன்ப அதிர்ச்சி. எம்.ஜி.ஆர். வந்திருந்தார். காவல்துறை உயர் அதிகாரிகளோடு அவர் ஏதோ தீவிரமாகப் பேசிக்கொண்டு இருந்தார். அவர் முகத்தில் கவலை படிந்திருந்தது. என்ன பிரச்னை என்று அப்போது தெரியவில்லை. நான் எம்.ஜி.ஆரை மிக அருகே பார்த்தது அப்போதுதான்! அவர் கிளம்பிச் செல்கிறவரைக்கும் இருந்து, அவரைப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டுப் பின்னர் நாங்கள் எங்கள் பள்ளிக்கூடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்.

பின்புதான், அகரம் நாராயணன் என்கிற ஒரு ரவுடி அன்றைக்கு அதிகாலையில் குரோம்பேட்டையில் சாலையோரம் இருந்த ரிக்*ஷாக்காரர், பங்க் கடைக்காரர் என ஐந்தாறு பேரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டான் என்கிற விஷயம் தெரிய வந்தது. அதற்காகத்தான் நிலைமையை ஆராய எம்.ஜி.ஆரே நேரில் வந்துவிட்டுப் போயிருந்தார். அகரம் நாராயணன் காலில் ஸ்ப்ரிங் பூட்ஸ் அணிந்திருப்பான், எத்தனை உயரமான சுவரானாலும் சுலபமாக எகிறித் தாவிப் போய்விடுவான், அவனைப் பிடிக்கவே முடியாது என்றெல்லாம் வதந்திகள். எம்.ஜி.ஆர் போலீஸ் படையை முடுக்கிவிட்டு, அடுத்த சில மாதங்களிலேயே அவனைக் கைது செய்து சிறையில் தள்ளிவிட்டார். குரோம்பேட்டை மக்களுக்கு நெடு நாளாக இருந்த ஒரு தலைவலி ஓய்ந்தது.

பொதுவாகவே, ஆட்சியாளர்கள் மீது இப்போது இருப்பது போன்ற ஒரு வெறுப்போ, மிரட்சியோ மக்களுக்கு எம்.ஜி.ஆரிடம் இல்லை. நல்லவர்கள் அவர் ஆட்சியில் நிம்மதியாகத்தான் இருந்தார்கள். ஒரு திறமையான பஸ் டிரைவர் மீது, இவர் நம்மைப் பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்ப்பார் என்று முழு நம்பிக்கை வைத்துப் பயணிகள் அயர்ந்து தூங்குவதில்லையா, அது போல ஒரு நம்பிக்கை எம்.ஜி.ஆரிடம் மக்களுக்கு இருந்தது. கடவுள் போல, ஒரு தேவ தூதன் போலத்தான் மக்கள் அவரை மதித்தார்கள்; போற்றினார்கள்.

என்றாலும்கூட, கலைஞருக்கு இன்று தொட்டதற்கெல்லாம் பாராட்டு விழாக்கள் நடக்கிற மாதிரி எம்.ஜி.ஆருக்கு நடந்ததாகவே தெரியவில்லை. இத்தனை ஜால்ரா சத்தங்கள் அன்றைக்கு நம் காதைக் கிழிக்கவில்லை. துக்ளக் சோ எம்.ஜி.ஆரைத் தன் பத்திரிகையில் எத்தனையோ கேலிச் சித்திரங்கள் போட்டு, எம்.ஜி.ஆருக்கு ஆட்சி செய்யவே தெரியாது, கோமாளி ஆட்சி என்றெல்லாம் விமர்சித்தார். எதுவுமே எடுபடவில்லை!

எம்.ஜி.ஆர். எதையுமே கண்டுகொள்ளவில்லை. கலைஞர் போல் பதிலுக்குப் பதில் வரிந்து கட்டிக்கொண்டு அறிக்கை விடவில்லை; பதில் சொல்லிக்கொண்டு இருக்கவில்லை. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தார். அவர் மீது அம்பு எய்தவர்களே களைத்துப் போய் ஒரு கட்டத்தில் வில்லைக் கை நழுவ விட்டார்கள்.

யாரையும் எம்.ஜி.ஆர். எடுத்தெறிந்து பேசியதாக, யோசித்துப் பார்த்தாலும் எனக்குத் தெரியவில்லை. குறிப்பாக, தொழிலில் போட்டியாக இருந்த சிவாஜி கணேசன், அரசியலில் போட்டியாக இருந்த கருணாநிதி இருவரையும் எம்.ஜி.ஆர். ஒரு நாளும் தரக் குறைவாகவோ, மரியாதைக் குறைவாகவோ விமர்சித்ததில்லை. ‘என் நண்பர் கருணாநிதி அவர்கள்...’, ‘என் தம்பி கணேசன்...’ என்றுதான் பேசுவார்.

ஒருமுறை, சென்னை வானொலியில் வி.ஐ.பி. தொகுத்து வழங்கும் தேன் கிண்ணம் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக்கொண்டு இருந்தது. தொகுத்து வழங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிவாஜி ரசிகன் என்ற முறையில் அந்த நிகழ்ச்சியை நானும் ரசித்துக் கேட்டேன். டி.எம்.எஸ். பாடல்கள் பட்டையைக் கிளப்பின. சிவாஜி ஒவ்வொரு குறிப்பைச் சொன்ன பிறகும் அதற்கான பாட்டு ஒலிபரப்பாகும். இப்படிப் பத்துப் பன்னிரண்டு பாடல்கள் அன்று ஒலிபரப்பாயின. பெரும்பாலும் தான் நடித்த படங்களிலிருந்தும், ஒன்றிரண்டு பாடல்களை மட்டும் வேறு சில படங்களிலிருந்தும் தொகுத்து வழங்கினார் சிவாஜி. நிகழ்ச்சியின் இறுதிவரையில் எம்.ஜி.ஆர். பாடல் எதையுமே சிவாஜி குறிப்பிடவில்லை; ஒலிபரப்பவில்லை. சிவாஜி ரசிகனாக இருந்தபோதிலும், எனக்கே இது கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது.

மறுநாள், செய்தித்தாள்களில் எம்.ஜி.ஆர். தேனியிலோ அல்லது பெரியகுளத்திலோ கூட்டத்தில் பேசிய பேச்சு முழுமையாகப் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. படித்தேன். சிவாஜியைப் பற்றிக் குறிப்பிட்டு ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்திருந்தார். “தம்பி கணேசனுக்கு இணையான நடிகர் உலகிலேயே இல்லை. ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ சிறந்த நடிகர். அதனால், நமது கணேசனை ‘தென்னகத்து மார்லன் பிராண்டோ’ என்பார் அறிஞர் அண்ணா. உண்மையில், மார்லன் பிராண்டோதான் தன்னை ‘ஹாலிவுட் சிவாஜி’ என்று பெருமையோடு சொல்லிக் கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு ஈடு, இணையற்ற நடிகர் தம்பி கணேசன்” என்று பேசியிருந்தார். சிலிர்த்துப் போனேன்.

எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர்தான். அவர் இடத்தை இனியொருவர் பிடிக்க முடியாது!
.
Posted by Ravi Prakash at Sunday, January 17, 2010 comments (17)
Labels: வி.ஐ.பி

Richardsof
30th July 2012, 03:20 PM
1971 ஆண்டு 15 -8 -1971 சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சி - சென்னை வானொலியில் மக்கள் திலகத்தின் பேட்டி ஒலி பரப்பியது .ஒரு மணி நேரம் .... மக்கள் திலகம் தனது அனுபவங்களை சொல்லி பல பழைய [ தான் நடிக்காத படங்களிலிருந்து] பல பாடல்களை தொகுத்து வழங்கினார். இறுதியில் தனக்கு பிடித்த பாடல் நடிகர் திலகம் - சாவித்திரி நடித்த பிராப்தம் என்ற படத்தில் இடம் பெற்ற tms -சுசீலா இனைந்து பாடிய சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் ........ முடிவே இல்லாதது என்ற பாடலை தெரிவித்தார் .மக்கள் திலகம் அவர்களுக்கு பிடித்த பாடல் என்றவுடன் நாங்கள் அந்த காலத்தில் பிராப்தம் படத்தை பார்த்தோம் .
.

Richardsof
30th July 2012, 04:06 PM
http://i50.tinypic.com/261kc5d.jpg

Richardsof
30th July 2012, 04:08 PM
http://i47.tinypic.com/2r4la9w.jpg

Richardsof
30th July 2012, 04:15 PM
http://i47.tinypic.com/4roq61.jpg

Richardsof
30th July 2012, 04:25 PM
http://i46.tinypic.com/2i1jsie.jpg

goldstar
30th July 2012, 05:08 PM
Sir.
yes


this still from anbe vaa. during climax secene asokan driving the car.

esvee

One of my most liked MGR movie Anbe Vaa. Best songs + screen play + comedy + presentation + of course MGR. MGR-Nagesh comedy ultimate.

Cheers,
Sathish

Richardsof
30th July 2012, 08:37 PM
Dear sathish sir

Makkal thilagam MGR in Anbe vaa is evergreen movie.

Richardsof
30th July 2012, 08:52 PM
Tamil films are dominated predominantly by action genre, other categories like thriller, horror, devotional, comedy and romance have also had their time of glory at different times. Of all these it is romance which comes a close second to action in terms of the number of films produced in the genre.

It may be argued that even action movies have romance in them and vice versa. But romance seen through out the movie unadulterated is a feeling by itself. While most films have some aspect of romance at least as a subplot a romance film can be described as any film in which the protagonists live or die for their love. The numbers of romance movies in Tamil may not match the number of action films. But Tamil cinema did have quite a few memorable films.

When films started talking with 'Kalidas' in 1931 film makers tried many innovations to make the new art live for long. One of such is the invention song and dance sequences. As the early films mostly dealt with historical and mythological characters they were all mostly didactic. When social films started flowing from the forties film makers had all the liberty to explore human emotions. Of the human emotions they found easy to express was love and romance which is saleable more than others.

The black-and-white era contributed some unforgettable moments of romance. Even actors were willing to do some bold scenes by standards then.

MK Thiyagaraja Bhagavathar was hailed as a romantic hero as much as singing sensation. MKT actually taught his generation of actors the aspect of subtle romance. A classic example is Haridas. In the introductory song 'Vaalvilor thirunal...' in which he comes riding a horse, his subtle romantic expressions like his squint looks at the girls on the streets, winking the eyes had huge effect on female viewers.

If you notice the most successful heroes who went on to become idols in Tamil are the ones who excelled in not just action but also romance. Specialising in just one won't do. This trend existed until the mid eighties when angry young men were clearly differentiated from chocolate lover boys due to the changing times.

After MKT-PUC era the trimurti who ruled the Tamil film industry had fair chances to showcase their romantic inclinations on screen. While one was hailed as a mass action hero another was branded melodramatic. The third one was branded King of Romance. But during that period all of them have lived some memorable romantic life on screen irrespective of their images.

Nadigar Thilagam Sivaji Ganesan has a handful of movies in which he excelled in romantic scenes. Movies like 'Sabash Meena' and the cult song 'Chithiram Pesuthadi'... are great romantic memorabilia from the black and white era. In the colourful 'Puthiya Paravai' Sivaji's every movement with Saroja Devi talks love. Ananda Vikatan magazine raved about the lover boy Sivaji more than the histrionic Sivaji when it wrote the review of 'Deiva Magan' in 1969.

The romantic scenes in MGR films were altogether different. He mastered subtle romance better than any of his contemporaries. The way he holds the upper arm of his love and giving it a thrust will delight any romantic heart. The way he puts his hand around the neck and jerk s the heroines towards him is a winning art. The way MGR performed his romantic scenes with Savithri in 'Vettaikaran' is a talking point even today.

Gemini Ganesan was called Kadhal Mannan probably because other popular tiles were already taken by the other two. I say this it is because the Kadhal Mannan was exemplary as a pathos hero. But still as endearing lover he did capture many hearts in films like 'Missiamma', 'Thenilavu' and more.

Director Sridhar who is said to have pioneered soft romances in Tamil films is also a pioneer in triangular love themes. His 'Kalyana Parisu' is a classic love story which created new tenets for romance. When Gemini Ganesan shouts to inform he is gong to the college signaling Saroja Devi to follow him is one the most romantic moments. This kind of moments inspired many directors who came after Sridhar. The switching lights on-off to show love in 'Ek Duje Ke Liye' is one of it. Till the beginning of seventies romance was only a part of the theme and not the life line of films.

Later when Tamil cinema entered the "new wave" age from the early seventies differently made love stories began to crop up. During this period even Sivaji Ganesan tried some full blown romance movies. Though his age and mature stature could have hummed oddness Sivaji did try his hand. Films like 'Rojavin Raja', 'Deepam' and 'Ilaya Thalaimurai' can be classified romantic movies of Sivaji. MGR also showed his mettle in some bold scenes in movies like 'Raman Thediya Seethai' and 'Idhayakkani'. But his 'Anbe Vaa' is a romantic classic. Unfortunately Sivaji did not have an out and out romantic film like 'Anbe Vaa' in his entire career. The only movie which can compete with 'Anbe Vaa' in terms of sheer grandeur is the tragic love story of 'Vasantha Maligai'.

RAGHAVENDRA
30th July 2012, 10:00 PM
Dear Vinod @ esvee
First let me appreciate your (in)valuable posts of images of MGR - which are very rare in nature. More so, the kannada news paper cuttings. It is a great effort. I do not know if they are your own preservation or reproduction here, but it is a great work.

MANY POSTS OF you seem like a quotes. If so, please post them as quotes here and mention the source. for e.g. if you would like to present the words so and so, write them as
so and so so that they are separated from your personal narration.

Coming to romance movies, NT in his every film has produced the element of romance suiting the situation. Vasantha Maligai can not be termed "romance" movie but a love story, where as the romance film of NT can be mentioned to be "Galatta Kalyanam" or "Sumathi En Sundari". There are innumerable examples of romance element outdoing the so-called romance films. Let's come to them in some other occasion.

Once again my hearty appreciations to you for the effort you are putting in presenting the archives pertaining not only to MGR but others also.

Raghavendran

Richardsof
31st July 2012, 05:17 AM
Dear Vinod @ esvee
First let me appreciate your (in)valuable posts of images of MGR - which are very rare in nature. More so, the kannada news paper cuttings. It is a great effort. I do not know if they are your own preservation or reproduction here, but it is a great work.

MANY POSTS OF you seem like a quotes. If so, please post them as quotes here and mention the source. for e.g. if you would like to present the words so and so, write them as so that they are separated from your personal narration.

Coming to romance movies, NT in his every film has produced the element of romance suiting the situation. Vasantha Maligai can not be termed "romance" movie but a love story, where as the romance film of NT can be mentioned to be "Galatta Kalyanam" or "Sumathi En Sundari". There are innumerable examples of romance element outdoing the so-called romance films. Let's come to them in some other occasion.

Once again my hearty appreciations to you for the effort you are putting in presenting the archives pertaining not only to MGR but others also.

Raghavendran
Dear Raghavendran sir
My sincere thanks to your valuable comments about my postings in this blog. most of the paper cuttings in kannada paper advt is original paper cuttings preserved by me.most of the articles is taken from different sites in the net and i will mention the sources in the future.
i am always very happy to see your postings in NT thread in different articles and comments.

Being NT fans most of the participents involved with intrest and created MT PART 2 With great achivement to day crossed successful 200th page. All cedit goes to NT FANS .

ONCE AGAIN I CONVEY MY HEARTIEST CONGRATULATIONS TO NT FANS.
WITH REGARDS
esvee

Richardsof
31st July 2012, 05:31 AM
http://i45.tinypic.com/30lylps.jpg

Richardsof
31st July 2012, 05:44 AM
http://i45.tinypic.com/ac8sgw.jpg

Richardsof
31st July 2012, 05:49 AM
http://i48.tinypic.com/5fisf5.jpg

Richardsof
31st July 2012, 05:54 AM
http://i47.tinypic.com/112a2xx.jpg

Richardsof
31st July 2012, 06:03 AM
http://i48.tinypic.com/2rqf0ow.jpg

Richardsof
31st July 2012, 06:05 AM
http://i47.tinypic.com/2vj6fs0.jpg

Richardsof
31st July 2012, 06:09 AM
]

http://i45.tinypic.com/3zwc7.jpg

RAGHAVENDRA
31st July 2012, 06:38 AM
http://www.uselessgraphics.com/congratulations16.gif

Dear friends,
It's a great job to reach the landmark. In fact this thread has gone steadfast since the arrival of esvee @ vinod and all credits go to him for having unearthed really very very rare images of yester years of MGR, more so in cast of kannada newspaper cuttings. My hearty congratulations to all MGR fans and Sivaji fans and all the participants of this thread as well as viewers. And for the hub for providing a platform to share the views on MGR.

RAGHAVENDRA
31st July 2012, 06:43 AM
Dear vinod,
Your efforts to bring together MGR and Sivaji fans is highly appreciable. More than anybody else, it was MGR who estimated correctly, the command and influence NT had on the people, and MGR won the elections in the alliance of congress [read as Nadigar Thilagam] since 1977 and won the election. MGR believed that the alliance factor was crucial and followed it sincerely till his last, which won him all the elections he contested. Even the thunderous and historical success of Thirisulam at the Box Office was identified first by none other than MGR himself and this he explained to NT on how the collection of Thirisulam helped the dream scheme of MGR of noon meal scheme.
Let this history continue ...
Wishing all the MGR fans more entertaining pages and parts of MGR in this hub.

Raghavendran

Richardsof
31st July 2012, 08:39 AM
http://i49.tinypic.com/2ltit8p.png நன்றி ..... நன்றி. நன்றி .....

21 .4 .2007 அன்று நடிகர் திலகம் அன்பு ரசிகர் திரு . JOE அவர்களால் துவக்க பட்ட மக்கள் திலகம் PART 2 இன்று 200 பக்கம் தாண்டியது ஒரு மாபெரும் சாதனையாகும் .இந்த திரியில் பல்வேறு கருத்துக்கள் , விமர் சனங்கள் ,பாடல்கள் , ஆய்வுகள் , புகைப்படங்கள் ,வீடியோ பேப்பர் விளம்பரங்கள் ,,கருத்து மோதல்கள் , என்று பல்வேறு கோணங்களில் நடிகர் திலகத்தின் நண்பர்கள் மற்றும் மக்கள் திலகத்தின் நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மக்கள் திலகத்தின் அன்பு ரசிகர்கள் சார்பாக எங்களது நன்றியினை நடிகர் திலகத்தின் அன்பு உள்ளங்களுக்கு தெரிவித்து கொள்கின்றோம் .

மதிப்பிற்குரிய நதியின் நண்பர்கள்.

திருமதி சாரதா அவர்கள்
திரு . பம்மலர் - திரு .ராகவேந்திரன் . திரு ,முரளி ஸ்ரீநிவாஸ் . திரு JOE திரு . வாசுதேவன் . திரு திருமாறன் .
திரு .பாலாஜி . திரு .செல்வகுமார் . திரு .கார்த்திக் . திரு .மகேஷ் . திரு .தமிழரசன் . திரு .ராஜாராம் . திரு .சதீஷ் . திரு கல்நாயக் . திரு ராஜா .திரு .பாரிஸ்டர் ரஜினிகாந்த் . திரு .PR
திரு . groucho70 . திரு. tfmlover . app _engine .m -23 -bayarea - திரு hattori மற்றும் எல்லா நடிகர் திலகத்தின் அன்பு உள்ளங்களுக்கு எங்கள் நன்றியினை மீண்டும் தெரிவித்து கொள்கின்றோம் .

Richardsof
31st July 2012, 08:54 AM
அன்புள்ள நண்பர் திரு . ராகவேந்திரன் அவர்களுக்கு

தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி .மக்கள் திலகம் - நடிகர் திலகம் இரண்டு இமயங்கள் இந்திய திரை உலக வரலாற்றில் ஏற்படுத்திய சாதனை கின்னிஸ் வரலாற்றில் இடம் பெறவேண்டும் .
உலகில் எந்த ஒரு நடிகர்களுக்கு இல்லாத பெருமை - அவர்கள் மறைந்த பின்னும் அவர்கள் திரை படங்கள் தொடர்ந்து ஓடி சாதனை புரிவது உண்மையிலே ஒரு சரித்திர புரட்சியாகும் .
மேலும் இணைய தளத்தில் இரண்டு திலகங்களின் புகழ் கொடிகட்டி பறக்கிறது என்றால்
அதற்கு மூல காரணம் நடிகர் திலகம் ரசிகர்களால் துவக்கப்பட்ட இந்த நடிகர் திலகம் திரி & மக்கள் திலகம் திரி என்றால் அது மிகையாகது .
இன்றைய இளைய தலை முறை ரசிகர்களும் எதிர்கால ரசிகர்களும் நிச்சயம் நமது திரிகளை பார்த்து , ரசித்து , போற்றுவார்கள் என்பது நிச்சயம் .
மீண்டும் நன்றி .