PDA

View Full Version : RAJAVIN 'RAVUSU' PAKKAM



AREGU
30th November 2007, 09:13 AM
அன்பு நண்பர்களே... வணக்கம்.

இந்தத் திரியில் தினம்மும் தொடர்ந்து நகைச்சுவைகளைத் தர இருக்கிறேன். உங்கள் அனைவரின் நல்லாதரவும் தேவை. நன்றி.
__________________________________________________ __

முதலாளி வேலைகேட்டு வந்தவரிடம்...

நீ நிறைய பொய் சொல்லுவியா..?

இல்ல சார்.. ஆனா கூடிய சீக்கிரம் கத்துகிட்டு உங்க நிறுவனத்தில் பெயர் எடுப்பேன்..
________________________________________

பின்னர் வேலை கிடைத்த அவரும் அவரது தாயும்..

ஏண்டா தம்பி.. பொய் சொல்ற ஆள் எதுக்கு அவங்களுக்கு தேவையாம்..?

தெரியலேம்மா.. இப்போதைக்கு எனக்கு சேல்ஸ்மேன் வேலை கொடுத்திருக்காங்க.. பிற்காலத்தில், பி.ஆர்.ஓ. ஆக ஆக்கறேன்னு சொல்லியிருக்காங்க..!
_________________________________________

வேறொரு இடத்தில்.. முதலாளி வேலைகேட்டு வந்த பெண்ணிடம்...

என்னம்மா நீ..? உன்கிட்ட என்ன திறமை இருக்குன்னா, நல்லா கூடை, ஸ்வெட்டர் எல்லாம் பின்னுவேன்னு சொல்றியே..? அதுக்கும் ஆபீஸ் வேலைக்கும் என்ன சம்பந்தம்..?

முன்ன வேலை செய்த இடங்களில் ஆபீஸ் நேரத்தில்தான் சார் அதெல்லாம் பின்னினேன்..!
__________________________________________

நண்பர் : எவ்வளவு காலமா இந்த நிறுவனத்தில் உண்மையா உழைச்சுகிட்டு இருக்கே..?

மொக்கை : அந்த மேனேஜர் கடன்காரன் என்னை டிஸ்மிஸ் பண்ணப்போறேன்னு எப்போ மிரட்டினானோ... அப்போலேருந்து..!
__________________________________________

வங்கி மேலாளர், ஊழியரிடம்..

எங்கேய்யா அந்த கேஷியர் போய்த் தொலைஞ்சான்..?

சீட்டாட்ட கிளப்புக்கு போயிருக்கார் சார்..

வேலை நேரத்தில என்ன சீட்டாட்டம்.. ?

சீட்டாட்ட முடிவை வச்சுதான் அவர் வேலை நிலைக்குமா என்னான்னு தெரியுமாம் சார்..!
___________________________________________

இன்றைய வேடிக்கை விடுகதை...

முட்டையின் உள்ளே இருப்பது

# வெள்ளைக் கரு..

# வெண்மைக் கரு..

இதில் எது சரி..?
____________________________________________
தமிழ் ஜோக்ஸ்.நகைச்சுவைத் தனியினம். 30-11-07.
______________________________________________

AREGU
26th February 2008, 09:09 PM
ஒருமுறை ஒரு புகைப்படக்கலைஞரை விருந்துக்கு ஒரு பெண் அழைத்திருந்தாள்.. புகைப்படக் கலைஞர், தான் பிடித்த படங்களிலேயே வெகு சிறப்பானவற்றை அந்தப் பெண்ணிடம் காட்டினார்.. அவரை கிண்டல் செய்ய விரும்பிய அந்தத் துடுக்குக்காரப்பெண், "ஆகா.. படங்கள் எல்லாம் அருமையாக இருக்கின்றன.. உங்கள் புகைப்படக்கருவி மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும்.. இல்லையெனில் இப்பேர்ப்பட்ட படங்கள் கிடைக்குமா..?" என்றாள்.

பின்னர் விருந்து வைபவம் முடிந்தது.. அந்தப் பெண், புகைப்பட நிபுணரிடம், "விருந்து எப்படி இருந்தது..?" என்று வினவினாள். அதற்கு அவர்.." விருந்து மிகச் சுவையாக இருந்தது.. உங்கள் அடுப்பு மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும்.. இல்லையெனில் இப்படி ஒரு சுவை கிடைத்திருக்குமா..?" என்றார்.

சீமாட்டியின் முகத்தில் ஈயாடவில்லை..!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

மம்தா பானர்ஜி. ஜோதி பாசு. லாலு பிரசாத். மூவரும் சொர்க்கத்துக்கு சென்றார்கள். இந்திரன் அம்மூவரையும் வரவேற்று உபசரித்து, " பேராளர்களே.. நீங்கள் இங்கு [சொர்க்கத்துக்கு] வந்ததன் மூலம் உங்களுக்கு என்ன நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது..?" என்றான்.

லாலு பிரசாத். , "நான் குழந்தைகளுக்கு சத்துணவு போட்டேன்.. அதனால் எனக்கு இங்கு இடம் கிடைத்து வந்திருக்கிறேன் " என்றார்.இதைக்கேட்ட இந்திரன் லாலு பிரசாத்தை. தன் இடப்பக்கத்தில் உள்ள ஆசனத்தில் அமரச் சொல்லி கௌரவித்தான்.

ஜோதி பாசு. , "ஏழைகளுக்கு இலவச நிலம் தந்தேன்.. அதனால் என்னால் இங்கு வரமுடிந்தது.." என்றார். இந்திரன் அவரை வலப்பக்கம் அமரச் செய்து பெருமைப்படுத்தினான்.

அடுத்து அம்மையாரைப் பார்த்து, " நீங்கள் எந்த நம்பிக்கையின் பேரில் இங்கு வந்திருக்கிறீர்கள்..?" என்று கேட்டான். அதற்கு அவர் சொன்னார்..

" நீ நான் அமரவேண்டிய இருக்கையில் அமர்ந்திருக்கிறாய் என்று உறுதியாக நம்புகிறேன்.. முதலில் எழுந்திரு..!"

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஒருமுறை ஒரு 5 வயதுச் சிறுவன் அழுதுகொண்டே தாயிடம் வந்தான்..

"என்னடா கண்ணா ஆச்சு..? ஏன் அழறே..?"

"தங்கச்சிப் பாப்பா என் முடியைப் பிடிச்சு இழுத்துட்டுது...!"

" அழாதேடா செல்லம்.. அது சின்னக் குழந்தைதானே.. முடியைப் பிடிச்சு இழுத்தா அண்ணாவுக்கு எவ்வளவு வலிக்கும்ன்னு அதுக்கு தெரியாது இல்லையா..?"

சற்று நேரம் கழித்து அழுகைச் சத்தம் இன்னும் அதிகமாகக் கேட்டது. ஆனால் இம்முறை அலறியது தங்கச்சிப் பாப்பா..

" என்னடா கண்ணா ஆச்சு..? ஏன் தங்கச்சிப் பாப்பா அழறா..?"

" முடியைப் பிடிச்சு இழுத்தா எவ்வளவு வலிக்கும்ன்னு தங்கச்சி தெரிஞ்சுகிட்டாம்மா...!"

AREGU
26th February 2008, 09:12 PM
நெடுஞ்சாலையில் ஒரு வழக்கறிஞர் மகிழ்வுந்தும் [கார்], ஒரு மருத்துவர் மகிழ்வுந்தும் மோதிக் கொண்டன. பதறிப்போன மருத்துவரைப் பார்த்து வழக்கறிஞர் சொன்னார்..

கவலை கொள்ளாதீர்கள்.. அமைதியாக இருங்கள்.. இப்போது என்ன நடந்துவிட்டது..? இந்தாருங்கள்.. இந்த விஸ்கியைக் குடித்து நம் நட்பைத் துவக்குவோம்..

வழக்கறிஞர் தந்த 3 கோப்பை மதுவையும் குடித்த பிறகு மருத்துவர் கேட்டார்..

நீங்கள் மது அருந்தவில்லையா..?

வழக்கறிஞர் தண்மையாகச் சொன்னார்..

பொறுங்கள்.. காவல்துறையினர் வந்து விசாரித்து, வழக்கு பதிவு செய்துவிட்டுப் போகட்டும்.. பின்னர் அருந்துகிறேன்..!
__________________

மிஸ்டர் மொக்கை மிகவும் வருத்தமாக இருந்தார்.. மதுவகத்தில் அளவுக்கு அதிகமாகக் குடித்து துக்கத்தை மறக்க முயன்றார்..அருகிலிருந்த நண்பன் மிஸ்டர் மொக்கையைத் தேற்ற விரும்பி பேச்சுக் கொடுத்தான்..

டேய் மொக்கை.. அப்படி என்னடா துக்கம் உனக்கு..? என்கிட்ட சொல்லக்கூடாதா..?

ஒண்ணுமில்லடா.. எனக்கும் என் மனைவிக்கும் சின்ன சண்டை... பெருசாகிட்டுது.. கடைசியில, என் மனைவி என்கூட 1 மாசத்துக்கு பேசமாட்டேன்னு சொல்லிட்டாடா..

அடடடா...! சரி.. சரி.. கவலைப்படாதே.. 1 மாசம் 1 நிமிஷமா ஓடிப் போயிடும்..

மேலும் ஒரு கோப்பையைச் சரித்துக் கொண்ட மொக்கை சொன்னார்..

1 நிமிஷமாத் தாண்டா ஓடிடுச்சு.. இன்னக்கிதான் கடைசி நாள்..!
____________________________

ஒரு மதகுருவிடம் ஒரு பெண்மணி தன் குறையைச் சொல்லி அழுதாள்..

சாமி.. கல்யாணம் ஆகி 7 வருஷம் ஆச்சு.. இன்னும் வயித்துல ஒரு பூச்சி பொட்டு இல்ல..!

கவலைப்படாதே.. நாளையிலிருந்து 5 வருடங்களுக்கு நான் காசியில் இருப்பேன்.. அங்கு உனக்காக வேண்டிக்கொண்டு புத்திர தீபம் [அகல் விளக்கு] ஏற்றிவைக்கிறேன்.. நிச்சயம் பலனளிக்கும்.. !

பின்னர் 5 ஆண்டுகள் கழித்து சாமியார் திரும்ப வந்தபோது அதே பெண்மணியைக் கடைவீதியில் சந்தித்தார்..

என்ன மகளே..? என் வேண்டுதல் ஏதும் பலனளித்ததா..?

அதை ஏன் கேட்கறீங்க சாமி..? முதல் பிரசவத்திலேயே 4 பிள்ளைகள்.. அடுத்த பிரசவம் பரவாயில்லே .. ரெட்டைப் பிள்ளைகள் தான்.. ஆனா அடுத்தடுத்த பிரசவங்களில் ஒவ்வொரு முறையும் 3 பிள்ளைகள்.. இப்போ 15 பிள்ளைகள் இருக்காங்க..!

அப்படியா..? சந்தோஷம்.. இப்போ உன் அதிர்ஷ்டக்கார புருஷன் என்ன பண்றார்..?

அலுத்துக்கொண்ட பெண்மணி சொன்னாள்..

அவர் இப்போ காசிக்கு போயிருக்காரு... நீங்க ஏத்தி வச்ச புத்திர தீபங்களை அணைச்சுட்டு வர்றதுக்காக..!
____________________________

AREGU
26th August 2008, 11:33 PM
மொக்கை கணிணி பொருட்கள் விற்கும் கடைக்குப் போனார்..

"என்ன சார் வேணும்..?"

"எனக்கு ஒரு மவுஸ் பேட் வேணும்.."

"நிறைய வகைகள் இருக்கு.. பாருங்க..!"

"இருக்கலாம்.. ஆனா என் கணிணிக்கு பொருந்தற மவுஸ் பேட்தான் எனக்கு வேணும்..!"
__________________________________________________ _______________

மொக்கையும் மேலதிகாரியும் உணவகம் சென்றனர்.. இரு ஐஸ் கிரீம் ஆர்டர் செய்தனர். வந்ததோ, ஒரு பெரிய கப், ஒரு சிறிய கப்.. மேலதிகாரி முதலில் மொக்கையை எடுத்துக்கொள்ளச் சொன்னார்.. மொக்கை பாய்ந்து பெரிய கப்பைக் கைப்பற்றினார். முகம் சுளித்த மேலதிகாரி சொன்னார்..

நானாக இருந்தால், சிறிய கப்பை எடுத்துக்கொண்டு பெரிய கப்பை அடுத்தவருக்கு விட்டுக் கொடுத்திருப்பேன்..!

மொக்கை மொழிந்தார்..

இப்போதான் என்ன கெட்டுப் போச்சு..? உங்களுக்கு வேண்டிய சின்ன கப் தானே இப்போவும் கெடைச்சிருக்கு..?
__________________________________________________ _____________


நம் மொக்கை ஒரு சமையற்கலை நிபுணர்.. தொலைக்காட்சியில் ஒரு செய்முறைக்கு வந்த மொக்கையை அறிவிப்பாளினி கேட்டாள்....

இந்த கொலை "காரச் சிக்கன்" செய்ய கோழியை எப்படி தயார் பண்ணணும்ன்னு நம்ம நேயர்களுக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்..

"ம்ம்ம்ம் நேரடியா அந்தக் கோழிகிட்டேயே சொல்லிட வேண்டியதுதான்.. உன்னை அறுக்கப் போறோம்.. ஒண்ணும் ஒர்ரி பண்ணிக்காம இயல்பா இருன்னு சொல்லி கோழியை தயார் பண்ணிடலாம்..!"

AREGU
26th August 2008, 11:34 PM
மிஸ்டர்.மொக்கைக்கு முதன்முதலாக பாதிரியார் பணிவாய்ப்பு கிட்டியது. முன்பின் அறியாத புதிய நகரத்துக்கு இட*மாறுதல் பெற்று சென்ற அன்றே ஒரு தொலைபேசி அழைப்பு. ஒரு முதாட்டி மரணமடைந்துவிட்டார். இறுதிச் சடங்குகளுக்கு மொக்கையை அழைத்திருந்தார்கள். குறிப்பிட்ட இடுகாட்டு முகவரியை விசாரித்து போய்ச்சேருவதற்குள் சவ அடக்கம் முடிந்து எல்லோரும் போய்விட்டார்கள்.

தன் கடமையைச் செவ்வனே செய்ய விரும்பிய மொக்கை, இடுகாட்டுக்குள் சென்றார். உள்ளே ஒரு மூலையில் கான்கிரீட் பலகை வைத்து மூடி, சிமெண்டைப் பூசிய தொழிலாளர்கள் ஒரு ஓரமாக அமர்ந்து, கூலியைப் பங்கிட்டுக் கொண்டிருக்க, மொக்கை ஈரம் காயாத கட்டுமானத்து அருகில் போய் பூஜைகளை முறைப்படி நிறைவேற்றினார். மொக்கையின் கம்பீரமான குரலும், தெளிவான உச்சரிப்பும், தொழிலாளர்களைக் கவர்ந்து இழுத்தன. எல்லா சடங்குகளையும் தனக்கேயுரிய பாணியில் முடித்துவிட்டு, ஓரக்கண்ணால் தொழிலாளர்களைக் கவனித்தவாறே மொக்கை அந்த இடத்தை விட்டு வெளியேறுகையில், ஒரு தொழிலாளி, இன்னொருவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்..

"நானும் 25 வருஷமா இந்தத் தொழில்ல இருக்கேன்.. ஆனா, கக்கூஸ் செப்டிக் டாங்குக்கு இப்படி பூஜை நடக்கறத இப்போதாம்பா பார்க்கறேன்..!

AREGU
26th August 2008, 11:38 PM
மிஸ்டர். மொக்கை அலுவலகத்திலிருந்து மனைவிக்கு தொலைபேசினார்.

"டியர், என்னை அவசரமா மும்பைக்கு போயிட்டு வரச்சொல்லியிருக்காங்க.. 3 நாள் ஆபீஸ் டூர். ஒரு முக்கிய கான்ஃபரன்ஸ். என் மடிக்கணிணியை பேக் செய்து வை. அப்புறம் 3 நாளைக்கு ட்ரெஸ், மத்தது எல்லாம் சூட்கேஸ்ல எடுத்து வை. என்னோட க்ரெடிட் கார்டையும் சூட்கேஸ்ல மறக்காம எடுத்து வச்சுடு. நான் கம்பெனி கார்ல வந்துட்டே இருக்கேன்.. அப்படியே விமான நிலையம் போகணும்.. லேட் பண்ணிடாதே .. "

"சரிங்க.. போற இடத்தில் கணிணி இருக்குமே.. எதுக்கு லேப் டாப்..?"

"நல்லா கேட்டே போ.. நிறைய தகவல்கள் ஸ்டோர் பண்ணி வச்சிருக்கேன்.. அதை வச்சுதான் கான்ஃபரன்ஸ்ல அசத்தணும்..!"

" சரிங்க.. எல்லாம் எடுத்து வச்சிடறேன்..!"

சிறிது நேரத்தில், கார் வந்தது.. மொக்கை புயலாக வீட்டுக்குள் புகுந்து, பேக் செய்தவற்றை அள்ளிக்கொண்டு, விடைபெற்று கிளம்பினார். காரில் யாரோ ஒரு பெண் அமர்ந்திருந்தது போல தெரிந்தது..!

3 நாட்கள் கழித்து இரவுநேரத்தில் மொக்கை திரும்பினார். தூங்கிக்கொண்டிருந்த தி.மொ. வந்து கதவைத் திறந்தார்..

"என்னங்க.. கான்ஃபரன்ஸ் நல்லபடியா முடிஞ்சதா..?

ஓ.. அற்புதம்..!

லேப் டாப் தகவல் பயனுள்ளதா இருந்ததா..?

அருமை..! லேப் டாப் கொண்டுபோனது நல்லதாப் போச்சு. மூன்று நாளும் அதற்கு நல்ல வேலை இருந்துச்சு. அது இருக்கட்டும்.. க்ரெடிட் கார்ட் எடுத்து வைக்கச் சொன்னேனே.. ஏன் எடுத்து வைக்கலே..? என் திட்டம் பூரா தவிடுபொடி ஆகிடுச்சு..!

தி.மொ. போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டே சொன்னார்..

அடடே.. 3 நாள் லேப் டாப் பயன்படுத்திய நீங்க, அந்த லேப்டாப்க்குள் வச்சிருந்த க்ரெடிட் கார்டைப் பார்க்கவே இல்லியா..? இப்போ தூக்கம் வருது.. காலையில் இதுபற்றி பேசிக்கலாம்..!

தி.மொ. தூங்கிவிட்டாள்.. ஆனால் மொக்கை..?

crazy
26th August 2008, 11:45 PM
:lol:

AREGU
29th August 2008, 07:58 PM
சற்றேறக்குறைய ஓர் ஆண்டுக்குப் பிறகு எனக்குக் கிடைத்திருக்கும் பின்னூட்டம் இது..!

நன்றி கிரேசியாரே..!

( அடுத்த முறை எழுத்து வடிவில் கிடைத்தால் மகிழ்வேன்.. :) )

AREGU
11th September 2008, 10:24 PM
லொள்ளத் துடிக்குது மனசு...
______________________________________________


கல்யாணம் பண்ணி வைக்கிற ஐயர் லொள்ளு..

இல்லாத பொல்லாத பொருளையெல்லாம் நெருப்புல போட்டு
நல்லாருக்குற எல்லாத்தையும் மூட்டை கட்டுறது..
_________________________________________________

அல்லக்கை லொள்ளு.

சின்னப் பயலையெல்லாம் அண்ணேன்னு தெய்வமேன்னு அழைப்பது..
தண்ணியிலே இருக்கையிலே கன்னா பின்னான்னு திட்டுவது..
__________________________________________________ __

தொலைக்காட்சி தொடர் லொள்ளு..

நாளும் பொழுதும் துரோகம்.. வசவு.. சோகம்..சொதப்பல்..
காலம் போன கடைசியிலே திருந்துதல்.. வருந்துதல்..
__________________________________________________ __

பொதுமக்கள் லொள்ளு..

வாரவன் போறவனுக்கெல்லாம் உனக்குதான் ஓட்டுன்னு வாக்கு கொடுப்பது..
யாரவன் ஆண்டாலும் கீழே இறக்கி வேட்டு வைப்பது..
________________________________________________

ராஜாவின் லொள்ளு..

லொள்ளு எனப்படுவது யாதெனின் எல்லோரையும்
சொல்லவியலா தொல்லைக்கு உள்ளாக்கல்...
__________________________________________________ _

வடிவேலு லொள்ளு..

ஜட்டி ஈரம் உள்ளே ஆனாலும்
வெட்டி வீரம் வெளியே பேசுதல்..
__________________________________________________ _

நைட்டு கடை லொள்ளு..

ஒத்தை ஆப்பாயில் வாங்கி இலை ஒரமா வச்சு
மத்தவங்க பார்க்கும்வரை தின்னாதிருப்பது..
________________________________________________

டூ ஸ்ட்ரோக் பைக் காரன் லொள்ளு..

வாயை வயிறைக் கட்டி வட்டிக்கு பணம் வாங்கி பெட்ரோலில்
ஆயில் அதிகமாப் போட்டு ஊரை நாற அடிப்பது..
__________________________________________________ _

சப்பை ஃபிகருங்க லொள்ளு..

முக்காவாசி சுடிதார்ல காத்தும் ஒரமா நாலு எலும்பும் இருந்தாலும்
அக்காமாருங்க எல்லாம் அசினும் ஐஷும் போல அலட்டுறது..
__________________________________________________ ___

தம்பிகளா.. இதை யாருக்கு வேணும்ன்னாலும் அனுப்புங்க.. ஆனா எங்க சுட்டதுன்னு ஒரு வார்த்தை போட்டுருங்க..!