PDA

View Full Version : 'Kalai Nilavu' RAVICHANDRAN



Pages : [1] 2 3

saradhaa_sn
13th November 2009, 12:30 PM
'கலை நிலவு' ரவிச்சந்திரன்

இன்றைக்கு சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் திரையுலகில் நுழைவது என்பது அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல. அதிலும் நடிப்புத்துறையில் நுழைவது பகீரதப் பிரயத்தனம். எடுத்த எடுப்பிலேயே கதாநாயகனாக அவதாரம் எடுத்துவிட முடியாது. பல படங்களில் சின்னசின்ன வேடங்களில் நடித்தபின்பு, சில ஆண்டுகள் கழித்தே ஆக முடியும். சிலருக்கு பல கருப்பு வெள்ளைப்படங்களில் நடித்த பின்பே கலர்ப்பட வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு முத்லில் சில படங்கள் தோல்விகளைக்கண்ட பின்புதான் வெற்றிப்படங்கள் அமையும். சிலருக்கு முதலில் சிறிய இயக்குனர்களிடம் நடித்த பின்பே பெரிய இயக்குனர்கள் அறிமுகம் கிடைக்கும்.

முதல் படத்திலேயே கதாநாயகன்
முதல் படத்திலேயே பெரிய டைரக்டரின் இயக்கம்
முதல் படமே கண்ணைக்கவரும் வண்ணப்படம்
முதல் படமே 200 நாட்கள் ஓடிய மாபெரும் வெற்றிப்படம்

1964-ல் இவை யாவும் ஒருவருக்கு சாத்தியமானது. அவர்தான் 'கலை நிலவு' கலைமாமணி ரவிச்சந்திரன். (1952-ல் கலர்ப்படங்கள் வராதகாரணத்தால் மற்ற மூன்றும் சாத்தியமானவர் 'நடிகர்திலகம்' சிவாஜி கணேசன் அவர்கள்).

காதலிக்க நேரமில்லையில் நடிக்க நேர்ந்த சம்பவம் குறித்து ரவியே சமீபத்தில் தொலைக்காட்சியில் சொல்லியிருந்தார். "மலேசியாவிலிருந்து (அப்போது மலேயா) கப்பலில் சென்னை வந்து, தெரிந்தவர்கள் வீட்டில் தங்கியிருந்த நான், திருச்சிக்குச்செல்ல வேண்டிய ரயிலைத்தவற விட்டதால், வீடு திரும்ப நேர, மறுநாள் காலை என்னைச்சந்தித்த ஒளிப்பதிவாளர் பி.என்.சுந்தரம், ஸ்ரீதர் எடுக்கும் புதுப்படத்துக்கு புதுமுகம் தேடுவதாகசொல்லி என்னை அழைத்துப்போனார். மிகவும் ஒல்லியாக இருந்த நான், 'நமக்கெல்லாம் எங்கே சான்ஸ் கிடைக்கப்போகிறது' என்ற எண்ணத்தில் டைரக்டர் ஸ்ரீதர் முன்பாகவே சிகரெட்டும் கையுமாக அசால்ட்டாக இருக்க, என்னுடைய அந்த அலட்சிய போக்கே ஸ்ரீதருக்குப் பிடித்துப்போக என்னை தேர்ந்தெடுத்துவிட்டார்" என்று தான் திரைக்கு வர நேரந்த அனுபவத்தைச் சொல்லியிருந்தார்.

saradhaa_sn
13th November 2009, 12:42 PM
"காதலிக்க நேரமில்லை"

முதல் குட்டு மோதிரக்கையால் குட்டுப்படவேண்டும் என்ற இலக்கணத்திற்கேற்ப, முதல் படத்தில் புதுமை இயக்குனர் ஸ்ரீதரின் இயக்கத்தில் அறிமுகமானார் ரவி. அப்படத்தில் மூன்று ஜோடிக்காதலர்கள். அதில் ஒரு நாயகனையும் நாயகியையும் அறிமுகப்படுத்தினார் ஸ்ரீதர். வழக்கமாக இவ்வாறு அறிமுகம் செய்யும்போது புதிய நாயகனையும், புதிய நாயகியையும்தான் ஒருஜோடியாக எல்லோரும் போடுவார்கள். ஆனால் ஸ்ரீதர் இதிலும் புதுமை செய்ய எண்ணி, பழைய நடிகர் முத்துராமனுக்கு புது நடிகை காஞ்சனாவை ஜோடியாகவும், புது நடிகர் ரவிச்சந்திரனுக்கு பழைய நடிகை ராஜஸ்ரீயை ஜோடியாகவும் போட்டார். அதாவது ஒவ்வொரு ஜோடியிலும் ஒரு அனுபவம், ஒரு அறிமுகம்.

'காதலிக்க நேரமில்லை' கதையை இங்கே சொல்வது, கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல. அந்த அளவுக்கு தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான படம் அது. அதில் ஸ்ரீதர், கோபு, கண்ணதாசன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி, வின்சென்ட், பி.என் சுந்தரம், எடிட்டர் என்.எம்.சங்கர் ஆகியோர் பெரிய ராஜாங்கமே நடத்தியிருந்தனர்.

முதல் படத்திலேயே ரவிச்சந்திரனுக்கு பி.பி.எஸ் குரலில் நான்கு அருமையான பாடல்கள். (முத்துராமனுக்கு ஜேசுதாஸ் குரலில் இரண்டு பாடல்களும் சீர்காழியின் குரலில் ஒரு பாடலும் தான். அதுபோக நாகேஷ் சச்சு ஜோடிக்கு ஒரு பாடல்). விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் அத்தனை பாடல்களும் தேன் சொட்டின. இன்றுவரை அவையனைத்தும் மக்களால் பெரிதும் விரும்பிக்கேட்கப்படுகின்றன. பாடலின் தரத்துக்கேற்றாற்போல வின்சென்ட் - சுந்தரம் கூட்டணியின் அற்புதமான ஒளிப்பதிவு. காஞ்சனாவையும், ராஜஷ்ரீயையும் ரவிச்சந்திரன் டீஸ் செய்து பாடும் 'உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா?' என்ற சாதாரண பாடலில்தான் கேமரா என்ன விளையாட்டு விளையாடியிருக்கும்?. ஆளியாறு அணைப்பகுதியில் படமாக்கப்பட்ட வெளிப்புறக்காட்சிகள் கண்ணுக்கு விருந்து படைத்தன. 'அனுபவம் புதுமை' மற்றும், 'நாளாம் நாளாம் திருநாளாம்' பாடலின் மெலோடியைப்பற்றியெல்லாம் பேச நிச்சயம் எனக்கு தகுதியில்லை. ஆனால் 'நாளாம் நாளாம்' பாடலை செட்போட்டுப் படமாக்கியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. அதைவிட சென்னை மெரீனாவில் படமாக்கியிருந்த 'என்ன பார்வை உந்தன் பார்வை' காட்சியமைப்பிலும், படமாக்கிய விதத்திலும் சூப்பர்.

படம் துவக்கத்திலிருந்து 'வணக்கம்' வரை நகைச்சுவை கொடிகட்டிப்பறந்தது. காதல் ஜோடிகளோடு சேர்ந்துகொண்டு, பாலையா, நாகேஷ், சச்சு, பிரபாகர் (சச்சுவின் அப்பா) ஆகியோரும் நகைச்சுவையில் கலக்கினர். அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது சித்ராலயா கோபுவின் வசனங்கள். போதாக்குறைக்கு படத்தில் ரவிச்சந்திரன் வைத்திருக்கும் அந்த டப்பா காரும் நமக்கு சிரிப்பை மூட்டியது. அதுவரை சோகம், செண்டிமெண்ட் படங்களில் நடித்து வந்த முத்துராமனுக்கு, காதலிக்க நேரமில்லையில் அவர் ஏற்றிருந்த 'டூப்ளிகேட்' பணக்கார கிழவன் வேடமும், அதில் அவர் கொடுத்த நகைச்சுவை சரவெடிகளும் திரையுலகில் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. முதன்முதலாக ஜெமினி கலர் லேபரட்டரியில் வண்ணப்பிரதிகள் தயாரானதும் இப்படத்துக்குத்தான். (அதற்குமுன் வந்த கர்ணன், படகோட்டி ஆகிய ஈஸ்ட்மன் கலர்ப்படங்கள் மும்பை ஃபிலிம் செண்ட்டரில் ப்ராஸஸிங் செய்யப்பட்டன).

முதல் படமே 200 நாள் படமாக அமைய, 'வெள்ளிவிழா நாயகன்' என்ற சிறப்புப்பட்டத்துடன் திரையுலகில் வலம் வரத்துவங்கினார் ரவிச்சந்திரன்.

Plum
13th November 2009, 12:53 PM
Ravichandran used to stay in the same mansion as my father. Apparently, he was so broke that my father and his friends had to sponsor his lunches, tiffin and cigarette often. We met him once in a cine reception in 80's, and he was down to earth and called my father "aNNE, ningaLLAm illainA nAn heroaagi irukka mudiyAdhuNNE".

saradhaa_sn
13th November 2009, 12:57 PM
UPDATES

இதுவரை ஆய்வு செய்யப்பட்ட படங்கள்....

1) காதலிக்க நேரமில்லை
2) இதயக்கமலம்
3) குமரிப்பெண்
4) எங்க பாப்பா
5) நான்
6) மோட்டார் சுந்தரம்பிள்ளை
7) கவரிமான்
8) அதே கண்கள்
9) மூன்றெழுத்து
10) பாக்தாத் பேரழகி
11) உத்தரவின்றி உள்ளே வா
12) புகுந்த வீடு
13) நீயா..?
14) பணக்காரப் பிள்ளை
15) மஞ்சள் குங்குமம்
16) மகராசி
17) எதிரிகள் ஜாக்கிரதை
18) சொர்க்கத்தில் திருமணம்
19) காவியத்தலைவி

சிறப்புப் பதிவுகள்

1) ரவிச்சந்திரன் சந்தித்த ரயில் விபத்து
2) கலைச்செல்வி ஜெயலலிதாவின் 100-வது பட சர்ச்சை
3) ரவிச்சந்திரன் அவர்களுடன் எனது சந்திப்பு
4) 'காதலிக்க நேரமில்லை' வெற்றி பவனி (சென்னை/மதுரை) BY பம்மலார்

saradhaa_sn
13th November 2009, 01:13 PM
[tscii:f5c408d2f9]ராமண்ணா - ரவி கூட்டணிக்கு அச்சாரமிட்ட

"குமரிப்பெண்"

1960 களின் துவக்கத்தில் எம்.ஜி.ஆரை நடிக்கவைத்து வரிசையாக ‘ப’ வரிசைப்படங்களை (பாசம், பெரிய இடத்துப்பெண், பணக்கார குடும்பம்) எடுத்துக்கொண்டிருந்த ராமண்ணா 1965-ல் எம்.ஜிஆரை வைத்து ‘பணம் படைத்தவன்’ படத்தை வெளியிட்ட கையோடு, (இதனிடையே 1965-ல் மக்கள் கலைஞர் ஜெய்சங்கரை நடிக்கவைத்து "நீ" படத்தையும் இயக்கியிருந்தார்) .மீண்டும் எம்.ஜி.ஆரை நடிக்க வைத்து ‘பறக்கும் பாவை’யை வண்ணத்தில் எடுத்துவரும் அதே சமயத்தில், இன்னொரு பக்கம் ரவிச்சந்திரனை கதாநாயகனாக நடிக்க வைத்து கருப்புவெள்ளையில் உருவாக்கிய படம்தான் 'குமரிப்பெண்'. ஒருபக்கம் செண்டிமென்ட் படங்கள் கோலோச்சிக் கொண்டிருந்தபோதிலும், அதே சமயம் ஜனரஞ்சகமான படங்களும் வெற்றியடைந்துகொண்டிருந்த வேளையில் இப்படம் வெளியானது.

ரவிச்சந்திரனின் ஜோடியாக கலைச்செல்வி ஜெயலலிதா நடித்திருந்தார். குமரிப்பெண் படத்தின் பெயரைச்சொன்னதும் நமக்கு நினைவுக்கு வரும் முதல் காட்சி, கட்டுக்குடுமியுடன் கிராமத்திலிருந்து ரயிலில் வந்துகொண்டிருக்கும் ரவியை, நவநாகரீக உடையணிந்த ஜெயலலிதாவும், அவரது தோழிகளும் கிண்டலடித்துப்பாடும் "வருஷத்தைப்பாரு அறுபத்தி ஆறு" என்ற பாடல்தான். எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர் பாடியது. இதே "வருஷத்தைப்பாரு அறுபத்தி ஆறு" பாடலை பின்னர் ரவிச்சந்திரன், ஜெயலலிதாவைக் கிண்டலடித்துப் பாடுவதாகவும் வரும். அதை ரவிக்காக டி.எம்.எஸ். பாடியிருந்தார். (என்ன சொல்றீங்க?. இதைப்பார்க்கும்போது உங்களுக்கு 'கட்டவண்டி... கட்டவண்டி...' பாடல் நினைவுக்கு வருதா?). அப்போதெல்லாம் ரவிச்சந்திரனின் படங்களில், கதாநாயகியை டீஸ் செய்து பாடுவதுபோல ஒரு பாட்டு வந்துவிடும். அதில் இதுவும் ஒன்று. (Music by Mellisai Mannar MSV)

P.B.S.பாடிய "ஜாவ்ரே ஜாவ்.. இந்த கேட்டுக்கு நீ ராஜா" பாடல், கடமையைச்செய்யாமல் தூங்கிக்கொண்டிருக்கும் கூர்க்காவை கிண்டலடித்து ரவி பாடுவதாக வரும். இந்தப்பாடலை T.M.S. பாடியிருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும். சில பாடல்களுக்கென்று சில குரல்கள் பொருந்துமல்லவா?.

ரவிச்சந்திரன் ஜெயலலிதா டூயட் பாடல், "நீயே சொல்லு... நீயே சொல்லு... நடந்தது என்னவென்று நீயே சொல்லு. ரகசியம் பேசுகின்ற கண்ணால் சொல்லு" பாடலை P.B.S., L.R.ஈஸ்வரி பாடியிருந்தனர்.

ரவிச்சந்திரனின் சினிமா வாழ்க்கையில் அதுவரை கலர்ப்படங்களே வெற்றியடைந்து வந்த நிலையில், மாபெரும் வெற்றியைத்தந்த முதல் கருப்புவெள்ளைப்படம் குமரிப்பெண். 1966-ல் வெளியான மொத்தம் 42 தமிழ்ப்படங்களில் 10 படங்கள் மட்டுமே 100 நாட்களைக்கடந்து ஓடின. அவற்றில் 'குமரிப்பெண்'ணும் ஒன்று. (எந்தப்படமும் வெள்ளிவிழாவைத் தொடவில்லை). நான் முன்பே சொன்னதுபோல, சென்னை மவுண்ட்ரோடு ஏரியாவில் தியேட்டர் கிடைக்காமல், மயிலை காமதேனு அரங்கில் திரையிடப்பட்டு, அங்கு 100 நாட்களை வெற்றிகரமாகக் கடந்தபின், மவுண்ட் ரோடு காஸினோ அரங்குக்கு மாற்றப்பட்டு அங்கும் வெற்றிகரமாக ஓடியது.

இன்றைக்கும் பார்த்து ரசிக்கும்படியான பொழுதுபோக்கு அம்சங்களும் அருமையான பாடல்களும் கொண்ட படம் குமரிப்பெண்.


இதயத்தை வருடிய
]"இதயக் கமலம்"[/color]

ரவிச்சந்திரன் நடித்த இரண்டாவது வண்ணப்படம். பழம்பெரும் இயக்குனரும் தயாரிப்பாளருமான எல்.வி.பிரசாத்தின் 'பிரசாத் புரொடக்ஷன்ஸ்' தயாரித்த இப்படத்தை எஸ்.ஸ்ரீகாந்த் இயக்கியிருந்தார். 'புன்னகையரசி' கே.ஆர்.விஜயாதான் ரவிச்சந்திரனின் ஜோடியாக நடித்திருந்தார். ஜோடி என்பதைவிட அவர்தான் முழுப்படத்தையும் வியாபித்திருந்தார். இறந்துபோன மனைவியை எண்னி எண்னி இவர் வருந்த, கொஞ்சம் கொஞ்சமாக ஃப்ளாஷ்பேக்கிலேயே படம் நகரும். 'மேளத்த மெல்லத்தட்டு மாமா' என்று பாடியபடி தெருக்கூத்தாடியாக அறிமுகமாகும்போதும் சரி, பைத்தியக்கார விடுதியில் பைத்தியங்களோடு அடைக்கப்பட்டு அவதிப்படும்போதும் சரி, தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்திருப்பார் K.R.விஜயா. முதன்முதலாக ரவிச்சந்திரன் சோக நடிப்பை வழங்கிய படம் இதுவாகத்தான் இருக்கும். நன்றாகச்செய்திருப்பார்.

திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில்...
"உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல" என்ற பாடலும்
"என்னதான் ரகசியமோ இதயத்திலே" என்ற பாடலும்
சுசீலாவுக்குப் பெயர் வாங்கிக்கொடுத்தன.
ரவிச்சந்திரனுக்காக, பி.பி.எஸ் பாடிய...
"தோள் கண்டேன் தோளே கண்டேன்" பாடலும்
"நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ" பாடலும் பாப்புலராயின. இதில் ஒரு பாடல் காஷ்மீரில் படமாக்கப்பட்டிருந்தது.

தாய்க்குலத்தின் ஏகோபித்த வரவேற்பைப்பெற்ற 'இதயக்கமலம்' ஒரு பெரிய வெற்றிப்படம்.
[/tscii:f5c408d2f9]

saradhaa_sn
13th November 2009, 01:45 PM
பி.ஆர். பந்துலுவின்

'எங்க பாப்பா'

தமிழ்த்திரையுலகுக்கு பல பிரமாண்டமான சரித்திரப் படங்களை உருவாக்கித் தந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் பி.ஆர்.பந்துலு, தனது பத்மினி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி, 1966-ல் வெளியான குடும்பச்சித்திரம் 'எங்க பாப்பா'

ரவிச்சந்திரன் பாரதி ஜோடியுடன், அப்போதைய பிரபலமான குழந்தை நட்சத்திரம் 'பேபி ஷகீலா' (நினைவிருக்கிறதா? கற்பகம், முரடன் முத்து, எங்கவீட்டுப்பிள்ளை..?) முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த படம். படத்தில் இரண்டுமுறை பாடப்படும்
'ஒருமரத்தில் குடியிருக்கும் பறவை இரண்டு
ஒரு அன்னை தந்தது, ஒன்று காவல் கொண்டது
ஒன்று கண் மலர்ந்தது... கண்மலர்ந்தது'
பாடல் படத்துக்கே ஜீவநாடி. அதிலும் அந்தக்குழந்தை அண்ணன் ரவிச்சந்திரனை விசிறியால் விசிறிக்கொண்டே பாடித்தூங்க வைக்கும்போது, நம் கண்களில் நிச்சயம் நீர்கட்டும்.
'இரண்டு கண்கள் சேர்ந்து காணும் காட்சியும் ஒன்று
இரண்டு நெஞ்சும் சேர்ந்து சொல்லும் சாட்சியும் ஒன்று
அருகில் வைத்து தூங்கச்செய்யும் தாயில்லாதது
ஆசை வெட்கம் வெளியில் சொல்ல வாயில்லாதது... வாயில்லாதது

நாதியில்லை என்று உன்னை ஊர் சொல்லலாமா - இங்கு
நானிருந்தும் உனக்கு அந்தப்பேர் வரலாமா
ஜாதிப்பூவில் பாதிப்பூவை பிரிக்கக்கூடுமா
அண்ணன் தங்கை உறவைக்காக்கும் பெருமையாகுமா... பெருமையாகுமா'

சமீபத்தில் கவிஞர் பிறைசூடன் சொன்னதுபோல, 'இத்தனை ஆண்டுகளிலும் வாலி என்ற கவிக்கிழவன் யாராலும் பிடிக்க முடியாதபடி ஓடிக்கொண்டிருக்கிறார்' என்பது எத்தனை உண்மை. எங்கபாப்பாவுக்கு இசையமைத்தவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். 1966-ல் வெளியான இப்படத்துக்கு 65-லேயே பாடல்கள் பதிவாகி படப்பிடிப்பு நடந்து வந்தது. தன் இணையான ராமமூர்த்தியை விட்டுத்தனியே பிரிந்து தனது முத்திரையைப் பதித்துக்கொள்ள மெல்லிசை மன்னர் அசகாய சூரத்தனங்கள் செய்துகொண்டிருந்த நேரம். அதன் விளைவாக ரசிகர்களுக்கு அற்புதமான பாடல்கள் கிடைத்துக்கொண்டிருந்தன.

இன்னொரு பாடல், எல்.ஆர்.ஈஸ்வரியின் கொஞ்சும் குரலில் (கூடவே டி.எம்.எஸ்)
'சொந்த மாமனுக்கும் ஒரு பெண்ணிருந்தால்
இந்த மாதிரித்தான் இருப்பாள்' பாடல் பார்க்கவும் கேட்கவும் தேனமுதம்.

ரவிச்சந்திரன் சண்டையிட்டுக்கொண்டே பாடுவதாக வாலி அமைத்திருந்த
'நான் போட்டால் தெரியும் போடு
தமிழ்ப்பாட்டால் அடிப்பேன் ஓடு'
என்ற பாடல் யாரையோ குறித்து எழுதியதாக ரசிகர்கள் எண்ணினர்.

தாய்க்குலத்தின் ஆதரவைப்பெற்ற 'எங்க பாப்பா' பெரிய வெற்றியைப்பெறாவிடினும் தமிழகம் முழுவதும் பரவலாக ஒடியது.

Plum
13th November 2009, 01:48 PM
ரவிச்சந்திரன் சண்டையிட்டுக்கொண்டே பாடுவதாக வாலி அமைத்திருந்த
'நான் போட்டால் தெரியும் போடு
தமிழ்ப்பாட்டால் அடிப்பேன் ஓடு'
என்ற பாடல் யாரையோ குறித்து எழுதியதாக ரசிகர்கள் எண்ணினர்.
yaarai kurithu?
I mean Rajni-Kamalngara major leageukku parallel-A ippO, Ajith-Vijay, Surya-Madhavan-nu ippO minor leagues nadakkara maadhiri appO Sivaji-MGR major leagueku parallelA Ravichandran-X irundhudhA? Who was X? PM aavadhu paNnunga :-)

NOV
13th November 2009, 01:50 PM
Ravichandran used to stay in the same mansion as my father. Apparently, he was so broke that my father and his friends had to sponsor his lunches, tiffin and cigarette often. We met him once in a cine reception in 80's, and he was down to earth and called my father "aNNE, ningaLLAm illainA nAn heroaagi irukka mudiyAdhuNNE".Quite likely.

He fought with his family in Malaysia and left to India to seek his fortunes. His brother is none other than the famed Bairoji Narayanan of Radio Malaysia fame. :thumbsup:

saradhaa_sn
13th November 2009, 05:56 PM
Ravichandran used to stay in the same mansion as my father. Apparently, he was so broke that my father and his friends had to sponsor his lunches, tiffin and cigarette often. We met him once in a cine reception in 80's, and he was down to earth and called my father "aNNE, ningaLLAm illainA nAn heroaagi irukka mudiyAdhuNNE".
நீங்க சொல்வது ரொம்ப கரெக்ட் Plum....

பெரும்பாலான கலைஞர்களின் வெற்றிகளுக்கும் சாதனைகளுக்கும் முக்கிய காரணம் அவர்களிடம் இருக்கும் அபார திறமை மட்டுமல்ல. நடந்துவந்த பாதையை மறக்காததும், சமயம் கிடைக்கும்போதெல்லாம் பழையவற்றை போற்றுவதும் கூடத்தான்.

ரவிச்சந்திரன் மட்டுமல்ல. பல நடிகர்களின் பேட்டிகளைப்பாருங்கள். அவர்கள் ஆரம்பகால கஷ்ட்டங்களை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகக்கூறுவார்கள். அவர்கள் இப்போதிருக்கும் நல்ல நிலையில் அவற்றையெல்லாம் சொல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. இருந்தாலும் அவர்கள் எப்போதும் வெளிப்படையாகச் சொல்வார்கள்.

ஊரில் அவர்கள் குடும்பம பட்ட கஷ்ட்டங்கள். சென்னைக்கு வர காசில்லாமல் திருட்டு ரயில் ஏறிவந்தது. டி.டி.ஆரைக்கண்டதும் டாய்லெட்டுக்குள் ஒளிந்தது. சென்னை வந்ததும் சோற்றுக்குக்கூட வழியில்லாமல் அலைந்தது. தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் சந்தித்த ஏமாற்றங்கள், அவமானங்கள் அனைத்தையும் சகித்துக்கொண்டது. ஒரு டீ அருந்துவதற்குக்கூட நண்பர்கள் தயவை எதிர்பார்த்திருந்தது. தங்க இடமின்றி பிளாட்ஃபாரத்தில் பேப்பரை விரித்து தூங்கியது. ஒரு சின்ன வேடமாவது கிடைக்காதா என்று ஸ்டுடியோ கேட்டுக்கு வெளியே காத்திருந்தது..... என எல்லாவற்றையும் வெளிப்படையாகக்கூறுவார்கள்.

ஆனால் நடிகைகள்...??. (நான் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு ஸேம்சைட் கோல் போடுவதாக நினைக்க வேண்டாம். உண்மையைச்சொல்லித்தானே ஆக வேண்டும்). சௌகார் போன்ற ஒரு சில நடிகைகளைத்தவிர வேறு யாரும் தாங்கள் சிரமப்பட்டு சினிமாவுக்குள் நுழைததாகச் சொல்லவே மாட்டார்கள். அவர்கள் பேட்டிகளைப்பாருங்கள். என்னமோ சினிமா உலகமே இவர்களுக்காக ஏங்கி நின்றதுபோல...

'எனக்கு சினிமாவுக்கு வர இஷ்டமே கிடையாது. என்னுடைய லட்சியமெல்லாம் மெடிக்கல் காலேஜில் படிச்சு பெரிய எஞ்சினீயர் ஆகணும். அல்லது எஞ்சீனியரிங் காலேஜில் படிச்சு பெரிய லாயர் ஆகணும், அல்லது லா காலேஜில் படிச்சு பெரிய டாக்டர் ஆகணும், அல்லது அட்லீஸ்ட் ஆர்ட்ஸ் காலேஜில் படிச்சு L.K.G, U.K.G போன்ற பட்டங்கள் வாங்கனும்ங்கிறதுதான். ஆனால் என்னை ஒரு கல்யாண ரிஸப்ஷனில் பார்த்த டைரக்டர் 'எக்ஸ்' கண்டிப்பாக தன் படத்துல நடிக்கணும்னு கெஞ்சிக் கேட்டார். நான் மறுத்துட்டேன். அப்புறம் என் அம்மாவிடம் 'உங்க பொண்ணு மட்டும் என் படத்துல நடிச்சா எதிர்காலத்தில் பெரிய ஸ்டாரா வருவாங்க'ன்னு சொல்ல, என் அம்மாவின் விருப்பத்துக்காகத்தான் நடிக்க வந்தேன்'

(நடிகைகளின் உடலில் இருப்பது முழுக்க தசை அல்ல. பாதிதான் தசை, மறுபாதி கொழுப்பு ).

Plum
13th November 2009, 06:30 PM
sarada, I dont want to take an extreme views on actresses. Maybe, they exaggerate but is it possible that they come form a privileged background and really didnt have to struggle?( I agree even within that framework they may be exaggerating).
On the other side, we might have actresses not wishing to even recollect their past...
For example, a whole lot of rumours go about KR Vijaya's past - unsavoury - do we really want her to come out with it, even if it is true?

RAGHAVENDRA
13th November 2009, 07:41 PM
சகோதரி சாரதா அவர்களின் ரவி்ச்சந்திரனைப் பற்றிய பதிவுகள் தொடக்கமே களைகட்டி விட்டன. அருமையான படங்களைப் பற்றி எழுதி வருகிறீர்கள். பாராட்டுக்கள்.
சில பல தனிப்பட்ட காரணங்களால் ரவிச்சந்திரனால் தமிழ்த்திரையுலகில் நீண்ட காலம் ஒரே இடத்தில் நீடிக்க முடியவில்லை. ஆனால் அவர் படங்கள் நிச்சயம் நீடிக்கின்றன. அவருடைய இயற்பெயர் ராமன். ப்ளம் கேட்டது போல் ஜெய்சங்கர் ரவிச்சந்திரன் ரசிகர்கள் தனி டிராக்கில் எதிரெதிர் முகாமை வளர்த்துக் கொண்டிருந்தனர். அக்கரைப் பச்சை பட வெளியீட்டின் போது கூட இந்த வேகம் இருந்தது. அந்த அளவிற்கு அவர்களின் ரசிகர்களும் கணிசமான அளவில் இருந்தார்கள். ஆனால் ரவிச்சந்திரன் படம் ஓப்பனிங் அதிக அளவில் இருக்கும்.
அவரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். பம்பாய் மெயில் 109 பட பிரிவியூ காட்சியில் நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறேன்.
ரவிச்சந்திரன் நடித்த சில படங்களில் சிலவற்றை மீண்டும் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பது கடினம். அப்படிப்பட்ட படங்களில் துள்ளி ஓடும் புள்ளிமான், மயிலாடும் பாறை மர்மம், சத்தியம் தவறாதே போன்றவை அடங்கும். சத்தியம் தவறாதே படமாவது தொலைக்காட்சியில் பார்க்க முடிகிறது. மற்ற இருபடங்கள் ... தெரியவில்லை.
நடிகைகளின் கடந்த காலம் பற்றி நீங்கள் கூறியது சரிதான். என்றாலும் அவர்களால் அந்த அளவிற்கு கடந்த காலத்தைப் பற்றிப் பேச முடியாது. காரணம் உங்களுக்கும் தெரியலாம். எனக்குத் தெரிந்து ஒரு மிகப் பிரபலமான நடிகை, சிவாஜி ரசிகர்களின் அபிமான ஜோடியாக திகழ்ந்தவர், அவரது தாயார் சென்னையின் ஒரு பகுதியில் வீடுகளில் பத்துப் பாத்திரம் தேய்த்துத் தான் தம் குடும்பத்தை நடத்தினார். எங்கள் பெற்றோர் குடியிருந்த பகுதியில் தான் அவரும் அவருடைய பிழைப்பை நடத்தி வந்தார். காலத்தின் பரிணாமத்தில் அவர் மகள் மிகப் பிரபலமான நடிகையாகி சிறந்த நடிகையாகவும் திகழ்ந்தார். அந்த நடிகை இப்போது இல்லை. இருந்தாலும் அவரால் அதையெல்லாம் கூற முடியாது.

ராகவேந்திரன்

saradhaa_sn
14th November 2009, 11:18 AM
ரவிச்சந்திரன் சண்டையிட்டுக்கொண்டே பாடுவதாக வாலி அமைத்திருந்த
'நான் போட்டால் தெரியும் போடு
தமிழ்ப்பாட்டால் அடிப்பேன் ஓடு'
என்ற பாடல் யாரையோ குறித்து எழுதியதாக ரசிகர்கள் எண்ணினர்.
yaarai kurithu?
I mean Rajni-Kamalngara major leageukku parallel-A ippO, Ajith-Vijay, Surya-Madhavan-nu ippO minor leagues nadakkara maadhiri appO Sivaji-MGR major leagueku parallelA Ravichandran-X irundhudhA? Who was X? PM aavadhu paNnunga :-)
தவறாக புரிந்துகொண்டீர்கள் என்று நினைக்கிறேன். (விவரமாகச் சொல்லாதது என் தவறுதான்).

அது ரவி தன் எதிரிகள் யாரையோ குறித்து பாடுவதாக அமைந்தது அல்ல. அப்போது படு வேகமாக முன்னேறிக்கொண்டிருந்த கவிஞர் வாலி, தன் கவித்திறமையையும், தன்னுடைய பாடல்களையும் கிண்டல் செய்திருந்த மற்றொரு கவிஞரைக் குறித்து எழுதியது. அதில் கூட...
'எதுகை, மோனை உன் இடத்திலும் வலத்திலும் கொடுக்கட்டுமா
வல்லினம், மெல்லினம் என வரி வரியாக வரையட்டுமா'
என்ற வரிகள் வரும். (பாடலின் இடையே 'டிஷ்யூம், டிஷ்யூம்' சத்தங்களைக் கொடுத்து, மெல்லிசை மன்னர் பாடலுக்கு அழகு சேர்த்திருப்பார்)

saradhaa_sn
14th November 2009, 01:31 PM
சகோதரி சாரதா அவர்களின் ரவி்ச்சந்திரனைப் பற்றிய பதிவுகள் தொடக்கமே களைகட்டி விட்டன. அருமையான படங்களைப் பற்றி எழுதி வருகிறீர்கள். பாராட்டுக்கள்.
பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி ராகவேந்தர் சார். எனக்குத்தெரிந்தவற்றை இங்கே பகிர்ந்துகொள்வதில் சந்தோஷம். அவற்றுக்கு நீங்களெல்லாம் தரும் கூடுதல் தகவல்கள் அழகு சேர்க்கின்றன. எனக்கு எப்போதுமே மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் என்றால் ஒரு அபிமானம். அவருக்கு அடுத்து ரவிச்சந்திரன். அறுபதுகளின் மத்தியில் துவங்கி எண்பதுகள் வரை தமிழக திரைப்பட ரசிகர்களின் மாலைப்பொழுதுகளை சந்தோஷப்படுத்தியதில் இவர்களுக்கு தனியிடம் உண்டு. ரவி இன்னும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார், சமீபத்தில் வெளியான 'கண்டேன் காதலை' உள்பட. (என் ஆதர்ஷ நாயகன் 'வெண்ணிற ஆடை' ஸ்ரீகாந்த் பற்றி ஒரு திரி துவங்கும் எண்ணமும் உள்ளது)


அவரை நான் நேரில் சந்தித்திருக்கிறேன். பம்பாய் மெயில் 109 பட பிரிவியூ காட்சியில் நேரில் சந்தித்து உரையாடியிருக்கிறேன்.
அந்த அபூர்வ சந்திப்பின்போது கிடைத்த சுவையான விவரங்களை (முடிந்தால்) எங்களோடும் பகிர்ந்துகொள்ளலாமே. ('பம்பாய் மெயில் 109' வி.கே.ராமசாமி அவர்களின் சொந்தப்படம். மெல்லிசை மன்னர் இசை. அப்படத்தை நினைத்ததுமே நினைவுக்கு வருவது, தேங்காய் சீனிவாசனின் 'All Constables follow me' வசனம்தான்)


நடிகைகளின் கடந்த காலம் பற்றி நீங்கள் கூறியது சரிதான். என்றாலும் அவர்களால் அந்த அளவிற்கு கடந்த காலத்தைப் பற்றிப் பேச முடியாது. காரணம் உங்களுக்கும் தெரியலாம்.
இருந்தாலும் பேட்டிகளின்போது நடிகைகள் பண்ணும் அழும்பும், அலட்டலும் சொல்லி மாளாது. அட்லீஸ்ட் சொல்ல முடிந்ததையாவது சொல்லலாமல்லவா?.

சிறிது காலத்துக்கு முன் திரு.விசு அவர்கள் மனம் நொந்து சொன்ன ஒரு விஷயம், (ஒரு நடிகையைக் குறிப்பிட்டு) "அவளுடைய அண்ணன் அவளோட ஃபோட்டோ ஆல்பத்தோடு என்னிடம் அவளுக்கு சான்ஸ் கேட்டு அலைந்தான். நானும் சரின்னு என் படத்தில் அவளுக்கு நடிக்க சான்ஸ் கொடுத்தேன். சமீபத்தில் ஒரு பத்திரிகை பேட்டியில், என் படத்தில் அவளை நடிக்க வைக்க நான் அவள் வீட்டுக்கு அலைந்ததாக சொல்லியிருக்கிறாள்". (இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்ல. பானை சோறு முழுக்க இப்படித்தான்).

saradhaa_sn
15th November 2009, 11:11 AM
ராமண்ணா - ரவிச்சந்திரன் இணையில்
மாபெரும் வெற்றிப்படம்

"நான்"

வெள்ளிவிழா நாயகன் என்ற முத்திரையுடன் திரையுலகில் நுழைந்த ரவிச்சந்திரனின் இரண்டாவது வெள்ளிவிழாப் படம் நான். ஏற்கெனவே குமரிப்பெண் தந்த மாபெரும் வெற்றியில் உற்சாகமடைந்த இயக்குனர் ராமண்ணா, மீண்டும் ரவிச்சந்திரன் - ஜெயலலிதா ஜோடியை வைத்து வண்ணத்தில் தயாரித்து இயக்கிய படம் இது.

ரவிச்சந்திரன், ஜெயலலிதா ஜோடியுடன் முத்துராமன், அசோகன், மனோகர், நாகேஷ் (அம்மாவும் (?) மகனுமாக), மனோரமா, குட்டி பத்மினி, சுருளிராஜன், முத்துலட்சுமி, 'என்னத்தே' கன்னையா என ஏராளமான நட்சத்திரங்களை உள்ளடக்கிய படம். இறந்துபோன ஜமீன்தாரின், காணாமல் போன வாரிசைக் கண்டுபிடித்து அவரிடம் ஜமீனை ஒப்படைக்க, அதற்காக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களின் முன், மூன்று பேர் 'நான்'தான் வாரிசு, 'நான்'தான் வாரிசு என்று வந்து நிற்க, அவர்களில் உண்மையான வாரிசை அடையாளம் கண்டு அவரை ஜமீனாக்குவதுதான் கதை. கதை சிறியதாக இருந்தாலும், அது எடுக்கப்பட்ட விதத்தில் படு சூப்பராக அமைந்து போனது.

வழக்கமாக இம்மாதிரிக் கதைகளில் கதாநாயன்தான் வாரிசாக இருப்பார். ஆனால் இதில் அப்படியில்லை என்பது மட்டுமல்ல, அந்த மூவரில் யாருமே உண்மையான வாரிசில்லை. வில்லனால் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் நான்காவது நபர்தான் அவர் என்று தெரிய வரும்போது இன்னும் சுவாரஸ்யம் கூடுகிறது. அப்படியானால் வந்த மூவர்?. ஒருவர் வில்லனால் வாரிசு என்று அனுப்பப்பட்டவர், இன்னொருவர் அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட துப்பறியும் அதிகாரி.

அப்படீன்னா கதாநாயனாக வந்திருப்பவர் யார்?. அதுவும் ஒரு சஸ்பென்ஸ். உண்மையான வாரிசு, வில்லன் அசோகனால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முத்துராமன் என்பதும், மனோகர், அசோகனால் ஜமீன் சொத்தை அபகரிக்க அனுப்பப்பட்ட போலி வாரிசு என்பதும், நாகேஷ், அர்சாங்கத்தால் அனுப்பப்பட்ட அதிகாரி என்பதும் கிளைமாக்ஸுக்கு சற்று முன்னரே தெரிய வருகிறது.

மொட்டைத்தலை வில்லனாக வரும் அசோகன் இப்படத்தில் ஒரு புதிய பரிமாணம் எடுத்திருந்தார். அது மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. வசனத்தை இழுத்து இழுத்துப் பேசும் பாணியை இப்படம் முதற்கொண்டுதான் அவர் கையாளத்தொடங்கினார். ஆனால் அதுவே பிற்காலத்தில் ஓவர்டோஸாகிப்போனபோது திகட்டியது. இப்படத்தில் அவர் பேசும் "சிங்...கா...ர...ம், ஆறு மாசமா ஆளையும் காணோம், ஆறு லட்சத்துக்கு கணக்கையும் காணோம்" என்ற வசனம் அப்போ ரொம்ப ஃபேமஸ்.

அதுமட்டுமா?. அதுவரை யாருக்குமே தெரியாமல் இருந்த கன்னையா, இப்படத்தில் 'என்னத்தே பார்த்து, என்னத்தே தெரிஞ்சு' என்று பேசி ஓவர்நைட்டில் 'என்னத்தே' கன்னையாவாக ஆனார். (இப்போதும் கூட தன் பாணியில் "வரூ....ம், ஆனா வரா....து" என்று கலக்கிக்கொண்டுதான் இருக்கிறார்).

இவர்கள் இப்படியென்றால், இன்னொரு பக்கம் நாகேஷ் இரட்டை வேடத்தில் கலக்கினார். அதுவும் ஒன்று பெண்வேடம். ஒரு நாகேஷுக்கு அம்மாவாக இன்னொரு நாகேஷ். இவருக்கு சொல்லணுமா?. சும்மா ஊதித்தள்ளினார். இவரது அட்டகாசத்துக்கு முன் மனோரமா காணாமல் போனார் என்பதே உண்மை.

saradhaa_sn
15th November 2009, 11:34 AM
[tscii:a8d89a9eaf]'நான்' ( 2 )

கதாநாயகன் ரவிச்சந்திரனைப் பொறுத்தவரை, ஒரு ஆக்ஷன் கதாநாயகனுக்கு திகட்ட திகட்ட தீனி போடுமளவுக்கு இவரது ரோல் அமைந்திருந்தது. இவரும் ஒரு சான்ஸைக்கூட தவறவிடாமல் பயன்படுத்திக்கொண்டார். சண்டைக்காட்சிகள் இவரது திறமைக்கு கட்டியம் கூறின.

ஜெயலலிதாவுக்கு வேலையென்ன?. கதாநாயகனுக்கு சேர்ந்து டூயட் பாட ஒரு ஜோடி வேண்டும். மற்ற நேரங்களில் ஜமீனின் பெண்வாரிசான குட்டி பத்மினியைப் பார்த்துக்கொள்ள வேண்டும் அவ்வளவுதான். அதைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். 'அதே முகம் அதே குணம்' பாடலின்போது நீச்சல் உடையில் வருகிறார். ஆனால் எல்லாவற்றுக்கும் சேர்த்துவைத்து "அம்மனோ சாமியோ" பாடலில் அருமையாக நடித்துத்தள்ளிவிட்டார். அந்த ரோலில் நிச்சயமாக ஜெயலலிதாவைத்தவிர யார் நடித்திருந்தாலும் அவ்வளவாக எடுபட்டிருக்காது என்பது உண்மை.

இப்படத்தின் மூலம் புத்துயிர் பெற்ற இன்னொருவர் மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி. பாடல்கள் அத்தனையும் அந்த வருடத்தின் (1967) SUPER HIT SONGS.

நான் ‘குமரிப்பெண்’ பதிவில் குறிப்பிட்டதுபோல, ரவிக்கு ஜெயலலிதாவை டீஸ் செய்ய கிடைத்த பாடல் "ராஜா கண்ணு போகாதடி, நீ போனா நெஞ்சுக்கு ஆகாதடி" பாடல், அந்தக்காலத்திய குத்துப்பாடல்.

சொத்துப்பத்திரங்கள் அடங்கிய பெட்டியை ரவிச்சந்திரன் எடுக்க வரும்போது, மாளிகையில் இருப்போரின் கவனத்தை திசை திருப்பவும், தனக்கும் மனோகருக்கும் நடக்க இருக்கும் திருமணத்தை நிறுத்தவும், ஜெயலலிதா சாமி வந்து ஆடுவதுபோல நாடகமாடும் "அம்மனோ சாமியோ அத்தையோ மாமியோ" பாடல் ஈஸ்வரியும் சீர்காழியாரும் பாடியிருக்க, ஜெயலலிதாவும் நாகேஷும் நடித்திருப்பார்கள். நாகேஷிடம் அசல் பூசாரி கெட்டார் போங்க.

ரவி - ஜெயா டூயட் பாடல். எங்கே?. சுவிட்சர்லாந்து?. நயாகரா?. சிங்கப்பூர்?. அட்லீஸ்ட் பிருந்தாவனம்?. ஊட்டி?. கொடைக்கானல்?. ஊகும்.... சின்னஞ்சிறிய ஃபியட் காருக்குள் "போதுமோ இந்த இடம் கூடுமோ அந்த சுகம்" பாடலை என்ன அழகாகப் படமாக்கியிருப்பார் ராமண்ணா. வல்லவனுக்கு காரும் லொக்கேஷன்.

1967-ல் கல்லூரி மாணவர்களிடையே கலக்கியெடுத்துக் கொண்டிருந்தது ஒரு ஆங்கில இசை. பெயர் 'கம் செப்டம்பர்'. அப்போது டி.வி.சேனல்களோ, டேப் ரெக்கார்டர்களோ, செல்போன்களோ, வாக்மேன்களோ அறிமுகமில்லாத அந்த நாளில் இசைத்தட்டுக்கள் வாயிலாகவே அவை பாப்புலராகியிருந்தன. அந்த இசையில் கவரப்பட்ட ராமண்ணா, தன்னுடைய நான் படத்துக்கும் அந்த மெட்டில் ஒரு பாடல் வேண்டுமென்று கேட்க, டி.கே.ராமமூர்த்தியும் அசத்திவிட்டார்.
'வந்தால் என்னோடு இங்கே வா தென்றலே'
என்ற அந்தப்பாடல், ரெஹ்மானின் ஒளிப்பதிவுத்திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டு. என்ன ஒரு பளிச்சென்ற ஒளிப்பதிவு, என்ன அற்புதக்கோணங்கள். ஜெயலலிதாவின் படுவேகமான நடன அசைவுகள். ஈஸ்வரியின் கொஞ்சும் குரல். மொத்தத்தில் சூப்பர்.

'நான்' திரைப்படம் நகரம் முதற்கொண்டு பட்டி தொட்டியெங்கும் ஓட்டத்தில் சாதனை புரிந்ததோடு அந்த ஆண்டின் ஒரே வெள்ளிவிழாப்படமாக அமைந்தது.

அதுமட்டுமல்ல, ரவிச்சந்திரனின் படங்களில் மறு வெளியீடுகளில் அதிகம் சாதித்த படமும் 'நான்' திரைப்படம்தான்.
[/tscii:a8d89a9eaf]

mr_karthik
18th November 2009, 04:25 PM
Good one mam,

Ravichandran, whos is surviving in Tamil Film idustry for the 45 years as a successful hero, charector artist and a producer too, definitely deserves for a seperate thread, and you have done it.

Short reviews on his movies are nice, especially 'Naan' review.

His son Hamsavirudhan also an actor and have done five films including Mandhiran, Punnagai dhEsam etc.

I hope you will cover most of the films of RC.

saradhaa_sn
19th November 2009, 04:52 PM
நன்றி கார்த்திக்,

ரவிச்சந்திரன் படங்களைப்பற்றியும், மற்றும் அவரைப்பற்றிய குறிப்புக்களையும் நீங்கள் அறிந்தவற்றை இங்கே பதியுங்கள்.

saradhaa_sn
19th November 2009, 05:08 PM
நடிகர்திலகத்துடன் ரவிச்சந்திரன்.....

மற்ற எல்லா கதாநாயகர்களுடனும் பல படங்களில் நடிக்கும் வாய்ப்புக்கிடைத்த ரவிச்சந்திரனுக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிக்கும் வாய்ப்பு கடைசி வரை அமையவேயில்லை. அதே ச்மயம், நடிக்க வந்த அடுத்த வருடமே நடிகர்திலகத்துடன் நடிக்கும் வாய்ப்புக்கிடைத்தது.

மோட்டார் சுந்தரம் பிள்ளை : 1964-ல் முதல் படம் வெளியான ரவிக்கு 1965-லேயே நடிகர்திலகத்துடன் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. (படம் வெளியானது 1966 ஜனவரி 26. நடிகர்திலகத்துக்கு பத்மஷ்ரீ அறிவிக்கப்பட்ட அதே நாள்). ஜெமினி வாசன் தயாரித்து, அவரது மகன் பாலசுப்ரமணியம் இயக்கிய இப்ப்டத்தில் நடிகர்திலகத்தின் மாப்பிள்ளையாக (மூன்றாவது மகளான ஜெயலலிதாவின் ஜோடியாக) ரவிச்சந்திரன் நடித்தார். வாலி எழுதி, மெல்லிசை மன்னர் இசையமைத்த 'காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே' என்ற அருமையான டூயட் பாடல் இந்த ஜோடிக்கு. மைசூர் பிருந்தாவனம் கார்டனில் படமாக்கப்பட்டிருந்தது. ஒன்றாக படத்தில் நடித்திருந்தபோதிலும் சிவாஜி-ரவி இருவரும் சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் அபூர்வம். என் நினைவு சரியென்றால், ரவியை அவர் அப்பாவான கல்லூரி பிரின்ஸிபாலிடம் அழைத்துச்சென்று, அவர்களின் காதல் பற்றி புகார் செய்யும் இடம்தான் என்று நினைக்கிறேன். இதை விட்டால் கிளைமாக்ஸில்தான் சந்திப்பார்கள்.

கவரிமான் : மோட்டார் சுந்தரம்பிள்ளை படம் வெளியாகி 16 ஆண்டுகள் கழித்து 1979-ல் கவரிமான் படத்தில் ரவி சிவாஜியுடன் நடித்தார். இதிலும் அப்படித்தான். இருவரும் சந்திக்கும் வாய்ப்பே கிடையாது. அப்போது வந்த படங்களில் நடிகர்திலகத்துடன் துணைப்பாத்திரங்களில் மேஜர், சிவகுமார், விஜயகுமார், ஜெய்கணேஷ் போன்றோர்தான் நடித்து வந்தனர், இப்படத்தில் ஏற்கெனவே மேஜர் அண்ணனாகவும், விஜயகுமார் தம்பியாகவும் வருகின்றனர். எனவே இந்த ரோலில் அநேகமாக ஜெய்கணேஷதான் நடிப்பார் என்பது பெரும்பாலோரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் படத்தின் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இந்த வேடத்தில் ரவிச்சந்திரன் நடிக்க இருப்பதாக அறிவித்தபோது எல்லோருக்கும் ஆச்சரியம். நடிகர்திலகத்தின் 106-வது படத்தில் நடித்தவர், அதன்பிறகு இருவரும் சேர்ந்து நடிக்காத வேளையில் மீண்டும் 201-வது படத்தில் சேர்ந்தது வியப்பாக இருந்தது. கூடவே இன்னொரு குண்டாக நடிகர்திலகத்தின் ஜோடி பிரமீளா என்றும் எஸ்.பி.எம். அறிவித்தார்.

கவரிமான் படத்தில் ரவி ஏற்றிருந்தது கொஞ்சம் வில்லங்கமான பாத்திரம். நடிகர்திலகத்துக்கு வில்லனாக, ஆனால் நேரடி வில்லன் அல்ல. கர்நாடக முதலமைச்சரின் முதன்மை செக்ரட்டியாக பணிபுரியும் நடிகர்திலகத்துக்கு வாய்த்த மனைவி பிரமீளா நாகரீக மோகம் பிடித்து சதா, கிளப், பார்ட்டி என்று சுற்றிக்கொண்டிருப்பவர். அப்போது கிளப்பில் ரவிச்சந்திரனின் அறிமுகம் கிடைத்து, அவரால் குடிப்பழக்கத்துக்கும் ஆளாகிறார். இந்நிலையில் முதல்வருடன் வெளிநாடு செல்வதாக சிவாஜி கிளம்பிப்போன பின், பிரமீளா, ரவியை வீட்டுக்கு அழைத்து, மதுவின் போதையில் இருவரும் படுக்கையறையில் இருக்கும்போது, பயணம் ரத்தாகி வீடு திரும்பும் சிவாஜி இருவரையும் அலங்கோல நிலையில் பார்த்து விட்டுத் துடிக்க, சந்தடி சாக்கில் ரவி அங்கிருந்து நழுவி ஓடிவிட, கையில் கிடைத்த பாட்டிலால் மனைவி பிரமீளாவை சிவாஜி அடிக்க, பிரமீளா ரத்த வெள்ளத்தில் பிணமாக, அதை அவர்களின் நான்கு வயதுப் பெண்குழந்தை பார்த்துவிடுகிறது. படத்தில் சுமார் 20 நிமிடங்களே வரக்கூடிய ரோலாக இருந்தாலும் ரவிச்சந்திரன் அதை சிறப்பாக செய்திருந்தார்.

saradhaa_sn
20th November 2009, 07:46 PM
[tscii:f2806803e7]கொலை.... கொலை.... தினமொரு கொலை...

"அதே கண்கள்"

உங்களுக்குப்பிடித்த ரவிச்சந்திரனின் ஐந்து படங்களைச்சொல்லுங்கள் என்று யாரைக்கேட்டாலும் சரி. அவர்கள் சொல்லும் ஐந்து படங்களில் மற்ற படங்கள் இருக்கிறதோ இல்லையோ. கண்டிப்பாக ‘அதே கண்கள்’ படம் இருக்கும். திகில், மர்மம், பொழுதுபோக்கு, இனிய பாடல்கள், அற்புதமான வண்ண ஒளிப்பதிவு என அனைத்து அம்சங்களும் நிறைந்த படம். ஒரு பணக்காரரின் நான்கு வாரிசுகள். மூத்தவர் படம் துவங்கியதுமே கொல்லப்படுகிறார். கொன்றது யாராக இருக்கும் என்று துப்புத்துலங்கும்போதே அவரது மனைவியும் கொல்லப்படுகிறார். இறந்த மூத்தவருக்கு அடுத்தவர் அசோகன், அதற்கடுத்தவர் எஸ்.வி.ராமதாஸ். இவர்களோடு ஒட்டி உறவாடும் குடும்ப டாக்டர் பாலாஜி. இவர்களில் கொலையாளி யாராக இருக்கக்கூடும் என்று விசாரணை நடக்கிறது. வெள்ளை மஃப்ளரால் இறந்தவர்கள் கழுத்து நெறித்து கொல்லப்பட்டிருப்பதால், எப்போதும் வெள்ளை மஃப்ளர் அணிந்திருக்கும் பாலாஜியா?. இவர்களோடு வயதான துறவி போல தங்கியிருக்கும் கிழவனா?. மர்மம்... மர்மம்... போலீஸ் தலையைப் பிய்த்துக்கொள்கிறது.

வெளியூரில் படித்துக்கொண்டிருக்கும் (இறந்துபோன மூத்தவரின் மகள்) காஞ்சனா ஊருக்குத் திரும்பி வருகிறாள். தன் குடும்ப பங்களாவில் அடிக்கடி நடக்கும் கொலை அவரை பயமுறுத்துகிறது. அவர்களின் துணைக்கு வந்து தங்கியிருப்பதோடு, கொலையின் மர்மத்தையும், கொலையாளி யார் எனவும் கையும் களவுமாகப்பிடிக்கத் துடிக்கும் அவரது காதலன் ரவிச்சந்திரன். மர்மத்தைக் கண்டுபிடிக்கும் முன்பு ராமதாஸும் கொல்லப்படுகிறார். இதற்குமேலும் தாமதித்தால் இருப்பவர்களையும் இழக்க நேரிடும் என்று கதாநாயகன் ரவி முழுமூச்சாக இரவு முழுதும் விழித்திருக்க, யாரோ வரும் அரவம் கேட்டு நிமிர்ந்து பார்க்க, மாளிகையின் மேலிருக்கும் வட்ட வடிவ கண்ணாடி கதவு மெல்ல மூடுகிறது. அதிர்ந்து போய் மெல்ல மெல்ல ஒவ்வொரு இடமாகப் பார்த்துக்கொண்டு வரும்போது, ஓ.... அதோ... ரவியை முன்னே போகவிட்டு, கதவோடு ஒட்டியிருந்தவன மெல்ல கையில் மஃப்ளரோடு பின் தொடர... நம் முதுகுத்தண்டு சிலிர்க்கிறது. (அந்தக்காலத்தில் எம்.ஜி.ஆர். படம் பார்க்கும்போது, எதாவது குகைக்குள் அவர் நுழையும் சமயம் "அண்ணே போகாதீங்க. அங்கே நம்பியார் ஒளிஞ்சிருக்கான்" என்று ஆடியன்ஸ் கத்துவார்களாம். அதுபோல நமக்கும் இந்தக் காட்சியில் "ரவி, கொலைகாரன் பின்னாடியே வரான் பாருங்க" என்று கத்ததோன்றும்).

நாம் எதிர்பார்த்தபடியே இருவருக்கும் பயங்கர சண்டை. முகமூடியணிந்திருக்கும் கொலையாளியின் முகமூடியைக்கிழிக்க ரவி முயற்சிக்க, அவன் தப்பியோடி விடுவான். ஆனால் அவன் கண்கள் மட்டும் அவர் மனதில் அப்படியே பதிந்திருக்கும். விசாரணையின்போது அந்தக்கண்களை வைத்துக் கண்டுபிடிப்பதற்காக ஒவ்வொருவர் முகத்தையும் மறைத்து கண்களை மட்டும் பார்த்துக்கொண்டே வரும்போது, ஒருவன் கண்களில் மட்டும் கொலைவெறி. 'இதோ... அதே கண்கள்... அதே கண்கள்' என்று ரவி கத்த, கொலையாளி மாட்டிக்கொள்கிறான். அது யார் என்று தெரியும்போது நமக்கே அதிர்ச்சி. இத்தனை கொலைகளையும் செய்தவன் இவனா?. (எவன்?. படம் வந்து 42 வருடங்கள் ஆகியும் இன்னும் கூட பார்க்காதவர்கள் பலர் இருக்கக்கூடும். ஆகவே சஸ்பென்ஸ் அப்படியே இருக்கட்டும்).

ரவிச்சந்திரன், காஞ்சனா, அசோகன், பாலாஜி, நாகேஷ், ராமதாஸ், ஏ.கருணாநிதி, மாதவி, ஜி.சகுந்தலா, கீதாஞ்சலி, டைப்பிஸ்ட் கோபு, பி.டி.சம்பந்தம் என நட்சத்திரக்கூட்டத்துக்கு குறைவில்லை. போதாக்குறைக்கு காஞ்சனாவின் தோழிகள் பட்டாளம் வேறு. சஸ்பென்ஸைக்கூட்டுவதாக நினைத்துக்கொண்டு நடுராத்திரியில் கருணாநிதி, கையில் கத்தியோடு குரல் எழுப்புவதையெல்லாம் காட்டி குழப்ப வேண்டுமா?. அதுபோலவே நடுராத்திரியில் கீதாஞ்சலி பாடும் "வா அருகில் வா" பாட்டும் அதற்கான காட்சியும்.

படத்துக்கு திருஷ்டிப்பொட்டு எதுவும் கிடையாதா? இதோ இருக்கிறதே. நாகேஷின் மகாமட்டமான காமெடி. பெண்வேடம் போட்டுவரும் அவர் பின்னால் பி.டி.சம்பந்தம் அலைவதெல்லாம் ஒரு காமெடியா?. அருவருப்பு.

'அதே கண்கள்' என்ற படத்துக்கு ஏ.வி.எம்.செட்டியார், வேதாவை இசையமைப்பாளராக போட்டார். அந்தப்படம் ஒரு திகில் படமென்பதால் வேதாவைப்போட்டால் நன்றாக இருக்கும் என்று அவரது மகன்கள் விரும்பினர்.

அப்போது வேதாவை அழைத்து செட்டியார் சொன்னார்: "இங்க பாருப்பா, நீ மற்ற சில கம்பெனி படங்களுக்கு (மாடர்ன் தியேட்டர்ஸ் என்று சொல்லவில்லை) இந்திப்பட மெட்டுக்களை காப்பியடித்து பாட்டுப்போடுறேன்னு எனக்கு தெரியும். நானும் கேட்டிருக்கேன். ஆனால் என் படத்துக்கு அத்தனை பாடல்களுக்கும் நீ சொந்தமாகத்தான் மெட்டுப்போடனும். என் நிறுவனத்துக்கென்று ஒரு பேர் இருக்கு. நாளைக்கு ' என்ன செட்டியாருமா இப்படீ?'ன்னு யாரும் பேசிடக்கூடாது. என் பையன் களோட விருப்பத்தால்தான் உன்னைப்போட்டேன். சொந்தமாக மெட்டுப்போட முடியலைன்னா சொல்லிடு. நான் வேறு இசையமைப்பாளரை வச்சிக்கிறேன்" என்று கறாராக பேசி விட்டார்.

விளைவு..?. 'அதே கண்கள்' படத்துக்கு அத்தனை மெட்டுக்களும் சொந்தமாகவே போட்டார் வேதா. அத்தனையும் SUPER HIT ஆயின. (இந்த விவரம் ஏ.வி.எம்.குமரன் ஒரு TV பேட்டியின்போது சொன்னது).

முதல் பாடல், காஞ்சனாவும் தோழிகளும் குடிசைப்பகுதியை சீரமைக்கும்போது பாடும் "பூம் பூம்பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி" பாடலில் காஞ்சனா குழுவினர் கஷ்டப்பட்டு ஆடும் ஆட்டத்தை விட நம்மைக்கவர்வது, மாட்டுக்காரன் சின்னச்சின்ன அசைவுகளுடன் அசால்டாக ஆடும் ஆட்டம்தான். இப்பாடலை P.சுசீலா பாடியிருப்பார்.

கிளப்'பில் காஞ்சனா கோஷ்டியை டீஸ் செய்து ரவி (TMS) பாடும் "கண்ணுக்குத் தெரியாதா" பாடல், வேகமான அசைவுகளுடன் கூடிய ரவிச்சந்திரன் பிராண்ட்.

ரவி & நாகேஷ் பாடும் "பொம்பளை ஒருத்தி இருந்தாளாம்" பாடலில், நாகேஷ் மாடிப்படிகளில் படுவேகமாக, அதே சமயம் ரிதம் தவறாமல் இறங்கி வரும் காட்சி பிரபுதேவா, விஜய், சிம்பு காலத்திலும் கூட நமக்கு ஆச்சரியமூட்டுகிறது.

பிருந்தாவனம் கார்டனில் படமாக்கப்பட்ட "ஓ...ஓ... எத்தனை அழகு இருபது வயதினிலே" பாடல் வேதாவின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. அதிலும் குறிப்பாக துவக்கத்தில் வரும் அந்த ட்ரம்பெட் இசை அட்டகாசமான துவக்கம்.

"வா அருகில் வா" பாடல் யார் நீ படத்தில் வரும் 'நானே வருவேன்' பாடலை நினைவுபடுத்தும். கடற்கரையில் கீதாஞ்சலி நீச்சல் உடையில் பாடியாட அசோகன் ரசித்துக்கொண்டிருக்கும் "என்னென்னவோ நான் நினைத்தேன் நினைத்தேன் சொல்ல வார்த்தையில்லையே" பாடல், அதிகம் பாப்புலராகாத, அதே சமயம் அழகான பாடல். ஒளிப்பதிவாளருக்கு ஸ்பெஷல் அப்ளாஸ்.

திகில் படத்துக்கேற்ற திகில் செட். இந்திப்படத்துக்காகப் போடப்பட்ட இந்த செட்டைப் பயன்படுத்தி ஒரு தமிழ்ப்படமும் எடுக்க வேண்டும் என ஏ.வி.எம். செட்டியார் சொன்னபோது, இந்த செட்டுக்கு வேறெந்த கதையையும் விட திகில், மர்மம் நிறைந்த கதைதான் ‘ஸுட்’ ஆகுமென் எல்லோரும் அபிப்ராயம் சொல்ல அதன்பின்னரே இந்தக்கதையை செட்டியார் படமாக்கத்துணிந்தாராம்.

A.C..திருலோக்சந்தர் இயக்கிய 'அதே கண்கள்' படம் (உதவி இயக்குனர் SP.முத்துராமன்) பட்டிதொட்டியெங்கும் பட்டையைக்கிளப்பி, 1967-ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது.
[/tscii:f2806803e7]

app_engine
20th November 2009, 08:14 PM
Excellent posts, Saradha madam.

One small clarification though:-)



'அதே கண்கள்' படத்துக்கு அத்தனை மெட்டுக்களும் சொந்தமாகவே போட்டார் வேதா.


'boom boom mAttukkAran' is inspired from the disney classic 'chim chimney, chim chimney' (Mary Poppins), IMO :-)

saradhaa_sn
21st November 2009, 11:31 AM
Excellent posts, Saradha madam.

One small clarification though:-)



'அதே கண்கள்' படத்துக்கு அத்தனை மெட்டுக்களும் சொந்தமாகவே போட்டார் வேதா.


'boom boom mAttukkAran' is inspired from the disney classic 'chim chimney, chim chimney' (Mary Poppins), IMO :-)
நன்றி

வேதாவைப்பற்றிய விவரம் திரு AVM குமரன், ஒரு தொலைக்காட்சி பேட்டியின்போது சொன்னதுதான். அப்படியும் கூட AVM கண்ணில் மண்ணைத்தூவி விட்டு, Disney Classic-லிருந்து சுட்டிருக்கிறார் என்பது ஆச்சரியம்தான்.

நட்சத்திரப் பட்டியலில், மிடுக்கான இன்ஸ்பெக்டராக வரும் மேஜர் சுந்தர்ராஜனைக் குறிப்பிட மறந்துவிட்டேன்.

pammalar
21st November 2009, 07:17 PM
நடிகர் திலகத்தின் பக்தையான சகோதரி சாரதா அவர்கள், 'ஸ்மார்ட் ஹீரோ', 'கலை நிலவு' ரவிச்சந்திரன் அவர்களுக்கு தொடங்கியிருக்கும் இத்திரியின் தொடக்கமே காதலிக்க நேரமில்லை திரைப்படம் போல சூப்பர்ஹிட் ரேஞ்சில் உள்ளது. நமது சகோதரியின் பெருமுயற்சிக்கு எமது பசுமையான பாராட்டுக்கள் !

இத்திரி மென்மேலும் சிறக்க, எமது வளமான வாழ்த்துக்கள் !!

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
23rd November 2009, 01:23 PM
மிக்க நன்றி பம்மலார்,

தங்கள் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்களால் என் மனம் உரமிட்ட பயிரானது.

saradhaa_sn
23rd November 2009, 01:40 PM
[tscii:9fda44b118]ரவிச்சந்திரன் ராமண்ணா கூட்டணியின்
இன்னொரு வெற்றிப்படைப்பு

"மூன்றெழுத்து"

ராமண்ணா - ரவிச்சந்திரன் – ராமமூர்த்தி(TK) என்ற 'R' அணியின் முந்தைய படைப்பான 'நான்' திரைப்படத்தின் அபார வெற்றியைத்தொடர்ந்து, அதே போன்றதொரு வித்தியாசமான படைப்பாக வந்தது 'மூன்றெழுத்து' திரைப்படம்.

முதல்காட்சியில், மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருக்கும் கப்பல். அதில் பயணம் செய்துகொண்டிருக்கும் கதாநாயகன் ரவிச்சந்திரன், கப்பல் கேண்டீனில் போய் அமர, அங்குள்ள பணிப்பெண் ஒரு புத்தகத்தைக்கொடுக்கிறாள். புத்தகத்தைத் திறக்க, டைட்டில்கள் ஓடத்துவங்குகின்றன. டைட்டில் முடிந்ததும், கப்பலில் திருட்டுத்தனமாக பயணம் செய்து வரும் ஆனந்தனைக் கப்பல் காவல்துறையினர் விரட்டிவர, அவர் ரவியிடம் உதவி கேட்டுக் கெஞ்ச, இவரும் நம்பி அடைக்கலம் கொடுக்கிறார். சென்னையில் இறங்கியதும் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச்சென்று தங்க வைத்து விட்டு, தந்தை மேஜரைப்பார்க்கச்செல்கிறார். எங்கே?. சிறைச்சாலைக்கு. சிறைச்சந்திப்பில் மேஜர், தான் சிறைக்கு வந்த சம்பவத்தைக்கூற....... 'ப்ளாஷ்பேக்' ஆரம்பம்......

லட்சாதிபதியொருவர் தன்னுடைய பார்ட்னருடனான பார்ட்னர்ஷிப் பிஸினஸை முடித்துக்கொண்டு, தன் மனைவி மக்களோடு ஊர் திரும்பிச்செல்ல இருந்த நேரம், பார்ட்னரிடமிருந்து தனக்கு வரவேண்டிய பங்குத்தொகை வர தாமதமாகியதால், தன் குடும்பத்தினரை விமானத்தில் ஊருக்கு அனுப்பிவிட்டு, தன்னிடமிருக்கும் ஐந்து லட்ச ரூபாயை (இன்றைய மதிப்பு ஐந்துகோடி) நோட்டுக்கட்டுகளாக (அப்போது அதிகபட்ச கரன்ஸி நோட்டே நூறு ரூபாய்தான், எனவே 5,000 கட்டுக்கள்) பெட்டியில் அடுக்கிக்கொண்டிருக்கும்போது பார்ட்னர் 'என்னத்தே' கன்னையா தன் பரிவாரங்களுடன் வருகிறர். வீட்டில் தனியே இருப்பவரிடம், பணத்தை செட்டில் பண்ணுவதாகச்சொல்லி, எதிர்பாராத நேரம் துப்பாக்கியால் சுடுகிறார். சுடப்பட்டபோதும் அவர் கையிலிருந்த துப்பாக்கியைப்பிடுங்கி, அதைக்காட்டி மிரட்டியபடியே பணப்பெட்டியுடன் வெளியேறும் அந்தப்பணக்காரர், அப்போதுதான் தன் குடும்பத்தை விமானத்தில் அனுப்பி விட்டு திரும்பிக்கொண்டிருக்கும் தன் விசுவாசமான டிரைவரான மேஜர் சுந்தர்ராஜனிடம் பணப்ப்ட்டியை ஒப்படைத்துவிட்டு உயிரை விடுகிறார். பணப்பெட்டியுடன் காட்டுக்குள் ஓடும் டிரைவர், அதை ஒரு இடத்தில் புதைத்து வைத்துவிட்டு, அது எங்கே புதைக்கப்பட்டுள்ளது என்று ஒரு பேப்பரில் குறிப்பு எழுதிக்கொண்டிருக்கும்போது, தன்னைத்தாக்கி பெட்டியை அபகரிக்க வரும் ஒருவனைக்கொன்று விடுகிறார். பின்னர் குறிப்பை பூர்த்தி செய்து, அதை மூன்று பகுதிகளாகக்கிழித்து, தன் நண்பர்களான ஊட்டியிலிருக்கும் அசோகனிடம் ஒரு பகுதியையும், நாகர்கோயிலில் இருக்கும் ஓ.ஏ.கே.தேவரிடம் ஒரு பகுதியையும், ஐதராபாத்திலிருக்கும் சுருளிராஜனிடம் ஒரு பகுதியையும் கொடுத்துவிட்டு, போலீஸில் சரண்டர் ஆகி சிறைக்குச்செல்கிறார்.

ஃப்ளாஷ்பேக் முடிகிறது. தான் குறிப்புக்களைக்கொடுத்த அம்மூவரின் விலாசங்களையும் ரவியிடம் மேஜர் கொடுத்து, அந்தக்குறிப்புகளை ஒன்று சேர்த்து அவற்றின் உதவியுடன் பணப்பெட்டியை எடுத்து, தன் முதலாளி குடும்பத்திடம் ஒப்படைக்குமாறு தன் மகனிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார். வீட்டுக்குச் செல்லும் அவர் தன்னுடன் தங்கியிருக்கும் ஆனந்தனிடம் பேச்சோடு பேச்சாக அந்த விலாசங்களைச்சொல்லி விட்டுப்புறப்படுகிறார். வந்தது வில்லங்கம். ஆம்... ஆனந்தன் யாருமல்ல வில்லன் 'என்னத்தே' கன்னையாவின் கையாள்தான். அட்ரஸைக் கைப்பற்றியதுபோல அந்த குறிப்புகளையும் கைப்பற்றுமாறு ஆனந்தனை அனுப்ப, ரவிக்கு முன்பாகவே ஒவ்வொரு இடத்துக்கும் ஆனந்தனும் போகிறார். அந்த குறிப்புகளை எப்படி ஒவ்வொருவரிடமிருந்தும் கைப்பற்றி அந்தப்பணப்பெட்டியை எடுக்கின்றனர் என்பதை, மூன்று மணி நேரம் படு சுவாரஸ்யமாக எடுத்திருப்பார்கள்

முதலில் அசோகனைத்தேடி தன் நண்பன் தேங்காயுடன் ரவி போவதற்குள், அசோகனை வில்லனின் ஆட்கள் கடத்தியிருப்பார்கள். அவரைத்தேடிப்போகும்போது, அசோகனின் மகள் ஜெயலலிதாவும் இவர்களோடு சேர்ந்துகொண்டு அப்பாவைத்தேடி புறப்படுவார். (அப்படிப்போகும்போது, நாளடைவில் ரவியும் ஜெயலலிதாவும் ஒருவரை ஒருவர் விரும்பத்தொடங்கிவிடுவார்கள் என்பதை ஊகிக்காவிட்டால் நாம் தமிழ்ப்படம் பார்க்க லாயக்கில்லாதவர்கள்). ........(2)
[/tscii:9fda44b118]

saradhaa_sn
23rd November 2009, 01:58 PM
[tscii:db8f878b17]"மூன்றெழுத்து" (பாகம் 2)

இரண்டாவது ஆளான ஓ.ஏ.கே.தேவரோ, தன்னிடம் இருக்கும் குறிப்புக்களைத்தராமல் அடம் பிடிப்பார். அங்கே தேவரின் மைத்துனரும் தெருக்கூத்தாடியுமான நாகேஷும் இவர்களுடன் சேர்ந்துகொள்வார். ஏகப்பட்ட மின்சார வேலிகளுக்கு மத்தியில் அதைப்பதுக்கி வைத்திருப்பார். அவரை ஏமாற்றி அதை எடுக்கும் நேரம் ஆனந்தனும் அவரது ஆட்களும் வர, கடுமையாக சண்டையிட்டு, வில்லன் கோஷ்டியை மின்சார வேலிகளுக்குள் மாட்டிவிட்டு, இவர்கள் தப்பிப்பார்கள். அப்பாடா ஒரு குறிப்பு கிடைத்தது. அசோகனிடம் இருப்பதைக்கைப்பற்ற வேண்டுமே. அதைத்தேடி, அவரைப்பிடித்து வைத்திருக்கும் வில்லன் கூட்டம் தங்கியிருக்கும் இடத்துக்கு இரவில் போய்த்தேட, அவர் தன் குடுமிக்குள் மறைத்து வைத்திருப்பார். விளைவு?. அசோகனின் குடுமி கட். குறிப்பு ரவியின் குரூப் கையில்.

இதனிடையே, முதலாளியின் குடும்பம் வறுமையில் வாடுகிறது. முதலாளியின் மூத்த மகள் ஷீலா, ஓட்டலில் நடனமாடி சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறார். அதைப் பார்த்து தவறாகப் புரிந்துகொண்டு ரவி ஷீலாவைக்கண்டிக்க, அந்த வேலையையும் விட்டுவிடுகிறார். அடுத்த முறை அவர்களை ரவி சந்திக்கும்போது, அம்மாவைத்தவிர மொத்தக்குடும்பமும் பாட்டுப்பாடி பிச்சையெடுத்துக்கொண்டிருக்கிறது. அதிர்ந்து போன ரவி அவர்களை அழைத்துக்கொண்டு வீட்டுக்குப்போனால், அங்கே ஷீலாவின் அம்மா தற்கொலைக்கு முயற்சிப்பதைப்பார்த்து அவரைக் காப்பாற்றி, குடும்ப மொத்தத்தையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு, பிளானின் மூன்றாவது பகுதியைப்பெற ஐதராபாத் போகிறார்.

மூன்றாவதாக ஐதரபாத்திலிருக்கும் சுருளியிடம் போனாலோ, அவர் ரவி தன் மகளான ஷ்ரீவித்யாவை ரவி ஊட்டி ஏரியில் காப்பாற்றியதிலிருந்து அவரையே நினைத்து உருகுவதாகவும், வித்யாவை திருமணம் செய்ய ரவி சம்மதித்தால் மட்டுமே குறிப்பைத்தர முடியும் என்றும் கறார் செய்ய, ரவிக்கு (ஷண்முகி கமல் பாணியில்) 'போங்கடா' என்றாகிறது. ஆனாலும், ரவி தன் முயற்சியில் வெற்றிபெற்று, அந்தப்பணப்பெட்டியை கண்டெடுத்து, வறுமையில் வாடும் முதலாளியின் குடும்பத்தைக்காப்பாற்ற வேண்டுமென்பதற்காக ஜெயலலிதா, ரவியுடனான தன் காதலை விட்டுத்தர சம்மதிக்கிறார். (இந்த இடத்தில் ஒவ்வொருவரும் பேசுவதாக டி.என்.பாலு 'மூன்றெழுத்து வசனம்' எழுதியிருப்பார் பாருங்க... வாவ்....). இறுதியில் மனம் நெகிழ்ந்துபோன சுருளி, தன் குறிப்பைத்தர சம்மதிக்கிறார்.

மூன்று குறிப்பும் கையில் ரெடி. ஒன்றாக சேர்த்துப்பார்த்தால் 'தி.மு.க.' என்று வருகிறது. (நாகேஷ்: “ஏண்டாப்பா, உங்க அப்பா பெரிய அரசியல்வாதியாக இருப்பாரோ?”). அப்புறம் மாற்றி மாற்றி வைத்துப்பார்த்தால் வருவது 'கமுதி ‘. ஓ... அந்த ஊரில்தான் புதைக்கப்பட்டிருக்கிறதா?. அதே வரிசையில் வைத்து பிளானைத்திருப்பினால், பணப்பெட்டி எங்கே புதைக்கப்பட்டுள்ளது என்பதை பிளான் தெளிவாகக் காட்டுகிறது. என்ன பயன்?. திடீர் பவர் கட். மீண்டும் கரண்ட் வந்தபோது மொத்த பிளானும் மாயம். சரி, இடம்தான் தெரிந்துவிட்டதே என்று அங்கு போனால், கையில் பிளானுடன் பணப்பெட்டியை தோண்டியெடுத்துக்கொண்டிருக்கும் ஸ்பெஷல் வில்லன் மனோகர் (கிளைமாக்ஸில் மட்டும் வருவார்). வழக்கம்போல கிளைமாக்ஸ் சண்டை.

அங்கு கட்டிட வேலைகள் நடந்து கொண்டிருப்பதால், அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் நவீன எந்திரங்கள் உதவியுடன் சண்டை போடுகின்றனர். ஓடிக்கொண்டிருக்கும் புல்டோஸரின் பிளேடுக்கு முன்னால், டூப் போடாமல் ரவி, வில்லன் ஆட்களுடன் புரண்டு புரண்டு சண்டை போடுவது நம் உடலை சிலிர்க்க வைக்கும். ஒருவழியாக வில்லன் கோஷ்டியுடன் சண்டையிட்டு பணப்பெட்டியைக் கைப்பற்றியாகிவிட்டது. ஆனால் அதற்குள் மெயின் வில்லன் 'என்னத்தே' கன்னையா தன் ஆட்களுடன் சுருளியின் வீட்டுக்கு வந்து அங்கிருக்கும் சுருளி, அவர் மகள் வித்யா, ஜெயலலிதா மற்றும் முதலாளியின் மொத்தக்குடும்பத்தையும் துப்பாக்கி முனையில் பணயக் கைதிகளாக வைத்து, சோபாவின் பின்னால் துப்பாக்கியுடன் ஒளிந்துகொண்டு பணப்பெட்டியுடன் ரவியின் வரவை எதிர்பார்த்திருக்க, வெற்றிகரமாக பெட்டியுடன் ரவி, தேங்காய், நாகேஷ் கோஷ்டி வர..... யாரும் எதுவும் பேசவில்லை, எல்லோரும் பிரமைபிடித்தவர்கள் போல சோபாக்களில் உட்கார்ந்திருக்க, சுற்றும் முற்றும் பார்க்கும் ரவிக்கு, சற்று தொலைவில் கிடக்கும் கன்னையாவின் அந்த ஃபேமஸான தொப்பி கண்ணில் படுகிறது....... புரிஞ்சு போச்சு. எதிர்பாராமல் மின்னல்வேகத்தில் வில்லன் கூட்டத்தின்மேல் தாக்குதல் நடத்த, கிளைமாக்ஸ் சண்டையாச்சே. சொல்லணுமா?. பயங்கரமாக சண்டையிட்டு எல்லோருடைய கையும் ஓயும்நேரம் அசோகன் போலீஸுடன் நுழைய... அப்புறம் என்ன முதலாளி மனைவியிடம் பணப்பெட்டியை ஒப்படைப்பதும், ரவியும் ஜெயலலிதாவும் ஒன்று சேர்வதும், எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடுவதும்.... கொடுத்த காசுக்கு மேலேயே படம் திருப்தியளித்த சந்தோஷத்துடன் ரசிகர்கள் அரங்கை விட்டு வெளியேறுவதுமாக.........

(கதைச்சுருக்கமே அனுமார் வால் போல நீண்டுவிட்டதால், பல சுவாரஸ்யமான சீன்களை விட்டுவிட்டேன். உண்மையில் 'இஞ்ச்-பை-இஞ்ச்' அனுபவித்துப்பார்க்க வேண்டிய அற்புதப்படைப்பு மூன்றெழுத்து)
[/tscii:db8f878b17]

Plum
23rd November 2009, 02:02 PM
saaradha_sn, nari ondru sirikkaradhu-nu oru paattu oru Ravichandran padathula varum? Have you covered this movie already, or going to in the future?
(ena irundhAlum, engappa friend matrum protege illaiyA? oru paasam dhaen...;-) )

saradhaa_sn
23rd November 2009, 02:18 PM
"மூன்றெழுத்து" (பாகம் - 3)

"மூன்றெழுத்து"ரவிச்சந்திரனின் புகழ் மகுடத்தில் மற்றுமோர வைரம் என்றால் அது மிகையில்லை. 'மாறன்' என்ற கதாபாத்திரத்தில் வரும் அவர், படம் முழுக்க அற்புதமான பங்களிப்பைத் தந்திருப்பார். சண்டைக்காட்சிகளில் படு சுறுசுறுப்பு, பாடல் காட்சிகளில் வேகம் என்று அசரவைத்திருப்பார்.

பளபளவென்ற தங்க நிற முழு கோட், அதே நிறத்தில் தொப்பி இவற்றுடன் மெயின் வில்லனாக வரும் 'என்னத்தே' கன்னையாவை அந்தப் பாத்திரத்தில் போட்ட இயக்குனர் ராமண்ணாவின் தைரியத்தை பாராட்ட வேண்டும். அவரும் வழக்கமான வில்லன்களின் உறுமல் பாணியை விட்டுவிலகி நாசூக்கான வில்லனாக, ஆனால் செயலில் படுபயங்கரமான ஆளாக அந்த வேடத்துக்கே புதுப்பொலிவைத் தந்திருந்தார். பிற்காலத்தில் சத்யராஜ் போன்றோர் நடித்த அலட்சிய வில்லன் ரோல்களுக்கு முன்மாதிரி இவர்தான். நெடுநாளைக்குப்பிறகு ஆனந்தன் முழுப்படத்திலும் வில்லனாக வந்து நிறைய சண்டைகள் போட்டார். அசோகனின் நடிப்பை எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை, அந்த அளவுக்கு 'நான்' படத்தில் பெற்ற நல்ல பெயரைத் தொடர்ந்தார்.

ஜெயலலிதா மாடர்ன் உடைகளில் வந்து இளைஞர்களைக் கவர்ந்ததுடன், வித்தியாசமான நடிப்பையும் தந்திருந்தார். குறிப்பாக, பாதியில் நின்று போன நாகேஷின் வள்ளித்திருமணம் தெருக்கூத்தை, ('கொஞ்சும் கிளி குருவி மைனாவே, கூட்டமாய் இங்கு வராதே') ஆங்கில மெட்டில் தொடர்வது. மெல்லிசை மன்னர் T.K.ராமமூர்த்தி, டி.எம்.எஸ்., L.R.ஈஸ்வரி மூவரின் அபார உழைப்புக்கும் திறமைக்கும் எடுத்துக்காட்டு.

ரவியின் படமென்றால் கதாநாயகியை டீஸ் செய்யும் பாடல் இருக்க வேண்டுமே...!. இருக்கின்றன, ஒன்றுக்கு இரண்டாக. முதல் பாடல், தங்கள் அறையில் புகுந்துவிட்ட பாம்புக்கு பயந்து ரவியிடம் தஞ்சம் புகும் ஜெயலலிதா மற்றும் தோழிகளை கிண்டலடித்து அவரும் தேங்காயும் பாடும் "இரவில் வந்த் குருவிகளா... அடி குட்டிகளா" TMS மற்றும் பொன்னுசாமி பாடியது. செட்டுக்குள் படமாக்கப்பட்டது. இன்னொன்று, கிராமத்துப்பெண்களிடம் காருக்கு தண்ணீர் கேட்டு அடாவடியாக நடந்துகொள்ளும் ஜெயலலிதாவை டீஸ் செய்து "ஆடு பார்க்கலாம் ஆடு, இடையழகைப் பார்க்கும் என்னோடு" பாடல் கொடைக்கானலில் படமாக்கப்பட்டது.

ஓட்டல் அறையில் தங்கியிருக்கும்போது, குளிக்கும் இடத்தில் ரவியை நினைத்து ஜெயலலிதா பாடும் "காதலன் வந்தான் கண்களில் நின்றான்" பாடல் (சுசீலா) அருமையான மெலோடி.

ஏற்கெனவே நான் படத்தில் ஃபியட் காருக்குள் ஒரு டூயட் எடுத்தாச்சு. இப்போ அதைவிட சின்ன இடம் கிடைக்குமா என்று பார்த்தார் ராமண்ணா. வில்லனிடம் அகப்பட்ட ரவியையும் ஜெயாவையும், ஒரு பெட்டியில் அடைத்து லாரியில் அனுப்ப, நிமிர்ந்துகூட உட்கார முடியாத அந்தப்பெட்டியில் (TMS, சுசீலா) டூயட் பாட்டு "பெட்டியிலே போட்டடைத்த பெட்டைக்கோழி, பெட்டைக்கோழி பக்கத்திலே கட்டுச்சேவல்" அருமையான மெட்டு. அதைவிட அற்புதமான துல்லியமான ஒளிப்பதிவு. ஒரு ஒளிப்பதிவாளரின் திறமை, இம்மாதிரி சவால் பாடல்களைப் படமாக்குவதில்தான் தெரியும்.

வில்லனின் கோட்டைக்குள் நுழைய தந்திரம் செய்து அவனுடைய அடியாட்களிடம் மயங்கியது போல ஜெயலலிதா பாடும் "பச்சைக்கிளி... இச்சைமொழி... பன்னீரில் போட்டெடுத்த மாங்கனி" பாடலை L.R.ஈஸ்வரி பாடியிருந்தார்.

இத்தகைய, மனதை வருடும் பாடல்களுக்கு நடுவே நம் மனதை உருக வைப்பது ஷீலாவும், அவரது தம்பி தங்கைகளும் தெருவில் பிச்சையெடுக்கும்போது பாடும் பாடல்....
"தெய்வத்தின் கோயில் தெய்வம்தான் இல்லையே
இது மனிதனின் பூமி மனிதன்தான் இல்லையே
இவை இரண்டும் இல்லா வேளையிலே ஏழைப்பெண்கள் வீதியிலே..
..........................................
வாழ்வது எங்கள் ஆசை ஒரு மாளிகை ராணியைப்போலே
ஆண்டவன் காட்டிய பாதை, ஒரு ஆண்டியின் பிள்ளையைப்போலே"
எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் இப்பாடல் நம் நெஞ்சை கனக்கச்செய்யும். கந்தல் உடையுடன் குழந்தைகள் தட்டேந்தி பிச்சையெடுக்கும்போது (எப்படி வாழ்ந்த குடும்பம்) நம் கண்கள் கண்ணீரைச் சிந்தும்.

ரவிச்சந்திரன், ஜெயலலிதா, அசோகன், ஆனந்தன், நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், என்னத்தே கன்னையா, ஓ.ஏ.கே.தேவர், மேஜர் சுந்தர்ராஜன், மனோகர் (கௌரவத்தோற்றம்), ஷீலா, அம்முக்குட்டி புஷ்பமாலா, மாஸ்டர் பிரபாகர், 'பராசக்தி' ரஞ்சனி இவர்களோடு ஜெயலலிதாவின் தோழிகள் கூட்டம், வில்லனின் அடியாட்கள் கூட்டம் என்று படம் முழுக்க ஆட்கள் நிறைந்திருப்பார்கள்.

மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி படத்தின் அத்தனை பாடல்களையும் HIT பண்ணியிருந்தார். இந்த அருமையான வண்ணப்படத்தை கொஞ்சமும் தொய்வின்றி இயக்கியிருந்தார் ராமண்ணா. கதை வசனத்தை டி.என்.பாலு எழுதியிருந்தார். (டி.என்.பாலு அடுத்த ஆண்டில் (1969) நடிகர்திலகத்தின் 'அஞ்சல்பெட்டி 520' மூலம் இயக்குனர் ஆனார். பின்னர் ரவி நடித்த 'மீண்டும் வாழ்வேன்', கமல் நடித்த 'சட்டம் என் கையில்' உள்பட பல வெற்றிப்படங்களை இயக்கினார்).

ஒரு முக்கியமான கொசுறு தகவல்: 1970-ல் தயாரிக்கத்துவங்கி 1973-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த, எம்ஜியார் பிக்சர்ஸ் தயாரிப்பான "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் கதை 'மூன்றெழுத்து' படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதுதான்.

'மூன்றெழுத்து' 1968-ம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக, சிறப்பாக ஓடியது.

RAGHAVENDRA
23rd November 2009, 04:39 PM
சகோதரி சாரதா அவர்களின் மூன்றெழுத்து திறனாய்வு மிக அருமை. பல முறை பார்த்த படத்தை மீண்டும் பார்த்த நிறைவு. மற்றொரு வெள்ளி விழா படமாகியிருக்க வேண்டிய படம், கொட்டகை நிறைந்த காட்சிகளாக வெற்றி நடை போட்டது. பொன்னுசாமி அவர்களும் சுசீலா அவர்களும் இணைந்து பாடிய காதலன் வந்தான் பாடல் என்றென்றும் நினைவில் நிற்கும்.
நண்பர் ப்ளம் கேட்ட நரி ஒன்று சிரிக்கின்றது பாடல் நாலும் தெரிந்தவன் படத்தில் இடம் பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள டி.எம்.எஸ்.பி.சுசீலா டூயட், நிலவுக்கே போகலாம் வான் நிலவுக்கே, நினைவுகளை அனுப்பலாம் தேனிலவுக்கே, என்ற இனிமையான பாடலாகும். எஸ்.எம்.சுப்பையா நாயுடு அவர்கள் இசையில் வெளிவந்த படம். ஸ்ரீ பாலாஜி பிலிம்ஸ் தயாரித்து ஜம்பு அவர்கள் இயக்கியிருந்தார். வசனம் குகநாதன். காஞ்சனா கதாநாயகி. இப்படம் 1968 கடைசியில் டிசம்பர் என்று நினைவு. அப்போது சித்ராவில் எங்க ஊர் ராஜா ஒடிக் கொண்டிருந்தது. பாரகன் திரையரங்கில் வெளிவந்தது. மற்ற அரங்குகள் பெயர் நினைவில் இல்லை. இதே பெயரில் பின்னர் கவுண்டமணி நடித்து ஒரு படம் வெளிவந்தது.
வாய்ப்புக்கு நன்றி.
ராகவேந்திரன்.

sivank
23rd November 2009, 05:13 PM
Superb review Saradha. Thanks for bringing such nice reviews which makes me to feel seeing these movies again. Please write also about Gemini ganesh.

saradhaa_sn
23rd November 2009, 05:19 PM
நன்றி ராகவேந்தர் & Sivan.K...

நீங்கள் சொன்னது உண்மை. வெள்ளிவிழாப்படமாக அமைந்திருக்க வேண்டிய அத்தனை தகுதியும் 'மூன்றெழுத்து' படத்துக்கு உண்டு.

முதல் பாகத்தில், 5,000 நோட்டுக்கட்டுக்கள் என்று நான் குறிப்பிட்டிருப்பது தவறு. 5,000 கரன்ஸி நோட்டுக்கள் (50 கட்டுக்கள்) என்பதே சரி.

pammalar
23rd November 2009, 08:20 PM
சகோதரி சாரதா அவர்களின் மூன்றெழுத்து திரைப்படப் பார்வை குறித்து மூன்று வாக்கியங்கள் :

1. தங்களின் திறனாய்வு மிக மிக அருமை !

2. இதன் மூலம் ரவிக்கு தாங்கள் சேர்ப்பது பெருமை !!

3. யாம் கூறுவது வெறும் புகழ்ச்சி மட்டுமல்ல, உண்மை !!!

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
25th November 2009, 07:15 PM
டியர் பம்மலார்...

மூன்றெழுத்தைப்பற்றி மூன்றெழுத்துக்களால் பாராட்டிய உங்களுக்கு நான் வேறென்ன சொல்லப்போகிறேன்...?. 'நன்றி' என்ற மூன்றெழுத்துதான்.

saradhaa_sn
25th November 2009, 07:25 PM
"பாக்தாத் பேரழகி"

அதென்னமோ தெரியலை. ரவிச்சந்திரன் படத்தைப்பற்றி எழுதணும்னு நினைச்சாலே, கூடவே அது ராமண்ணா படமாகவும் இருக்கிறது. அப்படி சட்டென்று நினைவில் வந்தது அற்புதமான வண்ணப்படமான 'பாக்தாத் பேரழகி'

நாட்டின் சக்கரவர்த்தியையும் (மேஜர் சுந்தர்ராஜன்), ராணி ஆயிஷாவையும் (சாவித்திரி) சிறையில் தள்ளிவிட்டு, பேருக்கு ஒரு பொம்மை ராணியை நியமித்து பின்னணியில் நாட்டின் முழு அதிகாரங்களையும் கைப்பற்றி ஆண்டுகொண்டிருப்பவர் சர்வாதிகாரியான சர்தார் யாகூப் (அசோகன்). சக்கரவர்த்தியின் மகன் அப்துல்லாவோ (ரவிச்சந்திரன்) எங்கோ அனாதையாக வளர்கிறான். தான் ஒரு மன்னனின் மகன் என்றே தெரியாமல் வளர்ந்தவன், ஒருமுறை சிறைப்பட்டிருக்கும்போது, ஏற்கெனவே அங்கு நெடுங்காலமாக, சர்தாரால் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் சக்ரவர்த்தியின் விசுவாசமான அமைச்சரால், தானொரு இளவரசன் என்று அடையாளம் காணப்பட்டு, அவர் மூலமாகவே அங்கிருந்து தப்பிக்க வைக்கப்படுகிறான். இதனிடையே ஒரு போட்டியின்போது பாக்தாத்தின் பேரழகியை வென்று, அவளது அன்புக்கு உரியவனாகிறான். பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து தன் பக்கத்தை பலப்படுத்தி பின்னர் எப்படி சர்வாதிகாரி சர்தாரை வென்று தனக்கு உரிமையான நாட்டை திரும்பப்பெற்று முடிசூடுகிறான் என்பதுதான் கதை.

மூன்று மணிநேரம் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த வண்ணப்படமாக உருவாக்கியிருந்தார் இயக்குனர். இருந்தபோதிலும் இம்மாதிரியான கதைகளைக் கொண்ட படங்கள் வழக்கொழிந்துபோயிருந்த காலத்தில் வெளியானது. அதற்காக எந்த அமசத்திலும் குறை வைக்கவில்லை. கண்ணைக்கவரும் பிரமாண்டமான அரண்மனை செட்டுக்கள், எல்லோருக்கும் அலங்காரமான உடைகள் என்று அமர்க்களப் படுத்தியிருந்தனர்.

கதாநாயகன் இளவரசன் அப்துல்லாவாக ரவிச்சந்திரன் நடித்திருக்க அவரது ஜோடியாக 'கலைச்செல்வி' ஜெயலலிதா நடித்திருந்தார். இவர்தான் பாக்தாத் பேரழகி. (உண்மையில் படத்துக்கு பாக்தாத் பேரழகன் என்றுதான் பெயரிட்டிருக்க வேண்டும். அந்த அளவுக்கு படம் முழுக்க கதாநாயகன்தான் கொடிகட்டிப்பறந்தார்). ஜெயலலிதாவும் ஒன்றும் சோடை போகவில்லை. சிறப்பாகச்செய்திருந்தார். குறிப்பாக சர்தாரின் அரண்மனை ரகசியங்களை அறிவதற்காக அங்கு ஊமைப்பெண்ணாகப் பணியாற்றும் காட்சிகளிலும், ரவிச்சந்திரனுடனான சவால் பாடல் காட்சியிலும் நன்றாகவே பரிணமித்திருந்தார். எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் வண்ணம், கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் அசோகனுடன் வாள் சண்டை போடுமிடத்தில் அதிசயிக்க வைத்தார். குறிப்பாக மாடிப்படியில் தாவித்தாவி ஸ்டெப் போட்டுக்கொண்டே, மின்னல் வேகத்தில் வாள் வீசும்போது, தியேட்டரே கைதட்டலால் அதிரும். ஜெயலலிதாவா இப்படி?. எங்கிருந்து கற்றார் இதையெல்லாம்?.

நாகேஷ், சச்சு, வி.கே.ராமசாமி ஆகியாரின் நகைச்சுவைக் காட்சிகள் நன்றாக சிரிக்க வைத்தன. கிளைமாக்ஸில் அகழிப்பள்ளத்துக்குள் சிங்கத்துடனான சண்டை இன்னொரு படத்தை நினைவு படுத்தியதுபோலவே, அதைத்தொடர்ந்து வில்லன் அசோகன், உடமபை நெருக்கும் இயந்திரத்தில் மாட்டிக்கொள்வது ராமண்ணாவின் வேறொரு படத்தை நினைவூட்டியது. ரவிச்சந்திரன் வழக்கம்போல சண்டைக்காட்சிகளில் பிரமாதப்படுத்தியிருந்தார்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல்கள் படத்தில் கேட்கும்போது நன்றாக இருந்தபோதிலும் ஏனோ பெரிய அளவில் பாப்புலராகவில்லை. ரவிச்சந்திரன் - ஜெயலலிதா போட்டி போட்டுப்பாடும் (கவாலி ஸ்டைலில் அமைக்கப்பட்ட) "நவாப்புக்கொரு கேள்வி நல்ல ஜவாப் சொல்லையா" பாடல் மட்டும் ஓரளவு வெளியில் பிரபலம் ஆனது. எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் பாடியிருந்தனர். பின்னணி இசையைப்பொறுத்தவரை மெல்லிசை மன்னர் பிரமாதப் படுத்தியிருந்தார். படத்துக்கு ஏற்றவாறு எகிப்திய மற்றும் அரேபிய இசையை கலந்து வழங்கியிருந்தது, படத்துடன் ஒன்ற வைத்தது.

1973 தீபாவளியன்று 'பாக்தாத் பேரழகி' வெளியானது. கூடவே நடிகர்திலகத்தின் 'கௌரவம்', மு.க.முத்துவின் 'பூக்காரி', ஸ்ரீதரின் 'அலைகள்' படங்களும் அன்றைய தினம் திரைக்கு வந்தன. மாபெரும் வெற்றிப்படமாக அமைந்திருக்க வேண்டிய இப்படம், தமிழகம் முழுவதும் சுமாரான அளவிலேயே ஓடியது..

RAGHAVENDRA
26th November 2009, 06:35 AM
சகோதரி சாரதா அவர்களின் பாக்தாத் பேரழகி அறிமுகம் சுவையாகவும் பல தகவல்களை தந்தது. அவர்கள் சொன்னது போல் இப் படம் நன்றாக ஓடியிருக்க வேண்டியது. ரவி்ச்சந்திரன் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பினை இப்படம் உண்டாக்கியிருந்தது. ஆனால் படத்திற்கான விளம்பரம் வேறு வகையில் கிடைத்தது. ஜெயலலிதா அவர்கள் நடித்து வந்த திருமாங்கல்யம் பாக்தாத் பேரழகி இரு படங்களுக்கும் இடையே ஒரு பனிப்போர் நடைபெற்றதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த இரு படங்களில் எது 100வது படம் என்று தீர்மானிக்கும் போது சில நெருடல்கள் ஏற்பட்டிருந்தன. ஜெயலலிதா அவர்கள் திருமாங்கல்யம் படத்தை 100வது படமாகத் தீர்மானித்தார். காரணம், அப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிகவும் அழுத்தமாக அமைந்திருந்தது. அதன் காரணமாகவும் இப்படம் சீக்கிரம் முடித்து வெளியிடப்பட்டு திருமாங்கல்யம் படத்துக்கு வழிவிட வேண்டி வந்தது. அதனால் பாக்தாத் பேரழகி ஜெயலலிதா அவர்களின் 99வது படமாக அமைந்தது.
மெல்லிசை மன்னர் இசையில் பின்னணி இசை அமைந்த அளவிற்கு பாடல்கள் அமையவில்லை. மேலும் இச்சமயத்தில் தமிழ்நாட்டில் இந்திப் பாடல்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்த நேரம். ஆராதனா, பாபி, யாதோன் கி பாராத் போன்று தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கூட இந்திப் பாடல்கள் பரவத் தொடங்கின. எம்.ஜி.ஆர். சிவாஜி படங்களைத் தவிர மற்ற படங்களின் பாடல்கள் பின்னுக்குத் தள்ளப்படும் நிலைக்கு ஆளாகின, அது மெல்லிசை மன்னரே இசையமைத்த படங்களுக்கும் இதே கதி. இதில் தப்பியது பூக்காரி போன்ற சில படங்கள். ஆனால் இன்றைக்கு அவருடைய அத்தனை பாடல்களும் சிரஞ்ஜீவியாய் அமைந்து விட்டன.
பாக்தாத் பேரழகி படத்தைப் பொறுத்த வரையில் முழு அளவில் அப்படம் அமையவில்லை. சிறிதும் போரடிக்காமல் நன்கு விறுவிறுப்பாக அமைக்கப் பட்டிருந்த போதிலும், குலேபகாவலி ஸ்டைலிலேயே படத்தை எடுத்தது ஒரு பலவீனம். இன்னும் கொஞ்சம் பிரம்மாண்டம் தேவைப்பட்டது. குலேபகாவலி படத்தில் காணப்பட்ட அளவு பிரம்மாண்டம் கூட இப்படத்தில் இல்லை. அதுவும் குலேபகாவலி எடுக்கப்பட்ட காலகட்டம் 50களின் தொடக்கம். அந்தக் காலத்திலேயே ராமண்ணா அவர்கள் அருமையாக எடுத்திருந்தார். குறிப்பாக சமூகப் படமான உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் காணப்பட்ட பிரம்மாண்டத்தில் 10 சதவீதம் கூட ராஜா ராணி படமான பாக்தாத் பேரழகியில் காணப்படவில்லை. இவையெல்லாம் அப்படத்தின் தோல்விக்கு ஒரு சில காரணங்கள். ரவிச்சந்திரனின் அழகான தோற்றம் இருந்தும் அவருடைய ரசிகர்களே அப்படத்தை மீண்டும் மீண்டுப் பார்க்க வில்லை.
இவையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டுப் பார்த்தால், பாக்தாத் பேரழகி நிச்சயம் விறுவிறுப்பான படம் என்பதை சொல்லலாம். சென்னையில் வெலிங்டன் தியேட்டரில் பார்த்தேன் - இதுவும் நடிகர் திலகத்தின் கைங்கர்யம் தான் - சாந்தியில் கௌரவம் டிக்கெட் கிடைக்காமல் இங்கு வந்தது காரணம்.

ராகவேந்திரன்

Plum
26th November 2009, 01:00 PM
ஒரு முக்கியமான கொசுறு தகவல்: 1970-ல் தயாரிக்கத்துவங்கி 1973-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த, எம்ஜியார் பிக்சர்ஸ் தயாரிப்பான "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் கதை 'மூன்றெழுத்து' படத்தின் கதையைத் தழுவி எடுக்கப்பட்டதுதான்.


USV-la kadhai irundhudhA? :shock:

saradhaa_sn
26th November 2009, 02:01 PM
[tscii:4446fec2bc]சகோதரர் ராகவேந்தர் அவர்களுக்கு....

பாக்தாத் பேரழகி பற்றி நான் எழுதிய அறிமுகம் உங்களுக்கு பல நினைவுகளைத்தோற்றுவித்தது போலவே, உங்கள் பதிலில் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள், குறிப்பாக ஜெயலலிதாவின் 100-வது படம் பற்றிய அறிவிப்பு' அன்றைய பல விஷயங்களை கிளறுவதாக அமைந்துள்ளது. 1970-ல் தயாரிக்க ஆரம்பித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் தனக்கும் ஒரு கதாநாயகி ரோல் வேண்டுமென்று ஜெயலலிதா, எம்.ஜி.ஆரை நச்சரித்து வந்தார். வெளிநாட்டில் படப்பிடிப்பு முடிந்து வந்த பின்பும் இதை விடவில்லை. ஜெ.வொடு நடித்து வந்த மற்ற படங்கள் முடிய வேண்டுமே என்ற எண்ணத்தில் 'அந்தப்படத்தில் உனக்கும் ஒரு ரோல் கண்டிப்பாக உண்டு' என்று ஜெ.விடம் நம்ப வைத்து, மற்ற படங்களை MGR முடித்து வந்தார். இதனிடையே 71 ஜனவரியில் வெளியான 'குமரிக்கோட்டம்' 100 நாட்களைக்கடந்து விட்டது. (எம்.ஜி.ஆரும் ஜெ.வும் சேர்ந்து நடித்த கடைசி 100 நாள் படம் இதுதான்). தேரதலும் முடிந்து எம்.ஜி.ஆர். இரண்டாம் முறையாக எம்.எல்.ஏ. ஆகி விட்டார்.

இதனிடையே, 'ரிக்ஷாக்கரன்' படத்துக்கு கிடைத்த பிரம்மாண்ட ஓப்பனிங் ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சியைத்தந்தது என்றால், அப்படம் 140 நாட்களைக்கடந்தது இன்னொரு அதிர்ச்சியாக இருந்தது. பானுமதிக்கொரு 'நாடோடி மன்னன்', சரோஜாதேவிக்கொரு 'ஆயிரத்தில் ஒருவன்' ஆப்பு வைத்தது போல தனக்கொரு 'ரிக்ஷாக்காரனா' என்று எம்.ஜி.ஆருடன் சண்டையிட்டார். இந்நிலையில் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு தொடராமல் கிணற்றில் போட்ட கல்லாக கிடந்தது. ஏற்கெனவே புக் ஆன படங்கள் தவிர புதிய MGR படங்களான இதய வீணை, நேற்று இன்று நாளை, நினைத்ததை முடிப்பவன் போன்ற படங்களிலும் தான் இல்லையென்பதையறிந்த ஜெயலலிதா எம்.ஜி.ஆருடன் தான் நடித்து வந்த படங்களை முடித்துக்கொடுக்காமல் முரண்டு பிடித்தார். தேவி பாரடைஸ் தியேட்டரில் நடந்த 'நீரும் நெருப்பும்' பட வெளியீட்டு விழாவில் (ஜெ.வும் மேடையில் இருக்க) பேசிய எம்.ஜி.ஆர். தானும் ஜெயயலிதாவும் அடுத்து (என் அண்ணன் படம் தயாரித்த) வீனஸ் பிக்சர்ஸ் படமொன்றில் புதிதாக நடிக்க ஒப்பந்தம் ஆகவிருப்பதாக (ஜெயாவை சமாதானப்படுத்த) ஒரு பொய்யை அவிழ்த்து விட்டார். (MGR வேறு எந்த Heroine இடமும் இவ்வளவு பணிந்து போனதில்லை). அதை நம்பிய ஜெ.வும் மீண்டும் பாதியில் நின்ற படங்களுக்கு தேதிகள் கொடுத்து முடித்துத் தர துவங்கினார். 'ஒருதாய் மக்கள்' வெளியானது சரியாகப்போகவில்லை. அடுத்து வந்த படங்கள் ஜெ. அல்லாத (மஞ்சுளாவும் அல்லாத) படங்களக இருந்ததால் மக்கள் திலகத்துக்குப் பிரச்சினயில்லை.

'சங்கே முழங்கு' (லட்சுமி), தேவரின் 'நல்ல நேரம்' (கே.ஆர்.விஜயா) ஆகிய படங்களுக்குப்பின்னர் வெளியான ஜெயந்தி பிலிம்ஸ் கனக சபையின் 'ராமன் தேடிய சீதை' படம் தனக்கு இன்னொரு மாட்டுக்கார வேலனாக மாறி ‘எம்.ஜி.ஆரின் சிறந்த் ஜோடி ஜெயலலிதாதான்’ என்று உறுதிப்படுத்தும் என்று ஜெ. நம்பினார். ஆனால் காலை வாரிவிட்டது. அதன் பின்னாலேயே வெளியான 'நான் ஏன் பிறந்தேன்' (கே.ஆர்.விஜயா), அந்த ஆண்டுக்கு எம்.ஜி.ஆரின் மிகச்சிறந்த படம் என்று பெயரைப் பெற்று ஜெ.வின் ஆசையில் மண்ணைப்போட்டது. எம்.ஜி.ஆர், தன்னைவிட்டு வெகு வேகமாக விலகிப்போவதை ஜெ. உணர்ந்தார். மிச்சமிருந்த இரண்டே படங்கள். ஒன்று நான்காண்டுகளுக்கு மேல் தயாரிப்பில் இருந்து வந்த 'அன்னமிட்ட கை'., இன்னொன்று எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்த 'பட்டிக்காட்டு பொன்னையா'. இவற்றில் அன்னமிட்ட கையில் ஜெயலலிதா சம்மந்தப்பட்ட காட்சிகள் ஏற்கெனவே முடிந்து விட்டதால் அதற்கு டப்பிங் மட்டும் முடித்துக் கொடுப்பதைத்தவிர ஜெ.வால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. எதிர்பார்த்தபடியே அன்னமிட்ட கை சரியாகப்போகவில்லை.

எம்.ஜி.ஆர். மஞ்சுளா ஜோடியாக நடித்து இரண்டாவதாக வெளியான 'இதய வீணை', ஓப்பனிங்கில் இன்னொரு ரிக்ஷாக்காரனாக அமைய, ஜெயலலிதா இடிந்து போனார். இதனிடையே எம்.ஜி.ஆர். தனிக்கட்சி துவங்கி அரசியலில் பயங்கர பிஸியானதால், ஜெ.வால் அவரிடம் திரைப்படங்கள் குறித்துப் பேச முடியவில்லை. (அ.தி.மு.க. துவங்கப்பட்டு பத்தாண்டுகள் கழித்து 1982-ல்தான் ஜெ. அக்கட்சியிலேயே சேர்ந்தார். இது அ.தி.மு.க. தலைமைக்கழகத்திலேயே உள்ள குறிப்பு. ஜெயா டி.வி.யிலேயே பலமுறை சொல்லப்பட்ட தகவலும் கூட. ஆக ஜெயலலிதா கட்சியில் சேரும் முன்னரே எம்.ஜி.ஆர். இரண்டு முறை முதலமைச்சர் ஆகி விட்டார்).

இதற்கிடையே இன்னொரு சோதனையாக, 1972 டிசம்பரில் 'நீதி' வெளியான பின்னர் 1973-ல் நடிகர்திலகத்தோடு ஜெயலலிதா நடித்த ஒரு படம்கூட வரவில்லை. 1973 மே 11-ல் வெளியான 'உலகம் சுற்றும் வாலிபன்' வெளிநாட்டுக்காட்சிகள், அருமையான பாடல்கள், எம்.ஜி.ஆர் இரட்டை வேடம், நான்கு கதாநாயகிகள் என்ற பல அம்சங்களோடு ஒரு மெகா வெற்றியைப்பெற, 73-ம் ஆண்டு ஜெ.வுக்கு சோதனை ஆண்டாக அமைந்தது என்றபோதிலும் அவர் முத்துராமனுடன் சேர்ந்து நடித்த முக்தாவின் 'சூரியகாந்தி' 100 நாட்களைக்கடந்து பெரிய வெற்றியடைய, அவரது சூன்ய நிலை கொஞ்சம் தெளிந்தது போலிருந்தது. இந்நிலையில் அவரது 100-வது படம் நெருங்கியது.

நீங்கள் சொன்னது போல, ஜெயலலிதா ரொம்ப நம்பியிருந்தது 'திருமாங்கல்யம்' படத்தைத்தான். காரணம் அந்தப்படத்தில் பேருக்கு கதாநாயகியாக வராமல் அவரது முக்கியத்துவம் நிறைந்த கனமான ரோல், இன்னொரு காரணம், அதற்கு முன் மெகா வெற்றிப்படமான 'வசந்தமாளிகை'யைத் தந்த தயாரிப்பாளர் ராமாநாயுடுவின் படம், மெல்லிசை மன்னரின் இசை, வின்சென்ட்டின் இயக்கம் என எல்லாவற்றையும் கணக்குப்போட்டு, 'திருமாங்கல்யம்'தான் தனது 100வது படம் என அறிவித்தார். ஆனால் பரிதாபம், அதுவும் தப்புக்கணக்காகப்போனது. அதே சமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 99-வது படம் 'பாக்தாத் பேரழகி'யும் காலை வாரியது.

சென்னை ஆனந்த் திரையரங்கில் 'திருமாங்கல்யம்' வெளியானதையொட்டி, தன் சொந்த செலவில் 100-வது படவிழா கண்காட்சியை, பிலிம் நியூஸ் ஆனந்தன் பொறுப்பில் ஜெயலலிதா நடத்தினார். தான் நடித்த 100 படங்களின் புகைப்படத்தொகுப்புகள், அவற்றுக்காக தனக்குக்கிடைத்த விருதுகள், ஷீல்டுகள் என அனைத்தையும் பார்வைக்கு வைத்தார். இந்த விழாவில் இரண்டு திலகங்களையும் புறக்கணிக்கத்தீர்மானித்து, அப்போது பல படங்களில் தனது வெற்றி நாயகனாக வலம் வந்த முத்துராமனை விழாவில் முன்னிலைப்படுத்த் தீர்மானித்தார். ஆனால் திலகங்களைப் பகைத்துக்கொள்ள விரும்பாத முத்துராமன், சரியான நேரம் பார்த்து சிங்கப்பூர் சென்று விட்டார்.

பெரிதும் எதிர்பார்த்த தனது 100-வது படமும் வெற்றிபெறாமல் போக, ஜெயலலிதாவின் திரைப்பட வாழ்க்கை சரிவை நோக்கிப் பயணிக்கத்துவங்கியது.
[/tscii:4446fec2bc]

DHANUSU
27th November 2009, 09:06 PM
நன்றி கார்த்திக்,

ரவிச்சந்திரன் படங்களைப்பற்றியும், மற்றும் அவரைப்பற்றிய குறிப்புக்களையும் நீங்கள் அறிந்தவற்றை இங்கே பதியுங்கள்.

Another movie with high expectations that failed at the box office was 'Naangu Suvargal'. The movie directed by veteran KB was a mega production considering KB's other, generally, low budget movies. Jaishankar and Ravichandran acted together in this movie. Both acted as prisoners in this movie. The scene where petrol oozes out from ground is still fresh in memory.

saradhaa_sn
1st December 2009, 07:27 PM
[tscii:6ee6799eb4]சித்ராலயாவின்

'உத்தரவின்றி உள்ளே வா"

ஸ்ரீதரின் சித்ராலயா தயாரிப்பிலிருந்து வெளியான இன்னொரு நகைச்சுவை திரை விருந்து. .

ஒரே இடத்தில் தங்கியிருக்கும் நான்கு நண்பர்கள் ரவிச்சந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி, நாகேஷ், மாலி ஆகியோர். இவர்களில் ரவி கொஞ்சம் பணக்காரர். மற்றவர்கள் மாதச்சம்பளக்காரர்கள். இவர்களிடம் அடைக்கலமாக ஒரு அழகான இளம்பெண் ஜானகி (காஞ்சனா)வந்து சேர்கிறார். தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்திருக்கும் அந்தப்பெண்ணை நால்வருமே விரும்புகின்றனர். நால்வருமே கனவில் டூயட்டும் பாடுகின்றனர், இல்லை மூவர் மட்டுமே பாடுகின்றனர். மாலி டூயட் பாடினால் என்னாவது என்ற அச்சம் இயக்குனருக்கு வந்திருப்பது நியாயமானதே. ஆனால் அவள் யாரை விரும்புவாள்?. கதாநாயகனைத்தானே. அதுதான் நடக்கிறது. இவர்கள் காதலைப்பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படுகின்றனர். அதைத்தாண்டி என்ன செய்யமுடியும்?. அதிலும் நாயகன் பசையுள்ள பார்ட்டி. மற்றவர்களுக்கு அவனைக்கொண்டு காலம் ஓட வேண்டும்.

இந்நிலையில் நாகேஷின் பூர்வ ஜென்ம ஜோடி என்று சொல்லிக்கொண்டு ஒரு பெண் (ரமாபிரபா), தன் கடந்த காலத்தை மறந்த நிலையில் வந்து சேர்கிறாள். அவள் நாகேஷை 'நாதா... நாதா...' என்று அழைத்துக்கொண்டு, படாதபாடு படுத்துகிறாள். இது போதாதென்று, மாலியின் குழந்தை என்ற பெயரில் ஒரு அனாதைக்குழந்தை வீட்டு வாசலில் வந்து கிடத்தப்பட்டுள்ளது. அதோடு இணைக்கப்பட்டிருக்கும் கடிதத்தைப் படித்த நண்பர்கள் அது மாலியின் குழந்தைதான் என்று சாதிக்க, மாலி மறுக்கிறார். போலீஸில் புகார் செய்தால், அக்குழந்தையின் உண்மையான பெற்றோர் கிடைக்கும் வரை மாலிதான் அதனை வளர்க்க வேண்டும் என்று சொல்லிவிடுகின்றனர். சில பல சுவையான சிக்கல்களுக்குப்பிறகு, ரமாப்ரபாவின் பைத்தியம் தெளிந்து இந்த ஜென்மத்து நினைவுகளுக்குத் திரும்ப, குழந்தையின் பெற்றோர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் குழந்தை ஒப்படைக்கப்பட, மாலி மட்டும் அம்போவென விடப்பட்டு மற்ற மூன்று ஜோடிகளுக்கும் திருமணம் நடக்க சுபம்.

நாயகிகளில் ரவிச்சந்திரன் ஜோடியாக வரும் காஞ்சனா அழகாக வந்து ரவியுடன் டூயட் பாடுவதுடன் நிறுத்தப்பட்டு, சுய நினைவை இழந்து பூர்வ ஜென்ம சிந்தனையுடன் வலம் வரும் ரமாபிரபாவுக்கு அதிக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவரும் கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டு பெயரைத் தட்டிச்செல்கிறார். நகைச்சுவையை அள்ளித்தெளித்து கோபுவின் வசனங்கள். ரமபிரபாவின் பேச்சு முழுக்க பூர்வ ஜென்ம சிந்தனைதான். சாப்பிட அவரை நாகேஷ் ஓட்டலுக்கு அழைத்துச்செல்ல, 'என்ன வேண்டும்?' என்று கேட்கும் சர்வரிடம், 'ஒருதட்டில் அதிரசம்.. இன்னொரு தட்டில் தேனும் தினைமாவும் கொண்டு வாருங்கள்' என்று சொல்வது, ஆடியன்ஸ் மத்தியில் சிரிப்பை வரவழைக்கும் இடங்களில் ஒன்று.

தான் வளர்க்கும் குழந்தை செய்யும் சேட்டைகளால் எரிச்சல் அடைந்தாலும் நாளடைவில் அவற்றுடன் பழகிப்போகும் மாலி, குழந்தையின் பெற்றோர் கிடைத்ததும் அவர்களிடம் ஒப்படைக்க போலீஸ் ஸ்டேஷன் சென்று, திரும்பும்போது குழந்தையையும் தூக்கிக்கொண்டு கிளம்ப, 'யோவ் அவங்க குழந்தையை ஏன்யா கொண்டுபோறே?' என்று கேட்கும் இன்ஸ்பெக்டரிடம், 'ஓ... ஆமா சார் இது அவங்க குழந்தையில்லே' என்று திரும்ப ஒப்படைத்து விட்டு, இத்தனை நாள் தன் தோளில் கிடந்த குழந்தையை கண்களில் நீர் மல்க திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே செல்லுமிடம் நம் மனதைப் பிசையும்.

வண்ணப்பட நாயகனான ரவிச்சந்திரனுக்கு வரிசை கட்டி வந்த வண்ணப்படங்களில் 'உத்தரவின்றி உள்ளே வா' படமும் ஒன்று. வழக்கம்போல அழகான இளமையான தோற்றத்துடன் வரும் அவருக்கு பொருத்தமான ஜோடியாக காஞ்சனா நடித்திருந்தார். ரவிக்கு கிளைமாக்ஸில் ஒரு சண்டைக்காட்சியும் உண்டு.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் பாடல்கள் அத்தனையும் SUPER DUPER HIT....

காஞ்சனாவை மனதில் நினைத்து ரவி, மூர்த்தி, நாகேஷ் மூவரின் கற்பனையில் உருவாகும் அற்புதப்பாடல் "உத்தரவின்றி உள்ளே வா" பாடலை டி.எம்.சௌந்தர்ராஜன்., எஸ்.பி.பாலசுப்ரமணியம், எல்.ஆர்.ஈஸ்வரி மூவரும் பாடியிருந்தனர். அதிலும் நாகேஷுக்காக டி.எம்.எஸ். ஆலாபனையெடுத்துப் பாடும் "பூமியில் மானிட ஜென்மம் எடுத்தது காதலி உனைக்காண" என்ற பகுதி மிக மிக அருமை.

"உன்னைத்தொடுவது இனியது" என்ற டூயட் ரவி காஞ்சனா, நாகேஷ் ரமாபிரபா ஜோடிக்காக எஸ்.பி.பி., சுசீலா, ஈஸ்வரி, சாய்பாபா பாடியிருந்தனர். ஒரு கட்டத்தில் காஞ்சனாவை ரவி தூக்குவதைக்காட்டி, சட்டென காட்சியை மாற்றி நாகேஷ ரமாபிரபா தூக்குவதாக காண்பித்து அரங்கில் சிரிப்பலையை உண்டாக்கினார் இயக்குனர்.

நள்ளிரவு பணிரெண்டு மணிக்கு ரமாபிரபா ஆவி உருக்கொண்டு பாடும் "தேனாற்றங்கரையினிலே" பாடல் ஈஸ்வரியின் மாஸ்டர் பீஸ்களில் ஒன்று. அதுபோல எஸ்.பி.பி.யின் இளைய குரலில் சுசீலாவுடன் இணைந்து பாடும் "மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி" டூயட் பாடல் என்றென்றும் பாப்புலர் பாடல்களில் ஒன்று. ரவியும் காஞ்சனாவும் பாடும் இப்பாடலின்போது மற்ற நண்பர்கள் ஜன்னல் வழியே பார்த்துப்பொறாமைப்படுவது ஜோர்.

‘காதல் காதல் என்று பேச கண்ணன் வந்தானோ
காலம் பார்த்து ஜாலம் செய்ய மன்னன் வந்தானோ
மன்னன் வந்தானோ...’

இந்த அற்புதமான, அமைதியான பாடல். லேசான இந்துஸ்தானி சாயலைத் தழுவிய இப்பாடல், தர்மாவதி ராகத்தில் அமைக்கப்பட்டது. 'நைட் எஃபெக்டில்' படமாக்கப்பட்ட பாடல் இது. ரவிச்சந்திரனும் காஞ்சனாவும் நடித்திருப்பார்கள். ரவிக்கு வெறும் HUMMING மட்டுமே. காஞ்சனாவுக்குத்தான் முழுப்பாடலும். ஆகவே சந்தேகமின்றி சுசீலாவின் முழு ஆதிக்கம்தான்.
தாளத்துக்கு தபேலா, பாங்கோஸ், மிருதங்கம் என்று எதுவும் இல்லாமல், வெறுமனே டிரம்மில் பிரஷ் கொண்டு ஸ்மூத் டச்...
‘கண்ணா நீ கொண்டாடும் பிருந்தாவனம்
கல்யாணப் பூப்பந்தல் எந்தன் மனம்
நீராட நீ செல்லும் யமுனா நதி
மங்கல மங்கையர் மேனியில் தங்கிடும்
மஞ்சள் நதியோ குங்கும நதியோ’
(M.L.ஸ்ரீகாந்த் HUMMING)

இரவில் தனியாக படுத்திருக்கும்போது, ‘நைட்லாம்ப்’ வெளிச்சத்தில் தலைமாட்டில் இந்தப்பாடலை ஸ்டீரியோவில் சன்னமாக ஒலிக்க விட்டு, அரைக்க்ண்ணை மூடிக்கொண்டே இப்பாடலைக் கேட்டுப்பாருங்கள். வேறு உலகத்தில் இருப்பீர்கள். மெல்லிசை மன்னரின் மாயாஜாலம் உங்களை அப்படி ஆக்கி விடும்..

ஸ்ரீதரின் சித்ராலயா தயாரிப்பில் வெளியான இப்படதை ஸ்ரீதர் இயக்கவில்லை. அவரது உதவியாளரான என்.ஸி.சக்ரவர்த்தி இயக்கியிருந்தார். இதன்பின்னர் முத்துராமன் ஜெயலலிதா ஜோடியாக நடித்த ராம்குமார் பிலிம்ஸ் 'திக்குத்தெரியாத காட்டில்' என்ற படத்தை இயக்கினார். அப்புறம் என்ன ஆனார் என்று தெரியவில்லை

1971-ஜனவரி 14 (பொங்கல்) அன்று வெளியான 'உத்தரவின்றி உள்ளே வா' தமிழகம் முழுதும் வெற்றிகரமாக ஓடிய மாபெரும் வெற்றிப்படமாகும்.
[/tscii:6ee6799eb4]

DHANUSU
4th December 2009, 06:52 PM
ராமண்ணா - ரவிச்சந்திரன் இணையில்
மாபெரும் வெற்றிப்படம்

"நான்"

வெள்ளிவிழா நாயகன் என்ற முத்திரையுடன் திரையுலகில் நுழைந்த ரவிச்சந்திரனின் இரண்டாவது வெள்ளிவிழாப் படம் நான். ஏற்கெனவே குமரிப்பெண் தந்த மாபெரும் வெற்றியில் உற்சாகமடைந்த இயக்குனர் ராமண்ணா, மீண்டும் ரவிச்சந்திரன் - ஜெயலலிதா ஜோடியை வைத்து வண்ணத்தில் தயாரித்து இயக்கிய படம் இது.

ரவிச்சந்திரன், ஜெயலலிதா ஜோடியுடன் முத்துராமன், அசோகன், மனோகர், நாகேஷ் (அம்மாவும் (?) மகனுமாக), மனோரமா, குட்டி பத்மினி, சுருளிராஜன், முத்துலட்சுமி, 'என்னத்தே' கன்னையா என ஏராளமான நட்சத்திரங்களை உள்ளடக்கிய படம். இறந்துபோன ஜமீன்தாரின், காணாமல் போன வாரிசைக் கண்டுபிடித்து அவரிடம் ஜமீனை ஒப்படைக்க, அதற்காக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களின் முன், மூன்று பேர் 'நான்'தான் வாரிசு, 'நான்'தான் வாரிசு என்று வந்து நிற்க, அவர்களில் உண்மையான வாரிசை அடையாளம் கண்டு அவரை ஜமீனாக்குவதுதான் கதை. கதை சிறியதாக இருந்தாலும், அது எடுக்கப்பட்ட விதத்தில் படு சூப்பராக அமைந்து போனது.

வழக்கமாக இம்மாதிரிக் கதைகளில் கதாநாயன்தான் வாரிசாக இருப்பார். ஆனால் இதில் அப்படியில்லை என்பது மட்டுமல்ல, அந்த மூவரில் யாருமே உண்மையான வாரிசில்லை. வில்லனால் ஒளித்துவைக்கப்பட்டிருக்கும் நான்காவது நபர்தான் அவர் என்று தெரிய வரும்போது இன்னும் சுவாரஸ்யம் கூடுகிறது. அப்படியானால் வந்த மூவர்?. ஒருவர் வில்லனால் வாரிசு என்று அனுப்பப்பட்டவர், இன்னொருவர் அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட துப்பறியும் அதிகாரி.

அப்படீன்னா கதாநாயனாக வந்திருப்பவர் யார்?. அதுவும் ஒரு சஸ்பென்ஸ். உண்மையான வாரிசு, வில்லன் அசோகனால் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முத்துராமன் என்பதும், மனோகர், அசோகனால் ஜமீன் சொத்தை அபகரிக்க அனுப்பப்பட்ட போலி வாரிசு என்பதும், நாகேஷ், அர்சாங்கத்தால் அனுப்பப்பட்ட அதிகாரி என்பதும் கிளைமாக்ஸுக்கு சற்று முன்னரே தெரிய வருகிறது.

மொட்டைத்தலை வில்லனாக வரும் அசோகன் இப்படத்தில் ஒரு புதிய பரிமாணம் எடுத்திருந்தார். அது மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. வசனத்தை இழுத்து இழுத்துப் பேசும் பாணியை இப்படம் முதற்கொண்டுதான் அவர் கையாளத்தொடங்கினார். ஆனால் அதுவே பிற்காலத்தில் ஓவர்டோஸாகிப்போனபோது திகட்டியது. இப்படத்தில் அவர் பேசும் "சிங்...கா...ர...ம், ஆறு மாசமா ஆளையும் காணோம், ஆறு லட்சத்துக்கு கணக்கையும் காணோம்" என்ற வசனம் அப்போ ரொம்ப ஃபேமஸ்.

அதுமட்டுமா?. அதுவரை யாருக்குமே தெரியாமல் இருந்த கன்னையா, இப்படத்தில் 'என்னத்தே பார்த்து, என்னத்தே தெரிஞ்சு' என்று பேசி ஓவர்நைட்டில் 'என்னத்தே' கன்னையாவாக ஆனார். (இப்போதும் கூட தன் பாணியில் "வரூ....ம், ஆனா வரா....து" என்று கலக்கிக்கொண்டுதான் இருக்கிறார்).

இவர்கள் இப்படியென்றால், இன்னொரு பக்கம் நாகேஷ் இரட்டை வேடத்தில் கலக்கினார். அதுவும் ஒன்று பெண்வேடம். ஒரு நாகேஷுக்கு அம்மாவாக இன்னொரு நாகேஷ். இவருக்கு சொல்லணுமா?. சும்மா ஊதித்தள்ளினார். இவரது அட்டகாசத்துக்கு முன் மனோரமா காணாமல் போனார் என்பதே உண்மை.

One small observation.

TRR had a penchant for naming the villain characters in his films with North Indian surnames.

Example:

Naan - Asokan - Lal
Moonrezuthu - Kannaiah - Sukhadiya
Thangasurangam - OAK Devar - Pai

saradhaa_sn
6th December 2009, 01:43 PM
One small observation.

TRR had a penchant for naming the villain characters in his films with North Indian surnames.

Example:

Naan - Asokan - Lal
Moonrezuthu - Kannaiah - Sukhadiya
Thangasurangam - OAK Devar - Pai
Dhanusu...

It is not small observation, but a Keen Observation. Good.

Actually OAK Thevar's name in Thanga Surangam is Kanagasabai. (It will be spelled one or two times by Jawert Seetharaman.).

But after he bacame an International smuggler, he will change (short?) his name as (kanagasa)PAI. :lol:

saradhaa_sn
6th December 2009, 02:06 PM
தாய்க்குலத்தின் அமோக ஆதரவு பெற்ற குடும்பச்சித்திரம்

'புகுந்த வீடு'

ஒரு ஏழைப்பாடகன் பாடுவதற்கான வாய்ப்புக்களைத்தேடி அலைகிறான். குடும்பத்திலோ வறுமை விரட்டுகிறது. காப்பாற்றப்பட வேண்டிய அம்மா மற்றும் தங்கை. இந்நிலையில் ஒரு பணக்காரப் பெண் இவன் பாடலில் மயங்கி இவன் மேல் மையல் கொள்ள, காதல் அரும்புகிறது. ஆனால் அவன் தன் கடமையை மறக்கவில்லை. பணக்காரப்பெண்ணின் அண்ணனுக்கும் பாடகனின் தங்கை மீது ஈர்ப்பு. பெண்கொடுத்துப் பெண் எடுக்கப்படுகிறது. பிரச்சினை முளைக்கிறது. பாடகனின் மேல் அவளுக்கிருந்த மையல் குறைகிறது. வாழ்க்கைக்கு வெறும் மனமயக்கம் மட்டும் போதாது, வாழ்க்கை என்பது அதற்கு மேலே என்று உணர்கிறாள். இரண்டு குடும்பமும் பிரிகிறது. பிறந்த வீட்டில் குழந்தைபெற்ற தன் தங்கையையும் அவள் குழந்தையையும் கூட கணவன் வந்து பார்க்க பாட்டுக்காரன் தடை போடுகிறான். பல்வேறு போராட்டங்களுக்குப்பிறகு குடும்பங்கள் ஒன்று சேர முடிவு சுபம்.

இப்படத்தில் பாடகனாக ரவிச்சந்திரன், தங்கையாக சந்திரகலா, பணக்காரப்பெண்ணாக லட்சுமி, அவளது அண்ணனாக (சந்திரகலா ஜோடியாக) ஏ.வி.எம்.ராஜன், ரவிச்சந்திரனின் அம்மாவாக நடிகையர்திலகம் சாவித்திரி நடித்திருந்தனர். ஏழையாக இருந்தாலும் முறைப்பான பாடகனாக ரவிச்சந்திரன் நடித்திருந்தார் என்றால் அதற்கு நேர்மாறாக பணக்காரனாக இருந்தாலும் பண்பு குறையாத அமைதியான இளைஞனாக ஏ.வி.எம்.ராஜன் நடிப்பில் அசத்தினார். லட்சுமிக்கு வழக்கம்போல வெடுக்கென்ற துடிப்பான நடிப்பு, சந்திரகலா குடும்பத்துக்கேற்ற குத்துவிளக்கு. சாவித்திரியின் அமைதியான, அப்பாவித்தனமான நடிப்பு நம் நெஞ்சை நெகிழ வைக்கும்.

"அம்மா, அன்னைக்கு நான் ரேடியோவில் பாடினேனே, அதற்கு...." மகன் முடிக்கும் முன்பே சாவித்திரி "என்னப்பா, பணம் வந்திருக்கா?" என்று ஆர்வத்துடன் கேட்க, "இல்லேம்மா, நிறைய பாராட்டுக்கடிதங்கள் வந்திருக்கு" என்று மகன் சொன்னதும் சோர்ந்து போய் "அப்போ பணம் எதுவும் வராதாப்பா?" என்று அப்பாவியாய் கேட்குமிடம் மனதைத்தொடுவதோடு, குடும்ப சூழ்நிலையையும் படம்பிடித்துக் காட்டும். அதுபோல் உறங்கிக்கொண்டிருக்கும் அம்மாவின் காலில் தலைவைத்து ரவிச்சந்திரன் தூங்கும் இடமும், "சாவு என்ற நிரந்தர தூக்கத்துக்கு ஒத்திகைதானேப்பா இந்த தூக்கம் எல்லாம்" என்று சாவித்திரி சொல்லும் இடமும் நம் மனதை சற்று இடம்பெயரச்செய்யும் காட்சிகள்.

படத்தை 'பட்டு' என்கிற ஆர்.பட்டாபிராமன் இயக்கியிருந்தார். படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் படத்தில் வரும் எல்லோரும் நல்லவர்கள். ஆனால் இடையிடையே ஏற்படும் மனப்போராட்டங்களே பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதை அழுத்தமாகச்சொல்லியிருந்தார். படத்தின் இன்னொரு பிளஸ் பாயிண்ட் 'இன்னிசை இரட்டையர்கள்' சங்கர் கணேஷ். பாடல்கள் அத்தனையும் மணி மணியாக அமைந்தன.

ரவிச்சந்திரன் ரேடியோவில் பாடிய பாடலை, தன் தோழிகளோடு சேர்ந்து லட்சுமி பாடும்...
'நான் உன்னைத்தேடுகிறேன்.. நாள்தோறும் பாடுகிறேன்
நீ போகும் பாதையெல்லாம்.. நிழலாக ஓடுகிறேன்'
என்ன ஒரு மெலோடி...!. இப்போதெல்லாம் இப்பாடல்கள் காணக்கிடைக்கவில்லையே.

குழந்தை பெற்ற தன்னைப்பார்க்க வந்த கணவனை, பார்க்கவிடாமல் தடுத்து நிற்கும் அண்ணனை குறித்து சந்திரகலா பாடும்...
'கண்ணன் பிறந்த வேளையிலே
அந்த தேவகி இருந்தாள் காவலிலே' பாடல் பெண்களைக்கவர்ந்தது என்றால்...

மேடைப்பாடகனாக உயர்ந்ததும், சங்கர் கணேஷை அறிமுகப்படுத்தி ரவி பாடும்
"மாடி வீட்டுப்பொண்ணு மீனா" பாடல் கல்லூரி மாணவர்கள் மத்தியில் எடுபட்டது.

ஐம்பதுகளிலும், அறுபதுகளின் துவக்கத்திலும் திரையிசையில் கொடிகட்டிப்பறந்த ஏ.எம்.ராஜா - ஜிக்கி ஜோடி, இந்த ஆண்டின் SUPER HIT பாடல்களில் ஒன்றை இப்படத்துக்காகப் பாடியிருந்தனர். நீண்ட இடைவெளிக்குப்பின் இதற்கு முந்தைய ஆண்டில் வெளியான ரங்கராட்டினம் படத்தில் 'முத்தாரமே.. உன் மோகம் என்னவோ' பாடலைப்பாடி மறு என்ட்ரி கொடுத்த ராஜா, புகுந்த வீடு படத்தில் ராஜன் - சந்திரகலா முதலிரவுப்பாடலான..
'செந்தாமரையே செந்தேனிதழே
பொன்னோவியமே, கண்ணே வருக'
பாடலை ஜிக்கியுடன் சேர்ந்து கலக்கலாகப்பாடி அசத்தியிருந்தார்.
(தொடர்ந்து தாய்க்கொரு பிள்ளை படத்தில் 'சின்னக்கண்ணனே' பாடலையும், வீட்டு மாப்பிள்ளை படத்தில் 'ராசி.. நல்ல ராசி' பாடலையும் பாடிய ஏ.எம்.ராஜா, இன்னொரு வெற்றி வலம் வருவார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் மீண்டும் மறைந்து போனார்).

1972-ம் ஆண்டின் அருமையான குடும்பச்சித்திரமாக அமைந்த 'புகுந்த வீடு' திரைப்படம், தாய்க்குலத்தின் அமோக ஆதரவோடு, 100 நாட்களைக்கடந்து ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.

saradhaa_sn
10th December 2009, 01:28 PM
பழிவாங்கும் பாம்பு... பயந்தோடும் நண்பர்கள்...

"நீயா..?"

கொஞ்சம் விட்டலாச்சார்யா பாணிக்கதைதான். இந்தியில் 'நாகின்' என்ற பெயரில் வந்த படம் தமிழில் நடிகை ஷ்ரீபிரியா தயாரிப்பில் 'நீயா'வாக உருவெடுத்தது. நீண்டநாள் வாழும் பாம்புகள் சில இச்சாதாரி பாம்புகளாக மாறிவிடுமாம். அப்படீன்னா?. நினைத்த நேரத்தில், நினைத்த வடிவில் உருமாற்றிக்கொள்ளுமாம். சரி..., இதையே புராணப்படம் என்றால், பகுத்தறிவைக்கழற்றி வைத்துவிட்டுப் பார்க்க மாட்டோமா. அப்படிப்பார்க்க வேண்டியதுதான் என்று முடிவெடுத்து மக்கள் பார்த்தனர்.

காடு ஒன்றில் இரவு நேரத்தில் இரண்டுபாம்புகள் மனித உருக்கொண்டு ஆடிப்பாடுவதைக்கண்ட இளைஞனொருவன்(கமல்), ஊரில் இருக்கும் தன் நண்பர்கள் ஐவருக்கும் தெரிவிக்க, அவ்ர்கள் ஐவரும் காட்டில் ஆஜார். முதலில் அவர்கள் நம்ப மறுக்க, நேரடியாக அழைத்துச்சென்று காண்பித்தபோது அவர்களும் நம்புவதுடன் ஆச்சரியம் அடைகின்றனர். அதில் ஒருவன் துப்பாக்கியால் ஆண் பாம்பை சுட்டுக்கொன்றுவிட, வந்தது வினை. ஆண் பாம்பின் கண்களில் பதிந்திருக்கும் எதிரிகள் முகத்தை அடையாளம் கண்டு பெண்பாம்பு ஒவ்வொருவராக பழிவாங்குவதுதான் கதை. எப்படி ஒவ்வொருவராகப்பழி வாங்குகிறது என்பதுதான் படம் முழுக்க விஸ்தரிக்கப்பட்டுள்ளது. அம்புலிமாமா கதை போல இல்லை...?.

ஆறு நண்பர்களாக கமல்ஹாசன், விஜயகுமார், ஜெய்கணேஷ், ரவிச்சந்திரன், ஸ்ரீகாந்த, இன்னொருவர் (?). (அந்த இன்னொருவர் யாரென்று இங்கு யாராவது நிச்சயம் சொல்வார்கள்). இச்சாதாரி பாம்புகளாக ஸ்ரீபிரியாவும், சந்திரமோகனும் நடித்திருக்க, நண்பர்களை பாம்பின் பிடியிலிருந்து தப்பிக்க வைக்கும் மந்திரவாதியாக நம்பியார் நடித்திருந்தார். தவிர முத்துராமன், கவிதா, லதா, மஞ்சுளா, தீபா என்று ஏகப்பட்ட பேர் நடித்த, 'மல்ட்டி ஸ்டார்' படம் நீயா.

ரவிச்சந்திரனின் ஜோடியாக தீபா நடித்திருந்தார். இவர்களுக்கு
'ஒரு கோடி இன்பங்கள் உருவாகும் அங்கங்கள்
அசைந்தாடும் அழகுக்கோலங்கள் - ஓகோ
அழைத்தாலே தோன்றும் சொர்க்கங்கள்'
என்ற அருமையான டூயட் பாடல் உண்டு. நைட் எஃபெக்ட் சிச்சுவேஷனில் வி.ஜி.பி.தங்கக் கடற்கரையில் படமாக்கப் பட்டிருந்தது.

கமல் - லதா ஜோடிக்கு
"நான் கட்டில் மேலே கண்டேன் வெண்ணிலா
எனைக்கட்டிக்கொண்டே பேசும் பெண் நிலா" என்ற பாப்புலர் டூயட் பாடலும், விஜயகுமார் - மஞ்சுளா ஜோடிக்கு
"உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை" என்ற டூயட் பாடலும் இடம்பெற்றிருந்தன. இவ்விரண்டு பாடல்களையும் எஸ்.பி.பி., பி.சுசீலா இணை பாடியிருந்தது. (மற்ற மூன்று நாயகர்களுக்கும் ஜோடியிருந்ததாக நினைவில்லை. ஸ்ரீகாந்துக்கு ஒரு குழந்தை இருந்ததாக ஞாபகம். அந்த 'இன்னொருவர்' திருமணமான முதலிரவிலேயே பாம்பினால் பழிவாங்கப்பட்டு அவுட். ஜெய்கணேஷுக்கு ஜோடி இருந்தாரா, இருந்திருந்தால் அவர் யார் என்ற நினைவில்லை)

எல்லா பாடல்களுமே அருமையாக அமைந்திருந்த போதிலும், ரொம்ப பாப்புலரான பாடல், இச்சாதாரி பாம்புகளான சந்திரமோகன் - ஸ்ரீபிரியா பாடும்
"ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா" பாடல்தான். மெட்டு அப்படியே இந்திப்படத்திலிருந்து இறக்குமதி. எஸ்.பி.பி., மற்றும் வாணிஜெயராம் பாடியிருந்தனர். அந்த உடல்வாகை வைத்துக்கொண்டு ஸ்ரீபிரியா பாம்பு நடனம் ஆட முயன்றிருந்தார். காண்டாக்ட் லென்ஸ் போட்டுக்கொண்டு குளோஸப்பில் அவர் பார்க்கும் அந்த குத்துப்பார்வை, நம் முதுகுத்தண்டை சிலிர்க்க வைக்கும்.

சங்கர் கணேஷ் இசையமைத்திருந்த இப்படத்தை துரை இயக்கியிருந்தார். 'நீயா..?' 100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்படம்.

(சில வருடம் கழித்து, இதன் இரண்டாம் பாகமாக, 'நானே வருவேன்' என்ற படத்தை ஸ்ரீபிரியாவே இயக்கினார். ஆனால் வெற்றியடையவில்லை).

Sanjeevi
10th December 2009, 06:02 PM
I heard something from some persons

Most silver jublie movies by Ravichandran (and Mohan) than any other actors. How far is true?

saradhaa_sn
14th December 2009, 07:58 PM
பாலன் பிக்சர்ஸ்

'பணக்காரப் பிள்ளை'

வழக்கமாக மக்கள கலைஞர் ஜெய்சங்கரை ஆஸ்தான நாயகனாக வைத்து படங்களைத்தயாரிக்கும் பாலன் பிக்சர்ஸ் நிறுவனம், ஒரு மாறுதலாக ரவிச்சந்திரனைக் கதாநாயகனாகக் கொண்டு இப்படத்தை தயாரித்தது. அதுவும் ரவிச்சந்திரனுக்கு இரட்டை வேடங்கள். (பாலன் நிறுவனம் இதற்கு முன் தயாரித்த 'நாம் மூவர்' படத்தில் இருவருமே நடித்துள்ளனர்).

ஒரேமாதிரி இருவர் என்ற கதை வந்தாலே ஆள்மாறாட்டம் முக்கிய இடம்பிடிக்கும். இதிலும் அப்படியே. ஒருவர் பணக்காரர், வெளிநாட்டுப்போக்குவரவு உள்ளாவர். இன்னொருவரோ துறைமுகக் கூலி. இவ்விருவரையும் மையமாக வைத்து, வ்ழக்கம்போல மசாலா தடவி தயாரிக்கப்பட்ட படம் இது. பணக்காரருக்கு ஜோடியாக 'கலைச்செல்வி' ஜெயலலிதாவும், ஏழைத்தொழிலாளியின் ஜோடியாக (அன்றைய) 'கவர்ச்சிப் புயல்' ஜோதிலட்சுமியும் நடித்திருந்தனர்.

பாலன் படமாச்சே. எஸ்.எம்.சுப்பையா நாயுடுதான் இசை. வாலியின் பாடல்கள்...

பணக்கார ரவி கப்பலில் அமர்ந்திருக்க, தொழிலாளி ரவி, கூலித் தொழிலாளர்களுடன் பாடும் "நமது அரசு நமது நாடு" என்ற பாடலில், அன்றைக்கு புதிதாக அமைந்திருந்த அண்ணாதுரை தலைமையிலான தி.மு.க அரசைப் புகழ்ந்து வரிகள் அமைந்திருந்தன.

ரவிச்சந்திரன் - ஜோதிலட்சுமி ஜோடிக்கு
"பட்டம் விட்டது போலே பறக்குதம்மா உன் மேலாடை
குடை ராட்டினம் போலே சுற்றுதம்மா உன் பாவாடை"
என்ற மசாலா பாடல் என்றால்....

ரவிச்சந்திரன் - ஜெயலலிதா ஜோடிக்கு அழகிய மெலோடியான...
"மாணிக்க மகுடம் சூட்டிக்கொண்டாள் - மகாராணி"
என்ற மனதைக்கவரும் பாடல்.

ஜம்பு இயக்கியிருந்த 'பணக்காரப்பிள்ளை' படம், குறைந்த கட்டணத்தில் படம் பார்க்கும் ரசிகர்களை திருப்தி செய்தது.

saradhaa_sn
16th December 2009, 11:34 AM
ரவிச்சந்திரன் சந்தித்த ரயில் விபத்து

1967-ம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் 'எதிரிகள் ஜாக்கிரதை' படத்தில் நடிக்க ரயில் மூலம் சேலம் செல்லும் வழியில் ரவிச்சந்திரன் சென்ற ரயில் பெரிய விபத்துக்குள்ளானது. மிகவும் ஆச்சரியமான வகையில் தான் உயிர் பிழைத்தது பற்றி ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சொல்லியிருந்தார். பார்க்காதவர்களுக்காக மீண்டும். அவருடைய வாயிலாகவே...... (Over to Ravichandran)

"மாடர்ன் தியேட்டர்ஸ் 'எதிரிகள் ஜாக்கிரதை படத்தில் நடிப்பதற்காக சென்னையில் இருந்து ரயில் மூலம் சேலம் புறப்பட்டேன். சென்னையைத்தாண்டி சிறிது தூரம் சென்றதும் ஷர்ட், பேண்ட் இவைகளை மாற்றி டி.ஷர்ட்டும் லுங்கியும் அணிந்து கொண்டு தூங்கலாம் என்று ரிலாக்ஸ்டாக இருந்தபோது, அரக்கோணம் நெருங்கியது. ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தபோது நான் இருந்த ரயில் வேகம் குறைவது போலத் தோன்றியது. அதே சமயம் எதிரில் ஒரு ரயில் வருவது போலத் தெரிய 'என்ன இது ஒரே ட்ராக்கில் வருவது போலத்தெரியுதே, ஒருவேளை மோதிக்கொள்ளுமோ' என்று நான் நினைத்து முடிக்கவில்லை. இரண்டு ரயில்களும் பயங்கர சத்தத்துடன் மோதிக்கொண்டன. நான் இருந்த பெட்டி, இன்னொரு பெட்டியுடன் மோதி நசுங்கிக் கிடந்தது. மோதிய கண்மே விளக்குகள் அணைந்துவிட்டதால் எங்கும் கும்மிருட்டு. பெட்டிக்குள் தட்டுத்தடுமாறி வாசல் வரை நகர்ந்து போய் வாசலைத்திறக்க முயன்றால், கதவு நசுங்கி ஜாம் ஆகி இம்மியும் நகரவில்லை. மீண்டும் ஜன்னல் வழியே யாராவது தென்படுகிறார்களா என்று அலைமோதினேன். தலையில் அடிபட்டதால் ரத்தம் வழிந்துகொண்டு இருந்தது. எங்கும் ஒரே கூக்குரல்கள். உள்ளே இருப்பவர்கள் யாரையும் வெளியில் இருந்து பார்க்க முடியாது அந்த அளவுக்கு இருட்டு, அப்போது ஒருவர் ஜன்னல் அருகே வருவது போல் தெரிய உடனே அவரை அழைத்து "யப்பா, நான்தான் நடிகர் ரவிச்சந்திரன். உள்ளே மாட்டிக்கிருக்கேன். கொஞ்சம் வெளியில் வர ஏதாவது பண்ணுங்கப்பா" என்று கேட்க, அவர் நம்பாமல் கையில் இருந்த லைட்டரால் என் முகத்தருகே அடித்துப்பார்த்துவிட்டு, "சார் நீங்களா?. இதோ வர்ரேன் சார்" என்று போனவர் இரு இரும்புக்கம்பியை கொண்டுவந்து ரயில் ஜன்னல் கம்பிகளை உடைத்து என்னை வெளியில் கொண்டு வந்தார். கையில் இருந்த துண்டைக்கொடுத்து கட்டிக் கொள்ளச்சொன்னார். அப்போதுதான் பார்த்தேன். நான் கட்டியிருந்த லுங்கியும் காணாமல் போய், வெறும் அண்டர்வேரோடு இருந்தேன். அவர் கொடுத்த துண்டைக்கட்டிக்கொண்டு அந்த நண்பரின் உதவியோடு ஒரு ஆட்டோவைப்பிடித்து அரக்கோணம் ஆஸ்பத்திரி போய் நானே என்னை அட்மிட் பண்ணிக் கொண்டேன். அன்று நான் பிழைத்த்து மறு பிழைப்பு என்று சொல்லலாம்".

saradhaa_sn
17th December 2009, 11:05 AM
'மஞ்சள் குங்குமம்'

ரவிச்சந்திரன் - ஷீலா தம்பதியரின் சொந்தப்படமாக வந்தது மஞ்சள் குங்குமம்.

பெரிய தொழிலதிபர் தர்மலிங்கத்தின் மகன் ராஜா, (அப்போதெல்லாம் தமிழில் பத்து படங்கள் வந்தால் அதில் எட்டு படங்களில் கதாநாயகன் பெயர் ராஜாவாகத்தான் இருக்கும்). தான் சந்தித்த ஒரு ஏழை நர்ஸ் ராதாவைக் காதலிக்கத் துவங்குகிறான். அவனுடைய தந்தை அந்தக்காதலை எதிர்க்கிறார். (ஆதரித்தால்தான் அதிசயம்). தான் விரும்பியபடி தன் மகன் ஒரு பெரிய அட்வகேட்டாக வந்தால்தான் தன் வீட்டில் சேர்த்துக்கொள்வேன் என்று வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். வெளியேறிய ராஜாவும் நர்ஸ் ராதாவைத் திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்துகிறான். நர்ஸுக்கோ மனதில் உறுத்துகிறது. நன்றாகப்படித்து பெரிய வக்கீலாக வரவேண்டியவர், தந்தையின் ஏராளமான சொத்துக்களை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டியவர், தன்னால் வீட்டைவிட்டு வெளியேறி கஷ்ட்டப்படுகிறாரே என்ற குற்ற உணர்வு அவளைத்தாக்குகிறது.

ஒரு முடிவெடுக்கிறாள். எப்படியும் அவனை படிக்க வைத்து வக்கீலாக ஆக்கி, அவன் தந்தை தர்மலிங்கத்தின் முன் கொண்டுபோய் நிறுத்தி ஏற்றுக்கொள்ளச்செய்ய வேண்டும். அதற்காக கணவனை எந்த வேலைக்கும் செல்ல விடாமல், தான் மட்டும் வேலைக்குப்போய் சம்பாதித்து அவன் கவனம் முழுவதையும் படிப்பிலேயே நிலைக்கச் செய்து சாதித்துக்காட்ட வேண்டும் என்று முடிவெடுத்து கணவனிடம் கூற முதலில் மறுக்கும் அவன், அவளது வற்புறுத்தலுக்காகச் சம்மதிக்கிறான். தான் படித்து வக்கீலாகும் வரை அவளை தன் மனைவி என்ற நோக்கத்தோடு நெருங்க மாட்டேன் என்று அவனும் சபதம் செய்து படிக்கிறான். ஆனால் தான் படித்த நர்ஸ் பயிற்சிக்கான வேலை கிடைக்காமல் கட்டிடம் கட்டுமிடத்தில் சித்தாள் வேலைக்குப்போகிறாள் ராதா, (கணவனிடம் நர்ஸ் வேலை பார்ப்பதாக பொய் சொல்லிக்கொண்டு).

ராஜாவும் கவனத்தை அங்கே இங்கே சிதறவிடாமல் சமர்த்தாகப்படிக்கிறான். இதனிடையே தன் மனைவி சித்தாள் வேலை செய்வதாக யாரோ சொன்னதைக்கேட்டு கட்டிட வேலை நடக்குமிடத்துக்கு ஓடிப்போய்ப்பார்க்க, அதே நேரம் கட்டிட தொழிலாளி ஒருவன் கீழே விழுந்து அடிபட, அவனுக்கு ராதா தன்னுடைய நர்ஸ் அனுபவத்தை வைத்து சிகிச்சை செய்துகொண்டிருக்க, அதைப்பார்க்கும் ராஜாவுக்கு, தான் கேள்விப்பட்டது பொய், தன் மனைவி நர்ஸ் வேலை செய்வதாகச் சொன்னதுதான் நிஜம் என்று மனம் சமாதானம் அடைந்து திரும்புகிறான்.

இதனிடையே தான் அதற்கு முன் செய்தறியாத சித்தாள் வேலையைத்தொடர்ந்து செய்து வந்ததில் அவள் உடல் நலிவுற்று காச நோய் தாக்குகிறது. கணவனுக்குத்தெரியாமல் சமாளிக்கிறாள். அவனுக்கு இறுதியாண்டு பரீட்சை நெருங்க நெருங்க அவளுக்கும் நோய் தீவிரமடைகிறது. ரத்தவாந்தி எடுக்கத்துவங்குகிறாள். ஆனால் தேர்வுக்காக தன்னை எரித்துக்கொண்டு படிப்பிலேயே கவனமாக இருக்கும் கணவனுக்கு இவை எதுவுமே தெரியவில்லை. (தெரியாவண்னம் மறைத்து விடுகிறாள்). இருவருக்கும் தனித்தனிப் படுக்கையென்பதால், அவளது நோயின் தாக்கம் அவனுக்குத் தெரியவில்லை. அவனுடைய ஒரே எண்ணம், படித்து முடித்ததும் தான் வேலைக்குப்போய், இதுவரை தன்னைத்தாங்கிய மனைவியை ராணி போல வைத்துத் தாங்க வேண்டுமென்பதுதான்.

இறுதிநாள் தேர்வு எழுதிமுடித்த கையோடு, தன் மனைவியை அழைத்துக்கொண்டு கடற்கரைக்குச்சென்று சந்தோஷமாக ஆடிப்பாடுகிறான். அவளோ தன் வேதனைகளை மறைத்துக்கொண்டு, முடிந்தவரை அவனுக்கு ஈடுகொடுத்து தானும் சந்தோஷமாக இருப்பது போல் நடிக்கிறாள். தேர்வு முடிவு வருகிறது. ராஜா முதல் வகுப்பில் பாஸாகியிருக்கிறான். ராஜாவின் அப்பாவிடம் அவனை அழைத்துப்போகும் அவள் 'D.ராஜா B.A.B.L., அட்வகேட்' என்று எழுதப்பட்ட பெயர்ப்பலகையைத் தட்டில் வைத்து, அவனையும் ஒப்படைத்து, "மாமா, உங்க ஆசைப்படி அவரை வக்கீலாக உருவாக்கி உங்க கிட்டே ஒப்படைச்சிட்டேன்" என்றதும் தர்மலிங்கம் மனம் நெகிழ்ந்துபோகிறார். அவளைத்தன் மருமகளாக ஏற்றுக்கொள்வதாகச் சொல்ல ராஜாவுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆனால் என்ன பயன்?. பேசிக்கொண்டிருக்கும்போதே மயங்கி விழும் ராதா, டாக்டர் வருவதற்குள் உயிரை விடுகிறாள். எனென்னவோ கனவுகளோடு வாழ்ந்த அவனுக்கு நிமிட நேரத்தில் வாழ்க்கையே சூன்மாகிறது என்ற சோகத்தோடு படம் முடிகிறது.

ரவிச்சந்திரனுக்கு வழக்கமான நடிப்பு என்றாலும், ஆரம்பத்தில் விளையாட்டுப்பிள்ளையாக பொறுப்பில்லாமல் திரியும் இவர் திருமணத்துக்குப்பின் நல்ல பொறுப்பான கண்வனாக மாறுவதும், தன் படிப்புக்காக உழைக்கும் மனைவியின் கஷ்ட்டங்களை மதித்து, அதற்காக தன் திருமண வாழ்க்கையைத் தள்ளி வைப்பதும் அவர் ஏற்ற பாத்திரத்தின் தன்மையை உயர்த்துகின்றன.

இது ரவிச்சந்திரனின் படம் என்பதைவிட ஷீலாவின் படம் என்பதுதான் பொறுத்தமாக இருக்கும். அந்த அளவுக்கு நர்ஸ் ராதா பாத்திரத்தில் ஒன்றிப்போய்விடுவார். ராஜாவின் தந்தை தர்மலிங்கமாக டி.கே.பகவதி நடித்திருந்தார். இம்மூவரைத்தவிர மற்ற நட்சத்திரங்கள் என் நினைவுக்கு வரவில்லை.

பாதிப்படத்திலிருந்தே சோகம் ததும்பத் துவங்கியதால், படம் குடும்பப்பெண்களுக்கு மட்டுமே பிடித்திருந்தது. அதனால் சுமாரான ஒரு ரிஸல்ட்டையே பெற்றது.

'பட்டு' என்கிற ஆர்.பட்டாபிராமன் (புகுந்த வீடு படத்தை இயக்கியவர்தான்) 'மஞ்சள் குங்குமம்' படத்தை இயக்கியிருந்தார். சங்கர் - கணேஷ் இசையமைத்திருந்தனர். 'கோமாளி கட்டி வச்ச கோட்டையிது புரிஞ்சுக்கோ' என்ற டப்பாங்குத்துப்பாடல் ஒன்று இடம் பெற்றிருந்ததாக ஞாபகம் இருந்தபோதிலும், மனதில் நிலைத்திருப்பது ஒரே பாடல்தான். கடைசி நாள் தேர்வு முடித்து, கடற்கரையில் மனைவி ராதாவையும் அழைத்துக்கொண்டு அவளைப்புகழ்ந்து ராஜா பாடும் ஸோலோ பாடல், அன்றைய எஸ்.பி.பி.யின் இளைய குரலில்.....

'என் காதல் கண்மணி....
ஏதேதோ நினைத்தாளோ
சொல்ல நாணம் வந்ததோ.....
சொல்லாமல் மறைத்தாளோ
ராதா... ராதா.... ராதா.......'

RAGHAVENDRA
17th December 2009, 04:22 PM
சகோதரி சாரதா அவர்களுக்கு,
தங்களுடைய பதிவுகள் அனைத்துமே அந்தக் கால நினைவுகளை நெஞ்சில் நிறுத்துகின்றன. புகுந்த வீடு அமோக வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், அப்படத்தின் நூறாவது நாள் விழாவில் நடிகர் திலகம் பங்கு பெற்று அனைவருக்கும் ஷீல்டுகளை வழங்கினார். இப்படத்தைத் தொடர்ந்து மேலும் சில படங்களில் ஏ.எம். ராஜா பாடினார். எனக்கொரு மகன் பிறப்பான் படத்திற்கும் இசையமைத்தார். பத்து மாத பந்தத்திலும் ஒரு பாடல் பாடியதாக நினைவு.
அதே போல் பணக்காரப் பிள்ளை படமும் அந்த ஒரு பாடல் மாணிக்க மகுடம் சூட்டிக் கொண்டாள் என்று துவங்கும் பல்லவி - டி.எம்.எஸ். சுசீலாவின் இனிய குரலில் என்றும் பசுமையானது.
இன்று காலை 9.00 மணி ஜெயா டி.வி.யில் என் காதல் கண்மணி பாடலைப் பார்த்து விட்டு மதியம் நம் ஹப்பில் பார்த்தால் நீங்கள் அப்படத்தைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். இதைத் தான் கோயின்சிடென்ஸ் என்பரோ.
பாராட்டுக்கள்.

ராகவேந்திரன்

saradhaa_sn
18th December 2009, 06:36 PM
டியர் ராகவேந்தர் சார்,

அன்றைய நிகழ்வுகளை படிக்கும்போது / எழுதும்போது மனம் தானாக அன்றைய சூழலுக்குச் செல்வது என்பது ஒரு பரவசமான அனுபவம். அவை மீண்டும் வராது என்பது பெரிய சோகம். 'புகுந்த வீடு' 100வது நாள் விழா பற்றிய செய்தி (நடிகர்திலகத்தின் பங்கேற்பு) மகிழ்ச்சியைத்தந்தது.

1972 - நடிகர்திலகத்தின் சாதனை ஆண்டு என்பது நமகெல்லாம் தெரிந்ததுதான். 9 படங்களில் 8 படங்கள் 100 நாட்களைக்கடக்க, அவற்றில் இரண்டு வெள்ளிவிழாக்காண வைத்த குதூகல ஆண்டு. அதே ஆண்டில் 'சாமான்யர்களின்' பல படங்களும் வெற்றிக்கொடி நாட்டின என்பது மேலும் மகிழ்ச்சியூட்டும் செய்தியாகும்.

1972-ல் 100 நாட்களைக்கடந்த சாமான்யர்களின் படங்கள்:

புகுந்த வீடு
காசேதான் கடவுளடா
குறத்தி மகன்
தேவரின் தெய்வம் (மல்ட்டி ஸ்டார்)
அன்னை வேளாங்கண்ணி (மல்ட்டி ஸ்டார்)

10 வாரங்களைக்கடந்த சாமான்யர்களின் படங்கள்:

அகத்தியர்
அவள்
பிள்ளையோ பிள்ளை

50 நாட்கள்:

கண்ணா நலமா
பதிலுக்கு பதில்
வாழையடி வாழை
கனிமுத்துப்பாப்பா
கண்ணம்மா

mr_karthik
21st December 2009, 05:36 PM
'எங்க பாப்பா'

.........படத்தில் இரண்டுமுறை பாடப்படும்
'ஒருமரத்தில் குடியிருக்கும் பறவை இரண்டு'

இன்னொரு பாடல், எல்.ஆர்.ஈஸ்வரியின் கொஞ்சும் குரலில் (கூடவே டி.எம்.எஸ்) 'சொந்த மாமனுக்கும் ஒரு பெண்ணிருந்தால்'

ரவிச்சந்திரன் சண்டையிட்டுக்கொண்டே பாடுவதாக வாலி அமைத்திருந்த 'நான் போட்டால் தெரியும் போடு'

There is one more song in 'enga pApA' by TMS & Suseela
'புது வீடு வந்த நேரம் பொன்னான நேரம்'
for Ravichandran & Bharathi.

pammalar
23rd December 2009, 02:33 AM
சிங்காரச் சென்னையில் காதலிக்க நேரமில்லை :

'ஸ்மார்ட் ஹீரோ', 'கலை நிலவு' ரவிச்சந்திரன் அவர்களின் முதல் திரைப்படமான காதலிக்க நேரமில்லை 27.2.1964 அன்று வெளியானது. சென்னையில் காஸினோ, கிருஷ்ணா, உமா ஆகிய 3 தியேட்டர்களிலும் மற்றும் தென்னகமெங்கும் வெளியானது.

காஸினோவில் மொத்தம் 30 வாரங்கள் (210 நாட்கள்) ஓடி இமாலய வெற்றி பெற்றது. 27.2.1964 அன்று வெளியாகி 24.9.1964 வரை 211 நாட்கள் ஓடியது. எனினும், 210 நாட்கள் என்றே கணக்கிட வேண்டும். 27.5.1964, பிரதமர் நேரு அவர்களின் மறைவையடுத்து, சினிமாக் காட்சிகள் ஒரு நாள் ரத்து செய்யப்பட்டது. எனவே, அந்த ஒரு தினத்தை விடுத்து, 210 நாட்கள் என்று கணக்கிடுவதே சரி. காஸினோவில் 25.9.1964 அன்று கலைக்கோயில் வெளியானது. (காஸினோ 911 இருக்கைகள்)

கிருஷ்ணாவில், காதலிக்க நேரமில்லை, 105 நாட்கள் ஓடி அபார வெற்றி கண்டது. அதாவது, 27.2.1964 முதல் 11.6.1964 வரை ஓடியது. (மேற்கூறிய காரணப்படி இங்கேயும் ஒரு நாளை கழிக்க வேண்டும்). 12.6.1964 அன்று கிருஷ்ணாவில் நடிப்பு(பை) ஆண்டவரின் ஆண்டவன் கட்டளை திரைப்படம் வெளியானது. (கிருஷ்ணா 1198 இருக்கைகள்)

உமாவிலும் காதலிக்க நேரமில்லை, 105 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது. அதாவது, 27.2.1964 லிருந்து 11.6.1964 வரை ஓடியது. (மேற்கூறிய காரணப்படி இங்கேயும் ஒரு நாளை கழிக்க வேண்டும்). (உமா 762 இருக்கைகள்)

மேலும், காதலிக்க நேரமில்லை, ஈஸ்ட்மென் கலரில் வெளிவந்த முதல் சமூகத் தமிழ்த் திரைப்படம். வண்ணத்தில் வெளியான, தமிழ் சினிமாவின் முதல் முழு நீள காமெடிக் காவியம்.

ஆக மொத்தம், ரவியின் முதல் திரைப்படமான காதலிக்க நேரமில்லை, சென்னை மாநகரில்,

காஸினோவில் 210 நாட்களும்,

கிருஷ்ணாவில் 105 நாட்களும்,

உமாவில் 105 நாட்களும் ஒடோ ஓடென்று ஓடியது.

சிங்காரச் சென்னையில் காதலிக்க நேரமில்லை ஒரு ஹிமாலயன் ஹிட் !!!

அன்புடன்,
பம்மலார்.

mr_karthik
23rd December 2009, 12:02 PM
Pammalar sir......

Amazing statistics about the mega hit movie 'kAthalikka nEramillai' at Madras.

in 1964, there was no silver jubilee movies for NT and MGR, and the one and only is for Sreedhar, that is KN.

Same like nAdodi mannan, EVpiLLai, USvAliban for MGR, VPkattabomman, thiruviLaiyAdal, V.mALigai for NT, for Ravichandran K.nEramillai, adhE kangaL, nAn are there. These three are not only a mega hit in first release, but collecting big amount in re-releases too.

saradhaa_sn
23rd December 2009, 01:40 PM
டியர் பம்மலார்,

'காதலிக்க நேரமில்லை' படத்தின் சென்னை நகர (மலைக்க வைக்கும்) சாதனை பற்றிய சிறப்புப்பதிவுக்கு மிக்க நன்றி. சென்னையில் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் அந்தப்படம் சிறப்பாக ஓடி சாதனை புரிந்துள்ளது.

'பம்மலார் புள்ளி விவரங்களின் மன்னன்' என்பதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். நன்றிகள் பல.

pammalar
23rd December 2009, 08:57 PM
திரு. கார்த்திக் சார்,

தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி !

தாங்கள் அளித்த தகவல்கள் பிரமாதம்.

அதிலே மேலும் சில கூடுதல் தகவல்கள் :

நடிகர் திலகத்துக்கும், மக்கள் திலகத்துக்கும் முதல் வெளியீட்டில் மாபெரும் வெற்றியைப் பெற்ற பல படங்கள், மறு வெளியீடுகளிலும் வரலாறு படைத்துள்ளன. இரு திலகங்களுக்கும் முதல் வெளியீட்டில் சறுக்கிய படங்களில் கூட, கணிசமான படங்கள் அடுத்தடுத்த வெளியீடுகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதில் இரு திலகங்களையும் மிஞச எவரும் இல்லை.

கலை நிலவு ரவிக்கு தாங்கள் கூறிய படங்களுடன், இதயகமலம் திரைப்படத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதயகமலம் முதல் வெளியீட்டில் சூப்பர்ஹிட். மறு வெளியீடுகளிலும் வரலாறு படைத்தது. குறிப்பாக, மறு வெளியீடுகளில், பகல் காட்சிகளில், கலக்கிய படங்களில் இதயகமலத்துக்கு தனி இடம் உண்டு.

அன்புடன்,
பம்மலார்.

RAGHAVENDRA
23rd December 2009, 10:22 PM
அன்பு நண்பர் பம்மலார் அவர்களின் அனைத்து தகவல்களும் பிரம்மிப்பூட்டுவதாக உள்ளன. எப்படி இத்தனை தகவல்களை சேகரித்து அலசி ஆராய்ந்து படைக்கிறார் என்பது வியப்பாக உள்ளது. பிலிம் நியூஸ் ஆனந்தன் தமிழ்ப்பட உலகிற்கு அளித்த பங்கினைத் தொடரும் வண்ணம் உள்ளது தங்கள் பணி. பாராட்டுக்கள்.

இதய கமலம் (படத்தின் பெயரில் க் உள்ளதாக நினைவிலில்லை) படத்தின் முதல் சில நாட்கள் சுசீலாவின் சுகமான குரலில் இடம்பெற்ற பாடல் என்ன தான் ரகசியமோ இதயத்திலே பாடல் படத்தில் இடம் பெற்றது. என்ன காரணத்தாலோ பின்னர் அப்படத்தில் அப்பாடல் இடம் பெறவில்லை.

ரவிச்சந்திரனுக்கு மிகவும் பெருமை சேர்த்த படம் இதய கமலம்.

ராகவேந்திரன்

pammalar
23rd December 2009, 10:58 PM
டியர் பம்மலார்,

'காதலிக்க நேரமில்லை' படத்தின் சென்னை நகர (மலைக்க வைக்கும்) சாதனை பற்றிய சிறப்புப்பதிவுக்கு மிக்க நன்றி. சென்னையில் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் அந்தப்படம் சிறப்பாக ஓடி சாதனை புரிந்துள்ளது.

'பம்மலார் புள்ளி விவரங்களின் மன்னன்' என்பதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள். நன்றிகள் பல.

சகோதரி சாரதா அவர்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி!

தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. திரையிடப்பட்ட பல இடங்களிலும், காதலிக்க நேரமில்லை அமோக வெற்றி கண்டது.

மதுரை மாநகரில், 1662 இருக்கைகள் கொண்ட சென்ட்ரல் சினிமா திரையரங்கில், காதலிக்க நேரமில்லை, 20 வாரங்கள் ஓடி பம்பர் வெற்றியைப் பெற்றது. சென்ட்ரலில் 27.2.1964 லிருந்து 17.7.1964 வரை 141 நாட்கள் ஓஹோவென்று ஓடியது.(பிரதமர் நேரு அவர்களின் மறைவுக்காக ஒரு நாள் கழிக்கப்பட்டது). 18.7.1964 அன்று, சென்ட்ரலில், கலையுலகை வாழ வைத்த தெய்வத்தின் "கை கொடுத்த தெய்வம்" வெளியானது.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th December 2009, 12:51 AM
டியர் ராகவேந்திரன் சார்,

தங்களின் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்!

இதயகமலம் குறித்த கூடுதல் தகவல் அசத்தல் !!

இதயகமலத்தின் இசை இனிமையை இயம்பிக் கொண்டே இருக்கலாம். அத்தனை பாடல்களும் தெவிட்டாத தெள்ளமுது. இதயகமலத்தில், மகாதேவன் அவர்கள், இசையில் விஸ்வரூபம் காட்டியிருப்பார்.

அன்புடன்,
பம்மலார்.

pammalar
24th December 2009, 01:39 AM
கலைக்குரிசிலைப் பற்றி கலை நிலவு :
(1968-ல், திருநெல்வேலி சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் வெளியிட்ட, ரசிகர் கலை மலர் என்கின்ற சிறப்பு மலரிலிருந்து)

"தமிழகத்தின், ஏன்? உலகத்திலேயே முதன்மையான நடிகர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு மன்றம் அமைத்து, விழா நடத்துகின்ற ரசிகர்கள் மலருக்கு கட்டுரை கேட்டார்கள்.

சிவாஜி கணேசனைப் பற்றி நான் எழுதுவதா? எதை.....எப்படி? எனக்கு ஒரே திகைப்பு.

உயரத்தில்..........எவரெஸ்ட்

புனிதத்தில்.........கங்கை

கலையழகில்..........தாஜ்மஹால்

கனியினிமை........தமிழ் மொழி

பெரு நடிகர்..........அண்ணன் கணேசன் அவர்கள்

அவர் வாழ்க என்றென்றும்.

மன்றத்தின் சேவை பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகின்றேன், மன மொழி மெய்யினால்."

கலைக்குரிசிலைக் குறித்து கலை நிலவு கூறிய கருத்துக்கள் கலைக் கண்ணோட்டத்துடன் களை கட்டுகிறது !!!

அன்புடன்,
பம்மலார்.

saradhaa_sn
24th December 2009, 02:22 PM
டியர் பம்மலார் & ராகவேந்தர்...

நீங்கள் இருவரும் 'இதய கமலம்' படத்தைப்பற்றிக்குறிப்பிட்டதும் எனக்கொரு சம்பவம் நினைவுக்கு வந்தது. சென்னை தேனாம்பேட்டை ஜி.என்.செட்டி ரோட்டில் 'சன் தியேட்டர்' என்ற பழம்பெரும் தியேட்டர் இருந்தது. சென்னையின் மையப்பகுதியில் இருந்தபோதிலும் அதில் புதிய படங்கள் வெளிவராது. பழைய படங்களே திரையிடப்படும். பழைய பட விரும்பிகளின் அபிமான அரங்கம் அது.

எண்பதுகளின் மத்தியில் சன் தியேட்டரில் "இதய கமலம்" ஒருவாரத்துக்காக தினசரி 3 காட்சிகளாகத் திரையிடப்பட்டது. அடுத்தவாரம் வேறு படத்துக்கான ஸ்லைடும் காண்பிக்கப்பட்ட நிலையில், தாய்மார்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓட, அடுத்த வாரமும் இதய கமலம் நீட்டிக்கப்பட்டது. அந்த வாரமும் அமோக ஆதரவு கிடைக்கவே, மூன்றாவது வாரமும் ஓடியது. ஆக 7 நாட்களுக்குத் திரையிடப்பட்ட 'இதய கமலம்' 21 நாட்கள் (63 காட்சிகள்) ஓடி வசூலை அள்ளியது. மீரான்சாகிப் தெருவில் படப்பெட்டியை வாங்கி வந்த 'குட்டி விநியோகஸ்தர்' எவ்வளவு மகிழ்ந்திருப்பார் என்று சொல்ல வேண்டியதில்லை.

சன் தியேட்டர் பற்றி மனதை நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்றையும் இங்கு சொல்ல விரும்புகிறேன் (இந்த திரிக்கு சம்மந்தம் இல்லாதபோதும்)....

90-களின் துவக்கத்தில் என்று நினைவு. சன் தியேட்டரில், ஒரு மாலைக்காட்சிக்கு சத்யராஜ் - ராதா நடித்த 'அண்ணாநகர் முதல் தெரு' (மறு வெளியீடுதான்) படம் பார்க்கச்சென்றிருந்தோம். டிக்கட் கவுண்ட்டர் அருகே ஒருவர் நின்றுகொண்டு டிக்கட் வாங்கி உள்ளே சென்றவர்கள் எல்லோருக்கும் இனிப்பு வழங்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவர் முகம் சோகமாக இருந்தது. கவுண்ட்டரில் டிக்கட் கொடுத்தவரும் கண்ணீரைத்துடைத்துக் கொண்டே டிக்கட் வழங்கிக்கொண்டிருந்தார். உள்ளே சிப்பந்திகள், ஸ்டாலில் இருந்தவர்கள் எல்லோர் முகத்திலும் சோகம். 'என்னடா இது, ஸ்வீட் கொடுத்தால், சந்தோஷமான விஷயத்துக்குத்தானே கொடுப்பார்கள்?. ஏன் எல்லோரும் சோகத்துடன் இருக்கிறார்கள்?'. இடைவேளை வரை குழப்பத்துடன் படம் பார்த்த எனக்கு, அதற்கான காரணம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் மேலிட, தியேட்டர் ஊழியர் ஒருவரை விசாரித்தேன். சோகத்தை அடக்கிக்கொண்டு அவர் சொன்னது, 'சிஸ்டர், இன்னைக்கு நைட்ஷோதான் இந்த தியேட்டரில் நடக்கும் கடைசி காட்சி. நாளை இந்த தியேட்டர் மூடப்பட்டு இடிக்கப்போகிறார்கள்' அதற்குமேல் பேச முடியாமல் உடைந்து போனார். நான் அதிர்ந்தேன். எத்தனையோ பேரை சந்தோஷப்படுத்திய சன் தியேட்டர் நாளைமுதல் இல்லையா?. அதற்குமேல படத்தில் கவனம் செல்லவில்லை. தியேட்டரையே நாலாபக்கமும் பார்த்துக்கொண்டிருந்தேன். படம் முடிந்து, தியேட்டரின் வெளியே சுற்றி வந்து பார்த்தேன். கனத்த மனதுடன் வீட்டுக்கு வந்தேன். சிலநாட்கள் கழித்து என் தந்தையுடன் 'பைக்'கில் அந்தப்பக்கமாகப் போனபோது பார்த்தேன். சன் தியேட்டர் முக்கால்வாசிக்குமேல் இடிக்கப்பட்டிருந்தது.

saradhaa_sn
30th December 2009, 03:43 PM
[tscii:ccf8c69c81]சங்கர் கணேஷை இசையமைப்பாளர்களாக்கிய

'மகராசி'

(இசையமைப்பாளார் கலைமாமணி டாக்டர் (சங்கர்) கணேஷ் அவர்களின் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் கணேஷ் அளித்த தகவல்)

'நானும் சங்கர்ராமும் ‘விஸ்வநாதன்-ராமமூர்த்தி’ குழுவிலும், பின்னர் M.S.விஸ்வநாதன் அவர்களின் குழுவிலும் பல்வேறு இன்ஸ்ட்ருமென்ஸ் பிளேயராக இருந்தபோதிலும், நாங்கள் தனித்து இசையமைக்க வேண்டும் என்ற தணியாத தாகம் மனதுக்குள் இருந்து வந்தது. அதற்காக தயாரிப்பு நிறுவனங்களில் எங்களை சிபாரிசு செய்யுமாறு நாங்கள் நாடியது கவியரசர் கண்ணதாசன் அவர்களைத்தான். ஏனென்றால் கண்ணதாசனின் வார்த்தைக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் மத்தியில் தனி மரியாதை இருந்ததென்பதை அறிந்தே அவரைப்பிடித்தோம். அவரும் எங்களுக்காக ஒரு தயாரிப்பாளரிடம் சிபாரிசு செய்ய, அவர்களும் எங்களுக்கு முதல் மியூஸிக் டைரக்டர்கள் சான்ஸ் கொடுத்தனர். ஆனால் எங்களின் முதல் படமான 'நகரத்தில் திருடர்கள்' என்ற அந்தப்படம் வெளிவரவே இல்லை. மீண்டும் கவிஞரிடமே நாங்கள் தஞ்சம் அடைய, அவர் இன்னொரு படத்துக்கு எங்களை சிபாரிசு செய்தார். ஆனால் வேறு சில காரணங்களால் அந்தப் படமும் தடங்கலாகப் போனது. 'என்னடா, உங்க ராசி இவ்வளவு லட்சணமா இருக்கு?' என்று கவிஞரும் கிண்டல் பண்ணினார். இருந்தாலும் நாங்கள் விடவில்லை. எங்களுக்கு காரியம் நடக்கணுமே. மீண்டும் கவிஞரையே அணுகி, 'அண்ணே, எதாவது ஒரு பெரிய கம்பெனியில் சிபாரிசு பண்ணி விடுங்கண்ணே. அவங்கதான் தடங்கலில்லாமல் படத்தை முடிப்பாங்க' என்று கேட்க, 'சரி இதுதான் உங்களுக்கான என்னுடைய கடைசி முயற்சி. இன்னைக்கு தேவர் பிலிம்ஸ் போறேன், நீங்களும் வாங்க' என்று அழைத்துப்போனார்.

கவிஞருடன் பேசிக்கொண்டிருந்த சாண்டோ சின்னப்பா தேவர், எங்களைப்பார்த்து 'யார் இவங்க?' என்று கேட்க கவிஞர் ‘நம்ம பசங்கதான்' என்றதும் 'அப்படியா?' என்று கேட்டுக்கொண்டார் தேவர். (நாங்கள் MSV ட்ரூப்பில் இருந்ததாலும், தேவர் படங்களில் KVM அவர்களே இசையமைத்து வந்ததாலும் எங்களைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை). 'உங்க படத்துலதான் மியூஸிக் டைரக்டர் சான்ஸ் கேட்டு வந்திருக்காங்க' என்று கவிஞர் சொன்னதும், எங்களைத்திரும்பிப் பார்த்த தேவர், 'மியூஸிக் டைரக்டரா? இவனுங்களா? தூ' என்று துப்பினார். எங்களுக்கு என்னவோ போலானது. இருந்தாலும் கவிஞர் விடவில்லை. 'அப்படி இவங்களை லேசா நினைக்காதீங்க. விசு ட்ரூப்புல இப்போ மெயினா இருக்காங்க. ஒரு சான்ஸ் கொடுத்துப்பாருங்க' என்றதும், கவிஞர் இவ்வளவு சிபாரிசு செய்கிறாரே என்று கொஞ்ச நேரம் யோசித்த தேவர், 'சரி, இப்போ புதுசா நான் மகராசின்னு ஒரு படம் எடுக்கப் போறேன். அதுல இவனுங்களைப் போட்டுக்கறேன்' என்றார். எங்களுக்கு உயிரே வந்தது போலிருந்தது.

'மகராசி' படத்தில் ரவிச்சந்திரன் ஜெயலலிதா ஜோடியாக நடித்திருந்தனர். அவர்கள் இருவரும் நீச்சல் குளத்தில் பாடுவதாக ஒரு பாடல், மிகவும் மெலோடியாக அமைந்த 'ஆண் தொடாத கன்னிப்பெண்ணை மீன் தொடும்போது' என்ற பாடல் தேவருக்கு மிகவும் பிடித்துப்போனது.

படம் ரிலீஸாகி முதல் நாள் தியேட்டரில் பார்த்தபோது, 'இசை : சங்கர்-கணேஷ்' என்ற டைட்டிலைப் பார்த்ததும் எங்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள். இந்த கௌரவம் கவிஞராலும், தேவராலும்தான் கிடைத்தது என்பதால், அந்த நன்றியின் அடையாளமாக பின்னாளில் நாங்கள் இசையமைத்த ப்டங்களில், எங்கள் பெயர் வரும்போது 'இசை : 'கவிஞர் வழங்கிய தேவரின் சங்கர் கணேஷ்' என்று போட்டுக்கொள்ளத்துவங்கினோம்.'

'மகராசி' படத்தில் நடித்த அனுபவம் குறித்து ரவிச்சந்திரன், தனது 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் சொன்ன தகவல்.

'ஜெமினி, ஏ.வி.எம்., சித்ராலயா, மாடர்ன் தியேட்டர்ஸ் என்று கிட்டத்தட்ட அப்போதிருந்த எல்லா பெரிய கம்பெனிப் படங்களிலும் நடித்து விட்டோம். ஆனால் தேவர் பிலிம்ஸ் பானரில் இன்னும் ஒரு படம் கூட நடிக்கவில்லையே என்ற ஒரு சின்ன வருத்தம் இருந்துவந்த வேளையில், ஒரு நாள் தேவரிடமிருந்து அழைப்பு வந்தது. போனேன். 'உன்னையும் ஜெயலலிதாவையும் வச்சு ‘மகராசி’ன்னு ஒரு படம் தயாரிக்கலாம்னு இருக்கேன். என்ன சொல்றே சம்மதம்னா அக்ரிமெண்ட் போட்டுடுவோம்' என்றார். 'நான் இந்த வாய்ப்பை ரொம்ப நாளா எதிர்பார்த்திருக்கேன்' என்று சொல்லி உடனே சம்மதித்தேன். 'அப்போ நாலுநாள்ளே பூஜையை வச்சுக்குவோம். அன்னைக்கே அக்ரிமெண்ட் போட்டுடுவோம்'னு சொல்லி அனுப்பிட்டார்.

நாலுநாள் கழிச்சு பூஜை போட்ட அன்னைக்கே, அக்ரிமெண்ட் போட்டு உடனே ஒரு பெரிய தொகையை அட்வான்ஸா கொடுத்து, 'வீட்டுக்குப்போய் தங்கச்சி கிட்டே கொடுத்துட்டு உடனே திரும்பி வா. இன்னைக்கே ஷூட்டிங் ஆரம்பிக்கணும்' என்று சொல்லி கம்பெனி காரில் என்னை அனுப்பிவைத்தார். மகராசி ஷூட்டின் ஆரம்பிச்ச கொஞ்சநாளிலேயே நான் வேறு ஒரு படப்பிடிப்பில் காலில் அடிபட்டு கால் எலும்பு முறிந்து கொஞ்சநாள் படுக்கையில் இருந்தேன். அப்போது வேறு கதாநாயகனைப்போட்டு மகராசி படத்தை முடிக்கலாம் என்று மற்றவர்கள் சொன்னதைக் கேட்காமல், நான் குணமடைந்து திரும்பி வரும்வரை காத்திருந்து படத்தை முடித்தார் தேவர்'.

ஏற்கெனவே சின்னப்பா தேவர் தனது 'முகராசி' படம் மூலம், எம்.ஜி.ஆர்-ஜெமினி என்ற இரு பெரும் நடிகர்களை இணைந்து நடிக்க வைத்தவர் (அவர்களிருவரும் சேர்ந்து நடித்த ஒரே படம். அதாவது இன்னொரு 'கூண்டுக்கிளி') தனது அடுத்த பட்மான 'மகராசி' படத்தில் புதிய இசையமைப்பாளர்களை அறிமுகப்படுத்தி அந்தப்படத்தையும் பேச வைத்தார்.
[/tscii:ccf8c69c81]

saradhaa_sn
5th January 2010, 06:34 PM
[tscii:ba8c7eb86a]'எதிரிகள் ஜாக்கிரதை' :shoot:

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் ரவிச்சந்திரன் நடித்த முதல் படம். இதன்பின்னர் ‘ஜஸ்டிஸ் விஸ்வநாதன்’ என்றொரு படத்தில் நடித்தார். இவ்விரண்டைத்தவிர மாடர்ன் தியேட்டர்ஸில் வேறு எந்தப்படமும் நடித்தாரா என்பது தெரியவில்லை.

வழக்கமாக ஜெய்சங்கருடன் அதிகப்படங்களில் ஜோடியாக நடித்துவந்த எல்.விஜயலட்சுமி, இப்படத்தில் ரவிச்சந்திரனுடன் ஜோடியாக நடித்திருந்தார். 1967-ல் வெளியான இப்படம், இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரே படமாக இருக்க வேண்டும். காரணம் அதே ஆண்டின் இறுதியில் (தீபாவளியன்று) வெளியான 'ஊட்டிவரை உறவு'தான், எல்.விஜயலட்சுமி நடித்த கடைசிப்படம், அத்துடன் ஒரு வங்காளி வாலிபரை திருமணம் செய்துகொண்டு திரையுலகை விட்டு ஒதுங்கிவிட்டார். பின்னர் திரு எம்.ஜி.ஆர். கேட்டுக்கொண்டதற்கிணங்க, 'குடியிருந்த கோயில்' படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் வந்து நடனமாடிவிட்டுப்போனார். (அந்த ஒரு பாடல் அப்படத்தில் ஜெயலலிதா நடித்திருந்த மற்ற அனைத்துப் பாடல்களையும் தூக்கி சாப்பிட்டது என்பது வேறு விஷயம்).. பின்னர் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் சென்று குடியேறினார். அத்துடன் அவருக்கும் திரையுலகுக்கும் நிரந்தரப்பிரிவு. தற்போது யு.எஸ்.ஸில் ஒரு நிறுவனத்தில் பட்ஜெட்டிங் ஆபீஸராகப் பணியாற்றி வருகிறாராம். (இந்நேரம் ரிட்டயர் ஆகியிருக்கணுமே). புகழின் உச்சியில் இருந்தபோது திடீரென திருமணம் செய்துகொண்டு திரையுலகை விட்டு விலகி, அன்றைய இளம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். அந்நேரத்தில் வழக்கமாக காஞ்சனா, பாரதி ஆகியோரோடு ஜோடி சேர்ந்து நடித்து வந்த ரவிச்சந்திரனுடன் எல்.விஜயலட்சுமியுடன் ஜோடி சேர்ந்ததை ரசிகர்களும் ஆர்வமுடன் எதிர்பார்த்தனர். அதற்கேற்றாற்போல இருவருக்கும் ஜோடிப்பொருத்தமும் அமைந்து ரசிகர்களைத் திருப்திப்படுத்தியது.

கதையைப்பொறுத்தவரை, வழக்கமான மாடர்ன் தியேட்டர்ஸ் கதைதான். அங்கே இங்கே கொஞ்சம் மாற்றியிருந்தனர். அவ்வளவுதான். கதையை மாற்றாவிட்டாலும், கதாநாயகனை மாற்றினாலாவது வித்தியாசம் தெரியும் என்பதற்காக ஜெய்க்கு பதிலாக ரவியைப்போட்டார்களோ தெரியவில்லை. இருந்தாலும் சில இடங்களில் மாடர்ன் தியேட்டர்ஸுக்குரிய ஸ்பெஷல் டச்சஸ் இருக்கத்தான் செய்தன.

மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களைப்பொறுத்தவரையில் பாடல்கள் மக்கள் மத்தியில் பாப்புலர் ஆகிவிடும். அதற்கு இந்தப்படமும் ஒரு உதாரணம். ஆஸ்தான இசையமைப்பாளர் வேதா, இந்தப்படத்திலும் அழகாக நகலெடுத்து இருந்தார்.

'நீயாக எனைத்தேடி வருகின்ற நேரம்' பி.சுசீலா பாடிய இப்பாடல் ரொம்பவே வித்தியாசமான மெட்டமைப்பு. கரடுமுரடான சந்தங்கள். இருந்தாலும் சுசீலா அனாயாசமாகப்பாடி அசத்தியிருந்தார். ஒரு காலத்தில் இலங்கை வானொலியில் அதிகம் விரும்பிக்கேட்கப்பட்ட பாடலாம் இது.

'எனக்கொரு ஆசை இப்போது உனக்கது சொல்வேன்
மறைக்காமல் தர வேண்டும்' இந்தப்பாடல் ரவி - விஜி ஜோடிக்காக டி.எம்.எஸ் - சுசீலா பாடியிருந்தனர். 'தர வேண்டும்' என்ற அடி மட்டும் சென்ஸாரின்போது ‘வர வேண்டும்’ என்று மாற்றப்பட்டது. (அன்றைக்கு சென்ஸார் போர்டில் இருந்தவர்கள் வாங்கிய சம்பளத்துக்கு ஒழுங்காக வேலை செய்துள்ளனர் என்று தெரிகிறது).

'நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்
நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்
கோலத்தை மூடிய மேலுடை ஆடும்
கூப்பிடும் பாணியில் பாட்டொன்று பாடும்'
இதுவும் ரவி - விஜி ஜோடிக்காக டி.எம்.எஸ். - சுசீலா பாடிய இன்னொரு டூயட் பாடல்
இதில் வேடிக்கை என்னவென்றால், இப்படி சுடப்பட்ட மெட்டுக்களுக்குப் பாடல்கள் எழுதுவது வேறு யாரும் அல்ல. சாட்சாத் நம்ம கவியரசர் கண்ணதாசன்தான். மெட்டுக்குப்பொருத்தமாக வார்த்தைகளைப்போட்டு சும்மா அசத்தி விடுவார்.

ரவிச்சந்திரனுக்கு மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆவலைப்பூர்த்தி செய்த படம் 'எதிரிகள் ஜாக்கிரதை'. சண்டைக்காட்சிகளில் வழக்கம்போல சுறுசுறுப்பாக அடித்து நொறுக்கியிருப்பார். காதல் காட்சிகளிலும் சிறப்பாக செய்திருந்தார். மொத்தத்தில் HERO இமேஜைக் காப்பாற்றிக்கொண்டார் என்று சொல்லலாம். (இந்தப்படத்துக்காக சேலம் சென்றபோதுதான் அரக்கோணத்தில் ரயில் விபத்தில் சிக்கினார் என்பதை ஏற்கெனவே சொல்லியிருந்தோம்).
[/tscii:ba8c7eb86a]

mr_karthik
5th January 2010, 07:54 PM
saradha mam

nice rememberance about L.Vijayalakshmi, one of the finest dancing actress.

Murali Srinivas
5th January 2010, 11:50 PM
சாரதா,

அம்மா பக்கம் வந்தா

அப்பா முத்தம் தந்தா

ஒரு நாள் இரவில்

மனோகர் மணிமாலா குழந்தை நட்சத்திரம்(?) பாடும் மேற்சொன்ன பாடலும் எதிரிகள் ஜாக்கிரதை படத்தில்தான் என்பது என் நினைவு. சரிதானே?

அன்புடன்

mr_karthik
6th January 2010, 02:27 PM
Murali sir, you are right.

this song is from 'எதிரிகள் ஜாக்கிரதை' only. (mam might have missed it or forgot it).

this song is for Manohar after 'பாரடி கண்ணே கொஞ்சம்' from vallavanukku vallavan.

saradhaa_sn
6th January 2010, 06:10 PM
நன்றி முரளி & கார்த்திக்.

'எதிரிகள் ஜாக்கிரதை'யில் விடுபட்ட பாடலை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

கதாநாயகன், கதாநாயகி சிந்தனையில் இருந்ததால் இந்தப்பாடலை மறந்துவிட்டேன்.

மனோகருக்கு திரையில் பாடல் கிடைப்பதே அபூர்வம். அதைப்போய் எப்படி மறந்தேன் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

நன்றி, தொடர்ந்து பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.

saradhaa_sn
8th January 2010, 05:24 PM
[tscii:a024d92c7c]ரவிச்சந்திரன் அவர்களுடன் எனது சந்திப்பு - (1)

நான் ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கல்ச்சுரல் விழாவுக்காக தோழிகள் சிலர் நாட்டிய நாடகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். (அந்த நாட்டிய நாடகத்தில் நான் இல்லை, காரணம் நாட்டியம் பார்க்க மட்டுமே தெரிந்தவள் நான்). அதற்கு இசையமைக்க நல்ல இசையமைப்பாளர் ஒருவரை ஏற்பாடு செய்யலாம் என்று யோசித்து, கடைசியில் ‘முத்து’ என்பவரை போடலாம் என்று முடிவெடுத்தனர். திரு முத்து, அப்போது இசைஞானி இளையராஜா ட்ரூப்பில் இசை உதவியாளர்களில் ஒருவராக இருந்தார். அவரைச்சந்திக்க சென்ற சின்ன குழுவில் என்னையும் சேர்த்துக்கொண்டனர். (இம்மாதிரி திரையுலக சம்மந்தப்பட்டவர்களைச் சந்திக்க செல்லும் குரூப்பில் நானாக ஒட்டிக்கொள்வது வழக்கம். காரணம் நான் ஒரு சினிமா பைத்தியம் என்பது தெரிந்த விஷயம்).

மாலை சுமார் ஆறு மணியிருக்கும். மயிலாப்பூர் சித்திர குளத்துக்கு சற்று தொலைவில் ஒரு தெருவில்தான் முத்து குடியிருந்தார். விசாரித்துக் கொண்டே அவருடைய வீட்டை அடைந்தோம். அவரது வீட்டுக்கு எதிரே சின்னதாக ஒரு அழகிய பங்களா தென்பட்டது. வாசலில் போர்டு எதுவும் இல்லை. பார்த்தால் யாரோ பெரிய புள்ளியின் வீடுஆக இருக்கும் என்பது மட்டும் தெரிந்தது. யாராவது பெரிய பிஸினஸ்மேன், அல்லது அதிகாரி வீடாக இருக்கும் என்று எங்களுக்குள் பேசிக்கொண்டே முத்துவின் வீட்டுக்குள் சென்று அவரிடம் கல்லூரி நாட்டிய நாடகத்துக்கு இசையமைக்கக்கேட்டோம். அவர் டைரியைப் புரட்டிப்பார்த்து விட்டு நாங்கள் கேட்ட அந்த தேதியில் அவர் முக்கியமான ரிக்கார்டிங்கில் வாசிக்க இருப்பதாகச் சொல்லி, எங்கள் கோரிக்கையை மறுத்துவிட்டார். இதனிடையே அவருக்கு ஏதோ முக்கியமான போன் வரவே, 'ஸாரி, வருத்தப்பட்டுக்காதீங்க. அவசரமா போக வேண்டியிருக்கு. என் மனைவியிடம் பேசிவிட்டு எல்லோரும் டீ சாப்பிட்டு விட்டுப்போங்க' என்று எங்களிடம் சொல்லி விட்டு, வாசலில் நின்ற பைக்கில் ஏறி பறந்தார். முத்துவின் மனைவி எங்களிடம் அன்போடு உரையாடினார். அப்போது எதார்த்தமாக, எதிரில் இருக்கும் பங்களா வீட்டில் இருப்பது யார் என்று கேட்டோம். 'உங்களுக்குத்தெரியாதா?. நடிகர் ரவிச்சந்திரன் சாரும், அவர் மனைவி ஷீலாவும் அந்த வீட்டில் இருக்காங்க' என்று சொல்லி, இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இப்போது எங்களுக்குள், 'ஏய் எப்படியாவது அவங்களை சந்திச்சிட்டுப் போகலாம்டி. இந்த மாதிரி சந்தர்ப்பம் இனிமே கிடைக்காது' என்று சொல்ல, எங்களில் ஒருத்தி, 'நாம நினைச்சவுடன் அவங்களை சந்திக்க முடியுமா?. திடீர்னு வாசலில் போய் நின்னா உள்ளே விடுவாங்களா?' என்று சந்தேகம் கிளப்ப, இன்னொருத்தி, 'ஒரு ஐடியா, இவங்க (முத்துவின் மனைவி) மூலமாகவே பெர்மிஷன் கேட்போமே' என்று சொல்லி அவங்களிடம் சொல்ல (இதனிடையே டீ வந்தது, குடித்தோம்). நாங்க சொன்னதைக்கேட்டு சிறிது தயங்கிய அவர், பின்னர் போன் செய்தார். ரிஸீவரை கையில் பொத்திக்கொண்டு, எங்களிடம் ரகசிய குரலில் 'சார்தான் பேசுறார்' என்றவர் போனில், 'சார், நான் எதிர்வீட்டிலிருந்து முத்துவின் மனைவி பேசுறேன். இங்கே வந்த சில கேர்ள்ஸ் ஸ்டூடண்ட்ஸ் அவரைப் பார்க்க வந்தவங்க உங்களைப்பார்க்க பெர்மிஷன் கேட்கிறாங்க...(gap)... அப்படியா?..(gap).. ரொம்ப தேங்க்ஸ் சார்' என்று ரிஸீவரை வைத்தவர், 'சார் வரச்சொல்றார்' என்றதும், எங்கள் மனதுக்குள் சந்தோஷம். முத்துவின் மனைவிக்கு நன்றி சொல்லிவிட்டு, எதிர்வீட்டுக்குப்போனோம். வாசலில் நின்றவரிடம் விஷயத்தைச்சொல்ல, உள்ளே போய் கேட்டு வந்தவர், 'உள்ளே போங்க' என்றார்.

கூடத்தில் சோபாவில் பூப்போட்ட லுங்கி, ரோஸ் கலர் காட்டன் ஜிப்பா அணிந்து, ரிலாக்ஸ்டாக நியூஸ் பேப்பர் படித்துக்கொண்டிருந்த ரவிச்சந்திரன், எங்களைப்பார்த்ததும் பேப்பரை மடித்துக்கொண்டே, 'வாங்க வாங்க, உட்காருங்க. நீங்கள்ளாம் யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?' என்றவாறு பேச்சைத்துவக்கினார். சோபாவில் உட்கார்ந்ததும் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டோம். 'ரொம்ப சந்தோஷம், நான் நடிச்ச படங்கள்ளாம் பார்த்திருக்கீங்களா?' என்று அவர் கேட்டதும், தோழிகள் மெல்ல என்னை உசுப்பினார்கள் (காரணம், அந்தக்கூட்டத்தில் நான்தான் அதிகமாக சினிமா பார்ப்பவள், நினைவிலும் வைத்திருப்பவள்). காதலிக்க நேரமில்லையில் ஆரம்பித்து வரிசையாக அவர் படங்களைப்பற்றியும் அவர் நடிப்பையும் சொல்லத்துவங்கியதும், பாதியிலேயே சற்று சத்தமாக சிரித்தவர், 'ஏது, காலேஜ்ல போயி பாடம் படிச்ச மாதிரி தெரியலையே. பாதிநாள் தியேட்டரிலேதான் குடியிருந்திருப்பீர்கள் போலிருக்கு' என்று மீண்டும் சிரித்தார். திடீர்னு போறோமே எப்படி பேசுவாரோ என்று நினைத்துப்போன எங்களுக்கு, அவர் பேசிய விதம் ரொம்ப ரிலீஃப் ஆக இருந்தது. ரொம்ப சகஜமாக பேசினார்.

'ஷீலா மேடம் இருக்காங்களா?' என்றதும், 'ஷீலா ஒரு மலையாளப்பட ஷூட்டிங் போயிருக்காங்க. இங்கே மெட்ராஸ்லதான். வர நைட் பதினோரு மணியாகும்னு இப்போதான் போன் பண்ணினாங்க' என்றார். 'அப்போ உங்களுக்கு இன்னைக்கு ரெஸ்ட் டேயா சார்?' என்று கேட்டோம். 'இல்லேம்மா, காலைல ஃபர்ஸ்ட் ஷெட்யூல் முடிச்சிட்டு இப்போதான் நாலு மணிக்கு வந்தேன். இங்கேதான் ஓஷியானிக் ஓட்டல்ல சீன் எடுத்தாங்க. நாளைக்கும் கண்டினியூட்டி இருக்கு' என்றார். அவரது சகஜமான பேச்சு கொஞ்சம் தெம்பைத் தந்ததால் நான் தைரியமாகக் கேட்டேன், 'ஏன்சார் ஃபைட் சீன்ல டூப் போடுறாங்க?. டூப் இல்லாமல் எடுத்தால் என்ன?' என்று கேட்டதும், தோழிகள் என்னை இடித்து 'ஏய் என்னடி இதெல்லாம்' என்று சொன்னதைப் பார்த்துவிட்ட ரவி சார், 'தடுக்காதீங்க, அவங்க கேட்கட்டும்' என்றவர், சோபாவின் கைப்பிடியில் கையை ஊன்றி தீர்க்கமாக என் கண்ணைப்பார்த்தபடியே பெரிய லெக்சர் கொடுக்க ஆரம்பிச்சார்.....

'அதாவதும்மா, இந்த மாதிரி டூப் போடறதுல பல விஷயங்கள் அடங்கி இருக்கு. அதாவது கதாநாயகர்கள் ஆன நாங்க ப்ரொபெஷனல் பைட்டர்ஸ் கிடையாது, ஸ்டண்ட் மாஸ்ட்டர் சொல்லிக்கொடுக்கிறதை வச்சு செய்றோம். சில சமயம் நம்மை மீறி மிஸ் ஆச்சுன்னா, கீழே விழுந்து பலமா அடிபட்டா ஒண்ணு உயிருக்கு ஆபத்து, அல்லது உடல் உறுப்புகளுக்கு ஆபத்து, அடுத்து அடிபட்டு படுத்துட்டோம்னா மொத்த படப்பிடிப்பும் நின்னு போயிடும். ப்ரொட்யூசருக்கு பெரிய அளவுல லாஸ் வரும்.
[/tscii:a024d92c7c]

saradhaa_sn
8th January 2010, 05:36 PM
[tscii:549e61ff5f]ரவிச்சந்திரன் அவர்களுடன் எனது சந்திப்பு – (2)

ரெண்டாவது, டூப் பைட்டர்ஸுக்குத்தான் அந்த டைமிங் கரெக்டா தெரியும். அதாவது ஒரு மாடியிலிருந்து, கீழே ஓடும் ஒரு ட்ரக்கில் குதிக்கணும்னா, எப்போ குதிச்சா, ட்ரக் அந்த இடத்துக்கு வரும்போது கரெக்டா அதன்மீது விழுவோம்னு அவங்களுக்குத்தான் தெரியும். அதுமாதிரி கரெக்டா குதிச்சிடுவாங்க. நாங்க குதிச்சா, கொஞ்சம் மிஸ் ஆனாலும் அவ்வளவுதான்.

அடுத்து ஸ்டண்ட் யூனியனில் இருப்பவங்களுக்கு இம்மாதிரி ஃபைட் படங்கள்ளதான் வாய்ப்புக்கிடைக்கும். வருமானமும் கிடைக்கும். அதை நாம ஏன் தட்டிப்பறிக்கணும்?. அவங்களுக்கு பாலச்சந்தர் சார் படத்திலோ, கே.எஸ்.ஜி.சார் படத்திலோ வாய்ப்புக்கிடைக்காது. எம்.ஜி.ஆர்.சார் படம், என் படம், ஜெய்சங்கர் படம், இப்போ ஒரு பத்து வருஷமா சிவாஜி சார் படங்கள்ளேயும் பைட் சீன் வைக்க ஆரம்பிச்சுட்டாங்க. ஸோ, இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ளேதான் அவங்களுக்கும் சான்ஸ் கிடைக்கும்.... இதை நீங்க ஸ்டூடண்ட்ஸ்ங்கிறதாலே சொல்றேன். நீங்களே பிரஸ் ரிப்போர்ட்டரா வந்திருந்தா சொல்லியிருக்க மாட்டேன். பிரச்சினையாயிடும் (சிரித்தார்).

இன்னொரு முக்கியமான விஷயம் கால்ஷீட் பிரச்சினை. நாங்க Heros ஒரே சமயத்துல நாலைந்து படங்கள்ளதான் நடிப்போம், ஆனா எங்களோடு காம்பினேஷன் சீன்ல நடிக்கிற கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் பல படங்கள்ள நடிச்சிக்கிட்டிருப்பாங்க. வி.எஸ்.ராகவன் சார், வி.கே.ஆர்.சார், மேஜர் சார், மனோரமா மேடம் இவங்கள்ளாம் ஒரே நேரத்துல முப்பது, நாற்பது படங்கள்ள நடிச்சிக்கிட்டு இருக்குறவங்க. எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இவங்க கிட்டே கால்ஷீட் வாங்கியிருப்பாங்கன்னு நமக்குத்தெரியும். நாம பெரிய பந்தாவா டூப் போடாம செய்றேன்னு செஞ்சு அடிபட்டு ஒரு பதினைந்து நாள் படுத்துட்டோம்னா போச்சு. எல்லோர்கிட்டே வாங்கின கால்ஷீட்டுமே வேஸ்ட் ஆயிடும். அப்புறம் அவங்களையெல்லாம் ஒண்ணு சேர்த்து கால்ஷீட் வாங்குவது லேசான விஷயமா?. அதே தேதியிலே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு படத்துக்கும் கொடுத்திருப்பாங்க. அதனால் தயாரிப்பாளர் மாசக்கணக்கா வெயிட் பண்ண வேண்டி வரும். ஷெட்யூல்படி படத்தை முடிக்கலைன்னா எவ்வளவு பெரிய லாஸ்ல கொண்டுபோய் விடும் தெரியுமா?'

என்று முடித்தார். என் சிறுமதியை நான் நொந்துகொண்டேன். அதே சமயம் பரவாயில்லை, கேட்டதால்தானே இவ்வளவு விவரமும் சொன்னார் என்று சமாதானம் அடைந்தேன். (அடேயப்பா டூப் போடுறதுல இவ்வளவு அட்வான்டேஜ் இருக்கா).

மேலும் சிறிது நேரம் சில விஷயங்களைப்பற்றிப்பேசினோம். எங்கள் ஒவ்வொருவருடைய படிப்பைப் பற்றியும் கேட்டறிந்தார். இதனிடையே பணியாளர் டீயும் பிஸ்கட்டும் கொண்டு வந்து வைத்தார். 'சார் நாங்க முத்துசார் வீட்டுல இப்போதான் டீ சாப்பிட்டோம்' என்று சொன்னதும், 'அது அவர் வீட்டுக்கு போனதுக்கு. இப்போ என் வீட்டுக்கு வந்ததுக்கு சும்மா அனுப்ப முடியுமா?. டீ தானே. எத்தனையும் சாப்பிடலாம். எடுத்துக்குங்க' என்றார்.

'சார், உங்களை சந்திப்போம்னு ஒருமணி நேரத்துக்கு முன் வரை நினைக்கவேயில்லை. பெர்மிஷன் கொடுத்ததுக்கும், ஒரு விருந்தினரைப்போல கவனிச்சதுக்கும் ரொம்ப தேங்க்ஸ் சார்' என்றோம் கோரஸாக. 'என்ன பெரிசா செஞ்சுட்டேன்னு தேங்க்ஸ் எல்லாம் சொல்றீங்க. நாம இன்னைக்கு சந்திக்கணும்னு ஆண்டவன் எழுதி வசிருக்கான். அதான் உங்களைக்கொண்டு வந்து சேர்த்துட்டான். நான்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணூம். ரொம்ப லோன்லியா ஃபீல் பண்ணிக்கிட்டிருந்தேன். ஒரு மணி நேரம் நல்லா ரிலாக்ஸ்டா போச்சு. ஷீலாவைப்பார்க்கணும்னா இன்னொரு நாளைக்கு போன் பண்ணி கேட்டுகிட்டு வாங்க' என்று வாசல் வரை வந்து அன்புடன் வழியனுப்பி வைத்தார்.

முத்து எங்களுக்கு இசையமைக்க முடியவில்லையே என்ற வருத்தம் எல்லாம் போச்சு. மாறாக, ரவிச்சந்திரன் அவர்களின் சந்திப்பும் உரையாடலும் மனம் முழுக்க நிறைந்தது. எதிர் வீட்டிலிருந்த முத்துவின் மனைவியைச் சந்தித்து மீண்டும் நன்றி தெரிவித்து விட்டு வந்தோம். ஆட்டோ பிடிக்கணும் என்ற எண்ணம்கூட இல்லை. சள சளவென்று பேசிக்கொண்டே 'லஸ்கார்னர்' வரை நடந்தே வந்தோம்.

இந்தச் சந்திப்புக்குப்பின் ரவிச்சந்திரன் என மனதில் பல படிகள் உயர்ந்துவிட்டார். இந்த திரி துவங்கியதற்கு அவருடன் எதிர்பாராமல் நேர்ந்த அந்த சந்திப்பும் ஒரு காரணம் எனலாம்.
[/tscii:549e61ff5f]

mr_karthik
11th January 2010, 04:29 PM
...yesterday midnight I saw few scenes of a movie telecasted in Jaya tv, I started to watch only from director's name and he is 'AvinAsi Mani'.

Ravichandran is the hero and K.R.Vijaya is Heroine.

KRV and V.A.Nirmala are sisters, and Nirmala is a collector.

KRV & Ravichandran are lovers, in the meantime RC makes a forgery in cheque by signing like KRV. So she hates him and refused to marry.

He challenges her, that he will succeed and make her to marry him..

There is another love pair Master Sekhar & Rojaramani.

KRV's family house coming for auction, for nonsettling loan on the house. RC try to give some money to KV thro a 3rd person, but she didnt accept it.

'thEngai' is openly a MGR fan and manOrama is NT fan, they clash each other then and there.

what is the name of that movie..?.

RAGHAVENDRA
11th January 2010, 04:56 PM
அது ஜானகி சபதம் திரைப்படம். மனோரமாவுக்கும் தேங்காய் சீனிவாசனுக்கும் இடையே ஒரு போட்டிப் பாடலும் உண்டு - மக்கள் திலகமா நடிகர் திலகமா என்று துவங்கும் பல்லவி. மற்றும் ஜேசுதாஸ் ஸ்வர்ணா குரலில் இனிமையான பாடல் இளமை கோவில் கொண்ட இரண்டே தீபங்கள் என்று துவங்கும்.

ராகவேந்திரன்

mr_karthik
12th January 2010, 12:50 PM
அது ஜானகி சபதம் திரைப்படம்.
Thanks Raghavendhar sir,

I think it has come on 1977 Pongal. is it..?.

another surprise, there is another movie சபதம் which came in 1971, with same Ravichandran, K.R.Vijaya and T.K.Bagavathi. (with lovely songs like 'தொடுவதென்ன தென்றலோ மலர்களோ').

Plum
12th January 2010, 07:29 PM
thoduvadhenna thendralo by GK Venkatesh has a passing resemblance to Woh Hai Zara from Shagird. However, one cannot call it a copy - and this song can show the difference between inspiration and copy(of the Veda/Deva type)

saradhaa_sn
13th January 2010, 01:41 PM
சொர்க்கத்தில் திருமணம்

இப்படம் ரவிச்சந்திரனை நடிக்க வைத்து ராமண்ணா இயக்கிய கடைசிப்படமாக இருக்க வேண்டும். (அல்லது அவரை வைத்து இதற்குப்பிறகும் படங்கள் இயக்கினாரா?). இப்படத்தில் ரவிச்சந்திரனின் ஜோடியாக லதா நடித்திருந்தார். படத்தின் ஆரம்பக்காட்சிகளில் இருவரும் கல்லூரி மாணவர்களாக (??) வருவார்கள். மாணவர்களில் ஒருவராக விஜயகுமாரும் நடித்திருந்தார்.

லதாவின் அம்மாவாக சௌகார் நடித்திருந்தார். இவர் கணவருடன் காஷ்மீர் பனிமலைப் பிரதேசத்தில் குடியிருந்தபோது, எதிரி நாட்டு ராணுவத்தினரால் அவர் வாழ்வில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வொன்று அவர் மனதை வெகுவாகவே பாதித்து விடுகிறது. அதுபோல தன் மகளுக்கும் நடந்துவிடக்கூடாது(?) என்று மிகவும் கண்டிப்புடன்(?) வளர்க்கிறார். கல்லூரியில் இருந்து ஏதோ காரணத்துக்காக விலக்கிவைக்கப்படும் விஜயகுமார், பின்னாளில் ஹிப்பிகள் கூட்டத்தில் சேர்ந்துகொண்டு அலைய, ஒரு சமயம் ஹிப்பிகளால் லதாவுக்கு ஏற்படயிருந்த மானபங்கத்திலிருந்து லதாவைக் காப்பாற்றுகிறார்.

கண்ணைக்கவரும் வண்ண ஒளிப்பதிவுடன் அமைந்த சொர்க்கத்தில் திருமணம் படத்துக்கு சங்கர் - கணேஷ் இசையமைத்திருந்தனர்.
'நேரம் இரவு நேரம்.. இதுதானே உறவு நேரம்'
என்ற பாடல் பிரபலமானது. இன்னொரு டூயட் பாடலில் (முதலடி நினைவில்லை) லதாவின் அதிகப்படியான நீச்சலுடைக்காட்சிகள் பத்திரிகை விமர்சனங்களில் கண்டனம் செய்யப்பட்டன.

இப்படத்தில் சௌகார் தேவைக்கு அதிகமாக அழுது குவிக்கிறார். அதுவே படத்தை போரடிக்கும் லெவலுக்குக் கொண்டு செல்கிறது. போதாக்குறைக்கு ரொம்ப சொதப்பலான கதை. ராமண்ணாவுக்கு இறங்குமுகம் ஏற்பட்டிருந்த சமயம், இப்படத்தின் மூலம் மேலும் சறுக்கினார்.

saradhaa_sn
14th January 2010, 10:53 AM
thoduvadhenna thendralo by GK Venkatesh has a passing resemblance to Woh Hai Zara from Shagird. However, one cannot call it a copy - and this song can show the difference between inspiration and copy(of the Veda/Deva type)
அதெல்லாம் முன்புதான். 'அவர் காப்பியடித்தார்.. இவர் காப்பியடித்தார்' என்றெல்லாம் பெயர் சொல்ல முடிந்தது.

ஆனால் இப்போது 'ரீமிக்ஸ்' என்ற் போர்வையை போர்த்திக்கொண்டு மார்க்கெட்டில் உள்ள எல்லா இசையமைப்பாளர்களுமே காப்பியடிக்கத்தான் செய்கிறார்கள். (வித்யாசாகர் போன்ற சிலர் இந்த வகையில் இல்லேன்னு நினைக்கிறேன்).

saradhaa_sn
17th January 2010, 01:32 PM
'காவியத்தலைவி'

சௌகார் ஜானகி இரட்டை வேடங்களில் நடித்து சொந்தமாகத்தயாரித்த படம் இது. அம்மா, மகள் என இரட்டைவேடம். அம்மா யார் என்று மகளுக்குத்தெரியாது (கிளைமாக்ஸ் வரையில்). அதே சமயம் மகள் யாரென்று அம்மாவுக்குத்தெரியும். இப்படியான ஒர் வித்தியாசமான கதை. இந்தியில் 'மம்தா' என்ற பெயரில் வெளியான படத்தை தமிழில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் திரைக்கதை வசனம் இயக்கத்தில் படமாக்கியிருந்தனர். இரட்டை வேடம் என்பதாலும், சொந்த தயாரிப்பு என்பதாலும் படம் முழுக்க சௌகார் ஜானகியே வியாபித்து இருந்தார்.

அம்மா சௌகாரின் இளம் வயது காதலனாகவும், மகள் சௌகாரின் வளர்ப்புத்தந்தையாகவும் ஜெமினி கணேசன் நடிப்பில் கொடிகட்டிப்பறந்திருந்தார். இந்தப்படத்துக்காகத்தான் 1970-ம் ஆண்டின் சிறந்த நடிகராக தமிழ்நாடு அரசின் விருது பெற்றார். 1970 அவருக்கு பல வகையில் சிறப்பான ஆண்டு. ஆம், அந்த ஆண்டுதான் அவருக்கு மத்திய அரசின் பெருமைக்குரிய 'பத்மஸ்ரீ ' விருதும் வழங்கப்பட்டது.

இரண்டாவது (மகள்) சௌகாரின் ஜோடியாகவும், ஜெமினி கணேஷின் ஜூனியர் வழக்கறிஞராகவும் ரவிச்சந்திரன் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடித்ததாலோ என்னவோ சௌகாரும் நல்ல துடிப்பான நடிப்பை வெளிப்படுத்த முயன்றிருந்தார். ரவிச்சந்திரன் - சௌகார் ஜோடிக்கு ஒரு டூயட் பாடலும் உண்டு. இளிய சௌகாரின் உண்மையான அப்பாவாக எம்.ஆர்.ஆர்.வாசு நடித்திருந்தார். (வாசுவுக்கு பைஜாமா, ஜிப்பா, ஷெர்வாணி அணிவித்து அப்படியே வடநாட்டு சாயலை உண்டாக்கியிருக்க வேண்டுமா?). ஜெமினியின் அலுவலக அறையில் அமர்ந்திருக்கும் சௌகாரிடம், அவரது வருங்கால மருமகனைக்காட்ட, மேஜையின் கண்ணாடி வழியே பார்க்க வைத்திருப்பது போன்ற இடங்களில் பாலச்சந்தர் தெரிகிறார்.

கவியரசர் கண்ணதாசனின் பாடல்களுக்கு 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். வடநாட்டு சாயலில் அமைந்த
'என் வானத்தில் ஆயிரம் வெள்ளி நிலவு' பாடலை சுசீலா ரொம்ப அனாயாசமாகப் பாடி அசத்தியிருந்தார்.

ஜெமினி - சௌகார் டூயட் பாடலான (ஆனால் சௌகார் மட்டுமே பாடுவார்)
'கையோடு கை சேர்க்கும் காலங்களே
கல்யாண சங்கீதம் பாடுங்களேன்'
அன்றைய சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று.

ரவிச்சந்திரன் - சௌகார் ஜோடியின் டூயட் பாடலான
'ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆ.... ஆறேழு நாட்கள் போகட்டும்' பாடலை அன்றைய இளம் எஸ்.பி.பி.யும், எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடியிருந்தனர். (சௌகார் ஜானகியை 'பெல்பாட்டம் பேண்ட்'டில் எல்லாம் பார்ப்பதற்கு கொஞ்சம் கண்கள் உறுத்தத்தான் செய்தது).

இவை எல்லாப்பாடல்களையும் தூக்கி சாப்பிடும் விதமாக அமைந்த பாடல், பார்ட்டியில் இளம் சௌகார் தன் தாயை நினைத்துப் பாடும்...
'ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு
கனவினிலே என் தாய் வந்தாள்' என்ற பாடல்தான். பி.சுசீலாவின் மாஸ்ட்டர் பீஸ்களில் ஒன்று. அதில்'என்னுயிர் தாயே நீயும் சுகமா' என்ற வரிகளின்போது எழும் கோரஸ் வயலின் இசை, சட்டென்று நிற்கும்போது நம் உடம்பே சிலிர்க்கும். அதிலும் கடைசியாக வரும் சரணத்தின் முடிவில்....
'வானத்தில் இருந்தே பாடுகிறேன் - எந்த
வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
மகளே வாழ்கென வாழ்த்துகிறேன் - நான்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்

மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்... மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்..'

சுசீலாவின் குரலோடு எழும் வயலின் கூட்டத்தின் இசைவெள்ளம் அப்படியே பயணித்து அடங்கி ஓயும்போது... மழையடித்து ஓய்ந்தது போல் இருக்கும். எம்.எஸ்.வி... மனிதரா அவர்? இல்லை பிரம்ம ராட்சஸன். என்னவெல்லாம் சாதித்துவிட்டு எப்படி ஒண்ணுமே தெரியாதவர் போல அவரால் இருக்க முடிகிறது.

1970 தீபாவளியன்று சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், காவியத்தலைவி, மாலதி, சுகுண சுந்தரி ஆகிய படங்கள் வெளியாயின. அவற்றில் முதல் மூன்று படங்கள் பல இடங்களில் 100 நாட்களைக்கடந்து ஓடி சூப்பர் டூப்பர் ஹிட் ஆயின. மாலதி சுமாரான வெற்றியடைந்தது.

RAGHAVENDRA
17th January 2010, 07:10 PM
சகோதரி சாரதா அவர்களின் காவியத்தலைவி படத்தைப் பற்றிய குறிப்புகள் அப்படத்தைக் கண்முன்னே கொண்டு நிறுத்துகின்றன. எம்.ஆர்.ஆர். வாசுவின் அற்புத நடிப்பாற்றலில் வெளிவந்த ஒரு சில படங்களில் இதுவும் ஒன்று. மிகவும் திறன் வாய்ந்த நடிகர் உச்சத்தில் வந்திருக்க வேண்டியவர். சில தேவையற்ற பழக்கங்களுக்கு அடிமையாகி பல வாய்ப்புகளை இழந்தார். போதாக்குறைக்கு காங்கிரஸ் மேடைகளில் பேச்சாளராகப் பங்கேற்று ஊர்ஊராகச் சென்றதில் படவாய்ப்புகள் நழுவியதும் ஒரு காரணம். காங்கிரஸுக்காக வாழ்க்கையைத் தொலைத்த கலைஞர்களின் பட்டியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்தவர் எம்.ஆர்.ஆர்.வாசு.

1970ம் ஆண்டைப் பொறுத்தவரை, அதிலும் குறிப்பாக தீபாவளி 1970ல் வெளிவந்த 4 அசல் படங்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. நான்கிலும் ஒரு கதாபாத்திரம் குடிகார கதாபாத்திரம். நான்கிற்கும் இசை மெல்லிசை மன்னர். சுகுண சுந்தரி மொழி மாற்றுப் படம்.

அண்ணா சாலையில் மாலதி வெலிங்டனிலும், காவியத் தலைவி மிட்லண்ட்டிலும், சொர்க்கம் தேவி பாரடைஸிலும், எங்கிருந்தோ வந்தாள் சாந்தியிலும் வெளியாயின. மாலதியில் கற்பனையோ கைவந்ததோ என்ற அற்புதமான பாடல் இடம் பெற்றது. மற்றொரு டூயட்டான சிடுசிடு என்ற பாடல் பார்க்க நெருடலாக இருக்கும். ஜெமினி சரோஜாதேவி இருவரும் பைக்கில் அமர்ந்து போகும் போது வரும் பாடல். முக்கால்வாசி பேக் ப்ரொஜக்ஷன். சரோஜாதேவி சற்று முதிர்த் தோற்றத்தில் சுடிதாரில் கையை காலை ஆட்டி வண்டியிலேயே டூயட் பாடு்ம் காட்சி தற்போது மிகவும் நகைச்சுவையாக இருக்கும். ஜெமினி வயதாகி டூயட் பாடியதை எவரும் எந்தப் பத்திரிகையும் விமர்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வயதாகி டூயட் பாடியதாக விமர்சிக்கப் பட்ட ஒரே கலைஞர் நடிகர் திலகம் மட்டுமே. மற்றவர்கள் எவ்வளவு வயதாகி டூயட் பாடினாலும் யாரும் கேட்க மாட்டார்கள்.

மன்னிக்கவும் கருத்து ஓட்டத்தில் பாதை மாறிவிட்டிருக்கிறது. மீண்டும் ரவிச்சந்திரன் படங்களுக்கு வருவோம். ரவி நடித்து சில படங்கள் மறு வெளியீட்டில் திரையிடப்படவில்லை. அவற்றில் குறிப்பிடத்தக்கவை மயிலாடும் பாறை மர்மம், அன்னை சொன்ன சொல், துள்ளி ஓடும் புள்ளி மான், பொய் சொல்லாதே, சத்தியம் தவறாதே போன்றவையாகும். இவற்றில் துள்ளி ஓடும் புள்ளி மான் படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்த்ததோடு சரி, அதற்குப் பின் அப்படம் மறந்தே போய் விட்டது.

மற்ற படங்களை யாராவது பார்த்திருந்தால் அவர்கள் இங்கு அதைப் பற்றி எழுதினால் நலம். சாரதா அவர்கள் பார்த்திருப்பார்களா என தெரியவில்லை. பார்த்திருந்தால் எழுதுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

வாய்ப்புக்கு நன்றி

ராகவேந்திரன்

Murali Srinivas
17th January 2010, 10:42 PM
சாரதா,

சொர்க்கத்தில் திருமணம் 1974-ம் ஆண்டு வெளியானது. பாக்தாத் பேரழகிக்கு பின் ராமண்ணா இயக்கத்தில் வெளியான படம். இந்த படமும்,வெகு நாட்களுக்கு பின் ஜெய் - ரவி இணைந்து நடித்த அக்கரை பச்சை படமும் ஒரே நேரத்தில் (ஒரே நாளில்?) வெளியானது. செப்டம்பர் 74 என்பது என் நினைவு. அக்கரை பச்சை அமோக வெற்றியடைய சொர்க்கத்தில் திருமணம் தோல்வியடைந்தது. ஜெய் படங்களைப் பற்றி எழுதும் போது அக்கரை பச்சை பற்றியும் எழுதுங்கள். அந்த படத்தின் வசனங்கள் பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசத்திற்கு பெயர் வாங்கி கொடுத்தது. வெகு நாட்களுக்கு பின் நாகேஷிற்கு நல்ல ரோல்.அந்தப் படத்தில் அரசனை பார்த்த கண்ணிற்கு மற்றும் ஊர்கோலம் போகின்ற கிளிக்கூட்டம் எல்லாம் சூப்பர் ஹிட் பாடல்கள்.

அன்புடன்

அதே சமயத்தில்தான் அன்பு மேகமே இங்கு ஓடி வா என்ற விஜயபாஸ்கரின் அருமையான பாடல் இடம் பெற்ற எங்கம்மா சபதமும் வெளியானது என நினைக்கிறன்.

RC
18th January 2010, 08:30 AM
For your viewing pleasure...
ethirigaL jaakkiradhai - http://www.rajshritamil.com/Movie/Ethirigal-Jakkirathai
justice viswanathan - http://www.rajshritamil.com/Movie/Ethirigal-Jakkirathai
mINdum vaazhvEn - http://www.rajshritamil.com/Movie/Meendum-Vazhvaen
naan - http://www.rajshritamil.com/Movie/Naan

saradhaa_sn
18th January 2010, 12:04 PM
Thank you RC, for your valuable efforts for providing the links.

Eventhough the links are not opening in my PC, viewers, who get the oppertunity to watch them, please share about the contents and your thoughts, here.

saradhaa_sn
18th January 2010, 02:01 PM
சகோதரி சாரதா அவர்களின் காவியத்தலைவி படத்தைப் பற்றிய குறிப்புகள் அப்படத்தைக் கண்முன்னே கொண்டு நிறுத்துகின்றன.

மாலதியில் கற்பனையோ கைவந்ததோ என்ற அற்புதமான பாடல் இடம் பெற்றது. மற்றொரு டூயட்டான சிடுசிடு என்ற பாடல் பார்க்க நெருடலாக இருக்கும். ஜெமினி சரோஜாதேவி இருவரும் பைக்கில் அமர்ந்து போகும் போது வரும் பாடல். முக்கால்வாசி பேக் ப்ரொஜக்ஷன். சரோஜாதேவி சற்று முதிர்த் தோற்றத்தில் சுடிதாரில் கையை காலை ஆட்டி வண்டியிலேயே டூயட் பாடு்ம் காட்சி தற்போது மிகவும் நகைச்சுவையாக இருக்கும். ஜெமினி வயதாகி டூயட் பாடியதை எவரும் எந்தப் பத்திரிகையும் விமர்சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வயதாகி டூயட் பாடியதாக விமர்சிக்கப் பட்ட ஒரே கலைஞர் நடிகர் திலகம் மட்டுமே. மற்றவர்கள் எவ்வளவு வயதாகி டூயட் பாடினாலும் யாரும் கேட்க மாட்டார்கள்.
டியர் ராகவேந்தர் சார்,
தங்களின் பாராட்டுக்கு நன்றி.
மாலதி படத்தை நானும் பார்த்திருக்கிறேன். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வந்த படம். ஜெமினி - சரோஜாதேவி ஸ்கூட்டரில் பாடிக்கொண்டு போகும் 'ஜிகுஜிகுஜிகுஜிகு எங்கே போவோம்' என்ற பாடலில், முழுக்க பேக் ப்ரொஜக்ஷன் மட்டுமல்லாது கே.எஸ்.ஜி.இன்னொரு விஷயம் பண்ணியிருப்பார், பாடலின் மறுபாதியில் இருவரும் மகாபலிபுரம் செல்வதாகக்காட்டி, சென்னைக்கு அருகில் இருக்கும் மகாபலிபுரம் சென்று படமாக்குவதை விடுத்து, ஸ்டுடியோவில் மகாபலிபுரம் கோயில்களைப்போல படம் வரைந்து வைத்து, அதில் படமாக்கி செயற்கைத்தனம் பண்ணியிருப்பார். மாலதி படம் வர சிறிது நாட்களுக்கு முன்புதான் இதே ஜோடியுடன் பாரதியும் (சொந்தக்குரலில் பாடி) நடித்த 'சிநேகிதி' படம் வந்தது.

நீங்கள் சொல்வது உண்மை. மற்றவர்கள் படங்களில் பூதாகரமாகத்தெரியும் எவ்வளவோ குறைகளைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூட வாய்திறக்காதவர்கள், நடிகர்திலகம் படங்களில் தென்படும் சிறிய குறைகளைக்கூட பெரிதாக்கிப்பேசுவது வழக்கமாகி விட்டது. இதைப்பற்றி "சிவாஜி படங்களுக்கு மட்டும் பூதக்கண்ணாடி" என்ற தலைப்பில் பல்வேறு நடிகர்கள், இயக்குனர்களின் படங்கள் பற்றி தொடர் கட்டுரை எழுதியுள்ளேன். மாடரேட்டர்கள் அனுமதித்தால் மட்டுமே அவற்றை இங்கே பதிக்க முடியும். அவற்றைப்பதித்தால் நிறைய 'Digression Threads' தோன்றும் என்பது உண்மை.



மீண்டும் ரவிச்சந்திரன் படங்களுக்கு வருவோம். ரவி நடித்து சில படங்கள் மறு வெளியீட்டில் திரையிடப்படவில்லை. அவற்றில் குறிப்பிடத்தக்கவை மயிலாடும் பாறை மர்மம், அன்னை சொன்ன சொல், துள்ளி ஓடும் புள்ளி மான், பொய் சொல்லாதே, சத்தியம் தவறாதே போன்றவையாகும். இவற்றில் துள்ளி ஓடும் புள்ளி மான் படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்த்ததோடு சரி, அதற்குப் பின் அப்படம் மறந்தே போய் விட்டது.

மற்ற படங்களை யாராவது பார்த்திருந்தால் அவர்கள் இங்கு அதைப் பற்றி எழுதினால் நலம். சாரதா அவர்கள் பார்த்திருப்பார்களா என தெரியவில்லை. பார்த்திருந்தால் எழுதுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

நீங்கள் குறிப்பிட்ட படங்களில் துள்ளி ஓடும் புள்ளி மான், மயிலாடும் பாறை மர்மம் ஆகிய ப்டங்களை ஒரு முறை பார்த்திருக்கிறேன். முதல் படம், பல ஆண்டுகளுக்கு முன் பார்த்ததால் கதை கோர்வையாக நினைவில்லை. 'மயிலாடும் பாறை மர்மம்' நீண்டகாலம் தயாரிப்பில் இருந்த படம். 1970 வாக்கில் துவங்கிய படம் 1979-ல்தான் வெளியானது. முதலில் அந்தப்படத்துக்கு 'மயிலாடும் பாறை' என்று மட்டும்தான் பெயரிடப்பட்டிருந்தது. பின்னர்தான் 'மர்மம்' சேர்க்கப்பட்டது. சில காட்சிகள் மட்டும் நினைவிலுள்ளது. குறிப்பாகச்சொன்னால், ரகசியத்தைப் பறிமாறிக்கொள்ள தூண்டிலில் அதைக்கோர்த்து விட, இன்னொருவன் அதை தண்ணீருக்குள் மூழ்கியபடி எடுத்துச்செல்லும் காட்சி. அதுபோல சவுக்குத்தோப்பில் தேங்காய் ஷெனாய் வாசிக்க, வடநாட்டு உடையில் இருக்கும் மனோரமா, அதற்கு நடனப்பயிற்சி பெறுவது போன்ற ஒரு சில சீன்கள் மட்டும் நினைவில் வந்துபோகின்றன. ஆனால் படம் ரசிக்கக்கூடிய படமாக இருந்தது என்பதில் ஐயமில்லை.

saradhaa_sn
18th January 2010, 03:49 PM
சாரதா,

சொர்க்கத்தில் திருமணம் படமும்,வெகு நாட்களுக்கு பின் ஜெய் - ரவி இணைந்து நடித்த அக்கரை பச்சை படமும் ஒரே நேரத்தில் (ஒரே நாளில்?) வெளியானது. செப்டம்பர் 74 என்பது என் நினைவு. அக்கரை பச்சை அமோக வெற்றியடைய சொர்க்கத்தில் திருமணம் தோல்வியடைந்தது. ஜெய் படங்களைப் பற்றி எழுதும் போது அக்கரை பச்சை பற்றியும் எழுதுங்கள். அந்த படத்தின் வசனங்கள் பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசத்திற்கு பெயர் வாங்கி கொடுத்தது. வெகு நாட்களுக்கு பின் நாகேஷிற்கு நல்ல ரோல்.அந்தப் படத்தில் அரசனை பார்த்த கண்ணிற்கு மற்றும் ஊர்கோலம் போகின்ற கிளிக்கூட்டம் எல்லாம் சூப்பர் ஹிட் பாடல்கள்.
டியர் முரளி,
நேற்று மெல்லிசை மன்னரின் 'என்றும் எம்.எஸ்.வி.' நிகழ்ச்சியில், மெல்லிசை மன்னர் 'இல்லாத பொருள்மீது எல்லோர்க்கும் ஆசை வரும் இக்கரைக்கு அக்கரைப்பச்சை' பாடலைப் பாடியபோதே, இப்படம் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தேன். நீங்கள் சொன்னபடியே நீண்ட நாட்களுக்குப்பின் ஜெய்யும் ரவியும் இணைந்து நடித்த படம். (என் நினைவு சரியானால், 'நான்கு சுவர்கள்' படத்துக்குப்பின்). அக்கரைப்பச்சைக்குப்பின் மீண்டும் ஆர்.சி.சக்தியின் 'வரம்' படத்திலும், பின்னர் ஆபாவாணனின் 'ஊமை விழிகள்' படத்திலும், இறுதியாக ரஜினியின் 'அருணாச்சலம்' படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர்.

'அக்கரைப்பச்சை' படம் பற்றி தாங்கள் சொன்னபடி ஜெய் திரியில் எழுத இருப்பதால், அப்படம் தொடர்பான சில விஷயங்களை மட்டும் இங்கே எழுதலாம் என்று நினைக்கிறேன். சென்னை மௌண்ட் ரோடு ஏரியா ஓடியன் தியேட்டரில் 50 நாட்களைக்கடந்து அக்கரைப்பச்சை ஓடிக்கொன்டிருந்தபோது, அதே அரங்கில் ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, 'உரிமைக்குரல்' படம் ரிலீஸானது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்வரைகூட அரங்கு நிறைந்த காட்சிகளாக அக்கரைப்பச்சை ஓடுவதைக்கண்ட பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம், படத்தயாரிப்பாளரான 'யோகசித்ரா' ஜி.கே.தர்மராஜையும், இயக்குனரையும் போனில் தொடர்புகொண்டு, ஓடியனில் படம் தொடர்ந்து ஓட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்க, நடைமுறை சிக்கல்களையறிந்த அவர்கள் அதைக்கண்டுகொள்ளவில்லை. இருந்தும் பேராசிரியர் மனது கேட்காமல் உரிமைக்குரல் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஸ்ரீதரையே தொடர்பு கொண்டு அக்கரைப்பச்சை தொடர்ந்து ஓடும் விதமாக உரிமைக்குரலை அரங்கு மாற்ற முடியுமா என்று கேட்க, அவரோ தான் பெரிதும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர். படத்துக்கு இடைஞ்சல் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்துடன், 'டிஸ்ட்ரிப்யூஷனில் தான் தலையிட முடியாது' என்று ஸ்ரீதர் தட்டிக்கழிக்க, பிரகாசம் சோர்ந்துபோனார். இதன் விளைவாக, அக்கரைப்பச்சை படம் ஓடியன் தியேட்டரில் நல்ல கூட்டத்துடன் ஓடிக்கொண்டிருக்கும்போதே தூக்கப்பட்டு உரிமைக்குரல் வெளியானது. அரங்கு கிடைக்காத காரணத்தால் அக்கரைப்பச்சை வேறெங்கும் ஷிப்ட் செய்யப்படவுமில்லை. (ஆதாரம் : பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசத்தின் 'கலைத்துறையில் என் காலடிச்சுவடுகள்' தொடர் கட்டுரை).

RC
18th January 2010, 08:53 PM
Thank you RC, for your valuable efforts for providing the links.

Eventhough the links are not opening in my PC, viewers, who get the oppertunity to watch them, please share about the contents and your thoughts, here.

You are welcome, Saradhaa! This is nothing compared to what you have been contributing to many threads.

I'm sure you know this and assume you have PC restrictions in viewing them. But still I would state the obvious...There is a View Free button all the way down in these pages that will let you watch the movies...

pammalar
24th January 2010, 10:29 AM
'ஸ்மார்ட் ஹீரோ', 'கலை நிலவு' ரவிச்சந்திரன் அவர்களின் திரைப்படப் பட்டியல்:
(திரைப்படம் - வெளியான தேதி - சென்னை அரங்குகள் என்கின்ற ஃபார்மெட்டில்)

1. காதலிக்க நேரமில்லை - 27.2.1964 - காஸினோ, கிருஷ்ணா, உமா (210 நாட்கள் ஓடிய இமாலய வெற்றிப்படம்)

2. இதய கமலம் - 27.8.1965 - சித்ரா, மஹாராணி, உமா, ராம் (100 நாட்களுக்கு மேல் ஒடிய சூப்பர்ஹிட் படம்)

3. மோட்டார் சுந்தரம் பிள்ளை - 26.1.1966 - சாந்தி, கிரெளன், புவனேஸ்வரி (100 நாட்களுக்கு மேல் ஓடிய சூப்பர்ஹிட் படம்)

4. குமரிப்பெண் - 20.5.1966 - காமதேனு, முருகன், மஹாலட்சுமி, ஜெயராஜ் (100 நாட்களுக்கு மேல் ஓடிய நல்ல வெற்றிப்படம்)

5. தேடி வந்த திருமகள் - 18.6.1966

6. எங்க பாப்பா - 8.7.1966 - பிளாசா, பிராட்வே, சயானி, சீனிவாசா

7. கெளரி கல்யாணம் - 11.11.1966

8. மெட்ராஸ் டு பாண்டிச்சேரி - 16.12.1966

9. தங்கத்தம்பி - 26.1.1967 - பிரபாத், கிருஷ்ணவேணி, சரஸ்வதி, தங்கம்

10.மகராசி - 14.4.1967 - கிருஷ்ணவேணி, பிராட்வே, உமா

11. அதே கண்கள் - 26.5.1967 - வெலிங்டன், பிரபாத், ராக்ஸி, ராம் (100 நாட்களுக்கு மேல் ஓடிய பெரிய வெற்றிப் படம்)

12. வாலிப விருந்து - 2.6.1967 - சாந்தி, பத்மநாபா, மஹாலட்சுமி

13. மாடி வீட்டு மாப்பிள்ளை - 23.6.1967 - பாரத், சயானி, காமதேனு, லிபர்ட்டி

14. எங்களுக்கும் காலம் வரும் - 7.7.1967 - கெயிட்டி, கிருஷ்ணா, மஹாலட்சுமி

15. எதிரிகள் ஜாக்கிரதை - 28.7.1967 - கெயிட்டி, கிருஷ்ணா, சயானி

குறிப்பு:
1. நடிகர் திலகத்துடன் ரவிச்சந்திரன் இணைந்து நடித்த முதல் திரைப்படம் மோட்டார் சுந்தரம் பிள்ளை.

2. குமரிப்பெண் தென்னகமெங்கும் 6.5.1966 அன்று வெளியானது. சென்னையில் மட்டும், இரண்டு வாரங்கள் கழித்து, 20.5.1966 அன்று வெளியானது.

கலை நிலவு வளரும் ......

அன்புடன்,
பம்மலார்.

mr_karthik
26th January 2010, 02:04 PM
I think you have not yet covered "MADRAS TO PONDICHERRY" another entertainment movie, with different passengers travelling in a bus from Madaras to Pondy.

Kalpana (not Urvasi's sister) was the heroine and pair for Ravichandran. Many comedy and charector artist also acted in MTP. T.K.Ramamurthy done music with good songs like...
பயணம் எங்கே
&
மலரைப்போன்ற பருவமே
etc.

It has good fighting scenes too.

mr_karthik
26th January 2010, 02:28 PM
Pammalar sir,

Thanks for starting Ravichandran's movie list. It is pleasant surprise to see more successful movies in his initial stage itself.

Saradha mam,

I am eagerly waiting for Ravichandran's another thriller 'மீண்டும் வாழ்வேன்' directed by T.N.Balu with MSV's thundering music. I request you to provide a 'detailed review' same like what you have done for 'adhE kangaL' & 'moondrezuthu' etc.

veegopalji
1st February 2010, 10:33 PM
உன்மை தான் ரவிச்சந்திரன் ஒரு மாபெரும் நடிகர்தான் மறுக்க முடியாத உன்மை. அவருடைய பெரும்பாலான திரைப் படங்கள் வெற்றி பெற்றன. அவருடைய ஸ்டயில் ரஜினிக்கு முன்பே வந்தவை.

veegopalji
1st February 2010, 10:42 PM
உன்மை தான் ravichandran ரவிச்ச் சந்திரன் நடித்த பல பாடல்கள் கிடைக்கவில்லை. யாராவது தளஏற்றம் செய்தால் நல்லது. பல நல்ல பாடல்கள் உள்ளன. நண்பர்கள் யாராவது செய்தால் உதவியாக இருக்கும்.

veegopalji
2nd February 2010, 12:16 AM
Pammalaar and Saradha Prakash have given wonderful details about Ravichandran and his movies! It is simply superb! I request our friends to upload songs of Ravichandran films most of which are not found in any of the sites ! It would be a great opportunity to listen to the old songs of Ravichandran films!

Bhoori
21st February 2010, 02:50 AM
சாரதா புண்ணியத்தில் இந்த thread-ஐ பார்க்க முடிந்தது. முன்னாலேயே பார்த்திருந்தால் நானும் ஏதாவது எழுதி இருப்பேன்.

எங்கள் தளத்தில் சில ரவிச்சந்திரன் பட விமர்சனங்கள்:

காதலிக்க நேரமில்லை (Kadhalikka Neramillai) விகடன் விமர்சனம், (http://awardakodukkaranga.wordpress.com/2008/11/04/காதலிக்க-நேரமில்லை-விகடன/) காதலிக்க நேரமில்லை பாட்டுகள் தொகுப்பு (http://awardakodukkaranga.wordpress.com/2008/11/07/காதலிக்க-நேரமில்லை-part-2-ஒலிய/), காதலிக்க நேரமில்லை எங்கள் விமர்சனம், (http://awardakodukkaranga.wordpress.com/2008/11/08/காதலிக்க-நேரமில்லை-part-3/) காதலிக்க நேரமில்லை - ஸ்ரீதர் இல்லாமல்! (http://awardakodukkaranga.wordpress.com/2008/11/10/காதலிக்க-நேரமில்லை-part-4/)

மோட்டார் சுந்தரம் பிள்ளை (Motor Sundaram Pillai) (http://awardakodukkaranga.wordpress.com/2008/08/31/மோட்டார்-சுந்தரம்-பிள்ளை/), ராண்டார்கை குறிப்புகள் (http://awardakodukkaranga.wordpress.com/2009/07/18/ராண்டார்கை-குறிப்புகள்/)

நாலும் தெரிந்தவன் (Naalum Therindhavan) (http://awardakodukkaranga.wordpress.com/2008/09/03/நாலும்-தெரிந்தவன்-nalum-therindhavan/)

saradhaa_sn
3rd March 2010, 11:22 AM
Pammalaar and Saradha Prakash have given wonderful details about Ravichandran and his movies! It is simply superb! I request our friends to upload songs of Ravichandran films most of which are not found in any of the sites ! It would be a great opportunity to listen to the old songs of Ravichandran films!
Thanks V.Gopalji for your kind reply....

We will try to fulfill your wish very soon.

For time being you can listen some of the duet songs of Ravichandran (and others too) from the following site:

http://psusheela.org/tam/audio.php?offset=270&ord=song

saradhaa_sn
3rd March 2010, 12:05 PM
சாரதா புண்ணியத்தில் இந்த thread-ஐ பார்க்க முடிந்தது. முன்னாலேயே பார்த்திருந்தால் நானும் ஏதாவது எழுதி இருப்பேன்.
இப்போ பார்த்துட்டீங்க இல்லையா?. இனி தொடர்ந்து பங்கேற்பீர்களென்று நம்புகிறேன்.

'நாலும் தெரிந்தவன்' படம் நான் பார்த்து பல வருடங்களாகி விட்டதால் அதன் காட்சியமைப்புக்கள் அதிகம் நினைவில் இல்லை. அதனால் அப்படம் பற்றி எழுத முடியவில்லை. உங்கள் பதிவு படித்ததும் அதன் பல சீன்கள் நினைவுக்கு வருகின்றன. குறிப்பாக 'நரியொன்று சிரிக்கின்றது' பாடல் காட்சி.

saradhaa_sn
16th March 2010, 06:51 PM
டியர் ராகவேந்தர்,
முன்னொருமுறை 'பம்பாய் மெயில் 999' பட ஷூட்டிங்கில் ரவிச்சந்திரனைச் சந்தித்து உரையாடியதாக ஒரு வரியில் குறிப்பிட்டிருந்தீர்கள். சந்திப்பு மற்றும் உரையாடல் விவரங்களை முழுமையாக இங்கு பதியும்படி கேட்டிருந்தேன். பதிவிடுவீர்கள் என்று இன்னும் கூட எதிர்பார்க்கிறேன்.

saradhaa_sn
16th March 2010, 06:59 PM
Saradha mam,

I am eagerly waiting for Ravichandran's another thriller 'மீண்டும் வாழ்வேன்' directed by T.N.Balu with MSV's thundering music. I request you to provide a 'detailed review' same like what you have done for 'adhE kangaL' & 'moondrezuthu' etc.
கார்த்திக்,
உங்கள் பதிவின் மூலம், 'மீண்டும் வாழ்வேன்' உங்களுக்குப்பிடித்த படம் என்பதும் அதை நன்றாக ரசித்துப் பார்த்திருக்கிறீர்கள் என்றும் தெரிகிறது. நீங்களே அப்படம் பற்றிய அருமையான விமர்சனம் எழுதி எங்களை மகிழ்விக்கலாமே.

விரைவில் செய்வீர்கள் என்று நம்புகிறோம்.

RAGHAVENDRA
16th March 2010, 09:59 PM
சகோதரி சாரதா,
பம்பாய் மெயில் படத்தின் ப்ரிவியூ காட்சியின் போது தான் ரவி அவர்களை சந்தித்தேன். அது ஜெய் மற்றும் ரவி ரசிகர்களிடையே போட்டி அதிகரித்த கால கட்டம் (சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கால மாற்றத்தின் பாதிப்புகள் ஏற்படத் தொடங்கிய நேரம்), புகுந்த வீடு, சொர்க்கத்தில் திருமணம், அக்கரைப் பச்சை, வீட்டுக்கு வந்த மருமகள், என்று ரவியின் படங்கள் வர ஆரம்பித்தன. இவற்றுடன் வரப்ரசாதம், வள்ளி தெய்வானை இவையும் அடங்கும். இதே சூட்டில் தான் மயிலாடும் பாறை மர்மம் பல ஆண்டுகளுக்குப் பின்னும், துள்ளி ஓடும் புள்ளிமான், சத்தியம் தவறாதே, உள்ளிட்ட படங்களும் வெளிவந்தன. இவையெல்லாம் 70களின் ஆரம்பம் தொடங்கி 70களின் மத்தி வரையிலான வருடங்கள். இவற்றில் வெற்றிப் படங்களும் அடங்கும் - அதில் மீண்டும் வாழ்வேன் மிகவும் பிரபலமான படம். 100 நாட்கள் ஓடியதாக நினைவில்லை. ஆனால் வசூல் நன்றாக இருந்தது. விளம்பரமும் நன்றாக இருந்தது. அதற்கேற்றாற்போல் ரசிகர்கள் ரவியைச் சந்திக்க மிகுவும் ஆவலோடு வருவர். எங்கள் பகுதியிலும் ரவி ஜெய் இருவருக்கும் கணிசமான அளவில் ரசிகர்களும் இருந்தனர். மன்றங்களும் இருந்தன. அப்படி ஒரு ரசிகர் மன்றத்தின் தலைவருடன் தான் பம்பாய் மெயில் பார்த்தேன். என்னை சிவாஜி ரசிகர் என்றே அறிமுகப் படுத்திக் கொண்டேன். என் நண்பனும் அவ்வாறே அறிமுகப் படுத்தினார். அதற்கு ரவி, சிவாஜி ரசிகர் என் படத்தைப் பார்க்க வருவது எனக்கு மகிழ்ச்சி மட்டுமல்ல, பெருமையும் கூட என்றார். சரியாக படம் ஆரம்பிக்கும் நேரத்திற்கு போனோம். பின்னர் படம் முடிந்தவுடன் மீண்டும் அவரை சந்தித்து படத்தைப் பற்றி அவரிடம் பேசினோம். மெல்லிசை மன்னரின் பின்னணி இசையைப் பற்றிப் பாராட்டிப் பேசினோம். அதற்கு அவர், அவருடைய பின்னணி இசையினை ரசித்துப் பார்க்கின்ற உங்களைப் பார்க்கும் போது நீங்கள் பெரிய இசை ரசிகராகவும் இருப்பீர் போலிருக்கிறதே என்றார். அதற்கப்புறம் கிளம்பி விட்டோம். ஆனால் அதற்கு முன் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அதற்குப் பின் என் நண்பனை இன்னும் நான் சந்திக்க முடியவில்லை. சந்தித்தால் நிச்சயம் புகைப்படத்தின் ஒரு பிரதியை வாங்கி விடுவேன்.
நிச்சயம் மறக்க முடியாத சந்திப்பு.

அன்புடன்
ராகவேந்திரன்

saradhaa_sn
17th March 2010, 12:15 PM
நன்றி ராகவேந்தர் சார்,
பம்பாய் மெயில் பட ப்ரிவியூவின்போது, ரவிச்சந்திரனுடன் உங்களுடைய சந்திப்பு மிகவும் சுவையாக இருந்தது. அவருடன் உரையாடியபோது ஒரு விஷயத்தைக்கவனித்தீர்களா?. நம்முடன் அதிகம் பேசவேண்டும் என்று விரும்புவார். ஆனால் அதற்கான விஷயம் கிடைக்காமல் சற்று தடுமாறுவார். நாம் விஷயத்தைத் தூண்டிவிட்டால் போதும் உடனே 'தாங்ஸ்' என்று சொல்லிப் பேச ஆரம்பித்துவிடுவார். அவருடைய பேச்சில் அடிக்கடி வரும் வார்த்தை 'thanks'. அதுபோல மறைந்த திரு. பாலாஜி அவர்களுடன் பேசும்போது அவர் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை 'well'. அதேபோல மறைந்த மேஜர் சுந்தர்ராஜன் வாயில் அடிக்கடி வரும் வார்த்தை 'but one thing'. ரொம்ப ஜோவியலாகப்பேசும் கங்கை அமரன் அவர்களிடம் பேசும்போது நான் கவனித்தது, அவர் அடிக்கடி 'சரியா சொன்னீங்க' என்ற வாக்கியத்தை உபயோகிப்பார்.

இதுபோன்ற மகிழ்ச்சியான தருணங்கள்தான் என்றில்லை, மனக்காயங்கள் ஏற்பட்ட தருணங்களும் உண்டு. ஒருமுறை 'நெஞ்சமெல்லாம் நீயே' படப்பிடிப்பில் நடிகர் மோகனை சந்தித்தபோது கொஞ்சம் கூட மதிக்காமல் நடந்துகொண்டார். ரொம்ப அவமானமாகபோய்விட்டது. 'சரி, ஏதோ அவருக்குப்பிரச்சினை போலிருக்கு' என்று பேசிக்கொண்ட எங்களிடம், அங்கிருந்த ஒருவர் 'இல்லேம்மா, இந்தாளு எப்பவுமே இப்படித்தான்' என்றார்.

gkrishna
13th April 2010, 10:24 AM
some of the movies i remember
1.kadhal jodhi
2.Nangu suvargal by K.Balachander
3.Ean
4.Nam moovar

mr_karthik
30th April 2010, 12:59 PM
நன்றி ராகவேந்தர் சார்,
பம்பாய் மெயில் பட ப்ரிவியூவின்போது, ரவிச்சந்திரனுடன் உங்களுடைய சந்திப்பு மிகவும் சுவையாக இருந்தது. அவருடன் உரையாடியபோது ஒரு விஷயத்தைக்கவனித்தீர்களா?. நம்முடன் அதிகம் பேசவேண்டும் என்று விரும்புவார். ஆனால் அதற்கான விஷயம் கிடைக்காமல் சற்று தடுமாறுவார். நாம் விஷயத்தைத் தூண்டிவிட்டால் போதும் உடனே 'தாங்ஸ்' என்று சொல்லிப் பேச ஆரம்பித்துவிடுவார். அவருடைய பேச்சில் அடிக்கடி வரும் வார்த்தை 'thanks'. அதுபோல மறைந்த திரு. பாலாஜி அவர்களுடன் பேசும்போது அவர் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை 'well'. அதேபோல மறைந்த மேஜர் சுந்தர்ராஜன் வாயில் அடிக்கடி வரும் வார்த்தை 'but one thing'. ரொம்ப ஜோவியலாகப்பேசும் கங்கை அமரன் அவர்களிடம் பேசும்போது நான் கவனித்தது, அவர் அடிக்கடி 'சரியா சொன்னீங்க' என்ற வாக்கியத்தை உபயோகிப்பார்.

இதுபோன்ற மகிழ்ச்சியான தருணங்கள்தான் என்றில்லை, மனக்காயங்கள் ஏற்பட்ட தருணங்களும் உண்டு. ஒருமுறை 'நெஞ்சமெல்லாம் நீயே' படப்பிடிப்பில் நடிகர் மோகனை சந்தித்தபோது கொஞ்சம் கூட மதிக்காமல் நடந்துகொண்டார். ரொம்ப அவமானமாகபோய்விட்டது. 'சரி, ஏதோ அவருக்குப்பிரச்சினை போலிருக்கு' என்று பேசிக்கொண்ட எங்களிடம், அங்கிருந்த ஒருவர் 'இல்லேம்மா, இந்தாளு எப்பவுமே இப்படித்தான்' என்றார்.
ரவிச்சந்திரன் அவர்களுடனான சந்திப்பை விவரமாக அளித்தது போல, நீங்கள் குறிப்பிட்டுள்ள மற்ற பிரபலங்களுடனான சந்திப்பையும் விவரமாக பகிர்ந்துகொள்ளலாமே. நாங்களும் enjoy பண்ணுவோம்.

Particularly we (that means I) are very tempted to know what happened in the meeting with actor Mohan.

mr_karthik
6th June 2010, 12:54 PM
why this thread is not discussed for more than a month?.

Bhoori
23rd June 2010, 01:51 AM
ரவிச்சந்திரன் - அன்றும் இன்றும் - இரன்டு ஃபோட்டோக்கள் - http://awardakodukkaranga.wordpress.com/2010/06/15/ரவிச்சந்திரன்-அன்றும்-இ/

srimal
20th August 2010, 09:08 PM
great job ... thread fullaa padichappuram marupadiyum "utharavindri ullae vaa" parkavendum polirukku...


some of the best songs of spb - and ravichandran was so stylish...

anbae vaa, adhae kangal, and other movies kooda cds irukku... i should hunt for this dvd.. :)

mr_karthik
12th September 2010, 12:54 PM
"பாக்தாத் பேரழகி"
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். ரவிச்சந்திரன் - ஜெயலலிதா போட்டி போட்டுப்பாடும் (கவாலி ஸ்டைலில் அமைக்கப்பட்ட) "நவாப்புக்கொரு கேள்வி நல்ல ஜவாப் சொல்லையா" பாடல் பிரபலம் ஆனது. எஸ்.பி.பாலசுப்ரமணியமும் எஸ்.ஜானகியும் பாடியிருந்தனர்.
On Friday, in Mega TV 'Amudha Gaanam' programme, due to Ramzan festival, they telecasted this song. Beautiful compossing by MSV and well rendered by Ravichandran and Jayalalitha.

Nice to watch.

RC
13th October 2010, 02:39 AM
happened to watch avaLukku nigar avaLE *ing Ravichandran, V.A. Niramala (triple roles), Kalyana Kumar, Shangmugasundaram, VKR, Major, Thengai, Manorama and many more...

The story line is similar to mayangugiRaaL oru maadhu. Ravichandran was seen in the movie for about 5 to 6 scenes. paattum onnum sollikkiRaapla illai...

Will post the youtube link for the movie later.

http://www.youtube.com/user/lalithakannan111#p/u/108/vxh1ANBKYqc

saradhaa_sn
13th October 2010, 10:53 AM
happened to watch avaLukku nigar avaLE *ing Ravichandran, V.A. Niramala (triple roles), Kalyana Kumar, Shangmugasundaram, VKR, Major, Thengai, Manorama and many more...

The story line is similar to mayangugiRaaL oru maadhu. Ravichandran was seen in the movie for about 5 to 6 scenes. paattum onnum sollikkiRaapla illai...

Will post the youtube link for the movie later.

Thanks RC...

'அவளுக்கு நிகர் அவளே' திரைப்படம் வெண்ணிற ஆடை நிர்மலாவின் சொந்த தயாரிப்பு. (ஏற்கெனவே 'அவள்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்ததால் இப்படி ஒரு பெயர் வைத்தனர்). படத்தை 'பட்டு' இயக்கியிருந்தார். சங்கர் - கணேஷ் இசையமைத்ததாக நினைவு. ரவிச்சந்திரனுக்கு இதில் கெஸ்ட் ரோல் மாதிரி.

படம் முக்கால்வாசி தயாரிப்பில் இருக்கும்போது, இயக்குனருக்கும் தயாரிப்பாளர் நிர்மலாவுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டதால், படத்தை எப்படியோ முடித்து வெளியிட்டனர். படம் வெற்றியடையவில்லை.

Bhoori
21st October 2010, 06:42 AM
Ravichandran at Jaishankar's marriage - photo (Thanks to Kumudam) at http://awardakodukkaranga.wordpress.com/2010/10/21/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B7%E0%A E%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9% E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%A E%A3-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA/
_________________

RC
25th October 2010, 06:04 AM
watched rOshakkaari *ing Muthuraman, Ravichandran, KRVijaya, SVSubbiah, Manorama, Ramdass etc

maamanaarin soththu, paNam vandhavudan guNam maaRi thirundhum villaththanamaana paaththinraththil Ravichandran. Ravichandran had lot of scenes compared to the Hero Muthuraman.

http://www.youtube.com/user/thirishakumaran#p/u/93/qHUsoFO3W4A

tfmlover
21st November 2010, 09:21 AM
http://s775.photobucket.com/albums/yy40/TFML/V%20Kumar/V%20Kumar/

Ravichandran with K R Vijaya

Regards

saradhaa_sn
16th January 2011, 06:27 PM
[tscii:72b06e8cce]நான்கு சுவர்கள்

‘ஜேம்ஸ்பாண்ட்’ ஜெய்சங்கர், ‘ஸ்மார்ட் ஹீரோ’ ரவிச்சந்திரன் இணைந்து நடித்திருந்த, விரல்விட்டு எண்ணக்கூடிய படங்களில் இதுவும் ஒன்று. முழுக்க முழுக்க ஆக்ஷன் படமான இதற்கு கதை, வசனம் எழுதி இயக்கியவர் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் என்பதுதான் இன்னொரு ஆச்சரியம்.

நாடக மேடையிலிருந்து திரையுலகில் நுழைந்த காலம் தொட்டு, குடும்பக்கதைகளையே (அவற்றில் சீரியஸும் உண்டு, நகைச்சுவையும் உண்டு) இயக்கி வந்த கே.பி., முதன்முறையாக ஒரு ஆக்ஷன் படமாக இதை இயக்கினார். அதுமட்டுமல்லாது, அதுவரை கருப்புவெள்ளைப் படங்களிலேயே வெற்றிகளைக்குவித்து வந்த அவர் இயக்கிய முதல் வண்ணப்படமும் இதுதான். ஆனால் முழுக்க ஆக்ஷன் படமாக இல்லாது, அதில் செண்டிமெண்ட்டையும் புகுத்தியதால் படம் ஒருவித சொதப்பலாகப்போனது.

வழக்கம்போல ஸ்டுடியோ செட்களிலேயே அதுவரை முழம்போட்டு வந்த கே.பி., கிட்டத்தட்ட முக்கால்வாசிப்படத்தை வெளிப்புறங்களிலேயே எடுத்ததும் இப்படத்தில்தான். ஆக, இப்படம் பலவிதங்களில் கே.பி.க்கு பரீட்சாத்த முயற்சியாக ஆகிப்போனது.

இருவரது கைகளும் இணைத்து விலங்கிடப்பட்ட கைதிகளாக வரும் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் இருவரும் கோவாவில் இணைந்தே சுற்றுவதும், விலங்கிடப்பட்ட நிலையிலேயே தங்கள் காதலிகளோடு டூயட் பாடுவதுமாக கொஞ்சம் வித்தியாசமாகக் காட்ட முயற்சி செய்திருந்தனர். ஆனால் படத்தில் சௌகார் ஜானகி ஏற்றிருந்த கதாபாத்திரம் தான் ஓவர் செண்டிமெண்ட்டாக அமைந்து பார்ப்போர் பொறுமையை ரொம்பவே சோதித்து விட்டது.

1970-ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு, 71 துவக்கத்தில் வெளியான படம் இது. 1969-ல் 'இருகோடுகள்' படத்தின் பெருவெற்றிக்குப் பிறகு, கிட்டத்தட்ட எதிரொலி, நவக்கிரகம், காவியத்தலைவி, நான்கு சுவர்கள், நூற்றுக்கு நூறு ஆகிய ஐந்து படங்களை ஒருசேர ஒப்புக்கொண்டு இயக்கி வந்தார் கே.பாலச்சந்தர். அதனால் எல்லாவற்றிலுமே அவருக்கே உரித்தான முத்திரைக் காட்சிகள் ப்ஞ்சமாகிப்போகத் துவங்கின.

இதுபோக நவக்கிரகம், நான்கு சுவர்கள் இவ்விரண்டு படங்களையும் எப்படி உருவாக்கி வருகிறார் என்ற விவரங்களையும் குமுதம் வாரப்பத்திரிகையில் தொடராக எழுதிவந்தார். அதனால் இவ்விரண்டு படங்களைப்பற்றிய மக்களின் எதிர்பார்ப்பு அதிகமாகிப்போனது. குறிப்பாக நான்கு சுவர்கள் படத்தில், எண்ணெய் ஊற்றோ ஏதோவொன்று எப்படிப்பொங்கி வருகிறது என்பதைப்படமாக்கிய விதம் பற்றி அவர் சொல்லியிருந்த விதம் மக்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. எதிரொலி சரியாகப்போகாத நிலையில், ஆகஸ்ட் 15 அன்று வெளியான 'நவக்கிரகம்' தோல்வியைத் தழுவியது. அதோடு வெளியான ராமன் எத்தனை ராமனடி, திருமலை தென்குமரி ஆகியன வெற்றியடைந்தன. தேடிவந்த மாப்பிள்ளை சுமாராக ஓடியது.

அடுத்து தீபாவளிக்கு 'காவியத்தலைவி' ரிலீஸாகி வெற்றியடைந்தது. உடன் வெளியான சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள், சற்று முந்தி வெளியான எங்கள் தங்கம் என எல்லாமும் வெற்றியடைந்தன. மூன்று படங்கள் குறைந்துவிட்ட நிலையில் நான்கு சுவர்களை 71 பொங்கலுக்கு வெளியிட முயற்சி செய்தனர். ஆனால் தயாரிப்பில் ஏற்பட்ட தாமதத்தில், பிப்ரவரி 6 அன்று வெளியானது. 'கே.பி.யின் முதல் வண்ணப்படம், வித்தியாசமான கதை, கே.பி.இயக்கத்தில் முதல் ஆக்ஷன் படம், ஜெய்-ரவி என இரண்டு கதாநாயகர்கள், கோவாவில் வெளிப்புறப்படப்பிடிப்பு' என்றெல்லாம் ஓவர் எக்ஸ்பெக்டேஷனில் வந்ததால், மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு படம் அமையாமல் போகவே படம் தோல்வியடைந்தது.

இதற்கு அடுத்த மாதமே வெளியான 'நூற்றுக்கு நூறு' இயக்குனர் சிகரத்தின் வழக்கமான முத்திரைகளைத்தாங்கி வந்ததால் மக்களின் ஏகோபித்த ஆதரவைப்பெற்று வெற்றியடைந்தது. தனது வழி எதுவென்று 'நான்கு சுவர்கள்' தெளிவாகக்காட்டிவிட்டதால் மீண்டும் பழைய பாதையிலேயே புன்னகை, கண்ணா நலமா, வெள்ளி விழா, அரங்கேற்றம் என பயணிக்கத்துவங்கினார் இயக்குனர் சிகரம். (தான் இயக்கிய படங்களிலேயே தனக்குப்பிடிக்காத படங்களாக நான்கு சுவர்கள், பத்தாம் பசலி இரண்டையும் ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் பாலச்சந்தர்)

நான்கு சுவர்கள் படத்துக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. இசையமைத்திருந்தார். படத்தில் இரண்டு முறை இடம்பெறும் டூயட் பாடலான 'ஓ... மைனா... ஓ.. மைனா' பாடல் நன்கு பிரபலமடைந்தது. ஜெய்சங்கருக்காக டி.எம்.எஸ்ஸும், பின்னர் ரவிச்சந்திரனுக்காக எஸ்.பி.பி.யும் பாடியிருந்தனர். கதாநாயகியாக வாணிஸ்ரீ நடித்திருந்தார். ஜெய், ரவி இருவருமே ரொம்ப ஸ்மார்ட்டாக நடித்திருந்த இப்படம், இப்போது பார்த்தால் விரும்பக்கூடிய படமாக அமையக்கூடும்.
[/tscii:72b06e8cce]

RAGHAVENDRA
16th January 2011, 09:29 PM
நான்கு சுவர்கள் படத்தைப் பற்றிய தங்கள் அறிமுக பதிவு அந்தக் காலகட்டத்திற்கே அழைத்து சென்று விட்டது. சென்னை மிட்லண்ட் திரையரங்கில் அந்தப் படத்தைப் பார்த்தது. அதுவும் வெலிங்டனில் இரு துருவம் படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் சென்றோம். கடைசி நாள் வரை இருதுருவம் படம் கடைசி வகுப்பு கிட்டத்தட்ட நிறைந்து வந்தது. பாலச்சந்தரின் கலர் படம், ஜெய் ரவி இருவரும் இணைந்து நடித்த படம் என்ற எதிர்பார்ப்பை பொய்யாக்கி ஏமாற்றத்தைத் தந்தது என்றால் மிகையில்லை. இதில் மற்றொரு ஏமாற்றம், வாணிஸ்ரீக்கு செய்யப் பட்ட ஒப்பனை. மிகைப் படுத்தப் பட்ட ஒப்பனை, படத்தில் அவரை விகாரமாகத் தோற்ற மளித்து, அரங்கில் ஒரே கூச்சலும் கிண்டலும் கேலியும் நிறைந்திருந்தது. குறிப்பாக நினைத்தால் நான் வானம் சென்று பாடலை தப்பித் தவறிக் கூட காட்சியாக பார்க்கக் கூடாது என்று அன்றே நினைத்து விட்டேன். ஒரு ஆங்கிலப் படத்தின் பல காட்சிகள் இப்படத்தில் தென்பட்டன.

பத்தாம் பசலி நிச்சயமாக நல்ல படம். அதுவும் மிட்லண்ட் திரையரங்கில் தான் பார்த்தேன். நாகேஷின் நடிப்புக்காகவே பல முறை பார்க்க வேண்டிய படம். குறிப்பாக வி.குமாரின் இசையில் உருவான வெள்ளை மனம் கொண்ட பாடலும் நாகேஷ் பாடும் மற்றொரு பாடல் உணவுக் கூடையை சுமந்து கொண்டு பாடும் பாடல் இரண்டும் இனிமை.

நான்கு சுவர்கள் பாடல்கள்-

ஓ மைனா - டி.எம்.எஸ். குரலில் (http://www.123musiq.com/SOURCE/OLD%20SONGS/Ninaivil%20Nindravai/T%20M%20S%20Solo%20Duets/O%20MAINA.mp3)

ஓ மைனா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் (http://www.jointscene.com/php/play.php?songid_list=25189)

நினைத்தால் நான் வானம் சென்று - எஸ்.பி.பி. சுசீலா குரலில் (http://www.jointscene.com/php/play.php?songid_list=25188)

மற்றொரு பாடல் ஈஸ்வரியின் குரலில் உள்ளது.

saradhaa_sn
17th January 2011, 02:35 PM
[tscii:dc40fff679]டியர் ராகவேந்தர்,

'நான்கு சுவர்கள்' பதிவுக்கான மறுமொழிக்கும், பாடல் இணைப்புகளுக்கும் மிக்க நன்றி.

அந்த ஆண்டில் ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பல படங்கள், மக்கள் மத்தியில் சிறிது ஏமாற்றமளித்ததால் வெற்றிவாய்ப்பை நழுவவிட்டன. அவற்றில் நடிகர்திலகத்தின் 'இரு துருவங்கள்', மக்கள் திலகத்தின் 'நீரும் நெருப்பும்', ஏ.பி.என்.னின் 'கண்காட்சி', கே.பி.யின் 'நான்கு சுவர்கள்', ஏ.வி.எம்.மின் 'அனாதை ஆனந்தன்', சாவித்திரியின் 'பிராப்தம்', ஸ்ரீதரின் 'அவளுக்கென்று ஓர் மனம்', புட்டண்ணாவின் 'சுடரும் சூறாவளியும்' போன்றவையும் அடங்கும்.

அதே சமயம் ஸ்ரீதரின் 'உத்தரவின்றி உள்ளே வா', கோவை செழியனின் 'குமரிக்கோட்டம்', கே.எஸ்.ஜி.யின் 'குலமா குணமா', ராம்குமார் பிலிம்ஸ் 'சுமதி என் சுந்தரி', கே.பி.யின் 'நூற்றுக்கு நூறு', மல்லியம் ராஜகோபாலின் 'சவாலே சமாளி', ஆர்.எம்.வீரப்பனின் 'ரிக்ஷாக்காரன்', ஏ.சி.டி.யின் 'பாபு', மதுரை திருமாறனின் 'சூதாட்டம்' ஆகியன பெரும் வெற்றி பெற்றன.

பொங்கலுக்கே வந்திருக்க வேண்டிய சோ-வின் 'முகம்மது பின் துக்ளக்', சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் காரணமாக சென்ஸாரால் நிறுத்தி வைக்கப்பட்டு, தேர்தல் முடிந்தபின் வெளியானது.

பிப்ரவரி 6 அன்று, மிட்லண்ட், மகாராணி, சயானி அரங்குகளில் நான்கு சுவர்கள் வெளியானது. படம் சரியாகப்போகாததால் அடுத்த மாதமே (மார்ச் 18) கே.பி.யின் 'நூற்றுக்கு நூறு' படம் கெயிட்டி, பாண்டியன் (மகாராஜா), மேகலா, சீனிவாசா ஆகியவற்றில் வெளியானது. இதனிடையே மகாராணி, சயானியில் 'நான்கு சுவர்கள்' எடுக்க்ப்பட்டு, குலமா குணமா வெளியானது (மற்ற அரங்குகள் பிளாசா, லிபர்ட்டி). மிட்லண்டில் ஸ்ரீதரின் 'அவளுக்கென்று ஓர் மனம்' ரிலீஸானது.

வா ராஜா வா, திருமலை தென்குமரி படங்களின் வெற்றியால் உந்தப்பட்டு ஏ.பி.என்., அதே பாணியில் குறைந்த சம்பள நடிகர்களை வைத்து 'கண்காட்சி' படம் எடுத்து கையைச் சுட்டுக்கொண்டபின், தன் பழைய புராணப்பட பாதையில் இறங்கி, உடன் 'அகத்தியர்' பட ஷூட்டிங் வேலையைத்துவக்கினார்.

நடிகை வாணிஸ்ரீக்கு, ‘நான்கு சுவர்கள்’ ஏமாற்றியபோதிலும், இந்த ஆண்டில் அவருக்கு வேறு சில நல்ல படங்கள் வந்தன. குலமா குணமா படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அவர், 'இருளும் ஒளியும்' படத்தில் மாறுபட்ட இரட்டை வேடங்களில் தூள் கிளப்பி, 1971-ம் ஆண்டின் சிறந்த நடிகை என்ற விருதைத் தட்டிச்சென்றார். (உண்மையில் 'சூதாட்டம்' மற்றும் 'சபதம்' படத்துக்காக கே.ஆர்.விஜயா எதிர்பார்த்திருந்தார்). நடிகர்திலகத்தின் சிறந்த ஜோடிகளில் ஒருவரான கே.ஆர்.விஜயாவுக்கு இந்த ஆண்டில் (1971) நடிகர்திலகத்தின் பத்து படங்கள் வெளியாகியும் கூட அவருடன் ஒரு படம்கூட வரவில்லை என்பது கூடுதல் சுவாரஸ்யம். மற்றபடி அவரது பழம்பெரும் ஜோடிகளான சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி, ஜெயலலிதா ஆகியோருடன் நிர்மலா, விஜயஸ்ரீ ஆகியோரும் இவ்வாண்டு ஜோடி சேர்ந்தனர்.

நடிகர்திலகத்தின் 150-வது படமான 'சவாலே சமாளி'யும், மக்கள்திலகத்தின் 'ரிக்ஷாக்காரனும்' மற்றெல்லாப்படங்களையும் பின் தள்ளி, வசூலில் முந்தி நின்றன, என்றபோதிலும் அந்த ஆண்டின் ஒரே வெள்ளிவிழாப்படமாக கே.எஸ்.ஜி.யின் 'ஆதிபராசக்தி' அமைந்தது. (மக்கள் கலைஞரின் 'வீட்டுக்கு ஒரு பிள்ளை' பற்றி தனியே எழுத இருப்பதால், இங்கு குறிப்பிட வேண்டியதில்லை).

குறிப்பிட்ட அந்த ஆண்டுகளில் இந்திப்படங்களான 'ஆராதனா', 'அந்தாஸ்', 'கட்டி பதங்', 'சாவன் பாதன்', 'சச்சா ஜுட்டா', 'கேரவன்', 'ஷர்மிலீ' போன்ற படங்கள் சூறாவளியாய் சென்னை மற்றும் தமிழக முக்கிய நகரங்களில் சுழன்றடித்துக் கொண்டிருந்த நேரத்தில் தமிழ்ப்படங்களின் இந்த வெற்றிகள் உண்மையில் சந்தோஷப்படத் தக்கவையாக அமைந்தன என்பதில் ஐயமில்லை.
[/tscii:dc40fff679]

saradhaa_sn
25th April 2011, 06:40 PM
Thanks to 'tfmlover' for the ad...

saradhaa_sn
29th April 2011, 04:06 PM
ரவிச்சந்திரன், பாரதி, மனோகர், மேஜர் சுந்தர்ராஜன், நாகேஷ் நடித்த டி.என்.பாலுவின் சஸ்பென்ஸ் த்ரில்லர் 'மீண்டும் வாழ்வேன்' தற்போது நெடுந்தகடு வடிவில் வெளியிடப்பட்டுள்ளது...

mr_karthik
5th May 2011, 06:54 PM
The related original post has been disappeared.

adiram
30th May 2011, 04:22 PM
after reading the review of moondrezhuthu film, i want to watch it.

any links available in net?. or any dvd / vcd available in sales?.

mr_karthik
23rd July 2011, 03:11 PM
Chitralaya Movies...

'Uththaravindri uLLE vA' .

RC
24th July 2011, 05:53 PM
நடிகர் ரவிச்சந்திரன் கவலைக்கிடம்: டாக்டர்கள் தீவிர சிகிச்சை

http://dinamani.com/Images/article/2011/7/24/24ravichandran.jpg


சென்னை, ஜூலை.24: மி்கவும் கவலைக்கிடமாக உள்ள நடிகர் ரவிச்சந்திரனின் உடலுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

காதலிக்க நேரமில்லை படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் ரவிச்சந்திரன். ஏராளமான படங்களில் இவர் நடித்துள்ளார்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நடிகர் ரவிச்சந்திரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கல்லீரல், நுரையீரல் செயல்பாடும் பாதிக்கப்பட்டது. இதனால் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது.

இதையடுத்து அவர் தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் கோமா நிலையில் உள்ளார். 5 நாட்கள் ஆகியும் அவருக்கு உணர்வு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு செயற்கை சுவாச கருவி மூலம் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவிலேயே உள்ளார்.

இன்று அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததாகவும், அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

kalai nilavu ரவிச்சந்திரன் pUrana gunamadaiya iRaivanai vENdugiREn. :bow:

RAGHAVENDRA
25th July 2011, 09:40 PM
http://www.indiangossips.com/wp-content/uploads/2011/07/Ravichandran-150x150.jpg

விதி தன் வேலையைக் காட்டி விட்டது. தமிழ்த்திரை உலகில் பாகவதர்-சின்னப்பா, எம்.ஜி.ஆர்.-சிவாஜி இவர்களுக்குப் பிறகு புதிய தலைமுறை கதாநாயகர்களாக வலம் வந்த ஜெய்சங்கர்-ரவிச்சந்திரன் சகாப்தம் முடிந்து விட்டது. இன்று இரவு கலை நிலவு என அன்போடு அழைக்கப்பட்ட ரவிச்சந்திரன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி, எங்களைப் போன்ற பழைய தலைமுறை ரசிகர்கள் உள்ளத்தில் மாறாத வடுவை ஏற்படுத்தி விட்டது. திரு ரவிச்சந்திரன் அவர்களின் பங்களிப்பு தமிழ்த்திரையுலகில் தனித்துவம் வாய்ந்தது. அவருடைய பாணி தனித்துவம் பெற்றது. பல ரசிகர்களை ஈர்த்தவர் ரவிச்சந்திரன். அவரைப் பற்றிப் பல விஷயங்களை சொல்ல எண்ணினாலும் இந்த சூழ்நிலையில் வார்த்தை வரவில்லை. பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதலாம்.

அவர் நினைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜஸ்டிஸ் விஸ்வநாதன் திரைப் படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் உள்ளம் உருக்கும் பாடல்


http://www.youtube.com/watch?v=FE5Wqz-EqPc

pammalar
26th July 2011, 02:27 AM
'கலை நிலவு', 'ஸ்மார்ட் ஹீரோ' என்கின்ற அடைமொழிகளுடன் திரையுலகில் 1960களிலும், 1970களிலும் மிகப் பெரிய வலம் வந்த நடிகர் ரவிச்சந்திரன் அவர்களின் மறைவு கலையுலகுக்கு ஒரு பேரிழப்பு. நமது நடிகர் திலகத்துடன் மோட்டார் சுந்தரம் பிள்ளை, கவரிமான் ஆகிய திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ள ரவிச்சந்திரன் ஒரு திரையுலக சாதனையாளர். அவரது மறைவுக்கு நமது அஞ்சலி.

அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர், நண்பர்களுக்கும், கலையுலகைச் சேர்ந்தவர்களுக்கும், ரசிகர்களுக்கும், சகோதரி சாரதா முதற்கொண்ட ரசிகைகளுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சுவோம்.

பம்மல் ஆர். சுவாமிநாதன்.

mr_karthik
26th July 2011, 10:03 AM
திரு. ரவிச்சந்திரன் அவர்களின் மறைவுச்செய்தி மனதை துக்கத்தில் ஆழ்த்தியது. அறுபதுகளிலும் எழுபதுகளின் துவக்கத்திலும் கதாநாயகனாக வலம் வந்த ரவிச்சந்திரன் நடித்த காதலிக்க நேரமில்லை, நான், குமரிப்பெண், மூன்றெழுத்து, அதே கண்கள், உத்தரவின்றி உள்ளே வா போன்ற பல படங்கள் இன்றைக்கும் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படும் படங்களாக இருக்கின்றன. அவர் நடித்த அத்திரைக் காவியங்களே அவரது நினைவைப்போற்றும் நினவுச்சின்னங்களாக விளங்கும்.

அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம்.

saradhaa_sn
26th July 2011, 11:14 AM
ரவிச்சந்திரன் காலமானார்.

தமிழ்த்திரையுலகில் ஒரு காலத்தில் ஆணழகன் என்றும், கலர்க்கதாநாயகன் என்றும், வெள்ளிவிழா நாயகன் என்றும் ரசிகர்களால் அன்போடு ரசித்துப்போற்றப்பட்ட திரு ரவிச்சந்திரன் அவர்கள் நேற்று மாலை காலமானார் என்ற செய்தி அதிர்ச்சியைத் தந்தது.

என்னுடைய கல்லூரிப்பருவத்தில் அவருடன் சந்தித்துப்பேசிய பசுமையான நினைவுகள் நினைவுக்கு வந்து நெஞ்சை அழுத்துகின்றன. அதுவரை துடிப்பான கதாநாயகன் என்று மட்டுமே அறிந்திருந்த எனக்கு, அவர் ஒரு பண்பான மனிதரும் கூட என்பதை உணர்த்திய சந்திப்பு அது. (இத்திரியின் முதல் பக்கத்தில் வெளியாகியிருக்கிறது).

அவரது மனைவி திருமதி விமலா ரவிச்சந்திரன் ஒரு பொறுமைக்கடல் என்று சொல்லலாம். ரவியைவிட எட்டு வயது இளையவர். கதாநாயகன் வாய்ப்புக்குறைந்து, ரவி வில்லன் வேடத்துக்கு மாறுவதற்கு இடைப்பட்ட காலத்தில் பணக்கஷ்ட்டத்தில் தவித்தபோது (பனக்கஷ்ட்டத்துக்குக் காரணம் ரவி இரண்டு சொந்தப்படங்கள் எடுத்தது) குடும்பத்தைக்கரை சேர்க்க விமலாதான் திருச்சியில் தையற்கலைஞராக வேலை செய்து பிள்ளைகளைப்படிக்க வைத்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் ஜெயா டிவியின் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியின்போது ரவி, தன் குடும்பத்தினரை அறிமுகப்படுத்தினார். மகன்கள், மகள்கள் யாவரும் திருமணம் ஆகி நல்ல நிலைமையில் உள்ளனர். மகன் நடிகர் அம்சவிருத்தன் மட்டும் திரையுலகில் போதிய வாய்ப்பின்றி வேறு தொழிலில் இறங்கி விட்டார்.

ரவிச்சந்திரன் தமிழக அரசு வழங்கும் 'கலைமாமணி' விருதும், தமிழக அரசு வழங்கும் 'நடிகர்திலகம் சிவாஜி விருதும்' பெற்றுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிறுநீரகம் செயலிழந்ததால் மாற்று சிறுநீரகம் பொருத்தும் நிலையையும் கடந்து விட்டதால், சுய நினைவின்றி இருந்தவர் நேற்று மாலை காலமானார்.

எஞ்சியிருந்த பழைய கலைஞர்களில் ஒருவர் மறைந்துவிட்டார். முன்பு வில்லன் நடிகர் திரு ஆர்.எஸ்.மனோகர் மறைந்தபோது இறுதி அஞ்சலி செலுத்த வந்த ரவிச்சந்திரன், 'என் நண்பர்கள் ஒவ்வொருத்தராக போய்க்கிட்டிருக்காங்க. நான் இன்னும் எவ்வளவு நாள் இருக்கப்போகிறேன்?' என்று கண் கலங்கினார். இப்போது அவரும் தன் நண்பர்களைத்தேடி இறுதிப்பயணம் மேற்கொண்டு விட்டார்.

அவரது மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைக் காணிக்கையாக்குகிறோம்.

saradhaa_sn
27th July 2011, 06:57 PM
ரவிச்சந்திரன் உடல் தகனம்

நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமான ரவிச்சந்திரனின் உடல் நேற்று மாலை ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு சென்னை பெஸன்ட் நகர் மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. ஊர்வலத்தில் சில திரையுலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் கலந்துகொண்டனர். அவர் உடல், வீட்டிலிருந்து எடுத்துச்செல்லப்பட்டபோது அவரது மனைவியும், உறவினர்களும் கதறி அழுதது நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது.

அவரது மகன் நடிகர் அம்சவிருத்தன் தொலைக்காட்சியில் பேசும்போது, "அப்பா இறந்து விட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. அவர் இப்போதும் எங்களுடன்தான் இருக்கிறார். எப்போதும் இருப்பார். எங்கள் இதயங்களிலும் ரசிகர்களின் இதயங்களிலும் அவர் என்றும் நிலைத்திருப்பார்" என்று கூறினார்.

முன்னதாக நடிகர்கள் சிவகுமார், விஜயகுமார், சந்திரசேகர், (சங்கர்) கணேஷ் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் ரவிச்சந்திரன் வீட்டுக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். ரவிச்சந்திரனின் முதல் திரைப்பட ஜோடியான திருமதி ராஜஸ்ரீ, ரவிச்சந்திரனின் உடலைப்பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்.

ரவியுடன் பல வெற்றிப்படங்களில் நடித்தவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்தார். தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி சார்பில் முன்னாள் துணை முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் நேரில் வந்து ரவிச்சந்திரன் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

RC
30th July 2011, 04:37 AM
http://www.indiaglitz.com/channels/tamil/gallery/Events/28473.html

gkrishna
3rd August 2011, 05:30 PM
கலை நிலவின் மறைவு நிச்சயமாக திரை உலகிற்கு ஒரு மாபெரும் பேரிழப்பு தான் சாரதா மேடம் கூறிய பிறகு தான் தெரிந்தது அவருடைய மனவி திருச்சியில் தையல் கலைஞர் ஆக இருந்தார் என்பது எனக்கு கிடைத்த தவறான தகவல் அவர் சீதாலக்ஷ்மி கல்லூரியில் விரிவுரையாளர் ஆக இருந்தார் என்று . எதனால் அவர் நடிகை ஷீலாவை இரண்டவது திருமணம் செய்தார் என்று தெரியவில்லை பிறகு ஏன் அவரை விட்டு பிரிந்தார் என்றும் தெரியவில்லை

பழைய நடிகர்களில் திரு ஸ்ரீகாந்த் மற்றும் சிவகுமார் போன்றவர்கள் தான் இருக்கிறார்கள் என்று நினேகிறேன் நம் மனம் கவர்ந்த சில நடிகர்கள் ஹனுமார் போல் சிரஞ்சீவி ஆக இருக்கமட்டர்களா என்று ஆசை ஆக உள்ளது

rajeshkrv
5th August 2011, 04:57 AM
Ninavil Nindraval

http://www.tamilflix.net/2011/08/03/ninaivil-nindraval-tamil-movie-watch-online-2/

saradhaa_sn
17th September 2011, 06:01 PM
விரைவில் இந்த திரி மீண்டும் புதிய விவரங்களுடன் தொடர இருக்கிறது....

நண்பர்கள் தங்கள் பதிவுகளை தொடர்ந்து இடுமாறு கேட்டுக்கொள்கிறோம்....

pammalar
12th December 2011, 09:04 AM
கலை நிலவின் நினைவலைகள் : 1

ஸ்மார்ட் ஹீரோ நடிகர் ரவிசந்திரனின் கிடைத்தற்கரிய அழகிய வண்ணப்புகைப்படம்
'பேசும் படம்' இதழிலிருந்து...

http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Ravi1-1.jpg

தொடரும்....

அன்புடன்,
பம்மலார்.

pammalar
13th December 2011, 11:58 PM
கலை நிலவின் நினைவலைகள் : 2

இதயக்கமலம் வெளியான தேதி : 27.8.1965

முதல் வெளியீட்டு விளம்பரம் : வெண்திரை : செப்டம்பர் 1965
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Ravi2-1.jpg

பட விமர்சனம் : வெண்திரை : செப்டம்பர் 1965
http://i1110.photobucket.com/albums/h452/pammalaar/Ravi3-1.jpg

குறிப்பு:
"இதயக்கமலம்", சென்னை 'சித்ரா' மற்றும் 'மஹாராணி' அரங்குகளில் முறையே ஒவ்வொரு அரங்கிலும் 105 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது. 'உமா'வில் 84 நாட்களும், 'ராம்' திரையரங்கில் 57 நாட்களும் மிக வெற்றிகரமாக ஓடியது. மதுரை 'நியூசினிமா'வில் 84 நாட்களும் மற்றும் கணிசமான ஊர்களில் 50 நாட்களைக் கடந்தும் ஓடி 'சிறந்த வெற்றிப்படம்' என்கின்ற அந்தஸ்தை அடைந்தது.

தொடரும்....

அன்புடன்,
பம்மலார்.

mr_karthik
14th December 2011, 05:30 PM
அன்புள்ள பம்மலார் சார்,

பொதுவாக Tamil Films - Classics பகுதியில் புதிய பதிவுகள் எப்போதாவது இடம்பெறுவதால் அடிக்கடி விஸிட் செய்வதில்லை. ஆனால் இன்று காலை நமது பம்மலார் புதிய் பதிவு இட்டிருப்பதாகப்பார்த்ததும் உற்சாகம் மேலிட திறந்து பார்த்தபோது, நிஜமாகவே உற்சாகமளிக்கும் விதமாக...

'பேசும் படம்' இதழில் வெளியான, ரவிச்சந்திரன் அவர்களின் அழகிய இளமைப்பருவ வண்ணப்புகைப்படம்,

'இதயக்கமலம்' திரைப்படத்தின் கண்ணைக்கவரும் விளம்பர ஆவணம்,

'இதயக்கமலம்' திரைப்படத்திற்கான விமர்சனப் பக்கம், மற்றும்

'இதயக்கமலம்' திரைப்படம் ஓட்டத்தில் செய்த சாதனை பற்றிய பாக்ஸ் ஆபீஸ் விவரம் என்று

வித விதமாக அள்ளியளித்து மகிழ வைத்து விட்டீர்கள்.

நடிகர்திலகத்தின் சாதனைகள் மட்டுமல்லாது, சாதனை படைத்த மற்ற கலைஞர்களின் ஆவணங்களையும் பாகுபாடின்றி வெளியிட்டு வரும் தங்களின் பணி போற்றற்குரியது. (அப்படி பாகுபாடின்றி செயல்படுவதால்தான், நடிகர்திலகத்தின் திரியில் மக்கள் திலகத்தின் 'நம்நாடு' விளம்பரத்தை இடம்பெறச்செய்தீர்கள்).

தங்களின் தூய பணி தொடர வாழ்த்துக்கள்.

RAGHAVENDRA
15th December 2011, 11:12 PM
டியர் பம்மலார்,
எங்கள் இதயத்தில் கமலாசனம் போட்டு அமர்ந்து கொண்டு தாங்கள் ஆட்டுவித்தால் நாங்கள் ஆடாமலா இருப்போம். சும்மா ஆடிட்டம்ல..

சூப்பரோ சூப்பர்...ரவிச்சந்திரனின் திரையுலக அத்தியாயத்தில் முதல் இடம் பெற்ற படம் இதயகமலம். சித்ரா திரையரங்கில் நான் சிறுவனாக இருந்த போது பார்த்தது. அதற்குப் பிறகு நீ................ண்................ட நாட்களுக்குப் பின்னர் சமீபத்தில் ஒளித்தகடு வெளிவந்தது. இருந்தாலும் சித்ரா திரையரங்கின் பெரிய திரையில் அந்தப் படத்தைப் பார்த்த உவகை இதில் கிட்டவில்லை என்பது உண்மை. குறிப்பாக மலர்கள் நனைந்தன பனியாலே பாடலின் போது திரையரங்கம் முழுவதும் அப்படியே மக்கள் சொக்கி கையை சொடுக்கியும் தாளம் இட்டும் ரசித்தது இன்னும் என் நெஞ்சில் நினிவில் உள்ளது. அந்த உணர்வை நீங்களும் அனுபவிக்க முயலுங்களேன். இதோ அந்தப் பாடல்


http://youtu.be/2colXTNhurQ

vasudevan31355
16th December 2011, 09:10 PM
'கலைநிலவு' ரவிச்சந்திரன் அவர்கள் ஒரு கலகலப்பான நடிகர் என்ற வகையில் என்னை கவர்ந்தவர். அவர் படங்கள் எல்லாமே ஜாலியான பொழுதுபோக்குப் படங்களாக இருந்ததோடு அவர் நடித்த படங்களின் பாடல்கள் அத்தனையும் தேன் சொட்டும் ரகமாகவே இருந்தது குறிப்பிடத் தக்கது. அவருக்கென்று ஒரு பாணியைக் கடைப்பிடித்து அதில் நல்ல வெற்றி அடைந்தார் என்றால் அது மிகை இல்லை. முதன் முதலாக இத்திரியில் பங்கு கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது.

விரைவில் 'கலைநிலவு' ரவிச்சந்திரன் அவர்கள் நடித்த 'மதறாஸ் TO பாண்டிச்சேரி' படத்தைப் பற்றிய ஆய்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். தங்களது மேலான ஆதரவை எதிர்நோக்குகிறேன்.

அழகான ரவிச்சந்திரன் அவர்களின் "அதே கண்கள்" திரைப்படத்தின் நிழற்படங்கள் சில இப்போது பார்த்து மகிழலாம்.

http://www.shotpix.com/images/67350650986745970048.png

http://www.tamilpix.com/uploads/176ac6ed9e.bmp

http://123tamilforum.com/imgcache2/2011/01/34586464963929338213-1.png

அன்புடன்
வாசுதேவன்.

vasudevan31355
17th December 2011, 10:46 AM
'கலைநிலவு' ரவிச்சந்திரன் அவர்களின்'மதறாஸ் TO பாண்டிச்சேரி' பட ஸ்பெஷல் ஆய்வுக்கட்டுரை.

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQIxMgjC2yi7Kg7N5QloGowqsO394AG4 fyNZL9_qRUiNrPSSrNxopGHj7mq

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQHXn_siebsw_-rwi7MZsE54GgPda9DKc6L_C1B2o7Gf0aCG9xKVrWFuEwC

படம் வெளியான ஆண்டு: 16-12-1966.
இசை: T.K.ராமமூர்த்தி.
ஒளிப்பதிவு: G.விட்டால் ராவ்.
சண்டைப் பயிற்சி: K.சேதுமாதவன்.
நடன அமைப்பு: சின்னி-சம்பத்
இயக்கம்: திருமலை-மகாலிங்கம்.
தயாரிப்பு: ஆதிநாராயணன்.
பேனர் : விவிதபாரதி

ரவிச்சந்திரன் அவர்களின் 'காதலிக்க நேரமில்லை' நகைச்சுவைப் பட லிஸ்டில் சேரும் மெகா காமெடி மூவி 'மதறாஸ் TO பாண்டிச்சேரி' பாண்டிச்சேரி. பரவலாக எல்லோருக்குமே நன்றாகத் தெரிந்த படம். இன்னும் சொல்லப் போனால் இன்றைய தலைமுறை கூட பார்த்து வயிறு குலுங்கச் சிரிக்கும் வண்ணம் எடுக்கப்பட்ட எவர்க்ரீன் மூவி என்று கூட இதைச் சொல்வேன்.

கதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை. சினிமா நடிகையாக ஆசைப்பட்டு தன் நகைகள் மற்றும் பணத்தோடு கயவன் ஒருவன் பேச்சை நம்பி வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறாள் ஒரு பெண். இத்தனைக்கும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள் அவள். வீட்டை விட்டு வெளியேறியதும்தான் புரிகிறது தான் நம்பி வந்த ஆள் ஒரு அயோக்கியன் என்று. எனவே அவனிடமிருந்து தப்பி மெட்ராஸிலிருந்து பாண்டிச்சேரி போகும் ஒரு பஸ்ஸில் ஏறி விடுகிறாள். ஏற்கனவே அறிமுகமான நம் ஹீரோ ரவி பஸ்ஸில் இருக்க பின் அவளுடைய பாதுகாப்புக்குக் கேட்கணுமா?... அவளைக் கொல்ல ஒரு அடியாளை அவள் நம்பி வந்த கயவன் பஸ்ஸில் அனுப்ப அவனிடமிருந்தும், அந்த வில்லனிடமிருந்தும் அவளை ரவி காப்பாற்றி அவளுடைய சினிமா ஆசையினால் வந்த சோதனைகளையும், அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் அவளுக்கு உணர்த்தி அவளைக் கைப்பிடிப்பதே கதை.

இடையில் பஸ் கண்டக்டராக நாகேஷும், டிரைவராக ஏ.கருணாநிதியும், பயணிகளாக மனோரமா, ஏ.வீரப்பன், கரிக்கோல் ராஜ், நம்பிராஜன், 'பக்கோடா' காதர்' (உலகப் புகழ் பெற்ற இப்பட்டம் காதருக்கு இப்படத்தின் மூலமாகத்தான் வந்தது), பழம்பெரும் நகைச்சுவை நடிகைகள் சி.டி ராஜகாந்தம், அங்கமுத்து போன்ற மாபெரும் நகைச்சுவைப் பட்டாளமும் பஸ்ஸில் செய்யும் அட்டகாசங்கள் படத்தின் பெரும்பான்மையை ஆக்கிரமிப்பு செய்து படம் பார்ப்பவர்களின் வயிற்றை பதம் பார்த்தது. வில்லனாக 'கள்ளபார்ட்' நடராஜனும், சினிமா நடிகை ஆக வேண்டும் என்ற ஆசை கொண்ட ஹீரோயினாக கன்னட நடிகை கல்பனாவும் ('கட்டிலா தொட்டிலா' திரைப்படத்தில் ஜெமினி மற்றும் பானுமதியின் மகளாக நடித்திருப்பார். 'கன்னடத்துப் பைங்கிளி' சரோஜாதேவியை தோற்றத்தில் ஞாபகப்படுத்துவார்) நடித்திருந்தார்கள்.

ஹிந்தியில் வெற்றி பெற்ற 'பாம்பே டு கோவா' என்ற படத்தின் தழுவல் தான் இந்தப் படம் என்ற போதிலும் தழுவல் என்று நம்ப முடியாத வகையில் நகைச்சுவை நடிகர்கள் படத்தைத் தூக்கி நிறுத்தி இருந்தார்கள். ஹிந்தியில் ரவி ரோலை அமிதாப் பச்சனும் (ஆரம்பகால அமிதாப் பச்சன் 'வெட வெட' வென படு ஒல்லியாக ஆனால் உற்சாகமாக நடித்திருப்பார்) கல்பனா ரோலை அருணா ராணியும் செய்திருந்தார்கள்.

படம் ஆரம்பித்து ஒரு முக்கால் மணிநேரம் தவிர மீதி படம் முழுதும் ஓடும் பஸ்சிலேயே முடிந்துவிட (நிச்சயமாக தயாரிப்பாளருக்கும் இயக்குனர்களுக்கும் மகா துணிச்சல் தான்) ஆனால் சலிப்புத்தட்டாமல் பக்கா காமெடியுடன் படம் நகர்வதை பாராட்டத்தான் வேண்டும்.

ஓடும் பஸ்ஸில் பாம்பாட்டி ஒருவனின் கூடையிலிருந்து பாம்பு வெளியேறி விட, பஸ்ஸில் உள்ள அத்தனை பெரும் "குய்யோ முய்யோ" என்று அலற, அதைப் பார்த்து டிரைவர் கருணாநிதி கேலி செய்ய, கடைசியில் பாம்பு டிரைவர் ஓட்டும் ஸ்டியரிங்கின் மேல் சுற்றிக்கொண்டு களிநடம் புரிய, அதுவரை பயணிகளைக் கிண்டல் அடித்துக் கொண்டிருந்த கருணாநிதி பாம்பைப் பார்த்து "பாம்.. பாம்".. என்று வார்த்தை வெளிவராமல் வாயால் ஹாரன் அடிக்க, பாம்பாட்டி "அது ஒண்ணும் செய்யாது சாமி...கொழந்த மாதிரி" என்று பாம்பை லாவகமாகப் பிடித்துக் கொண்டு பாம்பைப் பார்த்து "அய்யாவுக்கு ஒரு முத்தம் கொடுடா" என்று கருணாநிதிக்கு மேலும் கிலி கிளப்ப ஏக களேபரம்தான்.

பஸ் தகர டப்பா மாதிரி ஊர்ந்து கொண்டிருக்க, ரோடு சைடு ஓரத்திலிருந்து நான்கைந்து பேர் ஓடிவர, நாகேஷ் வருவது பயணிகள்தான் என்று வண்டியை விசில் அடித்து நிறுத்த, ஓடிவந்த நபர்கள் பஸ் நகர்ந்ததும் பஸ்ஸில் ஏறாமல் ரோடிற்கு அடுத்த சைடில் வேறு வேலையாய் ஓடும் போது சிரிக்காதவர்களும் இருக்க முடியுமோ?..

பஸ்ஸில் அருகில் இருக்கும் நபர் பக்கோடா பொட்டலம் பிரித்து சாப்பிட, மனோரமாவின் மகன் காதர் அதைப் பார்த்து விட்டு "அம்மா பக்கோடா" என்று இடைவிடாமல் கத்த ஆரம்பிக்க, அவமானம் தாங்காமல் காதரின் வாயை மனோரமா துணியால் அடைக்க, விவரம் தெரியாத நாகேஷ் பரிதாபப் பட்டு துணியை எடுத்துவிட, மறுகணமே காதர் "அம்மா பக்கோடா" என்று ஜெபம் செய்ய ஆரம்பிக்க, மறுபடி நாகேஷே காதர் வாயில் துணியை வைத்து அடைப்பது உம்மணாம் மூஞ்சிகளையும் உற்சாகப் படுத்தி வயிறு வலிக்கச் செய்து விடும். (காதர் 'பக்கோடா' காதர் ஆன வரலாறு இதுதான். நிறைய நடிகர் திலகத்தின் படங்களில் காதர் இருப்பதைக் காணலாம். குறிப்பாக ராமன் எத்தனை ராமனடியும், பட்டிக்காடா பட்டணமாவும்)

இது போன்ற ஏராளமான நகைச்சுவைத் தோரணங்கள் படம் நெடுகிலும் வந்து நம்மை மகிழ்விப்பது நிஜம்.

சரி.. நம் ஹீரோவிடம் வருவோம்.. ரவி தன் ரோலை அழகாகவே செய்திருப்பார். ஓட்டலில் கல்பனாவை வெறுப்பேற்ற ஓட்டலின் மியூசிக் ட்ரூப்பிடம் துண்டுச் சீட்டுக் கொடுத்து அந்தத் தாளத்திற்கு ஏற்றவாறு நடனம் ஆடுவது ஜோர். பஸ்ஸில் கல்பனாவுடன் பழகுவதும், அட்வைஸ் செய்வதும் எதிர்களுக்கு தன் ஸ்டைலில் கும்மாங்குத்து கொடுப்பதும் நம்மை ரசிக்கவே வைத்தன. (அந்த லேசான தொட்டிக்கால் அவருக்கு தனி அழகுதான்).

கல்பனாவும் சினிமா நடிகை ஆக வேண்டும் என்ற வெறித்தனத்தை நன்றாகவே பிரதிபலித்திருப்பார். நாகேஷ், கருணாநிதி கேட்கவே வேண்டாம்...படத்தின் தூண்களே அவர்கள்தாம். (பஸ்ஸில் படிக்கட்டில் நின்றுகொண்டு நடிகை சிவகாமியை 'சைட்' அடித்துக் கொண்டே வரும் நாகேஷ் மெய்மறந்து ஒரு கட்டத்தில் பஸ்ஸிலிருந்து விழுந்து விட, பஸ் டிரைவர் கருணாநிதி அதைக் கவனியாமல் பஸ்ஸை நிறுத்தாமல் ஓட்டிச் செல்ல, சிவகாமி அதிர்ந்து பஸ்ஸை நிறுத்தச் சொல்லிக் குரல் கொடுக்க, கருணாநிதி அதற்கு கொஞ்சமுமும் பதட்டப் படாமல் "ஏம்மா சும்மா கத்தற... பஸ்ஸு இரும்பு மாதிரி...பய காந்தம் மாதிரி...வந்து ஒட்டிக்குவான் பாரு" என்று சொல்வதற்கேற்ப நாகேஷும் ஓடிவந்து பஸ்ஸில் தொற்றிக்கொள்ளும் ஒரு காட்சியே இருவருக்கும் போதும்)

பஸ் பிரேக் டவுன் ஆகி நின்றதும் கொஞ்சமும் பயணிகளைப் பற்றிக் கவலைப்படாமல் ரோடில் அமர்ந்து கொண்டு இருவரும் ஆடு புலி ஆட்டம் ஆடுவது, பஸ்ஸிலிருந்து வெளியே பறந்து சென்றுவிட்ட கோழியைப் பிடிக்க இருவரும் படாத பாடுபடுவது என்று கருணாநிதியும், நாகேஷும் அடிக்கும் கொட்டங்கள் சொல்லி மாளாது.

திரு. V.K.ராமசாமி அவர்கள் கூட தெருவில் மோடிமஸ்தான் வித்தை காட்டுபவராக ஒரு சீனில் வந்து கலக்குவார்.

O.A.K .தேவர் அவர்களும் ஹோட்டல் முதலாளியாக வந்து பிராமண மொழி பேசி அசத்துவார்.

இந்தப் படத்தின் பாடல்களைப் பற்றி அவசியம் கூறித்தான் ஆக வேண்டும். என்ன அற்புதமான பாடல்கள்!. T.K.ராமமூர்த்தி அவர்களின் இசையில் அற்புதமான மனதை மயக்கும் பாடல்கள்.

கல்பனா நடிகைக் கனவு ஆசையில் பாடுவதாக பி.சுசீலாவின் தேன் குரலில் இனிக்கும் "மை பிரெண்ட் நெஞ்சத்தில் என்ன" பாடல் கோடி முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்.

பஸ்ஸில் பயணிகளை மனதில் வைத்து ரவி பாடுவதாக வரும் அருமையான டி.எம்.எஸ் குரலில் ஒலிக்கும் "பயணம் எங்கே?... பயணம் எங்கே?" பாடல் வரிகளிலும் அற்புதமான பாடல். பஸ்ஸில் பயணம் போகிறவர்கள் பலவித நோக்குடன் பயணம் செய்வார்கள் என்பதை அழகாக சித்தரிக்கும் பாடல்.

"என்ன வேலை என்ன தேவையோ..
சொந்தம் யாவும் பார்க்கும் ஆசையோ...
பயணம் எங்கே?... பயணம் எங்கே?...
கோயில் பார்க்கவோ...
பாவம் தீர்க்கவோ...
சொத்து சேர்க்கவோ...
சுமையைத் தூக்கவோ"...

என்ற கதையோடு பொருந்தி வரும் ஆலங்குடி சோமுவின் அருமையான வரிகள்.

பின் தன்னையும்,கல்பனாவையும் இணைத்து கிசுகிசு பேசும் பயணிகளின் மூக்குடைக்க ரவியும், கல்பனாவும் பாடுவதாக வரும், காட்சி சூழலுக்கு ஏற்ப நாமக்கல் வரதராசன் அவர்களின் வைர வரிகளில் மின்னும் "எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன தோனுதோ"...என்ற அருமையான பாடல் கேட்க கேட்க இனிமை.

ஹோட்டலில் கல்பனாவைப் பார்த்து ரவி பாடும் பஞ்சு அருணாசலம் அவர்களின் "மலரைப் போன்ற பருவமே" பாடல் படு சூப்பர். (stop...listen...proceed... என்று பாடல் துவங்கும்) டி.எம்.எஸ் அதியற்புதமாகப் பாடியிருப்பார். இந்தப் பாடலில் ரவியின் சில நடன மூவ்மென்ட்கள் அசாத்திய அற்புதமாய் இருக்கும்.(சற்று அகலக் கால்களுடன் ஒவ்வொரு காலையும் மாற்றி மாற்றி இழுத்து ஒரு மூவ்மென்ட் கொடுப்பார்)

இயக்குனர்கள் திருமலை-மகாலிங்கம் இப்படத்தை ஒரு நல்ல காமெடி கலந்த பொழுதுபோக்குப் படமாக இயக்கியிருந்தனர். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு நல்ல வெற்றி அடைந்த படமும் கூட.

'மதறாஸ் TO பாண்டிச்சேரி' சில நிழற்படங்கள்

http://123tamilforum.com/imgcache2/2011/03/MadrasPondi0001-1.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-11.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-12.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-9.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-8.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-10.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/7-5.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/8-5.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
17th December 2011, 11:18 AM
http://images.raaga.com/Catalog/CD/T/T0001674.jpg

'கலைநிலவு' ரவிச்சந்திரன் அவர்களின் 'மதறாஸ் TO பாண்டிச்சேரி' படத்தின் அனைத்து பாடல்களையும் வீடியோ வடிவில் கண்டு மகிழ கீழ் உள்ள 'லிங்க்'கை சொடுக்கவும். ஒரே 'லிங்க்' கில் அனைத்துப் பாடல்களையும் தொடர்ச்சியாகக் கண்டும், கேட்டும் மகிழலாம்.

http://www.raaga.com/channels/tamil/video.asp?clpId=12481

அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
17th December 2011, 05:07 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

தங்களின் 'மெட்ராஸ் டு பாண்டிச்சேரி' படத்தின் திறனாய்வுக்கட்டுரை படு சூப்பர். திரைப்படத்தை நேரில் பார்ப்பது போலிருக்கிறது. நான் ஏற்கெனவே பல ஆண்டுகளுக்கு முன் இப்படத்தை தியேட்டரில் ஆரவாரங்களோடு கண்டு ரசித்திருக்கிறேன். மிக அருமையான பொழுதுபோக்குப்படம் என்பதில் சந்தேகமேயில்லை. இப்போது உங்கள் கட்டுரை படித்ததும் மீண்டும் பார்த்தது போலிருந்தது.

திரு. ரவிச்சந்திரன் அவர்களின் திரியில் நீங்கள் சுறுசுறுப்பாகப் பதிவுகள் இட துவங்கியிருப்பது மகிழ்ச்சியைத்தருகிறது. சாரதா மேடம் இத்திரியைத்துவங்கி தனியொருவராக படங்களின் ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வந்தார். உடன் நமது ராகவேந்தர் சார், பம்மலார் சார் ஆகியோர் பல்வேறு சுவையான பதிவுகளைத் தந்து வந்தனர். இடையில் சிறிது காலம் திரி சுறுசுறுப்பில்லாமல் இருந்தது. சாரதா அவர்கள் முன்போல தீவிரமாக இறங்காததால் இருக்கலாம். நடிகர்திலகத்தின் திரியிலும் தற்போது சிறிது காலம் வரக்காணோம்.

இருப்பினும் சுமார் மூன்று மாதங்களுக்கு முன், 'இத்திரி மீண்டும் சுறுசுறுப்பாக இயங்கப்போகிறது' என்று சாரதா ஒரு அறிவிப்புச்செய்திருந்தார். அதைத்தொடர்ந்து நமது பம்மலார் சார் சிறப்பான ஆவணப் பதிவுகளைத்தந்தார். ராகவேந்தர் சார் அருமையான வீடியோ பதிவை (மலர்கள் நனைந்தன பனியாலே) தந்தார். இப்போது நீங்கள் புயலாக வந்திருக்கிறீர்கள். மனதுக்கு மகிழ்ச்சியைத்தரும் இந்தப்புயல் ஓயாமல் அடித்துக்கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். (நீங்களெல்லாம் வந்து கலக்கப்போகிறீர்கள் என்பதை உணர்ந்துதான் அப்படியொரு அறிவிப்பைச் செய்தாரா தெரியவில்லை).

இரு திலகங்களுக்கு அடுத்து ஜெய்யும், ரவியும் தமிழ்த்திரையுலகில் மறக்க முடியாதவர்கள். இவர்கள் காலத்தில்தான் வித்தியாசமான பொழுதுபோக்குப் படங்கள் வந்து குவிந்தன. அவர்களின் படங்களை நினைவு கூர்வது மிகவும் சந்தோஷம் தரும் விஷயம்.

தங்களுக்கு வாய்ப்பு அமைந்தால், ரவிச்சந்திரனின் 'மீண்டும் வாழ்வேன்' படத்தின ஆய்வுக்கட்டுரையைத் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம். மற்ற முக்கியமான படங்கள் பலவற்றை சாரதா அவர்கள் ஏற்கெனவே எழுதிருக்கிறார். பார்த்திருப்பீர்கள். ஆனால் அவரிடம் இல்லாத ஒரு விசேஷம் உங்களிடம் இருப்பது என்னவென்றால், படத்தின் ஸ்டில்களையும், பாடல்களின் வீடியோ இணைப்புகளையும் கூடவே இணைத்துத்தருவது. அது ஆய்வுக்கட்டுரையின் சிறப்புக்கு மேலும் மெருகூட்டுகிறது.

தங்கள் பதிவுகளுக்கு மகத்தான நன்றிகள்.

RAGHAVENDRA
17th December 2011, 05:47 PM
கலைநிலா ரவியின் மதராஸ் டு பாண்டிச்சேரி பயணக் கட்டுரையை மிகச் சிறப்பாக வடித்துள்ளார் வாசுதேவன். பாராட்டுக்கள். அனைத்துப் பாடல்களும் பிரபலமாயின. டி.கே.ராமமூர்த்தி தனியாக இசையமைக்க முதலில் வாய்ப்பளித்தவர் பீம்சிங். அவருடைய முதல் படத்தில் முதல் பாடலைப் பாடியவர் பால முரளி கிருஷ்ணா அவர்கள். அருள்வாயே அருள்வாயே என்று ஆண்டவன் அருளை வேண்டித் தன் தனியிசை வாழ்க்கையைத் துவக்கினார் ராமமூர்த்தி. இந்தப் படம், மதராஸ் டூ பாண்டிச்சேரி படம் அவருக்கு மிகப் பெரிய புகழைத் தந்தது. குறிப்பாக மலரைப் போன்ற பருவமே சென்னை வானொலியில் அன்றாடம் ஒலித்தது மறக்க முடியாது. கல்பனாவுக்கும் சுசீலாவின் குரலில் மை Friend நெஞ்சத்தில் என்ன (அப்போதே தங்கிலீஷ் வந்து விட்டது) மிகுந்த புகழைக் கொடுத்தது.

சென்னை பிளாசா திரையரங்கில் பல காட்சிகள் கடைசி வரை அரங்கு நிறைந்து வெற்றி நடை போட்ட படம். திருமலை மகாலிங்கம் இரட்டையரின் இயக்கும் திறமைக்கு மற்றொரு சான்று மதராஸ் டு பாண்டிச்சேரி.

இப்படம் தான் பின்னர் பாம்பே டு கோவா என ஹிந்தியில் எடுக்கப் பட்டது.

அருமையான காட்சிகளையளித்த வாசுதேவன் சாருக்கு மீண்டும் பாராட்டுக்கள்.

RAGHAVENDRA
17th December 2011, 06:36 PM
ரவிச்சந்திரனின் தமிழ்ப்படங்களை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் மலையாளத்திரைப்படங்களைப் பற்றி அதிகம் தகவல் அந்தக் காலத்தில் நமக்குத் தெரியவில்லை. ஆனால் இப்போது இணையத்தின் உதவியால் அந்தப் பாடல்களும் படங்களும் காணொளியாகக் கிடைக்கின்றன. அப்படி ஒரு மலையாளப் படம் ஓமன. ரவிச்சந்திரன் ஷீிலா இணையாக நடித்த இப்படத்திற்கு இசை ஜி.தேவராஜன் அவர்கள். அந்தப் படத்திலிருந்து பாடல் காட்சி


http://youtu.be/3Y2ieHE0njM

RAGHAVENDRA
17th December 2011, 06:44 PM
ரவியின் படங்களில் அபூர்வமான படம் ஐரீஸ் மூவீஸ் நீயும் நானும். அந்தப் படத்தை அப்போது திரையரங்கில் பார்த்ததோடு சரி, அதற்கப்புறம் வாய்ப்பே கிடைக்க வில்லை. இனிமேல் கிடைக்குமா தெரியவில்லை. ஆனால் மெல்லிசை மன்னரின் பாட்டுக்கள், குறிப்பாக யாரடி வந்தார் பாடல் அந்தக் காலத்தில் சூப்பரோ சூப்பர் ஹிட். அதுவும் எல்.ஆர்.ஈஸ்வரி பாடும் போது பியானோ இசையும் மிகச் சிறப்பாக இருக்கும். கோரஸ் குரல்கள் சரியான இடத்தில் தாளக் கட்டோடு அட்டகாசமாக இருக்கும். இதே பாடலை டி.எம்.எஸ். ரவிக்காக பாடும் போது இன்னும் அட்டகாசமாக இருக்கும். இணையத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல் ஆடியோ கிடைக்கிறது. இதோ நாம் கேட்டு ரசிக்கலாம்.

http://www.raaga.com/play/?id=204930

இதே படத்தில் மற்றொரு பாடல் தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் என்ற பாடலும் அதைத் தவிர இன்னோர் பாடலும் உண்டு.

vasudevan31355
17th December 2011, 07:22 PM
அன்பு கார்த்திக் சார் ,

பதிவிட்ட உடனேயே 'மதராஸ் டு பாண்டிச்சேரி' ஆய்வை படித்து பாராட்டிய தங்கள் பெருந்தன்மைக்கும், அன்பு உள்ளத்திற்கும் நன்றிகள் சார். ராகவேந்திரன் சார் கூறியுள்ளது போல தமிழில் எடுக்கப் பட்ட பிறகுதான் 'மதராஸ் டு பாண்டிச்சேரி' இந்தியில் எடுக்கப்பட்டது. இந்தி 'பாம்பே டு கோவா' 1972-இல் வெளியாகி உள்ளது. பிறகு தான் நான் conform செய்து கொண்டேன். பாம்பே டு கோவா வண்ணப் படமும் கூட.

http://upload.wikimedia.org/wikipedia/en/f/f0/BombaytoGoa.jpg

தாங்கள் கேட்டிருந்த படி 'மீண்டும் வாழ்வேன்' பற்றிய ஆய்வை தர முயற்சி செய்கிறேன்.திறமை உள்ளவர்கள், நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியவர்கள் யாராக இருப்பினும் அவர்களை மதித்து கௌரவிக்கும் நற்பண்புகளும்,நல்ல ரசனையும் தங்களுக்கு இருப்பது கண்டு மனம் பூரிப்படைகிறேன்.தங்கள் அன்புப் பாராட்டிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறக் கடமைப் பட்டவனாகிறேன்.


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
17th December 2011, 07:32 PM
அன்பு ராகவேந்திரன் சார்,

தங்களுடைய மனமுவந்த பாராட்டிற்கு நன்றி. விரைவாக பதிவைப் படித்ததோடல்லாமல் 'மதராஸ் டு பாண்டிச்சேரி' தான் முதலில் தமிழில் எடுக்கப் பட்டது... பின்னர்தான் 'பாம்பே டு கோவா' இந்தியில் எடுக்கப்பட்டது என்ற தகவலை சுட்டிக்காட்டியமைக்கும் மிகுந்த நன்றிகள் சார்.

'ஓமன' படத்தின் அபூர்வ பாடல் காட்சியை காணொளி வடிவில் காண வைத்ததற்கு என் சிறப்பு நன்றிகள்.

என்னுடைய அபிமானப் பாடகியின் 'யாரடி வந்தார்...என் எண்ணத்தை கொள்ள' பாடல் இணைப்பிற்கும் மிகுந்த நன்றி.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
17th December 2011, 09:10 PM
'நீயும் நானும்' படத்தில் வரும் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் மிளிரும் "ஊஞ்சல் கட்டி ஆட்டட்டுமா" ...என்ற அற்புதப் பாடலின் லிங்க் கீழே.

http://www.raaga.com/player4/?id=204929&mode=100&rand=0.9468141774627289

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
19th December 2011, 01:52 PM
ரவிச்சந்திரன் நடித்த அபூர்வ திரைப்படமான 'சத்தியம் தவறாதே' படத்தில் T.M.S. மற்றும் சுசீலாவின் தேன் குரல்களில் ஒலிக்கும் "முத்துக் குளிப்பவரே! கொஞ்சம் பக்கத்திலே வாங்க"...என்ற அற்புதமான பாடல் கேட்க...

http://www.kino-teatr.ru/acter/foto/asia/332709.jpg

http://www.inbaminge.com/t/s/Sathiyam%20Thavarathe/

லிங்கை சொடுக்கவும்.

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
19th December 2011, 05:34 PM
சத்தியம் தவறாதே திரைப்படத்திலிருந்து அபூர்வமான டூயட் பாடலைத் தந்தமைக்கு வாசுதேவன் சாருக்கு உளமார்ந்த நன்றி. இப்பாடல் வானொலியில் கூட அதிகமாக ஒலிபரப்பப்படாத பாடலாகும். சத்தியம் தவறாதே மற்றும் எதடா வாழ்க்கை என்ற இரு பாடல்கள் தான் அடிக்கடி ஒலிபரப்பப்படும். இப்படத்திற்கு இசையமைத்தவர் மிகச் சிறந்த இசைமேதைகளுள் ஒருவரான திரு சி.என்.பாண்டுரங்கன் ஆவார்.

vasudevan31355
19th December 2011, 05:39 PM
'காதல் ஜோதி'

http://www.jointscene.com/ahtees/admin/movies/content/5655_17_Kathal%20Jothi.jpg

"ஒம் மேலக் கொண்ட ஆச"...சூப்பர் ஹிட் பாடல். 'காதல் ஜோதி' திரைப்படத்தில் சீர்காழி அவர்களின் வெண்கலக் குரலில் கலைநிலா ரவியும், எம்.பானுமதியும் தோன்றும் அற்புதப் பாடல்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=8DmiOf4ciFM

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
19th December 2011, 05:42 PM
முத்துக் குளிப்பவரே பாடலைப் பற்றி அடியேனின் குறிப்பை மேற்கோள் காட்டி ஒரு வலைத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கான இணைப்பு (http://thiraigaanam.com/beta/node/8470)

vasudevan31355
20th December 2011, 07:54 AM
டியர் ராகவேந்திரன் சார்,

'முத்துக்குளிப்பவரே' பாடல் தந்ததைப் பாராட்டிற்கு நன்றி. அதைவிட சந்தோஷம் அந்த அற்புதப் பாடலைப் பற்றி தாங்கள் குறிப்பிட்டிருந்ததை மேற்கோள் காட்டி திரைகானம்.காம் இணையதளத்தில் வந்துள்ள செய்திக் குறிப்பு. இந்தப் பாடல் தங்களால் புகழ் பெற்றுக்கொண்டிருப்பது எங்களுக்கெல்லாம் பெருமை. நன்றி!

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
20th December 2011, 10:43 AM
'சத்தியம் தவறாதே' (20.12.1968)

"முத்துக் குளிப்பவரே... கொஞ்சம் பக்கத்திலே வாங்க" மிக மிக மிக அரிய பாடல் முதன் முதலாக இணையத்தில்.

'சத்தியம் தவறாதே' என்ற ரவிச்சந்திரன் அவர்களின் மிக மிக அபூர்வ படத்தைப் பற்றி பல பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 20.12.1968-இல் வெளிவந்த இந்தப்படத்தில் 'கலைநிலா' ரவிச்சந்திரன், அவரது ஜோடியாக விஜயநிர்மலா (பணமா பாசமா புகழ் 'அலேக்' நிர்மலா தான். இவர் தெலுங்குத் திரைப்பட உலகின் 'சூப்பர் ஸ்டார்' கிருஷ்ணாவின் மனைவி ஆவார். 'பெஜவாடா பெப்புலி' என்ற நடிகர் திலகம், கிருஷ்ணா இணைந்து நடித்த தெலுங்குத் திரைப்படத்தை இயக்கிய பெருமைக்குரியவர். 'மோசக்காரனுக்கு மோசக்காரன்' என்ற தெலுங்கு மொழிமாற்றத் தமிழ் படத்தில் கிருஷ்ணாவின் ஜோடியாக நடித்தவர். கிருஷ்ணாவின் ஜோடியாக பல தெலுங்குப் படங்களில் இவர் நடித்ததினால் இவர்கள் இருவருக்கும் காதல் அரும்பி அதுவே கல்யாணத்தில் முடிந்தது) மற்றும் 'மாஸ்டர்' பிரபாகர், ராமதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். பாண்டி செல்வராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார் என்று நினைக்கிறேன். (C.N. பாண்டுரங்கன் அவர்கள் மகா இசைமேதை. அவர்கள் இசையமைப்பில் மிக மிக அற்புதமான பாடல்கள் இந்தப் படத்திற்கு மகுடம் சூட்டின. (நடிகர் திலகத்தின் 'எதிர்பாராதது' படத்திற்கும் இசை இவர்தான். டைட்டிலில் பாண்டுரங்கம் என்று போடுவார்கள். தியாகராஜ பாகவதர் நடித்த 'புதுவாழ்வு' போன்ற படங்களுக்கு 'சங்கீதமேதை' ஜி.ராமநாதன் அவர்களுடன் சேர்ந்து இசை அமைத்தவர்)

'சத்தியம் தவறாதே... தாய் நாட்டினை மறவாதே' என்று மாஸ்டர் பிரபாகரன் பீச்சில் பாடுவதாக வரும் பாடல் சோஷலிச கொள்கைகளை அற்புதமாக வெளிப்படுத்தும் பாடல்.

இப்படத்தின் vcd,dvd எதுவும் கிடைக்கவில்லை. இந்தப் படத்தைத் தேடி பல வருடங்கள் அலைந்திருக்கிறேன். எந்தத் தகவலும் இல்லை. ஏனென்றால் சிறுவயது முதற்கொண்டே

"முத்துக் குளிப்பவரே... கொஞ்சம் பக்கத்திலே வாங்க"...

பாடல் மனதில் மிக ஆழமாகப் பதிந்து விட்டது. சிலோன் ரேடியோவில் இப்பாடலை பலமுறை கேட்டு மெய்மறந்து போய் இருக்கிறேன். இப்படத்தை சில வருடங்களுக்கு முன் 'விஜய்' தொலைக்காட்சியில் போட்டார்கள். அப்போது இந்தப் பாடல் காட்சியைப் பார்த்து பூரித்துப் போனேன். பாடலுக்கேற்றவாறு அற்புதமாகப் படமாக்கப் பட்டிருந்தது இந்தப் பாடல். அவுட்டோரில் படமாகப் பட்டவிதம் மனதுக்கு குளிர்ச்சியைத் தரும் விதமாக உள்ளது. ரவியும் கேப்பெல்லாம் போட்டுக் கொண்டு அழகாகவே தோன்றுவார். டி எம்.எஸ்ஸின் குரல் ரவிக்கு அற்புதமாக பொருந்தி இருக்கும். இசைக்குயில் சுசீலாவைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். "இளமை வானிலே எண்ணம் பறப்பதென்ன"... என்ற சரணத்தின் வரிகளை இருமுறை அவர் உச்சரிக்கும் விதம் அலாதியானது.

மிகவும் கடினப்பட்டு இந்தப் பாடலைத் தேடித் பிடித்து வீடியோ வடிவில் முதன் முதலாக இணையத்திலும், 'கலைநிலா' ரவிச்சந்திரன் திரியிலும் பதிவு செய்துள்ளேன். இந்தப் பாடலை அனைவரும் மிகவும் ரசித்துப் பார்ப்பீர்கள் எனவும் நம்புகிறேன். இப்பாடலைப் பற்றிய தங்கள் மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இந்தப் பாடலை பதிவு செய்ததற்கு மிகுந்த பெருமையும், மனமகிழ்ச்சியும் கொள்கிறேன்.

இதோ... அந்த அற்புதமான "முத்துக்குளிப்பவரே"...பாடல் கண்டு மகிழுங்கள்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0pj5iZOzX74


அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
20th December 2011, 12:54 PM
அன்பு நண்பர் வாசுதேவன் அவர்களே,
மிக அபூர்வமான படம் சத்தியம் தவறாதே படத்தை முதல் வெளியீட்டிற்குப் பிறகு தற்போது தான் பாடல் காட்சியின் மூலம் பார்க்கிறேன். அதற்காக தங்களுக்கு உளமார்ந்த நன்றி. அதுவும் அப்படம் வெளியான டிசம். 20 அன்றே பதிவிட்டது பாராட்டிற்குரியது.
இதுபோல் அபூர்வமான பதிவுகளைத் தங்களிடம் மேலும் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்

RAGHAVENDRA
20th December 2011, 01:34 PM
ரவிச்சந்திரன் நடித்த மற்றொரு அபூர்வமான திரைப்படப் பாடல்

படம் - பம்பாய் மெயில் 109
பாடல் - கட்டுவேன் கையில் உன்னை
படம் வெளியான ஆண்டு - 1980 என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
(நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படம். திரையரங்குகளில் வெளியானதா என்று எனக்கு நினைவில்லை. ஆனால் ரவி அவர்களுடன் PREVIEW காட்சியில் பார்த்தது.)
இயக்கம் - டி.பி.சுந்தரம்
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி.
மெல்லிசை மன்னரின் வித்தியாசமான பாணி இசையில் தாளக் கட்டுகள் மிகச் சிறப்பாக அமைந்த பாடல். தேர்ந்த பாடகியரே பாடுவதற்கு மிகவும் சிரமப் படக் கூடிய மெட்டமைப்பு.

பாடியவர் - இசைக்குயில் சுசீலா, மற்றும் சிரிப்பொலி- ரவிச்சந்திரன்


http://youtu.be/Ug2rPlKX3zI

RAGHAVENDRA
20th December 2011, 01:42 PM
மற்றொரு சூப்பர் ஹிட் பாடல்.

படம் - பணக்காரப் பிள்ளை
பாடல் - மாணிக்க மகுடம் சூட்டிக் கொண்டாள்
குரல்கள் - டி.எம்.எஸ். பி.சுசீலா
இசை - எஸ்.எம். சுப்பய்யா நாயுடு


http://youtu.be/WUZswSo4w9o

mr_karthik
20th December 2011, 03:20 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

'முத்துக்குளிப்பவரே.. கொஞ்சம் பக்கத்திலே வாங்க' பாடலைத்தேடிப்பிடித்து பதிவு செய்து அனைவரையும் பார்த்து மகிழச்செய்தமைக்கு மிக்க நன்றி.

சத்தியம் தவறாதே படத்தை சின்ன வயதில் தியேட்டரில் பார்த்ததுதான். மீண்டும் பார்க்கக்கிடைக்கவில்லை. தற்போது பழைய படங்களை ஒளிபரப்பும் சில டிவி சேனல்கள் கூட இதுபோன்ற படங்களைக் கண்டுகொள்வதாகத்தெரியவில்லை.

ரவிச்சந்திரனின் படங்களைப்பொறுத்தவரை அவரது வண்ணப்படங்களே அதிகம் காணக்கிடைக்கின்றன. காதலிக்க நேரமில்லை, நான், மூன்றெழுத்து, மீண்டும் வாழ்வேன், அதே கண்கள், உத்தரவின்றி உள்ளே வா போன்ற கலர்ப்படங்கள் அதிகம் குறுந்தகடு, நெடுந்தகடுகளிலும், டிவி சேனல்களிலும் பார்க்க முடிந்த அளவுக்கு பல அற்புதமான கருப்புவெள்ளைப்படங்கள் இன்னும் வெளிச்சத்துக்கு வராமலே இருக்கின்றன. அவற்றில் சத்தியம் தவறாதே, மயிலாடும் பாறை, ஓடும் நதி, குமரிப்பெண், எங்க பாப்பா போன்ற பல படங்கள் அடங்கும்.

விஜயநிர்மலாவைப்பற்றி நீங்கள் சொன்னது மிகவும் சரி. அவரது அழகுக்கும் திறமைக்கும் தமிழில் போதுமான வாய்ப்புக்கள் கிடைக்கவில்லையென்றுதான் சொல்ல வேண்டும். கே.ஏஸ்.ஜி. தனது சித்தி, பணமா பாசமா போன்ற படங்களில் நல்ல வேடங்கள் தந்தார்.

என்னவோ தெரியவில்லை, இசையருவி சேனலில் வரும் 'காவியப்பாடல்கள்' நிகழ்ச்சியில் இந்த வாரம் விஜயநிர்மலாவின் பல பாடல்களைக்காணும் வாய்ப்புக்கிடைத்தது. முத்துராமனுடன் 'சந்திப்போமா.. இன்று சந்திப்போமா' (சித்தி), ஜெய்சங்கருடன் 'நான் கலைஞனல்ல உன்னை சிலையாக்க' (நீலகிரி எக்ஸ்பிரஸ்), நடிகர்திலகத்துடன் 'அம்மா கண்ணு சும்மாசொல்லு' (ஞான ஒளி), நாகேஷுடன் 'வாழைத்தண்டு போல உடம்பு' (பணமா பாசமா) பாடல்களை இங்கொன்றும் அங்கொன்றுமாகப் பார்க்க் நேர்ந்தது.

சென்ற வாரத்தில் ஒரு நாள் அதே சேனலில் 70-களில் வந்த வண்ணப்படப்பாடல்களில் நடிகர்திலகம், மக்கள் திலகம் இருவரின் பாடல்களை மட்டும் ஒதுக்கி விட்டு மற்றவர்களின் வண்ணப்பாடல்களை ஒளிபரப்பினர். அத்தனையும் முத்தான பாடல்கள். அதில் ரவி பாடல்கள் நிறைய வந்தன.

ஜெமினி - இயற்கையென்னும் (சாந்திநிலையம்), மங்கையரில் மகாராணி (அவளுக்கென்று ஓர் மனம்), தன்னந்தனியாக நான் வந்தபோது (சங்கமம்)
ஜெய்சங்கர் - அந்த சிவகாமி மகனிடம் (ப.பூதம்), மேயர் மீனாட்சியில் ஒரு பாடல்
ரவிச்சந்திரன் - போதுமோ இந்த இடம் (நான்), ஓ..ஓ.. எத்தனை அழகு (அதே கண்கள்), மாதமோ ஆவணி (உ.உள்ளேவா)
சிவகுமார் - முள்ளில்லா ரோஜா (மூன்றுதெய்வங்கள்), இல்லம் சங்கீதம்(அவன் அவள் அது), தேவியின் திருமுகம் (வெள்ளிக்கிழமை விரதம்)
ஏ.வி.எம்.ராஜன் - திருமகள் தேடி வந்தாள் (இருளும் ஒளியும்)
ஸ்ரீகாந்த் - தேவன் வேதமும் (ராஜநாகம்)
சசிகுமார் - கீதா ஒருநாள் பழகும் (அவள்)
முத்துராமன் - என்ன பார்வை (கா.நேரமில்லை), ராஜராஜஸ்ரீ (ஊட்டிவரைஉறவு), கண்ணுக்குத்தெரியாத (என் அண்ணன்) இதில் விஜயநிர்மலாவும் இருந்தார்.

அத்தனையும் முத்துமுத்தான வண்ணப்பாடல்கள். சிடி, டிவிடி காலமாகப்போய்விட்டதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதுவே வீடியோ கேஸட் காலமாக இருந்தால் அப்படியே சுருட்டியிருக்கலாம்.

mr_karthik
20th December 2011, 03:28 PM
Raghavendhar sir,

Thanks a lot for posting the songs from 'Bombay Mail' and 'Panakkara Pillai'

I saw Bombay Mail when it was released. Ravichandran will appear then and there as Spider Man. A good entertainmnet movie.

'Manikka magudam sooti kondaaL' is wondeful composing by SMS.

vasudevan31355
20th December 2011, 06:24 PM
அன்பு ராகவேந்திரன் சார்,

தங்கள் அன்புப் பாராட்டுக்கு நன்றிகள்.

மாணிக்க மகுடம் தான் தங்களுக்கு சூட்ட வேண்டும் 'மாணிக்க மகுடம் சூட்டிக் கொண்டாள்' என்ற தேன் பாடல் தந்ததற்கு.

'பம்பாய் மெயில்109' படத்தின் "கட்டுவேன் கையில் உன்னை" பாடல் பதித்து மெய்மறக்க செய்து விட்டீர்கள். நான் தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்றே புரியவில்லை. அப்படிப்பட்ட பாடலை எதிர்பாராவிதமாகக் கொடுத்து நிலைகுனியச் செய்து விட்டீர்கள். என்ன பாடல் சார் அது! இதுவரை நான்கைந்து முறை பார்த்து விட்டேன். காதுகளில் முத்துக்குளிப்பவரை போகச் செய்து விட்டு கட்டுவேன் என் பாடலில் உன்னை என்று என் மனத்தைக் கட்டி விட்டீர்கள். சிரிப்பொலி ரவிச்சந்திரன் என்பதையும் மறக்காமல் குறிப்பிட்ட விதம் அருமை. நன்றிகள் சார்!

'பம்பாய் மெயில்109' நானும் பார்த்திருக்கிறேன் சார், ஏதோ தீபாவளிக்கு வந்தது போன்ற நினைவு. நம் v.k.r. அவர்களின் சொந்தப் படம் என்று நினைக்கிறேன். கார்த்திக் அவர்கள் சொன்னது போல ஸ்பைடர்மேன் உடையில் (ப்ளூ அண்ட் ரெட்) ரவி வலம் வருவார்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
20th December 2011, 06:44 PM
அன்பு கார்த்திக் சார்,

தங்கள் பாராட்டுக்கு நன்றி.

விஜயநிர்மலாவைப் பற்றி அழகாக கூறியிருந்தீர்கள். நல்ல திறமையான அழகான நடிகை. என் அண்ணனில் 'கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்' பாடலில் மிக அழகாக காட்சியளிப்பார். உயிரா மானமா படத்தில் கூட ஜெய்யின் ஜோடியாக வந்து நம் அன்புத் தலைவரின் மாபெரும் வெற்றிப் படமான
பட டைட்டிலின் வரிகளான 'சவாலே சமாளி...தனிச்சு நின்னு துணிச்சலோடு சமாளி'...பாடலுக்கும் விஜயநிர்மலா அற்புதமாகச் செய்திருப்பார்.

நீங்கள் குறிப்பிட்ட 'சங்கமம்' படம் தேனூறும் பாடல்களைத் தன்னகத்தே தக்க வைத்துக் கொண்ட படம். அதில் குறிப்பாக 'ஒரு பாட்டுக்கு பலராகம்' என்ற டி.எம்.எஸ்ஸின் குரலில் ஜெமினி பாடுவதாக வரும் பாடல் என் உயிரைக் கொள்ளை கொண்ட ஒரு பாடல். அதுமட்டுமல்ல... 'கண்ணனிடம் கேட்டிருந்தேன் பிள்ளையொன்று வேண்டும்'..., 'வண்ணப் பூப்போட்ட சேலை கட்டி புதுப் பொண்ணு பக்கம் வந்தா'.., பாடல்களும் களை கட்டும். தேன் சொட்டும்..உங்கள் வண்ணப் பட பாடல்கள் லிஸ்ட் சூப்பர். இன்னும் இன்னும் அபூர்வமான அதிகம் கேட்காத ஆனால் உயிரை உருக்கக் கூடிய ரவியின் பாடல்களை கொஞ்சம் கொஞ்சமாகத் தோண்டி எடுத்து விடலாம் தங்களைப் போன்ற, ரசிகவேந்தர் போன்ற உண்மையான ரசிகர்கள் இருந்தால். அன்பு நன்றிகள் சார்.

தங்கள் ரசனைக்குத் தலை வணங்கும்,
வாசுதேவன்.

vasudevan31355
20th December 2011, 07:01 PM
'பம்பாய் மெயில்109' படத்தின் ஸ்டில்

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/vlcsnap-05.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
23rd December 2011, 07:02 AM
'நாலும் தெரிந்தவன்' (1968)

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTOk_byshugGFVpeNhVUxb_0CslqIQZY AvwAAYdC8qb4JwKr0CYvP9d4UQh

1962- இல் வெளிவந்த 'professor' என்ற ஹிந்திப் படத்தைத் தழுவி 'நாலும் தெரிந்தவன்' படம் எடுக்கப் பட்டது. ஹிந்திப் படத்தில் கதாநாயகனாக ஷம்மிகபூர் அவர்களும், கதாநாயகியாக கல்பனாவும் நடித்திருந்தனர். ஹிந்தியில் வெற்றி அடைந்த இப்படம் தமிழில் நாலும் தெரிந்தவனாக சுமாராக ஓடியது. பின்னாட்களில் இதே படம் சத்யராஜ், குஷ்பூ, கவுண்டமணி நடித்து, பி.வாசுவின் இயக்கத்தில் 'நடிகன்' என்ற பெயரில் வெளிவந்து சக்கை போடு போட்டது. அப்படியே frame to frame நாலும் தெரிந்தவனின் கார்பன் காப்பியாக 'நடிகன்' வெளி வந்தான்.

படம் வெளி வந்த ஆண்டு: 1968

நடிகர், நடிகைகள்: ரவிச்சந்திரன், காஞ்சனா, நாகேஷ், அஞ்சலி தேவி, மனோகர், மனோரமா, வி.கே.ராமசாமி

இயக்கம்: ஜம்பு

ஒளிப்பதிவு: கர்ணன்

இசை: சுப்பையா நாயுடு

பாடல்கள்: கண்ணதாசன்

"நரி ஒன்று சிரிக்கின்றது"...
"நிலவுக்கே போகலாம்... வான் நிலவுக்கே..போன்ற நல்ல பாடல்கள் கேட்க இனிமையாய் இருந்தன.

ரவிச்சந்திரன் அவர்கள் நடித்த 'நாலும் தெரிந்தவன்' படத்தின் கதையையும், கதை உருவான விதத்தையும் அப்படத்தின் கதாசிரியர் திரு V.C.குகநாதன் அவர்கள் கூறுகிறார்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-19.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-19.jpg

குறிப்பு: 'நாலும் தெரிந்தவன்' என்று கவுண்டமணி ஹீரோவாக நடித்து ஒரு படம் வெளி வந்தது.

இதே போல மற்றொரு படம்.

ரவிச்சந்திரன் அவர்கள் ஹீரோவாக நடித்து வெளிவந்த மாடர்ன் தியேட்டர்ஸாரின் 'ஜஸ்டிஸ் விஸ்வநாதன்' படம் பின்னாளில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில் 'பொல்லாதவன்' படமாக மீண்டும் ரீமேக் ஆகி வெற்றியடைந்தது பல பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

ரவிச்சந்திரனின் படங்கள் தமிழில் பின்னாட்களில் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி அடைந்தது அவருக்கு பெருமையும், புகழும் சேர்க்கும் விஷயமல்லவா!


அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
23rd December 2011, 07:38 AM
டியர் வாசுதேவன் சார்,
நாலும் தெரிந்த தங்களை விட்டால் நாலும் தெரிந்தவன் படத்தைப் பற்றி இவ்வளவு விரிவாக, அதுவும் படத்தோடு விவரங்கள் தர யாரால் முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை. மிகவும் அருமையான பதிவு. வெளியீட்டின் போது சென்னை பாரகன் திரையரங்கில் பார்த்தது. அதற்குப் பிறகு பொதிகையில் ஒரு முறை. அவ்வளவு தான். நிலவுக்கே போகலாம் பாடல் காட்சி இருந்தால் தரவேற்றுங்கள். மிகவும் அருமையான பாடல்.

கேட்டு மகிழ

நிலவுக்கே போகலாம் - http://www.inbaminge.com/t/n/Nalum%20Therinthavan/Nilavukke%20Pogalam.vid.html

நரி ஒன்று சிரிக்கின்றது - - http://music.cooltoad.com/music/song.php?id=372996

vasudevan31355
23rd December 2011, 08:58 AM
ஜஸ்டிஸ் விஸ்வநாதன்' திரைப்படத்திலிருந்து "சிலை செய்ய கைகள் உண்டு" என்ற அற்புதமான பாடல் காணொளி வடிவில்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=q7NolKhpgtE


அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
23rd December 2011, 03:50 PM
மெல்லிசை மாமணி வி.குமார் இசையில் நினைவில் நின்றவள் திரைப்படத்தில் இடம் பெற்ற இனிமையான பாடல், டி.எம்.எஸ். மற்றும் சுசீலா குரலில்.
தொட்டதா தொடாததா


http://youtu.be/feQRGYjuG3Y

vasudevan31355
24th December 2011, 04:22 PM
'கலைநிலா' ரவிச்சந்திரனின் சிறந்த பாடல்கள்.

'கௌரி கல்யாணம்' "வரணும் வரணும் மகராணி" பாடல் பற்றிய சிறப்பு ஆய்வு.

http://www.buycinemovies.com/images/detailed/0374-vcd34.jpg

11.11.1966- இல் வெளி வந்த சரவணா கம்பைன்ஸ் 'கௌரி கல்யாணம்' திரைப்படத்தில் 'கலைநிலா' ரவிச்சந்திரன் அவர்களும், ஜெயலலிதா அவர்களும் பாடுவதாக வரும் "வரணும் வரணும் மகராணி" என்ற அதியற்புத உற்சாகமான டூயட் பாடல். T.M.S அவர்களின் கம்பீரமான குரலும், பி.சுசீலா அவர்களின் தேனினும் இனிய குரலும் இந்தப் பாடலை சிகரத்தின் உச்சிக்கே கொண்டு செல்கின்றன. 'கவிஞர்' கண்ணதாசனின் கல்கண்டு வரிகள் இப்பாடலுக்கு மேலும் சுவையூட்டுகின்றன. இசை எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள். இனிமைக்குக் கேக்கணுமா....கே.சங்கர் அவர்கள் இயக்கிய இப்படத்தில் ஜெய்சங்கர்,ஷீலா மற்றும் பலர் நடித்திருந்தார்கள். ரவியும், ஜெய்யும் சேர்ந்து நடித்த படங்களில் இதுவும் ஒன்று.

இனி பாடல்.

கணீரென்று உற்சாகத் துள்ளலாய் ஆரம்பிக்கும் பல்லவி.

"வரணும் வரணும் மகராணி...
வஞ்சியர் சங்கமம் இதே இடம்...
சரணம் சரணம்...இந்த நேரம்...
சண்டை முடிந்தது சமாதானம்"...

(இந்தப்பாடல் சென்சாருக்கு செல்வதற்கு முன் "வரணும் வரணும் மகராணி...வஞ்சியர் சங்கமம் இதே இடம்.."சரணம் சரணம் சந்நிதானம்... சண்டை முடிந்தது சமாதானம்" என்ற பல்லவியோடு டி..எம்.எஸ் குரலில் தொடங்கி சுசீலாவின் குரலில் முடியும். சென்சாருக்குப் பிறகு "சரணம் சரணம் சந்நிதானம்" என்ற வார்த்தைகள் "சரணம் சரணம் இந்த நேரம்" என்று மாற்றப்பட்டது).

இப்பாடலின் சரணத்திற்கும், பல்லவிக்கும் இடையில்

"தந்தன தந்தன தன்ன... ஹோஹோ...பம்பர பம்பர பப்ப "... ஹோஹோ...

என்ற டி.எம்.எஸ்ஸின் ஆனந்த வெள்ளம் பொங்கும் குரலும் பின் தொடரும் "ஹோஹோ"..என்ற சுசீலாவின் இனிமை குரலும் காலம் முழுதும் நம்மை கட்டிப் போட வைக்கும் சக்தி படைத்தது.

சரணத்தில் வரும்

"பள்ளியில் கோபம் உண்டானது...
பருவத்தினால் அது பெண்ணானது...
கல்லான நெஞ்சம் கனியானது...
கைகளில் ஊற்றிய தேனானது...தேனானது...தேனானது...தேனானது"...

வரிகள் டி..எம்.எஸ் குரலில் காதுகளில் தேன் பாய்ச்ச,

தொடர்ந்து சுசீலாவின் குயில் குரலில் ஒலிக்கும்

"அஞ்சாதது...பெண் என்பது...
ஆண்மையின் முன்னே என்னானது...
பொன்னானது... பூவானது...
போதையில் ஆடும் கண்ணானது...கண்ணானது...கண்ணானது...கண்ணானது"...(வரணும் வரணும்)

என்ற வரிகள் உண்மையிலேயே இசைபோதையை நமக்கு உண்டாக்கி விடுவது நிஜம்.

அதே போல இரண்டாவது சரணம்.

"விழி ஒரு பக்கம் பந்தாடுதே...
இடை ஒரு பக்கம் தள்ளாடுதே...
நடையோடு வாழை தண்டானதே...
நடனம் இதில் தான் உண்டானதே....உண்டானதே...உண்டானதே...உண்டானதே"

என்று ஆண்குரல் முடிக்க...

ஆண்குரல் முடித்த அதே "உண்டானதே"என்ற வார்த்தையிலேயே பெண்குரல் அடுத்த வரியைத் தொடங்குவது அற்புதம்.

"உண்டானதே... கொண்டாடுதே... ஓடிய கால்கள் மன்றாடுதே...
"உண்டானதே... கொண்டாடுதே... ஓடிய கால்கள் மன்றாடுதே...

(இரண்டாவது முறை வரும் இந்த வரியில் "கொண்டாடுதே" என்ற வார்த்தையை முதல் வரியிலிருந்து மிக வித்தியாசப்படுத்தி மிக அழகாக உச்சரித்து பாடியிருப்பார் சுசீலா).

எல்லாம் இங்கே நீ தந்ததோ...
இதுதான் சொர்க்கம் நான் கண்டதே...நான் கண்டதே...நான் கண்டதே...நான் கண்டதே" (இந்தப் பாடல் தான் சொர்க்கம் நான் கண்டதே...இது என்னுடைய வரிகள்) (வரணும் வரணும்)

எனச் சரணம் முடிந்து மறுபடி பல்லவி தொடங்கி பாடல் முடிவடைய, ஏன்தான் பாடல் முடிந்ததோ என்று நினைக்கவைத்து மறுபடி மறுபடி கேட்கத் தூண்டும் பாடலாகி விட்டது இந்தப் பாடல்.

டிரம்பெட்டும், ஷெனாயும் இழையும் இந்தப் பாடல் காலத்திற்கும் மறக்க முடியாத பாடல். மெல்லிசை மன்னர்களின் அற்புதங்களில் ஒன்று இந்தப்பாடல் என்று கூடச் சொல்லலாம்.

இந்தப் பாடலில் ரவி மிக அழகாகக் காட்சி அளிப்பதோடு, டி.எம்.எஸ் குரல் அதியற்புதமாய் தனக்குப் பொருந்த, அழகான நடன நெளிவுகளை class- ஆக செய்திருப்பார். ஜெயலலிதாவும் ரவிக்கு ஈடு கொடுத்திருப்பார். அழகான அவுட்டோரில் பார்க்கில் படமாக்கப் பட்டிருக்கும் விதமும் ரம்மியமாக இருக்கும்.

அந்த அருமையான பாடலை இப்போது கண்டு களிக்கலாம்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=UaCNL7xnzeA


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
26th December 2011, 07:41 AM
'மதராஸ் டு பாண்டிச்சேரி' திரைப்படத்தில் அழகிய தோற்றத்தில் ரவிச்சந்திரன் அவர்கள்.

http://www.kollytalk.com/wp-content/gallery/actor-ravichandran-dead/actor-ravichandran-dead-29.jpg

கல்பனாவுடன்

http://www.kollytalk.com/wp-content/gallery/actor-ravichandran-dead/actor-ravichandran-dead-28.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
26th December 2011, 07:54 AM
கலர்புல் கலக்கல் இளமை ரவி.

http://img2.allvoices.com/thumbs/image/609/480/84550398-actor-ravichandran.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
26th December 2011, 08:05 AM
'அதே கண்கள்' திரைப்படத்தில் ரவி மற்றும் காஞ்சனாவின் எழில் தோற்றம்.

http://www.kollytalk.com/wp-content/gallery/actor-ravichandran-dead/actor-ravichandran-dead-32.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
26th December 2011, 09:00 AM
காலத்தால் அழிக்க முடியாத பாடல் 'அன்பே அமுதா' டி.எம்.எஸ்ஸின் அற்புதக் குரலில் 'அமுதா' திரைப்படத்தில் 'கலைநிலவு' ரவியின் நடிப்பில்


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=4EzyTQtXLsA

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
26th December 2011, 09:13 AM
'நிமிர்ந்து நில்' திரைப்படத்தில் வரும் சூப்பர் ஹிட் பாடல் "தேடி வரும் தெய்வ சுகம்" ரவி, பாரதியின் நடிப்பில்


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=x59nqqYGWvw

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
26th December 2011, 09:21 AM
'வரப்பிரசாதம்' திரைப்படத்தில் வரும் சூப்பர் ஹிட் பாடல் "கங்கை நதியோரம் ராமன் நடந்தான்" ரவி, ஜெயசித்ரா நடிப்பில்...யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராமன் இனிய குரல்களில்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=YqyKIJv2FkI

அன்புடன்,
வாசுதேவன்.

mr_karthik
26th December 2011, 01:20 PM
அன்புள்ள வாசுதேவன் சார்,

தங்களின் பங்களிப்புகளை நடிகர்திலகத்தின் திரிக்கு அடுத்தபடியாக, ரவிச்சந்திரன் திரியில் பதிவிட்டு அசத்தி வருகிறீர்கள்.

ரவிச்சந்திரனின் அட்டகாசமான திரைப்பட ஸ்டில்கள் (கலர் மற்றும் கருப்பு வெள்ளை)

கலை நிலாவின் அசத்தலான வீடியோ பாடல் காட்சிகள்

Smart Hero-வின் திரைப்படங்கள் பற்றிய அபூர்வமான தகவல்கள்

என பல்வேறு வகையான பதிவுகளின்மூலம் அசத்தி வருகிறீர்கள். கதாநாயகனாக அவரது தமிழ்த்திரை பங்களிப்பு பற்றி இன்றைய இளம் தலைமுறையினர் அறியும் வண்ணம் செய்து வரும் தங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்.

ஜெய்சங்கர் திரியிலும் தங்கள் மேலான பதிவுகளைத் தருவீர்கள் என்று நம்புகிறோம்.

RAGHAVENDRA
26th December 2011, 06:18 PM
1967ம் ஆண்டில் வெளிவந்த பல மறக்க முடியாத தமிழ்த்திரைக்காவியங்களில் ஒன்று முக்தா ஸ்ரீநிவாசன்-சோ கூட்டணியில் வெளிவந்த நினைவில் நின்றவள். வி.குமார் இசையில் பாடல்கள் மிகப் பிரசித்தம். நந்தன் வந்தான் கோவிலிலே பாடல் சரளாவை உச்சத்திற்கு கொண்டு சென்றது என்றால் மிகையில்லை. என்ன தெரியும் இந்த சின்னப் பெண்ணுக்கு பாடலும் அதே போல் பிரபலமானது. இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்த பாடல் தான் தொட்டதா தொடாததா பாடல். டி.எம்.எஸ். சுசீலா குரலில் சூப்பர் ஹிட்டான பாடலை இப்போது காண்போம்.


http://youtu.be/feQRGYjuG3Y

mr_karthik
26th December 2011, 08:07 PM
அன்புள்ள ராகவேந்தர் சார்,

60-களில் முக்தா பிலிம்ஸ் படங்களில் வி.குமார் கொடிகட்டிப்பறந்தார். 'நினைவில் நின்றவள்', 'பொம்மலாட்டம்', 'நிறைகுடம்' படங்களில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்.

பாடல்களில் பாங்கோஸை சற்று தூக்கலாக இசைப்பது குமாரின் ஸ்பெஷாலிட்டி.

vasudevan31355
27th December 2011, 07:01 AM
அன்பு கார்த்திக் சார்,

தங்கள் உற்சாகமான பாராட்டுக்களுக்கு என் உற்சாகமான நன்றிகள்.

கலை நிலவின் அத்தனை படங்களையும் இத்திரியில் அலசிவிட வேண்டும் என்ற எண்ணம் தங்களைப் போன்ற விரல் விட்டு எண்ணி விடக்கூடிய அருமையான ரசிகர்களின் அன்பினாலும், ஆதரவினாலும் எனக்கு ஏற்படுகிறது. இத்திரியை ரசிக வேந்தர், பம்மலார், தங்களைப் போன்ற அன்பு ரசிகர்களின் துணை இருப்பதால் எங்கோ கொண்டு சென்று விடலாம். ரவியின் படங்கள் நமக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கக்கூடியவை என்பது நிஜம்.

அது சுமாராய் இருந்தாலும் சரி. இரண்டு ஜாலிப் பாட்டு, இரண்டு டூயட், மூன்று நான்கு அனல் கக்கும் ஸ்டன்ட், கொஞ்சம் தாய், தங்கை செண்டிமெண்ட் என்ற மசாலாக் கலவை என்று அவர் படங்கள் நம்மை ஈர்த்துவிடும்.

மறுபடியும் தங்கள் உன்னத ரசனைக்கு என் உண்மையான நன்றிகள்.

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
27th December 2011, 08:16 AM
'மாலதி' (1970) ஒரு சிறப்பு பிளாஷ்பேக்

http://74.208.147.65/ahtees/admin/movies/content/5681_17_Malathi.jpg

நடிகர்கள்: ஜெமினி கணேசன், 'கலை நிலவு' ரவிச்சந்திரன், சரோஜாதேவி, வரலக்ஷ்மி, நாகேஷ், சுந்தரராஜன், 'தேங்காய்' சீனிவாசன்

படம் வெளி வந்த ஆண்டு: 29-10-1970

தயாரிப்பு:-சித்ரா புரொடக்ஷ்ன்ஸ்

பாடல்கள்:-"கவியரசு"கண்ணதாசன்

மூலக்கதை:-கோமதி சுப்ரமணியம்

இசை: "மெல்லிசைமன்னர்" எம்.எஸ்.விஸ்வநாதன்.

திரைக்கதை,வசனம், இயக்கம்: கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்.

'இயக்குநர் திலகம்' கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் இயக்கத்தில் வெளி வந்த படம். காதல் மன்னனும், கலைநிலாவும் இணைந்து நடித்த குடும்பச் சித்திரம்.

'கதை:

ஜெமினியும் சரோஜாதேவியும் காதலர்கள். சந்தர்ப்பவசத்தால் சரோஜாதேவி ரவியைத் திருமணம் செய்ய நேரிடுகிறது. ரவி குடிகாரனாகவும்,பெண் பித்தனாகவும் அலைய சரோஜாதேவி பொறுமை காத்து பழைய காதலனையும் ஆறுதல்படுத்தி, தன் குடிகாரக் கணவரைத் திருத்த சபதமெடுத்து, அவனால் பற்பல இன்னல்களை அனுபவித்து இறுதியில் அவனைத் திருத்தி வெற்றிவாகை சூடுவதே கதை.

இயக்குனர் திலகத்தின் குடும்ப செண்டிமெண்ட் வசனங்கள் ஆழாமாயும், கருத்துள்ளதாகவும் இருந்தது.

ரவியும் குடிகாரனாகவும் பெண் பித்தனாகவும் நன்றாகச் செய்திருப்பார். தான் செய்பவை தவறுகள் என மனைவி உணர்த்தியபின் உணர்ந்து மீண்டும் பழக்க வழக்கங்களில் இருந்து விடுபடமுடியாமல் தவிப்பதும், தன் தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியாமல் மனைவியிடம் புலம்புவதும் ரவிக்கு நடிக்க சந்தர்ப்பம் வாய்த்த இடங்கள். அதை அவரும் நன்றாகப் புரிந்து பயன்படுத்திக் கொண்டிருப்பார். ஜெமினி ஆரம்ப கால சரோஜாதேவியின் காதலனாக வந்து காதல் லீலைகளில் ஈடுபடுவது வழக்கம் போல. 'சிவந்தமண்' மேஜிக் ராதிகாவும் உண்டு. இவரும் K.S.G.யின் நிறையப் படங்களில் நடித்துள்ளார். (சின்னஞ்சிறு உலகம்' படத்தில் கே. ஆர் விஜயாவுக்கு அடுத்தபடியான ஹீரோயினாக வருவார். புதுமைப் பெண்களடி... பூமிக்குக் கண்களடி...என்ற பாடல் கூட அவருக்கு கோஷ்டியுடன் உண்டு).

ஹீரோயின் சப்ஜெக்ட் என்பதால் அபிநயசரஸ்வதிக்கு படம் நெடுக சுமைதாங்கியாய் வேலை. சற்று வயது முதிர்ந்த இரண்டாவது ரவுண்ட் வந்த சரோஜாதேவியை இதில் காணலாம். எனவே டூயட் சீன்கள் கொஞ்சம் நெருடல். இருந்தாலும் இந்தக் கால ஹீரோயின்களை விட நன்றாகவே சோபிப்பார். (இந்தக் கால இளசுகளின் சுடிதாரை அப்போதே அணிந்து அசத்தியிருப்பார்) தேங்காய் ரவியின் நண்பனாக வந்து சகல பழக்கங்களையும் ரவிக்கு கற்றுத் தருகிறார். அவருக்கு அது ச்சும்மா..என்பது போல.

K.S.G.யின் ஆஸ்தான நடிகை வரலக்ஷ்மி இல்லாமலா?... நாகேஷ் கிச்சு கிச்சு மூட்டுகிறார். மேஜரும் தன் பங்குக்கு குறை வைக்கவில்லை.

பாடல்கள்:

"கற்பனையோ கைவந்ததோ" என்ற பி.சுசீலாவுடன் இணைந்து இளம் S.P.B. யின் குழையும் காந்தக் குரலில் ஒலிக்கும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாத பாடல்

"சிடு சிடு சிடு சிடுவென...என்ற S.P.B., பி.சுசீலாவின் குரல்களில் ஒலிக்கும் உற்சாகப் பாடல்.

"எங்கே என் கிண்ணங்கள்" என்ற T.M.S இன் ஜாலி பாடல் (ராதிகா...தேவிகா...ஓடிவா... என்று வரிசையாக பெண்களின் பெயரை உச்சரிப்பது அழகு. இந்த டைப் பாடல்கள் ரவிக்கு எவ்வளவு பொருத்தமாய் இருக்கின்றன!)

http://www.buycinemovies.com/images/detailed/0289-vcd-37.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-25.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/9-6.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-24.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-13.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-13.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-19.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-12.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/7-7.jpg



அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
27th December 2011, 09:18 AM
'மாலதி' நிழற்படங்கள் தொடர்கின்றன.

http://www.inbaminge.com/t/m/Malathi/folder.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-26.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-14.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-20.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-14.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-13.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/7-8.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/8-7.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/9-7.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
27th December 2011, 10:00 AM
'மாலதி' வீடியோ பாடல்கள்

"கற்பனையோ கைவந்ததோ" சூப்பர் ஹிட் பாடல் வீடியோ வடிவில்


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=3rEaqikgqyM

"சிட் சிட் சிட் எங்கே போவோம்" தூள் பாடல் வீடியோ வடிவில்


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=GSE_MXZjvrs


அன்புடன்,
வாசுதேவன்.

saradhaa_sn
27th December 2011, 05:45 PM
டியர் பம்மலார்,

பேசும்படம் இதழில் வந்த ரவியின் சிறப்பு வண்ணப்படம், இதயக்கமலம் விளம்பர ஆவணம் மற்றும் இதயக்கமலம் விமர்சனப்பதிவு அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது. காணக்கிடைக்காத இத்தகைய பொக்கிஷங்களை இங்கே பதிப்பித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியமைக்கு மிக்க நன்றி.

தங்களின் இதுபோன்ற தொடர் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.

saradhaa_sn
27th December 2011, 06:00 PM
டியர் வாசுதேவன்,

கலை நிலவு ரவிச்சந்திரன் அவர்களின் திரியில் தங்களின் சமீபத்திய பங்களிப்புகளைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை. சமீப காலம் வரை சற்று தொய்வடைந்த நிலையில் காணப்பட்ட இத்திரி தற்போது தங்களின் மேலான அக்கறையினால் ஜெட் வேகமெடுத்துள்ளது. அதற்காக ஏராளமான நன்றிகள்.

இத்திரியில் தங்களது சமீபத்திய பதிவகளனைத்தையும் கண்டு மலைத்துப்போய்விட்டேன். எவ்வளவு வீடியோ இணைப்புக்கள், எவ்வளவு அரிய புகைப்படங்கள். ஒவ்வொரு படத்துக்கும் குறிப்புக்கள் என அச்த்துகிறீர்கள்.

தனித்தனி பாடல்களின் வீடியோக்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு படத்துக்குமான வீடியோக்களும் புகைப்படங்களும் மிகவும் நன்றாக இருக்கின்றன. மதராஸ் டு பாண்டிச்சேரியில் துவங்கி, நாலும் தெரிந்தவன், கௌரி கல்யாணம், மாலதி என்று படங்களைப்பற்றி அலசுவதில் அசுர வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறீர்கள். (நாலும் தெரிந்தவனில் ரவியும் காஞ்சனாவும் இணைந்திருக்கும் புகைப்படம் கருப்பு வெள்ளையிலும் கூட என்ன தெளிவு, என்ன அழகு). நீங்கள் சொல்லியிருப்பதுபோல, ரவியின் படங்கள் எப்போதும் பொழுதுபோக்கு அம்சங்களைப் பொறுத்தவரை பார்ப்போரை ஏமாற்றாமல் அமைந்திருக்கும்.

இன்னும் பல்வேறு படங்களையும் கவர் பண்ன இருப்பதான உங்கள் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. ஜமாயுங்கள்.

தங்கள் சிரத்தையான உழைப்புக்கு பாராட்டுக்கள், நன்றிகள்.

saradhaa_sn
27th December 2011, 07:20 PM
டியர் ராகவேந்தர் அண்ணா,

ரவிச்சந்திரன் நடித்த பல்வேறு சிறந்த பாடல்களின் வீடியோ இணைப்புக்கள அளித்து எல்லோரையும் மகிழ்ச்சியுறச்செய்து வருகிறீர்கள். அவருடைய் ஸ்டைலும் சுறுசுறுப்பும் பாடல் காட்சிகளில் தனியே தெரிகிறது. குறிப்பாக, 'தொட்டதா... தொடாததா...' பாடல் அருமை.

தங்கள் பதிவுகளுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து பட்டையைக் கிளப்புங்கள்

vasudevan31355
28th December 2011, 07:03 AM
காதலிக்க நேரமில்லை' எவர்க்ரீன் மூவி
பிரம்மாண்ட ஸ்பெஷல்

(அசத்தல் கலர்புல் ஸ்டில்கள்)

'கலைநிலவு' ரவிச்சந்திரன் அவர்களின் அறிமுகப் படம்

http://www.jointscene.com/ahtees/admin/movies/content/4694_17_first.jpg

http://www.jointscene.com/ahtees/admin/movies/content/4694_17_Kathalikka%20Neramillai.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/7-9.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-27.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/2-27.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/3-21.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/4-15.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/5-15.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/6-14.jpg

http://www.tamilpix.com/uploads/62f36f881a.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th December 2011, 07:38 AM
'காதலிக்க நேரமில்லை' நிழற்பட பிரம்மாண்டம் தொடர்கிறது

http://www.shotpix.com/images/03087038791946771349.jpg

http://www.shotpix.com/images/12324453759896693537.jpg

http://www.shotpix.com/images/68623320721693104157.jpg

http://www.shotpix.com/images/36133493156927213308.jpg

http://www.shotpix.com/images/48078227083988209560.jpg

http://www.shotpix.com/images/63183401493709817310.jpg

http://uyirvani.com/image/images/bscap0017.jpg

http://uyirvani.com/image/images/bscap0013.jpg

http://www.jointscene.com/ahtees/admin/movies/content/4694_19_spot.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th December 2011, 07:53 AM
http://e.indiaglitz.com/tamil/news/ravichandran_int/images/ravi_02.jpg

என்றும் மறக்க முடியாத 'காதலிக்க நேரமில்லை' புதுமை இயக்குனர் ஸ்ரீதர்

http://600024.com/specials/files/2011/07/11.jpg

Classic Movie – Kadhalikka Neramillai

Classicism in art need not be of a particular genre and it is open for any mastery and masterpiece. In painting there are classical personalities from Picasso to the latest FM Hussain. In music too there are many classical composers and no field is excluded for this classical efforts. In movies the classicism is too often a rare phenomenon since it involves a complex set of activities. But the full credit should go to the director of that movie that only through his strenuous efficiency that the classical note could be arrived and derived. In Tamil cinema industry right from the days of good old 1950s there have been the visit of classical directors. The highlight is that they enliven for that classical feature rather than the commercial aspects. The audience too were willing to recognize the directors for their might. Among the notable directors in Tamil movie world who can be alluded the real classicism, Sridhar is the one director who is still the very best in classic in every touch.

Thanks to 600024.com

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th December 2011, 08:25 AM
'காதலிக்க நேரமில்லை'

அனைத்து சூப்பர் ஹிட் பாடல்களின் நிழற்படங்கள்.

"என்னப் பார்வை...உந்தன் பார்வை"....

http://www.grantimage.com/out.php/i33104_enna-paarvai.jpg

"மாடி மேலே மாடி கட்டி"....

http://www.grantimage.com/out.php/i33106_maadi-mele.jpg

"உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா"....

http://www.grantimage.com/out.php/i33110_unga-ponnaana-kaigal.jpg

"அனுபவம் புதுமை... அவனிடம் கண்டேன்"....

http://www.grantimage.com/out.php/i33103_anubhavam-pudhumai.jpg

"நாளாம் நாளாம் திருநாளாம்"...

http://www.grantimage.com/out.php/i33108_naalam-naalam.jpg

"மலரென்ற முகமிங்கு சிரிக்கட்டும்"...

http://www.grantimage.com/out.php/i33107_malarendra-mugam-ondru.jpg

"காதலிக்க நேரமில்லை...காதலிப்பார் யாருமில்லை"...

http://www.grantimage.com/out.php/i33105_kadhalikka-neramillai.jpg

"நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா... தா...தா"...

http://www.grantimage.com/out.php/i33109_nenjathai-alli-konjam.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th December 2011, 08:44 AM
சிறப்பு நிழற்படம்.(முத்தான ராமனும், சந்திரனான ரவியும்)

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/1-28.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th December 2011, 08:54 AM
'காதலிக்க நேரமில்லை' நிழற்பட பிரம்மாண்டம் தொடர்கிறது

http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcQ2wzqM1LE5aJhRCqUX1OqLYjH4CNvRV WYWaQr3smqRNT5qENv8pRnM7XFI

http://img176.imageshack.us/img176/869/kn8il4.jpg

http://img228.imageshack.us/img228/1540/kn13mg9.jpg

DVD details.

http://www.buycinemovies.com/images/detailed/0375-vcd37.jpg

http://img413.imageshack.us/img413/3695/khadalikka01zc0.jpg

http://img413.imageshack.us/img413/9603/khadalikka02wp6.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th December 2011, 09:02 AM
'காதலிக்க நேரமில்லை' நிழற்பட பிரம்மாண்டம் தொடர்கிறது

http://www.hindu.com/cp/2008/10/24/images/2008102450160401.jpg

http://incap.files.wordpress.com/2009/11/832.jpg

http://uyirvani.com/image/images/bscap0kdk.jpg

http://uyirvani.com/image/images/bscap0012.jpg

http://uyirvani.com/image/images/bscap0015.jpg


http://img132.imageshack.us/img132/8792/khadalikka10rp1.jpg

http://img413.imageshack.us/img413/4034/khadalikka11mo0.jpg

http://img132.imageshack.us/img132/2484/khadalikka09yu5.jpg

http://img245.imageshack.us/img245/6858/khadalikka08cp4.jpg

http://img132.imageshack.us/img132/5858/khadalikka12wl9.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th December 2011, 09:11 AM
http://www.cinemaal.com/uploads/thumbs/4c8c2b1185a91tmw.gif

'காதலிக்க நேரமில்லை' ஸ்பெஷல் பதிவுமூலம் வாழ்நாள் முழுதும் நம்மை இப்படத்தின் மூலம் மகிழ்ச்சிக் கடலில் மூழ்க வைத்த 'காதலிக்க நேரமில்லை' வசனகர்த்தா 'சித்ராலயா' கோபு அவர்களை வாழ்நாள் முழுதும் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துவோம்.

'காதலிக்க நேரமில்லை' வசனகர்த்தா 'சித்ராலயா' கோபு அவர்களின் சதாபிஷேக ஆண்டு (june 30 2011)

http://images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/chitralaya-gopu-80th-wedding/wmarks/chitralaya-gopu-80th-wedding26.jpg

http://www.apinternationalfilms.com/image/cache/data/DVD/Tamil/KADHALIKKA-NERAMILLAI-200x285.jpg

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th December 2011, 09:54 AM
'காதலிக்க நேரமில்லை' காவியத்தின் அனைத்துப் பாடல்களும் வீடியோ வடிவில்.

என்னப் பார்வை...உந்தன் பார்வை"....


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=dXkpv-ZJ6Hw

"மாடி மேலே மாடி கட்டி"....


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=S4fLHo1ls7o

"உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா"....


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=TflAsec3GSc

"அனுபவம் புதுமை... அவனிடம் கண்டேன்"....


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=k9Tjz6_GEDI

"நாளாம் நாளாம் திருநாளாம்"...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=fZg-s_ndyNA

"மலரென்ற முகமிங்கு சிரிக்கட்டும்"...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=nUI0w2QXkEg

"காதலிக்க நேரமில்லை...காதலிப்பார் யாருமில்லை"...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=A2Dq4CzZLaQ

"நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா... தா...தா"...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=3jzBY944yXw

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th December 2011, 11:32 AM
நாகேஷ் மற்றும் பாலையா காமெடி சீனுக்கு லிங்க்

http://video.google.com/videoplay?docid=5646667735914155241

அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th December 2011, 05:44 PM
'காதலிக்க நேரமில்லை' பட மற்றும் பாடல் காட்சிகள் தொடர்கிறது....

http://www.chennai365.com/wp-content/uploads/general/Oct/Kaadhalikka_Neramillai.jpg

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/8-9.jpg

https://lh3.googleusercontent.com/-x7ZwIj2aa8Q/TXNn4T36AXI/AAAAAAAACZU/4REP0R8n3zw/s1600/Kadhalika+neramillai_nenjathai_tamilhitsongs.blogs pot.com.mkv_thumbs_%255B2011.03.06_16.23.26%255D.j pg

https://lh3.googleusercontent.com/--AOp1acQoyc/TXNn_r9J2hI/AAAAAAAACZY/ZzVCvRiD6QY/s1600/Kadhalikka+neramillai_ungal+poonana+kaikal_tamilhi tsongs.blogspot.com.mkv_thumbs_%255B2011.03.06_16. 23.57%255D.jpg

https://lh5.googleusercontent.com/-u1zWJaPrqKs/TXNoFFXtU1I/AAAAAAAACZc/FIKEuMQM9qU/s1600/Kadhalika+neramillai_maadi+mellai_tamilhitsongs.bl ogspot.com.mkv_thumbs_%255B2011.03.06_16.23.02%255 D.jpg

https://lh4.googleusercontent.com/-NsjdbhoIG30/TXNoM5kZ4YI/AAAAAAAACZg/6cPGJAYxgUE/s1600/Kadhalika+neeramillai_enna+paarvai_tamilhitsongs.b logspot.com.mkv_thumbs_%255B2011.03.06_16.22.51%25 5D.jpg

https://lh4.googleusercontent.com/-kRM2lvj1_ck/TXNoWuCqOsI/AAAAAAAACZk/ss0DhqK5f4A/s1600/Kadhalika+neramillai_naalam+naalam_tamilhitsongs.b logspot.com.mkv_thumbs_%255B2011.03.06_16.23.15%25 5D.jpg

https://lh4.googleusercontent.com/-koPFeJ840xQ/TXNocpg6GwI/AAAAAAAACZo/7QL0esg65qA/s1600/Kadhalikka+neramillai_Kadhalikka+neramillai_tamilh itsongs.blogspot.com.mkv_thumbs_%255B2011.03.06_16 .23.48%255D.jpg


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th December 2011, 06:16 PM
'காதலிக்க நேரமில்லை' படக் காட்சிகள் தொடர்கிறது....

http://i715.photobucket.com/albums/ww156/gowthamw595/vlcsnap-13184.png

http://i715.photobucket.com/albums/ww156/gowthamw595/vlcsnap-14650.png

http://i715.photobucket.com/albums/ww156/gowthamw595/vlcsnap-18265.png

http://i715.photobucket.com/albums/ww156/gowthamw595/vlcsnap-15866.png

http://i715.photobucket.com/albums/ww156/gowthamw595/vlcsnap-15905.png

http://i715.photobucket.com/albums/ww156/gowthamw595/vlcsnap-18435.png

http://i715.photobucket.com/albums/ww156/gowthamw595/vlcsnap-14920.png


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
28th December 2011, 06:29 PM
அன்பு நண்பர்களுக்கு,

'காதலிக்க நேரமில்லை' பிரம்மாண்டத்திற்காக இரண்டு நாட்கள் முழுமையாக எடுத்துக் கொண்டேன். மொத்தம் 73 பதிவுகள். நீண்ட நாட்கள் மனதில் பூட்டப் பட்டிருந்த ஆவல் இன்றுதான் ஓரளவுக்கு நிறைவேறியது. அனைவருக்கும் பிடித்த படம் என்பதாலும், "கலைநிலவு" ரவியின் முதல் படம் என்பதாலும், அதுவும் முதல் படமே வண்ணப் படமாக இருந்ததாலும்தான் இதை ரவி அவர்களின் இத்திரியில் சற்று பிரம்மாண்டமாகச் செய்யத் தோன்றியது. தங்கள் மேலான ஆதரவுகளுக்கு நன்றி!

அன்புடன்,
வாசுதேவன்.

RAGHAVENDRA
4th January 2012, 01:07 AM
அன்பு வாசுதேவன் சார்,
காதலிக்க நேரமில்லை படத்திற்காக தாங்கள் எடுத்துக் கொண்ட சிரத்தையைப் பாராட்ட வார்த்தையில்லை. சிம்ப்ளி சூபர். கீப் இட் அப்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் TFMLover அவர்கள் தயவால் இரு முத்துகள் கிடைத்துள்ளன. அவருக்கு நம் உளமார்ந்த நன்றி.

வாலிப விருந்து படத்திலிருந்து எங்கே எங்கே என்ற பாடலும் மணமகள் தேவை பாடலும்


http://youtu.be/nSuP1spVkD0


http://youtu.be/iS5CW0JJQLo

tfmlover
21st January 2012, 01:33 PM
very welcome :) Ragavendra sir

Regards

tfmlover
21st January 2012, 01:34 PM
http://i102.photobucket.com/albums/m88/tfmlover1/VCKU/NT.jpg
http://i102.photobucket.com/albums/m88/tfmlover1/VCKU/nt1.jpg
Regards

RAGHAVENDRA
21st January 2012, 02:08 PM
நாலும் தெரிந்தவன் படத்தைப் பற்றிய குகநாதனின் கட்டுரை மிகவும் அபூர்வமானது. நன்றியும் பாராட்டுக்களும், TFMLover அவர்களே.

நாலும் தெரிந்தவன் திரைப்படம் நெடுந்தகடு வெளியிடப் பட்டுள்ளது. ஆனால் அதில் முக்கியமான டூயட் பாடலான நிலவுக்கே போகலாம் வான் நிலவுக்கே பாடல் இடம் பெறவில்லை. ஏனென்று தெரியவில்லை. நரி ஒன்று சிரிக்கின்றது உள்பட மற்ற பாடல்கள் உள்ளன.

RC
21st January 2012, 09:45 PM
So... நாலும் தெரிந்தவன் = sathyaraj-in nadikan.

tfmlover
22nd January 2012, 10:04 AM
So... நாலும் தெரிந்தவன் = sathyaraj-in nadikan.

oh ! i haven't actually seen it though ! not surprised either
same old movies( +tunes ) being recycled year in year out
guys use every trick in the book


Regards

veegopalji
2nd April 2012, 02:25 AM
நண்பர் சாரதா அவர்களே :

"கலை நிலவு" ரவிச்சந்திரன் பற்றி நீங்கள் எழுதிய விரிவான
கட்டுரைகள் மிகச் சிறப்பாக இருந்தன. எங்களைப் போன்ற
ரசிகர்களைதத் துயரத்தில் தவிக்கவிட்டு விட்டுச் சென்று
விட்டார். நீங்கள் அவரைச் சந்தித்தது போல் நானும் என்
நண்பரகளும் கூட அவரை வடக்கு உஸ்மான் சாலை, தி நகர், வீட்டில்
சந்தித்தது இன்றும் எனக்குப் பசுமையாக நினைவில் இருக்கிறது.
அது 1968 என்று நினைக்கிறேன். அவர் வீட்டிற்குச் சென்ற போது
அவர் மனைவி விமலாவுடன், வீட்டு வாய்ரிபடியில் உட்கார்ந்துகொண்டு
தன் நாயுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அந்தக் காட்சி இன்றும்
நினைவில் உள்ளது. அவருடைய பழைய திரைப் படங்களைப்
பற்றிய தொகுப்பு மிகவும் அற்புதம். எத்தனை செய்திகள். மிகவும்
கடின உழைப்பின்றி இவ்வளவு சாத்தியமல்ல. அதே போல் பம்மலார்
என்ற நண்பர் உங்களைப் போன்றே பல தகவல்கள் - படம் ஓடிய இடங்கள்,
திரையரங்குகள் என்று அசத்தி விட்டார் ! உங்கள் இருவரையும் இந்தக்
குழுவின் மூலம்தான் தெரிந்து கொண்டேன். என்னுடைய மனமார்ந்த
வாழ்த்துக்கள். அதே போல் நம்ம நடிகர் திலகத்தைப் பற்றியும் .....
வாவ்....எப்பேர்ப்பட்ட செய்திகள்....ஒவ்வொன்றும் பிரமிக்க வைக்கிறது.
உங்கள் பனி மென்மேலும் சிறக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
மீண்டுமொரு முறை !

வாஞ்சி

veegopalji
2nd April 2012, 03:32 AM
"கலை நிலவு" ரவிச்சந்திரன் பற்றி நீங்கள் தளவேற்றம் செய்துள்ள
பல பிரம்மாண்டமான புகைப் படத் தொகுப்புகள் நீங்கள் ரவியின்
எத்தகைய தீவிர அபிமானி என்பதைச் சுட்டிக் காட்டுகிறது ! நீங்கள்
செய்துள்ள இத்தனை வேலைகளுக்கும் கிட்டத்தட்ட ஒரு வாரமாவது
எடுத்திருக்கும் ! வார்த்தைகளால் விவரிக்க இயலாத தொகுப்பு.
மறந்து போன பல நல்ல படங்களைப் பற்றியும் அதன் பாடல்கள்
பற்றியும் எழுதி சிறப்பு செய்திருக்கிறீர்கள். நன்றி, உங்களுடைய
இந்த முயற்சிக்கு வேறு எந்த கைமாறும் செய்ய முடியாது என்றே
எண்ணுகிறேன். எனவே, என்னுடைய மனார்ந்த வாழ்த்துக்களை
உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் !

வாஞ்சி

vasudevan31355
10th May 2012, 09:51 AM
"கலை நிலவு" ரவிச்சந்திரன் பற்றி நீங்கள் தளவேற்றம் செய்துள்ள
பல பிரம்மாண்டமான புகைப் படத் தொகுப்புகள் நீங்கள் ரவியின்
எத்தகைய தீவிர அபிமானி என்பதைச் சுட்டிக் காட்டுகிறது ! நீங்கள்
செய்துள்ள இத்தனை வேலைகளுக்கும் கிட்டத்தட்ட ஒரு வாரமாவது
எடுத்திருக்கும் ! வார்த்தைகளால் விவரிக்க இயலாத தொகுப்பு.
மறந்து போன பல நல்ல படங்களைப் பற்றியும் அதன் பாடல்கள்
பற்றியும் எழுதி சிறப்பு செய்திருக்கிறீர்கள். நன்றி, உங்களுடைய
இந்த முயற்சிக்கு வேறு எந்த கைமாறும் செய்ய முடியாது என்றே
எண்ணுகிறேன். எனவே, என்னுடைய மனார்ந்த வாழ்த்துக்களை
உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் !

வாஞ்சி

டியர் வாஞ்சி சார்,

தாங்கள் யாரை குறிப்பிட்டுள்ளீர்கள் என சரியாகத் தெரியவில்லை. இருப்பினும் சகோதரி சாராதா மற்றும் அன்பு சகோதரர் பம்மலாரின் அளப்பரிய சேவைகளை மனமுவந்து பாராட்டியமைக்கு அவர்கள் சார்பிலும் என் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுக்காக ரவியின் பாடல்களில் ஒன்று.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=0G3FInK3DtA

vasudevan

RAGHAVENDRA
10th May 2012, 10:16 AM
எங்கே எங்கே என்று தேடிய போது இங்கே இங்கே இந்த பெட்டியிலே அடைத்து வைத்துள்ளேன் என்று தந்த வாசுதேவன் சார், சூப்பர். இதே போல் மாடி வீட்டு மாப்பிள்ளையில் இடம் பெற்ற டூயட் பாடலை (நெஞ்சுக்கு முகமே கண்ணாடி என எண்ணுகிறேன்) காணொளியாக வழங்க இயலுமா

RAGHAVENDRA
10th May 2012, 10:17 AM
நம் அனைவருக்காக இதோ ஒரு அருமையான பாடல் மாடி வீட்டு மாப்பிள்ளை படத்திலிருந்து. என்னை மன்னிக்க வேண்டும் என சுசீலா கேட்கிறார். நீங்களும் கேளுங்களேன்.

http://youtu.be/VPG6ykgbJU4

RAGHAVENDRA
10th May 2012, 10:22 AM
அதே படத்தில் மற்றொரு மிகப் பிரபலமான பாடல். டி.எம்.எஸ். சுசீலா குரல்களுடன் கோரஸ் இணைந்து கலக்கும் பாடலை,

கேட்டுப் பார் கேட்டுப் பார் ... கேட்டுப் பாரு கேள்விகள் நூறு....

http://youtu.be/LyssKKcEMlY

vasudevan31355
10th May 2012, 10:36 AM
நன்றிகள் ராகவேந்திரன் சார்!

தங்கள் ஆசைதான் என் ஆசையும். கண்ணாடியைத் தர முயல்கிறேன்.

'என்னை மன்னிக்க வேண்டும் கன்னியரே', 'கேட்டுப் பார்.. கேட்டுப் பார்' என்று அடிக்கடி கேட்க முடியாத கானங்களைக் கேட்டுப்பார் என்று கேட்க வைத்த ரசிக வேந்தரே! ராட்சஷ நன்றிகள் தங்களுக்கு.

vasudevan31355
12th May 2012, 03:57 PM
'இது நீரோடு செல்கின்ற ஓடம்' நம் இதயத்தை பிழிந்து ரத்த நாளங்கள் அனைத்திலும் ஊடுருவி இனம் புரியாத உணர்ச்சிகளை நம்மகத்தே உருவாக்கும் அற்புத பாடல் 'ஜஸ்டிஸ் விஸ்வநாதன்' திரைப்படத்திலிருந்து சீர்காழி அவர்களின் சீர்மிகு குரலில்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=FE5Wqz-EqPc

vasudevan

vasudevan31355
12th May 2012, 05:47 PM
காவியத் தலைவி.(1970)

http://600024.com/store/image/cache/data/moserbaer/Kaaviya%20Thalaivi-500x500.jpg http://lh4.google.com/anilkumar.marri/RozrjVumKuI/AAAAAAAAAFs/caUoQSmaMGg/9.jpg?imgmax=400

http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcToPxUFJkjRt8FSM6xE_6VyCq8S6cA6U YvVkyilUvjQacUsvIcXNVeXTzBYlw http://www.whatsonindia.com/WhatsOnTV/images/ProgramImages/XLarge/30000000000005918.jpg

கடவுள் எல்லா இடங்களிலும் தானே இருக்கமுடியாது என்பதனால் தான் தாயைப் படைத்தான்."தாய் எனப்படுபவள் ஒரு காவியம்" இது ஒரு தாயின் கதை."ஆகவே இது ஒரு காவியத்தின் கதை"

நடிக,நடிகைகள்:-ஜெமினிகணேசன், செளகார்ஜானகி(மாறுபட்ட இரு வேடங்களில்), "கலைநிலவு"ரவிச்சந்திரன், எம்.ஆர்.ஆர்.வாசு, வி.எஸ்.ராகவன், எஸ்.வரலட்சுமி, எஸ்.என்.ஜானகி, லட்சுமிபிரபா, நிர்மலா, "ஜெமினி"மகாலிங்கம், நீலு, வீரராகவன், சேஷாத்திரி, வீராச்சாமி, கிருஷ்ணாராவ்,

இசையமைப்பு:-"மெல்லிசை மன்னர்"எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்.

பாடல்கள்:-"கவியரசு"கண்ணதாசன் அவர்கள்.

தயாரிப்பு:-செளகார்ஜானகி அவர்கள்.

மூலக்கதை:-நிஹார் ரஞ்சன் குப்தா அவர்கள்.

திரைக்கதை,வசனம்,இயக்கம்:-கே.பாலசந்தர் அவர்கள்.

மற்றொரு அற்புதமான பாடல். ரவியும், சௌகாரும் டூயட்டில் இணைய, பின்னணிக் குரல்களில் பாலுவும், ஈஸ்வரியும் பின்னியெடுக்க, மெல்லிசை மன்னரின் அற்புத இசையில் காலமெல்லாம் நம்மை கட்டிப் போடும் 'ஆரம்பம் இன்றே ஆகட்டும்' காவியத் தலைவியில்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=NOQ-Z-rap1s

ஏழேழு ஜென்மத்திற்கும் மறக்க முடியாத, சுசீலாவின் ஈடு இணையில்லா சுகமான குரலில் 'கையேடு கை சேர்க்கும் காலங்களே!' காந்தப் பாடல்.


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=FwWflRp7LI4

vasudevan

vasudevan31355
13th May 2012, 09:59 AM
இதயக்கமலம் (1965)

http://4.bp.blogspot.com/-5kfvmjpiqbo/TmN4hjWE3NI/AAAAAAAAC24/SXAHcLX4CwQ/s320/Idhaya%2Bkamalam-%2Bm.JPG

http://i.ytimg.com/vi/1s2WGaupX2M/0.jpg

'நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ...போ...போ'...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=H-oB0kcL7Kc

'என்ன தான் ரகசியமோ இதயத்திலே'...


http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=TC_ewqr6eqk

vasudevan

vasudevan31355
8th June 2012, 07:48 AM
"அஹ்ஹாஹ்ஹா... இன்று தேன் நிலவு" 'எதிரிகள் ஜாக்கிரதை' திரைப்படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியின் ஆர்ப்பாட்டமான குரலில். இனி ஒருவர் இப்படிப் பாட முடியுமா?


http://www.youtube.com/watch?list=UUe5WmW7xj4lfZH21gndsmdA&feature=player_detailpage&v=FtF6qfaTo7U


அன்புடன்,
வாசுதேவன்.

vasudevan31355
8th June 2012, 07:53 AM
"நடந்தது என்னவென்று நீயே சொல்லு"... 'குமரிப் பெண்' திரைப்படத்தில் ரவியும்,ஜெயலலிதாவும் மிதிவண்டியில் பாடுவதாக வரும் இந்த அற்புதப் பாடலைக் கேட்டு நீங்களே சொல்லுங்கள். (P.B.ஸ்ரீனிவாஸ் மற்றும் L.R.ஈஸ்வரி ஆகியோரின் அரிய அற்புதக் குரலில்)


http://www.youtube.com/watch?feature=player_detailpage&list=UUe5WmW7xj4lfZH21gndsmdA&v=JABss-Qc4sw[/color][/B][/size]
அன்புடன்,
வாசுதேவன்.

cokepepsi
9th July 2012, 07:47 PM
thankyou sir. treat.

vasudevan31355
26th July 2012, 07:02 PM
25-7-2012 அன்று 'கலைநிலவு' ரவிச்சந்திரன் அவர்களின் முதலாமாண்டு நினைவஞ்சலி. தன்னுடைய அழகாலும், துடிப்பான சண்டைக்காட்சிகள், மற்றும் நடனக் காட்சிகளால் இளைஞர்களைக் கவர்ந்த ரவிச்சந்திரன் அவர்களை அவருடைய நினைவு தினத்தில் நினைவு கூர்வோம்.

http://i1087.photobucket.com/albums/j462/vasudevan31355/r-8.jpg

ரவிச்சந்திரன் அவர்கள் நினைவாக நடிகர்திலகம் அவர்களின் 'மோட்டார் சுந்தரம் பிள்ளை' படத்திலிருந்து அவர் நடித்த பாடல் காட்சி. நடிகர் திலகம் ரசிப்பதாக வரும் பாடல் கூட.


http://www.youtube.com/watch?v=5x2LFD2KkOQ&feature=player_detailpage

RAGHAVENDRA
29th July 2012, 09:37 AM
இன்று 29.07.2012 ஞாயிறு காலை 9.15 மணிக்கு பொதிகை தொலைக்காட்சியில் என்றும் இனியவை நிகழ்ச்சியில் சிறப்பம்சமாக கலை நிலவு ரவிச்சந்திரன் படப் பாடல்கள் ஒளிபரப்பப் பட்டன. நன்றி பொதிகை தொலைக்காட்சிக்கு. மற்ற மொழி சேனல்கள் தங்கள் மொழியில் சாதனை படைத்தவர்களை அன்றைய தினம் முழுதும் அவர்களுடைய படத்தை லோகோ போன்று நாள் முழுதும் இடம் பெறச் செய்து பெருமை செய்யும். தமிழ்த் தொலைக்காட்சிகளில் வணிகமல்லவோ முதலிடம் பெறுகிறது..

நிகழ்ச்சியில் ஒளிபரப்பப் பட்ட பாடல்கள்


1. நாளாம் நாளாம்
2. மலரைப் போன்ற பருவமே
3. போதுமோ இந்த இடம்
4. புது வீடு வந்த நேரம்

vasudevan31355
29th July 2012, 04:12 PM
http://raretfm.mayyam.com/pow07/images/enga_pappa.jpg

RAGHAVENDRA
29th July 2012, 09:55 PM
மிக மிக நீண்ட.............நாட்களுக்குப் பின் ..... ரவி ரசிகர்கள், ஜெய் ரசிகர்கள் மட்டுமின்றி, எஸ் பி பாலா ரசிகர்களும் ஆவலுடன் விரும்பும் பாடல்... நான்கு சுவர்கள் படத்தில் இடம் பெற்ற ஓ மைனா பாடல் .... இது டி.எம்.எஸ். பாட ரவிச்சந்திரனின் குரல் இடையிடையே ஒலிக்கின்ற வடிவம். கலை நிலவு ரவி அவர்களின் நினைவு நாளை யொட்டி இப் பாடல் அவருக்கு அர்ப்பணிக்கப் படுகிறது.


http://youtu.be/Dg08Vs2-L_I

படத்தின் கதையைப் பாடல் வரிகளில் படியுங்கள்

சாட்சி வைத்துக் காதல் செய்யும்
காட்சியை நான் அன்று கண்டேன்
சாட்சியை நான் மாற்றி விட்டேன்
காட்சியைத் தான் திருப்புகின்றேன்

RAGHAVENDRA
4th August 2012, 11:04 AM
வந்துட்டாரய்யா வந்துட்டாரு....

ரவிக்காகவே அவதாரம் எடுத்த எஸ்.பி.பாலா வந்துட்டாரு ...

எஸ் பி பி என்ற மூன்றெழுத்தை உலகம் முழுதும் அறியச் செய்த மூன்றெழுத்துப் பாடல் ....

நான்கு சுவர்களில் இடம் பெற்று ஐம்புலன்களையும் வசீகரித்த பாடல் ...

ஏழு ஸ்வரங்களையும் இஷ்டப்படி ஆட்டிவைக்கும் வல்லமை பெற்ற மெல்லிசை மன்னர் என்ற

அஷ்டாவதானி உருவாக்கிய பாடல் ...

9 கோள்களும் இந்தப் பாடலைக் கேட்டால் நின்று விடும் ...

பத்து விரல்களும் நம்மை அறியாமல் தாளம் போடும் ...

இன்னும் என்ன தாமதம் ... பாருங்கள் ... கேளுங்கள்....


http://youtu.be/PfoaGs2muHc

vasudevan31355
9th August 2012, 10:32 PM
ஒ மை காட்... ஒ மைனாவா!?. இது என் கண்ணா!? நம்பவே முடியலையே.... ஆஹா... ஆஹா.. முன்னுரையை ரசிகவேந்தர் எழுதி விட்டார். இனி என்ன.. கலக்கல் தான். பாடல்களின் மணிமகுடம் இது ஒன்றே அல்லவா? குழைத்தெடுத்த குரலுக்கு சொந்தக்காரரான பாலாவின் டாப்மோஸ்ட் ஹிட்டாயிற்றே! ரசிகர்களில் எங்கள் ரசிகவேந்தர் மணிமகுடம் அன்றோ...

காணக் கிடைக்காத பொக்கிஷத்தை கண்டு மகிழச் செய்த ராகவேந்திரன் சார், தங்களுக்கு நன்றி எப்படி நவில்வது என்றே தெரிய வில்லை.

RAGHAVENDRA
22nd August 2012, 08:36 AM
நான்கு சுவர்கள் படத்திலிருந்து ....

நினைத்தால் நான் வானம் சென்று

நினைத்துப் பார்த்தீர்களா இப்பாடல் காட்சியினைக் காண்போம் என்று....

என்று சொல்கிறார்களோ ரவிச்சந்திரனும் வாணிஸ்ரீயும்

மெல்லிசை மன்னரின் சூப்பர் ட்யூனில் எஸ் பி பாலா சுசீலா குரல்களில் தேன் மழை பொழியும் தெவிட்டாத கானம்


http://youtu.be/Ci788YfG7OY

veegopalji
18th October 2012, 10:27 PM
நண்பர்களே :
ரவிச்சந்திரனின் லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.அவரை கல்லூரி நாட்களிலேயே அவர் வீட்டில் என் நண்பர்களுடன்
சந்தித்திருக்கிறேன். இங்கு நண்பர்கள் எழுதும் செய்திகள் மிகவும் பிரம்மாண்டமாகவும், அருமையாகவும் இருக்கின்றன. ரவியின்
பல படங்களைபப் பற்றி விரிவான செய்திகளைக் கொடுத்திருந்தது மிக்க வியப்பை ஏற்படுத்தியது. "எங்களுக்கும் காலம் வரும்" அவர்
நடித்த படம்தானே, அதைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லையே ? அதைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்கள்.

சாரதா, பம்மலார், வாசுதேவன் போன்ற நண்பர்கள் மிகவும் சிறப்பாக பல புள்ளி விபரங்களுடன் எழுதுவது, அதுவும் நாற்பது ஆண்டுகளுக்குப்
பிறகு எழுதுவது என்பது பிரமிக்கத்தக்க நினைவாற்றலை வெளிப்படுத்துகிறது. ரவியின் மீதுள்ள அன்பின் காரணமாக அவர் ரசிகர்கள் எப்படியெல்லாம்
அவரை ரசித்திருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது. தொடரட்டும் உங்கள் தொய்வில்லாத பணி.

நன்றியும், வாழுதுக்களுடன்,
வாஞ்சி.

mahendra raj
13th May 2013, 11:05 PM
oh ! i haven't actually seen it though ! not surprised either
same old movies( +tunes ) being recycled year in year out
guys use every trick in the book


Regards

Actually the original film is 'Professor', a Hindi film starring Shammi,Kapor and Kalpana released in 1963. It has beautiful songs with music by Shankar Jaikishen. 'Nadigan' is almost a carbon copy of 'Professor' whereas 'Naalum Therinthavan' is not so. Even P. Vasu, director of Nadigan only recently acknowledged that he got the 'inspiration' from 'Professor' although every inch it is an exact replica! When I saw 'Nadigan' in 1990 I was looking out for the credit title of the origin of the story but no where it was mentioned of Professor or its story writer. Just see the film 'Professor' online so that you can surmise for yourself.

Gopal.s
3rd June 2013, 09:50 AM
நான் ஒரு ரவிச்சந்திரன் ரசிகன்(ஜெய்சங்கர் அறவே பிடிக்காது) அவரை எல்லோரும் ஷம்மி கபூருடன் ஒப்பிட்டாலும் , ஷம்மி கபூரை விட handsome ஆனவர். சிவாஜிக்கு பிறகு கேமரா பார்வையில் handsome ஆக தெரிந்த நடிகர். பொழுது போக்கு படங்களில் சிவாஜி style படி நடித்தவர்.
நேற்று இதய கமலம் என்ற அருமையான படம்(கலைஞர் TV ) ரவி-கே.ஆர்.விஜயா ஜோடி படு cute .
நீ போகுமிடமெல்லாம் பாட்டில் side ways ஆக துள்ளி ஒரு step எடுப்பார் பாருங்கள் அடடா.!!
மலர்கள் நனைந்தன பாட்டில், பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி என்ற வரிகளில் ஒரு விஷம வெட்க சிரிப்பு. ரவி, ரவிதான்.
கே.எஸ். பிரசாத் படப் பிடிப்பு, மாமா மியூசிக் என்று heavy dinner நேற்று .
அவர் நடித்த இரண்டாவது படம் இதய கமலம் என்று நினைத்திருந்தேன். ஆனால் நல்வரவு என்ற படம்தான் இரண்டாவதாமே?யாருக்காவது விவரம் தெரியுமா?

Gopal.s
5th June 2013, 08:14 AM
ரவி நடித்த ஒரு படம் கூட விட்டதில்லை.(சிங்கப்பூர் சீமான் உட்பட) . ஜெய்சங்கரை விட உயரமான நட்சத்திரமாக இருந்தும், சில பல பழக்கங்களால் தன் உயரங்களை இழந்தவர்.1964 இலிருந்து 1968 வரை இவரளவு வெள்ளி விழா படங்களையும், பிரம்மாண்ட வண்ண படங்களையும் அன்றைக்கு உச்ச பட்ச superstar நடிகர்திலகம் கூட அந்த 5 வருட காலகட்டத்தில் கொடுத்ததில்லை.

என்னுடைய ரவி பட்டியல்.
காதலிக்க நேரமில்லை,இதயகமலம், குமரி பெண், வாலிப விருந்து,நாம் மூவர்,நிமிர்ந்து நில், நான், மூன்றெழுத்து, அதே கண்கள்,பணக்கார பிள்ளை,மீண்டும் வாழ்வேன்,பாக்தாத் பேரழகி, அக்கரை பச்சை,மெட்ராஸ் டு பாண்டிச்சேரி,நினைவில் நின்றவள்,காதல் ஜோதி,சபதம்,உத்தரவின்றி உள்ளே வா,புகுந்த வீடு..

திருச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரியில் படிக்கும் போது , என் பெரியப்பா வீடிருந்த ஆனைகட்டி மைதானம் என்ற இடத்தில் இவர் மனைவி விமலா, விமலா தங்கை வத்சலா, மகன்பாலாஜி, மகள் லாவண்யா,மைத்துனர் கிருஷ்ணன் என்ற குட்டி பையா அருகாமையில் வசித்த நண்பர்கள். ரவி ,இவர்களை சந்திக்க வருவார்.(முழுவதும் மீளவில்லை அப்போது)என் பெரியப்பா வீட்டில் வந்துதான் போன் பேசுவார்.(அப்போது போன் அபூர்வம்)பொதுவாக நிலம்,விவசாயம் சம்பந்தமானது. பெரியப்பாவிற்கு இவர் மனைவி,பிள்ளைகளுக்கு இழைத்த துரோகம் உவப்பில்லாததால்,வாடா ஒன்னோட favourite வந்துட்டான்,நீயே வந்து நில்லு ,நான் போறேன் என்பார்.(1974-75). என்னுடன் சகஜமாக பேசுவார் ரவி. பிறகு 1982 இல் ஒரு முறை பார்த்தேன். மையமாக ஒரு புரிந்த சிரிப்பு. பிறகு தொடர்பிலில்லை.

ரவி படங்களை இன்று பார்க்கும் போதும் மனதில் அதே குதூகலம்.

RAGHAVENDRA
5th June 2013, 08:40 AM
கோபால் சாரின் தயவால் ரவிச்சந்திரன் திரி சிறிது சூடு பிடித்து விட்டது. நாம் சும்மா இருக்கலாமா..

இதயக் கமலம் படத்திலிருந்து சில நிழற்படங்கள்

http://102.imagebam.com/download/fR4WYTDp7TjLXEy0S3c20Q/25810/258097638/IKAMALAM01.jpg

http://104.imagebam.com/download/u8HLg1NQjDStK9w9NMWHgA/25810/258097645/RAVIIK02.jpg

http://101.imagebam.com/download/zMxnHtc6ql9EmCyn9W-6sA/25810/258097651/RAVIIK01.jpg

http://102.imagebam.com/download/S7B8OX3zYBDjJiGaWD-5BA/25810/258097655/KRVIK01.jpg

http://105.imagebam.com/download/55HiJH03zxbRo_cqPMjTzA/25810/258097663/SHEELAIK01.jpg

RAGHAVENDRA
5th June 2013, 08:42 AM
மொள்ள மாரி கேப் மாரி ...

ஐயையோ.. காலைலே என்ன இந்த மாதிரின்னு பாக்கிறீங்களா...

கோபால் சாரின் விருப்பமான சிங்கப்பூர் சீமான் படத்தில் மனோரமா பாடிய பாடல் இது

நீங்களும் தான் இந்த இணைப்பில் கேட்டுப் பாருங்களேன்

http://www.inbaminge.com/t/s/Singapore%20Seeman/

http://www.inbaminge.com/t/s/Singapore%20Seeman/folder.jpg

mr_karthik
5th June 2013, 12:05 PM
அன்புள்ள கோபால் சார்,

உங்கள் பதிவிலிருந்து நீங்கள் தீவிர ரவிச்சந்திரன் ரசிகரும் கூட என்று தெரிகிறது. (உங்களுக்குப் பிடிக்காதவர்கள் வரிசையில் எம்.எஸ்.வி.யைத் தொடர்ந்து ஜெய்சங்கரும் இருப்பதாக தெரிகிறது).

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ரவியின் பேவரைட் படப் பட்டியலிலுள்ள பல படங்கள் முந்தைய பக்கங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவைகளைப்படித்து ஒவ்வொரு படத்துக்கும் உங்கள் மேலதிக விவரங்களையும் கருத்துக்களையும் தரலாமே.

திரி இன்னும் சூடு பிடிக்கும்.

Gopal.s
5th June 2013, 12:35 PM
ஐயையோ ,தலைவரே எனக்கு மிக மிக பிடித்த இசையமைப்பாளர் எம்.எஸ்.வீ.(எனக்கு எம்.எஸ்.வீ. இசை கடவுளுக்கு சமம்.) என் குடும்ப நண்பரும் கூட. எனக்கு அவரிடம் பிடிக்காதது Politics & Assumed false humility .

mr_karthik
5th June 2013, 01:17 PM
ரவிச்சந்திரன் மறைந்தபோது அவரது வாழ்க்கைக்குறிப்பைப் பற்றி எழுதிய பத்திரிகைகள், ரவிச்சந்திரன் முதலில் நடிகை ஷீலாவை திருமணம் செய்து வாழ்க்கை நடத்தியதாகவும் பின்னர் அவரைப்பிரிந்து விமலாவை திருமணம் செய்து கொண்டார் எனவும் தவறாக எழுதியுள்ளனர். அது உண்மை அல்ல.

அவர் 1967-லேயே திருமதி விமலாவை திருமணம் செய்து, விமலாவும் ரவிச்சந்திரனும் தம்பதிகளாக காட்சி தரும் புகைப்படம் 67 இந்தியன் மூவி நியூஸ் பத்திரிகையில் வந்திருந்ததை பிற்காலத்தில் காண நேர்ந்தது. அதன் பின்னர்தான் ஷீலாவின் வலையில் விழுந்து, விமலாவையும் குழந்தைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஷீலாவுடன் வாழ்க்கை நடத்தினார்.

'மஞ்சள் குங்குமம்', 'அப்பா அம்மா' போன்ற சில படங்களை இருவரும் சேர்ந்து தயாரித்து நடித்தனர். அனைத்தும் 'ப்ளாப்' . 'காதலிக்க 90 நாள்' என்ற படத்தை எடுத்தபோது ரவிச்சந்திரன் மிகவும் நொடித்துப்போனார். கடனாளியானார். அவ்வளவுதான், ஷீலா ரவியை உதறிவிட்டு வேறு பசையுள்ள இடம் நோக்கி பறந்துவிட்டார். தன தவறை உணர்ந்த ரவி, மீண்டும் திருச்சியில் பிள்ளைகளை வைத்துக் கொண்டு கஷ்ட ஜீவனம் நடத்தி வந்த தன மனைவி விமலாவிடம் சரணடைந்தார். அவர் நடிகை அல்ல, குடும்பத்தலைவியான குத்துவிளக்கு. திரும்பி வந்த / திருந்தி வந்த கணவரை ஏற்றுக்கொண்டதோடு தான் வேலைக்குப்போய் அவரையும் காப்பாற்றினார்.

அதன்பின்னர் ரவிச்சந்திரன் ஷீலாவைப்பற்றியோ, அல்லது ஷீலா ரவியைப்பற்றியோ எந்த பேட்டிகளிலும் குறிப்பிடுவதில்லை.

Gopal.s
5th June 2013, 01:38 PM
விமலா ,ரவியின் சொந்த அத்தை மகள். காதலிக்க நேரமில்லை வந்த போதே கல்யாணம்.(கிட்டத்தட்ட சிவாஜி போலவே முதல் படம் வந்த சூட்டோடு). ஷீலா -ரவி தொடர்பு இதய கமலம்,கௌரி கல்யாண நேரத்தில் ஆரம்பம். முற்றி ,அவர் குடும்பத்தை ஒதுக்கி மது பிரியர் ஆனது 1967 இல் இருந்து. பிறகு ஷூட்டிங் நேரத்தில் தன்னிலை மறந்து குடிப்பது, நேரம் அனுசரிக்காமை, சரியான நிர்வாகியை கூட வைத்து கொள்ளாதது, Public Relation ,அனாவசிய தி.மு.க சார்பு எல்லாமே அவரை உயரத்தில் இருந்து ,இறக்கியதோடு அல்லாமல் குழியிலும் தள்ளின.
சிகரெட் தூக்கி போட்டு பிடிக்கும் style அவர் நான்கு சுவர்கள் படத்தில் பண்ண வேண்டியது.
அது படத்துக்கு பொருந்தாது என்று சொல்லி, கே.பீ பிறகு மூன்று முடிச்சில் அதை உபயோகித்து ரஜினியை தூக்கி விட்டார்.
விமலா, வத்சலா, கிருஷ்ணன் எனது நெருங்கிய நண்பர்கள். அப்போது பாலாஜி,லாவண்யா சிறுவர்கள்.
ஷீலா-ரவிக்கு ஒரு பையன் உண்டு

RAGHAVENDRA
5th June 2013, 04:06 PM
கோபால் அவர்களுக்காக இதயக் கமலம் திரைப்படத்திலிருந்து மேலும் சில நிழற்படங்கள்.

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/RCIK01_zps0f45a70d.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/KRVIK01_zps6872f51b.jpg

http://i1146.photobucket.com/albums/o528/imagivity/KBRCIK_zpsb155faea.jpg

RAGHAVENDRA
5th June 2013, 10:17 PM
நீண்ட நாட்களுக்குப் பின்னர் காட்சிக்கு...

ஏன் திரைப்படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடல்

இறைவன் என்றொரு கவிஞன்


http://www.dailymotion.com/video/xmm5fy_iraivan-endroru_creation#.Ua9qz9j_QnA

RAGHAVENDRA
5th June 2013, 10:19 PM
மற்றொரு அபூர்வ பாடல்.

திரைப்படம் - அமுதா - குங்குமப் பொட்டு என்கிற டைட்டில் பின்னர் அமுதா என மாற்றப் பட்டது -

பாடல் - அன்பே அமுதா

இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்


http://www.dailymotion.com/video/xmm58x_anbe-amudha_tech#.Ua9rq9j_QnA

RAGHAVENDRA
5th June 2013, 10:23 PM
இலங்கை வானொலியில் நம்மையெல்லாம் கட்டிப் போட்ட பாடல்... இதைக் கேட்காவிட்டால் பொழுதே விடியாது என்கிற அளவிற்கு நம்மை ஆக்கிரமித்த பாடல். வி.குமாரின் மிகச் சிறந்த பாடல். ஜானகி சபதம் படத்தில் இடம் பெற்ற இளமை கோயில் ஒன்று.


http://www.dailymotion.com/video/xld8sd_ilamai-kovil-onru-janaki-sabhatham_auto

Gopal.s
6th June 2013, 09:01 AM
ரவி சந்திரன் - ஒரு urbanised Handsome looks .துரு துருப்பு . அட்டகாசமான Style .Dance movements .ஷம்மியை விடவே நன்றாக dance பண்ணுவார். கற்றை முடி நெற்றியில் புரள அந்த கால கல்லூரி படித்த இளைஞர்களை மிக கவர்ந்தவர்.அவரின் பொன்னான கைகள், விஸ்வநாதன் வேலை வேண்டும், நெஞ்சத்தை அள்ளி, காத்திருந்த கண்களே, நீ போகுமிடமெல்லாம், வருஷத்தை பாரு, ஜாவ்ரே ஜாவ்,மலரை போன்ற, பயணம் எங்கே, என்ன என்ன நெஞ்சுக்குள்ளே, நான் போட்டால் தெரியும் போடு,அட பாதங்களே, க்வாக் க்வாக்,போதுமோ இந்த இடம், ஒத்தையடி பாதையிலே, ஆடு பார்க்கலாம்,சிங்கபுரு மச்சான்,கண்ணுக்கு தெரியாதா,பொம்பளை ஒருத்தி, லவ் லவ், அரசனை பார்த்த ,மாடி வீட்டு பொண்ணு, எல்லாம் என்னை பித்து கொள்ள வைத்த சாதனைகள். அதே கண்கள் படத்தில் கொள்ளை handsome இந்த ஆள். என்ன ஒண்ணு constipation வந்த மாதிரி குரல், stiff நடிப்பு, ஸ்டைல் என்ற பெயரில் தேவைக்கும் மேல் ரெண்டு இன்ச் கூட வளைவார். ஆனாலும் வண்ண இதய நாயகனே.பட்டண த்தில் பூதம்,வல்லவன் ஒருவன் இவர் நடித்திருக்க வேண்டியவை.

Gopal.s
6th June 2013, 10:47 AM
News: Front Page | National | Tamil Nadu | Andhra Pradesh | Karnataka | Kerala | New Delhi | Other States | International | Opinion | Business | Sport | Miscellaneous | Engagements |
Advts: Classifieds | Employment |

Tamil Nadu - Chennai Printer Friendly Page Send this Article to a Friend

Ravichandran on how he got into Tamil films

S.R. Ashok Kumar

"When I came to Madras in 1963, I was asked to see director Sridhar who was on the lookout for a new face"



Ravichandran...actor turned director

A veteran in the field of cinema, Ravichandran has carved a niche for himself in Tamil movies. It so happens that people always identify two personalities in each era of film history. In olden days, it was M.K. Thygaraja Bagavathar and P.U. Chinnapa, followed by MGR and Sivaji Ganesan. It was Jaishankar and Ravichandran in the second half of 60's. Ravichandran has now directed a film in which his son Hamsavardhan is cast as hero. Here Ravichandran talks about his early days in the industry, his likes and dislikes and his present directorial venture "Mandiran".

Though I am from Tiruchi, I stayed and studied in Kuala Lumpur, Malaysia. I came to India in 1951 for my sister's marriage. After the marriage I visited Madras before returning to Malaysia.

I came again to attend my brother's marriage. During that visit, my father asked me whether I was interested in staying back and studying. I said `Yes'. I had studied in English medium and my second language was Malay. But my father would ask me to write two pages of English and Tamil from newspapers everyday. It was perhaps because of this that I could top in the Tamil Sangam examination.

I studied in St. Joseph College, Tiruchi. I played almost all games, especially tennis and basketball.

After my Pre-University exams I wanted to become a doctor. But my fate changed after a sudden attack of chicken pox. My face was full of spots. When I came to Madras in 1963 I was asked to see director Sridhar who was on the lookout for a new face. I was chosen to do a lead role in "Kadhalikka Neramillai" which was released on February 27, 1964.

The film became a hit and the offers began to pour in. Some of the films I like include "Athe Kangal", "Nan", "Mundrezhthu" and Kumarippenn".

My favourite artists in Tamil are Sivaji Ganesan, MGR, Jayalalithaa and K.R.Vijaya.

After working in more than 150 films, and as a hero in a majority of them, I wanted to direct a film. My son Hamsavardhan became my first hero in "Manaseega Kadhal". That film was credited in my real name P.S. Raman. The film was released in 1999 and got rave reviews.

It was my second directorial venture, "Mandiran" that was credited to my film name. It was a film with a message.

I feel that my family including my son has helped me a great deal. Another son Balaji is the executive producer.

abkhlabhi
6th June 2013, 10:51 AM
தமிழ் படம் பார்ப்பதே கொடுமை ஆகியவர் என்று அவர் ஒருவரே காரணம் என்று குறை கூறுவது எந்தவிதத்தில் நியாயம் . . உங்களுக்கு அவரை பிடிக்கவில்லை என்றால், நாகரிகமான முறையில் எழுதலாமே . இப்படி கிழ்தரமாக எழுதவேண்டாமே .

தமிழ் திரை உலகை கொடுமை ஆக்கியவர்கள் பலபேர் . ஒருவரை மட்டும் குறை கூறுவது நல்லதல்ல.

Gopal.s
6th June 2013, 10:52 AM
ரவி சந்திரனின் குறிப்பிடத்தக்க படங்கள்.

Year Film
1964 Kaadhalikka Neramillai Tamil
Nalvaravu Tamil
1965 Idhaya Kamalam Tamil
1966 Gauri Kalyanam Tamil
Kumarippen Tamil
Motor Sundaram Pillai Tamil
Madras to Pondicherry Tamil
Naam Moovar Tamil
1967 Adhey Kangal Tamil
Maadi Veetu Mapillai Tamil
Magaraasi Tamil
Naan
Tamil
Ninaivil Ninraval Tamil
Sabhash Thambi Tamil
Thanga Thambi Tamil
Valibha Virundhu Tamil
1968 Moonreluthu Tamil
Nimindhu Nil Tamil
Panakkara Pillai Tamil
Delhi Mapillai Tamil
1969 Odum Nadhi Tamil
Sikharangal Malayalam
Singapore Seeman Tamil
Chella Penn Tamil
Subha Dhinam Tamil
1970 Kadhal Jothi Tamil
Kaviya Thalaivi Tamil
Snegithi Tamil
Malathi Tamil
1971 Paatondru Ketten Tamil
Sabhatham Tamil
Justice Vishwanathan Tamil
Meendum Vazhven Tamil
Utharavindri Ulle Vaa Tamil
1972 Pugundha Veedu Tamil
Varaverpu Tamil
1973 Engal Thaayi Tamil
Baghdad Perazhagi Tamil
1974 Avalukku Nigar Avale Tamil
Doctoramma Tamil
Puthiya Manidhan Tamil
Sorgathil Thirumanam Tamil
1975 Hotel Sorgam Tamil
Thai Veetu Seedhanam Tamil
1979 Neeya Tamil
1986 Oomai Vizhigal Tamil
1995 Karna Arjun's father Tamil
1997 Arunachalam Tamil
2002 Pammal K. Sambandam Tamil
2003 Ramana Tamil
2003 Tagore Telugu
2009 Kanden Kadhalai Tamil

Gopal.s
6th June 2013, 11:11 AM
vasu Sir,
Thanks for your great postings on Ravichandran. Pl.continue and we will make this thread memorable one.

vasudevan31355
6th June 2013, 11:35 AM
கோபால் சாரின் தயவால் ரவிச்சந்திரன் திரி சிறிது சூடு பிடித்து விட்டது. நாம் சும்மா இருக்கலாமா..



ராகவேந்திரன் சார்

நைசாக இவர்கள் கிளப்பிவிட்டுவிட்டு போய் விடுவார்கள். பிறகு நீங்களும் நானும் மட்டுமே கட்டி மாரடிக்கணும். இதே வேலை. இன்னுமா நம்புகிறீர்கள். நான் ஏமாறத் தயாராய் இல்லை. குட் பை.

iufegolarev
6th June 2013, 11:58 AM
.......

Gopal.s
6th June 2013, 12:22 PM
ஓகே.சௌரி சார். நீங்கள் உணர்ச்சி வச படுகிறீர்கள். யார் நல்லவர் -கெட்டவர் என்ற ஆராய நாம் இங்கில்லை. என்னை பொறுத்த வரை ரவி Handsome ,நல்ல நடனம் தெரிந்த உற்சாகமான நடிகர்.(கொஞ்சம் stiff என்பதை நானே எழுதி விட்டேனே). நான் ஒரு சாதாரண ரசிகனாக எழுதுகிறேன். நீங்கள் எழுதுவதை பார்த்தால் கொஞ்சம் personal ஆவதாக தெரிகிறது. உங்கள் மனம் புண் பட்டிருந்தால் மன்னிக்கவும்.

iufegolarev
6th June 2013, 01:08 PM
திரைத்துறையில் தயாரிபாளர்களுக்கு நடிகர் திலகத்தை போல ஒரு உற்ற நண்பன் இருந்தார் என்றால் அது மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் என்பது இன்றளவும் அனைவராலும் ஒத்துகொள்ளபட்ட விஷயம் (ஒரு சில நடுநிலையற்ற தாழ்புனற்சிகொண்டவர்களை தவிர) !

ஒரு நடிகனின் வாழ்வு மற்றும் நட்சத்திர அந்தஸ்து தயாரிப்பாளர்களை துன்புறுத்துவதில் அல்ல ! அவர்களை கடனாளியாக்காமல் கடைசிவரை செல்வந்தராகவே வைத்திருப்பதில்தான் ! அப்படி ஒரு நட்சத்திர நடிகர் இருந்தால் என்றால் அவர் நடிகர் திலகத்தை போல திரு.ஜெய்ஷங்கர் ஒருவர்தான் !
மிக பிரபலமாக பேசப்பட்டு வெற்றிகரமாக வசூலில் சாதனை இன்றளவும் புரிகின்ற துணிவே துணை மொத்த செலவே ஐந்து லட்சம் தான் என்றால் யாரும் நம்புவது சற்றுகடினம் தான் ..அதிலும் தயாரிப்பாளர் பண பிரச்சனையால் அவதிப்பட்டபோது ..தனக்கு வரவேண்டிய பாக்கியை கேட்டு மேலும் தொந்தரவு செய்யாமல்..படம் வெளிவர ஆவன செய்ததோடு மட்டும் அல்லாமல் தயாரிப்பாளருக்கு பணம் வந்த பிறகு பெற்றுக்கொள்ள இசைந்து பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து அதை பெற்றுக்கொண்ட அந்த மனப்பாங்கு எந்த கலையின் நிலவுகளுக்கும் சூரியங்களுக்கும் வராது !

படம் தயாரிக்கவேண்டும் அதில் கொஞ்சம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம்கொண்டு வருபவரை படம் வெளியாகும்வரை காப்பாற்றும் தன்மை மக்கள் கலைஞர் ஒருவருக்கு தான் உண்டு...!

தூத்துக்குடி திரைஅரங்கு வளாகம் தீகிரயானபோது...அப்போதைய முதல்வர் திரு.m g r அவர்களிடம் ருபாய் பத்தாயிரதிர்கான காசோலையை அடுத்தநாளே தன் சிறிய மகளுடன் சென்று வழங்கிவிட்டு வந்தார். ! நிலவுகள் இந்த செயலை செய்ததா என்று நாம் பார்தால்...நிலவு ...மேகத்திற்கு பின்னால் மறைந்துதான் சென்றது !

அதே போல புயல் வெள்ள நிவாரணமாக...10,000 உணவு பொட்டலங்களை உடனடியாக ஸ்டாண்டர்ட் வேனில் கொடுதனுபியதும் முதலில் இதே மக்கள் கலைஞர் தான்...ஆனால்...அன்றைய முதல்வரின் தாழ்புனற்சியால் அந்த உணவுபொட்டலங்கள் அனைத்தும் விநியோகம் செய்யப்பட விடாமல் ரோடு முழுவதும் கொட்டப்பட்ட கதை இந்த நாடறியும். ! நிலவு அப்போதும் மறைந்துதான் இருந்தது..!

மக்கள் கலைஞர் இறந்த பிறகு அவருக்கு அவர் நடிக்கும் காலத்தில் பல தயாரிபாளர்களால் கொடுக்கப்பட்டு அதை வங்கியில் டெபொசிட் செய்தபோது காசிலாமல் திரும்பி வந்த காசோலைகளின் மொத்தத்தொகை எவ்வளவு தெரியுமா...? சுமார் 2.28 Cr . அதை ஒரு நோட்டுபுத்தகத்தில் அவர் இறந்த பின்னர் கணக்கு எழுதியவன் என்ற முறையில் நானே சாட்சி..!

மனிதரில் மாணிக்யம் என்று இன்றளவும் போற்றப்படும் நட்சத்திர நடிகர் மக்கள் கலைஞர் ஒருவரே !

Gopal.s
6th June 2013, 01:19 PM
சௌரி சார்,
நாம் இங்கு மதர் தெரசா, காந்தி இவர்களை விவாதிக்கவில்லை. எந்த ஒரு மனிதனும் ,தான் வாழும் நாட்களில் சிலருக்கு சில நன்மைகளையாவது செய்வார். நாம் இங்கு விவாதிப்பது ,ஒரு நடிகர் என்ற விதத்தில் அவர்கள் விட்டு சென்ற impressions (looks &other Aspects )பற்றி மட்டுமே.அவர்கள் படங்கள் பற்றி மட்டுமே. நான் கொஞ்ச நேரம் முன்பே வாசு சொல்லி ,நீங்கள் அந்த குடும்பத்திற்கு வேண்டியவர் என்று தெரிந்து கொண்டேன். அதனால் என்னுடைய பதிவுகளை நீக்கி விட்டு, அவரை பற்றி இனிமேல் எழுதுவதில்லை என்றும் முடிவெடுத்துள்ளேன். என்னை பொறுத்த வரை எனக்கு ரவியை ஒரு entertainer ஆக பிடிக்கும். அவ்வளவே.

mr_karthik
6th June 2013, 05:07 PM
அது சரி, எவ்வளவு நாட்களுக்குத்தான் எம்.ஜி.ஆர். சிவாஜி சண்டையே போட்டுக் கொண்டிருப்பது?. கொஞ்ச நாளைக்கு ஜெய்சங்கர் - ரவிச்சந்திரன் சண்டையும் நடக்கட்டுமே.

Brianengab
6th June 2013, 05:11 PM
அது சரி, எவ்வளவு நாட்களுக்குத்தான் எம்.ஜி.ஆர். சிவாஜி சண்டையே போட்டுக் கொண்டிருப்பது?. கொஞ்ச நாளைக்கு ஜெய்சங்கர் - ரவிச்சந்திரன் சண்டையும் நடக்கட்டுமே.

Muthuraman ? :roll:

Gopal.s
6th June 2013, 05:17 PM
அது சரி, எவ்வளவு நாட்களுக்குத்தான் எம்.ஜி.ஆர். சிவாஜி சண்டையே போட்டுக் கொண்டிருப்பது?. கொஞ்ச நாளைக்கு ஜெய்சங்கர் - ரவிச்சந்திரன் சண்டையும் நடக்கட்டுமே.
family friends ,சொந்தகாரன்லாம் வந்து மூக்காலே அழுதா ,என்னத்தையா சண்டை போடுவது? public figure விமர்சனத்துக்கு உட்படலாம் என்ற குறைந்த பட்ச ஜனநாயக உணர்ச்சி கூட இல்லையே?
Muthuraman- Not even considered.

Richardsof
6th June 2013, 05:37 PM
கோபால் சார்

ஜெய் - ரவி இருவரும் சம காலத்தில் வந்த நாயகர்கள் .

இருவரும் தொடர்ந்து 10 ஆண்டுகள் பல நல்ல படங்களை

கொடுத்தனர்.

இருவரின் படங்கள் அனைத்தையும் பார்த்தவன் என்ற

முறையில் என்னுடய பார்வையில் ஜெய் படமும் ரவி படமும்

சிறப்பாகவே இருந்தன

ஒரு நடிகரை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால்

இப்படியா தாக்குவது ?


பாராட்டுங்கள் ....

இகழாதீர்கள் ...

ஜெய்சங்கர் பற்றிய உங்களது வார்த்தைகளுக்கு நீங்கள்தான்

சொந்தக்காரர் என்பதை மறக்க வேண்டாம் .

Gopal.s
7th June 2013, 07:08 AM
ரவி சந்திரன் என்ற அழகிய 1964 இன் இளமை சுனாமி.

17/10/1952 இல் நடந்த அதிசயத்துக்கு சற்றும் குறையாத மற்றொரு அதிசயம் 27/2/1964 இலும் நடந்தது. அதுதான் முதல் படத்திலேயே ஒரு நாயகன் இமாலய வெற்றி பெற்று தமிழகம் முழுதும் தன் ரசிகர்களாக திருப்பிய விந்தை. ரவி சந்திரன் என்ற இனிய புயல் சுமுகமாக கரை கடந்தது. இது ஒரு வண்ண மயமான வாண வேடிக்கை. அதுவரை senior நடிகர்களின் மோகத்தில் மூழ்கியிருந்த தமிழகம் ,தமிழ் பட உலகம் சற்றே stale ஆக போனதை உணர்ந்து, தங்களுக்கு ஹிந்தியில் அன்றிருந்த musical romance trend படி sweet nothings பேச ஒரு இளம் அழகிய நாயகன் வருகையை உணர்ந்தது. அடுத்த நான்கு வருடம் அந்த அலை ஓயவே இல்லை.அது நம் சீனியர் நாயகர்களையும் தாக்கி ஒரு அன்பே வா கொடுக்க வைத்தது. நடிகர்திலகத்தை இளைக்க வைத்து தங்கையின் கலாட்டா கல்யாணத்தை நடத்தி ராஜாவாக்கியது.

அப்போது திலகங்களை தவிர ஜெமினி,எஸ்.எஸ்.ஆர் இவர்களாலோ ,முன்னேறி கொண்டிருந்த முத்துராமன்,ஏ.வீ.எம்.ராஜனாலோ கனவிலும் நினைக்க முடியாத ஒரு status மற்றும் மாற்றம்.

இத்தனைக்கும் அபார அழகு,துரு துருப்பு இருந்ததென்றாலும், நடிப்பு திறமை சுமார்தான்.சிவாஜி ஸ்டைலை பின்பற்றி பொழுது போக்கு படங்கள்தான் கொடுத்தார். ஆனால் நடனத்தில் ஒரு style ,grace ,unique execution இவற்றினால் கலக்கினார். இவர் வரவில்லையென்றால் ஒரு நான், ஒரு அதே கண்கள் சாத்தியமில்லாமல் போயிருக்கும்.madras to pondichery படத்தில் இவர் கலக்கிய கலக்கலில் 10% கூட அன்றைய இளம் அமிதாப் பச்சன் Bombay to Goa படத்தில் கொடுக்க இயலவில்லை. நான்,அதே கண்கள் remake ஆகியிருந்தாலும் ,அன்று ரவி கொடுத்த உணர்வை கொடுக்க அகில இந்தியாவிலும் ஆளில்லை.

டான்ஸ் பண்ணுவதிலும் மிக மிக கஷ்டமான movements ,படு பிரமாத படுத்தி விட்டு ,சாதாரண அசைவை சொதப்புவார்.ஆனாலும் நமக்கு இவர் படம் பார்க்கும் போது ஒரு pleasantness இழையோடும். கலாட்டா பண்ணி கொண்டே நடக்கும் இளமை திருவிழா.காதல் காட்சிகளில் ரசனை இருக்கும். அத்து மீறிய crassness அறவே இருக்காது.

நடிப்பு பற்றி யார் கவலை பட்டது?அதை கொடுக்கத்தான் நமக்கு நடிப்பு அசுரன் நடிகர்திலகம் இருந்த போது ,அதை கொடுக்க இன்னொருவர் எதற்கு என்று ரவியை ரசித்தோம்.

ஆனால், ஒரு புதையலை குப்பை தொட்டியில் வீசுவது போல ,சராசரிகளுக்கு இடமளித்து விட்டு, ரவி தன் ஸ்தானத்திலிருந்து தன்னை தானே இறக்கி கொண்டார். தயாரிப்பாளர் மற்று சக கலைஞர்களோடு ஒத்து போகாமல் ,குடித்து தொழிலில் போதிய கவனமின்றி,படங்களை சரியாக தேர்வு செய்யாமல், சறுக்குவதை உணர்ந்து சரியான நேரத்தில் விழித்து கொள்ளாமல் தான் வெட்டிய பள்ளத்தில் தானே விழுந்தார்.

சிவாஜி முதல் ரஜினி வரை தொடரும் சில ஸ்டைல் களின் மத்திய கால சங்கிலி இவர்.

Gopal.s
7th June 2013, 07:22 AM
நம்மிடையே ஒரு குறை. ஒருவர் நடிகராக வந்து விட்டால் அவர் looks , படங்களின் தரம் மற்றும் அவர்களின் performance விமர்சனத்துக்கு ஆளாகியே தீரும். அதை counter பண்ண அவர் அநாதை இல்லத்துக்கு 5000 கொடுத்தார், தன் வீட்டு நாய்க்கு சோறு போட்டார்,என்ற ரீதியில் பதில் போட்டால் சிரித்து ரசிப்பதை தவிர வேறு வழியில்லை.
நாமும் சிறிது அடக்கி வாசிக்க வேண்டியுள்ளது. internet யுகத்தில் சம்பத்த பட்ட நட்பு,சுற்றம் பார்க்க வாய்ப்புள்ளதால் சபை நாகரிகம் கருதி ,இவற்றின் உணர்வுகளையும் அனுசரித்தே போக வேண்டிய கலிகாலம்.

Gopal.s
7th June 2013, 08:16 AM
வாசு,
கார்த்திக் ஒருவரின் request உன்னை படம் போட வைத்தது.
இங்கு, கார்த்திக்,கோபால்,ராகவேந்தர் மூவரின் combined request .இங்கும் வந்து போடு. welcome.

Gopal.s
7th June 2013, 08:31 AM
ராகவேந்தர் சார் சொன்னது போல இவர் படங்களுக்கு கிடைத்த opening ABC மூன்று centres இலும், இரு திலகங்களுக்கு மட்டுமே சாத்திய பட்ட ஒன்று. (மற்ற குட்டி நடிகர்கள் குட்டி தயாரிப்பாளர்களை வைத்து 25000 முதல் போட்டு குட்டியூண்டு collection கொண்டு திருப்தி அடைந்தனர்.) இவர் உச்சத்திலிருந்த போதும் ஜெமினி முதலிய சீனியர் கலைஞர்களோடும்,சில குட்டி ஜூனியர் கலைஞர்களோடும் ஈகோ பார்க்காமல் நடித்து கொடுத்துள்ளார். தேனீ.மா. அன்பழகன் என்ற கே.பீ. உதவியாளர் ,நான்கு சுவர்கள் படபிடிப்பில்,இவர் சக தொழிலாளர்களோடு அடித்த ஜாலி லூட்டி பற்றி விவரித்துள்ளார்.
longevity என்பது planning சம்பத்த பட்டது. அதை தக்க வைத்து கொண்டு,உடலை நன்கு பராமரித்திருந்தால் பிற்காலத்தில் கமல்-ரஜினியோடும் சில காலம் ஹீரோ ஆகவே தொடர்ந்திருப்பார்.
சில சமயம் discipline ,Public Relations (முக்கியமாக பத்திரிகையாளர்களை "குஷி" படுத்துவது) என்று இவருக்கு கீழே இருந்தவர்கள் கூட, இவர் மதிப்பிழந்து போன பிறகு, சில காலம் தொடர முடிந்தது.

mr_karthik
7th June 2013, 11:34 AM
// ஆனால், ஒரு புதையலை குப்பை தொட்டியில் வீசுவது போல ,சராசரிகளுக்கு இடமளித்து விட்டு, ரவி தன் ஸ்தானத்திலிருந்து தன்னை தானே இறக்கி கொண்டார். தயாரிப்பாளர் மற்று சக கலைஞர்களோடு ஒத்து போகாமல் ,குடித்து தொழிலில் போதிய கவனமின்றி,படங்களை சரியாக தேர்வு செய்யாமல், சறுக்குவதை உணர்ந்து சரியான நேரத்தில் விழித்து கொள்ளாமல் தான் வெட்டிய பள்ளத்தில் தானே விழுந்தார். //

கிட்டத்தட்ட இதே வழியில் சென்று தனக்குத் தானே குழிபறித்துக் கொண்ட இன்னொருவர் நடிகர் கார்த்திக். இவரும் தனக்கிருந்த அபார மக்கள் மற்றும் ரசிகர் செல்வாக்கை பயன்படுத்திக் கொள்ளத் தவறியவர்.

Gopal.s
7th June 2013, 11:56 AM
தேங்க்ஸ் கார்த்திக் சார். கிட்டத்தட்ட கார்த்திக் கதை போலத்தான். ஆனால் கார்த்திக்கிற்கு கொஞ்சம் அவாளோட support இருந்ததால் பிழைத்து கொண்டார்.(மணி, பாலசந்தர் போன்றோர்)ஆனால் கார்த்திக் உச்சம் செல்லும் வாய்ப்பை ,அவர் பழக்கங்களினால் இழந்தார். ரவி உச்சம் தொட்டு வீழ்ந்தார்.
ராமராஜன் கதை வேறு. இளைய ராஜா தன்னை நிறுத்தி, தான் எந்த நட்சத்திரத்தையும் நம்பியிருக்கவில்லை என்று காட்ட ஒரு பொம்மைக்கு உயிர் கொடுத்து இரண்டு வருடம் தற்காலிக உயரம் கொடுத்தார் கட்டி கொடுத்த சோறு போல ஸ்டாக் தீர்ந்து கதை முடிந்தது.

Gopal.s
7th June 2013, 11:59 AM
நேற்று நினைவில் நின்றவள் பார்த்து ரசித்தேன். தம்பி வாடா அடிச்சது யோகம்.
எனக்கு குமாரின் இசையில் மிக பிடித்த பாடல்களில் ஒன்றான பறவைகள் சிறகினால் அணைக்க கண்டேனையா இந்த படம்தான்.(எல்.ஆர்.ஈஸ்வரி ) யாரிடமாவது இருந்தால் பதிக்கவும்.

Gopal.s
7th June 2013, 12:08 PM
வேறு பட்ட பல நடிகர்களை நினைவில் வைத்திருப்பதில் வட இந்தியர்களை நாம் மிஞ்ச முடியாது. ஷம்மி ஒன்றும் பெரிய நடிகர் இல்லை. பார்க்கவும் சுமார். ஆனாலும் எப்படி கொண்டாடுகிறார்கள்? நாம் அதை விட பல மடங்கு சிறந்த ரவி சந்திரனை கொண்டாட வேண்டாமா? பதிவர்கள் அனைவரும் தங்கள் impression எழுதும் படி அன்பு கோரிக்கை விடுகிறேன்.
சாரதா மேடம்,கார்த்திக் சாருக்கு ரவி ரசிகர்கள் கடன் பட்டவர்கள்.

Richardsof
7th June 2013, 12:46 PM
ONE OF MY FAVOURITE RAVI SONG FROM ''NAhttp://youtu.be/PfoaGs2muHcNAGU SUVARGAL''-1970

Gopal.s
7th June 2013, 12:49 PM
நம் உறவை ஊரறிய நான் தரவா? நீ தரவா?

எனக்கு இந்த பாடலை பார்க்கும் போது வாழ்க்கையில் இன்பமும் ,துன்பமும் ஒன்று சேர்ந்து வரும் என்று தோன்றும்.(ஆனால் இரு பெரும் இன்பங்கள், ஒரு மாபெரும் துன்பம்)

vasudevan31355
7th June 2013, 12:50 PM
கோபால்,

இந்தாருங்கள் தங்கள் மனம் கவர்ந்த பாடல். தங்களுக்கு மட்டுமல்ல. தங்களைவிட எனக்கு மிக மிக மிக மிக பிடித்த பாடல். (ராட்சஷப் பாடகியின் வெகு அலட்சியமான குரலில்)


https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=VSsqzU1JCoU

vasudevan31355
7th June 2013, 12:55 PM
தேங்க்ஸ் வினோத் சார்.

நீங்கள் தந்த பாடலை மிகுந்த சிரமங்களுக்கிடையில் தரவேற்றியது யார் தெரியுமா? நமது அருமை ரசிகவேந்தர் சார்தான். அவருக்கும் என் நன்றி!