ஜில்லென்று! யமனுடன் ஒரு சந்திப்பு - 1
யமலோக பட்டினம். யம தர்மனின் தர்பார்
“சித்திர குப்தா! சொல்லு, நான் யார் உயிரை எடுக்க வேண்டும்?” –யமன்.
“மஹா ப்ரோபோ! எல்லாவற்றிற்கும் நீங்கள் போக வேண்டிய அவசியமில்லை. கிங்கரர்களை அனுப்பிக் கொள்ளலாம்”
“இல்லை சித்திரகுப்தா, நானும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும். மற்ற கிங்கரருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். அவரது கஷ்டங்களை அவ்வப்போது தெரிந்து கொள்ள வேண்டும். சொல், நிறைய பாவங்கள் செய்து, நரகத்திற்கு வர வேண்டியவர் யார் யார்?”
https://encrypted-tbn0.gstatic.com/i...P7CcJFWeJFTaiX
“அப்படியே பிரபோ! சென்னையில், கந்தசாமி என்று ஒருவர். பெரிய பணக்காரர். தொழிலதிபர். நிறைய பாவங்கள் செய்து கொண்டிருக்கிறார். அவரது உயிரை வேண்டுமானால் நீங்களே எடுங்கள்.”
“அவர் செய்த பாவங்கள் என்ன சித்திரகுப்தா? ”
“அவர் மகா பாவி. செலவை குறைப்பதற்காக, அவரது தொழிற்சாலை கழிவை, யாருக்கும் தெரியாமல், பூமிக்கடியில் தேக்கி விட்டுக் கொண்டிருக்கிறார். அந்த விஷ கழிவு, நிலத்தடி தண்ணீரில் கலந்ததனால், ஊர் ஜனங்கள் கடுமையான தோல் நோய், வயிற்று நோய் வந்து படாத பாடு படுகிறார்கள். அவதிப் படுகிறார்கள்.”.
“அவன் அதுக்கு கொஞ்சமாவது வருத்த பட்டானா?” யமனின் கேள்வி .
“அதை பற்றி அவர் கொஞ்சமும் கவலைப் படவில்லை, தர்மராஜா! அரசாங்கத்துக்கு லஞ்சம் கொடுத்து, கொடுத்து சரி கட்டிகிட்டிருக்கார். பெரிய பணக்காரராக ஆசை. பேராசை.”
“அதை தவிர? ”
“ ஏழைகளின் வயிற்றிலே அடிப்பார். அவரது குறியே எப்படி லாபம் சம்பாதிக்கிறது மட்டும் தான்”.
“சரி. அப்படியானால், நானே போய் அவன் ஆயுசை முடிச்சி, உயிரை எடுத்துகிட்டு வாரேன்!” தர்மராஜா எழுந்து கொண்டார். பாசக் கயிறை கையில் எடுத்துக் கொண்டார்.
“ஆனால், ராஜா, நமது கிரந்த கணக்குப்படி, அவரது ஆயுசு முடிய இன்னும் மூன்று மாதமிருக்கிறது”
“இருக்கட்டும், எனக்கும் அவனை பார்க்க வேண்டும் போலிருக்கிறது. நமக்காக மக்களுக்கு பூமியிலேயே ஒரு நரகம் ஏற்படுத்திஇருக்கிறானே! நாம் கொடுக்க வேண்டிய கிருமி போஜனம், வைதரணி, பூபோதம் * போன்ற தண்டனைகளை அவனே மக்களுக்கு கொடுத்திருக்கிறானே! சும்மா பார்த்துட்டு வரேனே?”
“பிரபோ! அவரது தம்பியும் பெரிய பணக்காரர்தான். ரங்கசாமி என்று பேர். அவர் காலம் இன்னும் இரண்டு நாளில் முடியப் போகிறது. அவர் உயிரை வேண்டுமானால், இப்போவே எடுத்து விடலாம். ஒரே கல்லிலே ரெண்டு மாங்காய் ”
“அவர் தம்பி பேரென்ன சொன்னே?”
“ரங்கசாமி”
“இதோ வரேன், ரங்கசாமி!” – யமன் கிளம்பி விட்டார். பூலோக விஜயம்.
*****
சென்னை: ரங்கசாமி வீடு.
ரங்கசாமி. இவர் கந்தசாமியின் தம்பி. அண்ணனின் தொழிற்சாலையில் இவரும் முதலீடு செய்தவர். பணக்காரர். அண்ணன் பங்களாவிற்கு சற்று தூரத்திலேயே அவரது வீடும் இருந்தது. அவருக்கு அண்ணாவின் அடாவடி போக்கு துளியும் பிடிக்காது. எத்தனையோ முறை சொல்லியும் கந்தசாமி கேட்கவில்லை. இருப்பினும், அவர் பேரில் மிகுந்த பிரியம்.
ரங்கசாமிக்கு ஒரே பிள்ளை, வரதன். வயது 28. ரொம்ப தங்கமான பையன்.
ரங்கசாமி தனது அண்ணன் கந்தசாமியின் உடல்நிலை பற்றி டாக்டரிடம் விசாரித்து கொண்டிருந்தார்.
“இப்போ அண்ணாவுக்கு உடம்பு எப்படி இருக்கு டாக்டர்?” – ரங்கசாமி போனில்.
“நிலைமை கொஞ்சம் மோசம் ரங்கசாமி. புற்றுநோய் முத்தி போயிருக்கு. உங்க அண்ணன் இப்போ இறுதி கட்டத்திலே இருக்காரு. அவருக்கு கெடு இன்னும் இரண்டு மாசம் தான்”
“ என்ன டாக்டர், இப்படி சொல்லிட்டீங்க. அண்ணாக்கு இது தெரியுமா?”
“அவர்கிட்டே திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டுதான் இருக்கேன். குடிக்கிறது, சிகரெட்டு பிடிக்கிறதை நிறுத்துங்கன்னு. கேக்க மாட்டேங்கிறார். அவர் பெரிய தொழிலதிபர். நான் எவ்வளவு தான் சொல்றது ? நீங்க தான் அவர்கிட்டே இன்னும் அழுத்தமா சொல்லணும்”
“சொல்லிட்டேன் டாக்டர்! நான் சொன்னா கேட்டுருவாரா என்ன ? போடாங்கறார்”
“சரி! கடவுள் விட்ட வழி!” டாக்டர் போனை வைத்தார்.
ரங்கசாமி கொஞ்சம் யோசனையில் ஆழ்ந்தார். மீண்டும் போன் பண்ணினார். இந்த முறை தனது ஜோசியருக்கு. ரங்கசாமிக்கு ஜோசியம், ஜாதகத்தில் ரொம்ப ஈடுபாடு. நம்பிக்கை.
“என்ன ஜோசியரே! டாக்டர் அண்ணாவுக்கு கெடு சொல்லிட்டார். நீங்க அவருக்கு ஆயுள் கெட்டி , ஒண்ணும் ஆகாதுன்னீங்க?” – கவலை தோய்ந்த குரலில் ரங்கசாமி.
“ஐயா! இப்பவும் சொல்றேன்! உங்க அண்ணாவுக்கு எந்த கண்டமுமில்லே. அவர் ஜாதகப் பிரகாரம், இன்னும் ஒரு இருபது வருஷம் அவரை அசைச்சுக்க முடியாது. கொடி கட்டி பறப்பார்.”
“என்ன இப்படி சொல்றீங்க! அண்ணாவுக்கு புற்று நோய். மிஞ்சிப் போனா, இன்னும் ரெண்டு மாசம் தான் அவர் உயிரோடு இருப்பாராம். இன்னிக்கு தான் டாக்டர் சொன்னார் ”
“ஐயா! என்னை நம்புங்க ஐயா. அவருக்கு ஒண்ணுமில்லே. நான் முன்னாலேயே சொன்னா மாதிரி உங்களுக்குதான் இப்போ மரண கண்டம். ராகு சந்திரனோடு கூடி கிரகண தோசத்தை ஏற்படுத்தி 6, 8, 12 ஆம் வீடுகளில் அமைந்து லக்னாதிபதியின் பார்வை பெற்றிருக்கு ஐயா. அது உச்சத்திலே இருக்கிறதனாலே, உங்களுக்கு தான் இப்போ ம்ருத்யு தோஷம். அதுக்கு தான் நான் இங்கே, உங்க ஊட்டி எஸ்டேட்டில் உட்கார்ந்து, யாருக்கும் தெரியாமல், பரிகாரம் பண்ணிட்டிருக்கேன். ”
“என்னமோ போங்க ஜோசியரே! மனசே சரியில்லை. சரி. எதுக்கும் அண்ணாவுக்கும் சேர்த்து பரிகாரம் பண்ணுங்க. வேணுங்கிற பணம் தரேன்! ”
***
அடுத்த நாள் அதிகாலை 4 மணி.
ஆழமாக மூச்சு விட்டு தூங்கிக் கொண்டிருந்த ரங்கசாமி அலறி அடித்துகொண்டு எழுந்தார். பயங்கர சொப்பனம். கருப்பாக, தலையில் இரண்டு கொம்புகளுடன், கோரை பற்களோடு, இரு யம கிங்கரர்கள் இவரை இழுத்துக் கொண்டு போவது போல் கனவு. அவருக்கு உடம்பெல்லாம் வியர்த்து விட்டது.
https://encrypted-tbn2.gstatic.com/i...jnLfScyKsEF6St
உடனே போன் போட்டு , ஜோசியரை எழுப்பினார். “ஜோசியரே! யாரோ வந்து என்னை இழுத்துட்டு போறா மாதிரி கனவு கண்டேன்! ரொம்ப பயமா இருக்கு!”
“அட கடவுளே! பாத்திங்களா ஐயா. உங்களுக்கு மரண யோகம் தான். ஒண்ணு செய்யுங்க! நீங்க நேரே இங்கே ஊட்டி வந்திடுங்க! பத்து நாள் பூஜை முடிஞ்சி , ம்ருத்ய தோஷ பரிகாரம் பண்ணிணப்புறம் நீங்க திரும்பி போகலாம். அப்புறம் உங்களை யாரும் அசைச்சுக்க முடியாது. உங்க அண்ணாவுக்கும் இங்கேயே பரிகாரம் பண்ணிடலாம்”
“சரி! இப்போவே கிளம்பிடறேன். சாயங்காலத்துக்குள்ளே அங்கே இருப்பேன்”
ரங்கசாமி அடித்து பிடித்து கொண்டு, அவசர அவசரமாக , வீட்டை விட்டு வெளியே வந்தார். இருட்டுவதற்குள் ஊட்டி போய்விட வேண்டும்.
“என்னங்க! எங்கே இவ்வளவு காலையிலே புறப்பட்டுட்டீங்க?இன்னிக்கு பையன் வரதனுக்கு பெண் பார்க்க வரதா சொல்லியிருந்தோமே? ” மனைவியின் பேச்சுக்கு பதிலே பேசாமல், காரை எடுத்துக் கொண்டு சர்ரென்று ஊட்டி நோக்கி பறந்தார்.
****
தொழிலதிபர் கந்தசாமி பங்களா அருகில்:
சித்திர குப்தனும், யமதர்ம ராஜாவும் கந்தசாமி பங்களாவின் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது வேகமாக கந்தசாமியின் தம்பி ரங்கசாமியின் கார் அவர்களை விர்ரென்று கடந்து சென்றது.
https://encrypted-tbn3.gstatic.com/i...ukM_UxHKLtCZ9E
“பிரபோ !அதோ ரங்கசாமி , காரிலே வேகமா எங்கேயோ போறான் பாருங்க!”- சித்திரகுப்தன் கைகாட்டினான்.
“யாரு! ஊட்டி கிட்டே இன்னிக்கு சாயந்திரம், நாம உயிரை எடுக்க வேண்டிய ரங்கசாமியா?”
“அவரேதான் ஐயா”
யமன் தீவிர யோசனையிலிருந்தார். “என்ன ஐயா யோசிக்கறீங்க?”
”ஒண்ணுமில்லே! இவன் இங்கே எங்கே, காரெடுத்துகிட்டு வேகமாக போய்க்கிட்டிருக்கான்?"
“அதுதான் ஐயா நானும் யோசிச்சிகிட்டிருக்கிறேன்”
“ அது தான் அவன் தலை விதி. யாராலேயும் மாற்ற முடியாது. சரி வா! முதல்லே நாம்ப கந்தசாமியை பாக்கலாம்!”
*****
தொழிலதிபர் கந்த சாமியின் பங்களா:
காலை ஆறு மணி.
கந்தசாமி தனது அறையில் தூக்கம் வராமல் புரண்டு படுத்தார். நோயின் தாக்கம், மன புழுக்கம் இரண்டும் சேர்ந்து அவரது தூக்கத்தை அறவே குலைத்து விட்டிருந்தது.
“சே! நேரம் நமக்கு சாதகமாக இல்லியே!”- புழுங்கினார். இருமுறை இருமினார். ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்தார்.
இன்னி தேதிக்கு அவருக்கு முன்னூறு கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. இப்போது அவரது அடுத்த குறிக்கோள், முன்னூறு கோடியை ஆயிரம் கோடியாக்க வேண்டும். அப்புறம், நான்கு புதிய ரசாயன தொழிற்சாலை கட்டி அதிலும் காசு பார்க்க வேண்டும். இதுக்கே இவருக்கு நேரம் போதவில்லை.
இப்போது அவருக்கு இன்னொரு பிரச்னை பூதாகாரமாக உருவேடுத்திருக்கிறது. அவரது தொழிற்சாலையின் ரசாயன கழிவினால், நிறைய மக்கள் பாதிக்க பட்டிருப்பதால், நீதி மன்ற உத்திரவுப் படி, இழப்பீடாக 200 கோடி ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். மேல் முறையீடு செய்யவேண்டும். அவரது தன்மான பிரச்சனை. எப்படி விட்டுக் கொடுப்பது?.
இந்த நேரம் பார்த்தா, இந்த பாழாய் போன கான்சர் இவருக்கு வர வேண்டும்? எண்ணி இரண்டு மாதமென்கிறார் டாக்டர். என்ன பண்ணலாம்?
“சே! எனக்கு மட்டும் கடவுள் ஏன் தான் இவ்வளவு சோதனை தருகிறாரோ? இன்னும் கொஞ்ச காலம் நான் உயிரோட இருந்தால், எவ்வளவு செய்யலாம்?”
“இன்னும் கொஞ்ச நாள் இல்லை கந்தசாமி, நான் நினச்சா இன்னிக்கே உன் டைம் முடிந்துவிடும்” அசரீரி குரல் அந்த அறையில் ஒலித்தது.
திடுக்கிட்டார் கந்தசாமி “யார்? யாரது?”
https://encrypted-tbn2.gstatic.com/i..._Xiu1Mop500WVw
“நான்தான் யமன், கந்தசாமி. கால பைரவன்.! நீ எவ்வளவு பாவம் பண்ணியிருக்கே? எங்க லிஸ்ட்லே நீ ஒரு முக்கிய புள்ளி. சொல்லப் போனால், கரும்புள்ளி. VIP. உன்னை நரகத்திற்கு அழைத்துக் கொண்டு போகவே வந்திருக்கேன். கிளம்பு! கிளம்பு”
“ஐயோ! நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கே! பிரபோ! என்ன வேணா தரேன். என்னை விட்டுடுங்களேன். நான் என் சொத்தை மூணு மடங்காக்கணும். நாலு பாக்டரி கட்டணும். இழப்பீட்டு மனுவை எதிர்த்து அப்பீல் பண்ணனும். எக்கச்சக்க வேலை இருக்கு. தெய்வமே! எனக்கு கருணை காட்டுங்களேன்!”
“ம்!” யோசித்தார் யமன். “நீ எவ்வளவோ பேரை கொன்னிருக்கிறாய்! உன்னாலே, இந்த உலகத்திலேயே நிறைய பேர் சித்தரவதை அனுபவிச்சிட்டு இருக்காங்க. அவங்களுக்கு இங்கேயே நரக வேதனையை கொடுத்திருக்கே ! தெரிஞ்சோ, தெரியாமலோ, என்னோடைய வேலையை நீ இங்கேயே செஞ்சிருக்கிறாய். எனக்கு கொஞ்சம் வேலைப் பளுவை குறைத்திருக்கிறாய்! சரி, அதனால் , போனால் போகிறது, உனக்கு ஒரு வரம் தருகிறேன். நான் சொல்லும் படி செய் !”
“ஒ. நன்றி நன்றி யம தர்மா. நான் என்ன பண்ணனும்?”
… To continue
* கிருமி போஜனம்-கிருமிகளை, புழு பூச்சிகளை உண்ணச்செய்வது : வைதரணி- ரத்தம் சீழ் நதியில் முக்குவது , பூபோதம் - தேள் போன்ற விஷப் பூச்சிகளை விட்டு கடிக்க வைப்பது ( கருட புராணம்)
ஜில்லென்று! யமனுடன் ஒரு சந்திப்பு - 2
யமன் நகைத்தார் “நீ ஒண்ணும் பண்ண வேண்டாம் ! நான் உன்னோட உயிரை வேற யாராவது உடம்பிலே செலுத்திடறேன். அந்த உடம்பிலே நீ இருக்கலாம். அவங்க உயிரை, உன்னோட உடம்பிலே செலுத்திடறேன். யார் உடம்பு உனக்கு வேணும், நீயே சொல்லு?”
“ அடே ! இந்த டீல் நல்லா இருக்கே? கூடு விட்டு கூடு பாயற மாதிரி தானே ? இப்போ என் உடம்பு கான்சர் வந்த உடம்பு. இதுலேருந்து நான் ஒரு நல்ல திட காத்திரமான ஒரு 28 வயது சின்ன பையன் உடம்பிலே போயிட்டா, நான் ரொம்ப நாள் நல்லா இருக்கலாமில்லே?”
“ஒ. இருக்கலாமே!”
“அப்படின்னா, கால பைரவரே! எனக்கு சம்மதம் ! எனது தம்பி மகன், வரதனின் உடலுக்குள் நான் கூடு பாயணும். அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க!”
https://encrypted-tbn1.gstatic.com/i...d409YNIoHGD8Wl
“ ஆனால், அந்த பையன் வரதனின் கதி? நினைத்து பார்த்தாயா? அவன் உன் தம்பி பிள்ளையாச்சே கந்தசாமி ! உனது இந்த புற்றுநோய் உடம்புக்கு, அவன் உயிர் வந்துவிடும். பரவாயில்லையா?”
”அதெல்லாம் பாத்தா நடக்குமா தர்ம ராஜா ? எல்லாம் அவன் தலையெழுத்து!”- அழுத்தமாக சொன்னார் கந்தசாமி.
“சரி! அப்படியே ஆகட்டும்! இந்த நிமிடத்திலிருந்து உனது உயிர் , குணம் எல்லாம் உன் தம்பி மகன், வரதன் உடலில். அவன் உயிர், குணாதிசயங்கள் எல்லாம் உன் உடலில்.”
***
அடுத்த நாள்:
கந்தசாமியின் தம்பி ரங்கசாமியின் வீடு. வீட்டு வாசலில், தெரு வரை, கூட்டம் கூடியிருந்தது. வாசல் வராந்தாவில் ரங்கசாமியின் பூத உடல் வைக்கப் பட்டிருந்தது. . சுற்றிலும் உறவினர்கள், நண்பர்கள், தொழிற்சாலை ஊழியர்கள்.
விஷயம் இதுதான்:
https://encrypted-tbn3.gstatic.com/i...jhZ8rQhOfHXkus
முந்திய நாள் மாலை, நான்கு மணிக்கு, ஊட்டி அருகே அவரது கார், வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு லாரி மீது மோதி, அந்த இடத்திலேயே ரங்கசாமியின் மரணம் சம்பவித்தது. அவர் ஏன் அங்கே போனார் என யாருக்கும் தெரியவில்லை. அவரது மனைவிக்கும் கூட எதற்காக அவர் அவ்வளவு அவரசமாக ஊட்டி போனார் என்ற காரணம் புரியவில்லை. “அவர் மட்டும் ஊட்டி போகாம இருந்திருந்தால், இப்படி ஆகியிருக்காதே” என்று மூக்கை சிந்திக் கொண்டிருந்தாள்.
இந்த களேபரத்தில், ரங்கசாமியின் மகன் வரதன் மட்டும் விறைப்பாக இருந்தான். அப்பாவின் மரணம் அவனை பாதித்ததாகவே தெரியவில்லை. இது குடும்பத்து உறவு எல்லோருக்கும் ஆச்சரியம். அப்பாவுக்கு பிரியமான மகனாயிற்றே!. ஏன் இப்படி நடந்து கொள்கிறான்?
இன்னொரு ஆச்சரியம் , அவனது எண்ணம் பேச்சு செயல் எல்லாம், அப்பாவின் சொத்து எவ்வளவு தேறும் என்பது பற்றியே இருந்தது. இழவு வீட்டிலேயே, அவனது பேச்சில், அது நன்றாக தெரிந்தது. அவன் அம்மாவுக்கும் அவனது போக்கு புரிபடவேயில்லை.
ஆனால், அதற்கு நேர்மாறாக, ரங்கசாமியின் உடலுக்கு முன் , அழுத முதத்துடனிருந்த தொழிலதிபர் கந்தசாமியின் கண்களில் மாலை மாலையாக கண்ணீர். அனைவருக்கும் அதிசயம். எதற்கும் கலங்காத கந்தசாமியா இப்படி தம்பிக்காக அழுகிறார். தம்பியை துச்சமாக நடத்துவாரே!
கந்தசாமி, வந்திருந்த உறவினர் , நண்பர்கள் அனைவரது கையையும் பிடித்து கொண்டு உருக்கமாக கண்ணீர் மல்க பேசினார். ‘என் தம்பிக்கு இப்படி ஒரு துர்மரணமாகி விட்டதே! அவன் மட்டும் ஊட்டிக்கு போகாமல் இருந்திருந்தால் இப்போது உயிரோடு இருந்திருப்பானே! எதுக்காக போனான்னே தெரியலியே?’-தம்பிக்காக உருகினார்.
கந்தசாமியின் நடவடிக்கை அனைவருக்கும் புரியாத புதிராக இருந்தது. இதுவரை அவர் இப்படி நடந்து கொண்டதேயில்லையே! ஏழைகளை திரும்பிக் கூட பார்க்க மாட்டாரே. தம்பியின் துர்மரணம் அவரை வெகுவாக மாற்றிவிட்டது போல என எல்லாரும் பேசிக் கொண்டனர்.
***
இரண்டு நாள் கழித்து:
ரங்கசாமியின் மகன் வரதன் , தன் பெரியப்பாவை தேடி தொழிற்சாலைக்கே வந்து விட்டான்.
“வா வரதா! வா!” வரவேற்றார் கந்தசாமி.
“பெரியப்பா! அப்பாவுக்கு பதிலா என்னை இப்போவே நிர்வாக டைரக்டர் ஆக்கணும்.”
“அப்படியே செய்யலாம் வரதா! அதுக்கு முன்னாடி நீ நிர்வாக நெளிவு சுளிவு தெரிஞ்சுக்கணும். அதுக்கு ஏற்பாடு பண்றேன். சரியா?”
“வேண்டாம் பெரியப்பா! இதெல்லாம், எனக்கு நல்லாவே தெரியும். ஏதாவது குறுக்கு வழியிலே என்னை டைரக்டர் ஆக்கிடுங்க.”
“அதுக்கு வழியே இல்லையே வரதா! . போர்டு ஒப்புக்காதே. நீ ஒன்னு செய். முதல்லே மார்க்கெட்டிங் மேனேஜர் கிட்டே போய் பயிற்சி எடுத்துக்கோ”- கண்டிப்பாக சொல்லிவிட்டார் கந்தசாமி.
வேண்டா வெறுப்பாக வரதன் அங்கே இருந்து நகன்றான். இருக்கட்டும், கான்சர் நோயாளி பெரியப்பாக்கு மிஞ்சி போனால், இன்னும் மூணு மாசம். தனிக்கட்டை. வாரிசு இல்லாதவர். அவருக்கு பின் கம்பனி என் கையில் வந்து விடும். பார்த்துக் கொள்கிறேன், பத்தே வருஷத்தில், பத்து மடங்கு பெரியதாக்கி காட்டுகிறேன்.
****
பத்து நாள் கழித்து.
கந்தசாமியை பரிசோதித்த டாக்டருக்கு கொஞ்சம் தலை சுற்றியது. இது எப்படி சாத்தியம் ? .
“கந்தசாமி சார், எதுக்கும் உங்களை இன்னொரு தடவை ஸ்கேன் பண்ணிடலாமா?”
“என்ன டாக்டர், என்ன விஷயம்?”
“ஒண்ணுமில்லே, அதிசயமாயிருக்கு! ம்! இந்த ரிப்போர்ட் பிரகாரம், உங்க புற்றுநோயின் தாக்கம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு. ரெமிஷன். எப்படி? அதான் புரியலே! இது ஒரு மெடிக்கல் மிரகல்”
“தெரியலே டாக்டர்! இப்போவெல்லாம் எனக்கு சிகரெட்டு, மதுவை கண்டாலே குமட்டுது. அந்த சனியங்களை விட்டே பத்து நாளாச்சு.”
“அப்படியா ? எதுக்கும் ஒரு மாசம் கழிச்சி இன்னொரு டெஸ்ட் எடுத்து பாப்போம்.”
“ரொம்ப சந்தோஷம் டாக்டர்! அப்ப நான் கிளம்பறேன் !எனக்கும் ஏகப்பட்ட வேலை இருக்கு”.
கந்தசாமி வெளியே வந்தார். அவரது கார் டிரைவர் கதவை திறந்தான். “என்ன மணி! எப்படி இருக்கே? உன் சம்சாரம் ஊரிலிருந்து வந்துட்டாங்களா?”
“வந்துட்டாங்கய்யா!”. மணிக்கு புரியவேயில்லை ! நம்ம எசமானா இது?நம்பவே முடியலியே?இவ்வளவு பிரியமா பேசறாரே?
****.
அடுத்த நாள்.
https://encrypted-tbn1.gstatic.com/i...vHKuppq7Td0T5W
கந்தசாமி கம்பனி போர்டு மெம்பர்களை கூப்பிட்டார்.
“நம்ப பாக்டரி கழிவு விஷயமா கோர்ட் ஆர்டர் 200 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டி வந்திருக்கில்லே?”
“ஆமா சார், நீங்க சொன்ன மாதிரி நாம்ப மேல் முறையீடு பண்ண போறோம் சார்.”
“மேல் முறையீடு வேண்டாம், கீழ் முறையீடும் வேண்டாம். பேசாம இழப்பீடு கொடுத்திடுங்க. பாவம், ஏழைகள், அவங்க மருத்துவத்துக்கு தேவைப்படும்..”
அனைவருக்கும் ஆச்சரியம். கந்தசாமியா இது? என்னாச்சு இவருக்கு?
“அப்புறம், நமக்கு நிறைய லாபம் வருதில்லே! அதிலேருந்து தொழிற்சாலை கழிவு சுத்தம் பண்ண இயந்திரம் வாங்குங்க”
என்னையா இது, சிக்ஸர் சிக்ஸரா அடிக்கிறார்?
“இன்னொன்னு, சொல்ல மறந்திட்டேன், நம்ப தொழிலாளர் எல்லோருக்கும், சம்பளத்தை 30% இந்த மாசத்திலேருந்து உசத்துங்க.”
“அப்போ நம்ப லாபம்? பங்குதாரருக்கு என்ன பதில் சொல்றது?”- நிதி டைரக்டர்.
“கவலையே படாதிங்க! நிச்சயம் லாபம் பண்ணலாம். நியாயமா பண்ணலாம். அதுக்கு நான் உத்திரவாதம்”
***
கிட்ட தட்ட இரண்டு மாதம் கழித்து
“ஐயா!உங்களுக்கு டாக்டர் கிட்டேயிருந்து போன்” வேலைக்காரன் பவ்யமாக போனை கொடுத்தான்.
“நாந்தான் கந்த சாமி பேசறேன். சொல்லுங்க டாக்டர்!”
“சார், நான் உங்க டாக்டர் பேசறேன். ஒரு சந்தோஷமான் செய்தி. உங்களுக்கு புற்றுநோய் நல்லாவே ரெமிஷன் ஆயிடுச்சி. இன்னும் ஒரு வருஷத்தில் பூரண குனமாயிடுவீங்க. கவலையே பட வேண்டாம். ஆரோக்கியமா இருப்பீங்க”
“ரொம்ப தாங்க்ஸ் டாக்டர். எல்லாம் உங்க திறமை”
கொஞ்ச நேரத்தில், கந்தசாமியை தேடி வக்கீல் அவரது அறையினுள் நுழைந்தார்.
“வாங்க வக்கீல் சார், எனது உயிலை மாத்தி எழுதணும். எனது ஊட்டி எஸ்டேட் இருக்கில்லே, அதை ஊட்டி முதியோர் இல்லத்துக்கு அன்பளிப்பா ரெஜிஸ்டர் பண்ணிடுங்க. எனது சொத்தில் ஒரு 50 கோடி ரூபாய் அனாதை இல்ல டிரஸ்ட்காக ஒதுக்குங்க. இன்னொரு 50 கோடி ஆஸ்பத்திரி டிரஸ்ட்காக போட்டுடுங்க. நம்ப தொழிலாளர் குடும்ப டிரஸ்ட், பள்ளிக்கூடம், கல்லூரி இதுக்காக மீதி சொத்தை எனது உயிலில் பிரித்து எழுதிடுங்க. ”
“அப்படியே ஆகட்டும் சார்”. என்ன ஆச்சு கந்தசாமி சாருக்கு! எப்படிஇருந்தவர் இப்படி ஆயிட்டார்?
****
சில நாள் கழித்து : வரதன் வீட்டில்:
“என்னது! என்னம்மா சொல்றே? பெரியப்பா அவரோட சொத்தில் எனக்கு எதுவும் வைக்கவில்லையா? இதோ நேரே போறேன் அவர்கிட்டே. நாக்கை பிடுங்கிக்கராமாதிரி நாலு வார்த்தை கேக்கிறேன்” வரதன் கத்தினான். முகம் சிவந்து இருந்தது. குடி போதையில், கோபத்தில் அவனது கை நடுங்கியது.
வரதனின் அம்மா “வரதா! சொல்றதை கேளு. நமக்கு எதுக்கு இன்னும் சொத்து? உங்கப்பா விட்டுட்டு போனதே போறுமே! அது, பெரியப்பா, அவர் சம்பாதித்த சொத்து , என்ன வேணா செஞ்சுக்கட்டும். சும்மா பெரியப்பா மனசை நோகடிக்காதே!”
“சும்மா இரும்மா! உனக்கு ஒன்றும் தெரியாது!”
வரதன் வேகமாக மாடியிலிருந்து , படிக்கட்டில் இறங்கினான். கண் மண் தெரியாத ஆத்திரம். கண்மூடித்தனமான கோபம். கால் தடுக்கியது. இடறி விழுந்தான். உருண்டான். மண்டை உடைந்தது.
கழுத்து மளுக்கென்றது. அவனது ஆவி பிரிந்தது. அங்கே இருந்த காலாந்தகன் , சிரித்த படியே பாசக் கயிறை வீசி, உயிரை எடுத்துக் கொண்டான்.
யம கிரந்தப் படி, கந்தசாமியின் உயிர் பிரிய வேண்டிய நாள் அன்றுதான்.
****
யமலோகம் :
https://encrypted-tbn0.gstatic.com/i...bKvFql2UKLkgFw
கந்தசாமியின் ஆத்மா, யமன் எதிரில்.
அது யமனை கேட்டது “இது நியாயமா தர்மா? நீ உன் சொல்படி நடக்கவில்லையே? வாக்கு தவறி விட்டாயே?”
யமன் “கந்தசாமி, நான் விதி என்ன சொன்னதோ அது படி தான் நடந்தேன். விதிப் படிதான் உனக்கு மரணம் சம்பவித்தது.”
“இது என்ன ஏமாற்று கால தேவா?”- கந்தசாமியின் ஆத்மா கேட்டது.
யம தர்மன் சிரித்தார் “நீ என்ன நினைத்தாய் கந்தசாமி ? சின்ன வயது உடலுக்குள் போனால், இன்னும் 50 ஆண்டுகள் இருக்கலாமென்று. ஆனால், உடலிலிலிருந்து உயிர் பிரிவதற்கும், வயதிற்கும் சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியமில்லையே! அது புற்றுநோயாலும் போகலாம், கார் விபத்தினாலேயும் போகலாம், அல்லது படிக்கட்டில் விழுந்தும் போகலாம்”
கால தேவர் தொடர்ந்தார் ."எங்கள் கணக்குப்படி, உனக்கு ஆயுள் இன்று முடிந்து விட்டது. வந்து விட்டாய். வரதனுக்கு இன்னும் 20 வருடமிருக்கிறது. உன் உடம்பில் அவன் ஆரோக்கியமாக இருப்பான். இதுதான் விதி. விதியை மாற்ற யாராலும் முடியாது. என்னாலும் முடியாது, எந்நாளும் முடியாது. என்ன புரிந்ததா?”
*** முற்றும்