Quote:
ராமருக்கும்... கிருஷ்ணருக்கும்...
பின்னணி பாடகர்களின் மறக்க முடியாத குரலுக்கு சொந்தக்காரர் கண்டசாலா. 1945-1970 பீரியடில் இசையமைப்பாளராகவும் வலம் வந்த அவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டி, இந்தி, சிங்களம், பெங்காலி என பல மொழிகளில் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் பாடி ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர்.
கண்டசாலாவின் இளையமகன் ரத்னகுமார் இதில் கொஞ்சம் மாறுபட்டிருக்கிறார்.அப்பா பாட்டு என்றால் இவர் பேச்சு. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சமஸ்கிருதம் உள்பட 1076 படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார். தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் ஏறக்குறைய 10 ஆயிரம் எபிசோடுகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். ஐம்பது டாகுமென்ட்டரி படங்களுக்கும் பேசியுள்ள இவர், மேடைக்கச்சேரி பாடகரும் கூட. 32 வருடமாக இந்தக் கலையை நேசித்து செய்து வருகிறார்.
இவர் டப்பிங் பேசிய படங்களில் கடலோரக்கவிதைகள், கலைஞன், இந்திரன் சந்திரன், தர்மதுரை, ஜீவா, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, ஜல்லிக்கட்டு, வீடு, முகமூடி முக்கியமானவை.
நடிகர் சங்கம் வழங்கிய `கலைச்செல்வம்', டப்பிங் ïனியன் வழங்கிய `குரல் செல்வம்', ஆந்திர அரசாங்கம் வழங்கிய `நந்தி அவார்டு' ஆகிய விருதுகளை பெற்றுள்ள இவருக்கு, வீணா, வாணி என இரண்டு மகள்கள். இதில் வீணா கல்லூரியில் படித்துக் கொண்டே பாடகியாகவும், அப்பா வழியில் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருந்து வருகிறார்.
`தேன்கூடு' என்ற குடும்பப்பாங்கான படத்தையும் தயாரித்து வெளியிட்டுள்ளார். சென்னையில் உள்ள ஆந்திரா கிளப்பின் பொழுதுபோக்கு பிரிவில் செயலாளராகவும் இருக்கிறார்.
இவரது சமீபத்திய சாதனை, இம் மாதம் 4-ம் தேதி நடந்தது. அன்று காலை 10 மணிக்கு டப்பிங் பேச ஆரம்பித்தார். இடைவிடாமல் 8 மணி நேரம் தொடர்ந்து பேசி இந்தியா புக் ஆப் ரெக்கார்டு, ஆசியா புக், ஆப் ரெக்கார்டு, அமேஸிங் வொர்ல்டு ரெக்கார்டு சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார்.
தூர்தர்ஷனில் வந்த ராமாயணம் தொடரில் ராமருக்கும், ஸ்ரீகிருஷ்ணர் தொடரில் கிருஷ்ணருக்கும் வருடக் கணக்கில் குரல் கொடுத்து வந்த பெருமையும் இவருக்குண்டு