நேற்றைய 'மறக்க முடியுமா?' வும் பல்வேறு சுவாரஸ்யங்களைத் தாங்கி வந்தது.
'கவரிமான்' படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் எனக்கு பெரிய சந்தேகம் வரும் (என்னைப்போல பலருக்கும் வந்திருக்கும்).
நடிகர்திலகத்தின் மனைவியாக நடித்திருப்பவர் பிரமீளா. 'பூப்போலே உன் புன்னகையில் பொன் உலகினைக் கண்டேனம்மா' என்ற பாடலில், பூங்காவில் நடிகர்திலகம் தங்கள் குழந்தையை வைத்துக்கொண்டு பாட, குழந்தையின் அம்மா பிரமீளா மட்டும், சற்று தூரத்திலேயே வந்துகொண்டிருப்பார். இது என்ன விந்தை, ஏன் இப்படி அவர் மட்டும் இவர்களோடு ஒட்டாமல் தனியே தூரத்தில் வருகிறார் என்று குழம்பிய நமக்கு, நேற்று ஒளிப்பதிவாளர் பாபு, குட்டைப்போட்டு உடைத்துவிட்டார்.
ஆம் அது அது பிரமீளாவே அல்ல. அவரைப்போல வேறு ஒரு பெண். அந்நேரத்தில் பிரமீளாவின் கால்ஷீட் சிக்கலாலும், அதற்காக நடிகர்திலகத்தின் கால்ஷீட்டை அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடியாமல் போனதாலும், பிரமீளாவைப்போலவே இருந்த வேறொரு பெண்ணை அந்த பாடல் முழுமைக்கும் நடிக்க வைத்து, பின்னர் ஒருசில காட்சிகளில் மட்டும் பிரமீளாவின் குளோஸப்களை தனியே எடுத்து இணைத்துக்கொண்டார்களாம்.
பாபு பேசும்போது, படத்தின் முக்கியகாட்சியொன்றையும் காண்பித்தனர். வெளியூர் பயணம் ரத்தாகி திரும்பி வரும் நடிகர்திலகம் படுக்கையறையில், அவர் மனைவி பிரமீளாவும் ரவிச்சந்திரனும் தவறான கோலத்தில் இருப்பதைப் பார்த்துவிட்டு துடிக்கும் காட்சி. நடிகர்திலகம், பிரமீளா, ரவிச்சந்திரன் மூவர் முகத்திலும் அதிர்ச்சி தத்ரூபம்.
ஒளிப்பதிவாளர் பாபு பேசிக்கொண்டிருக்கும்போதே, எபிசோட் முடிந்துவிட்டது. அடுத்தவாரம் தொடரும் என்ற கார்டு காண்பிக்கப்படவில்லை. இருப்பினும் முழுமையாக முடியாததால் அடுத்த வாரமும் வருமென நம்புவோம்.