அன்பு சகோதரர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்கள் அறிவது :
முதலில் உங்களுக்கும் நடிகர் திலகம் திரி நண்பர்களுக்கும் எனது இதயம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
தங்கள் விளக்கத்தைப் பார்த்தேன். நானும் உங்களிடம் இருந்து இப்படி ஒரு பதில் பதிவை எதிர்பார்க்கவில்லை.
எங்கள் புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மலைப் பற்றிய , நண்பர் திரு.கோபால் அவர்களின் சமீபத்திய பதிவு குறித்து அவரை நீங்கள் கேட்க மாட்டேன் என்கிறீர்களே என்று நானும் பல நாட்களாகவே உங்களிடம் கேட்க வேண்டும் என்றுதான் இருந்தேன்...... சகோதரர் கலைவேந்தன் கூறியது போல கடந்த வார பதிவை நான் மேற்கோள் காட்டியது ஒரு உதாரணம்தான். சிற்சில சமயங்களில், அவ்வாறு சுட்டி காட்டப்படும் உதாரணங்கள் தவறான கண்ணோட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதுதான் உண்மை.
ஒரு MODERATOR ஆக தாங்கள் திகழ்ந்து, சில பதிவுகளில் சில தேவையற்ற வார்த்தைகளை நீக்கியதற்கு நன்றி கூறும் இந்த வேளையில், நடிகர் திலகம் திரி நண்பர்கள் சிலர் எங்கள் மக்கள் திலகம் திரியினில் வந்து பதிவிடுவது திரு.கோபால் அவர்களுக்கு பிடிக்காமல் அவர்களை குறை கூறி எழுதுயதை நீங்கள் கண்டிக்கவில்லை என்றுதான் வருத்தம் கொள்ளச் செய்கிறது. ஒரு சமீபத்திய உதாரணம் : ஐதராபாத் திரு. ரவி அவர்கள் எங்கள் திரிக்கு வந்து நற்கருத்துக்களை கூறுகிறார் என்பதற்காக அவரை, ‘’ரவி’க்கை அணிந்து சரணாகதி அடைந்து விட்டார்’ என்று திரு.கோபால் தனக்கே உரிய நையாண்டியுடன் கிண்டல் செய்தார். அதை நீங்கள் இது வரை கண்டிக்காதது மட்டுமல்ல, அந்த பதிவையும் நீக்கவில்லை.
அனைவருக்கும், திரி மூலம் நேற்று வேண்டுகோள் விடுத்த தாங்கள், திரு. கோபால் அவர்களுக்கு அறிவுரை கூற வில்லையே என்ற ஆதங்கம் தான் எனக்கு மேலோங்கி நிற்கிறது. இது ஒரு தலை பட்சமாகவே என் கண்ணுக்கு புலப்படுகிறது.
எந்த காலத்திலும், சுயமரியாதை காத்து வரும், திராவிட இயக்கத்தை சார்ந்த நாங்கள், மற்றவர்களின் சுயமரியாதையை வெகுவாகவே மதித்து வருகிறோம். எனவே மன்னிப்பு என்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை. மன்னிப்பு கோரும் அளவுக்கு தாங்கள் எந்த தவறும் செய்ய வில்லையே !
சகோதரர் கலைவேந்தன் ‘அன்னை மடியை விரித்தாள் எனக்காக..’ என்று பதிவு போட்டால் அதை புரட்சித் தலைவர் நீக்கச் சொன்னார் என்றும் திரு. கண்ணதாசன்தான் பிடிவாதமாக அந்த வரியை சேர்த்தார் என்ற அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடுகிறார் திரு. கோபால். “தன் நெஞ்சறிவது பொய்யற்க ... பொய்த்த பின் தன் நெஞ்சே தன்னைச் சுடும்” என்ற வள்ளுவரின் குறள்தான் நினைவுக்கு வருகிறது. தாயை தெய்வமாக மதிப்பவர் எட்டாவது வள்ளல், எங்கள் புரட்சித் தலைவர். இது உலகறிந்த உண்மை. அப்படிப்பட்ட எங்கள் பொன்மனச் செம்மல், அந்த வரியை நீக்க சொல்வாரா? வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசக்கூடாது.
கலைஞர் திரு.மு.கருணாநிதி அவர்களைப் பற்றி மக்கள் திலகம் திரியில் நாங்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்வோம் என்று நான் கூறியதாக சொல்லியுள்ளீர்கள். நான் அப்படி கூறவேயில்லை. இது அபாண்டமான பழி. கலைஞர் திரு. மு.கருணாநிதி அவர்களைப் பற்றிய தவறான தகவல்கள், மக்கள் திலகம் திரியினில் பதிவிடப்பட்டால், அதற்கு ஆதாரப்பூர்வமான மறுப்பினை தாரளமாக தெரிவிக்கலாம் என்றுதான் கூறினேன். மேலும், கலைஞர் திரு. கருணாநிதி அவர்களைப்பற்றிய பதிவுகளை நான் கண்டிக்கவில்லை என்றும் கூறுகிறீர்கள். அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருப்பினும், அண்ணாவின் தம்பிகளில் ஒருவர், புரட்சித் தலைவரின் நண்பர், திராவிட இயக்க தளபதிகளில் ஒருவர் என்ற வகையிலும், எங்கள் பொன்மனச்செம்மல் ஒரு காலத்தில் ஏற்றுக் கொண்ட தலைவர் என்ற காரணத்தாலும், சட்ட சபையில் அவை நாகரீகம் காத்து, எதிர் கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் மீது ஒரு முதல்வராக இருந்த எங்கள் புரட்சித்தலைவர் எந்த அளவுக்கு மரியாதை வைத்திருந்தார் என்பதை நான் முற்றிலும் உணர்ந்தவன் என்ற காரணத்தாலும், கலைஞர் கருணாநிதி மீது எனக்கு மரியாதை உண்டு. நான் அவரை கலைஞர் கருணாநிதி என்றே எப்போதும் மரியாதையாக கூறுவேன். என்னுடைய கடந்த கால பதிவுகளில் இதனை உறுதி செய்து கொள்ளலாம். இங்கே நான் புரட்சித்தலைவரின் தீவிர அபிமானி, பக்தன் என்பதால், கலைஞர் கருணாநிதி அவர்களை எதிர்ப்பவன் என்று நீங்களாகவே அர்த்தம் கற்பித்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.
ஆனால், இங்கே இந்த ‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி' யில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், தென்னாட்டு காந்தி பேரறிஞர் அண்ணா, பாரத ரத்னா புரட்சித் தலைவர், கலைஞர் கருணாநிதி ஆகியோரைப் பற்றியும் திராவிட இயக்கங்களைப் பற்றியும் மிகவும் மோசமாக விமர்சனங்கள் வருகிறதே. அதை நீங்கள் கண்டிக்கவில்லையே ?
என்னைக் கேள்வி கேட்கக் கூடாது என்று நான் கூறவில்லை. தாராளமாக நீங்கள் கேட்க உரிமை உண்டு. அதற்கு தக்க ஆதாரத்துடன் விளக்கமளிப்பது என் கடமை. அதேசமயத்தில், நாங்கள் உங்களை கேட்டால் இப்படி பதிவை எதிர்பார்க்கவில்லை என்று கூறுகிறீர்கள்.
சகோதரர் கலைவேந்தனின் பதிவை ஏன் நீக்கவில்லை என்று கேட்கிறீர்கள். நாங்கள் அனாவசியமாக நடிகர்திலகம் மறைதிரு. சிவாஜி கணேசன் அவர்களை விமர்சிப்பதில்லை.
நான் கூட, மிருதங்கச் சக்கரவர்த்தி, தில்லானா மோகனாம்பாள் ஆகிய படங்களை புரட்சித் தலைவர் பார்த்துவிட்டு மறைதிரு.சிவாஜிகணேசன் அவர்களின் நடிப்பை பாராட்டினார் என்று நடிகர்திலகம் திரிக்கு வந்து சமீபத்தில் பதிவிட்டேன். அதை நண்பர் திரு.சிவாஜி செந்தில் அவர்கள் கூட பாராட்டினார்.
நான் சகோதரர் கலைவேந்தன் அவர்களைப் பற்றி முழுமையாக அறிந்தவன். அவர் யார் மனதையும் புண்படுத்த விரும்பாதவர். நீங்கள் குறிப்பிட்டபடி, ‘வரலாறு தெரியாதவன்’ என்ற வார்த்தையை உங்களைப் பார்த்து அவர் பயன்படுத்தவில்லை.
ஒருவர் தன் தாய்க்கு சிலை வைத்து அதை திறப்பதற்கு தகுதியான ஆள்
http://i57.tinypic.com/r0basp.png
யார் என்று பார்த்துதான் தேர்ந்தேடுப்பார். நீங்கள் போற்றும் நடிகர் திலகம். பல முக்கிய பிரமுகர்கள் அவருக்கு வேண்டியப்பட்டவராக இருந்த போதிலும், எங்கள் மக்கள் திலகத்தை வைத்து தான் தனது தாயின் சிலை திறப்பு விழாவை நடத்தினார். ஒரு குழந்த பிறந்தால் அது அண்ணன் எம். ஜி. ஆர். அவர்கள் போல்தான் வாழ்ந்து புகழ் பெற வேண்டும், என்று எங்கள் புரட்சித்தலைவரின் மறைவுக்கு இரங்கல் செய்தி தெரிவித்த உங்கள் அபிமான நடிகர் போற்றிய எங்கள் பொன்மனச் செம்மலைப் பற்றி இங்கே, இந்த நடிகர் திலகம் திரியினில், எவ்வளவு மோசமான விமர்சனங்கள் இடம் பெற்றுள்ளன என்பதனையும் தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அதையெல்லாம் நீங்கள் நீக்கத் தயாரா ?.
நேற்று கூட, “ சாந்தி” திரைப்படத்தின் 50வது ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட மறைதிரு.சிவாஜிகணேசன் அவர்களின் ரசிகர்களான எனது நண்பர்கள் சிலர், விழாவில் திரு. ஜி. .உமாபதி அவர்களின் மைந்தர், ‘தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டத்தை உணர்ந்து ஒத்துழைப்பு கொடுத்த நடிகர்கள் எனக்குத் தெரிந்து மக்கள் திலகமும் நடிகர் திலகமும்’ தான், என பேசியதாக சொன்னார்கள். அப்படி புகழ் பெற்று விளங்கும் இரு திலகங்கள் புகழை மட்டும் கூறுவோம்.
நாங்கள் எல்லாருமே நட்புணர்வோடு இருக்கவே விரும்புகிறோம். மறுபடியும், கூறுகிறேன் : நீங்கள் தாராளமாக என்னை கேள்வி கேட்கலாம். அதேபோல, எட்டாவது வள்ளல், பொன்மனச் செம்மலைப் பற்றிய எதிர்மறையான விமர்சனங்களை நாங்களும் ஏற்றுக் கொள்ள மாட்டோம், விளக்கம் அளிப்போம். அதையும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
மீண்டும் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பின் குறிப்பு : திராவிட இயக்கத்தின் எழுச்சியால் இந்த தமிழகம் அடைந்த வளர்ச்சியையும், திராவிட இயக்கத்தலைவர்கள் தமிழ் சமுதாயத்துக்கு ஆற்றிய பணிகளும், சீர் திருத்தங்களும் பற்றிய விரிவான தொகுப்பினை விரைவில் எழுதவுள்ளேன் என்பதனையும், இத்தருணத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.