Originally Posted by
chinnakkannan
பெருந்துன்பம் கண்களிலே கொண்ட அந்தப்
..பாவையிடம் பெரியவரும் சென்று கேட்டார்
பருவத்தின் வாயிலிலே நிற்கும் பெண்ணே
..பார்வையிலேன் சோகத்தைக் காட்டி நின்றாய்
உருவத்தில் குமரியென இருக்கும் உந்தன்
..உணர்வினிலே துயரமேந்தான் வந்த திங்கே
குருவெனவே நினைத்துநீயும் சொல்வாய் நானும்
..கூறிடுவேன் ஏதேனும் நன்மை என்றால்..
உருவாக்கி விட்டபெற்றோர் யாரோ அறியேன்
..உணர்வுகளைத் தூண்டிவிட்ட வல்ல நண்பன்
சுறுசுறுப்பாய் என்னுடனே ஆடி நின்றே
..சோர்விலாமல் பலகதைகள் பேசி வந்தான்
துரும்புக்கும் துயர்செய்யா தூய உள்ளம்
..தோற்றுத்தான் போனதையா பாழும் விபத்தால்
முறுவலிக்கும் அதிர்ஷ்டமது எனக்கு இல்லை..
..மேனியுடன் நானிருக்க அதுவும் தொல்லை..
காதலனின் மரணத்தால் கலங்கி நிற்கும்
..கன்னியவள் கைபற்றிச் சொன்னார் அவரும்
பாதகந்தான் பெருந்துயர்தான் அறிவேன் நானும்
..பாவியான எமனுந்தான் பழியைச் செய்வான்..
வாதஞ்செய வரவில்லை உனக்கு பெண்ணே
..வாழ்க்கையது இருக்கிறது எழுந்து நிற்பாய்..
மோதவ்ரும் துயரங்களை நின்று ஏற்று
..மேய்ப்பதுவே வாழ்க்கையெனச் சொன்னார் நன்றாய்.
உப்பென்றும் காரமென்றும் உடலில் ஏற
...உணர்வுகளில் துயரந்தான் மறந்துபோகும்
சப்பென்று இருந்தாலது தயிரில் ஊறி
..சாரமில்லா புளிப்பான சாதமன்றோ
தொப்பென்று இதயத்தை விட்டி டாதே
..தோல்விகளும் துயரங்களும் நிலைத்து நிற்கா
முப்பொழுதும் இறைவனையே நினைக்கும் போதில்
..முன்னிற்கும் வாழ்க்கையது விரைந்து போகும்..
சொன்னவரோ பெரியவர்தான் ஆனால் என்ன
..சோர்வதனை நீக்கினரே ஆஹா நன்று
வண்ணமயில் சற்றுசற்றாய் தேறிக் கொஞ்சம்
..வாகாகக் கேட்டுவிட்டாள் ஐயா நீர்யார்..
எண்ணமதில் வைக்குவண்ணம் நானும் ஒன்றும்
..ஏற்றமிகு பெரியவனா ஒன்றுமில்லை..
உன்னைப்போல் பேரழகாய் பெண்கள் ரெண்டு
..அழகான சம்சாரம் இரண்டு பிள்ளை..
சின்னதான வியாபாரம் சொத்து கொஞ்சம்
..சோர்விலாமல் வாழ்க்கைதான் சென்ற தம்மா
கண்வைத்தார் யாரென்றால் காலம் தானே
..காலத்தில் மாற்றத்தில் விபத்து ஒன்றில்
என்குடும்பம் மரித்திடவும் இலக்கில் லாமல்
..எங்கெங்கோ சுற்றுகையில் கண்ணில் பட்டாய்
என்றேதான் சொல்லியவர் செல்லப் பார்த்தால்
..எளியவரின் கைகளிலே ஒன்று இல்லை....