http://i58.tinypic.com/348owad.jpg
Printable View
சாந்தி - பொன் விழா நிகழ்ச்சி - 1965- 2015 – Part II
என்னுடைய வரவேற்புரையில் மேலும் ஓரிரண்டு சுவையான தகவல்கள் இடம் பெற்றிருந்தன. சென்ற பதிவில் அவை விட்டுப் போய்விட்டன.
தனித்தனியாக இருந்த மெல்லிசை மன்னர்கள் இருவரும் இணைந்து முதன் முதலில் இசையமைத்த படம் பணம். அதுவும் நடிகர் திலகம் நடிக்க AL S புரொடக்ஷன்ஸ் தயாரித்த படம்தான்.
நடிகர் திலகம் பீம்சிங் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் ப அல்லது பா வரிசை தலைப்புகளைக் கொண்டதாகவே இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி. அவற்றில் விதிவிலக்காக அமைந்தவை மூன்று. ராஜா ராணி, செந்தாமரை மற்றும் சாந்தி. இந்த மூன்றில் இரண்டு படங்கள் AL S புரொடக்ஷன்ஸ் தயாரித்த படங்கள்தான்.
AL S புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக இயக்குனர் திருமதி ஜெயந்தி கண்ணப்பன் தன் உரையை தொடங்கினார். தங்களின் நிறுவனம் பழம்பெருமை வாய்ந்த நிறுவனம் என்பதை சுட்டிக்காட்டிய அவர் 1948-ம் ஆண்டே தங்கள் நிறுவனம் தொடங்கப்பட்டுவிட்டது என்ற தகவலை சொன்னார். 1952- ம் ஆண்டு தங்களின் முதல் தயாரிப்பான பணம் வெளிவந்தது என்பதை பகிர்ந்துக் கொண்டார். தமிழ் தெலுகு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் தங்கள் நிறுவனம் சுமார் 50,60 படங்களை தயாரித்திருப்பதையும் பெருமையோடு குறிப்பிட்டார்.
திரு கருணாநிதி அவர்கள், திரு எம்ஜிஆர் அவர்கள், செல்வி ஜெயலலிதா அவர்கள் மற்றும் ஆந்திர முதல்வராக இருந்த என்டிஆர் அவர்கள் ஆகிய நான்கு முதல்வர்கள் தங்கள் படங்களில் பணியாற்றிருப்பதை பெருமையுடன் சுட்டிக் காட்டினார் திருமதி ஜெயந்தி.
அவர்கள் நான்கு பேருக்கும் சம்பளம் கொடுத்த நிறுவனம் தங்களுடைய நிறுவனம் என்பதை பெருமிதத்துடன் சொல்லிக் கொண்டார். அதே போன்று நடிகர் திலகம் அவர்களுக்கும் தன் மாமனார் ஏஎல்எஸ் அவர்களுக்கும் ஆழ்ந்த நட்பு நிலவியதை சுட்டிக் காட்டிய அவர் அதன் காரணமாக பணம் திரைப்படம் முதல் சினிமா பைத்தியம் வரை தங்கள் நிறுவனம் எடுத்த படங்களிலெல்லாம் நடிகர் திலகம் பங்கு பெற்றிருப்பதை தாங்கள் செய்த பாக்கியமாக கருதுவதாக சொன்னார்.
ஏஎல்எஸ் மாமாவிற்கும் சிவாஜிப்பாவுக்கும் [பெரும்பான்மையான நேரங்களில் இப்படித்தான் குறிப்பிட்டார்] இருந்த நெருக்கம் பற்றி குறிப்பிடுகையில் எடுக்கப் போகும் படத்தின் நாயகன் நடிகர் திலகம் என்று முடிவு செய்து விட்டால் அவரை தொலைபேசியில் அழைத்து அடுத்த வாரம் பூஜை என்று மட்டும்தான் தகவல் சொல்லுவாராம் ஏஎல்எஸ். அதற்கு நடிகர் திலகம் இதற்கு நீங்கள் பேச வேண்டுமா? வீரய்யா (production manager) என்ன ஆனார்? என்று கேட்பாராம். அந்தளவிற்கு கலைஞர்களுக்கும் தயாரிப்பாளர்களும் இடையே நல்லுறவு நிலவி வந்த காலம்.என்று சொன்ன திருமதி ஜெயந்தி இன்றைய காலத்தைப் பற்றி பேசவே விரும்பவில்லை என்றார்.
தங்கள் குடும்பத்திற்கும் நடிகர் திலகம் குடும்பத்திற்கும் இப்போதும் நல்ல உறவுமுறை இருப்பதாகவும் இந்த விழாவிற்கு முதல் நாள் கூட தன் மகளுக்கு பிறந்திருக்கின்ற இரட்டை பெண் குழைந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா நடைபெற்றதாகவும் அந்நேரத்தில் தான் வாங்கி கொண்டு வரும் கவுனைத்தான் பேத்திகளுக்கு முதல் முதலில் அணிவிக்க வேண்டும் என்று சொல்லி சாந்தி அக்கா வாங்கிக் கொண்டுவந்து அணிவித்தார் என நெகிழ்ச்சியுடன் சொன்னார் திருமதி ஜெயந்தி.
தாங்கள் தயாரித்த அனைத்துப் படங்களின் அனைத்து உரிமைகளையும் தங்களிடமே வைத்திருப்பதாகவும் சாந்தி திரைப்படத்தை பொறுத்தவரை அதன் உரிமைக்கு இப்போதும் டிவி சானல்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் இருப்பதாகவும் இப்போதும் நல்ல தொகைக்கு சானல்கள் வாங்குவதாகவும் குறிப்பிட்ட திருமதி ஜெயந்தி அந்த விஷயத்தில் எங்களைப் பொறுத்தவரை சாந்தி ஒரு வற்றாத ஜீவநதி என்று குறிப்பிட்டார். ஒருவர் மறைந்து விட்டால் அவர் நினைவுகளும் மறைந்துவிடக்கூடிய காலத்தில் தமிழ் மக்கள் மனதில் நிரந்தரமாக நினைவில் நிற்பவர்கள் என்று சொன்னால் ஒருவர் நடிகர் திலகம் மற்றொருவர் என சிறிய மாமனார் கவியரசு கண்ணதாசன் என்று சொல்லி உரையை முடித்தார் திருமதி ஜெயந்தி.
அடுத்து பேச வந்தவர் ஆனந்த் தியேட்டர் உமாபதியின் மகன் திரு கருணாகரன். வெஸ்டேர்ன் ஸ்டைலில் உடையணிந்து வந்திருந்த அவர் அழகான தமிழில் அடுக்கு மொழி பேச கூட்டம் அதை மிகவும் ரசித்தது. பேச்சு தமிழிலும் மிக இயல்பாக பேசிய அவர் உண்மைகளை மிக தைரியமாக எடுத்துரைத்தார். நகைச்சுவை கலந்த அவர் பேச்சு ரசிக்கும்படியாக இருந்தது. தாங்கள் தயாரித்த ராஜ ராஜ சோழன் படத்திற்கு தான் உதவியாளராக பணிபுரிந்ததையும் நடிகர் திலகதிற்கே காட்சியின் வசனத்தை படித்து காண்பிக்கும் பணியை செய்தது தன் வாழ்நாள் பரிசு என்று சொன்னார்.
முதல் நாள் படப்பிடிப்பில் படத்தின் முதல் காட்சியான சிற்பி சிலை வடித்துக் கொண்டிருக்க அவருக்கு வெற்றிலை எச்சில் துப்பும் பேழையை ராஜ ராஜ் சோழனே பிடித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சி படமாக்கப்படுகிறது. இந்த காட்சியை விவரித்தவுடன் "என்னடா உங்கப்பன் லட்சக்கணக்கிலே செலவழிச்சு பிரமாண்டாமாய் படமெடுக்கிறேன்னு சொல்லிட்டு முதல் நாளே எச்சில் பாத்திரத்தை தூக்கச் சொல்றான்?" என்று கேட்டுவிட்டு இடிஇடியென்று சிரித்தாராம் நடிகர் திலகம். அந்தக் காட்சியின் முழு வசனத்தையும் அதே ஏற்ற இறக்கத்துடன் பேசிக் காண்பித்து கைதட்டலை அள்ளினார் கருணாகரன்.
அதற்கு பிறகு சாந்தி தியேட்டரை விலைக்கு வாங்க நடிகர் திலகம் முயற்சித்ததையும் தன் தந்தையார் உமாபதி அதற்கு தயங்கியதையும் (கணேசா, உன் படத்தையெல்லாம் போட்டுக்கிறேன். ஆனால் தியேட்டர் என்கிட்டேயே இருக்கட்டும்) சொன்னவர் இறுதியில் பிரம்மாஸ்த்ரமாய் நடிகர் திலகம், பெருந்தலைவரை அணுகியதையும் அவர் உமாபதியிடம் சொல்ல பெருந்தலைவர் பேச்சுக்கு மறுபேச்சு பேசாத உமாபதி இந்த தியேட்டரை கொடுத்துவிட்டு ஆனந்த தியேட்டர் கட்டியதையும் நினைவு கூர்ந்தார்.
தயாரிப்பாளர்களின் கஷ்டம் தெரிந்தவர் நடிகர் திலகம் என்று சொன்ன கருணாகரன் இன்றைய கால் நடிகர்களையெல்லாம் வெறும் அரிதாரம் பூசிய கூத்தாடிகள் என்று கோவத்தில் சாடினார். கோடிகள் சம்பளமாக வாங்கியும் பார்க்கப் போகிறவர்களுக்கு குடிக்க ஒரு டீ, காபி கூட கொடுக்காதவர்கள் இன்றைய நடிகர்கள் என்று சொன்ன அவர் இன்றைக்கும் சிவாஜி வீட்டில் தினம் வெளியாட்கள் 25 பேர் சாப்பிடுகிறார்கள் என்றார். யார் யாரையோ தெய்வம் என்று சொல்கிறீர்களே இவர்தானையா தெய்வம் என்று உணர்ச்சிப்பூர்வமாக உரையை முடிக்க கூட்டமும் உணர்ச்சிப்பூர்வமாக ஆரவாரித்தது.
அடுத்துப் பேசிய நடிகையர் திலகம் சாவித்திரியின் மகள் திருமதி விஜயசாமுண்டீஸ்வரி விழாவிற்கு அழைத்தற்கு நன்றி தெரிவித்துவிட்டு மனம் ஒருமுகப்பட மனக்கவலைகள் மறக்க யோகா தியானம் (meditation) போன்றவற்றை செய்யும்படி சொல்கின்றனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை இது போன்ற படங்களுடன் அந்த படங்களில் வரும் பாடல்களோடும் பயணிப்பதுதான் தனக்கு மிகப் பெரிய ஸ்ட்ரெஸ் reliever ஆக விளங்குகிறது என்று சொல்லி சுருக்கமாக உரையை நிறைவு செய்தார்.
எஸ்எஸ்ஆர் அவர்களின் துணைவியாரை பேச அழைக்க அவர் தன்னுடன் வந்திருந்த தன் மகன் கண்ணனை பேச அழைக்குமாறு வேண்டினார். மேடையேறிய கண்ணன் 5,6 மாதங்களுக்கு முன்பு இந்த விழா நடைபெற்றிருக்குமேயானால் தன் தந்தையார் கலந்துக் கொண்டிருப்பார் என கூறிவிட்டு சிவாஜி பெரியப்பா வீட்டில் நானும் ஒரு மகனைப் போல என்னை நடத்துவார்கள். அதேபோல் ராமு அண்ணனும் பிரபு அண்ணனும் ராஜூ சித்தப்பா என்று எங்கள் வீட்டில் உரிமையோடு வருவார்கள். 60 ஆண்டுகளையும் தாண்டிய உறவு இரண்டு குடும்பத்திற்கும் என்று சொன்ன அவர் தன் தந்தையார் எப்போதும் குறிப்பிடும் ஒரு விஷயத்தை பகிர்ந்துக் கொண்டார். அது என்னவென்றால் ஒரு காட்சி படமாக்கும்போது எத்தனை சிறிய ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக இருந்தாலும் அவர் நன்றாக நடித்தால் அவரை அழைத்து பாராட்டுவாராம் சிவாஜி பெரியப்பா. இது தமிழ் திரையுலகில் வேறு எந்த நடிகரிடமும் காண முடியாத பண்பு என்று தன் தந்தையார் அடிக்கடி குறிப்பிடுவார் என்று சொன்ன கண்ணன் தங்களை அழைத்ததற்கு நன்றி தெரிவித்து விடை பெற்றார்.
அதன் பிறகு சாந்தி 50 வது ஆண்டு பொன் விழா கொண்டாட்டத்தின் நினைவாக NT FANS சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. மேடையிலிருந்து சிறப்பு விருந்தினர்கள் கீழே இறங்க திருமதி ஜெயந்தி கண்ணப்பன் தயாரித்துக் கொண்டு வந்திருந்த 10 நிமிட காணொளிக் காட்சிகள் திரையிடபப்ட்டன. AL S புரொடக்ஷன்ஸ் இதுவரை தயாரித்த அனைத்துப் படங்களின் ஸ்டில்ஸ், நடிகர் திலகமும் AL S அவர்களும் கலந்துக் கொண்ட பல்வேறு விழாக்களில் எடுக்கபப்ட்ட புகைப்படங்கள், நாட்டின் மிக உயர்ந்த பதவி வகித்திருந்த தலைவர்களோடு நடிகர் திலமும் ஏஎல்எஸ் அவர்களும் இணைந்த புகைப்படங்கள் என்று மிகப் பிரமாதமாக உருவாக்கப்பட்டிருந்தது அந்த டிவிடி. அது முடிந்ததும் சாந்தி திரைப்படம் திரையிடபப்ட்டது.
சுருக்கமாக சொன்னால் மிகப் பிரமாதமான விழா. கலந்துக் கொண்ட யாராலும் மறக்க முடியாத விழா என்ற சிறப்பை பெற்றது. மிக கடுமையான வேலைப்பளுவிலும் இந்த விழாவிற்கு வேண்டி மிக சிறப்பாக ஏற்பாடுகள் செய்து தந்த திருமதி ஜெயந்தி அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்கி இனியும் வர இருக்கின்ற அவர்களின் தயாரிப்புகளான கந்தன் கருணை லட்சுமி கல்யாணம் விழாக்களையும் சிறப்பாக நடத்துவோம் என கூறி அவருக்கு விடை கொடுத்து அனுப்பினோம்.
அன்புடன்
பாவமன்னிப்பு 51 - பாகம் - 2
8. பீம்சிங் இக்கதையை சிவாஜியிடம் கூறும்போதே ரஹீம் பாத்திரம் நடிகர் திலகத்தை கட்டிப்போட்டு விட்டது. ரஹீம் கதாபாத்திரத்தின் தன்மைகளை கிட்டத்தட்ட 40 பக்கங்களில் முதலிலேயே சிவாஜிக்கு பீம்சிங் எழுதிக் கொடுத்துவிட்டார். ரஹீம் பாத்திரத்தை மிகுந்த சிரத்தையோடு செய்ய திட்டமிட்டார் சிவாஜி. ஒவ்வொரு நாள் படப்பிடிப்புக்கு வரும் போதும் Fully Prepared ஆக வருவார். செவ்வனே செய்வார். அவர் நடிப்பதற்கு கேட்கவா வேண்டும். அன்றைய படப்பிடிப்பு இரவு எந்நேரத்தில் முடிந்தாலும், மறுநாள் படப்பிடிப்பில் எப்படி நடிக்க வேண்டும் என்பதனை பீம்சிங்குடன் கலந்து ஆலோசிதத பின்னரே வீட்டிற்குச் செல்வார். மறுநாள், எப்பொழுதும் போல் Prepared ஆக மேக்கப்புடன் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே படப்பிடிப்பு தளத்தில் ஆஜராகி விடுவார்.
9. இஸ்லாமிய சமூகத்தினர் இறைவனை வேண்டித் தரையில் மண்டியிட்டுத் தொழும் போது, அவர்களது நெற்றிமுனை தரையில் தட்டித்தட்டி அந்த இடம் கருப்பாகி விடும், அதாவது நெற்றிமுனையில் ஒரு கருப்புத் தழும்பு காணப்படும். இதையறிந்த நடிகர் திலகம் தனது நெற்றிமுனைக்கு மட்டும் சற்று கருப்பாக ஒப்பனை செய்து கொண்டார்.
10. "பாவமன்னிப்பு" திரைக்காவியத்தின் மிக முக்கிய காட்சி, நடிகவேள் நடிகர் திலகத்தின் மீது திராவகத்தை வீசும் காட்சி. இந்தக் காட்சி படமாக்கப்படுவதற்கு முந்தைய நாள் எப்பொழுதும் போல் அன்றைய படப்பிடிப்பு முடிந்தவுடன் பீம்சிங்கிடம் அடுத்தநாள் படப்பிடிப்பு பற்றி ஆலோசித்து விட்டு வீட்டிற்குச் சென்றார் நடிகர் திலகம். அன்று இரவு முழுவதும் அவருக்கு தூக்கம் பிடிக்கவில்லை. அடுத்தநாள் எடுக்கப் போகும் திராவக வீச்சு காட்சியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். பீம்சிங்கிற்கும் அவரது இல்லத்தில் உறக்கம் வரவில்லை. அடுத்த நாள் இயக்கப் போகும் காட்சி குறித்தே யோசித்துக் கொண்டிருந்தார். என்ன தோன்றியதோ தெரியவில்லை, நள்ளிரவில் சிவாஜிக்கு ஃபோன் செய்தார் பீம்சிங். கொட்ட கொட்ட முழித்துக் கொண்டு அடுத்த நாள் காட்சியைக் குறித்தே ஆராய்ந்து கொண்டிருந்த நடிகர் திலகத்துடன் ஃபோனில் நீண்ட நேரம் உரையாடினார் பீம்சிங்.
11. மறுநாள் திராவகம் வீசும் காட்சியின் படப்பிடிப்பும் தொடங்கியது. சிவாஜியின் முகத்தில் எதிர்பாராத விதமாக திராவகம் வீசப்பட்டு அவர் துடிதுடித்து தரையில் இங்குமங்கும் உருண்டு புரளும் காட்சி ஒரே ஷாட்டாக ஒரே டேக்கில் படமாக்கப்பட்டது. ஷாட் பிரித்தோ, இரண்டாவது டேக் போனாலோ மிக முக்கிய காட்சியின் அழுத்தம் குறைந்து விடும் என்று ஏற்கனவே தீர்மானித்திருந்ததாலேயே ஒரே ஷாட்டில் ஒரே டேக்கில் அக்காட்சியை படமாக்கினர் சிவாஜியும், பீம்சிங்கும். இதற்காகவே இரவெல்லாம் யோசித்து, தங்களுக்குள் விவாதித்திருக்கின்றனர்.
12. "பாவமன்னிப்பு" படப்பாடல்கள் காலத்தை வென்றவை. இப்பாடல்களை கவியரசர் கண்ணதாசன் எழுத மெல்லிசை மாமன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். அருமையான, ஆழமான கருத்துக்கள் கொண்ட பாடல் வரிகளுக்கு அற்புதமான, இனிமையான மெல்லிசை மெட்டுகள் என ஒரு புதிய திரை இசை அலையையே உருவாக்கினார்கள் மெல்லிசை மாமன்ன்ர்கள். பாடல்களின் ஒலிப்பதிவை மட்டும் ஒலிப்பதிவு மாமேதை முகுல்போஸ் செய்து கொடுத்தார்.
13. "எல்லோரும் கொண்டாடுவோம்" பாடலை நடிகர் திலகம் குழுவினருடன் பாடி நடிக்க சிவாஜிக்கு பின்னணி பாடியிருப்பார் டி.எம்.எஸ். குழுவினரில் ஒருவருக்கு நாகூர் ஹனீஃபா குரல் கொடுத்திருப்பார். இன்றளவும் இஸ்லாமிய பண்டிகை தினங்களில் வானொலியிலும், தொலைக்காட்சியிலும் தவறாமல் இடம்பெறும் பாடல் இது. நாகூர் ஹனீஃபா தனது பக்தி இசைக் கச்சேரிகளிலும் இப்பாடலை மறவாமல் பாடுவதுண்டு. நடிகர் திலகம் இப்பாடலுக்கு 'டேப்'பை வாசித்துக் கொண்டே பாடுவது இப்பாடலின் சிறப்பம்சம்.
14. "காலங்களில் அவள் வசந்தம்" பாடல் இன்றளவும் அனைத்து தலைமுறையினரையும் கவர்ந்த பாடல். பிபிஸ்ரீனிவாஸ் அவர்கள் எத்தனையோ மெலடிகளை பாடியிருக்கிறார். எனினும் அவரது சிகர மெலடி இது. இந்தப்படம் வெளிவருவதற்கு முன்னர் பல படங்களில் பல நல்ல மெலடிகளை அவர் இசைத்திருக்கிறார். இருப்பினும், இந்தப் படத்தின் இந்தப்பாடல்தான் அவரை Limelightற்கு கொண்டு வந்தது. ஜெமினிக்கு பிபிஎஸ் என்ற மியூசிகல் ஃபார்முலாவும் உருவாகக் காரணமாயிற்று. [காதல் மன்னனுக்கு ஹிட்ஸாங்ஸுகளுக்கு எப்பொழுதுமே குறைவிருந்ததில்லை. 1950களில் ஏஎம்ராஜா, கண்டசாலா குரல்களிலும், 1960களில் பிபிஎஸ்ஸின் வாய்ஸிலும், 1970களில் எஸ்பிபியின் குரல்ஜாலத்திலும் அவருக்கு பற்பல சிறந்த பாடல்கள் அமைந்திருக்கின்றன. டி.எம்.எஸ். குரலிலும் அவருக்கு சில சிகர பாடல்கள் இருக்கின்றன.]
நன்றி பம்மல் R. சுவாமிநாதன்
(தொடரும்)
அன்புடன்