Originally Posted by Jeyamohan
”பாட்டைக் கேட்டிருவோமா” என்றார். ஒலிப்பதிவு அறைக்குச் சென்றோம். பாடல்கள் முழுமைபெற்றிருந்தன. படித்துறையில் நானும் ஒருபாடல் எழுதியிருந்தேன். ஆனால் அது பதிவாகவில்லை, அந்தக் கதைச்சந்தர்ப்பம் படத்தில் இல்லை. நாஞ்சில்நாடனும் எஸ்.ராமகிருஷ்ணனும் எழுதிய பாடல்களைக் கேட்டேன். மிக நுட்பமான இசைக்கோலங்கள். என் எளிமையான ரசனைக்கு அதில் உள்ள ‘என்னை வளைச்சு பிடிச்சு..” என்ற பாடல் மனதைக் கொள்ளைகொள்வதாக இருந்தது. அதன் அற்புதமான நேர்த்தியும் ஒழுங்கும். அந்தப்பாடலைக் கேட்ட அக்கணம் முதல் இப்போது வரை அதுவே என்னுள் அறுபடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. என் எளிமையான பார்வையில் சந்தேகமில்லாமல் ராஜாவின் மிகச்சிறந்த பாடல்களில் ஒன்று அது. படத்துக்கே அது முக அடையாளமாக ஆகக்கூடும். பழனிபாரதி எழுதியது.