Quote:
வம்சம்...
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘வம்சம்’ தொடர், தொடக்கம் முதலே வேகம் பிடிக்கத் தொடங்கி விட்டது.
கோடிகோடியாக செல்வமிருந்தும் சொந்தபந்தம் இல்லாத காரணத்தால் இளம்பெண் சக்தியின் திருமண பேச்சு தடைபடுகிறது. அதற்காக ஒரு சராசரி பெண்ணாக அழுது புலம்பாமல், தனது உறவுகளைத் தேடி கிராமத்திற்கு புறப்படுகிறாள் சக்தி.
முப்பது வருட பகையை ஒரே நாளில் தணிப்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த சக்தி.. தாய்மாமா போலீஸ் கமிஷனர் வெற்றிவேல் அண்ணாச்சி (விஜயகுமார்) வீட்டிற்குள் நுழைகிறாள்... மருமகள் சக்தியாக அல்ல... சாதாரண சமையல்காரி சக்தியாக!
இயல்பாகவே நல்லவரான அண்ணாச்சி மனதைக் கவர முடிந்த சக்தியால், அவளது அப்பா வழி அத்தை நாகவல்லியின் (வடிவக்கரசி) நல்லெண்ணத்தை சம்பாதிப்பது அத்தனை சுலபமாக இல்லை. காரணம் அண்ணாச்சியும் நாகவல்லியும் பரம வைரிகள். பக்கத்தில் வந்தால் தான் பற்றிக்கொள்ளும் பஞ்சு நெருப்பு பகை அல்ல– தூரத்தில் இருந்து பார்த்தாலே பற்றி எரியும் பாஸ்பரஸ் பகை.
காட்டுத்தீ பகையை, பக்கெட் தண்ணீரால் அணைக்க முடியாது என்பது சக்தியை உணர்த்தியது. அழகுதுரை கொலை! மகனை இழந்த நாகவல்லி, பதிலுக்கு அண்ணாச்சி மகள் உத்ராவையே தனது வீட்டில் சிறைப்பிடித்து விடுகிறாள். அண்ணாச்சியை வெறுத்து நாகவல்லி வீட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் உத்ராவை எப்படி காப்பாற்றுவது என சக்தி திட்டமிடுகையில், அடுத்த இலக்காக நாகவல்லி குறி வைத்திருப்பது அண்ணாச்சி மகன் டாக்டர் ஜெயவேலுவுக்கு என்பது தெரிய வருகிறது.
நாகவல்லியின் ‘ஆக்டோபஸ் பிடி’யிலிருந்து ஜெயவேலுவை சக்தி காப்பாற்றுவாளா? சக்திக்கு அவசர நிச்சயதார்த்தம் நடந்தது அறியாமல் அவளையே சுற்றி சுற்றி வரும் நாகவல்லி மகன் துரைப்பாண்டியனின் காதல் என்னவாகும்? அழகு துரையை கொலை செய்தவனை போலீஸ் நெருங்கி வருகையில், கொலைகாரன் உத்ராவை சந்திக்க வருவதன் மர்மம் என்ன? இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடைகள், வரும் வாரங்களில்..
தொடரின் நட்சத்திரங்கள்: ரம்யா கிருஷ்ணன், விஜயகுமார், வடிவுக்கரசி, சீமா, காவேரி, தருண் மாஸ்டர், ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ, ஷ்யாம் கணேஷ், சத்யப்ரியா, ஸ்ரீலேகா, சதீஷ், ‘ஊர்வம்பு’ லட்சுமி. திரைக்கதை: சித்திக் ஜஷ்வர்யன். ஒளிப்பதிவு: விஜய். இயக்கம்: சி.ஜே.பாஸ்கர்