One more website about Sathyaraj speech
Printable View
நடிகர் திலகமும் அவர் நடித்த படங்கள் பிற மொழிகளிலும் (தொடர்ச்சி)
6. ஆலய மணி (1962) / குடி கண்டலு – தெலுங்கு (1965) / ஆத்மி – ஹிந்தி (1968)
நடிகர் திலகத்தின் அசாதாரணமான நடிப்பில் வெளி வந்த ஒரு மகத்தான வெற்றிப் படம்.
நடிகர் பி.எஸ். வீரப்பா அவர்கள் PSV பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தைத் துவங்கியவுடன், எடுத்த முதல் படம். இந்தப் படத்தின் emblem "ஆலய மணியை" கடைசி வரையிலும் வைத்திருந்தார். அந்த அளவிற்கு இந்த பேனருக்குப் புகழ் வாங்கிக் கொடுத்த படம். கடைசி வரையிலும் , இந்த பேனரின் முதல் படம் தான் - இந்த ஆலய மணி தான் - மிகப்பெரிய வெற்றிப் படமுமாகும். சென்னை மாநகரத்தில் ஐந்து திரை அரங்குகளுக்கு மேல் வெளி வந்து அத்தனை அரங்குகளிலும் நூறு காட்களைக் கடந்த மாபெரும் வெற்றிப் படம்.
ஜாவர் சீதாராமன் என்ற மிகச் சிறந்த கதை வசனகர்த்தா மற்றும் நடிகரின் கதை வசனத்தில் வெளி வந்த படம். இறையருள் இயக்குனர் திரு. கே. சங்கர் அவர்களின் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்த முதல் படம். ஒரு மொத்த பாடலையும் சேரில் (சற்கர நாற்காலியில்) உட்கார்ந்து கொண்டே நடித்து எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்த படம் (பொன்னை விரும்பும் பூமியிலே - உண்மையில், கவியரசர் இந்தப் பாடலை, மெல்லிசை மன்னரை மனதில் வைத்து எழுதினாராம்! கவியரசர் கண்ணதாசனைப் பற்றியும் ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதி வைத்து அதுவும் நடிகர் திலகத்தின் ஆய்வுக்கட்டுரையும் சேர்ந்து தான் எரிந்து விட்டது. அவரைப் பற்றியும், ஏராளமாய் எழுதிக்கொண்டே இருக்கலாம். ஆனால், இது நடிகர் திலகத்தின் திரி என்பதால், கொஞ்சமாகத்தான் எழுத வேண்டும்.). இடைவேளைக்கு முன்னர் நடிகர் திலகத்திற்கு ஒரு பாடலும் இல்லை. மானாட்டம் தங்க மயிலாட்டம் பாடலில் ஜீப்பை ஸ்டைலாக ஒட்டிக் கொண்டே (back projection technique தெரியாதவாறு நடிகர் திலகம் பிரமாதமாக நடித்து அந்தக் குறையை போக்கி விடுவார்.) பொதுவாக, நடிகர் திலகம் ஒருவர் தான், திரையில், அவர் பாடாமல் கூட நடிக்கும் நடிகை பாடும்போதும், ஒட்டுமொத்த மக்களின் கவனத்தைத் தன்பக்கம் வைத்துக் கொண்டவர். இந்த வகையில் வந்த நிறைய பாடல்களை ஏற்கனவே பலர் இந்தத்திரியில் - பம்மலார் மற்றும் சாராத மேடம் அவர்கள் என்று நினைக்கிறேன். அவருக்குப் பிறகு, ரஜினியை ஓரளவிற்கு சொல்லலாம்.) இடைவேளைக்குப் பிறகு, மூன்று சோலோ பாடல்கள் - மூன்றும் முத்தான பாடல்கள். மூன்று விதமான பாடல்கள். மூன்று விதமான நடிப்பு. "கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா" பாடலின் இரண்டாவது சரணத்தில் (கம்பன் கண்ட சீதை உந்தன் தாய் அல்லவா...), முழுவதும் க்ளோசப்பில், அற்புதமாக நடித்த படம். "சட்டி சுட்டதடா" பாடலில், விரக்தியின் எல்லையில் இருப்பவனை வடித்துக்காட்டிய படம்.
ஆலய மணி என்றால் உடனே நினைவுக்கு காட்சி - "உங்க எஜமான் நடையழகப் பாத்தியாடா?" என்று, நடிகர் திலகம் கால் ஊனமாகி, வீட்டிற்கு வெளியே வந்து, திரு எஸ்.ஏ. கண்ணன் அவர்களைப் பார்த்து கேட்டு உடையும் கட்டம்.
இந்தப் படத்தின் பிரதான கதாபாத்திரமான தியாகு என்கிற கதாபாத்திரம் ஒரு கத்தி முனையில் நடப்பது போன்ற கதாபாத்திரம். இது போல் எத்தனையோ பாத்திரங்களை இதற்கு முன்னரும், பின்னரும் நடிகர் திலகம் அனாயாசமாக ஊதித் தள்ளியிருப்பார். இத்தனைக்கும் , இந்தப் படம் வருவதற்கு முன்னர் (1960-இல் வெளி வந்த தெய்வப்பிறவி படத்திற்குப் பிறகு), அவர் நடித்த அத்தனை படங்களிலும் அவர் ஏற்ற கதாபாத்திரங்கள் நேர்மறையான மற்றும் மக்களின் ஒட்டுமொத்த அபிமானம் மற்றும் அனுதாபத்தையும் பெற்ற கதாபாத்திரங்கள் – படிக்காத மேதை, பாவ மன்னிப்பு , பாசமலர் , பாலும் பழமும் , கப்பலோட்டிய தமிழன் , படித்தால் மட்டும போதுமா , பார்த்தால் பசி தீரும் போன்றவை - நடுவில் வந்த நிச்சய தாம்பூலம் மட்டும் கொஞ்சம் - கொஞ்சம்தான் எதிர்மறையாக இருக்கும் அதாவது மனைவியை சந்தேகப் பட்டு குடிகாரனாவது போன்று. – ஆனால், ஆலயமணியின் “தியாகு” கதாபாத்திரமோ முற்றிலும் எதிர்மறையான கதாபாத்திரம் .
கடைசி வரையிலும் இமேஜ் பார்க்காத நடிகர் நம் நடிகர் திலகம் மட்டுமே என்பது எல்லோருக்கும் தெரியும். அது இந்தப் படத்திலும் பெரிதாக நிரூபணம் ஆகி இருக்கும்.
ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் உள்ள இரண்டு குணங்களையும் அக்கு வேறு ஆணி வேறாக கதாசிரியர் அலசியிருப்பார். அந்த அலசலுக்கு அற்புதமாக முழு வடிவம் கொடுத்திருப்பார் நடிகர் திலகம் . குறிப்பாக, எஸ்.எஸ். ராஜேந்திரனுக்கு இரத்தம் கொடுத்துவிட்டு அதற்குப் பின் , அவரைக் கத்தியால் குத்த வந்த வீரப்பாவை மன்னித்தபின் அவருடைய பிரத்தியேக அறைக்குச் சென்று, போட்டோ ஆல்பத்தையும் , மீனா பொம்மையையும் வைத்துக் கொண்டு பேசும் காட்சி. தனக்குள்ளே பேசிக் கொள்ளுவார் – "நண்பனுக்கு இரத்தம் கொடுத்தாய் , உன்னைக் கொல்ல வந்த பக்கிரியை மன்னித்தாய், ஒருவன் நல்லது நினைக்க நினைக்க, நல்லது செய்ய செய்ய, அவனிடத்தில் உள்ள மிருகப் பண்பு குறைந்து , மனிதப் பண்பு வளர்கிறது" என்று பேசிக் கொண்டே அவரை சுய சமாதானம் செய்து கொண்டே போய், திடீரென்று அந்த போட்டோ ஆல்பத்திலிருக்கும் பாபு என்ற சிறுவன் சிரிக்க ஆரம்பித்தவுடன், அவர் மனத்திரையில் ஓடும் காட்சிகள் … அப்படியே “பாபு!” என்று பெரும் கூச்சலுடன் அலறிக் கொண்டே கீழே விழும் அந்தக் காட்சி மெய் சிலிர்க்கும். உடனேயே, யாரோ அறைக் கதவைத் தட்டும் ஓசை கேட்டவுடன், கண் விழித்து, சுற்றி ஒரு முறை பார்த்து விட்டு பின் நாற்காலியில் உட்காரும் விதம் - அவ்வளவு நேரம் வேறு மாதிரி இருந்து விட்டு, இயல்பு நிலைக்கு வந்து, மீண்டும் அந்த தோரணையுடன் உட்கார்ந்து கொள்ளுவார். ஆஹா! திரு எஸ். ஏ. கண்ணன், பயத்துடனும் தயக்கத்துடனும், அவரிடம் வந்து எஸ்.எஸ்.ஆரின் அன்னை எம்.வி. ராஜம்மாவிற்கு உடம்பு சரியில்லை என்று தெரிந்து, உடனேயே , தெளிந்த மன நிலைக்கு வந்து அவரது வீட்டிற்குச் சென்று, அவருக்கு ஒத்தடம் கொடுக்கும் கட்டம். பின், அவரை “அம்மா” என்று அழைத்து “எம்.வி. ராஜம்மாவையும் "மகனே" என்று கூறுங்கள் என்று சொல்லி விட்டு "அம்மா... அம்மா..." என்று மெதுவாக சன்னமாக உணர்ந்து கூறி கண் கலங்கும் கட்டம்.
சில காட்சிகளுக்குப் பின்னர் – அதுவும் குறிப்பாக – அடுத்தடுத்து வரும் சில காட்சிகள் – முதலில் சரோஜா தேவி பட்டுப்புடவையும் அலங்காரமுமாக வரும்போது, எஸ்.எஸ்.ஆர் அவரையுமறியாமல் சரோஜா தேவியின் அழகை எல்லோர் முன்னிலையிலும் ரசிப்பதைப் பார்த்து – கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய முக பாவம் மாறும் – அதாவது மாற்றானுக்கு மனைவியாய் வரப் போகிறவரை இன்னொருவன் இப்படிக் கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் பார்க்கிறானே என்று – ஒருவிதமான , அருவருப்பு தெறிக்கும் ஒரு பார்வை – இதை அவருடைய அந்த இரண்டு பெரிய கண்களும் – அவருடைய வாயும் – சற்றே இலேசாக நாசியைத் தூக்கி – அதை வெளிப்படுத்தும் அந்த அழகு – கடைசியில் – "சேகர்ர்ர்ரர்ர்ர்!" – என்று வெடிக்கும் அந்தக் கோபம். (இந்தக் காட்சியை ஏற்கனவே முரளி சார் விரிவாக விவரித்திருந்தாராயினும், என் பங்குக்கு நானும் நான் ரசித்த அந்த சிறிய முக பாவனை/உணர்வை நடிகர் திலகம் வெளிப்படுத்திய விதத்தை இங்கு கூறினேன்). உடனேயே, தொடரும் இன்னொரு காட்சி. பெருந்தன்மையோடு , SSR-ஐயும் சரோஜா தேவியையும் , ஒரு விசேஷத்துக்கு அனுப்பி வைத்து விட்டு, அவர்கள் ரொம்பவே கால தாமதமாகி வீட்டுக்கு ஒரு மாதிரியான - நெருக்கம் என்று சொல்ல முடியாது - ஆனாலும், ஒரு விதமான் அன்னியோன்னியம் இலேசாகத் தெரியும் - ஏற்கனவே காதலர்கள் அல்லவா! வந்தவுடன் , அவர்கள் வந்தவுடன் நடிகர் திலகம் காட்டும் அந்த மௌனமான அந்தக் கோபம் (அதற்கு முன் எத்தனை சிகரெட்டுகள், சும்மா ஊதித்தள்ளியிருப்பார், ஊதி, - நடிப்பையும் சேர்த்துதான்!). தான் கை வண்டியைத் தள்ளுகிறேன் என்று SSR முனைவார். கடைசியில், மெளனமாக, ஒரு விதமான, அச்சம் கலந்த குற்ற உணர்ச்சியுடன், சரோஜா தேவி அந்த வண்டியைத் தள்ளிக்க் கொண்டு போவார். இந்த இரண்டு கட்டங்களுக்குப் பிறகு, நடிகர் திலகம் தன் மனசாட்சியுடன் பேசும் அந்தக் காட்சி , கடைசியில் , தற்கொலைப் பாறைக்கு எல்லோரையும் நயவஞ்சகமாக வரவழைத்து விட்டு , SSR-ஐப் பிடித்து தள்ளுகிறவரை தொடரும் அந்த வில்லத் தனம் சொரிந்த அந்த நடிப்பு (பாபு அன்று நீ! இன்று? என்று கொலை வெறியுடன் சொல்லும் கட்டம். நிஜ வில்லன் தோற்றான்! அதிலும், முக்கியமாக, அந்த வசன உச்சரிப்பு மற்றும் மாடுலேஷன், முக பாவம்). அதற்கப்புறம், உண்மை தெரிந்து, கதறும் அந்த வெடிப்பும் வலியும், காப்பாற்றப் பட்ட பின், தெளிந்த மனோபாவத்துக்கு வந்தவுடன் , காட்டும் அந்த மாற்றம் (சதை படர்ந்த அந்த முகத்தில், அவர் வரவழைக்கும் அந்த கனிவு பொங்கும் நிர்மலமான, தெளிந்த நீரோடை போன்ற அந்த முகபாவம் – அது எப்படி , இவரால் மட்டும், ஒவ்வொரு கதாபாத்திரத்திலும், ஒவ்வொரு, காட்சியிலும், கூடு விட்டு கூடு பாய முடிந்தது?). திருமண வீட்டில், திருமணம் சரோஜா தேவிக்கு இல்லை என்று தெரிந்தபின், சரோஜா தேவி நடிகர் திலகத்தின் போட்டோவுக்கு முன் நின்று, நடிகர் திலகத்தைப் பற்றி உயர்வாக சொல்லிப் பேசும்போது , நடிகர் திலகம் , ஒரு குழந்தையைப் போல் , காட்டும் அந்த உணர்வு (அந்தக் கண்களை ஆர்வத்துடன் உருட்டும் விதம் ! ஒ!), கடைசியில், நொண்டிக் கொண்டே சரோஜா தேவியை நோக்கி ஓடும் காட்சி . நான் முதலில் சொன்ன காட்சிகளில் , மொத்த அரங்கத்தையே மௌனத்தில் ஆழ்த்திக் கட்டிப்போட்டுவிடுவார் என்றால், கடைசி காட்சிகளில், அதுவும், அந்த நொண்டி நடையின் மூலம், அரங்கத்தையே கைத் தட்டலால், ஆர்ப்பரிக்க வைத்து விடுவார் (இந்தப் படத்தில், இந்தக் காட்சியில்தான் திரை அரங்கத்தில் உள்ள ஒவ்வொருவரும் பெரிதாக ஆர்ப்பரிப்பார்கள்).
இந்தப் படம் "குடி கண்டலு" என்ற பெயரில், தெலுங்கில், மீண்டும் என்.டி.ராமாராவ் நடிப்பில் வெளி வந்தது. அவருடன், கிருஷ்ண குமாரியும் (சௌகாரின் தங்கை) மற்றும் ஜக்கையாவும் நடித்தனர். தெலுங்கிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படம் ஹிந்தியில், பீம்சிங்கின் இயக்கத்தில், "ஆத்மி" என்ற பெயரில், முதன் முறையாக, திலீப் குமார் அவர்கள் துணிந்து எதிர்மறையான பாத்திரத்தை ஏற்று நடிக்க வைத்தது. அவருடன், வஹீதா ரஹ்மானும், மனோஜ் குமாரும் நடித்தனர். ஹிந்தியிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது.
இந்த இரண்டு மொழிகளிலும், ஆலய மணி நல்ல வரவேற்பைப் பெற்றாலும், நடிகர் திலகத்தின் அந்த, எதிர்மறையான வில்லத்தனமான நடிப்பை மட்டும், என்.டி.ராமாராவாலும், திலீப் குமாராலும், நெருங்க முடியவில்லை என்றே சொல்லலாம். இதற்கு முக்கியமான காரணம், தெலுங்கைப் பொறுத்தவரை, என்.டி. ஆரின் இமேஜ் மற்றும் அவருடைய limitation. ஹிந்தியைப் பொறுத்தவரையும் அதுதான் என்றாலும், திலீப் குமார் பொதுவாகவே பெரிய அளவிற்கு ஆரவாரமாகவும், முரட்டுத்தனமாகவும் நடித்திராதவர். "Tragedy கிங்" என்று தான் அங்கு அவரை அழைப்பார்கள் - தேவதாஸ் போன்ற படங்களிலேயே நடித்ததால்.
இந்தப் படத்துக்கான நடிகர் திலகம் விமர்சனம் "இதே கதைக்கு வட நாட்டிலும் நல்ல வரவேற்பு இருந்ததே!" என்பது தான்.
அன்புடன்,
பார்த்தசாரதி
Motor Sundaram Pillai
Motor Sundaram Pillai had earlier been released as DVD by Raj Video Vision. Now an even more economic version has been released. This is available in all major outlets. For your reference the image of the covers reproduced below.
http://i872.photobucket.com/albums/a.../MSPcovers.jpg
டியர் பார்த்தசாரதி சார்,
தியேட்டருக்கு போகாமலும், டீவி முன் உட்காராமலும், VCD-DVD உதவி இல்லாமலும் நாங்கள் இங்கே உங்கள் மூலம் கலைக்குரிசிலின் காவியங்களை மீண்டும் கண்டு களித்து வருகிறோம். அப்படி நாங்கள் உங்கள் எழுத்தின் மூலம் நேற்று பார்த்த நடிகர் திலகத்தின் திரைக்காவியம் "ஆலயமணி".
"ஆலயமணி" குறித்த சுவாரஸ்யங்கள் சில:
- சிங்காரச் சென்னையில், முதன்முதலில், வெளியான 4 திரையரங்குகளிலும் [பாரகன்(105), ஸ்ரீகிருஷ்ணா(105), உமா(105), நூர்ஜஹான்(105)], 100 நாள் விழாக் கொண்டாடிய கலைத்திலகத்தின் காவியம். சென்னை மாநகரில், முதன்முதலில், வெளியான 4 திரையரங்குகளிலும் [சித்ரா(119), பிரபாத்(112), சரஸ்வதி(112), காமதேனு(105)], 100 நாள் ஓடிய தமிழ்த் திரைப்படம் மக்கள் திலகத்தின் "மதுரை வீரன்(1956)".
- எம்.ஜி.ஆர் அவர்களுக்கு மிகவும் பிடித்த, அவரது மனம் கவர்ந்த சிவாஜி படம்.
- இக்காவியம் வெளியான 23.11.1962 வெள்ளியன்று இரவு, இப்படத்தைப் பற்றிய First Day Reportஐ தொலைபேசியில் தொடர்பு கொண்டு, டைரக்டர் சங்கருக்கு வழங்கிய முதல் நபர் யார் தெரியுமா? மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்! 'என்ன சங்கர், தம்பி நடித்து நீங்கள் டைரக்ட் செய்து இன்று வெளியாகியுள்ள "ஆலயமணி" Box-Officeல் பிச்சு உதறுகிறதாமே, வாழ்த்துக்கள்!' என சங்கருக்கு முதல் பாராட்டு-வாழ்த்து தெரிவித்தவர் எம்.ஜி.ஆர். "ஆலயமணி"யின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்த போதும், படம் வெளியான சமயத்திலும், சங்கரின் இயக்கத்தில் "பணத்தோட்டம் [வெளியான தேதி : 11.1.1963]" படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ["பணத்தோட்டம்" தயாரிப்பு : சரவணா பிலிம்ஸ் ஜி.என்.வேலுமணி].
- தமிழ் சினிமா சரித்திரத்தில், 1962-ம் ஆண்டின் Box-Office Record படம் "ஆலயமணி". அந்த ஆண்டின் ஒரே மெகாஹிட் படம்.
- ஹிந்தி "ஆத்மி"க்கு விமர்சனம் எழுதிய ஒரு பிரபல தமிழ் வார இதழ், 'இங்கே ஸ்டிக்கும் நடித்தது! அங்கே...?' என விமர்சித்திருந்தது.
எழுதுங்கள், எழுதுங்கள், எழுதிக் கொண்டே இருங்கள்...படித்துப் பாதுகாக்கக் காத்திருக்கிறோம்!
அன்புடன்,
பம்மலார்.
அன்பு நண்பர்களுக்கு ஒரு நல்ல தகவல். மிக நீண்ட நாட்களாக பார்க்க முடியாமல் ஏங்கிக் கிடந்த செந்தாமரை படம் குறைந்த பட்சம் ஒளித்தட்டு வடிவிலாவது வெளியாகும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது. ஏ.எல்.எஸ். தயாரிப்பில் பீம்சிங் அவர்கள் இயக்கத்தில் நடிகர் திலகம், பத்மினி, கே.ஆர்.ராமசாமி, சந்திரபாபு உட்பட பல முன்னணி கலைஞர்கள் நடித்த படம். மெல்லிசை மன்னர்களின் இசையமைப்பில் பூவிருக்கு வண்டிருக்கு என்கிற டூயட் பாடல் - சௌந்தரராஜன், சுசீலா குரலில், வாரணமாயிரம் என்கிற ஆண்டாள் பாசுரம் பி.லீலா குரலில், தாங்காதம்மா தாங்காது என்கிற பாடல் சந்திர பாபுவின் குரலில், பாட மாட்டேன் நான் பாடமாட்டேன் என்று பாடி தன்னுடைய பாடும் சகாப்தத்தை முடித்துக் கொண்ட கே.ஆர்.ராமசாமி பாடிய பாடல், மற்றும் ஜி.கே. வெங்கடேஷ் குரலில் கனவே காதல் வாழ்வே என்கிற பாடல் உட்பட பல அருமையான பாடல்களைக் கொண்ட இப்படம், வருமா என்று ஐயமிருந்து கொண்டிருந்தது. இந்த ஐயத்தைப் போக்கும் வகையில் யூட்யூப் இணைய தளத்தில் இப்படத்தின் பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது. லீலா அவர்களின் குரலில் வாரணமாயிரம் பாசுரம் பத்மினி அவர்களின் ஆண்டாள் தோற்றத்தில் அருமையாக படமாக்கப் பட்ட பாடல் இதோ நம் பார்வைக்கு. ஒளிப் பிரதி நன்றாக இருப்பதாக தெரிகிறது. எனவே இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்போம்.
காரணம் நானும் இப்படத்தை இன்னும் பார்க்கவில்லை.
http://www.youtube.com/watch?v=t-BlQubHy_4
சாரதி/பாலா/செந்தில்,
சங்கர் குரு கன்னடப் படத்தில் ராஜ்குமார் சங்கர், குரு என்ற அந்த இரண்டு மகன்கள் வேடங்களை மட்டும்தானே செய்தார்? இல்லை தந்தை ராஜசேகர் ரோலையும் செய்தாரா?
அன்புடன்
ராகவேந்தர் சார்,
செந்தாமரை பாடல் காட்சி அருமையான பிரிண்ட். படமும் இப்படிப்பட்ட பிரிண்டாக வெளிவருமானால் நன்றாக இருக்கும்.
டியர் ராகவேந்திரன் சார்,
1955லேயே தொடங்கப்பட்ட "செந்தாமரை", தவிர்க்க முடியாத பல காரணங்களினால் மிகுந்த தாமதமாகி, 7 வருடங்கள் கழித்து, 14.9.1962 அன்று வெளிவந்தது. முதல் வெளியீடே பெரிய தாமதத்துக்குப் பின் நிகழ்ந்த இவ்வரிய காவியத்தின் வீடியோ பிரதி கிடைக்குமா என ஏங்கியிருந்த என்னைப் போன்ற எண்ணற்றோருக்கு, "செந்தாமரை"யின் பாடல் காட்சி ஒளிப்பேழையை பதிவிட்டு, வயிற்றில் பாலை வார்த்து விட்டீர்கள். "செந்தாமரை" VCD-DVD வடிவம் பெறும் என்ற நற்செய்திக்கும், அக்காவியத்தின் "வாரணமாயிரம்" பாசுரப்பாடலைப் பதிவிட்டமைக்கும் தங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்!
1962-ல் வெளியான "செந்தாமரை" பற்றி, 1965-ல் "வெண்ணிற ஆடை" மூலம் தமிழ்த் திரைப்படவுலகுக்கு அறிமுகமான கலைச்செல்வி ஜெயலலிதா, 1974-ல் வெளிவந்த தனது 100வது படமான "திருமாங்கல்யம்" திரைப்படத்தின் போது குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா...! ஆம், ஜெயலலிதா 100 படங்கள் நடித்து முடித்திருந்த சமயத்தில், 'பொம்மை' சினிமா மாத இதழில், தான் நடித்த 100 படங்களைப் பற்றியும் கருத்து கூறியிருந்தார். அதில் தனது 90வது திரைப்படமான "அன்னமிட்டகை" பற்றிச் சொல்லும் போது, "லலிதா, பத்மினி சகோதரிகளுக்கு 'செந்தாமரை' படம் போல இது எனக்கு அமைந்து விடுமோ என்று பயந்தேன். நல்ல வேளை! எனக்கு திருமணமாவதற்கு முன்பாகவே வந்து விட்டது" என்று கருத்து தெரிவித்திருந்தார். "அன்னமிட்டகை", 1966-ல் ஆரம்பிக்கப்பட்டு 15.9.1972 அன்று வெளியானது.
LPR என சுருக்கமாக அழைக்கப்பட்ட Lalitha, Padmini, Raghini சகோதரிகள் மூவரும் இணைந்து நடித்த மூன்றாவது சிவாஜி படம் "செந்தாமரை". [முதல் இரண்டு படங்கள் : தூக்கு தூக்கி(1954), காவேரி(1955)].
---------------------------------------------------
'மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்' எனத் தொடங்கி 'வாரணமாயிரம் சூழ வலம் செய்து' எனத் தொடரும் ஆண்டாள் அருளிய திருப்பாவைப் பாடலின் இந்த ஒளிப்பிரதியில் கண்ட சில விஷயங்கள்:
- ஆண்டாளாக நாட்டியப் பேரொளியின் வேடப்பொருத்தமும், நடனமும், நடிப்பும் கனக்கச்சிதம்.
- தெய்வத்தமிழ் இலக்கியப்பாடலுக்கு சாஸ்திரீய சங்கீதமும் கலந்த ஒரு ஜனரஞ்சகமான மெட்டை செவ்வனே வழங்கியிருக்கிறார்கள் மெல்லிசை மாமன்னர்கள்.
- பி.லீலா இப்பாடலை தனது கம்பீரம் கலந்த கமகக் குரலில் அம்சமாக இசைத்திருக்கிறார்.
- "வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரணன் நம்பி நடக்கின்றான் - என்னெதிற்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்" என்ற இந்த நான்கு வரிகளில், முதல் இரண்டு வரிகளை பத்மினிக்கு பி.லீலா பாட, அடுத்த இரண்டு வரிகளை அதே பத்மினிக்கு எல்.ஆர்.ஈஸ்வரி பாடுகிறார். நன்றாகக் கவனித்துப் பார்த்தால் இது தெரியும். ஒரு நடிகைக்கு ஒரே பாடலில் இரு பின்னணிப் பாடும் குரல்கள், அபூர்வம். இந்த இரண்டு வரிகளைத் தவிர, 'தோழி நான்' என வரும் இடங்களைத் தவிர, ஏனைய எல்லா வரிகளையும் பி.லீலா தான் பாடியிருக்கிறார்.
- 'தோழி நான்' என்ற இடங்களிலும், குழுவினரிடத்திலும் எல்.ஆர்.அஞ்சலியின் குரல் தொனிக்கிறது.
- பாடலின் பிரிண்ட் பிரமாதமாக இருப்பது, படமாக வந்தாலும் அவ்வாறே இருக்கும் என்ற நம்பிக்கைக்கு வித்திடுகிறது.
-----------------------------------------------------
இக்காவியத்தில் இடம்பெற்ற, தாங்கள் குறிப்பிட்டுள்ள, 'பூவிருக்கு வண்டிருக்கு' பாடலையும், 'கனவே காதல் வாழ்வே' பாடலையும் இயற்றியவர் கவிஞர் கே.டி.சந்தானம். ஆண்டாள் பாசுரம் தவிர, மற்ற பாடல்களெல்லாம் கவியரசருடையது.
அன்புடன்,
பம்மலார்.
டியர் முரளி அவர்களே,
சங்கர் குரு மூலப் படத்தில், மூன்று பாத்திரங்களையும் (முறையே, ராஜசேகர், சங்கர் மற்றும் குரு) Dr. ராஜ்குமார் அவர்கள்தான் ஏற்று நடித்திருந்தார்.
வித்தியாசம் நடிகர் திலகத்தின் பிரத்தியேக உடல் மொழி மற்றும் கற்பனை வளம். மூலப் படத்தில் இருந்த, நான் ஏற்கனவே குறிப்பிட்ட அந்தக் காட்சி - நடிகர் திலகம் வெள்ளை கூட் சூட்டோடு வீகேயார் வீட்டிற்கு வந்து அதகளப்படுத்தும் காட்சி மற்றும் அந்த தொலைபேசி உரையாடல், இன்னும் பல காட்சிகள். குறிப்பாகச் சொன்னால், சென்னையில் திரிசூலத்தின் நூறாவது நாள் போஸ்டரில் - அதாவது 900 அரங்கு நிறைந்த காட்சிகள்! (சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி) - பெரிதாக நடிகர் திலகத்தின் இந்த உடையில் வாக்கிங் ஸ்டிக்குடன் ஸ்டைலாக ஒரு மாதிரி சாய்த்து நிற்கும் விதத்துடன் இருப்பது போல் - சென்னை மாநகரத்தின் பட்டி தொட்டியில் எல்லாம் ஒட்டப்பட்டு - அன்று பெரிதாக வளர்ந்து கொண்டிருந்த - கமல், ரஜினி போன்ற இளம் நடிகர்களின் வயிற்றில் புளியை வண்டி வண்டியாகக் கரைத்தது! கடைசியில், திரிசூலம் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் எடுக்கப்பட்டபோது, பெரும்பாலும் தமிழை ஒட்டியே, அதாவது, நடிப்பைப் பொறுத்தவரை, எடுத்தார்கள் என்பதுதான் நடிகர் திலகத்தின் தனிச்சிறப்பு. (தெலுங்கில், நடிகர் திலகத்தின் நெருங்கிய நண்பர் மற்றும் பத்மாலயா பட அதிபர் கிருஷ்ணா / ஹிந்தியில், அமிதாப்பச்சன் (மகான் என்ற பெயரில்)).
டியர் ராகவேந்தர் அவர்களே,
தாங்கள் பதிவிறக்கம் செய்த செந்தாமரை படப் பாடல் வெகுப் பிரமாதம். VCD /DVD எப்போது வரும் என்ற ஆவலைக் கிளறி விட்டுவிட்டது.
டியர் பம்மலார் அவர்களே,
அந்த வாரணமாயிரம் - ஆண்டாள் பாசுரம், தாங்கள் சொன்ன "தூக்குத் தூக்கி" படத்திலும், இடம் பெற்றதுதான் ஒரு சுவாரஸ்யமான co-incidence.
அதாவது, சட்டாம்பிள்ளை வெங்கட்ராமனின் தந்தை, (இவர் நடிகர் திலகத்தின் நாடக ஆசான் என்று நினைக்கிறேன். தெரிந்தவர்கள் மேலும் சொல்லலாம்) முத்தமிழுக்கு எடுத்துக்காட்டாக, பத்மினி, ராகினி மற்றும் அவரது மகனாக நடித்திருந்த வெங்கட்ராமனையும் வடித்துக் காட்டச் சொல்ல, அதற்கு, ராகினி பாட, பத்மினி ஆட, அதற்கான பொழிப்புரையை, சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன், சொல்லுவதாக முடியும்.
அன்புடன்,
பார்த்தசாரதி
DEAR MURALI SIR,
Even Father's role was done by rajkumar in shankar guru.
Sir,how to post in tamil in this new format?
டியர் பம்மலார் அவர்களே,
தங்களின் மனப்பூர்வமான பாராட்டுகளுக்கு, என் மனமார்ந்த நன்றிகள். உங்களைப் போன்றவர்கள் ஊக்கப் படுத்த, ஊக்கப் படுத்த, எனக்கு, தாங்கள் பணித்தது போல், எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. நேரம் கிடைக்கும் போதெல்லாம், அது தான் பிரதான வேலையும் ஆகிப்போகிறது.
அன்புடன்,
பார்த்தசாரதி