-
பாசமுள்ள பம்மல் சார்,
எல்லாப் புகழும் அவருக்கே. தங்கள் அன்பிற்கு நன்றி! திரு.யாழ் சுதாகர் அவர்களின் 'சிவாஜி படங்களும், இலங்கை ரசிகர்களும்' (பொம்மைஇதழ்.. அக்டோபர் 1987) கட்டுரையைப் பதிவிட்டு எங்கள் நெஞ்சில் நீங்கா இடத்தைப் பிடித்து விட்டீர்கள். அதி அற்புதமான, போற்றிப் பாதுகாக்கப் பட வேண்டிய ஆவணக் கட்டுரையை அளித்ததற்கு ஆழ்ந்த நன்றிகள்! கடல்களைத் தாண்டி சாதனைகள் புரிவதிலும் சக்கரவர்த்தி அல்லவா நம் அன்புத் தெய்வம்!
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
-
சிவாஜி படங்களும் இலங்கை ரசிகர்களும் - பொம்மை கட்டுரை அருமை - பம்மலார் அவர்களின் பதிவுக்கு பணிவான நன்றி.
-
இன்று பிறந்தநாள் காணும் நண்பர் பெங்களூர் குமரேஷ் அவர்களுக்கு இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்
-
Many many happy returns of the Day Kumaresh
Raghavendran
-
அன்புள்ள பம்மலார் சார்,
'சிங்கத்தமிழனும் இலங்கை ரசிகர்களும்' என்ற அற்புதக் கட்டுரையை இங்கே பதிப்பித்தமைக்கு மிக்க நன்றி. சாதனைப்பதிவேடுகள் இங்கு நமது திரியில் வலம் வரத்துவங்கியபின்னர், இத்திரிக்கு வருகை புரிவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொருவரும் இங்கு வருகை தரும்போது, 'இன்று பம்மலாரும் மற்றோரும் எதாவது ஒரு அரிய ஆவணத்தை இங்கு பதிப்பித்திருப்பார்கள்' என்ற எதிர்பார்ப்போடு வருகின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றாவண்ணம் நீங்களும் ஏதாவதொரு கிடைத்தற்கரிய பொக்கிஷப்பதிவை அளித்து வருகிறீர்கள்.
இலங்கையில் 'ராஜா' படத்துக்கு அமைக்கப்பட்ட சுழலும் கட்-அவுட் பற்றியும், வசந்த மாளிகை காவியம் யாழ் நகரில் ஒரே பிரிண்ட்டில் இரண்டு அரங்குகளில் காண்பிக்கப்பட்ட வரலாற்றையும் நமது நண்பர் முரளி சீனிவாஸ் அவர்கள், 'நடிகர்திலகத்தின் சாதனைச்சிகரங்கள்' தொடரில் குறிப்பிட்டிருந்தார். அதில், 'தகவல் உதவி யாழ் சுதாகர்' எனவும் சொல்லியிருந்தார். அத்தகவல்களை இந்த கட்டுரையின் மூலம் அவர் சேகரித்திருக்கக்கூடும்.
நண்பர் யாழ் சுதாகர் அவர்களைப்பொறுத்தவரை ஒருபக்கச்சார்பின்றி நடுநிலையோடு எதையும் எழுதக்கூடிய பண்பாளர். இதே போல் அவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பற்றிய கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். தமிழை தேனில் குழைத்துத் தரும் அவர் குரலை பலமுறை பண்பலையில் கேட்டிருப்பதுடன், நேயர்கள் பங்குபெற்றுப்பேசும் ஏதோவொரு நிகழ்ச்சியில் ஒரே ஒருமுறை அவரோடு தொலைபேசியிலும் பேசியிருக்கிறேன். நல்ல மனிதர்.
அவரது அற்புதமான கட்டுரையை எல்லோர் பார்வைக்கும் வழங்கிய தங்களுக்கு மிக்க நன்றி.
-
thank you Shekar
thank you for ur wishes Raghavendra sir
-
'கருடா சௌக்கியமா' இரண்டாம் பாகம் ஆய்வுக் கட்டுரை.
http://i1087.photobucket.com/albums/...00881648-1.jpg
http://i1087.photobucket.com/albums/..._000076676.jpg
அன்பு நண்பர்களே!
'கருடா சௌக்கியமா' ஆய்வுக் கட்டுரை இரண்டாம் பாகத்தில் உங்களை மீண்டும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். முதல் பாகத்திற்கு நீங்கள் அனைவரும் வழங்கிய ஆதரவுக்கு மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இரண்டாம் பாகத்தை தொடர்கிறேன்.
இனி இரண்டாம் பாகம்.
நடிக வேந்தனின் நடிப்பு முத்திரைகள்.
படம் ஆரம்பித்த உடனேயே நடிகர் திலகத்தின் ஆர்ப்பரிக்க வைக்கும் நடிப்பு வித்தைகள் விளையாடத் தொடங்கி விடும்.
சிறுவன் முத்துக் கிருஷ்ணன் பள்ளிகூடத்திற்குக் கட்ட பணமில்லை என்று தீனா (N.T) விடம் பொய் சொல்லி அழ, N.T யும் அதை நம்பி அவனுக்குப் பணம் கிடைப்பதற்காக அவனை ரோட்டில் வரும் காரின் முன்பு விழச் சொல்லுவார். சிறுவன் முத்துக் கிருஷ்ணனும் விழுந்து அடிபட்டது போல நடிப்பான். கார் நின்றவுடன் காரின் சொந்தக்காரரிடம் பணம் வாங்கி சிறுவனிடம் N.T. கொடுப்பார். பையனோ .,"வாத்தியாரே! இதே போல செட்-அப்ப அடுத்த வாரம் மைலாப்பூர்ல வச்சுக்கலாமா?..கிடைக்கும் பணத்துல ஆளுக்கு 50...50...என்ன சொல்ற?.. என்று N.T.க்கு அதிர்ச்சி கொடுப்பான்.
உடன் N.T.,"நமக்கெல்லாம் 20 வயசுக்கு மேல தான் புத்தி வந்துது...இந்தக் காலத்து பசங்க பொறக்கும் போதே பிரசவம் பாக்குற நர்ஸோட மோதிரத்த புடுங்கிகிறானுங்க ... என்று இரு கைகளையும் சற்று அகல விரித்தபடியே audience- ஆன நம்மைப் பார்த்து கேலியாக நகைச்சுவை ததும்பச் சொல்ல அரங்கமே அதிரும். ஆரம்பமே அமர்க்களம் தான்.
தன்னை சிறுவயதில் வளர்த்த மேரியம்மாவின் (பண்டரிபாய்) பிறந்த நாளுக்கு அவரை வாழ்த்த வருவார் N.T. பண்டரிபாய் N.T.யிடம்,"தீனா...நீ போற போக்கே சரியில்ல..எப்படியோ போ"... என்று கோபித்துக் கொள்வார். அதற்கு N.T.
"ஆங்...அப்படியெல்லாம் நீ என்ன விட்டுக் கொடுத்திடுவியா?... மேரியம்மா...நீ சொல்லுறபடி வாழுறதா இருந்தா ஒண்ணு முற்றும் துறந்த ரமண மகரிஷியா இருக்கணும். என்னால அப்படியெல்லாம் வாழ முடியாது...என் பொறப்புக்கு நான் இப்படிதான் இருக்க முடியும்... என் பொறப்பப் பத்தித்தான் உனக்குத் தெரியுமே"...
என்ற வித்தியாசமான dialogue delivery-யைக் கொடுப்பார். இது வரை நடிகர் திலகத்திடம் நாம் கேட்டிராத டயலாக் டெலிவிரி அது. (இந்தப் படத்தில் அவர் வசனங்களை உச்சரிக்கும் பாணியே தனி. வசனங்களை சற்றே நீட்டி முழக்கி வார்த்தைகளை சிறிது கடித்தாற் போன்று வல்லின அழுத்தங்களை அதிகம் கலந்து கொடுத்து, அழுத்தம் திருத்தமாக அவர் உச்சரிக்கும் விதமே அலாதியாய் இருக்கும். N.T யின் வேறு எந்தப் படங்களிலும் அவர் கையாளாத புதிய முறை பாணி அது. அந்தப் புதுமை ஒன்றிற்காகவே இந்தப் படம் அவருடைய மற்ற படங்களில் இருந்து வேறுபட்டு நிற்கிறது).
நடிகர் திலகத்திற்கு இந்தப் படம் வெளியாகும் போது கிட்டத்தட்ட 54 வயது. அவருடைய அனுபவம் என்ன! நடிப்பின் முதிர்ச்சி என்ன!..அந்த வயதிலேயும் தன்னை,தன் பாணியை வித்தியாசப் படுத்திக் காட்ட வேண்டும் என்ற நடிப்பின் மேல் உள்ள அவருக்கிருந்த ஈடுபாடும், புதிதாய் வந்த நடிகரைப் போல் அவருக்கிருந்த ஆர்வமும் நம்மை மலைக்க வைக்கிறது. காலங்களை வென்ற காவிய புருஷரல்லவா அவர்!
தன்னை கடத்தல் தொழிலில் ஈடுபட வைக்க முயற்சி செய்யும் கயவர்களை N.T.பந்தாடிவிட்டு,"நீங்க எனக்குச் சொல்லிக் கொடுத்த வித்தைகளை உங்களுக்கே சொல்லிக் கொடுக்கிறேன்டா ..உங்களுக்கு மட்டுமில்லே... இந்த உலகத்துக்கே கத்துக் கொடுக்கிறேன்டா" ... என்று கர்ஜிப்பார். அப்போது சிறுவன் முத்துக்கிருஷ்ணன் அங்கு வருவான். N.T. அவனிடம்,"நீ பள்ளிக்கூடம் போகலையா?..என்பார். அதற்கு சிறுவன் N.T.யிடம்,"நீங்கதான் என் பள்ளிக்கூடம்..நீங்க தான் என் வாத்தியார்... நீங்கதான் நான் படிக்க வேண்டிய புத்தகமே"... என்று பதில் சொல்வான். (படத்தில் வரும் இந்த வசனம் நிஜத்தில் எவ்வளவு உண்மை! 'நடிப்பு' என்ற பள்ளிக் கூடத்திற்கு N.T.யைத் தவிர சிறந்த 'வாத்தியார்' எவர் இருக்க முடியும்?. அந்தக்கால நடிகர்கள் முதல் இந்தக் கால நடிகர்கள் ஏன் வருங்கால நடிகர்கள் அனைவரும் படிக்க வேண்டிய 'நடிப்புப் புத்தகம்' அல்லவா அவர்!).வியட்நாம் வீடு சுந்தரத்திற்கு ஒரு 'ஷொட்டு'.
டைட்டிலுக்குப் பிறகு வயதான கெட்டப்பில் நடிகர் திலகம். நடு வகிடு எடுக்கப்பட்ட, முன்னால் இரண்டு புறமும் மேலருந்து கீழாக கொக்கி போல் வளைந்த அடர்த்தியான முடி..கையின் விரல்களுக்கிடையே விளையாடிக் கொண்டிருக்கும் சிகரெட்...உள்ளே தெளிவாகத் தெரியும் கட்-பனியன்... மெலிதான முழுக்கை ஜிப்பா...மடித்துக் கட்டப்பட்ட வேட்டி...இடுப்பில் அணிந்துள்ள பட்டையான பச்சை நிற பெல்ட்..ஜிப்பாவின் மேலாக கையில் கட்டப்படுள்ள வாட்ச். தீனதயாளு தாதாவாக அற்புதமான,வித்தியாசமான மேக்-அப்பில் வலம் வருவார் N.T.
ஏழைகளான டீ எஸ்டேட் தொழிலாளிகளுக்கு போனஸ் வழங்க மாட்டார் எஸ்டேட் முதலாளி சண்முக சுந்தரம். தொழிலாளிகள் ஸ்டிரைக் செய்வார்கள். தீன தயாளுவான N.T.யிடம் உதவி கேட்டு வருவார் சண்முக சுந்தரம். N.T.யிடம் அவர்
"திடீர்னு கை கழுவிட்டாங்க... பேச்சு வார்த்தைக்குக் கூட வரமாட்டேன்கிறாங்க ... நீங்க சொன்னாதான் ஸ்டிரைக்க வாபஸ் வாங்குவோம்னு சொல்றாங்க...நாங்க ஒன்னுமே செய்யலீங்க..
என்பார்.
அதற்கு N.T.
"நீங்க ஒன்னுமே செய்யலீயா?... எனக்குத் தெரியும்யா ..பக்கத்து எஸ்டேட்ல டீ இலைய திருடிட்டு வாங்கன்னு உங்க தொழிலாளிக்கு நீங்க பணம் கொடுத்து அனுப்பல?..
ஏழைகளுக்குத் திண்டாட்டம்...பணக்கரானுக்குக் கொண்டாட்டம்..
ஏழைகள என்னைக்குமே கோழைகளா நெனச்சுடாதீங்க..
தொழிலாளி முதுகு வளைஞ்சி வேலை செய்யணும்னா அவன் வயிறு நிமிரணும்",
என்று மடித்துக் கட்டிய வேட்டியுடன் வலது கையை இடுப்பில் ஊன்றி, சற்றே குனிந்தபடி, முதுகை முன்னால் ஒரு வளை வளைத்து பின் உடனே வயிறறுப் பகுதியை ஒரு நிமிர்த்து நிமிர்த்துவார் பாருங்கள்... அடடா..என்ன ஒரு உடல் மொழி அது!....அற்புதத்திலும் அற்புதம் இந்தக் குறிப்பிட்ட காட்சி.
அதே போல தன் வக்கீல் குமாஸ்தா தேங்காய் சீனிவாசனிடம் N.T,பேசுவதாக வரும் சில வசனங்களும், அவருடைய வசன modulation களும் மிக அருமையாக இருக்கும்.
தேங்காய்: யார் யாரை ஏமாத்தினா உங்களுக்கு என்ன? சட்டம்ன்னு ஒண்ணு இருக்கு... கோர்ட்டுக்கு போய்க்கிறாங்க...
N.T: மடையா! இந்த விஷயமெல்லாம் கோர்ட்டுக்கு போனா என்னாகும்?...
வாதிக்கு நஷ்டம்...
பிரதிவாதிக்குக் கஷ்டம்...
வக்கீலுக்கு அதிர்ஷ்டம்...
ஜட்ஜுக்கு அவரு இஷ்டம்...
என்று அவர் பாணியில் உச்சரிக்கும் போது தியேட்டரே அல்லோலகல்லோலப் படும்.
கட்டுரை தொடர்கிறது...
-
தொடர்ச்சியாக...
தேங்காய்: உங்களைப் பத்தி என்னவெல்லாம் பேசிக்கிறாங்க தெரியுங்களா?
N.T: கடவுளே இருக்காரா இல்லையான்னுதான் பேசிக்கிறான்... என்னப் பத்தி பேசனா என்ன. I don't care. குற்றம் எங்கெல்லாம் நடக்குதோ அங்கெல்லாம் இந்த தீனதயாளு இருப்பான்.. சட்டம் வக்கீலோட பண பலத்துக்கும், வக்கீலோட வாதத் திறமைக்கும் வளைஞ்சி கொடுத்திடும்..அப்ப பாதிக்கப் பட்டவன் என்ன செய்வான்?.. அந்த ஆண்டவன்தான்டா உன்ன கேக்கனும்னு கண்ணீர் வடிப்பான். அப்பிடி கேக்க வந்த ஆண்டவனே நான்தான்னு வச்சுக்கடா... போடா"...
என்று படு அலட்சியமான அசத்தலான 'மூவ்' களைக் கொடுப்பார் N.T.
"இப்படியெல்லாம் செஞ்சா சமுதாயம் உங்களை மதிக்கவா போகுது?" என்று தேங்காய் கேட்டவுடன், சிகரெட்டை ஸ்டைலாக வாயில் வைத்துப்
புகைத்துவிட்டு,லேசாக தலையை வலதும் இடதுமாய் ஆட்டி சிரித்தபடியே நடிகர் திலகம்,
"நானு.. உன் வீட்டுக்கு வரும் போது பாண்டி பஜார் பிளாட்பாரத்துல ஒருத்தன் போட்டோவெல்லாம் போட்டு வித்துகிட்டு இருந்தான்..அவன் சொன்னான்...
காந்தி நாலணா..
நேருஜி நாலணா...
காமராஜி நாலணா..ன்னான்
அப்பேற்பட்ட மகான்களுக்கே நாலணாதாண்டா விலை. உலகம் நம்மள மதிச்சா என்ன..மிதிச்சா என்ன,"...
என்று கலாய்க்கும் போது,
கரகோஷம் காதுகளைக் கிழிக்கும்.(எப்பேர்ப்பட்ட வசனங்கள்! கால சூழ்நிலைகளுக்குத் தக்கபடி, எக்காலங்களுக்கும் ஏற்ற வசனங்கள். மகான்களும், மாபெரும் தலைவர்களும் N.T. அவர்கள் கூறுவது போல் நாலணா ஏன் காலணாவுக்குக் கூட இப்போதெல்லாம் மதிக்கப் படுவதில்லை).
அதே போல் தன்னை வளர்த்த பண்டரிபாயைப் பார்க்க வருவார் N.T. பண்டரிபாயின் கன்னங்களில் தன் இரண்டு கைகளையும் வைத்து கண்கள் மேலிறங்க,கீழிறங்க பாசத்துடனும்,வாஞ்சையுடனும் ,சற்று வருத்தப் பட்ட வேதனையுடனும் அவர் முகத்தைப் பார்ப்பார் பாருங்கள்...ஒரு வினாடியே ஆனாலும் அந்தக் காட்சியில் அவர் காட்டும் முக பாவம் இருக்கிறதே..தனக்காக, தன் வாழ்வைத் தியாகம் செய்த அந்த வளர்ப்புத்தாய் வயது முதிர்ந்த கோலத்தில் இப்படி உருக்குலைந்து காட்சி தருகிறாளே.. என்ற உணர்வுகளை அழகாக வெளிப்படுத்துவார். உடன் பண்டரிபாயிடம்,
"அய்யோ மேரியம்மா! எனக்காக கஷ்டப்பட்டே நீ பழுத்துப் போயிட்ட.. வாழ்க்கையில அடிபட்டே நான் பழுத்துப் போயிட்டேன், "என்று வேதனையாகக் கூறுவார். உடனே பண்டரிபாய்,"நல்லா இருக்கியாப்பா ? என்று நலன் விசாரித்தவுடன்,
"நல்லா இருக்கேன்... நல்லா இருக்கேன்", என்று இரு முறை அவர் ஸ்டைலில் அசத்துவது அருமை. "இன்னைக்கு ஒண்ணாந்தேதி இல்லையா?..எல்லாருக்கும் கொடுத்துக்கிட்டே வந்தேன்..உனக்குக் கொடுக்குற பாக்கியத்தைத்தான் நீ எனக்குக் கொடுக்கல..அதனால உன்கிட்ட வாங்கிட்டுப் போலாம்னு வந்தேன்", என்று சொன்னவுடன் பண்டரிபாய் "என்னப்பா?",என்று கேட்பார். அதற்கு நம்மவர் சற்று உரத்த குரலில்,
"ஆசீர்வாதந்தான்...ஆசீர்வாதந்தான்,"...என்று ஏற்ற இறக்கமுடன் கூறுவது அவருக்கு மட்டுமே உரித்தான ஒன்று...
மற்றொரு சூப்பரான காட்சி...
நடிகர் திலகத்தின் ஏழை பால்ய நண்பனாக வரும் V.S.ராகவன் தன் மகளின் திருமணத்திற்காக உதவி கேட்டு நடிகர் திலகத்தைச் சந்திக்க அவர் வீட்டுக்கு வருவார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்கள் இருவரும் சந்திப்பது போன்ற காட்சி அது. V.S.ராகவன் வந்தவுடன் வீட்டில் அமர்ந்திருக்கும் N.T. அவர்கள் ,
"ஏய் படுவா...பலராமா...வாடா...வாடா,"..என்று எழுந்து வந்து கட்டித் தழுவி பின்,"ஒன்னப் பாத்து ரொம்ப நாளாச்சு...நான் ரெண்டாங் கிளாசாவது பள்ளிக்கூடத்திலே படிச்சேன்கிறதுக்கு சாட்சியே இந்த உலகத்தில நீ ஒருத்தன் தான். (நடிகர் திலகம் தான் சிறுவயதில் உண்மையிலேயே இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்ததை நினைவு கூர்வதைப் போல் அமைந்திருக்கும் இந்தக் காட்சி). நல்லா இருக்கியா?.. குடும்பமெல்லாம் நல்லா இருக்கா?". என்று நலம் விசாரித்து விட்டு V.S.ராகவனின் நரைத்த தலையைப் பிடித்து சற்றே கீழே அழுத்தி,"என்னடா கெழவன் மாதிரி ஆயிட்டே...என்ன சமாச்சாரம்?", என்று நட்பை வெளிப்படுத்துவது படு இயல்பு.
மனைவி சுஜாதாவுடன் கோவிலுக்குப் போகும்போது தன் மனைவியின் மாமனும், அடியாளுமான கபாலி எதிர்பாராமல் அங்கு வந்து விட, சுஜாதா கண்களை மூடிக்கொண்டு சாமி கும்பிடும் அந்த இடைவெளி நேரத்தில், தனக்கு கபாலியிடம் இருக்கும் தொடர்பு தன் மனைவிக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அவனை அவசர அவசரமாக பேசி அனுப்பி வைக்கும் அந்த தருணத்தில், சுஜாதா சட்டென்று அதைக் கவனித்துவிட,அதை சமாளிக்கும் விதமாக தன் உடலை 'ஜகா' வாங்குவது போல ஒரு இழுப்பு இழுத்து, பின் ஒன்றும் தெரியாத அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு நடையைக் கட்டுவது நம்மை பரவசப் படுத்தும் நடிப்புக் காட்சி.
பின் வீட்டில் சுஜாதா தன் கணவர் N.T.க்கு தன் மாமன் கபாலியுடன் என்ன தொடர்பு?..என்று கோபிக்க, அதற்கு N.T. வேண்டுமென்றே சுஜாதாவை வெறுப்பேற்ற மைலாப்பூர் கடவுள் கபாலீஸ்வரரைப் போற்றுவது போல, அருகில் இருக்கும் தேங்காய் சீனிவாசனிடம்,
கபாலி 'உயர்ந்த மனிதன்'
கபாலி 'கை கொடுத்த தெய்வம்'
கபாலி 'தெய்வப் பிறவி'
என்று ஜாலியாக கோஷம் போடுவது அவருக்கே கை வந்த கலை. (இந்தக் காட்சியில் நடிகர் திலகம் அவர்கள் திருவாயாலேயே அவர் நடித்த படங்களின் பெயர்கள் உச்ச்சரிகப்படுவதை நாம் கேட்கும் போது நம் காதுகளில் தேனும் பாலும் கலந்து வந்து பாய்வது போல அவ்வளவு இனிமை).
சமீப காலமாக 'சாந்தி' தியேட்டரில் நம் இதய தெய்வத்தின் காவியங்கள் வெளியீடுகளின் போது நம் ரசிகக் கண்மணிகள் பெரும்பாலும் மேலே நடிகர் திலகம் கூறிய படங்களின் பெயர்களையே அவருக்கு புகழாரமாய் சூட்டி,
'உயர்ந்த மனிதன்' சிவாஜி
'கை கொடுத்த தெய்வம்' சிவாஜி
'தெய்வப் பிறவி' சிவாஜி
என்று விண்ணை எட்டிய கோஷங்களை எழுப்பியது நினைவுக்கு வந்து கண்களைப் பனிக்கச் செய்தது.
(நடிப்பு முத்திரைகள் மூன்றாம் பாகத்தில் தொடரும்).
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
-
அன்புள்ள சாரதா மேடம்,
தங்கள் ஆய்வுக் கட்டுரைகளின் மேல் எனக்கிருந்த ஆர்வமும் உந்துதலும்தான் என்னை இந்த 'கருடா சௌக்கியமா' முதல் ஆய்வுக் கட்டுரை எழுத வித்திட்டது. இதிலுள்ள நிறை குறைகளை தாங்கள் சுட்டிக் காட்டினால் அது அடுத்த கட்டுரைகளை நான் மேம்படுத்திக் கொண்டு எழுத ஏதுவாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். இந்தக் கட்டுரை எழுத மூல காரணகர்த்தாவே நீங்கள் தான். அதற்காக தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.
-
இன்று பிறந்தநாள் காணும் நண்பர் பெங்களூர் குமரேஷ் அவர்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் . வாழ்க பல்லாண்டு!
அன்புடன்,
நெய்வேலி வாசுதேவன்.