வெள்ளிக்கிழமை விரதம்
தேவரின் தண்டாயுதபாணி பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தின் கதாநாயகன் சிவகுமார். ஸ்ரீகாந்த் இப்படத்தின் வில்லன். தேவரின் இதற்கு முந்தைய படமான 'கோமாதா என் குலமாதா' படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்தார்.
தேவர் வரிசையாக எடுத்த கோமாதா என் குலமாதா, வெள்ளிக்கிழமை விரதம், ஆட்டுக்கார அலமேலு ஆகிய படங்களுக்கு ஒரே கதைதான். கதாநாயகி ரொம்ப நல்லவள், பக்தி நிறைந்தவள். அவளது வளப்புப்பிராணி (பசு, பாம்பு, ஆடு) அவளுக்கு பெரிய உறுதுணையாகவும், பக்க பலமாகவும், ஆபத்து நேரங்களில் காப்பாற்றுவதாகவும், குறிப்பாக "அவள் பேசும் மொழிகளை புரிந்துகொள்ளக்கூடியதாகவும்" இருக்கும். அவள் காதலித்து மணக்கும் கணவன், சிறிது காலத்தில் நண்பர்களின் கூடா நட்பால் வழிதவறிப்போகும்போது, கதாநாயகி அவனைத் திருத்துவதற்குப் பெரிய உந்துசக்தியாகவும் இவ்வ்லங்குகள் இருக்கும்.
வெள்ளிக்கிழமை விரத்தத்தில் கதாநாயகி ஜெயசித்ராவின் 'தோழன்' (தோழி?) ஒரு நல்லபாம்பு. தன் எஜமானி ஜெயசித்ராவின் கணவன் திசைமாறும்போதெல்லாம், நாயகிக்கு உறுதுணையாக இருந்து, அவளது வில்லன், வில்லி வகையறாக்களைத் தீர்த்துக்கட்டுகிறது.
இப்படத்தில் கதாநாயகன் சிவகுமாரின் தோழன் -கம்- செக்ரட்டரி-கம்-வில்லனாக வருபவர் ஸ்ரீகாந்த்.இவரது தங்கையாக வருபவர் ஜெயசுதா. தன் முதலாளி சிவகுமார் அவசரப்பட்டு யாரோ ஒரு ஜெயசித்ராவைக் கல்யாணம் செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடையும் ஸ்ரீகாந்த், கோடீஸ்வரன் சிவகுமாரை எப்படியும் ஜெயசித்ராவிடமிருந்து பிரித்து தன் தங்கை ஜெயசுதாவுக்கு ஜோடியாக்கி, அதன்மூலம் முதலாளியின் கோடிக்கணக்கான சொத்துக்களை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கத் துடிப்பவர். அதற்கு இடையூறாக இருக்கும் ஜெயசித்ராவையும், அவருக்கு பக்க பலமாக இருந்து தன் திட்டங்களை குட்டிச்சுவராக்கும் பாம்பையும் ஒழித்துக்கட்ட தங்கை ஜெயசுதாவுடன் சேர்ந்து திட்டம் போடுவதும் அவை ஒவ்வொன்றாக தோவியடைந்து, கடைசியில் அந்த பாம்பினாலேயே ஒருவர் பின் ஒருவராய் சாவதும்......
தனக்கு வேண்டியவர்களை தன் மனைவியின் வளர்ப்பு பாம்பு கொன்றுவிட்டதை அறிந்து சிவகுமார் மனைவி மீது கோபப்பட, கடைசி பதினைந்து நிமிடங்கள் ஒரே இடத்தில் நின்றபடி நீண்ட வசனம் பேசி, கணவனுக்கு வேண்டியவர்களின் சதிச்செயலை நாயகி புட்டு, புட்டு வைக்க... நாயகன், தன் மனைவியின் கைகளைப்பிடித்துக்கொண்டு 'உன் நல்ல மனசைப்புறிஞ்சிக்காம உன் மேலே கோபட்டுட்டேன். என்னை மன்னிச்சிடு' என்று, (தமிழில் பேசும் படம் துவங்கிய முதல் படமான 'சீனிவாச கல்யாணம்' தொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் பாணியில்) கிளைமாக்ஸை முடித்து வைக்க.... படத்தில் வந்த ஏதோ ஒரு பாடலின் முதல்வரியை இருவரும் குளோசப்பில் பாட....
இம்மாதிரிப்படங்களை எத்தனை முறை எடுத்தாலும் மக்கள், குறிப்பாக குடும்ப்பப்பெண்கள் விழுந்தடித்துக்கொண்டு பார்ப்பார்கள் என்ற சூட்சுமத்தை அறிந்த தேவர், நன்றாக கல்லா கட்டினார்.
கதாநாயகனாக சிவகுமார் வழக்கம்போல அடக்கி வாசித்திருந்தார். பாத்திரத்துக்குத் தேவையானதைக் கொடுத்திருந்தார். கதாநாயகியாக ஜெயசித்ரா வழக்கம்போல ஓவராக அலட்டிக்கொண்டார். கதாநாயகனை மட்டம் தட்டும் பாத்திரம் என்றால் சிலருக்கு வெல்லம் சாப்பிடுவதுபோல ஓவராக அலட்டித்தீர்ப்பார்கள். (அற்கென்று விருது வைத்தால் முதலிரண்டு இடங்களைப்பெறுபவர்கள் ஆண்டாண்டுகளுக்கும் தட்டிச்செல்பவர்கள் சுகாசினியும், ராதிகாவும் என்பது வேறு விஷயம்). அந்த வழியில் ஜெயசித்ராவும் ஓவர்டோஸ் கொடுத்து நம்மை ஒரு வழியாக்கினார். அவரது தோழியாக வரும் பாம்புக்கு தமிழ், ஆங்கிலம் என்று எல்லா மொழியும் தெரிந்திருக்கிறது. அடுத்து நம்ம ஆள் எப்படீன்னு பார்ப்போம்......
கதாநாயகனை வழிமாற்றிச்சென்று, அவரை மனைவியிடமிருந்து பிரித்து, தன் தங்கையிடம் சேர்க்க முயலும் வில்லனாக ஸ்ரீகாந்த் மிக அருமையாக நடித்திருந்தார். ஒவ்வொருமுறையும் தன் திட்டங்களை முறியடிக்கும் பாம்பை சுட்டுக்கொல்ல அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் தோற்கும்போது, அவர் காட்டும் ஆவேசம் அருமை. கடைசியில் பாம்பு துரத்தும்போது மாடிப்படியில் கால் இடறி விழுந்து மேற்படியிலிருந்து கீழ்த்தலம் வரை டூப் போடாமல், கட்ஷாட் இல்லாமல், ரிதம் தவறாமல் புரண்டுகொண்டே வந்து விழுவாரே அதில் அவரது சிரத்தை தெரிகிறது.
இவரது தங்கையாக, அண்ணனின் சதித்திட்டங்களூக்கு பக்கபலமாக வரும் ஜெயசுதாவிடமும் வில்லிக்கான அருமையான நடிப்பு. அத்துடன் ஜெயசித்ராவின் உருவத்தையும், இழுத்துப்போர்த்திய புடவையையும் பார்த்து மூட் அவுட்டாகியிருந்த இளைஞர்களுக்கு ஆறுதலாக, ஒல்லியான உடல் வாகுடனும், மினிஸ்கர்ட் போன்ற மாடர்ன் உடைகளிலும் வந்து, கண்களூக்கு இதமளித்தார். நடிப்பிலும் சோடை போகவில்லை. தன்னைக்கொல்ல வந்த பாம்பைக்காணாமல் எங்கெல்லாம் தேடியும் காணாமல், நிமதியுடன் வந்து படுக்கையில் படுத்து போர்வையைத்தூக்க, அதிலிருந்து படமெடுத்து நிற்கும் பாம்பைப்பார்த்து, மொத்த அதிர்ச்சியையும் வெளிப்படுத்துவாறே அந்த இடம் ஒன்று போதும், அவரது திறையசொல்ல.
கவியரசரும் சின்னப்பா தேவரும் இணைந்த இப்படத்துக்கு, 'கவிஞர் வழங்கிய தேவரின்' சங்கர்-கணேஷ் இசையமைத்திருந்தனர். டி.எம்.எஸ்- சுசீலா ஜோடிக்குரலில் மூன்று டூயட் பாடல்கள் 'தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது' பாடல் பெரிய ஹிட். 'ஜிலு ஜிலு.. குளு.. குளு' போன்ற பாடல்களையெல்லாம் கவியரசர் எழுத நேர்ந்தது வேதனைதான். 'ஆசை.. அன்பு இழகளினாலே' பாடல் இந்திப்பாடலான ஆஜா.. ஆயி பஹார் மெட்டின் தழுவல்.
படத்தின் இன்னொரு சிறப்பம்சம் அருமையான வண்ண ஒளிப்பதிவு. வெளிப்புறக்காட்சிகள் கண்களுக்கு இதமளித்தன. தேவரின் மாப்பிள்ளை ஆர். தியாகராஜன் இப்படத்தை இயக்கியிருந்தார்.
தமிழகத்தின் பல இடங்களில் 100 நாட்களைக்கடந்ததோடு, அதிகபடசமாக 145 நாட்கள் ஓடிய மாபெரும் வெற்றிப்படம் 'வெள்ளிக்கிழமை விரதம்'.