நன்றி: அன்று கண்ட முகம் வோர்ட் பிரஸ்.காம்.
https://antrukandamugam.files.wordpr...pg?w=496&h=354
” இயக்குநர் திலகம் ” கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
நாடகத் துறையிலிருந்து திரையுலகிற்கு வந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் பின்னர் கதை-வசனகர்த்தாவாகவும், இயக்குநராகவும், ஸ்டூடியோ அதிபராகவும் உயர்ந்தார். இவரது திரையுலகப் பிரவேசத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் புதுமை இயக்குநர் ஸ்ரீதர்.
” இயக்குநர் திலகம் ” என்ற பட்டம் பெற்ற கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள சாக்கோட்டை ஆகும். தந்தை சீனுவாச நாயுடு. தாயார் விஜயத்தம்மாள். இளம் வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டார்.
அதனால் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தனது 10-ஆவது வயதிலேயே நவாப் ராஜமாணிக்கத்தின் ‘மதுரை தேவி பால வினோத சங்கீத சபா’ நாடகக் குழுவில் சேர்ந்தார். அங்கு நடிப்பு, இசை, நடனம், தமிழ், இந்தி மொழிகள் கற்றுத்தேர்ந்தார்.
பின்னர் அந்த நாடகக்குழுவிலிருந்து வெளியேறி தேவி நாடக சபையில் சேர்ந்தார். அங்கு கதை, கவிதை எழுத ஆரம்பித்ததுடன் ‘எழுத்தாளர்’, ‘தம்பி’, ‘தபால்காரன்’ ஆகிய நாடகங்களை எழுதினார். அவை சக்தி நாடக சபா, தேவி நாடக சபாக்களில் அரங்கேறின.
1954-இல் ஸ்ரீதரின் உதவியாளராக கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சேர்ந்தார். மாதர்குல மாணிக்கம், எங்க வீட்டு மகாலட்சுமி போன்ற படங்கள் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாரான போது தமிழ்ப் படத்திற்கு வசனங்களைச் சொல்லிக்கொடுக்கும் பொறுப்பு கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.
இவரைக் கைதூக்கி விட்டவர்களில் முதல் நபர் இயக்குநர் ஸ்ரீதர்.
தொடர்ந்து கவிதையில் நாட்டம் கொண்ட கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ‘லட்சாதிபதி’, ‘அமரதீபம்’, ‘உத்தமபுத்திரன்’ ஆகிய படங்களுக்கு சில பாடல்களை எழுதினார்.
இந்த நிலையில் நாடக நடிகர் [பின்னர் திரைப்படங்களில் நடித்தவர்] நம்பிராஜன் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனை சந்தித்தார். கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதி வைத்திருந்த “தெய்வப்பிறவி” கதையைப் படமாக்க திட்டம் உருவாகியிருப்பதாகவும் கிருஷ்ணன் – பஞ்சு இயக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.
கமால் பிரதர்ஸாரும் ஏவி.எம் நிறுவனமும் இணைந்து தயாரிக்கத் திட்டமிட்டனர். இப்படத்திற்கான வசனத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதினார். 1960-ஆம் ஆண்டு வெளியான “தெய்வப்பிறவி” வெற்றிப்படமாகியது. இப்படத்திற்கு அகில இந்திய அளவில் ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்கமும் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதினார். அவற்றில் மிகப்பெரிய வெற்றிப்படம் “படிக்காத மேதை”. 1960-இல் வெளிவந்தது இப்படம். படத்தின் வெற்றிக்கு கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் திரைக்கதை, வசனம் பெரிதும் உதவியாக இருந்தது. தொடர்ந்து ‘கைராசி’, ‘எல்லாம் உனக்காக’, ‘அன்னை’, ‘குமுதம்’, என்று பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி முத்திரை பதித்தார்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் எழுதிய ‘சாரதா’ கதை புரட்சிகரமான கதை. அதை நீங்களே இயக்கினால்தான் பிரமாதமான படமாக அமையும் என்று சொன்னார் படத்தயாரிப்பாளர் ஏ.எல்.ஸ்ரீனிவாசன். ‘சாரதா’ கதை முற்றிலும் மாறுபட்டது. அதற்குமுன் எந்தப் படத்திலும் இடம்பெறாத புரட்சிகரமான கருத்தினைக் கொண்டது. எந்த இயக்குநருக்கும் சவாலாக அமைந்த கதையிது. கதை-வசனத்தை மிகத் திறமையாக அமைத்து, கவனமாக இயக்கினார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். கத்தி மீது நடப்பது போன்ற முயற்சியில் வெற்றியும் பெற்றார். கதாநாயகனாக சேடப்பட்டி, சூரியநாராயணத்தேவர் ராஜேந்திரனும், அவர் மனைவி சாரதாவாக ஆர்.விஜயகுமாரியும் அருமையாக நடித்திருந்தனர். 1962-ஆம் ஆண்டு வெளியான ‘சாரதா’ வெற்றிப்படமானது. இப்படத்திற்குத் தேசிய விருதுக்கான சான்றிதழும் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து “சித்ரா புரொடக்சன்ஸ்” என்ற பெயரில் சொந்தத்தில் பட நிறுவனத்தைத் தொடங்கினார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இதன் சார்பாக ‘தெய்வத்தின் தெய்வம்’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கினார். இப்படம் சுமாராகத்தான் ஓடியது. அதன்பின் ”கற்பகம்” படத்தை சொந்தமாக தயாரித்து இயக்கினார். இப்படம் மகத்தான வெற்றிப்படமானது. நாடக நடிகையாகவும் விளம்பரங்களிலும் நடித்து வந்த ‘தெய்வநாயகி’ என்ற கே.ஆர்.விஜயா ஒரே படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார்.
இந்தப் படத்தின் லாபத்தைக் கொண்டு “ கற்பகம் ஸ்டூடியோ “ வை உருவாக்கினார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். இப்படத்தைத் தொடர்ந்து கதை, வசன கர்த்தாகவும் இயக்குநராகவும் கொடிகட்டிப் பறந்தார். பல வெற்றிப்படங்களைத் தயாரித்து இயக்கினார்.
1964-இல் ‘கை கொடுத்த தெய்வம்’ ஒரு மகத்தான படமாகும். இப்படத்திற்கு நடுவண் அரசின் பிராந்திய சிறந்த படத்திற்கான வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
வித்தியாசமான படங்களை இயக்கிவந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஜனரஞ்சகமாக ஒரு படத்தை இயக்கத் திட்டமிட்டார். அதுதான் “சித்தி”. இப்படத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதா கதாநாயகனாக நடித்தார். சித்தி கதாபாத்திரத்தில் பத்மினி நடித்தார். எம்.ஆர்.ராதாவின் மூத்த மகனாக நாகேஷும், மகளாக விஜயநிர்மலாவும் தாயாக எம்.எஸ்.சுந்தரிபாயும் கடைக்குட்டி மகளாக பேபி ராணியும், ஜெமினிகணேசன், குலதெய்வம் ராஜகோபால், ரி.எம்.சாமிக்கண்ணு, முத்துராமனும் மிகப் பிரமாதமாக நடித்திருந்தனர். இப்படம் 1966-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றிப்படமானது.
1967-ஆம் ஆண்டு “கண் கண்ட தெய்வம்” என்ற படத்தை எடுத்தார். எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா, பத்மினி, சிவகுமார், நம்பியார், நாகேஷ் போன்ற பலர் நடித்தனர். கே.வி.மகாதேவனின் இனிய இசையில் ரி.எம்.எஸ் பாடிய தென்ன மரத்துல குடியிருப்பது சின்ன பாப்பா, சுசீலாவுடன் இணைந்து பாடிய கண்ணுகுட்டி கண்ணுக்குட்டி காளை கண்ணுக்குட்டி போன்ற பாடல்கள் தேனினும் இனியவை. இப்படமும் வெற்றிப்படமானது. இப்படத்தினை ’பாண்டவலு’ என்ற பெயரில் தெலுங்கில் எஸ்.வி.ரங்காராவ் அவரே தயாரித்து இயக்கியிருந்தார். ஆனால் தமிழில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய அளவுக்கு ஜனரஞ்சகமாக இயக்க எஸ்.வி.ரங்காராவால் முடியவில்லை என்பதும் உண்மை. எஸ்.பி.கோதண்டபாணியின் இசையில் ( கே.வி.மகாதேவனின் இசையில் உருவான பாடல்களைப் போல் அல்லாமல் ) பாடல்களும் சோபிக்கவில்லை.
1965-ஆம் ஆண்டு வி.கே.ராமசாமியின் வி.கே.ஆர். பிக்சர்ஸுக்காக ‘செல்வம்’ என்ற படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கினார். சிவாஜிகணேசன், கே.ஆர்.விஜயா, நாகேஷ், லட்சுமி பிரபா நடித்திருந்தனர். இந்தப் படமும் வெற்றிப்படமாக அமைந்தது.
1968-ஆம் ஆண்டு “ பணமா பாசமா “ என்ற படத்தைச் சொந்தமாக தயாரித்தார். இதன் கதை-வசனம் இயக்கம் பொறுப்புக்களை அவரே ஏற்றார். இப்படத்தில் ஜெமினிகணேசன், சரோஜாதேவி, எஸ்.வரலக்ஷ்மி, நாகேஷ், விஜயநிர்மலா, ரி.கே.பகவதி, கே.சாரங்கபாணி, கே.கண்ணன் போன்ற பலர் நடித்திருந்தனர். மருமகனை அடக்கி ஆள நினைக்கும் மாமியார் (எஸ்.வரலக்ஷ்மி) கடைசியில் எலந்த பழம் விற்கும் ஒரு பெண்ணை (விஜயநிர்மலா) பெரிய பணக்காரர் என நினைத்து மருமகளாக்கி மூக்கு உடைபடுவதுதான் கதையின் மையம்.
நடுத்தர குடும்பங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை சுவைபட சேர்த்து அருமையாக வசனம் எழுதியிருந்தார் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். எஸ்.வரலக்ஷ்மியின் நடிப்பு கொடிகட்டிப் பறந்தது.
கே.வி.மஹாதேவனின் இசையமைப்பில் ’எலந்த பயம், எலந்த பயம்’ என்ற எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடலும், ‘வாழைத்தண்டு போல உடம்பு அலேக்’ என்ற ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல் என்பவை ஜனரஞ்சகமாக அமைந்து மூலை முடுக்கெல்லாம் ஒலித்தன. இப்படம் ரஷியாவிலும் திரையிடப்பட்டு பாராட்டுக்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
சமூகப் படங்களையே இயக்கிவந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதன்முதலாக 1971-இல் ‘ஆதிபராசக்தி’ என்ற காலத்தால் அழியாத பக்திப் படத்தை இயக்கினார். இப்படம் வெள்ளி விழா கொண்டாடியது. அதே போல் 1976-ஆம் ஆண்டு ‘தசாவதாரம்’ என்ற மிகப் பிரமாண்டமான படத்தை இயக்கினார்.
இவரது இயக்கத்தில் உயிரா மானமா, பாலாபிஷேகம், குலவிளக்கு, குலமா குணமா, குறத்தி மகன், வந்தாளே மகராசி, ஸ்ரீ காஞ்சி காமாட்சி, அடுக்குமல்லி, நன்றிக்கரங்கள், தேவியின் திருவிளையாடல், நாயக்கரின் மகள், போன்ற படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன.
எதிர்பார்த்து இயக்கிய மாலதி, சுவாதி நட்சத்திரம், பேர் சொல்லும் பிள்ளை, மகரந்தம், தனது மகன் கே.எஸ்.ஜி.வெங்கடேஷை கதாநாயகனாக்கி எடுத்த ‘அத்தைமடி மெத்தையடி’ போன்ற படங்கள் தோல்வியைத் தழுவின. 1992-க்குப் பின்னர் படங்களை இயக்கவில்லை. சில படங்களின் தொடர் தோல்வியினால் நொடிந்து போன கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆன்மீகத்தில் ஈடுபட்டார். சில மாதங்களுக்குப் பின் மீண்டும் புது வேகம் பெற்று நட்டங்களிலிருந்து மீண்டு எழும்பினார். காலத்தின் சுழற்சியால் இம்மாபெரும் இயக்குநரின் மவுசு குறைந்தது. அதன்பின் ஸ்டூடியோவையும் இதர நிறுவனங்களையும் கவனிக்கத் தொடங்கினார்,
ஏனைய இயக்குநர்களிலிருந்து இவர் மாறுபட்டவர். எப்போதும் எளிமையையே விரும்புபவர் இவர். படப்பிடிப்புத் தளங்களில் கதர் வேட்டி, முண்டா பனியனுடனேயே காணப்படுவார்.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மொத்தம் 45 படங்களை இயக்கியுள்ளார். அவற்றில் 33 படங்கள் இவர் தயாரித்தவை. 8 படங்களுக்குத் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.
1975-ஆம் ஆண்டு கலைமாமணி விருதையும், 1980-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா விருதையும் தமிழக அரசு கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கி கௌரவித்தது.
கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு சுலோசனா என்ற மனைவியும் அசோக், ரவி, ராஜ்குமார், சின்னத்துரை ஆகிய நான்குப் புதல்வர்களும் உள்ளனர்.
தினத்தந்தி நாளிதழ்கள் 29.12.2005-30.12.2005 மற்றும் 2.1.2006-லிருந்து எடுக்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய சில படங்களின் பட்டியல்:-
சாரதா 1962
தெய்வத்தின் தெய்வம் 1962
கற்பகம் 1963
ஆயிரம் ரூபாய் 1964
கை கொடுத்த தெய்வம் 1964
என்னதான் முடிவு 1965
பேசும் தெய்வம் 1967
கண்கண்ட தெய்வம் 1967
குலமா குணமா 1971
சித்தி 1966
செல்வம் 1966
சின்னஞ்சிறு உலகம் 1966
பணமா பாசமா 1968
உயிரா மானமா 1968
குலவிளக்கு 1969
தபால்காரன் தங்கை 1970
மாலதி 1970
ஆதிபராசக்தி 1971
குறத்தி மகன் 1972
வாழையடி வாழை 1972
நத்தையில் முத்து 1973
வந்தாளே மகராசி 1973
சுவாதி நட்சத்திரம் 1974
உறவுக்குக் கை கொடுப்போம் 1975
வாயில்லா பூச்சி 1976
தசாவதாரம் 1976
பாலாபிஷேகம் 1977
புண்ணியம் செய்தவள் 1977
ரௌடி ராக்கம்மா 1977
உள்ளத்தில் குழந்தையடி 1978
ஸ்ரீ காஞ்சி காமாட்சி 1978
அடுக்குமல்லி 1979
நீர் நிலம் நெருப்பு 1980
நன்றிக்கரங்கள் 1980
மகரந்தம் 1981
நாயக்கரின் மகள் 1982
தேவியின் திருவிளையாடல் 1982
யுகதர்மம் 1983
படிக்காத பண்ணையார் 1985
எரிமலை 1985
மகாசக்தி மாரியம்மன் 1986
பார்த்தால் பசு 1988
அத்தைமடி மெத்தையடி 1989
எனக்கு ஒரு நீதி 1990
காவியத்தலைவன் 1992
கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தனது 86-ஆவது வயதில் மாரடைப்பு ஏற்பட்டு 14.11.2015 அன்று மாலை 6.30 மணியளவில் காலமானார்.