Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார் சார்,
1954-ம் ஆண்டில் வெளியான 'எதிர்பாராதது' திரைப்பட பொக்கிஷப்பதிவுகள் அனைத்தும் அருமை. நீங்கள் பிறப்பதற்கு பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இந்த ஆவணங்களை நீங்கள் சேகரித்து வழங்குவதைப்பார்க்கும்போது, பண்டைய இலக்கிய நூல்களை ஓலைச்சுவடிகளில் இருந்தவற்றைத் தேடித்தொகுத்து தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிய தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதைய்யர் அவர்களின் தொண்டே நினைவுக்கு வருகின்றது.
அவர் செய்தது தமிழன்னைக்குச்செய்த திருத்தொண்டு. நீங்கள் செய்து வருவது ஈடில்லா தமிழ்க்கலைஞன் நடிகர்திலகத்துக்கு செய்து வரும் திருத்தொண்டு. இரண்டிலுமே உயர்ந்து நிற்பது தியாகமும், சேவையுமே. உலகெங்கிலும் வாழும் நடிகர்திலகத்தின் ரசிகக்கண்மணிகள் மனம் மகிழ வேண்டுமென்பதற்காக தங்களை வருத்திக்கொண்டு நீங்கள் செய்து வரும் சேவைக்கு ஈடு இணையே இல்லை. அந்த வரிசையில் ஒரு மைல்கல் கல்தான் இந்த 'எதிர்பாராதது' விளம்பரப்பொக்கிஷங்களும், அபூர்வ நிழற்படமும்.
இயக்குனர் ஸ்ரீதரின் எழுத்தோவியத்தில் உருவான இவ்வரிய காவியம், பின்னர் பல்வேறு மொழிகளிலும் தயாராகி பெருவெற்றி கண்ட விவரங்களை நமது வாசுதேவன் சார் அருமையாக எடுத்தியம்பியுள்ளார்.
அப்போதைய நிகழ்வுகளை அறிய இத்தகைய ஆவணங்கள் எவ்வளவு பேருதவியாக இருக்கின்ற என்பதற்கு ஒரு உதாரணம், அதில் குறிப்பிடப்பட்டுள்ள திரையரங்குகளின் வரிசை. சென்னையில் மட்டும் 5 திரையரங்குகளின் வெளியானது மட்டுமல்ல, ஒரே ஏரியாவிலுள்ள இரண்டிரண்டு தியேட்டர்களில் வெளியாகியிருப்பதுதான். சித்ராவும் காமதேனுவும் ஒரே ஏரியா அரங்குகள். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் ஏராளமான படங்கள் வெளியாகும்போது, அண்ணாசாலைப்பகுதியில் தியேட்டர் கிடைக்காதபோது மட்டுமே காமதேனுவில் புதிய படம் வெளியிடப்படும். அப்படி காமதேனுவில் வெளியாகும் படம், அண்ணாசாலை தியேட்டர்களில் வெளியிடப்படாது. ஆனால் 'எதிர்பாராதது' சித்ரா, காமதேனு இரண்டு அரங்குகளிலுமே புதிய வெளியீடாக வெளியாகியுள்ளது.
அதுபோல வடசென்னைப்பகுதியில் பிராட்வே அரங்கும், பாரத் அரங்கும் நடந்து செல்லும் தூரத்திலேயே உள்ளன. (1972-ல் ஒரு ரம்ஜான் தினத்தன்று பிராட்வேயில் 'தங்கதுரை' படத்துக்கு டிக்கட் கிடைக்காமல், நாங்கள் ஐந்தாறு பள்ளி மாணவர்கள் நடந்தே போய் 'பாரத்'தில் ஓடிக்கொண்டிருந்த படத்தைப் பார்த்தோம்). ஆனால் அவ்வளவு அருகருகே உள்ள இரண்டு தியேட்டர்களிலும் 'எதிர்பாராதது' வெளியாகி அசத்தியிருக்கிறது. இவையெல்லாம் தங்களின் ஆவணப்பொக்கிஷங்கள் மூலம் மட்டுமே அறிய சாத்தியமாகிறது.
அதற்காக எங்கள் அனைவரின் நன்றிகளையும் தெரிவிப்பதுடன், தன்னலமற்ற தங்கள் சேவை தொடர வாழ்த்துகிறோம். ராமஜெயம் சார் சொன்னதுபோல, தங்களைப்போன்ற தூய ரசிகக்கண்மணிகள் எந்த ஒரு கலைஞருக்கும் கிடைக்கமாட்டார்கள் என்பது உண்மை.