Dance Genius V.P. Dhananjayan on Nadigar Thilagam
இரா. மகாதேவன் எழுதிய, செவாலியே சிவாஜிக்கு ஆஸ்காரும் வரும்
என்ற நூலிற்கு நாட்டிய மேதை திரு. வி.பி. தனஞ்ஜெயன் அளித்துள்ள அணிந்துரையிலிருந்து-
பாரத கலைகளுக்கெல்லாம் அடிப்படையாய்த் திகழ்வது "நாட்டிய சாஸ்திரம்".
இந்த நாட்டிய சாஸ்திரத்தின் ஒரு முக்கிய பிரிவு பரத நாட்டியக் கலை!
இந்த பரதக் கலையின் உயிர் மூச்சாய்த் திகழ்வது "அபிநயம்". பரதத்தின் அடிப்படையான, ஆதாரமான கலைநுட்பமாகத் திகழ்வது இந்த அபிநயம் தான். இதனையே பரதத்தின் உயிரோட்டம் என்றும் வர்ணிக்கலாம்.
பரதக்கலைக்குத் தங்களைப் பூரணமாய் அர்ப்பணித்துக் கொண்டுள்ள முழுநேர பரத நாட்டியக் கலைஞர்களுக்கே பரிபூரணமாய் வந்து கை கூடாத இறையருள் வித்தை இந்த அபிநயக் கலை!கதகளியில் நிகரற்றக் கலைஞராய் திகழ்ந்த கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் ஒருவர் மட்டுமே இந்த அபிநயக் கலையில் பூரண சித்தி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி பரதக் கலைஞர்களுக்கே நிறைவாய்க் கை வராத இந்த அபிநயக் கலை, திரையுலகில் நடிகர் ஒருவரிடம் பரிபூரணமாய்க் குடி கொண்டிருக்கிறதென்றால் அது நடிகர் திலகம் சிவாஜியிடம் தான்!
உலக அளவில் இது வரை தோன்றியுள்ள நடிகர்களில் சிவாஜி ஒருவரிடம் தான் இந்த அபிநயக் கலை இத்தனை அற்புதமாய்க் கொலு வீற்றிருக்கிறது!
முகத்தில் ஆயிரம் வகையான பாவங்களைக் காட்டுவது, விழிகளாலேயே ஓராயிரம் அர்த்தங்களை உணர்த்துவது, உடல் முழுவதும் பல நூறு அபிநயங்களை அங்கங்கள் சித்தரித்துக் காட்டுவது - இவையனைத்தும் சிவாஜி என்னும் நடிப்பு சமுத்திரத்தில் இன்று வரை நாம் கண்டு வந்திருக்கிற, ரசித்து வியந்திருக்கிற நிஜங்களாகும்!
சமஸ்கிருதத்தில் ஒரு பழமொழி உண்டு ... "ஸாகரம் ... ஸாகரோபமம்" என்பார்கள். அதாவது சமுத்திரத்தை சமுத்திரத்தோடு தான் ஒப்பிட வேண்டும் என்பது இதன் பொருள்.
நடிப்புக் கலையில் சிவாஜி ஒரு சமுத்திரம். உலகம் முழுவதும் இன்று வரை வந்துள்ள நடிகர்களில் சிவாஜி ஒருவரே நடிப்பில் சமுத்திரம்! இந்தச் சமுத்திரத்தின் முன் பிற நடிகர்கள் எல்லோருமே சாதாரண நதிகள் தான்! ஆலிவுட் நடிகர்களுமே அப்படித்தான்.
நதிகளை சமுத்திரத்திற்கு இணையாகப் பேச முடியாது!
ஆலிவுட் நடிகர்களில் ரெக்ஸ் ஹேரிசன், சிவாஜியைப் போல், முகத்தில் பல்வேறு பாவங்களைக் காட்டக் கூடிய நடிகர். ஆனால் அவரும் சிவாஜி என்னும் நடிப்புச் சமுத்திரம் முன் சாதாரண நதிதான் ...
எந்த வேடமேற்றாலும் அதனை மிகமிக நுணுக்கமாக, மிகமிக ஆழமாக, எந்தவொரு சிறு குணாம்சத்தையும் விட்டுவிடாமல், நிறைவாகச் செய்ய முடிந்தவர் உலகம் முழுமையிலும் சிவாஜிதான் ... IN THIS HE STANDS OUT FROM OTHERS ... இந்தத் தனித்திறமை சிவாஜி ஒருவருக்கே சொந்தம்.
"தில்லானா மோகனாம்பாள்" படத்தில் சிவாஜி நாதஸ்வரம் இசைப்பார். வாசிக்கிற இசையின் சுரங்களுக்கு ஏற்ப அவரது கை விரல்கள், கச்சிதமாக களி நர்த்தனம் ஆடும். எந்த சுரத்துக்கு, எந்த விரல்களை இயக்க வேண்டும் என்பதை அற்புதமாகச் செய்து காட்டிய இசை ஞானம் அந்த வாசிப்பில் பளிச்சிட்டது.
சிவாஜி போல் உலக மகா கலைஞன் நடிப்பில் யாருமே இல்லை. அவர் அவர்தான். HE IS HIMSELF ... ... A VERSATILE. GENIUS...