Quote:
டைரக்டர் கே.பாக்யராஜ் திரைக்கதையில் உருவாகும் சின்னத்திரை தொடர் `விளக்கு வச்ச நேரத்திலே'. கலைஞர் டிவியில் ஜனவரி மாதம் 18-ம்தேதி முதல் தினமும் இரவு 8 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகத் தொடங்குகிறது. தொடரை இயக்குபவர் டைரக்டர் சி.ரங்கநாதன். இந்த தொடரின் சிறப்பு அம்சம் என்ன என்று டைரக்டர் சி.ரங்கநாதனிடம் கேட்டபோது...
"ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அடுத்தடுத்து ஏற்படுகிற சம்பவங்கள்தான் கதையின் முடிச்சு. இந்தப் பெண்ணுக்கு அடுத்து என்ன நடக்கும்? எந்த மாதிரியான சோதனையை அவள் எதிர்கொள்ளப் போகிறாள் என்பது தொடரின் மற்ற கதாபாத்திரங்களுக்கு தெரிந்திருக்கும். அவர்கள் மூலம் தொடரை பார்க்கிற ரசிகர்களுக்கும் தெரிந்திருக்கும். ஆனால் தொடரின் நாயகிக்கு மட்டும் தெரியாது. இதனால் காட்சிக்கு காட்சி சஸ்பென்ஸ் கூடி ஒருவித பரபரப்பு, தொடரைத் தொடர்ந்து கொண்டிருக்கும்.
பொதுவாக நம் குடும்பங்களில் நடக்கிற விஷயம் தான் கதை. அதில் அடுத்தது என்ன என்ற ஆவலை ரசிகர்கள் மனதில் ஏற்படுத்துகிற சம்பவக்கோர்வை ரசிகர்களுக்கு `சம்திங் ஸ்பெஷலாக' இருக்கும்.
குடும்பப்பாங்கான கதை என்றாலும் அதில் இழையோட்டமாய் காமெடிக் காட்சிகளும் கதைக்குத் தேவையான விதத்தில் இடம் பெற்றிருக்கும். பெரிய திரையில் தொடர் வெற்றிகளைத் தக்கவைத்துக்கொண்ட டைரக்டர் கே.பாக்யராஜ் இந்த தொடர் மூலம் சின்னத்திரையிலும் ஒரு மாபெரும் தாக்கம் ஏற்படுத்துவார். பார்க்கும் ரசிகர்களுக்கு சினிமா பார்க்கும் உணர்வை ஏற்படுத்தப்போகிறது என்பதும் நிச்சயம்.''
தொடரின் நட்சத்திரங்கள்: சுஜிதா, சஞ்சீவ், கவுசிக், அனுராதா கிருஷ்ணமுத்தி, சிவன்சீனிவாசன், சுரேஷ்வர், மதுமிதா, பயில்வான்ரங்கநாதன், சித்ரா லட்சுமணன், பாக்யஸ்ரீ, இளவரசன், நித்யா, கலாரஞ்சனி, ஷ்ரவன், `ஊர்வம்பு' லட்சுமி, காத்தாடி ராமமூர்த்தி, சிவாஜி, குமரேசன், பாபுஸ், சுந்தர், மாஸ்டர் கனிஷ்கர், தனலட்சுமி ஆகியோருடன் டைரக்டர் சி.ரங்கநாதனும் ஒரு முக்கிய கேரக்டரில்
நடிக்கிறார்.பாடல்: வைரமுத்து. இசை: தேவா. டைட்டில் பாடலுக்கு நடனம்: டான்ஸ் மாஸ்டர் அசோக்ராஜா. கதை, திரைக்கதை-வசனம்: கே.பாக்யராஜ். இயக்கம்: சி.ரங்கநாதன். எவர்ஸ்மைல் நிறுவனம் சார்பில் தொடரை தயாரித்து வழங்குபவர் ஈ.ராமதாஸ்.