சரி சரி உங்கள் ஆதங்கம் புரிகிறது..வி.சா பற்றி விரைவில் கேட்கிறேன் :)
Printable View
Thanks bala sir.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
51
'அம்மன் அருள்'
https://i.ytimg.com/vi/qFkEl0RPpEk/hqdefault.jpg
'ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்'
பாலாவின் தொடரில் அடுத்து நாம் ஆராயப் போவது அம்பிகா மூவிஸ் 'அம்மன் அருள்' படப்பாடல்.
1972-ல் வெளிவந்த இந்த கருப்பு வெள்ளைத் திரைப்படத்தில் ஜெய்சங்கர், மஞ்சுளா, ஏ.வி.எம்.ராஜன், தேங்காய், ஸ்ரீகாந்த், அசோகன், தங்கவேலு நடித்திருந்தனர்.
பாடல்கள் வாலி. இசை சங்கர் கணேஷ். இயக்கம் பட்டு.
http://i1087.photobucket.com/albums/...1355077/22.pnghttp://i1087.photobucket.com/albums/...1355077/24.png
ஒரு கிராமம். ஊரை அடித்து உலையில் போடும் பண்ணையார் அசோகன். அவரின் ஒரே மகன் ஜெய். மேலை நாட்டில் படித்துவிட்டு கிராமம் திரும்பும் டாக்டர். கிராமக் கோவில் ஏழை பூசாரி... சதா சர்வ காலமும் மகமாயி பெயரை உச்ச்சரித்து ஜெபம் செய்யும் ஏ .வி.எம்.ராஜன். அவரது மகள் மஞ்சுளா. தாயில்லாத பெண். ஜெய்க்கு மஞ்சுளா மீது காதல்.
ராஜன் 'பிறகு பெற்றுக் கொள்கிறேன்'என்று சண்முகசுந்தரி தன்னிடம் நம்பிக் கொடுத்திருக்கும் தங்கச் சங்கிலியை மகள் மஞ்சுளாவின் பிறந்தநாளுக்கு ஆசைப்பட்டாள் என்று பரிசாகக் கொடுத்துவிட, அதை மஞ்சுளா தொலைத்துவிட்டு வந்து நிற்கிறார். செய்வதறியாது திகைக்கும் ராஜனுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கிறது. கிராமத்தில் இருக்கும் ராஜவேலு பூசாரி ராஜனிடம் 1000 ரூபாயைக் கொடுத்து மகள் திருமணத்தின் போது வாங்கிக் கொள்வதாகச் சொல்லித் தர, ராஜன் அந்த 1000 ரூபாயை வைத்து சண்முகசுந்தரியின் சங்கிலியை திருப்பிக் கொடுத்துவிட்டு அப்போதைக்கு நிலைமையை சமாளித்து விடுகிறார். அப்புறம் 1000 ரூபாய் கொடுத்தவருக்கு அதைத் திருப்பித் தர வேண்டுமே!
கிராமத்தில் சினிமா ஷூட்டிங் எடுக்க வரும் ஐசரிவேலனின் பணம் 1000 ரூபாய் கோவிலில் சாமி கும்பிட வருகையில் தொலைந்து போக. ராஜன் கையில் அது கிடைக்க, ராஜன் அந்தப் பணத்தை எடுத்து மறைத்து தன்னிடம் கொடுத்திருந்தவருக்கு திருப்பிக் கொடுத்து விடுகிறார். இப்படி வேறு வழியே இல்லாமல் அம்மன் முன்னிலையிலேயே தவறு மேல் தவறு செய்கிறார் ராஜன். அந்தத் தவறுக்கு அம்மனிடம் பேசி நியாயமும் கற்பித்துக் கொள்கிறார் தனக்குத்தானே.
http://i1087.photobucket.com/albums/...1355077/28.png
ஜெய் ஹாஸ்பிடல் கட்டி இலவச மருத்துவ சேவை செய்ய ஆசைப்பட, தந்தை அசோகன் மறுக்கிறார். அதையும் மீறி ஜெய் மருத்துவமனை கட்டி ஏழைகளுக்கு வைத்தியம் பார்க்கிறார். மஞ்சுளா, ஜெய் காதலுக்கு அசோகன் கடுமையான எதிர்ப்பு. தன் தங்கை மகள் சகுந்தாலவைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று அசோகன் மகன் ஜெய்யிடம் வற்புறுத்த, ஜெய் 'சகுந்தலா தனக்குத் தங்கை மாதிரி' என்று கூறி மறுத்து விடுகிறார். சகுந்தலாவும் 'ஜெய் தனக்கு அண்ணன் போலத்தான்' என்று கூறி மேலும் அசோகனுக்கு அதிர்ச்சி உண்டாக்குகிறார்.
ஜெய் 'மஞ்சுளாவைத்தான் கட்டிக் கொள்வேன்' என்று ஒற்றைக் காலில் நிற்க, வேறு வழியில்லாமல் கோவிலில் அம்மனிடம் உத்தரவு கேட்டுப் பெறுவது என்று முடிவு செய்து ராஜனிடம் விபூதிப் பொட்டலம் ஒன்று...குங்குமப் பொட்டலம் ஒன்று தனித்தனியே கட்டி அம்மன் முன்னிலையில் அவரையே எடுக்கச் சொல்கிறார் அசோகன். 'குங்குமப் பொட்டலம் வந்தால் அம்மன் சம்மதம் கிடைச்சுடுத்து என்று அர்த்தம்' என்று சொல்கிறார்.
http://i1087.photobucket.com/albums/...1355077/30.png
ஆனால் ராஜன் அசோகன் தன் தங்கை மகளுக்குத்தான் ஜெய்யை திருமணம் செய்ய அசோகன் உத்தரவு கேட்கிறார் என்று தவறாக நினைத்து அது 'தன் மகளுக்கான உத்தரவு' என்று தெரியாமல் மகளின் வாழ்வு வீணாகக் கூடாதே என்று இரண்டு பொட்டலங்களையும் விபூதியாக மடித்து வைத்து அசோகனை ஏமாற்றி விடுகிறார். அசோகன் உத்தரவு கேட்டது 'மஞ்சுளாவை ஜெய்க்கு மணமுடித்து வைக்கலாமா இல்லையா' என்பது. இது ராஜனுக்குத் தெரியாது. ராஜன் நினைத்துக் கொண்டது 'அது சகுந்தலா ஜெய் திருமணம் கேட்டு உத்தரவு' என்று. அதனால் இரண்டு பொட்டலங்களிலும் விபூதியையே மடித்து வைத்து ஜெய், சகுந்தலா கல்யாணத்திற்கு உத்தரவு இல்லை என்று அம்மன் சொல்வதாக ராஜன் அசோகனை நம்ப வைத்து விடுவார். அசோகனோ 'ஜெய், மஞ்சுளா திருமணத்திற்கு அம்மன் சம்மதம் கிடைக்கவில்லை' என்று சந்தோஷமாக ராஜனிடம் சொல்லிவிட்டுப் போய்விட, ராஜன் இப்போது உண்மை புரிந்து நிலைகுலைந்து போகிறார். விவரம் புரியாமல் மகள் மஞ்சுளாவின் வாழ்வை தந்தை ராஜனே சீரழித்து விட்டார். இதை இப்போது அவர் வெளியில் சொல்லவும் முடியாது.
மஞ்சுளாவும் அம்மன் அருள் வாக்கு கிடைக்காததால் ஜெய்யை மறக்கத் துணிகிறார். ஜெய்க்குத் தன் மேல் உள்ள காதல் மறைய அவரை வெறுப்பது போலவும் நடிக்கிறார். மஞ்சுளா வெறுத்ததனால் மனம் உடைந்த ஜெய் திரும்ப வெளிநாடு செல்ல முடிவு செய்கிறார். கிளினிக்கையும் மூடி விடுகிறார். தன் ஒரே மகன் பரிதாப நிலைமை எண்ணி அசோகன் பாசத்தில் வெறி பிடித்தவர் போல ஆகிறார். எல்லாவற்றுக்கும் அம்மன்தான் காரணம் என்று முடிவெடுத்து அம்மன் மேல் கோபம் கொண்டு கோவிலை இடிக்க முற்படுகிறார்.
http://i1087.photobucket.com/albums/...1355077/27.png
'அம்மன் மேல் கையை வைக்க வேண்டாம்' என்று பூசாரி ராஜன் தடுத்து கெஞ்சுகிறார். அப்போது எல்லோரும் அங்கு வருகிறார்கள். அனைவரும் 'அம்மன் ஒரு கல்' என்று குறை கூறுகின்றனர். மஞ்சுளா முதற்கொண்டு அம்மன் சக்தியில்லாதவள்...அருள் இல்லாதவள்' என்று கூற, துடிதுடிக்கும் ராஜன் 'அம்மன் அருள் உள்ளவள்....எல்லா தவறுக்கும் தான் தான் காரணம்... அதனால் தான் இப்படி என் மகளின் வாழ்வை என் மூலமே பாழாக்கி என் தவறுதல்களுக்கு தண்டனை கொடுத்து விட்டாள்...அதனால் அம்மன் பேசும் தெய்வமே' என்று கூறி தன் தவறுகளை ஒத்துக் கொள்கிறார். 'சாமி இல்லை' என்று சொல்லிக் கொண்டிருந்த ஜெய்யையும் அம்மனின் அருள் பற்றி சொல்லி நம்பவைத்து அவர் நெற்றியில் விபூதி வைத்து விடுகிறார். ஜெய், மஞ்சுளா ஒன்று சேருகின்றனர் அம்மன், அசோகன், பூசாரி ராஜன் சம்மதத்தோடு. எல்லோருக்கும் அம்மன் அருள் கிடைத்து விட்டது நம்மைத் தவிர.
http://i1087.photobucket.com/albums/...1355077/29.png
ஹாவ்....கொட்டாவி வருகிறது. தூக்கம் தூக்கமாய் வருகிறது. என்ன படமோ! என்னவோ! ராஜன் படம் முழுக்க குமுறிக் குமுறி நம்மக் குமுற வைத்து படுத்தி விடுவார். ஸ்ரீகாந்த் நல்ல லூசாக வந்து பின் தெளிந்து மஞ்சுளா, ஜெய் வாழ்க்கைக்காக உருகுகிறார். சினிமா ஆபாச போஸ்டர் பைத்தியம் பிடித்து தேங்காய் அலைகிறார். புளித்துப் போன கணக்கப்பிள்ளை ரோலை தங்கவேலு நூறாவது தடவையாகவாவது பண்ணியிருப்பார்.
படத்தின் ஒரே பலமான முடிச்சு விபூதிப் பொட்டலம் போட்டு அம்மன் வாக்கு கேட்கும் காட்சி மட்டுமே. படத்தின் திருப்புமுனையும் கூட.
மொத்தம் நான்கு பாடல்கள்.
ஆனால் இரண்டு பாடல்கள் நன்றாக இருக்கும். இரண்டு பாடல்கள் சுமார் ரகம்.
http://i1087.photobucket.com/albums/...1355077/23.png
படத்தின் ஆரம்பத்தில் 'குமாரி' பத்மினி கோவிலில் பரதம் ஆடி ஒரு பாடல். ராதா ஜெயலஷ்மியின் குரலில் அற்புதமாக ஒலிக்கும் இந்தப் பாடல் நிஜமாகவே பக்திப் பரவசமே.
'அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள்
அது அடியவர் துயர் தீர்க்கும்... ஆயிரம் நலம் சேர்க்கும்
அற்புத விருந்தாகுமே'
சில பேர் இந்தப் பாடலைக் கேட்டு டி.கே.கலா என்று சொல்லிவிடுவார்கள். குரல் ஒற்றுமை அப்படி.
அப்புறம் படு லோ-கிளாஸாக ஒரு பாடல். தேங்காய் சாராயம் அடித்துக் கொண்டே கணேஷ் குரலில் பாடித் தள்ளாட, உடன் ஜெயகுமாரி குப்பத்துக்காரியாக ஈஸ்வரியின் குரலில் அடிமட்டமாக ஆடிப்பாடும்
'மில்லியடிச்சேன்
100 மில்லியடிச்சேன்
பெரும் குடிமகன் நான்தான்னு சொல்லியடிச்சேன்
குடிமகனே நல்லா குடிமகனே!'
பாடல். ராட்சஸி எல்லைகளையெல்லாம் மீறி குரலால் நம்மை அ(கு)டிப்பார். பதற வைப்பார். ஜெய் குமாரியும்தான்.
'குடி' வார்த்தையை வைத்தே ஊர்ப் பெயர்களை வாலி எழுதி ஈஸ்வரி பாடும் போது நமக்கு 'பகீர்' என்கிறது
'என் தாத்தா பொறந்தது தூத்துக்'குடி'
என் மாமன் பொறந்தது மன்னார்'குடி'
என் புருஷன் பொறந்தது பரமக்'குடி'
நான் பொண்ணா பொறந்தது காரைக்'குடி'
எப்படி?
செம கிக்'குடி' இந்தப் பாடல்.
அப்புறம் ஜெய், மஞ்சுளா காதல் முறிவுக்காக சோகப் பாடல் ஒன்று.
'சாட்சி சொல்ல அன்று
தெய்வம் சபையில் வந்ததுண்டு'
சுசீலா, டி.எம்.எஸ். குரல்களில். சுமார் ரகம்.
http://i1087.photobucket.com/albums/...1355077/25.png
இப்போது தொடரின் பாடல்.
பாலா,
'ம்ஹூம் ம்ஹூஹூம் ஹூம்'
என்று ஹம்மிங் எடுத்துத் தொடங்க,
'ஆஹா ஆஅஅஹா'
என்று தொடர சங்கர்- கணேஷின் அற்புதமான இசைக்கருவிகள் இயங்கத் தொடங்கும்.
சுசீலா, பாலா இணைவு என்றால் சங்கர்-கணேஷ் இருவரின் சாம்ராஜ்யம் சமுத்திரமாய் பெருகும். ஒன்று கூட சோடை போகாது. அந்த வரிசையில் இந்தப் பாடலும் ஒன்று.
வாலியின் வாளிப்பான இளமை ததும்பும் தூய தமிழ் வரிகள். மிக இனிமையான டியூன். அழகான வெளிப்புறப் படப்பிடிப்பு. கட்டம் போட்ட பட்டுப்பாவாடை, தாவணி கட்டிய கட்டுக்குயிலாய் அழகு மயில் மல்லிகைப்பூ சூடிய மஞ்சுளா. கழுத்தில் மெல்லிய கருகுமணியுடன் அப்படியே கிராமத்துச் சிட்டு போலவே கிறங்க வைப்பார். மலையாளிகள் அணியும் முண்டு போல வெள்ளைக் கலரில் கருப்பு ஜரிகை பார்டர் போட்ட தாவணி அணிந்திருப்பார்.
ஹீரோயிஸம் தூக்காத சிம்பிளான உடையில் ஜெய். ஜெய், மஞ்சுளா ஜோடி சேர்ந்த முதல் படம். ஜெய் காஷுவலாக பண்ணியிருப்பார்.
கிராம வெட்டவெளிப் பின்னணி. தூரத்தில் பனைமரங்கள் கருங்குச்சிகளை வரிசையாக நட்டது போலக் காட்சியளிக்க, இங்கே அருகே ஒரு சிறிய குளம். அதன் பின்னால் கிளைகள் விட்டு காட்சியளிக்கும் மிகப் பெரிய மரம். அழகான வளைந்தோடும் ஓடை, வளர்ந்தும் வளராமல் சாய்ந்து சாய்ந்து ஆடும் சவுக்கு மரங்கள். மஞ்சுளா சாய வசதியாக பெரிய வைக்கோற்போர்கள் என்று ஸ்டூடியோ வாசனையே எட்டிப்பார்க்காத இயல்பான கிராமம் அப்படியே படம் பிடிக்கப்பட்டிருக்கும்.
பாடலின் துவக்க இசை உற்சாகம் கொள்ள வைப்பது. குயில் கூவுவது போல. (கியூங்... கியூங்...கியூங்கியூங்) அப்படியே மெலிதான கிடாரின் பின்னணி தபேலாவுடன் சேர்ந்து. மிகச் சிறிய பிட். ஆனால் இரட்டையர்கள் இன்பத்தை வாரி வழங்குவார்கள்.
சுசீலா பாலா ஹம்மிங் முடித்தவுடன் 'டிடிடிடிங்டிடிங்... டிடிடிடிங்டிடிங்... டிடிடிடிங்டிடிங்... டிடிடிடிங்டிடிங்' என்று நான்கு முறை மனதை மயக்கும் பியானோவின் ஒலி இன்னும் நம்மை அசர வைக்கும்.
'ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே' எனும்போது பாலா கொஞ்சம் அவசரமாக 'நான் தருவேனே' என்று பாடுவது கொள்ளை இன்பம். திரும்பவும் அருமையான இசைச் சங்கதிகள் முன்னைப் போலவே.
ஜெய்க்கு பாலாவின் குரல் இந்தப் பாட்டில் வழக்கத்தை விட மிக அழகாக இருக்கும். பல்லவி முடிந்து இடையிசையில் பியானோ மறுபடி தூள் கிளப்பும். அது முடிந்தவுடன் கிராம இசை என்பதை புல்லாங்குழல் ஓசை நமக்கு உணர்த்தும்
'பட்டுத்தளிர்க் கொடியில்
பச்சைப் பசும் கிளிகள்
தொட்டுக் கொண்டு பேசும் இன்று'
இதில் இரண்டாம் முறை 'இன்று' என்று வரும்போது பாலா சற்றே இந்த வார்த்தையை நீட்டி முழக்குவார். ஜோர்.
'ஓடை நீரில்' என்று பாலா பாடியதும் அது முடிந்த உடன் பின்னால் மெலிதாக இழைந்து கொண்டிருக்கும் ஷெனாய் ஒலி பட்டும் பாமலும் தொட்டும் தொடாமலும் நம் காதுகளில் ஒலிக்கும்போது அப்படியே நம்மை அள்ளிக்கொண்டு போகும். அதே போல சுசீலா பாடிக் கொண்டிருக்கும் போதும் இனிமையாக ஒலித்துக் கொண்டே இருக்கும்.
இரண்டாவது சரணத்திற்கு முன் வரும் இடையிசையாக ஆரம்பிக்கும் அந்த சாக்ஸ் இசை கிரேட். பின்னால் பாங்கோஸ் உருட்டல்கள் உண்டு. அது முடிந்து வழக்கமான பியானோ ஓசை வந்து ஒட்டிக் கொள்ளும்.
'உன்னைக் கண்டு எனக்கு
என்னென்னவோ நினைப்பு
சொல்லச் சொல்ல மயக்கம் கண்ணா'
பாலா 'இன்று' என்று முதல் சரணத்தில் இழுத்துப் பாடுவது போலவே மேற் சொன்ன சரண வரிகளில் சுசீலா தன பங்கிற்கு கொஞ்சமும் குறையாமல் 'கண்ணா.....ஆ' என்று பாலாவையே முந்துவார். அவ்வளவு கொஞ்சல் அது.
பாடல் முடியும்போதும் அதே கிடார் இசையுடன் அம்சமாக மிக இனிமையாக பாடலை முடிப்பார்கள் சங்கர்- கணேஷ் என்ற சர்க்கரை இரட்டையர்கள்.
பாடலோடு இசை இழையும் பாடல்களில் இதுவும் ஒன்று. அலட்டாத பாலா, சுசீலாவின் குரல்கள் ரொம்பவும் இனிமை சேர்க்கிறது இப்பாடலுக்கு. அது மட்டுமல்ல... இப்படத்திற்கே இந்தப் பாடல்தான் பலம்...முத்தாய்ப்பு.
http://i1087.photobucket.com/albums/...1355077/26.png
ம்ஹூம் ம்ஹூஹூம் ஹூம்
ஆஹா... ஆஅஅஹா
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
இன்றல்ல நாளை சூடட்டும் மாலை
கேட்டதைத் தருவேன் நான்தானே
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
பட்டுத்தளிர்க் கொடியில்
பச்சைப் பசும் கிளிகள்
தொட்டுக் கொண்டு பேசும் சிந்து
புன்னைமர நிழலில்
சின்னஞ்சிறு அணில்கள்
கொஞ்சட்டும் முத்தங்கள் தந்து
பட்டுத்தளிர்க் கொடியில்
பச்சைப் பசும் கிளிகள்
தொட்டுக் கொண்டு பேசும் சிந்து
புன்னைமர நிழலில்
சின்னஞ்சிறு அணில்கள்
கொஞ்சட்டும் முத்தங்கள் தந்து
ஓடை நீரில் வாடை மீன்கள்
ஜாடையில் சொல்லும் நாடகம் என்னென்ன
ஓடும் தென்றல் பூவையைப் பார்த்து
கூறும் கதைகள் என் னென் ன
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
உன்னைக் கண்டு எனக்கு
என்னென்னவோ நினைப்பு
சொல்லச் சொல்ல மயக்கம் கண்ணா
இன்னும் என்ன மயக்கம்
நெஞ்சில் உள்ள வரைக்கும்
அள்ளி அள்ளி எடுப்போம் ஒண்ணா
உன்னைக் கண்டு எனக்கு
என்னென்னவோ நினைப்பு
சொல்லச் சொல்ல மயக்கம் கண்ணா
இன்னும் என்ன மயக்கம்
நெஞ்சில் உள்ள வரைக்கும்
அள்ளி அள்ளி எடுப்போம் ஒண்ணா
நான்கில் ஒன்று நாணம் என்று
பென்ன்மனம் கொஞ்சம் அஞ்சுவதென்னென்ன
அச்சம் என்ன ஆசை கொண்டு
துள்ளிடும் உள்ளம் பூப்பந்து
ஒன்றே ஒன்று நீ தர வேண்டும்
ஒன்றென்ன நூறாய் நான் தருவேனே
ஹே ஹே ஹே ஹேஹேஹே
ஆ ஹா ஆ ஹஹஹா
ஹே ஹே ஹே ஹேஹேஹே
லா லா லா லலலா
https://youtu.be/7_RkpXvdLhM
//அம்மன், அசோகன், பூசாரி ராஜன் சம்மதத்தோடு. எல்லோருக்கும் அம்மன் அருள் கிடைத்து விட்டது நம்மைத் தவிர. // :)
//ஹாவ்....கொட்டாவி வருகிறது. தூக்கம் தூக்கமாய் வருகிறது. என்ன படமோ! என்னவோ! ராஜன் படம் முழுக்க குமுறிக் குமுறி நம்மக் குமுற வைத்து படுத்தி விடுவார். ஸ்ரீகாந்த் நல்ல லூசாக வந்து // அது என்ன நல்ல லூசு :)
அம்மன் அருள் ட்ராயர் வயதில் மதுரை ஸ்ரீதேவி என்று சொல்லவும் வேண்டுமோ.. இந்த ஆனால்...ஆனால்..அவ இருக்காளே அம்மன் எல்லாத்தையும் பாத்துக்குவா என்று அடிவயிற்றிலிருந்து அடிக்கடிக் கத்திச் சொல்வது இன்னும் காதுகளில் ஒலிக்க்க்கிறது..
இந்த ஒன்றே ஒன்று சமீபத்தில்தான் யூட்யூபில் பார்த்தேன். .சி.வயதில் பார்த்தது நினைவிலில்லை..
//வாலியின் வாளிப்பான இளமை// :) //தாவணி கட்டிய கட்டுக்குயிலாய்// பாவம் மஞ்சுளாவோட கால் விட்டுட்டீங்களே! :) ஒருவேளை கட்டுப்பாடான கட்டுக்கோப்பான கட்டழகான .. குயிலோ.. :)
ம்ம் நல்ல பாட் கொடுத்ததுக்கு தாங்க்ஸ். .கதைச்சுருக்கம் சொல்றதுக்காக ப் படம் பார்த்த உங்களுக்கு ஸாரிடான். சொன்னதுக்காக ஒரு செல்ல அடி..( நற நற) மொத்தத்தில் தாங்க்ஸ்.. வாஸ்ஸு..:)
வாசுஜி
பாலுவி பாடல் ஒன்றே ஒன்று நீ தரவேண்டும் என்று கேட்டால் இந்தப் பாட்டை கொடுத்துடுவீங்க போலிருக்கே ! :)
கதையின் கடைசியில் விமானம் ஏறப்போன ஜெய் திரும்பி வந்தபின் அவர் போவதாக இருந்த விமானம் வெடித்து சிதறிய செய்தி ஒண்ணு வரும்.. இப்படி இவர் ஒருவருக்காக ஒரு விமானம் மொத்தமும் சிதறிப் போவதுதான் அம்மன் அருளா என்று குமுதம் விமரிசனத்தில் கேட்டிருந்தார்கள்...
நான் எனக்குள்ளேயே பாடிக்கொள்ளும் பாடல்களில் இதுவும் ஒன்று. ஆனால் "தொட்டுக் கொண்டு பேசும் சிந்து" என்று பாடுவேன்.. அப்போதானே "கொஞ்சட்டும் முத்தங்கள் தந்து" என்று பாடும்போது ஒத்துப் போகும்... இன்னைக்குதான் அது "இன்று" என்பதையே கவனித்தேன் !! ஹி ஹி..
அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள் பாட்டு யூடியூபில் காணலியே என்று மூணு மாசத்துக்கு முன்னால்தான் அப்லோடு செஞ்சிருந்தேன்...
https://www.youtube.com/watch?v=cWpSkcxu6cY
மதுண்ணா!
மதுண்ணாவா கொக்கா?... அது 'இன்று' அல்ல 'சிந்து'தான்.:clap: நீங்கள் உள்ளுக்குள் பாடிக்கொண்டிருப்பது சரியான சிந்து. அதை அங்கே மாற்றி சரியாக 'சிந்தி' விட்டேன். இன்றே அதை திருத்தித் தந்தது நன்று. அதற்கு என்னுடைய பெரிய நன்றி ஒன்று. தப்ப முடியாது என்று(ம்).:) நான்தான் ஹி ..ஹி வழிய வேண்டும்.! நீங்கள் கூடாது. சமாளிச்சுட்டேனே! இருந்தாலும் நல்ல காது டாக்டர் இக்கட லேது.:)
அப்புறம் 'அகிலமெல்லாம் விளங்கும் அம்மன் அருள்' குறிப்பிட்டுள்ளேன். நீங்கள்தான் அந்த வீடியோ புண்ணியம் பண்ணியதா? எங்களுக்கும் சேர்த்து. அம்மன் அருள் நிச்சயம் உண்டு கொடுத்தவருக்கும், பார்ப்பவர்களுக்கும்.:)
குமுதம் விமர்சனம் 'கிளுக்'. சிரித்து சிந்திக்க வைக்கும் நியாயமான கேள்வி.
மதுண்ணா!
அரவிந்த் கார்த்திக்?!:cheer: