Quote:
டெலி சிப்ஸ்
சன், கலைஞர் தொலைக்காட்சி குழுமத்தில் காமெடிக்கு என தனியாகச் சேனல் இருப்பதைப் போல விரைவில் ஜெயா டி.வி. குழுமத்திலும் காமெடிக்கு என தனியாக ஒரு சேனல் வரவிருக்கிறது. அதற்கான அனைத்து வசதிகளும் தயாராக இருந்தாலும் மக்களவை தேர்தலுக்கு பின் புதிய காமெடி சேனலை ஒளிபரப்ப மேலிடம் உத்தரவிட்டிருக்கிறது.
குட்டி பத்மினியின் கணவரும், சின்னத் திரை இயக்குநருமான பிரபு நேபால் தென்னாப்பிரிக்காவில் இருந்தவர். தற்போது ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்று வருவதால் இறுதி போட்டிக்கு இங்கிருந்து வி.ஐ.பி.க்களை அழைத்து செல்ல திட்டமாம். கமல் மற்றும் ரஜினியின் குடும்பங்கள் அதில் முக்கியமானதாம்.
தீபா வெங்கட் தனி வீட்டில் தங்கி வருகிறார். காரணம் ஜோஸியம். சில மாதங்கள் குடும்பத்தை விட்டு தனி வீட்டில் தங்கியிருந்தால் திருமணம் கை கூடும் என ஜோதிடர் சொன்னதால் இந்த நடவடிக்கையாம். பெற்றோர் கூட தீபா வெங்கட்டை படப்பிடிப்பில்தான் சந்தித்து பேசுகிறார்கள்.
தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இப்போது டப்பிங் பேசுவதில் பிஸியாகி விட்டார். "சரோஜா'வில் புதுமுகம் வேகாவிற்கு டப்பிங் பேசியவரை, "நாடோடிகள்' படத்திற்கும் தேடி பிடித்து அதே வேகாவிற்கு குரல் கொடுக்க வைத்திருக்கிறார்கள்.
சன் டி.வி.யின் வானிலைப் பெண் மோனிகாவை ஞாபகம் இருக்கிறதா? தற்போது சீரியல்களில் நடித்து வரும் மோனிகாவுக்கு மே 14 ந்தேதி திருமணம். மணமகன் சாமுவேல் மாத்யூ, வங்கி அதிகாரியாகப் பணிபுரிகிறார்.
காதல் திருமணம் செய்துகொண்ட சின்னத்திரை ஜோடிகள் பிரஜினும் சாந்த்ராவும் பிரிந்துவிட்டார்கள். மனஸ்தாபம்தான் காரணமாம். இருந்த போதிலும் பிரஜீன் "முத்திரை' என்ற படத்திலும், சாந்த்ரா "ரோஜாக் கூட்டம்' தொடரிலும் பிஸியாக இருக்கிறார்கள்.
நளினியின் வாரிசுகள் அருண், அருணா இருவரும் என்ஜினீயரிங் படித்து வருகிறார்கள். இருவருக்கும் சினிமா பிடித்தால் அவர்களே சினிமாவுக்கு வந்து விடுவார்கள். அது வரை சினிமாவுக்கு யாரும் தன் வாரிசுகளை அழைக்க வேண்டாம் என கண்டிஷன் போட்டிருக்கிறாரம் நளினி.