Old Article in Vikatan, by Witer Sujatha
http://www.facebook.com/photo.php?fbid=468934073137609&set=a.1885690378407 82.41307.188163147881371&type=1
கமலும் நானும் அறிமுகமாகி இது 'சில்வர் ஜுபிளி' வருடம். அந்த நினைவுகளோடு ஆழ்வார்ப் பேட்டை வீட்டில் அவரைப் பார்க்கப் போயிருந்தேன். ''இருபத்தஞ்சு வருஷம் ஓடிப்போச்சு!'' என்றதும்,
''ஆமாமா... 'அபூர்வ ராகங்கள்' காலத்திருந்தே... பெங்களூர்ல சந்திச்சோம். அந்த மீட்டிங்கை 'கணை யாழி'யில் எழுதியிருந்தீங்க'' - மீசையுடன் விரல் விளையாடச் சிரிக்கிறார் கமல். விநோதமான கிருதாவை, மீசையுடன் மயிர்ப்பாலம் போட்டுச் சேர்த்திருக்கிறார் 'சண்டியர்' கமல்!
கமல் தன் புதிய கம்ப்யூட்டரைக் காட்டுகிறார். நாய்க்குட்டி மாதிரி கூடவே இழுத்துப்போக வசதியான நடமாடும் கம்ப்யூட்டர். ''இதுல உட்கார்ந்து ஒரு ஸ்க்ரீன் ப்ளே எழுதினா நல்லா இருக்கும் போலிருக்கே'' என்றதும், ''அதான் சார் ஆசை ஆசையா அமெரிக்காவிலிருந்து வரவழைச்சேன்'' - சிரிக்கிறார் கமல்.
இந்திய சினிமா உலகத்தில் 'டிஜிட்டல் புரட்சி' எப்போது வரும் என்று அவரோடு சின்ன விவாதம்.
''கமல்... நீங்க ஹாலிவுட் போயிருக்கீங்க. இன்னிய தேதி டெக்னாலஜி என்னன்னு பார்த்துட்டே இருக்கீங்க. முக்கியமா,ஃபிலிமே இல்லாத டிஜிட்டல் சினிமா தமிழ்ல வர்றது எந்த அளவுல இருக்கு?''
''பி.சி. ஸ்ரீராமோட நீங்க பண்ற 'வானம் வசப்படும்'தான் தமிழின் முதல் டிஜிட்டல் படமா வரும்னு நினைக்கிறேன். 'சண்டியர்'கூட அப்படிப் பண்ணிடணும்னுதான் ஆசைப்பட்டேன். இங்கே நாடகம் போடறதுக்கு சபா இருக்கு. மெம்பர்ஸ் நிறைய இருக்காங்க. அவங்களுக்கான நாடகங்கள், கச்சேரிகள்னு நடத்தறாங்கள்ல. அது மாதிரி நிறைய 'சினிமா கிளப்'கள் உருவாகும். நல்ல நல்ல படங்கள் வரும். பாட்டு, ஃபைட்டு, சென்டிமெண்ட்னு ஓடற ஃபார்முலாக்களை உடைச்சிட்டு நல்ல நல்ல படங்கள் உருவாக்கற, ரசிக்கிற ரசனை வளரும். ஆனா, பழைய காலத்து சதர்ன் ரயில்வே மாதிரி தேவையில்லாத தாமதங்கள் இருக்கு. நானும் நீங்களும் பத்து வருஷமா டிஜிட்டல் சினிமா பத்திப் பேசிட்டே இருக்கோம். இந்நேரம் அது வந்திருக்கணும். அது பற்றிய தெளிவான பார்வை இன்னும் வராததாலதான் தாமதம்.
'சாட்டிலைட் டெலிவிஷன் வரக்கூடாது'னு இங்கே ஒரு ஊர்வலம் போனாங்க. அதுல நான் கலந்துக்கலைனு கோபப்பட்டாங்க. மாற்றங்கள் வந்துட்டேதான் இருக்கும். அப்போ நான் ஒரு பேட்டியே தந்தேன். தார் ரோடு வர்றப்போ மாட்டு வண்டி கொஞ்சம் ஒதுங்கித் தான் போகணும். தார் ரோடு போடப்பட்டதே கார்களுக்காகத்தான். அதுல மாட்டு வண்டி ஓடினா மாட்டுக்கும் கெடுதல், வண்டிக்கும் கெடுதல், ஏன் ரோட்டுக்குமே கெடுதல். முடிஞ்சா உங்க வண்டிக்கு ரப்பர் டயர் போட்டுங்கங்க'னு சொன்னேன்.
அப்படித்தான் டிஜிட்டல் சினிமாவும். புது தொழில்நுட்பம். இன்னும் சௌகரியமாப் படம் பார்க்கலாம்.''
''தமிழ்ல அதுக்கான நேரம் வந்துடுச்சா?''
''ஹாலிவுட்கூட ஒப்பிடும்போது அவங்க ஒருங்கிணைஞ்ச ரோமானியப் படை! நாம சின்ன ஸ்பார்டகஸ் ஆர்மி மாதிரி. ஒவ்வொரு கம்பெனியும் இங்கே தனி ராஜாங்கம். 'ராஜ்கமல்'ல நான் எடுக்கிறதுதான் முடிவு. வட்ட மேஜை கூட்டி உட்கார்ந்து பேச வேண்டியதில்லை. பாரதிராஜா, ஷங்கர் எல்லாம்கூட அப்படித்தான். நாம நினைச்சா இந்த மாற்றத்தை உடனே இங்கே கொண்டு வந்துட முடியும். ஆனா, கமல் பண்றார், மணிரத்னம் பண்றார்னு ஏதோ ஒருத்தர் ரெண்டு பேரோட முடிஞ்சு போயிடக்கூடாது. அது ஒரு இயக்கம் போல வளர வேண்டிய நேரம் வந்தாச்சு!''
''பின்னே என்ன சிக்கல்..?''
''தேவையில்லாத பதற்றம் நிறைய இருக்கு. 'டிஜிட்டல் படம் வந்துட்டா சினிமாவே அழிஞ்சு போயிடுமோ... தியேட்டர்களே இனி தேவைப்படாதோனு ஒரு பதற்றம்.
இந்த டெக்னாலஜி ஒரு வசதி. அவ்வளவு தான் எடுத்துக்கணும். 'ஸ்டெடி காம்'னு ஒரு காமிரா வந்தபோது அதைப் பயன்படுத்தக் கூட யாரும் முன்வர வில்லை. 'விக்ரம்'லதான் நாம பண்ணினோம். இப்போ 'ஸ்டெடிகாம்' பயன்படுத்தாம ஆக்ஷன் படங்கள் பண்றதே இல்லை. அதுமாதிரிதான் டிஜிட்டல் சினிமா. முதல் ஸ்டெப் யார் எடுத்து வைப்பது என்பதுதான் விஷயம். அப்புறம் தடதடனு வந்துடுவாங்கனு நம்பிக்கை இருக்கு!''
''அப்ப பழைய ஃபிலிம்களை எல்லாம் பீரோவுல மடிச்சு வெச்ச பட்டுப்புடவை மாதிரி ஆகிடுமா?''
''கரெக்ட்டா சொன்னீங்க. விழா, விசேஷம்னு நல்ல நாளுக்கு ஞாபகார்த்தமா கட்டிக்கிடற மாதிரி அதை வெச்சுக்கலாம். ஆனா, அதுக்காக டிஜிட்டல் சினிமா வந்தா இப்போ இருக்கிற தியேட்டர்கள் என்னாகும்னு யாரும் பயப்பட வேண்டியதில்லை.
வீட்டுக்கு வெள்ளையடிக்கிற மாதிரிதான் இந்த மாற்றம். சாதா தியேட்டர்களை ஏ.ஸி. பண்ணின மாதிரி, DTS, dolby னு புது சவுண்ட் சிஸ்டம் பண்ணினபோது ஆன செலவு மாதிரி கொஞ்சம் ஆகும். ஆனா, இந்த மாற்றம் மக்களை தியேட்டர்கள் நோக்கி திருவிழா மாதிரி இழுத்துட்டு வந்துரும். DTS வந்த புதுசுல 'ஐயோ இவ்வளவு செலவா?'னு பதற்றப்பட்டாங்க. ஆனா இப்போ சிட்டியில DTS, dolby இல்லாத தியேட்டர்களை விரல் விட்டு எண்ணிடலாம்.''
''திருட்டு வி.சி.டி. பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க?''
''அரிசியை வேலைக்காரங்க திருடாம எப்படி விவசாயம் பார்க்கறது என்பது மாதிரிதான் இதுவும். திருட்டு வி.சி.டி-க்காரங்க கையில டெக்னாலஜி இருக்கு. மலேஷியாவுல தான் இது உற்பத்தியாகுதுனு சிலர் சொல்றாங்க. கிட்டத்தட்ட குடிசைத் தொழில் மாதிரி பண்ணிட்டாங்க.
சினிமாக்காரங்களோட உழைப்பு, வியர்வை, பணம் எல்லாம் யாரோ சாப்பிடறாங்க. இதைத் தடுக்கலேன்னா இனிமே சினிமாவுல இன்னொரு எம்.ஜி.ஆர்., சிவாஜி உருவாக முடியாது. ரஜினி மாதிரி என்னை மாதிரி ஆட்கள் தலையெடுக்க முடியாது. டிஜிட்டல் சினிமா வந்தா பைரசியும் குறைய வாய்ப்பிருக்கு. அதுவும் தவிர, டிஜிட்டல் சினிமா வர்றப்போ க்யூவில் அடிதடி போட்டு டிக்கெட் வாங்கற அவஸ்தை கிடையாது. சின்னச் சின்ன தியேட்டர்கள் நிறைய வரும்.
சிகரெட் வாங்கப் போறவனுக்கு 'அது மெடிக்கல் ஷாப்ல இருக்காது. பெட்டிக்கடையிலதான் கிடைக்கும்'னு தெளிவாத் தெரியும். ஆர்ட் ஃபிலிம் ஓடற தியேட்டருக்கு கமர்ஷியல் படம் பார்க்க ஆசைப்படற ரசிகர்கள் போகமாட்டாங்க. அதது தெளிவா நடக்கும்! தெருவோரமா டீக்கடையில வாங்கி குடிச்ச ஆட்கள் 'க்விக்கீஸ்' மாதிரி இடத்துக்குப் போய் காபி குடிக் கிறதையே ஒரு அனுபவமா ரசிக்கிற மாதிரி டிஜிட்டல் சினிமா புது ரசனையைத் தரும்... நிறைய பேரை தியேட்டருக்கு இழுக்கும்!'' என்கிறார் கமல்.
அவரிடம் கேட்கவேண்டிய இன்னொரு கேள்வி இருந்தது.
''ஒருத்தருக்கொருத்தர் நெருங்கி முத்தம் கொடுக்கிறப்போ கண்களை ஏன் மூடிக்கிறாங்கனு ஒரு கேள்வி வந்தது. அதுக்கு உங்க பதில் என்ன?''
சிரிக்கிறார் கமல்.
''முத்தம்னா கமல்தான்னு என்னை வாத்ஸ்யாயனர் மாதிரி ஆக்கிட் டாங்க'' என்றவர்,
''அது சிம்பிள் காரணம். அவ்ளோ க்ளோஸா இரண்டு முகங்கள் வரும்போது கண்ணுக்கு எல்லாம் அவுட் ஆஃப் ஃபோகஸாகிடும். அதான் தன்னாலயே கண்ணு மூடிக்குது.''
''சினிமா இருக்கட்டும். அருமையான கவிதைகள் எழுதியிருக்கீங்க. ஒரு தொகுப்பா கொண்டுவர்ற ஐடியா எதுவும் இல்லையா?''
''நிச்சயமா.. ஆனா ஒரு புத்தகமா மட்டுமே கொண்டு வராம, அதோட விஷ#வலா அதை ஒரு படம் போல செய்து சி.டி-யில கொண்டுவர ஆசைப்படறேன். என் கவிதைகளை நான் வாசிக்க வாசிக்க அதை அப்படியே காட்சிகளாப் பதிவு பண்ற ஐடியா... கொஞ்சம் நேரம் கிடைச்சதுனா போதும்.. அதைப் பண்ணிடுவேன்!'' என்றவர்.
''கேன்ஸ் திரைப்பட விழாவுக்குப் போகும்போதே 'மருதநாயகத்தையும் அவங்களுக்கு சின்ன டிரெய்லரா போட்டுக் காட்டினேன். அதைப் பார்க்கறீங்களா'' என்றபடி ரிமோட்டைக் கையிலெடுத்தார்.
திரை ஒளிர்ந்தது.
புழுக்களைப் போல விழுந்து நெளியும் கூட்டத்திலிருந்து சுய மரியாதைக்காகப் போராடப் புறப்பட்ட ஒருவன் திரையில்...
தோள் வரை புரளும் ஜடாமுடி, தாடி, கையில் குத்தீட்டி, எருது வாகனம் என்று அப்படியே சரித்திரத்துக்குள் இழுத்துப் போகிற படம்.
அத்தனை அபாரமான அருவியின் மேலிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவன் குதிக்கும்போது சரக்சரக்கென இரண்டு அம்புகள் துளைக்க அடிபட்ட பறவை போல விழுகிறான்.
தண்ணீரின் வேகம் ஒரு பாறையின் மேல் அவனைத் தள்ளிவிட்டுப் போக நினைவிழந்து விழுந்து கிடக்கிறவனின் காயத்தை ஒரு கழுகு கொத்தித் தின்னுகிற காட்சி சிலிர்ப்பூட்டுகிறது.
புழு, பட்டாம்பூச்சி, கழுகு என்று முரட்டுக் கவிதையாக அவன் பரிமாணங்களெடுக்கிற ஒவ்வொரு காட்சியும் தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி நம்பிக்கை தருகிறது.
திரை அணைகிறது. புன்னகைக்கிறார் கமல்.
''இந்தியாவோட முதல் லகான் என்னோட படமா இருக்கணும்னு ஆசைப்பட்டேன். அமீர்கான் முந்திக் கிட்டார்!''
ஒரு கலைஞனின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள எனக்கு அந்த ஒருவரி போதும்!
பல காரணங்களுக்காக இந்தப் படம் இன்னும் நிறைவு பெறாமல் இருப்பதுதான் இந்திய சினிமாவின் சோகம்!