-
எளிதில் ஏமாறாதவர் சித்தப்பா..
அவ்ரையும் ஏமாற்றி விட்டாள் அவள்..
பாரு சாமி
சேப்பு கலந்த மாநிறமா
இருக்குது பாரு பழம்
ஒன்னைப் போலவே
எனச் சொல்லித்
தலையில்கட்டியும் விட்டாள்..
வெட்டிச் சுவைத்தால் ஒரே புளிப்பு..
என்ன சித்தப்பா மசக்கையா
எனக் கேட்டு குட்டும் வாங்கினேன்..
மறுநாள் காலை
அதே சமயம்
அவள் குரல் கேட்க..
சித்தப்பா அவளைக்
கூறு போடுவதைப் பார்க்க
நாங்கள் தயாராக..
அவள் வந்தும் சென்றும் விட்டாள்..
பின் வந்த சித்தப்பா
பெருமூச்சு விட்டுச் சொன்னார்..
’இந்தக் காலத்தில்
எங்கு பார்க்க முடிகிறது..
நல்ல வியாபாரியையும்..
ந்ல்ல மாம்பழத்தையும்...’
-
மாம்பழத்தையும் நாரதர் பகடையாக்க
பரமசிவன் குடும்பத்தில் தகராறு
பந்தயம் பாகப்பிரிவினை பிரச்சினை
பக்தர்க்கு கோவில்கள் பஞ்சமில்லை
-
பஞ்சமில்லை வாழ்க்கையில்
அன்புக்கு..
பரிவுக்கு..
பணத்திற்கு..
பாசத்திற்கு..
ஆசைக்கு.
வெறுப்புக்கும் விருப்புக்கும்...
இருந்தும்
மனிதனென்பதால்
திருப்தியில்லாமல்
தொடர்கின்றன என் தேடல்கள்..
-
தேடல்கள் ஏராளம்
எங்கேயும் எப்போதும்
தொலைந்த திருகாணிக்கு
மறந்த சாவிக்கு
மணமக்கள் தேவைக்கு
மனம்கவர் நட்புக்கு
கடற்கரை மணலிலே
இணைய தள சேவையிலே
புதையல் கிடைக்கலாம்
புதைந்தும் போகலாம்
காத்திருப்பது என்ன
அறிந்தவர்தான் யாரோ
-
யாரோ
அந்தப் பக்கம் சிரிக்கிறார்கள்..
யாரோ
அந்தப் பக்கம் அழுகிறார்கள்..
யாரோ நடந்துகொண்டு இருக்கிறார்கள்..
யாரோ பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள்..
யாரோ பய்ணம் முடிந்தும் வருகிறார்கள்..
அல்லது செல்கிறார்கள்..
எல்லாவற்றையும்
மெளனமாய்
அவ்வப்போது மறைக்கும் மேகத்தையும் விலக்கிப்
பார்த்துக் கொண்டிருக்கிறது வானம்..
-
வானம் ஏன் அழுகிறது
அடை மழை பெய்கிறது
சந்திரனை சலவை செய்து
உலர்த்திய கவிதை வரிக்கா
-
கவிதை வரிக்கா..
உனக்குப் பிடித் த தாய்
இருக்கவேண்டுமா..
பரிசு....
என்னது முத்தமா..
ஒவ்வொரு வரிக்குமா..
கொஞ்சம் இரு..
இந்தா...
சீ..போப்பா நீ ரொம்ப மோசம்..
நான் என்ன செய்துவிட்டேன்..
உன் பெயரை முப்பது முறை
எழுதியிருக்கிறேன்..
அதற்கு ஏன்
உன் முகம்
இப்படிச் சிவக்கிறது.....
-
சிவக்கிறது தெருவெல்லாம்
குருதி பெருகியோடியதில்
தலைகள் உருண்டோடிடும்
அகந்தையும் ஆணவவும்
அரியணை தொலைக்க
சமுதாய நீதி தர்மம்
புதிதாய் அங்கே பிறக்க
பொற்காலம் சில காலம்
சக்கரம் நிற்காது சுழல்கிறது
மறுபடியும் ஓடுது ரத்த ஆறு
-
ஆறு
அன்று அமைதியாய்த் தான்..
மாம்பழக் கலர் பட்டுப் பாவாடையும்
சிகப்புச் சட்டையும் போட்டுக் கொண்டு
சமர்த்தாய்
மணல் வீடு கட்டிக் கொண்டிருந்த
உன்னைப் போலவே...
நான் தான் மோசம்..
தொம்மென்று விழுந்து கலைத்து விட்டேன்..
கோபமும் கண்ணில் நீருடனும்
விருட்டென்று பேசாமல் போய்விட்டாய்..
பிற்காலங்களில்
நம் காதலை வளர்த்த்து
அந்த ஆறு தான்...
மெளனமாய் நம் உணர்ச்சிகளைப்
பார்த்துக் கொண்டிருக்கும்..
நம் தோழி தான்..
ஒரு நாள்
அதற்கும் கோபம் வந்து
வெள்ளமாய்க் காட்டியது..
என்று என்று உன் மனது அறியும்...
**
சமீபத்தில் ஊர் சென்ற போது
ஆற்றங்கரை சென்றேன்..
வயதாகி விட்ட்து போலும்..
நீர் கொஞ்சமாக..
மணலும் போய்..
பாவம்...
-
பாவம் ஏணி
ஏற்றுவது வேலை
நகராது நின்று
கடமையை செய்
பலனை எதிர்பாராதே
கண்கூடான தர்மம்