-
வாசு அவர்களே...
புதுவையில் தொடங்கும் லைஃப் ஆஃப் பை கதை வாசித்திருக்கிறேன்.
நீங்கள் அளித்த நிழற்படம் திரைப்படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது...
என் பங்குக்கு பிபிசி ஆவணப்படத்தில் நம் தலைவரின் கம்பீரமான இராஜராஜச் சோழரைக் காணுங்கள்..
http://www.youtube.com/watch?v=_QgFLDjKBAk
-
இராகவேந்திரர் அவர்களே
பம்மலாரும் நீங்களும் வழங்கும் அருங்கொடை இப்புதையல்கள்...
ஓரம் சரியாக ஸ்கேன் செய்ய இயலாமைக்கெல்லாம் மன்னிக்க வேண்டுவது தகுமா?
அரும்பணியைச் செவ்வனே தொடர்ந்து முடிக்க என் வாழ்த்தும் ஊக்கமும்..
மனிதனும் மிருகமும் தகவல்கள் சொல்லொணா நல்லுணர்வு தருகின்றன..
நம்மவரின் ஆரம்பகாலம் தற்போது கண்முன் விரிவதுபோல்...
-
வனஜா அவர்களே,
கருங்குயில் பூங்குன்றத்துக் கொலை ( மரகதம் படத்தின் மூலநாவல்) படப்பாடல் மூலம் என் காலைப்பொழுதை இனிமையாக்கினீர்கள்.. நன்றி..
ஒரு சூரியன்..
பல மலர்கள் அவனால் மலர்ந்தாலும்
தாமரைக்கும் சூரியகாந்திக்கும் காவிய அந்தஸ்து அவ்வுறவால்..
பத்மினி தாமரைதான்..
சூரியகாந்தி யாராம்?
வாணிஶ்ரீ?தேவிகா? ஜமுனா? சரோஜாதேவி?
-
நடிகர் திலகத்தின் வித்தியாசமான மிகச் சிறந்த நடிப்பில் உருவான பாடல்கள் (தொடர்ச்சி...)
7. "எல்லோரும் கொண்டாடுவோம்" படம்:- பாவ மன்னிப்பு (1961); பாடியவர்கள்:- டி.எம்.சௌந்தரராஜன், நாகூர் ஹனீபா மற்றும் குழுவினர்; பாடல் ஆசிரியர்:- கவியரசு கண்ணதாசன்; இசை:- மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி; இயக்கம்:- ஏ.பீம்சிங்; நடிப்பு:- நடிகர் திலகம் சிவாஜி கணேசன்/சித்தூர் நாகையா மற்றும் குழுவினர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு, என்னுடைய பாடல் ஆய்வினைத் தொடர சந்தர்ப்பம் அளித்த இறைவனுக்கு முதற்கண் நன்றி.
இந்தத் தொடர் நடிகர் திலகத்தின் புதிய வித்தியாசமான முன்னோடி முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை மறுபடியும் குறிப்பிடுகிறேன்.
சுற்றிப் பின்னப்பட்ட சதி வலையால், குழந்தையாய் இருக்கும்போது, ஒரு இஸ்லாமியப் பெரியவரிடம் வளர்ந்து வரும் ரஹீம் (நடிகர் திலகம்) வரும் அறிமுகக் காட்சி. ஒரு பாடலோடு நடிகர் திலகம் அறிமுகமாகும் இந்தக் காட்சியை ஒவ்வொரு முறை இந்தப் படத்தைப் பார்க்கும் போதும் தவற விட்டதில்லை. அந்த முதல் காட்சியிலேயே, ஒரு இஸ்லாமிய சகோதரர் எப்படி இருப்பார் என்ற இலக்கணத்தையும், ரசிகனின் கற்பனை மற்றும் எதிர்பார்ப்பினையும் நூறு சதவீதம் பூர்த்தி செய்திருப்பார். ஆக, தோற்றத்தின் மூலம் அந்தக் கதாபாத்திரத்துக்குள் முதலில் முழுமையாக நுழைந்து, பார்க்கும் ஒவ்வொருவரையும் அவருள் நுழைத்துக் கொண்டு விடும் (வழக்கம் போல்) நடிகர் திலகம், கையில் உள்ள மேளத்தை இலாகவமாகவும் தேர்ந்த கலைஞரைப் போலும் சர்வ சாதாரணமாக அதே நேரத்தில், உயிர்ப்புடனும் தட்டிக் கொண்டு துவங்கும் அழகு!
இந்தப் பாடலில் பொதிந்துள்ள அழகு வேறெந்தக் கலைஞருக்கும் கிட்டாதது.
இந்தப் பாடல் மற்றப் பாடல்களைப் போல வாயசைப்பு மற்றும் அதற்கேற்ற பாவனைகள் இல்லாமல், இசைக் கருவியையும் சேர்த்து இயக்கிக் கொண்டே பாட வேண்டிய கட்டாயம் கொண்ட பாடல்.
முதலில் வாயசைப்பு:-
“எல்லோரும் கொண்டாடுவோம்” என்று துவங்கி "அல்லாவின் பெயரைச் சொல்லி" எனும் போது கோரஸோடு பாடும் போது, சாதாரணமாக இருக்கும் அவரது வாயசைப்பு, க்ளோசப்பில், அவரை மட்டும் காண்பிக்கும் போது, தனியாக அவர் மட்டும் "அல்லாவின் பெயரைச்சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி" என்று முடிக்கும் போது மட்டும் இலேசாக வாயசைப்பில் ஒரு அழுத்தம் பெறும். அந்த இடத்தில் அழுத்தம், பாடியவர் கொடுத்ததால், அந்த வரிகளுக்குத் தேவைப் படுவதால். அதுவும் மிகச் சரியாக க்ளோசப்பில் அவரது முகம் வரும் போது இது இன்னும் கூடுதல் கவனம் பெறுகிறது. அதனால், அந்த வரிகளுக்கே ஒரு வசீகரம் வருகிறது. இப்போது முதல் சரணம், "கல்லாகப் படுத்திருந்து களித்தவர் யாருமில்லே... என்று கூறி “கல்லாகப் படுத்திருந்து” என்று அவர் நிறுத்த, "களித்தவர் யாருமில்லே" என்று கூட்டத்தில் ஒருவர் (நகைச்சுவை நடிகர் மற்றும் எழுத்தாளர் ஏ.வீரப்பன் அவர்கள்) சத்தமாக முடிப்பார். இப்படிப் போய் "இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்" என்று முடியும் போது, இந்த முதல் சரணத்தில் மட்டும் ஒரு நார்மலான வாயசைப்பு இருக்கும். இரண்டாவது சரணம். தொகையறாவில் தொடங்கும். "நூறு வகை பறவை வரும்... ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா ஆ..ஆ..ஆ" என்று முடிக்கும் போது ஒரு தேர்ந்த பாடகனுக்குரிய வாயசைப்பு. "முதலுக்கு தந்தை என்போம் முடிவுக்கு அன்னை என்போம்" எனும்போது அழுத்தம் தரும் வாயசைப்பு. மூன்றாவது சரணம். மறுபடியும் தொகையறாவில் தொடங்கும். "ஆடையின்றிப் பிறந்தோமே...ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ ஒ..ஒ..ஒ.." என்று மறுபடியும் தேர்ந்த பாடகருக்குரிய வாயசைப்பு. "எடுத்தவன் கொடுக்க வைப்போம் கொடுத்தவன் எடுக்க வைப்போம்" என்று முடிக்கும் போது அழுத்தம் கொடுக்கும் வாயசைப்பு.
அடுத்தது, முக பாவம்:-
பாடல் துவங்கும் போது, "எல்லோரும் கொண்டாடுவோம்" என்று கூட்டமாகச் சேர்ந்து வரும் போது தெரியும், ஒரு இலேசான குதூகலம். அப்படியே மேளத்தை இசைத்துக் கொண்டே, பாடிக் கொண்டே, தந்தையாரை பார்த்து பாவத்திலேயே acknowledge செய்யும் அழகு. முதல் சரணத்தில் அந்த வரிகளின் பொதுவான கருத்துகளுக்கேற்ப சாதாரணமான (normal) பாவம். “வந்ததை வரவில் வைப்போம் செய்ததை செலவில் வைப்போம்” எனும் போது கொடுக்கும் அழுத்தம். இரண்டாவது சரணம் – “நூறு வகை பறவை வரும்……… ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா" என்ற தொகையறாவில் கொடுக்கும் ஒரு விதமான தெய்வீக பாவம். மூன்றாவது சரணம். "ஆடையின்றிப் பிறந்தோமே" என்று துவங்கி, "ஆடி முடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ" எனும் தொகையறாவில் இலேசாக கண் கலங்கி கண்களில் கண்ணீரைத் தேக்கி வைத்துக் கொண்டே பாடும் போது, பார்க்கும், ஏன் பாடல் இயற்றியவனே கண் கலங்கியிருப்பானே! உடனே, “எடுத்தவன் கொடுக்க வைப்போம் கொடுத்தவன் எடுக்க வைப்போம்” எனும் போது சுதாரித்துக் கொண்டு, அந்த வரிகளுக்குத் தேவைப்படும் அந்த அழுத்தம் கலந்த சூளுரையைக் காண்பிக்கும் விதம்!
இப்போது, மேளம் தட்டும் அழகு.
பாடல் துவங்கி மேளம் அடிக்கத் துவங்கியவுடன், அவரது கைகள் மேளத்தில் நர்த்தனம் ஆடும் அழகு; லயம். அப்படியே போய், அந்தத் தாளம் முடிந்து, நாகைய்யாவைப் பார்த்துக் கொண்டே, அவரை acknowledge செய்து கொண்டே, தாளம் அழுத்தமாக முடியும் போது, அதே அழுத்தத்தைக் காட்டி முடித்து, "எல்லோரும் கொண்டாடுவோம்" என்று துவங்கும் அழகு. முதல் சரணம் துவங்குவதற்கு முன் வரும் இசை மற்றும் தாள கதிக்கேற்ப இவர் மேளத்தைத் தட்டி கொண்டே இருப்பார். இசையும் தாளமும் முடிந்து முதல் சரணம் துவங்கும் போது, மேளத்திலிருந்து கையை எடுத்து, "கல்லாகப் படுத்திருந்து" என்று துவங்கும் போது, சரியாக மறுபடியும் தாளத்துடன் பாடி/தட்டிக் கொண்டே துவங்குவார். பாடிக் கொண்டே, "இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்" என்று ஒவ்வொரு வார்த்தையின் அழுத்தமான தாளத்துடன் ஒன்றி மேளத்தை அழுத்தமாக அதே தாள கதியில் அடித்து/ பாடிக் கொண்டே முடித்து, மறுபடியும் அனு பல்லவி வேறொரு தாளத்தில் வலுவாகத் துவங்கும் போது, உடனே, அந்த தாள அழுத்தத்தை மேளத்தில் தட்டித் துவங்குவார். இந்த கையசைப்பை, ஒவ்வொரு முறை சரணம் முடிந்து அனு பல்லவி துவங்கும் போதும், சரியாகச் செய்திருப்பார். பாடல் நிறைவடையும் போது, கொஞ்சம் கொஞ்சமாக அந்தத் தாளம் அந்த வலுவைக் குறைத்துக் குறைத்து முடியும் அழகை, தன்னுடைய விரல்களில் மிகச் சரியாகக் காட்டிக் கொண்டே முடிப்பார்.
ஆக, ஒரு பாடலுக்கு ஒரு மிகச் சிறந்த நடிகன் காட்டும், இரண்டு பாவங்களையும் - அதாவது, வாயசைப்பு, பாடும் வரிகளுக்கேற்ப பாவத்தை முகத்தில் காண்பிப்பது. இவற்றைக்காட்டியாகி விட்டது. எப்பேர்ப்பட்ட நடிகனும் இரண்டு விஷயங்களைக் கஷ்டப்பட்டு செய்து விடுவான். ஆனால், மூன்றாவதாக, ஒரு கருவியை இசைத்துக் கொண்டே வாயசைப்பையும், வார்த்தைகளுக்கேற்ற பாவங்களையும் சுருதி கொஞ்சமும் பிசகாமல் செய்வது பிரம்ம பிரயத்தனம். இது கூட உலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய மிக மிகச் சிலரால் முடியும்.
ஆனால், மேற்கூறியவை மட்டுமல்லாமல் பாடல் நெடுக, நடிகர் திலகம் அவரது பிரத்தியேக ஸ்டைலில் தலையை ஒருவாறு மிதமாக ஆட்டிக் கொண்டே பாடுவதும், அவ்வப்போது தந்தையாரையையும் மற்றவரையும் acknowledge செய்யும் விதமும்! எப்படி இந்த மனிதர் ஒரே நேரத்தில், இத்தனை விஷயங்களை, ஒன்றோடொன்று அழகாக இணைத்து, காட்சியையும், பாடலையும், வேறொரு உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றார் என்பது இன்று வரை புரியாத புதிராகத் தான் இருக்கிறது.
இந்தப் பாடல் மற்றும் நடிகர் திலகத்தின் பல பாடல்கள் மற்றும் படங்கள்/காட்சிகளைப் பார்க்கும் போதெல்லாம் பல வருடங்களுக்கு முன்னர் திரு முக்தா சீனிவாசன் அவர்கள் கூறியது நினைவுக்கு வருகிறது. "சதை படர்ந்த அந்த முகத்தில் ஒவ்வொரு அணுவும் நடிக்கும், முகம் நடிக்கும்; முகத்தில் உள்ள முடியும் நடிக்கும்".
ஒரு படத்தில், பாடலில், எத்தனையோ நடிகர்கள் இசைக்கருவிகளை வாசித்துக் கொண்டே நடித்திருக்கிறார்கள். நான் மேற்கூறிய முதல் மூன்று பாவங்கள் - வாயசைப்பு, வார்த்தைகளின் அர்த்தங்களுக்கேற்ற பாவம், மற்றும் இசைக்கருவியையும் கூடவே பிசிறில்லாமல் வாசிக்க வேண்டிய கட்டாயம். இவைகளை கோர்வையாக, மிகச் சரியாக செய்தது மட்டுமல்லாமல், கூடவே ஒரு வித ஸ்டைலையும், சுற்றி இருப்பவர்களை கவனித்தல்/மற்றும் acknowledge செய்தல், இவைகளையும் கோர்வையாகச் செய்து, இந்தப் பாடலைக் காட்சிப்படுத்திய வகையில், இந்தப்பாடல் முன்னோடி மட்டுமல்ல. இனி வேறொருவரால் வெற்றிகரமாக செய்வதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாகிறது.
இந்தப் பாடலின் வெற்றிக்கு அரும்பாடுபட்ட அத்தனை கலைஞர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஒரு கோரஸ் பாடலில், கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் சரியாகப் பங்களித்து பாடலை மேலும் ரசிக்கும்படி செய்திருப்பார்கள். இந்தப் பாடலில் தான் படத்தில் வரும் பிரதான பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுவார்கள் (ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் தேவிகா).
தொடரும்,
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
எல்லோரும் கொண்டாடும் இமயத்தின் இணையற்ற பாடலை எல்லோரும் கொண்டாடும் படி எழுதிய சாரதி சார் .. பாராட்டுக்கள். சரியான நேரத்தில் சரியான பாடல். எல்லாக் கலைஞர்களுக்கும் முன் உதாரணமாய் விளங்கும் நடிகர் திலகத்தின் நடிப்பு இன்று வரை எல்லோரும் கொண்டாடும் படி இருப்பதே சான்று. வாழ்க்கையின் எந்த சூழ்நிலைக்கும் அவர் படத்தில் விடை உள்ளது. உதாரணத்திற்கு தேவர் மகன். இன்று எப்படி பொருந்துகிறது.
பாவ மன்னிப்பு படத்தை மனதில் நினைத்து திரைக்கதை அமைப்பதே மத நல்லிணக்கத்திற்கு சிறந்த வழிகாட்டியாக அமையும். இப்பாடல் இன்றைய சூழலுக்கு எவ்வளவு பொருத்தமாய் உள்ளது.
பாராட்டுக்கள் சாரதி சார்.. மீண்டும் ...
-
டியர் சாரதி சார்
இன்றைய சூழலுக்கு மிக பொருத்தமான பாடல், மிக நுணுக்கமாக ஆய்வு செய்துள்ளீர்கள், நன்றி!
-
என் விருப்பம் My Choice
http://youtu.be/jJtEEZ_g6Tk
மரகதம் அல்லது கருங்குயில் குன்றத்துக் கொலை ... எஸ்.எம்.சுப்ய்யா நாயுடு அவர்களின் பிரபலமான படங்களில் ஒன்று. பாடல்கள் ஒவ்வொன்றும் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவை. சகோதரி வனஜா அவர்கள் மிகச் சிறந்த பாடலைப் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். நடிகர் திலகம் பத்மினி இணையாய் நடித்து இலக்கிய மணம் வீசும் காதல் காட்சி நிறைந்த படங்களில் ஒன்று. கண்ணுக்குள்ளே உன்னைப் பாரு பாடல் ஒரு சிறப்பு என்றால் இப்போது நாம் காண உள்ள இப்பாடல் மேலும் சிறப்பு வாய்ந்தது. நெடுந்தகட்டில் இப்பாடல் இடம் பெறவில்லை என எண்ணுகிறேன். இப்பாடல் கிராமபோன் இசைத் தட்டில் இருபக்கமும் ஒலிக்கும். படத்தில் மேலும் அதிக நேரம் இடம் பெறும். காரணம், இடையிடையே நடிகர் திலகமும் பத்மினியும் பேசும் காதல் வசனங்களும் சேரும். ஆனால் இப்போது இணையத்தில் தரவேற்றப் பட்டுள்ள காணொளியில் வசனங்கள் இடம் பெறவில்லை. என்றாலும் அதற்கு வேலையின்றி இருவரும் விழிகளாலேயே பேசும் அழகைக் காணுங்களேன்.
எனதுள்ளம் இன்றல்லவோ தனியே
இன்புற்று அலைகின்றதே...
கனவில் நடப்பதைப் போல் காண்பதெல்லாம்
கணத்தில் மறையுதடி...
பாடலாசிரியர் கவியோகி சுத்தானந்த பாரதி என எண்ணுகிறேன்.
இப்பாடலில் டி.எம்.எஸ். அவர்களும் ராதா ஜெயலட்சுமி அவர்களும் தங்கள் குரல்களில் உண்மையிலேயே தேனைத் தடவியது போல் அவ்வளவு இனிமையினைத் தந்துள்ளனர்.
பார்க்கப் பார்க்க தெவிட்டாத தெள்ளமுதை
பருக ...
இந்த வரிகளில் நடிகர் திலகத்தின் விழிகளை கவனியுங்கள். அதே போல் ஓவியத்தையும் பார்த்துக் கொண்டு ஓரக் கண்ணால் காதலியையும் பார்த்து குறும்புடன் அவர் காட்டும் காதல் சுவை ...
பாருங்கள் ... கேளுங்கள் ...
-
ஒரு சின்ன புதிர் ...
தெய்வப் பிறவி படத்திற்கு முதலில் வைத்த பெயர் என்ன...
-
ஒரு க்ளூ வேண்டுமானால் .... இதோ...
அந்தப் பெயர், மூன்று வார்த்தைகள் கொண்ட நடிகர் திலகத்தின் ஒரு படத்தின் பெயரில் முதல் சொல்லாக அமைந்திருக்கும்.
-
Rare Info அபூர்வ தகவல்கள்
கௌரவம் -
ஒவ்வொரு சிவாஜி ரசிகர் நெஞ்சிலும் ஆழப் பதிந்து விட்ட இக் காவியம் வியட்நாம் வீடு சுந்தரம் எழுதி யூ.ஏ.ஏ.வின் நாடகக் குழுவால் கண்ணன் வந்தான் என்ற பெயரில் மேடை நாடகமாகப் புகழ் பெற்றது பலருக்கும் தெரிந்திருக்கும். இது படமாக்கத் திட்டமிட்டு பூஜை போட்டது என்று தெரியுமோ...?
1971ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி காலை சுமார் 7.30 மணி.