Originally Posted by
N.V.Raghavan
இன்று பகல் 12.) மணிக்கு சன் தொலைக்காட்சியில் ந்டிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த மாபெரும் வெற்றிப் படமான " தில்லானா மோகனாம்பாள் " திரைக் காவியம் திரையிடப்பட்டது. பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இப்படத்தை பார்க்கும் வாய்ப்பு இன்று கிடத்தது.
என்ன ஒரு அற்புதமான திரைக்காவியம். திரு.கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் தொடர்கதையாக ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய பொழுதே பலரின் பாராட்டுதலைப் பெற்ற இக் கதையை படமாக எடுக்க ஏ.பி.நாகராஜன் முடிவு செய்து சிவாஜியை அனுகிய பொழுது அவர் மிகவும் உற்சாகமாக இப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
மிகவும் சாதாரண நிலையில் இருந்த ஏ.பி.என். அவர்களை ஒரு பெரும் படாதிபதியாக்கியது நடிகர் திலகம் அவர்கள் தான். எத்தனை வரிசையான வெற்றிப் படங்கள் - நவராத்திரி, திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட் செல்வர், திருமால் பெருமை.இப்படி பல வெற்றிப் படங்களின் வரிசையில் அமைந்ததுதான் தில்லானா மோகனாம்பாள். ஆனால் தன்னை பெரும் தயாரிப்பாளராக்கி அழகு பார்த்த வெள்ளை உள்ளம் கொண்ட ஒரு நல்லவருக்கு துரோகம் இழைத்துவிட்டு மாற்று முகாமுக்குச் சென்ற ஏ.பி.என். அந்த மாற்று நடிகரை வைத்து எடுத்த ஒரே ஒரு படத்திலேயே தான் இத்தனைக் காலம் சம்பாதித்து வைத்திருந்த செல்வத்தையும், நற்பெயரையும் இழந்து ந்டுத்தெருவுக்கு வந்தது வேறு கதை.
. இன்று என் நினைவுகள் இப்படத்தையே சுழன்றன என்றால் அது மிகையில்லை. ஆம். என் இளமைக் காலங்களில் எப்பொழுதும் நடிகர் திலகத்தின் படங்களை முதல் நாளன்றே பார்த்துவிடும் நான் இப்படத்தை சென்னை மிண்ட் அருகில் உள்ள கிரௌன் திரைஅரங்கத்தில் முதல் நாள் இரவுக் காட்சியில் கண்டு ரசித்தேன். அதன் பிறகு பல முறை சென்னை சாந்தி மற்றும் கிரௌன் திரையரங்குகளில் மாறி மாறி பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். சிவாஜியின் படங்களைப் பொருத்தவரையில் சாந்தி அரங்கில் பார்த்தால்தான் எங்களைப் போன்ற சிவாஜி ரசிகர்களுக்கு மிகவும் இன்பமாக இருக்கும்.
நடிகர் திலகத்தின் மிக இயல்பான நடிப்பில் வந்த பல படங்களுள் இப்படம் ஒரு மைல் கல். அது மட்டுமின்றி இப்படத்தில் நடிகர் திலகத்துடன் நடித்த பல அற்புதமான கலைஞர்களின் அணி. பத்மினி, பாலையா, நாகேஷ், சாரங்கபாணி, தங்கவேலு, டி.ஆர்.ராமச்சந்திரன், கருணாநிதி, மனோரமா,ஏவிஎம்.ராஜன் இப்படி பலர். சிவாஜி என்றுமே திறமையான நடிகர்களுடன் நடிப்பதைத்தான் விரும்புவார். அப்பொழுதுதான் அவரின் நடிப்பின் சிறப்பு பரிமளிப்பதுடன் படமும் பெரும் வரவேற்பு பெரும் என்பதில் நம்பிக்கை உடையவர். மேலும் தன்னுடன் நடிக்கும் நடிகர் சில காட்சிகளில் இவரை விடவும் சிறப்பாக நடித்து பேர் வாங்கிவிட்டால் அதனைக் கண்டு பொறாமைப்பட்டு அந்த நடிகர் அல்லது நடிகையின் அக்காட்சியை நீக்க சொல்லமாட்டார். ஏனென்றால் அவரது திறமையின் மேல் அவருக்கு எப்பொழுதுமே நம்பிக்கை உண்டு.
இதற்கு உதாரணமாக நடிகர் அசோகனுடன் நடித்த உயர்ந்த மனிதன், வாணிஸ்ரீயுடன் நடித்த குலமா குணமா, எம்.ஆர்.ராதாவுடன் நடித்த பாவ மன்னிப்பு, நாகேஷுடன் நடித்த திருவிளையாடல், பத்மினியுடன் நடித்த வியட்னாம் வீடு என்று இப்படி பல படங்கள்.
இப்படிப்பட்ட ஒரு மஹா கலைஞன் மீண்டும் ஒரு முறை பிறந்து நம் எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.