https://scontent.fybz1-1.fna.fbcdn.n...81&oe=59E272D5
Printable View
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...f0&oe=59D564F7
Sekar Parasuram ·
ஆட்சி அதிகாரம் கொண்டு நடிகர்திலகத்தின் அறிய பல சாதனைகளையும் சமுதாய தொண்டினையும் எப்படித்தான் மறைத்தாலுமே உண்மைகள் ஏதோ ஒரு வடிவத்தில் மீண்டும் மீண்டும் ... வந்துக் கொண்டேதான் இருக்கும்,
நடிகர்திலகத்தை தவிர்த்து விட்டு எந்த தலைவர்களின் (20 ஆம் நூற்றாண்டு) வரலாற்றையும் அவ்வளவு எளிதாக எழுதிவிட முடியாத ஒன்று
Vasu Devan
· 5 hrs
என் கிராமம்... என் மக்கள்.
ராமாபுரம் என்ற ஊரில்தான் அப்பா ஆசிரியராக இருந்தார். அந்த ஊரின் சிறப்பம்சமே அது தலைவரது கோட்டைஎன்பதுதான். சிறிய ஊர்தான். ஒரு இருநூறு வீடுகள் இருக்கும். நான் எனது தாத்தா வீட்டில் தங்கி கடலூர் துறைமுகத்தில் படித்துக் கொண்டிருந்தேன். வாராவாரம் லீவுக்கு அம்மாவைப் பார்க்க வந்து விடுவேன். அப்புறம் தலைவர் படங்களின் ரிலீசின் போது ஊருக்கு வந்து விடுவேன். அப்பா கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் அந்த ஊரில் பணி புரிந்தார். ஐந்தாம் வகுப்பு வரை உள்ள elementary school. பின் எட்டாவது வரை விரிவு படுத்தப்பட்டு அப்போதைய கல்வி மந்திரி கக்கனை அழைத்து வந்து அப்பா அந்த ஸ்கூலை திறந்தார்கள். அம்மாவோ தீவிர வெறி கொண்ட சிவாஜி ரசிகை. தலைவர் என்றால் உயிர். நான் சொல்வது அறுபத்தைந்துகளின் கால கட்டத்தில். ராமாபுரம் ஒரு குக்கிராமம். மலைப்பாங்கான பகுதி. ஆனால் மண்வளம் நீர்வளம் அதிகம். புன்செய் சாகுபடிதான். கடலை என்னும் மணிலாக் கொட்டை, வாழை, கரும்பு, கம்பு பயிர்களை எங்கும் காணலாம். மலைப்பகுதி ஆதலால் சிலு சிலுவென்று இயற்கைக் காற்று நம்மைத் தீண்டியபடியே தவழும். ஒரே ஒரு டீக்கடை. அங்கே கம்பீரமான நம் 'வீர பாண்டியக் கட்டபொம்மன்' காலண்டரில் காட்சி தருவார்.
அம்மா மேல் அனைவருக்கும் ரொம்ப பிரியம். 'வாத்தியார் வீட்டு அம்மா' என்றுதான் அம்மாவை அனைவரும் அன்போடு அழைப்பார்கள். ஊரில் எந்தக் கல்யாணம் காட்சி நடந்தாலும் அம்மாதான் தாலி எடுத்துக் கொடுப்பார்கள். அவ்வளவு மரியாதை செய்வார்கள். அந்தந்த பயிர்களின் அறுவடைகளின் போது ஒருவர் விடாமல் அனைவரும் தங்களால் முடிந்த தானியங்களை, காய்கறிகளை, முந்திரிகளை அம்மாவிடம் கொடுத்து விட்டு போவார்கள்.அம்மா ஸ்கூலில் படிக்கும் பிள்ளைகளுக்கு இலவசமாக டியூஷன் எடுப்பார்கள். அதனால் அத்தனை பிள்ளைகளும் எங்கள் வீட்டிலேயேதான் கிடப்பார்கள். அனைத்து உதவிகளையும் செய்வார்கள். வீடு என்றால் கான்கிரீட் வீடு அல்ல. பனை ஓலைகளால் வேயப்பட்ட செம்மண் சுவர் கொண்ட குடிசைதான். தண்ணீர் எடுக்க மோட்டார் கொட்டகைக்குதான் போகவேண்டும். அங்கேயே குளித்துவிட்டு, துணிமணியெல்லாம் துவைத்துவிட்டு மண்பானையில் தண்ணீர் கொண்டு வருவோம். மோட்டார் கொட்டகையில் மோட்டார் இறைக்க வில்லை என்றால் தரைக் கிணறுதான். ராட்டினமெல்லாம் நீர் இறைக்கக் கிடையாது. தரையிலிருந்து நானூறு அடிகளுக்கு கீழேதான் தண்ணீர் இருக்கும். தண்ணீரே கண்ணுக்குத் தெரியாது. அப்படியே செப்புக் குடங்களின் கழுத்தில் கயிற்றின் சுருக்கை மாட்டி அப்படியே கைகளால் கீழே இறக்க வேண்டியதுதான். செப்புக் குடம் தண்ணீரைத் தொடுவதை உணர்வுகளால் புரிந்து கொண்டு அப்படி இப்படி அலசி தண்ணீரை மொள்ள வேண்டியதுதான். பல தடைகளைத் தாண்டி குடம் மேலே வரும் போது கால்வாசிக் குடத்தை மட்டுமே தண்ணீர் ஆக்கிரமித்து இருக்கும்.
அப்போதெல்லாம் மோட்டார் கொட்டகையில் மோட்டாரை ஸ்டார்ட் செய்ய தண்ணீரில் சாணத்தைக் கரைத்து மோட்டார் பைப்பின் வாயின் வழியே ஊற்றி பின் மோட்டாரை ஸ்டார்ட் செய்வார்கள். பின் தண்ணீர் வந்து அந்த அழுக்கெல்லாம் கிளியர் ஆனவுடன் ஒரே குதியும் கும்மாளமும்தான். முந்திரி விளைச்சலும் நிறைய. வாரம் ஒருமுறை சீசனின் போது கட்டுசாதம் கட்டிக்கொண்டு (புளியோதரையும், தளதள தயிர் சாதமும் மாவடுவும், நார்த்தங்காய் ஊறுகாயும்... கேக்கணுமா!) மோட்டார் கொட்டகை சென்று குளித்துவிட்டு அப்பா, அம்மா, நான் மற்றும் ஸ்கூல் பிள்ளைகள் ஸ்கூல் பிள்ளைகள் என்றால் சாதரணமாக எண்ணிவிட வேண்டாம். எட்டாவது படிக்கும் பிள்ளைகள் நல்ல ஆஜானுபாகுவாக, கிராமத்துக்கே உரிய வாட்டசாட்டமாக இருப்பார்கள். அனைவரும் கீழே ஜமுக்காளம் விரித்து நடிகர் திலகத்தைப் பற்றி பேச ஆரம்பித்தால்.... அதற்குள் சில மாணவர்கள் தங்கள் தோப்பில் இருந்து பச்சை முந்தரிகொட்டை பறித்து வந்து தரையில் போட்டு காய்ந்த பனைமட்டை ஒலைகளை கொளுத்தியபடி கையில் வைத்துக் கொண்டு அந்த முந்திரிக்கொட்டைகளை மேலும் கீழும் பிரட்டி சுட்டு எடுத்து, கொட்டைகளை உடைத்து முந்திரிப்பருப்புகளை சாப்பிடத் தருவார்கள் டேஸ்ட் என்றால் அப்படி ஒரு டேஸ்ட் . சில வானரங்கள் பரந்து வளர்ந்து கிடக்கும் பனை மரங்களின் மேல் ஏறி நுங்குகளை நூற்றுக்கணக்கில் வெட்டிப் போடும். சில நண்பர்கள் லாவகமாக நுங்குகளின் தலைகளை சீவி முக்கண்ணன் முகம் போல அவ்வளவு அழகாகத் தருவார்கள். மூன்று கண்களிலும் ஆட்காட்டி விரலை மட்டும் நுழைத்து நோண்டி நோண்டி உர்ர்... உர்ர்...என நுங்கை உறிஞ்சி சுவைத்துச் சாப்பிட தவம் இருந்திருக்க வேண்டும். வேறு சில மாணவர்கள் ஈச்ச மரத்திலிருந்து கன்னங்கரேன்ற ஈச்சம் பழங்களை பனை ஓலைககளை பொட்டலம் போல மடித்து அதில் fresh ஆகக் கொண்டுவருவார்கள். அதன் சுவை இன்னும் அலாதி. இளநீர்கள் அவ்வளவு இனிப்பாக இருக்கும். கடலை செடிகளை அப்படியே வேருடன் பிடுங்கி வந்து அதை வேறு சுட்டுத் தின்னுவோம். காலை பத்து மணிக்கு உட்கார்ந்ததும் தீனி வேட்டைதான்.
மோட்டார் கொட்டகைக்கு அருகிலேயே அத்திமரம் ஒன்று உண்டு. கிளி மூக்கு போல சிவந்த அத்திப்பழங்கள் அடுக்கடுக்காய் தொங்கும். அவற்றையும் பறித்துப் பதம் பார்ப்போம். (ஆனால் புழு அதிகம் இருக்க வாய்ப்புண்டு. ஜாக்கிரதையாக சாப்பிட வேண்டும்)
மணி இரண்டிற்கு சோற்றுக் கட்டை பிரித்து விலாசுவோம். சாப்பாடு எங்களுடையது. மாணவர்கள் பிடிவைத்த பித்தளைக் குவளையில் அருமையான கேப்பங்கூழையும், (கேப்பங்க்கூழ் உடலுக்குக் குளிர்ச்சி) கம்பங்கூழையும் (கம்பங்கூழ் சூடு) கொண்டு வருவார்கள். கடிச்சிக்க பச்சை மிளகாய் அல்லது ஊறுகாய் மிளகாய். சிலர் கத்தரிக்காய் போட்டு முதல்நாள் வைத்த கருவாட்டுக் குழம்பைக் கொண்டு வருவார்கள். அந்தக் குழம்பை கெட்டியான கேப்பங்கூழில் பிசைந்து சாப்பிட்டால்... ஆஹாஹா... சொர்க்கம் எங்கடா இருக்குமன்னு ஒருத்தன் கேட்டானாம் ..கருவாட்டுக் குழம்பில் என்று இன்னொருவன் சொன்னானாம்.
பேச்சு எதைப் பற்றியும் இருக்காது. தலைவரின் படங்களைப் பற்றிதான் பேச்சு. அப்பா டவுன் சென்றால் பொம்மை, பேசும்படம் இதழ்களை கட்டாயம் அம்மாவிற்கு வாங்கி வர வேண்டும். அம்மா அதைப் படித்து எல்லோருக்கும் தலைவரைப் பற்றி சொல்வார்கள். தலைவர் பற்றிய விவர ஆவணங்களை தனியே பிரித்து வைத்து விடுவார்கள். (அதில் அழிந்தது போக மீதி உள்ளதைத்தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்) தலைவரைப் பற்றிய அனைத்து விஷயங்களும் அம்மாவுக்கு அத்துப்படி. அடுத்த படம் என்ன... எப்போது ரிலீஸ் என்று அனைத்து மாணவர்களும் பிய்த்துப் பிடுங்கி விடுவார்கள்.
ராமாபுரத்தில் ஒவ்வொரு குடிசையிலின் நுழைவாயிலிலும் தலைவர் படங்கள் பிரேம் போட்டு மாட்டியிருக்கும். முக்கியமாக பாடம் செய்யப்பட்ட புலியுடன் தலைவர் படு இளமையாய், இயற்கையான அழகுடன், கனகச்சித பேண்ட் ஷர்ட்டுடன் நிற்கும் அந்த உலகப் புகழ் பெற்ற ஸ்டில்லை அதிகமாகக் காணலாம். இன்றும் கூடக் காணலாம். அதற்குக் கீழேயே மண்பாண்டத்தில் கூழ் வைத்திருப்பார்கள். வெறி என்றால் இந்த வெறி அந்த வெறி கிடையாது... கண்மூடித்தனமான பக்தி. அத்தனை பேருக்கும் நான் செல்லக் குழந்தை. என் கால் தரையிலேயே படாது. நான் சிறுவன் என்பதால் யாராவது ஒருவர் தூக்கி வைத்துக் கொண்டேதான் இருப்பார்கள். 'குட்டி சிவாஜி' என்று செல்லப் பெயர் வேறு.
ராமமூர்த்தி அண்ணன் வீட்டில் அவருக்கு தனிரூம். president இன் பிள்ளை. பெரிய கை. ஊரிலேயே பெரிய ஓட்டு வீடு. அந்த ரூமில் பார்த்தால் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். சுவரின் ஒரு இன்ச் கூட தெரியாத அளவிற்கு நூற்றுக் கணக்கில் தலைவரின் காலண்டர்கள் தொங்கும். வித விதமான காலண்டர்கள். ராமன் எத்தனை ராமனடி, எங்கிருந்தோ வந்தாள், சொர்க்கம், பாதுகாப்பு, இரு துருவம், தங்கைக்காக, அருணோதயம், குலமா குணமா, பிராப்தம், சுமதி என் சுந்தரி, சவாலே சமாளி, தேனும் பாலும், மூன்று தெய்வங்கள் என்று வித வித போஸ்களில் தலைவர் ஜொலித்தது இன்னும் பசுமையாக என் நினைவில் நிற்கிறது.
நான் முன்னமே குறிப்பிட்டது போல கடலூரில் நடந்த 'பாதுகாப்பு' பட ஷூட்டிங்கில் தலைவரை நேரிடையாக ஒட்டுமொத்த கிராமத்து மக்களும் கண்டு களிக்க, எரியும் நெருப்பில் பெட் ரோலை ஊற்றியது போல 'பாதுகாப்பு' ஷூட்டிங் ராமாபுரத்து மனிதர்களை மேலும் தலைவர் வெறியர்கள் ஆக்கியது. 'பாதுகாப்பு' எங்கள் கிராமத்தையே புரட்டிப் போட்டு விட்டது.
தங்கவேலு, ராசு, சுந்தர மூர்த்தி, பழனிவேலு, சின்னத்தம்பி, முனியன், கோவிந்தராசு, வீரப்பன், கோதண்டபாணி, சர்க்கரை, திருநாவுக்கரசு, ராமமூர்த்தி என்று பக்தர்கள் பட்டியல் அதுபாட்டுக்கு நீண்டு கொண்டே போகும்.
எங்கள் குடிசைக்குப் பின்னால் ஒரு பெட்டிக்கடை கம் ரிக்கார்டுகள் போடும் கடை. ஊரில் கல்யாணம், சுப நிகழ்சிகள் அனைத்திற்கும் அந்தக் கடையிலிருந்துதான் இசைத்தட்டுகள், ஆம்பிளிபயர்கள், புனல் ஒலிபெருக்கிகள் போகும். கடைக்காரர் எங்களுக்கு ரொம்ப தோஸ்த். தலைவர் தான் அவருக்கு தெய்வம். கடலூர் சென்று புதுப்படங்களின் ரிக்கார்டுகளை வாங்கி வருவார். அதைப் பார்க்க நீ... நான் என்று போட்டி. ஏனென்றால் இசைத்தட்டுகளின் கவர்களை அலங்கரிக்கும் நடிகர் திலகத்தின் மதிவதன முகத்தைக் கண்டு ரசிப்பதற்காக. கடைக்காரர் ரிக்கார்டுகள் வாங்கி வந்த உடனேயே ஒலிபெருக்கி வாயிலாக ஒலிக்கச் செய்து விடுவார். அவருக்கு அதில் நிரம்பப் பெருமை. ரெண்டாவது ஊர் முழுக்க அந்தப் பாடலைக் கேட்டு விடலாம். சின்ன ஊர்தானே! சவுண்டை வேறு அதிகமாக வைத்து விடுவார். அப்படிக் கேட்டது முதன் முதலாக நான் "ஒரு ராஜா ராணியிடம்". அவர் நாள்முழுக்க தலைவர் பாடல்களைப் போட்டு எல்லோருக்கும் மனப்பாடமே ஆக்கி விடுவார். 'பிராப்தம்' படம் வருவதற்கு முன்பாகவே "நேத்துப் பறிச்ச ரோஜாவை" எங்கள் ஊரில்முழுதும் பாடாத ஆளே இல்லை.
ஆச்சு... தலைவர் படம் கடலூரில் ரிலீஸ் என்றால் முதல் நாளே கிளம்பத் தயார் வேலைகள் நடக்கும். ராமாபுரத்திலிருந்து கடலூருக்கு அப்போதெல்லாம் பஸ் வசதிகள் கிடையாது. சாத்தங்குப்பம், கேப்பர்குவாரி மலை, TB ஆஸ்பத்திரி, அண்ணா கிராமம் வழியாக நடந்துதான் செல்ல வேண்டும். கிட்டத்தட்ட இருபது கிலோமீட்டர்கள் வரும். மேட்னிக்கு கிளம்ப வேண்டும். அம்மா முதல் காட்சியே பார்க்க வேண்டும் என்பதில் மாறியதே இல்லை. அப்பாவுக்கும் தலைவரை பிடிக்கும். கிராமத்து ஸ்கூல்தானே! அப்போதெல்லாம் யாரும் அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டார்கள். ஸ்கூல் லீவாக இருந்தாலும் சரி... லீவு விடாவிட்டாலும் சரி. தொண்டர் படை சூழ அம்மா... நான்... அப்பா பொடி நடையாக நடக்க ஆரம்பித்து விடுவோம். வழக்கம் போல கட்டு சாதம் உண்டு. ரசிகர் குழாம் அம்மாவுக்கு பாதுகாப்பாக பெரிய கம்பு, கழிகளை எடுத்துக் கொண்டு முன்னே இருபது பேர், பின்னே இருபது பேர் என்று பாதுகாப்பு கொடுத்துக் கொண்டு வருவார்கள். வழி நெடுகிலும் 'சிவாசி (அப்படிதான் அன்புடன் அழைப்பார்கள்) வாழ்க'... என்ற கோஷங்கள்தான். வழி நெடுக முந்திரிக்காடுகள். பயமாக இருக்கும். வழியில் ஒன்றிரண்டு கிராமங்கள்தாம். செம்மண் சாலைகள்தான். வழியில் ஒரு ஈ காக்கா கூட இருக்காது. காலை ஒன்பது மணிக்கு கிளம்பினால் பன்னிரண்டு மணிக்கெல்லாம் கடலூர் சென்று விடுவோம். உடனே கியூவில் நிற்க ஆரம்பித்து விடுவோம். கடலூர் ரசிகர்கள் செய்யும் அமர்க்களங்களை ஆசைதீரப் பார்த்துக் கொண்டிருப்போம். மூன்று மணிநேரம் ஒருவர் கையை ஒருவர் கோர்த்துக் கொண்டு டிக்கெட் எடுக்கத் தயாராக இருப்பார்கள். நான் சிறுவன் என்பதால் அம்மாவுடன் பெண்கள் கவுண்ட்டரில் நின்று விடுவேன்.
டிக்கெட் எடுத்து உள்ளே நுழைந்ததும் எங்கள் ஊர்க்காரார்கள் எல்லாம் ஒரே இடத்தில் அமர்ந்து கொள்வோம். பெஞ்ச் டிக்கெட்தான். சாய்ந்து கொள்ளவல்லாம் முடியாது. முதுகு வலிக்கும். படம் ஆரம்பிக்குமுன் கம்பெனியின் ஒரிஜினல் பாட்டுப் புத்தகத்தை பையன்கள் எடுத்துக் கொண்டு வந்து விற்க ஆரம்பிப்பார்கள். விலை எழுபத்தைந்து காசு அல்லது ஒரு ரூபாய் இருக்கும். 'வியட்நாம் வீடு' என்றால் வீடு போன்ற வடிவிலே கட்டிங் செய்து பாட்டுப் புத்தகங்கள் அழகாக வரும். அம்மா அனைத்தையும் வாங்கி விடுவார்கள். பின் படம் முடிந்ததும் ஊர் நோக்கி மறுபடி நடைபயணம். இரவு நேரம் பாதுகாப்பு அதிகாரிகள் இன்னும் அதிகமாக பாதுகாப்பு கொடுத்தபடி எங்களை அழைத்துச் செல்வார்கள். மணி ஒன்பதுக்கெல்லாம் ஊர் போய் சேர்ந்து விடுவோம்.
தீபாவளி போன்ற விஷேச நாட்களில் காலையிலேயே பயணித்து விடுவோம். சொர்க்கத்தை பாடலியில் பார்த்துவிட்டு எங்கிருந்தோ வந்தாளை நியூசினிமாவில் முடித்துவிட்டு ஊருக்கு செல்வோம். வழி நெடுகிலும் படத்தில் நடிகர் திலகம் நடித்த காட்சிகளை பேசி சிலாகித்துக் கொண்டே அசைபோட்டபடி வருவார்கள். அவரைப் போலவே நடந்து காட்டி நடிக்க முயன்று அதை நகைச்சுவையாக்கி.. ஏக ரகளை.
'தங்கப்பதக்கம்' முதல் ஷோ ரமேஷ் தியேட்டரில் முடித்துவிட்டு திரும்பும் போது அம்மா "என்னால் வரமுடியாது... அடுத்த காட்சியும் பார்த்து விட்டுதான் வருவேன்" என்று அடம் பிடித்து விட்டார்கள். அவர்களுக்கு இன்று வரை 'தங்கப்பதக்கம்' தான் உயிர். லேடீஸ் என்பதால் அவர்களுக்கு டிக்கெட் கிடைத்துவிட்டது. ஆனால் எங்களுக்குக் கிடைக்கவில்லை. கிட... தியட்டேருக்கு வெளியிலேயே கிட... பேனர்களை பார்த்துக் கொண்டு, தலைவருக்கு போடப்பட்ட மாலைகளை பார்த்துக் கொண்டு... குவியல் குவியலாய் வரும் ஜனங்களைப் பார்த்துக் கொண்டு... பொழுது போவதே தெரியாது. அன்றே இரண்டு முறை பார்த்தும் அம்மாவுக்கு திருப்தி இல்லை. விட்டால் செகண்ட் ஷோவும் பார்ப்பார்கள் போல் இருக்கிறது. ஒருவழியாக சமாதானம் சொல்லி அழைத்து வந்தோம் நானும் அப்பாவும்.
எப்படிப்பட்ட வாழ்க்கை! கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத 'சொர்க்க' போக வாழ்க்கை! மனமகிழ்ச்சியான வாழ்க்கை! சாப்பிட்டது கூழ், கஞ்சி என்றாலும் எங்கள் கிராமத்தவர் சிறியவர் முதல் பெரியவர் வரை பருகியது நடிகர் திலகம் என்ற அமிர்தத்தையல்லவோ!
என் கிராமம்... என் மக்கள்... என் தலைவன் புகழ் பாடிய கிராமம்... என் தெய்வத்தைக் கொண்டாடிய மக்கள்.
மறக்கத்தான் முடியுமா அந்த மாணிக்க நாட்களை!
கண்களில் நீர்த் துளிக்கிறது.
அன்புடன்
நெய்வேலி வாசுதேவன்
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...0a&oe=59A4A878https://scontent.fybz1-1.fna.fbcdn.n...8d&oe=599BDEEB
அடடா அடிச்சான்டா அரை சதம்....
நாகர்கோயில் வசந்தம் பேலஸ் தியேட்டரில் வரும் வெள்ளிக்கிழமை 16.6.2017 அன்று ராஜபார்ட் ரங்கதுரை 50வது நாள்.....
இன்று வெளிவரும் புதிய படங்கள் பல கோடி ரூபாங்களில் பட்ஜெட் செய்து 1வாரம் அல்லது 2 வாரங்களில் தூக்கப்படுகிறது. ஏற்கனவே உலக மகா நாயகனின் கர்ணன் சில வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் ஒரு கலக்கு கலக்கியது. சென்னையில் 150 நாட்களுக்குமேல ஓடி விழா கண்டது. இன்று ராஜபார்ட் ரங்கதுரை டிஜிட்டலில் 4 ஜியில் வெளியிடப்பட்டு நாகர்கோயிலில் 50 நாளை கடந்து ஓடப்... போகிறது என்றால் யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்களே , அது கலை உலகில் சிவாஜியை பார்த்துதானா?
உலகில் ஒரே சூரியன்...ஒரே சந்திரன்...அதுபோல் கலை உலகில் ஒரே சிவாஜி..........
திருச்சி எம்.சீனிவாசன்.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...a8&oe=59D71F8C
இன்று பிற்பகல் 1:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸில் " தங்கச் சுரங்கம் "
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...e5&oe=599E04CBhttps://scontent.fybz1-1.fna.fbcdn.n...36&oe=59E56A1D
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...0e&oe=59DEDE9E
தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு தென் மாவட்டத் தலைவர்கள் கூட்டம், திருநெல்வேலியில், மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில், 11 -06 - 2017 , ஞாயிறு மாலை தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் K .சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...08&oe=59E7A27F