Quote:
முருகன்- வசந்தி திருமணம் நடந்ததா?
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் பகல் 12 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் `உறவுகள்.' குடும்ப உறவுகளை சுற்றி யதார்த்தமான கதைப் பின்னலில் காட்சிகள் நகருவது இந்த தொடரின் பலம்.
உறவுகள் தொடரின் கதை நாயகனான கிருஷ்ணா படும் அவஸ்தைகள் கதையோட்டத்தில் மிகவும் இயல்பாக அமைந்துள்ளது.
தன் தங்கை கவுரிக்காக கிருஷ்ணா விட்டுக் கொடுக்க இனி எதுவும் இல்லை. இந்த நிலையில் தங்கை கவுரி, கிருஷ்ணன் குடும்பத்து மீது காரணம் இல்லாமல் கோபப்படுகிறாள். இதனால் அனைவரின் வெறுப்புக்கும் ஆளாகிறாள். அவள் ஏன் அப்படி நடந்து கொண்டாள் என்று தெரிந்து கொள்ள கிருஷ்ணன் முயற்சிக்க, அவனையும் கவுரி அவமானப்படுத்துகிறாள்.
தங்கையால் மனம் உடைந்த நிலையில் கிருஷ்ணன் இருக்கும் நேரத்தில் அவனிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டு முருகேசன் வருகிறார். அவர் கிருஷ்ணாவின் மாமனார் தணிகாசலத்தின் நண்பர். அவரிடம் கிருஷ்ணா கடன் வாங்கியிருந்தான். பணம் கேட்டவரிடம் உடனடியாக அவரது பணத்தை திருப்பித் தரமுடியாத நிலையை அவன் சொல்ல, முருகேசன் அதை ஏற்கவில்லை. உடனே பணம் தந்தாக வேண்டும் என்கிறார். சாதாரண வார்த்தைகள் தடம் மாறி, தடித்த வார்த்தைகளாகி கைகலப்பில் முடிந்து விடுகிறது.
கோபமான முருகேசன், இந்தக் கோபத்தை தன் நண்பரும் கிருஷ்ணாவின் மாமனாருமான தணிகாசலத்திடம் காட்டுகிறார். தன் கணவனால் அப்பாவுக்கு அவமானம் ஏற்பட்டதாக கருதிய காயத்ரி, கணவன் கிருஷ்ணாவிடம் எரிச்சலாக, கிருஷ்ணாவுக்கும், காயத்ரிக்கும் மனமுறிவு ஆரம்பிக்கிறது.
இந்நிலையில் சித்ராவின் அண்ணன் முருகனுக்கு வசந்தி என்ற பெண்ணை பார்த்து நிச்சயம் செய்கிறாள் ரஞ்சனி. ஆனால் அவள் ராஜேந்திரனின் தங்கை என்பது தெரிய வர, கல்யாணம் நிறுத்தப்படுகிறது. ராஜேந்திரன் தான் `அண்ணாமலை அரிசி ஆலை' அந்தக் குடும்பத்தின் கையை விட்டுப் போக காரணமானவன். ராஜேந்திரனின் தங்கை என்றாலும் பரவாயில்லை. கல்யாணத்தை நடத்தலாம் என்று முயற்சி செய்கிறான் செந்தில்.
கிருஷ்ணன்-காயத்ரியின் மனமுறிவு என்னவாயிற்று?
கவுரி ஏன் தன் குடும்பத்தை வெறுக்கிறாள்? முருகன், வசந்தியின் கல்யாணம் நடந்ததா? விசாலாட்சி எப்போது சித்ராவை புரிந்து கொள்வாள்? அடுத்தடுத்த கேள்விகளுக்கு சுவராஸ்யமான பதில்கள் தொடரில் காத்து இருக்கின்றன'' என்கிறார்கள் திரைக்கதை ஆசிரியர் குமரேசனும், இயக்குனர் ஹரிபாவும்.
தொடரில், பீலிசிவம், அமரசிகாமணி, ராஜேஸ்வரி, ரேவதி சங்கர், ஸ்ரீகுமார், ராஜ்காந்த், ஸ்ரீதுர்கா, அர்ச்சனா, சிவ கவிதா, ராமச்சந்திரன், கிச்சா, நித்யா, ஜெயபிரகாஷ், பரத், சுதா, கல்பனா, ஆர்த்தி, ஜே.லலிதா, ஜெயந்த், சோனியா, வைரவராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
பாடல்: வைரமுத்து, இசை: டி.இமான், கேமரா: தண்டபாணி, வசனம்: பாலசூர்யா, கதை, தயாரிப்பு: சான் மீடியா.