இனியாவது சிம்பு திருந்துவரா?
சிம்புவின் வாலு படத்துக்கு ஏற்பட்ட அடுக்கடுக்கான சிக்கல்களைத் தாண்டி அந்தப்படம் நாளை வெளியாகிவிடும் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தப்படம் இவ்வளவு சிக்கல்களைச் சந்திக்கக் காரணம் என்ன? என்று கேட்டால் சிம்புவுக்கு எதிராகப் பலர் சதி செய்கிறார்கள் என்றே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்னொரு சாராரோ, எல்லாமே சிம்பு செய்த தவறுகள்தாம் காரணம் என்று சொல்கிறார்கள். எந்தப்படத்தின் படப்பிடிப்புக்கும் அவர் சரியாக வந்ததே இல்லை, அவர் படப்பிடிப்புக்குச் சரியாக வந்துவிட்டாலே பாதிச்சிக்கல்கள் தீர்ந்துவிடும் என்கிறார்கள்.
அவர் முறையாகப் படப்பிடிப்புக்கு வந்து நடித்துக்கொடுத்தாலும் தயாரிப்பாளர் தவறு செய்திருந்தால் அதற்கு சிம்பு என்ன செய்வார்? என்றால், உண்மையிலேயே தயாரிப்பாளர் செய்த சிக்கல் காரணமாகப் படம் நின்றால், ஒரு நடிகர் அதைவிட்டுவிட்டு அடுத்த படத்துக்குப் போய்விடலாமே என்கிறார்கள். அண்மையில் விஷாலுக்கு இப்படி ஒரு சிக்கல் வந்ததால், அவர் சொந்தப்படநிறுவனம் தொடங்கி படங்களைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டார்.
இவரும் வாலு படத்தை விட்டுவிட்டு இவர்களுடைய தயாரிப்பிலேயே தொடங்கிய இதுநம்மஆளு படத்தை முடித்து வெளியிட்டிருக்கலாமே என்கிற கேள்வி வருகிறது. இது தொடர்பாக ஏற்கெனவே இதுநம்மஆளு இயக்குநர் பாண்டிராஜ் கடும் அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
எனவே இப்போதைய சிக்கல்களுக்கு நாம்தான் காரணம் என்பதை உணராமல் இன்னொருவர் மீது பழிபோடுவது சிம்புவின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்று திரையுலகில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.