http://i66.tinypic.com/whikah.jpg
நன்றி -சந்திரன் வீராசாமி அவர்கள் முகநூல் பதிவு.
தமிழீழ மக்கள் மனங்களிலே எம்.ஜி.ஆர்.அவர்கள் நீங்காத இடம் பெற்றிருக்கிறார் என்பதை செல்லும் இடங்களிலெல்லாம் நான் காணக்கூடியதாக இருந்தது.பல்கலைகழகப் பேராசிரியர் ஒருவர்,”இலங்கைத் தீவினிலே தமிழினம் கேட்பார் எவருமின்றி வேட்டையாடப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் தமிழீழத் தமிழர்களுக்காகத் ஓங்கி குரல் கொடுத்தவர் மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அவர்கள் .
தமிழக முதல்வராக இருந்துகொண்டு தமிழீழ விடுதலைக்காக குரல் கொடுப்பதோடு நின்று விடாமல் விடுதலையை வென்றெடுக்க வல்ல தலைமையாக எங்கள் தேசியத் தலைவரை இனங்கண்டு ஆதரித்தார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் கரங்களை பலப்படுத்துவது ஒன்றே தமிழீழத் தமிழர்களுக்கு மீட்சி தரும் என்பதை தீர்க்கதரிசனமாக எண்பதுகளின் ஆரம்பத்திலேயே உணர்ந்து கொண்டு அதற்கென காத்திரமான பங்களிப்பையும் வழங்கினார்.
சிறீலங்காப் பேரினவாத அரசு தமிழீழ மக்கள் மீது குண்டு மாறிப் பொழிவதும்,துப்பாக்கியால் சுட்டும்,சிறைப்பிடித்து வதைத்தும் துன்பம் அனுபவிப்பது கண்டு துடித்தார்.ஈழத் தமிழர்கள் படும் அவலங்கள் கண்டுணர்ந்த எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழீழ மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்க முன்வந்தார்.
இதன் விளைவாகவே தமிழீழ மக்களுடைய விடுதலையை ஆக்கபூர்வமாக மீட்டெடுக்கக் கூடிய அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழீழ மக்களிற்கான தீர்க்கதரிசனம் மற்றும் நுண்மதிமிக்க விலைபோகாத தலைமையுமாக எங்கள் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களை கண்டுணர்ந்து மனித நேயத்தோடு எண்ணிலடங்காத உதவிகளைச் செய்தார். தாம் வகித்துவந்த முதல்வர் பதவிக்கு ஆபத்து வந்தாலும் வரட்டுமென தமிழீழ விடுதலைக்கான செயற்கரிய பங்களிப்புகளைச் செய்தார். தமிழீழத்திலிருந்து தாய்த் தமிழகத்திற்கு ஏதிலிகளாக வந்த தமிழர்களுக்கு பல நல்வாய்ப்புத் திட்டங்களை வகுத்தார்.
தனது அரசு,கட்சி,சொந்த செல்வாக்கு அனைத்தையும் பயன்படுத்தி தமிழீழ விடுதலைக்கு உதவிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களின் நினைவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் எங்கள் தமிழீழ மக்களால் மிகவும் உணர்வு பூர்வமாகவும்,நன்றிப் பெருக்கோடும் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது. தமிழீழத்தின் விடியலுக்காக எதுவித பிரதிபலனும் பாராது பாடுபட்ட அந்த நல்ல உள்ளத்தினை எங்கள் நெஞ்சில் நிறுத்தி வைத்திருக்கிறோம்”என்றார். இதுதான் ஒவ்வொரு தமிழீழத் தமிழர்களின் உணர்வுகள்..
(2006 ஆம் ஆண்டு வெளிவந்த என்னுடைய தமிழீழம்-நான் கண்டதும் என்னைக் கண்டதும் நூலிலிருந்து ……)
- ஓவியர் புகழேந்தி
http://i66.tinypic.com/tafqdf.jpg