எம்.ஜி.ஆர்: தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றி
எம்.ஜி.ஆர்: தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றிய ஹீரோ!
மிகவும் ஓப்பனாக பேசவேண்டும் என்றால், தமிழகம் இன்றிருக்கும் நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தேவையா? என்ற கேள்வியை இளைஞர்கள் வெகு சுலபமாக கேட்டுவிடுகிறார்கள் என்பதை முதலில் சொல்லிவிடவேண்டும். ஏனென்றால், இதைப்பற்றித் தான் இந்தக் கட்டுரை முழுவதிலும் பேசப்போகிறோம்.
எம்.ஜி.ஆர் என்ற நடிகர் இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் விதத்தினால் தான் இப்படிப்பட்ட கேள்விகள் எழுகின்றன. அவர்களிடம் சென்று, தமிழ்க் கலாச்சாரத்தை தமிழ் சினிமாவின் மூலம் பதிவு செய்தவர் எம்.ஜி.ஆர் என்று சொன்னால் முதலில் நம்பமாட்டார்கள். ஆனால், தேடிப்பார்ப்பார்கள். அப்படித் தேடிப்படிப்பவர்களுக்குத் தெரியவேண்டிய மிகமுக்கியமான விஷயங்கள் தமிழர்களின் பாரம்பரியத்தை, எம்.ஜி.ஆர் எப்படியெல்லாம் தன் திரைப்படங்களில் பதிவு செய்தார் என்பது.
தாயைக் காத்த தனையன் என்ற திரைப்படம் ஒன்று உண்டு. ஓப்பனிங் சீனிலேயே வேட்டைக்குச் செல்லும் எம்.ஜி.ஆர் ஒரு மாட்டை புலியிடமிருந்து காப்பாற்றுவார். தப்பி ஓடிவிடும் புலி என்றாவது ஒருநாள் கொல்லவரும் என்று, அந்தப்புலியைத் தேடிச் செல்லும்போது, சரோஜா தேவியை மானபங்கப்படுத்த முற்படும் அசோகனிடமிருந்து அவரைக் காப்பாற்றுவார்.
எம்.ஜி.ஆர்-இன் திரைப்படங்களில் இப்படி முக்கியத்துவம் பெறும் குறிப்புகள் அதிகம் இருக்கும். இந்த முதல் இரண்டு காட்சிகள் தான் திரைப்படத்தின் நாடி. இவற்றை அடிப்படையாக வைத்துத்தான் படம் முழுக்க நகரும். மனிதன் வாழ வீடு இருக்கும்போது, காட்டிலிருக்கும் மிருகங்களை தொந்தரவு செய்வதால் தான் அவை மனித வேட்டையைத் தொடர்கின்றன என்று படத்தில் வசனம் வரும். இது 100 சதவிகிதம் உண்மை.
காட்டு மிருகங்கள் மனிதர்களை, தங்களது தற்காப்புக்காக மட்டுமே தாக்குகின்றன. அப்படி ருசி கண்ட மனிதனை மீண்டும் எங்கு பார்த்தாலும் மிருகங்கள் வேட்டையாடுகின்றன என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. இதை 1962-லேயே தனது படத்தின் மூலம் சொல்லியிருப்பார். அத்துடன் நகரமயமாக்கலுக்காக காடுகள் அழிக்கப்படுவதைப் பற்றிய விழிப்புணர்வும் கொடுக்கப்பட்டிருக்கும். இதை நிரூபிக்கும் விதத்தில் தான், துப்பாக்கியுடன் சென்றும் புலியினால் தாக்கப்பட்டு, பாறை மறைவுக்குள் ஒளிந்திருக்கும் எம்.ஜி.ஆர்-ஐ, சரோஜா தேவி காப்பாற்றுவார்.
இது மட்டுமா? காதலித்த பெண்ணே மனைவியாக கிடைக்காதபோது தற்கொலைக்கு முயற்சி செய்யும் கதாபாத்திரத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார் என்று சொன்னால் நம்ப முடியுமா? இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் அப்படி ஒரு முயற்சியை செய்வார். அதன்பின், அவரது தாய் மூலம் காப்பாற்றப்படுவார். இந்தத் திரைப்படத்தில் ஹைலைட்டான சம்பவம் எம்.ஜி.ஆர். சிலம்பாட்டம் ஆடும் காட்சி.
அசோகனின் அடியாளுடன் எம்.ஜி.ஆர் சிலம்பமாடும் காட்சியை இன்றைய சூழலில் டூப் போட்டு நடித்துக்கொண்டிருக்கும் ஹீரோக்கள் மிக முக்கியமாகப் பார்க்கவேண்டும். அப்படி ஒரு கச்சிதமான சண்டையை எந்த ஹீரோவாலும் செய்யமுடியாது. ஏனென்றால், எம்.ஜி.ஆர் உண்மையாகவே பி.யூ.சின்னப்பாவிடம் பயின்றிருந்தார்.
தாயைக் காத்த தனையன் திரைப்படத்தைப் பார்த்தபிறகு சிலம்பமும் கையுமாக சுற்றிய அந்தக்கால இளவட்டங்கள் இப்போது முடிநரைத்த இளைஞர்களாக இருப்பார்கள். முடி நரைத்த இளைஞர்கள் என ஏன் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றால், இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர்-இன் சிலம்பாட்டம் பற்றிக் கேட்டுப்பாருங்கள். எம்.ஜி.ஆர்-ஆகவே மாறி கையில் கம்பைப் பிடித்து இளைஞர்களாக மாறி வீடு கட்டுவார்கள். சிலம்பாட்டம் மட்டுமல்ல... மல்யுத்தம், குஸ்தி, கபடி என தமிழர்களின் நிலங்களில் காணப்பட்ட அனைத்துவிதமான போட்டிகளையும் எம்.ஜி.ஆர்-இன் படங்களில் காணலாம். அப்போது அவர் தான் டிரெண்ட் செட் நடிகர். அவர் படத்தில் என்ன செய்தாலும், அது மக்களின் வாழ்க்கையில் இடம்பெறும். அக்குள்களில் சிக்கிக்கிடந்த துண்டு, கழுத்தைச் சுற்றிக் கட்டப்பட்டதும் அப்படித்தான். இவையெல்லாம் எம்.ஜி.ஆர் என்ற சூப்பர் ஹீரோவினால் சாத்தியப்பட்டது.
ஏழைகளின் ஒளிவிளக்கு என்று இப்போது யார் யாருக்கோ பட்டம் கொடுக்கப்படுகிறது. ஆனால், அப்போது ஏழைப்பங்காளனாக இருந்தவர் எம்.ஜி.ஆர். மட்டும் தான். தொடர்ந்து பாட்டாளி மக்களில் ஒருவராக தன்னை முன்நிறுத்தியது அவரது மிகப்பெரிய ஸ்டண்ட். அது தான் அவரை மக்களின் வீடுகளுக்குள் கொண்டு சென்றது. அவர் பணக்காரராக நடிக்கும் படங்கள் தான் கமெர்ஷியல் படங்கள் எனப்பட்டன. அந்தமாதிரி படங்களிலும் எம்.ஜி.ஆர் தன் சொத்தை யாருக்காவது கொடுத்துவிட்டு ஏழையாக குடிசையில் தங்கி இருப்பார். அவருக்கு அங்கிருப்பவர்கள் உணவு கொடுப்பார்கள். இது தான் தமிழர் கலாச்சாரம். வீடு தேடி வந்தவருக்கு உணவளிக்காத வீட்டைத் தமிழ் நாட்டில் காண்பது நடக்குமா?
மேலே எம்.ஜி.ஆர்-ஐ புகழ்ந்து எதுவும் பேசவில்லை. நேரிடையாக எம்.ஜி.ஆர் என்ற உருவத்தின் குணங்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன
courtesy - net