Originally Posted by
esvee
துக்ளக் சோ எம்.ஜி.ஆரைத் தன் பத்திரிகையில் எத்தனையோ கேலிச் சித்திரங்கள் போட்டு, எம்.ஜி.ஆருக்கு ஆட்சி செய்யவே தெரியாது, கோமாளி ஆட்சி என்றெல்லாம் விமர்சித்தார். எதுவுமே எடுபடவில்லை!
எம்.ஜி.ஆர். எதையுமே கண்டுகொள்ளவில்லை. கலைஞர் போல் பதிலுக்குப் பதில் வரிந்து கட்டிக்கொண்டு அறிக்கை விடவில்லை; பதில் சொல்லிக்கொண்டு இருக்கவில்லை. தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தார். அவர் மீது அம்பு எய்தவர்களே களைத்துப் போய் ஒரு கட்டத்தில் வில்லைக் கை நழுவ விட்டார்கள்.
யாரையும் எம்.ஜி.ஆர். எடுத்தெறிந்து பேசியதாக, யோசித்துப் பார்த்தாலும் எனக்குத் தெரியவில்லை. குறிப்பாக, தொழிலில் போட்டியாக இருந்த சிவாஜி கணேசன், அரசியலில் போட்டியாக இருந்த கருணாநிதி இருவரையும் எம்.ஜி.ஆர். ஒரு நாளும் தரக் குறைவாகவோ, மரியாதைக் குறைவாகவோ விமர்சித்ததில்லை. ‘என் நண்பர் கருணாநிதி அவர்கள்...’, ‘என் தம்பி கணேசன்...’ என்றுதான் பேசுவார்.
ஒருமுறை, சென்னை வானொலியில் வி.ஐ.பி. தொகுத்து வழங்கும் தேன் கிண்ணம் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிக்கொண்டு இருந்தது. தொகுத்து வழங்கியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிவாஜி ரசிகன் என்ற முறையில் அந்த நிகழ்ச்சியை நானும் ரசித்துக் கேட்டேன். டி.எம்.எஸ். பாடல்கள் பட்டையைக் கிளப்பின. சிவாஜி ஒவ்வொரு குறிப்பைச் சொன்ன பிறகும் அதற்கான பாட்டு ஒலிபரப்பாகும். இப்படிப் பத்துப் பன்னிரண்டு பாடல்கள் அன்று ஒலிபரப்பாயின. பெரும்பாலும் தான் நடித்த படங்களிலிருந்தும், ஒன்றிரண்டு பாடல்களை மட்டும் வேறு சில படங்களிலிருந்தும் தொகுத்து வழங்கினார் சிவாஜி. நிகழ்ச்சியின் இறுதிவரையில் எம்.ஜி.ஆர். பாடல் எதையுமே சிவாஜி குறிப்பிடவில்லை; ஒலிபரப்பவில்லை. சிவாஜி ரசிகனாக இருந்தபோதிலும், எனக்கே இது கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது.
மறுநாள், செய்தித்தாள்களில் எம்.ஜி.ஆர். தேனியிலோ அல்லது பெரியகுளத்திலோ கூட்டத்தில் பேசிய பேச்சு முழுமையாகப் பிரசுரிக்கப்பட்டு இருந்தது. படித்தேன். சிவாஜியைப் பற்றிக் குறிப்பிட்டு ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்திருந்தார். “தம்பி கணேசனுக்கு இணையான நடிகர் உலகிலேயே இல்லை. ஹாலிவுட் நடிகர் மார்லன் பிராண்டோ சிறந்த நடிகர். அதனால், நமது கணேசனை ‘தென்னகத்து மார்லன் பிராண்டோ’ என்பார் அறிஞர் அண்ணா. உண்மையில், மார்லன் பிராண்டோதான் தன்னை ‘ஹாலிவுட் சிவாஜி’ என்று பெருமையோடு சொல்லிக் கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு ஈடு, இணையற்ற நடிகர் தம்பி கணேசன்” என்று பேசியிருந்தார். சிலிர்த்துப் போனேன்.
எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர்தான். அவர் இடத்தை இனியொருவர் பிடிக்க முடியாது!
Courtesy - ravi prakash