இறுதி கட்டத்தில் 'வாலு'க்கு கை கொடுத்த சந்தானம்- Tamil HINDU
'வாலு' படத்துக்கு சம்பள பிரச்சினைக்காக சந்தானம் கடிதம் ஒன்று நிலுவையில் இருந்தது. ஆனால் ஒன்றும் பிரச்சினையில்லை வெளியிடுங்கள் என்று சந்தானம் தெரிவித்தார்.
விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'வாலு'. நிக் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டது. பல்வேறு தடைகள், வழக்குகளை கடந்து 'வாலு' வெளியாகி இருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) அன்று காலை 'வாலு' தாமதமாக தான் வெளியானது. பல்வேறு திரையரங்குகளில் 11 மணி காட்சி தான் திரையிட்டார்கள்.
அதற்கான காரணம் என்ன என்று விசாரித்த போது, "'வாலு' படத்துக்கு இறுதியாக சந்தானத்தின் லேப் லெட்டர் இருந்தது. அதில் சந்தானத்துக்கு கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியை படம் வெளியாகும் போது கொடுத்துவிடுவேன் என்று தயாரிப்பாளர் மற்றும் சந்தானம் இருவரும் கையொப்பமிட்டு இருந்தார்கள். ஆனால் தயாரிப்பாளர் சம்பளம் கொடுக்கவில்லை.
லேப்பில் இருந்து சந்தானம் சொன்னால் மட்டுமே படம் வெளியாகும் என்ற சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. அச்சமயத்தில் சிம்பு, சந்தானத்துக்கு போன் பேசியிருக்கிறார். உடனே சந்தானம் "எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. படத்தை வெளியிடுங்கள்" என்று கூறியிருக்கிறார். அதற்கு பிறகு தான் படம் வெளியானது" என்று தெரிவித்தார்கள்.