-
வாசு, சாரதா, ஆதவன் ரவி, கோபால் போன்ற திரியின் சூப்பர் ஸ்டார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பங்களிப்பு செய்யும்போது கிடைக்கும் ஆனந்தமே தனி. ஆயிரம் facebook, whatsapp வந்தாலும் நமது மய்யம் நடிகர் திலகம் திரி போல் வரவே முடியாது என்ற என் எண்ணம் மேலும் வலுப்படுகிறது.
சாரதா, உங்கள் சிவந்த மண் பதிவு என்னால் மறக்கவே முடியாது. முதன் முறை நீங்கள் அதை பதிந்த போது அதன் பின்னூட்டமாக அந்த காட்சியின் சில சிறப்புகளை பற்றி நான் பதிந்திருந்தது இப்போதும் நினைவில் நிற்கிறது. ("உணர்ச்சிகள் வார்த்தையில் அல்ல செயல்களில் வேண்டும்" என்று ரங்காராவிடம் ஒரு காலை உயர்த்தி வசனம் பேசும் முறை, "இந்த நாட்டின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்" என்று பதிலளிப்பது பற்றியெல்லாம்). அந்த சுகமான நினைவுகளை மீண்டும் நினைவு கூற வைத்ததற்கு நன்றி. அது போல் வாசு குறிப்பிட்ட கடவுள் தந்த இரு மலர்கள் பாடல் காட்சியை பற்றி நான் முன்பு எழுதியிருந்ததை நினைவு வைத்து எழுதியது உங்களுக்கே உரித்தான பண்பு.
வாசு,
நான் என்ன சொல்வது? நம் உள்ளில் கலந்து விட்ட ஒரு காவியத்தை அதன் ஒரு உயிர்ப்பான காட்சியைப் பற்றி நீங்கள் எழுதுவதுடன் கூடவே கவிதை சித்தர் ஆதவன் ரவியையும் எழுத வைத்து "நற்கருப்பஞ்சாற்றினிலே தேன் கலந்து பால் கலந்து செழுங்கனிதிச்சுவை கலந்து" என்று புலவர் பாடியது போல் ஒரு விருந்தே பரிமாறி விட்டீர்கள். அதுவும் நீங்கள் போட்டிருக்கும் அந்தக் காட்சி ஆஹா! (என்ன ஆனான் உன் பணக்கார மாப்பிளை?)
ரவி,
அருமை என்பது சம்பிரதாய வார்த்தை. தொடருங்கள்!
அன்புடன்
-
நினைவுகள்
பொள்ளாச்சி நகரில் எந்த வருடத்தில் இருந்து திரையரங்குகள்
ஆரம்பிக்கப்பட்டன என்ற வரலாறு சரியாக அறிய முடியவில்லை.ஆனால் 100 நாட்கள் ஓடிய முதல் படத்தின் வரலாற்றை மட்டும் நன்கு அறிவேன்.எனக்கு வயது அப்போது ஒன்பது.100 நாட்கள் அல்ல.,அதையும் தாண்டி 128 நாட்கள் ஓடிய முதல் படம் திரிசூலம்.
எனக்கு நன்றாகநினைவிருக்கிறது.ஒரு டெம்போவில் இரு புறமும் பட
பேனர் வைத்து ஒலி பெருக்கியுடன் அறிவிப்பு செய்து கொண்டு,பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டும்,நோட்டீஸ்களை கற்றை கற்றையாக வீசிக்கொண்டும் தெருக்களில் பவனி வரும்.பேனர்கள் வரையப்பட்டவை.
அப்பொழுதெல்லாம் கை தூரிகைகளால் வரையபட்ட பேனர்கள் தானே.அந்த கால கட்டங்களில் திரையரங்குகளில் வைக்கப்பட்ட பேனர்களை ரசிப்பதே பெரும் ஆனந்தம். அன்று ரசித்ததில் கால்வாசி கூட இன்று வைக்கப்படும் ப்ளக்ஸ் பேனர்களை ரசிக்க முடிவதில்லையே.வரையப்பட்ட பேனர்களின் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.
குறிப்பாக சினி ஆர்ட்ஸ் வரையும் விளம்பரங்கள் தத்ரூபமாக இருக்கும்.
50நாள்.,75 நாள்,100வது நாள்,என படம் நாட்களை தாண்டும்போது அந்தடெம்போ விளம்பர வாகனம் வந்ததுண்டு. திரிசூலம் படத்திற்கு தான் அந்த டெம்போ விளம்பரம் நான் பார்த்திருக்கிறேன்.அதற்கு முன் மாட்டுவண்டியில் கூம்பு போல் தட்டிகளில் போஸ்டர்கள் ஒட்டி வலம் வந்ததுண்டு.திரிசூலம் தமிழ்நாட்டின் மாபெரும் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் படம் இல்லையா.அதனால் தான் என்னவோ அந்த டெம்போ விளம்பரம்.
டெம்போ விளம்பரம்இது போல் தான் இருக்கும்:
http://uploads.tapatalk-cdn.com/2016...70ba7bae4a.jpg
http://uploads.tapatalk-cdn.com/2016...1b39da4d97.jpg
டெம்போ வந்து நின்றதும் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்படும்.அந்த நோட்டீஸ்களை வாங்க கூட்டமே சேரும்.அந்த நோட்டீஸ்களைமுண்டியடித்து வாங்குவதில் பெரும் களேபரமே நடக்கும். முதலில் வாங்கியவன் போட்டியில் ஜெயித்தது போல் நடப்பான்.அந்த நோட்டீஸ்களை எவ்வளவு வாங்க முடியுமோ அவ்வளவு தடவை முயற்சிகள் நடக்கும்.
திரிசூலம் 125 நாட்களைத் தாண்டியும் நல்ல வசூலுடன் ஓடிக்கொண்டிருந்தது.பொள்ளாச்சி ஒரு சிறு நகரம்.அந்த நகரத்தில் 100 நாட்கள் என்பதே மலைக்க வைத்த சாதனை.வரும் படங்களுக்கு வழிவிட்டு கௌரவமாக எடுக்கப்பட்டு விட்டது.
காலம் நோட்டீஸை எப்படியோ தொலைக்க வைத்து விட்டது.ஆனால் நினைவுகளை?
-
இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் நவம்பர் மாத கோட்டவாக (quota) நான்மாடக் கூடல் வாழ் மக்களுக்கு விருந்தளிக்க வீராவேச கர்ஜனை புரிய வருகிறார் காலத்தை வென்ற காவிய நாயகன் கட்டபொம்மன். இம்முறை டிஜிட்டலில் அல்லாமல் முன் போலவே 35 mm திரையில் காட்சியளிக்கிறார் நடிகர் திலகம். நவம்பர் 25 வெள்ளி முதல் மதுரை சென்ட்ரலில் தினசரி 4 காட்சிகளாக. காணத் தயாராவோம்! கொண்டாட தயாராவோம்!
அன்புடன்
-
நன்றி முரளி சார்.
'இருமலர்க'ளின் காட்சிகளுக்கு நம் ரசிகர்களின் ரசனை மெய்சிலிர்க்க வைக்கிறது. நம் ரசிகர்கள் ஒருவர் கூட ரசனையில் சோடை போனவர்களல்ல என்று மீண்டும் நிரூபணம்.
கட்டபொம்மன் கர்ஜனை மீண்டும் நான்மாடக் கூடல் எங்கும் எதிரொலிக்கட்டும். வாழ்த்துக்கள்.
-
9000 பதிவுகளுக்கான பாராட்டுகளுக்கு அனைத்து நண்பர்களுக்கும் என் உளம்கனிந்த நன்றி.
-
9000 முத்தான பதிவுகளை கடந்த என் அண்ணன் வாசு அவர்களுக்கு வாழ்த்துக்கள்
-
This is Murali Srinivas Sir's writing about "IRU MALARGAL"
Now Over to Murali Sir........
ஐந்து ஆறு நாட்களுக்கு முன் தொலைக்காட்சிகளில் இந்த வார நடிகர் திலகத்தின் படங்களின் பட்டியலை பதிவிட்டிருந்தார் ராகவேந்தர் சார். அதில் சன் லைஃப் டிவியில் இரு மலர்கள் என்று பார்த்தவுடன் பயங்கர சந்தோசம். 26-ந் தேதி சனியன்று இரு மலர்கள் என்று இருந்தது. இதற்கு முன்பு Z தமிழ் டிவியிடம் இந்த ஒளிப்பரப்பு உரிமை இருந்தது. அவர்கள் காலை 10 மணி அல்லது பகல் 2 மணிக்கு ஒளிப்பரப்பிக் கொண்டிருந்தார்கள். ஆகவே பார்க்கவே முடியவில்லை. இப்போது சன் லைஃப் தொலைகாட்சியில் வருகிறது என்றவுடன் அதுவும் மாலை 7 மணிக்கு எனும்போது பார்க்கலாமே என்ற ஆசை.வீட்டில் டிவிடி இருக்கிறது. இருந்தாலும் ஆசை.
25-ந் தேதி வெள்ளி மாலை சுமார் 7.10 மணிக்கு முரசு தொலைக்காட்சியை வைத்தபோது வெள்ளி மணி ஓசையிலே பாடல் காட்சி. ரசித்துப் பார்த்த்து விட்டு அடுத்த பாட்டு என்னவென்று பார்த்தால் மகராஜா ஒரு மகராணி பாடல். உடனே புரிந்து விட்டது ஒரு படப் பாடல்கள் வரிசையில் இரு மலர்கள் பாடல்களை போடுகிறார்கள் என்று. வெளியே போகும் வேலையை தள்ளி வைத்து விட்டு பாடல்களை பார்க்க தொடங்கினேன். சன் லைஃபில் மறு நாள் இந்தப் படம் என்பதால் போட்டிக்கு போடுகிறார்கள் என யூகித்துக் கொண்டேன். அன்னமிட்ட கைகளுக்கு, கடவுள் தந்த இரு மலர்கள் மற்றும் மன்னிக்க வேண்டுகிறேன் சோக வடிவம் ஆகியவையும் பார்த்து விட்டு தெய்வ செயல் திரைப்படம் ஆரம்பித்தவுடன் வெளியே கிளம்பி சென்றேன். மாதவி பொன் மயிலாளும் மன்னிக்க வேண்டுகிறேனும் நான் பார்க்க ஆரம்பிக்கும் முன்னரே முடிந்து விட்டிருந்தன.
மீண்டும் வீட்டிற்கு வரும்போது 9 மணி. அப்போது சன் லைஃப் தொலைக்காட்சியை போட்டவுடன் ஷாக். காரணம் இரு மலர்கள் அதில் ஓடிக் கொண்டிருக்கிறது. ராகவேந்தர் சார் போட்ட பட்டியலில் தேதி மாறிவிட்டது என்பது தெரிந்தது. ஏன் முரசு தொலைக்காட்சி ஒரு படப் பாடல்களாக இந்தப் படத்தை ஒளிப்பரப்பியது என்பதும் புரிந்தது.
அப்போது முதல் அதாவது மகராஜா ஒரு மகராணி பாடல் காட்சியிலிருந்து முடிவு வரை ஒரு மணி நேரமும் படம் பார்த்தேன். ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் படம் புதிதாகவே இருக்கிறது. எந்த வித சலிப்பும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல் படம் ஓடுகிறது.
இத்தனைக்கும் நடிகர் திலகம் மட்டுமே dominate செய்யும் திரைக்கதை இல்லை. பத்மினி மற்றும் விஜயா இருவருக்கும் சம வாய்ப்பு. அதை மூவருமே குறைவில்லாமல் செய்திருக்கின்றனர் என்பதுதான் சிறப்பே.
பத்மினியை பொறுத்தவரை அவரது பாத்திரம் மற்ற இருவரையும் விட சற்றே சிக்கலானது. தவறு எதுவும் செய்யாமலேயே குற்றம் சாட்டபப்டும் ஒரு விசித்திர சூழல். முன்னாள் காதலனுக்கு தன்னை ஏமாற்றி விட்டாள் என்ற கோபம். அவன் பெண் குழந்தைக்கோ சரியான விவரம் புரியாத போதினும் தன் தந்தைக்கும் தாய்க்கும் நடுவில் வருகிறாள் என்ற கோபம், வேலை செய்யும் பள்ளியின் நிர்வாக குழு உறுப்பினருக்கோ அவள் தன்னை விரும்பவில்லை என்ற கோபம். இதற்கு நடுவில் தன்னை நம்பினாலும் உதவி செய்ய முடியாத நிலையில் இருக்கும் பள்ளி முதல்வர் [அவளின் முன்னாள் ஆசிரியரும் கூட] இதற்கு மேலும் ஒரு தர்மசங்கடமாக தன்னை மூத்த சகோதரியாக எண்ணி அந்தரங்க விஷயங்களையெல்லாம் கூட சொல்லும் முன்னாள் காதலனின் இந்நாள் மனைவி. இப்படிபட்ட சூழலில் வாழும் உமா என்ற அந்த பெண்ணை சரியாக சித்தரிப்பதில் நாட்டிய பேரொளி வெற்றியே பெற்றிருக்கிறார். இரண்டு காட்சிகளை குறிப்பிடலாம். தன் கணவன் தன்னிடம் எத்துனை பிரியம் வைத்திருக்கிறான் தன்னிடம் எப்படியெல்லாம் நடந்துக் கொள்வான் என்பதை காதலனின் மனைவி சொல்லும்போது தான் அடைய வேண்டியதை அனுபவித்திருக்க வேண்டியவற்றை எல்லாம் இழந்து விட்டோமே அவற்றையெல்லாம் இந்த பெண் வாயிலாக கேட்க வேண்டியிருக்கிறதே என்ற அந்த வேதனையை நன்றாக வெளிப்படுத்தியிருப்பார். மற்றொரு காட்சி என்னதான் மனம் கட்டுப்பாடாக இருந்தாலும் பழைய காதலனை மீண்டும் சந்தித்தவுடன் மனதில் ஏற்படும் சலனத்தை காட்டும் காட்சி. தெருவில் நடந்து செல்லும்போது பின்னாலிருந்து கார் வந்து நிற்க [அதற்கு முன்பும் இரண்டு முறை காதலனை காரில் வைத்தே சந்தித்திருப்பார்] கண்கள் ஆவலோடு காரினுள்ளில் பார்க்க காதலனின் மனைவியை பார்த்ததும் சட்டென்று ஏற்படும் ஏமாற்றம்! அதை அவர் கேட்கும் கேள்வியிலேயே வெளிப்படுத்துவார் [ஓ, நீங்களா?].
நாட்டியப் பேரொளி இப்படியென்றால் புன்னகை அரசி வேறு விதமாக ஸ்கோர் செய்வார். இரு மலர்கள் விமர்சனத்தை இதே திரியில் முன்பே நான் எழுதியபோதும் சொல்லியிருக்கிறேன். இந்தப் படத்தில் விஜயா ஒரு surprise package! ஒரு வேளை பிற்காலங்களில் அளவுக்கு அதிகமாகவே என்னங்க என்னங்க என்று அலறும் விஜயாவைப் பார்த்தோம் என்பதால் கூட இந்த இயல்பான விஜயாவை ரசிக்க முடிகிறது. கணவனே உலகம் என்று வாழும் அந்த சாந்தி என்ற மனைவியை கச்சிதமாக் கண் முன்னே கொண்டு நிறுத்தியிருக்கிறார். கணவனாகவே இருந்தாலும் ஒரு சில நெருக்கமான தருணங்களில் ஏற்படும் அந்த வெட்கம் அதிலும் அது போன்ற ஒரு சூழல் குழந்தை தங்களுக்கு முன்னால் நிற்கும் நிலையில் ஏற்படும்போது தோன்றும் ஒரு தர்மசங்கடம் கலந்த நாணம் இவற்றையெல்லாம் மகராஜா ஒரு மகராணி பாடலில் நன்றாகவே வெளிப்படுத்தியிருப்பார்.
தன கணவனின் முன்னாள் காதலிதான் தன் குழந்தையின் டீச்சர் என்ற உண்மை தெரியாமலே அவரிடம் நெருங்கி பழகுவதும் தனக்கும் தன கணவனுக்கும் இடையில் உள்ள நெருக்கத்தை வெளிப்படுத்துவதுமான அந்த innocent மனோநிலையை அழகாய் செய்திருப்பார்.கல்யாணம் ஆன புதுசிலேதான் ஆண்கள் கணவன் மாதிரி நடந்துப்பாங்க கல்யாணம் ஆன கொஞ்ச நாளிலியே அவங்களும் நமக்கு ஒரு குழந்தை மாதிரி ஆயிடுவாங்க என்று தங்கள் அன்னியோனியத்தை சொல்லும் போதும் சரி, எங்க கல்யாண போட்டோவை பாருங்க நாந்தான் ரொம்ப சந்தோஷமாக இருப்பேன், ஆனா அவர் முகத்திலே அந்தளவிற்கு சந்தோசம் இருக்காது என வெகுளியாக உண்மையை போட்டு உடைக்கும் போதும் நன்றாகவே impress செய்வார்.
இவர்கள் இருவருமே இப்படியென்றால் நடிகர் திலகத்திற்கு கேட்கவா வேண்டும்? மகராஜா பாடலில் அவர் இளமை துள்ளலுடன் அசத்தியிருப்பார். பல்லவி முடிந்தவுடன் மகளுடன் சேர்ந்து ட்விஸ்ட் ஆடும் அழகு, வேடிக்கை பார்க்கும் மனைவியை ஆட அழைக்கும் குறும்பு, முதல் சரணத்தில் மலர்களெல்லாம் இவளுக்கென்றே மாளிகை அமைத்தம்மா என்ற வரிகளின் போது ஒரு பக்கம் தோளை சற்றே பின்னால் சாய்த்து ஒரு கையை மட்டும் வயிற்றிலிருந்து முகம் வரை படிப்படியாக உயர்த்தி மாளிகை அமைத்தம்மா என்று காட்டும் ஸ்டைல் போஸ், மனைவியை அணைத்துக் கொண்டு ஆடும் ஸ்டெப்ஸ், ஒரு தம்பி பாப்பா வேண்டும் என்று மகள் பாடியவுடன் உடனே மனைவியை பார்க்கும் அந்த romantic look, பொண்ணு என்ன சொல்றா பாரு அதை செயல்படுத்திடலாமா என்ற வார்த்தைகளை முகத்திலேயே காட்டும் அந்த பாவம், பெண் கேட்டதற்கு "ராஜாவிற்கும் இது போல் ஆசை நாள்தோறும் இருக்குதம்மா" என்று பதில் சொல்லும் குறும்பு, பின்னியிருப்பார். அதே போல் ஆபிஸ்லிருந்து வீட்டிற்கு வந்தவுடன் மனைவியை இழுத்துக் கொள்ளும் அந்த இளமை துள்ளல். பாத்திரத்தின் பெயரான சுந்தர் என்பதற்கேற்ப ஆளும் "சுந்தர்" ஆகவே இருப்பார்.ஆனால் இந்த துள்ளல எல்லாம் பத்மினியை பார்க்கும் வரைதான்.
முதலில் காரில் இருந்தவாறே rear view mirror-ல் பத்மினியை பார்த்தவுடன் ஏற்படும் அந்த சந்தோசம், உடனே அதுவே கோபமாக மாறுவதை சில வினாடிகளுக்குள் காட்டுவதற்கு நடிகர் திலகத்தை விட்டால் யார் இருக்கிறார்கள்! வீட்டில் வந்து மகளுக்கு tuition எடுக்கும் முன்னாள் காதலி, தன வாழ்க்கை போன திசையைப் பற்றி பாட அதற்கு ஆதரவாக தன் மனைவியும் பாட ஒன்றுமே சொல்லாமல் மனைவி சொல்லுவதையெல்லாம் ஊம் மட்டும் போட்டு கேட்பது, பிறகு கூண்டுக்குள்ளே இருக்கிற புலி பார்க்க அழகாத்தான் இருக்கும், பக்கத்திலே போய் பார்த்தால்தான் உண்மை குணம் தெரியும் என்று crude ஆக கமன்ட் அடிப்பதில் ஆரம்பிக்கும்
அடுத்த காட்சிதான் highlight-களில் ஒன்றான காட்சி. மகளையும் கூட்டிக் கொண்டு அவளது டீச்சரும் தன் முன்னாள் காதலியுமான உமாவை சந்திக்க போகும் காட்சி. தன்னை சற்றும் எதிர்பார்க்காத முன்னாள் காதலியை வார்த்தைகளிலே குத்திக் கிழிக்க வேண்டும் என்ற வெறியோடு ஆத்திரத்தின் உச்சியில் நிற்கும் மனதோடு செல்லும் அவர் முதலில் ஆரம்பிக்கும் போது சாதாரணமாக ஆரம்பிப்பார். வீட்டிற்கு வந்தவங்களை வரவேற்கனும் என்கிற மரியாதை கூட உங்க டீச்சருக்கு தெரியலை என்பார்.பின்பு பத்மினியின் பக்கத்தில் போய் நேத்து என் பொண்ணுக்கு ஒரு பாட்டு சொல்லிக் கொடுத்தீங்களே அது ரொம்ப பிரமாதம் என்ற குத்தல். இந்த பெண்களுக்கு கல்யாணம் பண்ணிக்க போறவன் பணக்காரனாக இருக்கணும், கார் பங்களா அந்தஸ்து இதெல்லாம் இருக்கணும் அதோடு கொஞ்சம் இளிச்சவாயனாவும் இருக்கணும் இல்லே என்ற sarcasm, தொடர்ந்து "பாவம் அந்த பொண்ணுக்கு தான் காதலிச்ச ஏழை வாலிபன் பிற்காலத்திலே பெரிய பணக்காரனாக போறான்கிறது தெரியாது. என்ன செய்யறது நாம நினைக்கிறதெல்லாம்தான் நடக்கிறதில்லையே" என்று அடுக்கடுக்காய் குற்றம் சுமத்தி பிறகு குரலை உயர்த்தி " ஆமா உன்னை கல்யாணம் செஞ்சுக்கிறதா இருந்த அந்த பணக்கார வாலிபன் என்ன ஆனான். உன்னை மாதிரியே வேற பணக்கார பொண்ணை தேடி போயிட்டானா ஏன் இப்படி பட்ட மரம் மாதிரி நிக்கறே" என்று சிரிக்க ஆரம்பித்து அது முடியாமல் உடைந்து அழுவாரே அந்த 5 நிமிடத்தில் ஒரு நடிப்பு சாம்ராஜ்ஜியத்தை நம் கண் முன்னே நடத்தி காட்டுவார்.முத்தாய்ப்பாக தன் பெண், தான் பேசியதையெல்லாம் கேட்டு விட்டாள் என்று தெரிந்தவுடன் ஒன்றுமே பேசாமல் மெளனமாக படியேறி கிழே கிடக்கும் சிகரெட் லைட்டரை எடுத்துக் கொண்டு பெண்ணை கையை பிடித்துக் கூட்டிக் கொண்டும் போகும்போது காட்டும் அந்த உடல் மொழி. நடிகர் திலகத்தின் உணர்சிகரமான படங்களை பார்க்கும்போதெல்லாம் இது போன்ற காட்சிகள் வராதா என்று என்னை ஏங்க வைத்ததில் இந்தக் காட்சிக்கு பெரிதும் பங்குண்டு.
அன்றிரவு வீட்டில் சரியாக சாப்பிடமால் அடம் பிடிக்கும் பெண்ணிடம் அப்பாக்கு முத்தம் கொடுத்து விட்டு போ என்று மனைவி சொல்ல தயங்கி நிற்கும் மகளைப் பார்த்து "போ" என்று ஒற்றை சொல்லை சொல்லும் விதம், மனைவிக்கும் முன்னாள் காதலிக்கும் நடுவில் மனசு கிடந்து அல்லாடும் அந்த தவிப்பை காட்சிக்கு காட்சி பார்க்க முடியும். முன்னாட்களில் இருவரும் சந்தித்த மலை உச்சியில் மீண்டும் பழைய காதலியை சந்தித்து தன் மனதவிப்பை கொட்டும் அந்த காட்சி. அப்போதும் கூட ஆத்திரம் அடங்காமல் "உன்னை பிரிஞ்சப்பறம் உயிரோடு இருந்ததுக்கு காரணமே என்னிக்காவது உன்னை சந்திசேன்னா என் கையாலேயே உன் கழுத்தை நெரிச்சு கொல்லனும்னு இருந்தேன்" என்று பொங்குவது, திடீரென்று அங்கே வரும் அசோகன் இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை வேறுவிதமாக சித்தரிக்க மனதில் இருக்கும் கோபத்தையெல்லாம் அசோகனின் முகத்தில் அறையும் அந்த அறையில் காண்பிப்பது என நவரசம் காட்டுவார்.
மனம் நிலைக் கொள்ளாமல் அலை பாய வீட்டுக்குள் வரும் அவர் மனைவியையே உற்று பார்க்க என்ன அத்தான் புதுசா பாக்கிற மாதிரி பாக்கறீங்க என்று கேட்க ஏன் நான் உன்னை நான் பார்க்க கூடாதா என்று கேட்பவரிடம் இன்னிக்கு என்ன நாள் தெரியுமா என்று மனைவி கேட்க சற்று யோசித்து இன்னிக்கு நமக்கு கல்யாணமாகி 7 வருஷம் ஆகுதில்லே என்று சொல்லும்போதே முக்கியமான நாளை மறந்து விட்டோமே என்ற குற்ற உணர்ச்சியை முகத்திலும் குரலிலும் கொண்டு வருவார். இங்கே வா என்று மனைவியை அழைத்து வந்து உட்கார் உட்கார் என்று படுக்கையை தட்டிக் காட்டும் அந்த சைகை, நீ என் மேலே அன்பு வைச்சிருக்கிற அளவுக்கு நான் உன் மேலே அன்பு வைக்கலே என்னை மன்னிச்சிடு என்று மனைவியின் கைகளை கண்ணில் ஒற்றிக் கொண்டு உன்கிட்டே நிறைய சொல்லனும்னு நினைக்கிறேன் ஆனா" என்று தன் நெஞ்சை தொட்டுக் காட்டியவாறே "என்னால சொல்ல முடியல" என்று மனைவியின் தோளில் முகம் புதைத்து விம்மும் போது அந்த நடிப்பை என்னவென்று சொல்லுவது?
இறுதியாக படுக்கையறையில் மனைவிதான் நிற்கிறாள் என்று நினைத்து உண்மைகளையெல்லாம் கொட்டிவிட்டு தற்செயலாக கண்ணாடியில் தெரியும் காதலியின் முகம் பார்த்தவுடன் திகைத்து ஏதோ பேச தொடங்கி காதலியால் தடுக்கப்பட்டு அவள் அந்த அறையை விட்டு வேகமாக விலகி சென்றதும் மேஜையில் இருக்கும் காப்பி டம்பளரையும் தன் பழைய காதலி 7 வருடங்களுக்கு முன்பு எழுதிய கடிதத்தையும் பார்த்துவிட்டு என்ன நடக்கிறது என்பதையே உடனே புரிந்துக் கொள்ள முடியாமல் மெதுவாக அந்த சூழலின் உண்மை அவரில் இறங்கும் அந்த நொடியை அவர் முகம் காட்டும் விதம் டாப் கிளாஸ்.
ACT இயக்கத்தில் வந்த மிக சிறந்த படங்களில் இரு மலர்களுக்கு முதல் மூன்று இடங்களில் ஒரு இடம் நிச்சயம். வெகு இயல்பான திரைக்கதை செயற்கைத்தனம் கலக்காத வசனங்கள் [ஆரூர்தாஸ்]. மனைவி மற்றும் காதலி இவர்களின் point of view-வில் இருந்து எழுதப்பட்ட வசனங்கள். எனக்காக தன் வாழ்க்கையை விட்டுக் கொடுத்த பொண்ணு திரும்ப வந்தா அவகிட்ட என் கணவரை திருப்பி ஒப்படைசுடனும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன் என்று விஜயா சொல்ல இடைமறிக்கும் பத்மினி ஆனா அது அவ்வளவு சுலபம் இல்லைன்னு இப்போ தோணுதிலே என்று மடக்கும் இடம் வசனத்தின் இயல்புக்கு ஒரு சின்ன உதாரணம்.
இயக்கத்திலும் ACT நன்றாகவே செய்திருப்பார். தாத்தாவுக்கு குட் நைட் சொல்லிட்டு போய் படு என்று சொல்லப்பட, குழந்தை ரோஜாரமணி நாகையாவின் மாலை போடப்பட்ட புகைப்படத்திற்கு குட் நைட் சொல்லுவதை வைத்தே நாகையா பாத்திரம் இறந்து விட்டார் என்பதை வெளிப்படுத்துவது, கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்னால் வரக்கூடிய lead காட்சியில் படுக்கையறைக்கு அழைத்து வரும் விஜயாவிடம் வேண்டாமே ஹாலிலேயே இருக்கலாமே என்று மறுக்கும் பத்மினி. இதன் பின்னணியில் இருக்கும் லாஜிக் [படுக்கையறை என்பதனால்தான் நாயகன் தன் மனைவி என்று நினைத்து பேசுவான்], காட்சியின் முடிவில் காபி டம்பளரும் கடிதமும் மேஜையில் இருப்பதை காட்டுவதன் மூலம் மனைவி அனைத்து உண்மைகளையும் தெரிந்துக் கொண்டு விட்டாள் என்பதை நாயகனுக்கும் பார்வையாளர்களுக்கும் உணர்த்துவது என்று ACT யின் சிறப்பான இயக்கத்திற்கு நிறைய காட்சிகள்.
அன்று பார்த்த நான்கு பாடல் காட்சிகளை பற்றியும் சொல்ல வேண்டும். வெள்ளி மணி ஓசையிலே [இது முரசில் வந்தது]. படம் முழுக்க மெல்லிசை மன்னர், வாலி மற்றும் இசையரசி ஆகியோர் கிளப்பியிருப்பார்கள். இந்தப் பாடலில் முதல் சரணத்தில் வரும வரிகள்
பிறந்து வந்தேன் நூறு முறை
மன்னவன் கை சேரும்வரை
தவம் இருந்தேன் கோடி முறை
தேவன் முகம் காணும் வரை
அதிலும் அந்த மூன்றாவது வரியான தவம் இருந்தேன் கோடி முறை என்பதை இசையரசி பாடும்போது ஆஹா!
மகராஜா பற்றி சொல்லி விட்டேன்.
அடுத்து கடவுள் தந்த இரு மலர்கள் பாடல். இதில் வாலி, எம்எஸ்வி, சுசீலாம்மா மற்றும் ஈஸ்வரி ஆகியோர் கூட்டணி ஒரு கலக்கு கலக்கியிருப்பார்கள்.முதல் சரணத்தில்
ஆற்றில் வந்து சேர்ந்ததம்மா
அலைகள் கொண்டு போனதம்மா
என்ற வரிகளில் இசையரசி கொடி நாட்டுவர் என்றால் அடுத்த சரணத்தில்
தலையில் இறைவன் சூடிக் கொண்டான்
தானே அதனை சேர்த்துக் கொண்டான்
குழலில் சூடிய ஒரு மலரும்
கோவில் சேர்ந்த ஒரு மலரும்
என்ற வரிகளைப் பாடி ஈஸ்வரி கோல் அடிப்பார்.
இறுதியாக அன்னமிட்ட கைகளுக்கு. இந்த பாடலைப் பற்றி பல வருடங்களுக்கு முன்பு சாரதா அற்புதமாக எழுதியிருந்தார். அது இப்போது வாசிக்க கிடைக்கிறதா என்று தெரியவில்லை.
இதிலும் இசையரசியின் சாம்ராஜ்ஜியம்தான். உணர்சிகரமான பாடல். கண்ணீரும் விம்மலும் நிறைந்த பாடல். அனாயசமாக பாடியிருப்பார் சுசீலாம்மா.
கைவிளக்கை ஏற்றி வைத்தேன் கோவிலுக்காக
என் தெய்வத்தின் மேல் எனக்கு இருக்கும் காதலுக்காக
என்று கணவனின் மேல் இருக்கும் காதலை சொல்லுபவர் தான் அந்த இடத்தை விட்டு நீங்கியவுடன் வேறொரு பெண் வரப் போகிறாள் என்ற நிலையை குரல் விம்ம
ஒரு தாய் வருவாள் மகளே உன் காவலுக்காக என்று சரணத்தை நிறைவு செய்யும்போது மனதை என்னவோ செய்யும்.
அதே போன்று இரண்டாவது சரணத்தில் .
தாய்க் குலத்தின் மேன்மையெல்லாம் நீ சொல்ல வேண்டும்
என் தலை மகளே உன் பெருமை ஊர் சொல்ல வேண்டும்
என்று மகளுக்காக பாடும் ஒரு தாயின் குரலைத்தான் இசையரசியின் குரலில் கேட்க முடியும்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.படத்தின் முதல் பகுதியை அன்று பார்த்திருந்தால் இன்னும் இரண்டு பார்ட் எழுதியிருப்பேன் என நினைக்கிறேன். மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். பலருக்கும் அதே போன்றே உணர்வை கொடுததனால்தான் அந்த தீபாவளிக்கு வந்த அனைத்து mass மசாலா entertainers போட்டியையும் சமாளித்து 100 நாட்கள் ஓடி வெற்றி கண்டது.
ஆயிற்று, இன்னும் நான்கு நாட்கள் போனால் நவம்பர் 1 வந்து விடும், நாற்பது ஆறு ஆண்டுகள் கடந்து விடும். இருப்பினும் இப்போதும் இந்தப் படம் இவ்வளவு உயிர்துடிப்பாக இருக்கிறது என்றால் அதுதான் அந்த படத்தின் சிறப்பு.
ACT அவர்களிடம் முன்பு பேசிக் கொண்டிருந்தபோது அவரிடம் ஒரு கேள்வி கேட்டேன். சார் ஒரு மூன்று படங்கள் மிகுந்த போட்டிக்கிடையே அதாவது மற்றொரு நடிகர் திலகத்தின் படத்தோடயே போட்டி போட்டு ரிலீஸ் செய்தீர்கள்.இதற்கும் போட்டி போட்ட படங்கள் உங்கள் படங்களை விட அதிக எதிர்பார்ப்பையும் வெற்றி பெறுவதற்கான மூலக்கூறுகளை அதிகமாக கொண்ட படங்கள்.அப்படியிருந்தும் எப்படி சார் தைரியமாக ரிலீஸ் செய்தீர்கள் என்று கேட்டபோது ACT சிரித்துக் கொண்டே " என் சரக்கு முறுக்கு" என்றார்.
அன்புடன்
PS 1 : நடிகர் திலகத்தின் மற்றொரு படத்துடன் போட்டி போட்ட ACT யின் படங்கள்
இரு மலர்கள் - போட்டி படம் ஊட்டி வரை உறவு - Nov 1,1967
எங்கிருந்தோ வந்தாள் - சொர்க்கம் - Oct 29,1970.
பாரத விலாஸ் -24.03.1973, ராஜ ராஜ சோழன் - 31.03.1973.
-
Kertthik Sir's reaction for Murali Sir's writing about "IRUMALARGAL"
Over to Karthik sir......
அன்புள்ள முரளி சார்,
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்திலகத்தின் மிகச்சிறந்த கருப்புவெள்ளை காவியங்களில் சிறந்த பத்துக்குள் இடம்பெறும் "இருமலர்கள்" பற்றிய கருத்தாய்வு மிக மிக அருமை. முரளி அவர்களின் ஆய்வு விமர்சனம் நன்றாக இருக்கிறது என்று சொல்வது என்பது எஸ்.பி.பி.யின் குரல் இனிமையாக இருக்கிறது என்று சொலவ்துபோல universal tuth என்றாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். பாதிப்படம் படம் பார்த்ததற்கே இவ்வளவு அருமையான ஆய்வு என்னும்போது, முழுப்படமும் பார்த்து எழுதியிருந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணினேன். இறைவன் செய்வது அனைத்தும் நன்மைக்கே.
ஏனென்றால் படத்தில் முதல் பாதி பத்மினி எபிஸோட். இப்படத்தில் எனக்கு பத்மினியின் நடிப்பு அவ்வளவாகப் பிடிக்காது. எனக்கு எப்போதுமே அவ்வளவாகப் பிடிக்காத கே.ஆர்.விஜயாவின் நடிப்பும் ரோலும் இப்படத்தில் பிடித்ததற்கு காரணமே பத்மினிதான். படத்தின் பின்பாதியில் மிக அட்டகாசமாக ஸ்கோர் செய்துகொண்டு போய்விடுவார் புன்னகை அரசி. ரொம்ப பாந்தமான, அமைதியான, கொஞ்சம் அப்பாவித்தனமான குடும்பத்தலைவி. கணவனும் மக்களுமே உலகம் என்று வாழும் பேதைப்பெண். (அது சரி, அந்த தீபாவளி என்ன 'விஜயா தீபாவளியா?' நம்முடைய இருபடங்களிலும் விஜயா, இதற்கு போட்டியாக வந்த 'விவசாயி'யிலும் விஜயா).
ஒவ்வொரு காட்சியையும் மிக மிக தத்ரூபமாக விவரித்திருக்கிறீர்கள். இம்மாதிரி ப்ரொபசர்கள் எங்கள் கல்லூரி நாட்களில் கிடைத்திருந்தால் டிஸ்டிங்க்ஷனில் பாசாகி இருப்போம்.
திருலோகசந்தர் உட்பட எல்லா இயக்குனர்களும் தங்கள் படங்களுக்கு ஒரு திருஷ்டிப்போட்டு வைப்பது வழக்கம். இருமலர்களில் அப்படி அமைந்தது நாகேஷ் - மனோரமா காமெடி. சீராக சென்றுகொண்டிருக்கும் படத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் அறுவை எபிஸோட். (ஏ.சி.டி. இப்படி சறுக்குவதுண்டு, இன்னொரு உதாரணம் அதே கண்களில் நாகேஷின் ஆங்கிலோ இண்டியன் பெண் வேடம்).
எப்போதாவது வந்து இப்படி எங்களை பைத்தியமாக்கி விட்டு (பொது நலம் கருதி) ஒளிந்து கொள்கிறீர்கள். பொது நலம்..???. யெஸ்... உங்கள் பதிவு வந்தால் வானத்தில் பௌர்ணமி அன்று நிலவு வந்தது போல. அந்த சமயம் வானத்திலிருக்கும் ஒரு நட்சத்திரமும் கண்களில் படாது. அதனால் மற்ற நட்சத்திரங்களும் ஒளிரட்டும் என்று நீங்கள் ஒளிந்துகொள்கிறீர்கள். ஆனால் திரி எந்நாளும் பௌர்ணமியாக இருக்க வேண்டுமென்பதே எங்களுடைய/என்னுடைய ஆசை. மெயின் பேச்சாளர் வரும்வரை கத்துக்குட்டி பேச்சாளர்களை வைத்து சமாளிப்பதுபோலத்தான் என்னுடைய பங்களிப்புகள் அமைந்துள்ளன.
தங்களை இங்கு வரவைப்பதற்காகவே தங்கள் இதயத்துக்கு நெருக்கமான படங்கள் தொலைக்காட்சிகளில் வரட்டும் என்பதே எங்கள் வேண்டல்.
-
Gnana Oli Vasu Sir's reaction for Murali Sir's writing about "IRUMALARGAL"
Over to Gnana Oliyaar Vasu sir......
டியர் முரளி சார்,
இரு மலர்களின் இடைவேளைக்குப் பிறகு வரும் பாதிப்படத்தை இரு பாகங்களாகப் பிரித்து இனிமையாக அலசியுள்ளீர்கள். என்ன ஒரு அற்புதமான படம்! சிறிது இடைவெளிக்குப் பின் தாங்கள் தந்துள்ள இரு மலர்களின் மீள் பார்வை தென்றலாய் வருடுகிறது. பிரேம் பை பிரேம் என்னைக் கவர்ந்த படம். கேரக்டர்களின் தன்மை அவ்வளவு பிரமாதமாக இருக்கும். உள்மனதில் ரகசியங்களை பூட்டி வைத்து புழுங்கும் வேடங்களில் நடிகர் திலகத்தின் பங்களிப்பை அவ்வளவு எளிதாக நம்மால் வெளிப்படுத்தி விட முடியாது. அதை நீங்கள் செவ்வனே செய்துள்ளீர்கள். அதுவும் சொந்த ஹேர் ஸ்டைலில், படு ஸ்லிம்மான உடல்வாகில் உலகத்திலே ஒருவனென அழகில் உயர்ந்து நிற்கும் சுந்தர் திலகமாக நம் அன்பு நாயகர் இப்படத்தை ஆளுமை செய்வது அபாரம்.
அதே போல மகராஜா என்னுடைய மனங்கவர்ந்த ஒரு பாடல். அப்பாடலில் நீங்கள் குறிப்பிட்டது போல தன் ஆசையை குறிப்பால், ஜாடையால் மகளுக்குத் தெரியாமல் மனைவிக்குப் புரிய வைக்கும் அழகே தனி.
காரியம் கெட்டது. இன்று இருமலர்கள்தான்.
முரளி சார்
இன்னொன்று. நம் இருவருக்கும் தலைவருடைய சில போஸ் ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணும். உண்மைதானே! உதாரணம் (குலமகள் ராதை சரோஜா தேவியுடன் சடையைப் பிடித்தபடி கண்ணாடியில் தெரியும் பிம்ப போஸ்.... நெஞ்சிருக்கும் வரையில் முத்துராமனை மிரட்டி விட்டு சட்டென்று திரும்பும் உயிரை எடுக்கும் போஸ்) அதே போல இந்தப்படத்தில் தலைவர் அதம் பண்ணும் ஒரு போஸைப் பதிவிடுகிறேன். நிச்சயம் இந்த போஸும் தங்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்க வேண்டும். அந்த போஸ் சொல்லும் அர்த்தங்கள் தான் எத்தனை?
'கடவுள் தந்த இருமலர்கள்' பாடலின் போது நெஞ்சில் புதைந்து கிடக்கும் சுமைகளோடும், மன உறுத்தல்களோடும், வேதனைகளோடும் ஆனால் எதையுமே வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல், பழைய காதலியின் நிலைமை புரியாமல் அவள் வேதனையுடன் பாடும் போது 'பாடு பாடு... உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? நடிக்கிறியா? வஞ்சகி' என்ற கடுப்பை முகத்தில் தேக்கி மாடியில் நின்றபடியே கைப்பிடியைப் பிடித்தவாறு பத்மினியை சற்றே வெறுப்புடன் நோக்கும் அந்த போஸ்.
இந்த போஸை என் நண்பர்கள் சிலருக்குக் காட்டி காட்டி நான் மகிழ்வதுண்டு. அவர்கள் அப்படி என்னதாண்டா இருக்கு அந்த போஸ்ல? என்பார்கள் என்னிடம். நான் அதைப் பற்றி விளக்கிச் சொன்னவுடன் அவர்களும் ரசித்து விட்டு "இவன் நம்மளைப் பைத்தியமாக்கி விடுவான். கிளம்பு" என்று ஓடத் தயாராவார்கள்.
மறுபடியும் சொல்கிறேன். இந்தப் போஸ் சொல்லும் கதைகள் எனக்கு மாத்திரமே தெரியும். அது உங்களுக்கும் தெரியும்.
-
S.Gopal Sir's reaction about Murali Sir's writing about "IRU MALARGAL"
Now over to Gopal sir.....
முரளி ,
தோய்ந்து எழுதுவது என்பார்களே, அது இதுதான்.
இரு மலர்கள் படத்தை பொறுத்த வரை இன்னொரு நெஞ்சில் ஓர் ஆலயம்.
அவரவர்களின் கோணத்தில் உணர்ச்சி தெறிப்பு , வெடிப்பு இவை அற்புதமாக பதிவான படம். என்னதான் பத்மினி,கே.ஆர்.விஜயா மாஞ்சு மாஞ்சு நேர் நடிப்பை கொடுத்து ஸ்கோர் செய்ய பார்த்தாலும்,நடிகர்திலகத்தின் உளவியல் பார்வை கொண்ட situation சார்ந்த உணர்ச்சி cocktail மற்றவற்றை அலை மாதிரி அடித்து சென்று விடும்.
கண்ணதாசன்-எம்.எஸ்.வீ stale ஆக போன நேரத்தில் வாலி-எம்.எஸ்.வீ இணைவு புத்துணர்வு தந்தது.(நன்றி ஏ.சி.டி)
எனக்கு பிடித்தவை மன்னிக்க, அன்னமிட்ட.
முன்னரைத்த காதலை முடிவுரையாய் தர சொல்லும் பாடலில் செல்லமாய் நடிகர்திலகம் உந்தன் ஆசையை தூண்டுகிறேன் என்று மார்பில் விரல் வைக்க ,நாணும் நாட்டிய பேரொளியின் response ???அடடா????
சுசிலாவின் குரலில் சொன்னது நீதானா, அன்னமிட்ட கைகளுக்கு, ஒரு நாளிரவு பகல் போல் நிலவு பாடல்கள் என் மனதை கீறி கண்ணீர் துளிக்க வைத்து விடும். இந்த முறை எம்.எஸ்.வீ சார் வீட்டு பேரன் வரவேற்பில், சுசீலாவிடம் ஆசி பெற்றது எனக்கு கிடைத்த மோட்ஷம்.